Posted in Vettimani

இயேசுவின் கோபம்.

Image result for angry Jesus

இயேசு கிறிஸ்து என்று நினைத்தவுடன் எப்படிப்பட்ட பிம்பம் நினைவுக்கு வருகிறது ? தொழுவத்தில் சிரிக்கும் பாலனா, கருணை வழியும் கண்களுடன் சாந்தமாய் நிற்கும் இளைஞனா, சிலுவையில் தொங்கும் மனிதரா ? இவற்றில் ஒன்று தான் பொதுவாகவே நமது சிந்தனையில் வரும்.

எப்போதேனும் கோபத்தில் முறைக்கும் இயேசுவின் முகம் நினைவுக்கு வருமா ? சாட்டையைப் பின்னி மக்களை ஓட ஓட விரட்டியடிக்கும் வன்முறை காட்சி நினைவுக்கு வருமா ? ரொம்ப சந்தேகம் தான். காரணம் நாம் உருவாக்கி வைத்திருக்கும் இயேசுவின் பிம்பம் அப்படி !

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்பது இயேசுவின் போதனைகளில் மிகவும் பிரபலமானது. அதே போல தான் ‘எதிரியையும் நேசி’ எனும் போதனையும். அடிக்கடி தனது போதனைகளில் ‘கோபம் கொள்ளாதீர்கள்’ என இயேசு எச்சரிக்கவும் செய்தார்.

கோபம் கொள்ளாதீர்கள் என மக்களுக்கு போதனை வழங்கிய இயேசு கோபம் கொண்டார் என்பது முரணாகத் தோன்றும். ஆனால் அவருடைய கோபத்தின் நிகழ்வுகளை சிந்திக்கும் போது எந்தெந்த இடங்களில் நாமும் கோபப்பட வேண்டும் என்பது நமக்கு புரியும்.

“சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்.” என்கிறது பைபிள். சினம் பாவத்துக்கு நம்மை அழைத்துச் செல்லக் கூடாது. அதற்காக இயேசுவின் வாழ்க்கையிலிருந்து எவையெல்லாம் சரியான கோபம், எவையெல்லாம் தவறான கோபம் என்பதை பார்போம்.

சரியான கோபம் !

  1. ஏழைகளை வாட்டி வதைப்பவர்கள் மீது இயேசு கோபம் கொண்டார். அவர்களை நோக்கி தனது கோபப் பார்வையை வீசி எச்சரித்தார். ஏழைகளின் நலனுக்காக எழுகின்ற கோபம் நியாயமானது !
  1. இரக்கமற்ற கடின மனங்களைக் கண்டபோது இயேசு கோபம் கொண்டார். பிறருடைய நலனுக்கும், வாழ்வுக்கும் இடைஞ்சலாக இருக்கும் இரக்கமற்ற மனநிலையின் மீது கோபம் கொள்வது நியாயமானது !
  1. மனிதநேயத்தை விட, மத சட்டங்களே முக்கியம் என முரண்டுபிடிப்பவர்கள் மீதும், வெளிவேட மதவாதப் போக்கின் மீதும் இயேசு கோபம் கொண்டார். மனிதநேயத்தை மறுதலிக்கும் இடங்களில் கோபம் கொள்வது நியாயமானது !
  1. கர்வம் கொண்டு நடந்தவர்கள் மீது இயேசு கோபம் கொண்டார். அத்தகைய மக்களைப் பின்பற்ற வேண்டாம் என இயேசு போதித்தார். தாழ்மைக்கு எதிராய் இருக்குமிடத்தில் எழுகின்ற கோபம் நியாயமானது.
  1. இறைவனின் ஆலயத்துக்கோ, மகிமைக்கோ களங்கம் விளைவிக்கும் இடங்களில் எழுகின்ற கோபம் நியாயமானது ! ஆலயத்தை விற்பனைக் கூடமாக்கிய மக்களை இயேசு அடித்து விரட்டினார்.

தவறான கோபம்.

  1. நம் மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்கள், கேலிகள், வன்முறைகளுக்காக கோபம் கொள்வது தவறானது. இயேசு தன்னை கிண்டல் செய்து, அடித்து, கொலை செய்தவர்கள் மீதும் கோபம் கொள்ளவில்லை.
  1. தன்னைப் பிறர் புரிந்து கொள்ளவில்லையே என்பதனால் இயேசு கோபம் கொள்ளவில்லை. மனம் வருந்தினார். தன் தரப்பு நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதற்காக கோபம் எழுவது தவறானது.
  1. பிறர் என்னதான் தூண்டினாலும் கோபம் கொள்வது தவறு. இயேசுவின் பொறுமையை பரிசேயர்கள் எவ்வளவோ சோதித்தனர் எனினும் இயேசு கோபம் கொள்ளவேயில்லை.
  1. இயேசுவின் கோபம் மக்களுடைய மனநிலையை மாற்றுவதற்காக மட்டுமே இருந்தது. மக்கள் மீது அவர் எப்போதும் கோபம் கொண்டிருக்கவில்லை. அவர்களை நேசித்தார். தனி மனித விரோத சிந்தனைகளோடு எழுகின்ற எந்த கோபமுமே தவறானது.
  1. பாவச் செயல்களை செய்யத் தூண்டுகின்ற எந்த கோபமும் தவறானது. அது குழந்தைகளை எரிச்சலில் அடிப்பதானாலும் சரி, செல்வந்தனிடம் கொள்ளையடிப்பதானாலும் சரி !

சுருக்கமாக,

இயேசு கோபம் கொண்டார் ! ஆனால் தன் மீதான எந்த ஒரு தாக்குதலுக்கும் அவர் கோபம் கொள்ளவில்லை. ஏழைகள் ஏமாற்றப்பட்ட போதும், போலித்தனம் தலைதூக்கியபோதும், இறைவனின் தூய்மை கேள்விக்குள்ளான போதும் அவர் கோபமடைந்தார்.

நாம் கோபம் கொள்ளும் சூழல்களை சிந்தித்துப் பார்ப்போம். பெரும்பாலானவை நம்மையோ, நம் குடும்பத்தையோ, நமது நட்பு வட்டாரத்தையோ பாதிக்கும் விஷயங்களுக்காகவே இருக்கும் ! ஏழைகளுக்காகவோ, மனிதநேயத்துக்காகவோ எழுந்ததாய் இருக்காது ! அடுத்த முறை நம் கோபத்தை பரிசீலிப்போம். அது சரியான கோபமாய் இருந்தால் கூட அது நம்மைப் பாவத்துக்கு இட்டுச் செல்லாமல் கவனமாய் இருப்போம்.

*

THANKS : Vettimani, London & Germany

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 16 : கானானியப் பெண்ணின் மகள் நலமடைதல்

(மாற் 7:24 – 30)

மத்தேயு 15:21..28

Image result for canaanite woman

இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார்.

ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர்.

அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.

ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார்.

அவர் மறுமொழியாக , “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார்.

இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

விளக்கம்

தொடர் நற்செய்தி அறிவித்தல், நலமளித்தல் போன்ற நிகழ்வுகளால் சீடர்கள் சோர்வடைகின்றனர். அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதை அறிந்த இயேசு, சுமார் ஐம்பது மைல் தொலைவிலுள்ள பகுதிக்குச் செல்கிறார். அது யூதர்கள் அல்லாத பிற இன மக்கள் வாழும் பகுதி.

அங்கும் இயேசுவின் வருகையை அறிந்து கொள்கின்ற ஒரு பெண் இயேசுவை அணுகி தன் மகளை நலமாக்க விண்ணப்பம் வைக்கிறார். இயேசு அவளுடைய விசுவாசத்தின் ஆழத்தைக் கண்டு வியந்து அவளுடைய மகளுக்கு நலமளிக்கிறார்

இந்த புதுமை நமக்கு சில படிப்பினைகளைச் சொல்லித் தருகிறது.

1. கனானேயப் பெண்ணின் அணுகுமுறை எப்படி செபிக்க வேண்டும் என்பதை நமக்குச் சொல்லித் தருகிறது. அவள் முதலில் தனது சமூக, மத, கலாச்சாரக் கட்டமைப்புகளைத் தாண்டி இயேசுவின் முன்னால் வருகிறாள். ஒரு பெண் ஒரு மதகுருவின் முன்னால் நிற்க அந்தக் காலத்தைய சமூகம் அனுமதிக்கவில்லை. ஒரு பிற இன பெண் யூதத் தலைவரின் முன்னால் நிற்பது அதை விட கடினம். தான் வாழ்கின்ற சமூகத்தின் நடுவினிலே அனைத்தையும் மறுதலித்து விட்டு இன்னொரு மத தலைவரை பணிவது மிக மிகக் கடினம். ஆனால் அந்தப் பெண் அனைத்து உலகத் தடைகளையும் மீறி, விண்ணகத் தலைவரின் முன்னால் வருகிறாள்.

நமது வாழ்க்கையில் நாம் இயேசுவைத் தேடும்போது நமது சமூக, மத, மொழி, இன, குடும்ப கட்டுப்பாடுகள் நம்மை கட்டிப் போடுகிறதா ? அனைத்தையும் மீறி, பல இடங்களில் அவமானங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தாலும் இயேசுவின் முன்னால் வருகிறோமா ? அத்தகைய தேடலும், அத்தகைய உறுதியும் நிச்சயம் நமக்குத் தேவை.

2. இயேசுவின் மௌனம் நமது விசுவாசத்தைச் சோதிக்கும் ஆயுதம். அத்தகைய சூழல்களில் உடைந்து விடாத விசுவாசம் கொண்டிருக்க வேண்டியது அத்தியாவசியம். கனானியப் பெண்ணின் கதறலை, இயேசுவின் மௌனம் மௌனமாய் எதிர்கொள்கிறது. கதறலுக்கு மௌனம் ஒரு முரணான பதில். சீடர்களுக்கு அது புரியாத புதிர். ஒரு கதறலை, ஒரு தாயின் கண்ணீர் புலம்பலை இயேசு மௌனத்தால் எதிர்கொள்வதை இப்போது தான் அவர்கள் சந்திக்கின்றனர்.

நமது விண்ணப்பங்களுக்கு பதிலாக வருகின்ற இறைவனின் மௌனம் நமது விசுவாசத்தை வலுப்படுத்தவும், இறைவன் மீதான நம்பிக்கையையும் உறவையும் ஆழப்படுத்தவும் செய்ய வேண்டும். அது நமது விசுவாசத்தை வலுவிழக்கச் செய்யக் கூடாது. கப்பல் செய்யத் துவங்கிய நோவாவுக்கு அதன் பின் பல நீண்ட ஆண்டுகள் கடவுளின் மௌனம் மட்டுமே பதிலாய் வந்தது. எனினும், அழைப்பையும், விசுவாசத்தையும் அவர் விட்டு விடவில்லை. இன்னும் ஆழமாய்ப் பற்றிக் கொண்டார். இறைவனின் மௌனத்தை விசுவாச வளர்ச்சிக்கான படிக்கட்டாய் எடுத்துக் கொள்ளப் பழகுவோம்.

3. இயேசுவோடு நெருக்கமாய் இருப்பதாய் காட்டிக்கொள்கின்ற ஆன்மீக தலைவர்கள் சில வேளைகளில் நமது விசுவாசத்தை அசைப்பதுண்டு. இயேசுவின் சீடர்கள் கனானேயப் பெண்ணுக்காக இயேசுவிடம் பரிந்து பேசவில்லை. கனானேயப் பெண்ணின் தேவையைத் தீர்த்து வையுங்கள் என விண்ணப்பிக்கவில்லை. ‘கத்திக் கொண்டு வரும்’ தொந்தரவை தீர்க்க மட்டுமே நினைத்தார்கள். நலமளிக்கிறாரா ? இல்லையா என்பது அவர்களுக்கு இரண்டாம் பட்சம். மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் ‘நல்லவர்கள்’ எனும் பிம்பம் உடைந்து விடுமோ எனும் கவலை இருந்திருக்கலாம். ‘இரக்கமற்றவர்கள்’ எனும் முத்திரை விழுமோ எனும் பயமும் இருந்திருக்கலாம். ஆனாலும் அந்தப் பெண்ணின் பார்வை இயேசுவின் மீதே இருந்தது, சீடர்களின் மீது அல்ல !

நமது பார்வை எங்கே இருக்கிறது ?. இயேசு மௌனமாய் இருக்கிறார். நமது ஆன்மீகத் தலைவர்கள் நமக்கு ஆறுதலாய் இருக்கவில்லை. நமது விசுவாசத்தில் நாம் பின் வாங்குகிறோமா ? இல்லை நாம் இயேசுவின் மீது வைத்த பார்வையை விலக்காமல் இருக்கிறோமா ?

3. கனானேயப் பெண்ணின் தொடர் வேண்டுதலை, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” எனும் இயேசுவின் பதில் தடுத்து நிறுத்தியது. மூன்றாவது தடங்கல் அவளுடைய செபத்துக்கு நேராய் எழுந்தது. ஆனால் இப்போது அவள் இயேசுவின் முன்னால் வந்து பணிகிறாள். மூன்றாவது தடை அவளை பின்னோக்கிச் செல்ல வைக்கவில்லை, இயேசுவின் முன்னால் வந்து மண்டியிட வைக்கிறது ! பின்னால் இருந்தபோது எழுந்த கதறல் ஒலி, இப்போது விண்ணப்பமாய் உருமாறிவிட்டது. இயேசுவை நெருங்க நெருங்க, நமது கதறல் மெல்லிய விண்ணப்பமாய், பணிவான வேண்டுதலாய் மாறிவிடுகிறது.

நாம் இயேசுவை நமது தேவைகளின் கதறலோடு பின் தொடருகிறோம். அவரது மௌனம் நம்மை அலட்டுகிறது, ஆன்மீக தலைவர்களின் பதில் நம்மை சோர்வடையச் செய்கிறது, இயேசுவின் பதில் நம்மை பதற வைக்கிறது ! எனினும் இயேசுவைப் பின் செல்கிறோமா ? இயேசுவின் அன்பை முழுமையாகப் புரிந்து கொள்ளாத அந்த கானானேயப் பெண்ணின் விசுவாசம், புரிந்து கொண்ட நம்மிடம் இருக்கிறதா ?

4. “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” எனும் இயேசுவின் பதில் அந்தக் காலத்தில் பிரபலமாய் இருந்த‌ ஒரு பழமொழி ! இஸ்ரயேல் மக்களுக்காக வந்த மீட்பை பிற இனத்தாருக்குக் கொடுக்கும் காலம் வரவில்லை என்கிறார் இயேசு. நாய்க்குட்டிகளுக்கு உணவைக் கொடுக்க மாட்டேன் என்பதல்ல அதன் பொருள். முதலில் பிள்ளைகள், பிறகு நாய்க்குட்டிகள் எனும் உலக வழக்கையே இயேசு சொன்னார். தனது வருகையின் நோக்கம் இஸ்ரயேலரின் மீட்பு, அதன்பின்பே பிற இனத்தாரின் மீட்பு என்பதையே அவரது பதில் சொன்னது.

கானானேயப் பெண்ணின் விசுவாசம் ‘குழந்தை மீதான பரிதவிப்பா’, ‘இயேசுவின் மீதான பெரும் நம்பிக்கையா ?’ என்பதை உரசிப் பார்த்தது இயேசுவின் கேள்வி. அவள் கோபம் கொள்ளவில்லை அவள் தாழ்மை கொண்டாள். தன்னை ஒரு நாய்க்குட்டியாய் அவள் ஏற்றுக் கொண்டாள். “ஆம் ஐயா” என தனது நிலையை அவள் ஒத்துக் கொண்டாள். இயேசுவை நாடி வரும் ஒவ்வொருவருக்கும் அந்தத் தாழ்மை இருக்க வேண்டியது அவசியம். நமது தொடர் வேண்டுதல்கள் தாழ்மையோடு இருக்கின்றனவா ?

5. “தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என கானானேயப் பெண் இயேசுவிடம் சொல்கிறாள். “தாவீதின் மகனே” என அழைத்த பெண், இப்போது உரிமையாளரே என அழைக்கிறார். தன்னை அடிமையாக, நாய்க்குட்டியாக பாவித்துக் கொண்ட அந்த பெண் உரிமையாளரின் கனிவை எதிர்பார்த்து நிற்கிறாள்.

அனைத்திற்கும் உரிமையாளர் இயேசுவே ! அந்த சிந்தனையோடு நாம் இறைவனை நாடுகிறோமா ? அவரது கருணை இருந்தால் எத்தகைய சிக்கலையும் கடந்து விட முடியும் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையோடு இயேசுவை அணுகுகிறோமா ?

6. “தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” எனும் பதிலின் வழியாக அந்தப் பெண் இயேசுவிடம் தனக்கு பதில் உடனே வேண்டும் என்கிறாள். “பிள்ளைகள் தின்ற பின்பு மிஞ்சுவது அல்ல, பிள்ளைகள் தின்னும் போதே சிந்துவது” என அவள் கேட்கிறாள். அவளது விசுவாசம் இயேசுவின் உடனடி ஆசீர்வாதம். அதற்காக விடாமல் இயேசுவைப் பற்றிக் கொள்கிறாள், பணிவின் பள்ளத்தாக்கில் தன்னை இட்டுக் கொள்கிறாள்.

நமது வேண்டுதல் பணிவோடும், தொடர்ந்த துணிவோடும் இருக்கிறதா ? நான் அருகதையற்றவன், உமது மேஜையிலிருந்து சிந்தும் துணிக்கைகள் வேண்டும் என சொல்கிறோமா ? “உமது ஆடையின் நுனி போதும், உமது வார்த்தையின் ஒலி போதும்” என விசுவாசத்தைக் காட்டிய மாந்தர்கள் போல நாம் செயல்படுகிறோமா ?

7. அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் , என்கிறார் இயேசு. நாய்க்குட்டியாய் உருவகிக்கப்பட்டவள் விசுவாசத்தின் வலிமையால் ‘அம்மா’ என அழைக்கப்படும் நிலைக்கு உயர்த்தப்படுகிறாள். அவளது விருப்பமும் நிறைவேற்றப்படுகிறது. அவளது மகளின் நிலை சீராகிறது. “அந்நேரம்” அவளது மகள் நலம்பெறுகிறாள். இப்போது பந்தியில் சிந்தியதை அல்ல, பரமனின் பந்தியிலேயே ஆசீரைப் பெற்றுக் கொள்கிறாள் அவள்.

விசுவாசமே மலைகளை அசைக்கும் ! விசுவாசமே இயேசுவின் இதயத்தையும் அசைக்கும். யூதமக்கள் நிராகரிப்பின் மனதோடு அலைகையில் பிற இனத்தார் விசுவாசத்தின் விழுதுகளைப் பற்றித் திரிந்தது இயேசுவுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. நமது விசுவாசம் எப்படி இருக்கிறது ?

8 ஒரு தாயின் பிரார்த்தனை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை கானானியப் பெண்ணின் பிராத்தனை நமக்கு சொல்லித் தருகிறது. எத்தனை தடைகள் இருந்தாலும், எத்தனை மௌனம் பதிலாய் வந்தாலும், கூட இருக்கும் ஆன்மீகத் தலைவர்கள் தடுத்தாலும், இறைவனே நமக்கு எதிராய் இருப்பதாய்த் தோன்றினாலும் விடாமல் அவரைப் பற்றிக் கொள்ளும் விசுவாசம் இருக்க வேண்டும். மூன்று குணாதிசயங்கள் செபத்தில் நிச்சயம் இருக்க வேண்டும். பணிவு, விடாமுயற்சி மற்றும் விசுவாசம். இந்த மூன்றும் இருந்தால் அந்த செபம் இயேசுவால் அங்கீகரிக்கப்படும் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

பல நேரங்களில் நமது செபங்கள் ஒரு கடமையின் வெளிப்பாடாகவோ, நமது மனசாட்சியைத் தடவிக் கொடுக்கும் நிகழ்வுகளாகவோ, குற்ற உணர்ச்சியை அழிக்கும் ஆயுதமாகவோ அமைந்து விடுகிறது. கடமைக்காக பேசும் மகனின் உரையாடல் தந்தையை பிரியப்படுத்துவதில்லை. ஆத்மார்த்த அன்போடு பேசும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும். உரிமையோடும், விசுவாசத்தோடும் அவரைத் தொடரும் வலிமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தாழ்மை, தொடர் செபம் மற்றும் ஆழமான விசுவாசம் மூன்றும் நம்மிடம் இருக்கிறதா ?

9 இந்த புதுமையில் இயேசுவே வானிலிருந்து இறங்கி வந்த உணவாகவும் காட்சியளிக்கிறார். இஸ்ரயேல் மக்களுக்காக வந்த மீட்பர், பிற இனத்தாரான நமக்கு மீட்பராகவும் மாறிய நிகழ்ச்சியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

இயேசு எனும் உணவு நமக்காக இன்று தரப்பட்டிருக்கிறது. அந்த உணவு பிள்ளைகள் எனும் உரிமையோடு இன்று நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இயேசு எனும் செடியின் கிளைகளாக இருக்கிறோம், பந்தியின் கீழ் நாய்க்குட்டிகளாக அல்ல. நமது வாழ்க்கையும், விசுவாசமும் எப்படி இருக்கிறது என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

10. ஓய்வு தேடிச் சென்ற இயேசு ஓய்வை விட்டு விட்டு மனித நேயப் பணியைச் செய்கிறார். இயேசு எப்போதும் தந்தையோடு செபத்தில் ஒன்றித்திருந்தார். இந்த கானானேயப் பெண்ணின் மகளைக் குணமாக்கும் பொருட்டு தந்தை இயேசுவை இங்கே அனுப்பியிருக்கலாம். தந்தையிடம் பெற்றுக் கொள்வதை மட்டுமே செய்து வந்த இயேசு இங்கும் அதையே நிறைவேற்றுகிறார் எனக் கொள்ளலாம். அதன்பின் உடனே இயேசு அந்த இடத்தை விட்டு அகன்று கலிலேயக் கடற்கரைக்கு வருகிறார்.

நமது வாழ்க்கையும் எப்போதும் செபத்தில் இறைவனோடு ஒன்றித்திருக்கும் வகையில் அமைய வேண்டும். அப்போது நமது செயல்கள் இறைவனுக்கு பிரியமான வகையில் அமையும்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*

 

Posted in Articles, Sunday School

Sunday School Essay: உலகத்துக்கொத்த வேஷம் தரியாதிருங்கள்

Image result for kid speech

முன்னுரை :

“ஊரோடு ஒத்து வாழ்” என்று பழமொழி சொல்வார்கள் அதை ஆங்கிலத்தில் “பி எ ரோமன் வென் யூ ஆர் இன் ரோம்” என்பார்கள். ஆனால் கிறிஸ்தவம் நமக்கு வித்தியாசமான போதனையைத் தருகிறது. உலகத்துக்கொத்த வேஷம் தரியாதிருங்கள் என்கிறது ரோமர் 12:2. இந்த உலகத்தில் வாழும் போது எப்படி உலகத்துக்கு ஏற்ற வேஷம் தரிக்காமல் வாழ முடியும் ? உலகத்துகொத்த வேஷம் என்பது என்ன ? அப்படி தரிக்காவிட்டால் என்ன தான் செய்ய வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் சுருக்கமாகப் பார்ப்போம்.

பொருளுரை

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”மத்தேயு 6:33 என்றார் இயேசு. உலகத்தில் வாழவேண்டுமென்றால் உலகத்தின் தேவைகளை நோக்கி நாம் ஓடவேண்டும் என்று தான் நினைப்போம். பணம் வேண்டுமா ? அதற்குரிய இலட்சியங்களை வைத்து விட்டு கடுமையாக உழைக்க வேண்டும். பதவி வேண்டுமா ? எந்நேரமும் அதற்குரிய சிந்தனைகளிலேயே இருக்க வேண்டும். இப்படித் தான் உலகம் போதிக்கும். கடவுள் சொல்கிறார், கடவுளை மட்டும் தேடு, உனக்கு என்னென்ன தேவையோ அதை நான் தருகிறேன்.

அப்படி உலகம் எதைத் தரித்திருக்கிறது ? நாம் எதைத் தரிக்க வேண்டும் ? முக்கியமான ஐந்து விஷயங்களை மட்டும் நாம் இங்கே பார்ப்போம்.

  1. செல்வங்கள் :

பெரும்பாலான மக்களுடைய தேடல் செல்வத்தைச் சேமிப்பதிலேயே இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போதும் சரி, கல்லூரியில் படிக்கும் போதும் சரி, வேலைக்குச் செல்லும் போதும் சரி, எப்போதும் சிந்தனை செல்வத்தைச் சேர்ப்பதிலேயே இருக்கிறது. “பணம் இல்லேன்னா ஒரு பய மதிக்க மாட்டான்” என பணம் சம்பாதிப்பதை நியாயப்படுத்தவும் செய்கிறோம் !

நமது தேடல் பணத்தை நோக்கியல்ல, பரமனை நோக்கி இருக்க வேண்டும்.

உலக செல்வங்கள் தற்காலிகமானவை, விண்னக செல்வமே நிரந்தரமானது

நாம் செல்வங்களை சேமிக்க வேண்டியது, வங்கியிலல்ல விண்ணகத்தில்.

அதற்கு நாம் இறைவனின் வார்த்தைகளின் படி வாழவேண்டும். உலகத்தின் கோட்பாடுகளின் படியல்ல.

  1. புகழ் !

‘தோன்றிற் புகழொடு தோன்றுக” என்கிறது இலக்கியம். வாழும்போது பேரோடும் புகழோடும் வாழவேண்டும் என்கிறது வாழ்வியல். எந்த அளவுக்கு நாம் பெயரோடு  வாழ்கிறோமோ அந்த அளவுக்கு உலகின் பார்வைக்கு நாம் பெரியவர்கள். இது உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிப்பது !

இயேசு விண்ணக தெய்வமாய் இருந்தவர், புகழை விட்டு இகழ்ச்சியின் சிலுவையை நாடினார்.

தூதர்களின் வாழ்த்தைக் கேட்டவர், மக்களின் இகழ்ச்சியைக் கேட்டார்

தரையில் தங்கம் விரித்த விண்ணகம் விட்டு, பாறை இடுக்குகளில் படுத்து உறங்கினார்.

நாம் புகழைத் தேடுபவர்களாக அல்ல, இயேசுவின் புகழை பறைசாற்றுபவர்களாகவே இருக்க வேண்டும்.

  1. பெருமை !

‘இவனை பிள்ளையாய் பெற்றதுக்கு பெருமைப்படுகிறேன்’ என்று அடிக்கடி சொல்வார்கள். இப்படிச் செய், அப்போ தான் பெருமையா இருக்கும் என்றெல்லாம் பிள்ளைகளை வழிகாட்டுவார்கள். சின்னப் பெருமை வளர வளர தற்பெருமையாகி, கர்வமாகி மனிதனையே அழித்து விடும்.

யேசு தாழ்மையின் சின்னமானார் ! நம்மிடம் யாராவது வந்து, ‘கொஞ்ச நேரம் நாயைப் போல வாழ்’ என்று சொன்னால் என்ன சொல்வோம் ? அவர்களைக் கடித்துக் குதறுவோம். இயேசுவோ கடவுள் எனும் மாபெரும் இடத்தை விட்டு, மனிதன் எனும் கீழ்நிலை இடத்தைப் பிடித்தார்.

காலங்கள் கடந்தவர், கால்களைக் கழுவினார்.

உலகின் முதலாளி, தச்சுக் கூடத்தில் தொழிலாளியானார்

உலகம் பெருமையை நோக்கி பாய்கிறது, நாம் தாழ்மையை நோக்கித் தவழ்வோம்.

  1. கேளிக்கை !

“இருக்கிறது ஒரு லைஃப் அதை ஜாலியா என் ஜாய் பண்ணணும்டா” என்பது என் வகுப்பு பிள்ளைகளே கூட சொல்கின்றனர். வாரம் ஒரு சினிமா, பிளே ஸ்டேஷன், ஜாலியாக ஊர் சுத்துதல், ஃபீனிக்ஸ் மாலில் நேரம் செலவாக்குதல் என எக்கச்சக்க ஜாலி ஐடியாக்கள் நமக்கு உண்டு. நேரத்தை இனிமையாய் செலவிடுவதாய் நினைத்து இவற்றையெல்லாம் செய்கிறோம். காரணம் நம்மை உலகம் அப்படிப் பழக்கியிருக்கிறது. மீடியா நம்மை அப்படி வசீகரித்திருக்கிறது.

இயேசுவோ தேவையற்ற கேளிக்கைகளை செய்யவில்லை. எப்போதும் தந்தையோடு செபிப்பதிலும், தனிமையாய் அவரோடு பேசுவதிலும் நேரம் செலவிட்டார். சீடர்களுக்கு போதிக்கத் தான் அதிக செலவிட்டாரே தவிர, அவர்களோடு பொழுது போக்குகளிலும், கேளிக்கைகளில் அவர் ஈடுபடவில்லை.

இறைவனோடு வாழ்தல் ஆனந்தமானது.

இறை வார்த்தைகளை நேசித்தல் அற்புதமானது.

உலகம் சொல்லும் பொய்களை விட, விவிலியம் சொல்லும் உண்மைகளை நம்புவோம்.

  1. மனிதாபிமானம்.

“ஆத்துல போட்டாலும் அளந்து தான் போடணும்” என்பது உலக மொழி. நமது கிறிஸ்தவர்கள் கூட ‘செய்யத் தக்கவர்களுக்குத் தான் செய்யணும்’ என ஒரு வசனத்தை தப்பாகச் சொல்லி தங்களது கடின மனதை நியாயப்படுத்துகின்றனர். நீதி மொழிகள் 3:27 சொல்வது இது தான், “உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே.” ! அதாவது ஒருவருக்குத் தேவை இருந்தால் நீ அவர்களுக்கு நிச்சயம் உதவி செய்ய வேண்டும் என்பதையே விவிலியம் வலியுறுத்துகிறது.

இயேசு மனிதநேயத்தின் முழு வடிவமாக இருந்தார். அன்பை எல்லோருக்கும் வாரி வாரி வழங்கினார். எந்த கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் இன்றி மக்களை நேசித்தார்.

மனிதனை நேசிக்காமல் இறைவனை நேசிக்க முடியாது

இறைவனை நேசிக்காமல் விண்ணகம் செல்ல முடியாது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், மனித நேயம் இல்லாமல் ஒருவன் விண்ணகம் நுழையவே முடியாது.

முடிவுரை

‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் செய்யலாம் தப்பில்லை’ என்கிறது உலகு.

ஆயிரம் பேருக்கு நன்மை செய்தால் கூட ஒரு தப்பு தப்பு தான் என்கிறது விவிலியம்.

உலகம் தங்களுக்கென ஒரு கொள்கையை வகுத்து வாழ்கிறது. அவர்களிடம் தெய்வ பயம் இல்லை. இறைவார்த்தை இல்லை, இறைவனைத் தேடும் வாஞ்சை இல்லை. செல்வம், புகழ், வாழ்க்கை, ஆனந்தம், கேளிக்கை, சுயநலம் என உலகின் எச்சங்களே முதன்மையாய் இருக்கின்றன. உலகின் அத்தகைய ஆடைகளை அவிழ்த்து விட்டு, இறைவனின் நீதியாகிய ஆடையை அணிவோம். இறைவனுக்கேற்ற வாழ்க்கையை வாழ்வோம்

*

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 15 : ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்

Image result for jesus feeds 5000

(மாற் 6:30 – 44; லூக் 9:10 – 17; யோவா 6:1 – 14)

இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார். மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர்.

இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்கள். அவர், “அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார்.

மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர்.

எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.


இயேசு செய்த புதுமைகளில் இந்த புதுமைக்கு ஒரு சிறப்புத் தகுதி உண்டு. மத்தேயு, மார்க், லூக்கா, யோவான், எனும் நான்கு நற்செய்திகளிலும் இடம்பெற்றுள்ள ஒரே புதுமை இது தான் ! இது அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாகியிருக்க வேண்டும்.

திருமுழுக்கு யோவான் படுகொலை செய்யப்படுகிறார். அவருடைய ஆதரவாளர்களும், அவரை தலைவராய் நினைத்தவர்களும் தளர்ந்து போகின்றனர். இன்னொரு புறம் இயேசுவின் சுகமாக்கும் வல்லமையும், போதனைகளும் மக்களை உற்சாகப்படுத்துகின்றன. எனவே திரள் திரளான மக்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்க அவரைப் பின் தொடர்கின்றனர்.

திருமுழுக்கு யோவானின் படுகொலை இயேசுவை மனதளவில் கலக்கமடையச் செய்திருக்க வேண்டும். அவர் தனிமையான இடத்துக்குச் செல்ல விரும்பினார். இயேசு தனிமையான இடத்துக்குச் செல்வது துயருற்று அழவோ, ஒளிந்து கொள்ளவோ அல்ல. தந்தையிடம் செபித்து பணிவாழ்வுக்கான ஊக்கத்தைப் பெற.

அந்த சூழலிலும் தன்னை நோக்கி மக்கள் வந்ததைக் கண்ட இயேசு அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். மக்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். நேரம் போய்க்கொண்டே இருந்தது. மாலையானது. எல்லோருக்கும் பசி ! சீடர்கள் மக்களுக்குப் பசிக்குமே, இங்கே எதுவும் கிடைக்காதே, அனுப்பி விடுங்கள் என இயேசுவிடம் கூறுகின்றனர்.

போதித்துக் கொண்டிருந்த இயேசுவின் பசி யாருக்கும் தெரியவில்லை. இயேசு அதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. நாற்பது நாள் உண்ணா நோன்பு இருக்குமளவுக்கு அவரது மனம் வலிமையாய் இருந்தது.

“நீங்களே உணவு கொடுங்கள்” என்ற இயேசு, அங்கே இருந்த ஐந்து அப்பம் இரண்டு மீனை ஆசீர்வதித்து சீடர்களிடம் கொடுக்க, சீடர்கள் பரிமாற, அப்பம் பெருகிக் கொண்டே இருந்தது. மக்கள் அனைவரும் வயிறார உண்டனர். பன்னிரண்டு கூடைகள் நிறைய மீதியும் கிடைத்தது ! இயேசு வெறுமனே நமது தேவைகளை நிறைவேற்றுபவர் மட்டுமல்ல, தேவைக்கு அதிகமாகவே கொடுப்பவர்.

ஐயாயிரம் ஆண்கள் இருந்த கூட்டம் அது. மனைவி குழந்தைகள் என ஏராளமானவர்கள் வந்திருக்கக் கூடும். எப்படியும் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை மக்கள் இருந்திருக்கலாம். அவர்களுக்குப் பசியாற்றியது, ஐந்து அப்பங்களும் இரண்டு மீனும் அல்ல ! இறைவனின் பரிவும், அன்பும்.

தன்னிடமிருந்த ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் பல்லாயிரம் பேருக்குப் பசியாற்றி, தன் முன்னால் பன்னிரண்டு கூடைகள் நிறைய நிரம்பி வழிந்ததைக் கண்ட அந்த சிறுவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியும், வியப்பும், பரவசமும் இருந்திருக்கும் !!! அதே சிறுவன் செய்த செயலை நாமும் செய்தால், அதே பரவசம் நம்மையும் பற்றிக் கொள்ளலாம்.

இந்த நிகழ்வு நமக்கு பல்வேறு ஆன்மீக சிந்தனைகளைக் கற்றுத் தருகிறது.

1. ஓய்வு கொள்ள நினைக்கும் இயேசு, மக்கள் தன்னைத் தேடி வருகையில் அவர்கள் மீது அன்பு கொள்கிறார். பரிவு கொள்கிறார். தன்னுடைய விருப்பத்தை, தன்னுடைய ஓய்வை, தன்னுடைய தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி வைத்து விட்டு, மக்களுக்காய் அந்த நேரத்தைச் செலவிடுகிறார். தன்னைத் தேடி வரும் மக்களை, ‘நாளைக்கு வாங்க’ என அனுப்பி வைப்பவர் இயேசு அல்ல ! எப்போதெல்லாம் மக்கள் வருகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களுக்குச் செலவிட அவரிடம் நேரம் இருந்தது ! அதுவே சுயநலமற்ற அன்பு !

பிறர் நம்மைத் தேடி வரும்போது நம்முடைய அசௌகரியங்களை விலக்கி வைத்து விட்டு, அவர்களுக்காக நேரம் செலவிட நாம் தயாராக இருக்க வேண்டும்.

2. “ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்”. என சீடர்கள் இயேசுவிடம் சொல்கின்றனர். அதன் காரணம், மக்கள் மீதான சீடர்களின் கரிசனையாகவோ, அவர்களுக்கு நம்மால் உணவு கொடுக்க முடியாதே எனும் யதார்த்தமாகவோ இருக்கலாம். சீடர்கள் மக்களுக்காக பேசியதால், சீடர்கள் மூலமாகவே இயேசு மக்களின் தேவையை நிவர்த்தி செய்கிறார்.

பிறருடைய தேவைகளுக்காக நாம் இயேசுவிடம் வேண்டும் போது, நம்மைக் கொண்டே பிறருடைய துயரை தீர்த்து வைக்க இயேசு கரம் கொடுக்கிறார். பிறருக்காக நாம் தொடர்ந்து இயேசுவிடம் மன்றாட தயாராக வேண்டும்.

3. “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என சீடர்கள் சொன்னார்கள். உண்மையில் அவர்களிடம் அப்பங்கள், மீன்களோடு இயேசுவும் இருந்தார். இயேசு ஒரு இடத்தில் இருக்கும்போது எத்தகைய குறைவுகளும் அபரிமிதமாய் வளர்ச்சியடைந்து விடும். பலவீனத்தில் பலத்தை புகுத்துவது இறைவனின் பணி.

எந்த ஒரு எண்ணுடனும் முடிவிலியை கூட்டும் போது, முடிவிலியே விடையாய் வருவது போல, நம்மிடமிருக்கும் எந்த ஒரு விஷயத்துடனும் இயேசுவை கூட்டும் போது முடிவிலியாய் அது மாறிவிடுகிறது. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்துடனும் இயேசுவை இணைத்துக் கொள்ள நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். அதற்கு இயேசு எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும்.

4. அந்த மாபெரும் கூட்டத்தில் ‘அப்பங்களையும், மீன்களையும்’ வைத்திருந்தவன் ஒரு சின்னப் பையன். ஐயாயிரம் பேர் எனும் கணக்கில் அவன் எண்ணப்படவில்லை. அவனிடம் உணவு இருக்கும் என யாரும் நினைத்துப் பார்த்திருக்கவும் முடியாது. அவன் தான் அந்த மாபெரும் கூட்டத்துக்கு உணவு கொடுத்தவனாக மாறிப் போனான் !

வாழ்க்கையில் யாரையும் நாம் குறைவாய் எடை போடவே கூடாது. எதிர்பாராத இடத்திலிருந்து மிகப்பெரிய ஆன்மீக ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கலாம். எந்த ஒரு எளிய மனிதர் மூலமாகவும் மிகப்பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கும் வலிமை இயேசுவுக்கு உண்டு. அவர் எப்போதுமே வலியவர்களை விட எளியவர்களையே தனது பணிக்காய் பயன்படுத்துகிறார்.

5. சிறுவன் தன்னிடமிருந்த அனைத்தையும் அப்படியே ஒப்படைக்கிறான். தனக்கென எதையும் அவன் வைத்திருக்கவில்லை. சுயநல சிந்தனைகள் ஏதும் அவனிடம் இல்லை. பிறருக்குப் பயன்படுவதற்காக தன்னிடமிருக்கும் அனைத்தையும் இழந்து விடவும் அவன் தயாராய் இருந்தான். எங்கும் அவன் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை. அவனுடைய பெயர் எங்கும் குறிப்பிடப்படவும் இல்லை !

நாமும் நம்மிடம் இருக்கும் அனைத்தையும் இறைவனிடம் முழுமையாய் ஒப்படைக்கும் மனம் கொண்டவர்களாக இருக்க வேன்டும். எவையெல்லாம் நாம் இறைவனிடம் ஒப்படைக்கிறோமோ அவையெல்லாம் வளர்ச்சியடைகின்றன. நம்முடைய உலகப் பொருட்களையும், ஆன்மீக தேவைகளையும் முழுமையாய் இறைவனிடம் ஒப்படைத்தால் அது நமக்கும் பிறருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதமாய் மாறிவிடும்.

6. இயேசு அந்த அப்பங்களையும், மீன்களையும் எடுத்து தந்தையைப் போற்றினார். சிறுவன் இயேசுவிடம் ஒப்படைத்ததை, இயேசு தந்தையிடம் ஒப்படைத்தார். பின்னர் அப்பங்களைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார்கள். இயேசுவின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பொருள், தந்தையின் ஆசீர்வாதங்களை வாங்கிக் கொண்டு சீடர்களின் கைகளில் திரும்ப வந்தது. இப்போது அது ஒருவருடைய பசி அடக்குவதாக இல்லாமல், பல்லாயிரம் மக்களின் தேவை தீர்க்கும் உணவாக மாறிவிட்டிருந்தது.

நமது வாழ்க்கையில் கிடைக்கின்ற அனைத்து விஷயங்களும் இயேசுவின் கரங்களில் நாம் ஒப்படைத்தபின், அவரது ஆசீரோடு திரும்பக் கிடைத்தால் அது மிக அதிக பயனளிப்பதாக மாறிவிடும். இறைவனின் ஆசீர் பெறாமல் நம்மிடம் இருக்கும் எந்தப் பொருளுமே மிகுந்த பயனளிப்பதில்லை. அனைத்தையும் இறைவனின் ஆசீரோடு பயன்படுத்தும் மனதை நாம் பெற வேண்டும்.

7. இயேசுவின் ஆசீரோடு வந்த அப்பங்கள், சீடர்களின் கைகளில் வந்தபின் தான் அது புதுமையாய் மாறுகிறது. இயேசு ஆசீர்வதித்தபோது அப்பங்கள் பலுகிப் பெருகவில்லை. இயேசு உடைத்த அப்பங்களை சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களின் கைகளில் அவை பெருகத் துவங்கின. சீடர்களின் கையால் அவை பிறருக்கு ஆசீர்வாதமாய் மாறின. சீடர்களின் பகிர்தலால் அவை பன்மடங்கு அதிகரித்தன.

இயேசு நம்மிடம் தருகின்ற பொருட்களை நாம் பகிர்தல் குணத்தோடு அணுக வேண்டும். பிறருக்குப் பகிர்ந்தளிக்க அளிக்க இறைவனின் அருளால் அது மக்களுக்கு ஆசீர்வாதமானதாக மாறிவிடும். இறைவன் தருகின்ற அப்பம், நமது கைகளில் பொத்தி வைக்க அல்ல, பிறருக்குப் பகிர்ந்தளிக்க எனும் சிந்தனை நமக்கு வேண்டும்.

8. கைகளில் போதுமான உணவு இல்லை, ஆனாலும் மக்களை பந்தியமரச் சொன்னார் இயேசு. அந்த சின்ன கட்டளையை அவர்கள் அப்படியே நிறைவேற்றினார்கள். புதுமையின் கதவுகள் திறக்க, கீழ்ப்படிதலின் செயல்கள் நடைபெற வேண்டும். இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது சின்னச் சின்ன நம்பிக்கைகளை. கடுகளவு விசுவாசத்தை. அதன் வெளிப்பாடான அன்பின் செயல்களை. அதன் பயனாக நாம் அடைவதோ மலையளவு ஆசீர்வாதங்களை.

இயேசு சொன்னார் எனும் காரணத்துக்காக, ஒரு மழலையைப் போல கேள்வி கேட்காமல் கீழ்ப்படியும் மனம் இருந்தால் ஆன்மீகத்தின் உயர்நிலையை நாம் தொட்டு விட்டோம் என்று பொருள். ‘அது அந்தக்கால மக்களுக்கானது’, ‘இது இந்தக்காலத்துக்கு சரி வராது’ என சாக்குப்போக்குகள் சொல்வோமென்றால் விசுவாசத்தின் கடைசிப் படிக்கட்டில் உழல்கிறோம் என்று அர்த்தம்.

9. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த மாபெரும் கூட்டம் அது. பாலை நிலம். மன்னாவை பாலை நிலத்தில் பொழிந்த இறைவன், இப்போது பாலை நிலத்தில் அப்பத்தைப் பகிர்ந்தளிக்கிறார். தொலைவில் இருந்தவர்களுக்கு அது வெறும் உணவாய் தெரிந்தது. அருகில் இருந்தவர்களுக்கு மட்டுமே அது ‘இயேசுவின் அற்புதம்’ எனும் உண்மை தெரிந்தது.

இயேசு நமது வாழ்வில் செய்கின்ற அற்புதங்களைக் கண்டு கொள்ள வேண்டுமெனில் நாம் இயேசுவோடு நெருங்கி இருக்க வேண்டும். தொலைவில் இருந்தால் “எப்படியோ நமது தேவைகள் நிறைவேற்றப்பட்டன” என்றே எண்ணுவோம். அருகில் இருந்தால் மட்டுமே “இறைவனின் அருளால் அனைத்தும் நடந்தன” எனும் உண்மை புரியும். எப்போதும் இறைவனோடு நெருங்கி இருக்க வேண்டும். நம்முடைய முதன்மையான நேரங்களை நாம் இயேசுவுக்காய் கொடுத்தால், நமக்கு முதன்மையான இடத்தை அவர் தருவார்.

10. சீடர்களுக்கும் இயேசுவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. ‘நமது வழிகளில்… ‘ நாம் யோசிப்போம். ‘அவர் வழி..’ என தனியே ஒன்று உண்டு என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.

* மக்களை அனுப்பி விடுவோம், என்பது சீடர்களின் குரல்
* மக்களை அமர வையுங்கள், என்பது இயேசுவின் பதில்

* நம்மிடம் உணவு இல்லை, என்பது சீடர்களின் குரல்
* நம்மிடம் தந்தை உண்டு, என்பது இயேசுவின் பதில்.

நம்மிடம் என்ன இல்லை என்பதை சீடர்கள் பார்த்தார்கள். நாம் சிந்திக்காத ஒரு வழியில் இறைவன் செயலாற்ற மாட்டார் என அவர்கள் தப்புக்கணக்கு போட்டார்கள். இயேசுவோ அனைத்தையும் தனது ஆச்சரியமான பாதைகளில் செயல்படுத்தினார்.

நமது வாழ்க்கையில் இறைவன் செயலாற்றுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நமது வழிகளில் அவரை வலுக்கட்டாயமாய் இழுக்கக் கூடாது ! அவருடைய வழிகளில் நாம் அவரைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டும்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம். அனைத்தையும் அவரில் ஒப்படைத்து அவரோடு நெருங்கி வாழ்வோம்.

*

 

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 14 : பேச்சிழந்தவர் பேசுதல்

Image result for matthew 9 32

மத்தேயு 9 : 32..33

பேச்சிழந்தவர் பேசுதல்

அவர்கள் சென்றபின் பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். ஆனால் பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.

*

மௌனத்தில் விழுந்து கிடக்கும் ஒருவருக்கு, சத்தத்தை அறிமுகம் செய்து வைக்கிறார் இயேசு. அவனுடைய அந்த நிலமைக்குக் காரணம் பேய் ! அந்த நபர் இயேசுவிடம் கொண்டு வரப்படுகிறார். இயேசு அவனைப் பிடித்திருந்த பேயை ஓட்டுகிறார். அப்போது அந்த மனிதர் பேசுகிறார். மக்களுக்கு வியப்பு, ஆனால் மதவாதிகளோ இயேசுவை வழக்கம் போல மட்டம் தட்டுகின்றனர்.

இந்த நற்செய்திப் பகுதி நமக்கு சில சிந்தனைகளைத் தருகிறது !

1. “பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்”. பல்வேறு விதமான மனிதர்களை நாம் சந்திக்கிறோம். உடல் நிலை சரியில்லாத மக்கள் பலர் இயேசுவிடம் நேரடியாக வருகின்றனர். சிலருக்காக அவரது உறவினர்களோ, நண்பர்களோ வருகின்றனர். சிலரை இயேசு தேடிச் செல்கிறார். இந்த நிகழ்வில், பேச்சிழந்த‌ அந்த நபரை சிலர் கூட்டிக் கொண்டு இயேசுவிடம் வருகின்றனர். காரணம், அவர் பேய் பிடித்தவர். பேய் இயேசுவை சந்திக்க எப்போதுமே விரும்புவதில்லை. காரணம் அவைகளுடைய முடிவு நரகம் என்பதை அவை அறிந்திருந்தன. இயேசுவினால் தங்களுடைய அரசுக்கு ஆபத்து என்பதும் அவற்றுக்குத் தெரியும். இருள் எப்போதுமே ஒளியைத் தேடி வருவதில்லை, காரணம் ஒளியின் முன்னால் இருளுக்கு இடமில்லை.

நமது வாழ்விலும் நாம் சிலரை இயேசுவிடம் கொண்டு வர வேண்டும். அவர்கள் தங்களுடைய பாவ வாழ்க்கையினால் இயேசுவை விட்டுத் தொலைவில் சென்றவர்களாக இருக்கலாம். இயேசுவை அறியாதவர்களாக இருக்கலாம். இயேசுவை நிராகரித்தவர்களாக இருக்கலாம். அவர்களை இயேசுவின் அருகே கொண்டு வருகின்ற பணியை நாம் செய்ய வேண்டும்.

2. “பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்” எனும் பைபிள் வசனம், கொண்டு வந்தவர்கள் யார் என்றோ, அவர்களுடைய பெயர் என்ன என்றோ, எத்தனை பேர் என்றோ எதையும் குறிப்பிடவில்லை. அவர்களுடைய பணி அந்த பேச்சிழந்த நபரை இயேசுவிடம் கொண்டு வருவது மட்டுமே.

நாமும், இயேசுவிடம் ஒரு நபரைக் கொண்டு வரும் போது இதே மனநிலையில் இருக்க வேண்டும். நமது பெயர், புகழ், மரியாதை, லாபம் எதையும் முன்னிலைப்படுத்தவே கூடாது. எப்படி ஒரு தீக்குச்சி திரியை ஏற்றி விட்டு தூரமாய்ப் போய்விடுகிறதோ, அதே போல ஒரு நபரை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்து விட்டு நாம் விலகி விடவேண்டும். அதற்கான பெருமையையோ, கர்வத்தையோ நமது தலையில் சுமத்தக் கூடாது !

3. இயேசுவின் முன்னால் ஒரு நபரைக் கொண்டு வர வேண்டுமெனில், அவர் மீது அதீத அன்பு கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். நமது குழந்தைகள், நமது குடும்பத்தினர், நமது பெற்றோர் ஆகியோர் மீது நாம் இயல்பாகவே அன்பு கொண்டிருப்போம். அவர்களுக்கு தீங்கு எதுவும் நேரக் கூடாது என நினைப்போம். அவர்கள் வழி விலகினால் அவர்களை இயேசுவிடம் கொண்டு வருவோம். இதற்கு ஒரே காரணம் அவர்கள் மீது நாம் காட்டும் அன்பு தான். யார் மீது அதிகம் அன்பு செலுத்துகிறோமோ, அவர்கள் சொர்க்கத்தைக் காணவேண்டும் என்றும் நாம் விரும்புவோம்.

அத்தகைய அன்பை நாம் சக மனிதர்களிடம், திருச்சபையிலுள்ள பிற நண்பர்களிடம், சமூகத்திலுள்ள பிற அங்கத்தினர்களிடம், அல்லது முகம் தெரியாத ஒரு நபரிடம் நாம் காட்டுகிறோமா ? யாரையும் இயேசுவிடம் அழைத்து வர நாம் விரும்பவில்லையெனில், அவர்கள் மீது நாம் அதிக அன்பு காட்டவில்லை என்பதே இதன் பொருள்.

4. பேச்சிழந்த நிலை அந்த மனிதருக்கு எப்போது ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், “பேய் பிடித்துப் பேச்சிழந்த” என்கிறது விவிலியம். பேயின் பிடியினால் பேச்சை இழந்து போன நபர் அவர். அவருடைய வாழ்க்கை தொடக்கத்தில் சாதாரண வாழ்க்கையாய் இருந்திருக்கலாம். பேயின் தாக்குதலுக்குப் பின் இப்படி ஒரு ஊனமான வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம்.

நமது வாழ்க்கையிலும் சாத்தானோ, அல்லது சாத்தான் சார்ந்த உலக விஷயங்களோ நம்மை ஆன்மீக ஊமையாய் மாற்றி விட்டிருக்கலாம். வலுவான ஆன்மீக வாழ்க்கையை அத்தகைய சலனங்கள் ஊமை நிலைக்குத் தள்ளியிருக்கலாம். அந்த நிலையில் இயேசுவிடம் சரணடைந்து நமது குரலை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும். உலகப் பேச்சுகளை அதிகம் பேசி, இறைவனோடான உரையாடலை நிறுத்தி விடும் ஊமை நிலை ஆன்மீகத்தில் மிகவும் ஆபத்தானது. அந்த ஊமை நிலையை மாற்ற, அவர் இயேசுவிடம் வரவேண்டும். அல்லது கொண்டு வரப்பட வேண்டும்.

5. பேச்சு என்பது பன்முகத் தன்மை கொண்டது. ஒரு ஆறுதல் வார்த்தை ஒருவரை அமைதிப்படுத்தலாம். ஒரு அன்பான வார்த்தை ஒருவருடைய சோகத்தைத் துடைக்கும் கைக்குட்டையாய் மாறலாம். ஒரு கோபமான வார்த்தை ஒருவருடைய நிம்மதியைக் குழிதோண்டிப் புதைக்கவும் செய்யலாம். நமது வார்த்தைகள் எப்படி இருக்கின்றன ?

பிறருக்கு ஆறுதல் சொல்லாமல், பிறருக்காய் நியாயம் பேசாமல், பிறருடைய வேண்டுதல்களுக்கு பதில் சொல்லாமல் ஊமையாய் திரிகிறோமா ? பிறருடைய தேவைகளில் நமது குரல் அவர்களுக்கு கரம்பிடிக்கும் விரலாக நீள வேண்டும். அத்தகைய ஆன்மீக பேச்சை நாம் வாழ்வில் கொள்ள வேண்டும்.

6. இயேசு பேயை ஓட்டினார் ! இயேசுவிடம் நபரைக் கொண்டுவந்தவர்கள் ஒருவேளை பேய் தான் பிடித்திருக்கிறது என்பதை அறியாமல் கூட இருந்திருக்கலாம். அவர்களுடைய நோக்கம், அவருடைய ஊனம் தீரவேண்டும் என்பது தான். அவர்கள் எதுவும் கேட்கவில்லை. இயேசு எதுவும் பேசவில்லை. அங்கே வித்தியாசமான ஒரு புதுமை நடக்கிறது. கொண்டு வந்தவர்களின் மனம் இயேசுவுக்குத் தெரியும். கொண்டு வரப்பட்டவனின் நிலை இயேசுவுக்குத் தெரியும். என்ன செய்ய வேண்டும் என்பதும் இயேசுவுக்குத் தெரியும். எனவே தான் ஒரு மௌனக் காட்சி போல அந்த நிகழ்வு அரங்கேறுகிறது.

நாமும், இயேசுவிடம் பிறரைக் கொண்டு வரும்போது எந்த நீண்ட விளக்கங்களும் சொல்லத் தேவையில்லை. இயேசு உள்ளத்தை அறிபவர். எதை எப்படிச் செய்யவேண்டும் என்பதில் எப்போதுமே தெளிவாய் இருப்பவர்.

7. இயேசு வேர்களை விசாரிப்பவர். பேச்சிழந்த மனிதனுக்கு அவர் பேச்சை மட்டும் கொடுக்கவில்லை, அவனுக்குள் இருந்த பேயையும் துரத்துகிறார். வேர்கள் பழுதான நபருக்கு, கிளைகளை மட்டும் சரிசெய்யும் பணியை இயேசு எப்போதுமே செய்வதில்லை. ஒரு பிரச்சினையின் உண்மையான காரணம் என்ன என்பதை அவர் கவனிப்பவராக இருக்கிறார்.

நமது வாழ்வில் நிகழ்கின்ற நிகழ்வுகளுக்கு நமது பாவங்களோ, நாம் அறியாத ஏதோ சில பிழைகளோ காரணமாய் இருக்கலாம். இயேசுவிடம் நம்மை முழுமையாய் சரணடைகையில் அவர் வெறுமனே நமது பிரச்சினைகளைத் தீர்ப்பவராக மட்டும் இல்லாமல், நமது மீட்புக்கான தடைகளை அகற்றுபவராகவும் இருக்கிறார். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

8. “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என மக்கள் வியப்படைகின்றனர். இயேசுவை ருசிக்கும் மக்களுடைய அனுபவம் எப்போதுமே இப்படித் தான் இருக்கிறது. வியப்பும், சிலிர்ப்பும், மகிழ்வும், பிரமிப்பும் அவர்களுடைய வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே இயேசு செய்த‌ பல அற்புதங்களைக் கண்டவர்கள் கூட அவருடைய புதிய அற்புதங்களில் பிரமிப்படைகிறார்கள்.

நமது வாழ்க்கையிலும் இயேசு பல்வேறு அற்புதங்களைச் செய்து கொண்டே இருக்கிறார். அதற்கான வியப்பும், பிரமிப்பும் நமக்கு எழுவது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அந்த வியப்பும், மகிழ்ச்சியும் அத்துடன் நின்று விடாமல் மீட்புக்கான வழியில் இயேசுவின் அருகில் நம்மைக் கொண்டு சேர்க்க வேண்டும். வெறுமனே கைதட்டி வேடிக்கை பார்த்து விட்டுக் கடந்து போவதில் எந்த பயனும் இல்லை. இயேசுவின் அற்புதங்களும், போதனைகளும் பிரமிக்க வேண்டியவையல்ல‌,பின்பற்ற வேண்டியவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

9. “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என மதவாதிகள் இயேசுவை பழிக்கின்றனர். இயேசுவை சாதாரண மக்கள் அரவணைப்பதும், மதவாதிகள் எதிர்ப்பதும் காலம் காலமாக நிகழ்கின்ற நிகழ்வு தான். இயேசுவை எதிர்த்தவர்கள் ஆபிரகாம் முதல் மலாக்கி வரையிலான அத்தனை தீர்க்கத் தரிசிகளின் வார்த்தைகளையும் அறிந்தவர்கள். மெசியா பற்றிய முன்னறிவிப்புகளை படித்தவர்கள். ஆனால் அவர்களால் இயேசுவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தேவை அறிவல்ல, மனசு ! என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இயேசு செய்த புதுமையை மறுக்க முடியாதவர்கள், இப்போது இயேசுவை வெறுக்க ஆரம்பிக்கின்றனர்.

நமது வாழ்விலும் ஒவ்வொரு நாளும் இயேசு நமக்குத் தருகின்ற அருளின் நாட்கள். அவற்றில் நடக்கின்ற நிகழ்வுகள் இயேசுவின் கருணையினால் நமக்குக் கிடைக்கும் தருணங்கள். இவற்றை நாம் புரிந்து கொள்கிறோமா ? அல்லது இது இறைவனால் நடப்பதல்ல, நம‌து திறமையினால் நடப்பது என்றோ, எதேச்சையாய் நடப்பது என்றோ, இயல்பாய் நடப்பது என்றோ எடுத்துக் கொள்கிறோமா ? ஒவ்வொரு நாளின் கிருபைகளையும் தருபவர் இறைவன் என்பதை உணர்ந்து அவருக்கு நன்றி சொல்வது நமது முக்கிய கடமையாய் இருக்கட்டும்.

10. “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்பது போன்ற குற்றச்சாட்டுகள் வீசப்பட்டாலும் இயேசு தனது பணியையோ, தனது இயல்பையோ மாற்றிக்கொள்ளவில்லை. அவர் தனது பணியை தொடர்ந்து செய்தார். மக்களுடைய விமர்சனங்களுக்காக தனது தந்தையின் விருப்பத்தை நிராகரிக்கவில்லை.

நமது வாழ்விலும் நமது செயல்களுக்கு எதிரான விமர்சனம் வைப்பவர்கள் எப்போதுமே இருப்பார்கள். குறை சொல்லிக் கொண்டே இருப்பவர்கள் ஏராளம் இருப்பார்கள். அவர்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. நாம் செய்யும் வேலை மனிதநேயம் மிளிர்ந்ததாக, இறைவனுக்கு ஏற்புடையதாக இருந்தால் அதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகள், அவமானங்கள், கிண்டல்கள் போன்றவை நமது அன்பின் பணிகளுக்கு தடை போடாமல் இருக்க வேண்டும்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.