Posted in Articles, WhatsApp

தயாரிப்பு

Image result for ready to travel

பால்காரன் கிட்டே இன்னும் நாலு நாளைக்கு பால் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க. பேப்பர் காரன் கிட்டே ஒண்ணும் சொல்ல வேண்டாம். நாம் வீட்ல இல்லேங்கற விஷயம் அவனுக்கு தெரிய வேண்டாம் !

மொட்டை மாடில இருக்கிற நாலு தொட்டிச் செடிகளையும் கீழே எடுத்துட்டு வாங்க. அப்படியே மெயின் கேட் பக்கமா அதை வெச்சுடுங்க. வேலைக்காரி கிட்டே டெய்லி காலைல வந்து தண்ணீ ஊத்த சொல்லியிருக்கேன்.

எல்லா சன்னலும் சாத்தியாச்சான்னு ஒரு தடவை செக் பண்ணுங்க. சுவிட்ச் எல்லாம் ஆஃப் பண்ணுங்க. அதுக்காக பிரிட்ஜை ஆஃப் பண்ணி தொலைச்சிடாதீங்க ! வெளிகேட்டை பூட்டும்போ மட்டும் உள்பக்கமா பூட்டுங்க.

டிக்கெட் கைல வெச்சிருக்கீங்க தானே ?

நான் சொல்றதெல்லாம் காதுல விழுதா இல்லையா ? மனைவியின் குரல் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது !

ஊருக்குப் போகவேண்டும் எனும் பரபரப்பு வீடு முழுவதும் பரவிக் கிடந்தது. ஊருக்கு போகும்போ இவ்ளோ முன்னேற்பாடுகள் செய்ய வேண்டுமா என்பது மலைப்பாய் இருந்தது ! ஒரு வாரப் பயணம் ! எத்தனை விஷயங்களில் கவனம் !!

ஒவ்வொன்றாய் செய்து கொண்டிருந்தபோது மனதில் சிந்தனை அலைமோதியது !

ஒருவாரம் வீட்டைப் பூட்டி விட்டு இன்னொரு வீட்டுக்குப் போவதற்கே இத்தனை முன்னேற்பாடுகள் செய்கிறோமே ! ஒரேயடியாக இந்த வீட்டைப் பூட்டி விட்டு விண்ணக வீட்டுக்குச் செல்வதற்கு எத்தனை முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் ?

அவற்றையெல்லாம் செய்கிறோமா என்பதை யோசித்துப் பார்த்தால் உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்க வேண்டியிருக்கிறது !

“விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை” என்கிறார் இயேசு !

அந்த வீட்டுக்குச் செல்வதற்கான பயண முன்னேற்பாடுகளாக இயேசு இரண்டு விஷயங்களை வலியுறுத்துகிறார். அனைத்துக்கும் மேலாய் இறைவனை நேசிப்பது, தன்னைப் போல பிறரையும் நேசிப்பது. இந்த இரண்டு விஷயங்களுமே விண்ணகப் பயணத்துக்கான ஏற்பாடுகள்.

இந்த விஷயங்களைச் செய்யாமல், மற்ற விஷயங்களை மட்டுமே செய்து திரிவது என்பது பயணத்துக்கான டிக்கெட் வாங்காமல் பயணம் செய்ய முயல்வதைப் போன்றது ! அங்கே நமக்கு அனுமதி மறுக்கப்படும்.

நான் போய் உங்களுக்கென ஒரு இடத்தை ஆயத்தம் செய்கிறேன் என்றார் இயேசு ! அந்த இடத்துக்குப் போக, இந்த உலகில் நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்ய நமக்கு குறிப்பிட்ட ஆயுளைக் கொடுத்திருக்கிறார் ! அதை புரிந்து கொள்ளாமலேயே பரபரப்பாய் முடிந்து விடுகிறது நம் வாழ்க்கை.

கடலெனும் மறு வாழ்வின்
ஒரு துளிச் சுவையே இவ்வுலக வாழ்க்கை !
ஒரு துளிச் சுவைக்காக கடலை இழக்கலாமா ?

சிந்திப்போம் ! தயாரிப்புகளை சரியாய் செய்வோம் !

 

Posted in Articles, WhatsApp

மொபைல் போனைக் காணல

Image result for Mobile era

என்னோட மொபைல் போனைக் காணல என மாலையில் சொன்னார் அலுவலக நண்பர் ஒருவர். ‘ஐயையோ என்னாச்சு ? எப்போ ?’ என்று பதட்டத்துடன் கேட்டேன்.

காலைல ஆபீஸ்ல வந்ததும் வீட்டுக்கு போன் பண்ணினேன், சாயங்காலம் கிளம்பும்போ பாத்தா காணோம், என்றார்.

என்னது காலைல போனை பாத்தீங்க? அப்புறம் சாயங்காலம் வரை பாக்கவே இல்லையா ? என்றேன் ஆச்சரியமாய் !

ஆமா.. ஈவ்னிங் வீட்டுக்கு கிளம்பறேன்னு போன் பண்ண நினைச்சேன் அதான் தேடினேன். பட் காணல… என்றார்.

‘ஓ.. வாட்ஸப், டுவிட்டர், ஃபேஸ்புக்.. ‘ நோட்டிபிகேஷன்ஸ் எல்லாம் வராதா உங்களுக்கு ? என்றேன்.

அதெல்லாம் நான் வெச்சுக்கல, என வெகு இயல்பாய் சொன்னார்.

சரி, எதுக்கும் செக்யூரிடி கிட்டே சொல்லிடுங்க என சொல்லி விட்டு திரும்பினேன் !

மனதுக்குள் கேள்விகள் எழுந்தன.

நிமிடத்துக்கு ஒருமுறை வாட்ஸர், மணிக்கொரு முறை டுவிட்டர் என போனை நோண்டிக்கொண்டிருக்கும் என்னுடைய நிலை பரிதாபமாய் எனக்கே தெரிந்தது ! போன் தொலைந்து போனால் ஐந்தே நிமிடத்தில் எனக்குத் தெரிந்து விடும். காரணம் அதனோடு எனக்குள்ள நெருக்கம் அப்படி !

யோசித்தேன் !

இறைவனோடு எனக்குள்ள தொடர்பு அறுந்து போனால் ஐந்து நிமிடத்தில் கண்டு பிடிப்பேனா ? ஐந்து மணி நேரத்தில் ? ஐந்து வாரங்களில் ? ஐந்து மாதங்களில் ? கேள்விகள் நீண்டு கொண்டே இருந்தன. பல ஆண்டுகளாக தொடர்பில் இல்லாவிட்டால் கூட உணரமாட்டேனோ எனும் பயம் எழுந்தது !

வாட்ஸப்பை ஒதுக்கிவைத்து விட்டு, இறை வார்த்தைகளை வாசிக்க ஆரம்பித்தேன் ! போன் தொலைந்தால் வாங்கலாம், ஆன்மா தொலைந்து போனால் ?

*