Posted in Vettimani

கொடுங்கள், பெற்றுக் கொள்வீர்கள்

 

Image result for give to poor

“நிறைய பணம் வேணும், என்னங்க செய்யலாம் ?” என யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். பல ஐடியாக்கள் சொல்வார்கள். நல்ல சேமிப்புத் திட்டம், நீண்டகால வைப்புத் திட்டம், தங்க நகைத் திட்டம், ரியல் எஸ்டேட் இப்படி ஏதோ ஒன்றைத் தானே ? ஆனால் கிறிஸ்தவமோ இருப்பதையெல்லாம் ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்போது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்கிறது.

பிறருக்குக் கொடுப்பதை இயேசு அழுத்தம் திருத்தமாகப் போதித்தார். இறைவனிடமிருந்து நாம் பெற்றுக் கொள்வதே பிறருக்குக் கொடுப்பதற்காகத் தான் என்கிறது கிறிஸ்தவம். “ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார்” என பகிர்தலை உற்சாகப்படுத்துகிறது விவிலியம்.

நியாயத் தீர்ப்பு நாள் ஒன்று உண்டு. அன்று நல்லவர்கள் வலப்பக்கமும், தீயவர்கள் இடப்பக்கமும் நிற்பார்கள். இருவருமே இறைவனை நேசித்தவர்கள், மத செயல்களில் ஈடுபடுபவர்கள், வழிபாட்டில் குறை வைக்காதவர்கள். ஆனால் இரு பிரிவினருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு.

வலப்பக்கம் நிற்பவர்கள் ஏழைகளுக்கு உதவியவர்கள். பசியாய் இருந்தவர்களுக்கு உணவளித்தவர்கள். தாகமாய் இருந்தவர்களுக்கு நீர் கொடுத்தவர்கள். ஆடையின்றி இருந்தவர்களை உடுத்தியவர்கள். நோயுற்று இருந்தவர்களைப் பார்க்க வந்தவர்கள். அன்னியனாய் இருந்தவர்களை வரவேற்றவர்கள். அப்படி அவர்கள் ஏழைகளுக்குச் செய்தது எல்லாமே இறைவனுக்குச் செய்ததாயிற்று ! என்கிறார் கடவுள்.

பிறருக்கு உதவுகின்ற மனித நேய சிந்தனை இல்லாதவர்கள் விண்ணகத்தில் நுழைய முடியாது என்பது தான் இயேசு போதித்த சிந்தனைகளில் முக்கியமான ஒன்று.

அவருடைய வாழ்க்கையிலும் அவர் எப்போதுமே ஏழைகளின் பக்கமாகவே நின்றார். பிறந்த போது மாட்டுத் தொழுவம், வளர்கையில் தச்சுத் தொழிலாளியின் குடிசை, சாவின் போது சிலுவையில் குற்றவாளியாய் மரணம், மரித்தபின் ஏதோ ஒருவருடைய கல்லறையில் அடக்கம். என ஏழைகளின் சாயலாகவே ஒவ்வொரு கட்டத்திலும் இருந்தவர் இயேசு.

“பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை” எனும் போதனையையே இயேசு முன்வைத்தார். கொடை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில வழிகாட்டல்களையும் அவர் தனது போதனைகளின் மூலமாக வைத்தார். கொடுத்தல் பற்றி சில சிந்தனைகளை மனதில் கொள்வோம்.

  1. முகமலர்ச்சியோடு கொடுக்கவேண்டும். பிறருக்குக் கொடுப்பது என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பாக்கியம் என நினைத்து உதவ வேண்டும்.
  2. ரகசியமாய் உதவ வேண்டும். வலது கையால் நீங்கள் செய்யும் உதவி இடது கைக்குக் கூட தெரியக் கூடாது. மறைவாய் கொடுப்பதைக் காணும் இறைவன் பலன் தருவார்.
  3. நல்ல சிந்தனையோடு கொடுக்க வேண்டும். கட்டாயத்தினாலோ, தனது பெயருக்காகவோ, கடமைக்காகவோ, பிறருடைய வசைக்குத் தப்பியோ அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ கொடுப்பது தவறு. சக மனித கரிசனை, அன்பு இதன் அடிப்படையில் மட்டுமே உதவ வேண்டும்.
  4. பிறருக்குக் கொடுப்பது என்பது விண்ணகத்தில் செல்வம் சேர்த்து வைப்பது போல. அது பூச்சியாலும் துருவாலும் சேதமடையாது என்கிறார் இயேசு. அந்த மனநிலையோடு கொடுக்க வேண்டும்.
  5. பிறருக்குக் கொடுப்பது என்பது இறைவனைப் புகழ்வதைப் போன்றது என்கிறது பைபிள். எவ்வளவு கொடுத்தோம் என்பதை அளவிட வேண்டுமெனில், மீதம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பதை வைத்தே அளவிடவேண்டும்.
  6. குற்ற உணர்விலிருந்து விடுபட பிறருதவிப் பணிகளை செய்யக் கூடாது. இயேசுவின் மீதான அன்பும், சக மனிதன் மீதான அன்பும் மட்டுமே ஈகையை தூண்டவேண்டும். உள்ளதிலிருந்து கொடுப்பதை விட, உள்ளதையெல்லாம் கொடுப்பதும், உள்ளத்தையே கொடுப்பதும் உயர்வானவை.
  7. கடவுள் திரும்பத் தருவார் எனும் எண்ணத்தில் நாம் உதவக் கூடாது. கடவுள் இதயத்தைப் பார்க்கிறவர், நமது உண்மையான தேவைக்கு ஏற்ப அவர் நமக்கு அளிப்பார்.
  8. நம்மிடம் இருக்கும் மண்ணுலக செல்வங்களை நாம் பிறருக்கு அளிக்கும்போது, இறைவன் விண்ணுலக செல்வங்களை நமக்கு அளிப்பார்.
  9. எவ்வளவு கொடுத்தோம் என்பதல்ல, எந்த மனநிலையில் கொடுத்தோம் என்பதே முக்கியம். அளவைப் பார்த்து மதிப்பிடுவது மனித இயல்பு, அகத்தைப் பார்த்து மதிப்பிடுவது இறை இயல்பு.
  10. கொடுங்கள். மனிதநேயம் என்பது பெறுதலில் அல்ல, கொடுத்தலில் தான் நிறைவு பெறும். கொடுக்கக் கொடுக்க வளர்வது அன்பு மட்டும் தான்.

“கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்.” நீதிமொழிகள் 22 :9

*

 

Posted in Articles

விவிலியம் வாசிக்க வேண்டுமா ?

Image result for reading bible

 

ஆலயத்தில் ஒரு மாலை நேர செபக்கூட்டம் ! போதகர் மேடையில் நின்று கொண்டு கேட்டார்.

“இன்று எத்தனை பேர் விவிலியம் வாசித்தீர்கள் ?”

ஒரு சில கைகள் அங்குமிங்குமாய் எழுந்தன.

நிறைய பேர் வாசிக்கவில்லை ! ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா ? போதகர் கேட்டார்.

‘டைம் கிடைக்கல’ என்பதே பெரும்பாலான பதிலாய் இருந்தது.

கூட்டத்திலிருந்த ஒரு நபரை அழைத்த போதகர் பைபிளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்து ஒரு பத்து வசனங்கள் வாசிக்கச் சொன்னார். கூடவே கையிலிருந்த வாட்சில் டைமரையும் ஆன் பண்ணி வைத்தார். கூட்டம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.

நபர் வந்தார், நிதானமாய் பத்து வசனங்கள் வாசித்து முடித்தார். இப்போது போதகர் வாட்சை எடுத்து கூட்டத்தினரை நோக்கி நீட்டினார். நாற்பத்தைந்து வினாடிகள் என்றது !

போதகர் பேச ஆரம்பித்தார்.

கடவுள் கொடுத்த ஒரு நாளில் நாற்பத்தைந்து வினாடிகளை அவருக்காய் செலவிட நம்மால் முடியவில்லை. ஒரு நாளில் இருக்கும் 86400 வினாடிகளில் 45 வினாடிகளை செலவிட நம்மால் முடியவில்லை.  சொல்லப்போனால் ஒரு நாளின் 0.05 சதவீத நேரத்தை நம்மால் கடவுளுக்காய் செலவிட முடியவில்லை அப்படித்தானே ? எனில் நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா ?

போதகர் கேட்க கூட்டம் நிசப்தமானது !

நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் இறைவன் நமக்குத் தந்த கொடை. அந்த கொடையின் கீழ் வாழ்கின்ற நாம் நமது வாழ்க்கை முழுவதையுமே அவருக்காக கொடுக்க வேண்டும்.

நமது வாழ்க்கையை அவரிடம் ஒப்படைக்க நாம் அவரை அறிந்திருக்க வேண்டும்.

அவரை அறிந்து கொள்ள அவரது வார்த்தைகளை நிச்சயம் வாசிக்க வேண்டும்.

சிலர் ஒரு நாளில் சில நிமிடங்களைக் கூட ஆண்டவருக்காய் ஒதுக்குவதில்லை. சிலர் செல்லுமிடமெல்லாம் ஒரு பைபிளை எடுத்துக் கொண்டு போய் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்கின்றனர்.

நமது வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம் ? அழிந்து போகும் இவ்வுலக வாழ்க்கைத் தேடல்களுக்கா ? அழியாத வாழ்வைத் தரும் இறைவனின் வார்த்தைகளுக்கா ? சிந்திப்போம் !

நற்பேறு பெற்றவர் யார்? அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்; ( திருப்பாடல்கள் 1 )

 

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் : அதிசயமாய் கிடைத்த மீன்கள்

Image result for peter fishing jesus : 21 : 1-14

பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:

சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,

அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை.

இயேசு அவர்களிடம்,

“பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா?”

 என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள்.

அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்”

 என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.

மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.

படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.

இயேசு அவர்களிடம்,

“நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார்.

சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இயேசு அவர்களிடம்,

“உணவருந்த வாருங்கள்”

 என்றார். சீடர்களுள் எவரும், ‘நீர் யார்?’ என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.

இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

விளக்கம்

இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து விட்டார். அதன் பின் சீடர்களுக்கு இரு முறை காட்சியும் அளித்தார். சீடர்களுக்கோ இயேசு இல்லாத வாழ்க்கை தலைமையற்ற வாழ்க்கையைப் போல உறுத்தியிருக்க வேண்டும். மீண்டும் மீன்பிடிக்கும் தொழிலுக்கே திரும்பினார்கள்.

இப்போது இரவு முழுவதும் வலைவீசியும் மீன்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றமாய் அதிகாலையில் சீடர்கள் கரையை நோக்கி வருகின்றனர். அப்போது இயேசு கரையிலிருந்து அவர்களோடு உரையாடுகிறார்.

இயேசு யார் என்றே அறியாமல் அவர்கள் அவருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கின்றனர். மீன்கள் ஏராளமாய் வலைகளில் வந்து சிக்குகின்றன. சீடர்கள் இயேசுவைக் கண்டு கொள்கின்றனர். பேதுரு படகிலிருந்து குதித்து இயேசுவை நோக்கி ஓடுகிறார்.

கரையில் சீடர்கள் வருகின்றனர். இயேசு அவர்களுக்காய் உணவு தயாரித்து வைத்திருக்கிறார்.

இந்த செயல் பல்வேறு ஆன்மீக சிந்தனைகளை நமக்குள் எழுப்புகிறது.

  1. மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தான் இயேசு பேதுருவை முதன் முதலாக அழைத்தார். அவரும் தனது வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின்சென்றார். இயேசுவோடான பயணம் நிறைவடைந்தபின் பேதுரு மீண்டும் அதே மீன்பிடிக்கும் தொழிலுக்கு வருகிறார். உயிர்த்த இயேசு இரண்டாம் முறையாய் மீண்டும் அழைப்பாரா எனும் எதிர்பார்ப்பு அவருடைய மனதில் இருந்திருக்கலாம். இயேசு, இரண்டாம் முறையாய் வருகிறார். அவரை அழைக்கிறார். இறைபணியில் பேதுரு தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்ள இந்த அனுபவம் உதவுகிறது.

இறையழைத்தல் இருமுறை நிகழலாம் என்பதை இந்த நிகழ்வு விளக்குகிறது. இயேசுவின் அழைப்புக்குச் செவிகொடுக்கும் மனநிலை நம்மிடம் இருந்தால் இயேசு நம்மைத் தேடி வந்து அழைப்பவராக இருக்கிறார். நமது அழைத்தலை உறுதிப்படுத்திக் கொள்வதில் தவறு ஏதும் இல்லை. அந்த அழைப்பை உறுதிப் படுத்திக் கொண்டபின் அதில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

  1. இயேசுவின் அருகாமையை விட்டபின் சீடர்கள் மீண்டும் பழைய வாழ்க்கையை நாடிச் செல்கின்றனர். இயேசு இருக்கும் போது அவரது போதனைகளிலும், அவரது அருகாமையிலும் வாழ்ந்தவர்கள், அவர் இல்லாதபோது பழைய வாழ்வில் மீண்டும் நுழைகின்றனர். அழைப்புக்கு முந்தைய வாழ்க்கைக்கு அவர்கள் சென்று விடுகின்றனர்.

இயேசு நமது வாழ்வில் இல்லாத போது நமது பழைய பாவங்கள் நம்மை மீண்டும் பிடித்துக் கொள்கின்றன. நமது வாழ்க்கை ஒளியை விட்டு விட்டு இருளைத் தேடிச் சென்று விடுகிறது. இயேசுவோடு எப்போதும் இணைந்தே இருக்க வேண்டியதன் தேவையை இது வலியுறுத்துகிறது.

  1. இரவு முழுவதும் கடலில் வலை வீசியும் வெறும் கையோடு திரும்பி வருகின்றனர் சீடர்கள். ஒரு நாள் முழுவதும் வலை வீசியும் மீன்கள் அகப்படவில்லை என்பதே ஒரு அதிசயச் செயல் தான். இயேசுவை விட்டு விலகும் போது, நமக்குப் பழக்கமான செயல்கள் கூட வெற்றியைத் தராமல் போகலாம். எத்தனையோ ஆண்டுகள் வெற்றிகரமாகச் செய்த மீன்பிடி தொழில் சீடர்களைக் கைவிட்டது. காரணம் இயேசுவின் அருகாமை இல்லாமல் போனது தான்.

நமது வாழ்விலும் இயேசுவிடம் வந்து விட்டு விலகும் தருணங்கள் நமக்கு வீழ்ச்சியையே தரும். ஆன்மீக வீழ்ச்சியுடன் சேர்ந்து நமக்கு வளர்ச்சியைத் தந்து கொண்டிருந்த உலக செயல்கள் கூட வீழ்ச்சியையே தரும். அவை நம்மை மீண்டும் இயேசுவிடம் அழைத்து வரவேண்டும். பேதுரு ஆன்மீக வாழ்வின் சறுக்கினார், ஆனாலும் இயேசுவை தேடி ஓடினார். யூதாஸ் ஆன்மீக வாழ்வில் சறுக்கினார் ஆனால் இயேசுவை விட்டு விலகி ஓடினார். இயேசுவைத் தேடி ஓடியவர் திருச்சபைக்கு அடித்தளமானார், விலகி ஓடியவர் தற்கொலையில் அழிந்தவரானார்.

  1. சீமோன் பேதுரு இங்கே ஒரு தலைவராக உருவாகிறார். “மீன்பிடிக்கப் போகிறேன்” என்று அவர் சொன்னதும் மற்ற சீடர்கள் அவரோடு இணைந்து விடுகின்றனர். அவர் யாரையும் அழைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் அவரோடு இணைந்து பணியாற்ற தயாராய் இருக்கின்றனர். இயேசு இல்லாத அந்த காலகட்டத்தில் அவர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்க நினைக்கவில்லை. உழைக்கத் தயாராக இருக்கின்றனர். உழைக்கத் தயாராய் இருப்பவர்களையே இயேசு அழைக்கத் தயாராய் இருக்கிறார்

நமது வாழ்வில் நாம் எப்படி இருக்கிறோம் ? உழைக்கத் தயாராய் இருக்கிறோமா ? சீடர்கள் இணைந்தே இருந்தது போல இறைவனுக்கு ஏற்புடையவர் கூட்டத்தோடு எப்போதும் இணைந்தே இருக்கிறோமா ? சிந்திப்போம்.

  1. பிள்ளைகளே மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா ? என இயேசு சீடர்களிடம் கேட்கிறார். பிள்ளைகளே எனும் அழைப்பின் மூலமாக இயேசு தனது சீடர்களை தந்தை மகன் உறவுக்குள் இணைக்கிறார். திரியேக கடவுளின் ஒருவரான இயேசு உயிர்த்தபின் தந்தையோடு இணைந்திருக்கிறார் என்பதன் ஒரு வெளிப்பாடு இது எனலாம்.

இன்று நாம் ஆண்டவரை அப்பா பிதாவே என அழைக்கும் மகனுக்குரிய உரிமையைப் பெற்றிருக்கிறோம். இயேசு நம்மை பிள்ளைகளே என அழைக்கிறார். நாம் அவரை உரிமையுடன் தந்தையே என அழைக்கும் மனநிலையைப் பெற்றுக் கொள்வோம்.

  1. “மீன் கிடைக்கவில்லையா ?” எனும் கேள்விக்கு “இல்லை” எனும் வெளிப்படையான பதிலை சீடர்கள் சொல்கின்றனர். ஒன்றும் இல்லை என்னும் நிலைக்கு சீடர்கள் வந்தபோது இறைவனின் அருளால் வலைநிறைய மீன்களைப் பெற்றுக் கொள்கின்றனர். கொஞ்சம் இருக்கிறது, போதுமான அளவு இருக்கிறது என்பன போன்ற பதில்கள் வந்திருந்தால் ஒருவேளை இந்த அதிசயம் நடந்திருக்காது. சீடர்கள் வெறுமையான நிலைமைக்கு வந்ததும், இயேசு மகிமையான நிலையை அவர்களுக்கு வழங்குகிறார்.

நமது வாழ்விலும், “நம்மிடம் ஒன்றும் இல்லை” எனும் நிலைக்கு நாம் வரும்போது நமது வாழ்வில் நிறைவான ஆசீர்வாதங்களை இறைவன் நல்குகின்றார். ‘இயேசுவே என்னிடம் ஒன்றும் இல்லை, என்னை நிறைவாக்கும்” எனும் மனநிலையுடன் இயேசுவை அணுக வேண்டும்.

  1. இயேசு வலப்புறமாக வலைகளை வீசச் சொன்னார். அப்படி அவர்கள் வீசியபோது வலை நிறைய மீன்கள் கிடைத்தன. இயேசுவின் வார்த்தைகளின் படி நாம் செயல்படும்போது நமக்கு ஏராளமான ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. ஏராளமான மீன்கள் கிடைத்தாலும் வலை கிழியவில்லை ! அது மிகப்பெரிய அதிசயமாக இருந்தது.

நமது வாழ்வில் இறைவன் தருகின்ற ஆசீர்வாதங்கள் நமது வாழ்க்கை எனும் கூட்டை சிதைக்காததாகவோ, உடைக்காததாகவோ தான் இருக்கும். நமது வீட்டின் அமைதியையோ, நிம்மதியையோ, அன்புறவையோ உடைக்கும் ஆசீர்வாதங்கள் இறைவனிடமிருந்து வந்தவை அல்ல என்பதைப் புரிந்து கொள்வோம்

  1. நூற்று ஐம்பத்து மூன்று மீன்கள் பிடிக்கப்பட்டதாக விவிலியம் கூறுகிறது. அந்த காலத்தில் நூற்று ஐம்பத்து மூன்று வகை மீன்களே அடையாளம் காணப்பட்டதாகவும். அத்தனை வகையான மீன்களையும் அள்ளி வருவது என்பது எல்லா இன மக்களையும் இறைவனின் நற்செய்தியின் கீழ் இணைப்பது எனும் பொருளில் வருகிறது என்கிறார் புனித எரோனிமஸ்.

மனிதர்களைப் பிடிப்போராக்குவேன் என சீமோனிடம் சொன்ன இயேசு, எல்லா மனிதர்களையும் கூட்டிச் சேர்க்க வேண்டும் எனும் குறிப்பையும் இதன் மூலம் தருகிறார். நமது வாழ்வில் நாம் இறைவனின் அன்பை எல்லா மனிதருக்கும் அளிக்கிறோமா ? எனும் கேள்வியை நமக்குள் எழுப்புவோம்.

  1. இயேசு கரையில் இருந்தபோது அவர்கள் அவரை இயேசு என கண்டு கொள்ளவில்லை. இயேசுவை விட்டு விலகிச் செல்லச் செல்ல அவருடைய முகம் நமக்கு பரிச்சயமில்லாததாய் தோன்ற ஆரம்பிக்கிறது. ஆனால் அவர் இயேசுதான் என அறிந்ததும் பேதுரு சட்டென படகை விட்டுக் குதித்து இயேசுவை நோக்கி ஓட ஆரம்பிக்கிறார். பாவ இருளில் நிர்வாணியாய் இருந்தவர், ஆடை அணிந்து கொண்டு தூய்மையை நோக்கி ஓடுகிறார். பணிவாழ்வின் துவக்கத்தில் இயேசு பேதுருவை அழைத்தபோது, ‘நான் பாவி என்னை விட்டு விலகிப் போவீராக’ என சொன்ன பேதுரு, இப்போது, “இயேசுவை நோக்கி ஓடி வருகிறார்”.

இயேசுவை கண்டு கொள்ளும் போது நமது மனநிலை எப்படி இருக்கிறது ? இயேசுவை நோக்கி ஓடி வருவதாக இருக்கிறதா ?அல்லது விலகி ஓடுவதாக இருக்கிறதா ? சிந்திப்போம். இயேசுவின் குரலைக் கேட்கும் போது, இயேசுவின் முகத்தைப் பார்க்கும் போது, இயேசுவை இன்னொருவர் மூலமாக கண்டு கொள்ளும் போது நாம் உடனே இயேசுவை நோக்கி ஓடிப் போக வேண்டும்.

10.சீடர்கள் கரைக்கு வந்தபோது இயேசு மீனையும், அப்பத்தையும் அவர்களுக்காய் தயாராக்கி வைத்திருந்தார். உணவு உண்ண வாருங்கள் என அழைப்பும் விடுத்தார். அவர்களிடம் மீன் இருக்கவில்லை, அப்பம் இருக்கவில்லை. ஆனாலும் அவர் அவர்களுக்காக உணவைத் தயாராக்கி வைத்திருந்தார். அழைப்பவர் ஆண்டவர். அவருடைய அழைப்புக்கு இணங்கும்போது நமக்குத் தேவையானவற்றை அவர் தயாராக்கி வைக்கிறார். நமக்காக விண்ணகத்தில் ஒரு இடத்தை ஏற்பாடு செய்தவர், மண்ணகத்திலும் நமக்குத் தேவையானவற்றை உருவாக்கித் தருகிறார்.

நமது வாழ்வுக்கான தேடல்களுக்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டால் அவரே நமக்குத் தேவையானவற்றைத் தருகிறார். அவர் தருகின்ற ஆசீர்வாதங்கள் நமக்கு நிறைவானவையாகவும், மகிழ்வானதாகவும் இருக்கின்றன. எனவே நமது வாழ்க்கையை இறைவனிடம் ஒப்படைப்பதே நமது அதிகபட்ச ஆனந்தம் என்பதை உணர்வோம்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.

*

 

Posted in Articles, Sunday School

Skit : Sunday School : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே !

 

Image result for sadhu sundarகாட்சி 1

( சில சிறுவர்கள்.. )

சிறுவன் 1 : டேய் சுந்தர்… சுந்தர்… ஸ்கூலுக்கு டைமாச்சுடா… சீக்கிரம் வா…

சிறுவன் 2 : டேய் அவன் மெதுவா தாண்டா வருவான்… கத்தாதே… அவன் அம்மா அவனை ஒரு சாதுவா வளத்து வெச்சிருக்காங்கல்ல… எல்லா சடங்கு சம்பிரதாயமும் முடிச்சு தான் வருவான்.

சிறுவன் 1 : ஆமாமா.. அதான் ஊருக்கே தெரியுமே… காடு வரைக்கும் போய், சாமியாரோட கால்ல விழுந்து, படிக்க வேண்டிய வேதங்களையெல்லாம் படிச்சா தான் அவனுக்கு அவன் அம்மா சோறே போடுவாங்க… ம்ம்ம்…. ஆனா அவனோட அம்மா இறந்தப்புறம் ரொம்ப மாறிட்டான்டா…

சிறுவன் 2 : ஆமாடா.. அவன் ஏழு வயசுலயே நம்ம புனித நூலைப் படிச்சு முடிச்சவனாச்சே… பதினாலு வயசுல வேதத்தை கரைச்சு குடிச்சவனாச்சே..

சிறுவன் 1 : ஆச்சரியம் தான்… என்ன புரியுமோ என்னவோ… எனக்கு பாடபுக்கைப் படிச்சாலே புரிய மாட்டேங்குது. (சிரிக்கிறான் )

சிறுவன் 2 : டேய் சாது… வரியா இல்லையா ? நாங்க கிளம்பவா ..

( வேகமாக வந்து அவர்களோடு இணைகிறான் சுந்தர் )

சாது : ஏண்டா… கத்தறீங்க… இன்னும் டைம் இருக்குல்ல…

சிறுவன் 1 : கொஞ்சம் சீக்கிரம் போனாதான்டா ஜாலியா விளையாடலாம்..

சாது : எங்கடா விளையாட விடறாங்க… பிரேயர் பண்ணு.. பாட்டு பாடு… பைபிள் படின்னு.. இந்த கிறிஸ்டியன் ஸ்கூல்ல படிக்கிற மாதிரி டார்ச்சரே வேற இல்லடா..

சிறுவன் 2 : அதுவும் சரிதான்டா… ஆளுக்கொரு பைபிளை குடுத்து, டெய்லி படிங்கன்னு அட்வைஸ் வேற… தாங்க முடியல.

சிறுவன் 1 : என்னோட புத்த மதத்தைப் பாரு… எவ்ளோ அமைதியான மதம் தெரியுமா ? புத்தர் ராஜ வாழ்க்கையை விட்டு ஓடினாரு, பாதி வழியில, போதி அடியில, அவருக்கு ஞானம் வந்துது. ஆசை தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு கண்டுபிடிச்சாரு. முக்தியடையணும்ன்னா ஆசையை ஒழிச்சு கட்டணும்ன்னு போதிச்சாரு.

சாது : டேய்.. ஆசையை ஒழிக்கணும்ன்னு அவரு ஆசைப்பட்டாரு. அப்படி தானே ? அப்போ அவராலேயே ஆசையை ஒழிக்க முடியல… (நக்கலாக )

( அப்போது இன்னொரு சிறுவன் 3 வந்து சேர்கிறான். )

சிறுவன் 2 : உன் கிட்டே பேசி ஜெயிக்க முடியாதுடா… நீ ஒரு குதர்க்க வாதி.

சிறுவன் 3 : டேய்… என்னோட மதம் என்னான்னு உனக்கே தெரியும். எல்லாம் வல்லவர் அல்லா மட்டும் தான். அவரோட அடியார் மொகமது சொல்றது படி வாழ்றது தான்டா சரியான மார்க்கம். நல்லவனுக்கு சொர்க்கம், கெட்டவனுக்கு நரகம்.. சிம்பிள்.

சாது : கேக்க நல்லா இருக்குடா ? ஆனா வெறும் சட்ட திட்டங்களோட வாழ்றது நல்ல மார்க்கமா ? வன்முறைக்கு நியாயம் கற்பிக்கிறது நல்ல மார்க்கமா ? எனக்கு தெரியல..

சிறுவன் 3 : அப்போ என்னடா ? உன்னோட கீதை தான் சரியான பாதையா ?

சாது : அதுவும் எனக்கு தெரியலடா… நிறைய குழப்பம் இருக்கு. நிறைய முரண் இருக்கு. கடவுள்களுக்கே ஏகப்பட்ட ஆசைகள், இச்சைகள், வன்முறை, குரோதம் எல்லாம் இருக்கு…

சிறுவன் 2 : அப்போ பேசாம ஸ்கூல்ல சொல்ற மாதிரி கிறிஸ்டியனாயிடு..

சாது : டேய்… உலகத்துல இருக்கிறதுல எனக்கு புடிக்காத மதமே அது தான். ஏதாச்சும் சொன்னே அடிச்சு பல்லு கில்லை பேத்துபுடுவேன். உனக்கு எங்க ‘ஆன்டி கிறிஸ்டியன்’ குரூப் பத்தி தெரியாதா ?

சிறுவன் 2 : அதென்னடா ? ஆண்டி கிரிஸ்டியன் ?

சாது : ஹா..ஹா.. ஸ்கூல் முடிஞ்சதும், நம்ம காட்டுப்பாத ஆலமர மூட்டில வா… அங்க தான் நடக்குது எங்க ஆன்டி கிறிஸ்டியன் கூட்டம். தெரிஞ்சுப்பே…

சிறுவன் : சரிடா. வரேன்… அப்படி என்ன தான் செய்றீங்கன்னு பாக்கறேன்.

காட்சி 2

( சாது மற்றும் நண்பர்கள். ஆன்டி கிறிஸ்டியன் கூட்டம் )

சாது : வாங்கடா… நம்ம ஆன்டி கிறிஸ்டியன் வேலைகளையெல்லாம் இன்னும் அதிகமாக்க நேரம் வந்துச்சு…

ந 1 : கண்டிப்பா… நேற்று இங்கே பைபிளை ஒவ்வொரு பேப்பரா கிழிச்சு கிழிச்சு எரிச்சோம். சிரிச்சோம்… இயேசு உண்மையான கடவுளா இருந்தா நம்மளை காலி பண்ணியிருக்கணும். பண்ணலையே

ந 2 : இனிமே பப்ளிக்கா எரிப்போம். ரோட்டுல போட்டு எரிப்போம்… அப்போ தான் நம்மளைப் பத்தி நாலு பேருக்கு தெரியும்

சாது : எஸ்.. பொது மக்கள் இருக்கிற இடத்துல பைபிளை எரிப்போம். நம்ம மதத்துக்கு எதிரா எவன் வந்தாலும் அழிப்போம்.

ந 1 : அழிப்போம்ன்னா ?

சாது : தெரு முக்கில டெய்லி சாயங்காலம் ஒருத்தன் வந்து பேசுவான்ல,.. இயேசு பற்றி.. அவனை கல்லால அடிப்போம். நாலு பேரை சாத்தினா மொத்த கூட்டமும் சிதறிப் போயிடும்..

ந 2 : சூப்பர் டா… நான் ரெடி..

சாது : முதல்ல சகதியால அடிப்போம்.. ஓடினா தப்பினான்.. இல்லேன்னா கல்லைத் தூக்கி தலையிலேயே எறிவோம்.

ந 1 : ஹா..ஹா.. சூப்பர்… அவங்க வீட்டுக்குள்ள பாம்பு புடிச்சு விடலாம்டா. அதுவும் ஒரு நல்ல ஐடியா…

சாது : கண்டிப்பா அதையும் பண்ணுவோம்… ( சோர்வாக )

ந 2 : ஏண்டா… திடீர்ன்னு டல்லாயிட்டே…

சாது : இல்லடா.. ஒண்ணுமில்லை..

ந2 : நான் உன்னை அடிக்கடி கவனிச்சுட்டு தான் இருக்கேன். பயங்கர‌ வெறியா பேசிட்டிருக்கே.. சட்டுன்னு அமைதியாயிடறே… எதையோ யோசிக்கிறே… என்னாச்சுடா ?

சாது : இல்லடா.. நான் பண்றது தப்பில்லேன்னு தெரியும். ஆனா.. உண்மையான கடவுள் யாருக்கு எனக்கு குழப்பமாவே இருக்கு. ஒருவேளை கடவுளே கிடையாதோ ? கடவுள் இருக்காருன்னா ஏன் நமக்கு அவரு காட்சி தரல ?

ந 1 : ம்ம்ம்.. கடவுள்ன்னா ‘ ஒரு நம்பிக்கை’ அவ்ளோ தான்டா.. அதுக்கு ஏன் இவ்ளோ ஃபீல் பண்றே.. நாம இந்த கிறிஸ்தவ எதிர்ப்பை மட்டும் இப்போதைக்கு ஃபோக்கஸ் பண்ணுவோம்.

சாது : அதுவும் ஒரு குழப்பமா தான் இருக்கு.. நம்ம ஸ்டீபன் இருக்கான்ல ? ஒரு நாள் நான் கிளாசுக்கு வரும்போ முழங்கால்ல நின்னு செபம் பண்ணிட்டிருந்தான். கண்ணுல கண்ணீர். என்னடா இப்படி செபம் பண்றேன்னு பக்கத்துல போய் பாத்தா, ‘இயேசுவே என் நண்பன் சுந்தர் உண்மையான தெய்வத்தைக் கண்டு கொள்ளணும்’ ந்னு செபிச்சிட்டிருந்தான். எனக்காக ஏண்டா அவன் அழுது அழுது செபம் செய்யணும் ?

காட்சி 3 : அதுக்கு தான் இவ்ளோ ஃபீல் பண்றியா.. இந்த கிறிஸ்டியன்ஸே இப்படித் தான்டா.. ஆ ஊன்னா உடனே முழங்கால்ல நின்னு அழுதுட வேண்டியது.. அதையெல்லாம் விடு.. போவோம்… நம்ம வேலைகளைப் பாப்போம்

( சாது யோசித்தபடியே.. நடக்கிறார் )

காட்சி 3

( இரவு.. சாது இருக்கையில் அமர்ந்திருக்கிறார் )

கடவுளே… நீங்க இருக்கீங்களா இல்லையான்னே எனக்கு தெரியல. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கடவுளை சொல்றாங்க. எல்லாருமே அவங்க கடவுள் தான் உண்மைன்னு அடிச்சு சொல்றாங்க. அவங்களை அடிச்சாலும் அதைத் தான் சொல்றாங்க. ஒரே கேள்விக்கு எப்படி ஆயிரம் விடைகள் இருக்க முடியும் ? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். யார் உண்மையான கடவுள் ? . அதை நான் யார் சொன்னாலும் நம்ப மாட்டேன். யாரு உண்மையான கடவுளோ, அந்த கடவுளே என் முன்னாடி வந்து சொல்லணும். அப்ப தான் நம்புவேன். இல்லேன்னா காலைல நான் ரயில் முன்னாடி குதிச்சு தற்கொலை பண்ணிப்பேன்… இது சத்தியம்..சத்தியம்..சத்தியம்.

( தூங்குகிறார் .. திடீரென ஒளி அறையை நிரப்புகிறது )

திடுக்கிட்டு விழிக்கிறார் சுந்தர்.

சாது : யாரு… யாரு… என்ன திடீர்ன்னு வெளிச்சம் ? ( சட்டென ஓடி வெளியே எட்டிப் பார்க்கிறார் ) என்னது வெளியே இருட்டா இருக்கு.. உள்ளே என்ன வெளிச்சம்.. யாரு ?

குரல் : மகனே…

சாது : ( பதட்டமும் பரவசமுமாக ) யாரது கூப்டறது.. உங்க உருவம் சரியா தெரியல… சிவனா ? விஷ்ணுவா ? கிருஷ்ணாவா… ? புத்தரா… முகம் இவ்ளோ பிரகாசமா இருக்கு

குரல் : நீ.. ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்…

சாது : நான்.. நான் உங்களை துன்பப்படுத்தினேனே… எப்போ ? என்ன ஒரு கை நீளுது… ஐயோ.. கையில ஏதோ காயம்… என்ன காயம் இது ?

குரல் : உனக்காக நான் சிலுவையில் மரித்தேனே.. என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்…

சாது : ஐயோ.. .. இது..இயேசு… இயேசுவே…ஓ..மை..காட் .. நீங்க தான்.. உண்மையான கடவுளா ? ஐயோ… தப்பு பண்ணிட்டேனே… சட்டென முகம் குப்புற விழுகிறார்.

( சட்டென ஒளி அணைகிறது )

காட்சி 4 :

( அதிகாலையிலேயே பரபரப்பாய் ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறான்.. முதல் காட்சியில் வந்த ஏதோ ஒரு நண்பனின் வீடு.. அவன் கண்ணைக் கசக்கியபடியே வருகிறான் )

நண்பன் : ( கொட்டாவி விட்டுக்கொண்டே ) என்னடா.. காலங்காத்தால நாலரை மணிக்கே வந்து நிக்கிறே.. ஏதாச்சும் பிரச்சினையா ?

சாது : டேய்.. உன் பைபிளை குடு.. ரொம்ப அவசரம்.

நண்பன் :பைபிளா ?

சாது : ஆமா ஸ்கூல்ல ஏதோ நியூ டெஸ்டமென்ட் ந்னு ஒண்ணு குடுத்தாங்களே..

நண்பன் : என்னடா. .இந்த காலங்காத்தாலயே அதை கிழிச்சு எரிக்க போறியா ?

சாது : இல்லடா.. எடுத்து படிக்க போறேன்.. சீக்கிரம் குடு…

நண்பன் : என்னடா சொல்றே.. உனக்கு என்னாச்சு ?

சாது : டேய்.. நான் கண்டேண்டா. உண்மையான கடவுள் யாருன்னு என் ரெண்டு கண்ணாலயும் கண்டேன். ரெண்டு காதாலயும் அவர் பேசினதை கேட்டேன்டா…

நண்பன் : என்னடா சொல்றே.. யாருடா அது

சாது : இயேசுடா.. நான் ரொம்ப ரொம்ப வெறுத்திட்டிருந்த இயேசு டா.. எனக்கு இப்போ எந்த சந்தேகமும் இல்லை. கடவுள் நிச்சயம் உண்டு. அந்த‌ உண்மையான கடவுள் ஒரே ஒரு ஆள் தான். அது இயேசு தான். அதை அவரே சொல்லிட்டாரு. என்னோட உற்சாகம் தாங்க முடியல.. பைபிள் படிக்கணும் உடனே..

நண்பன் : இரு.. கொண்டு வரேன். ஆனா யார் கிட்டேயும் இப்படி உளறி வைக்காதே. நீ ஏதோ கனவு கண்டிருக்கே. காலைல எல்லாம் சரியாயிடும்… போ…

சாது : கனவில்லடா.. இப்போ தாண்டா நான் முழிச்சிருக்கேன். உண்மை அறிஞ்சிருக்கேன். இனிமே என்னை யாருமே வழி விலக்க முடியாது. இந்த வாழ்க்கை இனிமே இயேசுவுக்கு மட்டும் தான். நான் என் நண்பர்கள் எல்லாருக்குமே சொல்லப் போறேன். ஏன் ஊருக்கே சொல்லப் போறேன். ஊர் என்னடா ஊர்.. உலகத்துக்கே சொல்லப் போறேன். என்னை யாரும் தடுக்க முடியாது.

நண்பன் : ( பைபிளை எடுத்துக் கொண்டு கொடுக்கிறான்.. சாது அதை வாங்கிக்கொண்டு ஓடுகிறார் )

பின் குரல் :

கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய சவுலை, சாவின் சாலையில் சந்தித்து வாழ்வின் நகருக்குள் அனுப்பி வைத்தார் இயேசு. அதே போல, சாதுவையும் பாதி வழியில் சந்தித்து பாதை மாற்றினார். இயேசுவின் தரிசனம் தடுமாறிக் கிடந்த அவர் வாழ்க்கையின் தடத்தையே மாற்றியது. இயேசுவே உண்மை தெய்வம் என அறிந்ததும் தன்னை முழுமையாய் அவருக்கு ஒப்புக் கொடுத்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஊழியராய் மாறினார்.

நாம் இயேசுவே உண்மையான தெய்வம் என்பதை நம்புகிறோமா ?
அதன் பதில் நமது வாழ்க்கையை சாதுவைப் போல இறைவனிடம் ஒப்படைத்தோமா என்பதில் இருக்கிறது.

நமக்கு தரப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கை, அதை அவருக்கே தருவதில் இருக்கிறது வாழ்க்கைக்கான அர்த்தம்.

சிந்திப்போம், செயல்படுவோம்.

 

Posted in Articles, Desopakari

நுண்ணறிவா ? விண்ணறிவா ? எது தேவை ?

Image result for robots

ஃபேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ரோபாட்டிக் மென்பொருட்களை பயன்படுத்தி வருகிறது. அவற்றுக்கு ‘சேட்பாட்’ என்பது பெயர். அதாவது சேட் செய்யும் ரோபாட்கள் என்பதன் சுருக்கம் தான் அது. நாற்பது மொழிகள் அவற்றுக்குள் பதித்து வைக்கப்பட்டுள்ளன. எந்த மொழியைத் தேர்ந்தெடுத்து உரையாடுகிறோமோ அதற்குத் தக்கபடி அதுவும் அதே மொழியில் பதில் தரும்.

சமீபத்தில் ஒரு நிகழ்வு. இப்படிப்பட்ட ரோபாட்களில் இரண்டு ரோபோக்கள் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டன. அதுவும் மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு சமிக்ஜை மொழியில் ! இதைப் பார்த்த மென்பொருள் பொறியாளர்கள் அதிர்ந்து போய்விட்டனர். நிலமையின் விபரீதத்தை உணர்ந்த நிறுவனம் அந்த சேட் போட்களை தற்காலிகமாய் செயலிழக்கச் செய்து விட்டது.

ரோபோட்டிக் தொழில்நுட்பம் நாளை மனுக்குலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாய் மாறலாம் என்பதன் ஒரு சின்ன உதாரணம் இது.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெறும் அறிவியல் புனைக் கதைகளிலும், ஹாலிவுட் திரைப்படங்களிலும் மட்டுமே வலம் வந்த ரோபோக்கள் இன்று இலட்சக்கணக்கான வீடுகளில் நுழைந்து விட்டன. எல்லா துறைகளிலும் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. ரோபோ என்பது கைகால் வைத்த மனித உருவ ரோபோக்கள் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவோடு வலம் வரும் எல்லா மென்பொருட்களும் இந்த வகையறாவில் வந்து விடுகிறது.

சமீபத்தில் ஒரு குழந்தை வடிவ ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. குடும்பத்தில் ஒரு சின்னக் குழந்தையைப் போல இது வாழுமாம். குழந்தைகள் இல்லாத வீடுகளில் இந்த குழந்தைகள் ஒரு செல்லப்பிராணியைப் போல தவழ்ந்து திரியும். பெற்றோரின் உணர்வுகளை உள்வாங்கி அதற்குத் தக்கபடி செயல்பட இவற்றுக்குள் செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பட்டிருக்கிறது.

தனிமையில் வாடும் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் நட்பு பாராட்ட ‘கம்பேனியன் ரோபோக்கள்’ உருவாக்கப்படுகின்றன. இன்றைய இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், பிக் டேட்டா, ஆகுமென்டட் ரியாலிடி, மெஷின் லேர்னிங், கிளவுட் என எல்லா தொழில்நுட்ப அம்சங்களும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் எனும் செயற்கை நுண்ணறிவுக்குள் நுழைந்து விட்டது.

முன்பெல்லாம் மனிதர்கள் எழுதும் மென்பொருளுக்குத் தக்கபடி தான் ரோபோக்கள் செயல்பட்டு வந்தன. அந்த மென்பொருட்களைத் தாண்டி அவை எதையும் யோசிப்பதில்லை. ஆனால் இன்றைய நவீன ரோபோக்கள் அப்படியல்ல. தங்களுடைய மென்பொருட்களை தாங்களே உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. எனவே சூழலுக்கும், அனுபவத்துக்கும் ஏற்ப அவை மென்பொருட்களை சொந்தமாக எழுதிச் சேர்க்கின்றன.  ‘சிற்பமே தன்னை செதுக்கிக் கொள்வது போன்ற’ ஒரு புதுமையான நுட்பம் இது.

உதாரணமாக ஒரு ரோபோ செஸ் விளையாடும் வகையில் வடிவமைக்கப்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். தொடக்கத்தில் அதற்கு அடிப்படை செஸ் அறிவு மட்டுமே இருக்கும். அந்த ரோபோ எதிராளி ஒருவருடன் செஸ் விளையாடும் போது எதிரியின் சிறந்த விளையாட்டு உத்தியைக் கற்றுக் கொண்டு தனக்குள் புதிய மென்பொருளை தனக்குள் எழுதிச் சேர்க்கும்! இப்படி படிப்படியாக தனது அறிவை வளர்த்துக் கொண்டு வெல்ல முடியாத நிலைக்கு உயர்ந்து விடும்.

இப்படி தன்னைத் தானே வலிமைப்படுத்தும் ரோபோக்கள் ஆபத்தானவை என்பது தான் பெரும்பாலான அறிவியலார்களின் கருத்து. இன்றைக்கு இராணுவம். அணு உலைகள், விண்வெளிப் பயணங்கள் என எல்லா இடங்களிலும் ரோபோக்கள் இருக்கின்றன. அவை தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைத் தாண்டி ஒரு பணியை தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் போது அது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது.

சர்வதேச யுத்தங்களோ, உலகப் பேரழிவுகளோ, அண்ட சராசர நிலைகுலைவுகளோ ஏற்பட சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன. தன்னை விட அறிவு குறைந்த விலங்குகளை எப்படி மனிதன் அடக்கி ஆள்கிறானோ, அப்படி தன்னை விட அறிவு குறைந்த  மனிதனை செயற்கை நுண்ணறிவு கருவிகள் அடக்கி ஆள்வது சாத்தியமே. காரணம் இன்றைக்கு கிடைக்கின்ற தகவல்களை மனிதனை விட பல இலட்சம் மடங்கு வேகத்திலும், பல கோடி மடங்கு அதிகமாகவும் பயன்படுத்தும் வாய்ப்பு அந்த இயந்திரங்களுக்கு உண்டு. இயற்கை வளர்ச்சியில் இருக்கும் மனிதனால் அந்த விஷயத்தில் போட்டி போடவே முடியாது. இதை நான் சொல்லவில்லை உலகில் தலை சிறந்த அறிவியலார் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்.

இன்றைக்கு நமது ஒவ்வொரு செயல்களையும் கவனித்து நம்மை பிந்தொடரும் நுட்பங்கள் மலிந்து விட்டன. ‘ஆபீஸ் போக நேரமாச்சு’ என காலையில் போன் நோட்டிபிகேஷன் அனுப்புகிறது. மாலையில் ‘வீட்டுக்கு போகலையா ?’ என்கிறது. வார இறுதியில் மதிய நேரம் செய்தி அனுப்பி, ‘நீங்கள் புக் பண்ணின படம் இன்னும் அரை மணி நேரத்தில் ஆரம்பமாகும். இப்போ கிளம்பினா சரியா இருக்கும்’ என்கிறது. உணவகம் சென்றால், ‘இங்கே இந்த சாப்பாடு நல்லா இருக்கும், சாப்பாடு எப்படின்னு ஃபீட் பேக் குடுங்க’ என நச்சரிக்கிறது. உங்க கூட இருக்கிற நண்பர்கள் சுரேஷ், ரமேஷ் இரண்டு பேருக்கும் ஹாய் சொல்லுங்க என சொல்லி அதிர்ச்சியளிக்கிறது. அடுத்த‌ மாதம் அமெரிக்கா போறீங்களே ஷாப்பிங் எல்லாம் ஓவரா என ஷாக் குடுக்கிறது.

எல்லாம் பிக்டேட்டா, செயற்கை நுண்ணறிவு இவற்றின் உபயம் தான். நமது மொபைலில் இருப்பிடம், அந்த மொபைலைச் சுற்றியிருக்கும் மொபைல்களில் இருப்பிடம், அந்த பிற மொபைல் எண்கள் நமது கான்டாக்டில் இருக்கிறதா எனும் அறிவு, நமது ஜிமெயிலுக்கு வரும் டிக்கெட்களின் தகவல் என எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து நமக்குப் பின் ஒரு நிழலாய் இந்த டிஜிடல் கரம் நெருக்கிக் கொண்டே இருக்கிறது.

இவை எல்லாமே பயன் தரும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, பயம் தரும் பாதையில் பயணிப்பது தான் கவலைக்குரியது. ஓட்டுநர் இல்லாத கார், செயற்கைக் கை, ஆபத்தான வேலைகள் செய்தல், காலநிலை கணித்தல், விளையாட்டுப் பயிற்சிக்கு உதவுதல், ஆராய்ச்சிப் பணிகள் என செயற்கை நுண்ணறிவின்  நோக்கங்கள் நல்லவையாகவே இருக்கின்றன. ஆனால் முடிவுகள் தான் வேறு விதமாய் அமைந்து விடுகின்றன.

கடவுளை நிராகரிக்கும் அறிவியல், கருவிகளை அரவணைக்கிறது. இயந்திரத்தை அரவணைக்கும் நவீனம், இதயங்களை நிராகரிக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவின் யுகத்தை தவிர்த்து விட முடியாது.  எனில், இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையை எப்படி வலுப்படுத்துவது ?

  1. சமத்துவம் காப்போம்!

செயற்கை நுண்ணறிவு சமூக ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகரிக்கும். கருவிகளை வைத்து செல்வங்களை சேர்ப்பவர்கள் இன்னும் அதிகமாய், பல மடங்கு சேர்ப்பார்கள். கருவிகள் சம்பளம் கேட்பதில்லை, எனவே செலவற்ற வருமானங்கள் ஒரு புறம், வருமானமற்ற செலவினங்கள் ஒரு புறம் என சமூக சமநிலை பாதிக்கப்படும்.

இந்த சூழலில் நாம் சமத்துவம் பேணும் மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கின்ற பாகுபாடுகளின் வேறுபாடுகளை அவிழ்த்து விட்டு சமத்துவத்தின் சட்டையை மாட்டிக் கொள்ள வேண்டும்.

  1. மனிதம் காப்போம் !

இன்றைக்கு நம்மோடு உரையாடுகின்ற பல ஆன்லைன் குரல்களும், ஆன்லைன்  சேட்‍  களும் ரோபோக்களின் கைங்கர்யம் தான். அதை நாம் உணர்வது கூட இல்லை. இன்று அவற்றையெல்லாம் தாண்டி நட்பு ரோபோ, குழந்தை ரோபோ, குடும்ப ரோபோ, காதல் ரோபோ என பல்வேறு ரோபோக்கள் வந்து விட்டன.

இந்த சூழலில் இயந்திர சார்பை கழற்றி விட்டு, சக மனிதர்களோடான உரையாடல்களை அதிகப்படுத்த வேண்டும். சமூகத்தில் நிராகரிக்கப்பட்ட மனிதர்களோடு நேரம் செலவிடுதலே மனிதம் காப்பதன் முதல் பணி. டிஜிடல் வெளியில் மீட்பு விற்கப்படுவதில்லை. மனிதத்தின் பிடியில் மீட்பு நிராகரிக்கப்படுவதில்லை.

  1. புனிதம் காப்போம் !

மனிதர்கள் ஒன்று கூடி பாபேல் கோபுரம் கட்டி தங்களுடைய கர்வத்தை பறை சாற்ற நினைத்தனர். கடவுள் அவர்களை சிதறடித்தார். மனிதர்கள் ஒன்றிணைந்து கர்வத்தை தலையில் சூடும்போது கடவுள் தண்டிக்கிறார். தனக்கும் மக்களுக்கும் இடையே தடையாய் வரும் எதையும் கடவுள் விரும்புவதில்லை. எனவே தான் ஈசாக்கை பலியிட ஆபிரகாமிடம் கடவுள் கட்டளையிடுகிறார். எதையும் இறைவனுக்காய் பலியிடுகையில் ஆன்மீகம் வலுவடைகிறது. இறைவனை எதற்காகவும் பலியிடுகையில் புனிதம் புதைபடுகிறது.

புனிதம் காப்பது என்பது இறைவனோடு நடப்பது. நடப்போம்.

  1. பாதுகாப்போம் !

செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தல் பல்வேறு வகையில் வரலாம். ஒரு விளையாட்டு அடிமைத்தனத்தில் தொடங்கி, ஒரு தேசத்தின் அழிவுத் தனம் வரை இது நீளலாம். இதைக் குறித்த விழிப்புணர்வு கொள்வது மிகவும் அவசியம். எந்த அளவுக்கு, இறைவனோடும், இயற்கையோடும், மனிதர்களோடும் இணைந்து வாழ்கிறோமோ அந்த அளவுக்கு பாதுகாப்பாய் வாழ்வோம் என்று அர்த்தம். தொழில்நுட்பங்கள் தொட்டுக் கொள்ளும் தூரத்தில் இருப்பதே பாதுகாப்பானது, கட்டிக் கொள்ளும் நெருக்கத்தில் வருவது ஆபத்தானது. தேவைக்கு மட்டுமே அவற்றை தேர்ந்தெடுப்போம், ஆசைக்காய் அல்ல !

நமது பாதுகாப்பு செயற்கை நுண்ணறிவோடு அல்ல, இறையெனும் விண்ணறிவோடு இருக்க வேண்டும்.

  1. உறவுகள் காப்போம்

முதியோர்களைப் பாதுகாக்கவும், நோயாளிகளைப் பாதுகாக்கவும் ரோபோக்கள் இருக்கின்றன எனும் செய்திகள் மனித நேயம் உடைய எவரையும் பதற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்குத் தேவை பணிவிடை மட்டுமல்ல, பரிவும் தான். அவர்களுக்குத் தேவை உதவிகள் மட்டுமல்ல உறவுகளும் தான். இயந்திர இருப்பை விட அன்பின் அரவணைப்புகள் தானே முக்கியம். உறவுகளை நேசிப்போம். அவர்கள் நம்மை விட்டுப் பிரியும் வரை அவர்களோடு பிரியமாய் இருப்பதே உறவுகளை நேசிப்பதன் வெளிப்பாடு.

உலகில் நிகழும் எந்த மாற்றங்களும் நம்மை அழிவுக்குள் அழைத்துச் செல்லாது. ஆனால் நம் உள்ளுக்குள் நிகழும் மாற்றங்கள் நம்மை அழிவுக்குள்ளும் அழைத்துச் செல்லலாம், வாழ்வுக்குள்ளும் வழிநடத்திச் செல்லலாம்.

எனவே

உள்ளத்தைக் காப்போம்,

உள்ளதைக் காப்போம்.

இறைவனை மட்டுமே இதயத்தில் காப்போம்.