Posted in Articles, Sunday School

Church Skit : தேர்வு எழுதும் மாணவர்களுக்கு

Image result for exam

( நான்கு மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் )

மாணவர் 1 : மச்சி.. எக்ஸாம்ன்னாலே வயித்துல புளியைக் கரைக்குதுடா..

மாணவர் 2 : ஆமாடா.. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு ! படிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு.. இதையெல்லாம் எப்போ படிச்சு.. எப்போ முடிச்சு.. எப்போ பரீட்சை எழுதின்னு ஒரே டென்ஷனா இருக்கு !

 

மா 3 : அதென்னமோ தெரியலடா… கடற்கரையில தோண்டத் தோண்ட மண்ணு வந்துட்டே இருக்கிற மாதிரி, படிக்கப் படிக்க பாடம் புதுசு புதுசா வந்துட்டே இருக்குடா…

மா 1 : அதுவும் பத்தாவது பக்கம் படிக்கும்போ எட்டாவது பக்கம் மறந்து போயிடுது. மேக்ஸ் போடும்போ சயின்ஸ் சைலன்டா ஓடிடுது… என்ன பண்றதுன்னே தெரியல…

மா 2 : ஆமா.. வீட்ல வேற மூட்டை மூட்டையா மார்க் கொண்டு போகலேன்னா மூட்டைப் பூச்சி மாதிரி நசுக்கி போட்டுடுவாங்க..

மா 3 : அதுல கம்பேரிசன் வேற பண்ணி சாவடிப்பாங்க…

மா 4 : ஓவரா பில்டப் குடுக்காதீங்கடா… ஏதோ கொலை கேசுக்கு தீர்ப்பு வர மாதிரி பில்டப் குடுக்கறீங்க ! எக்ஸாம் தானேடா ? கூலா இருங்க…

மா 1 : மச்சி.. உனக்கு டென்ஷனா இல்லையா ? இது பப்ளிக் எக்ஸாம்டா !

மா 4 : பப்ளிக் எக்ஸாம்ன்னா என்ன ? போய் பப்ளிக் ல உக்காந்த எழுத போறே..படிச்சதை எழுதப் போறே அவ்ளோ தானே…  ரிலாக்ஸா இருடா !

மா 2 : நல்ல மார்க் வரலேன்னா மெடிகல் சீட் எல்லாம் கிடைக்காதுடா.

மா 4 : சோ..வாட். ? எல்லாரும் டாக்டரா இருந்தா எஞ்சினீயருக்கு ஏங்கே போவீங்க ? சயின்டிஸ்ட்க்கு எங்க போவீங்க ? எல்லா மியூசிக் சிஸ்டமும் கீ போர்டா இருந்தா வயலின்க்கு எங்க போவீங்க. ஏழு கலர் இருந்தா தாண்டா வானவில்… ஒரே கலரா இருந்தா அதுக்கு பேரு வானவில்லா ?

மா 3 : நீ மட்டும் எப்படிடா இவ்ளோ கூலா இருக்கே ? ஜாலியா பேசறே ?

மா 4 : முதல்ல நான் கடவுளை நம்பறேன்டா.. அவரு நமக்காக ஒரு வழியை ஆயத்தப்படுத்தி வெச்சிருப்பாரு. நாம நம்ம கடமையை சின்சியரா செய்யணும் அவ்ளோ தான். அவரு நம்மை அவருக்குத் தேவையான ரூட்ல கூட்டிட்டு போவாரு ! தட் வில் பி த பெஸ்ட் !

மா 2 : அதெப்படிடா… ? இவ்ளோ சிம்பிளா சொல்லிட்டே ?

மா 4 : ஆமாடா.. திருவிழாவுக்கு போற குழந்தை அப்பா கையைப் புடிச்சிட்டு போறது மாதிரி தான் இது ! அப்பாவோட கைப் பிடி இருக்கிறவரைக்கும் நமக்கு ஒரு தைரியம் இருக்கும்ல அதே மாதிரி தான். கடவுளோட கையைப் புடிச்சுட்டா அப்புறம் கவலையே இல்லை !

மா 1 : அப்புறம் நாம எதுக்குடா படிக்கணும் ? அவரே நம்மை ஜெயிக்க வைக்க வேண்டியது தானே ?

மா 4 : இங்க தான் ஒரு மேட்டர் இருக்கு ! கடவுள் எதையும் மனுஷனோட பங்களிப்பு இல்லாம செய்றதில்லை. நாம ஒரு அடி எடுத்து வெச்சா, அவரு நம்மை நூறு அடி கூட்டிட்டு போவாரு. ஆனா சோம்பேறியா சுருண்டு கிடக்கிறவனை அவரு கண்டுக்கிறதில்லை.

மா 1 : அதெப்படி அவ்ளோ உறுதியா சொல்றே ? ஏதோ பக்கத்துல இருந்து பாத்தவன் மாதிரி ?

மா 4 : டேய் நான் இயேசுவை நம்பறவன். அவரோட புதுமைகளை எல்லாம் எடுத்து பாத்தாலே இது தெரியும். உதாரணமா மனுஷன் ஊத்துன தண்ணீரை இயேசு திராட்சை ரசமா மாத்தினாரு, மனுஷன் கொடுத்த ரெண்டு அப்பத்தை ஐயாயிரம் பேருக்கு தேவையான அளவா மாத்தினாரு இப்படி நம்ம பாகத்தை நாம செஞ்சா அவர் நம்மை ஜெயிக்க வெச்சிடுவாடு.

(  மாணவர் 2 திடீரென நெஞ்சு வலி வந்தது போல பாவனை காட்டுகிறார். )

மா 1 : டேய்… என்னடா ஆச்சு திடீர்ன்னு ?

மா 2 : நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குடா…

மா 3 : ஓ.. மை காட்… உடனே டாக்டருக்கு போன் பண்ணுடா…

மா 2 : நோ.. கால் மை டாட்.. ஹீ ஈஸ் எ டாக்டர்..

மா 1 : யா.. மறந்துட்டேன்.. உடனே உன் அப்பாவுக்கு போன் பண்றேன்.

***

காட்சி 2

( ஹாஸ்பிடல் வரண்டா )

மா 1 : என்னடா இப்படி ஆயிடுச்சு ? பயமா இருக்கு

மா 4 : பயப்படாதீங்கடா ? எதுக்கெடுத்தாலும் ஏன் பயப்படறீங்க ? நாம கடவுளோட கண்மணிகள், அவர் நம்மை நல்லா பாத்துப்பாரு.. டோன்ட் வரி

மா 3 : இப்போ எக்ஸாம் டென்ஷன் போயி, இவனோட ஹெல்த் பத்தி டென்ஷன் ஆயிடுச்சு.

மா 1 : நல்ல வேளை அவனோட அப்பாவே டாக்டரானதால நமக்கு ரிலாக்ஸா இருக்கு !

மா 4 : அதுல என்னடா ரிலாக்ஸ் ?

மா1 : டேய்.. அது அவன் அப்பாடா.. அவனை அவரை விட நல்லா யாரு கவனிக்க முடியும் ? டிரீட் பண்ண முடியும் ?

மா 4 : அப்போ நீ அவரை நம்பறே ?

மா 1 : லூசாடா நீ… ஹிஸ் டாடி….. ஹி ஈஸ் இன் சேஃப் ஹேன்ட்ஸ் !

மா 4 :  ஹா..ஹா.. அதைத் தாண்டா நான் உங்க கிட்டே படிச்சுப் படிச்சு சொல்லிட்டிருக்கேன். நாம கடவுளோட கைல இருக்கும்போ,  வி ஆர் இன் சேஃப் ஹேன்ட்ஸ். அதை நம்ம புரிஞ்சுக்கணும் அவ்ளோ தான்.

மா 1 : கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுடா…

மா 4 : அவனுக்கு நெஞ்சு வலி வந்ததும் ஏன் அவன் அப்பாவை கூப்பிட சொன்னான் ?

மா 1 : ஏன்னா அப்பா மேல நம்பிக்கை, பாசம், அவரு என்ன பண்ணியாச்சும் அவனைக் காப்பாத்துவாருன்னு அவனுக்கு கண்டிப்பா தெரியும்

மா 4 : அதே தான். அதே நம்பிக்கையை நாம கடவுள் கிட்டே வெச்சா போதும். நமக்கு நாளைக்கு என்ன நடக்கும்ன்னு தெரியாது ? ஆனா நாம பிறக்கிறதுக்கு முன்னே எங்கே இருந்தோம், இறந்தப்புறம் எங்கே போவோம், வாழும்போ என்ன ஆவோம் எல்லாம் தெரிஞ்சவர் கடவுள் ஒருத்தர் தான். அவரை நம்பினா என்ன கவலை ?

மா 3 : நீ சொல்றதும் சரிதான்டா ! பைலட்டை நம்பி பிளைட்ல போறோம். அதே மாதிரி கடவுளை நம்பி வாழ்க்கைல போணும்ன்னு சொல்றே ! அப்படி தானே !

மா 4 : கரெக்ட் ! பைலட்டை நம்பாம வீட்லயே இருந்தா போக வேண்டிய இடத்துக்கு போக முடியாது ! நம்பி போனா, போக வேண்டிய இடத்துக்கு போய் சேரலாம். தண்ணிக்கு பயந்து தரையில நிக்கிறவன் என்னிக்குமே நீச்சல் கத்துக்க முடியாது. பயத்தை விட்டுடணும், கடவுளை நம்பி போணும் அவ்ளோ தான்.

மா 3 : உண்மை தான்டா… எக்ஸாம் எல்லாம் லைஃப்ல ஒரு சின்ன பாகம். நம்ம முழு எனர்ஜியை குடுத்து படிக்கணும். அவ்வளவு தான் நாம செய்ய வேண்டியது. மிச்சத்தை கடவுள் கிட்டே விட்டுடணும். அவரு பாத்துப்பாரு.

மா 4 : சூப்பர்டா.. இப்போ தான் நீ கரெக்டான லைனுக்கு வரே. ஒரே ஒரு விஷயம் மட்டும் மிஸ்ஸிங்… எது செய்றதுக்கு முன்னாடியும் அப்பா கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்றது தானே நல்ல பிள்ளைக்கு அடையாளம். அதே மாதிரி நாமளும் படிக்கிறதுக்கு முன்னாடி, “ஏசப்பா.. படிக்க போறேன்..நல்ல கான்சன்ட்ரேஷன் குடுங்க.. புரிய வையுங்க” ந்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு படிக்க ஆரம்பிச்சா எல்லாம் சூப்பரா புரியும் ! இதை தான் நாங்க ஜெபம் ந்னு சொல்லுவோம். கடவுள் கிட்டே பேசறது.

மா 1 : ம்ம்.. இன்ட்ரஸ்டிங்…. வேற என்னடா பண்ணணும் ?

மா 4 : நேர்மையா இருக்கணும்டா… கடவுள் நேர்மையை மட்டுமே விரும்பறவரு. மார்க்குக்கு ஆசைப்பட்டு எந்த தப்பான வழியில போனாலும் அது நமக்கு நல்லது கிடையாது. அப்புறம் கடவுள் நம்மளை கை விட்டுடுவாரு. நூலு கையில இருக்கிற வரைக்கும் தான் பட்டம் சரியான வகையில பறக்கும். நாம நூல விட்டுட்டோம்ன்னா முதல்ல பட்டம் வேகமா போற மாதிரி தெரியும். ஆனா கொஞ்ச நேரத்துலயே தலை கீழா விழுந்து கிழியும், அழியும். நேர்மையா இல்லேன்னா, கடவுளுக்கு பிடிக்காது. அவ்ளோ தான்.

மா 1 : ரொம்ப நன்றிடா.. தேவையில்லாம பயப்படறதை விட்டுட்டு, நம்ம வேலையை கரெக்டா பண்ணிட்டு, கடவுள் கிட்டே நம்மை சரண்டர் பண்ணினா எல்லாம் நிம்மதியா இருக்கும்ன்னு சொல்ல வரே.. சரி தானே ?.

மா 4 : பக்காவா சொன்னே.. நம்ம சக்தியில எல்லாத்தையும் செய்யணும்ன்னு நினைக்கிறது எலி வால்ல சிங்கத்தை கட்டி இழுக்கிற மாதிரியான விஷயம். ஆனா கடவுள் சக்தியால எல்லாத்தையும் செய்ய நினைக்கிறது, சிங்கத்து வால்ல எலியைக் கட்டி இழுக்கிற மாதிரி. எது ஈசியா நடக்கும்ன்னு உனக்கே தெரியும்

மா 3 : ஹா..ஹா.. ஏதாச்சும் எக்ஸாம்பிள் சொல்லிட்டே இருக்கேடா நீ… ஆனா மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸா இருக்கு.

( அப்போது மா 2 வருகிறார் .. எல்லோரும் ஓடிப் போய் அவனை பார்க்கின்றனர் )

மா 1 : டேய் மச்சி.. ஒண்ணும் பிரச்சினை இல்லையே ?

மா 2 : நத்திங் டா.. எல்லா டெஸ்டும் எடுத்துட்டாங்க… நோ இஸ்யூஸ்…

மா 1 : சூப்பர் டா… தேங்க் காட்…

மா 2 : ஹாஸ்பிடல் ரூம்ல ஒரு பழமொழி பாத்தேன் “வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்” ந்னு இருந்துச்சு.. அது எனக்கு செம தைரியம் குடுத்துச்சு டா

மா 4 : அது பழமொழி இல்லடா.. பைபிள் வசனம். யோசுவா 1:9 ல இருக்கு. சரியான இடத்துல தான் மாட்டி வெச்சிருக்காங்க.

மா 2 : அதை படிச்சதும் எனக்கு செம தைரியம் வந்துச்சு. எக்ஸாம் கூட எனக்கு இப்போ பயமில்ல டா… காட் ஈஸ் வித் மி.

மா 4 : நாங்க அதைப் பத்தி தான் பேசிட்டிருந்தோம். உனக்கும் நல்ல கான்பிடன்ட்ஸ் வந்ததுல சந்தோசம் டா. விதைக்கிறது தான்டா நம்ம வேலை, அதை சரியா பண்ணுவோம். அதை முளைக்கச் செய்றது கடவுளோட வேலை. அவர் மேல நம்பிக்கை வைப்போம். அவ்ளோ தான்.

மா 3 : சுருக்கமா சொல்லணும்ன்னா… கடமையைச் செய், கடவுளோடு செய் ! அவ்ளோ தான்டா லைஃப் !

( எல்லோரும் சிரிக்கிறார்கள் )

*

 

Posted in Articles, Songs

வருகைப்பாடல்

( ஆல்பம் : தங்கத்தாமரையே
இசை : ஆனந்த கீதன்
பாடல் : சேவியர் )

Related image
பல்லவி

ஆலய வாசல் நுழைவோமா
ஆண்டவரை நாம் அழைப்போமா ?

திருச்சபையாய் நாம் வருவோமா
திருப்பலி தனிலே இணைவோமா ?

ஆலய பீடம் வருவோமே
ஆண்டவர் பாதம் அமர்வோமே ?

இறைவன் திருமுன் வருவோமே ?
நிறைவின் பயனை அடைவோமே ?

அனுபல்லவி

ஆதவன் தரிசனம் பெறுவதற்கு
தாமதம் இனியேன் வருவதற்கு !

சரணம் 1

உலகின் போக்கில் வாழ்பவற்கு
வழிகள் எங்கும் இருளிருக்கும்
உந்தன் வாக்கில் வாழ்பவர்க்கு
பாதை முழுதும் ஒளியிருக்கும்

தாகம் கொண்ட மானாக
வருவேன் உம்மிடம் தானாக !
உந்தன் கண்ணின் மணியாக
காப்பாய் இறைவா இனிதாக

சரணம் 2

நித்திரை பொழுதும் நீங்காமல்
பத்திரமாகக் காப்பவர் நீர்
தீயின் செடியிலும் இருப்பவர் நீர்
நீரின் தோளிலும் நடப்பவர் நீர்.

தவறிப் போன ஆடாக
அலைந்தேன் வாழ்வில் வீணாக
வருவாய் இறைவா வரமாக
அணைக்கும் அன்னைக் கரமாக

*

பாவம் எதையும் பாராமல்
பரிவாய் எம்மைக் காப்பவர் நீர்
தூரம் சென்றே ஒளிந்தாலும்
துயராய் தேடி வருபவர் நீர் !

திரிந்தேன் உலகில் தனியாக
திரும்பினேன் திருந்திய மகனாக
வாழ்ந்தேன் உலகில் களையாக
ஏற்பாய் உந்தன் கிளையாக

*

Posted in Articles, Vettimani

கடவுள்

Image result for help poor

இறைவன் எனும் ஒற்றை மூலத்தின் வெளிச்சச் சிதறல்களே நாமெல்லாம். இதுவே ஆன்மீகத்தின் சிந்தனை. காய்ந்த விறகுகளில் பற்றியெரியும் நெருப்பை ஓங்கி அடித்தால் அவை நாலாபுறமும் சிதறும், சிதறிய இடங்களிலெல்லாம் அவை பற்றிப் படரும்.

காலைப் புல்வெளியில் தன் ஈரப் புன்னகையை இறக்கி வைத்திருக்கும் பனித்துளி புல்லின் அழகைப் பிரதிபலிக்கும். இயற்கையின் எழிலை வேறுபாடின்றி வெளிப்படுத்தும்.

நம்மை அழகாய்க் காட்டும் கண்ணாடிகளை, சுவரில் வீசி உடைத்தெறிந்தாலும் அவை ஒவ்வொரு துண்டிலும் நமது முகத்தை கவலையில்லாமல் எதிரொளிக்கும்.

எதுவும் தனது இயல்பின் தன்மையை உடைத்து விட்டு செயல்படுவதில்லை. ஒவ்வொரு ஈரத் துளியும் தனது மேகத்தின் மகிமையை புகழ்ந்து பாடிக்கொண்டே தான் மண்ணை முத்தமிடுகிறது.

மனிதனும் அப்படி இருக்க வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு. அவன் இறைவனின் பிம்பமாக இருக்கிறான். அவன் இறைவனின் துகளாக இருக்கிறான. அவன் இறைவனின் அகலாக இருக்கிறான். அவன் இறைவனின் நகலாக இருக்கிறான்.

இறைவனின் அகல், இறைவனின் ஒளியைப் பிரதிபலிக்க வேண்டும். இருளை வினியோகம் செய்யக் கூடாது. இறைவனின் பிம்பம், இறைவனை மட்டுமே காட்டவேண்டும். போலி முகங்களை பிரதிபலிக்கக் கூடாது.

நான் கடவுள் என்பதன் அடிப்படை சிந்தனை இது தான். நான் கடவுளின் பிள்ளை என்பதன் அடி நாதமும் இது தான். “அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கான்” என சொல்வதைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறோம். அப்பாவின் இயல்புகளை பிரதிபலிக்கும் பிள்ளைகளையும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறோம்.

அப்படியே இறைவனின் இயல்புகளையும், இறைவனின் குணாதிசயங்களையும் வெளிப்படுத்தும் போது நாம் இறைவனின் பிள்ளைகளாய் மாறுகிறோம்.

ஆன்மீகத்தின் நூல்களையும், தத்துவங்களின் சாராம்சத்தையும், வேதங்களின் பாடங்களையும் புரட்டிப் போட்டு பிரித்தெடுத்தால் இறைவனின் குணாதிசயங்கள் ஒரே தன்மையுடையவையாய் இருப்பதைக் காணமுடியும். ஒரே புள்ளியிலிருந்து உலகம் தோன்றியது எனும் வாதத்தைப் போல, மனிதம் எனும் ஒற்றைப் புள்ளியிலிருந்து ஆன்மீகம் கிளைவிடுகிறது எனலாம்.

சக மனிதனை அன்பு செய்யும் மென்மையான இதயமே இறைவன் உறையும் இல்லம். இறைவனை வெளிப்படுத்த விரும்புவோரிடம் நிச்சயம் இருக்க வேண்டிய குணாதிசயம் அன்பின்றி வேறில்லை. இந்த அன்பின் பிரிவுகளையும், கிளைகளையும், கனிகளையும் நாம் வேறு வேறு பெயர்களைச் சொல்லி அழைக்கலாம். ஆனால் எல்லாமே இந்த அன்பு எனும் ஒற்றை மையத்திலிருந்து வெளிக்கிளம்புகின்ற வெளிச்சங்களே.

சக மனிதன் வறுமையில் வாடுகையில் உனது இதயத்தின் கதவை நீ அடைத்தால், நீ அவனை மட்டும் நிராகரிக்கவில்லை, அவனைப் படைத்த இறைவனையும் சேர்த்தே நிராகரிக்கிறாய்.

வலியில் வாடும் சக மனிதனை நீ அன்புடன் சந்திக்கவில்லையேல், நீ அவனை மட்டும் புறக்கணிக்கவில்லை, அவனைப் படைத்த ஆண்டவனையும் சேர்த்தே புறக்கணிக்கிறாய்.

ஆறுதல் தேடும் சகோதரனை நீ அரவணைக்கவில்லையேல், நீ அவனை மட்டும் விலக்கவில்லை, இறைவனையும் சேர்த்தே விலக்குகிறாய். இதில் தான், இறைவன் அன்பாய் இருக்கிறார் எனும் தத்துவமே அடங்கியிருக்கிறது.

நமது வாழ்க்கையில் நாம் அன்பை வினியோகிக்கும் போது இறைவனை வினியோகிக்கிறோம். அன்பின் கனிகளைப் பகிரும் போது இறைவனையே பகிர்கிறோம். அன்பாகவே மாறும் போது நாம் இறைவனின் நகல்களாக மாறுகிறோம்.

ஒரு பாத்திரம் நிறைய சுவையான இனிப்பு நீரைச் சுமந்து செல்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து சிந்துவதெல்லாம் இனிப்பாகவே இருக்கும். அதிலிருந்து கசப்பின் துளிகள் கசிவதில்லை. அன்பும் அப்படியே. நம் இதயத்தில் அன்பை மட்டுமே நிறைத்து வைக்கும் போது நமது செயல்களும் அன்பாகவே இருக்கும்.

மனதுக்குள் அன்பை நிறைப்பதையே நமது வாழ்வின் இலக்காக வைத்துக் கொள்வோம். மரம் நல்லதாக இருக்கும் போது கனிகள் சுவையானதாகவே இருக்கும். மரத்தின் இயல்பே கனியின் தரத்தை நிர்ணயிக்கிறது. மரமும், நிலமும் வளமாக இருக்கையில் கனியும், சுவையும் நலம் பயக்கும்.

கனிகளைக் கொண்டே மரத்தை மதிப்பிடுவது போல, நமது செயல்களைக் கொண்டே நாமும் மதிப்பிடப்படுவோம். அது மனிதர்களின் அவையிலானாலும் சரி, இறைவனின் சபையிலானாலும் சரி.

பல வேளைகளில் நாம் வலுக்கட்டாயமாய் சில கனிகளை விளைய வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த மரமும் வசீகரம் என கற்பனை செய்து கொள்கிறோம். கை நீட்டும் ஒரு ஏழைக்கு நூறு ரூபாய் கொடுத்தால் கருணைக் கடல் என நமக்கு நாமே பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறோம்.

நாம் உதவிய நபர்களின் எண்ணிக்கையிலல்ல, அந்த உதவிக்கு உதவிய எண்ணங்களையே இறைவன் மதிப்பிடுகிறார். நாம் அரவணைத்துக் கடந்த கணங்களை மட்டுமல்ல, நிராகரித்து நகர்ந்த நிமிடங்களையும் அவர் கணக்கில் வைக்கிறார்.

நமது அன்பின் செயல்கள் இயல்பாகவே வருகிறதா ? அல்லது குற்ற உணர்ச்சியின் குறுகுறுப்பால் வெளிவருகிறதா ?

நமது பாசத்தின் செயல்கள் பரவசமாய் வருகிறதா ? அல்லது பாவம் வருமோ எனும் பயத்தில் வருகிறதா ?

நமது நேசத்தின் பணிகள் ஆத்மார்த்தமாய் வருகிறதா ? கடவுள் தண்டிப்பாரோ எனும் கவலையில் வருகிறதா ?

வேர்களை விசாரிப்போம். கனிகள் விளையாதக் கிளைகளைக் கவனிப்போம். தற்காலிகக் கனிகளை ஒட்ட வைப்பதால், ஒட்டு மொத்த மரமும் புனிதமாவதில்லை.

மனதின் மையத்தில் அன்பை நடுவோம்.அது இயல்பாகவே வளர ஆன்மீகத்தின் நீரைப் பாய்ச்சுவோம். அது தடையின்றி வளர வெறுப்பின் முட்களை வெட்டி எறிவோம்.

இறைவனின் அகலாக மாற,
இறைவனை அகலாமல் இருப்போம்.
அன்பே கடவுள்.
அன்பாக நீ மாறினால் நீயும்….

*
SivaTamil, a Vettimani Production.

Germany & London

Posted in Articles, Desopakari

இயந்திர வாழ்க்கை

Image result for Helping poor

இன்றைய வாழ்க்கை இயந்திரத்தனமாகவும், இயந்திரங்களோடும் என்றாகிவிட்டது. தொழில்நுட்ப உலகம் நம்மை மனிதர்களை விட்டு அந்நியப்படுத்தி, மனிதர்களோடு இருப்பது போன்ற மாயையை நமக்குள் உருவாக்கிவிட்டது. நிழல் நட்புகளை நிஜம் என நம்பச் செய்து விட்டது.

இல்லாத ஒன்றை இருப்பது போல நம்புவதில் தொடங்குகிறது நமது ஏமாற்றத்தின் முதல் படி. இருக்கும் ஒன்றை அதற்காக இழக்கத் தொடங்குவதில் அந்த ஏமாற்றம் வளர்ச்சியடைகிறது. அந்த மாயைக்குள் கூடுகட்டிக் குடியிருக்கும் போது வாழ்க்கை அர்த்தமிழக்கிறது.

‘நான் ஸ்டெடி’ என குடிகாரன் சொல்வதைப் போல, நான் டிஜிடல் மாயையில் இல்லை என சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஐந்தரை இஞ்ச் வெளிச்சத் திரைகளில் டிஜிடல் கயிறுகளால் கட்டப்பட்டிருப்பவர்கள் தான். இது தான் வாழ்க்கையின் இன்றைய நிலை.

எல்லாமே பாஸ்ட் புட் போல சட்டென கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது இளைய சமுதாயம். ஏடிஎம் மெஷினுக்கு முன்னால் நிற்கும் பதினைந்து வினாடிகள் கூட அவர்களுக்கு அதீத காத்திருப்பாய்த் தோன்றுகிறது. அதி வேகம் தான் அவர்களை பல இடங்களில் வீழ்ச்சியடைய வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

முகநூலில் முகம் பார்த்து, வாட்சப்பில் குரல் கேட்டு சந்திப்பதற்கு நாள் குறிக்கும் இள வயதுகள் அவசரத்தின் குடுவைகளில் சோதனைச்சால அமிலங்களைப் போல உருமாறி அழிகின்றனர். சட்டென காய்கள் வேண்டுமென போன்சாய் மரங்கள் நடுவது தொடங்கி, சட்டென முடிவு வேண்டுமென டைவர்ஸ் கேட்பது வரை எங்கும் எதிலும் பரபர காட்சிகள் தான்.

ரெண்டு குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லும் வீடுகளில் காட்சிகள் ஒரு ராணுவ பரபரப்புடன் தான் இருக்கும். குழந்தைகளை எழுப்புவது முதல், அவர்களை பள்ளிக்கூடம் அனுப்புவது வரை ஒரு மின்னல் பரபரப்பு. பின் அலுவலகம் நோக்கி ஓடும் பெற்றோரின் பரபரப்பு. அலுவலகத்தில் அழுத்தம் கலந்த பரபரப்பு. மாலையில் வீடு நோக்கி ஓடி, குழந்தைகளின் படிப்பு, ஹோம் வர்க், எக்ஸ்ட்ரா கிளாஸ்.. என நள்ளிரவில் படுக்கையில் விழுந்தால் காலையில் அலாரம் அடித்து தொலைக்கும் !

வாழ்க்கை இதயங்களால் நிர்ணயிக்கப்பட்ட காலம் போய்விட்டது. இப்போது அவை இயந்திரமயமான கட்டமைப்புக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. காத்திருப்பதின் சுகமும், அமைதியாய் அமர்ந்திருப்பதன் நிம்மதியும் இளைய தலைமுறைக்குப் புரிவதே இல்லை. அவர்கள் டிஜிடல் கைகளோடு, துடித்துக் கிடக்கின்றனர்.

உண்மையில் ‘நேரமில்லை’ என நினைக்கும் நாம் செலவிடும் நேரங்களில் பெரும்பாலானவை வீணானவையே ! சந்தேகமெனில் ஒரே ஒரு வேலை செய்யுங்கள். உங்களுடைய போனில் வாட்ஸப், டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற அனைத்து உரையாடல், சமூக வலைத்தளங்களை அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள். ஒரு வாரம் கழிந்து திரும்பிப் பாருங்கள் உங்களுக்கு எக்கச்சக்க டைம் கிடைத்திருக்கும். நீங்கள் இழந்தது என எதுவுமே இருக்காது ! அது தான் யதார்த்தம்.

கிறிஸ்தவ வாழ்க்கையானது இயந்திரத்தனமான வாழ்க்கையல்ல. நின்று நிதானித்து இறைவனின் வார்த்தைகளின் படி வாழும் வாழ்க்கை. நல்ல சமாரியன் கதையில் இயந்திரத்தனமாய் ஓடியவர்களை இயேசுவும் கைவிட்டார். நின்று நிதானித்து மனிதநேயப் பணி செய்தவனே பாராட்டப்பட்டார்.

அன்னை தெரேசா ஒருமுறை ஆலயம் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு முதியவர் சாலையோரம் கிடப்பதைக் கண்டு அவருக்கு உதவி செய்ய ஓடினார். கூட இருந்தவர்கள், ‘திருப்பலிக்கு நேரமாகிறது, திரும்ப‌ வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அன்னையோ, ‘நீங்கள் செல்லுங்கள் நான் இயேசுவை இங்கேயே கண்டு கொண்டேன்’ என்றார். நின்று நிதானிப்பவர்களே மனிதர்களில் இயேசுவைக் காண்கின்றனர். இயந்திர ஓட்டங்கள் ஆலயத்திலும் ஆண்டவரைக் காட்டுவதில்லை.

இயந்திர வாழ்க்கை என்பது பொருளாதாரத் தேடல்களுக்காகவும், சுயநலத் தேவைகளுக்காகவும் ஓடுகின்ற வாழ்க்கை. செபத்துக்கான நேரங்களை தொலைக்காட்சிகள்  திருடிக்கொண்ட வாழ்க்கை. ஆலய நேரத்தை தூக்கம் இழுத்துக் கொண்ட வாழ்க்கை. மனிதநேய பணிகளை மொபைல் அழித்து விட்ட வாழ்க்கை. அன்புக்கான நேரங்களை டிஜிடல் சாகடித்த வாழ்க்கை.  இந்த இயந்திர மயமான காலகட்டத்தில் கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் ?

  1. சந்தித்தல் !

மது அன்பின் வெளிப்பாடுகள் தொய்வின்றித் தொடரவேண்டும். அதுவும் தனிப்பட்ட சந்திப்புகளாக, உரையாடல்களாக, அரவணைத்தல்களாக, அன்புப் பகிர்தல்களாக இருக்க வேண்டும். அதுவே உறவைக் கட்டியெழுப்பும். உதாரணமாக, பல ஆண்டுகளாக நாம் சந்திக்காத எத்தனையோ நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள். அவர்களை திடீரென ஒரு நாள் சென்று பார்த்து அவர்களோடு சில மணி நேரங்கள் செலவிட்டுப் பாருங்கள். வாழ்வின் உன்னதம் புரியும். அன்பு எத்தனை வசீகரமானது என்பதை அறிய முடியும்.

  1. பேசுதல் !

ஒரு காலத்தில் உதாரணமாய்ப் பேசப்பட்ட கிறிஸ்தவக் குடும்ப உறவுகள் இன்றைக்கு மிகப்பெரிய அவமானப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன‌. மனம் விட்டுப் பேசுவதற்கு மனமில்லாமலோ, நேரமில்லாமலோ பயணிக்கின்றனர் இளம் தம்பதியர். இயந்திரத்தனமான வாழ்க்கை அவர்களுடைய இதயங்களுக்கு இடையே தொழில்நுட்பத்தை இட்டு நிரப்புகிறது. காலம் செல்லச் செல்ல அந்த இடைவெளி பெரிதாக, மணமுறிவுகளின் முற்றத்தில் தம்பதியர் முகம் திருப்பிச் செல்கின்றனர். இந்த சிக்கல்களிலிருந்து விடுபட, மனம் விட்டுப் பேசும் பழக்கத்துக்கு நாம் திரும்ப வேண்டும். டைப் அடிக்கும் வார்த்தைகளில் அல்ல, கரம் பிடிக்கும் வார்த்தைகளில் தான் அன்பின் ஸ்பரிசம் செழிக்கும்.

  1. பகிர்தல்

மனிதநேயத்தின் வேர்களே பகிர்ந்தலின் கிளைகளில் கனிகளை விளைவிக்கும். பகிர்தலின் கனிகளே அன்பின் செயல்களாக மனம் நிறைக்கும். இன்றைய அவசர வாழ்க்கை பகிர்தலைத் தூக்கி பரணில் வைத்து விட்டது. கடைசியாக எப்போது உங்களிடம் இருந்த உணவையோ, உடையையோ, நேரத்தையோ, பொருட்களையோ பகிர்ந்தளித்தீர்கள் என சிந்தியுங்கள். பழைய ஆடைகளை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் கொடுக்கக் கூட மாதக் கணக்கில் தாமதம் செய்கிறோமா இல்லையா ? நிதானிப்போம், பகிர்தலோடு வாழ்ந்தலே பரமனோடு வாழ்தல் என்பதை உணர்வோம்.

  1. மன்னித்தல்

இயந்திர வாழ்க்கையில் நாம் இழந்த ஒரு முக்கியமான விஷயம் மன்னித்தல். நமது கடந்த தலைமுறையினரிடம் இருந்த பொறுமையோ, சகிப்புத்தன்மையோ, விட்டுக் கொடுத்தலோ இந்த தலைமுறையினரிடம் இல்லை. இந்த தலைமுறையினரிடம் கொஞ்சூண்டு மிச்சமிருக்கும் இந்த குணாதிசயங்கள் அடுத்த தலைமுறையினரிடம் அறவே இல்லாமல் போகுமோ எனும் அச்சம் உண்டு. மன்னிப்பை மறுதலித்து வெறுப்பை வளர்க்கவே சமூகமும், ஊடகங்களும் கற்றுத் தருகின்றன. மன்னித்தல் வேண்டுமெனில், நாம் உலகின் போதனைகளை விடுத்து, இறைவனின் போதனைகளை உடுத்த வேண்டும்.

  1. நிதானித்தல்

எதையெடுத்தாலும் சமூக வலைத்தளங்களில் அவற்றைப் பதிவு செய்வதும், அதற்கு எத்தனை லைக்ஸ் ஷேர் வந்தது என கணக்குப் பார்ப்பதும் இன்றைய இளசுகளிடம் இருக்கும் ஒரு போதை. புகழ் போதையின் ஆரம்பகட்டம் இது. சமூக வலைத்தளங்களில் வெறுப்புக் கருத்துகளை தொடர்ந்து படிப்பதும், படைப்பதும் அவர்களுடைய மனங்களில் எதிர்மறை சிந்தனைகளுக்கு எண்ணை வார்த்துக் கொண்டே இருக்கும். அத்தகைய பழக்கங்களை விட்டு ஒழிப்பது இயந்திர வாழ்க்கையிலும் நிம்மதியைக் கொண்டு வரும். நமது சமூக பங்களிப்புகளை நேரடியான சமூகச் செயல்களில் செய்வதே சிறந்தது. சமூக வலைத்தளங்களில் சண்டை போடுவது ஏட்டுச் சுரைக்காயை வைத்து சமையல் செய்வதைப் போன்றதே.

  1. நிஜமணிதல்

இயந்திர வாழ்க்கை கொண்டு வரும் முக்கியமான குணாதிசயம் இரட்டைவேடம் போடுதல். அவசரத்தின் கைக்குள் அலைகின்ற வாழ்க்கையில் பொய்யும், கபடமும் இணைந்தே பயணிக்கின்றன. நிஜம் அமைதியாய் வரும், பொய் புயலாய் வரும். நிஜம் தென்றலாய் வருடும், பொய் கனலாய் சுடும். உள்ளுக்குள் ஒன்றை புதைத்து, முகத்தில் ஒன்றைத் தரித்து வருகின்ற போலித்தனங்களை உதறுவோம். அது தான் நமது வாழ்க்கையை இறைவனை விட்டு தூரமாய் துரத்துகிறது. நிஜத்தை அணிவோம் !

  1. புனிதமாதல் !

இன்றைய வாழ்க்கையில் தேவைப்படுகிற முக்கியமான விஷயம் புனிதத்துவம். அதற்குத் தேவை இறை வார்த்தைகளோடு பயணித்தல். நமது வாழ்க்கையை செபத்தை விட்டும், இறை வார்த்தைகளை விட்டும், இயேசுவை விட்டும் துரத்துகின்ற செயலைத்தான் இன்றைய பரபரப்புகள் செய்கின்றன. அவற்றை மீண்டெடுப்போம். நாளும் நமக்கு முன்னால் விரிக்கப்படுகின்ற வலைகளில் பெரும்பாலானவை சாத்தானுடையவை. அவற்றைக் கண்டுபிடித்து விலக்கும் போது புனிதத்தின் பாதையில் நடைபோட முடியும்.

 

Posted in Articles, Desopakari

காலங்களின் கடவுள் !

Image result for JESUS the lord of time

ஏதாவது ஒரு பொருளை உருவாக்கினால் அதற்கான ‘காப்புரிமையை’ பெறுவது இப்போது நடைமுறையில் இருக்கும் வழக்கம். காலங்களை உருவாக்கிய கடவுள் காலங்களுக்கான காப்புரிமையை வைத்திருக்கிறார். “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல” என்கிறார் இயேசு (திருத்தூதர் பணிகள் 1:7 ). இறைவன் ஒருவரே காலங்களின் அதிபதி ! எனவே தான் அவரை படைப்புகளின் பிதா, காலங்களின் கடவுள், பருவங்களின் பரமன் என்றெல்லாம் அழைக்கலாம் !

“உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்; கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்தலுக்கு ஒரு காலம் …” என பேசுகின்ற சபை உரையாளர் “கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார்” ( சபை உரையாளர் 3 : 1 ..10) என்கிறார்.

பூமி இப்படி இளமையாகவும், வளமையாகவும் இருப்பதற்குக் காரணம் இந்த பருவ மாற்றங்களே என்கிறது விஞ்ஞானம். நமக்காய் இந்த பூமியைப் படைத்த இறைவன் நமது வளமையான வாழ்வுக்காய் பருவங்களைத் தந்திருக்கிறார்.

காலங்கள் ஒன்றை ஒன்றிடமிருந்து பிரிக்கின்றன. இறைவன் ஆதியில் ஒளிப்பிழம்புகளை உருவாக்கி காலங்களை வகைப்படுத்தினார். பிரிவினைகளின் முதல் சுவடு அங்கே வைக்கப்பட்டது. இரவிலிருந்து பகல் பிரிக்கப்பட்டது ! நீரினினின்று நிலம் பிரிக்கப்பட்டது ! காலங்களைப் பிரித்து ஞாலத்தை அழகுபடுத்தினார் இறைவன்.

மனித வாழ்க்கையிலும் பல்வேறு காலங்கள் வந்து செல்கின்றன. சிரிப்பின் வீதிகளில் நடமாடும் காலம், அழுகையின் கரையில் அடைபடும் காலம், உற்சாகத்தின் ஊஞ்சலில் ஆடும் காலம், சோர்வின் படிக்கட்டில் அமரும் காலம் என வாழ்க்கையின் பருவங்கள் அனுபவங்களை அள்ளித் தருகின்றன.

இறைவன் படைத்த இந்த உலகில் நான்கு பருவங்கள் பொதுவானவையாக இருக்கின்றன. வசந்த காலம், இலையுதிர் காலம், வேனிற் காலம், குளிர் காலம் என இந்த‌ நான்கு காலங்களைச் சொல்லலாம். நிலப்பரப்புக்கு ஏற்ப இந்த காலங்களில் மாற்றங்கள் நேர்வதுண்டு. எனினும் பொதுவானவையாய் இருப்பவை இந்த நான்கு பருவ காலங்களே !

மனித வாழ்க்கையையும் ஆன்மீக வெளிச்சத்தில் இந்த நான்கு பருவங்களுக்குள் அடக்கி விடலாம். மழலைக்காலம் எனும் வசந்த காலம், பதின்வயதுக் காலம் எனும் இலையுதிர் காலம், இளமைக்காலம் எனும் வேனிற்காலம், முதுமைக்காலம் எனும் குளிர்காலம் !  அதெப்படி ?

  1. வசந்த காலம் !

வசந்த காலம் என்பது மகிழ்ச்சியின் காலம். துயரங்களைப் பற்றிய சிந்தனையின்றி மரங்கள் வண்ண ஆடை உடுத்தி, கிளையசைத்து, இலை சிரிக்க நம்மை வரவேற்கும் கால்ம். உற்சாகத்துக்குப் பஞ்சம் இல்லாத காலம் இது !

நமது மழலைக்காலம் இந்த வசந்த காலம் போன்றது. கவலைன்னா என்ன என்று கேட்கின்ற காலம். இருப்பதைக் கொண்டு இன்புற்று வாழும் காலம். இறைவனின் ஆசீரை நிறைவாகப் பெற்று களித்திருக்கும் காலம். பெற்றோரின் விரல்பிடித்து நடந்து, எந்த பிரச்சினைகளும் இல்லாலம் திரிகின்ற காலம்.

ஆன்மீக வாழ்க்கையில் இறைவனை அறிகின்ற காலம் இது ! இறைவனிடம் வருகையில் கிடைக்கின்ற உற்சாகமும், புளகாங்கிதமும் அளவிட முடியாதது. தந்தையின் விரல்பிடித்து திருவிழாவில் பலூன் பொறுக்கும் குழந்தையின் பரவசம் இந்த காலத்தின் அற்புதம். இந்தக் காலம் இப்படியே நீடிக்காதா என மனம் ஏங்கும் ! ஆன்மீகத்தின் ஆரம்ப காலம் ! ஆனந்தத்தின் அற்புத காலம்.

  1. இலையுதிர் காலம் !

இலையுதிர்க்காலம் புதுப்பிறப்பின் காலம். தலைகளில் இருக்கும் இலைகளை உதிர்த்து விட்டு மரங்கள் நிராயுதபாணியாய் நிற்கும் காலம். இன்னொரு வசந்த முளைக்காகக் கிளைகள் காத்திருக்கும் காலம். உதிர்தல் இல்லாமல் முளைத்தல் இல்லை. இழத்தல் இல்லாமல் பெறுதல் இல்லை. தியாகம் இல்லாமல் மேன்மை இல்லை !

ஆன்மீகப் பயணத்தின் இரண்டாம் பிறப்பு இலையுதிர்காலம். நம்மிடம் இருக்கின்ற பாவத்தின் களைகளை உதிர்க்கும் காலம். நம்மைச் சுற்றியிருக்கும் தீமையின் துருக்களை உதறும் காலம். மறுபிறப்பின் முன்னுரை இந்தக் காலத்தில் தான் எழுதப்படுகிறது. பதின்வயதுகளில் ஒருவன் புதுப்பிறப்பெடுத்தால் அவனுக்குள் ஆன்மீகத்தின் அடைமழை நிச்சயம் பொழியும்.

உள்ளே இருக்கின்ற அழுக்குத் தண்ணீரை அகற்றாமல், பாத்திரத்தை மீண்டும் கழுவாமல், நல்ல நீரை நிரப்புதல் சாத்தியமில்லை. பழைய மனிதனின் மரணமே புதிய மனிதனின் ஜனனம். ஆன்மீகத்தின் வளர்நிலைக் காலம் என்பது இலையுதிர்க்காலமே ! இலைகளை உதிர்க்காமல் இருக்கின்ற மரங்கள் வசந்தத்தை வரவேற்பதில்லை !

  1. வேனிற்காலம்.

வேனிற்காலம் வியர்வையின் காலம். உடலின் உறுதியை எல்லாம் சூரியன் வந்து உறிஞ்சிச் செல்லும் காலம். நிழல் கிடைத்தால் நிற்கலாமே என கால்கள் ஏங்கும் காலம். இந்தக் காலத்தில் நமக்கு அதிக சக்தி தேவைப்படும். இந்தக் காலத்தில் தான் வேலைகள் அதீத வேகத்தில் நடக்கும். உலகமே சுறுசுறுப்பாய் இயங்கும் ! பணியே இங்கே பிரதானமாகும்.

ஆன்மீக வாழ்க்கையின் வீரிய காலம். வசந்தத்தின் இனிமையை ரசித்து, பாவத்தின் துருக்களை அகற்றி புதிய மனிதனானபின் வேனிற்காலத்தில் பயணிக்க வேண்டும். பாவம் களைந்த மனிதனே பாவமில்லாத இறைவனைப் பறைசாற்ற முடியும். தனது கர்வத்தின் இலைகளை உதிர்த்த மனிதன் மட்டுமே பணிவின் பாதையில் நடக்க முடியும்.

இந்த வேனிற்காலம் சோர்வுகளைக் கொண்டுவரும். அசதியைக் கொண்டு வரும். நிழல்வேண்டுமென ஏக்கம் கொள்ளும் பாதங்களைக் கொண்டு வரும். எனினும் இந்தக் காலமே நீளமான பகலின் காலம். ஒளியின்றி வழியைப் பற்றிப் போதித்தல் இயலாது ! இது கனிகொடுக்கும் காலம். ஒளிச்சேர்க்கையின் காலம்.

நமது ஆன்மீக வாழ்க்கையில் எந்த அளவுக்கு இந்த வேனிற்காலத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதைக் கொண்டே நமது ஆன்மீக வாழ்வின் ஆழம் அளவிடப்படும்.

  1. பனிக்காலம்

பனிக்காலம், தனிக்காலம் ! சோர்வின் காலம். வெளியே சென்றால் குளிர் வாட்டியெடுக்கும். சன்னலின் கம்பிகள் வழியே பனிக்காற்று கோலியாத்தின் வாளைப் போல மூர்க்கமாய் மிரட்டும். காதுகளின் கதவுகளை குளிர்க்குத்தீட்டிகள் கூர்மையாய் விரட்டும். பெரிதாக எதையும் செய்ய முடியாத சோர்வின் காலம்.

இது முதுமையின் காலம் எனலாம். போர்வைக்குள் கதகதப்பைத் தேடும் காலம். ஒரு தேனீர் குடித்து, காலத்தை நினைவுகளின் தேர்களில் ஏறிக் கடக்கும் பருவம் இது. மேலை நாடுகளில் வெண் பனியின் யுத்தம் நடக்கும் காலம் இது. சாலைகளை பனிக்கரடி கட்டிப்பிடித்துப் படுத்திருப்பது போல எங்கும் பனிக் குன்றுகளே கண்சிமிட்டும்.

ஆன்மீகப் பயணத்தின் கடைசிக் காலம். வாழ்க்கையின் முதுமைப் பயணம். இறைவனின் அன்பின் அரவணைப்புக்குள் அமைதியாய் இருந்திடவே மனம் துடிக்கும். அந்த கதகதப்பு உணர்வுகளில் உயிரைக் காத்துக் கொள்ளும் காலம். வேனிற்காலத்தில் தேவையானவற்றைச் சேமிக்கும் எறும்புகள் பனிக்காலத்தில் பதட்டப்படாது. அது போல, ஆன்மீக வேனிற்காலத்தில் இறைவனின் பிரியத்துக்குரிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள் பரமன் தரும் பனிக்காலத்தில் பதற மாட்டார்கள். அவரது அன்புக்குள் அமைதியாய் இருப்பார்கள்.

இறைவன் நமக்குத் தந்திருக்கும் இயற்கையின் பருவங்கள் நமது வாழ்க்கையைவளமாக்குகின்றன.

ஆன்மீகத்தில் நாம் பயணிக்கும் பருவங்கள் நமது வாழ்க்கையை

அழகாக்குகின்றன.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

*