Posted in Lent days

இப்படியெல்லாமா ஈஸ்டர் கொண்டாடுவாங்க !

இப்படியெல்லாமா ஈஸ்டர் கொண்டாடுவாங்க !

உயிர்ப்புப் பெருவிழா உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகின்ற ஒரு விழா. இறைமகன் இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாடுகின்ற விழா.  ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகளும் வீடுகளில் சிறப்பு உணவுகளும் என இந்த விழா களைகட்டும். உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த விழாவை மக்கள் பல்வேறு விதமாக கொண்டாடுகிறார்கள்.

பல இடங்களில் ஈஸ்டர் எக் எனப்படும் முட்டை வடிவ சாக்லேட்கள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பல வர்ண   முட்டை சாக்லேட்களை பிள்ளைகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதும், பெரியவர்கள் பிள்ளைகளுக்கு பரிசளிப்பதும் என இந்த ஈஸ்டர் எக் பரம்பரியம் தொடர்கிறது. ஜெர்மனி, அமெரிக்கா உட்பட பல மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலம். முட்டை என்பது புத்துயிருக்கு அடையாளமாகவும், புதிய பிறப்பின் அடையாளமாகவும் இருப்பதால் இந்த ஈஸ்டர் முட்டை,  இயேசு எனும் மனிதர் புது பிறப்பு எடுத்த விழாவை கொண்டாடுவதோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. அதே போல நமக்கு இறைமகன் இயேசு தருகின்ற புது வாழ்க்கையையும் இது சுட்டுகிறது.  

ஈஸ்டரை ஒட்டி பெரிய பேரணிகள் நடத்துவது பல நாடுகளில் வழக்கம். போர்ச்சுக்கல், மெக்ஸிகோ பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் நடக்கின்ற பேரணிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இயேசுவின் பாடுகளை விவரிக்கின்ற காட்சிகளும் உயிர்ப்பை விவரிக்கின்ற காட்சிகளும் புனித வாரம் முழுக்க பேரணியாக நடத்தப்படும்.

ஈஸ்டர் பாஸ்கெட் என்பது பல நாடுகளில் நிலவி வருகின்ற ஒரு பாரம்பரியமாகும். ஒரு கூடை நிறைய இனிப்புகள், விளையாட்டுகள், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை உயிர்ப்பு அன்று காலையில் பிள்ளைகளுக்கு பரிசளிப்பார்கள். சில இடங்களில் இந்த பரிசுகளை ஒளித்து வைத்துவிட்டு பிள்ளைகளாக தேடி கண்டுபிடிக்க சொல்லுவார்கள். இந்த கிறிஸ்மஸ் பாஸ்கெட் விளையாட்டும் பரிசளிப்பும் மிகவும் பிரபலம்.

ஈஸ்ட்ரை வரவேற்கும் விதமாக இரவில் பெரிய நெருப்பு கொளுத்தி மகிழ்வது இன்னொரு பாரம்பரியமாகும் இது பின்லாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் மிகவும் பிரபலம். நள்ளிரவில் கொழுந்துவிட்டெரியும் நெருப்புடன் இந்த கொண்டாட்டங்கள் நடக்கும். 

நெதர்லாந்து போலந்து போன்ற நாடுகளில் ஈஸ்டர் என்பது மலர்களால் வீடுகளை அலங்கரிப்பதில் சிறப்பிடம் பெறுகிறது.  முழுக்க முழுக்க அழகிய வண்ண வண்ண மலர்களால் வீடுகளை அலங்கரித்து வசீகரமாக மாற்றுவார்கள். 

செக் குடியரசு நாடுகளில் ஆண்கள் பெண்களை மரக் கிளைகளை வைத்து செல்லமாய் அடிப்பார்கள். அது ஒரு பாரம்பரியம். இப்படிச் செய்வது உடல் நலத்தையும் வளமையையும் கொண்டுவரும் என அவர்கள் நம்புகிறார்கள். நம்ம ஊர் ஹோலி பண்டிகையில் கலர் பூசி விளையாடுவது போல என வைத்துக் கொள்ளலாம். 

சில பகுதிகளில் குறிப்பாக ஸ்லோவாக்கியா ஹங்கேரி போன்ற இடங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் தண்ணீரை வீசி எறிந்தும்,  கோப்பைகளில் தண்ணீரை அள்ளி அள்ளி இன்னொருவர் மேல் ஊற்றியும் இந்த நாளை கொண்டாட்டமாய்க் கொண்டாடுவார்கள். தண்ணீர்  நம்மைப் புதுப்பிக்கும், தூய்மைப்படுத்தும். ஈஸ்டர் விழாவும் அப்படியே என்பதை இது குறிப்பால் உணர்த்துகிறது.  

ஈஸ்டர் தாவல் எனப்படுவது ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள செகண்ட் தீவுகளில் நடக்கின்ற ஒரு விளையாட்டாகும். பெரிய நெருப்பு வளர்ந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பின் மேலாகத் தாவி, அந்தப் பக்கம் செல்வார்கள். இப்படிச் செய்வது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என் அவர்கள் நம்புகிறார்கள்

ஈஸ்டர் பன்னி அதாவது மிஸ்டர் முயல் பல நாடுகளில் பிரசித்தி பெற்றது குறிப்பாக அமெரிக்க ஜெர்மன் போன்ற இடங்களில் இது மிகவும் பிரபலம். ஈஸ்டர் முயல்  பிள்ளைகளுக்கு ஈஸ்டர் முட்டைகளையும் இனிப்புகளையும் கொண்டு வரும் ! முயல் போன்ற மாறுவேடமிட்டு நடக்கின்ற ஓட்டப் பந்தயமும் பிரபலமான ஒரு விளையாட்டு. 

ஈஸ்டர் முட்டைகளை பெரிய உயரமான இடத்திலிருந்து கீழே போட்டு அது உடைந்து சிதறாமல் இருந்தால் நல்ல அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்கின்ற ஒரு வழக்கம் சில இடங்களில் இருக்கிறது.  இது தவிரவும் பல விதமான கொண்டாட்டங்களை ஈஸ்டர் நாட்களில் மக்கள் நடத்துகிறார்கள். 

இவற்றில் பல விஷயங்கள் கமர்ஷியல் விஷயங்களாகவே இருக்கின்றன. இயேசுவின் உயிர்ப்பு நமது மீட்புக்கான அழைப்பு, நாம் பாவத்திலிருந்து மனம் திரும்பி அவரிடம் சேரவேண்டும். அவர் வழியில் நடக்கவேண்டும் என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்வதே உண்மையான நிலையான கொண்டாட்டமாகும் !

Posted in Lent days

இயேசுவின் உயிர்ப்பை யார் முதலில் எழுதியது ?!

இயேசுவின் உயிர்ப்பை யார் முதலில் எழுதியது ?!

இயேசுவின் உயிர்ப்பு கிறிஸ்தவத்தின் மையம். இயேசு உயிர்க்காமல் இருந்திருந்தால், ஒரு போராளியின் வீரமரணம் கல்வாரியில் நிகழ்ந்தது என வரலாறு பதிவு செய்துவிட்டுக் கடந்து சென்றிருக்கும். அல்லது, ரோமர்களுக்கு எதிராய்ப் பேசியதற்காய் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரம் ஆட்களில் ஒருவராக இயேசுவின் பெயரும் காற்றில் கரைந்து காணாமல் போயிருக்கும். ஆனால் உயிர்ப்பு ! அது தான் இறந்து கிடந்த கிறிஸ்தவ நம்பிக்கைகளை மீண்டும் வீறுகொண்டு எழ வைத்தது. 

சரி, இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி முதலில் எழுதியது யார் ? மார்கு தனது நற்செய்தியில் எழுதியது தான் முதல் பதிவு, என்று தான் பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை முதலில் எழுதியது மத்தேயுவோ, மார்கோ, லூக்காவோ, யோவானோ அல்ல. திருத்தூதர் பவுல் !  நற்செய்திகளுக்கு முன்பே பவுலின் கடிதங்களில் தான் இயேசுவின் உயிர்ப்புச் செய்தி பதிவாகியிருக்கிறது. நற்செய்தி நூல்களின் காலம் கிபி 70 க்குப் பிந்தையது, பவுலின் கொரிந்தியருக்கான கடிதம் சுமார் கிபி 55 ஐ ஒட்டியது. அவரது பெரும்பாலான கடிதங்கள் கிபி 60க்கு முந்தையது, அல்லது அந்தக் காலகட்டத்தை ஒட்டியது. 

நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே; மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர். பிறகு, யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். என 1 கொரிந்தியர் பதினைந்தாம் அதிகாரத்தில் அவர் எழுதுகிறார். 

இயேசு இறந்த இருபது – இருபத்தைந்து ஆண்டுகளிலேயே கொரிந்தியருக்கான இந்தக் கடிதம் எழுதப்பட்டது. அதில் பவுல், ‘தான் பெற்றுக் கொண்டதும்’ என சொல்வதிலிருந்து இயேசுவின் உயிர்ப்புச் செய்தியானது அதற்கு முன்பே பரவியிருந்தது, மக்களிடையே நம்பிக்கை நிலவியிருந்தது என்பதை எடுத்துக் காட்டுகிறது. பவுலின் கடிதங்களுக்கு முன்பே இயேசுவின் உயிர்ப்புச் செய்தி பதிவாகியிருக்கலாம், நற்செய்தி அறிவிக்கப்பட்டிருக்கலாம். அவையெல்லாம் பைபிளில் இல்லாத காரணத்தால் நமக்குத் தெரியவில்லை. பைபிளிலுள்ள நூல்களில் மத்தேயு, மார்க், லூக்கா, யோவான், கொரிந்தியருக்கு எழுதிய கடிதம், எபிரேயர், ஒன்று பேதுரு ஆகிய நூல்களில் இயேசுவின் உயிர்ப்புச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வரலாற்றில் இப்படி உடனுக்குடன் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் கிடைப்பது அரிது. உதாரணமாக மாவீரர் அலெக்சாண்டரைப் பற்றிய பதிவுகள் அவரது மரணத்திற்கும் 300 ஆண்டுகளுக்குப் பின்பே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயேசுவின் மரணம் நிகழ்ந்த உடனே சில ஆண்டுகளிலேயே பதிவு செய்யப்பட்டு, பேசுபொருளாகியிருக்கிறது. கி.பி 35களிலேயே இந்த இறையியல் உருவாகியிருக்கலாம் என தெரிகிறது. உயிர்ப்பின் உண்மைத் தன்மையை இது எடுத்துரைக்கிறது. 

அன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் இறையியல் ஆய்வாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். Tacitus, Josephus, Mara-Bar-Serapion, Lucian, Talmud, Clement of Rome, Ignatius, Polycarp, Barnabas, Justin Martyr, etc. உட்பட பலருடைய பதிவுகளில் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியைக் காணலாம். இவர்கள் அனைவருமே மிகவும் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இயேசுவின் உயிர்ப்பை ஆதாரபூர்வமாகப் பதிவு செய்ய வேண்டுமென நற்செய்தி ஆசிரியர்கள் கருதவில்லை. உண்மையை உள்ளபடி எழுதவே அவர்கள் முடிவெடுத்தார்கள். எனவே தான் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிந்திருந்தும், பெண்கள் இயேசுவை முதலில் பார்த்த உண்மையை அப்படியே பதிவு செய்கிறார்கள். பெண்களின் சாட்சி அன்றைக்கு செல்லாக் காசாய் இருந்தது.  இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வு எருசலேமிலும் சுற்றுவட்டாரங்களிலும் பரவியது. காலியான கல்லறை அன்று அதை உரக்கப் பறை சாற்றியது. கல்லறைக்குக் காவல் இட்ட பிறகும் 

இயேசு உயிர்த்தார் என்பதும், கல்லறை காலியானது என்பதும் உண்மை. இல்லையேல் இயேசு உயிர்த்தார் எனும் செய்தி எழுந்தபோது ஆட்சியாளர்கள் இயேசுவின் கல்லறையைத் திறந்து இயேசுவின் உடலைக் காட்டி அதை மறுத்திருப்பார்கள். 

உண்மையான உயிர்ப்பின் அனுபவம் இல்லாவிட்டால் மறைந்து கிடந்த சீடர்கள் வெளியே வந்திருக்க மாட்டார்கள். அதுவும் இயேசு படுகொலை செய்யப்பட்ட இடத்திலேயே பணிபுரியத் துவங்கியிருக்க மாட்டார்கள். 

இயேசுவின் உயிர்ப்பு கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. விவிலியமும், விவிலியத்துக்குப் புறம்பே உள்ள நூல்களும் அதை எடுத்தியம்புகின்றன. கிறிஸ்தவத்தின் துவக்க கால திருச்சபையின் வேகமும் அதை பறைசாற்றுகிறது. தொலைந்து போன ஆதிகால நூல்களில் உயிர்ப்பைப் பற்றிய யாருக்கும் தெரியாத செய்திகள் உறங்கிக் கிடக்கக் கூடும். கிடைத்த பதிவுகளின் அடிப்படையில் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை முதலில் பதிவு செய்து பெயர் வாங்கியவர் திருத்தூதர் பவுல் தான்.

Posted in Lent days

வெரோனிக்காவின் கைக்குட்டை !

வெரோனிக்காவின் கைக்குட்டை !

இயேசுவின் பாடுகளின் பயணத்தில் ஒரு பாரம்பரியக் கதை உண்டு. இயேசு சிலுவை சுமந்து கொண்டு கொல்கொதாவை நோக்கிச் செல்கிறார், வழியில் பெண்கள் ஒப்பாரி வைக்கின்றனர். வியர்வையும், இரத்தமுமாக இயேசுவின் முகம் அகோரமாய் இருக்கிறது. அவர் வலியோடு செல்லும் போது ஒரு பெண் வழிமறிக்கிறாள், தன்னிடம் இருந்த துண்டினால் இயேசுவின் முகத்தைத் துடைக்கிறாள். துடைத்தபின் துணியைப் பார்த்த அவளுக்கு ஆச்சரியம் ! இயேசுவின் முகம் அந்தத் துணியில் பதிவாகியிருக்கிறது. தனக்குக் கடைசியாய் உதவி செய்த பெண்ணுக்கும் கைமாறு தருகிறார் இயேசு ! அந்தப் பெண்ணின் பெயர் வெரோணிக்கா ! அந்த ஆடை ‘Veil of Veronica’ என அழைக்கப்படுகிறது. பைபிளுக்கு வெளியே உள்ள நூல்களில் இந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆடை அதன்பின் என்னவாயிற்று ? உண்மையிலேயே அது இருக்கிறதா ? அல்லது இருப்பது உண்மையானது தானா ?

அந்த ஆடையை வெரோனிக்கா ரோமுக்கு எடுத்துச் சென்று திபேரியஸ் மன்னனிடம் கொடுத்ததாகவும், அந்தத் துணி பல அற்புதங்கள் செய்ததாகவும் பாரம்பரியக் கதைகள் எடுத்தியம்புகின்றன. துவக்க காலத்தில் பேசப்பட்டு, பின் அமைதிகாத்து இடைக்கால கிறிஸ்தவக் காலத்தில் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்தது வெரோனிக்காவின் துண்டு. பதினான்காம் நூற்றாண்டில் பாரம்பரியக் கிறிஸ்தவக் குழுக்களின் மிகப்பெரிய மரியாதைக்குரிய பொருளாக இது மாறிப் போனது. இயேசுவின் முகம் அற்புதமாய்ப் பதிந்த ஆடையல்லவா ?

இயேசு வாழ்ந்த காலத்தில் பெரும்பாடு நோயினால் வருந்திய ஒரு பெண், இயேசுவின் ஆடையின் ஓரத்தைத் தொட்டாள். இயேசுவின் ஆடையைத் தொட்டாலே நலம்பெறுவேன் என அவள் உறுதியாக நம்பினாள். நலம் பெற்றாள். அந்தப் பெண் தான் இந்த வெரோனிக்கா என்கிறது ‘பிலாத்துவின் பணிகள்’ எனும் நூல். ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை தவக்கால சிலுவைப்பாதை நிலைகளில் ஒன்றை வெரோணிக்கா இயேசுவின் முகத்தைத் துடைக்கும் நிகழ்ச்சியாக வைத்திருக்கிறது. இதிலிருந்தே அவர்கள் வெரோனிக்காவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். 

இந்த ஆடை எங்கிருந்து எப்படி வந்தது என தெரியாது, ஆனால் கிபி 705-708 காலகட்டத்தில் ரோமிலுள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் இந்த ஆடை இருந்ததாய் கூறப்படுகிறது. கிபி 1011 க்குப் பிறகு இந்த ஆடை குறித்த பதிவுகள் அதிகமாயின. அந்தக் காலகட்டத்தில் ரோமிற்குப் பயணித்த பயணிகளின் குறிப்பில் அவர்கள் வெரோனிக்காவின் ஆடையைப் பார்த்ததாய்க் குறிப்பிடுகின்றனர். போப் மூன்றாம் இன்னசெண்ட் அவர்கள் 1297ம் ஆண்டு இதை பொதுமக்கள் பார்வைக்காய் திறந்து வைத்தபின் இதன் பிரபலம் அதிகமானது. மிகவும் விலைமதிப்பற்ற புனிதப் பொருளாகவும் உருமாறியது.

வெரோனிக்காவின் ஆடை பார்வையாளர்களை வசீகரித்ததால், உலகெங்குமுள்ள திருச்சபைகள் பலவற்றில் போலியான ஆடைகள் உருவாக்கப்பட்டன. அதை போப்பே தலையிட்டு தடுக்கவேண்டியதாயிற்று. புனித பீட்டர்ஸ் சதுக்கத்திலுள்ள ஆடையைத் தவிர மற்ற அனைத்தும் அப்போது அழிக்கப்பட்டன. 

வெரோனிக்காவின் ஆடை உண்மையானது என நம்புபவர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக ஒரு ஆய்வு 2011ல் வெளியானது. ஆஸ்திரேலிய ஆய்வாளர் வின்செண்ட் ருவெல்லோ, இது உண்மையான வெரோனிக்கா ஆடை தான் என்றும், 3டி நெகடிவ் ஃபிலிமிங் மூலமாய் இயேசுவின் முகத்தைப் பார்க்க முடிகிறது என்றும் தெரிவித்தார். தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறன்று இப்போதும் ரோமில் வெரோனிக்காவின் ஆடை அடங்கிய பேழை சின்ன ஊர்வலமாய் கொண்டு வரப்படுகிறது. 

ஸ்ட்றோஸி Strozzi  என்பவர் 1617ல் உருவாக்கிய இதன் 6 காப்பிகள் இப்போது பல ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ளன. வியன்னாவிலுள்ள Hofburg அரண்மனை, ஸ்பெயினில் அலிகேண்ட் எனுமிடத்திலுள்ள ஹோலி ஃபேஸ் தியான நிலையம், தெற்கு ஸ்பெயினிலுள்ள ஹாய்ன் கத்தீட்றல், இத்தாலியிலுள்ள ஒரு ஆலயம் என பல இடங்களில் இவற்றைக் காணலாம். 

ஆலயத்தில் இருப்பது வெரோனிக்கா இயேசுவின் முகத்தைத் துடைத்த ஆடை தானா ? இல்லையா என்பதை எந்த ஆய்வுகளும் உறுதிப் படுத்தவில்லை. ஆனால் இதிலுள்ள முகமும், shroud of turin எனும் இயேசுவின் உடலைப் போர்த்திய ஆடையில் பதிந்த முகமும் ஒரே மாதிரி இருப்பதாக பிளாண்டினா ஸ்கோல்மர் எனும் இறைபணியாளர் குறிப்பிடுகிறார். இந்தத் துணியில் எந்த வகையான பெயிண்ட்களும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

வெரோனிக்கா எனும் பெயர் விவிலியத்தில் இடம் பெறாததால் பாரம்பரியக் கிறிஸ்தவ அமைப்புகளைத் தாண்டிய குழுக்கள் அதை நம்புவதும் இல்லை. எது எப்படியெனினும் கிறிஸ்தவ வரலாற்றின் புனிதப் பொருட்களின் பட்டியலில் இயேசுவின் முகம் பதிந்த அந்த ஆடையும் சிறப்பிடம் பெறுகிறது

Posted in Lent days

அரிமத்தியா யோசேப்பு மரியாவின் உறவினரா ?

அரிமத்தியா யோசேப்பு மரியாவின் உறவினரா ?

இயேசு, யூதர்களின் வன்மத்துக்குப் பலியானார். ரோமர்களின் கொடூர மரண தண்டனையன சிலுவை மரணம் அவர் மேல் திணிக்கப்பட்டது. கொடும் பாவம் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை, பாவமே அறியாத இயேசுவின் மேல் சுமத்தப்பட்டது. அவர் சிலுவையில் உயிர்விட்டார். 

ரோமர்கள் கைதிகளைச் சிலுவையில் அறைந்து அப்படியே சாகட்டும் என விட்டு விடுவார்கள். அறையப்பட்டவர்கள் மரணத்துக்காகப் போராடுவார்கள். வாழ்வு அவர்களுக்கு சாபமாகவும், சாவு அவர்களுக்கு வரமாகவும் இருக்கும். உடலெங்கும் காயத்தோடு தொங்கும் அவர்களைப் பார்க்க யாரும் வரமாட்டார்கள். கைதிகளுக்குத் தெரிந்தவர் என காட்டிக் கொண்டால் அவர்களுக்கும் சிக்கல் வரும் எனும் பயமே அதன் காரணம்.

சிலுவையின் மீது உடல்கள் பல நாட்கள் கூட குற்றுயிராய்த் தொங்கும். பறவைகள் வந்து உடலின் காயங்களைக் கொத்தும். சதையைப் பிய்த்துத் தின்னும். சிலுவை மிக உயரத்தில் இருக்காது. தரையிலிருந்து ஒரு அடி, ஒன்றரை அடி உயரத்தில் தான் உடல்கள் தொங்கும். எனவே விலங்குகளும் வந்து கைதிகளைக் கடித்துத் தின்னப் பார்க்கும். பெரும்பாலும் கைதிகளை நிர்வாணமாகவே தொங்க விடுவார்கள், எனவே அவமானம் இன்னொரு புறம் கொத்தித் தின்னும். இப்படிப்பட்ட கொடிய சாவு யாருக்குமே வரக்கூடாது என பார்ப்பவர்கள் நினைப்பார்கள். அதற்காகத் தான் ரோமர்கள் கைதிகளை உயரமான இடத்தில், எல்லோரும் பார்க்கும் இடத்தில் படத்தைப் போல அறைந்து தொங்கவிட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். 

இயேசுவும் அத்தகைய ஒரு கொடுமையான சூழலில் தான் உயிர்விட்டார். இப்போது உடலை கீழே இறக்கி அடக்கம் செய்ய வேண்டும். ரோமர்களைப் பொறுத்தவரை உடலை கீழே இறக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. பல நாட்கள் சிலுவையிலேயே கிடந்தாலும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் யூதர்களுக்கு அப்படியல்ல. மரத்தில் உடல்கள் இரவு முழுதும் தொங்கலாகாது எனும் சட்டம் உண்டு. எனவே மாலைக்குள் கீழே இறக்கி அடக்கம் செய்தாக வேண்டும். இயேசு இறந்தது பாஸ்கா காலம். மறு நாள் ஓய்வு நாள், ஓய்வு நாளில் வேலை ஏதும் செய்யவும் கூடாது. பாஸ்கா ஆயத்தத்துக்காக தூய்மை காக்க வேண்டும். அடுத்த நாள் என்பது முந்தின நாள் மாலை 6 மணிக்கே வேறு தொடங்கிவிடும். 

இயேசுவின் உடலைக் கேட்க யாரும் இல்லை ! சொந்தக்காரர்கள் எல்லாம் கலிலேயாவில். எருசலேமில் யாரிடமும் கல்லறை இல்லை. இயேசுவுக்குத் தெரிந்தவர் என காட்டிக் கொண்டால் சிக்கல் வருமோ எனும் பயத்தில் எல்லோரும் ஒளிந்து விட்டார்கள். சிலுவை தண்டனை பெற்ற கைதிகளைப் பொதுவாக அவர்களின் மூதாதையரோடு அடக்கம் செய்ய மாட்டார்கள். இப்படி இடியாப்பச் சிக்கலாய் இருந்த சூழலில் தான் இயேசுவின் உடலை விரைவாகக் கீழிறக்க பிலாத்துவிடம் அனுமதி கேட்டர் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு. 

அவர் சென்கத்ரின் உறுப்பினர். தலைமைக்குருவை தலைவராகக் கொண்ட யூதர்களின் உயரிய குழு அது.  இயேசுவின் மரண  தண்டனையின் போது யோசேப்பு அங்கே இருந்தாரா தெரியாது. இருந்திருந்தாலும் ஒரு குரலைக் கூட எழுப்பாமல் அமைதி காத்திருந்தார். அங்கே அவரை அச்சம் பிடித்திருக்கலாம். ஆனால் இங்கே துணிச்சலாக பிலாத்துவிடம் போய் உடலை இறக்க அனுமதி கேட்டார். பிலாத்துவும் அனுமதி அளித்தார்.

இந்த  அரிமத்தியா ஊர் யோசேப்புவைப் பற்றி பல கதைகள் உண்டு. அதில் ஒரு கதை சுவாரஸ்யமானது. அந்த கதையின் படி அவர் டின் வியாபாரி. தென்மேற்கு இங்கிலாந்துப் பகுதியில், யூதர்களின் விற்பனைப் பகுதி ஒன்று உண்டு அங்கே விற்பனைக்காகச் செல்வார். நல்ல செல்வச் செழிப்புடையவர். சிறுவனாய் இருந்த இயேசுவை ஒரு முறை தன்னோடு அங்கே கூட்டிச் சென்றார். காரணம் அவர் அன்னை மரியாளின் நெருங்கிய உறவினர். என விரிகிறது அந்தக் கதை. ’இயேசுவின் உறவினர்’ எனும் உரிமையில் தான் பிலாத்துவிடம் சென்று பேசி இயேசுவின் உடலைப் பெற்றுக் கொண்டார் என சொல்பவர்களும் உண்டு. 

இன்னொரு கதையில் கிபி 61ல் பிலிப்பு அவரை நற்செய்திப் பணிக்காக இங்கிலாந்துக்கு அனுப்பினார். அப்போது அவர் தன்னுடன் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு போனார். அது இயேசு இறுதி இரா உணவில் பயன்படுத்திய கிண்ணம். அதில் சிலுவையிலிருந்து வடிந்த இயேசுவின் இரத்தத்தைப் பிடித்து வைத்திருந்தார் என ஹோலி கிரைல் இன்னொரு கதையாய் விரிகிறது.  

அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு இயேசுவின் உறவினராய் இருந்தாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் அவர் இயேசு வாழ்ந்த காலத்தில் மறைவாய் இருந்தார். இயேசுவுக்காக வாதிடவும் இல்லை, இயேசுவோடு உரையாடவும் இல்லை. ஆனால் இயேசு மறைந்தபின் அவருக்கான இறுதிச் சடங்குகள் செய்ய துணிச்சலாய் வருகிறார். தன்னுடைய கல்லறையை அவருக்காய் விட்டுக் கொடுக்கிறார். வாழும்போது இந்தத் துணிச்சல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ? சென்கதரின் சபையில் அவரது குரல் ஓங்கி இயேசுவுக்காக ஒலித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் !! ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. இறந்தபின் விருது வழங்கி பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டார்.  

இல்லை, ஒருவேளை அதுவும் இறைவாக்கு நிறைவேறுதலின் ஒரு அம்சமாய் இருக்கலாம். இயேசு சொன்னார், நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்” அப்படியானால், இயேசு சிலுவையிலிருந்து உயர்த்தப்பட்டபோது யோசேப்புவையும் தன்பால் ஈர்த்துக் கொண்டாரா ? மலையின் உச்சியில் ஒரு நூற்றுவர் தலைவன் இருந்தார். அவர் இயேசுவின் மரண நிகழ்ச்சியைப் பார்த்து, ‘இவர் உண்மையிலேயே இறைமகன்’ என சான்றளித்தார். அவரையும் இயேசு தன்பால் ஈர்த்துக் கொண்டாரா ?

சிலுவையில் அறையப்பட்டு, உயர்த்தப்பட்ட இயேசு

நம்மை ஈர்த்துக் கொண்டாரா ?

பார்வையாளராய் அல்ல, பங்காளராய்

Posted in Lent days

தாகமாயிருக்கிறேன் என்று உண்மையிலேயே இயேசு சொன்னாரா ?

தாகமாயிருக்கிறேன் என்று உண்மையிலேயே இயேசு சொன்னாரா ?

இயேசு சிலுவையின் உச்சியிலிருந்து ஏழு வாக்கியங்களைப் பேசினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இவற்றில் மூன்று வாக்கியங்களை யோவான் மட்டுமே சொல்கிறார். 

ஒன்று, தனது தாயைப் பார்த்து, இதோ உன் மகன் என்றும். யோவானைப் பார்த்து இதோ உன் தாய் என்றும் சொல்கிறார். 

இரண்டு, தாகமாயிருக்கிறேன் என்கிறார். மூன்றாவது எல்லாம் முடிந்தது என்கிறார். 

தாகமாயிருக்கிறேன், எல்லாம் முடிந்தது எனும் இரண்டு வாக்கியங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.  இயேசு சிலுவையின் உச்சியில் ‘தாகமாயிருக்கிறேன்’ என்றாரா ? உண்மையிலேயே அவருக்குத் தாகம் எடுத்ததா ? எனும் கேள்விகளை பல காலகட்டங்களில் பலர் எழுப்பியிருக்கிறார்கள். இயேசு தாகமாயிருக்கிறேன் என்று சொன்னபோது, அங்கே இருந்த புளித்த திராட்சை இரசத்தை கடற்பஞ்சை நன்கு தோய்த்து, ஈசோப்புத் தண்டில் பொருத்தி அவரது வாயில் வைத்தார்கள். அதைக் குடித்த இயேசு, ‘எல்லாம் நிறைவேறிற்று’ என்று கூறி தலை சாய்த்து உயிர்விட்டார். என்கிறது பைபிள்.

யோவான் இந்த வசனங்களை மிகவும் தெளிவாக எழுதி வைப்பதற்குச் சில காரணங்கள் உண்டு என்கின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். இந்த நூலை யோவான் கிபி 100களில் எழுதுகிறார். அப்போது கிறிஸ்தவம் பல இடங்களில் பரவியிருந்தது. ச கூடவே ஏராளமான தத்துவக் கொள்கைகளும் முளைத்திருந்தன. அவற்றில் ஒன்று இயேசு முழுமையான கடவுள் மட்டுமே அவர் மனிதனல்ல. மனிதனுக்குரிய இயல்புகள் எதுவுமே அவருக்கு இருக்காது என்பது. இது ஞானக் கொள்கை என அழைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் அந்த கொள்கை நம்பப்பட்டது, பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது, மிகவும் தீவிரமாகப் பரப்பப் பட்டது. 

அதன் அடிப்படையில் ஆன்மா என்பது தூய்மையானது என்றும், உடல் என்பது பாவமானது என்றும் கருதப்பட்டது. தூய்மையான ஆன்மா, பாவமான உடலில் நுழைய முடியாது. அப்படி நுழைந்தால் அது பாவமாகிவிடும். எனவே தூயவரான இயேசு பாவமான உடலில் வந்திருக்க வாய்ப்பே இல்லை. அது ஒரு தோற்ற மயக்கம். உண்மையில் இயேசு மனிதனாக வாழவில்லை. கடவுளாகவே வாழ்ந்தார் என்கிறது அந்தக் கொள்கை. 

இன்னும் ஒரு படி மேலே போய், இயேசு நடந்த இடத்தில் பாதச் சுவடு கூட இருக்காது. அவர் தரையைத் தொடாமல் தான் நடந்து திரிவார். அவர் தெய்வம் என்று பேசினார்கள். சிலுவைப் பாடுகளின் போது இயேசு உண்மையிலேயே கஷ்டப்படவில்லை. அவர் கடவுள். அவருக்கு வலி என்பதே இல்லை. அவருக்கு பசி எடுக்காது, அவருக்குத் தாகம் எடுக்காது என்றெல்லாம் அவர்கள் தங்களுடைய சித்தாந்தங்களை விரிவுபடுத்தினார்கள். 

இயேசுவைப் பெருமைப்படுத்துவதாய் நினைத்து அவர்கள் பேசினார்கள். ஆனால் உண்மையில் அது இயேசுவின் மீட்பின் திட்டத்தையே கேள்விக்குரியதாக மாற்றியது. இயேசு முழுமையான மனிதனாய் வந்தால் மட்டுமே மனிதனின் துயரங்களை அறிய முடியும், அப்படி வந்து பாவத்தை வென்று பலியானால் மட்டுமே மீட்பை அளிக்கும் நிலையை அடைய முடியும். அதுவே ஒரு முன்மாதிரியான வாழ்க்கையாய் நிலைக்கவும் செய்யும். இந்த சிந்தனைகளை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக யோவான் தனது நற்செய்தியில் இயேசுவின் தாகத்தை முக்கியப்படுத்துகிறார். 

இயேசுவுக்குத் தாகம் எடுத்தது, அவர் முழுமையான மனிதனாய்த் தான் வாழ்ந்தார் என்பதை அவர் வலியுறுத்துகிறார். தாகத்தின் போது அவருக்கு திராட்சை இரசத்தை கடற்பஞ்சில் தோய்த்து ஈசோப்பில் பொருத்தி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் குடிக்கவும் செய்தார் ! என்பதைப் பதிவு செய்கிறார். மார்க், நற்செய்தியை எழுதிய காலத்தில் இயேசு மனிதர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. அது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாய் இருந்தது. எனவே அப்போது மார்க் அதை முதன்மைப்படுத்தவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் யோவானின் காலத்தில் இயேசுவின் மனிதத் தன்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது, எனவே அதை முதன்மைப்படுத்துகிறார். 

ஈசோப்பில் பொருத்தி திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள் என வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை அவர் எழுதுகிறார். ஈசோப் என்பது ஒரு புல். இந்த இடத்தில் அதைக் கூட யோவான் கவனமாய் பதிவு செய்ய ஒரு காரணம் உ ண்டு. இயேசுவை பாஸ்கா பலியாகக் காட்டுவது யோவானின் நோக்கம். முன்பு எகிப்தை விட்டு  இஸ்ரேலர்கள் வெளியேறியபோது வீட்டு நிலைக்கால்களில் பலியாட்டின் இரத்தத்தைப் பூசினார்கள். அப்படிப் பூச அவர்கள் பயன்படுத்தியது ஈசோப் புல் ! அந்த புல்லை, இங்கே கல்வாரியில் சிலுவையின் உச்சியில், இயேசுவை மனுக்குலத்தின் பலியாக தொடர்பு படுத்தி யோவான் விளக்குகிறார். 

இயேசுவை மனிதனாய்க் காட்ட தாகமாயிருக்கிறேன் என்று சொன்னவர், கடவுளாய்க் காட்ட ‘எல்லாம் நிறைவேறிற்று” என்பதையும் முக்கியப்படுத்துகிறார். டெடெலெஸ்டே எனும் அந்த வார்த்தை, கடனை முழுதாய்ச் செலுத்திவிட்டேன். என் பணியை முழுதாய் முடித்து விட்டேன் என்கிறது. மற்ற நற்செய்திகள், இயேசு உரக்கக் கத்தி உயிர்விட்டார் என சொல்லும் போது யோவான் மட்டும் அந்த உரக்கக் கத்திய வார்த்தை டெடெலெஸ்டே – எல்லாம் நிறைவேறிற்று -என்கிறார். இரண்டையும் இணைத்துப் பார்க்கும் போது, இயேசு சிலுவையின் உச்சியில் எல்லாம் நிறைவேறிற்று என உரக்கக் கத்தி, வெற்றி வீரராய் தன் உயிரைக் கையளிக்கிறார். மீட்பின் பணியை முடித்து வைக்கிறார். இங்கே அவரது இறைத் தன்மையை நிலைநாட்டப்படுகிறது. 

யோவானின் நற்செய்தி நூல் சிலுவையின் உச்சியிலும் இயேசு மனிதராகவும், கடவுளாகவும் வாழ்ந்தார் என்பதை அழுத்தம் திருத்தமாய் எழுதுகிறது.