Posted in Life of JESUS

இயேசு வரலாறு 2. ஞானிகள் வாழ்த்தும், ஏரோது மன்னனின் பயமும்

Image result for 3 wise men and child jesus

கிழக்கு தேசத்தில் மூன்று வானியல் ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் காலத்தின் மாற்றங்களையும், வானத்தின் நிகழ்வுகளையும் வைத்து சம்பவங்களை அறிந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள். அதிலும் குறிப்பாக வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களை வைத்து உலகில் நடக்கும் முக்கிய சம்பவங்களை கணிப்பதில் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.

ஒருநாள் அவர்கள் வானத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது அதைக் கண்டார்கள்.

ஒரு வால் நட்சத்திரம். வழக்கத்துக்கு மாறாக, ஒரு புத்தம் புதிய வால் நட்சத்திரம். இதுவரை பார்த்த நட்சத்திரங்களிலிருந்து வேறுபட்டுத் தோன்றிய வால் நட்சத்திரம் அவர்களுடைய கவனத்தில் ஆர்வத்தைக் கூட்டியது. அவர்கள் அந்த நட்சத்தித்தின் தோன்றல் காரணம் குறித்து தங்களுக்குள் பேசத் துவங்கினார்கள்.

தங்கள் கலந்துரையாடலின் முடிவில் அந்த வால்நட்சத்திரம் புதிய அரசன் பிறந்திருப்பதன் அடையாளம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். வால்நட்சத்திரம் யூதேயா நாட்டின் மேல் தன்னுடைய வெளிச்ச வாலை நீட்டிக் கொண்டிருந்தது.

அப்படியானால், யூதேயா நாட்டில் ஒரு மன்னன் பிறந்திருக்க வேண்டும். யூதேயாவின் மன்னன் ஏரோதின் அரண்மனையில் தான் அவன் பிறந்திருக்க வேண்டும். ஞானிகள் யூதேயா நோக்கிப் பயணம் செய்ய முடிவெடுத்தார்கள். ஏரோதின் அரண்மனைக்குச் சென்று புதிய மன்னனைக் கண்டு வணங்கி அவருக்கு பரிசுகள் அளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம்.

ஞானிகள் தங்களுக்குள்ளே கலந்துரையாடிக் கொண்டு, விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து, பொன், தூபம், நறுமணப் பொருளான வெள்ளைப் போளம் இவற்றை காணிக்கையாக எடுத்துக் கொண்டு நல்ல ஒட்டகங்களில் ஏறி ஏரோது மன்னனின் அரண்மனையை நோக்கி பயணித்தார்கள். அரண்மனை யூதேயா நாட்டின் தலை நகரான எருசலேமில் இருந்தது.

அரண்மனையைச் சென்றடைந்த ஞானிகள் ஏரோது மன்னனைக் கண்டு வணங்கினார்கள். தனக்கு முன்னால் வந்திருக்கும் ஞானிகளைக் கண்ட ஏரோது நெற்றி சுருக்கினான். காரணம் புரியாமல் குழம்பினான்.

‘வாருங்கள் ஞானியரே. உங்கள் வரவு நல்வரவாகுக. நீங்கள் யார்? . என்ன சேதி ?’ மன்னன் கேட்டான்.

ஞானியர்கள் மன்னனின் முன்னால் தலை வணங்கி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

‘அரசே என் பெயர் காஸ்பர், இவர் மெல்கியர், பெல்தாசர் நாங்கள் மூவரும் யூதர்களின் அரசரைக் காண வந்திருக்கிறோம்’ ஞானிகள் சொன்னார்கள்.

‘நான் தான் இந்த நாட்டின் மன்னன். உங்களுக்குத் தெரியாதா ?’ மன்னன் புன்னகைத்தான்.

‘அரசே மன்னிக்க வேண்டும். யூதர்களுக்கு அரசனாக வேண்டிய ஒரு பாலகன் பிறந்திருக்கிறானே. அவரைக் காண வந்திருக்கிறோம்’

‘என்ன உளறுகிறீர்கள். அரண்மனையில் என்னுடைய வாரிசுகள் யாரும் பிறக்கவில்லை. உங்களுக்கு யாரோ தவறான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்’ மன்னன் சொன்னான்.

‘இல்லை அரசே. மக்கள் யாரும் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை, வானத்து நட்சத்திரம் சொல்லிற்று. அதனால் தான் வந்தோம்.’

‘வானத்து நட்சத்திரமா ? புரியவில்லையே ?’ மன்னன் கேட்டான்.

‘ம் அரசே. வானத்தில் புதிதாய் வால் நட்சத்திரம் ஒன்றைக் கண்டோம். அதன் பொருள் ஒரு மீட்பர், ஒரு மாபெரும் மன்னன் பிறந்திருக்கிறார் என்பது தான். அந்த அரசர் யூதேயாவில் தான் பிறந்திருக்கிறார். அதனால் தான் இங்கே வந்தோம்’

‘நீங்கள் தவறாகக் கணித்திருப்பீர்கள். இங்கே புதிய அரசன் பிறக்கவில்லை’

‘அதெப்படி அரசே அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள். ஒரு வேளை அரண்மனையில் பிறக்காத ஏதேனும் குழந்தை நாளை அரசராகலாம் இல்லையா ?’ ஞானிகள் சொன்னதும் மன்னன் அதிர்ந்தான்.

‘என்ன சொல்கிறீர்கள்’

‘ம் அரசே. புதிய அரசர் பிறந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் அரண்மனையில் பிறக்கவில்லை என்பதும் இப்போது தெளிவாகி விட்டது. அப்படியானால் அவர் நாட்டில் வேறு ஏதோ ஒரு வீட்டில் தான் பிறந்திருக்க வேண்டும்’ ஞானிகள் உறுதியுடன் சொன்னார்கள்.

‘சரி. நீங்கள் அரண்மனையிலேயே சில நாட்கள் தங்கியிருங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்’ மன்னன் கூறினான்.
ஞானிகள் அகன்றதும் மன்னன் அரண்மனைப் பணியாளனை அழைத்தான்,

‘எல்லா தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருக்கும் மறைநூல் அறிஞர்கள் அனைவரையும் உடனே அரண்மனையில் ஒன்று கூட்டு’ என்று ஆணையிட்டான். மன்னனின் ஆணைப்படி அனைவரும் அரசர் முன்னிலையில் ஒன்று திரண்டனர்.

‘நான் உங்களை எதற்குக் கூட்டி வந்திருக்கிறேன் தெரியுமா ?’ மன்னன் கேட்டான்.

‘இல்லை அரசே. ஏதோ அவரச நிலை என்பது மட்டும் புரிகிறது’ தலைமைக் குரு சொன்னார்.

‘கிழக்கு திசை நாட்டிலிருந்து மூன்று ஞானிகள் அரண்மனைக்கு வந்திருக்கிறார்கள். யூதர்களின் புதிய அரசனைச் சந்திப்பதற்காக !’ மன்னன் சொல்லி நிறுத்தினான்.

‘புதிய மன்னனா ?’

‘ம். அப்படித் தான் அவர்கள் சொன்னார்கள். புதிய வால் நட்சத்திரம் ஒன்றைக் கண்டார்களாம். அதன் படி ஒரு புதிய மீட்பர் நம்முடைய நாட்டில் தோன்றியிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை’

மன்னன் சொல்லச் சொல்ல அனைவரும் குழம்பிப் போய் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.

‘எனக்கு இப்போது ஒரு விஷயம் தெளிவாக வேண்டும். அரசரோ, மீட்பரோ, மெசியாவோ ஒருவர் நம்முடைய நாட்டில் பிறக்கிறார் என்றால் அவர் எங்கே பிறப்பார் ? அரண்மனையில் அவர் பிறக்கவில்லை ! அப்படியானால் எங்கே பிறந்திருக்கக் கூடும் ?’

‘பெத்லகேம் !’ மறைநூல் அறிஞர் ஒருவர் சொன்னார்.

‘பெத்லகேம் ? என்ன சொல்கிறீர்கள் ? அந்த கிராமத்திலா அவர் பிறப்பார். அது ஒரு பின் தங்கிய கிராமம் அல்லவா ? அங்கே இருப்பவர்கள் எல்லோரும் சாதாரண ஏழைகள் அல்லவா ? ஞானிகளோ, அரச பரம்பரையினரோ அங்கே இல்லையே ?’ மன்னன் சந்தேகக் கேள்விகளை அடுக்கினான்.

‘ஆனால் மறைநூல் வார்த்தை அப்படிச் சொல்கிறது அரசே ?’

‘மறை நூல் வாக்கு சொல்கிறதா ?’

‘ ஆம்.. அரசே. மீக்கா எனும் தீர்க்கத் தரிசி ஒருவர் பல நூறு ண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்’

‘என்ன சொல்லியிருக்கிறார். தெளிவாகச் சொல்லுங்கள்’ மன்னனின் குரலில் அதிர்ச்சி மெலிதாக வெளிப்பட்டது.

‘யூதா நாட்டு பெத்லேகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை. ஏனெனில் என் மக்களாகிய இஸ்ரயேலரை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார். என்பதே அந்த வாக்கு அரசே’

‘அப்படியானால் ஞானிகள் சொன்னது உண்மையாக இருக்கலாம். மீட்பர் ஒருவர் பெத்லேகேமில் பிறந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களா ?’ மன்னன் மீண்டும் கேட்டான்.

‘அப்படி ஒரு முடிவிற்குத் தான் வரவேண்டியிருக்கிறது அரசே. வானியல் ஞானிகள் சொன்னது உண்மையா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் மீட்பர் பெத்லேகேமில் பிறந்திருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன’ அவர்கள் உறுதியுடன் சொல்ல ஏரோது ஏகமாய் கலங்கினான். தன் அரியணை பறிபோய் விடுமோ என பரிதவித்தான்.

இந்தச் செய்தி எருசலேம் முழுவதும் பரவியது.எருசலேம் வாழ் மக்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியூட்டுவதாகவும், கலக்கமூட்டுவதாகவும் இருந்தது.

மன்னன் ஞானிகளை அழைத்தான்.

‘ஞானிகளே. என்னிடம் உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் விண்மீனைக் கண்டது உண்மை தானே ?’ மன்னன் அதிகாரத் தோரணையில் கேட்டான்.

‘ம் அரசே. மன்னனிடம் நாங்கள் பொய் சொல்வோமா ?’ ஞானிகள் பதில் சொன்னார்கள்.

‘சரி. நான் மறைநூல் அறிஞர்களையும், தலைமைக் குருக்களையும் அழைத்து விசாரித்தேன். நீங்கள் சொல்லும் மீட்பர் பெத்லேகேமில் பிறந்திருக்கக் கூடும் என்பது அவர்களின் கணிப்பு’ மன்னன் சொன்னான்.

‘நன்றி அரசே. நாங்கள் சென்று அவரைக் கண்டு வணங்க வேண்டும். நாங்கள் புறப்படலாமா ?’

‘கண்டிப்பாக. நீங்கள் பெத்லகேம் சென்று அவரைத் தரிசியுங்கள். அவரைத் தரிசித்தபின் என்னிடம் வந்து அவருடைய இருப்பிடத்தைத் தெரியப்படுத்துங்கள். அவரை நானும் வணங்கவேண்டும். என்னுடைய நாட்டில் மீட்பர் பிறந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு நான் அரச மரியாதை செலுத்த வேண்டும். எனவே நீங்கள் பாலனைக் கண்டு வணங்கியபின் என்னிடம் வந்து சொல்லுங்கள்’ மன்னன் சொன்னான். அவர்கள் கண்டு வந்து சொன்னதும் பாலனைக் கொன்றுவிடவேண்டும். அரசராக நான் இருக்கும் வரை இன்னொரு அரசர் இந்த நாட்டில் பிறக்கக் கூடாது. ஏரோது உள்ளுக்குள் சதித்திட்டம் தீட்டினான்.
ஞானிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் வால்நட்சத்திரம் இருக்கும் திசை நோக்கி நடந்து கொண்டே இருந்தார்கள். வால் நட்சத்திரம் அவர்களுக்கு முன்னால் நகர்ந்து கொண்டே இருந்தது. சென்று கொண்டிருந்த விண்மீன் ஒரு இடத்தில் வந்ததும் நின்றது. அதன் ஒளி ஒரு குடிசையின் மீது படர்ந்தது. விண்மீன் நின்றதைக் கண்டதும் ஞானிகள் உற்சாகமடைந்தார்கள். அந்த குடிசைக்குள் விரைந்து சென்றார்கள்.

அது ஒரு தொழுவம். அங்கே மரியாவின் கைகளில் ஒரு குழந்தை. கந்தல் துணியால் சுற்றப்பட்ட கள்ளம் கபடமற்ற மழலை முகம். அருகிலேயே யோசேப்பு. சுற்றிலும் கால்நடைகள்.

ஞானிகள் ஒரு வினாடி திடுக்கிட்டனர். வானத்தில் அதிசய வால்நட்சத்திரம். பூமியில் தொழுவத்தில் அரசரா ? இத்தனை எளிமையாய் ஒரு மீட்பரா என்று வினாடி நேரம் உள்ளுக்குள் கேள்விகளை உருட்டியவர்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தனர்.

பட்டாடைகள் தொழுவத்தின் அழுக்கில் புரள, தங்களுக்கு முன்பாக விழுந்து கிடக்கும் மூன்று ஞானிகளைக் கண்ட மரியாவும், யோசேப்பும் பதறினார்கள்.

‘ஐயா நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள்’ யோசேப்பு கேட்டார்.

‘நாங்கள் கிழக்கு திசையிலிருந்து வரும் ஞானிகள். நீண்ட தூரம் பயணித்து இங்கே வந்திருக்கிறோம். அரசரைக் காண்பதற்காக !’ அவர்கள் சொன்னார்கள்.

‘இந்தக் குழந்தையைப் பற்றி உங்களுக்குச் சொன்னது யார் ?’ யோசேப்பு வியந்தார்.

‘வானம் ‘

‘வானமா ?’

‘ம். வானத்தில் ஒரு அதிசய வால் நட்சத்திரம் தோன்றியது. அதுதான் எங்களை வழிநடத்தியது !. இவரைக் காணும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஞானிகள் சொன்னார்கள்’.

‘இதோ பொன்…’ இது எனது காணிக்கை. ஒரு ஞானி தன் ஒட்டகத்தில் சுமந்து வந்திருந்த மூட்டையை குழந்தையின் முன்னால் வைத்தார்.

‘இது தூபம். சாம்பிராணி… என்னுடைய காணிக்கை’ இரண்டாவது ஞானி காணிக்கை படைத்தார்.

‘இதோ வெள்ளைப் போளம். இது என்னுடைய காணிக்கை’ மூன்றாவது ஞானி பேழையைத் திறந்து காணிக்கை கொடுத்தார்.

பொன் மிக விலையுயர்ந்த அந்தஸ்தின் அடையாளம். தூபம் என்பது வழிபாட்டுக்குரியவர் என்பதன் அடையாளம். வெள்ளைப்போளம் மிகவும் நறுமணம் மிகுந்த பொருள். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது இதை கல்லறையில் வைப்பதும் அரச குலத்தினரின் வழக்கம். மரியாவும், யோசேப்பும் நடப்பதையெல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

ஞானிகள் குழந்தையை வணங்கிவிட்டு விடைபெற்று அரண்மணை நோக்கி பயணித்தார்கள்.

இரவு. ஞானிகள் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.

அவர்கள் மூவருமே அன்று ஒரு கனவு கண்டார்கள். கனவில் ஒரு தேவதூதன் தோன்றினான்.
‘ஞானிகளே. நீங்கள் ஏரோது மன்னனின் அரண்மனைக்குச் செல்லவேண்டாம். அவனுக்கு எந்தத் தகவலையும் அளிக்க வேண்டாம். வேறு வழியாக உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’

கனவு கண்ட அவர்கள் திடுக்கிட்டு விழித்தார்கள். அனைவரும் ஒரே கனவைக் கண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்கள். இது கடவுளின் கட்டளை தான். நாம் நம்முடைய பயணத்தை மாற்றிக் கொள்வோம். இனிமேல் எருசலேமிற்கே செல்லவேண்டாம். வேறு வழியாக நம்முடைய நாட்டுக்குப் போவோம். மன்னனின் கட்டளையை மீறலாம், ஆனால் கடவுளின் கட்டளையை மீறக் கூடாது !’ ஞானிகள் முடிவெடுத்தார்கள்.

அதே இரவில் யோசேப்பும் ஒரு கனவு கண்டார். கனவில் கடவுளின் தூதன் யோசேப்பை நோக்கி,
‘யோசேப்பு ! நீர் எழுந்து குழந்தையையும் எடுத்துக் கொண்டு எகிப்து நாட்டுக்குச் செல்லும். இங்கே ஏரோது மன்னன் குழந்தையைக் கொல்ல சூட்சி செய்கிறான். நான் சொல்லும் வரை நீங்கள் எகிப்திலேயே தங்கியிருங்கள்’ என்றான்.

யோசேப்பு உடனே எழுந்தார். மரியாவை எழுப்பி, இயேசுவையும் எடுத்துக் கொண்டு அந்த இரவிலேயே எகிப்தை நோக்கிப் பயணித்தார்.

2 thoughts on “இயேசு வரலாறு 2. ஞானிகள் வாழ்த்தும், ஏரோது மன்னனின் பயமும்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...