Posted in Articles, Christianity, Sunday School

குறு நாடகம் : வஸ்தி

புனைவும், நிஜமும் கலந்த ஒரு கதை. விவிலியத்தில் எஸ்தர் நூலில் வரும் வஸ்தி என்கின்ற கதாபாத்திரத்தை மையமாய்க் கொண்டது.

Image result for queen vashti

காட்சி 1

( மன்னர் அகஸ்வேரின் முன்னால் , கைகளில் மதுக்கோப்பைகளுடன் தலைவர்கள் அவரைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர் )

கர்சனா : மன்னரே ! உம்மைப் போல ஒரு அரசர் இந்த பூமியில் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப் போவதுமில்லை !

அரசர் : ( புன்னகையுடன் ) எப்படிச் சொல்கிறீர் ?

கர்சனா : இதுவரை யாராவது ஆறு மாத காலங்கள் தொடர்ந்து விருந்தளித்த வரலாறு உண்டா ? ஆறு மாத காலங்கள் குறுநில மன்னர்கள், தலைவர்கள், படைத்தலைவர்கள், உயர்குடி மக்கள் இவர்களுக்கெல்லாம் நீர் வைத்த விருந்து வரலாற்றுச் சிறப்பு மிக்கது. காலத்தால் அழியாதது.

அரசர் : ம்ம்… மகிழ்ச்சி ! மகிழ்ச்சி !!

சேத்தார் : விருந்து வைப்பது கூட எளிது தான். ஆனால், அதை இப்படி சுவை பட வைப்பது ரொம்ப ரொம்பக் கஷ்டம் ! என்ன ஒரு சுவை ! தேவலோகத்திலிருந்து இறங்கி வந்த சுவையல்லவா இது ! இப்படி ஒரு விருந்து யாருக்குக் கிடைக்கும் ?

அரசர் : ஹா..ஹா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி.. ரொம்ப மகிழ்ச்சி.

அதிமாத்தா : விருந்தைக் கூட சுவையாய்க் கொடுத்து விடலாம். ஆனால் நீங்கள் கொடுக்கின்ற இந்த மது இருக்கிறதே ! இதென்ன சொர்க்கத்திலிருந்து சொட்டுச் சொட்டாய் விழுந்ததா ? நாவில் விழுவதும் தெரியவில்லை, நாசியில் நுழைவதும் தெரியவில்லை. போதை மட்டும் மேகத்துக்குத் தூக்கிச் செல்கிறது.

மன்னன் : இருக்கட்டும் இருக்கட்டும்.. அருந்துங்கள்….

தர்சீசு : ஆறு மாத விருந்து கூட அரசருக்குப் பெரிதல்ல. ஆனால் அந்த ஆறு மாத காலங்களும் விளம்பரப் படுத்துமளவுக்கு நீங்கள் சாதனை புரிந்திருக்கிறீர்களே ! அது தான் வியக்க வைக்கிறது அரசே ! மிகப் பிரமாதம் ! நீங்கள் சாதனைகளின் சகாப்தம்.

அரசர் : ஹா..ஹா… நமது அரசு சாதனைகளின் அரசல்லவா !!

மெரேசு : சாதனைகள்ன்னா சும்மாவா ? மூன்றே ஆண்டு காலத்தில் நீங்கள் நிறைவேற்றியவையல்லவா இவை. மூன்றாண்டு சாதனை போலவா இருக்கிறது ? ஏதோ நூற்றாண்டு விழா போல அல்லவா இது இருக்கிறது.

அரசர் : மகிழ்ச்சி.. மது அருந்துங்கள்.. மது அருந்துங்கள்..

மெர்சனா : அது மட்டுமா ? இந்தியா முதல் எத்தியோப்பியா வரை நூற்று இருபத்தேழு மாநிலங்கள். யாரால் நிர்வகிக்க முடியும். யாரால் இப்படிப்பட்ட ஒரு சாதனையைச் செய்ய முடியும் ?

அரசர் : (மீசையை முறுக்கி விடுகிறார் )

மெமுக்கான் : ஆறு மாத விழாவையே தூக்கிச் சாப்பிடுவது போல அல்லவா இந்த ஏழு நாள் விழா இருக்கிறது. இந்த ஒரு வார விழாவைப் போல இன்னொரு விழாவை எங்கேனும் பார்க்க முடியுமா ? எப்போதேனும் பார்க்க முடியுமா ?

தர்சீசு : இது என்ன கேள்வி ? இப்படி ஒரு விருந்து இனிமேல் எங்கும் நடக்கப் போவதில்லை. கேட்குமளவுக்கு மதுவும் உணவும் மக்களுக்குக் கிடைக்கிறது. அதுவும் உயர்ந்த தரமான விருந்து. மிக உயர்ந்த தரமான மது.

மெரேசு : எல்லாரும் விருந்து வைத்தால் பெரிய தலைவர்கள் சிலருக்கு மட்டும் தான் விருந்து வைப்பார்கள்.ஆனால் மன்னருடைய விருந்தைப் பாருங்கள். தலைவர்கள் மட்டுமல்லாமல், தலைநகரிலுள்ள மக்கள் எல்லாருக்கும் விருந்து வைக்கிறாரே !

மெர்சனா : உணவே இல்லாமல் இருப்பவனுக்குக் கூட விருந்துண்ண அழைப்பு, சிவப்புக் கம்பள வரவேற்பு ! இது ஏதோ கற்பனை உலகு போல அல்லவா இருக்கிறது.

சேத்தார் : நாவுக்கு மட்டுமா விருந்து ? கண்ணுக்கு விருந்து எவ்வளவோ இருக்கிறதே ! நீல நிற தொங்கு திரை விழிகளை விட்டு விலகவில்லை.
உயர் தர கற்கள், பளிங்கு, முத்துகள் பதிக்கப்பட்ட தளம். தங்கமும் வெள்ளியும் இழைக்கப்பட்ட மஞ்சங்கள். சொர்க்கம் இப்படித் தான் இருக்குமோ என அருகில் பார்ப்பவன் எவனுமே அதிர்ச்சியடைவான் என்பது நிச்சயம்.

அரசர் : நன்றி நன்றி..

மெமுக்கான் : அரசே… அரசின் பெருமைகளை உரைத்து விட்டீர்கள். சுவைமிகு உணவினை அளித்து விட்டீர்கள். மனமகிழ் மதுவினை கொடுத்து விட்டீர்கள். மயங்கிப் போய் கிடக்கிறோம் நாங்கள். இதுக்கு மேல் என்ன இருக்கப் போகிறது ?

அரசன் : ஹா..ஹா.. இன்னும் ஒன்று இருக்கிறது.

மெமுக்கான் : இன்னும் ஒன்றா ? இந்த மதுவை விட மேலானதா ?

அரசர் : மதுவை விட மட்டுமல்ல, இந்த சாம்ராஜ்யத்திலேயே அழகான ஒன்று.

தர்சீசு : மன்னரே.. இதற்கு மேல் அழகாக ஒன்றா ? நம்ப மனம் மறுக்கிறதே !

அரசர் : உங்கள் கண்களையே நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

மெர்சனா : நீங்கள் சொல்வதை எங்கள் காதுகளே நம்ப முடியாமல் திகைக்கின்றன. அப்படி என்ன அபூர்வ விஷயம்.

அரசன் : அதைப் பார்த்தால் மதுவை விட அதிகமாய் நீங்கள் மயங்குவீர்கள்.

அதிமாத்தா : வியப்புக்கு மேல் வியப்பளிக்கிறீர்கள் மன்னரே. அப்படி என்ன தான் இருக்கிறது. காட்டுங்கள். இருப்பு கொள்ளவில்லை. விருப்பு தாளவில்லை.

அரசர் : பிரபஞ்சத்தின் பேரழகி ! வளைவுகளால் வீழ்த்துபவள், அசைவுகளால் ஆட்கொள்பவள்

மெமுக்கான் : அது யார் அரசே !

அரசன் : அரசி வஸ்தி ! அவளைக் கொண்டு வருகிறேன். உங்கள் முன்னால். ரசியுங்கள்.

தர்சீசு : அரசியையா ?

அரசர் : ஆம்.. அவளே பேரழகி. நான் கண்டு களித்த அந்த பேரழகு இன்று உங்கள் விழிகளுக்கு விருந்தாகப் போகிறது. அவள் விழிகளைப் பார்த்தாலே விழுந்து விடுவீர்கள்.

மெமுக்கான் : அரசே எதிர்பார்ப்பு கூடுகிறது. தாமதம் ஏன் ? அவையை அழகு நிரப்பட்டும்.

அரசர் : அண்ணகர்களே… நீங்கள் சென்று அரசி வஸ்தியை இங்கே அழைத்து வாருங்கள்.

அண்ணகர்கள் : உத்தரவு அரசே.

அரசர் : மகுடம் அணிந்த மங்கையாய் அவள் வரட்டும். அவள் அழகை இந்த அவைக்குத் தரட்டும்.

அண்ணகர்கள் : உத்தரவு அரசே !

அரசர் : அவள் ஒரு பேரழகி. அந்தப் பேரழகுப் பெட்டகம், இந்த அவையிலே நடமாடட்டும். உடனே அழைத்து வாருங்கள். மயக்கத்தில் கிடக்கும் அரசவை மூர்ச்சையாகட்டும். ஹா…ஹா

அண்ணகர்கள் : உத்தரவு அரசே ( செல்கின்றனர் )

காட்சி 2

Image result for queen vashti

( வஸ்தி அரசியிடம் அண்ணகர்கள் செல்கின்றனர் )

அரசி : வாருங்கள் அண்ணகர்களே… யாவும் நலமா ?

அண்ணகர்கள் : நலம் அரசியாரே !

அரசி : விருந்து நிகழ்ச்சிகள் இன்றுடன் முடியப் போகின்றன ! பெண்டிர்க்கு யான் இங்கே விருந்தளிக்கிறேன். எல்லாம் நன்றாக இருக்கின்றன ! அங்கே எல்லாம் நல்ல முறையில் நடக்கிறதா ?

அண்ணகர்கள் : அனைத்தும் அருமை அரசியாரே. அரசரும் நண்பர்களும் விருந்தில் மகிழ்ந்திருக்கின்றனர். மகிழ்வில் திளைத்திருக்கின்றனர்.

அரசி : மகிழ்ச்சி. அரசின் புகழும் அரசரின் புகழும் மக்களைச் சென்று சேர்ந்திருக்கும்.

அண்ணகர்கள் : ஆம் அரசியாரே ! எல்லாம் நல்ல முறையில் நடந்திருக்கிறது.

அரசி : சரி, ஏதோ விஷயமாக வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். சொல்லுங்கள் என்ன விஷயம் ?

அண்ணகர்கள் : அரசியாரே.. அரசர் உங்களை அழைத்து வரச் சொன்னார்.

அரசி : என்னையா ? ஆண்களின் அவையில் நான் எதற்கு ? நான் இங்கே அரசவைப் பெண்டிர்க்கு விருந்தளித்துக் கொண்டிருக்கிறேனே

அண்ணகர்கள் : மன்னிக்கவும் அரசியாரே.. உங்களை அரச மகுடம் சூட்டி அழைத்து வர அரசனின் உத்தரவு.

அரசி : அரச மகுடம் சூட்டியா ? ஏன் என்ன விஷயம் ?

அண்ணகர்கள் : உங்கள் பேரழகை பிறருக்குக் காட்ட அரசர் ஆசைப்படுகிறார் அரசியாரே !

அரசி : என்ன ? எனது பேரழகை ஆண்கள் அவையில் காட்ட அரசர் ஆசைப்படுறாரா ? என்ன சொல்கிறீர்கள் ?

அண்ணகர்கள் : ஆம் அரசியாரே. மக்களும் தலைவர்களும் உங்கள் எழிலைக் காண வேண்டுமென மன்னர் ஆசைப்படுகிறார்.

அரசி : உலகிற்கு எழிலைக் காட்ட நானென்ன விலைமகளா ? நான் விலையற்ற மகள். பெல்ஷாத்சாரின் மகள் நான் நெபுகத் நேசரின் பேத்தி நான்.

அண்ணகர்கள் : யாம் அறிவோம் அரசியாரே.. அரச கட்டளை

அரசி : என்ன அரச கட்டளை ? வஸ்தியின் வஸ்திரம் மோகக் கண்களுக்கு சாமரம் வீசவேண்டுமா ? அவர்களின் மதுக் கோப்பைகளின் வழியும் விரசத்துக்கு விலை நானா ?

அண்ணகர்கள் : அரசியாரே மன்னிக்கவும்… கட்டளையை சுமந்து வரும் பணியாளர் நாங்கள்.

அரசி : ( கோபத்தில் ) விருந்துகளோடு வாழ்க்கை நடத்தும் மன்னருக்கு பெண்ணின் உணர்வுகள் தெரிவதில்லை. விருந்து தருகிறேன் என்று நாளை யாராவது அழைத்தால் கூட அவர்களோடு சென்று அவர்கள் சொல்வதையெல்லாம் செய்யும் மன்னர் இவர்

அண்ணகர்கள் : கோபம் வேண்டாம் அரசியாரே…

அரசி : மன்னரின் அனுமதியின்றி அவர் முன்னால் நான் செல்லக் கூடாது என்பது அவரது சட்டம். இப்போது அவர் முன்னால் செல்வது காமுகர்களின் கழுகுக் கண்களுக்கு நான் விருந்தாகவா ? இதுவா அவர் திட்டம் ?

அண்ணகர்கள் : ( அமைதி )..

அரசி : பெண்களின் உடலை மட்டுமே ஊடுருவிப் பார்க்கும் இந்த அரசவைக் கண்களுக்கு, அவர்களின் இதயத்தை தொட்டுப் பார்க்க நேரமும் இருப்பதில்லை, விருப்பமும் இருப்பதில்லை என்பது எவ்வளவு பெரிய துயரம்.

அண்ணகர்கள் : உங்கள் கோபம் நியாயமானது அரசியாரே..

அரசி : மதுவின் மடியில் புரளும் அரசரின் நண்பர்கள் சொல்லவில்லையா ? அரசியின் மானம் அரசவையில் அழிய வேண்டாமென ?

அண்ணகர்கள் : இல்லை அரசியாரே…

அரசி : செல்லுங்கள். அரசி வஸ்தி அரசனின் முன்னால் வரமாட்டாள் என சொல்லுங்கள்.

அண்ணகர்கள் : அரசியாரே.. இது அரச கட்டளை.. மீறினால்..

அரசி : தெரியும் ! அரச கட்டளையை மீறினால் என்ன நடக்கும் என்பது தெரியும். அரசி எனும் பட்டம் விடைபெறலாம். அரசவையின் சுகங்களெல்லாம் முடிவுறலாம். மஞ்சத்தின் மேலிருந்து நான் விரட்டப்படலாம்.

அண்ணகர்கள் : ஒருவேளை… அதையும் தாண்டி….

அரசி : தெரியும். பட்டையத்தின் முனை என் குருதி குடிக்கலாம். சட்டென என் உயிர் சடுதியில் மறையலாம். மானம் இழந்து உயிர்வாழ்வதா ? உயிரை இழந்து மானம் காப்பதா ? எனது பெண்மை என்ன வலுவிழந்த நாணலா ? அவமானம் சுமப்பதை விட அழிவை சுமப்பேன்.

அண்ணகர்கள் : அரசியாரே.. சற்று நேரம் மட்டும் ..

அரசி : சிறு துளி விஷம் போதும் ஜீவனை அழிக்க. ஒரு சிறு கறை போதும் ஓவியம் சிதைக்க. கணநேரம் போதும் என் கண்ணியம் குலைக்க. அரசி மறுத்தாள் எனச் சொல்லுங்கள். வரலாறு வெறுத்தாலும் பரவாயில்லை. விளைவுகளை நான் சந்திக்கிறேன்.

அண்ணகர்கள் : இன்னுமொரு முறை சிந்தித்துப் பார்க்கலாமே

அரசி : மீண்டும் மீண்டும் சிந்திப்பது என்பது தவறுகளுக்கு அனுமதிப் பத்திரம் கொடுப்பது போன்றது. எனக்குள்ளும் அரச இரத்தமே அசராள்கிறது. மகுடம் இழப்பேன், மகிமை இழக்க மாட்டேன். வேண்டாம், இன்றோடு என்வாழ்க்கை முடிந்தாலும் முடியட்டும். அன்னியர் முன் அவமானத்தை முள்முடியாய் சுமக்க மாட்டேன்.

அண்ணகர்கள் : வணக்கம் அரசியாரே. உம் உறுதி கண்டோம். உம் முடிவை அரசர்க்கு எடுத்துரைப்போம்.

( விடைபெறுதல் )

காட்சி 3 :

Image result for queen vashti

( அரசர் முன்னால் அண்ணகர்கள். )

அரசர் : எங்கே அரசியார் ?

அண்ணகர்கள் : அது.. வந்து.. அரசரே…

அரசர் : சொல்லுங்கள்.. என்ன இழுக்கிறீர்கள் ?

அண்ணகர்கள் : அரசரே… அரசியாருக்கு இங்கே வரவிருப்பமில்லை என சொல்லச் சொன்னார்கள்.

அரசர் : என்னது ? விருப்பமில்லையா ? மகுடம் சூட்டி வரச் சொன்னேனே ? சொன்னீர்களா ?

அண்ணகர்கள் : சொன்னோம் அரசே..

அரசர் : இது அரச கட்டளை என்றீர்களா ?

அண்ணகர்கள் : ஆம் அரசே !

அரசர் : அரசரின் கட்டளையே அவமானப்படுத்தப்பட்டிருக்கிறதா ? என்ன தைரியம் !

அண்ணகர்கள் : அரசே.. உங்களுக்குள் கோபம் கொழுந்து விட்டெரிவதை யாம் அறிவோம். நாங்கள் வெறும் தகவல் பகிர்பவர்கள்.

அரசர் : ம்ம்…நீங்கள் போகலாம்

கர்சனா : என்ன அரசரே.. என்ன விஷயம் ?

அரசர் : என் அழைப்பை அரசி மறுத்திருக்கிறாள். இங்கே வர முடியாது என்கிறார்.

கர்சனா : சரி.. விடுங்கள் அரசே…

மெமுக்கான் : எதை விடுவது ? மக்களுக்கும், மற்றவர்களுக்கும் முன்னால் அரசர் அவமானபடுவதை விடுவதா ? இல்லை அரசரை விட பெரியவர் எனும் நினைப்பு அரசியிடம் இருப்பதை விடுவதா ? அரச கட்டளையின் மரியாதை களங்கப்பட்டிருப்பதை விடுவதா ? இல்லை ஆணை விட பெண்தான் பெரியவள் எனும் ஆணவத்தை விடுவதா ?

அரசர் : என்ன செய்யலாம் ?

மெமூக்கான் : தலைமைக்கு ஒரு இழுக்கெனில் அது தலைமுறைக்கே இழுக்கு. நாட்டுக்கே இழப்பு. இது முளைவிட்ட முள்மரம். கிள்ளவில்லையேல் கொல்லும். வெட்டவில்லையேல் அழிக்கும். சிதைக்கவில்லையேல் செழிக்கும்.

அரசர் : என்ன சொல்ல வருகிறீர்கள்

மெமூக்கான் : அரசனையே அரசி மதிக்கவில்லை, ‘உன்னை நான் மதிக்க வேண்டுமா’ என அத்தனை பெண்களும் ஆணவம் ஏந்துவர். ஆண்கள் அடிமையாவர். பணிந்திருப்பது தானே பெண்மைக்கு நாம் தரும் பணி. அதனதன் இடத்தில் அதது இருப்பது தானே நாட்டுக்கும் நல்லது, வீட்டுக்கும் நல்லது ?

அரசர் : உண்மை தான்.

மெமூக்கான் : அரசிக்கு பேரழகி எனும் திமிரா ? இல்லை அவர் பெரியவர் என்ற நினைப்பா தெரியாது. ஆனால் ஆண்களுக்கெல்லாம் இது அதிர்ச்சி. எனவே …

அரசர் : எனவே.. சொல்லுங்கள்.. என்ன செய்யலாம் ?

மெமூக்கான் : அரசியை அகற்றுங்கள். இப்போது உங்கள் முன் வராத அரசி, இனி எப்போதும் வரக்கூடாதென சட்டம் இயற்றுங்கள். மகுடம் தரிக்க மறுத்தவருக்கு மஞ்சத்தை மறுத்து விடுங்கள். இது பெண்களுக்கு பாடமாகட்டும், ஆண்களுக்கு ஆறுதலாகட்டும்.

அரசர் : ம்ம்.உண்மை தான்.

மெமூக்கான் : சட்டம் இயற்றுங்கள். வஸ்தியை விட அழகான ஒரு பெண்ணை அரசியாக்குங்கள். வஸ்தியின் அஸ்திவாரம் கூட அசைக்கப்படட்டும். உமது அரசு நிலை பெறட்டும்.

அரசர் : அப்படியே செய்வோம். இது எனக்கு நலமெனப் படுகிறது.

மெமூக்கான் : பாரசீய, மேதிய சட்டங்களில் இடம் பெறும் வகையில் இந்த சட்டத்தை இயற்றுங்கள். அதை சாம்ராஜ்யம் முழுதும் பரப்புங்கள். மடல்கள் எழுதி மூலை முடுக்குகளிலும் அறிவியுங்கள்.

அரசர் : ம்ம்.. நல்ல யோசனை வேறு ஏதாவது ?

மெமூக்கான் : ஆண்களே வீடுகளில் ஆட்சி செலுத்தவேண்டும் என்பதையே சட்டமாய் எழுதி விடுங்கள். தெளிவாக இருக்கட்டும். ஆண்களின் கௌரவம் அழியாமல் காப்போம். பெண்மையின் திமிர் இனி எழும்பாமல் பார்ப்போம்.

அரசர் : அதிகாரிகளே.. இதை இன்றே சட்டமாக்குகிறேன். இதை என் சாம்ராஜ்யத்தின் அத்தனை வீடுகளுக்கும் எடுத்துச் செல்லுங்கள்.

அதிகாரி : உத்தரவு அரசே.

அரசர் : யாரங்கே.. மீண்டும் மது பரிமாறுங்கள். விருந்து தொடரட்டும்.

( முடிந்தது )

Posted in Articles, Bible Poems, Psalm

திருப்பாடல்கள் தரும்பாடங்கள் – 2

Week 3

திருப்பாடல்கள்
தரும்பாடங்கள்

Image result for psalm 2

மன்னர்களே,
விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;
பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.
அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்;
நடுநடுங்குங்கள்! அவர்முன் அக மகிழுங்கள்!

திருப்பாடல்களின் இந்தப் பாடலை தாவீது மன்னன் எழுதியிருக்கிறார். அதை திருத்தூதர் பணிகள் உறுதிப்படுத்துகிறது. திருத்தூதர் பணிகளை எழுதிய லூக்கா, “எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாக தூய ஆவி மூலம் ‘வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? பூவுலகின் அரசர்களும் தலைவர்களும் ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக அணிவகுத்து நின்றனர்’ என்று இந்த திருப்பாடலைக் கையாண்டிருக்கிறார். இதன் மூலமே இந்தப் பாடல் தாவீது மன்னன் வழியாக தூய ஆவியார் எழுதி வைத்தது என்பதும், இயேசுவின் முன்னறிவிப்புப் பாடல் என்பதும், நமக்குத் தெரியவருகிறது.

சுருக்கமாக இந்தத் திருப்பாடலைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், இரண்டு விதமான மனநிலைகளின் பாடல் என்று சொல்லலாம். இறைவனுக்கு எதிர்த்து நின்று அழிவது ஒரு மனநிலை, இறைவனுக்கு பணிந்து நின்று வாழ்வது இன்னொரு மன‌நிலை. எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்து நமது வாழ்க்கையின் நிகழ்வுகள் அமையும்.

திருப்பாடலின் முதல் பகுதி, உலக மக்களும், அரசுகளும் ஏன் இறைவனுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன எனும் ஆச்சரியத்துடன் துவங்குகிறது. இறைவனுக்கு எதிரான போராட்டங்கள் எல்லாம், எரிமலைக்கு எதிராய் பனித்துளிகள் நடத்தும் போராட்டமாகவே முடியும். வெற்றி யாருக்கு என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப் போவதில்லை. எனினும் அவர்கள் இறைவனுக்கு எதிராய் நிற்கின்றனர். ஒருவேளை பலரோடு இணைந்து போராடினால் இறைவனையே வென்று விடலாம் என நினைக்கிறார்களா தெரியவில்லை ? தீயவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தூயவருக்கு எதிராக அணி சேர்க்கின்றனர்.

இறைவனிடமிருந்து அருட்பொழிவு பெற்றவருக்கு (இயேசு) எதிராகவும் அவர்களுடைய போராட்டம் இருக்கிறது. இது வியப்பான விஷயம். மகனுக்கு எதிராய்ப் போரிடுபவன் தந்தைக்கு எதிராகப் போராடுகிறான். விண்ணகத் தந்தையும், இயேசுவும் ஒருவரே என்பதில் அவர்கள் குழம்பி விடுகின்றனர். இறைவனுடைய விருப்பத்துக்குள் வாழ்வின்ற வாழ்க்கை அடிமை வாழ்க்கை என்பது அவர்களுடைய சிந்தனை ! உண்மையில் தந்தையின் கரங்களுக்குள் இருப்பது தான் மகனுக்குக் கிடைக்கும் அதிகபட்ச மகிழ்ச்சியான வாழ்க்கை ! அதை மக்கள் உணர்வதில்லை.

ஆனால் கடவுளோ இவர்களுடைய செயல்களைப் பார்த்து நகைக்கிறார். சினத்துடன் சீறிப் பாயும் சிங்கத்துக்கு முன்னால் அணிவகுத்து நிற்கும் காலில்லா கட்டெறும்புகளைப் போல நிற்கும் மக்களைப் பார்த்து இறைவன் சிரிக்கிறார். ஆனால் அவர் அவர்களை இகழவில்லை. தன்னை எதிர்க்கிறார்களே எனும் கவலை அவருடைய இதயத்தில் நிரம்புகிறது. விண்ணகத்திலுள்ள இருக்கையில் அமைதியாக, தீர்க்கமாக அமர்ந்திருக்கிறார் அவர். அனைத்தும் அவருடைய கரங்களில் இருக்கின்றன. மக்களின் செயல் அவரை பதட்டமடைய வைக்கவில்லை, பயப்பட வைக்கவில்லை. தனது நீதியின் இருக்கையில் அவர் இருக்கிறார்.

வரலாறுகளின் பக்கம் முழுவதும் கிறிஸ்துவின் பெயரையும், கிறிஸ்தவத்தின் இருப்பையும் அழித்து விடவேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கிய மனிதர்களால் நிரம்பியிருக்கிறது. இத்தனை நூற்றாண்டுகள் தாண்டியும் கிறிஸ்தவம் அழியவில்லை. அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள். இறைவன் தன் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

ரோம மன்னன் டயோகிளேஷியன் ஹெர்குலிஸ் சீசர், கிறிஸ்தவர்களை மிகக் கொடுமையாய் தாக்கி அழித்தவன். ‘கிறிஸ்தவத்தை வேரோடு பிடுங்கி விட்டேன்’ என முத்திரை பொறித்து வைத்தான் ! காலம் அவனை அழித்துவிட்டது, அழிக்க நினைத்த இறை புகழை வளர்த்து விட்டது. கிமு மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே அவன் மடிந்தான். இருபதாம் நூற்றாண்டின் படிகளிலும் கிறிஸ்தவம் தொடர் நடை போடுகிறது

மக்களின் அறிவீனத்தைக் கண்டு நகைக்கும் கடவுள், அவர்களை உடனே அழிக்கவில்லை. அவர்களோடு பேசுகிறார். தொடர்ந்து தவறு செய்யும் மகனை தந்தை தோளோடு அணைத்து அறிவுரை சொல்வது போல பேசுகிறார். கடிந்து பேசுகிறார். வார்த்தைகளில் அவரது அன்பு வெளிப்படுகிறது.

தனது மகனை இந்த உலகின் அரசராக நியமிக்கப் போவதை இறைவன் வெளிப்படுத்துகிறார். அனைத்து அரசர்களையும் விட பெரிய அரசராக, இறைவனின் பிரியத்துக்குரிய வாழ்க்கையைப் புரிய வைக்க வரும் பரமனாக ! தனது அன்புக்குரிய மகன் அவர் ! மண்ணுலக மக்கள் விண்ணுலகுக்கு எதிராக வெறுப்பை அனுப்பி வைக்கின்றனர், இறைவன் அதற்குப் பதிலாக அன்பை அனுப்பி வைக்கிறார்.

அனைத்து அதிகாரமும் கொண்ட மகனை அனுப்பி வைக்கிறார் இறைவன். அந்த இறைவனின் பாதங்களை முத்தமிட்டு அவரிடம் சரணடையும் மக்கள் மீட்பு பெறுவார்கள். அச்சத்தோடு இறைவனை வழிபடும் மன்னர்கள் வாழ்வார்கள்,அவர்களே இறைவன் முன்னிலையில் மகிழவும் செய்வார்கள். அவரது கோபத்தின் பெருமழை பொழியும் முன், இறைவனின் அடைக்கலக் குடையின் கீழ் ஒன்று சேர்பவர்கள் வாழ்வார்கள்.

ஆன்மீக வளர்ச்சி,
இறைவனின் பாதைகளை நிராகரிப்பதிலல்ல‌
அவரது பாதங்களை அரவணைப்பில் இருக்கிறது !

*

Posted in Articles, Vettimani

வாய்மையே இறைவன் !

 Image result for truth

வாய்மை எனப்படுவது யாதெனில் எப்போதும் வாய்மையே பேசுதல் ! வாய்மைக்கு இதை விட வித்தியாசமான விளக்கத்தை யாரேனும் கொடுத்தால், அவர் எத்துணை பெரியவராய் இருந்தாலும் ஒதுக்கி விடலாம். தவறில்லை.

வாய்மை என்பது கறைபடியா இதயத்தின் வாய்மொழி. வாய்மை என்பது தூய்மையின் திறவு கோல். வாய்மை என்பது மகிழ்வின் மந்திரக்கோல்.

வாய்மை பேசுதல் என்பது மனிதர்களுக்கு இயல்பாய் வரவேண்டிய ஒரு செயல். ஆனால் அது இன்றைக்கு அபூர்வச் செயல்போலக் காட்சியளிக்கிறது. அந்த அளவுக்கு வாய்மை நமது வாழ்க்கையை விட்டு விலகிச் சென்று விட்டது.

உதாரணமாக, ஆட்டோவில் தவற விட்ட யாரோ ஒருவரின் பணத்தை ஆட்டோக்காரர் திரும்ப ஒப்படைத்தால் அது தலைப்புச் செய்தியாகிறது. ஏதேனும் ஒரு அரசியல்வாதி, உண்மையே பேசுபவராக இருந்தால் அவர் வேற்றுக்கிரகவாசி போல பார்க்கப்படுகிறார். ஏதாவது ஒரு அதிகாரி உண்மைக்கு ஏற்ப செயல்பட்டால் அவர் வியப்புக் குறியீடாய் விமர்சிக்கப்படுகிறார்.

பிழையாய் இருக்க வேண்டிய பொய்மை இயல்பாகி விட்டதால், இயல்பாய் இருக்க வேண்டிய வாய்மை இன்று அபூர்வமாகி விட்டது. அதனால் தான் இறைத் தன்மையின் நிறைவு எல்லா இடங்களிலும் குறைப்பிரசவமாகவே காட்சியளிக்கிறது.

வாய்மை என்பது தங்கத்தைப் போன்றது. அதன் மதிப்பு அதைச் சுற்றியிருக்கும் பொய்மையெனும் அழுக்குகளை அகற்றுவதன் மூலம் தெரியும் என்கிறார் லியோ டால்ஸ்டாய்.

வாய்மை என்பது இயல்பான குணம். அதைச் சுற்றியுள்ள துருக்கள் எல்லாம் நாம் வளர வளர நம்மேல் விழுந்த அழுக்குகள் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அந்த அழுக்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நாம் விலக்க விலக்க, மனிதனில் இறைவனை வெளிப்படச் செய்கிறோம்.

கடவுள் மனிதனைப் படைக்கும் போது தன்னைப் போல ஒரு புனிதப் பிறவியாகவே படைத்தார். தனது இயல்பாகவே படைத்தார். தனது உயிரின் நீட்சியாகவே படைத்தார். அந்த புனிதத்தின் தன்மையை மனித தன்மைகள் மங்கிப் போகச் செய்து விடுகின்றன.

சூரியனையும், சந்திரனையும், உண்மையையும் வெகு நாட்களுக்கு மறைத்து வைக்க முடியாது என்கிறார் புத்தர். காரணம் சூரியனின் உதயம் போல இயல்பானது உண்மையின் இருப்பு.

உண்மையை அறிந்து கொள்ளுங்கள் அது உங்களை விடுதலையாக்கும் ! என்றார் இயேசு. உண்மையற்ற செயலும், சொல்லும் நம்மை அடிமைப்படுத்தும் விஷயங்கள். அவை சங்கிலிகளைப் போல நமது கால்களையும், கைகளையும் இறுக்கிப் பிடிக்கின்றன. அவை பாம்பினைப் போல நமது கழுத்தைச் சுற்றி இறுக்குகின்றன.

உண்மை பேசும்போது மனம் விடுதலையாகிறது. உண்மை விடுதலையின் சின்னம், பொய் அடிமையின் ஆசனம். அதனால் தான் அவர் அப்படிச் சொன்னார் !

உண்மை இறைத்தன்மை உடையது. தெய்வீகத்தின் எல்லைகளில் விளைபவை எல்லாம் உண்மையின் முளைகளே !

உண்மையற்ற நிலை பாவத்தின் வழி. பாவத்தின் வழியில் நடப்பவர்கள் இறைவனைக் காண முடிவதில்லை. வாய்மையின் வாய்க்காலில் மட்டுமே விளைச்சல் இனிமையாக இருக்கும். எத்தனையோ மன்னர்கள் வந்து போனாலும், வாய்மையின் வழி நடந்த அரிச்சந்திரன் மட்டும் தானே மனதில் நிலைக்கிறார் !

எல்லா மதங்களுமே உண்மையை முன்னிறுத்துகின்றன. விஷ்ணு உண்மையின் கடவுள் என்கிறது இந்து மதம். உண்மையற்ற தன்மையை எந்த தத்துவமும், எந்த மதமும் முன்மொழியவுமில்லை, வழி மொழியவும் இல்லை. எனினும் ஆன்மீகவாதிகள் என அடையாளம் சூட்டிக்கொள்ளும் மனிதர்கள் தான் வாய்மையைத் தூக்கி பரணில் போட்டு விட்டார்கள்.

கிறிஸ்தவத்தில் இயேசு, ‘நானே உண்மை’ என்றார். உண்மை என்பது ஒரு குணாதிசயம் என்பதைத் தாண்டி, உண்மை என்பதே மனித உருவம் என்பதன் உயரிய வெளிப்பாடு அது ! உண்மை கடவுளாகிறது. கடவுள் உண்மையாகிறார்.

கடவுளாய் மனிதன் மாற வேண்டுமெனில் அவன் உண்மையாய் மாற வேண்டும். உண்மை கலப்படமற்றது. “எண்பது சதவீதம் உண்மையும், இருபது சதவீதம் பொய்யும்” என இருந்தால் அதை உண்மை என சொல்ல முடியாது. பாலில் விழுவது ஒரு துளி விஷமானாலும் அது தூய்மையற்றதே ! பெரும்பாலும் பால் தானே என வாதாட முடியாது.

அப்படித் தான் உண்மையும்.

இறைவனை உண்மையில் வெளிச்சத்தில் தான் காண முடியும். காரணம் உண்மையே இறைவன். வாய்மை உலவும் வாயே அவன் உறைவிடம்.

உண்மையைப் பேசுபவர்கள் தான் அமைதியை உணர்வார்கள். உள்ளத்தின் ஆழத்தில் அமைதியின் நதி பிரவாகமெடுக்க வேண்டுமெனில், இதயத்தின் ஊற்று உண்மையின் துளிகளால் வழியவேண்டும்.

உண்மை என்பது பயிரைப் போன்றது. மெதுவாய் வளரும். நிலையாய் வளரும். கடைசியில் கனியைக் கொடுக்கும். பிழைகள் எல்லாம் களைகள் போன்றவை. சட்டென செழிக்கும், சடுதியில் அழியும். இறையும் அப்படியே, நிலையான வழி, மெதுவான வழி அதுவே தேவ வழி. ஆன்மீகத்தில் ஃபாஸ்ட் புட் இல்லை ! ஆரோக்கிய ஆன்மீகம் மெதுவான நிலையான வலுவான வளர்ச்சியே !

இறைவன் அன்பானவர் என்கிறோம். அன்பே இறைவன் என்கிறோம். அந்த அன்பின் வெளிப்பாடு என்ன தெரியுமா ? உண்மை பேசுதல். உண்மையான அன்பு பொய் முகமூடியுடன் பேசுவதில்லை. உண்மையாய் வாழ்வது, தெய்வீகத்தின் அடையாளம். இறைவனைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக நமது முகங்கள் மாறுவது நாம் வாய்மையின் வழியில் வாழ்கையில் தான்

உண்மை என்பது வேர்களைப் போல உள்ளே சென்று உறவுகளை வலுவாக்கும். இறைவனின் இயல்பும் அதுவே ! இதயத்தின் உள்ளே சென்று உறவினை வலுவாக்குவது. நம்முடைய வாழ்க்கையில் நாம் உறவுகளை வலுவாக்க முயலும் போது இறைவனின் இயல்பை வெளிப்படுத்துகிறோம். உறவுகளின் இறுக்கத்தில் இறைவனைப் பிரதிபலிப்பவர்களாக மாறுகிறோம்.

பாவம் என்பது பல நோய்களைக் கொண்டு வரும் என்பது நாம் அறிந்ததே. வாய்மை பேசா நிலையும் பல நோய்களைக் கொண்டு வரும் என்கிறது மருத்துவம். குறிப்பாக மன அழுத்தம், பதட்டம், எரிச்சல், தலைவலி, உயர்குருதி அழுத்தம், அல்சர் போன்ற நோய்களை அது கொண்டு வரும் என மருத்துவம் எச்சரிக்கிறது. பாவமற்ற நிலை இறைவனின் விருப்பம். நோய்களற்ற நிலைக்கும் அதுவே தொடக்கம்.

இறைவனின் அருகாமை நமது பயத்தை விலக்கும். உண்மை பேசுவதும் பயமற்ற சூழலை உருவாக்கும். தற்காலிக இன்னல்களைப் போருட்படுத்தாமல் எப்போதும் உண்மையில் நிலைத்திருப்பது ஆன்மீகத்திற்கு வளமானது. அது இறைவனின் அருகில் இருக்கும் உணர்வை நமக்குத் தரும்.

உண்மை சட்டரீதியானது. கட்டளைகளுக்கு உட்பட்டது. இறைவனின் நிபந்தனைகளின் எல்லை மீறாதது. வெள்ளை பொய்கள், சிவப்பு பொய்கள் என்றெல்லாம் வர்ணமடிப்பவை நம்மை குழப்பும் யுத்திகள். வாய்மை என்பது பொய்யின் நிழலும் விழாத நிலையே ! அந்த நிலையே தேவ நிலை.

தன்னம்பிக்கையின் வேர்களை வலுவூட்டவேண்டுமெனில் உண்மையைப் பேசிப் பழகினால் போதும். உண்மையைப் பேசிப் பழகுபவர்களுக்கு பொய்களை நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை. குற்ற உணர்வற்ற மன நிலைக்கு உண்மையின் விரல்களைப் பிடித்து நடந்தாலே போதுமானது.

உண்மையைப் பேசுவது தான் நமது இறை இயல்பை மெல்ல மெல்ல வெளியே கொண்டு வந்து இறைவனின் ஒளியில் நிறுத்தும். நம்மை நாம் உணரவும், இறையில் நாம் வளரவும் அது தான் நம்மை வனையும். பொய் பேசுவது கோழைகளின் செயல், உண்மையே வலிமையின் அடையாளம். அதுவே இறையின் அடையாளம்.
சத்தியத்தின் இயல்புகளே இறைவனின் இயல்புகள். சத்தியத்தின் வழியே இறைவனின் வழி. சத்தியமே இறைவன் ! இறைவனை நேசிக்க வேண்டுமா ? சத்தியத்தை நேசிப்போம் !

Xavier
5/17/2018

Posted in Articles, Bible Poems, Psalm

திருபாடல்கள் தரும்பாடங்கள் – 2

Week 2

திருபாடல்கள்
தரும்பாடங்கள்

Image result for psalm 2

நற்பேறு பெற்றவர் யார்?
அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்;
இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்

முதல் திருபாடல் மக்களுக்கு அறிவுரை சொல்கின்ற திருப்பாடலாக அமைந்திருப்பது சிறப்பு. பொதுவாக தங்களுடைய பிள்ளைகளுக்கு இந்த திருப்பாடலைச் சொல்லிக் கொடுத்து அதன் படி நடக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் அறிவுரை சொல்வதுண்டு. திருப்பாடல்களில் மிகவும் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று இது எனலாம் !

சாலமோன் மன்னனுடைய நீதிமொழிகளின் சாயல் இந்த பாடலில் தொனிப்பதால், இதையும் சாலமோன் எழுதியிருக்கலாம் என கருதுவோர் உண்டு. எனினும், இதை எழுதியவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அனுமானங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த பாடலுக்கு ஆசிரியர் அமைகிறார்

நல்லவர் எப்படி இருப்பார் ?
பொல்லார் எப்படி இருப்பார் ? என்பதை இந்த பாடல் விளக்குகிறது.

நல்லவர்களின் குணாதிசயங்களாக மூன்று விஷயங்கள் இந்தப் பாடலில் குறிப்பிடப்படுகின்றன.

1. அவர்கள் பொல்லாரின் சொற்படி நடக்க மாட்டார்கள் ! வழி தவறுவதன் முதல் நிலை இது. யாருடைய அறிவுரைப்படி நாம் வாழ்கிறோம் என்பதன் அடிப்படையில் தான் நமது வாழ்க்கை கட்டமைக்கப்படுகிறது. பொல்லாரின் அறிவுரைகளை சிரமேற்கொள்ளும் போது நாம் பொல்லாதவர்களின் இலக்கையே சென்றடைவோம். அதை நல்லவர்கள் நாடமாட்டார்கள்.

2. இரண்டாவது நிலை, தீயவர்களின் பாவ வழியில் நிற்காமல் இருப்பது ! பொல்லாரின் சொல்லைக் கேட்பது முதல் நிலை. பாவிகளுடைய வழியில் நிற்பது இரண்டாம் நிலை. இப்போது நின்று கேட்கக்கூடிய அளவுக்கு மனம் பாவத்தின் மீது விருப்பம் கொண்டு விடுகிறது. நின்று நிதானித்து பாவத்தின் வழியில் பயணிக்கிறது. அதை நல்லவர்கள் நாடமாட்டார்கள்.

3. மூன்றாவது நிலை, இகழ்வாரின் கூட்டத்தில் அமராமல் இருப்பது ! முதலில் கேட்பது, பின் நிற்பது, மூன்றாவதாக ஆர அமர அமர்ந்து இகழ்வாரோடு இணைந்திருப்பது என பாவம் படிப்படியாய் வளர்கிறது. பிறரை இகழ்வதும், நல்ல செயல்கள் செய்பவர்களை இகழ்வதுமாய் பாவத்தின் ஆழத்தில் விழுந்து விட்ட நிலையை இது காட்டுகிறது.

முதலில் வெறுமனே பொல்லாரின் அறிவுரைகள் கேட்பதில் நமது வாழ்க்கை பலவீனமடையத் துவங்குகிறது. அது சிற்றின்பத் தேடல்களாகவும் இருக்கலாம், இயேசுவின் போதனைகளைத் திரிப்பதாகவும் இருக்கலாம். அது பழகிவிட்டால் பாவிகள் நடக்கின்ற பாதையில் நாமும் தென்படுவோம். அங்கே நின்று பாவத்தின் செயல்களைச் செய்வோம். நாமும் நாலுபேருக்கு தவறான அறிவுரைகள் சொல்வோம். அதுவும் பழகிவிட்டபின் நல்லவர்களை விமர்சிப்பதும், மனிதநேயமற்ற இகழ்ச்சிகளை மகிழ்ச்சியுடன் செய்வதுமாய் நமது வாழ்க்கை அர்த்தம் இழக்கும்.

இப்படிப்பட்ட மூன்று நிலைகளையும் நல்லவர்கள் வெறுப்பார்கள். வெறுமனே வெறுத்தால் மட்டும் போதாது ! ஒரு பாத்திரத்தில் இருக்கும் அழுக்குத் தண்ணீரை வெளியேற்றுவதுடன் வேலை முடிவதில்லை. வெறுமையான பாத்திரம் யாருக்கும் உதவாது.அந்த பாத்திரத்தைக் கழுவி அதில் நல்ல தண்ணீரை ஊற்றுவது தான் பயனுள்ள நிலை. நல்லவர்கள் தங்களை பொல்லாரின் வழியிலிருந்து விலக்கி, இறைவனின் அருகில் அமர்வார்கள்.

இறைவனுடைய திருச்சட்டத்தில் மகிழ்ந்து, இரவும் பகலும் அவர்கள் அதையே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்கள் செய்கின்ற செயல்களெல்லாம் வெற்றியாக முடிந்து விடுகிறது. நீரோடையில் அருகில் வேர்களை இறக்கி, பருவகாலத்தில் இனிய கனியைத் தரும் மரமாய் அவர்கள் மாறுகின்றனர்.

ஒரு மரம் கனியைத்தர நீர், காற்று, சூரிய ஒளி மூன்றும் தேவை. காற்று என்பதை நமக்கு மூச்சுக்காற்றை அளித்த தந்தையாம் இறைவனோடும், ஒளியை ஒளியாம் இறைமகனோடும், நீரை தூய ஆவியானவரோடும் ஒப்பிடலாம். இவர்கள் மூவரும் நம்முள் இருக்கும் போது நாம் நீரோடை மரம் போல செழுமை வடிவும், இனிமைக் கனியுமாய் வாழ்வோம்.

பொல்லாரின் வழியோ, காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப் போல நிலையில்லாமலும், பயனில்லாமலும் அழியும். அவர்களுக்கு வெற்றி என்பது இல்லை. அவர்களுக்கு மீட்பு என்பது இல்லை. அழிவு மட்டுமே அவர்களின் பரிசு.

நமது வாழ்க்கை, தீமையின் வழியை விட்டு விலகி இறைவனைத் தேடும் வாழ்க்கைக்கு மாற வேண்டும் என்பதை இந்த திருப்பாடல் வலியுறுத்துகிறது.

இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ செய்ய வேண்டிய இந்த மூன்று விஷயங்களையும் இதயத்தில் இருத்துவோம் ! பொல்லாரின் வழி செல்வதை இன்றே நிறுத்துவோம் !

Posted in Articles, கட்டுரைகள், Words On THE CROSS

சிலுவை மொழிகள் 7

Image result for father i commit my spirit to you

“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) !

இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார்.

ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் குதூகல மனநிலையாய், இயேசு தனது மண் வாழ்வை முடித்து வைக்கிறார்.

நமது உயிர் இறைவனின் உயிர் மூச்சினால் உருவானது. அந்த உயிர்மூச்சு இறைவனிடமே திரும்பிச் செல்லும் எனும் உத்தரவாதமே இவ்வுலக வாழ்வை மகிழ்ச்சியாக்கும். உயிரின் பிறப்பிடமும், உயிரின் புகலிடமும் இறைவனின் கரங்களே

“உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்” (சங் 31:5) எனும் இறைவாக்கின் நிறைவேறுதல் இது. இயேசு இங்கே, தந்தையே என்பதை சேர்த்துக் கொள்கிறார். உலகின் பாவத்தைச் சுமந்ததால் இறைவனின் அருகாமையை விட்டு விலகிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் விழுந்தவர் இயேசு. அப்போது, “இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்” என கதறினா.

இப்போது எல்லாம் நிறைவேறியபின் மீண்டும் தந்தையே என அழைத்து தன் உறவை உறுதி செய்து கொள்கிறார்.

சிலுவையில் இயேசு ஏழு வார்த்தைகளைச் சொன்னார். ஏழு என்பது முழுமையைக் குறிப்பது.தனது வாழ்வின் முழுமையை இயேசு வெளிப்படுத்துகிறார்.

முதல் வாசகம் மன்னிப்பைப் பேசியது, இரண்டாவது வாசகம் மீட்பைப் பேசியது, மூன்றாவது வாசகம் பரிவைப் பேசியது, நான்காவது வாசகம் துயரத்தைப் பேசியது, ஐந்தாவது வாசகம் ஏக்கத்தைப் பேசியது, ஆறாவது வாசகம் வெற்றியைப் பேசியது, ஏழாவது வாசகம் ஆறுதலைப் பேசியது !

ஆன்மீகத்தின் முழுமையும், செழுமையும் இயேசு பேசிய வார்த்தைகளுக்குள் அடங்கி விட்டன எனலாம்.

‘தந்தையே உம் கைகளின் என் உயிரை ஒப்படைக்கிறேன்’ எனும் வார்த்தையில் நம்பிக்கை வெளிப்படுகிறது. தந்தை தன்னை கைவிடமாட்டார் என முழுமையாய் நம்பும் மழலையின் மனநிலை அது. “நீங்கள் குழந்தையாய் மாறவேண்டும்” என இயேசு குறிப்பிட்டது தந்தை மீது கொள்ளவேண்டிய முழுமையான நம்பிக்கையையும் குறிக்கும்.

தந்தையின் கரங்கள் ஆறுதலின் கரங்கள். தந்தையின் தோள்களில் துயிலும் மழலை எத்தனை சத்தங்களுக்கு இடையே வாழ்ந்தாலும் நிம்மதியாய் உறங்கும். பெற்றோரின் அருகாமை இல்லையேல் நிசப்தமான பஞ்சு மெத்தை கூட அவர்களை கலங்கடிக்கும். தூங்க விடாமல் செய்யும். இறைவனின் கரங்களில் நமக்கு ஆறுதல் கிடைக்கிறதா ?

தந்தையின் கரங்களில் கிடைப்பது முழுமையான பாதுகாப்பு. தந்தையின் விரலைப் பிடித்துக் கொண்டு செல்லும் மழலையின் முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா ? உலகின் எந்த பெரிய வீரன் வந்தாலும் தந்தை தன்னைப் பார்த்துக் கொள்வார் எனும் அதிகபட்ச நம்பிக்கை அந்த கண்களில் மின்னும். இதைவிடப் பெரிய பாதுகாப்பு இனிமேல் இல்லை எனும் நிம்மதி அந்த முகத்தில் தெரியும்

நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இந்த வாசகம் கேட்கிறது. இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களுக்கு மட்டுமே தந்தையின் கரம் கிடைக்கும் ! தந்தையின் விருப்பத்தை நிராகரித்து நடப்பவர்கள் எப்போதுமே அந்த கரங்களுக்குள் அடைக்கலம் புகுவதில்லை.

அந்த நம்பிக்கையைப் பெறுவதற்குரிய வகையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தந்தையின் கரத்தோடு இணைந்து இருப்பவர்களுக்கே ஆறுதல் கிடைக்கும். நமது வாழ்க்கை எதில் ஆறுதல் அடைகிறது . உலகத்தின் கரங்களிலா ? அல்லது உன்னதரின் கரங்களிலா ?

தந்தையோடு இருப்பதே உண்மையான பாதுகாப்பு. நமது வங்கிக் கணக்குகளும், நில புலன்களும் நமக்கான பாதுகாப்பல்ல. களஞ்சியத்தை எவ்வளவு தான் இடித்துக் கட்டினாலும் ஆன்மா இழந்து போனால் என்ன பயன் ?

நமது நம்பிக்கையை அழிந்து போகும் செல்வங்களிலிருந்து மாற்றி, இறைவனின் அருகாமையில் வைப்போம்.

“என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்..” என யோவான் 10:27 -28 ல் இயேசு கூறினார்.

இயேசுவின் கரங்கள் ஆயனின் கரங்கள். அவை நம்மைப் பற்றிக் கொள்ள ஆயத்தமாய் இருக்கின்றன. பற்றிக் கொண்டால் விட்டு விடாமல் பாதுகாக்கவும், ஆறுதலை அளிக்கவும், நம்பிக்கை அளிக்கவும் அவை தயாராக இருக்கின்றன !

நமது இதயம் எங்கே இருக்கிறது ? இறைவனின் கரங்களிலா ? உலகத்தின் கரங்களிலா ?

“நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்.

“அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்” எனும் எபிரேயர் 12:2 வசனத்தில் நம்பிக்கை வைப்போம் !