Posted in Articles

உறவுகளின் மேன்மை

Image result for family

உறவின்றி அமையாது உலகு !

கிறிஸ்தவம் உறவுகளின் முக்கியத்துவத்தை மிக அழகாகவும், ஆழமாகவும் நமக்கு விளக்குகிறது. கிறிஸ்தவம் என்பதே உறவின் மொழி தான். இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயான உறவே கிறிஸ்தவத்தின் அடிப்படை ! அந்த உறவு எந்த அளவுக்கு ஆழமாய்க் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை வைத்தே நமது ஆன்மிக வாழ்க்கை அளவிடப்படுகிறது.

விவிலியத்தின் துவக்கம் முதல் கடைசி வரை, இறைவன் எப்படி தனது மக்களோடு நெருங்கிய அன்பு உறவு கொள்ள ஆசைப்படுகிறார் என்பதே விளக்கப்படுகிறது. மக்கள் விலகும் போது கலங்கும் இறைவனையும், நெருங்கும் போது நெகிழும் இறைவனையும், வேண்டும் போது கசியும் இறைவனையும் நாம் இறை வார்த்தைகளில் உயிர்ப்புடன் வாசிக்கிறோம்.

இறைவன் உறவுகளின் தேவன். அதனால் தான் மண்ணில் மனிதர்களைப் படைக்கும் போதும் அவர் உறவுகளையே முதன்மைப்படுத்தினார்.

ஆதாம் ஏவாள் எனும் முதல் உறவு இறைவனின் திருவுளம். அவர்களை ஏதேனில் வாழ வைத்து அவர்களோடு தானும் வாழ்ந்து மகிழ்ந்தவர் இறைவன்.

உலகம் பாவத்தின் புயலில் அலைக்கழிக்கப்பட்ட போது, தன்னோடு உண்மையாய் அன்பு பாராட்டும் ஒரு சின்ன மக்கள் கூட்டமாவது இருக்கவேண்டும் எனும் அவருடைய ஆர்வம் தான் ஆபிரகாமை அழைத்தது. இஸ்ரயேல் மக்களினத்தை உருவாக்கியது. அவர்களோடு வாழ்விலும் தாழ்விலும் இணைந்து பயணித்தது.

இறைவன் உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புபவர். கிறிஸ்தவ வாழ்க்கையின் கட்டளைகளைச் சுருக்கி இரண்டு கட்டளைகளாகக் கொடுத்த இறைவன் உறவுகளை மட்டுமே மையப்படுத்தினார். இறைவனை நேசி, சக மனிதனை நேசி ! என்பதே அவரது கட்டளைகளின் மையம்.

இன்றைய டிஜிடல் யுகம் நம்மை வெளிச்சத் திரைகளுக்குள் இருட்டு வாழ்க்கை வாழ அழைக்கிறது. இரயில் ஸ்நேகங்களும், குட்டிச் சுவர் உரையாடல்களும், டீக்கடை பெஞ்ச்களும் கூட இன்று டிஜிடல் வலைகளுக்குள் வலுவிழந்து கிடக்கின்றன என்பது தான் நிஜம்.

அடுத்த வீட்டு நபரின் பெயர் என்னவென்பதே தெரியாத நகர வாழ்க்கை. வெற்றிலை குதப்பும் வாய்களோடு, “நல்லா இருக்கியா பிள்ளே” என அழைக்கும் அன்யோன்யம் தொலைந்த கிராம வாழ்க்கை. தனிமனிதன் சின்னச் சின்னச் சிறைகளுக்குள் அடைபட்டு வாழ்கிறான்.

ஏசியும், டிவியும், வேளாவேளைக்கு சோறும் போடும் முதியோர் இல்லங்கள் மாத கட்டணம் பத்தாயிரம் முதல் சில இலட்சங்கள் வரை என விளம்பரம் செய்கின்றன. தோளோடும், மார்போடும் வளர்ந்த பிள்ளைகள் பெற்றோரை ஊருக்கு வெளியே கட்டணக் கட்டிடங்களில் தள்ளி விடுகின்றன. தொழுவங்களில் கட்டப்படும் மாடுகளாகிவிட்டது, உறவுகளில் கட்டப்படாத வாழ்க்கை.

இயேசு நம்மை அழைக்கிறார். உறவுகளால் நெருக்கமாய்க் கட்டப்பட்ட ஒரு வாழ்க்கைக்காய் அழைக்கிறார். கடல்நீரில் கலந்திருக்கும் உப்பைப் போல உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

உறவுகள் சுயநலத்தின் சுருக்குப் பைகளில் முடிந்து வைப்பதல்ல, அவை மனித நேயத்தின் வீதிகளில் நிரப்பி வைப்பது எனும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1. தன்னோடான உறவு !

தன்னோடான உறவு என்பது சுயநலம் அல்ல ! “தன்னைப் போல பிறரையும் நேசி” என சொன்ன இயேசுவின் போதனை, தன்னை அன்பு செய்ய வேண்டும் என்பதையே மறைமுகமாக சொல்கிறது. நான் என்பது இறைவனின் பிம்பம். என்னை நான் நேசிப்பது இறைவனின் படைப்பை நேசிப்பதன் அடையாளம்.

நமது உடல் என்பது இறைவன் வாழும் ஆலயம் என்கிறது விவிலியம். இறைவனின் ஆலயமான இந்த உடலை நாம் அன்பு செய்ய வேண்டும். தூய்மையான உறவுடன் அதைப் பேண வேண்டும். தன்னைத் தான் ஆழமாக நேசிக்காதவன், பிறரையும் நேசிக்க முடியாது. காரணம் அன்பின் துவக்கம் நம்மிலிருந்து தான் துவங்குகிறது. நம்மை ஏற்றுக் கொள்வதும், நம்மை நேசிப்பதும், நமக்காக இறைவனுக்கு நன்றி சொல்வதும் நம்மீதான உறவின் அடையாளங்கள்.

2. உறவினரோடான உறவு.

நமது குடும்பங்களை எடுத்துப் பார்த்தால், ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் ஏதோ ஒரு உறவினர் இருப்பார். ‘செத்தாலும் அவன் வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்’ என்றோ, ‘என் சாவுக்கு கூட அவன் வரக்கூடாது’ என்றோ முறுக்கித் திரியும் ஒரு ஈகோ எல்லா குடும்பங்களிலும் ஒளிந்திருக்கும்.

விவிலியமோ உறவினரோடு உறவு பாராட்டச் சொல்கிறது. அப்படிச் செய்யாவிடில் அது இறைவனுக்கே எதிரானது என்கிறது. “தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர்” ( 1 திமோத்தேயு 5:8) என்கிறது விவிலியம்.

3. கணவன் மனைவி உறவு.

ஒரு காலத்தில் ‘வெட்டி விட்டிருவேன்’ என்று கணவன் மிரட்டுவது குடும்பத்தின் உச்ச கட்ட மிரட்டலாய் இருக்கும். இந்த பதினைந்து ஆண்டுகளில் மணமுறிவு 350 சதவீதம் அதிகரித்திருப்பதாய் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. கிறிஸ்தவர்கள் சற்றும் குற்ற உணர்வு இல்லாமல் மணமுறிவுக்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இறைவன் ஆணும் பெண்ணுமாய் மனிதனைப் படைத்து, அவர்களை குடும்பம் எனும் பந்தத்தில் இணைத்தபோது பிரிவைப் பற்றி அவர் யோசிக்கவே இல்லை. “திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ( எபேசியர் 5:24 ) என குடும்ப உறவு குறித்து விவிலியம் அறிவுறுத்துகிறது.

“உங்கள் கடின உள்ளத்தைக் குறித்தே மோசே மணமுறிவை அனுமதித்தார், ஆனால் மணமுறிவு இறைவனின் திட்டத்தில் உள்ளதல்ல” என இறைமகன் இயேசுவும் பரிசேயர்களிடம் கூறினார். தம்பதியரிடையே ஆழமான உறவு இருக்க வேண்டியது அவசியம்.

4. பிறரோடான உறவு

சக மனிதர் மீதான கரிசனை இன்று நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. சாலையில் அடிபட்டுக் கிடப்பவனைக் கவனிப்பதை விட போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போடும் கூட்டம் தான் அதிகரித்திருக்கிறது. அயலானோடு உறவு கொள்ளவேண்டும் என்பதை இறைவன் பல இடங்களில் நமக்குப் போதிக்கிறார்.

நல்ல சமாரியன் உவமை ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இறுதித் தீர்வை நாளின் போது கடவுள் கேட்கும் கேள்விகள் எல்லாமே சக மனிதனோடு நாம் என்ன உறவு கொண்டிருந்தோம் என்பதன் அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றன. “உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” எனும் இறைவனின் கட்டளை ஒன்றே போதும் சக மனிதர் மீது நாம் அன்பு கொள்ள வேண்டியதன் கட்டாயத்தைப் புரிந்து கொள்ள.

5. திருச்சபையோடான உறவு

திருச்சபை என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. இறைவனால் நடத்தப்படுவது. இறைவனால் கண்காணிக்கப்படுவது. திருச்சபை மீதான நமது அணுகுமுறை புனிதம் கலந்து இருக்க வேண்டியது அவசியமாகிறது. திருச்சபையின் இயக்கங்கள், உறுப்பினர்கள், மூப்பர்கள், எளியவர்கள், தலைவர்கள் அனைவருடனும் தூய்மையான நேசம் கொள்ள வேண்டியது முக்கியமான விஷயம்.

கொடியாம் இறைவனின் கிளைகள் நாம். அவரில் இணைந்திருக்கும் போது தான் பலன் கொடுக்கிறோம். கிளைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதில்லை. அப்படி சண்டையிட்டால் அது கொடியை பாதிக்கும்.

“ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால் தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்; அவரைப் போல் நீங்கள் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்” என விவிலியம் நமக்கு போதனையைக் கொடுக்கிறது. இறைவனோடான உறவை வலிமைப்படுத்த, திருச்சபையோடான உறவை பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகிறது.

முடிவாக, இறைவன் விரும்பிய வாழ்க்கையை நாம் மண்ணில் வாழவேண்டுமெனில் உறவு எனும் துடுப்பைக் கொண்டு வாழ்க்கைப் படகைச் செலுத்த வேண்டும். அந்த உறவு பல பரிமாணங்களைக் கொண்டது. எல்லாமே இறைமகன் இயேசுவின் அன்பில் அடக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தன்னை, தன்னைச் சார்ந்தோரை, தன்னை ஈன்றோரை, தன்னோடு வாழ்வோரை, தன் திருச்சபையினரை, தன் சமூகத்தினரை என அனைவரையும் நேசிக்கும் நிலை வேண்டும். அனைவரோடும் இறைவனின் அன்பைப் பகிரும் வாழ்க்கை கை வரவேண்டும். அப்போது தான் உறவின் மேன்மை, இறையின் தன்மையாய் வெளிப்படும்.

*

 

Posted in Articles, Bible Poems, Psalm

திருப்பாடல்கள் தரும்பாடங்கள் – 4

Week 5

Image result for psalm 4

“இனி, நான் மன அமைதியுடன்

படுத்துறங்குவேன்; ஏனெனில்,

ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும்

நீரே என்னைப் பாதுகாப்புடன் 

வாழச் செய்கின்றீர்.”

திருப்பாடல்கள் நான்காம் பாடல், “மாலை நேரப் பாடல்” என்றும் அழைக்கப்படுகிறது. இரவு தூங்கப் போகும் முன் இதை தவறாமல் வாசிக்கும் மக்கள் ஏராளம் உண்டு. இந்த பாடலை எழுதியிருப்பவர் தாவீது மன்னன். இறைவனை நம்புபவர்களுக்குக் கிடைக்கின்ற அமைதியும் வாழ்வும் நிலையானது, பாவிகளின் வாழ்க்கையோ தற்காலிகமானது என்பதே இந்த திருப்பாடல் சொல்கின்ற உள்ளார்ந்த செய்தியாகும்.

தாவீது மன்னைன் ஆன்மீக வாழ்க்கையின் வேர்கள், “ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்” என்கின்ற விசுவாசத்தில் நிலைபெற்றிருக்கின்றன‌. இறைவன் நம்மை அவருடைய அன்பராகத் தேர்ந்து கொள்வது தான் மிகப்பெரிய உயரிய நிலை. “இவரே என் அன்பார்ந்த மகன்” என இயேசுவை நோக்கி தந்தையாம் இறைவன் சொன்னார். அன்பராய் மாறுவது என்பது அரிதான செயல். ஆனால் அதுவே வாழ்வை வளப்படுத்தும் செயல். 

அன்பராய் இருப்பதால் இறைவன் என்னென்ன தருகிறார் என்பதை இந்தத் திருப்பாடலில் தாவீது விளக்குகிறார்.

1. வேண்டுகையில் செவிசாய்க்கிறார் !

2. நெருக்கடியில் துணை செய்கிறார் !

3. மன்றாடுகையில் பதிலளிக்கிறார் ! 

4. நீதியானதை அருள்கிறார் !

5. தனிமையிலும் பாதுகாப்பு அருள்கிறார் !

இயேசு தனது தந்தையின் அன்பராக இருந்ததால் அவரது வேண்டுதல்கள் எல்லாமே உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டன. எல்லா நெருக்கடிகளிலும் ஞானமாய் செயல்படும் வல்லமை கிடைத்தது. பதில் கிடைக்காத வேண்டுதல் என எதுவுமே இருக்கவில்லை. அவரது மீட்பின் பயணத்தில் நீதியானவை  மட்டுமே வழங்கப்பட்டன. 

தாவீதும் தன்னை இறைவன் ‘அன்பராகத் தேர்ந்து கொண்டதாய்’ நம்புகிறார். எனவே தான் எத்தனை பிழைகள் செய்தாலும் மீண்டும் மீண்டும் இறைவனே தஞ்சம் என வருகிறார். இறைவன் நம்மை அன்பராகத் தேர்ந்து கொள்ள வேண்டுமெனில் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அவர் இந்த திருப்பாடலில் விளக்குகிறார்.

1. சினமுற்றாலும் பாவம் செய்யாதிருத்தல் !

2. உள்ளத்தோடு பேசி செம்மையாதல் !

3. தூய்மையான நம் இதயத்தை இறைவனுக்கு பலியாய் தருதல் !

4. ஆண்டவரின் ஒளியை பிரதிபலித்தல்

5. உலக செல்வத்திலல்ல, இறைவனில் மகிழ்ச்சியடைதல்.

கோபம் நம்மை மிக எளிதில் பாவத்துக்குள் இட்டுச் செல்கிறது. தேவையற்ற வாக்குவாதங்கள் தொடங்கி, வாழ்க்கையைச் சிதைக்கும் பெரிய சிக்கல்கள் வரை கோபத்தின் விளைவாய் உருவாகக் கூடும். சட்டென வருகின்ற கோபம் தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த கோபத்தின் வால்பிடித்து நாம் செய்யும் பாவம் தவிர்க்கக் கூடியது, தவிர்க்க வேண்டியது ! 

“எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வார்” எனும் விசுவாசம் இருப்பவர்கள் கோபத்தினால் வருகின்ற பாவங்களை எளிதில் விலக்குவார்கள். தந்தை எல்லாம் பார்த்துக் கொள்வார் என நம்பும் குழந்தை எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. ஆழமான விசுவாசம், கோபத்தை வெற்றி கொள்ள மிகவும் அவசியம்.

இதயத்தோடு பேசி அந்த கோபத்தின் துருக்களை அகற்றுவதும், அன்பின் அணுக்களால் இதயத்தை நிரப்புவதும் நாம் செய்ய வேண்டிய இரண்டாவது காரியம். இதயத்தை தூய்மையாக்கியபின் அதை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டியது மூன்றாவது தேவை. இறைவனுக்கு நம்மையே அப்படி அர்ப்பணித்தபின் நாம் இறைவனைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாய் மாறுவோம். அப்படி மாறும்போது நமக்கு உலக செல்வங்கள் எதுவுமே ஒரு பொருட்டாய் தெரிவதில்லை. மாறாக இறைவன் சார்ந்தவை மட்டுமே நமக்கு பெரிதாய் தெரியும்.

முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தார் ஒரு சீடர் ! அவரது வாழ்க்கை இவ்வுலகிலும் செழிக்கவில்லை, அவரை விண்ணுலகிலும் நுழைக்கவில்லை.  இயேசுவுக்காக வெள்ளிக்காசுகளை துச்சமாக மதிப்பவரே உண்மையான இயேசுவின் சீடர். அவருக்கு மகிழ்ச்சி இறைவனோடு இருப்பது மட்டுமே. 

அப்படிச் செய்யாமல் இருப்பவர்களுடைய சிந்தனைகள் எப்படி இருக்கும் என்பதையும் தாவீது அழகாக விளக்குகிறார். 

1, இறைவனின் மாட்சிக்கு இழுக்கானதைச் செய்வார்கள் ! 

2, வெறுமையானதைத் தேடிச் செல்வார்கள் ! 

3, பொய்யானதை விரும்புவார்கள் ! 

4, யார் தான் நமக்கு நலமானதைத் தருவார் என கேள்வி எழுப்புவார்கள் ! 

5, உலக செல்வங்களில் மகிழ்ச்சி அடைவார்கள்.

இந்த சங்கீதம் ஒரு முழுமையான சங்கீதம். இறைவனுடைய அன்பராய் நாம் மாறவேண்டியதே நமது வாழ்க்கை இலட்சியமாய் இருக்க வேண்டும். அப்படி மாற என்ன செய்ய வேண்டும் என்பதையும், அப்படி மாறினால் இறைவன் அருள்வது என்ன என்பதையும், அதற்குத் தடையாய் இருக்கும் செயல்கள் என்ன என்பதையும் இறைவன் நமக்கு தாவீதின் வாயிலாய் விளக்குகிறார்.

*

Posted in Articles, Christianity, Sunday School

Skit : கொலைவாழ்வா, நிலைவாழ்வா

Image result for court painting

( கோர்ட். நீதிபதி வருகிறார் )

(நீதிபதி அவைக்கு வருகிறார், குற்றவாளிக் கூண்டில் ஒருவர் நிற்கிறார். )

வக்கீல் : கனம் நீதிபதி அவர்களே… இவனுடைய குற்றத்துக்கான தீர்ப்பை இன்று வழங்குங்கள்.

நீதிபதி : அதற்காகத் தான் இன்று இங்கே வந்திருக்கிறோம். இன்று கடைசி நாள் விசாரணை உங்கள் தரப்பு வாதத்தை வையுங்கள்.

வக்கீல் : இவனுடைய குற்றம் மன்னிக்க முடியாத குற்றம். தன்னுடைய உயிர் நண்பனையே குத்திக் கொலை செய்திருக்கிறான். நம்பிக்கைத் துரோகம் இழைத்திருக்கிறான்.

குற்றவாளி : ( அமைதியாய் நிற்கிறான் )

வக்கீல் : இத்தகைய மனிதர்களை சமூகத்தில் நடமாடவிட்டால் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகிவிடும். நண்பனையே கொலை செய்யுமளவுக்கு மனம் இறுகி விட்ட மனிதனால் மற்றவர்களை எது வேண்டுமானாலும் செய்ய முடியும்.

( குற்றவாளி அமைதியாய் நிற்கிறார் )

வக்கீல் 2 : மன்னிக்க வேண்டும் யுவர் ஆனர். எனது கட்சிக்காரர் வேண்டுமென்றே அந்தக் கொலையைச் செய்யவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த கொலை நடந்திருக்கிறது.

வக்கீல் 1 : இது தப்பித்தல் முயற்சி.

வக்கீல் 2 : நண்பர்களுக்கிடையே நடந்த வாக்குவாதம் முற்றிப் போய் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது.

வக்கீல் 1 : நண்பர்களின் உரையாடல் மரணத்தில் முடிவது மன்னிக்க முடியாதது.

வக்கீல் 2 : வாக்குவாதம் இருநபர் சம்பந்தப்பட்டது. அதில் ஒருவரை மட்டுமே குற்றவாளியாக்குவது மட்டும் நியாயமா.

வக்கீல் 1 : வாக்குவாதம் ஒருவரை மதியிழக்கச் செய்கிறதென்றால் அதை எப்படி மன்னிக்க முடியும் ?

வக்கீல் 2 : கணநேர கண்ணயர்தல் விபத்துக்கு காரணமாகிவிடுவதைப் போல, கண நேர உணர்ச்சி அசம்பாவிதத்தில் முடிந்திருக்கிறது. இது இருவரும் சம்பத்தப்பட்ட விஷயம்.

வக்கீல் 1 : கொலை செய்யப்பட்டவரை அழைத்து விசாரிக்க முடியாது. கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல யாராலும் முடியாது.

வக்கீல் 2 : அன்று நடந்த விஷயங்களை கனம் கோர்ட்டார் முன் ஏற்கனவே சமர்ப்பித்திருக்கிறேன். இது ஒரு எதிர்பாரா விபத்து. இதில் என் கட்சிக்காரர் சிக்கிக் கொண்டார் அவ்வளவு தான். அதனால் அவரை மன்னித்து, குறைந்த பட்ச தண்டனை வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

வக்கீல் 1 : அன்று நடந்த விஷயங்களையும், அதற்கு முன்பு நடந்த விஷயங்களையும் சமர்ப்பித்திருக்கிறேன். இது ஒரு படுகொலை. எனவே தாங்கள் இதன் வீரியத்தை உணர்ந்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க கேட்டுக்கொள்கிறேன்

நீதிபதி : (குற்றவாளியை நோக்கி ) நீ ஏதாவது சொல்ல விரும்பறியா ?

குற்றவாளி : ஆம் ஐயா.. இந்த கொலையை செஞ்சது நான் தான். கோபமும் வெறியும் தலைக்கேற நான் இந்த கொலையை செஞ்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க. இதுக்கு வேற யாரும் காரணம் இல்லை. எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க. (கையெடுத்து கும்பிடுகிறார் )

நீதிபதி : குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவனுக்குரிய தண்டனையை வழங்க வேண்டியது அவசியமாகிறது.

(நீதிபதி தீர்ப்பை எழுதுகிறார் )

நீதிபதி : கொலையை நியாயப்படுத்த முடியாது. இரு தரப்பு வாதங்களையும் நான் கேட்டேன், ஆவணங்களைப் பார்த்தேன். இந்த குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கிறேன். இவன் நெற்றியில் சுட்டு இவனைக் கொல்ல உத்தரவிடுகிறேன். இப்போ இவனை ஜெயிலில் கொண்டு போடுங்கள்.

( அவர்கள் அவனை கூட்டிக் கொண்டு போகிறார்கள்.. குற்றவாளி ஐயா.. ஐயா.. என கத்திக் கொண்டே போகிறான். அவர்கள் போனபின்…. நீதிபதி தனது இருக்கையை விட்டு கீழே இறங்குகிறார் )

நீதிபதி : எல்லோரும் கவனமாய் கேளுங்கள். அந்த குற்றவாளி மாணிக்கத்துக்குரிய தண்டனையை ஏற்க நான் இப்போது தயாராய் வந்திருக்கிறேன். என்னைச் சுட்டுக் கொல்லுங்கள். அந்த நபரை மன்னித்து விடுதலை செய்கிறேன்.

காவலர் : ( அதிர்ச்சியுடன் ) என்ன சொன்னீங்க ?

நீதிபதி : அவருக்குப் பதிலா நான் என் உயிரைத் தருகிறேன்.. எடுத்துக்கோங்க அவரை விட்டு விடுங்கள்.

காவலர் : அப்படி செய்ய அதிகாரம் இல்லையே ?

நீதிபதி : நீதி இருக்கையில் இருக்கும் நான் அதற்கான தீர்ப்பை சொல்லலாம். என்னை கொல்லுங்கள். அவர் வாழட்டும். இது எனது தீர்ப்பு.

காவலர் : அவர் தான் கொலை செய்திருக்கிறார். நீங்கள் அல்ல

நீதிபதி : அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மன்னிப்பு கேட்பவர் மன்னிக்கப்பட வேண்டும். வாழவேண்டும்.

காவலர் : தப்பு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் விதி. கொலையாளியை எப்படி மன்னிப்பது ? சின்ன குற்றம் என்றால் பரவாயில்லை.

நீதிபதி : அதனால் தான் அந்த உயிருக்கு இணையாக என் உயிரை தருகிறேன். என் உயிரை ஈடாக வைத்துக் கொண்டு அவரை விட்டு விடுங்கள்.

காவலர் : ஐயா அவர் யார் என்பதே உங்களுக்குத் தெரியாது. அவருக்காக நீங்கள் ஏன் உயிரை விட வேண்டும் ?

நீதிபதி : என்னை நோக்கி மன்னிப்பு கேட்ட அவர் யாராய் இருந்தாலும் அவருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என நினைக்கிறேன்.

காவலர் : இது நம்ப முடியாத அன்பாய் இருக்கிறது ஐயா.

நீதிபதி : இதோ இந்த கடிதத்தை மட்டும் அந்த நபரிடம் கொடுத்து விடுங்கள். இப்போது என்னை கொன்று விடுங்கள். இது நீதியின் தீர்ப்பு.

காவலர் : துப்பாக்கியை எடுத்து நீதிபதியின் தலையில் குறிவைத்து சுடுகிறார்.

( நீதிபதி கீழே விழுந்து இறக்கிறார் )

காட்சி 2

Image result for court painting( குற்றவாளியைச் சந்திக்க அந்த காவலாளி வருகிறார் )

காவலர் : எனக்கு ஒரு நபரை அவசரமாகப் பார்க்க வேண்டும்.

சிறை அதிகாரி : யாரை ?

காவலர் : மாணிக்கத்தை

சிறை அதிகாரி : யாரு ? அந்த கொலை காரனையா ? அவனுக்கு மரண தண்டனை கிடைச்சிருக்கு. அவனை பாக்க முடியாது.

காவலர் : இல்லை.. அவரைப் பார்க்கணும்.. அதுக்கான அனுமதிக் கடிதத்தோட தான் வந்திருக்கேன்

( கடிதத்தைக் கொடுக்கிறார் )

சிறை அதிகாரி : ( கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார் ) இ…இது … உண்மையா ?

காவலர் : ஆமா, நாம அவரைப் பாக்கலாமா ?

சிறை அதிகாரி : இதுக்கு மேல நான் தடை பண்ண முடியாது.. வாங்க போலாம்.

( சிறை அதிகாரியை, கைதியிடம் அழைத்துப் போகிறார். )

காவலர் : மாணிக்கம்… உனக்காக ஒரு செய்தியோட வந்திருக்கேன்.

மாணிக்கம் : என்ன செய்தி இனிமே.. மரண தண்டனை கொடுத்து என் வாழ்க்கையையே அழிச்சிட்டீங்க. இனிமே என்ன செய்தி இருக்கப் போவுது !

காவலர் : உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி தான் கொண்டு வந்திருக்கேன்.

மாணிக்கம் : கடைசி ஆசை என்னன்னு கேட்டு கஷ்டப்படுத்தப் போறீங்களா ? இல்லை பேசிட்டே இருக்கும்போ சுடப் போறீங்களா ?

காவலர் : உனக்கு விடுதலை கிடைச்சிருக்கு !

மாணிக்கம் : விடுதலையா ? எனக்கா ? எனக்கான முடிவு என்னன்னு என் காதாலயே கேட்டேனே நான்.

காவலர் : உண்மையிலேயே உனக்கு விடுதலை கிடைச்சிருக்குப்பா

மாணிக்கம் : இந்த உலகத்தை விட்டு போக விடுதலை கிடைச்சிருக்கு அப்படித் தானே !

காவலர் : இதோ பாரு.. உனக்கான விடுதலைப் பத்திரம். நம்பு. உனக்குக் கிடைக்க வேண்டிய தண்டனையை இன்னொருத்தர் கேட்டு வாங்கிட்டாரு. உனக்குப் பதிலா அவரு இறந்திட்டாரு.

மாணிக்கம் : (குழப்பமாக ) எனக்குப் பதிலாக இன்னொருத்தர் சாகறதா ? என் தண்டனையை இன்னொருத்தர் கேட்டு வாங்கறதா ? நம்ப முடியலையே !

காவலர் : எங்களுக்கே நம்ப முடியல. பயங்கர ஷாக்

மாணிக்கம் : (மகிழ்ச்சியும், துக்கமும் கலந்த குழப்ப நிலையில் ) ஐயா…கடிதத்துல விடுதலைன்னு இருக்கு. எனக்கு விடுதலை வாங்கி தர எனக்காக மரிச்ச அந்த மனுஷன் யாரு ? கண்டிப்பா என் குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருத்தரா தான் இருப்பாங்க.

காவலர் : இல்லை. உனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மாணிக்கம் : அப்படியா… அவரு யாருன்னு சீக்கிரம் சொல்லுங்க, எனக்கு தலையே வெடிச்சிடும்போல இருக்கு.

காவலர் : சொல்றேன்.. உனக்கு மரணதண்டனை என தீர்ப்பு சொன்ன அதே நீதிபதி தான், உனக்காக மரண தண்டனையை ஏற்றுக் கொண்டிருக்காரு !

மாணிக்கம் : ( அதிர்ச்சியுடன் ) வாட்,,, என்ன சொல்றீங்க.

காவலர் : ஆமா… அவர் தான். அவரோட நீதி வழுவக் கூடாது, அதனால உனக்கு மரண தண்டனை குடுத்தாரு. அவரோட அன்பு ரொம்ப உயர்ந்தது. அதனால உனக்காக அவர் உயிரைக் கொடுத்தாரு.

மாணிக்கம் : ஐயோ.. நான் என்ன செய்வேன். என்ன நடக்குதுன்னே தெரியலையே… இதென்ன கனவா ? நெஜமா ?

காவலர் : நிஜம் தான்… அப்படியே அவரோட வீட்டை உன் பெயருக்கு எழுதிக் கொடுக்க சொல்லிட்டாரு. அது இனிமே உன்னோடது. அதை நீ இலவசமா எடுத்துக்கலாம்.

மாணிக்கம் : வீடா ? அவரோட வீடா

காவலர் : மட்டுமல்லப்பா.. அவரோட காரையும் நீயே எடுத்துக்கச் சொல்லிட்டாரு….

மாணிக்கம் : வாட்… காரா ?

காவல்ர் : அது மட்டுமில்லப்பா, அவரோட பேங்க அக்கவுண்ட்ஸ் எல்லாம் உன் கிட்டே குடுக்க சொல்லியிருக்காரு. எல்லாம் உனக்கு தான்.. இலவசமா

மாணிக்கம் : ( அழுகிறார் ) ஓ.. நோ.. இதெல்லாம் எனக்கு அருகதையில்லாத விஷயம். கொலைகாரனான எனக்கு இதென்ன இவ்வளவு மரியாதையும், அன்பளிப்பும்.

காவலர் : நீ உன் தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதால அவர் உன்னை முழுசா மன்னிச்சு, உனக்காக எல்லாத்தையும் தந்திருக்காருப்பா.

மாணிக்கம் : இதையெல்லாம் என்னால ஏத்துக்கவே முடியாது… நான் கொலைகாரன்.. எனக்கு விடுதலை வேண்டாம்…

காவலன் : இல்லப்பா.. நீ இதையெல்லாம் ஏத்துக்கலேன்னா.. அவரு காட்டின அன்புக்கு அர்த்தமே இல்லாம போயிடும்.. உனக்காக தானே இவ்வளவும் பண்ணியிருக்காரு.

மாணிக்கம் : உலகத்துல எங்கயாச்சும் இப்படி ஒரு விஷயம் நடக்க முடியுமாய்யா.. என்னால தாங்க முடியல.

காவலன் : இப்படி ஒரு விஷயம் நடக்கவே நடக்காது.. நடந்ததும் இல்லை.

சிறை அதிகாரி : இல்லப்பா.. நடந்திருக்கு.. ஒரு தடவை நடந்திருக்கு…

காவலர் : என்ன சொல்றீங்க ? எங்கே இங்கேயா ?

சிறை அதிகாரி : இல்லை, இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி. கடவுளோட மகனான இயேசு பூமிக்கு மனிதனா வந்தாரு. மக்களோட பாவங்களுக்காக அவர் தன்னோட உயிரையே கையளித்தாரு.

மாணிக்கம் : மக்களுக்காக உயிரையா ? ஏன் ? ஏன் ? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..

சிறை அதிகாரி : அது தான் அவரோட கிருபைப்பா.. அருகதையில்லாத நம்மை மாதிரி பாவிகளுக்காக அவர் தன்னோட உயிரைத் தந்தது தான் கிருபை. அதன் மூலம் தான் நமக்கு மீட்பு கிடைச்சிருக்கு. நம்ம நீதிபதி உனக்கு இவ்வுலக வாழ்க்கையை தந்திருக்காரு, இயேசு நமக்கு விண்ணுலக வாழ்க்கையே தராரு

மாணிக்கம் : ஐயா… அந்த கிருபை எனக்குக் கிடைக்குமாய்யா ?

சிறை அதிகாரி : எல்லாருக்குமே அது இலவசமா கிடைக்கும்பா… இயேசு நமக்காக உயிர்விட்டார்ன்னு நம்பி, அவரை நமது உள்ளத்துல ஏற்றுக் கொண்டா போதும். அந்த மீட்பு நமக்கு இலவசமா கிடைக்கும்.

காவலர் : ஐயா.. இது எனக்கே புதுசா இருக்கு. எல்லாருக்குமே இது இலவசமா ?

சிறை அதிகாரி : ஆமாங்கய்யா… சின்னவன், பெரியவர், நல்லவன், கெட்டவன், வேலை இருக்கிறவன், இல்லாதவன்ங்கற பாகுபாடு கிடையாது. இலவசமா கிடைக்கும், விருப்பப்பட்டு வாங்கினா போதும்.

மாணிக்கம் : ரொம்ப மகிழ்ச்சி ஐயா.. சிறையிலிருந்தும் விடுதலை. பாவத்திலிருந்தும் விடுதலை. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் என்ன தான் பண்ணணும் ?

சிறை அதிகாரி : நன்றியுள்ளவங்களா இருக்கணும். அவ்வளவு தான். காலம் பூரா அவருக்கு கடமைப்பட்டிருக்கணும். அவரு சொல்ற விஷயங்களைச் செய்யணும், அவ்ருக்குப் பிடிச்ச மாதிரி நடக்கணும். அவ்ளோ தான்.

மாணிக்கம் : அவரோட கிருபைக்கு, காலம் பூரா நன்றி உள்ளவனா இருப்பேங்கய்யா… ( கண்ணீர் விடுகிறார் )

>>>>>

பின் குரல்

நமக்கு சற்றும் அருகதையில்லாத விண்ணக வாழ்வை நமக்கு வழங்கி இறைவனின் கிருபையை நமக்குப் புரிய வைத்திருக்கிறார் இயேசு. நமது ஆத்மார்த்த அன்பை வெளிப்படுத்தி அவரது கிருபையை அங்கீகரிப்போம். அதையே இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

***

Posted in Articles, Bible Poems, Psalm

திருப்பாடல்கள் தரும் பாடங்கள் – 3

 Image result for psalm 3

“நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்”

தாவீது மன்னன் பொற்கால ஆட்சியை இஸ்ரேல் மக்களுக்கு அளித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் சிற்றின்ப நாட்டத்தினால் பத்சேபா எனும் பெண்மீது ஆசை கொண்டு அவரை அபகரித்தார். அதற்காக அந்தப் பெண்ணின் கணவனை சூழ்ச்சியால் கொலையும் செய்துவிட்டார். அந்தப் பாவம் அவரைத் துரத்தியது. அவருடைய மகள் தாமாரை, அவருடைய இன்னொரு மனைவியின் மூலம் பிறந்த அம்மோன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். தாமாரின் சகோதரன் அப்சலோம், அம்மோனை கொலை செய்து விட்டார்.

தான் செய்த பாலியல் பிழையும், படுகொலையும் தனது இரத்தக் கரங்களை பிள்ளைகளின் வாழ்விலும் பதித்ததைக் கண்டு தாவீது அதிர்ந்து போனார். அத்துடன் அவரது அதிர்ச்சி முடிந்து விடவில்லை. தாவீதை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தான் அரசனாகவேண்டுமென திட்டமிட்டு காய் நகர்த்தினார் அப்சலோம். அந்த சூழலில் தனது சொந்த மகனிடமிருந்தே தப்பி ஓடுகிறார் தாவீது மன்னர்.

அரியணையை விட்டு, கிரீடத்தை விட்டு  பாழ்வெளிகளிலோ, குகையிலோ பதுங்கி வாழ்ந்த நாட்களில் தாவீது மன்னர் இந்தப் பாடலை எழுதுகிறார். எப்படிப்பட்ட சூழல் வந்தபோதும், தான் பாவத்தின் பாதையில் வழுக்கி விழுந்தபோதும் மீண்டும் இறைவனே தஞ்சமென நெருங்கி வருகின்ற நெஞ்சம் தாவீதிடம் இருந்தது.

தனது துயரத்தையும், தனது இயலாமையையும், தனது மன ஆதங்கத்தையும் அவர் கடவுளிடம் கொட்டுகிறார்.

* என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர் !

* என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்!

* கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்” என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர் !

என, தனது ஆதங்கத்தை மூன்று அடுக்காகச் சொல்லும் தாவீது, கடவுளின் அரவணைப்பையும் அதே போல மூன்று அடுக்காக அணிந்து கொள்கிறார்.

* நீரே எனைக் காக்கும் கேடயம்

* நீரே எனது மாட்சி

* என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே !

என தாவீது மன்னர் இறைவன் மீது தனக்கு இருக்கின்ற ஆழமான பற்றுறுதியை வெளிப்படுத்துகிறார். எத்தனை எதிரிகள் பெருகினாலும், இறைவன் நம்மைக் காக்க மாட்டார் என எத்தனை பேர் தான் நம்மிடம் சொன்னாலும் நமது இதயம் இறைவனை நோக்கியே நீளவேண்டும். அவர் மட்டுமே தஞ்சமென அவர் பாதம் விழ வேண்டும். 

இறைவன் நம்மைச் சுற்றி அரணாய் இருக்கிறார் எனும் நம்பிக்கை நமக்குள் எழும்போது, நாம் நிம்மதியாகப் படுத்துறங்கி விழித்தெழுவோம். இறைவா எனக்குக் கேடயமாய் வாரும் என தாவீது வேண்டுதல் செய்யவில்லை, “நீரே எனது கேடயம்” என அறிக்கை செய்கிறார். இறைவனின் அன்பின் மீதான நம்பிக்கையை தாவீது வெளிப்படுத்துகிறார்.

பாதுகாப்புடன் நின்றுவிடாமல் இழந்து போன தனது மாட்சியை மீட்டுத் தருபவரும் இறைவரே ! மட்டுமல்ல, இறைவனே தனது மாட்சி என தாவீது அறிக்கையிடுகிறார். தனது மாட்சியை எதிலெல்லாமோ தேடிய தாவீது, இறைவனே தனது மாட்சி என கடைசியில் நிற்கிறார். 

ஒரு கவண் கல்லினால் கோலியாத்தை சாய்த்தபோதும் தாவீதோடு கடவுள் இருந்தார் !

எங்கே தலைசாய்ப்பது என்று அறியாமல் உயிர் பிழைக்க தப்பி ஓடும்போதும் தாவீதோடு கடவுள் இருக்கிறார் !

தான் அழைக்கும்போது இறைவன் தனது “திருமலை”யிலிரிந்து தனக்கு பதிலளிப்பார் என்பதை தாவீது உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கை தான் பாழ்வெளியில், பயத்தின் சூழலில், வசதிகளற்ற வெட்டாந்தரையில் அவரை நிம்மதியுடன் படுக்க வைக்கிறது. அலையடிக்கும் சூழல் வெளியே நிலவினாலும், உள்ளமோ இறைவன் மீது கொண்ட நம்பிக்கையினால் அமைதியாய் இருக்கிறது.

“இறைவனே என் எதிரிகளை அழியும்” என தனக்கான யுத்ததுக்கு தலைமை தாங்க கடவுளை அழைக்கிறார் தாவீது. நமது யுத்தத்துக்கு இறைவன் தலைமை தாங்கும் போது வெற்றிகள் சர்வ நிச்சயமாகிவிடுகின்றன. 

பாவத்தோடான நமது போராட்டம், ஆன்மீக தளர்ச்சிகளுடனான நமது போராட்டம் போன்றவை இறைவனின் தலைமையில், இறைவனின் உதவியுடன் நடக்கையில் வெற்றியாய் முடிந்து விடுகிறது. காரணம், “விடுதலை அளிப்பவர் ஆண்டவர்” என தாவீது மன்னர் உறுதியாய் சொல்கிறார். 

எத்தனை பாவங்கள் செய்தாலும், எத்தனை கடினமான சூழலில் இருந்தாலும் நமது தயக்கங்கள், பயங்கள், சந்தேகங்கள் அனைத்தையும் விட்டு விட்டு இறைவன் பாதத்தில் சரணடைய வேண்டும் எனும் பாடத்தையே இந்த சங்கீதம் அழுத்தமாய் நமக்கு விளக்குகிறது.

*