Posted in Articles

Christianity : அப்பா அப்பா தானே !

Image result for talk to father

அப்பா, என்னோட காலேஜ் விழாவுக்கு நீங்க கண்டிப்பா வரணும். மகனுடைய அழைப்பு தந்தையின் மனதுக்குள் மகிழ்ச்சியைப் பொழிந்தது. அப்பாவும் மகனும் நண்பர்களைப் போல பேசிக் கொள்ளும் குடும்பம் அது.

‘காலேஜுக்கு வரேன்டா.. ஆனா, இவர் தான் என் அப்பான்னு சொல்ல உனக்கு கூச்சமா இருக்காதா ?’ அப்பா சிரித்துக் கொண்டே கேட்டார்.

ஏன்பா அப்படி சொல்றீங்க ?

இல்லே… தாடி எல்லாம் நரச்சு போய், கருப்பா கிராமத்தான் போல இருக்கிற என்னை அப்பான்னு அறிமுகம் செய்து வைக்க உனக்கு கூச்சமா இருக்காதான்னு கேட்டேன்.

‘தாடி நரச்சாலும், கறுத்தாலும் அப்பா அப்பா தானே ‘ மகன் சிரித்தான்.

இல்ல ஸ்கூல்ல ஒரு கதை உண்டு. பையனைப் பாக்க கிராமத்துல இருந்து பாசத்தோட அப்பா வருவாரு. பையனுக்கு புடிச்ச எல்லா பொருட்களையும் வாங்கிட்டு வருவாரு. அவன் பொருட்கள் எல்லாத்தையும் வாங்கிட்டு, அப்பாவை அவசர அவசரமா வீட்டுக்கு அனுப்பிடுவான். அப்புறம் பிரண்ட்ஸ் கிட்டே..” அவர் எங்க வீட்டு வேலைக்காரர் டா” ந்னு சொல்லுவான். அதைக் கேட்டு அப்பா கண்கலங்குவாரு. நீயும் படிச்சிருப்பியே ! அதான் கேட்டேன். அப்பா கிண்டலாய் சொன்னார்.

“நான் அப்படி சொல்ல மாட்டேன். ஆனா நீங்க தான் உங்க அப்பா உங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருந்தும் அவரைப் பற்றி பெருமையாவே பேச மாட்டேங்கறீங்க.’ மகன் சொல்ல அப்பா நெற்றி சுருக்கினார்.

‘என்னடா சொல்றே’

‘ஆமாப்பா.. நேற்று கூட உங்க பிரண்ட்ஸ் வந்திருந்தாங்க. யாராரைப் பற்றியெல்லாமோ பேசினாங்க. ஆனா நீங்க உங்க அப்பாவைப் பத்தி எதுவுமே பேசலையே !’

‘நீ கேக்கல.. நான் பேசினேன். அவரு என்னை விவசாயம் பண்ணி, கஷ்டப்பட்டு, படிக்க வெச்ச கதையெல்லாம் சொன்னேன். நீ தான் கேக்கல’

மகன் கொஞ்சம் நேரம் அப்பாவைப் பார்த்து விட்டு மென்மையாய் சொன்னான்.

நான் அந்த அப்பாவைப் பற்றி சொல்லல. நம்ம விண்ணக அப்பாவைப் பற்றி சொன்னேன். வந்த நண்பர்களெல்லாம் ஏதேதோ கோயில், குளம், தெய்வம், தொழுகை எல்லாம் பேசிட்டிருந்தாங்க. நீங்களும் கேட்டுட்டு இருந்தீங்க. உங்க விண்ணக அப்பா காட்டின அன்பு, தயவு, இரக்கம் பற்றியெல்லாம் நீங்க பேசவே இல்லையேப்பா. அதைத் தான் நான் சொன்னேன்.

மகன் சொல்ல, அப்பாவின் மனதில் சுருக் என ஒரு நெருஞ்சி முள் தைத்தது ! மகன் தொடர்ந்தான்.

ஏதோ ஒரு பையன் , “இவரு வேலைக்காரர்” ந்னு அவனோட அப்பாவைக் காட்டினது போல தானே நீங்களும் செய்தீங்க. “இவர் என் அப்பா” ந்னு பெருமையா சொல்ல உங்க மனசு இடம் கொடுக்கலையே. நண்பர்கள் என்ன நினைப்பாங்க. பிரண்ட்ஷிப் போயிடுமோன்னு பயந்து தானேப்பா சொல்லல ?

மகனின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாமல் திகைத்து நின்றார் அப்பா ! மகன் நிறுத்தவில்லை.

‘உலக அப்பாவைப் பற்றி பேசும்போ அந்த தந்தையோட‌ மனசு எப்படி வேதனைப்பட்டிருக்கும்ன்னு கவலைப்படறோம். விண்ணகத் தந்தை யாருன்னே தெரியாத மாதிரி நீங்க அவரைப் பற்றி எதுவுமே சொல்லாம இருக்கும்போ அவர் மனசு வேதனைப்படாதாப்பா ?”

மகன் சொல்லி நிறுத்தினான்.

இத்தனை ஆண்டு காலம் உருவாகாத புயல் ஒன்று தந்தையின் மனதில் மையம் கொண்டது. தனது தவறை உணர்ந்தார். தந்தையின் அன்பை பிறருக்குச் சொல்வது மகனின் சிலிர்ப்பாய் இருக்க வேண்டும். அதுவே தந்தையை மகிழ்ச்சிப்படுத்தும் என்பதை உணர்ந்தார்.

‘தேங்க்ஸ்பா… நீ என் மகனா இருந்தாலும், இன்னிக்கு ஒரு ஆன்மீக தந்தையா மாறி எனக்கு பாடம் கத்து குடுத்தே’ என சொல்லி மகனை இறுக்கமாய்க் கட்டிக் கொண்டார் தந்தை !

அப்பாவைப் பற்றி இனிமே எல்லா இடத்துலயும் தயக்கம் இல்லாம மகிழ்ச்சியா சொல்லணும் எனும் சிந்தனை அவருக்குள் வேர்விட்டிருந்தது.

*

 

Posted in Articles, Desopakari

ஒருமைப்பாடு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்பது புகழ்பெற்ற பாரதியார் பாடல்களில் ஒன்று !

Image result for united in christ

ஒற்றுமையாக இருக்க வேண்டும், இணைந்து செயலாற்ற வேண்டும், ஒற்றுமையே பலம் என சின்ன வயது முதலே நாம் கேட்டும், கற்பித்தும் வருகிறோம். ஒற்றுமையாக இருப்பதே சமூகத்துக்கும், நாட்டுக்கும், நமது வளமான எதிர்காலத்துக்கும் நல்லது எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு எப்போதுமே உண்டு.

ஒருமைப்பாடு எப்போதும் நல்லதா ? சர்வதேச நாடுகளை வன்முறையால் அழிக்க நினைக்கும் தீவிரவாத இயக்கங்களிடமும் ஒருமைப்பாடு இருக்கிறதே ! விலங்குகளின் பெயரால் ஏழைகளை அழிக்கும் மக்களிடமும் ஒற்றுமை இருக்கிறதே ! நாட்டை கொள்ளையடிக்க நினைக்கும் ஆள்பவர்களிடையேயும் புரிந்துணர்வு இருக்கிறதே ! ஏன், இயேசுவைக் கொல்ல வேண்டும் என முடிவெடுத்த மதத்தலைவர்களிடமும் ஒற்றுமை இருந்ததே ! எனில், ஒருமைப்பாடு என்பது எப்போதும் நல்லது என்று சொல்லி விடமுடியாது !

ஒருமைப்பாடு நன்மையாகவோ, தீமையாகவோ முடியலாம் ! நாம் எதன் அடிப்படையில் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை வைத்தே அது தீர்மானிக்கப்படும். நன்மையின் பக்கம் இணைந்து நிற்பது நன்மையில் முடியும். தீமையின் பக்கம் தலைசாய்த்தால் அது தீமையாகவே முடியும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், இயேசுவின் போதனைகளோடு இசைந்து, இணைந்து நிற்பதே நல்ல ஒற்றுமை, மற்ற அனைத்துமே அழிவுக்கானவையே.

கிறிஸ்தவர்கள் இணைந்து நிற்பது வேறு, கிறிஸ்துவோடு இணைந்து நிற்பது என்பது வேறு. கிறிஸ்தவர்கள் இணைந்து நிற்பது எப்போதும் நல்லது என்று சொல்ல முடியாது. கருப்பர்களுக்கு எதிராக இணைந்து போராடிய அமெரிக்க திருச்சபைகள் ஏராளம். விவிலியம் எதிர்க்கின்ற பாலியல் உரிமைகளுக்காக இணைந்து போராடிய இறைமக்கள் ஏராளம். இவையெல்லாம் வாழ்வுக்கான ஒன்றுமையல்ல ! எனில், எதன் அடிப்படையில் ஒருமைப்பாடு கொள்வது நல்லது ?

1. தூய ஆவியின் ஒருமைப்பாடு

“முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்” என்கிறது எபேசியர் 4:2,3 வசனங்கள்.

நாம் ஒரே ஆவியால் ஒரே உடலாய் இருக்கும் படி திருமுழுக்குப் பெற்றவர்கள். தூய ஆவியானவரின் வழிகாட்டுதலில் இணைந்து வாழ்வது அற்புதமான வாழ்க்கை. தூய ஆவி அருளும் ஒருமைப்பாடு என்பது, அவரது கனிகளின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே ! இயேசுவின் மரணத்துக்குப் பின், அச்சத்தால் பயந்து கிடந்த அப்போஸ்தலர்களை இணைத்து, வலுவூட்டியவர் தூய‌ ஆவியானவர் ! அந்த தூய அவையானவரின் ஒருமைப்பாடு நமக்கு வலிமையையும், சரியான வழியையும் காட்டும்.

2. கொடியில் கிளைகளாகும் ஒருமைப்பாடு.

நானே திராட்சைக்கொடி, நீங்கள் அதன் கிளைகள் என்றார் இயேசு. திருச்சபையின் மக்கள் அனைவருமே இயேசு எனும் கொடியின் கிளைகளே ! அந்த கிளைகள் பார்வைக்கு வேறுபடுகின்றன. அவற்றின் செயல்பாடுகள் வேறுபடுகின்றன. ஆனால் இலக்கு ஒன்றே ! செடியோடு இணைந்தே இருப்பது. செடியோடு இணைந்தே வளர்வது. கொடியை விட்டு தனியே செல்கின்ற கிளை விறகாகும். அதில் ஆன்மீக பச்சையம் இருப்பதில்லை.

இயேசு எனும் உடலில் உறுப்புகள் நாம். உடலின் உறுப்புகள் பலவானாலும் அவை எப்போதுமே இணைந்து உடலின் நலனுக்காகவே செயல்படும். ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு பணி செய்யும், சில உறுப்புகள் உடலுக்கு உள்ளே ஒளிந்திருக்கும், சில வெளிப்படையாய் இருக்கும். எப்படி இருந்தாலும் எல்லாமே ஒரே நோக்கத்துக்காகச் செயல்படும் ஒருமைப்பாட்டுடன் இருக்கும். அத்தகைய ஒருமைப்பாடு வேண்டும்.

3. விவிலிய நூல் காட்டும் ஒருமைப்பாடு !

ஒருமைப்பாடு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு விவிலிய நூலே நமக்கு ஒரு சான்றாக இருக்கிறது. விவிலிய நூல் சுமார் 40 ஆசிரியர்களால், சுமார் 2000 ஆண்டு இடைவெளிகளில், மூன்று கண்டங்களிலிருந்து, மூன்று மொழிகளில் எழுதப்பட்ட எழுத்துகளின் தொகுப்பு. ஆனாலும் விவிலியத்தின் உள்ளார்ந்த சாராம்சமோ, அது சொல்லும் மீட்பின் சேதியோ சற்றும் விலகவில்லை என்பது வியப்பானது.

விவிலியம் இறைவனின் நூல் என்பதற்கும், விவிலியம் ஒரு அற்புதமான இசைவில் உதாரணம் என்பதற்கும் இதைவிடப் பெரிய சான்று தேவையில்லை. நமது ஒருமைப்பாடு காலத்தால், நிலத்தால், மொழியால் வேறுபட்டாலும் இத்தகைய ஒரே சிந்தனையுடையதாய் அமைய வேண்டும்.

4. தன்னலமற்ற ஒருமைப்பாடு.

உலக ஒருமைப்பாடுகள் பெரும்பாலும் லாப நோக்கத்துக்கானவையே. ஒரு பிஸினஸ் ஆனாலும் சரி, ஒரு அலுவலக வேலையானாலும் சரி, அல்லது வேறெந்த பணியாய் இருந்தாலும் சரி. லாப நோக்கங்களும், சுயநல கணக்குகளுமே பார்ட்னர்ஷிப் களை உருவாக்கும். ! ஆனால் இறைவன் விரும்பும் ஒருமைப்பாடு சுயநலமற்ற சிந்தனைகளின் விளைவாக இருக்க வேண்டும்.

“கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.” என்கிறது பிலிப்பியர் 2:3. அடுத்தவரை உயர்வாய்க் கருதும் இடத்தில் சுயநல சிந்தனைகள் செயலிழக்கும்.

5. விசுவாசத்தில் ஒருமைப்பாடு

“அதனால் நாம் எல்லாரும் இறை மகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம்.( எபேசியர் 4:13 )” என்கிறது விவிலியம். கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை இறைமகன் மீதான விசுவாசமே ! அந்த விசுவாசத்தின் மீது கட்டியெழுப்பப்படாத எந்த கட்டிடமும் நிலைப்பதில்லை.

விசுவாசத்தின் மீதான ஒற்றுமையின்மை இன்று புதிது புதிதாக பல்வேறு திருச்சபைகளும், குழுக்களும், இயக்கங்களும் உருவாகக் காரணமாக இருக்கிறது. இயேசுவை நம்பாத கிறிஸ்தவர்கள் பெருகி வரும் காலம் இது என்பது கவலைக்குரியது. விசுவாசத்தில் ஒருமைப்பாடை நாம் கட்டியெழுக்க முன்வரவேண்டும்.

6. அன்பில் ஒருமைப்பாடு.

இயேசு நமக்கு கிறிஸ்தவத்தின் சாராம்சத்தை இரண்டே இரண்டு கட்டளைகளாகக் கொடுத்தார். கடவுளை முதன்மையாய் நேசி, மனிதனை முழுமையாய் நேசி என அதைச் சுருக்கமாய்ப் புரிந்து கொள்ளலாம். “உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்” என்கிறது உரோமையர் 12:10. “தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்” என்கிறது 1 பேதுரு 1:22

ஆழமான அன்பு கிறிஸ்தவ ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும். குடும்பங்களில் தொடங்கி, திருச்சபைகளில் வளர்ந்து, சமூகத்தில் பரவும் இந்த அன்பு தான் கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்த வேண்டும். அத்தகைய அன்பு கொள்வதில் ஒருமைப்பாட்டோடு இருக்க வேண்டும்.

7. சாட்சியில் ஒருமைப்பாடு

கிறிஸ்தவர்களுடைய சாட்சி வாழ்க்கை இரண்டு பிரிவுகள் கொண்டது. ஒன்று, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து அதன் மூலம் இயேசுவுக்கு வாழும் சாட்சியாவது. இரண்டு, இயேசுவை உலகெங்கும் பறைசாற்றி அவரது அன்பை வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துவது.

“நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்றார் இயேசு. இது வாழ்க்கையின் மூலம் இயேசுவை பறை சாற்றுவது. “உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்” என்பது வார்த்தையின் மூலம் நற்செய்தியை பறைசாற்றுவது. இந்த இரண்டு பணிகளுக்காகவும் நாம் ஒன்றிணைய வேண்டும்.

8. இறைமகிமைக்காய் ஒன்றுபடுதல்

எதைச் செய்தாலும் இறைவனின் புகழுக்காகவே, மகிமைக்காகவே செய்ய வேண்டும் என்பது ஆன்மீகப் பாடம். ” நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்” எனும் உரோமர் 15:6 அதை தெளிவாக்குகிறது.

நமது வாழ்க்கை இறைவனுக்கு புகழ்பாடுவதாக இருக்க வேண்டும். நாம் செய்கின்ற மனிதநேயப் பணிகள், அன்பின் பணிகள், சமூகப் பணிகள், ஆன்மீகப் பணிகள் அனைத்தையுமே இறைவன் பெயரால் செய்யப் பழகுவோம். அதில் வருகின்ற புகழையும், பெருமையையும், மாட்சியையும் அப்படியே இறைவனின் பாதத்தில் சமர்ப்பிப்போம். இந்த சிந்தனைகளோடு நாம் ஒன்று பட வேண்டும்.

9. பணியில் ஒன்றிணைவோம்.

இறைபணியில் ஒன்றிணைய வேண்டும் என்பது இறைமகனின் விருப்பமாகும். இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் திருச்சபை எனும் அமைப்பை இறைமகன் உருவாக்கினார். அதன்மூலம் நாம் அன்புப் பணிகளைச் செய்ய வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு.

ஐந்து அப்பத்தை ஆசீர்வதித்துத் தருகிறார் இயேசு. அதை பிறருக்கு பகிர்ந்தளிப்பதில் பணியாற்றுகின்றனர் சீடர்கள். இன்றும் இறைமகனின் ஆசீர் நமக்கு தரப்பட்டிருக்கிறது, அதை பிறருக்கு ஆசீர்வாதமாய் அளிக்கும் கடமை நமக்கு உண்டு. அந்த பணியில் நாம் ஒன்றுபட வேண்டியது அவசியம்.

10. செபத்தில் ஒன்றிணைவோம்.

“உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு !

மனமொத்த செபத்தை இயேசு முன்மொழிகிறார். கூடி செபிக்கும்போது செபம் தன்னலத் தேவைகளைத் தாண்டியதாக மாறி விடுகிறது. செபத்தில் ஒன்றிணைவது நமது ஆன்மீக வாழ்க்கையைச் செழுமையாக்கும்.

 

Thanks : Desopakari

 

Posted in Articles, Sunday School

Sundays Class : வில்லியம் கேரி

Image result for William Carey

ஒரே ஒரு வாழ்க்கை !

காட்சி 1

( வில்லியம் கேரியும் அவனது நண்பன் ஜோன் வார் ம். செருப்பு தைக்கும் கடை.

ஜோன் வார் கையில் ஒரு ஷூவை வைத்து தைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது உள்ளே நுழைகிறார் சிறுவன் வில்லியம் கேரி. )

வார் : வாடா வில்லி.. ஏண்டா லேட்டு ? இப்போ தான் முதலாளி உன்னைப் பற்றி கேட்டுட்டு போனாரு..

வில்லி : போச்சுடா ! அவரு வந்துட்டாரா ? என்ன கேட்டாரு ?

வார் : வேறென்ன கேப்பாரு ? வில்லி இன்னும் வரலையா ? எங்கே போனான் ந்னு கேட்டாரு

வில்லி : உடம்பு சரியில்ல கொஞ்சம் லேட்டா வருவான்னு சொல்ல வேண்டியது தானே.

வார் : பொய் சொல்ல சொல்றியா ? நான் அதெல்லாம் பண்ண மாட்டேன்னு உனக்கு தெரியும்ல‌

வில்லி : ஆமா.. பெரிய உத்தம புத்திரன்..

வார் : உத்தம புத்திரன் எல்லாம் இல்லடா.. ஒரு கிறிஸ்டியன் அவ்வளவு தான்.

வில்லி : ஆமா.. நீ மட்டும் தான் கிறிஸ்டியனா ? அப்போ நான் யாரு ? எந்த சண்டேயாச்சும் சர்வீஸ் மிஸ் பண்ணியிருக்கேனா ? பைபிள் கூட அப்பப்போ வாசிப்பேன்டா..

வார் : டேய் வில்லி… சர்ச்க்கு போறவங்க‌ எல்லாம் கிறிஸ்டியனாடா ? அப்படி பாத்தா கடல்ல போறதெல்லாம் கப்பல் ந்னு சொல்லுவே போல. ( சிரிக்கிறான் )

வில்லி : போதும்டா.. பிரசங்கம் பண்ணாதே.. காலைல தோட்டத்துக்கு போனேன். என்ன ஒரு அட்டகாசமான பட்டர்ஃப்ளை தெரியுமா ? இதோட சேத்து முப்பத்து மூணு டைப் பட்டர்ஃபிளை கலெக்ட் பண்ணி வெச்சிருக்கேன்.

வார் : ம்ம்ம்… நீ தான் பூச்சி புடிக்கிற பயலாச்சே…

வில்லி : பூச்சி ந்னு சொல்லாதே… இயற்கைல எவ்ளோ அழகான தாவரங்கள், சின்னச் சின்ன பறவை இனங்கள், பட்டர்பிளைஸ் எல்லாம் இருக்கு தெரியுமா ?

வார் : இயற்கை அழகா தான்டா இருக்கும். ஏன்னா அதைப் படைச்ச ஆண்டவர் அப்படி. எல்லாத்தையும் சிறப்பா படைக்கிறது தான் அவரோட வேலையே

வில்லி : இதபாரு வார்… என்ன பேசினாலும் சுத்தி சுத்தி அங்கயே வராதே. ஏதோ நீ மட்டும் தான் பெரிய பக்தி மான் மாதிரி பேசறதை நிப்பாட்டு. ரொம்ப நாளா இப்படி தான் நீ சொல்லிட்டு இருக்கே. போதும் ! இல்லேன்னா உன்னோட பிரன்ட்ஷிப்பையே கட் பண்ணிடுவேன்

வார் : வில்லி.. உனக்கு புடிச்ச வேலைல நீ ரொம்ப ரொம்ப ஆர்வமா இருக்கே. நீ கடவுளுக்காக முழுசா உன்னை அர்ப்பணிச்சா, கடவுள் உன்னை வெச்சு ரொம்ப பெரிய காரியங்கள் எல்லாம் செய்வாரு.

வில்லி : எனக்கு புடிச்ச வேலைன்னா கரெக்ட் தான்.. ரொம்ப ஆர்வம் வருது.

வார் : அதான் சொன்னேன். நாம ஒழுங்கா ஸ்கூல் போகல. ஆனா நீ பாரு சட்டு சட்டுன்னு வேற மொழிகள் எல்லாம் கத்துக்கறே. லத்தீன் கஷ்டமான மொழி ! யாரும் சொல்லித் தராமலேயே கத்துகிட்டே. பட்டர்பிளை உனக்கு புடிச்சமான விஷயம். அதுக்காக பல பணி நேரம் கூட மண்ணுல புரண்டுட்டு இருப்பே. இதையெல்லாம் நீ கடவுளுக்காக பயன்படுத்தினா எவ்வளவு நல்லது தெரியுமா ?

வில்லி : நீ கொஞ்சம் கொஞ்சமா என் மனச்சை மாத்திடுவே போல ! ( சிரிக்கிறான் )

வார் : நான் உண்மையை தான் சொல்றேன். எனக்கு உன்னை மாதிரி திறமை கிடையாது. கடவுள் என்னை எப்படி பயன்படுத்தப் போறாருன்னு தெரியாது. யோசேப்பு கதை தெரியும் இல்லையா ? யோசேப்பை எகிப்துக்கு கொண்டு போன வியாபாரிகள் மாதிரி, உன்னை இயேசு கிட்டே நெருக்கமா கொண்டு வரணும்ன்னு நான் நினைக்கிறேன். அப்புறம் அந்த வியாபாரிகளை யாரும் கண்டுக்கல, ஆனா யோசேப்பை கடவுள் எப்படி பயன்படுத்தினாரு தெரியும் தானே ?

வில்லி : ம்ம்.. அப்போ நான் இப்போ வாழற கிறிஸ்தவ வாழ்க்கை போதாதுன்னு நினைக்கிறியா ?

வார் : நீ வாழ்றது கிறிஸ்தவ வாழ்க்கையே இல்லேன்னு சொல்றேன். உன் வாழ்க்கைல இயேசு மையமா இருந்து மத்த விஷயங்களெல்லாம் வெளியே இருந்தா தான் நீ கிறிஸ்தவன். உன் வாழ்க்கைல மற்ற விஷயங்களெல்லாம் மையமா இருந்து கிறிஸ்து வெளியே இருந்தா நீ கிறிஸ்தவனா ? நீயே சொல்லு.

வில்லி : ( கொஞ்சம் யோசிக்கிறான் ) சரி, நான் இப்போ என்ன பண்ணணும் ?

வார் : நீ இப்படி கேட்டதே எனக்கு ரொம்ப சந்தோசம் டா. நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். நைட் முழங்கால்படியிட்டு ஒரே ஒரு செபம் செய். மனசைத் திறந்து இயேசுகிட்டே நீ சொல்ல வேண்டியது இது மட்டும் தான் ” இயேசுவே என்னுடைய பாவங்களையெல்லாம் கழுவியருளும். இதோ நான் உம்மை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறேன்” ந்னு மட்டும் சொல்லு. ஆத்மார்த்தமா சொல்லு. மிச்சத்தையெல்லாம் கடவுள் பாத்துப்பாரு

வில்லி : சரிடா..

*

பின் குரல் : நண்பனின் வார்த்தைகளின் படியே செபம் செய்தார் வில்லியம் கேரி. அந்த செபத்துக்காகவே காத்திருந்த இறைவன் அவருக்குள் பிரவேசித்தார். அவருடைய வாழ்க்கை தலைகீழானது. கடவுளுக்காக தன்னை முழுவதும் ஒப்புக்கொடுத்து தனது பணியை ஆரம்பித்தார்…. ஆண்டுகள் பல கடந்தன ! வில்லியம் கேரி தூங்கி கொண்டிருக்கையில் சாத்தான் அவருடைய கனவில் வந்தான்.

காட்சி 2

( சாத்தான் வில்லியம் கேரியின் முன்னால் நிற்கிறான் )

சாத்தான் : ( எகத்தாளமாய்.. உரத்த குரலில்… கம்பீரமாய் ) கேரி… வில்லியம் கேரி… என்ன… ஆச்சு பாத்தாயா ? இயேசு இயேசுன்னு சொல்லி ஓடிட்டிருந்தியே !

வில்லி : என்ன ஆச்சு ? நல்லா தானே இருக்கேன் !

சாத்தான் : நல்லா இருக்கியா ? இங்கிலாந்தில சுகமா வாழ்ந்திட்டிருந்தே ! இப்போ இங்கே கல்கத்தா வெயில்ல கர்ர்ருகிறே ! உன் சொந்த ஊர்ல சுதந்திரமா வாழ்ந்திட்டிருந்தே.. இங்கே வேற தேசத்துல அடிமை மாதிரி கஷ்டப்படறே.

வில்லி : இதுல என்ன கஷ்டம்… இயேசு படாத கஷ்டமா ?

சாத்தான் : வில்லி…வில்லி… உன் மனசை உன் பிரண்ட் ரொம்பவே கெடுத்துட்டான். ஒரு தீக்குச்சியை உரசி அப்படியே காட்டுல போட்டுட்டான். நீ பற்றி எரியறே ! எதுக்கு ?

வில்லி : கடவுளுக்காக எரியறது தான் சுகம். சும்மா எரியாத விறகா இருந்தா யாருக்கு லாபம்.

சாத்தான் : உனக்கென்ன லாபம் கிடைச்சுது வில்லி… மூணு பிள்ளைங்க.. மூணு பிள்ளைங்க செத்துப் போயிட்டாங்க.. ஏன் ? இங்கிலாந்தில இருந்திருந்தா இப்படி ஆயிருக்குமா ? இந்தியா வந்ததால தானே !!

வில்லி : கடவுள் கொடுத்தார், கடவுள் எடுத்தார் ந்னு யோபு சொன்னது உனக்குத் தெரியாதா ? குழந்தைகள் கடவுளோடது. நாம வளர்த்தறது மட்டும் தான்.

சாத்தான் ( கோபத்தில் ) : சும்மா விதண்டாவாதம் பண்ணாதே. உன் மனைவிக்கும் மூளை கலங்கிடுச்சு. நாளைக்கு நீ செத்துப் போனா, இங்கே உன் கூட சேத்து உன் பொண்டாட்டியையும் எரிச்சுடுவாங்க. அதான் இந்தியாவோட வழக்கம். சதி..சதி.. கேள்விப்பட்டிருப்பியே.. நீ தான் அதுக்கு எதிரா பேசிட்டு இருக்கிறவனாச்சே. வில்லி…

வில்லி : கடவுளோட அனுமதியில்லாம யாரும் யாரோட உயிரையும் எடுக்க முடியாது. எத்தனையோ இரத்த சாட்சிகள் எத்தனையோ விதமா செத்திருக்காங்க… எனக்கு எப்படி சாவுன்னு கடவுள் முடிவு செய்வார்.

சாத்தான் : கடவுள் கடவுள்… அப்படி சொல்லி சொல்லி தான் எல்லாருமே அழிஞ்சு போறீங்க. சுத்திப் பாரு.. உலகம் எவ்வளவு அழகா இருக்கு. எவ்வளவு ஜாலியா சந்தோசமா இருக்கலாம்… அதை விட்டுட்டு இங்கே கடவுள் கடவுள்ன்னு நீ கத்திட்டு இருக்கே..

வில்லி : படைப்பை வணங்கி, படைத்தவரை நிராகரிக்கச் சொல்றியா ?

சாத்தான் : படைத்தவர் அவர் தான்னு உனக்கு தெரியுமா ?

வில்லி : நான் பைபிளை நம்பறேன். அதான் அதை நிறைய மொழிகள்ல மொழிபெயர்த்திட்டு இருக்கேன். அப்போ கடவுளைப் பற்றி எல்லாருக்கும் தெரிய வரும். கடவுளை எல்லாரும் ஏற்றுக்கொள்ளும்போ உன்னை எல்லாரும் நிராகரிப்பாங்க.

சாத்தான் : என்னையா ? ஹா..ஹா.. .வில்லி.. நீ பணி செய்ய வந்து எத்தனை வருஷம் ஆச்சு

வில்லி : ஏழு வருஷம்..

சாத்தான் : இந்த ஏழு வருஷத்துல…எத்தனை பேருக்கு ஞான்ஸ்நானம் கொடுத்திருக்கே… சொல்லு வில்லி சொல்லு …

வில்லி : ( அமைதி )

சாத்தான் : சீரோ…. ஒருத்தரை கூட உன்னால மாற்ற முடியல. நீ என்னடான்னா உலகத்தை மாத்துவேன்னு கதை உடறே. போதும் விக்கி. போனதெல்லாம் போகட்டும். இந்த பைபிள், டிரான்ஸ்லேஷன், இந்தியா, எல்லாத்தையும் விட்டுட்டு குழந்தை குட்டியோட எங்கயாவது போய் சந்தோசமா இரு. உனக்கு இருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை தான் !

வில்லி : அதான் நானும் சொல்றேன். எனக்கு இருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை தான். அதை கடவுளுக்காக குடுத்துட்டேன். அதுவே எனக்கு வெற்றி தான். மத்ததெல்லாம் கடவுள் பாத்துப்பாரு.

சாத்தான் : எது வெற்றி ? இதுவா வெற்றி !!

வில்லி : என்னைப் பாத்து பயந்து நீ என்கிட்டே விவாதம் பண்றியே.. அதுவே எனக்கு வெற்றி தான்.. நீ போ.. என்ன நடந்தாலும் நான் நடக்கப் போறது அவரோட வழியில தான். “தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களை எதிர்பார்; தேவனுக்காகப் பெரிய காரியங்களைச் செய்” அது தான் என்னோட வாழ்க்கையோட அடிப்படை. அதை நான் இனிமே யாருக்காகவும் மாற்றப் போறதில்லை.

( கனவு கலைகிறது )

பின் குரல் :

தனது ஒரே ஒரு வாழ்க்கையை கடவுளுக்காய் முழுமையாய் கொடுத்த வில்லியம் கேரி கிறிஸ்துவின் பணியில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தார். நாற்பத்து ஒன்று ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றிய அவர் வங்காளம், இந்தி, ஒரியா, மராத்தி, அசாமி, சமஸ்கிருதம் உட்பட ஏராளமான இந்திய மொழிகளில் விவிலியத்தை மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்திய மக்கள் இயேசுவின் வழியில் வர அவருடைய மொழிபெயர்ப்புகள் பெரிதும் துணை புரிந்தன.

நமக்கு தரப்பட்டுள்ளது ஒரே ஒரு வாழ்க்கை !
அதை இயேசுவுக்காய் கொடுப்போம்.

*

 

Posted in Articles, WhatsApp

சார்ஜ் … ரீ சார்ஜ்

Image result for connect with God Phone

“உம் அன்பை உலகத்துக்கு” பாட்டோட வீடியோவை வாட்ஸப்ல அனுப்பினேன், எப்படி இருக்குன்னே சொல்லவே இல்லையே ? நண்பனின் கேட்டேன்.

பாக்கவே இல்லடா… டேட்டா பிளான் முடிஞ்சு போச்சு, அதனால டவுன்லோட் பண்ண முடியல ! என்றான் நண்பன்.

என்னது அதுக்குள்ள முடிஞ்சு போச்சா ? நீ தான் 10 ஜிபி பிளான் வச்சிருந்தியே..

ஆமா, அதுவும் பத்த மாட்டேங்குது ! ஏகப்பட்ட மீம்ஸ், ஏகப்பட்ட வாட்ஸப் வீடியோஸ், டுவிட்டர் வீடியோஸ், ஃபேஸ்புக் வீடியோஸ் ந்னு சட்டுன்னு எல்லாமே தீந்து போயிடுது.டேட்டா முடிஞ்சு போனா, அப்புறம் ஸ்பீட் அப்படியே ஆமை மாதிரி ஆயிடுது.

ம்ம்.. எல்லாமே ரொம்ப பயனுள்ள வீடியோக்களா ?

சேச்சே.. எல்லாம் சும்மா டைம் பாஸ் தான்…

அப்புறம் எதுக்கு டவுன்லோட் பண்றே ?

எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான் என்று சிரித்தான் நண்பன் !

யோசித்துப் பார்த்தேன் !

நமது வாழ்க்கையும் இந்த டேட்டா பிளான் மாதிரி தான். இளமையில் நமக்கு இருக்கும் வலிமையும், வேகமும் முதிய வயதில் நம்மிடம் இருக்கப் போவதில்லை. வலிமையாக இருக்கும்போது நாம் வீணான வகையில் வாழ்க்கையைச் செலவழித்தால் பின்னர் முதுமையை எட்டும் போது பயனுள்ள வகையில் எதுவுமே மிஞ்சுவதில்லை.

வேகமாய் இருக்கும் போது விவேகமானதை தெரிந்தெடுக்கிறோமா ? நமது நாட்களில் எதை நாம் இதயத்தில் டவுன்லோட் செய்கிறோம் ? பொழுது உருக்குலைக்கும் விஷயங்களையா ? பொழுதுகளை உருவாக்கும் விஷயங்களையா ?

தேவையற்ற அரட்டைகள், கேலிகள், நகைச்சுவைகள் நமது இதயத்தில் நிரம்பி வழியும் போது இறைவனின் விஷயங்களுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

நமக்கு தரப்பட்டிருக்கும் நாட்கள் எனும் ‘டேட்டா’ வை அலட்சியமாய் செலவழிக்கிறோமா ? அல்லது விண்ணக ஆதாயத்துக்காய் செலவழிக்கிறோமா ?

போனில் டேட்டா தீர்ந்து போனால்
ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்
ஆனால்,
வாழ்க்கையில்
டேட்டா பிளான் தீர்ந்து போனால்,
ரீசார்ஜ் பண்ண முடிவதில்லை !

*

 

Posted in Articles, Vettimani

இவரே உம் தாய்

Image result for Blessed virgin Mary

கல்வாரி மலை !

சிலுவையின் உச்சியில் ஆணிகளால் அடிக்கப்பட்ட நிலையில், உதிரம் உடலிலிருந்து சொட்டச் சொட்ட வலியின் உச்சியில் இருந்தார் இயேசு. இதோ மரணம் எந்த நேரமும் தன்னை அழைத்துச் செல்லலாம் எனும் சூழல். இறைவனிடம் தன் உயிரைக் கையளிக்க வேண்டிய தருணம். தன்னை அடித்தவர்களை, சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தாயிற்று. அருகில் இன்னொரு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்ளனுக்கு மன்னிப்பை வழங்கியாயிற்று. இப்போது இன்னொரு முக்கியமான பணி இயேசுவின் முன்னால் பாக்கியிருந்தது !

அது தான் அன்னை மரியாள் சார்ந்த பணி. கருவாய் உயிரில் ஏந்தி, மழலையாய் மடியில் தாங்கி, குழந்தையாய் தோளில் தூக்கிய மரியாள் இப்போது தாங்கி நிற்பது வேதனையின் மலையை ! சிலுவையின் உச்சியில் மகன் இருக்கையில் எந்தத் தாய்க்குத் தான் நிலை குலையாமல் இருக்கும். அன்னையும் அப்படியே நின்றார். உயிர் துடித்தாலும், மகனை விட்டு கணநேரமும் விலகியிருக்க மனம் விரும்பவில்லை. அங்கேயே நின்றார்.

அப்போது தான் இயேசுவின் குரல் சிலுவையின் உச்சியிலிருந்து மெதுவாய் ஆனால் தீர்க்கமாய் ஒலித்தது. அன்னையின் அருகில் நின்றிருந்த சீடனை அழைத்தார் இயேசு. அந்த சீடனிடம் தான் திருச்சபையைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். இப்போது இரண்டாவதாய் முக்கியமான ஒரு பொறுப்பை ஒப்படைத்தார்.

“இவரே உம் தாய்” !

இயேசு தனது தாயை, திருச்சபையின் முதல் பொறுப்பாளியிடம் ஒப்படைத்தார். மனுக்குலத்தின் அத்தனை கிறிஸ்தவர்களுக்கும் அவர் அன்னையான கணம் அது. அவரை ஏற்றுக் கொள்பவர்களுக்கும், ஏற்றுக் கொள்பவர்களுக்கும். அவரை மறுதலிப்பவர்களுக்கும் அவர் தான் அன்னை !

அந்த அன்னை மரியாதைக்குரியவர். அந்த அன்னை வணக்கத்துக்குரியவர். அந்த அன்னை படிப்பினை நல்குபவர். அவர் கடவுளல்ல ! கடவுளின் அன்னை ! அவர் தெய்வமல்ல, தெய்வத்தின் தாய் ! அந்த அன்னையின் வாழ்க்கையிலிருந்து மதங்களைத் தாண்டியும் நாம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவற்றில் முக்கியமான பத்து விஷயங்கள் இவை.

1. இறைநம்பிக்கை !

திருமணக் கனவுகளோடு இருந்த இளமைப் பருவம். யோசேப்பு என்பவரோடு மண ஒப்பந்தமும் ஆகியிருந்தது. அந்த நேரத்தில் இறைவனின் தூதர் கபிரியேல் வந்தார். கன்னியான நீர் கடவுளின் மகனை ஏந்தவேண்டும். இது தூய ஆவியின் கனி. ஆண்வாசம் அறியாத தெய்வீக கருத்தரிப்பு என்றார். எந்தப் பெண்ணும் பதறி ஓடும் சூழல் அது. அன்னை மரியாளோ இறை நம்பிக்கையில் உறுதியாய் இருந்தார். ‘அப்படியே ஆகட்டும்’ என தன்னையே அர்ப்பணித்தார் !

இயேசு பிறந்தார். வளர்ந்தார். சிறுவயதில் குடும்பமே உலகமென்று இருந்தவர், பின்னர் உலகமே குடும்பமென வெளியேறினார். நல்வாழ்வின் போதனைகளை நாள்தோறும் அறிவித்துத் திரிந்தார். அற்புதங்கள் செய்தார். பாடுகள் பட்டார். கடைசியில் சிலுவையில் உயிரையும் விட்டார். கடைசி வரை மரியாள், கடவுள் மீதான நம்பிக்கையை தளர விடவில்லை. இறை நம்பிக்கையில் உறுதியாய் நின்றார்.

இறை நம்பிக்கை, நாம் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

2. தாழ்மையின் தாய் !

ஆடம்பரமான பங்களா கிடைத்தால் கடவுளின் அருள் என்போம். அற்புதமான வேலை கிடைத்தால் இறைவனின் கருணை என்போம். ஆனால் அன்னை அப்படியல்ல. தாழ்மையின் தாழ்வாரங்களில் மகிழ்ச்சியோடு பயணித்தவர். அதுவே கடவுளின் அருள் என நம்பி வாழ்ந்தவர்.

கடவுளை ஈன்றெடுக்க அவருக்குக் கிடைத்தது வைக்கோல்களின் சரசரப்பில், கால்நடைகளின் கழிவுகளில் ஓர் தீவனத் தொட்டி ! மகனுக்கு ஆபத்து என்றறிந்ததும் எகிப்தை நோக்கி ஓட்டம் ! வாழ்க்கை முழுதும் ஓர் ஏழைத் தாயாய் தச்சுத் தொழிலோடு சங்கமம். அன்னை என்றுமே அதை குறையாய் கருதியதில்லை. தாழ்மையாய் வாழ்வதே மேன்மையான வாழ்வு என வாழ்ந்தார்.

தாழ்மை, அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

3. பிறரன்புப் பணி !

அன்னை என்றாலே அன்பு தான். தாயன்பை விடப் பெரிய அன்பு இந்த உலகில் இல்லை. இயேசுவைக் கருத்தாங்கிய சூழலிலும் அவரது அன்பின் இதயம் கனலாகவே இருந்தது. தூரதேசத்தில் அவரது உறவினர் எலிசபெத் என்பவர் கருத்தாங்கியிருந்தார். காடு மலை கடந்து அவரைத் தேடிச் சென்றார் மரியாள். அவரைச் சந்தித்தார். அவரோடு பல மாதங்கள் தங்கி அவருக்குப் பணிவிடை புரிந்தார் !

இயேசுவின் பணிக்காலத் துவக்கத்தில் முதல் புதுமையை துவங்கி வைத்ததும் அன்னை தான். திருமண வீடு ஒன்றில் திராட்சை ரசம் தீர்ந்து விட்டது. அன்னையின் இளகிய மனது அதைக் கண்டு கவலையடைந்தது. ‘மகனே இரசம் தீர்ந்து விட்டது’ என இயேசுவிடம் சொன்னார். இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக்கி முதல் புதுமையை அரங்கேற்றினார்.

பிறர் மீதான அன்பும், கரிசனையும் அன்னையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

4. கடின உழைப்பாளி !

மரியாள் சிறுவயது முதலே கடின உழைப்பாளியாக இருந்தார். குடும்பத்துக்குத் தேவையான அனைத்தையும் செய்கின்ற பெண்ணாக அவரது வாழ்க்கை இருந்தது. தச்சுத் தொழிலாளியின் மனைவியாய் வாழ்ந்த அன்னை கணவனுக்குப் பணிந்து அவருடைய பணிகளில் உழைக்கின்ற அன்னையாக இருந்தார். ஆண்டு தோறும், ஆலயத்துக்கு மூன்று நாள் நடைபயணம் சென்று கடவுளைத் தொழும் பெண்ணாக அவருடைய வாழ்க்கை இருந்தது !

இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்பது சொகுசான வாழ்க்கை அல்ல. தனது கடமைகளைத் தவறாமல் செய்கின்ற பணி. கடின உழைப்பை பிறருக்காகவும் செய்யத் தயங்காத பணி.

கடின உழைப்பு, அன்னையிடமிருந்து கற்றுக்கொள்ள முடிகிற இன்னொரு பாடம்.

5. மகிழ்ச்சியின் மனம்

மரியாளின் வாழ்க்கை சாதாரண ஒரு தாயின் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் மிகவும் கடினமான வாழ்க்கை. பகட்டான வாழ்க்கை இல்லை. அன்னையை கடைசி காலம் வரை காப்பாற்றும் மகன் இல்லை. வாழ்வின் இடையிலேயே கணவன் இறந்து போயிருக்க வேண்டும். அத்தனை விஷயங்கள் மனதுக்குள் அலையடித்தாலும் அவரது மனம் இறைவனில் மகிழ்ச்சியாகவே இருந்தது. எந்த இடத்திலும் அன்னையின் மகிழ்ச்சிக் குறைவை நாம் காண முடியாது !

தாய்மை நிலையில் இருந்த காலகட்டத்தில் மரியா மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆண்டவரைப் புகழ்ந்து பாடிய பாடல் மிகப்பிரபலம்.

” ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர் ” என அந்தப் பாடல் நீள்கிறது.

எந்த சூழலிலும் இறைவனில் மகிழ்ச்சியாய் இருப்பது அன்னையிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்.

6. பணியில் குறுக்கிடாதவர் !!

கடவுளின் அன்னை ! ஊரெங்கும் மகன் புதுமை விதைத்துத் திரிந்தார். இறந்தவர்களை உயிர்ப்பித்தார். பசித்தோருக்கு உணவளித்தார். பேய்களை விரட்டினார். நோய்களை மாற்றினார். ஊரெங்கும் அவரைப் பற்றிய பெருமைப் பேச்சுகள் தான். ஆனாலும் அன்னை தனது சுயநல விண்ணப்பத்தோடு ஒரு முறை கூட இயேசுவின் முன்னால் போய் நிற்கவில்லை. மகனைக் காணவேண்டும் எனும் ஆவலில் சென்றதுண்டே தவிர, அவரது ஆசீர்வாதங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என‌ அன்னை சென்றதில்லை.

தனக்கு இடப்பட்ட பணி என்ன ? மகனுக்கு இடப்பட்ட பணி என்ன என்பதை அவர் புரிந்திருந்தார். மகனுடைய பணி வாழ்வில் எள்ளளவும் குறுக்கிடாத மனம் அன்னைக்கு இருந்தது. ‘வளந்தப்புறம் எனக்கு சோறு போடுவேன்னு தானே உன்னை வளத்தேன்’ எனும் உலக அம்மாக்களின் புலம்பல் அன்னையிடம் அறவே இல்லை.

பிறருடைய வாழ்க்கையில் மூக்கை நுழைக்காத மனம், அன்னையிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

7. சுயநலமற்றவர் !

அன்னை மரியாள் சுயநலமற்றவர் என்பதை அவரது வாழ்விலிருந்து மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு சூழலிலும் தனது விருப்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு இறைவனுடைய விருப்பத்துக்காகவே அவர் வாழ்ந்தார். திருமணத்துக்கு முன்பே கர்பமானால் ஊராரின் ஏளனம் வருமே என கவலைப்படவில்லை. ஆண்டவரையே சுமந்த அவர், அவமானங்களையும் ஆண்டவருக்காய் சுமக்க ஆயத்தமாகவே இருந்தார்.

இயேசுவுக்கு எத்தனையோ எதிரிகள். சாத்தான்கள் இயேசுவை கடவுள் என அறிக்கையிட, மனிதர்கள் அவரை சாத்தான் என்று வசை பாடினர். எந்த சூழலிலும் அவர் கலங்கவில்லை. பிறருக்காக, பிறருடைய மீட்புக்காக தன்னையும் இணைத்துக் கொண்டார். சுயநல பேச்சை எப்போதுமே முன்னெடுத்துச் செல்லவில்லை. இயேசுவின் கடைசி நிமிடங்களிலும் கூட அவரோடு இருந்து வலி சுமந்தவர்.

சுயநலமற்ற மனம், அன்னையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

8. எதிர்பாராத நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ளல்

அன்னை மரியாவின் வாழ்க்கையில் நடந்தது போல எதிர்பாரா நிகழ்வுகள் யாருடைய வாழ்விலாவது நடந்திருக்குமா என்பதே கேள்விக்குறி தான். ஆனால் அந்த நிகழ்வுகளையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் மனம் படைத்தவராக அன்னை இருந்தார். தயாராகும் முன் தாயாரானது ஒரு திடுக்கிடும் நிகழ்வு ! தொழுவத்தில் மகனை ஈன்றது ஒரு எதிர்பாரா நிகழ்வு.

இரவோடு இரவாக எகிப்து நாட்டுக்கு ஓடிப் போக வேண்டிய சூழல். மகனின் பணிகளைக் கண்டு பிரமிக்கும் சூழல். மகனை சித்திரவதை செய்து கொலை செய்யும் காட்சி. என அன்னையின் வாழ்க்கையில் நடந்தவை எல்லாமே எதிர்பாரா நிகழ்வுகள். அனைத்தையும் இறைவன் மீதான அன்பினால் ஏற்றுக் கொண்டார்.

நமது வாழ்வின் புரியாமைகளை, நம்பிக்கையுடன் எதிர்கொள்தல் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

9. ஒப்பீடுகளற்ற மனநிலை.

நமது வாழ்க்கையில் வருகின்ற பெரும்பாலான பிரச்சினைகளின் காரணம் நமது வாழ்வில் நடக்கின்ற விஷயங்களை பிறருடைய வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தான். “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது” ? ” ஊர் உலகத்துல எல்லாரும் நல்லா தானே இருக்கிறாங்க” எனும் மனநிலை.

அன்னை மரியாளின் வாழ்க்கையில் அத்தனைய ஒப்பீடுகளே இருந்ததில்லை. “ஏன் நான் அவமானத்தைச் சுமக்க வேண்டும் ?” என அவர் கேட்டதில்லை. எல்லோரும் இயேசுவின் அற்புதங்களை அனுபவிக்கும் போது, நான் மட்டும் ஏன் வலிகளைச் சுமக்க வேண்டும் என கேட்கவில்லை. எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட சுவாரஸ்யமான வாழ்க்கையை கடவுள் வைத்திருக்கிறார். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார் அன்னை.

ஒப்பீடுகளின்றி நமது வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

10. மன உறுதி !

பெண்கள் மென்மையானவர்கள் என்பார்கள். உண்மையில் பெண்மை தான் வலிமை வாய்ந்தது. ஒரு உயிரிலிருந்து இன்னொரு உயிரைப் பிரித்தெடுக்க பெண்மையால் மட்டுமே முடியும். தாய்மை வலி முதல், சிலுவையின் தாளா வலி வரை தாங்கியவர் அன்னை மரியாள். அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் மனதில் தாங்கியவர் அன்னை மரியாள்.

நமது வாழ்க்கை எப்போதுமே மலர்களின் மீது தண்ணீர் நகர்வதைப் போல மென்மையாய் இருப்பதில்லை. சில வேளைகளில் சாரலாய், சில வேளைகளில் புயலாய் அது மாற்றம் காட்டும். அவற்றைத் தாங்குகின்ற மன உறுதி தான் நமது வாழ்க்கையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. அனைத்தையும் இறைவனின் அருளோடு தாங்குகின்ற மனம் இருந்தால் வாழ்க்கை வசந்தமாகும்.

எதற்கும் கலங்காத மன உறுதி அன்னையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம்.

*

Thanks : Vettimani, London & Germany