Posted in Articles

சிறுவர் மறைக்கல்வி : தாழ்மை

 

தாழ்மை

 Image result for boy speaking mic

அவையோருக்கு என் அன்பின் வணக்கங்கள்.

இன்று நான் தாழ்மை என்பதைப் பற்றி உங்கள் முன்னால் தாழ்மையுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

கிறிஸ்தவ வாழ்க்கை தாழ்மையின் மீது தான் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது. தாழ்மை எனும் அஸ்திவாரம் இல்லாவிட்டால் கிறிஸ்தவ வாழ்க்கை வலுவற்றதாகி விடுகிறது.,

புதிய ஏற்பாட்டைப் பார்த்தோமானால், அதன் அடி நாதமாய் அமைந்திருப்பதே தாழ்மை தான்.

தாழ்மை வாழ்வின் உன்னத இடங்களை எட்டிப் பிடிக்கவைக்கிறது

கிறிஸ்து சொன்ன வாழ்க்கை முறையைக் கட்டி எழுப்ப வைக்கிறது.

தாழ்மை உடையவர்களாக இருப்பவர்களே மிக உயர்ந்தவர்கள் – என்கிறார் ரவீந்திர நாத் தாகூர். சுயநலம் எனும் புதை குழியிலிருந்து மனிதனை மேலே தூக்குவது தாழ்மையே.

கிறிஸ்தவம் நமக்கு தாழ்மையின் பல நிலைகளைப் போதிக்கிறது.

கிறிஸ்துவில் சரணடைதலே தாழ்மையின் முதல் படி என நமக்குப் போதிக்கிறது புதிய ஏற்பாடு.

கடவுள் தனது மகனை இந்த உலகிற்கு அனுப்ப விரும்பியபோது தூதரை மரியாளிடம் அனுப்பினார். மரியாள் தன்னைத் தாழ்த்தினார்.

இறைவனை கருக்கொண்டு உருக்கொடுக்க தன்னையே ஒப்புக் கொடுத்தார்.

தாழ்மை அவரை தாய்மையாய் மாற்றியது.

அதுவும் இறைமகன் இயேசுவையே கருத்தாங்கும் தாய்மை.

 உலகோர் கூற்றுகள் குறித்துக் கவலையில்லை, யோசேப்பின் சந்தேகங்கள் குறித்தும் சஞ்சலமில்லை. கடவுளின் கட்டளைக்காகத் என்னைத் தாழ்த்தி அர்ப்பணிப்பதே முதல் தேவை என்பதை மரியாள் உணர்ந்தாள்.

இறைவனுக்குப் பிரியமானவராய் மாறினார். தாழ்மை ஒரு மனிதனை இறைவனுக்குப் பிரியமானவராக மாற்றுகிறது.

இயேசுவின் வருகையே தாழ்மையின் வெளிப்பாடு தான். கடவுளின் மகனாக விண்ணுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த இயேசு, மனித உருவில் மண்ணுலகிற்கு வந்ததே தாழ்மையின் வடிவம் தான். அந்த தாழ்மை நிலையிலும், இன்னும் தாழ்மையான நிலையை அடையவே அவர் விரும்பினார்.

ஆடிடைக் கொட்டில் ஆதவன் தொட்டிலானது.

புல்லணை பரமனின் தலையணை ஆனது.

நாடுகளின் தலைவனாக அவர் அவதரிக்கவில்லை, ஆடுகளின் அருகிலே அவர் அவதரித்தார்.

இயேசுவின் வாழ்க்கையின் ஒவ்வோர் நிலைகளும் நமக்குத் தாழ்மையையே போதிக்கிறது. முதல் முப்பது ஆண்டு காலங்களை அவர் தந்தை, தாயைப் பணிந்திருப்பதில் தான் செலவிட்டார். தான் பணிவிடை பெறுவதற்காக வரவில்லை, பணிவிடை புரியவே வந்திருக்கிறேன் என்பதை அவருடைய இளமைக் காலத்திலேயே நமக்கு அவர் வெளிப்படுத்தினார்.

தாழ்மை குடும்பத்தில் ஆரம்பிக்க வேண்டும்.

தாழ்மை தந்தை, தாயுடன் நாம் வாழும் காலத்திலேயே உருவாக வேண்டும் என்பதையே அவருடைய வாழ்க்கையின் முதல் பாகம் போதிக்கிறது.

அவருடைய பணிவாழ்வின் ஒவ்வோர் பக்கமும் தாழ்மையின் செயல்களால் நிரம்பி வழிகின்றன. பணிவாழ்வுக்குள் நுழைகின்ற வாசலில், சாத்தானின் சோதனை வந்தது.

“தாழ்மையாய் இருக்க வேண்டுமா இல்லை வளமையான வாழ்வு வேண்டுமா” என சாத்தான் அவரைச் சோதித்தான். இயேசுவோ பிறக்கும் முன்பே தாழ்மையின் வடிவானவர். சாத்தானின் சோதனைகளெல்லாம் அவருக்கு எம்மாத்திரம். அவற்றை உடைத்துப் போடுவதில் அவர் வெற்றி பெறுகிறார்..

எங்கே தாழ்மையிருக்கிறதோ, அங்கே இறை அருள் நிறைவாக இருக்கும் என்பதே இயேசுவின் போதனைகள் சொல்லும் செய்தி.

ஆயக்காரனும், பாவியும் ஜெபக்கூடத்தில் செபம் செய்யும் கதை நாம் அறிந்ததே. ஆலயத்தின் உள்ளே கர்வத்துடன் செய்யப்பட்ட பிரார்த்தனை நிராகரிக்கப் பட்டது. “நான் பாவி என்மேல் இரக்கமாயிரும்” எனும் தாழ்மையின் வடிவான சின்னப் பிரார்த்தனை சிகரம் தொட்டது.

தலைவனாக இருக்க வேண்டுமென விரும்புபவன் எல்லாருக்கும் பணியாளனாய் இருக்க வேண்டும் என்கிறார் இயேசு.

வெறுமனே மேடைகளில் முழங்கிவிட்டுச் செல்லும் தலைவர்களைப் போல அவர் இருக்கவில்லை. பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து சீடர்களின் பாதங்களைக் கழுவும் ஓர் அடிமையாய் தன்னை உருமாற்றிக் கொள்கிறார்.

வாழ்வின் கடைசிக் கட்டத்திலும் இயேசுவின் தாழ்மையில் சிறிய மாற்றமும் வரவில்லை. கெத்சமனி தோட்டத்தின் செபத்தில் கூட “தந்தையே என் விருப்பமன்று உமது விருப்பமே நிறைவேறட்டும்” என முழுக்க முழுக்க தந்தையின் பாதங்களில் தன்னை சரணாகதியாக்குகிறார். உயிரின் இறுதி மூச்சை விடும்போது கூட தன்னைத் தாழ்த்தி, தன்னை காயப்படுத்தியவரின் மன்னிப்புக்காக மன்றாடுகிறார் நம் தேவன்.

இயேசுவின் வாழ்க்கை இப்படி நமக்கு தாழ்மையை ஆழமாய் போதித்துத் தருகிறது.

உண்மையில் நாம் எப்படி இருக்கிறோம் ? குடும்பத்தில், நண்பர்களிடையே, அலுவலகத்தில், ஆலயத்தில் என எல்லா இடங்களிலும் இயேசுவின் தாழ்மையை இதயத்தில் இருத்துகிறோமா ? இல்லை நான் பெரியவன் எனும் மமதையை மனதில் கொண்டிருக்கிறோமா ?

அன்னை தெரசா தனது வாழ்க்கை முழுதும் தாழ்மையை வெளிப்படுத்தினார். ஒருகையில் காறி உமிழ்ந்தவனிடம் மறுகையை நீட்டினார். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னம் காட்டு எனும் இயேசுவின் போதனை அவருக்குள் இருந்தது.

தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசின் பயன் மொத்தத்தையும் ஏழைகளுக்காய் அர்ப்பணித்தார். எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு எனும் இயேசுவின் போதனையின் செயல் வடிவமல்லவா அது ?

நாம் யானையின் மீது அமர்ந்திருக்கும் சிற்றெறும்புகள். இறைமகன் இயேசுவே அந்த யானை ! யானை நம்மை எல்லா இடர்களையும் தாண்டி இனிதே கொண்டு செல்கிறது. நாமோ எல்லாமே நமது திறமையின் வெளிப்பாடு என தம்பட்டம் அடிக்கிறோம். நம்மைச் சுமக்கும் இறைமகன் இயேசுவையே மறந்தும் விடுகிறோம்.

தாழ்மை சுயநலத்தின் எதிர் துருவம். நான் தாழ்மையுடையவன் என கருதும் வினாடியில் நாம் தாழ்மையை விட்டிறங்கி சுயபெருமையில் சிக்கிக் கொள்கிறோம்.

தாழ்மையே வாழ்வுக்கான ஒளி

தாழ்மையே இறைமகன் காட்டிய வழி.

எனும் சிந்தனை மனதில் இருந்தால் நாம் கிறிஸ்தவர்களாய் வாழ்வதில் உண்மையான அர்த்தம் பிறக்கும்.

கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் பிம்பங்கள். அவருடைய தாழ்மையை நமது வாழ்வில் பிரதிபலிக்க வேண்டியது நமது தலையாய கடமை. இந்த உண்மையை உணர்வோம், வாழ்வை அர்த்தப் படுத்துவோம்.

நன்றி வணக்கம்

 

Posted in Articles

சாலமோன் ; ஒரு பின்னணி

சாலமோன் ; ஒரு பின்னணி

Image result for king solomon

இரண்டு பெண்களுக்கிடையே சண்டை. இருவருக்கும் இரண்டு பச்சிளம் குழந்தைகள் இருந்தார்கள். இருவரும் ஓரே வீட்டில் தங்கியிருந்தார்கள். குழந்தைகளுக்கு வெறும் மூன்று நாட்கள் இடைவெளி மட்டுமே. ஒருத்தி இரவில் தூங்கும்போது குழந்தையின் மேல் புரண்டு படுக்க அது இறந்து விடுகிறது. அதை உணர்ந்து பதறிய அவள், வஞ்சகமாக மற்ற குழந்தையை தன் மேல் கிடத்திக் கொண்டு, இறந்த குழந்தையை அடுத்த தாயின் மேல் வைத்து விடுகிறாள்.

காலையில் தாய் எழும்பி தன் மேல் இருக்கும் குழந்தை இறந்து போய் இருப்பதைப் பார்த்து கதறினாள். ஆனால் உற்றுப் பார்த்தபோது அது தனது குழந்தையல்ல என்பது தெரிந்தது. கூட இருந்து தன்னை ஏமாற்றிய பெண் மீது அவளது பார்வை திரும்பியது. அது தான் சண்டைக்குக் காரணம்.

அவர்கள் இருவரும் மன்னன் முன்னால் வந்தார்கள். இருவருமே குழந்தை தங்களுடையது என வாதாடினார்கள். கூட்டம் குழம்பியது. இப்போது உள்ளது போல் டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பதெல்லாம் அப்போது சாத்தியமில்லையே ! மன்னர் சொன்னார். “வாளை எடுத்து குழந்தையை இரண்டாய் வெட்டி ஆளுக்குப் பாதி கொடு”.

உண்மைத் தாய் பதறினாள். “ஐயோ வேண்டாம், கொல்ல வேண்டாம்.. அவளே வளர்த்தட்டும்” என்றாள். மற்றவளோ, “உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்.. வெட்டி எடுத்துக் கொள்வோம்” என்றாள்.

வெட்ட வேண்டாம் என்றவளே உண்மைத் தாய் என தீர்ப்பு வழங்கி, அவளுக்கே குழந்தையையும் வழங்கினான் மன்னன். அந்த மன்னன் ‘சாலமோன்’. ஞானத்தினால் நிரம்பி வழிந்தவன் என பாராட்டப்பட்டவன்.

இஸ்ரேல் மக்களுக்கு முதல் மன்னனாக இருந்தவர் சவுல். அதன் பின் தாவீது மன்னன் ஆட்சிப் பீடம் ஏறினார். யூதா இஸ்ரேல் ஒன்றிணைந்த நாடுகளை வலுவாக மாற்றி ஆட்சி செய்த பெருமை இவருக்கு உண்டு. மூன்றாவதாக வந்தவர் தான் சாலமோன் மன்னன். இவருடைய ஆட்சிக் காலம் கிமு 970 முதல் 931 வரை ! இஸ்லாமியர்கள் சுலைமான் நபி என்று இவரை அழைக்கிறார்கள்.

இவர் தாவீது மன்னனுக்கும் பத்சேபா எனும் பெண்ணுக்கும் பிறந்தவர். சாலமோனுடைய ஆட்சிக்குப் பிறகு நாடு இரண்டாகப் பிளவு பட்டது. வடக்கே இஸ்ரேல், தெற்கே யூதா என்று இருபெரும் பிரிவுகள் ஆனது.

சாலமோன் மன்னனை ஞானத்தின் உச்சம் என்று வர்ணிக்கிறார்கள். கடவுள் அவரிடம் “என்ன வரம் வேண்டும் கேள்” என்று சொன்னபோது “ஞானம் வேண்டும்” என்று கேட்டு வாங்கியவர். அதனால் ஞானமும் கூடவே சகல செல்வங்களையும் பெற்றுக் கொண்டவர்.

சேபா நாட்டு அரசி இவருடைய ஞானத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இவரைப் பார்க்க வந்தார். சாலமோன் சகலகலா வல்லவர் என்பதிலெல்லாம் அவளுக்கு உடன்பாடு இருக்கவில்லை. எனவே கேள்விக் கணைகளால் அவரைத் துளைத்தாள். அவரோ வெகு சரளமாக எல்லாவறுக்கும் பதில் சொன்னார். அரசி அதிர்ந்தே போனாள். “மக்கள் சொன்னப்போ நம்பவில்லை, இப்போ உம்முடைய ஞானம் பற்றி அவர்கள் பாதி கூட சொல்லவில்லை என்பதை உணர்கிறேன்” என பாராட்டித் தள்ளினாள்.

அத்துடன் நிற்கவில்லை அவருக்கு ஏராளம் பரிசுகளும் கொடுத்தார். 4800 கிலோ தங்கம், எக்கச் சக்கமான நறுமணப் பொருட்கள், ஏகப்பட்ட விலையுயர்ந்த கற்கள் இது தான் அந்த மலைப்பூட்டும் பரிசுக் குவியல். அந்த அளவுக்கு இவருடைய ஞானத்தைக் கண்டு அரசி வியந்தாள் என்பது தான் விஷயம். சாலமோன் சேபாவின் பரிசில் மனம் மகிழ்ந்தான். அவளுக்கும் இவர் ஏகப்பட்ட பரிசுகள் கொடுத்தார். அதுமட்டுமல்ல அரசி என்னெல்லாம் கேட்டாளோ அதெல்லாம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

சாலமோன் மன்னனின் செல்வம் கணக்கிட முடியாததாய் இருந்தது. ஆண்டுக்கு இவருக்கு வந்து சேரும் தங்கம் மட்டுமே 27 ஆயிரம் கிலோ ! அவருடைய பாத்திரங்கள், டம்ளர்கள் என சர்வமும் பொன், தங்கம் மயம் தான். இவருடைய காலத்தில் வெள்ளியெல்லாம் மதிக்கப்படவே இல்லை. கற்களைப் போல கிடந்தது என்கிறார்கள். அடேங்கப்பா இப்படியெல்லாமா என வியக்குமளவுக்கு இருக்கிறது அவருடைய செல்வங்களின் பட்டியல்.

எருசலேம் கோயிலைக் கட்டியது சாலமோன் மன்னன் தான். இறையச்சத்திலும் ஞான மார்கத்திலும் நிலைத்திருந்த மன்னன் பின்னர் வழுவிப் போனார். அவருக்கு 700 மனைவிகளும், 300 சின்ன வீடுகளும் இருந்தன என்பது கணக்கு ! அந்த தலையணை மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டு கடைசியில் வேற்று தெய்வங்களை வழிபட்டுப் போன வரலாறு அவருடையது.

செல்வச் செழிப்பில் வாழ்ந்து வந்த சாலோமோன் மன்னன், தன்னையும் தன் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களையும் கண்காணிக்க மட்டுமே 550 பேரை பணியில் அமர்த்தியிருந்தார்.

அறிவில் சிறந்து விளங்கிய சாலமோன் மன்னன் மூவாயிரம் நீதி மொழிகளைச் சொல்லியிருக்கிறார். ஆயிரத்து ஐந்து பாடல்கள் எழுதியிருக்கிறார். என புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

 

Posted in Articles

சிறுவர் மறைக்கல்வி : யோசியா மன்னன்

Image result for king josiah bibleமுன்னுரை:

எட்டு வயதில் ஒரு சிறுவன் என்னவாக முடியும் ? நான்காம் வகுப்போ ஐந்தாம் வகுப்போ படிக்கலாம். சில போட்டிகளில் பரிசுகள் வாங்கலாம். மழலைத் தனம் மாறாமல் விளையாடித் திரியலாம். யோசியா வின் வாழ்க்கை ரொம்பவே வித்தியாசமானது ! அவர் எட்டாவது வயதில்        ! அவருடைய வாழ்க்கை பல வித்தியாசமான சிந்தனைகளை நமது மனதில் எழுப்புகிறது ! அதைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

பொருளுரை

தாவீது மன்னனின் வழியை அப்படியே ஏற்றுக் கொண்டு நடந்த மன்னன் தான் யோசியா.  எட்டு வயதில் ஆட்சி இருக்கையில் ஏறிய அவர் முப்பத்தோரு ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தார்.

கடவுளின் வழியில் செல்பவராக யோசியா மன்னன் இருந்தார். கடவுளின் ஆலயத்தில் வேலை செய்பவர்களிடம் பணத்திற்கான கணக்கைக் கூட கேட்க விரும்பாதவர். அந்த அளவுக்கு இறைபணி செய்பவர்கள் மேலும் நம்பிக்கை வைத்திருந்தவர். ( 2 அரசர் 22 : 7).

ஆனால் மக்கள் கடவுளின் வழியை விட்டு விலகி வேறு தெய்வங்களை நாடிச் செல்லலானார்கள். அது மன்னனைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது. பதினாறு வயது இளைஞனாக அவர் இருந்த போது இஸ்ரயேலில் இருந்த பாகாலின் பலிபீடங்கள், சிலைகள், கம்பங்கள் என அனைத்தையும் அழித்து நகரைத் தூய்மைப்படுத்தினார் ( 2 குறி 34 : 3-8 ). மக்கள் படைத்தவரை விட்டு விட்டு படைப்புகளான சூரியன், நிலா,  விண்மீன்கள், பாகால் என எல்லாவற்றுக்கும் தூபம் காட்டி வழிபட்டு வந்தனர்.

நகர் தூய்மையானதால் மன்னன் மகிழ்ந்தான். தனக்கு 26 வயதாக இருக்கும் போது எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான். வரலாற்றுக் கணக்கின் படி சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆலயம் புதுப்பிக்கப் படுகிறது. அந்த முயற்சியின் போது தான் மோசேயின் திருச்சட்ட நூல் கண்டு பிடிக்கப்பட்டது !

திருச்சட்ட நூல் மன்னனின் பார்வைக்குச் சென்றது. மன்னன் அதிலிருப்பதைப் படித்தபோது ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். ஆடைகளைக் கிழித்துக் கொண்டார். ஆடைகளைக் கிழித்துக் கொள்வது விவிலியத்தில் பல இடங்களில் வருகிறது. அதற்குப் பல அர்த்தங்கள் உள்ளன. துயரத்தை வெளிப்படுத்துவது அதில் ஒன்று. 2 சாமுவேல் 1:11-12 ஐ அதன் ஒரு உதாரணமாகக் கூறலாம். ஆடைகளைக் கிழித்து எறிந்து விட்டு கோணி உடுப்பது அதன் அடுத்த நிலை 2 சாமு 3: 31-32 ல் இதைக் காணலாம்.

இன்னொரு அர்த்தம் மனம் திரும்புவது. தனது பாவ வழிகளை உணர்ந்து கொண்ட மக்கள் ஆடைகளைக் கிழித்து விட்டு மனம் மாறுவது இன்னொரு அர்த்தம், 2 அரசர் 26 :30 ஒரு சான்று. கோபத்திலும் ஆடைகளைக் கிழிக்கும் வழக்கம் இருந்ததை பைபிள் நமக்குச் சொல்கிறது. “உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, ‘ இவன் கடவுளைப் பழித்துரைத்தான்” எனும் மத்தேயு 26 :65 இதை விளக்குகிறது.

யோசியா மன்னன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டது, பாவத்தில் விழுந்து விட்டதன் துயரமும், மனம் திருந்த வேண்டும் எனும் ஆர்வமுமே.

இஸ்ரயேல் மக்கள் கடவுளின் வழியை விட்டு விலகுவதும், பிறகு மனம் திருந்தி மக்கள் அபயக் குரல் எழுப்புவதும், கடவுள் மனம் திருந்தி அவர்களை மீட்பதும் மோசேயின் யாத்திராகமம் தொடங்கி காலம் தோறும் நடந்து கொண்டே இருக்கிறது. இங்கும் அதே நிலமை.

கடவுள் மனமிரங்கினார். மன்னனின் மனமாற்றத்தால் அவனுக்கு மீட்பு கிடைக்கிறது. ஆனால் கடவுளின் கோபம் மக்களின் மீதிருந்து தணியவில்லை.

யோசியா மன்னன் உண்மையான கடவுளைத் தவிர மற்றவர்களுக்கு ஆராதனை செய்த அனைவரையும் நீக்கி விட்டான். எல்லாரையும் ஆண்டவரின் ஆலயத்துக்கு வரவழைத்து உடன்படிக்கையின் படி நடப்பதாய் கடவுளிடம் வாக்குக் கொடுத்தான்.

யோசியாவின் வாழ்க்கை பல பாடங்களை நமக்குச் சொல்லித் தருகிறது.

முதலாவது, கடவுளின் வழியை விட்டு விலகிச் சென்றால் அழிவு வரும் என்பதை யோசியாவின் வரலாறு விளக்குறது.

இரண்டாவது, தலைவர் என்பவர் தாழ்மையுடையவராக இருக்க வேண்டும் எனும் பாடம். யோசியா மன்னன், கடவுளின் சட்டங்களைக் கேட்டதும் ஆடைகளைக் கிழிக்கிறார். தனது பதவி, பட்டம், அலங்காரம் எல்லாம் தேவையற்றவை கிழிபடவேண்டியவை என்று மனத் தாழ்மை கொள்கிறார்..

மூன்றாவது, தலைவர் மட்டும் நல்லவராய் இருந்தால் அவருடைய சபையோ, கூட்டமோ மீட்கப்பட வேண்டுமென்பதில்லை என்பதையும் யோசியாவின் வாழ்க்கை விளக்குகிறது. “ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.” எனும் 2 கொரி 5:10 அதையே வலியுறுத்துகிறது.

முடிவுரை

யோசியா வாழ்ந்த காலத்தைப் போன்ற ஒரு பாவமான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த பாவம் நம்மை சாவுக்கு இட்டுச் செல்லும் என்பதை உணர்வோம்.

தனது பதினாறாவது வயதிலேயே இறைவனைத் தேடிய யோசியா போல நாமும் நமது இளவயதிலேயே இறைவனைத் தேடுவோம். அப்போது தான் ஒரு முழுமையான வாழ்க்கை நம்மால் வாழ முடியும்.

யோசியாவைப் போல உண்மை அறிந்ததும் சட்டென கடவுளிடம் சரணடைவோம். ஆடைகளை அல்ல ஆன்மாவைக் கிழித்து இறைவனில் இணைவோம்.

 

Posted in Articles

இறக்க வேண்டியவையும், உயிர்க்க வேண்டியவையும்.

Image result for easter religious

‍‍

நம் எல்லோரிடமும் ஒவ்வொரு கோப்பை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். நீண்ட நாட்களாக அதைப் பயன்படுத்தி வருகிறோம். தண்ணீர் குடிக்க, டீ குடிக்க, ஜூஸ் குடிக்க என அனைத்திற்கும் அதைப் பயன்படுத்துகிறோம்.

“எல்லாரும் அவரவர் கோப்பையை எடுத்துட்டு வாங்க, ஸ்பெஷல் டீ ரெடியாக இருக்கிறது” என்று ஒரு நால் திடீரென‌ அழைப்பு வந்தால் என்ன செய்வோம் ? நமது கோப்பையை எடுத்து நன்றாகக் கழுவி ரெடி பண்ணிவிட்டு டீ நிரப்ப வருவோம்.

கழுவாமல் அழுக்கேறிக் கிடக்கும் கோப்பையில் யாரும் டீ ஊற்றுவதில்லை. ஊற்றினாலும் அது அழுக்குடன் கலந்து குடிக்க முடியாமல் வீணாகும்.

வெறுமனே கோப்பையைக் கழுவி வைத்தாலும் பயனில்லை, டீயை ஊற்றினால் தான் குடிக்க முடியும். உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.

இந்த கோப்பையைப் போன்றது தான் நமது இதயம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இதயம் இருக்கிறது. அதில் எதையெதையோ இட்டு நிரப்புகிறோம். எதற்கெல்லாமோ பயன்படுத்துகிறோம். சிலரது கோப்பை சரியாகப் பராமரிக்கப்பட்டு தூய்மையாய் இருக்கிறது. சிலருடைய கோப்பை அழுக்கேறிக் கிடக்கிறது.

இந்த உயிர்ப்பின் வழியாக இறைமகன் இயேசு, புது வாழ்வு எனும் பானத்தை நமது இதயங்களில் ஊற்ற அழைக்கிறார். அந்த பானத்தை நிரப்பிக் கொள்ள வேண்டுமெனில் முதலில் நமது இதயத்தின் துருக்களை துரத்தவேண்டும். பின்னர் தூய்மையாக்கப்பட்ட இதயத்தில் இறைவனின் புதிய வாழ்க்கையை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அழுக்கான இதயம், தூய்மையான இறைவனை ஏற்றுக் கொள்வதில்லை. அழுக்குகள் விலக்க வேண்டுமெனில் நாம் நமது பாவத்தை விட்டு விலக வேண்டியது அவசியம். பாவமும், பரிசுத்தமும் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. இருளும் வெளிச்சமும் ஒரே அறையில் கூடிக் குலாவுவதில்லை.

இறைமகன் இயேசு பாடுகளை அனுபவித்து, நமது பாவங்களுக்குப் பலியாய் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்த நிகழ்வை இப்போது நினைவு கூருகிறோம். இந்த காலத்தில் நமது இதயத்தில் இறக்க வேண்டியவை என்ன ? உயிர்க்க வேண்டியவை என்ன ?

1. கால விரயம் இறக்கட்டும், செபம் உயிர்க்கட்டும்!

Image result for praying

இன்றைய தொழில்நுட்ப உலகம் வசீகர வலைகளோடும், விரசக் கண்ணிகளோடும் காத்திருக்கிறது. சமூக வலைத்தளங்கள், உரையாடல் தளங்கள் எல்லாமே ஒரு புதைகுழி போல. இந்தக் குழிக்குள் விழுந்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மூழ்கடித்து விடுகிறது.

“நான் தப்பா எதுவும் பண்ணலையே” என சிலர் சொல்லலாம். ஆனால் சரியானதைச் செய்ய முடியாதபடி இவை உங்களைத் தடுக்கின்றன என்பது தான் நிஜம். எனவே தேவையற்ற கால விரயம் பாவம் என்பதை உணர்வோம். இந்த சமூக வலைத்தளங்கள், உரையாடல் தளங்கள் போன்றவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு, பைபிள் வாசிப்பது, அன்புச் செயல்களில் ஈடுபடுவது என மனதை வளமாக்குவோம்.

செபம் ! சூல் கொண்டு சோகங்களை கால் கொண்டு நசுக்குமிடம். இயேசு தந்தையோடு எப்போதும் செபத்தில் ஒன்றித்திருந்தார். செபத்தில் நிலைத்திருக்கும் போது, நமது நேரங்களெல்லாம் இறைவனுக்காகின்றன. விண்ணக செல்வங்கள் அதிகரிக்கின்றன. நமது வாழ்க்கை பாவத்தின் பரந்த பாதைகளில் நடக்காமல் புனிதத்தின் ஒற்றையடிப்பாதையில் நடக்க செபமே நமக்கு வலிமை தரும்.

2. வெறுப்புகள் இறக்கட்டும், அன்பு உயிர்க்கட்டும்.

Image result for old people love

பிறரோடு கொள்கின்ற விரோதமும், வஞ்சகமும் மிகப்பெரிய பாவச் செயல்கள். சக மனித அன்பை நிராகரிக்கும் செயல்கள் எல்லாமே இறை விரோதச் செயல்களே. பிறரைப் பற்றிய கிசுகிசுப் பேச்சுகளை விட்டு விடவேண்டும். அழுக்குகளை விரும்பித் திணிக்கும் விஷயங்கள் இந்த கிசுகிசுக்கள். அன்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. அடுத்த மனிதரை மட்டம் தட்டி அதன் மூலம் நம்மை உயர்ந்தவர்களாய்க் காட்டும் தற்பெருமை மனநிலை. அதை விலக்கி விடுவோம்.

கிசு கிசு வெறும் பலவீனம் அல்ல ! அது மிகப்பெரிய பாவம். ” உங்களுள் ஒருவர் மற்றவரைப் பழித்துரைக்க வேண்டாம். தம் சகோதரர் சகோதரிகளைப் பழித்துரைப்போர் அல்லது அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்போர் திருச்சட்டத்தைப் பழித்துரைக்கின்றனர்” என மிகத்தெளிவாக விவிலியம் நமக்கு விளக்குகிறது.

பிறரை அன்பு செய்வதில் மன்னிப்பும் அடங்கியிருக்கிறது. மன்னிப்பது என்பது மனதில் வெறுமனே சொல்வதல்ல. அந்த மனிதருடன் ஒப்புரவாவது. இறைமகன் இயேசு யூதாசை “தோழா” என்று தான் கடைசி வினாடியில் கூட அழைத்தார். நாமோ தோழர்களை விரோதிகளாய் பார்க்கிறோம். நம்மிடம் வெறுப்புகள் இறக்க, அன்பு பிறக்கட்டும்.

3. உணவு மோகம் இறக்கட்டும், கனிகள் உயிர்க்கட்டும்.

Image result for feast food

உண்பதையும், குடிப்பதையும் கூட‌ இறை மகிமைக்காகச் செய்ய வேண்டும் என்கிறது பைபிள். சாப்பாட்டு பிரியர்களையும், வயிறை தெய்வமாய் வணங்குபவர்களையும் விவிலியம் இடித்துரைக்கிறது. அவர்களுடைய மீட்பு, இந்த உலக ரசனைகளினால் தடைபடும் ஆபத்து கூட உண்டு. “குடிகாரரோடு சேராதே; பெருந்தீனியரோடு சேர்ந்து கொண்டு அவர்களைப் போலப் புலால் உண்ணாதே” என பைபிள் அறிவுரை தருகிறது.

நமது வாழ்க்கை வெறுமனே பூத்துக் குலுங்கும் வாழ்க்கையாய் இருக்க இறைவன் விரும்பவில்லை. “நீங்கள் பூ கொடுங்கள்” என இயேசு சொல்லவில்லை. “கனி கொடுங்கள்” என்றே சொன்னார். நமது வாழ்க்கை ஆன்மீகத்தில் பூத்துக் குலுங்குவது அழகு நிலை. ஆனால் கனிகளால் நிரம்பி வழிவதே உயர் நிலை !

நமது வாழ்க்கை பிறருக்கு பயனுள்ள வாழ்க்கையாய் இருக்கிறதா ? பிறரை மனிதநேய வழியில் கொண்டு வர உதவுகிறதா ? பிறருடைய பதட்டங்களின் பயணத்தில் ஆறுதல் துடுப்பாய் இருக்கிறதா என்பதை சிந்திப்போம்.

4. பகைமை இறக்கட்டும், மனிதம் உயிர்க்கட்டும்

Image result for humanity

“மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்” என விவிலியம் நமக்கு அறிவுறுத்துகிறது.

மனிதநேயம் இறைவன் நமக்குக் கற்பித்துத் தந்த மிகப்பெரிய பாடம். தன்னைப் போல அயலானை நேசிப்பதில் அடங்கியிருக்கிறது கிறிஸ்தவத்தின் உயர்நிலை. அதையே இறைமகன் இயேசு விரும்பினார், அதையே தனது வாழ்க்கையில் செயல்படுத்தினார். அதனால் தான் கடவுள் தீர்ப்பு நாளில் மனிதநேயம் சார்ந்ததை மட்டுமே கேட்கிறார். “ஏழைகளுக்கு உதவினாயா ? நோயில் ஆறுதலளித்தாயா ? உடுத்தினாயா ? தனிமையில் ஆதரவளித்தாயா?” என்பதையே இயேசு கேட்கிறார்.

சகமனிதனை வெறுத்து விட்டு இறைவனை அன்பு செய்கிறேன் என்பது போலித்தனம். குடும்பத்தை அழ வைத்து விட்டு, இறைவனிடம் தொழ வருவது கயவாளித்தனம். மனிதனை ஏமாற்றலாம் மனுஷ குமாரனை ஏமாற்ற முடியாது ! மனிதம் பயில்வோம், அதுவே உயிர்த்தெழ வேண்டிய முக்கிய தேவை.

5. பாவம் இறக்கட்டும், புனிதம் உயிர்க்கட்டும்.

Image result for dont sin

பாவம் தவிர்த்தல் கிறிஸ்தவத்தின் அடிப்படை. கறைகளை நமது இதயத்திலிருந்து அகற்ற கொஞ்சம் கொஞ்சமாய் பாவ வாழ்க்கையை விட்டு விலக வேண்டும். முதலில் இறைவன் சொன்ன நமக்கு தெளிவாய் தெரிந்த பாவங்களை விட்டு விலக வேண்டும். உதாரணமாக இச்சை, பண ஆசை, கோபம் போன்றவை. அதன் பின் இறைவன் படிப்படியாக நம்மிடமிருக்கும் மற்ற சிறு பாவங்களை அடையாளம் காட்டுவார்.

இருட்டில் இருந்து பார்த்தால் சட்டையில் இருக்கும் கருப்புப் புள்ளை தெரிவதில்லை. அதே போல பாவத்திலிருந்து பார்த்தால் நமது வாழ்க்கையில் இருக்கும் கறைகள் தெரிவதில்லை. வெளிச்சத்துக்கு வருவோம். வெளிச்சமாகிய இறைவன் நமது வாழ்க்கையிலிருக்கும் பாவங்களை கொஞ்சம் கொஞ்சமாய் நமக்கு அடையாளம் காட்டுவார். அவற்றை உடனடியாக நம் வாழ்விலிருந்து விலக்குவோம். படிப்படியாய் இறைவனைப் போலாக முயல்வோம். புனிதம் அணிவோம்.

கோபம் மிகப்பெரிய பாவம் என்கிறார் இயேசு. சகோதரன் மீது கோபம் கொள்பவன் எரிநரகத்தில் எறியப்படுவான் என அவர் தீர்க்கமாய் சொன்னார். கோபத்தின் குழந்தையே பல்வேறு பாவச் செயல்களாக வெளியே வருகிறது. கவலை கொள்வது இறைவன் மீதான நம்பிக்கை நீர்த்துப் போவதன் அடையாளம். தனது தந்தையின் கைப்பிட்டிக்குள் இருக்கும் குழந்தை கவலைப்படுவதில்லை. பிடியை விட்டு விட்டால் பிடிமானம் இல்லாமல் அது கலங்கிக் கதறும். கடவுளிடம் நாம் பிடியை அழுத்தமாய் வைத்திருந்தால் கவலை நம்மை சேர்வதே இல்லை.

எனவே இந்த உயிர்ப்பு காலத்தில் இதயத்தை அலசி ஆராய்வோம். கறைகளை அகற்றுவோம், அன்பைபும் மனிதநேயத்தையும் நிரப்புவோம்.

சிலுவையோடு சேர்ந்து பாவங்களும் இறக்கட்டும்,
இயேசுவோடு சேர்ந்து மனிதம் நம்மில் உயிர்க்கட்டும்.

*

Thanks : Vettimani, London & Germany

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 9 : கை சூம்பியவரை குணமாக்குதல்

இயேசு செய்த புதுமைகள் 9 : கை சூம்பியவரை குணமாக்குதல்

Image result for jesus heals the man with withered hand painting

லூக்கா 6 : 6..11

மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்.

இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து நடுவே நில்லும்!” என்றார். அவர் எழுந்து நின்றார்.

இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார்.

பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!” என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

*

இயேசு தொழுகைக்கூடத்திற்கு வந்து கற்பிக்கிறார். அப்போது அங்கே இருந்த வலக்கை சூம்பிப் போன நபரை குணமாக்குகிறார். இதைக் கண்ட பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் இயேசுவின் மீது கொலை வெறி கொள்கின்றனர்

இயேசு செய்த சின்ன அதிசயங்களில் ஒன்று இது. ஆனால் இந்தப் பகுதியும் நமக்கு பல்வேறு ஆன்மீகப் புரிதல்களைத் தருகிறது.

1. இயேசு ஓய்வுநாளை அதற்குரிய புனிதத்துடன் அனுசரிக்கிறார். ஓய்வுநாளை இறைவன் படைத்தது மனிதனுடைய உலக வேலைகளிலிருந்து தற்காலிக ஓய்வு கொடுக்க. அந்த ஓய்வு நாள் தனக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும், வலுப்படுத்திக் கொள்ளவும் பயன்பட வேண்டும் என இயேசு விரும்புகிறார். அவர் எல்லா ஓய்வுநாட்களிலும் ஆலயத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆலயத்தில் தனக்கு வரவேற்பு இருக்காது என்பது தெரிந்தாலும் அவர் ஆலயத்துக்குச் செல்வதை நிறுத்தவில்லை. காரணம் ஆலயம் என்பது இறைவனுக்கும் தனக்குமான‌ தனிப்பட்ட உரையாடல் என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். கூடவே ஏழை எளிய மக்களோடு உறவாடவும், இறையரசைப் பற்றி அறிவிக்கவும் அவர் ஆலயத்திற்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

நமது வாழ்க்கையில் நாம் ஓய்வுநாளை இறைவனோடு செலவிடுகிறோமா ? அன்றைய தினம் விடுப்பில் இருக்கிறோம், ஆனால் இறைவனோடு இருக்கிறோமா ? ஆலயத்தில் நம்மை வரவேற்கும் மக்கள் இல்லாவிட்டாலும் நாம் ஆலயத்துக்கு வருகிறோமா ? நம்மீது குறை கண்டுபிடிக்கும் மக்கள் நிரம்பியிருந்தாலும் நாம் ஆலயத்துக்கு வருகிறோமா ? எனும் சிந்தனையை நமக்குள் எழுப்புவோம். ஆலயம் என்பது இறைவனோடு இணைந்திருக்கும் தருணம். பிறருடைய விமர்சனங்களுக்காக நாம் இறைவனோடு கொண்ட உறவை பலவீனப்படுத்தாமல் இருப்போம்.

2. இயேசுவின் மீது குறை கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காகவே கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் காத்திருந்தது ஒரு கூட்டம். அவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என காத்திருந்தது இன்னொரு கூட்டம். அவரிடமிருந்து நல்ல போதனைகளைப் பெற வேண்டும் என காத்திருந்தது பிறிதொரு கூட்டம். இப்படி ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் இயேசுவிடமிருந்து ஒவ்வொரு எதிர்பார்ப்புகள். அவரை ஒரு மேஜிக் மேனாகவோ, செலிபிரடியாகவோ நினைத்தும் மக்கள் அவரைத் தேடி வந்தார்கள்.

நாம் இயேசுவை எப்படி அணுகுகிறோம் ? இயேசு என்றால் பாவங்களிலிருந்து மீட்பவர் என்று பொருள். நாம் நமது பாவங்களிலிருந்து விடுதலை பெற இயேசுவை அணுகுகிறோமா ? அல்லது அவரிடமிருந்து உலக ஆசீர்வாதங்களைப் பெறவேண்டுமென நெருங்குகிறோமா ? அல்லது அவரை ஒரு சிந்தனை வாதியாக, ஒரு இறைவாக்கினராக சுருக்கி விடுகின்றோமா ? சிந்திப்போம். அவர் இறைவன் என்பதை மட்டுமே மனதில் இருத்துவோம்.

3. அங்கே இருந்த மனிதர் ஒருவருக்கு வலது கை சூம்பிப் போன நிலையில் இருந்தது. வலது கை சூம்பிப் போனால் ஒரு மனிதன் முக்கியமான மூன்று வேலைகளைச் செய்ய முடியாது. ஒன்று, உழைத்தல். தனது வாழ்க்கைக்கான உழைப்பை அவனால் செலவிட முடியாது. இரண்டு, துதித்தல். இறைவனை போற்றிப் புகழவும், பாடவும், கைகள் தட்டி ஆராதனை செய்யவும் அவனால் முடியாது. மூன்று, அரவணைத்தல். பிறரை அன்புடன் அரவணைக்க அவனால் முடியாது ! இந்த மூன்று விஷயங்களையும் செய்ய விடாமல் அவனது குறைபாடு தடுத்தது.

நமது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயம், ஒரு பாவம் நம்மை இந்த விஷயங்கள் செய்ய விடாமல் தடுக்கலாம். அதை இறைவன் சரிசெய்ய வல்லமை உடையவராக இருக்கிறார்.

4. சூம்பிய கை மனிதரை இயேசு ஏன் சுகமாக்குகிறார் ? ஒரு வார்த்தையில் விடை சொல்ல வேண்டுமெனில் “அன்பினால்” என சொல்லலாம். இயேசுவின் அன்பு அந்த நபரைக் கண்டவுடன் செயல்வடிவம் பெறத் துடித்தது. அவருடைய அன்பினை அடக்கி வைக்க எந்த தாழ்ப்பாளும் கிடையாது ! அன்பு என்பது அளந்து கொடுப்பதல்ல, அளவில்லாமல் கொடுப்பது. நாள் கிழமை பார்த்து கொடுப்பதற்கு அன்பு ஒன்றும் மாத ஊதியம் அல்ல. அன்பு என்பது பொங்கிப் பிரவாகம் எடுப்பது, சொட்டுச் சொட்டாய் வடிவதல்ல. அன்பு என்பது அடைமழை போன்றது, அது சாரலோடு சமரசம் செய்து கொள்வதல்ல.

ஓய்வு நாள் என்பது இறைவனோடு இருப்பது. இறைவனோடு இருப்பது என்பது அன்போடு இருப்பது. அன்போடு இருப்பது என்பது அன்பின் செயல்களோடு இருப்பது. வாரத்தின் ஏழு நாட்களும், நாளில் 24 மணி நேரங்களும் நாம் அன்பில் இருக்க வேண்டும். அன்பை தள்ளி வைக்கக் கூடாது, அள்ளி வைக்க வேண்டும். அன்பை தள்ளி வைப்பது என்பதும், மனிதத்தைக் கொள்ளி வைப்பது என்பதும் ஒன்று தான். நமது வாழ்க்கையில் அன்பினை எந்த கணமும் வழங்க தவறாமல் இருப்போம். பிறர் கேட்டால் மட்டுமல்ல, கேட்காமலும் வழங்குவோம்.

5. “ஓய்வு நாளில் எது செய்வது முறை ? நன்மை செய்வதா ? தீமை செய்வதா ? ” என இயேசு கேட்கிறார். பதில் எல்லோருக்குமே தெரியும். சட்டங்களை முழுமையாக அறிந்த, கடவுளைப் பற்றி காலா காலமாய் படித்து வருகின்ற மறை நூல் அறிஞர்களும், பரிசேயத் தலைவர்களும் அமைதியாய் இருக்கின்றனர். உண்மையை அறிந்திருந்தும் அதை பேசாமல் இருப்பது பொய் பேசுவதற்கு சமம். நன்மை செய்ய அறிந்திருந்தும் செய்யாமல் இருப்பதும் பாவம் என்றெல்லாம் நமக்கு விவிலியம் போதிக்கிறது. ஆனால் சுற்றி இருந்தவர்கள் அமைதியாய் இருக்கின்றனர். ‘நீ நேற்று வந்தவன், நாங்கள் இந்தத் தொழுகைக் கூடத்தின் மூத்த தலைவர்கள்” எனும் இறுமாப்பு கூட இருந்திருக்கலாம். அவர்கள் அமைதி காத்தார்கள். இயேசுவின் கேள்விக்கு ஒரு பதிலைக் கூடச் சொல்லாமல் அதிகபட்ச உதாசீனத்தை வெளிப்படுத்தினார்கள். அப்போது இயேசு சினத்துடன் அவர்களை பார்க்கிறார்.

இயேசுவின் சினம் விவிலியத்தில் சில இடங்களில் தான் வெளிப்படுகிறது. இறைவனின் ஆலயத்தின் புனிதம் கெட்டபோது அவர் சவுக்கால் அடித்து விற்பனையாளர்களை விரட்டினார். ஏழைகளை ஒடுக்கும் சூழலையும், மனிதம் மறுக்கப்படும் சூழலையும் கண்டபோதெல்லாம் அவர் சினமடைந்தார். தனது மீட்பின் திட்டத்துக்கு எதிரே நண்பரே வந்தாலும், “அப்பாலே போ சாத்தானே” என சினமடைகிறார். ஆனால் எந்தக் காலத்திலும் இயேசுவின் சினம் சுயநலத்துக்காகவோ, எளியவர்களின் அறியாமைக்காகவோ, திறமையின்மைக்காகவோ எழுந்ததே இல்லை. சினம் தவிர்க்கப்பட வேண்டிய தருணங்கள் எவை ? சினமடைய வேண்டிய தருணங்கள் எவை ? என்பதையெல்லாம் இயேசுவின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்.

6. மக்களுடைய பிடிவாத மனதைக் கண்டு இயேசு வருந்துகிறார். கோபமும், வருத்தமும் இயேசுவோடு இணைந்தே பயணிக்கின்றன. மக்கள் மனித நேயமில்லாமல் இருக்கிறார்களே என கோபமடைகிறார். இதன் மூலம் தங்களுடைய மீட்பை இழந்து விடுவார்களே என வருந்துகிறார். இறைவனுடைய வார்த்தையை கேட்கும் போதெல்லாம் நாம் அதை நிராகரிக்கத் துவங்கினால் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் கடினமடையும். இறுகத் துவங்கும். காலப்போக்கில் நமது இதயம் இறுகிப் போய் இறை வார்த்தைகள் சற்றும் சலனப்படுத்தாமல் சென்று விடும். அப்போது நாம் கடின இதயம் உடையவர்களாக மாறிப் போய்விடுவோம். எத்தனை விதைகள் விழுந்தாலும் வேர் இறக்க முடியாத பாறையைப் போல இதயம் மாறிவிடும்.

கடின இதயம் இறைவனின் மீட்பை விட்டு நம்மை விலக்கி விடும். இறைவன் நமக்காய் வைத்திருக்கும் இறையரசை நாம் பெற்றுக் கொள்ளாமல் இருக்க கடின இதயம் காரணமாகிவிடும். மக்களின் கடின இதயம், இயேசுவின் இதயத்தை இளக்கியது. அவர் வருந்தினார். நாம் நமது இதயத்தைக் கடினப்படுத்தாமல் காத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இறை வார்த்தைகளுக்கு செவி கொடுப்பவர்களாகவும், இறை வார்த்தையைச் செயல்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும்.

7. “கையை நீட்டும்” என்றார் இயேசு ! கொஞ்சம் வியப்பான விஷயம். எது அவனால் செய்ய முடியாதோ, அதைச் செய்யச் சொல்கிறார் இயேசு. சூம்பிப் போய் நீட்ட முடியாத கை அது. நீட்டு என்றார். படுக்கையோடு கிடந்த ஒருவனை எழும்பு என்றார். கூனியை நிமிர் என்றார். எது முடியாது என மனிதர் நினைக்கின்றனரோ அதைச் செய்யச் சொல்கிறார் இயேசு. ‘இதெல்லாம் முடியாது’ என முடங்குபவர்கள் இறைவனின் அற்புதத்தைக் காண முடியாது. அவரது அழைப்பை ஏற்று அதன்படி செயல்படுபவர்களே அதிசயங்களைக் காண்பார்கள். அந்த சூம்பியக்கை மனிதர் கையை நீட்டாமல் இருந்திருந்தால் அப்படியே தான் இருந்திருப்பார். கையை நீட்டியதால் முழுமை அடைந்தார்.

நாமும் நமது வாழ்வில் பல ஆண்டுகளாக விட முடியாத ஏதேனும் ஒரு பாவம் இருக்கலாம். அது விடவே முடியாது என நாம் நினைக்கலாம். ஆனால் அதைத் தான் இயேசு விடச் சொல்கிறார். இயேசு சொல்லும் போது அதை நாம் நம்பி விட்டு விட முன்வரும் போது அதை முழுமையாய் விலக்க முடியும். இதையெல்லாம் விடவே முடியாது என நினைத்தால் நமது பாவம் விட்டு விட முடியாததாகி நம்மோடு பின்னிப் பிணைந்து விடும்.

8. சூம்பியக் கை அவனுடைய உடலோடு தான் இருந்தது. ஒரு பாகமாகத் தான் இருந்தது. ஆனால் அது முழுமையாய் இல்லை. குறைபாடுள்ளதாய் இருந்தது. அந்தக் குறைபாட்டை இயேசு நிவர்த்தி செய்கிறார். நமது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு ஆன்மீகக் குறைபாடு நம்மிடம் இருக்கலாம். அது நம்மை மற்ற உறுப்புகளைப் போல, அல்லது இயேசு எனும் திராட்சைச் செடியின் மற்ற கிளைகளைப் போல பயன் தர முடியாமல் போகலாம். அதை இயேசு சரி செய்தால் நாம் ஆன்மீக வளர்ச்சி அடைந்து முழுமை பெறுவோம்.

நம்மிடம் குறைபாடு இருக்கிறது என்பதை மறைக்காமல் இயேசுவிடம் வந்தாலே போதும் அவர் அதை சரி செய்கிறார். சூம்பியக்கையை அந்த மனிதர் மறைத்து வைத்திருந்தால் இயேசு அங்கே அதிசயங்களைச் செய்திருக்க மாட்டார். நமது தேவைகளை இறைவனின் பார்வையில் வைப்போம்.

9. சூம்பியக் கை என்பது உயிர் போகும் விஷயமல்ல. நாளையோ, நாளை மறுநாளோ கூட நலமாக்கலாம். அவசரமில்லை. அன்றைய தினம் ஓய்வுநாள். ஓய்வுநாள் முடிந்தபின்பு கூட சரிசெய்யலாம். ஆனால் இயேசுவோ அத்தகைய தேவையற்ற கட்டுப்பாடுகளுக்குள் விழவில்லை. ஒரு நபருக்குத் தேவை இருக்கிறது என்பதை அறிந்ததும் உதவுகிறார். குழியில் விழுந்த ஆடுமாடுகளை தூக்கி விடும் பரிசேயத்தனம், நோயில் விழுந்த மனிதனை தூக்கி விடுவதை எதிர்க்கிறது. இது போலித்தனம் என்பதை இயேசு தனது செயல் மூலம் வெளிப்படுத்துகிறார்.

நமது வாழ்வில் நமக்குத் தெரிந்த எத்தனையோ நபர்கள் தேவையில் இருக்கிறார்கள்.அவர்களுக்கு தேவை இருக்கிறது என்பதை நாம் உணர்கிறோம். அவர்களுக்கு உடனே நாம் உதவுகிறோமா ? அடுத்த வாரம் பாத்துக்கலாம் என உதாசீனம் செய்கிறோமா ? அடுத்தவர்கள் மீது வரவேண்டியது பரிதாபமல்ல, பாசம். அலட்சியமல்ல அன்பு ! மனதை பரிசீலனை செய்வோம்.

10. பரிசேயர்கள் இயேசுவின் மீது கொலை வெறி கொள்கின்றனர். கடவுளைப் பற்றி அறிந்தவர்கள் கடவுளையே கொலை செய்ய முயல்கின்றனர். இயேசுவின் மீது அன்பு கொள்ளலாம், அல்லது அவரைக் கொலை செய்யலாம் அவ்வளவு தான். ‘என்னை அன்பு செய்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிப்பான்’ என்கிறார் இயேசு. அன்பு செய்யாதவன் அதை மீறுகிறான். அது பாவமாகிறது. பாவம் இயேசுவைச் சிலுவையில் அறைகிறது. எனவே தான் சொன்னேன், இயேசுவை அன்பு செய்யலாம் அல்லது கொலை செய்யலாம். நாம் என்ன செய்கிறோம் ? நம் பாவத்தால் அவரை வீழ்த்துகிறோமா ? அன்பினால் அவரை வாழ வைக்கிறோமா ?

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.