இதற்குமேல்
இயேசுவாலும் முடியாது !
மகள் இறந்து விட்டாள்
போதகரை இனியும்
ஏன்
தொந்தரவு செய்கிறீர் ?
இதற்குமேல் இயேசுவால்
எதுவும் செய்ய முடியாது
என நினைத்தார்கள்.
நீர்
இங்கே இருந்திருந்தால்
லாசர்
இறந்திருக்க மாட்டானே !
கதறிய சகோதரிகள் நினைத்தனர்
இனிமேல்
எதுவும் பயன் இல்லை.
நலம் பெற விரும்புகிறாயா
எனும் கேள்விக்கு
“குளத்தில் இறக்கி விட ஆளில்லை”
என்றான்
முப்பத்தெட்டு வருட
படுக்கை மனிதன்.
இறக்கி விடாவிடில்
இறக்க வேண்டும் !
என்றே
அவன் நினைத்தான்.
இறந்து போகும் முன்னே வாரும்
துரிதப்படுத்தியவன்
நினைத்தான்
மரணத்திற்குள் நுழைய
இயேசுவாலும் முடியாது.
துயரத்தின்
கடைசிப் படியில்
தொங்கிக் கொண்டிருக்கையில்,
தோல்வியின்
பள்ளத்தாக்கில் நழுவி விழுகையில்,
விரக்தியின்
புதைகுழியில் மூச்சுத் திணறுகையில்
மனம் சொல்கிறது,
இதற்கு மேல்
இயேசுவாலும் முடியாது.
அவிசுவாசம்
கதவைப் பூட்டுகிறது
இறை விசுவாசம்
சாவியை நீட்டுகிறது.
எல்லைக்
கோட்டைத் தொடாமல்
வெற்றிக் கோப்பை
வருவதில்லை.
இறுதிக்கு முன்
உறுதி தொலைந்தால்
விண்ணக வாழ்க்கை
வாய்ப்பதில்லை.
முடியும்
இயேசுவால் எல்லாம் முடியும்.
நம்
விசுவாசம் மட்டும்
மடியாதிருந்தால் போதும்.