Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 13 : பார்வையற்ற இருவர் பார்வையடைதல்

Image result for jesus heals two blind men

மத்தேயு 9 : 27.32

இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர்,

“தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர்.

இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன.

இயேசு அவர்களை நோக்கி. “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

***

இயேசு பார்வையற்ற இருவருக்குப் பார்வையளிக்கிறார். அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்து அவர்களுடைய இருண்டு போன வாழ்க்கைக்கு ஒளியைக் கொடுக்கிறார் இயேசு. அவர்களோ இறைவனின் கட்டளையை மீறி செயல்படுகின்றனர். இந்த நிகழ்வு ஒரு புதுமை என்பதைத் தாண்டியும் பல விஷயங்களை நமக்கு விளக்குகிறது.

குறிப்பாக, ஒரு திருச்சபை, ஒரு இறை சமுதாயம், ஒரு கூட்டுறவு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதை இந்த புதுமை விளக்குகிறது.

1. பார்வையற்ற இருவர் இணைந்து பயணிக்கின்றனர். பலவீனம் கொண்ட இருவர் இணையும் போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் இருக்கும் சூழல் உருவாகிறது. ஒரு பார்வையிழந்த மனிதர் மட்டுமே இன்னொரு பார்வையிழந்த மனிதரின் உள்ளத்தின் வலியை உணர முடியும். சகதியில் இறங்காதவர்களுக்கு உழவனின் வலி புரிவதில்லை. மண்புழுவாய் மாறாவிடில் மண்ணோடான வாழ்க்கை வாழ முடியாது. “குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது” என்பது இறை வார்த்தை. ஆனால் குருடன் குருடனை புரிந்து கொள்ள முடியும் என்பதே அனுபவ வாழ்க்கை !

ஒரு திருச்சபை என்பது இப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இணைந்து நடப்பதாய் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த உறவு வலிமையாய் இருக்கும். நாம் அனைவருமே பலவீனங்களின் பிள்ளைகள் தான். அதை உணர்ந்து கொள்ளும் போது, சகமனிதனை தேற்றவும், அவனுக்குத் தோள்கொடுக்கவும் நமது மனம் தயாராகும்.

2. இருவருடைய இலட்சியமும் ஒன்றாக இருக்கிறது ! அவர்களுடைய இலட்சியம், இருளான வாழ்விலிருந்து வெளியே வந்து வெளிச்சத்தின் பாதைகளில் வீறு நடை போடவேண்டும் என்பதே. இருளுக்குள்ளே வாழ்கின்ற வாழ்க்கை பழகிவிட்டது, இது போதும் என நினைக்காமல் வெளிச்சத்தை அடைய வேண்டும் எனும் இலட்சியத்தோடு இருவரும் பயணிக்கின்றனர்.

நமது திருச்சபைகளும், கூட்டுறவுகளும் பாவத்தின் இருளுக்குள் கிடப்பதை சுகமெனக் கருதாமல் வெளிச்சத்தைத் தேடி அலைகின்ற மனநிலையில் இருக்க வேண்டும். பாவத்தில் புரளும் போது பாவம் பழகிவிடுகிறது. பிறகு தூய்மை தான் பயமுறுத்தும். ஆனால் தூய்மையில் வாழும் போதோ பாவம் நமக்கு பிரியமில்லாததாய் மாறிவிடும். ஒரு திருச்சபை இப்படி வெளிச்சத்தைக் குறிவைத்துச் செயல்படும் ஒத்த சிந்தனையுடைய, ஒரே இலட்சியமுடைய திருச்சபையாய் மிளிர்வதே மிகவும் சிறந்தது.

3. ஒரே மீட்பரைத் தேடும் நிலை. இருவரும் இணைந்து பயணிக்கும் போதும், இருவருக்கும் பார்வை வேண்டும் எனும் இலட்சியம் இருந்த போதும் அவர்கள் எல்லோரிடமும் அதை கேட்கவில்லை. யார் அதைத் தர முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தனர். எனவே தான் இயேசுவை அவர்கள் பற்றிக் கொண்டனர். இயேசுவால் மட்டுமே தனது இருளான வாழ்க்கைக்கு வெள்ளையடிக்க முடியும் என அவர்கள் நம்பினார்கள்.

நமது திருச்சபைகளும் ஒரே மீட்பராய் இயேசுவைத் தேடும் சபைகளாக மாறவேண்டும். அதுவும் பாவமெனும் இருட்டை விரட்டி, தூய்மையெனும் ஒளியைப் பற்றிக் கொள்ளும் இலட்சியத்தோடு தேட வேண்டும். இயேசுவால் மட்டுமே பாவத்தின் துருக்களை அகற்றி, வாழ்வின் இருக்கைகளில் நம்மை அமர வைக்க முடியும். இத்தகைய ஒரே நபரை, இயேசுவை, தேடும் சபைகளாய் நமது கூட்டுறவுகள் இருக்க வேண்டியது அவசியம்.

4. அவர்கள் இயேசுவிடம் தங்கள் தேவையை உரக்கக் கத்தி தெரிவிக்கின்றனர். கூட வருகின்ற மக்கள் என்ன நினைப்பார்கள் என நினைக்கவில்லை. அது கண்ணியமான செயலா, நாகரீக செயலா என்றெல்லாம் யோசிக்கவில்லை. இயேசுவை நோக்கி உரத்த குரல் எழுப்பினர். ‘கேளுங்கள் உங்களுக்குத் தரப்படும்’ என்றார் இயேசு. பார்வையில்லாத மனிதனைப் பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியும். ஆனாலும் அவர்கள் வாய்திறந்து கேட்க வேண்டும் என இயேசு விரும்புகிறார். தன்மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டு வருகின்ற மக்களை அவர் ஆவலுடன் வரவேற்கிறார்.

திருச்சபை இறைவனை நோக்கி வேண்டும் போதும் இந்த மனநிலையையே கொண்டிருக்க வேண்டும். தேவையை இறைவனிடம் கொண்டு சேர்ப்பதில் அலாதியான ஆர்வமும். பிறர் என்ன நினைப்பார்களோ என சிந்திக்காத மனமும் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இறைவனுக்கும் நமக்கும் இடையேயான உரையாடலை பிறருடைய விருப்பத்துக்காகவோ, வெறுப்புக்காகவோ மாற்றக் கூடாது.

5. அவர்கள் தொடர்ந்து இயேசுவை நோக்கி மன்றாடுகின்றனர். அவர்களுடைய முதல் குரலுக்கு இயேசு பதிலளிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அழைப்பார்களா என சோதிக்கிறார். அவர்களோ அந்த சோதனையில் வெற்றியடைகிறார்கள். சிலருடைய முதல் அழைப்புக்கு பதிலளிக்கும் இயேசு, வேறு சிலருடைய தொடர்ந்த அழைப்புக்கே பதிலளிக்கிறார். இவை இறைவனின் சித்தம். அது ஏன் எதற்கு என்பதைப் பற்றி ஆராயாமல் அவரை நோக்கி தொடர்ந்து மன்றாடவேண்டும்.

ஒரு திருச்சபை தனது இருட்டை மாற்றிக் கொள்ள, தனது ஆன்மீக நிலையை வளப்படுத்திக் கொள்ள, தொடர்ந்து இயேசுவிடம் மன்றாட வேண்டும். ஒருமுறை அழைத்து விட்டு முடங்கி விடுவதல்ல. தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கும் விசுவாசம் வேண்டும். எப்படி ஒரு மழலை தனக்குத் தேவையான பால் கிடைக்கும் வரை வீறிட்டு அழுகிறதோ அந்த மனநிலை நமக்கு வேண்டும்.

6. “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என அந்த இருவரும் இயேசுவை அழைக்கின்றனர். மதத்தின் மீதும், மெசியா எப்படி வருவார் என்பதன் மீதும் பரிச்சயம் கொண்டவர்கள் அவர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இயேசு மெசியா என்பதை அறிந்து கொண்டு அவரைப் பின்பற்றுகின்றனர் அவர்கள். அவர் நலமாக்கும் நல்லவர், அறிவுரை சொல்லும் ஆசான், அன்பான மனிதர், என்பதையெல்லாம் தாண்டி அவர் ஆண்டவர் எனும் அறிவு அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.

நமது திருச்சபைகளும் இயேசுவே உண்மையான மீட்பர் எனும் விசுவாசத்தின் மீது தான் கட்டப்பட வேண்டும். அந்த ஊக்கம் தான் நம்மை இயேசுவை நோக்கி ஈர்க்க வேண்டும். அப்போது தான் நமது சிந்தனைகள் விண்ணகம் சார்ந்ததாக இருக்கும். அப்போது தான் நாம் உடல் நலத்தை விட ஆன்ம நலத்தை மனதில் கொள்வோம். அப்போது தான் நாம் உடல் இருட்டை விட, ஆன்மீக வெளிச்சத்தில் ஆர்வம் கொள்வோம்.

7. “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என இயேசு கேட்கிறார். அவர்களுடைய விசுவாசத்தைச் சோதிக்கும் இரண்டாம் நிலை இது. அவர்கள் தன்னைத் தொடர்ந்து வந்ததால் அவர்களுடைய விசுவாசத்தின் முதல் நிலையை இயேசு புரிந்து கொள்கிறார். இப்போது வாயால் அறிக்கையிடும் நிலைக்கு அவர்களைக் கொண்டு வருகிறார். அறிக்கையிட்ட போது அவர்கள் அற்புதத்தைக் கண்டார்கள். “அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள்”. இருவரும் ஒரே குரலாக ‘ஆம்’ என சொல்கின்றனர். இதைத் தான் திருச்சபைகளும் செய்ய வேண்டும். ஒரே குரலாய் விசுவாசத்தை வெளிப்படுத்தும் திருச்சபைகள் பேறு பெற்றவை.

நம்மை நோக்கி இயேசு, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” எனும் கேள்வியை ஒவ்வொரு விஷயத்திலும் கேட்கிறார். அதற்கு நாம் சொல்லும் பதிலைப் பொறுத்து நமது வாழ்க்கை அமைகிறது. எந்த ஒரு சந்திப்பிலும் இரண்டு பாதைகள் பிரியும். இரண்டும் வெவ்வேறு திசைகளில் நம்மைக் கொண்டு சென்று, வெவ்வேறு இடங்களில் சேர்க்கும். நாம் ஆம் என்று சொன்னால் ஆண்டவனின் அருகில், இல்லை என்று சொன்னால் ஆண்டவனற்ற நிலையில் என நமது வாழ்க்கை அமையும். நாம் இறைவனின் கேள்விக்கு ஆம் எனும் பதிலை அளிக்கும் நிலைக்கு வருவதே ஆன்மீகத்தின் ஆழமான விசுவாச நிலை.

8. இயேசு அவர்களுடைய கண்களைத் தொடுகிறார். அவர்களுடைய இருளான வாழ்க்கை, ஒளியை நோக்கி திரும்புகிறது. இயேசுவின் தொடுதல் தான் வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். இயேசுவின் தொடுதல் கிடைப்பது ஆன்மீக வாழ்வின் அற்புத அனுபவம்.

ஒரு திருச்சபை இயேசுவின் தொடுதலைத் தேடி வரவேண்டும். இயேசுவின் தொடுதல் இருக்கின்ற திருச்சபைகள் ஆன்மீகத்தில் வெளிச்சம் பெறும். பாவத்தை மன்னிக்கும் அதிகாரமும், அதன் மூலம் வாழ்வைத் தருகின்ற வல்லமையும் இயேசுவின் தொடுதலுக்கு மட்டுமே உண்டு.

9. “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார் இயேசு. விசுவாசம் இயேசுவின் கரங்களிலிருந்து வரங்களைப் பெற்றுத் தருகிறது. விசுவாசம் இல்லாத இடங்களில் இயேசுவின் அற்புதங்கள் நிகழ்வதில்லை. இயேசு வாழ்ந்த காலத்தில் சொந்த ஊர் மக்களின் விசுவாசமின்மையால் அவரால் சொந்த ஊரில் அற்புதங்கள் நிகழ்த்த முடியாமல் போனது.

நமது வாழ்க்கையிலும் நாம் பலவற்றைப் பெற்றுக் கொள்கிறோம், சிலவற்றைப் பெறாமல் இருக்கிறோம். பெறாமல் இருக்கின்ற காரியங்களில் நமது விசுவாசக் குறைபாடு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். நமது வாழ்வில் சோர்வுகள் வரும்போது நாம் சந்தேகப்படவேண்டியது இறைவனை அல்ல, இறைவன் மீதான நமது விசுவாசத்தை.

10. இயேசு பார்வையடைந்த இருவருக்கும் ஒரே ஒரு கட்டளையைக் கொடுத்தார். ஆனால் என்ன ஒரு துயரம் ! அவர்கள் அதை மீறினார்கள். இயேசு நற்செய்தி அறிவிக்கும் பணியை அந்தக் காலத்தில் எல்லோருக்கும் கொடுக்கவில்லை. சிலரிடம் அமைதி காக்கச் சொன்னார். ஆனால் மக்களோ, தாங்களாகவே அந்த பணியை எடுத்துக் கொண்டனர். இது கடவுளின் வார்த்தையை மீறும் பாவச் செயலன்றி வேறில்லை. அதுவும் இயேசு ‘மிகக் கண்டிப்பாகக்’ கூறிய விண்ணப்பத்தையே அவர்கள் மீறிவிட்டனர்.

பார்வையில்லாமல் இருந்தபோது இயேசுவைத் தேடியவர்கள், பார்வை வந்தபின் இயேசுவை நிராகரிக்கின்றனர். நமது வாழ்க்கையில் துயரங்கள் வரும்போது இயேசுவைத் தேடுபவர்களாகவும், துயரங்கள் விலகியதும் அவரை நிராகரிப்பவர்களுமாய் இருக்கிறோமா ? சிந்திப்போம். கடவுளுடைய வார்த்தைகளை ஒரு மழலையைப் போல அப்படியே ஏற்றுக் கொள்வதே சிறந்தது. அந்த மனநிலையை கொண்டிருப்போம். நமக்கு சரியென செய்வதைச் செய்வதை விட, கடவுளுக்கு தவறென தோன்றுவதை செய்யாமல் இருப்பதே தேவையானது.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

 

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 12 : பேய் பிடித்த இருவரை நலமாக்குதல்

Image result for two demon possessed man matthew

மத்தேயு 8 : 28..34, மாற் 5:2 – 20; லூக் 8:26 – 39

இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள்.

அவர்கள், “இறை மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?” என்று கத்தினார்கள்.

அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. பேய்கள் அவரிடம், “நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்” என்று வேண்டின.

அவர் அவற்றிடம், “போங்கள்” என்றார்.

அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.

பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள்.

உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.

*

இயேசு படகில் பயணித்து கதரேனர் பகுதிக்கு வந்திருந்தார். படகில் வரும்போது தான் ஆக்ரோஷமாய் அடித்த காற்றையும், புயலையும் கடிந்து அடக்கியிருந்தார். இயேசுவின் பயணத்தைத் தடை செய்ய தீய ஆவி செய்த வேலையாகக் கூட அது இருக்கலாம். அதனால் தான் இயேசு காற்றையும், கடலையும் கடிந்து கொண்டிருக்கலாம்.

இப்போது இயேசு, கரையேறி நடந்து கொண்டிருக்கிறார். லேகியோன் எனும் பேய்கூட்டம் பிடித்திருந்த இரண்டு பேர் இயேசுவுக்கு எதிரே வருகின்றனர். இலேகியோன் என்பது ஆறாயிரம் வீரர்களைக் கொண்ட ரோம படை. நிராகரிக்கப்பட்டு, பரிதாபத்துக்கும் பயத்துக்கும் உரியவர்களாய் அவர்கள் கல்லறைகளில் சுற்றி வந்தனர். அவர்களை இயேசு நலமாக்குகிறார். அவர்களிடமிருந்த பேய்களை இரண்டாயிரம் பன்றிகளுக்கு இடையே அனுப்பினார். பன்றிகள் சரிவில் ஓடி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டன.

நலமானவர் இயேசுவை பணிய, ஊர் மக்களோ பன்றிகள் போய்விட்டதே என பதறுகின்றனர். இயேசுவை அந்த இடத்தை விட்டு அகலுமாறு வேண்டுகின்றனர். இயேசுவும் விடைபெறுகிறார்.

*

இந்த பகுதி சில புரிதல்களையும், சிந்தனைகளையும், கேள்விகளையும் எழுப்புகிறது.

1.இயேசு படகில் ஏறி இந்தப் பகுதிக்கு வருகிறார். வந்து இறங்கிய அவர் இருவரை நலமாக்குகிறார். பின்னர் மக்களுடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்டு மீண்டும் படகேறி திரும்புகிறார். தன்னை வரவேற்காத இடங்களில் இயேசு தங்குவதில்லை. யாரையும் கட்டாயப்படுத்தும் நிலையை இயேசு எப்போதுமே எடுப்பதில்லை. அவர் பாதம் பட்டதும் நன்மை விளைகிறது, ஆனாலும் மக்கள் இயேசுவை நிராகரிக்கின்றனர்.

நமது வாழ்க்கையிலும் இயேசுவை நாம் அனுமதிக்காதவரை அவர் நமது வாழ்வில் செயலாற்றுவதில்லை. நமது ஆர்வத்திலும், அழைப்பிலும், அன்பிலுமே இறைமகனின் செயலாற்றல் நமது வாழ்வில் இருக்கும். நமது வாழ்க்கையை திரும்பிப் பார்ப்போம், நாம் இயேசுவை அழைக்கிறோமா ? அல்லது புறக்கணிக்கிறோமா ?

2. இயேசு அந்தப் பகுதிக்கு வந்தபோது பேய் பிடித்த இருவர் இயேசுவின் முன்னால் வருகின்றனர். இங்கே ஒரு முரண் முன்னிறுத்தப்படுகிறது. “இதயத்தில் இருக்க வேண்டிய இயேசு வெளியே நிற்கிறார், வெளியே இருக்க வேண்டிய சாத்தான் உள்ளே இருக்கிறான் !”. இந்த இடமாற்றம் தான் அந்த மனிதர்களுடைய வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது.

நமது வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்பதை வைத்தே நமது வாழ்க்கை அமையும். இயேசுவை இதயத்தில் வைத்திருந்தால் நாம் இறைவனுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்வோம். இறைவனை மகிழ்விக்கும் செயல்களைச் செய்வோம். ஆன்மீகம் ஆழப்படும் காரியங்களில் கவனம் செலுத்துவோம். உலக சிந்தனைகளான பணம், பதவி, புகழ், உல்லாசம் போன்றவை நமது இதயத்தில் வேரூன்றினால் அவற்றுக்குத் தான் நாம் நீர்வார்ப்போம். அப்போது இயேசு வெளியேற்றப்படுவார்.யார் உள்ளே யார் வெளியே என்பதில் தெளிவாக இருப்போம்.

3. அந்த இருவரும் மிகவும் கொடியவர்களாக இருந்தார்கள். காரணம் அவர்களுக்குள் இருந்த தீய ஆவிகளின் வேலை. அவர்கள் பிறருக்கும், தனக்கும் ஊறு விளைவிப்பவர்களாக இருந்தனர். கற்களைக் கொண்டு தங்கள் உடலை தாங்களே கீறிக்கொள்ளும் நிலையில் இருந்தனர்.

நமக்குள் என்ன ஆவி இருக்கிறது என்பதே நமது வாழ்க்கையையும் தீர்மானிக்கும். நாம் பிறரோடு எப்படி உறவு கொள்கிறோம் என்பதையும் அதுவே தீர்மானிக்கும். நாம் பிறருக்கு கொடுமை செய்பவர்களாக இருக்கிறோமா ? கருணை செய்பவர்களாக இருக்கிறோமா ? நமது உடலை காயப்படுத்துகிறோமா ? அது இறைவனின் ஆலயம் என கௌரவப்படுத்துகிறோமா ? நமது செயல்களை, நமது சிந்தனைகளை, நமது கோபத்தை ஆராய்வோம். நமது வாழ்வில் இறைவனின் ஆளுமை இல்லையேல், அதை பெற்றுக் கொள்ள முடிவெடுப்போம்.

4. தீய ஆவி பிடித்திருந்தவர்கள் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் மீது உண்மையான அன்பு செலுத்த ஆட்கள் இல்லை. குடும்பம், நண்பர்கள், சமூகம் என அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய வாழ்க்கை கல்லறைகளோடு இருக்கிறது. கல்லறைகள் சாவின் அடையாளம். கல்லறைகளோடு வாழ்க்கை என்பது சாவான செயல்களோடு செய்கின்ற வாழ்க்கை.

நமது வாழ்விலும் நாம் சுயநலம், பெருமை, விரோதம் போன்ற தீய ஆவிகளை உள்ளத்தில் நிரப்பும் போது தனிமைப்படுத்தப்படுகிறோம். ஒருவகையில் நாமே நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்கிறோம். கூட்டத்தில் இருந்தாலும் தனிமையாய் இருப்போம். நமது வாழ்க்கை பிறருக்கு எந்த வகையிலும் பயன்படாததாய் இருக்கும். அத்தகைய வாழ்க்கையை விலக்கி, மற்றவரோடு இணைந்து வாழும் அன்பு வாழ்க்கையை வாழ்வோம். அதற்கான ஆவியையே இதயத்தில் இருத்துவோம்.

5. “இறை மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?” என பேய்கள் அவரிடம் பேசின. பேய்களுக்கு வாழ்க்கையின் முடிவும், அவர்களின் முடிவும் என்ன என்பது தெரியும். இறுதித் தீர்ப்பு நாளும் தெரியும். எனவே தான் அவை பதட்டமடைகின்றன. தங்கள் காலத்துக்கு முன்பே இறைமகன் தங்கள் முன்னே நிற்கிறாரே என அவை பதட்டமடைகின்றன.

பேய்களுக்குத் தெரிந்த நியாயத் தீர்ப்பு நாள் அவற்றை அச்சப்படுத்துகின்றன. ஆனால் அதே நியாயத் தீர்ப்பு நாளைக் குறித்து நமக்கும் தெரியும். ஆனால் அது நம்மை சலனப்படுத்துவதில்லை. காரணம் அதன் உண்மைத் தன்மையும், வீரியமும் நமக்குள் ஆழமாய்ப் பதியவில்லை. இயேசு இறைமகன் என்பதை சாத்தானே உரக்கச் சொல்லி சாட்சி பகர்வது முரண். ஆனால், அது நமது விசுவாச வாழ்க்கைக்கான சாவாலின் குரல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

6. சாத்தான் நம்மை முழுமையாய் ஆக்கிரமிக்கும். பேய் பிடித்த நபரின் செயல்களை பேய் தான் தீர்மானிக்கிறது. பேச்சுகளை பேய் தான் தீர்மானிக்கிறது. நடவடிக்கைகளை பேய் தான் தீர்மானிக்கிறது. முடிவுகளை பேய் தான் தீர்மானிக்கிறது. அந்த மனிதர்கள் அவர்களுடைய இயல்பை முழுமையாக இழந்து விட்டு பேயின் இயல்புக்காய் வாழத் தொடங்கி விடுகின்றனர்.

நமது வாழ்க்கையில் நமது உள்ளத்தில் என்னென்ன தீய ஆவிகள் இருக்கின்றன ? பணம், புகழ், பதவி, ஆடம்பரம், உல்லாசம், கேளிக்கை, சிற்றின்பம் என என்ன இருந்தாலும் அவை தான் நம்மை முழுமையாய் ஆக்கிரமிக்கும். நமது செயல்களும், பேச்சும், முடிவுகளும் அவற்றைத் திருப்திப்படுத்துவதாகவே இருக்கும். எனவே நமது உள்ளே அத்தகைய ஆவிகளை நிரப்பாமல் இருப்போம்.

7. இயேசு தருகின்ற விடுதலை முழுமையானது. உண்மையானது. பேய் பிடித்த இருவரும் ஒரே வினாடியில் பேய்கள் நீங்கப்பெற்று வாழ்க்கைக்குள் வந்தனர். அவர்களுடைய வாழ்க்கை முறை மாறியது. ஆடைகள் அணிந்து முழு மனிதராக மாறுகின்றனர். சாதாரண வாழ்க்கையிலிருந்து முழுமையான யூ டர்ன் அடித்து அவர்களுடைய வாழ்க்கை மாறுகிறது.

நமது வாழ்க்கையிலும், இதயத்தை ஆக்கிரமித்திருக்கும் இருட்டை இறைவனைக் கொண்டு விரட்டும் போது நமக்கு முழுமையான விடுதலை கிடைக்கிறது.விடுதலை கிடைத்த பின் நமது வாழ்க்கை முழுமையாய் இறைவன் விரும்பும் வாழ்க்கையாய் மாறிப் போகும். அதற்கு நாம் நமது மனதை மூடிக் கிடக்கும் மாயையான ஆசைகளை விட்டு விட்டு ஆண்டவரைப் பற்றிக் கொள்ளும் ஆர்வம் கொள்ள வேண்டும்.

8. ‘எங்களை பன்றிகளிடம் அனுப்பும்’ என தீய ஆவிகள் கத்தின. இயேசு அவற்றை பன்றிகளிடையே துரத்தினார். தீய ஆவிக்கு பன்றிகளே போதுமானதாய் இருக்கிறது. தூய ஆவிக்கு தான் இதயங்கள் தேவைப்படுகின்றன. தீய ஆவியை இயேசு விரட்டுகிறார், தூய ஆவியை இறைவன் அனுப்புகிறார். பிலேயாமிடம் கழுதையை, எலியாவிடம் காகத்தை இறைவன் அனுப்புகிறார்.

நமது வாழ்க்கையில் நாம் தூய ஆவியை வேண்டிப் பெற்றுக் கொள்ளாவிடில், தீய ஆவிகள் நம்மை அண்டிவந்து பற்றிக் கொள்ளும். பின்னர் இறைவனின் அருளினால் மட்டுமே அவை விடைபெறும். தீய ஆவிகள் அழிவதில்லை. அவை இடம் மாறி இடம் மாறி பயணித்துக் கொண்டே இருக்கும். நமது வாழ்க்கையில் நமது ஆசைகள், முதன்மைச் சிந்தனைகள் இவற்றைக் கவனிப்போம். அவை தூய ஆவியின் கனிகளாய் இருக்கின்றனவா ? இல்லை தீய ஆவியின் களைகளாக இருக்கின்றனவா ?

9. பேய்கள் பன்றிகளில் நுழைந்தபோது பன்றிகள் தண்ணீரில் பாய்ந்து இறந்து போயின. சுமார் இரண்டாயிரம் பன்றிகள். மிகப்பெரிய பொருளாதார இழப்பு. ஊரில் ஒதுக்கப்பட்ட இரண்டு பேர் நலமடைவதை விட பொருளாதாரமே அவர்களுக்கு முக்கியமானதாய் இருந்தது. மனித நேயத்தை விட, செல்வ நேசமே அதிகமாய் இருந்தது. எனவே அவர்கள் இயேசுவை அந்த இடத்தை விட்டு அகலுமாறு வேண்டினர். இவர் இங்கே இருந்தால் இன்னும் நிறைய பொருளாதார இழப்பு ஏற்படுமோ என பயந்தனர்.

நமது வாழ்க்கையிலும் இயேசு வந்தால் இழப்புகள் ஏற்படும் என அஞ்சுகிறோம். நமது ஆன்மீக வாழ்க்கை தெளிவடைந்து விடும் எனும் மகிழ்ச்சியை விட நமக்கு இழப்பு வருமோ எனும் அச்சமே அதிகமாய் இருக்கிறது. நமது புகழுக்கும், நமது பணத்துக்கும், நமது தொழிலுக்கும் இயேசுவால் நஷ்டம் வந்து விடுமோ என அஞ்சுகிறோம். அந்த பயமே இயேசுவை நாம் ஏற்றுக்கொள்ளாததன் காரணமாய் இருக்கலாம். அத்தகைய பயங்களை உதறுவதே முதல் தேவை.

10. சுகமடைந்தவர் இயேசுவிடம் வந்து, ‘நானும் உம்மோடு வருகிறேன்’ என்று சொல்ல, இயேசுவோ “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். நற்செய்தி அறிவித்தலின் பணி வீடுகளில் தொடங்க வேண்டும். அது பின்னர் விரிவடைய வேண்டும் என்பதே இயேசுவின் போதனை. எல்லா இடங்களிலும் இயேசு போதிக்க முடிவதில்லை, எனவே இயேசு அவருக்கான நபர்களை அனுப்புகிறார். பேய்கள் நீங்கிய அந்த மனிதர், ‘தெக்கபோலி’ முழுதும் நற்செய்தி அறிவித்தார். அதாவது பத்து நகர்களில் நற்செய்தியை அறிவித்தான். மக்கள் முன்னிலையில் ஒரு சாட்சியாய் வாழ்ந்தார்.

நமது பழைய வாழ்க்கை எப்படி இருந்தாலும், இயேசுவின் தூய்மையாக்கலுக்குப் பிறகு நாம் நற்செய்தி அறிவிப்பவர்களாக மாறுகிறோம். இல்லத்தில், உறவினரிடம் இந்த பணி தொடங்குகிறது. எப்போது யாருக்கு அழைப்பு வரும் என்பது தெரியாது. அழைக்கப்படும் அழைப்பில் நிலையாக இருக்க வேண்டும். இயேசுவோடு நடப்பது மட்டுமல்ல, இயேசுவைச் சுமந்து நடப்பதும் இறைவனின் அழைத்தலே !

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

 

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 11 : யாயிர் மகள் குணமடைதல்

இயேசு செய்த புதுமைகள் 11 : யாயிர் மகள் குணமடைதல்

Image result for Jesus raises the daughter ofமத்தேயு 9:18, 19, 23..26
மார்க் 5 : 21..24; 35..43

இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார்.
இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள்.

அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.

அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு” என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

***

யாயீர் என்பவர் யூதர்களுடைய தொழுகைக் கூடம் ஒன்றின் தலைவர். அவருடைய மகள் சாகும் தருவாயில் இருந்தபோது அவர் இயேசுவைத் தேடி வருகிறார். பணம், செல்வாக்கு, மதம் எதுவும் கை கொடுக்காத சூழலில் அவர் வாழ்வளிக்கும் இறைவனைத் தேடி வருகிறார். இயேசு வரும் முன் அந்த சிறுமி இறந்து விடுகிறார். இயேசு இறந்து போன அந்த சிறுமிக்கு உயிர் கொடுக்கிறார்.

இந்த இறைவார்த்தைகள் நமக்கு பல்வேறு சிந்தனைகளை தருகின்றன.

Image result for Jesus pencil art1. தனது மகள் சாகும் தருவாயில் இருக்கும் போது யாயீர் சரியான முடிவை எடுக்கிறார். வாழ்வளிக்கும் இயேசுவைத் தேடி வருகிறார். மகள் எப்போதுவேண்டுமானாலும் இறக்கலாம் எனும் நிலை. அழுகின்ற தாய்க்கு ஆறுதலாய் இருக்க வேண்டுமே எனும் சிந்தனை ஒரு புறம் அழுத்த அவர் இயேசுவைத் தேடிச் செல்ல முடிவெடுக்கிறார்.

‘மரணத்துக்காகக் காத்திருக்காமல், வாழ்வைத் தேடிச் சென்றார்” யாயீர். நமது வாழ்க்கையிலும் பல்வேறு சூழல்கள் நம்மை எழவிடாமல் அழுத்திப் பிடிக்கின்றன. அப்போது நாம் என்ன செய்கிறோம் ?. வாழ்வளிக்கும் இறைவனைத் தேடிச் செல்கிறோமா ? இல்லை வீழ்ந்த இடத்திலேயே கிடக்கிறோமா என சிந்திப்போம். நமது வாழ்வில் பாவத்தினால் செத்துக்கொண்டிருப்பதை வெறுமனே வேடிக்கை பார்க்கிறோமா, பாவத்திலிருந்து மீட்பவரைத் தேடிச் செல்கிறோமா ?

Image result for Jesus pencil art2. யாயீர் என்பவர் தொழுகைக் கூடத்தின் தலைவன். ஊரில் அனைவராலும் மதிக்கப்படுபவன். மத சிந்தனைகளில் ஊறியவன். ஆன்மீகவாதி என மக்களால் மரியாதையோடு பார்க்கப்படுபவன். இயேசுவைத் தேடிச் சென்றால் அவருடைய சக மதவாதிகளால் தூற்றப்படலாம், அல்லது இவரது ஆன்மீக பலத்தை மக்கள் சந்தேகப்படலாம். ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இயேசுவைத் தேடிச் சென்றார்.

தூற்றுபவர்கள் தூற்றிக் கொண்டே தான் இருப்பார்கள். குறை கண்டுபிடிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் குறைகண்டுபிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். நாம் பிறருடைய கருத்துகளுக்குப் பயந்து அமைதியாய் இருக்கிறோமா ? போலியான அந்த பிம்பங்களையெல்லாம் தாண்டி இயேசுவைத் தேடிச் செல்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்

Image result for Jesus pencil art3. இயேசுவை நெருங்கிய அவர் அவருடைய பாதங்களில் விழுகிறார். மரியாதை பெற்றுப் பழக்கப்பட்ட மனிதர் இப்போது மரியாதை கொடுக்க வருகிறார். நமது கர்வத்தின் அத்தனை கிரீடங்களையும் உடைத்து தாழ்மையின் தாழ்வாரங்களில் நடக்கும் போது தான் இயேசுவின் வழியில் வருகிறோம் என்று அர்த்தம். நம்மை முற்றிலும் தாழ்த்தி இறைவனின் பாதத்தில் விழும்போது மட்டுமே வாழ்க்கையில் எழ முடியும்.

யாயீர் என்பவர் செய்த அந்த செயல், அவர் தனது அத்தனை அந்தஸ்தையும் கழற்றி விட்டு முழுமையாய் இயேசுவை நம்பி வந்தார் என்பதன் அடையாளம். நமது வாழ்விலும் இயேசுவின் பாதத்தில் விழ தடையாய் இருக்கும் அத்தனை பெருமைகளையும் தாண்டுவோம்.

Image result for Jesus pencil art4. “நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என இயேசுவிடம் வேண்டுகிறார் யாயீர். தனது மகள் சாகும் நிலையில் இருக்கிறார். எல்லா மருத்துவ வழிகளையும் பரிசோதித்துப் பார்த்தாயிற்று. எல்லாரும் செபித்தும் பார்த்தாயிற்று. கடைசி சரண் இயேசு மட்டுமே. அதையே யாயீர் செய்தார். ஆனால் இயேசு நேரடியாய் வந்து அவள் மீது கையை வைத்தால் மட்டுமே அவள் பிழைத்துக் கொள்வாள் என அவர் நினைக்கிறார்.

“இயேசுவால் முடியும்” என்பதை நம்பும் நாமும், பல வேளைகளில் ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே அவர் நமக்கு உதவி செய்ய முடியும் என அவருடைய வல்லமையை குறைத்து மதிப்பிட்டு விடுகிறோம். நமது வேண்டுதல்களை இறைவனிடம் சொல்லும் போது, எப்படி அவர் செயல்படவேண்டும் எனும் நிபந்தனைகள் விதிப்பது அறிவீனம் என்பதை உணர்வோம்.

Image result for Jesus pencil art5. “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என யாயீரின் மகள் இறந்ததும் தகவல் வருகிறது. யாயீர் உடைந்து போகிறார். செய்தி கொண்டு வந்தவர்களுடைய மனநிலையோ “இனிமேல் இயேசுவாலும் முடியாது” என்பதாகத் தான் இருந்தது. உயிர் இருந்தபோது வந்திருந்தால் ஒருவேளை சுகமாக்கியிருக்கலாம், ஆனால் இறந்த பின் நிச்சயம் முடியவே முடியாது என்பதே அவர்களுடைய எண்ணமாய் இருந்தது.

இயேசுவை நாமும் பல வேளைகளில் இப்படித் தான் பார்க்கிறோம். ஒரு காய்ச்சல் வந்தால் இயேசுவிடம் வருவதில்லை, நாலு நாளாக காய்ச்சல் விடாவிட்டால் இயேசுவிடம் வருகிறோம், ஒருவேளை இனிமேல் பிழைக்க முடியாது எனும் நோய் என சொல்லிவிட்டால், “இயேசுவாலும் முடியாது” எனும் நிலமைக்கு வந்து விடுகிறோம். நமக்கு வந்த, வருகின்ற, வரப்போகின்ற எல்லா பிரச்சினைகளை விடவும் இயேசு பெரியவர் எனும் உண்மை நமக்குத் தெரிந்து இருக்க வேண்டும்.

Image result for Jesus pencil art6. தனது மகள் இறந்த செய்தி யாயீரை உடைத்திருக்கும். வரும் வழியில் கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தால் மகள் பிழைத்திருப்பாள் என நினைத்திருக்கலாம். வரும் வழியில் இயேசு நேரம் செலவிட்டு பன்னிரண்டு ஆண்டு நோயால் வாடிய ஒரு பெண்ணுக்கு சுகமளித்திருந்தார். ஒருவேளை இயேசு அப்படி நேரம் செலவிடாமல் இருந்திருக்க வேண்டும் என யாயீர் நினைத்திருக்கலாம்.

நமது வாழ்க்கையிலும் இயேசு நமது செபங்களுக்குப் பதிலளிக்க காலம் தாழ்த்துவது போல நாம் உணரலாம். நாம் கேட்டபின் செபம் செய்த பலருக்கு செபத்துக்கான பதில் வந்திருக்கலாம். நம்முடைய செபத்துக்கான பதில் தாமதமாகியிருக்கலாம். எதைப்பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை. கடவுள் சினியாரிடி பார்த்து செபத்துக்கு பதில் கொடுப்பவர் அல்ல. இயேசுவின் நேரம் கன கட்சிதம். அது எப்போது என்பதை அவரே அறிவார்.

Image result for Jesus pencil art7. “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என இயேசு யாயீரிடம் சொல்கிறார். மகள் இறந்து விட்டாள் என மக்கள் சொன்னது யாயீரின் நம்பிக்கையை உடைத்தது. இனிமேல் இயேசுவால் எதுவும் செய்ய முடியாது எனும் சிந்தனை அவருடைய மனதிலும் எழுந்திருக்கலாம். கவலையும் பயமும் அவரை ஆட்கொண்டிருக்கலாம். ஆனால் இயேசு அவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்கிறார். எங்கே நம்பிக்கை இருக்கிறதோ அங்கே அச்சம் இருப்பதில்லை. எங்கே அச்சம் இருக்கிறதோ அங்கே நம்பிக்கை விடைபெற்று விடுகிறது.

நமது வாழ்விலும் நாம் பல்வேறு விஷயங்களை இறைவனிடம் கேட்கிறோம். சில நிகழ்வுகள் நம்மை பயமுறுத்துகின்றன. சில நோய்கள், சில வேலைகள், சில பிசினஸ் விஷயங்கள், சில பாதுகாப்பு விஷயங்கள் நம்மை பயமுறுத்துகின்றன. அனைத்தையும் இயேசு பார்த்துக் கொள்வார் எனும் விசுவாசம் நம்மை பயமில்லாமல் இயங்க வைக்கும். அத்தகைய விசுவாசம் வேண்டும் என்கிறார் இயேசு.

Image result for Jesus pencil art8 “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என இயேசு சொன்னபோது மக்கள் நகைத்தார்கள். அவரைப் பொறுத்தவரை மரணம் என்பது நித்திரை. நியாயத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் நித்திரை. மக்களோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. நகைத்தார்கள். இயேசு கவலைப்படவில்லை. தன்னை நகைப்பவர்களையோ, ஏளனம் செய்பவர்களையோ அவர் என்றைக்குமே பொருட்படுத்தியதில்லை. அமைதியாக தனது வேலையைப் பார்த்தார்.

நாமும், நமது வாழ்க்கையில் இயேசுவை நகைக்கும் பலரைச் சந்திக்கிறோம். அவை நம்மைக் காயப்படுத்தக் கூடாது. அது நிந்திப்பவர்களுக்கும் இயேசுவுக்கும் இடையேயான விஷயம் என விட்டு விட வேண்டும். ‘பழிவாங்குதல் என் வேலை’ எனும் இறைவனின் வார்த்தையை மனதில் கொள்ள வேண்டும். இயேசுவின் வார்த்தைகளை எந்த வகையிலும் நகைப்பவர்களாக நாம் இருக்கக் கூடாது.

Image result for Jesus pencil art9. “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு” என பொருள் படும் தலித்தாகூம் எனும் வார்த்தையை இயேசு சொன்னதும் சிறுமி உயிர்பெற்று எழுந்தார். நானே வாழ்வும் உயிரும் என்றவர் இயேசு. அதை இங்கே நிரூபிக்கிறார். வாழ்க்கை வந்ததும் மரணம் தோற்று விடுகிறது. வாழ்வின் வார்த்தைகள் மரணத்தின் கல்லறைகளை உடைக்கின்றன. வெளிச்சம், இருளை விரட்டி விடுகிறது.

நமது வாழ்க்கையில் பாவத்தின் ஆளுமை நம்மை இறந்தவர்களாக மாற்றி விடலாம். அப்போது இறைவனுடைய வார்த்தைகளே நம்மை திரும்ப அழைத்து வரும் ஆயுதம் என்பதை உணர வேண்டும். இறைவனுடைய வார்த்தைகளை நமது வாழ்வின் ஆதாரமாகப் பற்றிக் கொண்டு பாவம் எனும் மரண பள்ளத்திலிருந்து வெளியே வர வேன்டும்.

Image result for Jesus pencil art10. “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என இயேசு கட்டளையிட்டார். இயேசுவின் முதன்மைப் பணி நலமளிப்பதோ, உயிரளிப்பதோ அல்ல பாவத்தில் வாழும் மக்களுக்கு மீட்பளிப்பது. எனவே தான் தன்னை நாடி வரும் மக்கள் உலகத் தேவைகளை விட விண்ணகத் தேவைகளையே விரும்பி வர வேண்டும் என இயேசு விரும்பினார். எனவே தான் இதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கூறினார். பின் அந்த சிறுமிக்கு உணவு கொடுக்கச் சொன்னார். அது அவர் உலகத் தேவைகளை உதாசீனம் செய்யவில்லை என்பதன் வெளிப்பாடு.

நாமும் இயேசுவை எதற்காக அணுகுகிறோம் ? எதைத் தேடுகிறோம் என்பதில் கவனமாய் இருக்க வேண்டும். நமது தேடல் உலக செல்வங்களா, இறைமகனா ? தேவைகளற்ற தேடலே இறைவனின் விருப்பம். நாம் மீட்புக்காக இறைவனைத் தேடுபவர்களாக இருக்க வேண்டும்.