Posted in Articles

ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே.

ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே.

(ஒரு பட்டி மன்ற உரையின் சாராம்சம் )

Image result for new testament

அவையோருக்கு வணக்கம். பழையவற்றைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் எனது எதிர்கட்சி நண்பர்களுக்கும் வணக்கம். 

ஒரு புதிய துணி கிடைத்தபிறகும், பழைய துணி தான் வேணும்ன்னு அடம் புடிக்கிறீங்க. சுடச் சுட சோறு குடுத்தா கூட எனக்கு பழங்கஞ்சி தான் வேணும்ன்னு ஒத்தக்கால்ல நிக்கறீங்க.

இறைவார்த்தையே தெளிவா சொல்லுது, “பழைய ஏற்பாடு என்பது புதிய ஏற்பாட்டுக்கான ஒரு முன்னோடி“. 

புதிய ஏற்பாடு என்பது நிஜம்.

பழைய ஏற்பாடு என்பது நிஜத்தின் நிழல்.

காச்சலடிச்சா நிழலுக்கு ஊசி போட சொல்றீங்க. நாங்க நிஜத்துக்கு ஊசி போட சொல்றோம். எது சரின்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

ஆன்மீக வாழ்க்கைக்கு ஏன் புதிய ஏற்பாடு தான் முக்கியம் என்பதை சுருக்கமா சொல்லிடறேன். எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான். இதுக்கு ஒரு பட்டிமன்றமே தேவையில்லை. இருந்தாலும் சொல்றேன்.

முதன் முதலா ஒரே ஒரு கேள்வி. ஆன்மீகம் என்பது என்ன ? இயேசுவை அறிதல். இயேசுவின் வழியில் செல்தல். இயேசுவின் போதனைகளைக் கடைபிடித்தல். அவரோடு பயணித்தல். இது தானே ஆன்மீகம் ? இயேசுவே இல்லாத பழைய ஏற்பாட்டில் இதெல்லாம் சாத்தியமா ?  அப்போ ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடுன்னு தனியா வேற சொல்லணுமா ? இதுக்கெல்லாம் ஒரு பட்டிமன்றம், அதுக்கு ஒரு நடுவர் வேற.

முக்கியமான இன்னொரு நபருக்கு வருவோம்,

1. பரிசுத்த ஆவியானவர் எங்கே வருகிறார் ? பழைய ஏற்பாட்டிலா ? புதிய ஏற்பாட்டிலா ?

நான் போய் ஒரு தேற்றரவாளனை அனுப்புவேன்என்று இயேசு சொன்னார். அவர் தான் நமது ஆன்மீக வாழ்க்கைக்கு அஸ்திவாரமே ! ஆவியின் கனிகள் ஒன்பது. அதை மனப்பாடமா சொல்லுவீங்க. ஆன்மீக வாழ்க்கைக்கு அந்தக் கனிகள் இல்லேன்னா என்னங்க ஆவும் ?

ஆவியானவர் என்னெல்லாம் செய்கிறார், 

, இயேசுவைப் பற்றி நமக்கு விளக்குவார். ( என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். யோவான் 14 : 27 )

, பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்வார்.

, நமக்கு உள்ளே வாசம் செய்பவராக இருக்கிறார். 

, நம்மை  சத்தியத்துக்குள் வழி நடத்துவார் ( யோவான் 16 : 8 )

, நம்மை சாட்சியாக நிறுத்துகிறார்

, சமாதானத்தைத் தருகிறார் ( யோவான் 14 : 27. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன் )

, நமக்காக செபம் செய்கிறார் ( அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.  ரோமர் 8 : 26 ) 

இப்படி நம்மை நிரப்புகிறார், நம்மை பலப்படுத்துகிறார், நம்மை கனிகொடுப்பவர்களாக்குகிறார் என பரிசுத்த ஆவியானவர் 50 பணிகளைச் செய்வதாக பைபிள் சொல்கிறது.

இப்போ சொல்லுங்க, ஆன்மீக வாழ்வுக்கு பழைய ஏற்பாடா வேணும் உங்களுக்கு.

2. இரண்டாவதாக,

பழைய ஏற்பாடு சட்டங்களால் கட்டமைக்கப்பட்டது

புதிய ஏற்பாடு கிருபையினால் கட்டமைக்கப்பட்டது.

ஆன்மீக வாழ்வுக்கு சட்டங்கள் தேவையா, கிருபை தேவையா என்று கேட்டால் பதிலை நான் சொல்லத் தேவையில்லை.

இதைச் செய், இதைச் செய்யாதே என 613 சட்டங்களோடு வந்தது பழைய ஏற்பாடு.

அன்பு மட்டும் செய் என ஒரே ஒரு கட்டளையோடு வந்தது புதிய ஏற்பாடு. “கடவுளை, மனிதனை அன்பு செய்

சட்டங்களால் மீட்பு இல்லை, 

கிருபையால் அழிவு இல்லை

எது நமது ஆன்மீக வாழ்வை பலப்படுத்தும் ? சட்டங்களோடு வரும் பழைய ஏற்பாடு வேண்டுமா ? கிருபையோடு வரும் புதிய ஏற்பாடு வேண்டுமா ?

3. 

பழைய ஏற்பாடு, நான் சொல்வதைக் கேள் என்றது புதிய ஏற்பாடு நான் சொல்வதைச் செய் என்கிறது. “லிசன் டு மி யா, ஃபாலோ மீ யா ? எது வேண்டும் ?

பழைய ஏற்பாடு என்பது கரெஸ்பான்டன்ஸ் கோர்ஸ் நீச்சல் கத்துக்கிறது போல. படம் வரைஞ்சு விளக்குவாங்க. நாம போய் தண்ணில குதிச்சா அப்படியே போய்ட வேண்டியது தான்.

புதிய ஏற்பாடு என்னைப் பின்செல் என்கிறது. “என்னைப் பின்செல்என்றார் இயேசு.  நான் இயேசுவைப் பின்பற்றுவது போல நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்என்கிறார் பவுல். 

கைபிடித்து அழைத்துச் செல்வது உங்கள் ஆன்மீக வாழ்க்கையை பலப்படுத்துமா ? அட்வைஸ் செய்து விட்டுப் போவது பலப்படுத்துமா ?

4. 

பழைய ஏற்பாடு என்பது கிளைகளை கவனிப்பது. புதிய ஏற்பாடு என்பது வேர்களை விசாரிப்பது.

புரியும் படியா சொல்றேன். பழைய ஏற்பாட்டில் நம்முடைய செயல்கள் வெளிப்பார்வைக்கு சரியாய் இருந்தால் போதும். புதிய ஏற்பாட்டைப் பொறுத்தவரை அது ஆன்மீகத்தின் உயர்நிலை. நமது சிந்தனைகளே சரி செய்யப்பட வேண்டும்.

கொலை செய்யாதே என்கிறது பழைய ஏற்பாடு

சகோதரன் மேல் கோபம் கொள்ளாதே என்கிறது புதிய ஏற்பாடு.

விபச்சாரம் செய்யாதே என்கிறது பழைய ஏற்பாடு

இச்சைப் பார்வையே வேண்டாமடா என்கிறது புதிய ஏற்பாடு

களவு செய்யாதே என்கிறது பழைய ஏற்பாடு, பிறர் பொருள் மீது ஆசையே படாதே என்கிறது புதிய ஏற்பாடு.

எது ஆன்மீகத்தின் உயர்நிலை. எது நம்மை ஆன்மீகத்தில் வளர்ச்சியடையச் செய்கிறது.

பழைய ஏற்பாட்டுச் சட்டங்களில் ஊறிப் போன மக்களைப் பார்த்தல்லவா இயேசு சொன்னார், “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளேஎன்று !!!

5. சரி, பழைய ஏற்பாட்டில் பலரோட கதைகளைச் சொல்றீங்க. ….. இவங்களைப் பற்றியெல்லாம் சொல்றீங்க.. அவங்க எல்லாம் ஆன்மீகத்தில் உயர் நிலை அடைஞ்சாங்களா ? கொஞ்சம் யோசிங்க

* ஆபிரகாம் கடவுள் பேச்சை மீறி எகிப்துக்கு போனதும், அவசரப் பட்டு ஆகாரைத் திருமணம் செய்ததும் தெரியுமா தெரியாதா ? அந்த ஒரு கல்யாணம் மட்டும் இல்லாம இருந்திருந்தா இன்னிக்கு உலகத்துல கிறிஸ்தவத்துக்கு எதிரா இருக்கிற ஒரு மிகப்பெரிய மதமே இருந்திருக்காது. தெரியுமா தெரியாதா ?

* சரி, தாவீதை சொல்றீங்க. பத்சேபா யாரு ? உரியாவை தாவீது என்ன பண்ணினாரு ? சரி எல்லாம் போகட்டும். மரணப் படுக்கைல அவரு என்னதான் சொன்னாரு ? நான் கொல்லமாட்டேன்னு சொன்னவனை நீ கொல்லுடா.. ந்னு சொல்றாரு. இது தான் ஆன்மீகத்தின் உயர் நிலையா ? மரணப் படுக்கைல பையன் கிட்டே இதையா ஒருத்தரு சொல்லுவாரு ?

* சரி, நோவாவை எடுத்துக்கோங்கஓவரா தண்ணியடிச்சு ஆடை விலகிக் கிடந்தாரா இல்லையா ?

* யோபு, நீதிமான்.. உத்தமன்.. ஒத்துக்கறேன். கஷ்டம் ஓவரானப்போ என்ன சொன்னாரு. ஐயோ.. நான் பொறந்த நாள் சபிக்கப்படட்டும்.. ந்னு கடவுள் கூட சண்டை போட்டாரா இல்லையா ?

* ஈசாக்கு.. ஆபிரகாமோட பையன். எப்படி இருக்கணும் ? சூப்பரா கறி சமைச்சு தர பையன் கிட்டே ஓவர் பாசம். இளையவனை தான் ஆசீர்வதிப்பேன்னு சொன்னப்புறமும் ஏசாவோட வேட்டைப் பொருள் தான் பிரியம். வயிறு தான் அவருக்கு கடவுளாச்சா இல்லையா ?

* யாக்கோபுஊரை அடிச்சு உலைல போட்டான். கடைசில அவன் மாமனாரு அவனை அடிச்சு வேலை வாங்கி கசக்கிப் புழிஞ்சாரு. பெண்ணாசை, மண்ணாசைன்னு அவன் வாழ்க்கை எப்படி இருந்துது ?

* சாலமோன். நீதி மொழிகள், உன்னதப்பாட்டு, பிரசங்கி ந்னு பைபிள்ள பட்டையைக் கிளப்பினாரு. என்னாச்சு ? கடைசில பாக்கிறவங்க எல்லாம் பொண்டாட்டி. மதம், இனம், குலம், கோத்திரம் எதுவும் பாக்கல. ஏன் ? கடவுளையே பாக்கலய்யா.. இவரு தான் உங்களுக்கு ஆன்மீக வளர்ச்சிக்கு உதாரணமா இருக்காரா ?

* யோசேப்பு பற்றி பேசலாம். ரொம்ப அற்புதமான மனிதர். ஆனா அவர் யாரு ? இயேசுவின் முன்னோடி. இயேசுவோட நிழல். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் மாதிரி அவரு. ஒரு சோறை எடுத்து பதம் பார்த்தா வயிறு நெரம்பிடுமா ? ஆன்மீகம் வளந்துடுமா ?

சொன்னா, சொல்லிட்டே போலாம். 

புதிய ஏற்பாட்டுல சில விஷயங்களை மட்டும் சொல்றேன். 

கேட்டுட்டு சைலன்டா போயிடுங்க.. மறுபடி விவாதம், கிவாதம் ந்னு வந்துடாதீங்க.

* பவுல்.. கிறிஸ்தவர்களைக் கொன்று குவிச்சவன். இயேசுவோட குரல் அவனோர வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுச்சு. புதிய ஏற்பாடு நூலில் அவர் மூலமா கடவுள் பேசிய விஷயங்கள் எத்தனை எத்தனை ? அவையெல்லாம் தானே நம்முடைய ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்துகின்றன.

* கல்லெறிஞ்சு கொன்னப்போ ஸ்தேவான் என்ன சொன்னாரு ? மன்னிப்பை வேண்டினார். சிலுவையில் இயேசு செய்து காட்டியதை அப்படியே செய்தார் ஸ்தேவான். ஆன்மீக உயர்நிலைக்கு வேறென்ன சாட்சி வேண்டும் ?

* இயேசு வெறும் பன்னிரண்டு பேரைத் தயாராக்கினார். அதுல ஒருத்தன் தறுதலை. அந்த பதினோரு பேரும் சேர்ந்து தான் இன்னிக்கு கிறிஸ்தவம் உலகிலேயே மிகப்பெரிய மதம் எனுமளவில் வளர்த்து வுட்டாங்க. பரிசுத்த ஆவியின் வல்லமையால. என்ன இது கூட ஆன்மீக வளர்ச்சி இல்லேன்னு சொல்லுவீங்களா

* ஐயா.. என்னை சிலுவைல அறையாதீங்க.. இயேசுவைப் போல அறையாதீங்க.. தலைகீழா அறையுங்கன்னு சொன்னாரேய்யாஅது ஆன்மீக உயர்நிலைக்கு உதாரணம் இல்லையா ?

* இயேசுவின் போதனைகளும், உவமைகளும் தராத ஆன்மீக வளர்ச்சியை எந்த நூல் தரும் ? சொல்லுங்க..

* மலைப்பொழிவு தராத மன வளர்ச்சியை எந்த பழைய ஏற்பாடு தரும் ?

கடைசியா ஒண்ணு சொல்றேன். பழைய ஏற்பாடு கண்ணாடி மாதிரி. முகத்துல அழுக்கு இருக்குன்னு சொல்லும். கண்ணாடி உங்க அழுக்கை கழுவாது. 

புதிய ஏற்பாடு அழுக்கைக் காட்டுவதோட மட்டுமல்ல, அந்த அழுக்கை கழுவுகிற கிருபையோடு வரும். எது வேண்டும் உங்களுக்கு ?

கடைசியாக ஒன்றே ஒன்று.

இயேசு நமக்கு முன்செல்பவர் என்கிறது புதிய ஏற்பாடு. எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்ட வந்தவர் தான் இயேசு. அவருடைய வாழ்க்கையை வாழ்வது தான் ஆன்மீக வளர்ச்சி. அது இயேசுவே தரிசனமாகாத பழைய ஏற்பாட்டில் சாத்தியமே இல்லைபுதிய ஏற்பாட்டில் தான் சாத்தியம் என கூறி விடை பெறுகிறேன்.

Posted in Sunday School

Skit : நன்றி மறப்பது நன்றன்று

நன்றி மறப்பது நன்றன்று

 

Image result for 10 lepers

_______

( ஒரு நபர் அங்கும் இங்கும் ஓடி…. எல்லாவற்றையும் அதிசயமாய் பார்க்கிறார்.. ரசிக்கிறார்.. தொட்டுப் பார்க்கிறார் )

நபர் 1 : வாய்… இந்த கடைங்க எல்லாம் எவ்வளவு அழகா இருக்கு. பக்கத்துல வந்து பாக்கும்போ தான் அதோட அழகு தனியா தெரியுது.

ஓ.. இந்த குளத்துல இருந்து தண்ணீரை குடிக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு.

வாவ்… தொழுகைக்கூடம் …. ம்ம்ம்ம். எவ்ளோ நல்லா இருக்கு….

( அங்கும் இங்கும் ஓடி சில வினாடிகள் ரசிக்கிறார். அப்போது நபர் 2 உள்ளே வருகிறார் )

நபர் 2 : யோவ்.. யோவ்.. நில்லு நில்லு.. நானும் பாத்துட்டே இருக்கேன். அங்க ஓடறே, இங்க ஓடறே.. அது நல்லாயிருக்குன்னு சொல்றே.. இது நல்லாயிருக்குன்னு சொல்றே… நீ நார்மலா தான் இருக்கியா ?

நபர் 1 : (சிரித்துக் கொண்டே ) இப்போ நார்மலா தான் இருக்கேன்.

நபர் 2 : அப்போ அமைதியா இரு.. ஓவரா ஓடிட்டு திரியாதே..

நபர் 1 : என்னோட நிலமை உங்களுக்கு வந்தா, நீங்களும் இப்படித் தான் ஓடியிருப்பீங்க.

நபர் 2 : அப்படி என்ன நிலமை ? உனக்கு கண்ணு இல்லாம இருந்துச்சா ? இப்போ தான் பார்வை கிடைச்சிருக்கா ? அதனால தான் இதெல்லாம் பாத்ததும் பரவசம் ஆயிட்டியா ?

நபர் 1 : இல்லை.. இல்லை.. கண்ணெல்லாம் இருந்துச்சி. ஆனா பாக்க குடுத்து வைக்கல. கையெல்லாம் இருந்துச்சு, தொட்டுப் பாக்க குடுத்து வைக்கல.

நபர் 2 : யோவ்.. ஓவரா குழப்பாதே… வெளியூர் போயிருந்தியா ? இப்போ தான் இந்த ஊருக்கு வரியா ? அதனால தான் இதையெல்லாம் பாத்து ஆச்சரியப்படறியா ?

நபர் 1 : ஹா..ஹா.. நான் இந்த ஊர் காரன் தான்.. வெளியூருக்கும் போகல, உள்ளூருலயும் தங்கல…

நபர் 2 : ஓ.. புரிஞ்சு போச்சு.. நீ லூசு தானே ?

நபர் 1 : ( கொஞ்சம் அமைதியாய்… பின் அவரைப் பார்த்து மெல்லிய குரலில் ) நான் ஒரு தொழுநோயாளி….

( நபர் 2 : சட்டென பின்னால் போகிறார் )

நபர் 1 : பயப்பட வேண்டாம்… என் கையைப் பாருங்க ! இதை விட தெளிவான கையைப் பாக்க முடியுமா ? ஒரு சின்ன அடையாளம் கூட இல்லாம தொழுநோய் போயிடுச்சு இல்லையா ?

நபர் 2 : ( மெதுவாக நெருங்கி வந்து பார்க்கிறார் ) ஆமா.. ஒண்ணும் தெரியலையே… நிஜமாவே தொழுநோயாளியா இருந்தீங்களா ? நம்பவே முடியல…

நபர் 1 : ஆமா… ஊருக்கு வெளியே நாங்க ஒரு பத்து தொழுநோயாளிகள் சேர்ந்திருந்தோம். வாழ்க்கை அவ்ளோதான்னு நினைச்சிருந்தப்போ ஒரு அதிசயம் நடந்துச்சு..

நபர் 2 : ஓ.. உனக்கு மட்டும் தான் அதிசயமா ? மத்த ஒன்பது பேரும் அப்படியே தான் இருக்காங்களா ?

நபர் 1 : இல்லை இல்லை.. பத்து பேருக்குமே சரியாயிடுச்சு.

நபர் 2 : வாவ்.. அப்போ நாலைஞ்சு வருசமா மருந்து எடுத்துட்டு இருந்தீங்களா ? யாருசரி பண்ணினது ? என்ன மருந்து குடுத்தாங்க….

நபர் 1 : நோ.. நோ…. மருந்தும் எடுக்கல, மருத்துவமனைக்கும் போகல, எல்லாமே சட்டுன்னு சரியாயிடுச்சு.

நபர் 2 : சட்டுன்னு சரியாச்சா ? என்ன சொல்றீங்க ? அப்போ ஏதாச்சும் தொழுகைக்கூடமோ, மந்திரக் கூடமோ போனீங்களா ? எதுவுமே இல்லாம குணமாக சான்சே இல்லையே…

நபர் 1 : இல்லப்பா… உனக்கு விஷயமே தெரியாதா ? ஒரு காலத்துல நான் அசுத்தம் வருது, அசுத்தம் வருது .. ந்னு கத்திட்டு தான் ஊருக்குள்ளயே வரணும். அப்படி தான் வாழ்ந்துட்டு இருந்தேன். தண்ணி கூட கைநீட்டி வாங்கக் கூடாது, ஊரு பக்கம் தலை வெச்சும் படுக்கக் கூடாது அப்படித் தான் இருந்தேன்.

நபர் 2 : அதெல்லாம் தெரியுமே ! நீங்க முழுக்க சுகமாகி, சுத்தீகரிக்கும் சடங்கெல்லாம் முடிச்சு, குரு உங்களை சுத்தமானவன் ந்னு சொல்லி பிரகடனப் படுத்தினா தான் நீங்க ஊருக்குள்ளயே வரமுடியும். அதுவும் ஒரு ஆறு மாசம் தனியா இருந்து மீண்டும் அந்த நோய் வரலைன்னு தெரிஞ்சா தான் இப்படி முழுசா ஊருக்குள்ள சுதந்திரமா சுத்த முடியும்.

நபர் 1 : ஆமா.. நான் குணமாகி ஆறுமாசம் தாண்டிடுச்சு.. அதனால தான் இன்னிக்கு முழு சுதந்திரத்தோட இங்கே ஓடிட்டிருக்கேன்.

நபர் 2 : ஓ.. அப்படியா மகிழ்ச்சி… மகிழ்ச்சி.. வைத்தியர் பேரை நீங்க இன்னும் சொல்லல..

நபர் 1 : ஓ.. அது ரொம்ப ஆச்சரியமான கதைப்பா… நான் எந்த மருந்தும் குடிக்கல, எந்த வைத்தியர் கிட்டேயும் போகல. ஒரு நாள் இயேசு அந்தப்பக்கமா வந்தப்போ தூரத்துல இருந்து கத்தினோம். ‘இயேசுவே… கொஞ்சம் இரக்கம் வையுங்க’ ந்னு கத்தினோம்

நபர் 2 : இயேசுவா ? அவரு குருக்களை எல்லாம் திட்டிட்டு இருப்பாரே… ஓ… அவரு இதெல்லாம் பண்ணுவாரா ?

நபர் 1 :… நான் இந்த அதிசயத்தை எதிர்பாக்கல. அவரு பக்கத்துல வந்து பேசுவாரா ? ஏதாச்சும் கிடைக்குமா ? ந்னு தான் யோசிச்சேன். அவரு பக்கத்துல வரல, ‘நீங்க போய் குருக்கள் கிட்டே உங்களை காட்டுங்க’ ந்னு அனுப்பி வெச்சாரு.

நபர் 2 : குருக்கள் கிட்டயா ? எதுக்கு ? நீங்க அங்கேயெல்லாம் போக கூடாதுல்ல…

நபர் 1 : ஆமா.. இருந்தாலும் இயேசு சொல்றாரேன்னு ஓடிப் போனோம். போற வழியிலேயே எங்க எல்லாருக்குமே நோய் முழுசா தீந்துடுச்சு.. ஒரே அதிர்ச்சி…

நபர் 2 : ஓ.. என்ன சொல்றீங்க… அப்புறம் அப்புறம் என்னாச்சு ( பரபரப்பாய் )

நபர் 1 : அவங்க எல்லாம் குரு கிட்டே ஓடினாங்க.. அவங்க வீட்ல பிள்ளைங்க, மனைவி, சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லாரையும் பாக்கற ஆவேசம் அவங்களுக்கு இருந்துச்சி.

நபர் 2: கண்டிப்பா இருக்கும்ல… நீ யும் ஓடியிருப்பியே..

நபர் 1 : நானும் ஓடினேன்.. ஆனா நான் திரும்பி இயேசு கிட்டே ஓடினேன். என்னால அந்த நன்றி உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியல. அவரோட கருணையை என்னால நம்ப முடியல. அவரு நல்லாயிருக்கியா ந்னு கேட்டிருந்தாலே நன்றி சொல்லியிருப்பேன்.. நல்லாக்கினாரே.. அவருக்கு எப்படி நன்றி சொல்லாம இருக்க முடியும். அதனால ஓடினேன். ஓடினேன்.. அவரை தூரத்துல பாத்ததும் அழுகை வந்துச்சு.. கத்திகிட்டே ஓடினேன்… அப்படியே தரையில விழுந்து நன்றி சொன்னேன்.

நபர் 2 : ஓ.. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. அவரு என்ன சொன்னாரு ?

நபர் 1 : நீ மட்டும் தான் குணமானியா ? மற்றவங்க எங்கே ? ந்னு கேட்டாரு. ஒரு சமாரியன் மட்டும் நன்றி செலுத்த வந்திருக்கானே ? மற்ற யூதர்களெல்லாம் எங்கே போயிட்டாங்கன்னு அவருக்கு வருத்தம்.

நபர் 2 : ஓ.. நீ மட்டும் தான் அதுல சமாரியனா ? ஆச்சரியம் தான்.

நபர் 1 : ஆமா.. உன்னோட நம்பிக்கை உன்னை சுகமாக்கிடுச்சு.. எழும்பி போ .. ந்னு பாராட்டி அனுப்பி வெச்சாரு.. அப்புறம் தான் நான் குருவைப் பாக்க போனேன். அங்கே அந்த ஒன்பது பேரையும் காணல. ஏற்கனவே போயிட்டாங்க போல.

நபர் 2 : வாவ்.. ஆச்சரியம் தான். நானும் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா வேற மாதிரி கேள்விப்பட்டிருக்கேன். குழம்பவாதின்னு தான் என் நண்பர்கள் எல்லாரும் சொல்றாங்க. அவரு அதிசயம் செய்றதையெல்லாம் நான் நம்பினதில்லை. ஆனா நீ சொல்றதைக் கேட்டா ஆச்சரியமா தான் இருக்கு.

( அப்போது இரண்டு பேர் ஓடி வருகிறார்கள் )

நபர் 3 : ( நபர் 2 டம் ) டேய்… உன்னை எங்கெல்லாம் தேடறதுடா… எங்கே போயிட்டே…

நபர் 2 : இங்கே தாண்டா இருக்கேன்… என்ன விஷயம் பரபரப்பா ஓடி வரீங்க

நபர் 4 : எல்லாம் நல்ல விஷயம் தாண்டா.. ரொம்ப நாளா நாம எதிர்பார்த்த விஷயம்… இன்னிக்கு நடக்க போவுது.

நபர் 2 : ஓ.. அப்படி என்னடா விஷயம் சொல்லு.. ரொம்ப காக்க வைக்காதே… ( அவசரமாய் )

நபர் 3 : அவனை புடிச்சுட்டாங்க.. நம்ப முடியலைல்ல…. இன்னிக்கு குளோஸ் பண்ணிடுவாங்க..

நபர் 2 : யாரை டா ?

நபர் 4 : டேய்…. இயேசுவை டா.. நம்ம ஏரியால வந்து நம்ம குருக்களைப் பத்தியெல்லாம் திட்டிட்டு திரிஞ்சாரே அந்த மனுஷனைத் தான். இனிமே விடவே மாட்டாங்க.

நபர் 1 : (பதட்டமாக ) என்னது இயேசுவை புடிச்சுட்டாங்களா ? ஏன் ? ஏன் ? அவரு என்னய்யா கெடுதல் பண்ணினாரு ? அவரு எல்லாருக்கும் நல்லது தானே பண்ணினாரு ?

நபர் 3 : இவன் யாருடா ? இவன் எப்படி உன் கூட இருக்கான் ? பாத்தா நம்ம ஆளு மாதிரி இல்லையே…

நபர் 2 : இவரு ஒரு தொழுநோயாளிடா.. இப்போ நல்ல சுகம் கிடைச்சு சந்தோசமா இருக்காரு. அவருக்கு சுகம் கொடுத்தது இயேசுவாம்

நபர் 4 : இயேசுவா ? என்னடா சொல்றே

நபர் 1 : ஆமாங்க.. அவரு தான் எனக்கும் என் கூட இன்னும் ஒன்பது பேருக்கும் சுகம் கொடுத்தாரு, பிளீஸ் அவரை விட்டுட சொல்லுங்க. அவரு யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணினதில்லை. நல்லதை மட்டும் தான் பேசறாரு, செய்றாரு.. பிளீஸ்

நபர் 3 :யோய்.. தள்ளி நில்லுய்யா.. டேய் (நபர் 2 பார்த்து )..நாம போலாம்.. வரியா ? இன்னிக்கு அவரை சிலுவைல அறைய சான்ஸ் இருக்கு.

நபர் 1 : ஐயோ.. சிலுவையிலயா.. வேணாம்யா.. பிளீஸ்.. தடுத்துடுங்கய்யா.. அவரு ரொம்ப நல்லவருய்யா.. பிளீஸ்.. நானும் வரேன்.. நாம போய் அவருக்கு சப்போர்ட் பண்ணுவோம்.

நபர் 4 : நீ வரவேணாம்.. நீ இங்கயே இரு…

நபர் 1 : ஐயா. அவரோட அன்பை மறந்துடாதீங்க.. அவரோட கருணையை மறந்துடாதீங்கய்யா.. நன்றியோட இருங்கய்யா… பிளீஸ்.. என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்கய்யா..

நபர் 2 : ஆமாப்பா.. இவன் சொல்றதைப் பாத்தா இயேசு நல்லவரு மாதிரி தான் தெரியுது.. நாம அவரை சப்போர்ட் பண்ணலாம்.

நபர் 3 : உனக்கும் கிறுக்கு புடிச்சிருச்சு.. நீயும் இவன் கூடவே கெட…

( அவர்கள் இருவரையும் தள்ளி விட்டு விட்டு போகின்றனர் )

நபர் 1 : ஐயா.. விட்டிடுங்கய்யா.. வேணாம்யா… அவரை ஒண்ணும் பண்ணிடாதீங்கய்யா… ( பின்னாலேயே போகின்றனர் )

*

பின்குரல் :

இயேசுவின் கருணை பாரபட்சம் இல்லாமல் எல்லா இனத்தவருக்கும் கிடைக்கிறது. அதை ஏற்றுக் கொள்வதும், அதற்காய் நன்றியுடையவர்களாய் இருப்பதும் நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களாகும். பத்து தொழுநோயாளிகளில் ஒருவனைப் போல, திரும்பி வரவேண்டும். நன்றி மறக்காதவர்களாக.

Posted in Articles, Christianity, WhatsApp

உள்ளே இருந்தால், வெளியேற்றப்படுவீர்கள்

Image result for rahab bible

உள்ளே இருந்தால்
வெளியேற்றப்படுவீர்கள்

*

நாங்கள் இந்நாட்டுக்குத் திரும்பி வரும்பொழுது நீர் (இராகாபு) இந்தச் சிவப்புக் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட சாளரத்தில் கட்டிவையும். உம் தாய், தந்தை, உம் சகோதரர்கள், மற்றும் உம் தந்தை வீட்டில் உள்ள அனைத்தையும் உம் வீட்டில் சேர்த்து வைத்திரும். உம் வீட்டிலிருந்து கதவுக்கு வெளியே எவராவது வந்தால் அவரது சாவுக்கு அவரே பொறுப்பாவார். நாங்கள் குற்றமற்றவர்கள்” (யோசுவா 2 : 18,19)

எரிகோ நகரை வேவு பார்க்க இரண்டு பேரை யோசுவா அனுப்புகிறார். அவர்கள் இராகாபு எனும் விலைமாதின் வீட்டில் வந்து தங்குகின்றனர். அவள் அவர்களை எதிரிகளின் கைகளிலிருந்து தப்புவிக்கிறார்.

எதிரிகள் வந்து கேட்கும் போது, “அவர்கள் சென்றுவிட்டனர்” என ஒரு பொய்யைச் சொல்கிறார். அதைக் கேட்ட எதிரிகள் விலகிச் செல்கின்றனர்.

இராகாபின் பொய், நாமும் பொய் சொல்லலாம் என்பதன் அனுமதியல்ல. விவிலியம் உண்மையை உள்ளபடி எழுதி வைக்கிறது என்பதன் உறுதிமொழி. இராகாபின் பொய்யை எழுதி வைத்ததன் மூலம், பைபிள் பொய் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிற இன பெண்ணான, விலைமாதான இராகாபு இறைவனின் மீட்புத் திட்டத்தில் பங்குபெற வேண்டும் என்பது இறைவனின் திட்டம்.

ஒற்றர்கள் இரண்டு நிபந்தனைகளை இராகாபுக்கு விதிக்கின்றனர். ஒன்று, எல்லோரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும். வெளியே வந்தால் அவர்களுடைய அழிவு தவிர்க்க முடியாது

இரண்டு, சிவப்புக் கயிறு அடையாளமாய் கட்டப்பட்டிருக்க வேண்டும். சிவப்புக் கயிறு இல்லாத வீடு அழிவிலிருந்து தப்பாது.

வீட்டுக்கு உள்ளே இருந்தால் அந்த அழிவின் தேசத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்பதே சிந்தனை. நோவாவின் பேழையில் இருந்தவர்கள் அழிவின் நிலையிலிருந்து மீட்கப்பட்டனர். இராகாபின் வீட்டில் இருந்தவர்கள் அழிவின் நகரிலிருந்து மீட்கப்பட்டனர்.

சிவப்பு, இயேசுவின் இரத்தத்தின் அடையாளம். இயேசுவின் இரத்தத்திற்குள் இருக்கும் போது பாதுகாப்பு நமக்கு ஊர்ஜிதப்படுகிறது. அதை விட்டு வெளியேற நினைக்கும் போது அழிவு தேடி வருகிறது.

எகிப்தில் இஸ்ரேலர்கள் மீட்கப்பட்ட போது நிலைக்கால்களில் பூசப்பட்ட இரத்தம் நிலவாழ்வைத் தந்தது. இன்று இறைமகன் இயேசுவின் இரத்தம் நிலைவாழ்வைத் தருகிறது.

உள்ளே இருப்போம்.
இறைவனின் அன்புக்கு உள்ளே இருப்போம் !

இறைவனின் அன்புக்கு உள்ளே இருக்கும் போது,
உலகின் பாவங்களிலிருந்து வெளியேற்றப்படுவோம்.

*

சேவியர்

Posted in Articles, Christianity, Vettimani

வாயில்காவலனாய் வாழ்வோம்

Image result for church painting

*

வேற்றிடங்களில் வாழும்

ஆயிரம் நாள்களினும்

உம் கோவில் முற்றங்களில் தங்கும்

ஒருநாளே மேலானது;

பொல்லாரின் கூடாரங்களில்

குடியிருப்பதினும்,

என் கடவுளது இல்லத்தின்

வாயிற்காவலனாய் இருப்பதே

இனிமையானது.

( திருப்பாடல்கள் 84:10 )

ஆயிரம் நாட்கள் வேறு இடங்களில் வாழ்வதை விட இறைவனுடைய ஆலயத்தின் முற்றங்களில் ஒரு நாள் வாழ்வதே சிறந்தது என்கிறார் திருப்பாடலை எழுதிய தாவீது மன்னன்.

எது நமது வாழ்க்கையில் முதன்மையானதாய் இருக்கிறது என்பதைக் கொண்டு நமது வாழ்க்கை எப்படி அமைகிறது, யாருக்குப் பிரியமானதாய் அமைகிறது என்பதைக் க‌ண்டுகொள்ளலாம்.

எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதல்ல, எப்படி வாழ்ந்தோம் என்பதே கவனிக்க வேண்டியது. எத்தனை நாட்கள் உயிர்வாழ்ந்தோம் என்பதல்ல, எங்கே உயிர்வாழ்ந்தோம் என்பதே முக்கியமானது.

இறைவனுடைய ஆலயத்தில் இருப்பதல்ல, அவரது ஆலயத்தின் முற்றங்களில் இருப்பதே கூட மகிழ்ச்சியானதாய் இருக்கிறது இறைவனை உளமாரத் தேடுபவர்களுக்கு.

எண்ணிக்கையின் அடிப்படையில் வருகின்ற மகிழ்ச்சியல்ல இது. எண்ணங்களின் அடிப்படையில் வருகின்ற மகிழ்ச்சி. ஆயிரம் நாட்கள் என்பது மிகப்பெரிய எண்ணிக்கை. ஒரு நாள் இறைவனோடு வாழ்வது, ஆயிரம் நாட்கள் வெறுமையில் உழல்வதை விட மேலானது. இறைவன் இல்லாத இடம் அனலடிக்கும் அவஸ்தையாய் இருக்கும் இறைவனின் பிள்ளைகளுக்கு.

இறைவனின் முன்னிலையில் மிகப்பெரிய பிரசங்கம் செய்பவராகவோ, பாடல் பாடுபவராகவோ, பியானோ மீட்டுபவராகவோ இருக்க வேண்டும் என்பது கூட தேவையற்ற ஒன்று. அவரது வாசல்களில் வாயில்காவலனாக‌ இருப்பதே கூட போதுமானது! அதுவே இனிமையானது. இறைவனை நேரடியாய் தரிசிக்க முடியாவிட்டால் கூட அவரது பிரசன்னத்தில் அமர்ந்திருப்பதே ஆறுதலளிக்கிறது.

மூன்று ஆண்டுகள் வெளியிடத்தில் வாழவேண்டுமா ? ஒரு நாள் இறைவனின் வாயில்களில் வாழவேண்டுமா என்று கேட்டால் என்ன சொல்வோம் ? மூன்றாண்டு வேண்டுமெனக் கேட்போம் என்றே உள்மனது சொல்கிறது. ஏனெனில் நமது சிந்தனைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்படுகிறது.

எவ்வளவு பணம், எத்தனை வீடுகள், எத்தனை கார், எவ்வளவு சொத்து என்பது தான் இங்கே அளவீடுகள். அதிகமாய் இருக்க வேண்டும் எனும் அவஸ்தையும் தேடலுமே வாழ்க்கையை அலைக்கழிக்கின்றன.

நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு பணம் தேவையென நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறோம். நிம்மதி தருபவரை உதறிவிட்டு, நிம்மதியை வேறெங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம்.

இங்கே தாவீது மன்னன், கோயிலின் வாயில்காவலனாக தனிமையில் இருப்பதே போதும் என்கிறார். நமது வாழ்க்கையில் நமது தேடல்கள் நண்பர்களின் கூடாரத்தில் குடியிருப்பதாகவே இருக்கிறது. கேளிக்கைக் கொண்டாட்டங்களில் இணைந்திருக்கவே மனம் விரும்புகிறது. தனித்திருந்தால் போதும், இறைவனின் அருகில் தரித்திருக்க வேண்டும் என நினைக்கிறோமா ?

வாயில் காப்பாளன் என்பது இருப்பதிலேயே மிகச் சிறிய வேலைகளில் ஒன்று. மிகப்பெரிய பதவியில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இறைவன் இருக்கிறார் என்றால் எந்தப் பதவியும் அழகானது. இறைவன் இல்லையெனில் எந்த உயர்பதவியும் உதவாததே. நமது தேடல் எதில் அடங்கியிருக்கிறது ?

ஆலயத்துக்கு யாராரோ வரலாம், போகலாம். விசுவாசம் உள்ள யாரும் உள்நுழைந்து இறைவேண்டல் செய்யலாம். தெரிந்த மக்களின் கூட்டமாய் மட்டுமே அது இருப்பதில்லை. நமது விருப்பம் எதில் இருக்கிறது விசுவாசம் கொண்ட மக்களின் வழியிலா, நன்றாகத் தெரிந்த மக்களின் வீட்டிலா ?

வாயில்காப்பாளன் தூங்குவானா ? தெரியாது. இரவெல்லாம் விழித்திருக்கும் வேலை அவனுக்கு. கூடாரங்களில் உல்லாசமாய் உறங்கும் வாழ்க்கை அவனுக்கு இல்லை. தாவீது மன்னனுக்கோ, விழித்திருந்தாலும் இறைவனின் அருகில் இருப்பதே விருப்பமாய் இருக்கிறது. தூரத்தில் துயில்வதை விட அருகில் விழித்திருக்கப் பிரியப்படுகிறார் அவர்.

இறைவனுக்காக, இறைவனால் பெரிய விஷயங்களைச் செய்தவர்கள் நோவா, மோசே, தானியேல், யோசேப்பு என விவிலியம் நீண்ட பட்டியலை வைத்திருக்கிறது. பெரிய விஷயங்களைச் செய்ய வேண்டுமென்பது கூட இல்லை. சின்ன விஷயங்களைச் செய்தால் கூட போதும். அதை மகா பெரிய இறைவனுக்காய் செய்கிறோம் எனும் சிந்தனையோடு செய்தாலே போதும் என்கிறது இந்தத் திருப்பாடல்.

வாயில்காவலன் மக்களை ஆலயத்துக்குள் அனுப்பி வைக்கும் பணியைச் செய்கிறான். இறைவனைத் தேடும் மக்களை இறைவனின் சந்நிதானத்துக்குள் அனுப்பி வைக்கும் பணி உண்மையிலேயே சிலிர்ப்பானது என்பதை இந்த திருப்பாடல் விளக்குகிறது.

நம்முடைய வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய இந்த திருப்பாடல் வரிகள் அழைப்பு விடுக்கின்றன.

எது எனது வாழ்க்கையில் முக்கியமானதாய் இருக்கிறது ? எனது தேடல் இறைவனின் அருகாமையா, உலகத்தின் வசீகரமா ?

எனது தேடல் உயிர்வாழ்தலின் ஆசையா ? இறையோடு வாழ்தலின் ஆசையா ?

எனது விருப்பம் பொல்லாரின் உறைவிடங்களில் கிடைக்கும் உல்லாச‌ நிமிடங்களா ? அல்லது ஆலய வாயிலில் இருக்கும் தூங்கா நிமிடங்களா ?

எனது வாழ்க்கை மனிதநேயத்தைச் சார்ந்திருக்கிறதா இல்லை சிற்றின்பக் கொண்டாட்டங்களில் சிக்கிக் கிடக்கிறதா ? வறுமையின் வாசலில் படுத்திருக்கும் ஏழையோடு என்னை அடையாளப்படுத்துகிறேனா ? அல்லது அந்த ஏழையைக் கண்டு சற்றும் மனம் இரங்காத செல்வந்தனோடு என்னை அடையாளப்படுத்துகிறேனா ?

எது எனது வாழ்க்கையின் முதலிடம் பிடிக்கிறது ? சிந்திப்போம். வாழ்க்கையின் முதன்மைகளை இறைவனை மையமாய்க் கொண்டு  மாற்றியமைப்போம்.

*

Posted in Bible Poems

அருளாளர் அன்னை

அருளாளர் அன்னை

( அன்னைக்கு அருளாளர் பட்டம் கிடைத்த போது எழுதியது )

Image result for அன்னை தெரேசா

இறை அருளின்
ஆழத்தில் புதைந்து,
அருளினால்
ஆளப் பிறந்த அன்னைக்கு
அருளாளர் பட்டம்

பொருளில்லா
பொழுதுகளோடு,
செருப்பில்லாத பாதங்களோடு
சேரிகளில் திரிந்தவருக்கு
அருளாளர் பட்டம்.

இயேசுவின் மணவாட்டியென‌
வாழ்க்கையை
கன்னியாய்க் காத்த‌
அன்னைக்கு
அருளாளர் பட்டம்.

அன்னை,
பட்டத்துக்காக வாழந்தவரல்ல !
நோபல் பரிசையும்
நலிந்தோருக்கு வழங்கியவர்.

நொடிப் பொழுதும்
இயேசுவை தொழுதவர்.
நடக்கும் தொலைவை
ஜெபமாலை தூரம் என்றவர்.

மரணம் வந்து
கதவைத் தட்டி
கடைசி ஆசை என்னவென்று
கேட்டபோது
“இயேசுவே உம்மை நேசிக்கிறேன்”
என்றவர்.

மனிதராய் வாழ்ந்தவர்
மரித்தபின்
புதுமைக்கு காரணமானால்
அவர்
அருளாளர் என்று
அழைக்கப்படுவார்.

அன்னை தெரசா
வாழும்போதே
புனிதராய் வாழ்ந்தவர்,
மரித்தபின் மனிதராவாரா ?

எளியோரிலும்
பரம எளியோரைத் தேடிய‌
அன்னை,
எல்லோரிலும்
இயேசுவைக் கண்டார்.

எல்லோரையும்
இயேசுவாய்க் கண்டதால்
நோய்களோ,
அருவருப்புகளோ
அன்னையை அணுகவேயில்லை.

அன்னை,
கருணையின் பெருங்கடல்.
மனிதத்தின் மாமலை
தாழ்மையின் தாழ்வாரம்.

ஆச்சரியமில்லை
அன்னைக்குக் கிடைத்த‌
அருளாளர் பட்டம்!

மழை
ஈரமாய் இருப்பதும்
சூரியன்
தூரமாய் இருப்பதும்
அன்னை
நேசமாய் இருப்பதும்
இறைவனின் திட்டங்கள்.

வியப்பில்லை
அன்னைக்குக் கிடைத்த‌
அருளாளர் பட்டம்.

அதுதானே
அவரைப் படைத்த‌
இறைமகனின் திட்டம்.

*