Posted in Bible Feasts

விவிலிய விழாக்கள் 7 கூடாரப் பெருவிழா

Image result for feast of tabernacle

இறைவன் இஸ்ரயேல் மக்களிடம் பின்பற்றுமாறு சொன்ன மாபெரும் விழாக்கள் ஏழு. அந்த ஏழு விழாக்களின் கடைசி விழா இந்த கூடாரப்பெருவிழா. இது இஸ்ரயேலர்களின் ஏழாம் மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாளில் தொடங்கி ஏழு நாட்கள் கொண்டாடப்படும் .

“விழாவின் முதல் நாள் ‘திருப்பேரவை கூடும் நாள்’. அந்த நாளில் எந்த வேலையும் செய்யாமல் எல்லோரும் ஓய்வாய் இருக்கவேண்டும். எட்டாம் நாள் மீண்டும் திருப்பேரவை கூடும் நாள் ! அது நிறைவு நாள். அந்த எட்டு நாட்களும் தவறாமல் கடவுளுக்குநெருப்புப் பலி செலுத்த வேண்டும். அந்த ஏழு நாட்களும் இஸ்ரவேல் மக்கள் கூடாரங்களில் குடியிருக்க வேண்டும். “ என்பதே இறைவன் கொடுத்த கட்டளையின் சுருக்கம்.

எகிப்தில் அடிமையாய் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் அந்த நாட்டை விட்டு கடவுளின் அருளால், மோசேயின் தலைமையில்வெளியேறியபின் கூடாரங்களில் குடியிருந்தார்கள். அந்த நினைவை புதுப்பித்துக் கொள்ளும் விதமாக இந்த விழாநாட்களில் இஸ்ரயேலர்கள் அனைவரும் கூடாரங்களில் குடியிருந்தார்கள்.

சாலமோன் மன்னனும் இந்த பண்டிகையைத் தவறாமல் கொண்டாடினார் என்கிறது 2 குறிப்பேடு 8:13. “ஆண்டுதோறும் வரும் புளியாத அப்பத் திருவிழா, வாரங்களின் திருவிழா, கூடாரத் திருவிழா ஆகிய மூன்றுவிழாக்களிலும், அந்தந்த நாளுக்குரிய பலிகளைச் செலுத்தினார்” என விவிலியம் விளக்குகிறது.

இறைவன் காட்டிய பேரன்பை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் மிகப்பெரிய பணியை இத்தகையவிழாக்கள் செய்கின்றன. குறிப்பாக தகவல்தொழில்நுட்பங்கள் வலுவாக இல்லாத பண்டைய காலங்களில் இத்தகைய செய்திகளைநினைவுகூர விழாக்களே அடிப்படைக் காரணிகளாக இருந்தன.

பாலை நிலத்தில் அலைந்து திரிந்த நாற்பது வருடங்களும் இறைவன் அவர்களை பல அதிசயங்கள் மூலம் ஆசீர்வதித்துவழிநடத்தினார். அவர்கள் உண்ண தினமும் வானிலிருந்து மன்னா எனும் உணவு வழங்கினார். இஸ்ரயேலர் கூட்டம் , பெண்கள்குழந்தைகள் உட்பட, மொத்தமாக 20 இலட்சம் பேர் இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அப்படிப்பார்த்தால் தினமும் மூன்று வேளை சாப்பிட அவர்களுக்குத் தேவையான பல இ லட்சம் மன்னா தேவைப்பட்டிருக்கும். அப்படியே நாற்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக சாப்பிட எவ்வளவு தேவைப்பட்டிருக்கும் ? இவை கடவுளின் மிகப்பெரிய அற்புதமன்றிவேறு எந்த விதமாகவும் நடந்திருக்க சாத்தியமே இல்லாத ஒன்று !

அதே போல அவர்கள் இறைச்சி வேண்டும் என கேட்டபோது இறைவன் பறவைகளை அவர்களுடைய கூடாரங்கள் அருகேவிழவைத்தார். அத்தனை கூட்டம் கூட்டமான பறவைகள் வந்து விழுவது இறைவனின் அதிசயச் செயல் அன்றி வேறில்லை. தாகம்எடுத்த போது மோசே பாறையில் அடித்தார். தண்ணீர் பாய்ந்தோடியது. இத்தனை இலட்சம் பேர் குடிக்க வேண்டுமெனில் தண்ணீர்ஒரு ஆறு போல பாய்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் இத்தனை மக்கள் பேரணியாகச் சென்றாலே பலப் பல கிலோமீட்டர் நீளமாய்அந்த பேரணி இருந்திருக்கும்

இப்படி இறைவன் செய்த அதிசயங்களை நினைவு கூரும் விதமாகக் கொண்டாடப்படுவது தான் கூடாரப் பெருவிழா. இந்தநாட்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது இறைவன் இவர்களுக்குக் கொடுத்த ஒரு கட்டளை ! இந்த விழாவைக்கொண்டாடாதவர்கள் அழிவுக்குள்ளாவார்கள் என செக்கரியா 14ம் அதிகாரம், அன்றைய மக்களை எச்சரித்தது.

புதிய ஏற்பாட்டில் இந்த விழா இயேசுவின் இரண்டாம் வருகை தரப்போகும் ஆயிரம் ஆண்டைய அரசாட்சியை குறிப்பால்உணர்த்துகிறது. பாவம் எனும் பாலை நிலத்தில் இத்தனை ஆண்டுகள் அலைந்து திரிந்த நாம், இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுஅவரது அன்பில் இணைகிறோம். இதுவே புதிய ஏற்பாட்டு சிந்தனை.

இறைமகன் இயேசுவும் தான் மனிதனாக வாழ்ந்த காலத்தில் இந்த விழாவைக் கொண்டாடினார். இந்த விழாவில் வெளிச்சமும், தண்ணீரும் குறியீடுகளாக உள்ளன. அதை வெளிப்படுத்தும் விதமாகத் தான் இயேசு, விழாக்காலத்தில் ஆலய பகுதியில் நின்றுகொண்டு, ““யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவதுபோல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என அறைகூவல் விடுத்தார்.

இந்த காலத்தில் கூடாரவிழாவானது புதிய அர்த்தத்தை நமக்குத் தருகிறது. முதலில் இது இயேசுவின் இரண்டாம் வருகையையும், அவர் நம்மோடு ஆளப்போகின்ற ஆயிரம் ஆண்டு ஆட்சியையும் குறிப்பிடுகிறது. அவர் நம்மோடு கூடாரமடித்து தங்குவார் எனும்நம்பிக்கை விழாவாக இது அமைகிறது. இன்னொன்று, ‘வார்த்தையான இறைவன் நம்மிடையே குடிகொண்டார்” எனும் முதல்வருகையின் நினைவு கூர்தலாகவும் அமைகிறது.

இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக, நமது பாவங்களை விட்டு விலகி அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அவரால் நிராகரிக்கப்படுபவர்களாக இல்லாமல், வரவேற்கப்படுபவர்களாக இருக்க முயற்சிகள்மேற்கொள்ள வேண்டும். இதையே இந்த விழா நமக்கு எடுத்துச் சொல்கிறது.

Posted in Bible Feasts

விவிலிய விழாக்கள் 6. பாவக்கழுவாய் பண்டிகை !

Image result for day of atonement feast

மக்களுடைய பாவங்களுக்கு பரிகாரம் செலுத்துகின்ற விழா தான் பாவக் கழுவாய் விழா என என அழைக்கப்படுகிறது.

” ஆண்டவர் மோசேயிடம் ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். அந்த நாளை ஓய்வு நாளாய் அனுசரிக்க வேண்டும்.” என கட்டளை கொடுத்தார்.

அது மிகவும் முக்கியமான நாளாகக் கொண்டாடப்பட்டது. அந்த பலியில் பங்கு பெறாதவர்கள் அழிக்கப்படுவார்கள். உயிர் வாழவேண்டுமென்றால் அந்த பண்டிகையைக் கடைபிடித்தே ஆகவேண்டும் எனுமளவுக்கு அந்த விழா கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.

கடவுளின் ஆலயத்தில் தூயகம் அதாவது மகா பரிசுத்த ஸ்தலம் ஒன்று உண்டு. அங்கே யாரும் நுழைய முடியாது. தூயகத்துக்கு முன்னால் ஒரு தொங்கு திரை இருக்கும். அதைத் தாண்டி யாராவது நுழைந்தால் கடவுளால் அவர்கள் கொல்லப்படுவார்கள்.

அந்த நாளில் மோசேயின் சகோதரர் ஆரோன் தான் பலி செலுத்தும் அனுமதி பெற்ற குருவாக இருந்தார். அவர் அந்த தூயகத்துக்கு நுழையும் முன் இரண்டு பலிகளைச் செலுத்த வேண்டும்.

நன்றாகக் குளித்து சுத்தமானபின், நார்ப்பட்டினாலான ஆடைகளைத் உடுத்த வேண்டும். கச்சை, தலைப்பாகை போன்றவற்றை அணிய வேண்டும். முதலில் அவர் ஒரு காளையைப் பலியிட்டு தனக்கும், தன் குடும்பத்துக்கும் இருக்கும் பாவக் கறைகளை நீக்க வேண்டும்.

அதன்பின் இரண்டு வெள்ளாட்டுக் கிடாக்களைக் கொண்டு வருவார். அதில் ஒரு ஆடு பலியாகப் போகும் ஆடு. இன்னொன்று போக்கு ஆடாக அனுப்பப்படப் போகும் ஆடு.

பலி கொடுக்கப்படுவதெற்கென தெரிந்து கொள்ளப்பட்ட ஆட்டை முதலில் ஆரோன் அடிப்பார். அந்த இரத்தத்துடன் தான் தூயகத்தில் தொங்கு திரையைத் தாண்டி அவர் நுழைய முடியும். அவர் ஒற்றை ஆளாக தனியாக தூயகத்தில் நுழைந்து சடங்குகளைச் செய்வார். அப்போது அந்த சந்திப்புக் கூடாரத்திலேயே யாரும் இருக்கக் கூடாது.

பின்னர் இரண்டாவது ஆடு கொண்டு வரப்படும். அதன் மீது ஆரோன் கைகளை வைப்பார். இஸ்ரேல் மக்கள் செய்த அத்தனை பாவங்களையும் அதன் மேல் சுமத்துவார். அந்த ஆட்டை ஒருவர் கொண்டு சென்று பாலை நிலத்தில் அலைய விடுவார். பின் அவர் குளித்து தூய்மையானபின் ஊருக்குள் வருவார்.

அன்றைய தினம் முழுவதும் மக்கள் நோன்பிருந்து தங்கள் பாவங்களையெல்லாம் கடவுளிடம் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்பார்கள்.

இதுவே அன்றைய காலத்தில் கொண்டாடப்பட்ட பாவக் கழுவாய் சடங்கு விழா. விவிலியத்தில் கொண்டாடப்படும் விழாக்கள் குறியீடுகளே. அவற்றுக்கான உண்மையான பொருள் மறைவாய் இருக்கும்.

இதுவும் இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிப்பிடுகின்ற ஒரு விழா. பலியாகும் ஆடு, இறைமகன் இயேசு. அவர் கல்வாரியில் பலியானார். அவர் பலியான போது ஆலயத்தின் தொங்கு திரை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. அதன் மூலம் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையேயிருந்த திரையை இறைமகன் இயேசு அழித்து விட்டார். கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே இப்போது நேரடியான உறவு இயேசுவின் மூலம் உருவாகி விட்டது.

அவரே பாவம் இல்லாத முதன்மை குரு ! பிரதான ஆசாரியன். “கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. “நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார்” எனும் எபிரேயர் 5:5 வசனம் அதை தெளிவாக்குகிறது.

இரண்டாவது ஆடு குறித்து பல்வேறு இறையியல் சிந்தனைகள் உலவுகின்றன. அதில் பெரும்பாலானோர் ஒத்துக் கொள்ளும் சிந்தனை, இரண்டாவது ஆடு சாத்தான் என்பது.

பாவம் மனுக்குலத்தில் நுழைய முக்கிய காரணமாக இருந்தவன் சாத்தான். எனவே அவனே பாவத்தின் சுமையைச் சுமக்க வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகையின் போது ஆயிரம் ஆண்டுகள் அரசாட்சி நடக்கும். அப்போது சாத்தான் கட்டி வைக்கப்படும். அதன் பின் சில காலம் கட்டவிழ்த்து விடப்படும் என்கிறது திருவெளிப்பாடு 20ம் அதிகாரம்.

பாஸ்கா விழா ஒருவகையில் இஸ்ரேல் மக்களுக்கான ஒரு மீட்பு வாழ்க்கையை குறிப்பிடுகிறது. பாவக் கழுவாய் விழாவோ சர்வதேச இறை சமூகத்துக்கான மீட்பாக அமைகிறது.

இன்றைக்கு இந்த விழா நமக்கு உணர்த்தும் பாடம், இறைமகன் இயேசுவின் பலியை உணர்ந்து கொள்வதும், அதன் மூலம் கிடைக்கும் மீட்பை அணிந்து கொள்வதும், பாவமற்ற ஒரு வாழ்க்கையை ஆரம்பிப்பதும் தான்.

இரண்டாம் வருகை எப்போது வரும் என்பதல்ல கேள்வி, வந்தால் நாம் தயாராக இருக்கிறோமா என்பது மட்டுமே கேள்வி !

*

Posted in இயேசு, WhatsApp

வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 

Image result for jesusஒரு வீடியோ எடிட்டிங் செய்யவேண்டியிருந்தது

 

ஏதாவது நற்செய்தி அறிவித்தல் பணிக்குச் சென்றால் அது குறித்த ஒரு பதிவை உருவாக்குவது எங்கள் ஆலயத்திலுள்ள வழக்கம். இந்த முறை தியாகத் திருவிழா ! தியாகத் திருவிழா என்பது இறைமகன் இயேசுவின் பாடு, மரணம், உயிர்ப்பு குறித்து ஏதோ ஒரு கிராமத்தில் நடத்தப்படும் ஒரு ஆன்மீக ஊர்வலம். அந்த ஊர்வலத்தின் மூலம் கிராம மக்களுக்கு இயேசுவைப் பற்றி சொல்வது தான் இந்தப் பணியின் நோக்கம்.

 

வீடியோ எடிட் செய்வதற்கென்றே கோயிலுக்கு நேந்து விட்ட ஒருவர் உண்டு. அவரது வீட்டில் சென்று எடிட்டிங் வேலைகளை ஆரம்பித்தோம். அவர் ரொம்ப பெர்ஃபக்ஷனிஸ்ட் என்று சொல்லலாம். புகைப்படங்கள், வீடியோக்கள், பாடல்கள் என ஒவ்வொன்றையும் தேடித் தேடி எடுத்து ஒரு கவிதையைப் போல வீடியோவைச் செய்வார்.

 

இந்த முறை குறுகிய கால அவகாசமே இருந்தது. “அண்ணே ஓவரா பண்ணாதீங்க, ஸ்கிரிப்டை பின்னாடி ஓடவிட்டு, கொஞ்சம் படங்களையும் வீடியோ காட்சியையும் முன்னாடி ஓட விடுவோம்என்றேன்.

 

அதெல்லாம் நல்லா இருக்காது, பாசிபிளே இல்லைஎன்றார்.

 

அவரை சீண்டிப்பார்க்க வேண்டும் எனும் நோக்கத்தில், “சர்ச்ல வேற யார் கிட்டேயாச்சும் குடுத்தா இந்த வேலையை ரெண்டு மணி நேரத்துல பண்ணுவாங்க.. நீங்க தான் நாலு நாள் தூங்காம உக்காந்து வேலை பாக்கிறீங்கஎன்றேன்

 

இல்லடைம் எடுத்து பண்ணினா தான் ஒழுங்கா வரும்… “ என்றார்

 

சும்மா முரண்டுபிடிக்காம சட்டுன்னு முடிங்கண்ணேஎன்றேன். அவர் ஒரு நிமிடம் நிதானமாய் என்னைப் பார்த்து ஒரு விஷயம் சொன்னார். என்னைப் புரட்டிப் போட்ட பதிலாக அது அமைந்தது.

 

இந்த பத்து நிமிச வீடியோங்கறது எனக்குக் குடுக்கப்பட்ட நற்செய்திப்பணி. அப்படி தான் நான் இதை பாக்கிறேன்இந்த பத்து நிமிசத்துல நான் என்ன நற்செய்தி அறிவிக்கிறேன்கிறது தான் எனக்கு தோணிட்டே இருக்கும். ஏதோ ஒரு போட்டோ, ஒரு வார்த்தை, ஒரு பாட்டு வரி  யாரோ  ஒருத்தரைத் தொடும். தொடணும். அதுதான் என்னோட தேடல், ஏக்கம், எதிர்பார்ப்பு எல்லாமே. அதனால தான் டைம் எடுத்து பண்றேன். இது ஒரு வீடியோ இல்ல நற்செய்தி அறிவித்தல் பணிஎன்றார்

 

கிடைக்கின்ற எந்த ஒரு வாய்ப்பையும் இறைவனின் நற்செய்தி அறிவித்தல் எனும் கண்ணோட்டத்தில் பார்த்த அவரது பார்வை எனக்குள் புதிய சிந்தனைகளையும், தெளிவையும் கொடுத்தது. அலட்சிய சிந்தனையோடு இருந்த என்னை தலைகுனிய வைத்தது.

 

நீங்கள் உண்டாலும், குடித்தாலும் எதைச் செய்தாலும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள் …” எனும் 1 கொரிந்தியர் 10:31 வார்த்தை மனதுக்குள் நிழலாடியது

 

நமது வாழ்க்கையில் தினமும் என்னென்னவோ செயல்களைச் செய்கிறோம் இவை அனைத்தையுமே ஏதோ ஒரு வகையில் நற்செய்தி அறிவித்தலுக்கான கருவிகளாய் மாற்றலாம் எனும் புரிதல் எழுந்தது

 

கிறிஸ்தவர்களின் செயல்கள், கிறிஸ்துவின் செயல்களாக மாறும்போது நமது வாழ்க்கை நற்செய்தி அறிவித்தலை தாமாகவே நடத்தும்.

 

நமது சொல்லிலும், செயலிலும், அன்றாடப் பணிகளிலும் கிறிஸ்துவைப் பிரதிபலிப்போம். அப்போது தான் கிறிஸ்து நமக்குள் வாழ்கிறார் என்பது உண்மையாகும்.

Posted in Bible Feasts

விவிலிய விழாக்கள் 5. எக்காளத் திருவிழா

Image result for feast of trumpet

விவிலிய விழாக்களில் நான்காவதாக வருகின்ற விழா எக்காளத் திருவிழா என அழைக்கப்படுகிறது. எக்காளம் என்பது ஒரு கருவி ! அது விலங்கின் கொம்பினாலோ, அல்லது வெள்ளி போன்ற உலோகங்களினாலோ உருவாக்கப்படக் கூடிய ஒரு கருவி.

விவிலியத்தில் எக்காளம் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. வலிமையின் அடையாளமாகவும், இறைசெய்தியின் அடையாளமாகவும் எக்காளம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

எக்காளப் பண்டிகையைக் குறித்து விவிலியம் குறிப்பிடுகின்ற செய்தி இவ்வளவு தான், ” ஏழாம் மாதம் முதல்நாள் உங்களுக்கு ஓய்வு நாள்; அதைத் திருப்பேரவையாகக் கூடி எக்காளம் ஊதிக் கொண்டாடுங்கள். எத்தகைய வேலையும் அன்று செய்யாமல் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள்”

ஏழாவது மாதத்தை யூதர்கள் திசிரி மாதம் என அழைக்கின்றார்கள். அவர்களுடைய மாதங்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தான் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன நாள்காட்டியின் படி இது புத்தாண்டின் துவக்க நாள். எனவே புத்தாண்டு விழா என்றும் இப்போது அழைக்கப்படுகிறது.

விவிலியத்தின் முக்கியமான பண்டிகைகள் ஏழு. எல்லாமே இயேசுவின் வாழ்வோடு தொடர்புடையவை. இயேசு அருள்கின்ற மீட்போடு தொடர்புடையவை. முதல் நான்கு பண்டிகைகளான பாஸ்கா விழா, புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, முதற்பலன் விழா, பெந்தேகோஸ்தே விழா ஆகிய நான்கு விழாக்களும் இயேசுவின் முதலாம் வருகையோடு நிறைவு பெற்ற விழாக்கள் !

அடுத்த மூன்று பண்டிகைகளும் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிப்பால் உணர்த்தக் கூடிய பண்டிகைகளாக அமைந்திருக்கின்றன.

ரோஷ் ஹா சனா என எபிரேய மொழியில் அழைக்கப்படும் இந்த விழாவானது இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையை முன்னறிவிக்கும் ஒரு அடையாள ஒலியாக, எச்சரிக்கையின் ஒலியாக ஒலிக்கிறது. முதல் நான்கு விழாக்களும் நடந்து முடிந்தபின் சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு இந்த விழா ஆரம்பமாகிறது. இயேசுவின் முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலம் என இதைக் கருதலாம்.

அறுவடைக்காலத்தின் முடிவு நாட்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. விதைப்பின் காலமும், விளைச்சலின் காலமும் முடிந்து விட, அறுவடையாம் நியாயத் தீர்ப்பின் காலம் வரப்போகிறது என்பதன் குறியீடு அது.

“ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்; ” என்கிறது 1 கொரிந்தியர் 15:52. .

இயேசுவின் முதல் வருகை அமைதியாய் நடந்தது. ஆனால் இரண்டாம் வருகையோ உலகமே அறியும் வகையில் மிகப் பெரிய அளவில் நடக்கும். இதை விவிலியம் இவ்வாறு கூறுகிறது.

“கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்” ! இது ஒரு கடைசி எச்சரிக்கை என எடுத்துக் கொள்ளலாம்.

விவிலியத்திலுள்ள திருவெளிப்பாடு நூல் இறைவனின் இரண்டாம் வருகையை குறியீடுகளால் விளக்குகின்ற நூல். அதில் ஏழு எக்காளங்கள் வருகின்றன. கடைசியாக வருகின்ற எக்காளம் இறுதித் தீர்வையில் நிறைவடைகிறது. அதன் பின் எந்த திரும்பிப் பார்த்தலுக்கும், திருந்தி வாழ்தலுக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்பது திண்ணம்.

பழைய ஏற்பாட்டில் எப்போதெல்லாம் எக்காளம் ஊதப்பட்டதோ அப்போதெல்லாம் வாழ்க்கையைப் புரட்டிப் போடக்கூடிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன! யாருமே அசைக்க முடியாத எரிகோ கோட்டை எக்காளத்தின் சத்தத்தினால் தானே இடிந்து தரைமட்டமாகிவிட்டது !

பத்து கட்டளைகளை மோசே இறைவனிடம் பெற்று வரும் போது எக்காளமே அடையாளமானது !

எக்காளம் என்பது அழைப்பு ! இயேசு தனது உயிரை நமது பாவங்களுக்காய் கையளித்தபோது புதிய ஏற்பாடு எனும் ஒரு புதிய வாழ்வுக்கான அழைப்பைக் கொடுத்தார். அது ஒரு எக்காளத் தொனி ! அந்த அழைப்புக்குச் செவிகொடுத்து அவரது வழியில் நடந்தால் இரண்டாம் வருகையைக் குறித்த அச்சமோ, விண்ணக வாழ்வைக் குறித்த சந்தேகமோ எழத் தேவையில்லை.

எக்காளம் ! நமக்கு இறைவனிடமிருந்து ஒரு செய்தி இருக்கிறது என்பதன் அடையாளம். எக்காளம் ! எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதன் அடையாளம் ! எக்காளம் போருக்குத் தயாராக வேண்டும் என்பதன் அடையாளம். எக்காளம் ! தலைவர் திரும்ப வருகிறார் என்பதன் அடையாளம். எக்காளம் நினைவூட்டுதலின் அடையாளம்.

இறைவனின் வழியில் மகிழ்வோடு நடந்தால் இறைமகனின் எக்காளத் தொனி நமக்கு அக்களிப்பின் தொனியாகக் கேட்கும். இல்லையேல் நரகத்தின் நகக்கீறல்களே நமது ஆன்மாவை ஊடுருவும்.

எக்காளப் பண்டிகை ! நிகழப் போவதன் முன்னறிவிப்பு ! நாம் எப்படி வாழவேண்டும் என்பதன் எச்சரிக்கை !

*

Posted in Bible Feasts, Uncategorized

விவிலிய விழாக்கள் 4. பெந்தேகோஸ்தே விழா !

Image result for feast of pentecost

  1. பெந்தேகோஸ்தே விழா !

பெந்தேகோஸ்தே விழா அறுவடைப் பெருவிழா என்றும், வாரங்களின் விழா என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிசான் மாதத்தின் 14ம் நாள் பாஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. அடுத்த நாளிலில் இருந்து புளிக்காத அப்பத் திருவிழா ஆரம்பமானது. நிசான் மாதத்தின் 16ம் நாள் முதற்பலன் விழா கொண்டாடப்பட்டது. இப்போது முதல் பலன் விழாவிலிருந்து ஐம்பதாவது நாள் இந்த பெந்தேகோஸ்தே விழா கொண்டாடப்படுகிறது.

முதற்பலனில் இறைவனுக்கு பார்லி படைக்கப்பட்டது, அது இறைமகன் இயேசுவைக் குறிப்பதாய் அமைந்தது. இப்போது ஐம்பது நாட்கள் கழிந்து வருவது கோதுமை அறுவடையின் காலம். கோதுமையை இறைவனுக்குப் படைக்கும் விழாவாக இந்த அறுவடைப் பெருவிழா அல்லது பெந்தேகோஸ்தே நாள் கொண்டாடப்படுகிறது. பெந்திகோஸ்தே எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த பெந்தேகோஸ்தே எனும் பெயர் வந்தது, இதற்கு ஐம்பது என்பது பொருள் !

முதற்பலன் நாளில் இருந்து ஏழு வாரங்களைக் கணக்கிட்டு அதற்கு அடுத்த நாளில் இந்த விழா கொண்டாடுவதால், வாரங்களின் விழா என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு என்பது முழுமையின் குறியீடு. அடிமைத்தனத்திலிருந்து மனிதன் முழுமையாய் மீட்படைந்ததன் அடையாம் இது.

இதைக்குறித்து இறைவனின் கட்டளை இவ்வாறு கூறுகிறது.

ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும்ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.

நீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு பலியாகக் கொண்டு வாருங்கள்ஓராண்டான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும் ஆண்டவருக்கு எரிபலியாகச் செலுத்துங்கள்.

உங்கள் நாட்டில் நீங்கள் அறுவடை செய்யும்போது உங்கள் வயலோரத்தில் இருப்பதை முற்றிலும் அறுத்துவிடாமலும் சிந்திக்கிடக்கும் கதிர்களைப் பொறுக்காமலும் இருங்கள். அவற்றை எளியவருக்கும் அன்னியருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!”

விளைச்சலின் பயனை இறைவனுக்குப் படைக்கும் விழாக்கள் உலகெங்கும் பல்வேறு வகைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த அறுவடை விழாவும் சுமார் 3500 ஆண்டுகளாக நினைவு கூரப்பட்டு வருகிறது.

இதுவும் இறைமகன் இயேசுவைக் குறியீடாய் கொண்ட ஒரு விழாவே. முதற்பலனாக இறைமகன் இயேசு இருக்கிறார், இரண்டாவதான இந்த அறுவடை விழா மனிதர்களை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வின் குறியீடு. எனவே தான் இங்கே புளிப்பான மாவு பயன்படுத்தப்படுகிறது. புளிப்பு என்பது பாவத்தைக் குறிப்பது. பாவியாகிய நம்மை மீட்டுக்கொண்ட இறைவனின் திட்டம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தேர்ந்து கொண்ட இஸ்ரேல் இனமும், தேர்ந்து கொள்ளப்படாத பிற இனங்களும் இறைவன் முன்னில் இணையும் குறியீடே இரட்டை அப்பங்கள் !

மோசே இஸ்ரேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்துக் கொண்டு வெளியே வந்த ஐம்பதாவது நாளில் சீனாய் மலையில் இறைவன் பத்து கட்டளைகளைக் கொடுக்கிறார் ! அந்த வார்த்தைகள் அடங்கிய சட்டங்களை மோசே சுமந்து வருகிறார்.

இறைமகன் இயேசு உயிர்த்தபின் ஐம்பதாவது நாளில் தூய ஆவியானவர் சீடர்களின் மேல் நெருப்பு நாவாக வந்து இறங்கினார். இறைவனை விவிலியம் “வார்த்தை” என்கிறது. மோசேயிடம் வார்த்தைகள் எழுத்து வடிவமாக கிடைத்தன, இங்கே தூய ஆவி வடிவமாக கிடைக்கின்றன.

மோசே கட்டளைகளைப் பெற்ற அந்த ஐம்பதாவது நாளிலும் சத்தமும், பெருங்காற்றும் காற்றும், நெருப்பும் இருந்தன. புதிய ஏற்பாட்டின் பெந்தேகோஸ்தே நாளிலும் நெருப்பும், பெருங்காற்றும், சத்தமும் இருந்தன.

மோசே கட்டளைகளைக் கொண்டு வந்த நாளில் மக்கள் இறைவனை விட்டு விலகி கன்றுக்குட்டியை வணங்கிக் கொண்டிருந்தார்கள். சட்டம் கொண்டு வந்த அந்த நாளில் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர். தூய ஆவி வந்திறங்கிய நாளில் சீடர்கள் பல மொழிகளில் பேச, மக்களில் மூவாயிரம் பேர் மீட்புக்குள் வந்தனர்.

“எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு; தூய ஆவியால் விளைவது வாழ்வு ( 2 கொரி 3 : 6 ) ” எனும் இறைவார்த்தை நிறைவேறும் நிகழ்ச்சியே இதில் மறைந்துள்ள மறை உண்மை !

புதிய ஏற்பாட்டில் அறுவடை என்பது தானிய அறுவடை என்பதைத் தாண்டி, இதயங்களை இறைவனிடம் கொண்டு வரும் நிகழ்வு எனலாம். “உங்களை மனிதரைப் பிடிப்போர் ஆக்குவேன்” என இறைமகன் இயேசு நற்செய்தி அறிவிக்க சீடர்களை அழைத்தார். முதற்பலனான இறைமகன் உயிர்த்து விட்டார், இப்போது இரண்டாம் பலனான நாம் கிறிஸ்துவின் அன்பில் இணையவேண்டும். அதுவே இந்த புதிய அறுவடை !

சுயநலமற்ற சிந்தனைகளோடு இறைமகனிடம் நம்மை நாமே அர்ப்பணிப்பதே இந்த விழாவின் இன்றைய சிந்தனை.