Posted in Articles, Christianity, Vettimani

உயிர் மூச்சு

Image result for church

தூக்கம் என்பது தற்காலிக மரணம் !
மரணம் என்பது நிரந்தரத் தூக்கம்.

கருவில் ஒரு புள்ளியாய் உருவாகும் போது நமது வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போடப்படுகிறது. கருவறையின் வெப்பத்திலும், தாய்மையின் தெப்பத்திலும் பிணைந்தும், நனைத்தும் வாழ்க்கை நம்மை பூமியின் வீதிகளுக்கு அனுப்பி வைக்கிறது.

பூமியின் புதுமைக்காற்றை நுரையீரலுக்குள் நிரப்பிக் கொண்டு, முதல் அழுகை எனும் வருகைப்பதிவுடன் நமது வாழ்க்கை பூமியில் துவங்குகிறது. நீரோடு இருந்த வாழ்க்கை நிலத்தோடு என மாறிப் போகிறது. உண்மையில் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களின் பட்டியலில் மனிதனும் இருக்க வேண்டும். அவன் நீரில் வாழ்ந்து, நிலத்தில் வாழ வருபவன் தானே !

பூமி நம்மை புன்னகையுடனும், இயற்கை நம்மை பிரமிப்புடனும் வரவேற்கிறது. எனினும் வாழ்க்கை நமது அழுகையைத் தான் முதலில் அங்கீகரிக்கிறது. சிரிப்பை அல்ல !

அறிவியல் ஒரு உடலைப் படைக்கலாம் ! ஆனால் இறைவன் மட்டுமே அதன் உயிர் மூச்சாய் உலவ முடியும். இறைவனின் உயிர்மூச்சே மனிதனை மனிதனாக்குகிறது. அந்த உயிர் மூச்சு விலகி, வெறும் காற்றின் மூலக்கூறுகளோடு முடிந்து போகும் போது மனித நேயம் தொலைந்து விடுகிறது.

பிறக்கும் முன்னே இறைவனிடம் இருக்கிறான் மனிதன் ! ஆன்மாவாக !! இறந்த பின்னும் இறைவனிடம் இருக்க வேண்டும் என்பதற்காக வாழ்கிறான். அதுவே ஆன்மீகத்தின் பாடம். ஆன்மீகத்தின் கதவுகளை இறுகச் சாத்துபவர்களுக்கு உயிர் பூமியிலிருந்து புறப்பட்டு, பூமியில் சங்கமித்து விடுகிறது !

நமக்குள் இறைவன் உலவுகிறார் என்பதை உணர்வதில் துவங்குகிறது மனிதத்தின் பயணம். அந்த இறைவனை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் எனும் முனைவுகளில் தொடர்கிறது அதன் வளர்ச்சி. அந்த இறைவனோடு கலக்க வேண்டும் எனும் முடிவுகளில் அடைகிறது வாழ்வின் முக்தி !

இறைவனை அடைவதன் முதல் படி, மனிதனாய் மனிதனை அடைவது தான் ! அதைத் தாண்டிய ஆன்மீகப் பாடங்கள் இல்லை. இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டவன் மனிதன் என்றால், எந்த ஒரு மனிதனுக்கும் எதிரான வன்முறை இறைவனுக்கு எதிரான நேரடி வன்முறையே. அதை மறுதலிக்கின்ற புனிதநூல்கள் மனித சிந்தனையில் உருவானவை என்பதில் சந்தேகம் இல்லை.

மனிதர்களின் தேவைகளை நிறைவேற்ற இறைவனே இறங்கி வந்த நிகழ்வுகளையும், இறைவனே அவதாரங்களோடு வந்து ஆதரவளித்த நிகழ்வுகளும் புனித நூல்களின் பக்கங்களெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன
உயிர்மூச்சு என்பதை ஆன்மீக வெளிச்சத்தில் புரிந்து கொள்வது எப்படி ?

1. மூச்சு, உயிரை உயிருடன் வைத்திருக்கும் !

நாம் உயிர்வாழ முதல் தேவையான ஆக்சிஜனை காற்றின் இழைகளிலிருந்து நுரையீரலின் அறைகளுக்கு அனுப்பி வைப்பது மூச்சின் அடிப்படை. அது தான் நம்மை இயங்க வைக்கிறது. அது தான் நம்மை வீழ்ந்து விடாமலும், இறந்து விடாமலும் காப்பாற்றுகிறது !

இறைவனும் அப்படியே. நம்முள் நுழைந்து, நம்முள் கலந்து நம்முள் கரையும் போது நாம் ஆன்மீக ரீதியான மரணத்தில் நுழையாமல் மனிதத்தின் உயிர்ப்புடன் வாழ முடியும்.

2. மூச்சு, அசுத்தங்களை அகற்றுகிறது !

மூச்சு தான் உடலில் தேங்கியிருக்கின்ற அசுத்தங்களை அகற்ற உதவுகிறது என்கிறது மருத்துவம். மூச்சு இல்லாமல் போனால் உடலுக்குள் நச்சுக் காற்று கூடாரம் போட்டுக் குடியிருக்கும். உயிரின் துடிப்பும், உடலின் மிடுக்கும் சடுதியில் உடைந்து விடும்.

இறைவனும் அப்படியே. நமது இதயத்தில் கலந்திருக்கும் பாவத்தின் கறைகளை அகற்றவும், தீமைகளின் துருக்களை விலக்கவும் அவர் உள்ளே உலவிக்கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

3. உள்ளே இருப்பதல்ல, உலவிக் கொண்டே இருப்பது.

நகராமல் இருக்கின்ற நதியில் கொசுக்கள் பிணி விற்கும். அசையாமல் நிற்கும் மேகம் மழைக்கு துணைசெய்யாது ! மூச்சும் அப்படியே உள்ளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பதில் அதனால் எந்த பயனும் இல்லை. அது உள்ளே உலவி வெளியே செல்ல வேண்டும். மீண்டும் உள்ளே நுழைய வேண்டும்.

ஆன்மீகமும் அதுவே ! நமக்கென சேமித்து வைப்பது சுயநலத்தின் சிந்தனை. பிறர்க்கென கொடுத்துப் பழகுவதே ஆன்மீகத்தின் அழகியல். இறைவன் நமக்குள் தருவதை, நாம் பிறருக்குக் கொடுப்பதே இந்த மூச்சுக் காற்று நமக்குச் சொல்லும் இன்னொரு பாடம்.

4. மூளைக்கு பலம், மூச்சு !

நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றின் எண்பது விழுக்காடு மூளைக்குத் தேவைப்படும் என்கிறது அறிவியல். மூளையின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க மூச்சு முக்கிய பங்காற்றுகிறது. அதனால் தான் யோகா போன்ற சுவாச முறைகள் ஆழமாய் காற்றை உள்ளிழுக்கும் முறையை போதிக்கின்றன. ஆழமாய் காற்றை உள்ளிழுக்கும் போது மூளைக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. மூளை சுறுசுறுப்பாகிறது.

இறைவனையும் ஆழமாய் உள்ளிழுக்கும் போது நமது சிந்தனைகள் தூய்மையடைகின்றன. சுறுசுறுப்பு வந்து நம்மை பிடித்துக் கொள்கிறது. படித்தால் வருவது அறிவு ! இறைவனைப் பிடித்தால் வருவது ஞானம். அந்த ஞானம் கிளர்ந்தெழ இறைவன் நமக்குள் வளர்ந்தெழ வேண்டும்.

5. அணுக்களின் ஆற்றல்

நமது உடலிலுள்ள அணுக்களுக்கு ஆற்றல் அளிப்பது மூச்சுக்காற்று தான். அந்த ஆக்சிஜன் தான் எனர்ஜியாக மாறுகிறது. ஆக்சிஜன் இல்லையேல் அணுக்கள் எனர்ஜியை தயாரிக்க முடியாமல் வலுவிழக்கும். உடல் நிலைகுலையும்.
இறைவனும் அப்படியே. நமக்குத் தேவையான எனர்ஜியைத் தருவது இறைவனே. உலகின் கவலைகள் மலைபோல் நமக்கு முன் வரும்போது நமது அடைக்கலமாய் இருப்பது இறைவன் மட்டுமே. அவரது வார்த்தைகளும், அவரது இயல்பும், அவர் பாதுகாப்பார் எனும் நம்பிக்கையுமே நமக்கு எனர்ஜியாய் மாறுகிறது.

மூச்சு என்பது இறைவன் தந்த கொடை. வங்கியில் பணத்தைப் போடும்போது அதன் வட்டி நமக்கு வரவேண்டும் என விரும்புவோம். இறைவன் நமக்கு உயிரைத் தரும்போது அதன் பயன் அவருக்குக் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார்.

அவருக்கு எப்படி நாம் பிறவிப் பயனைச் செலுத்த முடியும். அதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களுக்கு முழுமையான மனதுடன் அன்பு செய்வதே அந்த வழி. மனிதர்களை அன்பு செய்யும் போது நாம் இறைவனை அன்பு செய்பவர்களாகிறோம்.’

ஏழைகளை, இயலாதவர்களை, ஆதரவற்றவர்களை ஏற்றுக் கொள்வது இறைவனையே ஏற்றுக் கொள்வது போல. நமது பெற்றோரை, உறவினர்களை, சார்ந்தோரை அன்பு செய்வது இறைவனை அன்பு செய்வது போல.
சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமெனில்

அன்பினால் செய்வதெல்லாம் ஆன்மீகம் ! இறைவன் பெயரால் செய்யாவிட்டாலும் அதை இறைவன் அங்கீகரிக்கிறார்.

வெறுப்பினால் செய்யப்படுவதெல்லாம் அறிவீனம் !. இறைவன் பெயரால் செய்தாலும் இறைவன் அதை மறுதலிக்கிறார்.

மதம் இருப்பது, மனிதனுக்காக !
மனிதன் இருப்பது மதத்துக்காக அல்ல !

உண்மை புரிவோம்,
இறையன்பை மனிதனில் பொழிவோம்.

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் : படைவீரனின் காது நலமாதல்

Image result for jesus heals the ear

லூக்கா 22:47 ..51

இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம், “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” என்றார்.

அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, “ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?” என்று கேட்டார்கள்.

அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.

இயேசு அவர்களைப் பார்த்து, “விடுங்கள், போதும்” என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.

விளக்கம்

இயேசுவின் புதுமைகள் ஒவ்வொன்றுமே அவரது சீடர்களுக்குப் புதிய புதிய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுப்பனவாகவே இருந்தன. இன்றைக்கும் அவை நமக்கு பல்வேறு இறையியல் சிந்தனைகளைக் கற்றுத் தருகின்றன. அதிசயச் செயலாக வெளிப்பார்வைக்குத் தோற்றமளிக்கும் நிகழ்வுகள் தனக்குள் பல ஆன்மீக சிந்தனைகளையும் ஒளித்து வைத்திருக்கின்றன.

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையின் கடைசி நாட்களில் நடந்த நிகழ்வு இது. அடுத்த நாள் அவருக்கு மரணம் பரிசளிக்கப்படப் போகிறது. முந்தைய தினம் அவர் ஒலிவ மலையிலுள்ள, கெத்சமெனே தோட்டத்தில் வலிகளோடு தந்தையை நோக்கி மன்றாடுகிறார். வியர்வை இரத்தத் துளிகளாய் மண்ணில் விழுகிறது.

செபிக்கும் போது வியர்வை வருகின்ற அனுபவமே அரிது ! அந்த சூழலில் இயேசு இரத்ததுளிகளை வியர்வையாய் வடிக்குமளவுக்கு செபிக்கிறார். உள்ளம் உடைய, உள்ளுக்குள் இரத்தம் கசியக் கசிய அவர் நமக்காக வேண்டுகிறார். ஒருவரை அடிக்கும் போதோ, காயப்படுத்தும் போதோ இரத்தம் கசிவது இயல்பு. எதுவும் செய்யாமலேயே செபிக்கையில் இரத்தம் கசிவது இயலாத காரியம். இயேசுவின் வலிகளை, இயேசுவின் அன்பை விளக்கும் செயலாக இது இருக்கிறது.

அதன்பின் இயேசு காட்டிக்கொடுக்கப்படுகிறார். சீடர் வாளை எடுத்து படைவீரர் ஒருவரின் காதைத் துண்டிக்க, அதை இயேசு தொட்டு சுகமாக்குகிறார்.

இந்த நிகழ்வு நமக்கு பல்வேறு சிந்தனைகளைத் தருகிறது.

1. செபம் அவசியம். அந்த இரவில் இயேசு வலிமையான செபத்தில் நிலைத்திருந்தார். சீடர்களோ தூங்கிக் கொண்டிருந்தனர். “என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என இயேசு அவர்களிடம் சொன்னார். செபமே ஒரு சூழலை எதிர்கொள்ளும் வலிமையைத் தரும். செபமே இறைவனின் சித்தம் நம்மில் செயல்பட பாதை அமைக்கும் ! இயேசு தனக்காக செபிக்கச் சொல்லவில்லை, “சோதனைக்கு உட்படாதிருக்க” செபியுங்கள் என்றார். சோதனைகளை எதிர்கொள்ளும் வலிமையை செபம் மட்டுமே தர முடியும்.

சீடர்கள் செபத்தை நிராகரித்தனர். தூக்கத்தை அரவணைத்தனர். அதுவே அவர்களுடைய சிந்தனைகளை சிதறடித்தன. அவர்களை சோதனைக்குள் தள்ளியது. பேதுரு வாளை எடுத்து படைவீரனின் காதை வெட்டுகிறார். வன்முறையின் வழியை நாடுகிறார். செபம் நம்மை இறைவனின் இதயத்தோடு இறுக்கமாக்குகிறது. அப்போது நாம் இறைவன் பார்ப்பது போல பிறரை பார்ப்போம். இறைவனின் பார்வை நம்மிடம் வர செபம் மிக மிக அவசியம். செபத்தை இறுக்கமாய் பற்றிக் கொள்வோம்.

2. அன்றைய தினம் காலையில் தான் இயேசுவின் சீடர்கள் இயேசு சீடர்களிடம் வாள் வைத்துக் கொள்ளச் சொன்னார். அப்போது சீடர்கள், “ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன” என்றார்கள். இயேசு அவர்களிடம், “போதும்” என்றார். இயேசு வாளை வைத்துக் கொள்ளச் சொன்னது தன்னைப் பிடிக்க வருபவர்களை வெட்டி வீழ்த்த அல்ல, தான் இல்லாத சூழலில் சீடர்களின் பாதுகாப்புக்காக. சீடர்களோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. “இயேசு தானே சொன்னார்” என அதை தங்கள் அறிவுக்கு ஏற்ப பயன்படுத்த முயல்கின்றனர்.

நாமும் பல வேளைகளில், விவிலியம் சொல்கின்ற வார்த்தைகளை நமக்கு வசதியான வகையில் பொருள் கொள்கிறோம். இயேசு சொன்னதன் பொருளை அதே போல புரிந்து கொள்ளாமல் நமது சூழலுக்கு ஏற்ப புரிந்து கொள்கிறோம். இதனால் பல சிக்கல்கள் எழுகின்றன. இறைவார்த்தைகள் என்ன சொல்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள செபமும், தூய ஆவியின் தயவும் நமக்கு தேவை. மனதளவில் மிகவும் அன்னியோன்யமான தம்பதியர் மௌனத்தைக் கூட புரிந்து கொள்வார்கள். அதே போல, இறைவனோடு இணைந்து இருக்கும் போது அவர் சொல்லும் வார்த்தைகள் நமக்குப் புரியும்.

3. “ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?” என இயேசுவிடம் கேள்வியைக் கேட்கின்றனர் சீடர்கள். ஆனால் பதில் வரும்வரை காத்திருக்கும் பொறுமை அவர்களிடம் இல்லை. இனியும் காத்திருந்தால் நமக்கு ஆபத்து என அவர்களாகவே முடிவெடுத்து விடுகின்றனர். வாளை எடுத்து வீச ஆரம்பிக்கின்றனர்.

நாமும் பல வேளைகளில் இறைவனிடம் வேண்டுதல் எழுப்புகிறோம். ஆனால் நமது பார்வைக்கு சிக்கலான சூழல், அல்லது இது தான் கடைசி வாய்ப்பு என்பது போன்ற நிலை வரும்போது இறைவனின் பதிலுக்காகக் காத்திருக்காமல் நாமே முடிவுகளை எடுத்து விடுகிறோம். அத்தகைய முடிவுகள் இறைவனுக்கு விருப்பம் இல்லாததாகவே அமைந்து விடுகிறது !

4. சீடர் எதிரியை வாளாள் வெட்டுகிறார். எதிராளி காயமடைகிறார். இப்போது சீடர்களின் சார்பாக நின்ற இயேசு சீடர்களைக் கடிந்து கொள்கிறார். எதிரியின் சார்பாளராக மாறி காயம் பட்ட காதைத் தொட்டு சுகமாக்குகிறார். வலி கொடுப்பவர்களின் பக்கமல்ல, வலி கொள்பவர்களின் பக்கமாகவே இயேசு நிற்கிறார். எதிரிக்கும் அன்பு செய்வது எப்படி என்பதை செயலில் காட்டுகிறார்.

நாம் பிறருக்கு காயம் கொடுப்பவர்களாக மாறும்போது இயேசு நமக்கு எதிரானவராக மாறிவிடுகிறார். எதிரியே ஆனால் கூட அவர்களை அன்பு செய்யும் போது தான் இயேசு நமது பக்கமாய் இருக்கிறார். நமது வாழ்க்கையில் நமது கையிலிருக்கும் வார்த்தை வாள்களையோ, செயல் வாள்களையோ பிறருக்குக் காயம் தரும் வகையில் சுழற்றக் கூடாது என்பதே இயேசு சொல்லும் பாடம்.

5. சீடர்கள் இயேசுவின் மீது கொண்ட அதீத அன்பினால் தான் வாளை எடுத்து போரிடுகின்றனர். ஆனால் அது இறை சித்தத்துக்கு எதிரானதாக மாறிவிட்டது. இயேசு, “வாருங்கள் போரிடுவோம் எதிரி வருகிறான்” என்று சொல்லவில்லை. “எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்” (மார்க் 14:42) என்று சொல்லி தன்னை பலிகொடுக்கத் தயார்படுத்திக் கொண்டார்.

இயேசுவின் மீது அன்பு இருப்பதாய் நினைத்துக் கொண்டு நாம் செய்கின்ற செயல்கள் பல வேளைகளில் அவருக்கு எதிரான செயல்களாகவே மாறிவிடுகின்றன. இன்றைய சூழலில் எழுகின்ற மத விவாதங்கள், கருத்து மோதல்கள், சண்டைகள், வன்முறைகள், வன்மங்கள் எல்லாமே இயேசுவுக்கு எதிரானவை. அத்தகைய செயல்களை நாம் இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்கிறோம், அது தவறு ! அப்படி செய்யக் கூடாது என்பதையே இயேசு தெளிவாய் விளக்குகிறார்.

6. சீடர்களின் மனதில் ஒரு எண்ணம் இருந்தது. இயேசுவைப் பிடிக்க வருகிறார்கள். நம்மிடம் வாள் இருக்கிறது. அவருடைய படைவீரர்களாய் இப்போது நாம் தான் இருக்கிறோம். எனவே இயேசுவைக் காப்பாற்றும் பொறுப்பும் நமக்கு உரியது எனும் சிந்தனை தான் அது. அதனால் தான் அவர்கள் தங்களுடைய வலிமையை முன்னிறுத்தி வாளை வீசுகின்றனர். ஆனால் உண்மையில் நாம் சார்ந்திருக்க வேண்டியது நமது வலிமையை அல்ல இயேசுவின் வலிமையையே !

நாமும் பல வேளைகளில் இயேசுவைக் காப்பாற்ற வேண்டியது நமது பணி போலவும், நமது பலத்தினால் அறிவினால் ஆற்றலினால் தான் இயேசுவை நாம் காப்பாற்ற முடியும் என்பது போலவும் கருதிக் கொள்கிறோம். நாமே கிறிஸ்துவின் பாதுகாவலர்கள் என நினைத்துக் கொள்கிறோம். அது தவறு. இறைவன் நம்மைக் காப்பாற்றுபவர். நாம் அவரது நிழலில், அவரது வழியில், அவரது வார்த்தையில் பயணிக்க வேண்டியர்கள் மட்டுமே.

7. இயேசுவின் மீட்பின் திட்டம் சிலுவையில் உயிர்விடுவதாய் இருந்தது. அதற்காகத் தான் அவர் இந்த பூமிக்கு வருகை தந்தார். அதற்காகவே மூன்று ஆண்டுகாலம் தனது பணியை தீவிரமாய் செய்தார். தான் கையளிக்கப்படப் போவதையும், இறக்கப் போவதையும் சீடர்களிடம் தெளிவாக பல முறை சொல்லவும் செய்தார். அதுவே மீட்பின் பயணம். ஆனால் சீடர்களோ அதைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டனர்.

இயேசுவின் சிந்தனைகளை, இயேசுவின் போதனையை, இயேசுவின் மீட்பின் திட்டத்தை நாம் செயல்படுத்துபவர்களாக இருக்கவேண்டும். அது எப்படி என்பதை இயேசுவின் வார்த்தைகளே நமக்கு விளக்க முடியும். நமது பார்வையில் சரி எனப் படுவது மீட்பின் திட்டத்திற்கு தடையாய் இருக்கக் கூடும் எனும் எச்சரிக்கையே இந்த நிகழ்வு. ‘இது எப்படி சாத்தியம்’ எனும் கேள்விகளை விடுத்து, ‘இயேசு சொன்னால் எதுவும் சாத்தியமே’ என முழுமையாய் நம்புவதே ஆன்மீக வாழ்க்கையை செழுமைப்படுத்தும்.

8. யூதாஸ் இயேசுவை முத்தம் எனும் அன்பின் அடையாளத்தால் காட்டிக் கொடுக்கிறான். அன்பின் அடையாளம், இங்கே மரணத்துக்கான முன்னுரையாய் மாறிவிடுகிறது. அன்பைக் காட்டி, வெறுப்பை வெளிப்படுத்துகிறார் யூதாஸ். வெளிப்படையான செயலோ அன்பின் வடிவம், உள்ளார்ந்த பொருளோ அழிவின் அடையாளம் ! இயேசு அந்த வெளிவேடத்தனத்தை அங்கேயே உடைக்கிறார். “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” எனும் கேள்வியின் வழியாக யூதாசின் உள்ளத்தை வெளிப்படுத்துகிறார்.

நாமும் பல வேளைகளில் இயேசுவின் முன்னால் அன்பின் செயல்களோடும், அன்பின் அடையாளங்களோடும் வருகிறோம். அவை புகழ் பாக்களாகவோ, விவிலிய வார்த்தைகளாகவோ, ஆன்மீக ஆறுதல்களாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உண்மையில் நமது செயல்கள் எல்லாம் பாவத்தின் செயல்களாக இருக்கின்றன. அதாவது இயேசுவை காயப்படுத்தும் செயல்களாக, இயேசுவை நிராகரிக்கும் செயல்களாக, அவரைச் சிலுவையில் அறையும் செயல்களாகவே இருக்கின்றன. அந்தப் பார்வையில் நாம் ஒவ்வொருவரும் யூதாஸைப் போன்ற வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோமா என்பதை சிந்திப்போம்.

9. கடமை செய்ய வருபவர்களை பேதுரு வாளால் தடுத்தார். இயேசுவைக் கைது செய்ய வந்தவர்கள் படை வீரர்கள். அவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கடமையைச் செய்ய வந்தார்கள். ஒருவரைக் கைது செய்யும் உரிமை உடையவர்கள் அவர்கள். பணியைச் செய்ய வருகின்ற மக்களைத் தடைசெய்வது தவறு எனும் பாடத்தையும் இயேசு இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்.

நமது வாழ்வில் நமக்குப் பிடிக்காத பல விஷயங்கள் நடக்கலாம். ஆனால் சட்டப்படி நிகழ்கின்ற செயல்களை, நமது நியாயங்களின் படி எதிர்ப்பது என்பது கடமையை ஆற்றுவதற்கு தடை செய்வது போன்றதே. நிகழ்வுகள் மாற இறைவனிடம் வேண்டுவதே சரியான வழி. எதிர்த்து நின்று பிறருடைய பணியை தடுப்பதல்ல.

10. தன்னைப் பிடிக்க வந்தவருடைய காதை இயேசு தொட்டு சுகமாக்கினார். வாழ்வின் கடைசி கணம் வரை அன்பையும், மன்னிப்பையும், மீட்பின் பயணத்தையும் தளராமல் செய்ய வேண்டும் என்பதையே இயேசு தனது இலட்சியமாகக் கொண்டிருந்தார். சிலுவையில் மரணத்துக்கு முந்திய வினாடியில் கூட எதிரிகளுக்கு எரிச்சலையல்ல, மன்னிப்பையே வழங்கினார். காது துண்டிக்கப்பட்ட மனிதன் இயேசுவின் தொடுதலைப் பெற்றுக் கொண்டான். அவனுடைய வாழ்வில் அவன் இயேசுவின் அன்பை நேரடியாகப் பார்த்து பிரமிக்கும் வாய்ப்பையும் பெற்றான்.

நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது ? பிறருக்கு அன்பையும், மன்னிப்பையும், நன்மையையும் வழங்கக்கூடிய வகையில் இருக்கிறதா ? அல்லது வெறுப்பையும் விரோதத்தையும் பந்திவைக்கும் வகையில் இருக்கிறதா ? என்பதைச் சிந்திக்க வேண்டும். வாழ்க்கை நிகழ்வுகள் எப்படி நம்மைப் புரட்டிப் போட்டாலும் சரி, மன்னிப்பின் நங்கூரத்தை இதயத்தில் ஆழமாய் இறக்குவோம். சோதனை அலைகளில் வாழ்க்கைப் படகு அழிந்து விடாமல் காப்போம்.

*

 

Posted in Articles, Vettimani

கடலும் கடவுளும் !

Image result for sea Jesus

எவையெல்லாம் மனிதனை அச்சுறுத்தியதோ, எவையெல்லாம் மனிதனை பிரமிப்பூட்டியதோ அதையெல்லாம் மனிதன் கடவுளாய் அழைக்கத் துவங்கினான் என்பது மனித வரலாறு. கடலும்அப்படிப்பட்ட ஒரு வியப்புக் குறியீடாக இருந்ததால் தான் கடலைச் சுற்றி பல்வேறு கடவுள்கள் உலா வருகின்றனர்.

கிரேக்க புராணக் கதைகளைப் புரட்டிப் பார்த்தால் ஏகப்பட்ட கடல் தெய்வங்கள் காணக்கிடைக்கின்றன. அவை தான் ஹாலிவுட் திரைப்படங்களின் அனிமேஷன் தினவுக்குத் தீனி இடுகின்றன.கண்முன்னால் மாயக்காட்சிகளை விவரிப்பதும், ஒரு மர்ம உலகத்துக்குள் நம்மை பயணிக்க வைப்பதுமாய் ஒரு கமர்ஷியல் விருந்துக்கு இத்தகைய கதைகள் தான் கிரியா ஊக்கிகளாகின்றன‌.

உதாரணமாக குமுக்வே எனும் ஒரு கடல் தெய்வம் ஒன்றுண்டு. அவருக்கு கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யம் இருக்கிறது. சர்வ வல்லமை பொருந்திய கடவுள் அவர். கடல் மீன்களுக்கு அவர்தான் கட்டளையிடுவார். கடலைத் தொட்டு வேண்டுதல் செய்பவர்களைக் குணமாக்கும் வல்லமை அவருக்கு உண்டு. அவருடைய கோட்டையை கடல் சிங்கங்கள் காவல் புரிகின்றன. அவை கடலுக்குள்கர்ஜித்தபடி  நடமாடித் திரிகின்றன. ஒரு மாபெரும் ஆக்டபஸ் அந்த கோட்டையில் காவல் தலைவனாய் இருக்கிறது.

இப்படி ஒரு காட்சியை வாசிக்கும்போதே ஒரு மிகப்பெரிய மாயாஜால காட்சி மனதில் விரிகிறது அல்லவா ? அதைத் தான் இத்தகைய புனைக் கதைகள் செய்கின்றன. இவற்றில் எதுவும்உண்மையில்லை. இவையெல்லாம் மனிதனின் கற்பனை வீதியில் விளைகின்ற கடவுள்கள் தான். இந்தக் கடவுள்களை விதைப்பதும், விளைவிப்பதும், விற்பதும் மனிதர்களே !

உண்மையில் கடல் என்பது கடவுளின் படைப்பு என்பதையே விவிலியம் விளக்குகிறது. கடவுளின் படைப்பின் ஒரு சிறிய பாகமே கடல் ! “கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்” என்கிறதுசங்கீதம் 95:5. பிரபஞ்சத்தின் பார்வையில் பூமியும் ஒரு துகளே ! அந்தத் துகளின் பாகமான கடல் கடவுள் பார்வையில் அணுவளவே ! கடவுளின் பார்வையில் அணுவளவான விஷயம், மனிதனுடையபார்வையில் பிரமிப்பின் உச்சம் ! இதுவே கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான வித்தியாசம்.

விவிலியம் கடலை பல விதங்களில், பல வகைகளில் பயன்படுத்துகிறது ! கடக்க முடியாத செங்கடலை இறைவன் வற்றச் செய்கிறார் ! யோர்தான் நதி இரண்டாய் பிரிந்து வழிவிடுகிறது ! அலைகின்றகடலை இறைவனின் வார்த்தை அடங்கச் செய்கிறது ! அமைதியான கடலின் முதுகில் இயேசு நடந்து வருகிறார் ! என விவிலியம் கடலையும், கடல் சார்ந்த இடங்களையும் கலந்தே தனது நற்செய்தியைநகர்த்துகிறது.

இயேசுவின் போதனைகள் பெரும்பாலும் கடற்கரையோரங்களில் தான் நடந்தன ! இயேசுவின் சீடர்கள் பெரும்பாலும் மீன்பிடி தொழிலைச் செய்தவர்களே ! இயேசுவின் போதனைகளிலும் கடலும்கடல்சார் பொருட்களும் இடம்பிடிக்கின்றன ! இப்படி எங்கும் கடல் ஒரு குறியீடாக விவிலியம் முழுவதும் தொடர்கிறது.

யோனாவின் வாழ்க்கை கடலோடு கலந்தது ! திசை மாறிப் போன யோனாவை இறைவன் கடல் வழியாகக் கரை சேர்க்கிறார். உலகின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் யோனா பயணித்த மீன் தான் ! மீனைவிழுங்கி வாழ்ந்த மனிதர்களின் காலத்தில் மீன் விழுங்கியதும் யோனாவைத் தான். யோனா வின் கதை நமது பார்வைக்கு ஒரு புனைக்கதை போலத் தோன்றும். இயேசுவே யோனாவை தனதுபோதனையில் சுட்டிக்காட்டியதன் மூலம் அதன் உண்மைத் தன்மையை மீண்டும் ஒரு முறை விவிலியம் உறுதிப்படுத்துகிறது !

ஃபால்க்லாந்த் தீவுப்பகுதியில் 1900களில் ஒரு திமிங்கலம் ஒரு மனிதரை விழுங்கி மூன்று நாட்களுக்குப் பின் கடற்கரையில் விடுவித்த வரலாறு உண்டு. தோலில் மட்டும் காயங்களோடு அவர்உயிர்பிழைத்ததாக வரலாறுகள் குறித்து வைத்துள்ளன !

எது எப்படியோ, கடல் என்பதும் கடற்கரை என்பதும் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடங்கள் என்பதில் சந்தேகமில்லை. சோர்வுகள் சுற்றப்பட்ட நிலையில் கடற்கரையில் வந்தமரும்மனிதர்கள் அதன் பிரம்மாண்டத்திலும், அதன் காற்றிலும் சோகத்தை மணலோடு சேர்ந்து உதறி விடுவது வெகு இயல்பு.

இந்தக் கடலை இறைவனோடு ஒப்பிட்டால் நமக்கு சில ஆன்மீகப் பாடங்கள் கிடைக்கின்றன.

  1. கடலின்ஆழமும், கடவுளின் நேசமும் !

கடற்கரையில் அமர்ந்து கடலின் பிரம்மாண்டத்தை வியக்கும் அனைவரின் மனதிலும் இருக்கின்ற ஒரு கேள்வி, இத்தனை பிரம்மாண்டம் எப்படி இங்கே அமைதியாய் இருக்கிறது என்பது தான். இதன்ஆழம் என்ன என்பதை யாரால் கண்டுபிடிக்க முடியும் ? கடலுக்குள் மூழ்கிப் போன ஒரு கப்பலைக் கண்டுபிடிக்க மனிதர்களுக்கு பல நூற்றாண்டுகள் தேவைப்படுகின்றன. பலகண்டுபிடிக்கப்படாமலேயே போய்விடுகின்றன ! அந்த அளவுக்கு ஆழமானது கடல் !

கடவுளின் அன்பும் அளவிட முடியாத ஆழமானது ! கரங்களுக்குள் அடக்கி விட முடியாத அளவுக்கு நீளமானது ! கண்ணுக்குத் தெரிந்த ஒரு பொருளுடன் ஒப்பிடவேண்டுமெனில் கடவுளின் அன்பை ஒப்பிடகடலை விட அழகான ஒரு பொருள் கிடைப்பதில்லை. கடவுளின் இயல்புகளைப் பற்றிப் பேசும்போது விவிலியம் கடலை இதனால் தான் உதவிக்கு அழைக்கிறது. கடவுளின் எல்லை ஆழ்கடலை விடஅகலமானது (யோபு 11 9 ) என்கிறது விவிலியம். கடவுளுடைய தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை என்கிறது சங்கீதம் !

அன்பு என்பது அமைதியாய் இருக்கும். நமது மனங்களிலும் அத்தகைய ஆழமான ஒரு அன்பு நிலை உருவாக வேண்டும். அந்த அன்பு நீந்த நீந்த தீராததாக, மூழ்க மூழ்க தரையை எட்டாததாக இருக்கவேண்டும்.

  1. அலைகளாய்,செயல்கள்

“கடற்கரையிலேயே இவ்வளவு அலைகள் இருந்தால் கடலுக்கு உள்ளே நடுக்கடலில் ஏகப்பட்ட அலைகள் இருக்கும்   இல்லையா ? ” என அப்பாவின் கையைப் பிடித்து ஒரு முறை கேட்டேன். ‘கரைகள் தான்சலசலக்கும், ஆழ்கடல் அமைதியாய் இருக்கும்’ என்றார். அப்போது அதை என்னால் விளங்கிக் கொள்ளமுடியவில்லை. இப்போது அந்த உண்மை மிக எளிதாய் நமக்கு புரிந்து விடுகிறது.

அன்பின் பிரம்மாண்டம் அமைதியாய் இருக்கிறது. இரக்கத்தின் செயல்கள் அலைகளாய் அலைகின்றன எனலாம். ஆழமான அன்பு கொண்ட கடலில் தான் அலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டேஇருக்கும். ஒரு டம்ளர் நீரில் அலை வருவதில்லை. நீர்த்தேக்கங்களில் மிகச் சிறிய அலைகள் எழும். அன்பின் ஆழம் எங்கே அதிகமாய் இருக்கிறதோ, செயல்களின் வேகமும் அங்கே தான் அதிகமாகஇருக்கும்.

நமது இதயம் அன்பின் கடலாக இருக்கிறதா என்பதை நமது செயல்கள் எனும் அலைகள் எவ்வளவு தொடர்ச்சியாக வீசிக்கொண்டிருக்கின்றன என்பதை வைத்து அறிந்து கொள்ளலாம். அலையடிக்காதகடலாய் நாம் இருந்தால், உடனடியாக நமது இதயத்தின் அன்பை கேள்விக்கு உட்படுத்துவோம். அன்பின் செயல்களை அலைகளால் அறிவிப்போம்.

  1. உப்புக்கரிக்கும்,தப்பை உரைக்கும்

கடல் நீரை அள்ளி கண்களில் தெளித்தால் உறுத்தும் ! நாவில் உப்புக்கரிக்கும். கடலின் அலைகள் சில வேளைகளில் நம்மைப் புரட்டித் தள்ளும். பாய்மரப் பயணங்கள் நம்மை நிலைகுலைய வைக்கும்.கடலுக்குள் பயணிக்கவும், கடவுளுக்குள் பயணிக்கவும் நமக்கு துன்பங்களைச் சகிக்கும் மனநிலை வரவேண்டும். சின்னச் சின்ன அசௌகரியங்களைக் கண்டு பயந்தால் கடல் அலைகளின் அழகைரசிக்க முடியாது. எதிர்பாரா நிகழ்வுகள் வருமோ என அஞ்சினால் கடல்பயணம் கைவராது.

கடலலையில் கால்நனையாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பவர்களின் சகவாசம் மணலோடு முடிந்து போய் விடுகிறது. கிளிஞ்சல்களோடு திருப்திப்படும் வாழ்க்கை அது ! ஆனால் கடலோடுகலக்க தயாரானால் மட்டுமே இனிமைகள் சொந்தமாகும்.

  1. ஆழங்கள்அழகானவை

கடலில் இருக்கின்ற உயிரினங்களின் வகைகளை மனுக்குலம் இதுவரை கண்டுபிடித்து முடிக்கவில்லை. இன்னும் சுமார் 70% கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறது அறிவியல்.இதுவும் ஒரு தோராயக் கணக்கு மட்டுமே. இந்த சதவீதம் 99 விழுக்காடு என்று இருந்தால கூட ஆச்சரியம் இல்லை.

ஆழ்கடலில் மூழ்குபவர்கள் முத்துகளைக் கண்டடைகிறார்கள். புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். யாருக்கும் கிடைக்காத அழகிய புதையல்களை சொந்தமாக்குகின்றார்கள். கடலின் எழிலைவிழிகளுக்கு வழங்குகின்றனர்.

இறை அனுபவமும் அப்படியே. இறை வார்த்தைகளில் மூழ்குபவன் கடல் தரும் வியப்பைப் போல, கடவுள் தரும் வியப்பைக் கண்டு கொள்கிறான். மூச்சடக்கி மூழ்கத் தயாராக இருந்தால், இறைவனதுபிரமிப்பின் அழகைக் கண்டு கொள்ள முடியும்.

  1. தீராதவை!

எத்தனை கோப்பைகளில் அள்ளி அள்ளிக் கரையில் கொட்டினாலும் தீராத ஒன்று கடல் மட்டும் தான். கடவுளின் மன்னிப்பும் அத்தகையதே. நமது பாவங்கள், தவறுகள் கடலில் இருந்து தண்ணீரைஅள்ளி வெளியே கொட்டுகின்றன. ஆனால் கடல் குறைபடுவதில்லை. தண்ணீர் தரமாட்டேன் என தகராறு செய்வதில்லை. வேண்டும் அனைவருக்கும் மன்னிப்பை அளிக்கிறார் இறைவன். முரண்டுபிடிப்பதில்லை.

தீராத அன்பெனும் இறைவனை விடாமல் பற்றிக் கொண்டிருக்கின்றோமா என்பதே கேள்வி. கடல் எனும் கடவுளின் அன்பை, கடல் எனும் கடவுளின் மன்னிப்பை, தன்னை இழந்து மழையாய் பூமியைசிலிர்க்க வைக்கும் நேசத்தை, பொக்கிஷங்களைத் தன்னுள் புதைத்து வைத்து மனிதனை அழைக்கும் மென்மையை நாம் புரிந்து கொள்கிறோமா என்பதே கேள்வி !

கடல் என்பது ஒரு குறியீடு ! இறைவனின் அன்பைப் போல ஈரம் வற்றாத ஒரு இடம். சோகத்தை கரைக்கும் ஒரு இடம். கடலெனும் கடவுளின் அன்பை உணர்வோம், உரைப்போம்.

 

Posted in Articles, Desopakari, Vettimani

காலங்களின் கடவுள் !

Image result for seasons
ஏதாவது ஒரு பொருளை உருவாக்கினால் அதற்கான ‘காப்புரிமையை’ பெறுவது இப்போது நடைமுறையில் இருக்கும் வழக்கம். காலங்களை உருவாக்கிய கடவுள் காலங்களுக்கான காப்புரிமையை வைத்திருக்கிறார். “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல” என்கிறார் இயேசு (திருத்தூதர் பணிகள் 1:7 ). இறைவன் ஒருவரே காலங்களின் அதிபதி ! எனவே தான் அவரை படைப்புகளின் பிதா, காலங்களின் கடவுள், பருவங்களின் பரமன் என்றெல்லாம் அழைக்கலாம் !

“உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்; கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்தலுக்கு ஒரு காலம் …” என பேசுகின்ற சபை உரையாளர் “கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார்” ( சபை உரையாளர் 3 : 1 ..10) என்கிறார்.

பூமி இப்படி இளமையாகவும், வளமையாகவும் இருப்பதற்குக் காரணம் இந்த பருவ மாற்றங்களே என்கிறது விஞ்ஞானம். நமக்காய் இந்த பூமியைப் படைத்த இறைவன் நமது வளமையான வாழ்வுக்காய் பருவங்களைத் தந்திருக்கிறார்.

காலங்கள் ஒன்றை ஒன்றிடமிருந்து பிரிக்கின்றன. இறைவன் ஆதியில் ஒளிப்பிழம்புகளை உருவாக்கி காலங்களை வகைப்படுத்தினார். பிரிவினைகளின் முதல் சுவடு அங்கே வைக்கப்பட்டது. இரவிலிருந்து பகல் பிரிக்கப்பட்டது ! நீரினினின்று நிலம் பிரிக்கப்பட்டது ! காலங்களைப் பிரித்து ஞாலத்தை அழகுபடுத்தினார் இறைவன்.

மனித வாழ்க்கையிலும் பல்வேறு காலங்கள் வந்து செல்கின்றன. சிரிப்பின் வீதிகளில் நடமாடும் காலம், அழுகையின் கரையில் அடைபடும் காலம், உற்சாகத்தின் ஊஞ்சலில் ஆடும் காலம், சோர்வின் படிக்கட்டில் அமரும் காலம் என வாழ்க்கையின் பருவங்கள் அனுபவங்களை அள்ளித் தருகின்றன.

இறைவன் படைத்த இந்த உலகில் நான்கு பருவங்கள் பொதுவானவையாக இருக்கின்றன. வசந்த காலம், இலையுதிர் காலம், வேனிற் காலம், குளிர் காலம் என இந்த‌ நான்கு காலங்களைச் சொல்லலாம். நிலப்பரப்புக்கு ஏற்ப இந்த காலங்களில் மாற்றங்கள் நேர்வதுண்டு. எனினும் பொதுவானவையாய் இருப்பவை இந்த நான்கு பருவ காலங்களே !

மனித வாழ்க்கையையும் ஆன்மீக வெளிச்சத்தில் இந்த நான்கு பருவங்களுக்குள் அடக்கி விடலாம். மழலைக்காலம் எனும் வசந்த காலம், பதின்வயதுக் காலம் எனும் இலையுதிர் காலம், இளமைக்காலம் எனும் வேனிற்காலம், முதுமைக்காலம் எனும் குளிர்காலம் !  அதெப்படி ?

  1. வசந்த காலம் !

வசந்த காலம் என்பது மகிழ்ச்சியின் காலம். துயரங்களைப் பற்றிய சிந்தனையின்றி மரங்கள் வண்ண ஆடை உடுத்தி, கிளையசைத்து, இலை சிரிக்க நம்மை வரவேற்கும் கால்ம். உற்சாகத்துக்குப் பஞ்சம் இல்லாத காலம் இது !

நமது மழலைக்காலம் இந்த வசந்த காலம் போன்றது. கவலைன்னா என்ன என்று கேட்கின்ற காலம். இருப்பதைக் கொண்டு இன்புற்று வாழும் காலம். இறைவனின் ஆசீரை நிறைவாகப் பெற்று களித்திருக்கும் காலம். பெற்றோரின் விரல்பிடித்து நடந்து, எந்த பிரச்சினைகளும் இல்லாலம் திரிகின்ற காலம்.

ஆன்மீக வாழ்க்கையில் இறைவனை அறிகின்ற காலம் இது ! இறைவனிடம் வருகையில் கிடைக்கின்ற உற்சாகமும், புளகாங்கிதமும் அளவிட முடியாதது. தந்தையின் விரல்பிடித்து திருவிழாவில் பலூன் பொறுக்கும் குழந்தையின் பரவசம் இந்த காலத்தின் அற்புதம். இந்தக் காலம் இப்படியே நீடிக்காதா என மனம் ஏங்கும் ! ஆன்மீகத்தின் ஆரம்ப காலம் ! ஆனந்தத்தின் அற்புத காலம்.

  1. இலையுதிர் காலம் !

இலையுதிர்க்காலம் புதுப்பிறப்பின் காலம். தலைகளில் இருக்கும் இலைகளை உதிர்த்து விட்டு மரங்கள் நிராயுதபாணியாய் நிற்கும் காலம். இன்னொரு வசந்த முளைக்காகக் கிளைகள் காத்திருக்கும் காலம். உதிர்தல் இல்லாமல் முளைத்தல் இல்லை. இழத்தல் இல்லாமல் பெறுதல் இல்லை. தியாகம் இல்லாமல் மேன்மை இல்லை !

ஆன்மீகப் பயணத்தின் இரண்டாம் பிறப்பு இலையுதிர்காலம். நம்மிடம் இருக்கின்ற பாவத்தின் களைகளை உதிர்க்கும் காலம். நம்மைச் சுற்றியிருக்கும் தீமையின் துருக்களை உதறும் காலம். மறுபிறப்பின் முன்னுரை இந்தக் காலத்தில் தான் எழுதப்படுகிறது. பதின்வயதுகளில் ஒருவன் புதுப்பிறப்பெடுத்தால் அவனுக்குள் ஆன்மீகத்தின் அடைமழை நிச்சயம் பொழியும்.

உள்ளே இருக்கின்ற அழுக்குத் தண்ணீரை அகற்றாமல், பாத்திரத்தை மீண்டும் கழுவாமல், நல்ல நீரை நிரப்புதல் சாத்தியமில்லை. பழைய மனிதனின் மரணமே புதிய மனிதனின் ஜனனம். ஆன்மீகத்தின் வளர்நிலைக் காலம் என்பது இலையுதிர்க்காலமே ! இலைகளை உதிர்க்காமல் இருக்கின்ற மரங்கள் வசந்தத்தை வரவேற்பதில்லை !

  1. வேனிற்காலம்.

வேனிற்காலம் வியர்வையின் காலம். உடலின் உறுதியை எல்லாம் சூரியன் வந்து உறிஞ்சிச் செல்லும் காலம். நிழல் கிடைத்தால் நிற்கலாமே என கால்கள் ஏங்கும் காலம். இந்தக் காலத்தில் நமக்கு அதிக சக்தி தேவைப்படும். இந்தக் காலத்தில் தான் வேலைகள் அதீத வேகத்தில் நடக்கும். உலகமே சுறுசுறுப்பாய் இயங்கும் ! பணியே இங்கே பிரதானமாகும்.

ஆன்மீக வாழ்க்கையின் வீரிய காலம். வசந்தத்தின் இனிமையை ரசித்து, பாவத்தின் துருக்களை அகற்றி புதிய மனிதனானபின் வேனிற்காலத்தில் பயணிக்க வேண்டும். பாவம் களைந்த மனிதனே பாவமில்லாத இறைவனைப் பறைசாற்ற முடியும். தனது கர்வத்தின் இலைகளை உதிர்த்த மனிதன் மட்டுமே பணிவின் பாதையில் நடக்க முடியும்.

இந்த வேனிற்காலம் சோர்வுகளைக் கொண்டுவரும். அசதியைக் கொண்டு வரும். நிழல்வேண்டுமென ஏக்கம் கொள்ளும் பாதங்களைக் கொண்டு வரும். எனினும் இந்தக் காலமே நீளமான பகலின் காலம். ஒளியின்றி வழியைப் பற்றிப் போதித்தல் இயலாது ! இது கனிகொடுக்கும் காலம். ஒளிச்சேர்க்கையின் காலம்.

நமது ஆன்மீக வாழ்க்கையில் எந்த அளவுக்கு இந்த வேனிற்காலத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதைக் கொண்டே நமது ஆன்மீக வாழ்வின் ஆழம் அளவிடப்படும்.

  1. பனிக்காலம்

பனிக்காலம், தனிக்காலம் ! சோர்வின் காலம். வெளியே சென்றால் குளிர் வாட்டியெடுக்கும். சன்னலின் கம்பிகள் வழியே பனிக்காற்று கோலியாத்தின் வாளைப் போல மூர்க்கமாய் மிரட்டும். காதுகளின் கதவுகளை குளிர்க்குத்தீட்டிகள் கூர்மையாய் விரட்டும். பெரிதாக எதையும் செய்ய முடியாத சோர்வின் காலம்.

இது முதுமையின் காலம் எனலாம். போர்வைக்குள் கதகதப்பைத் தேடும் காலம். ஒரு தேனீர் குடித்து, காலத்தை நினைவுகளின் தேர்களில் ஏறிக் கடக்கும் பருவம் இது. மேலை நாடுகளில் வெண் பனியின் யுத்தம் நடக்கும் காலம் இது. சாலைகளை பனிக்கரடி கட்டிப்பிடித்துப் படுத்திருப்பது போல எங்கும் பனிக் குன்றுகளே கண்சிமிட்டும்.

ஆன்மீகப் பயணத்தின் கடைசிக் காலம். வாழ்க்கையின் முதுமைப் பயணம். இறைவனின் அன்பின் அரவணைப்புக்குள் அமைதியாய் இருந்திடவே மனம் துடிக்கும். அந்த கதகதப்பு உணர்வுகளில் உயிரைக் காத்துக் கொள்ளும் காலம். வேனிற்காலத்தில் தேவையானவற்றைச் சேமிக்கும் எறும்புகள் பனிக்காலத்தில் பதட்டப்படாது. அது போல, ஆன்மீக வேனிற்காலத்தில் இறைவனின் பிரியத்துக்குரிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள் பரமன் தரும் பனிக்காலத்தில் பதற மாட்டார்கள். அவரது அன்புக்குள் அமைதியாய் இருப்பார்கள்.

இறைவன் நமக்குத் தந்திருக்கும் இயற்கையின் பருவங்கள் நமது வாழ்க்கையை வளமாக்குகின்றன.

ஆன்மீகத்தில் நாம் பயணிக்கும் பருவங்கள் நமது வாழ்க்கையை  அழகாக்குகின்றன.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

*

Posted in Articles, Sunday School

Skit : நல்ல குடும்பம்

Image result for catholic father

காட்சி 1

( மகன் ஒரு செல்போன் வைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அப்பா வருகிறார் . சின்ன மகள் கூட வருகிறாள்.)

அப்பா : டேய்… அஜீஷ்

மகன் : ( அமைதியாக போனை நோண்டுகிறான் )

அப்பா : டேய் .. உன்னை தான் கூப்பிடறேன்.. காது கேக்கல..

மகன் : ஆங்… என்னப்பா… கூப்டீங்களா ?

அப்பா : நாலு மணி நேரமா கூப்பிடறேன்.. இப்போ கேக்கறே…

மகன் : சொல்லுங்கப்பா.. என்ன விஷயம். ( சொல்லிக் கொண்டே போனை பார்க்கிறான் )

அப்பா : டேய்… மேல்புறம் முனியாண்டி ஆஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்கானாம் போய் பாத்துட்டு வா…

மகன் : ( போனைப் பார்த்தபடி சிரிக்கிறான் )

அப்பா : டேய்… என்னடா.. ஒருத்தனுக்கு சீரியஸ்ன்னு சொல்றேன்.. சிரிச்சிட்டு நிக்கிறே…

மகன் : ( சட்டென நிமிர்ந்து ) என்னப்பா… சாரி… வாட்ஸப் ல ஒரு ஜோக்கு..

அப்பா : ஆமா.. எப்ப பாரு வாச்ச பாரு கிளாக்க பாருன்னு கெடக்க வேண்டியது… போவியா மாட்டியா ?

மகன் : எங்கேப்பா ?

அப்பா : போச்சுடா.. மறுபடியும்… முதல்ல இருந்தா… ( தலையில கையை வைக்கிறார் )

மகன் : சாரிப்பா.. செம ஜோக்.. சொல்லவா ?

அப்பா : டேய்.. லூசாடா நீ.. போய் ஆஸ்பிடல்ல போய் அவரை பாரு

மகன் : ஐயோ..ஹாஸ்பிடலா.. என்னப்பா ஆச்சு யாருக்கு ?

அப்பா : ஆங்.. அதெல்லாம் வாட்சப்ல வரலையா ? மேல்புறம் முனியாண்டிக்குடா…

மகன் : ஐயோ.. அவரா… என்னாச்சுப்பா..

அப்பா : அதெல்லாம் நீ போய் பாத்து தெரிஞ்சுட்டு வா…

மகன் : நானா.. ஐயோ.. எனக்கு வேலை இருக்கு போக முடியாது.

அப்பா : ஆமா வேல .. வெட்டி முறிக்கிற வேல.. போடே…

மகன் : அதெல்லாம் முடியாது.. நீங்க வேணும்ன்னா போங்க…

அப்பா : இந்த எழவெடுத்துப் போன வாச்சப்பை பாத்து சிரிச்சிட்டு திரியற… ஒருத்தரு ஆஸ்பிட்டல்ல கிடக்கிறாரு போய் பாக்க மாட்டியா ?

மகன் : அதெல்லாம் உங்க வேலை.. ஐம் பிஸி… கொஞ்சம் செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் போட வேண்டி இருக்கு.

அப்பா : எப்ப்டி இந்த வானத்த பாத்து பல்ல காட்டறதா.. பல்ல உடைப்பேன் போ… போய் அவரை பாத்துட்டு வா…

மகன் : உங்களுக்கு சொன்னாலும் புரியாது.. வயசாச்சுல்ல.. நான் போக மாட்டேன்…

அப்பா : ஒரு பேச்சு கேக்க மாட்டேங்கறான்… இந்த பயலை வெச்சுட்டு நான் என்னத்த பண்றது.

காட்சி 2

( அப்பாவும் அம்மாவும் பேசுகிறார்கள்.. அப்போதும் மகள் அருகில் இருக்கிறாள் )

அப்பா : என்ன பையனை பெத்து வெச்சிருக்கே… ஒரு வேலை சொன்னா கேக்க மாட்டேங்கிறான். ஒழுங்கா படிக்கிறதும் இல்லை. எப்பவும் ஒரு போனை வெச்சுட்டு சொறிஞ்சிட்டு திரியிறான்.

அம்மா : அதை அவன்கிட்டே கேளுங்க.. என் கிட்டே ஏன் சொல்றீங்க ? நான் சொல்றதை ஏதாச்சும் கேக்கறானா என்ன ?

அப்பா : அந்த போன்ல அப்படி என்னதான் இருக்குதோ என்னவோ ? ராத்திரி பகலா அந்த போனையே பாத்துட்டு கிடக்கிறான். பாதி ராத்திரியிலயும் அத பாத்து சிரிக்கிறான்.

அம்மா : பையனை ஒழுங்கா வளக்க தெரியணும்.. உங்களுக்கு அதெல்லாம் தெரியுமா என்ன ?

அப்பா : கழுத.. என்னையே எதுத்து பேசறியா ?

அம்மா : ஆமா.. இவரு பெரிய சனாதிபதி.. எதுத்து பேச கூடாதாக்கும்.

அப்பா : வரவர வாய் நீளுது… என் கை நீண்டா சரியா இருக்கும் ( கை ஓங்குகிறார் )

அம்மா : ஆமா. என் கை என்ன புளியங்கா பறிக்கவா போவும்…

அப்பா : ஒரு சவுட்டு தந்தா.. அப்பனுக்க வீட்ல போய் விழுவே.. பாத்துக்க…

அம்மா : ஆமா.. இதுக்கு தான் காலைல டெய்லி சர்ச்சுக்கு போறீங்களாக்கும்… இது தான் சொல்லி தராங்களா ?

அப்பா : அது வேற.. இது வேற…

அம்மா : அதென்ன வேற வேற ?

அப்பா : கடவுளையும், கழுதையையும் ஒப்பிட்டு பேசாதே ( கோயிலையும், மனைவியையும் காட்டுகிறார் )

அம்மா : கடவுள் கூட கழுதையில போனவர் தானே…

அப்பா : ஓ… பெரிய அறிவாளி.. பைபிளைப் பத்தி பேசறாரு…

அம்மா : பைபிளைப் பற்றி அறிவாளி தான் பேசணுமா ? இடையர்கள் தானே கடவுளை முதல்ல பாத்தாங்க… அறிவாளிகளா பாத்தாங்க ? அவங்க பைபிளை நோண்டி இயேசு எங்கே பிறப்பாருன்னு தேடிட்டு தானே இருந்தாங்க.

அப்பா : பையனை ஒழுங்கா வளக்க தெரியல… ஆனா பைபிளை மட்டும் தெரிஞ்சு வெச்சிருக்கே..

அம்மா : ஜோசப் மாதிரி ஒரு அப்பனா நீங்க இருங்க முதல்ல… பையன் நல்லா வருவான்.

அப்பா : யப்பா.. நல்ல வேளை இயேசு கல்யாணம் பண்ணல ! தப்பிச்சாரு…

அம்மா : தேவையில்லாம் இயேசுவைப் பத்தி அதுவும் இதுவும் பேசாதீங்க. அது பாவம். மன்னிப்பு கேட்டுக்கோங்க.

அப்பா : அதெல்லாம் நான் கடவுள் கிட்டே தனியே கேட்டுக்கறேன்… நீ உன் வேலைய பாத்துட்டு போ..

( குழந்தை இருவரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே நிற்கிறது )

காட்சி 3

( பங்குத்தந்தை வீட்டுக்கு வருகிறார், வீட்டில் அப்பா, அம்மா, மகன், மகள் )

அப்பா : வாங்க ஃபாதர்… வணக்கம்

ப.த : வணக்கம்.. நல்லா இருக்கீங்களா

அப்பா : நல்லா இருக்கோம் ஃபாதர்.

ப.த : நல்லா இருக்கியா பாப்பா..

மகள் : நல்லா இருக்கேன் பாதர்..

ப.த : எத்தனாம் கிளாஸ் படிக்கிறே ?

மகள் : ஐஞ்சாங் கிளாஸ் பாதர்.

ப.த : நீ ரொம்ப அமைதியான பொண்ணா இருப்பே போல இருக்கு ?

மகள் : ஆமா ஃபாதர்.. நான் அமைதி தான். மத்தவங்க தான் சவுண்ட் பார்ட்டிங்க..

ப.த : அப்படின்னா ?

மகன் : (குறுக்கிட்டு ) சின்ன பொண்ணுல்ல.. அதான் அப்படி சொல்றா.

ப.த : சரி.. நான் ஹவுஸ் விசிட் போயிட்டிருக்கேன். இந்த வாரம் நம்ம அன்பியம்.

அம்மா : தெரியும் பாதர். வாங்க உக்காருங்க.

அப்பா : டேய் ( மகனைப் பாத்து ) ஃபாதருக்கு கொஞ்சம் தண்ணி கொண்டு குடு.

மகன் : இதோ வந்துட்டேன்பா.. உடனே.. ( கொண்டு வந்து கொடுக்கிறான் )

ப.த : தேங்க்ஸ்.. நாம ஒரு பைபிள் வசனம் வாசிச்சு செபம் பண்ணுவோம் சரியா ?

அம்மா : சரி பாதர். ( அப்பாவைப் பாத்து.. ) பைபிளும் பாட்டு புக்கும் எடுக்கவா ?

அப்பா : நீ உக்காரு.. நான் போய் எடுத்துட்டு வரேன்.

மகன் : நீங்க உக்காருங்கப்பா.. நான் போய் எடுத்துட்டு வரேன்..

ப.த : நீங்க பங்குல அதிக ஈடுபாடு உள்ள ஒரு குடும்பம். அன்பியத்திலயும், திருச்சபை பங்களிப்புகளிலயும் நீங்க பெஸ்ட்..

அப்பா : கடவுளுக்காக எதையும் செய்யணும் இல்லையா பாதர்.

ப.த : வீட்ல கூட நீங்க ரொம்ப அன்பா, அன்யோன்யமா இருக்கிறதைப் பார்க்க சந்தோடமா இருக்கு

( சின்னப் பெண் எல்லாரையும் மாறி மாறி பார்க்கிறாள் )

அம்மா : நன்றி பாதர். பையனும் சரி பொண்ணும் சரி.. சொன்ன சொல்ல தட்ட மாட்டாங்க. அவரு பின்னே எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்வாரு. என்னை ஒரு வேலை செய்ய விடமாட்டாரு.

மகன் : நமக்காக எல்லாத்தையும் பண்ணின பெற்றோர் இல்லையா பாதர். அவங்களுக்காக நாம இதெல்லாம் பண்ணணும்ல. “உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட” ந்னு விடுதலைப்பயணம் சொல்லுதில்லையா ?

ப.த : நல்ல பையன் தம்பி நீ ! பைபிள் வசனம் எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கே ! கடவுளுக்கு நன்றி.

அம்மா : அவன் டெய்லி பைபிள் படிக்கிற பழக்கம் உண்டு. நானும் அவரும் ( கணவனைக் காட்டி ) பேசிக்கும்போ கூட பைபிள் வசனம் வெச்சு தான் பேசிப்போம்…

அப்பா : ஹி..ஹி.. ஆமா ஆமா !

ப.த : ரொம்ப மகிழ்ச்சி. பைபிளை எடுங்க… பிலிப்பியர் 4:5 முதல் 7 வரை படிங்க..

அப்பா :

“5கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். 6எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். 7அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.”

ப.த : இப்படி தான் நம்ம வாழ்க்கையில எதுக்காகவும் கவலைப்படாமல், கடவுளுக்கு எப்போதும் நன்றி சொல்லி அவரிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். சரியா. ( செபம் செய்கிறார் )

ப.த : சரி.. நான் கிளம்பறேன்.

சிறுமி : ஃபாதர் .. கொஞ்ச நாள் எங்க வீட்லயே தங்குங்க பாதர்.

ப.த : ஏம்மா… என்னை அவ்வளவு புடிச்சு போச்சா

சிறுமி : அப்படியில்ல பாதர்.

ப.த : ( சோகமாக ) ஓ.. அப்போ என்ன விஷயம் ? ஏதாச்சும் ஸ்பெஷலா சமைச்சு தர போறியா ?

சிறுமி : நோ.. நோ…

ப.தந்தை : அட அதுவும் இல்லையா ? அப்போ ஏன் நான் தங்கணும் ?

சிறுமி : நீங்க இங்கே தங்கியிருந்தா வீடு ரொம்ப சந்தோசமா இருக்கு பாதர்.

ப.தந்தை : அப்படின்னா ?

சிறுமி : அம்மா அப்பா பாசமா இருக்காங்க, அண்ணன் ரொம்ப நல்லவனா இருக்காங்க… எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு.. பிளீஸ் தங்குங்க பாதர்.

ப.த : ( எல்லோரையும் பார்க்க, எல்லோரும் தலையைக் குனிகிறார்கள் )… பாருங்க.. ஒரு குடும்பம்ங்கறது போலித்தனமா இருக்கிறது இல்லை. உண்மையான அன்போட இருக்கிறது. நாம வீட்ல எப்படி நடந்துக்கறோங்கறதை பாத்து தான் குழந்தைங்க வளரும். நாம என்ன பண்றோமோ அதைத் தான் அவங்க கத்துப்பாங்க. அதுக்கும் மேல, நாம கடவுளோட பார்வையில இருந்து எதையும் மறைக்கவே முடியாது. அவருக்குத் தெரியாம நாம எதையுமே பண்ண முடியாது. கடவுள் வந்த வீட்டில சந்தோசம் நிரம்பி இருக்கணும். அப்படி இல்லேன்னா அந்த வீட்ல கடவுள் இல்லேன்னு அர்த்தம். அதனால நீங்க வீட்ல பாதரை வரவேற்கிறது முக்கியம் இல்லை, கடவுளை வரவேற்கிறது தான் முக்கியம்.

அப்பா : உண்மை தான் பாதர். நீங்க சொன்னது ரொம்ப சரி. எங்க சின்ன பொண்ணு என்னோட கண்ணைத் தொறந்துட்டா.

ப.த : இப்படி சொல்லிட்ட நான் போனப்புறம், “ஏண்டி இப்படியெல்லாம் சொன்னே” ந்னு பிள்ளையைப் போட்டு அடிக்கக்கூடாது.

அம்மா : நோ..நோ.. நிச்சயமா இல்ல ஃபாதர். இயேசு குழந்தைகள் கிட்டேயிருந்து கத்துக்கோங்கன்னு சொல்லியிருக்காரு. அது என்னன்னு இன்னிக்கு தான் பாதர் புரியுது !

ப.த. : ரொம்ப மகிழ்ச்சிம்மா… நீங்க எல்லாரும் தவறை உணர்ந்து அதை திருத்த முயற்சிக்கிறது தான் நல்ல குடும்பம் அமையப் போகுகுதுங்கறதுக்கு அத்தாட்சி. மகிழ்ச்சிங்கறது பணத்துலயோ, வசதியிலயோ, இல்லை. நல்ல அன்பான உறவுகள்ல தான் இருக்கு. அதனால அன்பா இருங்க, குடும்பம் ஒரு குட்டித் திருச்சபையாகும்.
சரியா..

அண்ணா : சரி.. பாதர். நன்றி

*