Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு : 7 – கிறிஸ்தவத்தில் அறிவு நெறிக் கோட்பாடுகள்

 Image result for christianity religion
கிறிஸ்தவம் முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலர்களால் வளர்ந்தது. இரண்டாம் நூற்றாண்டில் இயேசுவின் அப்போஸ்தலர்கள் யாருமே உயிருடன் இல்லை. யோவான் கடைசியாக கி.பி 100ல் இறந்தபின் வழிகாட்டலுக்கு அப்போஸ்தலர்கள் இல்லாமல் சபை அடுத்த நிலை தலைவர்களின் கைகளுக்கு வந்தது.

முதலாம் நூற்றாண்டிலும் சரி, இரண்டாம் நூற்றாண்டிலும் சரி அரசாங்கத்தினால் கிறிஸ்தவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. புதிய சபை, கிளர்ச்சியின் சபை, திமிர்பிடித்தவர்களின் கூட்டம், நாத்திகர்களின் கூட்டன் என்றெல்லாம் பெயர்களை வாங்கி அடிபட்டது.

முதலாம் நூற்றாண்டில் ஒற்றுமையாக ஒரே சிந்தனையுடன் இருதார்கள் கிறிஸ்தவர்கள். இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருக பெருக பிரச்சனைகளும் ஆரம்பித்தன.

தாங்கள் சொல்வதே சரி, மற்றவர்கள் சொல்வது தவறு எனும் எண்ணம் ஆங்காங்கே முளைத்தது. கிறிஸ்துவின் போதனைகளையும், தாங்கள் கற்றுக் கொண்டவற்றையும் கலந்து கட்டி தத்துவங்கள் புறப்பட்டன.

கிறிஸ்தவம் ஒரு தத்துவ மதம் என்னும் சிந்தனை ஆங்காங்கே முளைத்தது. எந்த தத்துவம் என்பதில் அங்கே போட்டி நிலவியது. கிறிஸ்தவத்திற்கு உள்ளேயே நிலவிய இந்த கருத்து முரண்பாடுகள் கிறிஸ்த்தவ ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்தது.

முக்கியமாக மூன்று அறிவு நெறிக் கோட்பாடுகள் இந்த காலகட்டத்தில் தோன்றின.

சிரியன் அறிவு நெறிக் கோட்பாட்டினர், எகிப்திய அறிவு நெறிக் கோட்பாட்டினர், பாண்டிக் அறிவு நெறிக் கோட்பாட்டினர் என அவர்கள் மூன்று மிகப் பெரும் பிரிவாக இயங்கினர்.

இவர்களுடைய அறிவு நெறிக் கோட்பாடுகள் மிகவும் சுவாரஸ்யமானவை.

சிரியன் அறிவு நெறிக் கோட்பாடு

முதலில் சிரியன் அறிவு நெறிக் கோட்பாட்டைப் பார்ப்போம். இதை வெகுவாக பரப்பிய தலைவர்கள் சீமோன், மற்றும் டேஷியன் ஆவார்கள்.

சீமோன் தன்னைக் குறித்துப் பெருமையாய் பேசிக் கொள்பவர். அவருடைய கோட்பாட்டின் படி உலகத்தைப் படைத்த ஒரு கடவுள் உண்டு. அவர் சகல சக்தியும் உடையவர். அவரோடு கூடவே ஒரு பெண் தெய்வமும் உண்டு.

அந்த பெண் தெய்வமே தூதர்களைப் படைக்கிறது. அந்த பெண் தெய்வம் படைத்த தூதர்கள் பூமியை பாவ நிலமாக மாற்றி விட்டதனால் அவள் விண்ணகம் செல்லவில்லை. பூமியிலேயே தங்கி விட்டாள்.

ஒரு முறை அது டிராய் நகரத்து ஹெலன் இளவரசியாய் வெளிப்பட்டது. பிறிதொரு முறை தீர் நகரில் பாலியல் தொழிலாளியாக வெளிப்பட்டது. மூன்றாம் முறையாக அது சீமோனுக்கு வெளிப்பட்டதாம் !

சீமோனுடைய அறிவு நெறிக் கோட்பாட்டின் மையம். மீட்பு என்பது நமது செயல்களினாலல்ல, கடவுளின் அருளினால் என்பது தான். எனவே உடல் என்பதும், நம்முடைய பாவ செயல்கள் என்பதும் மீட்போடு தொடர்புடையது அல்ல என்று நம்பினார்கள்.

அனைத்து விதமான பாவ அசுத்த வழிகளிலும் தவறாமல் நடந்தார்கள்.

இவருடைய சிரியன் அறிவு நெறிக்கோட்பாட்டு சீடர்கள் இந்த கருத்துக்களை எங்கெங்கு சென்றார்களோ அங்கெல்லாம் பரப்பினார்கள்.
சிரியன் அறிவு நெறிக் கோட்பாட்டில் இன்னொரு பிரிவினர் இருந்தார்கள். இவர்கள் பாம்பை வழிபட்டார்கள். அதாவது பாம்பு ஏவாளுக்குப் விலக்கப்பட்ட மரத்தின் கனியை அளித்ததால் தான் ஏவாளுக்கு அறிவுக் கண்கள் திறந்தன. எனவே ஏவாளின் அறிவு வளர்ச்சிக்கு வித்திட்டது பாம்பு தான். நன்மை தீமை அறியும் அறிவு மனிதனுக்கு வர காரணமே பாம்பு தான் என பல்வேறு காரணங்களை அடுக்கினார்கள்.

டேஷியன் தன்னுடைய போதனையிலும் நமது செயல்களுக்கும் நமது மீட்பிற்கும் தொடர்பு இல்லை என்றே வாதிட்டார். அவருடைய சிந்தனைப்படி உலகத்தைப் படைத்தவர் கடவுள் அல்ல. இரண்டாம் நிலையிலுள்ள ஒரு கடவுளே உலகத்தைப் படைத்தவர்.

கிறிஸ்துவும் இயேசுவும் இரண்டு வேறு மனிதர்கள். இயேசு என்னும் மனிதர் மரியின் வயிற்றில் பிறந்தார். அவருக்குள் கிறிஸ்து வந்து இறங்கினார். பின்னர் இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன்பாகவே அவர் இயேசுவை விட்டு வெளியேறிவிட்டார். இது சிரியன் அறிவு நெறிக்கோட்பாட்டினரின் இன்னொரு தத்துவம்

இயேசு தாவீது மன்னனின் தலைமுறையில் வந்தவர் என்பதை இவர் விரும்பவில்லை. இயேசுவுக்கு அந்த அடைமொழி தேவையற்றது என நினைத்தார். எனவே அவருடைய சிரியன் குழுவினர் பயன்படுத்த விவிலியத்தில் சில மாற்றங்கள் செய்தார். குறிப்பாக தாவீதின் மகன் என இயேசுவைக் குறிக்கும் அனைத்து பாகங்களையும் விலக்கினார்.

சிரியன் குழுவினரில் காயீனன் என்னும் இன்னொரு குழுவினரும் இருந்தார்கள். இவர்கள் காயீன் போன்றவர்கள் கட்டளை மீறல்கள் நடத்தியதால் தான் உலகிற்கு மீட்பு தேவைப்பட்டது. அதனால் தான் இயேசு பூமிக்கு வந்தார். எனவே காயீன் போன்ற தீய மனிதர்கள் உண்மையில் நன்மை செய்திருக்கிறார்கள் எனும் வித்தியாசமான சிந்தனை கொண்டிருந்தனர்.

இவருடைய இந்த விவிலியம் சிரியன் குழுவினரிடம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்திருக்கிறது.

எகிப்திய அறிவு நெறிக் கோட்பாடு

எகிப்திய அறிவு நெறிக் கோட்பாடு செய்த போதனை மிகவும் சுவாரஸ்யமானது. அதாவது கடவுள் மிகவும் பரிசுத்தமானவர். அவரிடமிருந்து ஏயோன்கள் என்னும் ஆவிகள் வெளியேறி செயலற்றவற்றை உருவாக்கின என்பதாகும்.

ஆனால் எத்தனை ஏயோன்கள் என்பதில் அவர்களுக்குள் பெரும் பிரச்சனை வந்து விட்டது. சிலர் முப்பது என்று சொல்ல, இன்னொரு பிரிவினர் பதினாறு சோடி எனவே முப்பத்தி இரண்டு என்று சொல்ல, வேறு சிலர் இயேசுவும் தூய ஆவியும் கூட கடவுளின் ஏயோன்கள் தான் என்றனர்.

அவர்களுடைய தத்துவப்படி உலகின் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்.

முதல் வகை மனிதர்கள் ஜடம் போல இருப்பார்கள். இவர்கள் எந்தக் காரணம் கொண்டும் மீட்படைவதில்லை. இவர்கள் ஆன்மீகத்தின் வாசலுக்குக் கூட வராதவர்கள். எனவே இவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.

இரண்டாவது வகையினர் மனோதத்துவ மனிதர்கள். இவர்கள் தங்களை சற்று அறிந்தவர்கள். இவர்கள் மீட்படைய வாய்ப்பு உண்டு. ஆனால் தனியாக இவர்களால் மீட்பு அடைய முடியாது. ஒரு மீட்பரின் மூலமாக இவர்கள் மீட்படைய முடியும்.

மூன்றாவது வகை மனிதர்கள் ஆன்மீக வாதிகள். இவர்களுக்கு விண்ணகத்தில் நிரந்தர இடம் உண்டு. இவர்கள் வழக்கம் போல இறைவனுக்காய் தங்களை அர்ப்பணித்து வாழ்ந்தால் போதும்.

இந்த மூன்று வகையான மனிதர்களைக் குறித்த போதனைகள் எகிப்திய அறிவு நெறிக் கோட்பாட்டின் முக்கியப் பணியாக இருந்தது.

பாஸிலிடிஸ் என்னும் ஒரு மனிதர் இருந்தார். அவரும் எகிப்திய நெறிக் கோட்பாடை ஏற்றுக் கொண்டு பரப்பி வந்தவர். அவருடைய கருத்துப் படி கடவுளிடமிருந்து வந்த ஏயோன்களின் ஒன்று யூதர்களின் கடவுள். அந்த கடவுள் அழிவுக்கு மக்களை நடத்துகிறார்.

கிறிஸ்து இறந்தது ஒரு தோற்ற மயக்கமே. உண்மையில் கிறிஸ்து இறக்கவில்லை. வழியில் அவருக்கு சிலுவை சுமக்க உதவிய சீரேனே ஊரானாகிய சீமோன் தான் சிலுவையில் அறையப்பட்டவர்.

இந்த நெறிக் கோட்பாட்டினரும் உடலை எப்படிப் பயன்படுத்தினாலும் தவறில்லை. ஆன்மா மட்டுமே அழுக்கடையாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தனர்.

பாண்டிக் அறிவு நெறிக் கோட்பாடு

மார்சியன் என்னும் பெரும் பணக்காரரால் இந்த பாண்டிக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. இவர் ரோம திருச்சபைக்கு பெரும் பணத்தை நன்கொடையாகக் கொடுத்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

இவருடைய போதனைப்படி யூதரின் கடவுள் மிகவும் மோசமானவர். அவர்கள் இரக்கத்தின் கடவுளைக் குறித்து அறிந்திருக்கவில்லை. எனவே கடவுள் இயேசு எனும் இரக்கத்தின் கடவுளை உலகிற்கு அனுப்பினார்.

விவிலியத்தின் பழைய ஏற்பாடு புறக்கணிக்கப்பட வேண்டியது. புதிய ஏற்பாட்டின் இரக்கமும், பழைய ஏற்பாட்டின் பழி வாங்குதலும் முரணானவை. முரண்கள் இரண்டு ஒரே அரணுக்குள் இருக்கக் கூடாது எனவே அதை புறக்கணிக்க வேண்டும் என பழைய ஏற்பாட்டை புறக்கணித்தார்.

இவ்வுலகம் தீமையினால் நிறைந்தது. இந்த உலகின் கடவுளுக்கும் இயேசு சொன்ன கடவுளுக்கும் சம்பந்தமில்லை. இரண்டும் வேறு வேறு நபர்கள் என்று போதித்தார்.

கிறிஸ்துவுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. எல்லாம் ஒரு தோற்ற மயக்கமே என்பதும் இவருடைய போதனைகளில் ஒன்று.

மனமும், உடலும் தூய்மையாக இருக்க வேண்டும். திருமணம் செய்வது கூட உடலை தீட்டுப் படுத்துவது. எனவே திருமணத்தைக் கூட வெறுத்தார். புலால் உண்ணவில்லை. உடல் தூய்மையைக் கடைபிடித்தார்.

இவ்வாறு இரண்டாம் நூற்றாண்டிலும் மூன்றாம் நூற்றாண்டிலும் நிகழ்ந்த அறிவு நெறிக் கோட்பாடுகள் கிறிஸ்தவத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. மக்கள் குழுக்களாக விவாதங்களில் ஈடுபட்டனர். இந்த காலகட்டத்தில் ஆதிகால இணைந்து வாழும் முறை எல்லாம் விடைபெற்றிருந்தது.

கிறிஸ்தவ மதம் மாபெரும் குழப்பத்தையும் சவாலையும் சந்தித்தது

கடவுளைப் பற்றிய தவறான தகவல்களை பல விதமாகப் போதித்தனர். கடவுள் உலகைப் படைத்தார் எனும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக அது அமைந்தது.

கிறிஸ்து ஒரு தோற்றம் என்பதும், உண்மையில் இயேசு இறக்கவில்லை என்பதும் கிறிஸ்தவத்தின் அடித்தளத்தையே அசைப்பவை. எனவே அவை கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாய் விழுந்தது.

கடவுளிடமிருந்து ஏயோன் புறப்படுகின்றன எனும் கற்பனைகளும் கிறிஸ்தவத்துக்கும் விவிலியத்திற்கும் எதிரானது. இந்த அறிவு நெறிக் கோட்பாடுகள் அவற்றையும் பெருமளவில் பரப்பின.
அந்த காலகட்டத்தில் அறிவு நெறிக் கோட்பாடு கிறிஸ்தவ விசுவாசத்துக்கு எதிராக கிளம்பியதால் பலர் அதை எதிர்த்தார்கள். பல நூல்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை மையப்படுத்தியும் நெறிக் கோட்பாடுகளை எதிர்த்தும் வெளியாயின.

ஜஸ்டின், ஐரேனியஸ், கிளமெண்ட் முதலானோரின் நூல்கள் அக்கால கிறிஸ்தவர்களின் குழப்பங்களைத் தீர்க்கும் விதமாய் அமைந்தன.

மாண்டேனஸ் கொள்கை

கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு அறிவு நெறிக் கோட்பாடுகள் ஏற்படுத்திய பின்னடைவை விடப் பல மடங்கு பின்னடைவை மாண்டேனஸ் சபை ஏற்படுத்தியது. இந்த பிரிவில் நடந்த நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு மாறாத கரும்புள்ளியாய் இடம்பெற்றுவிட்டது.

கி.பி 156ல் மாண்டேனஸ் கொள்கை பிறந்தது. இதை மாண்டேனஸ் என்பவர் உருவாக்கியதால் இது மாண்டேனஸ் கொள்கை என்று அவருடைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

பிரிகியா நாடு இந்த மாண்டேனஸ் கொள்கைக்காரர்களால் புனித பூமி என்று வர்ணிக்கப்பட்ட நாடு.

மிசியாவில் அர்டபா எனுமிடத்தில் ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த மாண்டேனஸ். பிறப்பினால் கிறிஸ்தவரானவர் அல்ல இவர். இவர் தன்னுடைய கடவுளாக சைபீல் தேவதையை ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்து வந்தவர்.

கிறிஸ்தவ மதமும் அதன் பிரிவுகளும் அதன் பன்முகக் கோட்பாடுகளும் மாண்டேனஸ் பார்வையை கிறிஸ்தவத்தின் பக்கம் திருப்ப வைத்தன. கி.பி 150ல் கிறிஸ்தவ மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவர் மக்களை வசீகரிக்க, தூய ஆவியானவர் தன்னுடன் பேசுகிறார் என கூறத் துவங்கினார். பலர் அதை நம்பினார்கள். நம்பியவர்கள் அவருடைய குழுவில் இணைந்தார்கள்.

தூய ஆவியானவர் தன்னுடன் பேசுகிறார் என்று சொல்லி வந்த மாண்டேனஸ் ஒரு கட்டத்தில் தானே தூய ஆவியானவர் என்று பேசத் துவங்கினார். அவருடைய ஆதரவாளர்களும் அவரை தூய ஆவியானவராகவே பார்த்தார்கள்.

பிரிசில்லா, மாக்ஸிமில்லா எனும் இரண்டு பெண்கள் அவருடைய தீவிரமான பக்தர்கள் ஆகிவிட்டனர். இருவதும் அவரோடே திரிந்து கொள்கைப் பரப்புச் செயல்களில் ஈடுபட்டனர்.

கடவுளும் தூய ஆவியானவரும் தனக்குள் இறங்கி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று இவர் சொல்லிக் கொண்டார். எனவே அவருடைய பேச்சை கடவுளின் நேரடிப் பேச்சுக்குரிய மரியாதை கொடுத்து அனைவரும் ஆதரித்தனர்.

இவருடைய கொள்கைப்படி திரு வெளிப்பாடு முடியவில்லை. திருவெளிப்பாடு என்பது இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்த இயேசுவின் வெளிப்படுத்தல். தன் உயிர்ப்பிற்குப் பின் இயேசுவே தன்னுடைய அன்புக்குரிய சீடனான யோவானுக்குக் காட்சி கொடுத்து அறிவுறுத்தியதே திருவெளிப்பாடு என நம்புகிறது கிறிஸ்தவம்.

மாண்டேனஸ் தன்னுடைய போதனைகளில் திருவெளிப்பாடு இன்னும் வரவில்லை. அது விரைவில் வரும் என அறிவிக்கத் துவங்கினார். அவருடைய பேச்சுத் திறமை மாண்டேனஸ் கொள்கைக்கு ஆட்களைக் கூட்டிச் சேர்த்தது.

பிரிகியாவிலுள்ள பெப்பூசா எனுமிடத்தில் இயேசு இரண்டாம் முறை வருவார் என்றும் அது விரைவில் நடக்கும் என்றும் தகவல்கள் பரப்பப்பட்டன. பல பரவசப் பேச்சுகளைப் பேசி வந்த மாண்டேனஸ் தன்னுடைய சீடர்களுடன் பெப்பூசாவில் சென்று தங்கினார்.

இவருடைய கொள்கைக்காரர்கள் கடவுள் விரைவில் வருவார் என நம்பினார்கள். எனவே தங்களுக்குரியதை விற்று ஏழைகளுக்குக் கொடுப்பதும், ஆலயத்துக்குக் கொடுப்பதும், உண்ணா நோன்பு இருப்பதும் என பல செயல்களைச் செய்தனர்.

பிரிஸ்கில்லாள் தன்னுடைய கணவனை விட்டு விட்டு மாண்டேனஸின் தீவிர பக்தையாய் சுற்றத் துவங்கினார். இயேசுவின் இரண்டாம் வருகை இதோ விரைவில் என்று சொல்லிக் கொண்டிருந்த அவருடைய ஆயுள் கனவுகளை நிறைவேற்றி வைக்காமலேயே நிறைவுற்றது.

மாக்சிமில்லாளும் மாண்டேனஸ் கொள்கைகளைத் தீவிரமாய் பரப்பினாள். மாண்டேனஸ் சபையின் தீர்க்கத் தரிசி போல செயல்பட்டார். தானே கடைசி தீர்க்கத் தரிசி, இனிமேல் தீர்க்கத் தரிசிகள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டே உயிர் நீத்தார்.

மாண்டேனஸ் கொள்கைக்காரர்கள் பெப்பூசாவில் இயேசுவின் இரண்டாம் வருகை வரும் வரும் என காத்திருந்தார்கள். ஆனால் நடக்கவில்லை. எனவே பெப்பூசாவே புதிய எருசலேம். புனித நகரம் என்று போதிக்கலானார்கள்.

பெப்பூசா புதிய எருசலேம் என்னும் பெயர் பரவியதும் பல ஊர்களிலிருந்தும் மக்கள் பெப்பூசாவுக்கு புனித யாத்திரை வந்தார்கள். பெப்பூசாவின் புகழ் பரவியது. பல நாடுகளிலிருந்தும் மக்கள் பெப்பூசாவுக்கு வர ஆரம்பித்தனர்.

மாண்டேனஸ் கொள்கையைப் பின்பற்றுபவர்களே உண்மையான கிறிஸ்தவர்கள் என்றும் மற்றவர்கள் போலிகள் என்றும் அவர்கள் தீவிரமாய் போதித்தனர். சபைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. பெண்களுக்கு உயரிய நிலை வழங்கப்பட்டது.

ஆப்பிரிக்காவிலும் மாண்டேனஸ் கொள்கை பரவத் துவங்கியது. தெர்த்துலியான் என்பவர் ஆப்பிரிக்காவில் மாண்டேனஸ் கொள்கையைப் பரப்ப உறுதி எடுத்து தலைமை ஏற்றார்.

தெர்த்துலியான் போதனைகள் கடுமையாய் இருந்தன. குருக்களும் பொது நிலையினரும் ஒரே மரியாதைக்குரியவர்கள். இருவருக்கும் வித்தியாசமில்லை எனும் உயரிய சீர்திருத்தச் சிந்தனையை தீவிரமாய் போதித்தவர் அவரே.

இருமுறை திருமணம் செய்வதை தீவிரமாய் எதிர்த்தார் இவர். ஒன்றே கடவுள், ஒன்றே சபை, ஒன்றே திருமணம் என்று வித்தியாசமாய் போதித்தார்.

கி.பி 395ல் தியோடஸ் மன்னனின் காலத்தில் மாண்டேனஸ் கொள்கைக்காரர்கள் ஒடுக்கப்பட்டனர். அதே நிலை யுஸ்தினியான் மன்னன் அரசாண்ட கி.பி 565லும் நிகழ்ந்தது.

மாண்டேனஸ் கொள்கைக்காரர்கள் மன்னர்களின் வாளுக்கு மடியவில்லை. குழுக்கள் குழுக்களாக ஆலயங்களில் கூடினார்கள். வாயில்களை மூடினார்கள். ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தி தாங்களும் மாண்டார்கள் !

நெஸ்டோரியஸ் கொள்கை

ஐந்தாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் மேலும் சில கொள்கை ரீதியிலான பிளவுகளைச் சந்திக்க வேண்டி வந்தது. பல இடங்களுக்குக் கிறிஸ்தவம் பரவினாலும் அவர்களிடையே ஒரே சிந்தனை இல்லாமல் இருந்தது. ஒவ்வொருவரும் அவரவர் புரிந்து கொண்ட விதமாக கிறிஸ்தவத்தைப் பார்த்தனர்.

இந்த காலகட்டத்தில் எழுந்த கொள்கைகளில் நெஸ்டோரியஸ் கொள்கை மிக முக்கியமானதாகும். நெஸ்டோரியஸ் அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்தவர். இவர் கி.பி 428ல் அவர் கான்ஸ்டாண்டிநோபிளில் பேராயராக பொறுப்பேற்றார்.

இவருடைய கொள்கைப்படி இயேசு பிறக்கும் போது தெய்வத் தன்மையோடு பிறக்கவில்லை. கடவுளின் அருளால் பிறந்தவர் இயேசு எனும் கூற்றை இவர் மறுத்தார். தெய்வீகத் தன்மையுடன் இயேசு பிறக்காததனால் இயேசுவின் தாய்க்கு தெய்வீகத் தன்மை இல்லை.

இயேசு பிறந்த பின்பே அவர் ஒரு காலகட்டத்தில் தெய்வீகத் தன்மைக்கு உயர்த்தப்பட்டார். எனவே இயேசுவிலேயே மனிதத் தன்மையும், தெய்வீகத் தன்மையும் கலந்து தான் காணப்படுகிறது.

இயேசுவின் தாய்க்கு எந்தவிதமான தெய்வீகத் தன்மையும் இல்லாததால் அவருக்கு மரியாதை செலுத்த அவசியமில்லை. இயேசுவின் அன்னையை ‘தேவமாதா’ என்று அழைக்கப்படுவது தவறு என்றார்.

இந்தக் கொள்கையை பெரும்பாலானோர் எதிர்த்தார்கள். அவர்களில் முக்கியமானவர் அலெக்சாண்டிரியா பேராயர் சிரில். இவர் குறிப்பிடுகையில் இயேசுவின் பிறப்பே தெய்வத் தன்மையுடையது தான். இயேசு மனிதத்தன்மையும், இறைத்தன்மையும் கலந்து பிறந்தவர் எனவே மாதாவை தேவமாதா என்று அழைக்கலாம் என்றார்.

சிரில் கொள்கை பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ரோமை தலைமையும் இதை ஏற்றுக் கொண்டதால் நெஸ்டோரியஸ் கொள்கைக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

நெஸ்டோரியஸ் கிறிஸ்தவத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அவரும் அவருடைய ஆதரவாளகளும் தங்களுடைய கொள்கைகளை விட்டு விலக மறுத்தனர். எனவே நெஸ்டோரியஸ் எகிப்து நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்.

நெஸ்டோரியஸ் நாடுகடத்தப்பட்டாலும் நெஸ்டோரியஸ் கொள்கை அழியவில்லை. உலகின் பல நாடுகளுக்கும் அந்த கொள்கை பரவியிருக்கிறது. ஆனால் காலப்போக்கில் அந்த கொள்கை தாக்குப் பிடிக்க முடியாமல் அழிவைச் சந்தித்தது.

பலாகியஸ் கொள்கை

பலாகியஸ் என்னும் குருவானவரின் சிந்தனையில் உதித்ததே இந்த பலாகியஸ் கொள்கை. இந்த கொள்கையின் அடிப்படை ஜென்ம பாவத்தை மறுதலிப்பதாகும். மனிதனுக்கு முன் ஜென்ம பாவம் என்று ஒன்று இல்லை என்று இவர் வாதிட்டார்.

ஆதாம், ஏவாள் பாவம் செய்ததால் மனித குலம் முழுவதுக்கும் ஜென்ம பாவம் இருக்கிறது எனும் கிறிஸ்தவ அடிப்படை நம்பிக்கையை இது எதிர்த்தது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீகத் தன்மையே அவனுடைய மீட்புக்கும் வழி வகுக்கும். மனிதன் பிறக்கும் போது தெய்வீகத் தன்மையோடு பிறக்கிறான். தெய்வீகத் தன்மையோடு பிறக்கும் மனிதன் பாவியாக இருக்க முடியாது.

மனிதன் பிறக்கும் போது ஆதாமுக்கும் முந்திய நிலையில் தான் பிறக்கிறான். எனவே ஆதாமின் பாவம் அவனைப் பாதிக்காது.

இது கிறிஸ்தவத்தின் அடிப்படையான கிறிஸ்துவால் மீட்பு எனும் கொள்கையை அசைத்தது. காரணம் பாவமே செய்யாத நிலையில் மனிதன் பிறக்கிறான் எனில் அவனுக்கு மீட்பு தேவையில்லை.

கிறிஸ்து இல்லாமலேயே மனிதனுடைய உள் தெய்வீகத் தன்மை மூலம் அவன் மீட்பைப் பெறமுடியும் என்று போதித்தார் பலாகியஸ்.

இவருடைய கொள்கைக்கும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. புனித அகுஸ்தீனார் இவருடைய கொள்கையை தீவிரமாய் எதிர்த்தார்.

புனித அகுஸ்தீனார் கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவையான பல நூல்களை இயற்றியவர். இளமைக்காலத்தில் பல விதமான தவறுகளைச் செய்யும் மனநிலை உடையவராக இருந்தாலும் பின் மனம் திரும்பி திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவத்தில் இணைந்தார்.

கிறிஸ்தவத்தில் இணைந்து பல ஆண்டுகள் பேராயராக இருந்தார். இவர் கிறிஸ்தவத்துக்கு எதிரான கொள்கைகள எதிர்ப்பதில் தீவிரம் காட்டினார்.

இவருடைய போதனைகளில் ஆதாமுக்குப் பின் மனுக்குலம் பாவத்தில் விழுந்தது. மனிதனின் தெய்வீகத் தன்மை சிதைக்கப்பட்டு விட்டது. எனவே முன்பாவம் உண்டு என்பதை மறுக்க முடியாது.

இயேசுவின் சிலுவை மரணமும், உயிர்ப்புமே ஆதாமின் பாவத்தை விலக்கும் சக்தி கொண்டது என்று போதித்தார். இறை அருள் இல்லாமல் மனிதன் எதையும் செய்ய முடியாது என்றும், மீட்புக்கான வழியைக் கண்டறியவே அவனுக்கு இறை அருள் தேவை என்றும் அவர் போதித்தார்.

இறைவனின் கருணை மனிதனை மீட்படையத் தூண்டுகிறது, மனிதனோடு இணைந்து செயலாற்றுகிறது, மனிதனால் எதிர்க்க முடியாததாக இருக்கிறது எனும் மூன்று தத்துவங்களை முன்வைத்து தன்னுடைய போதனைகளை இவர் அமைத்துக் கொண்டார்.

காப்புரையாளர்கள் ( Apologists )

அரசியல் ரீதியாக கிறிஸ்தவர்கள் துன்பங்களைச் சந்தித்தபோது கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்துதல் நியாயமற்றது என்பதை நிரூபிக்க பலர் போராடினார்கள். இவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை எழுதி வெளியிட்டார்கள். இவர்களே காப்புரையாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த எழுத்துப் படிவங்கள் அரச இருக்கைகளில் இருந்தவர்களுக்கு அனுப்பப்பட்டன. கிறிஸ்தவ மதம் குறித்த புரிதலையும், அந்த நாட்களின் கிறிஸ்தவ வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள இந்த நூல்கள் உதவுகின்றன.

அந்த காலத்து காப்புரையாளர்கள் கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழிகளில் காப்புரைகள் எழுதியிருக்கிறார்கள். குவார்டிரேட்டஸ், அரிஸ்டைடிஸ், தியோப்பிலஸ், ஆரிகன், அந்தேனோகொராஸ், கிளமெண்ட், ஜஸ்டின் மார்ட்டின், தேசியன் போன்றோர் கிரேக்க மொழியில் காப்புரைகள் எழுதியதில் குறிப்பிடத் தக்கவர்கள்.

இலத்தீன் மொழியில் காப்புரைகள் எழுதியவர்களில் அர்னோபியஸ், தெர்ட்டூலியன், பெலிக்ஸ், லாக்டாண்டியஸ் ஆகியோர் சிறப்பிடம் பெறுகின்றனர்.

இந்த காப்புரையாளர்கள் தங்கள் மதத்தைக் காப்பாற்றவும், மதத்துக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவும் பல வழிகளில் போராடினார்கள். இவர்களுடைய எழுத்துக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ நியாயங்களை முன்வைப்பதாகவே அமைந்தன.

சிலர் பிற மதங்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதினார்கள். இதன் மூலம் அத்தகைய குறைபாடுகள் கிறிஸ்தவ மதத்தில் இல்லை என புரிய வைத்து அரசின் அங்கீகாரம் பெறுவது அவர்களின் நோக்கம்.

சிலர் மற்ற மதங்கள் போதிக்கும் மீட்பரும் இயேசுவே என பழைய ஏட்டுச் சுருள்களையும், நீதி நூல்களையும், பழைய தீர்க்கத் தரிசனங்களையும் இயேசுவோடு ஒப்பிட்டு எழுதினார்கள். இதன் மூலம் கிறிஸ்தவம் மற்ற மதங்களை அழிக்க வந்ததல்ல, மற்ற மதங்களின் தொடர்ச்சியாக வந்தது என்பதை நிரூபிப்பது அவர்களின் விருப்பம்.

சிலர் இயேசுவின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அதிசயச் செயல்களைப் பட்டியலிட்டு, அவற்றைக் குறித்த விரிவான விளக்கங்களையும் எழுதி மன்னனுக்கு அனுப்பினார்கள். இயேசுவின் பெயரால் அதிசயங்கள் நடக்கின்றன அவர் உண்மையான கடவுள் என்றனர்.

சிலர் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையை விவரித்து எழுதினார்கள். அவர்களுக்குள்ளே நிலவிய சகோதர மனப்பான்மையையும், உயரிய குணங்களையும் விரிவாக எழுதினார்கள். அவர்கள் பிற மதங்கள் மீதான வன்முறை எண்ணங்களைக் கொண்டிருக்கவில்லை என வாதிட்டனர்.

இத்தனை வன்முறைகளுக்குப் பின்னும் பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவம் அழியாமல் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அது உண்மையான கடவுளால் உருவானது எனும் கருத்தின் அடிப்படையில் பலர் எழுதினார்கள்.

குவாடிடேட்டஸ் எழுதிய காப்புரையே முதல் காப்புரை என்கிறார் யூசபியஸ் எனும் விவிலிய அறிஞர். கிவேடிடேட்டஸ் மிகவும் தாழ்மையான குரலில் தன்னுடைய வாதத்தை வைக்கிறார். கிறிஸ்தவர்கள் அரசின் சட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. கிறிஸ்தவர்கள் வரி செலுத்துகிறார்கள். கிறிஸ்துவை அறிக்கையிட்டதைத் தவிர எந்த காரணத்துக்காகவும் அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. பேரரசருக்கு கிறிஸ்தவர்கள் எதிரிகளல்ல. என்று குவாடிடேட்டஸ் தன்னுடைய காப்புரையில் குறிப்பிடுகிறார்.

ஜஸ்டின் மார்ட்டின் எழுதிய காப்புரைகள் புகழ்பெற்றவை. இவருடைய காப்புரை ஒன்றைப் படித்தபின் மன்னன் கிறிஸ்தவர்களுக்குச் சாதகமான ஒரு ஆணையைப் பிறப்பித்த வரலாறும் உண்டு.

அவருடைய காப்புரையில் கிறிஸ்தவர்களின் ஆழமான விசுவாசத்தை தன்னுடைய புலமை கலந்து எழுதினார். மரண நேரத்திலும் அவர்களுடைய உறுதியை குறிப்பிடுகிறார். இதன்மூலம் கிறிஸ்தவத்தில் கிறிஸ்தவன் கொண்டுள்ள ஆழமான பற்றுறுதியை புலப்படுத்துகிறார்.

அந்தேனோகொராஸ் தன்னுடைய காப்புரையில் கிறிஸ்தவ மதத்தின் தத்துவக் கூறுகளை எழுதுகிறார். கிறிஸ்தவர்கள் எனும் பெயருக்காக கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது என்றார். கிறிஸ்தவர்களுக்கும் மற்ற மனிதர்களைப் போல விசாரணக்குட்படுத்தப்பட்டு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.

கிறிஸ்தவர்கள் நாத்திகர்கள் அல்ல என்றும், உருவ வழிபாடு இல்லையெனில் நாத்திகம் என பொருள் கொள்ளக் கூடாது என்றும் வாதிட்டார். கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறை ஒழுக்கம் போன்றவற்றையும் விரிவாக எழுதியுள்ளார்.

பாடுபட அஞ்சுபவர்கள் பாடுபட்ட இயேசுவின் பின் செல்பவர்களாக இருக்க முடியாது. எனவே நாங்கள் பாடுபட பயப்படவில்லை. இரத்தம் தோய்ந்த மரணத்தின் கைகளில் விழுந்தாலும் கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக் கொண்டு தான் கிறிஸ்தவன் சாவான் ‘இரத்த சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் விதை ‘ என உணர்ச்சி பூர்வமாக எழுதினார் தெர்துல்லியான்.

இவ்வாறு மக்கள் எழுதிய காப்புரைகள் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுக்கு அரசுகளால் நேர்ந்த இன்னல்களையும் பற்றிய அறிவைத் தருகின்றன.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...