Posted in Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 10 : நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைதல்

இயேசு செய்த புதுமைகள் : நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைதல்

லூக்கா 7 : 1 முதல் 10 வரை

Related image
இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.

அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார். அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.

இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்; “ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.

நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்.”

இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, “இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.

Image result for jesus heals centurion's son painting

நூற்றுவர் தலைவன் என்பவன் குறைந்தபட்சம் நூறு படை வீரர்களின் தலைவன். ரோம அரசைச் சார்ந்தவர். ரோமர் இனத்தைச் சேர்ந்தவர். அவர் யூதரான இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கிறான். அதுவும் இயேசு ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும் அவரது ஊழியர் குணமாவார் எனும் நம்பிக்கை.

அந்த நம்பிக்கை இயேசுவை வியப்புக்குள்ளாக்கியது. அவர் அந்த ஊழியனை ஒரு வார்த்தை கூட வெளிப்படையாய் சொல்லாமல் குணமாக்குகிறார் !

இந்த நிகழ்வு பல ஆன்மீகச் சிந்தனைகளை நமக்குத் தருகிறது.

1. அந்த நூற்றுவர் தலைவன் ஒரு சிறந்த மனிதனாக காட்சியளிக்கிறார்.

முதலாவதாக, இன பேதத்தை அவர் கடக்கிறார். தான் ஒரு ரோமர், இயேசு ஒரு யூதர் எனும் எல்லைகளைக் கடக்கிறார். யூத மக்களோடு தொடர்பில் இருக்கிறார். யூதர்களுக்கு நன்மைகள் செய்கிறார்.

இரண்டாவதாக, பொருளாதார பேதங்களைக் கடக்கிறார். தனது வீட்டில் பணி செய்யும் ஒரு வேலைக்காரனுக்காக தனது நிலையை விட்டு இறங்கி வருகிறார். தனது வேலைக்காரருக்கு, தானே வேலைக்காரனாய் மாறிப் போகிறார்.

மூன்றாவதாக தனது அந்தஸ்து, புகழ் போன்றவற்றைக் கடக்கிறார். அனைத்தையும் விட்டு விட்டு ஒரு ஏழை ஊழியனுக்காக மனமிரங்கி வருகிறார். தனது அந்தஸ்துக்கு சரிக்குச் சமமானவர்களை மட்டுமே மக்கள் மதிப்பது வழக்கம். இங்கே நூற்றுவர் தலைவன் அந்த மதில் சுவரையும் உடைக்கிறார்.

நான்காவதாக‌, மத பேதங்களைக் கடக்கிறார். யூத மதத்தையும், யூத கடவுளையும் மதித்து அவர்களுக்காக தொழுகைக் கூடம் கட்டிக் கொடுக்கிறார்.

இப்படி பல வகைகளில் அன்பும், ஈகையும், சமத்துவமும் கலந்த ஒரு நல்ல பண்புடைய மனிதராக அவர் காட்சியளிக்கிறார்.

2. யூதர்களின் தலைவர்களோடு அவருக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. யூதத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். எனவே தான் இயேசுவிடம் பரிந்துரை செய்ய அவர் யூத மதத் தலைவர்களை அணுகுகிறார். அவர்களும், இயேசுவிடம் வந்து அவருக்காகப் பரிந்துரை செய்கின்றனர்.

இயேசுவை நேரில் சந்திக்க தனக்கு அருகதையில்லை என்று நம்பியதால் அந்த நூற்றுவர் தலைவர் யூதத் தலைவர்களை அணுகினார். பின்னர் நண்பர்களை அனுப்பினார். இன்றைய சூழலில் நாம் இறைவனிடம் நேரடியாகவே நமது விண்ணப்பங்களை வைக்க இறைவன் நமக்கு உரிமை அளித்திருக்கிறார். இயேசுவின் உயிர்ப்பு நமக்கு அந்த வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கிறது. நம்முடன் கூடவே பயணிக்க‌ தூய ஆவியானவரை இயேசு தந்திருக்கிறார்.

3. யூதத் தலைவர்கள் நூற்றுவர்த் தலைவனை எப்படிப் பார்த்தார்கள் என்பது வியப்பான விஷயம். நூற்றுவர் தலைவனை அவர்கள் அன்பானவராகப் பார்த்தார்கள். ரோமர்களுக்கும், யூதர்களுக்கும் எப்போதுமே பனிப்போர் தான் நடக்கும். வெறுப்பு தான் உமிழப்படும். ஆனால் இவரை அவர்கள் அன்பானவராகப் பார்த்தார்கள்.

தொழுகைக் கூடம் கட்டிக் கொடுத்த பெருந்தன்மை உடையவராகப் பார்த்தார்கள். ஈகைக் குணம் அவருக்கு இருந்தது என்பதை இயேசுவிடம் சொல்கின்றனர். மிக முக்கியமாக, இயேசுவிடமிருந்து நன்மைகள் பெற, “தகுதியானவராக” பார்த்தார்கள். இப்படி அவரைப்பற்றிய புகழுரைகளை இயேசுவிடம் எடுத்து வைத்தார்கள்.

நாம் ஒரு நபருக்காக‌ இயேசுவிடம் வேண்டும்போது என்ன செய்கிறோம் ? அந்த நபருடைய நல்ல குணாதிசயங்களைப் பட்டியலிட்டு, அவர் இயேசுவின் இரக்கத்துக்கு, “தகுதியானவர்” என சான்றளிக்கிறோமா ? அது தவறு ! தகுதியற்ற நமக்குத் தரப்படுவது தான் இறைவனின் இரக்கமும், கிருபையும். எனவே எனக்குத் தகுதி இருக்கிறது, அடுத்தவருக்குத் தகுதி இருக்கிறது என நாம் இயேசுவிடம் சொல்லாதிருப்போம். தகுதியற்ற எமக்கு இரக்கம் தாரும் என இறைஞ்சுவோம்.

4. நூற்றுவர் தலைவரைப் பற்றி மற்றவர்கள் புகழ்ந்து சொன்னது இயேசுவை வசீகரித்திருக்க நியாயமில்லை. ஆனாலும் ஊழியனுக்காக தலைவர் கொண்ட‌ மனதுருக்கம் அவரை வசீகரித்திருக்க வேண்டும். அவர் அவர்களோடு சென்றார்.

நாம் இயேசுவிடம் வேண்டுகின்ற முறை தவறாக இருந்தால் கூட, மனம் சரியாக இருந்தால் இயேசு மனமிரங்குகிறார். இப்படித் தான் கேட்கவேண்டுமென அவர் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு கேட்கவேண்டும் என விரும்புகிறார்.

5. அந்த நூற்றுவர் தலைவனோ, தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்கிறான். அவன் தனது ஈகையையோ, தொழுகைக் கூடம் கட்டியதையோ, அன்பாய் நடந்து கொள்வதையோ, தனக்கு தகுதி உண்டு என்பதையோ அவன் முன்னிலைப்படுத்தவேயில்லை. மாறாக இறைவன் முன்னால் தன்னைப் பற்றிச் சொல்லும் போது தகுதி என்பது அறவே இல்லாத மனிதராக தன்னை வெளிப்படுத்துகிறார்.

தான் தகுதியானவர் என நினைக்கும்போது ஒருவர் தகுதி இழக்கிறார்.
தனக்குத் தகுதி இல்லை என ஒருவர் நினைக்கும் போது தகுதி பெறுகிறார்.

தான் தாழ்மையானவன் என நினைக்கும் போது ஒருவனுக்குள் கர்வம் வருகிறது
தான் கர்வமானவனோ என கலங்கி இறைவனிடம் வருகையில் அவனுள் தாழ்மை எழுகிறது.

கிறிஸ்தவத்தின் வியப்பான கதை இது ! நாம் இறைவனிடம் வரும் போது உலக சாதனைகளின் பட்டியலோடு அல்ல, நமது பலவீனத்தின் யதார்த்தத்தோடு வருவோம்.

6. நூற்றுவர் தலைவன் அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதையும், அதிகாரத்தால் சாதிக்க முடிவதையும் அறிந்திருந்தான். அவனுக்குக் கீழே இருக்கும் படை வீரர்களைப் பார்த்து போ என்றால் போவார்கள், வா என்றால் வருவார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால் அவனால் ஊழியரின் நோயைக் குணமாக்க‌ முடியவில்லை. காரணம் அதற்கான அதிகாரம் அவனிடம் இல்லை. ஆனால் அந்த அதிகாரம் இயேசுவிடம் உண்டு என்பதை அவன் நம்பினான். இயேசுவின் ஒற்றை வார்த்தை போதும் என்பதை ஆழமாக விசுவசித்தான்.

7. இயேசு அவனுடைய விசுவாசத்தை வியந்தார். தான் போதிக்காத, புதுமைகள் செய்யாத பிற இன மனிதனின் விசுவாசம் அவரை வியப்பில் ஆழ்த்தியது. விவிலியத்தில் இரண்டு முறை தான் இயேசு “வியப்புற்றார்” எனும் வார்த்தை வருகிறது.

ஒன்று இஸ்ரயேயில் குறைவான விசுவாசத்தைக் காணும் போது வருகிறது. “அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார் ( மார்கு 6:6 )”. இன்னொரு முறை இந்த நூற்றுவர் தலைவனின் விசுவாசத்தைக் கண்டு அவர் வியப்புறுவதாய் வருகிறது. ஒன்று யூதமக்களின் விசுவாசமின்மை, இன்னொன்று பிற இனத்தவரின் ஆழமான விசுவாசம். இந்த முரணே வியக்க வைக்கிறது.

நாமும் இறைவன் மீது அசைக்க முடியாத விசுவாசம் வைக்கும் போது அவரது மனம் மகிழ்ச்சியினால் அசைக்கப்படும்.

8. “ஒரு வார்த்தை சொன்னால் போதும்” என நூற்றுவர் தலைவர் சொன்னார். இயேசுவோ ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அந்த ஊழியரை சுகமாக்குகிறார். நாம் நினைப்பதற்கும் மேலாக இயேசுவின் வல்லமையும், ஆற்றலும் உண்டு என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் கூறுகிறது.

நாம் இயேசுவிடம் வரும்போது நமது தேவையைச் சொல்வதே சரியான வழி. அதை இறைவன் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இயேசு அந்த ஊழியரை சந்தித்ததில்லை, என்ன நோய் என்பதைப் பார்த்ததில்லை, எத்தனை நாள் நோய் என ஆராய்ச்சி செய்யவில்லை. அவர் மனதில் நினைத்த போதே அந்த நோய் அலறி ஓடி விட்டது. மரண தருவாயில் இருந்தவரை வாழ்வின் வரவேற்பறைக்கு அழைத்து வந்தது. இறைவனின் ஆற்றல் கற்பனைக்கு அப்பாற்பட்டது எனும் நம்பிக்கை மனதில் இருக்கட்டும்.

9. இயேசுவை தேடிச் செல்ல நமக்குத் தகுதி இல்லை என நினைப்பதும், இயேசு நம்மைத் தேடி வரும் போது தகுதியற்றவர் நாம் என நினைப்பதும் தாழ்மையின் அடையாளமாக இருந்தாலும் அது தவிர்க்கப்பட வேண்டியதே. இயேசு பாவிகளையும் நேசித்தவர். அவரை நோக்கி ஓடி வர நமது பாவங்களே காரணமாய் இருக்கலாம், ஏனெனில் அந்தப் பாவங்களிலிருந்து தாம் நமக்கு மீட்பு தேவைப்படுகிறது.

இயேசுவைத் தேடிச் செல்பவர்களாகவும், இயேசு நம்மைத் தேடி வரும்போது எதிர்கொண்டு சென்று வரவேற்பவர்களாகவும் இருப்பதே சரியான வழியாகும்.

10. தான் யாருக்காக இந்த பூமிக்கு வந்தாரோ அந்த மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிற இன மக்கள் அவரை விரைவாக ஏற்றுக் கொள்கின்றனர். “என்னைக் காணாமலேயே விசுவசிப்பவன் பேறுபெற்றவன்” எனும் இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப, அந்த நூற்றுவர் தலைவன் இயேசுவைக் காணாமலேயே அவரை நம்பி பெரும் பேறு பெற்றான்.

அவனது விசுவாசம் அவனை மீட்புக்குள் வழிநடத்தியதா என்பதை விவிலியம் குறிப்பிடவில்லை. ஒருவேளை அவனது விசுவாசம் உடல்நலத்தை மட்டுமே சார்ந்திருந்தால், அது முழுமையற்ற விசுவாசம். நமது விசுவாசம் நம்மை மீட்புக்குள் வழிநடத்த வேண்டும். வெறும் உலக செல்வங்களுக்காக மட்டும் கொள்கின்ற விசுவாசம் நம்மை நிலைவாழ்வுக்குள் கொண்டு செல்லாது.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*

Posted in Desopakari

தொழில்நுட்பமும், கிறிஸ்தவமும்

Image result for technology christianity

பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, இன்றைய உலகம் தொழில்நுட்ப உலகின் விரல்களில் அகப்பட்டுக் கிடக்கிறது என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆகவேண்டும்.

“அதிகாலையில் தேவனைத் தேடு” என்பது பழைய மொழி ஆகிவிட்டது. விடிந்தும் விடியாமலும் வாட்ஸப்பின் மீது விரல்கள் தேய்த்தும், ஃபேஸ்புக் மீது முகம் பார்த்தும் தான் இன்றைய பொழுது விடிகிறது !

ரயில் ஸ்னேகம் என்றொரு வார்த்தையே இன்றைக்கு காலாவதியாகிவிட்டது. ‘ரயில்ல என்னப்பா ஸ்நேகம்’ என்று பிள்ளைகள் கேட்கும் நிலமைக்கு வந்து விட்டது நவீன வாழ்க்கை. நான்கு நாட்கள் ஒரே இரயில் பெட்டியில் பயணம் செய்ய நேர்ந்தால் கூட நாலரை இஞ்ச் வெளிச்சத் திரைக்குள் வாழ்க்கை நடத்த நாம் கற்றுக் கொண்டு விட்டோம்.

தொலை தூரத்தில் இருக்கின்ற சொந்தங்களுக்கு டிஜிடல் வணக்கம் வைத்துவிட்டு, அருகில் இருக்கும் சொந்தங்களுக்கு ஒரு புன்னகை கூட வைக்காமல் நகர்ந்து செல்லப் பழகிவிட்டோம்.

நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வையெல்லாம் ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பு தான். இப்போதெல்லாம் குனிந்த நடை, கூன்கொண்ட பார்வை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் ஏற்படுகின்ற விபத்துகளும் எக்கச் சக்கம்.

தொழில்நுட்பம் உச்சமாய் இருக்கும் காலத்தில் உலகம் அழிந்து விடும் என பலர் சொல்வதுண்டு. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. காரணம், தொழில்நுட்பத்தின் உச்சம் எது என்பதை எப்படி நிர்ணயம் செய்வது ?

வேட்டையாடிய மனிதனுக்கு ஈட்டி கிடைத்தது தொழில்நுட்பத்தின் உச்சம்,

ஈட்டியால் குத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தவன் வலைக்கு மாறியது தொழில்நுட்பத்தின் உச்சம்,

குகைகளில் உழன்றவன் கோபுரங்களில் தவழ்ந்தது தொழில்நுட்ப உச்சம். இப்படி தொழில் நுட்பத்தின் உச்சம் என்பது காலம் தோறும் மாறிக் கொண்டே தான் இருக்கிறது.

கணினி வந்தபோது இதுவே தொழில்நுட்பத்தின் உச்சம் என்றார்கள், இன்றைக்கு அது தொழில்நுட்பத்தின் முதல் படி என்கிறார்கள். ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ட்ஸ் எனப்படும் செயற்கை அறிவை நோக்கி உலகம் படு வேகமாக ஓடுகிறது. நாளைக்கு அதையும் தாண்டி இன்னொன்றைத் தேடி ஓடும்.

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இறைவன் எதிர்பார்ப்பது தான். உலகைப் படைத்தவர் இறைவன். மனிதனை தனது சாயலாகப் படைத்தார். தன்னைப் போல் உருவான மனிதன் புதிய படைப்புகளை உருவாக்குவதில் வியப்பு இல்லையே ! உலகை ஆளவும், அதில் வாழவும் தான் மனிதனை இறைவன் படைத்தார். எனவே அவன் ஆளுகை செய்வதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் எந்தக் கணத்தில் அவன் கர்வம் கொள்கிறானோ அப்போது அவனுடைய வீழ்ச்சி அசுர வேகமாய்  இருக்கும். விண்ணக தேவதூதன் கர்வம் கொண்டபோது அவன் பாதாளத்தின் அரக்கனாய் மாறியது போல, தொழில் நுட்பம் படைப்பாளிக்கு கர்வம் தரும்போது அவனுடைய வாழ்க்கை அர்த்தம் இழக்கும்.

பைபிள் தொழில்நுட்பத்தைப் பேசுகிறது. “காயீன் ஒரு நகரை உருவாக்கினான்” ( ஆதி 4:17). தொழில்நுட்பத்தின் துவக்கம் அதுவாக இருக்க வேண்டும்.  பாபேல் கோபுரம் கட்டுமானக் கலையின் உச்சம் தொட்ட நாளாய் இருந்திருக்க வேண்டும். சாலமோனின் காலத்தில் அது பிரமிப்பின் உச்சத்தில் இருந்திருக்கலாம்.

நோவா செய்த பேழை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அதை இறைவனே ஆர்கிடெக்ட் ஆக மாறி நோவாவை வழிநடத்துகிறார்.

உசியா மன்னனைப் பற்றி, “அம்பு எய்வதற்கும், பெரிய கற்களை வீசுவதற்கும் திறமை மிக்கோரால் கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணைகளை எருசலேமில் செய்து கொத்தளங்கள் மேலும், கோட்டைகளின் மூலைகள் மேலும் அவற்றை நிறுவினான்.” என்கிறது விவிலியம்.

இவையெல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் படிகளே. இவையெல்லாம் மனித வரலாற்றின் பதிவுகளே. இவற்றைத் தவிர்க்க முடியாது. இறைவன் விரும்பும் காலம்வரை இந்த வளர்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இந்த வளர்ச்சியை எப்படி நமது ஆன்மீக வாழ்வுக்கான வழியாக மாற்றுகிறோம் என்பதில் தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது.

Image result for technology christianity

  1. மனித நேயத்தையும், மனித உணர்வுகளையும் தொழில்நுட்பம் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரும்பு இயந்திரங்களின் வருகை, இதயங்களை இரும்பாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  1. குடும்ப உறவுகளிடையே உள்ள நெருக்கத்தை தொழில்நுட்பம் களவாடாமல் இருக்க வேண்டும். மாலை நேரங்களில் இயந்திரங்களுக்கும், கருவிகளுக்கும் முழுமையான ஓய்வு கொடுத்து குடும்பமாக இணைந்து பேசுவதும், விளையாடுவதுமான நேரங்கள் உருவாக வேண்டும்.

  1. தொழில்நுட்பம் தகவல்களை எளிதில் பெற்றுத் தருகிறது. கிறிஸ்தவ இலக்கியங்கள், விளக்கங்கள் போன்றவை விரல்நுனியில் கிடைக்கின்றன. அதை நமது ஆன்மீக வளர்ச்சிக்காய் பயன்படுத்த வேண்டும். ஆவியின் கனிகளை ருசிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

  1. மென்நூல்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள், சிறுவர்களுக்கு ஊக்குவிக்கலாம். வீடியோ கேம்ஸ் போன்றவற்றிலிருந்து குழந்தைகளை திசைதிருப்பும் முயற்சியாக இது அமையும்.

  1. ஆரோக்கியமான தொலை தொடர்புகள், பகிர்வுகள் போன்றவற்றிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். உலகெங்குமுள்ள கிறிஸ்தவ நண்பர்கள், கிறிஸ்தவ குழுக்கள் போன்றவற்றில் இணைந்து பயன்பெறலாம். “எதைச் செய்தாலும் தேவ மகிமைக்காகவே செய்ய வேண்டும்” எனும் இறை வார்த்தைக்கேற்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

  1. சமூகத்திலிருந்தும், குடும்பங்களிலிருந்தும் இவை நம்மைத் தனிமைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே இன்னொரு நபர் அருகில் இருக்கும் போது போனை நோண்டாமல் இருக்கப் பழக வேண்டும்.

  1. இயந்திரங்களின் வருகை மனிதனுக்கு வேலையற்ற சூழலை உருவாக்கும். அத்தகைய சூழல்களில் சக மனிதர்களுக்கு தோள்கொடுப்பதும், உடனிருப்பதும், உதவுவதும் முக்கியமான தேவைகள்.

  1. இயந்திரங்களும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அழிவுக்கான பணியைச் செய்யாமல் கவனமாய் இருக்க வேண்டும். நமது எல்லைக்குட்பட்ட விஷயங்களில் நாம் ஆக்கபூர்வமாய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உறுதி எடுக்க வேண்டும்.

  1. இயந்திர வாழ்க்கை, உடல் உழைப்பை குறைத்து ஆரோக்கியத்தை வலுவிழக்கச் செய்கிறது. இது பல்வேறு உடல் நோய்களுக்கும், மன நோய்களுக்கும் நம்மை இட்டுச் செல்லும். எனவே ஆரோக்கியம் பேணுவதில் கவனம் தேவை.

  1. பாவம் செய்பவன் பாவத்துக்கு அடிமை என்பதைப் போல, தொழில்நுட்பத்தை அதிகமாய்ப் பயன்படுத்துபவர்கள் அதன் அடிமைகளாகிப் போகிறார்கள். நமக்கும் இறைவனுக்கும் இடையேயான உரையாடலையோ, அன்பு உறவையோ தொழில்நுட்பம் எடுத்துக் கொள்ளும் போது அது பாவத்தின் கருவியாக மாறிப் போகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியும், இயந்திரங்களின் விஸ்வரூபமும் நம்மை இறைவனின் அன்பிலிருந்து பிரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஈசாக் ஆபிரகாமின் போதையாய் மாறிய காலத்தில் இயேசு அவனைப் பலியிடச் சொன்னார். ஆபிரகாம் ஒத்துக் கொண்டார், விசுவாசத்தின் தந்தையானார்.

தொழில்நுட்பங்கள் நமக்கு போதையாய் மாறும் கணத்தில் இறைவன் அதையும் பலியிடச் சொல்கிறார். நாம் அதை பலியிட்டு இறைவனை பற்றிக் கொள்கிறோமா ? அல்லது இறைவனை விட்டு விட்டு அதைப் பற்றிக் கொள்கிறோமா என்பதை வைத்து நமது விசுவாசத்தை அளவிடலாம்.

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோம்

இறைவனை மட்டுமே அன்பு செய்வோம்.

*

Desopakari, May 2017

 

Posted in Articles, Sunday School

மறைக்கல்வி SKIT : வருகையின் நாள்

Image result for heaven phone

நடிகர்கள் : மிக்கேல், ஆபிரகாம், பீட்டர், தாவீது

காட்சி :

மேடையின் நடுவே ஒரு மேஜை. மேஜையில் பூமியைப் பார்க்கும் ஒரு ஸ்கேனர். அருகில் ஒரு தொலை பேசி. மைக்கேல் அருகில் நிற்கிறார்.

தொலைபேசி அடிக்கிறது.

மைக்கேல் : ஹலோ… குட்மார்னிங் சார். என்னது ? இன்னிக்கேவா ? என்னது இப்பவேவா ? யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்களே… ( கொஞ்சம் அமைதி ) உண்மை தான் சார். அவங்கதான் கவனமா இருக்கணும். ஆனாலும் கொஞ்சம் பேர்….. சரி சரி… ஓ.கே .. உடனே எல்லா ஏற்பாடையும் பண்ணிடறேன்.

போனை வைத்து விட்டு இன்னொருவருக்குப் போன் செய்கிறார்.

மைக்கேல் : ஹலோ. தூங்காதீங்க, எழும்புங்க. எல்லாரையும் தயார் பண்ணுங்க…. என்ன விஷயமா ? இன்னிக்குதான் அந்த நாளாம்… ( கொஞ்சம் அமைதி ) ஆமா.. இன்னிக்கு தான்..

அப்போது கபிரியேல் ஒரு பாடல் பாடிக் கொண்டே உள்ளே வருகிறார்.

கபிரியேல் : வாவ்..வாவ்..வாவ்… என்ன அழகான நாள் இது. சூடா ஒரு கப் காபி குடிச்சுட்டு தூங்கணும்.  ( அப்போது தான் மைக்கேலைப் பார்க்கிறார் ) ஹே… மைக்கேல்… ஹவ் ஆர் யூ ? ஒரு வடை கிடைக்குமா ?

மைக்கேல் : கபிரியேல்…. வடை சாப்பிட டைம் இல்லை. போய் உங்க எக்காளத்தையும், குரலையும் தயார் பண்ணி வையுங்க.

கபிரியேல் : என்னோட உதடுகளும், எக்காளமும் எப்பவுமே ரெடிதான் மைக்கேல்…

டோண்ட் வர்ரி.

மைக்கேல் : ஓ… அப்படின்னா… எப்போ வேணும்ன்னாலும் எக்காளம் ஊதிடுவீங்க… ?

கபிரியேல் : (அலட்சியமாக ) யா…யா… நோ பிராப்ளம்.

மைக்கேல் : அப்போ உங்களுக்குப் பிரச்சினையில்லை. ஏன்னா இண்ணிக்கு தான் அந்த நாள் !

கபிரியேல் : (பாட்டு போல )  எல்லாமே ரெடி தான்… ரெடி தான் …ரெடி தான் ( திடீரென திடுக்கிட்டவராய் ) என்னது ? இன்னிக்கா ? ஐயோ இருக்காதே… என்னோட எக்காளம் எங்கே இருக்குன்னே தெரியலையே. பிராக்டீஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சே… என்னோட கொயர் டீம் இன்னும் குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்காங்களே…  நிஜமாவா சொல்றே மைக்கேல்… இன்னிக்கா ? இன்னிக்கேவா ?

மைக்கேல் : கடவுள் கால் பண்ணி சொன்னாருப்பா.. இன்னிக்கு தான் அந்த நாள்.

கபிரியேல் : அடடா….. நான் இன்னும் ரெடியா இல்லையே… ஆபிரகாமை உடனே போய் பாக்கணும். எங்கே இருக்காரோ தெரியலையே.

 (கபிரியேல் ஓடத் துவங்கும் போது ஆபிரகாம் வருகிறார் )

ஆபிரகாம் : என்னப்பா கபிரி…. எங்கே பறக்கிறே ? ஒரே குஷி மூட்ல இருக்கே போல இருக்கு ?

கபிரியேல் : ஐயா.. நான் இன்னும் ரெடியா இல்லையே…. என்ன செய்வேன் ?

ஆபிரகாம் : என்னப்பா ஆச்சு இவனுக்கு ? நான் ரெடி இல்லேன்னு சொல்றான். ஏதாச்சும் போட்டி நடக்கப் போவுதா ?

மைக்கேல் : இரண்டாம் வருகை நாளுக்கு அவரு தயாரா இல்லேன்னு சொல்றாரு…

ஆபிரகாம் :  அடடா… பாவம். நான் எல்லாரும் ரெடியா இருப்பாங்கன்னு நினைச்சேன். எனி வே… அதுக்கு இன்னும் நூறு வருஷமோ, ஆயிரம் வருஷமோ… ஆகும்னு நினைக்கிறேன். அதெல்லாம் கடவுளுக்குத் தான் தெரியும்.

மைக்கேல் : என்ன சொல்றீங்க ? விஷயம் தெரியாதா ? நாளெல்லாம் டிசைட் பண்ணியாச்சு ?

ஆபிரகாம் : ஓ… நிஜமாவா ? எப்போ

மைக்கேன் : டுடே….

ஆபிரகாம் : வாட்…. என்ன சொல்றே… இன்னிக்கா ? எந்த அறிகுறியும் இல்லையே… ஏதாச்சும் நிறைய அறிகுறி வரும்ன்னு நினைச்சேனே… ஆர் யூ ஷுயர் ?

மைக்கேல் : ஒரு ஆள் எனக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னாரு

ஆபிரகாம் : தெரியாம சொல்லியிருப்பாருப்பா… யார் சொன்னது ? எஸ்தரா ? ரூத்தா ?

மைக்கேல் : சர்வ வல்லவர் !

ஆபிரகாம் : என்ன சொல்றே ? கடவுளே கால் பண்ணி சொன்னாரா ?

மைக்கேல் : ஆமா…

ஆபிரகாம் : ஐயோ… நான் ரெடியா இல்லையே…. இஸ்ரேல் எப்படியிருக்கோ ?. இந்த நேரம் பாத்து மோஸசும் ஆரோனும் எங்கோ போனாங்களோ தெரியலயே… ( ஆபிரகாம் விரைவாய் போகிறார் )

( பீட்டர் வருகிறார் )

பீட்டர் : ஹா… என்னப்பா, நம்ம தாத்தா இந்த ஓட்டம் ஓடறாரு. ஏதோ இரண்டாம் வருகை தான் வந்தது போல !

மைக்கேல் : நீங்க என்ன நினைக்கிறீங்க….

பீட்டர் : ஒருபக்கம் என்னடான்னா ஆபிரகாம் ஓடறாரு, இன்னொரு பக்கம் கபிரியேல் எக்காளத்தை ஊதி பிராக்டீஸ் பண்றாரு… அப்பப்பா… எல்லாரும் சட்டுன்னு பிஸி ஆயிட்டாங்க…

மைக்கேல் : நீங்களும் பிஸி ஆயிடுங்க பீட்டர்

பீட்டர் : ஏன் ? ஐ ஆம் கோயிங் டு டேக் சம் ரெஸ்ட்.

மைக்கேல் : இனிமே ரெஸ்ட் கிடையாது பீட்டர்..

பீட்டர் : ஏன் மைக்கேல்.. என்னாச்சு ?

மைக்கேல் : இன்னிக்கு இரண்டாம் வருகை நாள் !

பீட்டர் : (அலறுகிறார் ) வாட்ட்ட்ட் ? இன்னிக்கா ? கடவுள் ஒண்ணுமே சொல்லலையே….

மைக்கேல் : என்ன சொல்லணும். எல்லாரும் தயாரா இருக்கணும்ன்னு சொல்லியிருக்காரா இல்லையா ?

பீட்டர் : சொல்லியிருக்காரு… பட், இன்னும் நான் கதவை துடைக்கல. புக்கை எடுத்து தயாரா வைக்கல. சாவியை எங்கே வெச்சேன்னா ஞாபகம் இல்லை… போய் தேடணும்.  (பதட்டத்துடன் ) யாரையாச்சும் ஹெல்ப் க்கு கூப்பிடணும்… ஹே… தாமஸ்…. பவுல்.. எங்கேப்பா இருக்கீங்க

தாவீது உள்ளே வருகிறார்.

தாவீது : வாட்ஸ் அப் கபிரியேல்… நல்லா இருக்கீங்களா ?

மைக்கேல் : நல்லா இருக்கேன் தாவீது.. நீங்க எப்படி இருக்கீங்க ?

தாவீது :               நல்லா இருக்கேன்… என்ன ஒரே பரபரப்பா இருக்கு ? கெஸ்ட் யாராச்சும் வராங்களா ?

மைக்கேல் : உங்க இசைக்குழு எல்லாம் ரெடியா ?

தாவீது : எப்பவுமே ரெடி தான்…

மைக்கேல் : இன்னும் கொஞ்ச நேரத்துல இரண்டாம் வருகை !

தாவீது : வாட்… இன்னிக்கா, இப்போவா ? சுவர்க்கத்துல அவ்வளவு இடம் இருக்கா ? ரூம்ஸ் எல்லாம் ரெடி பண்ணியாச்சா ? சில பில்டிங்ல மெயிண்டனன்ஸ் வேலை நடந்திட்டிருந்துதே முடிஞ்சிடுச்சா…

மைக்கேல் : கடவுளுக்குத் தெரியும் அவர் என்ன பண்றாருன்னு. சோ, அதைப் பற்றியெல்லாம் நாம கவலைப் படத் தேவையில்லை டேவிட்.

தாவீது : இருந்தாலும். அவ்ளோ கூட்டத்தை….

மைக்கேல் : ரொம்ப கம்மியான ஆட்கள் தான் வருவாங்கன்னு நினைக்கிறேன். இப்போ தான் ஸ்கேனர் வழியா பூமியைப் பாத்தேன். அங்கே யாருக்குமே இந்த விஷயம் இன்னும் தெரியல. எல்லாரும் ரொம்ப அலட்சியமா இருக்காங்க. பாத்தா யாருமே தயாரா இருக்கிற மாதிரி தெரியல.

தாவீது : நீங்க சொல்றதைப் பாத்தா சின்னப் பிள்ளைங்க மட்டும் தான் சுவர்க்கத்துல நிரம்புவாங்க போல…

மைக்கேல் : நானும் அப்படித் தான் நினைக்கிறேன்.

(அப்போது போன் அடிக்கிறது )

மைக்கேல் : எஸ் லார்ட்… வி ஆர் ரெடி…

நீங்கள் தயாராய் இருந்தாலும், இல்லா விட்டாலும்… இதோ அந்த நாள் வருகிறது ! வந்தே விட்டது !

 

Posted in Sunday School

மறைக்கல்வி கட்டுரை : ஆபிரகாம் விசுவாசத் தந்தை

Related imageமுன்னுரை :

கிறிஸ்தவம் விசுவாசத்தின் அடிப்படையில் தான் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. கடவுள் மீதான நம்பிக்கை, அவருடைய வார்த்தைகளின் மீதான நம்பிக்கை, அவர் அளிக்கப் போகும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கை. இவையே கிறிஸ்தவ வாழ்க்கையைச் செழுமைப் படுத்துகின்றன.

பொருளுரை

“மிகப்பெரிய பாவியாய் இருங்கள், ஆனால் அதை விட ஆழமான விசுவாசத்தை இறைவனில் கொண்டிருங்கள்” என்கிறார் மார்ட்டின் லூதர். விசுவாசமே கரைசேர்க்கும் ஆயுதம் என்பதையே அவருடைய வார்த்தைகள் சொல்லித் தருகின்றன. விசுவாசம் இல்லாத வாழ்க்கை மாலுமி இல்லாத கப்பலென தடுமாறித் தடம் மாறும்.

வீடுகளில் நம்பிக்கை வளரும்போது. குடும்ப உறவுகள் பலமாகின்றன. நாடுகளில் நம்பிக்கை வளரும் போது சர்வதேச உறவுகள் பலமாகின்றன. இறைவனின் நம்பிக்கை வளரும் போது கிறிஸ்தவ வாழ்க்கை வளமாகிறது.

நாம் இறைமகன் இயேசுவை எல்லாவற்றுக்கும் மேலான கடவுளாக நம்புகிறோம். மீட்பளிக்கும் ஒரே ஆதரவாளராகப் பார்க்கிறோம். பாவங்களைத் தீர்க்கும் ஒரே பரிசுத்த பலியாகப் பார்க்கிறோம். விண்ணகத்தில் நுழைவதற்கான ஒரே கதவாகப் பார்க்கிறோம். பிற மதத்தினரோ இயேசுவை ஒரு மனிதனாகப் பார்க்கிறார்கள். புத்தன், இயேசு, காந்தி என மனித வரிசையில் அமர வைக்கிறார்கள்.

இயேசு கடவுளின் மகன் எனும் விசுவாசம் நம்மை கிறிஸ்தவத்தில் இணைக்கிறது. இயேசு உயிர்த்தார் எனும் விசுவாசம் நம்மை கிறிஸ்தவத்தில் பலப்படுத்துகிறது. கிறிஸ்து நம்மோடு வாழ்கிறார் எனும் விசுவாசம் நம்மை கிறிஸ்தவத்தில் நிலைக்க வைக்கிறது.

நம்முடைய கிறிஸ்தவ விசுவாசம் பல வேளைகளில் ஆட்டம் கண்டு விடுகிறது. அத்தகைய பலவீனமான சூழல்களில் நமது விசுவாசத்தைப் பலப்படுத்தவும், நமக்கு வழிகாட்டவும் பைபிள் நமக்கு பலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட உயரிய நபர்களில் நாம் விசுவாசத்தின் தந்தை என அன்போடு அழைக்கின்ற ஆபிரகாம் முதலிடத்தில் இருக்கிறார்.

தனது வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை விசுவாசத்தின் மீது சின்னக் குறைவு கூட வராதபடி நடந்தவர் தான் ஆபிரகாம். கடவுள் ஆபிரகாமை அழைத்தபோது உடனே பணிந்தார். “எங்கே போகிறோம், ஏன் போகிறோம், போகும் நபர்களுக்கும் கால்நடைகளுக்கும் உணவு கிடைக்குமா” என்று கண நேரம் கூட யோசிக்கவில்லை. கடவுளின் வார்த்தையின் மீது அவருக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது. கடவுளின் வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் மிக்கது என்பதை அவருடைய செயல் சட்டென வெளிப்படுத்துகிறது.

இந்த இருபதாம் நூற்றாண்டில் ஐம்பது வயதுப் பெண் செயற்கை முறையில் கருத்தரிப்பதை மருத்துவ அதிசயம் என்கிறார்கள். சாராவோ 90 வயது கிழவியாய் இருந்தபோதும் ஆபிரகாம் விசுவசித்தார். மருத்துவ அதிசயத்தையல்ல, கடவுளின் வார்த்தையை. நம்முடைய விசுவாசம் எத்தகையது ? எல்லா சாத்தியக் கூறுகளும் இருக்கக் கூடிய இடத்தில் கடவுளை விசுவசிக்கிறோம். இயற்கைக்கு மாறான எதையுமே விசுவசிக்கத் தயங்குகிறோம். ஆபிரகாம் விசுவசித்தார். இயற்கைக்கு மாறானது இறைவனால் கூடும் என விசுவசித்தார்.

ஆபிரகாமின் விசுவாசம் வீண்போகவில்லை. ஈசாக்கு ஆபிரகாமின் மகனானான். தனது மகன் மீது அளப்பரிய ஆசை கொண்டிருந்தார் ஆபிரகாம். ஈசாக்கு இளைஞனானான். குழந்தை பிறந்தபின் ஆபிரகாமின் விசுவாசத்தில் மாற்றம் வந்திருக்கிறதா என்பதை அறிய கடவுள் விரும்பினார். மகனை தனக்குப் பலியாய்க் கேட்டார். உள்ளம் உடைந்தாலும், ஆபிரகாம் விசுவாசத்தை உடைக்கவில்லை. மகனை பலிகொடுக்க வேலையாட்களோடு மலைக்குச் சென்றார்.

மலையடிவாரம் வந்த ஆபிரகாம், வேலையாட்களிடம் என்ன சொன்னார் தெரியுமா ? “நானும் பையனும் கடவுளைத் தொழுது கொண்டு உங்களிடம் திரும்பி வருவோம்” ! பலியிடச் சென்றது ஈசாக்கை. ஆனாலும் கடவுள் மகனை தனக்கு மீண்டும் தருவார், மகனோடு தான் திரும்ப வருவோம் என்பதையே அவரது விசுவாச வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன. கடவுள் ஆபிரகாமின் விசுவாசத்தை கண்டார், ஈசாக்கை அவருக்கே திரும்பக் கொடுத்தார்.

விசுவாசத்தின் பிள்ளையே கீழ்ப்படிதல். கடவுள் மீது ஆபிரகாம் வைத்த விசுவாசமே ஆபிரகாமை கடவுளிடம் சரணாகதி அடைய வைத்தது. “மகனைப் பலிகொடுக்கச்” சொன்னபோது அப்படியே கீழ்ப்படிந்தார். தன்னுடைய உணர்ச்சிகளின் போராட்டத்துக்கு இடம் கொடுக்கவில்லை.

புதிய ஏற்பாடு ஆபிரகாமை பல இடங்களில் சுட்டிக் காட்டுவதற்குக் காரணமும் இந்த ஆழமான விசுவாசம் தான். பவுல் தனது கடிதங்களில் குறைந்த பட்சம் ஐந்து இடங்களில் ஆபிரகாமின் விசுவாசத்தை வியக்கிறார். “விசுவாசம் கொண்டு வாழ்பவர்களே கடவுளின் பிள்ளைகள்” என்கிறார் கலாத்தியர்.

அன்னை தெரசா வாழ்வின் கடைசி நாள் வரை இறைவனின் மீது விசுவாசம் கொண்ட வாழ்க்கை வாழ்ந்தார். இயேசுவின் போதனைகளைக் கடைபிடித்து, அவரில் ஆழமான அன்பு கொண்டிருந்தார். இந்தியா வந்த தோமா, கிறிஸ்தவத்தின் வேர்கள் இந்தியாவில் பதியனிடப்பட முதல் காரணமாய் இருந்தார். இறையில் விசுவாசம் கொண்ட மிஷினரிகளின் வருகை தான் நமது இந்தியாவில் கிறிஸ்தவம் தழைத்தோங்க காரணம்.

நமது விசுவாசம் எப்படி இருக்கிறது ? முழுக்க முழுக்க இறைவனில் சரணடைவதில் இருக்கிறதா ? இல்லை அரைகுறை மனநிலையுடன் இருக்கிறதா ? “என்னைக் காணாமலேயே விசுவசிப்பவன் பேறுபெற்றவன்” எனும் இயேசுவின் வார்த்தைகளை நினைத்துப் பார்ப்போம். சற்றும் சஞ்சலமற்ற விசுவாசம் கொள்வோம். உறுதியாகக் கிறிஸ்துவைப் பற்றிக் கொள்வோம்.

முடிவுரை

ஆபிரகாமின் விசுவாசம் நாம் வியப்பதற்கானதல்ல. நாம் பின் தொடர்வதற்கானது என்பதை உணர்வோம். அந்த விசுவாசத்தின் வேர்களைப் பற்றிக் கொள்ள நமது வாழ்க்கையை இறைவனில் சமர்ப்பிப்போம்.