Posted in OLD Testament

கி.மு 30 : தாவீது மன்னனின் சலனம்

Image result for david and bathsheba
ஒரு நாள் மாலைப் பொழுது, தாவீது குளித்து விட்டுத் தன்னுடைய அரண்மனையின் மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். மெல்லிய குளிர்ந்த காற்று அவருடை ஈர மேனியைத் தொட்டுச் செல்ல மிகவும் உற்சாகமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அப்போது அரண்மனைக்கு அருகே இருந்த ஒரு வீட்டருகே ஒரு இளம் பெண் குளித்துக் கொண்டிருப்பதைத் தாவீது பார்த்தார். அவளுடைய கொள்ளை அழகு தாவீதை மொத்தமாய்க் கொள்ளையடித்து விட்டது. இனிமையான மாலை வேளையும், சுகமான காற்றும் கொடுக்கும் உற்சாகத்தோடு அந்தப் பெண்ணும் சேர்ந்து கொண்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று தாவீது தனக்குள் மோக எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, வைத்த கண் வாங்காமல் அந்தப் பெண் குளிப்பதையே பார்த்துக் கொண்டே நின்றார். அவரால் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை.

உடனே தன்னுடையை பணியாளனை அழைத்தார்.

‘சொல்லுங்கள் அரசே….’, பணியாளன் ஒருவன் ஓடி வந்து பவ்யமானான்.

‘அதோ அந்த வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் பெண் யார் என்று தெரியுமா ?’ மன்னன் கேட்டான்.

‘தெரியும் மன்னா … அவள் எலியாவின் மகள் பத்சேபா’ பணியாளன் சொன்னான்.

‘எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. அவளை என் அந்தப் புரத்துக்கு வரச் சொல்’ மன்னன் ஆணையிட்டான்.

‘அப்படியே ஆகட்டும் மன்னா…. ஆனால்…..’ பணியாளன் இழுத்தான்

‘என்ன ஆனால்…. ‘ தாவீது திரும்பினார்.

‘அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இப்போது அவள் உரியா என்பவருடைய மனைவி.’, பணியாளன் சொன்னான்.

‘நான் விரும்பும் பெண் யாருடைய மனைவியாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. இன்று அவள் என்னோடு மஞ்சத்தில் படுக்கவேண்டும்’ தாவீது அழுத்தமாய்ச் சொல்ல பணியாளன் அகன்றான்.

அரசனின் கட்டளைக்கு மறுபேச்சு ஏது ? பத்சேபா அரண்மனை அந்தப் புரத்துக்கு வரவழைக்கப் பட்டாள். அங்கே தாவீது அவளுடன் உறவு கொண்டார். மன்னனின் ஆசைக்கு மறுப்புச் சொல்ல இயலாத பத்சாபா உடைந்த மனதோடு ஏதும் பேசாமல் தன்னுடைய இல்லம் சென்றாள். பத்சேபாவின் கணவன் உரியா யோவாபு என்னும் படைத்தலைவனின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்தான். அரசின் மேலும், அரசர் மேலும் மிகவும் மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தார் அவர்.

தாவீதுக்கு பத்சேபா மேல் இருந்த காமம் குறையவில்லை. அவளை எப்படியாவது முழுமையாக அடைந்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார். உரியா உயிருடன் இருக்கும் வரைக்கும் தன்னால் அவளை முழுமையாக அடைய முடியாது என்று நினைத்த மன்னன்,
காலையில் யோவாபுவிற்கு ஒரு மடல் எழுதினார். அதை உரியாவின் கையிலேயே கொடுத்து யோபாவுவிடம் கொடுக்கச் சொன்னார்.
உரியா அதை அப்படியே யோபாவுவின் கைகளில் கொடுத்தான்.

யோபாவு அதை வாசித்துப் பார்த்தார். ‘ யோபாவு…. போரில் உரியா சாக வேண்டும். எனவே அவனை எதிரிகள் அதிகமாய் இருக்கும் இடத்தில் அனுப்பு. அவனை எதிரிகள் கொல்லட்டும்’. மன்னரின் தகவலை யோபாவு வாசித்து முடித்து நிமிர்ந்து பார்த்தார். அங்கே ஒன்றும் அறியாமல் பணிவுடன் உரியா நின்றுகொண்டிருந்தான்.

அமலேக்கியரோடு போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

தாவீதின் படை மீண்டும் அமலேக்கியரை அழிப்பதற்காகப் புறப்பட்டது. யோபாவு தன்னுடைய வீரர்களோடு புறப்பட்டார். ‘உரியா சாகவேண்டும்’  மன்னன் தனக்கிட்டிருந்த ஆணை அவனுடைய மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது.

எல்லோரும் அமலேக்கியரின் நகரை சற்றுத் தொலைவிலிருந்தே தாக்கிக் கொண்டிருந்தார்கள்
யோபாவு உரியாவை அழைத்தான்.

‘உரியா…. நாம் போர் வியூகத்தைச் சற்று மாற்றுகிறோம்’ யோபாவு சொன்னார்.

‘சொல்லுங்கள்… கடைபிடிக்கிறேன்’ உரியா பணிவானான்.

‘நீ உன்னுடன் சில வீரர்களை அழைத்துக் கொண்டு நகரின் மதில் சுவரை நெருங்க வேண்டும்…. நெருங்கி அங்கிருக்கும் அமலேக்கியரை அழிக்கவேண்டும்… ‘யோபாவு சொன்னான்.

‘மதில் சுவரின் மேல் எதிரிகள் இருக்கக் கூடும். இந்த வியூகம் நமக்குத் தான் ஆபத்தாய் முடியும்’ உரியா கூறினான்.

‘கவலைப்படாதே. நீ மதில் சுவரை நெருங்கும் போது அவர்கள் உங்களைத் தாக்குவதற்காகத் தலையைத் தூக்குவார்கள். அப்போது நாங்கள் அவர்களை இங்கிருந்தே வீழ்த்துவோம்’ யோபாவு சொன்னான்.

யோபாவுவின் விளக்கத்தில் திருப்தியடைந்த உரியா மகிழ்ச்சியுடன் தன்னுடன் சில வீரர்களையும் கூட்டிக் கொண்டு மதில்சுவரை நோக்கிப் புறப்பட்டான். நகர மதில் சுவரை நெருங்குகையில், மதில் சுவரின் மேல் காத்திருந்த அமலேக்கியர்கள் மதில்சுவரின் மீதிருந்து கற்களை உருட்டி விட்டார்கள். இதை சற்றும் எதிர்பார்த்திருக்காத உரியாவின் படை விலக நேரம் கிடைக்காமல் நசுங்கி அழிந்தது. அதை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் யோவாபு.

கணவன் இறந்த செய்தி பத்சேபாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவள் கதறி அழுதார். தாவீது உள்ளுக்குள் மகிழ்ந்தார். அவர் பணியாளர்களை அழைத்து ‘உரியாவின் மனைவியை இங்கே அழைத்து வாருங்கள்’ என்றார்.

பத்சேபா கலங்கிய விழிகளோடு தாவீது மன்னனின் முன்னிலையில் வந்து நின்றாள்.

தாவீது அவளிடம் ‘பத்சேபா… கவலைப்படாதே. உரியாவின் மறைவு எனக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது. இனிமேல் உன்னைக் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது. எனவே… இனிமேல் நீ எனக்கு மனைவியாகி என் அந்தப்புரத்தில் இரு’ என்றார். பத்சேபா மறுத்துப் பேசும் உரிமையற்றவள். மன்னனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டாள். தாவீதின் மனைவியாகி அவருடன் வாழ்ந்து ஒரு மகனுக்கும் தாயானாள்.

தாவீதின் இந்தச் செயலைக் கண்ட கடவுள் கோபம் கொண்டார். அவர் நாத்தான் என்னும் இறைவாக்கினரை தாவீதின் அரண்மனைக்கு அனுப்பினார்.
நாத்தான் தாவீது மன்னனின் முன் வந்து நின்றார்.

‘அரசே வணக்கம்…. நீங்கள் நீடூழி வாழவேண்டும்’ நாத்தான் வாழ்த்தினான்.

தாவீது மகிழ்ந்தார். ‘சொல்லுங்கள் நாத்தான்… தங்கள் வருகையின் நோக்கம் என்னவோ ?’ தாவீது கேட்டார்.

‘அரசே நான் ஒரு வழக்கோடு வந்திருக்கிறேன்… ‘ நாத்தான் சொன்னான்.

‘வழக்கோடு வருவது தானே உங்கள் வழக்கம். சொல்லுங்கள். உங்கள் வழக்கு எதுவானாலும் தீர்த்து வைப்பேன்’ தாவீது உறுதியளித்தார்.

‘அரசே… ஒரு நகரில் ஒரு செல்வந்தனும், ஒரு வறியவனும் வாழ்ந்து வந்தார்கள். செல்வந்தனிடம் ஆயிரக்கணக்கான ஆடுகளும், மாடுகளும் நிறைந்திருந்தன. அவனுக்குத் தேவையென்றால் ஆயிரக்கணக்கான மக்கள் அவர் கேட்பதையெல்லாம் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால் அந்த ஏழையிடமோ ஒரே ஒரு ஆட்டுக்குட்டி மட்டுமே இருந்தது. அதை அவன் மிகவும் அன்பாக நேசித்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை தன்னுடன் அணைத்துக் கொண்டு, தான் உண்ணும் உணவில் முதல் தரமானதை அதற்கும் அளித்து அதனோடு விளையாடி மகிழ்ந்திருந்தான். அந்த ஆட்டுக்குட்டியும் தன் எஜமானனிடம் ஒரு நண்பனைப் போல மிகவும் அன்புடன் இருந்தது… ஒரு நாள் அந்த செல்வந்தனைத் தேடி ஒரு விருந்தாளி வந்தான். அந்த செல்வந்தனோ, தன்னுடைய மந்தைகளை விட்டு விட்டு, அந்த ஏழையின் ஒற்றை ஆட்டைப் பிடித்துக் கொன்று சமைத்து விட்டான்….’ நாத்தான் நிறுத்தினார்.

தாவீதின் கண்களில் கோபம் கொப்பளித்தது. ‘என்னுடைய ஆட்சியில் இத்தனை பெரிய அயோக்கியன் ஒருவன் இருக்கிறானா ? யாரவன் ? இப்போதே வெட்டிக் கொன்று விடுகிறேன்… ‘ தாவீது சினந்தான்.

‘அது நீர் தான் மன்னா….’ நாத்தான் அரசனின் முன் நேராக நின்று கொண்டு தன்னுடைய ஆட்காட்டி விரலை தாவீதின் முகத்துக்கு நேராக நீட்டினார்.

தாவீது திடுக்கிட்டார். ‘ என்ன… நானா ? நான் எப்போது அப்படி நடந்து கொண்டேன்’ தாவீது கேட்டார்.

‘புரியவில்லையா மன்னா ? உமக்கு எத்தனையோ மனைவிகள் இருக்க, ஒரு ஏழை உரியாவின் மனைவியை நீ கவர்ந்து கொள்ளவில்லையா ? அவனை சதித்திட்டம் தீட்டிக் கொன்று விடவில்லையா ? …’ நாத்தான் தொடர்ந்தார்.

தாவீது திகைத்துப் போய் நின்றார்.

‘உம்முடைய இந்த செயலினால் கடவுள் மிகவும் கோபமடைந்து விட்டார். உன் மீது அவர் எத்தனை அன்பு வைத்திருந்தார். நீ நடத்திய அனைத்து போர்களிலும் வென்றாயே ! உன் வேண்டுதல்கள் ஏதும் நிராகரிக்கப் படவில்லையே ! ஒரு ஆடு மேய்ப்பவன் என்னும் நிலையிலிருந்து அரசன் என்னும் இருக்கைக்கு உன்னை அழைத்து வந்தது அவர் தானே… அவருக்கு எதிராய் நடந்து கொண்டிருக்கிறாயே… தவறில்லையா ?’ நாத்தான் தைரியமாய் பேசினார்.

தாவீது தம்முடைய தவறை உணர்ந்தார். உடனே மண்டியிட்டு அழுதார். ‘கடவுளே… என்னுடைய அறிவீனத்தினாலும், பலவீனத்தினாலும் தவறிழைத்து விட்டேன் என்னை மன்னியும்’ என்று கதறினார்.

தாவீது மனம் திருந்தியதை அறிந்த கடவுள் நாத்தான் வழியாக தாவீதிடம் மீண்டும் பேசினார்.
‘அரசே… கடவுள் இன்னும் உங்களை மிகவும் அன்பு செய்கிறார். ஆனால் நீர் செய்த தவறுக்குத் தண்டனையாக உமக்கும் பத்சேபாவுக்கும் பிறக்கும் முதல் மகன் இறந்து போவான்’.

இந்த வார்த்தைகளைக் கேட்ட தாவீது இன்னும் அதிகமாக வருந்தினான். தன் தவறினால் பத்சேபாவும் வருத்தப் படுவாளே என்றெண்ணி அழுதார்.

பத்சேபாவின் பிரசவ காலம் நெருங்கியது. தாவீது தொடர்ந்து ஆண்டவரிடம் தன் மகனை மீட்குமாறு வேண்டிக் கொண்டே இருந்தார். ஆனால் கடவுளின் தீர்ப்பு மாறவில்லை.

குழந்தை பிறந்தது ! பிறந்த மறுதினமே நோய்வாய்ப் பட்டது ! ஏழாம் நாளில் இறந்துபோனது.

தாவீது மனம் திருந்தினார். இனிமேல் தவறு செய்யக் கூடாது என்று முடிவெடுத்தார். கடவுளும் அவரை ஆசீர்வதித்து அவருக்கு இரண்டாவதாய் ஒரு மகனைக் கொடுத்தார். அந்தக் குழந்தைதான் ஞானத்தின் இருப்பிடமாய் பிற்காலத்தில் விளங்கிய சாலமோன்.

Posted in OLD Testament

கி.மு 31 : தந்தை மகன் போராட்டம்

Image result for david absalom

மன்னன் தாவீதின் மகன்களில் ஒருவனான அப்சலோம், அவனுடைய தந்தைக்கும் இன்னொரு மனைவிக்கும் பிறந்த சகோதரனான அம்மோனைக் கொன்று விட்டுத் தப்பியோடினான். தாவீது இறந்து போன மகனுக்காகக் கலங்கித் தவித்தார். வருடங்கள் செல்லச் செல்ல இறந்துபோன மகனின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய, தலைமறைவான மகன் அப்சலோமையும் நினைத்து ஏங்கத் துவங்கினார். ஆனாலும் தன் மகனைத் திரும்ப அழைக்கும் நினைப்பு அவருக்கு இருக்கவில்லை.

தாவீது மன்னன் அப்சலோமின் மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார் என்பதை அவருடன் பலகாலமாக பணியாற்றிவரும் யோபாவு என்பவர்அறிந்தார். அவர் ஒரு நாடகமாடி மன்னனின் மகனைத் திரும்பவும் நாட்டிற்குக் கூட்டி வரத் திட்டமிட்டார். அதன்படி ஒரு காட்சி அரங்கேறியது.

தலைவிரிகோலமாய் கதறிக்கொண்டே தாவீதின் முன்னால் ஓடி வந்து விழுந்தாள் ஒரு பெண்.
‘அரசே காப்பாற்றும்….’

‘எழுந்திரு பெண்ணே உனக்கு என்ன வேண்டும்’ தாவீது கேட்டார்.

‘தலைவரே… நான் ஒரு விதவை. எனக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். இருவருக்கும் ஒருமுறை தகராறு வந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். அந்தச் சண்டையில் எனது ஒரு மகன் இறந்து விட்டான். இப்போது எனக்கிருப்பது ஒரே மகன். உறவினர்களும், நண்பர்களும் எல்லோரும் அவனைக் கொல்லும் வெறியோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவனை இழந்துவிட்டேன், மிச்சமிருக்கிற ஒரு மகனையும் கூட இழந்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்’ பெண் அழுது கொண்டே சொன்னாள்.

‘சரி.. நான் கட்டளையிடுகிறேன். அவனை இனிமேல் யாரும் தொடமாட்டார்கள். நீ போய் வா…’ மன்னன் சொன்னார்.

‘நன்றி அரசே… அவனைக் காப்பாற்றியமைக்கு மிக்க நன்றி. கொலையாளியானாலும் தாய்க்குப் பிள்ளை தானே…’ அவள் தொடர்ந்தாள்.

‘ஆம்… உண்மை தான்.. அவனுடைய ஒரு தலைமயிர் கூட வெட்டப்படாது. நீ தைரியமாய்ப் போ…’ மன்னன் சொன்னான்.

‘அரசே… நான் ஒன்று சொல்லலாமா ?’ பெண் கேட்டாள்

‘சொல்… என்ன சொல்ல விரும்புகிறாய்’ தாவீது கேட்டார்.

‘என்னுடைய மகனுக்கு இரக்கம் காட்டிய நீர். உம்முடைய மகனை மன்னிக்காமல் விட்டுவிட்டது சரியென்று நினைக்கிறீர்களா ?’ அந்தப் பெண் அமைதியாய் பணிவாய்க் கேட்டாள்.

‘நீ.. யாரைப் பற்றிச் சொல்கிறாய் ? அப்சலோமைப் பற்றியா ?’ தாவீது கேட்டார்

‘ஆம் அரசே… நான் உமது முன்னிலையில் வரும்போதே பலர் எச்சரித்தார்கள். என் உயிருக்கே தீங்கு ஏற்படலாம் என்று தெரிந்தும் நான் உங்களிடம் உங்கள் மகனை திரும்ப அழையுங்கள் என்று சொல்வதற்காகத் தான் வந்தேன்’ அவள் சொன்னாள்.

தாவீது எழுந்தார். ‘ உண்மையைச் சொல்…. உன்னை இங்கே அனுப்பியது யோபாவு தானே ? ‘ தாவீது கேட்டார்.

‘ஆம் அரசே….’ அந்தப் பெண் உண்மையைக் கூறினாள்.

‘சரி… உங்கள் விருப்பப் படியே அவனை அழைத்து வரச் செய்கிறேன். ஆனால் அவன் என்னுடைய முகத்தில் விழிக்கக் கூடாது. நாட்டில் வேறு எங்காவது வந்து பிழைத்துக் கொள்ளட்டும்’ தாவீது சொன்னார்.

அப்சலோம், அழைத்து வரப்பட்டான்.

ஆனால் அவன் இரண்டு ஆண்டுகள் அவன் தன்னுடைய தந்தையின் முகத்தில் விழிக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் சென்றபின் யோபாவு மூலமாகத் தூது விட்டு தந்தையைச் சென்று சந்தித்தான். நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொண்ட தந்தையும் மகனும் கண்ணீர் விட்டுக் கட்டித் தழுவிக் கொண்டனர். பகையை எல்லாம் மறந்தார்கள். அப்சலோம் தனக்கென ஒரு தேரும், தனக்கு முன்னால் ஓட ஐம்பது பேரையும் அமர்த்திக் கொண்டு அரச வாழ்க்கையை ஆரம்பித்தான். சொகுசு வாழ்க்கை வாழத் துவங்கியதும் அப்சலோமின் மனதுக்குள் பேராசைத் தீ பற்றிக் கொண்டது.

நான் அரசனானால் எப்படி இருக்கும் !

அரசராகவேண்டும் என்னும் எண்ணம் அப்சலோமின் மனதுக்குள் வந்ததுமுதல் அவனுடைய தூக்கம் போய்விட்டது. அவன் திட்டமிடவும், வியூகங்கள் அமைக்கவும் ஆரம்பித்தான்.

தினமும் காலையில் நகர வாசலில் சென்று மக்களின் குறைகளைக் கேட்பான்.

‘ஓ… இப்படி ஒரு பெரிய குறை உனக்கு இருக்கிறதா ? நானாயிருந்தால் இப்போது உன்னுடைய குறைகளை நீ விரும்புவது போல தீர்த்து வைத்திருப்பேன். என்ன செய்வது தாவீதல்லவா மன்னனாக இருக்கிறார் ?’ என்று எல்லோரிடமும் கூறுவான்.

தொடர்ந்து நான்கு வருடங்களாக அப்சலோம் நகரில் எல்லா இடங்களிலும் இதே போன்ற பதிலை திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி, ‘அப்சலோம் அரசரானால் நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் போலிருக்கிறதே’ என்று மக்களைப் பேசவைத்தான்.

நாடெங்கும் அப்சலோமுக்கு ஆதரவான ஒரு அலை உருவாகியது. அப்சலோமின் ஆதரவாளர்களும், அவனை அரசனாக்க வேண்டும் என்னும் எண்ணமுள்ளவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்தார்கள்.

தாவீதுக்கு இந்தத் தகவல் தெரியவந்தபோது காலம் கடந்திருந்தது.
‘அரசே… இனிமேல் நம்மால் தாக்குப் பிடிக்க முடியாது. நமக்கு ஆதரவாய் இருந்த மக்கள் எல்லோரும் இப்போது அப்சலோமின் பின்னால். அவன் தான அரசனாக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எந்நேரமும் நாம் அப்சலோமினால் தாக்கப் படலாம். ‘ அரண்மனை வாசிகள் தாவீதை எச்சரித்தார்கள்.

‘இப்போது என்ன செய்வது ? நான்கு ஆண்டுகளாக அப்சலோம் செய்து வந்த சதி எப்படி நமக்குத் தெரியாமல் போயிற்று’ மன்னன் கேட்டான்.

‘அரசே… அது அவனுடைய தந்திரமும், தந்தையிடம் மகனைப் பற்றிப் புகார் கொடுக்க வேண்டாம் என்று நினைத்த உம் விசுவாசிகளின் எண்ணமும் தான். இப்போது எல்லாம் கைமீறிப் போய்விட்டது. நாம் உடனே தப்பிச் செல்லவில்லையேல் அழிவு நிச்சயம். ‘ பணியாளர்கள் சொன்னார்கள்.

தாவீது சம்மதித்தார். அவர் தனக்கு ஆதரவான மக்களோடு நாட்டை விட்டே ஓடிப் போனார். தன்னுடைய வைப்பாட்டிகளில் சிலரை மட்டும் அரண்மனையைப் பாதுகாக்கும் படி அரண்மனைக்குள்ளே விட்டு விட்டுச் சென்றார்.

தாவீது, மக்களோடு தப்பிச் சென்றபோது அவருடன் ஆண்டவரின் பத்துக் கட்டளைகள் அடங்கிய பேழையையும் குருக்கள் அவருடன் கொண்டு சென்றார்கள்.

தாவீது குருக்களிடம்,’ நீங்கள் ஆண்டவரின் பேழையை நாட்டிலேயே வைத்து விட்டு வாருங்கள். கடவுளுக்கு என்மேல் பிரியமிருந்தால் நான் மீண்டும் இந்தப் பேழையைக் காண அவர் வழி காட்டட்டும். இல்லையேல் நான் செத்துப் போவதைப் பற்றிக் கவலையில்லை’ என்றான். குருக்கள் அவ்வாறே செய்தனர்.
உடன்படிக்கையின் பேழை மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பியது.

தப்பியோடிய தாவீது ஒலிவமலையைச் சென்றடைந்தார். தன் மகன் தன்னை ஏமாற்றிவிட்டானே என்று நினைத்து அழுதுகொண்டே வெறும் காலுடன் அவர் மலையில் ஏறினார். அதைக் கண்ட மக்களும் தங்கள் மிதியடிகளைக் கழற்றி வைத்து விட்டு அவருடன் மலையில் ஏறினார்கள்.

மலையில் ஏறியபோது அங்கே அவருடைய ஆலோசகர் ஊசா நின்றிருந்தார். தாவீது அவரிடம்
‘ஊசா ? நீ ஏன் என்னோடு வந்தாய் ? நீ அரண்மனையிலேயே தங்கியிருக்கலாமே’ என்று கேட்டார்.

‘அரசே நீங்கள் இல்லாத அரசவையில் எனக்குப் பங்கு வேண்டாம். மரித்தாலும் நான் உங்களோடு தான் …. நீங்கள் வாழாத அரச வாழ்க்கை எனக்கு மட்டும் எதற்கு’ என மறுத்தார்.

தாவீது அவரிடம்,’ அப்படியல்ல ஊசா… நீ அப்சலோமுடன் இருக்க வேண்டும் அப்போது தான் அப்சலோமின் நடவடிக்கைகளை நீ அறிந்து கொள்ளவும், முடிந்தால் தடுக்கவும் முடியும். நீ அங்கே இருந்து எங்களுக்குத் தகவல்களை மட்டும் அனுப்பிக்கொண்டிரு’ என்று அவனை அனுப்பி வைத்தார். ஊசாவும் திரும்பிச் சென்றார்.

தாவீது சென்ற இடங்களில் இருவிதமான வரவேற்புகளைப் பெற்றார். சில இடங்களில் சிலர் அவருக்கு நல்ல உணவுகள் கொடுத்து உபசரித்தனர். சில இடங்களில் மக்கள் அவருக்கு எதிராய் வசைபாடினார்கள்.

அதே நேரத்தில் அப்சலோம் அரசைப் பிடிக்கும் நோக்கத்துடன் அரண்மனையை நோக்கிப் படையெடுத்து வந்தான். தாவீதைக் கொல்ல வாளுடன் அரண்மனைக்குள் புகுந்த அப்சலோமுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரண்மனை வெறிச்சோடிக் கிடந்தது. அப்சலோமின் அரச ஆலோசகராக தீய சிந்தனைகள் கொண்ட அகிதோபல் இருந்தான்.

வெறுமையாய்க் கிடந்த அரண்மனையைக் கண்ட அப்சலோம் எரிச்சலடைந்தான். அவன் அகிதோபலிடம்
‘இப்போது நாம் என்ன செய்வது ? அரண்மனையில் என் தந்தையின் வைப்பாட்டிகள் சிலரைத் தவிர யாரும் இல்லையே ? என்ன செய்வது ? எனக்கு ஒரு நல்ல ஆலோசனை கூறு’ என்றான்.

அகிதோபல் அவனிடம் ‘ நீர் போய் அரண்மனையில் இருக்கும் தாவீதின் வைப்பாட்டிகளோடு உறவு கொள். அப்போது உன்னுடைய கை ஓங்கிவிட்டது என்பதையும். நீ தாவீதுக்கு எதிராய் ஆட்சியைப் பிடித்து விட்டாய் என்பதையும் மக்கள் அறிந்து கொள்வார்கள்’ என்று ஒரு கொடுமையான யோசனையைச் சொன்னான்.

அப்சலோம் அந்த அறிவுரையை ஏற்றான். தாயாய் நினைக்கவேண்டிய தந்தையின் வைப்பாட்டிகளோடு உறவு கொண்டான்.
நாட்டு மக்கள் எல்லோரும் அப்சலோமின் கை ஓங்கிவிட்டது தாவீது துரத்தப்பட்டார் என்பதை அறிந்து கொண்டார்கள்.

அப்போது ஊசா அங்கு வந்து சேர்ந்தார்.

‘அரசே வாழ்க…. ‘ ஊசா அப்சலோமின் முன்னால் பணிந்தான்.

‘நீ.. ஊசா தானே ? ஏன் நீ தந்தையுடன் போகவில்லை ? நீங்கள் நண்பர்கள் அல்லவா ?’ அப்சலோம் கேட்டான்.

‘நான் தாவீதுக்கு நண்பன் என்று சொல்வதை விட இஸ்ரயேலை யார் ஆட்சி செய்கிறார்களோ அவர்களின் ஆலோசகன் என்பதே சரியாகும். அப்போது தாவீது அரசராய் இருந்தார். அவரோடு இருந்தேன். இப்போது நீர் அரசர் உம்மோடு உண்மையாய்ப் பணியாற்றுவேன்’ என்றார்.

‘நல்லது ! உன்னை நினைத்து நான் மகிழ்கிறேன்’ அப்சலோம் ஊசாவை முழுமையாய் நம்பிவிட்டான்.

அப்சலோம் தன்னுடைய ஆஸ்தான ஆலோசகன் அகிதோபலை அழைத்தான்.
‘அகிதோபல், தாவீதை வெற்றி கொள்ளும் வரை இந்த அரசு என்னுடையதாகாது. எனவே ஒரு நல்ல யோசனை சொல். தாவீதை நான் கொல்ல வேண்டும்’ என்றான்.

‘ நாம் பதினாயிரம் பேர் நேராக தாவீது ஒளிந்திருக்கும் காட்டுக்குச் செல்லவேண்டும். அங்கு சென்று அவர்கள் மீது பாய்ந்து அவர்களை பயப்படுத்தவேண்டும். அப்போது கூட்டம் சிதறி ஓடும் மன்னனை நாம் எளிதாகக் கொல்லலாம்’ அகிதோபல் யோசனை சொன்னான்.

அகிதோபலில் யோசனையின் படி செயல்பட்டால் தாவீது கொல்லப்படுவது உறுதி என்பதை ஊசா உணர்ந்தார். எப்படியாவது தாவீதைத் தப்புவிக்கவேண்டுமே என்று கடவுளை மனதில் நினைத்து வேண்டிக் கொண்டிருந்தார்.

மன்னன் ஊசாவைப் பார்த்தான்.’ நீர் என்ன சொல்கிறீர் ? என் தந்தையின் பிரதான ஆலோசகர் அல்லவா ? உம்முடைய கருத்தைச் சொல்லும்’ அப்சலோம் கேட்டான்.

‘சிறுபிள்ளைத்தனமான யோசனையைக் கேட்டு நான் சிரிக்காமல் என்ன செய்வது மன்னா ?’ ஊசா சொன்னான்

‘என்னுடைய யோசனை சிறுபிள்ளைத் தனமானதா ? அப்படியென்ன சிறுபிள்ளைத் தனம் கண்டாய் இதில் ?’ அகிதோபல் ஆத்திரப் பட்டான்.

‘தாவீதும் அவருடைய வீரர்களும் பயமுறுத்தலுக்கெல்லாம் அஞ்சமாட்டார்கள் என்பதை அனைவரும் அறிவர். அவர்கள் இப்போது அப்சலோம் மீது மிகவும் கோபத்தோடு இருக்கிறார்கள். அவர்கள் பதுங்கிக் கிடக்கும் புலிகளைப் போல இருக்கிறார்கள். வாய்ப்பு வந்தால் பத்துமடங்கு வீரத்தோடு எதிர்ப்பது நிச்சயம். அது மட்டுமல்ல, தாவீது கண்டிப்பாக படையினரோடு தங்கமாட்டார். தனியாகத் தான் தங்குவார். நீங்கள் போரிட்டு அவரைக் கொல்ல முடியாமல் போனால் நீங்கள் தோற்றதாய் ஆகிவிடாதா ?’ ஊசா கேட்டான்.

அப்சலோம் தலையாட்டினான்,’ உண்மைதான் ஊசா… நீங்கள் வேறு யோசனை சொல்லுங்கள்’ அப்சலோம் கேட்டான்.

‘நாம் இஸ்ரயேல் மக்களை அனைவரையும் ஒன்றுசேர்க்க வேண்டும். ஒரு மிகப் பெரிய கூட்டமாக நாம் போய் அவர்கள் மேல் பாய்ந்து மொத்தமாக அமுக்கவேண்டும். அதுதான் சிறந்த வழி. தாவீது மட்டுமல்ல அவரோடு இருக்கும் அனைவரும் அழிந்தால் தான் நமக்கு எதிரிகளே இல்லை என்னும் நிலை வரும்’ ஊசா சொன்னார்.

அப்சலோமுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. ‘ அகிதோபல், உன்னுடைய யோசனையை விட ஊசாவின் யோசனை சிறப்பாய் இருக்கிறது. நாம் அதையே பின்பற்றுவோம்’ அப்சலோம் சொன்னான்.

அகிதோபல் அவமானத்தால் நெளிந்தான். வேகமாக வெளியேறி வீட்டுக்குச் சென்றான். இனிமேல் தனக்கு இந்த அரசவையில் மரியாதை கிடைக்கப் போவதில்லை. இத்தனை பெரிய அவமானத்தைச் சுமந்து கொண்டு நான் ஏன் உயிர்வாழவேண்டும் என்று மனதில் நினைத்த அகிதோபல் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தான்.

ஊசா இந்தத் தகவல்களையெல்லாம் தாவீதுக்குத் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தான்.

தாவீது தம் படைவீரர்களை நோக்கி,’ நம்மை நோக்கி மக்கள் படை வரப்போகிறது. இதுதான் சந்தர்ப்பம். பொதுமக்கள் போரில் அனுபவமில்லாதவர்கள். நாம் அவர்களைச் சுற்றி வளைத்துத் தாக்க வேண்டும். அனுபவமில்லாத மக்கள் பயத்தில் நாலாதிசையிலும் சிதறி ஓடுவார்கள். நாம் வெற்றிபெறமுடியும்’ என்றான்.
வீரர்கள் தயாரானார்கள்.

யோவாபு, அபிசாய், இத்தாய் ஆகிய மூன்றுபேரின் தலைமையின் கீழ் தன்னுடைய வீரர்களை தாவீது ஒன்றுதிரட்டினார்.

அவர்கள் தாவீதிடம்,’ அரசே… நீங்கள் போருக்கு வரவேண்டாம். ஒருவேளை நீங்கள் மடிந்தால் பிறகு எங்களுக்கு தலைவன் இல்லாத நிலை வரும் எனவே நீங்கள் போருக்கு வரவேண்டாம். இங்கேயே மறைவாய் இருங்கள்’ என்றனர். தாவீது ஒத்துக் கொண்டார்.

மூன்று குழுக்களும் போருக்குச் செல்லத் தயாரானபோது தாவீது மீண்டும் மூவரையும் அழைத்து. ‘போரில் நாம் வெற்றிபெறவேண்டும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது. ஆனால்… ‘ தாவீது நிறுத்தினார்.

‘சொல்லுங்கள் தலைவரே…’ யோவாபு கேட்டார்.

‘அப்சலோம் எதிரியானாலும் என் மகன்… அவன் மீது நான் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன்…. அவனை மட்டும் கொல்லாதீர்கள்’ தாவீது தழுதழுத்தார்.

‘அப்படியே ஆகட்டும்’ யோவாபு சொன்னார். படைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து அப்சலோமின் படையைத் தாக்கப் புறப்பட்டன.

போரில் தாவீதின் வீரர்கள் சுற்றி வளைத்துத் தாக்கினர். மிகக் கடுமையாக நடந்த போரின் முடிவில் அப்சலோமின் படை சிதறடிக்கப் பட்டது.

அப்சலோம் ஒரு கோவேறு கழுதையில் ஏறித் தப்பி ஓடினான்.

அப்சலோம் தப்பி ஓடிய பகுதி முழுவதும் அடர்ந்த கருவாலி மரங்கள் மிகுதியாய் இருந்தன. கழுதை அவனைச் சுமந்து கருவாலிமரங்களுக்குக் கீழே ஓடிக் கொண்டிருந்தது. திடீரென அப்சலோமின் முடி ஒரு கருவேலிமரத்தில் சிக்கிக் கொள்ள அப்சலோம் அந்தரத்தில் தொங்கினான். கழுதை ஓடிவிட்டது.

அப்சலோமைத் துரத்திச் சென்றவர்கள் வெற்றியுடன் திரும்பி வந்து யோபாவுவிடம் தகவல் சொன்னார்கள்.

‘தலைவரே… படை சிதறடிக்கப் பட்டது ! அப்சலோம் ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறான்’ வீரன் ஒருவன் சொன்னான்.

‘மூடனே. அவனை அப்படியே விட்டு விட்டு வந்தீர்களா ? நீங்கள் அவனைக் கொன்று விட்டு வந்திருக்க வேண்டும்.. போ.. அவனைக் கொன்று விட்டு வா. உனக்கு பத்து வெள்ளிக்காசுகளையும், ஒரு கச்சையையும் தருகிறேன்’ யோபாவு சொன்னான்.

‘இல்லை தலைவரே… அப்சலோமைக் கொல்லக் கூடாது என்பது அரச ஆணை. எனவே நீங்கள் எனக்கு ஆயிரம் வெள்ளிக்காசுகளைத் தந்தாலும் நான் அந்தச் செயலைச் செய்ய மாட்டேன்’ வீரன் மறுத்தான்.

‘உன்னிடம் பேசிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை… நானே அவனைக் கொல்வேன்…’ என்று சொல்லிக் கொண்டே யோபாவு அப்சலோம் தொங்கிக் கொண்டிருந்த இடத்துக்கு ஈட்டிகளையும் எடுத்துக் கொண்டு விரைந்தார்.

அப்சலோம் இன்னும் அதே இடத்தில் தொங்கிக் கொண்டிருந்தான்.

யோபாவு நேராக அவன் முன்னால் போய் நின்றார்.
‘துரோகியே… சொந்தத் தந்தையையே கொல்லத் துணிந்தாயே…. ‘ என ஆவேசமாய்த் திட்டினார்.

‘மன்னியுங்கள் யோபாவு. அறிவில்லாமல் செயல்பட்டுவிட்டேன். என்னை விட்டுவிடுங்கள்… கொல்லாதீர்கள்’ அப்சலோம் உயிருக்குப் பயந்து கெஞ்சினான்.

‘உன்னைக் கொல்லக் கூடாது என்பது தான் அரசரின் ஆணை’ யோபாவு சொன்னார்.

‘ அப்படியா….. ?’ அப்சலோம் மெல்லப் புன்னகைத்தான்.

‘ஆனால் நான் உன்னைக் கொல்லாமல் விடப் போவதில்லை…… ‘ சொல்லிக் கொண்டே யோபாவு தன்னிடமிருந்த ஈட்டியை எடுத்து அப்சலோமின் நெஞ்சில் ஆழமாகக் குத்திக் கொன்றார். அப்சலோம் அதிர்ந்துபோன பார்வையோடு பிணமானான்.

போரில் தாவீதின் படை வெற்றிபெற்றதை அறிந்து தாவீது மகிழ்ந்தார்.

‘என் மகன் அப்சலோம்… அவன் எங்கே ?’ மன்னர் கேட்டார்.

‘அப்சலோம் கொல்லப்பட்டார். ‘ தாவீதுக்குத் தகவல் சொல்லப்பட்டது.

மகன் இறந்ததை அறிந்த தாவீது மிகவும் மனம் கலங்கி அழுதார்.
யோபாவு அவரை சமாதானப் படுத்தி மீண்டும் அரியணையில் அமரச் செய்தார்.

Posted in OLD Testament

கி.மு 32 : சாலமோனும் கடவுளும்

Image result for Solomon and God

தாவீது மன்னனின் மகனான சாலமோன் மன்னன் எகிப்து நாட்டு மன்னனின் மகளை திருமணம் முடித்து அவளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் அவருடைய கனவில் கடவுள் வந்தார்.

‘சாலமோனே… நீ என் மீது வைத்திருக்கும் அன்பும், பக்தியும் என்னை மிகவும் திருப்திப் படுத்துகிறது. உனக்கு என்ன வேண்டும் கேள்.’ கடவுள் கேட்டார்.

‘எனக்கு என்ன வேண்டும் கடவுளே…. என் தந்தை தாவீதோடு நீர் இருந்தது போல என்னோடும் எப்போதும் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. வேறு எதுவும் எனக்கு வேண்டாம்.’ சாலமோன் பதில் சொன்னார்.

‘தாவீது என் கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்ந்தான். நீயும் என்னுடைய வழியில் நடக்கும் வரை நான் உன்னோடு இருப்பேன்… இப்போது நீ என்னிடம் வேறு ஏதாவது வரம் கேள். ஆனல் ஒரே ஒரு வரம் மட்டும் தான் கேட்க வேண்டும். ‘ கடவுள் சொன்னார்.

‘கடவுளே… இந்த இஸ்ராயேல் மக்களுக்கு அரசராக நீர் என்னை நியமித்திருக்கிறீர். ஆனால் நான் ஒன்றும் அறியாதவன். இந்த மக்கள் தங்களுடைய குறைகளையும், விண்ணப்பங்களையும் என்னிடம் ஒப்படைக்கும் போது அவர்களுக்கு நல்ல நீதி வழங்க வேண்டும். அதற்காக எனக்கு நல்ல ஞானத்தைத் தந்தருளும். அது போதும் எனக்கு. வேறெதுவும் வேண்டாம்’ சாலமோன் சொன்னார்.

கடவுள் மகிழ்ந்தார்.

‘சாலமோனே…. நீ மிகவும் வித்தியாசமானவன். நீ கேட்ட வரத்துக்காகவே நான் இன்னும் உன்னை அதிகமாய் அன்பு செய்கிறேன்’ கடவுள் சொன்னார்.

‘ஏன் ஆண்டவரே ?’ சாலமோன் கேட்டார்.

‘மக்கள் என்னிடம் என்ன கேட்பார்கள் தெரியுமா ? ஏராளமான செல்வம், மாபெரும் புகழ் அல்லது எதிரிகளிடம் வெற்றி…. இப்படித்தான் மக்களின் வரங்கள் இருக்கும். நீ மட்டும் தான் மக்களை வழிநடத்தும் ஞானத்தைக் கேட்டாய். நீ கேட்ட வரத்தை நான் உனக்குத் தருகிறேன். உலகில் உன்னைப் போல ஞானம் படைத்தவன் இதுவரை தோன்றியதுமில்லை, இனிமேல் தோன்றப் போவதுமில்லை என்னுமளவுக்கு உன்னை ஞானத்தின் இருப்பிடமாக்குவேன்’ என்றார் கடவுள்.

விழித்தெழுந்த சாலமோன் மகிழ்ந்தார். தனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்ந்தார்.

கடவுளுக்காக ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்னும் ஆசை அவருக்கு வந்தது. சாலமோனின் தந்தை தாவீது அரசனாயிருந்தபோது அவர் ஆண்டவரின் பத்துக் கட்டளைகள் அடங்கிய பேழையை வைக்க ஒரு ஆலயம் இல்லையே என்று நினைத்து வருந்தினார். கடவுளுக்காய் ஒரு கோயில் கட்டவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் தாவீது எப்போதும் போர்வெறியராய் இருந்ததால் கடவுள் அவரைக் கோயில் கட்ட அனுமதிக்கவில்லை. உன் மகன் தான் எனக்குக் கோயில் கட்டவேண்டும். நீ கட்டக் கூடாது என்று அவர் இறை வாக்கினர் நாத்தான் வழியாக அறிவுறுத்தியிருந்தார். எனவே தாவீது அப்போது கடவுளுக்குக் கோயில் கட்டவில்லை. இவையனைத்தும் சாலமோனுக்குத் தெரிந்திருந்தன.

தனக்கு ஏராளமான ஞானத்தைத் தந்த கடவுளுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்று கட்டவேண்டும் என்று முடிவெடுத்த அவர் அதற்கான முயற்சிகளில் இறங்கினார். எருசலேமில் மிகப்பெரிய ஆலயம் கட்டும் பணியை நகரின் தலைசிறந்த பணியாளர்களை வைத்துத் துவங்கினார்.லெபனானிலிருந்து கேதுரு மரங்களை வரவழைத்து மிகவும் அழகான ஒரு ஆலயத்தையும் கட்டி முடித்தார் சாலமோன்.
தாவீதின் கனவு சாலமோன் காலத்தில் நனவானது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளுக்காக முதன் முதலாக அமைத்த ஆலயம் இது தான்.

பின் சாலமோன் மன்னன் தனக்காக ஒரு மிகப் பிரம்மாண்டமான அரண்மனையை அமைத்தார். அதைக் கட்டி முடிக்க பதின்மூன்று ஆண்டுகள் ஆனது. ஆலயமும், அரண்மனையும் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் கடவுள் சாலமோனுக்கு மீண்டும் காட்சி தந்து பேசினார்.

‘சாலமோன்… நீ எனக்காகக் கட்டிய ஆலயத்துக்காக மகிழ்கிறேன். இஸ்ரயேல் மக்கள் என்னுடைய வழியில் நடக்கும் வரை அந்த ஆலயமும் நிலைபெறும். எப்போது மக்கள் என்னை விட்டுவிட்டு வேறு சிலைகளை வழிபடத்துவங்குவார்களோ அப்போது இந்த ஆலயத்தை நான் கல்லின் மேல் கல் இராதபடி இடித்துத் தள்ளுவேன்’ என்றார்.
அதைச் சொன்னபின் கடவுள் அகன்றார்.

இஸ்ரயேல் மக்கள் தங்களுக்காக ஒரு ஆலயத்தைக் கட்டித் தந்த மன்னனை வெகுவாகப் புகழ்ந்தனர்.

சாலமோன் மன்னன் தன்னுடைய வாழ்நாளெல்லாம் மிகுந்த ஞானத்துடன் விளங்கினார். சாலமோனின் நீதிமொழிகளும், கவிதைகளும் காலத்தைக் கடந்தும் வாழ்கின்றன.

Posted in OLD Testament

கி.மு 33 : சாலமோனின் முதல் தீர்ப்பு

Image result for solomon's judgement

ஒரு நாள் விலைமாதர்கள் இரண்டுபேர் சாலமோன் மன்னனுடைய முன்னிலையில் வந்து நின்றார்கள்.

‘என்ன பிரச்சனை சொல்லுங்கள் ‘ மன்னன் கேட்டான்.

‘அரசே.. நானும் இவளும் ஒரே வீட்டில் தான் குடியிருக்கிறோம். நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன். அதன்பிறகு மூன்று நாள் கழிந்தபின் இந்தப் பெண்ணும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். இவள் இரவில் தூங்கும் போது அவளுடைய குழந்தையின் மீது புரண்டு படுத்து விட்டாள். அதனால் அந்தக் குழந்தை இறந்து விட்டது. அவள் நள்ளிரவில் எழுந்து தன் குழந்தை இறந்து கிடப்பதைக் கண்டவுடன் என்னருகில் அந்த இறந்த குழந்தையைக் கிடத்திவிட்டு என்னுடைய குழந்தையை அவளுடைய நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள். காலையில் நான் குழந்தைக்குப் பால் கொடுக்க எழுந்தபோது குழந்தை இறந்து கிடந்ததைக் கண்டு அழுதேன். அழுதுகொண்டே குழந்தையை உற்றுப் பார்த்தபோது தான் தெரிந்தது அது என்னுடைய குழந்தை இல்லை என்னும் விஷயம். நான் இந்தப் பெண்ணிடம் கேட்டபோது என்னுடைய குழந்தையைத் தர மறுக்கிறாள். அது அவளுடைய குழந்தை என்கிறாள். எனக்கு நீதி வழங்குங்கள்’ புலம்பலோடு சொல்லி முடித்தாள் ஒருத்தி.

அரசர் திரும்பி மற்ற பெண்ணை நோக்கி’ இவள் சொல்வதெல்லாம் உண்மையா ? உன்னுடைய குழந்தை இறந்து விட்டதா ?’ என்று கேட்டார்.

‘அரசே… அடுத்தவள் குழந்தையை வளர்க்க நான் ஏன் ஆசைப்படப் போகிறேன். இது என் குழந்தைதான்’ என்றாள். அதைக் கேட்டதும் மற்றவள்,

‘இல்லை அரசே…. தாய்க்குத் தெரியாதா தன் பிள்ளை யாரென்று ? அது என்னுடைய குழந்தை தான்.’ என்று புலம்பினாள்

‘அரசே… அவளுடைய குழந்தை இறந்து போன சோகம் தாங்காமல் அவள் அழுகிறாள். பெற்ற குழந்தை மீது யாராவது புரண்டு படுப்பார்களா ? அவள் குழந்தையை இழந்த கவலையில் ஏதேதோ உளறுகிறாள். இந்த சோகம் நமக்குத் தெரிந்தது தான். ஆனால் அதற்காக என் குழந்தையை நான் எப்படி அவளுக்குத் தர முடியும் ?’

‘அது உன் குழந்தையே இல்லை. ஏன் இப்படி பொய் பேசுகிறாய் ?’

என்று இருவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

சால்மோன் சற்று நேரம் மெளனமாய் இருந்தார். பின் அவர்களை நோக்கி,’ உங்கள் வீட்டில் உங்களைத் தவிர வேறு யாரேனும் உண்டா ?’ என்று கேட்டார்.

‘இல்லை அரசே நாங்கள் இருவர் மட்டும் தான்…’ அவர்கள் சொன்னார்கள்.

‘நீங்கள் இருவருமே உங்கள் பிள்ளைதான் இது என்பதில் உறுதியாய் இருக்கிறீர்கள் தானே ?’ சாலமோன் கேட்டார்.

‘ஆம் அரசே…. இது என் பிள்ளை தான்…அவள் தான் உளறுகிறாள்’ இருவரும் மாறி மாறிக் குற்றம் சாட்டினார்கள்.

‘சரி…. இது யாருடைய பிள்ளை என்பதை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே ஒரு வாளை எடுத்து வாருங்கள். குழந்தையை இரண்டாய் வெட்டி ஆளுக்கொரு பாகத்தைக் கொடுத்து விடுகிறேன்.’ சாலமோன் சொன்னார்.

உடனே குழந்தையின் உண்மையான தாய் பதறிப் போய்,’ வேண்டாம் அரசே… வேண்டாம்… இந்தக் குழந்தையை வெட்டி விடாதீர்கள். அது அவளிடமே வளரட்டும். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை’ என்றாள்.

மற்றவளோ,’ இப்போதாவது ஒத்துக் கொண்டாய் இல்லையா ? நல்லது. இல்லையேல் குழந்தையை வெட்டி ஒரு பாகத்தை உனக்குக் கொடுத்திருப்பேன். இப்போது கூட உன் குழந்தைதான் என்று பிடிவாதம் பிடிக்கிறாயெனில் சொல். எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம் அதை இரண்டாக வெட்டி விடலாம் ‘ என்றாள்.

உடனே சாலமோன்,’ குழந்தையைக் கொல்ல வேண்டாம். இந்தப் பெண்ணிடமிருந்து குழந்தையை வாங்கி முதல் பெண்ணுக்குக் கொடுங்கள். அவள் தான் உண்மையான தாய்’ என்றார்.

‘அரசே எப்படிக் கண்டு பிடித்தீர்கள்’ அலுவலர்கள் ஆச்சரியமானார்கள்.

‘குழந்தையைக் கொல்வோம் என்று சொன்ன வினாடியிலேயே இரண்டு பேருடைய முகத்தையும் பார்த்தேன். முதல் பெண்ணிடம் எழுந்த பதட்டமும், பயமும்.. வேண்டாம் அரசே என்று அடுத்த வினாடியே கதறிய மனநிலையும் தான் எனக்கு உண்மையான தாயைக் காட்டிக் கொடுத்தன. மற்றவளிடம் பதட்டம் காணப்படவில்லை. அவள் குழந்தையும் செத்துப் போகட்டும் என்னும் வஞ்சக எண்ணம் மட்டுமே இருந்தது. அதனால் தான் அவள் உண்மைத் தாயல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்’ சாலமோன் சொன்னார்.

மக்கள் அனைவரும் மன்னனுடைய ஞானத்தை எண்ணி வியந்தனர்.

Posted in OLD Testament

கி.மு 34 : சாலமோனும், அந்தப்புர அழகிகளும்

Image result for solomon and wives

சாலமோன் மன்னன் தனக்கென ஏராளமான செல்வங்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவருடைய அரண்மனையின் ஒவ்வோர் அறையும் அழகிய வேலைப்பாடுகளுடன் ஏராளமான பொருட் செலவில் அமைக்கப் பட்டிருந்தது. தன்னுடைய மனைவியான எகிப்திய இளவரசியோடு அவர் உல்லாச வாழ்க்கை வாழத் துவங்கினார்.

ஒரு மனைவியுடன் வாழும் வாழ்க்கை அவருக்கு மிகவும் விரைவிலேயே சலித்துவிட்டது. விதவிதமான பெண்களை தன்னுடைய மனைவியராக்க வேண்டும், தன்னுடைய அந்தப்புரத்தை அழகிகளால் அலங்கரிக்க வேண்டும் என்னும் ஆசை அவருக்குள் வளர்ந்தது. மன்னரல்லவா ? நினைத்தவர்களை எல்லாம் மனைவியராய் அடைவதில் அவருக்குச் சிரமம் இருக்கவில்லை. அவர் இஸ்ரயேல் பெண்களைத் தவிர மோவாபியர், அம்மோனியர், இத்தியர், எதோமியர் என இன்னும் ஏராளமான நாட்டுப் பெண்களை மணந்தார்.

இஸ்ரயேலர்கள் பிற இனப் பெண்களை மணந்தால் அந்தப் பெண்கள் இஸ்ரயேலரை மயக்கி அவர்களுடைய கடவுளர்களை வணங்க வைத்துவிடுவார்கள். இஸ்ரயேலரின் கடவுளான தன்னை அவர்கள் புறக்கணித்து விடுவார்கள் என கடவுள் நினைத்தார். எனவே இஸ்ரயேலர்கள் இஸ்ரயேல் குலத்தில் மட்டும் தான் பெண் கொள்ளவோ, பெண் கொடுக்கவோ வேண்டும் என ஏற்கனவே கட்டளையிட்டிருந்தார். சாலமோன் வேற்று இனப் பெண்களைத் திருமணம் செய்ததன் மூலம் கடவுளின் இந்தக் கட்டளையை மீறினார்.

அழகாய் இருந்த பெண்களையெல்லாம் திருமணம் முடித்தும், முடிக்காமலும் அரண்மனையின் அந்தப்புரத்துக்குக் கொண்டு வந்து கொண்டிருந்தார் சாலமோன். அப்படி அவருக்கு எழுநூறு மனைவியரும், முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தார்கள். ஒவ்வோர் நாளும் தனக்குப் பிடித்த பெண்ணுடன் இரவைக் கழித்து உல்லாசமாய் இருந்த மன்னன் கடவுளை முற்றிலுமாய் மறந்தார்.

ஒருநாள் அவர் சீதோனியரைச் சேர்ந்த அழகியுடன் உல்லாசமாய் இருந்தார். அப்போது அவள்,
‘அரசே நீங்கள் மிகவும் அழகானவர்… உம்முடைய மனைவியாய் இருப்பதில் நான் மிகவும் சந்தோசப் படுகிறேன்…’ கொஞ்சும் மொழியில் அவரிடம் பேசினாள்.

அவளுடைய மோகம் கலந்த முனகல்களுக்கு சாலமோன் அடிமையானான்.
‘உனக்கு என்ன வேண்டும் சொல்… தருகிறேன்…’

‘உங்களோடு இருக்கும் போது எனக்கு வேறென்ன வேண்டும்… ஆனாலும்….’ அவள் இழுத்தாள்.

‘ஆனாலும்…. என்ன சொல்’ சாலமோன் கேட்டார்.

‘நீங்கள் என்னை இங்கே அழைத்து வந்தபின் என்னுடைய தெய்வத்தை நான் வழிபட முடியாமல் போய்விட்டது. என் கடவுளுக்காக ஒரு பலிபீடம் கட்டித் தருவீர்களா ?’ சாலமோனின் மார்பில் கோலம் போட்டுக் கொண்டே அவள் கேட்க,
‘இவ்வளவு தானா… உடனே செய்து விடுகிறேன்..’ என்றார் சாலமோன். அதை நிறைவேற்றியும் வைத்தார்.

இப்படியே சாலமோனின் ஒவ்வொரு மனைவியரும் அவருடைய மனதை கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பக்கமாய் இழுத்தார்கள்.

‘எங்கள் கடவுள் எவ்வளவு நல்லவர் தெரியுமா ?…. நான் அழகாய் பிறந்ததே அவரால் தான்’

‘எங்கள் கடவுளால் தான் எங்கள் குடும்பம் பெரிய செல்வத்தை ஈட்டியது..’

‘எல்லாம் எங்கள் கடவுலால் தான்…’

சாலமோனின் மனைவியர் எல்லோரும் சாலமோனை தங்களுடைய தெய்வங்களின் பால் இழுத்தனர். மனைவியரின் தலையணை மந்திரங்களில் கட்டுப்பட்ட சாலமோன் வேற்று தெய்வங்களுக்குப் பலி பீடங்களை அமைக்கவும், அவர்களைத் தொழவும் ஆரம்பித்தான். கடவுள் கோபமானார்.

கடவுள் அவரிடம் ‘ நீ தாவீதைப் போல என்னை உன்னுடைய முழு மனதுடன் அன்பு செய்யவில்லை. என்னுடைய கட்டளைகளை நீ மதிக்கவில்லை. உன்னிடமிருந்து உனக்குப் பின் உன் அரசைப் பிடுங்கி உன் பணியாளன் ஒருவனுக்குக் கொடுப்பேன். உன் மகனை ஒரு சிறு பாகத்துக்கு மட்டும் அரசனாக்குவேன். ‘ என்று கூறினார். சாலமோன் கடவுளின் எச்சரிக்கையை மதிக்கவில்லை. தன்னுடைய உல்லாச வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

கடவுள் சாலமோனுக்கு ஆங்காங்கே எதிரிகளை உருவாக்கினார்.
எதிரிகள் சாலமோனை எப்படியாவது அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

சாலமோன் மன்னனின் கீழ் கட்டாய வேலைபார்த்து வந்தவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த எரோபவாம் என்பவரைக் கடவுள் அடுத்த அரசராக்குவதெனத் தீர்மானித்தார்.

ஒருநாள் எரோபவாம் தான் தங்கியிருந்த எருசலேமை விட்டு வெளியூருக்குச் சென்றபோது வழியில் அவரை சீலோவைச் சேர்ந்த அகியா என்பவர் சந்தித்தார்.

‘எரோபவாம்… நலமாய் இருக்கிறீர்களா ? உங்கள் பயணம் இனிதாகட்டும்’ அகியா வாழ்த்தினார்

‘நீங்கள் யார் .. எனது பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்’ எரோபவாம் வியந்தார்.

‘முக்கியமானவர்களை தெரியாமல் இருக்க முடியுமா ?’ அகியா சிரித்துக் கொண்டே சொன்னார்.

‘முக்கியமானவனா ? சாலமோன் மன்னனுடைய அரசவையில் முக்கியமற்ற இடம் தானே எனக்கு’ எரோபவாம் பதிலுக்குச் சிரித்தார்.

‘சாலமோனின் அரசவையில் உனக்கு முக்கியமற்ற இடமாய் இருக்கலாம். ஆனால் ஆண்டவன் பார்வையில் நீ முக்கியமானவாகி விட்டாய்’ அகியா நிதானமாய்ச் சொன்னார்.

‘கடவுளின் பார்வையிலா ? புரியவில்லையே ? என்ன சொல்கிறீர்கள்’ எரோபவாம் குழம்பினார்.

அகியா தன்னுடைய தோளில் போட்டிருந்த புத்தம் புது சால்வையை எடுத்து அதை எரோபவாம் முன்னிலையில் பன்னிரண்டு துண்டுகளாய்க் கிழித்தார்.

‘எ.. என்ன செய்கிறீர்கள்… புதிய சால்வையைக் கிழித்து விட்டீர்களே’ எரோபவாம் பதட்டத்துடன் கேட்டார்.

‘இதே போல இஸ்ரயேலரின் ஆட்சி சாலமோன் மன்னனுக்குப் பின் பன்னிரண்டுத் துண்டுகளாக உடைபடும். இந்தப் பன்னிரண்டு துண்டுகளில் பத்து துண்டுகள் உனக்குத் தரப்படும். அதாவது நாட்டின் பன்னிரண்டில் பத்து பாகத்தை நீ ஆள்வாய். சாலமோனின் மகனுக்கு ஒரே ஒரு பகுதிதான் கொடுக்கப்படும்.. இதுவே கடவுள் உன்னிடம் சொல்லச் சொன்னத் தகவல்’ அகியா சொல்லிவிட்டுக் கிளம்பினார். எரோபவாம் கேட்டுவிட்டுக் குழம்பினார்.

இந்தத் தகவல் சாலமோனின் காதுகளை எட்டியது. அவர் எரோபவாம் மீது கோபம் கொண்டார்.
‘என்னுடைய ஆட்சியை உடைக்க வந்தவனா அவன்.. எனக்குக் கீழே வேலைபார்க்கும் ஒரு பணியாளன் என்னையே வீழ்த்துவானா ? அவனை எங்கே கண்டாலும் இங்கே இழுத்து வாருங்கள்’ சாலமோன் ஆணையிட்டான்,
அதற்குள் எரோபவாம் எகிப்திற்குத் தப்பி ஓடியிருந்தார்.

சாலமோன் மன்னனுடைய அரசுக்கு அச்சுறுத்தல் ஏதும் வரவில்லை. சாலமோன் இஸ்ரயேலர்களின் மன்னனாக இறக்கும் வரை அரண்மனையிலேயே இருந்தார். கடவுள் வழங்கிய ஞானத்தைக் கொண்டு உலகம் வியக்கும் ஏராளமான நீதிமொழிகளை எழுதினார். முதுமையை அடைந்து ஒரு நாள் இறந்து போனார்.

சாலமோனுக்குப் பின் சாலமோனின் மகன் ரெகபெயாம் அரசனானான்.

ஒருநாள் மக்களெல்லாம் அவரிடம் வந்து
‘அரசே… வாழ்க. எங்களிடம் ஒரு விண்ணப்பம் இருக்கிறது, தயை கூர்ந்து அதை நிறைவேற்றித் தரவேண்டும்’ மக்கள் கேட்டார்கள்

‘சொல்லுங்கள் நான் என்ன செய்யவேண்டும் ?’ ரெகபெயாம் கேட்டான்.

‘உங்கள் தந்தை எங்கள் மீது ஏராளமான வேலையையும், பளுவையும் சுமத்தியிருக்கிறார், நீங்கள் அதைக் கொஞ்சம் குறைத்தால் நாங்கள் காலமெல்லாம் உமக்குப் பணிசெய்பவர்களாய் இருப்போம்’ மக்கள் சொன்னார்கள்.

‘சரி… மூன்று நாட்கள் கழிந்து வாருங்கள்’. ரெகபெயாம் சொன்னான்.

மக்கள் சென்றபின் அரசின் மூத்த அலுவலர்களை அழைத்து…
‘என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்…’ என்று கேட்டார்.

‘அவர்கள் சொல்வது சரிதான் அரசே… மக்களின் குறைகளைக் குறைப்போம் அப்போதுதான் அவர்கள் நம்மோடு எப்போதும் இருப்பார்கள். மக்களைப் பகைத்துக் கொள்வது அரசருக்கு அழகல்ல’ என்றார்கள்.

ஆனால் ரெகபெயாமின் நண்பர்களோ,
‘அப்படிச் செய்தால் உனக்கு மரியாதையே இருக்காது. நீ உன்னுடைய தந்தை கொடுத்த சுமையை விட அதிக சுமையைக் கொடுக்க வேண்டும். உன் அதிகாரத்தின் பலத்தைக் காட்டவேண்டும், இல்லையேல் நாளை உனக்கு மக்களிடம் மதிப்பு இல்லாமலேயே போய்விடும்’ என்ரார்கள்.

ரெகபெயாம் அனுபவஸ்தர்களின் அறிவுரைகளைக் காதில் வாங்காமல் நண்பர்கள் சொன்னதைக் கேட்டான். மக்களின் சுமைகளைக் கூட்டினார். அவர்களைக் கொடுமைப்படுத்தும் கடுமையான சட்டங்களை இயற்றினான்.

மக்கள் அனைவரும் கொதித்தெழுந்தார்கள்.

‘ரெகபெயாம் மன்னன் நம்மை மிகவும் கொடுமைப்படுத்துகிறான். அவனை வீழ்த்த வேண்டும்’

‘ஒரு புதிய அரசரைக் கண்டுபிடிக்கவேண்டும்’

‘ரெகபெயாமை வெறுக்கும் ஒரு நல்லவனைக் கண்டுபிடித்து, அவனுக்கு ஆதரவளிப்போம். அப்போது அவன் நமக்குச் சாதகமாக இருப்பான்’

‘சரி அப்படி யார் இருக்கிறார் ?’

‘ஒருவர் இருக்கிறார் !’

‘யார் அவர்’

‘எரோபவாம். சாலமோன் மன்னனைக் கண்டு தலைமறைவாகிப் போன எரோபவாம். இப்போது அவன் எகிப்தில் நல்ல வளங்களோடும், வலிமையோடும் இருக்கிறான். அவனுக்கு நாம் ஆதரவளிக்கலாம்’

மக்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுத்து எரோபவாமை அழைத்து வந்தார்கள். அவன் மூலமாக மன்னனுக்கு எதிராய் மக்கள் கலகம் செய்தார்கள். கலகம் நாளுக்கு நாள் வலுவடைந்து நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு அலை உருவானது. இனிமேலும் இங்கே இருந்தால் இறந்துவிடுவோம் என்பதை ரெகபெயாம் புரிந்து கொண்டான். மக்கள் தன்னைத் தாக்கிக் கொல்வதற்கு முன் ஓடி உயிர்பிழைக்கவேண்டுமென்று முடிவெடுத்துத் தலைமறைவானான்.

இஸ்ரயேல் மக்களின் கை ஓங்கியது ! கடவுளின் வாக்கின் படி எரோபவாம் இஸ்ரயேலுக்கு அரசனானான்.