Posted in Articles, கட்டுரைகள், கிறிஸ்தவ இலக்கியம், கிறிஸ்தவம், Words On THE CROSS

சிலுவை மொழிகள் 4

Image result for eloi eloi lama sabachthani

இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார் ( மத்தேயு 27 :45 )

இயேசு சிலுவையில் மொழிந்த நான்காவது வார்த்தை இது. வலியின் வார்த்தை ! நிராகரிப்பின் வார்த்தை ! வலிகளிலேயே மிகப்பெரிய வலி நிராகரிக்கப்படும் வலி தான். இயேசு இப்போது நிராகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்.

மக்களின் பாவங்களைப் போக்கவேண்டுமெனும் மாபெரும் இலட்சியத்தின் வருகை அவர். விண்ணின் மகிமையைத் துறந்து, மண்ணின் புழுதியில் புரண்டு, வேர்வைக் கரையில் நடந்து, இறையரசை அறித்துத் திரிந்தவர் இயேசு. கடைசியில் மதவாதிகளாலும், அதிகாரிகளாலும், ஆளும் வர்க்கத்தாலும், ஏன் கூட இருந்த நண்பராலுமே நிராகரிக்கப்பட்டார்.

நிராகரிப்பின் வலி அவருக்குப் புதியதல்ல. இப்போதைய இயேசுவின் கதறல் மக்கள் அவரை நிராகரித்ததால் வந்ததல்ல. அவரது தந்தையாம் கடவுள் அவரை நிராகரித்ததால்.

நாம் நினைப்பது போல ஆணியின் கூர்மை கைகளைத் துளைத்ததாலோ, சாட்டையின் நுனி முதுகைக் கிழித்ததாலோ எழுந்த வலியல்ல இது ! அத்தகைய உடல்வலியை இயேசுவின் மன வலிமை தாங்கி விடும். ஆனால் இப்போதைய கதறல் ஒலி உடல் வலி அல்ல ! இதயத்தின் வலி !

உலகின் பாவங்களைப் போக்கவேண்டுமெனில் மானிடரின் பாவங்களையெல்லாம் தோளில் சுமக்க வேண்டும். மானிடருடைய பாவங்களைச் சுமந்து ஒரு பாவியாகவே உருமாறி, பாவியின் கோலம் கொண்டு சிலுவையில் மரிக்கிறார் இயேசு. “அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்” என ஏசாயா 53:5 அதை தீர்க்க தரிசனமாய் சொன்னது.

இருளும் ஒளியும் ஒரே இருக்கையில் அமரமுடியாது. பாவமும் புனிதமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. இயேசு புனிதத்தின் வடிவமாய் இருந்தபோது எப்போதும் தந்தையின் அருகாமையில் இருந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செபத்தில் தந்தையோடு தனித்திருந்தார்.

இப்போதோ அவர் புனிதத்தின் நிலையை இழந்து பாவத்தின் சுமையை ஏற்றிருக்கிறார். இந்தக் கணத்திலிருந்து அவரால் தந்தையின் அருகில் இருக்க முடியாது. புனிதம் எனும் தந்தையும், பாவம் எனும் மகனும் இப்போது எதிரெதிர் துருவங்கள் போல மாறிப் போகின்றனர்.

பாவம் இறைவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் என்பதை “உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன” (ஏசாயா 59:2) எனும் வசனம் விளக்குகிறது.

இந்த வலியை முன்கூட்டியே உணர்ந்த இயேசு தான், “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் ( மத் 26:39) ” என தந்தையிடம் வேண்டினார்.

எப்போதும் ‘அப்பா’ என கடவுளை அழைத்து வந்த இயேசு இப்போது, ‘இறைவா’ என அழைக்கிறார். பாவம், தந்தை மகன் உறவை உடைக்கிறது. இப்போது பாவிக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவு நிலையே இருவருக்கும் இடையே இருக்கிறது.

உலகம் துவங்கும் முன்னமே தந்தையோடு இணைந்திருந்தவர் இயேசு. விண்ணின் மகிமை எப்படிப்பட்டது என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் சோதனைகளை அவர் எளிதாய்த் தாண்டினார். எந்த சோதனை தரும் மகிழ்ச்சியையும் விடப்பெரியது விண்ணக வாழ்க்கை என்பது அவருக்கு மிகத்தெளிவாய் தெரியும்.

“என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்” ( சங் 22 ) என்பது அந்தக் கால பிரபலமான ஒரு பாடலின் துவக்கம். இயேசு அந்தப் பாடலின் வரியைத் துவங்கிவைத்தார். அதைக் கேட்டவர்களின் மனதில் அந்தப் பாடல் முழுமையாய் ஒலிபரப்பாகியிருக்க வேண்டும். “உண்மையாகவே இவர் கடவுளுடைய மகன்” என சிலர் நம்பிக்கை கொள்ள அதுவும் காரணமாய் இருந்திருக்கலாம்.

அந்தப் பாடல் இயேசுவுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாவீது மன்னனால் எழுதப்பட்டது. மெசியா பற்றிய பாடல். இயேசுவைப் பற்றிய பாடல். “மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்… ” என இயேசுவின் சிலுவை நிலையை பாடல் விவரிக்கிறது.

சிலுவை மரணம் வழக்கத்தில் இல்லாத அந்த காலத்திலேயே, ‘என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்’ என இந்த சங்கீதம் தீர்க்கத்தரிசனமாய் பேசுகிறது. “என் ஆடைகளைத் தங்களிடையே
பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்” என்றெல்லாம் சிலுவைக் காட்சியை பதிவு செய்திருக்கிறது.

இயேசு அந்த பாடலின் முதல் வரியை வலியின் ஒலியாய் ஒலிக்கச் செய்து, தான் மெசியா என்பதை குறிப்பால் உணர்த்தினார். நமது பாவங்களை அவர் சுமந்து தீர்த்தார். உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு அவரோடு சரணடைவோருக்கு, அவரது அரசில் நிச்சயம் இடம் உண்டு.

Posted in Articles

தயாரிப்பு

Image result for ready to travel

பால்காரன் கிட்டே இன்னும் நாலு நாளைக்கு பால் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க. பேப்பர் காரன் கிட்டே ஒண்ணும் சொல்ல வேண்டாம். நாம் வீட்ல இல்லேங்கற விஷயம் அவனுக்கு தெரிய வேண்டாம் !

மொட்டை மாடில இருக்கிற நாலு தொட்டிச் செடிகளையும் கீழே எடுத்துட்டு வாங்க. அப்படியே மெயின் கேட் பக்கமா அதை வெச்சுடுங்க. வேலைக்காரி கிட்டே டெய்லி காலைல வந்து தண்ணீ ஊத்த சொல்லியிருக்கேன்.

எல்லா சன்னலும் சாத்தியாச்சான்னு ஒரு தடவை செக் பண்ணுங்க. சுவிட்ச் எல்லாம் ஆஃப் பண்ணுங்க. அதுக்காக பிரிட்ஜை ஆஃப் பண்ணி தொலைச்சிடாதீங்க ! வெளிகேட்டை பூட்டும்போ மட்டும் உள்பக்கமா பூட்டுங்க.

டிக்கெட் கைல வெச்சிருக்கீங்க தானே ?

நான் சொல்றதெல்லாம் காதுல விழுதா இல்லையா ? மனைவியின் குரல் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது !

ஊருக்குப் போகவேண்டும் எனும் பரபரப்பு வீடு முழுவதும் பரவிக் கிடந்தது. ஊருக்கு போகும்போ இவ்ளோ முன்னேற்பாடுகள் செய்ய வேண்டுமா என்பது மலைப்பாய் இருந்தது ! ஒரு வாரப் பயணம் ! எத்தனை விஷயங்களில் கவனம் !!

ஒவ்வொன்றாய் செய்து கொண்டிருந்தபோது மனதில் சிந்தனை அலைமோதியது !

ஒருவாரம் வீட்டைப் பூட்டி விட்டு இன்னொரு வீட்டுக்குப் போவதற்கே இத்தனை முன்னேற்பாடுகள் செய்கிறோமே ! ஒரேயடியாக இந்த வீட்டைப் பூட்டி விட்டு விண்ணக வீட்டுக்குச் செல்வதற்கு எத்தனை முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் ?

அவற்றையெல்லாம் செய்கிறோமா என்பதை யோசித்துப் பார்த்தால் உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்க வேண்டியிருக்கிறது !

“விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை” என்கிறார் இயேசு !

அந்த வீட்டுக்குச் செல்வதற்கான பயண முன்னேற்பாடுகளாக இயேசு இரண்டு விஷயங்களை வலியுறுத்துகிறார். அனைத்துக்கும் மேலாய் இறைவனை நேசிப்பது, தன்னைப் போல பிறரையும் நேசிப்பது. இந்த இரண்டு விஷயங்களுமே விண்ணகப் பயணத்துக்கான ஏற்பாடுகள்.

இந்த விஷயங்களைச் செய்யாமல், மற்ற விஷயங்களை மட்டுமே செய்து திரிவது என்பது பயணத்துக்கான டிக்கெட் வாங்காமல் பயணம் செய்ய முயல்வதைப் போன்றது ! அங்கே நமக்கு அனுமதி மறுக்கப்படும்.

நான் போய் உங்களுக்கென ஒரு இடத்தை ஆயத்தம் செய்கிறேன் என்றார் இயேசு ! அந்த இடத்துக்குப் போக, இந்த உலகில் நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்ய நமக்கு குறிப்பிட்ட ஆயுளைக் கொடுத்திருக்கிறார் ! அதை புரிந்து கொள்ளாமலேயே பரபரப்பாய் முடிந்து விடுகிறது நம் வாழ்க்கை.

கடலெனும் மறு வாழ்வின்

ஒரு துளிச் சுவையே இவ்வுலக வாழ்க்கை !

ஒரு துளிச் சுவைக்காக கடலை இழக்கலாமா ?

சிந்திப்போம் ! தயாரிப்புகளை சரியாய் செய்வோம் !

 

Posted in Articles

Sunday School Skit : வாழ்வதும், வீழ்வதும் அவருக்காகவே !

Image result for sadhu sundar singh

காட்சி 1

( சில சிறுவர்கள்.. )

சிறுவன் 1 : டேய் சுந்தர்… சுந்தர்… ஸ்கூலுக்கு டைமாச்சுடா… சீக்கிரம் வா…

சிறுவன் 2 : டேய் அவன் மெதுவா தாண்டா வருவான்… கத்தாதே… அவன் அம்மா அவனை ஒரு சாதுவா வளத்து வெச்சிருக்காங்கல்ல… எல்லா சடங்கு சம்பிரதாயமும் முடிச்சு தான் வருவான்.

சிறுவன் 1 : ஆமாமா.. அதான் ஊருக்கே தெரியுமே… காடு வரைக்கும் போய், சாமியாரோட கால்ல விழுந்து, படிக்க வேண்டிய வேதங்களையெல்லாம் படிச்சா தான் அவனுக்கு அவன் அம்மா சோறே போடுவாங்க… ம்ம்ம்…. ஆனா அவனோட அம்மா இறந்தப்புறம் ரொம்ப மாறிட்டான்டா…

சிறுவன் 2 : ஆமாடா.. அவன் ஏழு வயசுலயே நம்ம புனித நூலைப் படிச்சு முடிச்சவனாச்சே… பதினாலு வயசுல வேதத்தை கரைச்சு குடிச்சவனாச்சே..

சிறுவன் 1 : ஆச்சரியம் தான்… என்ன புரியுமோ என்னவோ… எனக்கு பாடபுக்கைப் படிச்சாலே புரிய மாட்டேங்குது. (சிரிக்கிறான் )

சிறுவன் 2 : டேய் சாது… வரியா இல்லையா ? நாங்க கிளம்பவா ..

( வேகமாக வந்து அவர்களோடு இணைகிறான் சுந்தர் )

சாது : ஏண்டா… கத்தறீங்க… இன்னும் டைம் இருக்குல்ல…

சிறுவன் 1 : கொஞ்சம் சீக்கிரம் போனாதான்டா ஜாலியா விளையாடலாம்..

சாது : எங்கடா விளையாட விடறாங்க… பிரேயர் பண்ணு.. பாட்டு பாடு… பைபிள் படின்னு.. இந்த கிறிஸ்டியன் ஸ்கூல்ல படிக்கிற மாதிரி டார்ச்சரே வேற இல்லடா..

சிறுவன் 2 : அதுவும் சரிதான்டா… ஆளுக்கொரு பைபிளை குடுத்து, டெய்லி படிங்கன்னு அட்வைஸ் வேற… தாங்க முடியல.

சிறுவன் 1 : என்னோட புத்த மதத்தைப் பாரு… எவ்ளோ அமைதியான மதம் தெரியுமா ? புத்தர் ராஜ வாழ்க்கையை விட்டு ஓடினாரு, பாதி வழியில, போதி அடியில, அவருக்கு ஞானம் வந்துது. ஆசை தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு கண்டுபிடிச்சாரு. முக்தியடையணும்ன்னா ஆசையை ஒழிச்சு கட்டணும்ன்னு போதிச்சாரு.

சாது : டேய்.. ஆசையை ஒழிக்கணும்ன்னு அவரு ஆசைப்பட்டாரு. அப்படி தானே ? அப்போ அவராலேயே ஆசையை ஒழிக்க முடியல… (நக்கலாக )

( அப்போது இன்னொரு சிறுவன் 3 வந்து சேர்கிறான். )

சிறுவன் 2 : உன் கிட்டே பேசி ஜெயிக்க முடியாதுடா… நீ ஒரு குதர்க்க வாதி.

சிறுவன் 3 : டேய்… என்னோட மதம் என்னான்னு உனக்கே தெரியும். எல்லாம் வல்லவர் அல்லா மட்டும் தான். அவரோட அடியார் மொகமது சொல்றது படி வாழ்றது தான்டா சரியான மார்க்கம். நல்லவனுக்கு சொர்க்கம், கெட்டவனுக்கு நரகம்.. சிம்பிள்.

சாது : கேக்க நல்லா இருக்குடா ? ஆனா வெறும் சட்ட திட்டங்களோட வாழ்றது நல்ல மார்க்கமா ? வன்முறைக்கு நியாயம் கற்பிக்கிறது நல்ல மார்க்கமா ? எனக்கு தெரியல..

சிறுவன் 3 : அப்போ என்னடா ? உன்னோட கீதை தான் சரியான பாதையா ?

சாது : அதுவும் எனக்கு தெரியலடா… நிறைய குழப்பம் இருக்கு. நிறைய முரண் இருக்கு. கடவுள்களுக்கே ஏகப்பட்ட ஆசைகள், இச்சைகள், வன்முறை, குரோதம் எல்லாம் இருக்கு…

சிறுவன் 2 : அப்போ பேசாம ஸ்கூல்ல சொல்ற மாதிரி கிறிஸ்டியனாயிடு..

சாது : டேய்… உலகத்துல இருக்கிறதுல எனக்கு புடிக்காத மதமே அது தான். ஏதாச்சும் சொன்னே அடிச்சு பல்லு கில்லை பேத்துபுடுவேன். உனக்கு எங்க ‘ஆன்டி கிறிஸ்டியன்’ குரூப் பத்தி தெரியாதா ?

சிறுவன் 2 : அதென்னடா ? ஆண்டி கிரிஸ்டியன் ?

சாது : ஹா..ஹா.. ஸ்கூல் முடிஞ்சதும், நம்ம காட்டுப்பாத ஆலமர மூட்டில வா… அங்க தான் நடக்குது எங்க ஆன்டி கிறிஸ்டியன் கூட்டம். தெரிஞ்சுப்பே…

சிறுவன் : சரிடா. வரேன்… அப்படி என்ன தான் செய்றீங்கன்னு பாக்கறேன்.

காட்சி 2

( சாது மற்றும் நண்பர்கள். ஆன்டி கிறிஸ்டியன் கூட்டம் )

சாது : வாங்கடா… நம்ம ஆன்டி கிறிஸ்டியன் வேலைகளையெல்லாம் இன்னும் அதிகமாக்க நேரம் வந்துச்சு…

ந 1 : கண்டிப்பா… நேற்று இங்கே பைபிளை ஒவ்வொரு பேப்பரா கிழிச்சு கிழிச்சு எரிச்சோம். சிரிச்சோம்… இயேசு உண்மையான கடவுளா இருந்தா நம்மளை காலி பண்ணியிருக்கணும். பண்ணலையே

ந 2 : இனிமே பப்ளிக்கா எரிப்போம். ரோட்டுல போட்டு எரிப்போம்… அப்போ தான் நம்மளைப் பத்தி நாலு பேருக்கு தெரியும்

சாது : எஸ்.. பொது மக்கள் இருக்கிற இடத்துல பைபிளை எரிப்போம். நம்ம மதத்துக்கு எதிரா எவன் வந்தாலும் அழிப்போம்.

ந 1 : அழிப்போம்ன்னா ?

சாது : தெரு முக்கில டெய்லி சாயங்காலம் ஒருத்தன் வந்து பேசுவான்ல,.. இயேசு பற்றி.. அவனை கல்லால அடிப்போம். நாலு பேரை சாத்தினா மொத்த கூட்டமும் சிதறிப் போயிடும்..

ந 2 : சூப்பர் டா… நான் ரெடி..

சாது : முதல்ல சகதியால அடிப்போம்.. ஓடினா தப்பினான்.. இல்லேன்னா கல்லைத் தூக்கி தலையிலேயே எறிவோம்.

ந 1 : ஹா..ஹா.. சூப்பர்… அவங்க வீட்டுக்குள்ள பாம்பு புடிச்சு விடலாம்டா. அதுவும் ஒரு நல்ல ஐடியா…

சாது : கண்டிப்பா அதையும் பண்ணுவோம்… ( சோர்வாக )

ந 2 : ஏண்டா… திடீர்ன்னு டல்லாயிட்டே…

சாது : இல்லடா.. ஒண்ணுமில்லை..

ந2 : நான் உன்னை அடிக்கடி கவனிச்சுட்டு தான் இருக்கேன். பயங்கர‌ வெறியா பேசிட்டிருக்கே.. சட்டுன்னு அமைதியாயிடறே… எதையோ யோசிக்கிறே… என்னாச்சுடா ?

சாது : இல்லடா.. நான் பண்றது தப்பில்லேன்னு தெரியும். ஆனா.. உண்மையான கடவுள் யாருக்கு எனக்கு குழப்பமாவே இருக்கு. ஒருவேளை கடவுளே கிடையாதோ ? கடவுள் இருக்காருன்னா ஏன் நமக்கு அவரு காட்சி தரல ?

ந 1 : ம்ம்ம்.. கடவுள்ன்னா ‘ ஒரு நம்பிக்கை’ அவ்ளோ தான்டா.. அதுக்கு ஏன் இவ்ளோ ஃபீல் பண்றே.. நாம இந்த கிறிஸ்தவ எதிர்ப்பை மட்டும் இப்போதைக்கு ஃபோக்கஸ் பண்ணுவோம்.

சாது : அதுவும் ஒரு குழப்பமா தான் இருக்கு.. நம்ம ஸ்டீபன் இருக்கான்ல ? ஒரு நாள் நான் கிளாசுக்கு வரும்போ முழங்கால்ல நின்னு செபம் பண்ணிட்டிருந்தான். கண்ணுல கண்ணீர். என்னடா இப்படி செபம் பண்றேன்னு பக்கத்துல போய் பாத்தா, ‘இயேசுவே என் நண்பன் சுந்தர் உண்மையான தெய்வத்தைக் கண்டு கொள்ளணும்’ ந்னு செபிச்சிட்டிருந்தான். எனக்காக ஏண்டா அவன் அழுது அழுது செபம் செய்யணும் ?

 3 : அதுக்கு தான் இவ்ளோ ஃபீல் பண்றியா.. இந்த கிறிஸ்டியன்ஸே இப்படித் தான்டா.. ஆ ஊன்னா உடனே முழங்கால்ல நின்னு அழுதுட வேண்டியது.. அதையெல்லாம் விடு.. போவோம்… நம்ம வேலைகளைப் பாப்போம்

( சாது யோசித்தபடியே.. நடக்கிறார் )

காட்சி 3

( இரவு.. சாது இருக்கையில் அமர்ந்திருக்கிறார் )

கடவுளே… நீங்க இருக்கீங்களா இல்லையான்னே எனக்கு தெரியல. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கடவுளை சொல்றாங்க. எல்லாருமே அவங்க கடவுள் தான் உண்மைன்னு அடிச்சு சொல்றாங்க. அவங்களை அடிச்சாலும் அதைத் தான் சொல்றாங்க. ஒரே கேள்விக்கு எப்படி ஆயிரம் விடைகள் இருக்க முடியும் ? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். யார் உண்மையான கடவுள் ? . அதை நான் யார் சொன்னாலும் நம்ப மாட்டேன். யாரு உண்மையான கடவுளோ, அந்த கடவுளே என் முன்னாடி வந்து சொல்லணும். அப்ப தான் நம்புவேன். இல்லேன்னா காலைல நான் ரயில் முன்னாடி குதிச்சு தற்கொலை பண்ணிப்பேன்… இது சத்தியம்..சத்தியம்..சத்தியம்.

( தூங்குகிறார் .. திடீரென ஒளி அறையை நிரப்புகிறது )

திடுக்கிட்டு விழிக்கிறார் சுந்தர்.

சாது : யாரு… யாரு… என்ன திடீர்ன்னு வெளிச்சம் ? ( சட்டென ஓடி வெளியே எட்டிப் பார்க்கிறார் ) என்னது வெளியே இருட்டா இருக்கு.. உள்ளே என்ன வெளிச்சம்.. யாரு ?

குரல் : மகனே…

சாது : ( பதட்டமும் பரவசமுமாக ) யாரது கூப்டறது.. உங்க உருவம் சரியா தெரியல… சிவனா ? விஷ்ணுவா ? கிருஷ்ணாவா… ? புத்தரா… முகம் இவ்ளோ பிரகாசமா இருக்கு

குரல் : நீ.. ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்…

சாது : நான்.. நான் உங்களை துன்பப்படுத்தினேனே… எப்போ ? என்ன ஒரு கை நீளுது… ஐயோ.. கையில ஏதோ காயம்… என்ன காயம் இது ?

குரல் : உனக்காக நான் சிலுவையில் மரித்தேனே.. என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்…

சாது : ஐயோ.. .. இது..இயேசு… இயேசுவே…ஓ..மை..காட் .. நீங்க தான்.. உண்மையான கடவுளா ? ஐயோ… தப்பு பண்ணிட்டேனே… சட்டென முகம் குப்புற விழுகிறார்.

( சட்டென ஒளி அணைகிறது )

காட்சி 4 :

( அதிகாலையிலேயே பரபரப்பாய் ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறான்.. முதல் காட்சியில் வந்த ஏதோ ஒரு நண்பனின் வீடு.. அவன் கண்ணைக் கசக்கியபடியே வருகிறான் )

நண்பன் : ( கொட்டாவி விட்டுக்கொண்டே ) என்னடா.. காலங்காத்தால நாலரை மணிக்கே வந்து நிக்கிறே.. ஏதாச்சும் பிரச்சினையா ?

சாது : டேய்.. உன் பைபிளை குடு.. ரொம்ப அவசரம்.

நண்பன் :பைபிளா ?

சாது : ஆமா ஸ்கூல்ல ஏதோ நியூ டெஸ்டமென்ட் ந்னு ஒண்ணு குடுத்தாங்களே..

நண்பன் : என்னடா. .இந்த காலங்காத்தாலயே அதை கிழிச்சு எரிக்க போறியா ?

சாது : இல்லடா.. எடுத்து படிக்க போறேன்.. சீக்கிரம் குடு…

நண்பன் : என்னடா சொல்றே.. உனக்கு என்னாச்சு ?

சாது : டேய்.. நான் கண்டேண்டா. உண்மையான கடவுள் யாருன்னு என் ரெண்டு கண்ணாலயும் கண்டேன். ரெண்டு காதாலயும் அவர் பேசினதை கேட்டேன்டா…

நண்பன் : என்னடா சொல்றே.. யாருடா அது

சாது : இயேசுடா.. நான் ரொம்ப ரொம்ப வெறுத்திட்டிருந்த இயேசு டா.. எனக்கு இப்போ எந்த சந்தேகமும் இல்லை. கடவுள் நிச்சயம் உண்டு. அந்த‌ உண்மையான கடவுள் ஒரே ஒரு ஆள் தான். அது இயேசு தான். அதை அவரே சொல்லிட்டாரு. என்னோட உற்சாகம் தாங்க முடியல.. பைபிள் படிக்கணும் உடனே..

நண்பன் : இரு.. கொண்டு வரேன். ஆனா யார் கிட்டேயும் இப்படி உளறி வைக்காதே. நீ ஏதோ கனவு கண்டிருக்கே. காலைல எல்லாம் சரியாயிடும்… போ…

சாது : கனவில்லடா.. இப்போ தாண்டா நான் முழிச்சிருக்கேன். உண்மை அறிஞ்சிருக்கேன். இனிமே என்னை யாருமே வழி விலக்க முடியாது. இந்த வாழ்க்கை இனிமே இயேசுவுக்கு மட்டும் தான். நான் என் நண்பர்கள் எல்லாருக்குமே சொல்லப் போறேன். ஏன் ஊருக்கே சொல்லப் போறேன். ஊர் என்னடா ஊர்.. உலகத்துக்கே சொல்லப் போறேன். என்னை யாரும் தடுக்க முடியாது.

நண்பன் : ( பைபிளை எடுத்துக் கொண்டு கொடுக்கிறான்.. சாது அதை வாங்கிக்கொண்டு ஓடுகிறார் )

பின் குரல் :

கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய சவுலை, சாவின் சாலையில் சந்தித்து வாழ்வின் நகருக்குள் அனுப்பி வைத்தார் இயேசு. அதே போல, சாதுவையும் பாதி வழியில் சந்தித்து பாதை மாற்றினார். இயேசுவின் தரிசனம் தடுமாறிக் கிடந்த அவர் வாழ்க்கையின் தடத்தையே மாற்றியது. இயேசுவே உண்மை தெய்வம் என அறிந்ததும் தன்னை முழுமையாய் அவருக்கு ஒப்புக் கொடுத்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஊழியராய் மாறினார்.

நாம் இயேசுவே உண்மையான தெய்வம் என்பதை நம்புகிறோமா ?
அதன் பதில் நமது வாழ்க்கையை சாதுவைப் போல இறைவனிடம் ஒப்படைத்தோமா என்பதில் இருக்கிறது.

நமக்கு தரப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கை, அதை அவருக்கே தருவதில் இருக்கிறது வாழ்க்கைக்கான அர்த்தம்.

சிந்திப்போம், செயல்படுவோம்.

 

Posted in Articles, கட்டுரைகள், கிறிஸ்தவ இலக்கியம், கிறிஸ்தவம், Words On THE CROSS

சிலுவை மொழிகள்  3

Image result for mother here is your son

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார்  ( யோவான் 19 : 26 & 27 )

உலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார்.

“தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்”. தந்தையின் அந்த விருப்பத்தை மனதில் கொண்டு இயேசு சிலுவையில் கரங்களை விரித்து மீட்பின் வரத்தைக் கொடுத்தார்.

இயேசு சிலுவையின் உச்சியிலிருந்து உற்றுப் பார்த்தபோது அவரது கண்களுக்குத் தெரிந்தார் அன்னை மரியாள். “உனது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்ற தீர்க்கத் தரிசனம் அவரது காதுகளில் ஒலித்திருக்க வேண்டும். ஒன்றல்ல, ஓராயிரம் வாள்கள் பாய்ந்த வலியில் இருந்த அன்னையை இயேசு தேற்றுகிறார்.

தான் தேற்றப்பட வேண்டிய, ஆனால் தன்னால் தேற்றப்படாத ஒருவரும் இருக்கக் கூடாது என்பதே இயேசுவின் விருப்பம். இயேசு, “அம்மா இனிமேல் இவரே உன் மகன்” என சிலுவை அடியில் நின்ற தனது அன்புச் சீடரிடம் மரியாளை ஒப்படைக்கிறார். பிறர் மீது கொண்ட கரிசனை இயேசுவுக்கு சிலுவை உச்சியிலும் தீரவில்லை.

வலியோடு இருப்பவருக்கு ஆறுதல் சொல்வது தான் உலக வழக்கம், வலியோடு இருப்பவரே ஆறுதல் சொல்வது தான் இறைமகன் இயேசுவின் விளக்கம்.
சிலுவை வரைத் தன்னை பிந்தொடர்ந்து வந்த ஒரே சீடர் யோவானிடம் அன்னையை ஒப்படைக்கிறார். அவரும் உடனடியாக அன்னையைத் தனது வீட்டில் அழைத்துச் செல்கிறார்.

தொழுவத்தில் மெல்லிய வெளிச்சத்தில் அன்னையின் முகத்தை முதல் முதலாகப் பார்த்த இயேசு, பன்னிரண்டு வயதில் பரிதவிக்கும் அன்னையின் தவிப்பைப் பார்த்த இயேசு, சிலுவையின் அடியில் கடைசியாய் அன்னையின் முகத்தையும் பார்க்கிறார்.

வியாகுல அன்னை என அன்னை மரியாளுக்கு ஒரு பெயர் உண்டு. இத்தனை துயரத்தையும், வலியையும் தாங்கி சிலுவை அடியில் நின்று கொண்டிருப்பது அதன் ஒரு உதாரணம் என்று சொல்லலாம். ஒரு சின்ன கைக்குட்டையால் மகனின் இரத்தத்தைத் துடைக்க அனுமதியில்லை. ஒரு சொட்டு தண்ணீரை மகனின் உதடுகளில் வைக்க அனுமதியில்லை. மகனின் துயரத்தின் ஒரு அணுவளவைக் குறைக்கவும் அவருக்கு அனுமதியில்லை. மகன் கொஞ்சம் கொஞ்சமாய் இறப்பதைப் பார்க்கும் அனுமதி மட்டுமே உண்டு.

எல்லோரும் ஓடி விட்டார்கள். அன்னை ஓடிவிட விரும்பவில்லை. சிலுவை அடியில் நின்று கொண்டிருக்கிறார். வலியிலேயே அதிக வலி நமது பிரியத்துக்குரியவர்களின் மரணம் தான். அன்னை மரி அதனால் தான் வியாகுல அன்னை என அழைக்கப்படுகிறார்.

“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என கானாவூர் திருமணத்தில் மக்களிடம் சொன்ன அன்னை மரியாள், இப்போது இயேசுவை வழியனுப்பி வைக்கிறார்.

“என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்ற இயேசு தனது அன்னையை தவிக்க விடவில்லை. விண்ணகத்திலுள்ள தந்தையின் திருவுளத்தை அன்னை நிறைவேற்றியிருந்தார். இயேசுவை பூமிக்கு அறிமுகம் செய்திருந்தார்.

மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்றும் உண்டு என்றும் நிகழ்ந்த வாதங்கள் கிறிஸ்தவத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றன. எது எப்படியென்பது இறைவனுக்கே தெரியும். இயேசுவின் கரிசனை அன்னை மரியாளை ஒரு “ஆன்மீக மகனிடம்” ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். எனவே தான் தனது அன்பு சீடரிடம் அவரை ஒப்புக் கொடுக்கிறார்.

தம் மீது அன்பு கொண்ட சீடருக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம், இயேசுவின் அன்னையை தனது அன்னையாக ஏற்றுக் கொள்வது. அன்னை இறக்கும் வரை யோவான் எருசலேமை விட்டு வெளியே செல்லவில்லை என்கிறது மரபுச் செய்தி.

இயேசு, தனது தாய் மீது கொண்ட கரிசனை “தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும்” ஒவ்வொருவர் மேலும் இருக்கும். இந்த நிகழ்வு இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் தேவையையும், அப்போது கிடைக்கின்ற மீட்பின் நிச்சயத்தையும் உணர்த்துகிறது.

உலகத் தாயை உதாசீனம் செய்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதை விளக்குகிறது.சிலுவை அடியில் நின்ற கூட்டத்தினரில் இயேசு தனது தாய்க்கு நிறைவேற்ற வேண்டிய கடமையை துல்லியமாக நிறைவேற்றுகிறார்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்