Posted in Sunday School

செபத்தின் வலிமை !

Image result for prayer

செபத்தின் வலிமைதனை வாழ்விலும், வாக்கிலும் சொன்ன இறைமகனுக்கு தாள் பணிந்த முதல் வணக்கம்.
அவையோர் அனைவருக்கும் என் அன்பின் வணக்கம்.

இன்று நான் ஜெபத்தின் வலிமை எனும் தலைப்பில் சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

ஜெபம் என்பது இறைவனோடு நாம் கொள்ளும் உன்னத உரையாடல்.
அது சூல் கொண்ட சோகங்களை, கால் கொண்டு நசுக்குமிடம் !

செபம் என்பது தேவைகளின் சுருக்குப் பையை
தேவனின் முன்னால் விரிப்பதல்ல !
இதயத்தின் சுருக்கங்களை அன்பினால் விரிப்பது!

செபம் தந்தையோடு மகன் கொள்ளும் பாசத்தின் பகிர்தல். நேசத்தின் நகர்தல்.

செபத்துக்கு என்ன வலிமை இருக்க முடியும் ? ஒரு உரையாடல் எதைத் தந்துவிட முடியும் என நாம் யோசிக்கலாம். இயேசு சொன்னார், “மீன் கேட்கும் மகனுக்குப் பாம்பைக் கொடுக்கும் மண்ணகத் தந்தை எவனுமில்லை”. மண்ணகத் தந்தையே அப்படியெனில் விண்ணகத் தந்தை எப்படிப்பட்டவர் ? என்று !

ஆம், விண்ணகத் தந்தை நாம் கேட்பதை விட அதிகமாய்த் தருபவர். மீன் கேட்டால் மீன்கள் வாழும் கடலையே தருகின்ற மனதுடையவர். எந்த செபத்துக்கும் தந்தை பதிலளிக்காமல் இருப்பதில்லை. சிலவற்றுக்கு ஆம் என்கிறார். சிலவற்றுக்கு இல்லை என்கிறார். சிலவற்றுக்கு ‘கொஞ்சம் பொறு’ என்கிறார் அவ்வளவு தான்.

செபத்தின் வலிமை மண்ணையும் விண்ணையும் இணைக்கிறது !
செபத்தின் வலிமை பாவத்தையும் புனிதத்தையும் இணைக்கிறது !
செபத்தின் வலிமை பள்ளத்தையும், பரலோகத்தையும் இணைக்கிறது !
செபத்தின் வலிமை அருகதையற்ற நம்மை, அவரின் அருகிலே சேர்க்கிறது !

எலியா செபித்தார், விழுந்து கொண்டிருந்த மழை விழாமல் போயிற்று.
இஸ்ரயேலர் ஜெபித்தனர் விழாமல் நின்ற எரிகோ கோட்டை இடிந்து விழுந்தது !
செபம் இயற்கையையும் அடக்கும்,
செயற்கையையும் உடைக்கும் !

இயேசு தனது வாழ்வின் முக்கியமான கட்டங்களிலெல்லாம் செபித்தார் !

திருமுழுக்கு பெறும் முன் செபித்தார்
பணிவாழ்வுக்கு நுழையும் முன் செபித்தார்
சீடர்களைத் தேர்வு செய்யும் முன் செபித்தார்
புதுமைகள் செய்யும் முன் செபித்தார்
மரணத்தில் நுழையும் முன் செபித்தார்
மனித வாழ்வின் கடைசி கணத்திலும் செபித்தார் !

இயேசுவின் வலிமை, அவருடைய இறை தன்மையால் வந்ததல்ல ! அவருடைய செபத் தன்மையால் வந்தது. மண்ணுக்கு அவர் இறைமகனாய் அல்ல, மனுஷ குமாரனாகவே வந்தார். எப்போதும் பிதாவோடு இணைந்திருக்கவேண்டும் எனும் அவருடைய ஆவலே அவரை வலிமை மிக்கவராய் மாற்றியது.

ஒரு உலகப் புகழ்பெற்ற வயலின் கலைஞர் இருந்தார். அவருடைய மகன் இன்னொரு கலைஞரிடம் வயலின் கற்றார். வாழ்வின் முதுமைக் காலத்தில் அவரிடம் பேட்டி கண்ட ஒருவர், “ஏன் உங்கள் மகனுக்கு நீங்கள் வயலின் சொல்லித் தரவில்லை ?” என்று கேட்டார். அதற்கு அவர் “அவன் என்னிடம் கேட்கவே இல்லை. கேட்பான் கேட்பான் என காத்திருந்தேன். அவன் கேட்கவேயில்லை” என கண்ணீர் மல்க கூறினார்.

செபமும் இது தான். நமக்கு என்ன தேவை என்பது தந்தைக்குத் தெரியும். ஆனாலும் நாம் அவரிடம் கேட்கவேண்டும் என விரும்புகிறார். கேட்பதை விட அதிகமாய் அவரோடு இணைந்து பயணிக்க வேண்டும் என விரும்புகிறார்.

ஒரு சிங்கத்தின் பிடரியில் இருக்கும் சிற்றெறும்பு எதற்கும் கவலைப்படாது ! அது போல தான் செபத்தின் கரத்தில் இருக்கும் போது நாம் கவலைப்படத் தேவையில்லை. காரணம் செபத்தின் கரத்தில் இருக்கும் போது நாம் இறைவனின் வரத்தில் இருக்கிறோம் !

தானியேலின் வாழ்க்கை அதைத் தானே சொல்கிறது ? அவர் உண்மையான தேவனோடு செபத்தில் தரித்திருந்தார். அதனால் சிங்கத்தின் குகையிலும் அவருக்கு நிம்மதியே கிடைத்தது. எரியும் நெருப்பிலும் அவருக்கு அருள் மழையே கிடைத்தது.

செபம் சாத்தானின் வலிமையை உடைக்கிறது. அது எப்படி ? செபம் நம்மை கடவுளோடு சேர்க்கிறது. நாம் கடவுளோடு நெருங்க நெருங்க சாத்தானை விட்டு விலகுகிறோம். ஒளியை நெருங்க நெருங்க, இருளை விலகுவது போல நாம் இறையை நெருங்க நெருங்க பிசாசை விட்டு விலகுகிறோம். இறைவனின் அருகில் இருக்கும் போது சாத்தானின் வலிமை நம்மிடம் செயல்படுவதில்லை. சோதனைகளைத் தாங்கும் வலிமையையும், தாண்டும் வலிமையையும் இயேசுவே நமக்கு தந்து விடுகிறார்.

கட்டுகளின் பிடியில் கிடக்கும் மனிதர்களை விடுவிக்க செபம் நமக்கு உதவுகிறது. சாத்தானின் கட்டுகளை மட்டுமல்ல, சங்கிலிகளின் கட்டுகளையும் உடைத்து எறியும் வலிமை செபத்துக்கு உண்டு என்பதை பவுலின் வாழ்க்கையின் வழியாக நாம் கற்றுக் கொள்கிறோம் !

செபம் செய்யும் போது இறைவன் கேட்கிறார் எனும் விசுவாசம் நமக்கு இருக்க வேண்டும் !
வெறுமனே கேட்பது மட்டுமல்ல, செவி கொடுக்கிறார்
செவி கொடுப்பது மட்டுமல்ல, பதில் கொடுக்கிறார்
பதில் கொடுப்பது மட்டுமல்ல, பலனையும் கொடுக்கிறார்.

உலகிலேயே கடவுளை அப்பா என அழைக்கும் பாக்கியம் நமக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது !
உலகிலேயே கடவுளின் சகோதரர்களாகும் பாக்கியம் இயேசுவின் மூலம் நமக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது !

செபம் வலிமையானது !
இயேசு நமக்கு செபிக்கக் கற்றுத் தந்தார் !
இயேசுவின் மூலமாய் செபிக்க கற்றுக் கொண்டிருக்கிறோம் !
இயேசு நமக்காய் பரிந்து பேசுகிறார்
இயேசுவின் நாமத்தினால் செபிக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறோம் !

செபிப்போம் !

செபமற்ற வாழ்க்கை, போர்க்கருவிகளின்றி போர்க்களம் புகும் வீரனைப் போன்றது
அழிவு நிச்சயம் !
செபிப்போம் !
நம் தேவைகளுக்காக அல்ல, தேவனே நமது தேவை என்பதற்காக.
அது நமக்கு வலிமையைத் தரும்
வாழ்வில் வளமையைத் தரும் என்று கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்

Posted in Sunday School

Skit : எனது மீட்பர் வாழ்கிறார்

Image result for fear

காட்சி 1 

( விக்டர் ஒரு பயந்தாங்கொள்ளி. அவனை அவனுடைய நண்பர்கள் நான்குபேர் வழியில் சந்திக்கின்றனர் )

நண்பர் 1 : டேய் வாடா விக்டர், எங்கே போயிட்டு வரே ?

விக்டர் : கடைக்கு போக சொன்னாங்கடா, அதான் போயிட்டிருக்கேன் !

நண்பர் 2 : என்னடா ஆச்சரியமா இருக்கு ? தனியா எல்லாம் கடைக்குப் போறே ! இட்ஸ் எ மெடிகல் மிராக்கிள்

விக்டர் : ஆமாடா.. இன்னிக்கு தனியா வரவேண்டியதா போச்சு. அதான் மெதுவா ஓரமா போயிட்டிருக்கேன். வரீங்களா கம்பெனிக்கு ?

நண்பர் 3 : ஷப்பா.. உன்கூட வந்தா அவ்ளோ தான். உன்னை மாதிரி நாங்களும் பயந்தாங்கொள்ளி ஆயிடுவோம். 

நண்பர் 4 : டேய் அதென்ன தொற்று வியாதியா ? அதெல்லாம் நமக்கு வராது. வாங்க கம்பெனி குடுப்போம். 

நண்பர் 1 : நீ வேணும்ன்னா போடா… நான் வரல. நேற்று அவனை மவுண்ட் ரோட்ல பாத்தேண்டா. பைக்ல போயிட்டிருந்தான். ஹெல்மெட் போட்டிருக்கான். கைல கிளவுஸ். கால்ல ஏதோ பேடு கட்டியிருக்கான். எல்லாம் போட்டப்புறமும் மாட்டு வண்டி கணக்கா பத்து கிலோ மீட்டர் ஸ்பீட்ல போறான். நடந்து போறவனே அவனை ஓவர் டேக் பண்றான்.

விக்டர் : டேய்.. ஆக்சிடண்ட் ஏதாச்சும் ஆகுமோன்னு ஒரு பயம் இருக்கும்ல அதான் மெதுவா போறேன். 

நண்பர் 2 : அதுக்காக இப்படியாடா ஓட்டுவே ? பைக்கே டென்ஷன் ஆயிடுமேடா…

விக்டர் : ரோடுன்னாலே கொஞ்சம் பயம் டா அதான்.

நண்பர் 3 : ஆமா ரோடுன்னா மட்டும் தான் உனக்கு பயமாக்கும் ? சுவிம்மிங் பூல்ல போன வாரம் பாத்தேனே ! முழங்கால் தண்ணியில நடுங்கிட்டே நின்னதை !

விக்டர் : டேய்.. தண்ணின்னா யாருக்குன்னாலும் பயம் தான் டா… பயப்படாம இருக்க நான் என்ன மீனா ? மனுஷண்டா…

நண்பர் 4 : அடேங்கப்பா.. ஜோக் அடிக்கிறாராம். நீச்சலடிக்க போனவரு, ஜோக் அடிச்சுட்டே திரும்ப வராராம். 

நண்பர் 1 : ஓவரா கலாய்க்காதீங்கடா.. அதுக்கே பயந்துடுவான்

நண்பர் 3 : டேய்.. பூனை பாத்தாலே பயந்து போறவன் இவன். இவனை கலாய்க்காம என்ன பண்ண சொல்றே ?

விக்டர் : டேய்… போங்கடா.. எல்லாருக்கும் பயம் இருக்கும். ஆனா சைலண்டா உள்ளுக்குள்ளயே ஒளிச்சு வெச்சிருப்பீங்க.. நான் ஒத்துக்கறேன். அவ்ளோ தான் வித்யாசம். 

நண்பர் 2 : வாழ்க்கைல பயம் இருக்கலாம்டா.. ஆனா பயமே வாழ்க்கையாயிடக் கூடாது. 

நண்பர் 4 : இவன் பயத்தைப் போக்கணும்ன்னா ஒரு நாள் இவனை காட்டுக்குள்ள கொண்டு போய் விட்டுட்டு வரணும்டா..

விக்டர் : ஷப்பா.. ஆள விடுங்கடா தைரியசாலிகளா.. நான் கடைக்கு போறேன். 

 

 

காட்சி 2

( டாக்டரின் முன்னால் விக்டரும், அவனது அப்பா அம்மாவும் இருக்கின்றனர் )

டாக்டர் : ஐ ஆம் சைக்காட் டிரிஸ் டாக்டர் சைக்கோ சங்கரலிங்கம்… சொல்லுங்க என்ன விஷயம் ? யாருக்கு என்ன பிரச்சினை !

அப்பா : பிரச்சினை பையனுக்கு தான் டாக்டர்…

டாக்டர் : ஓ.. அப்படியா.. டக்குன்னு பாத்தா உங்களுக்கு தான் பிரச்சினையோ ந்னு நினைச்சுட்டேன். 

அம்மா : அவருக்கும் கொஞ்சம் பிரச்சினை இருக்கு டாக்டர்.. ஆனா அதையெல்லாம் நானே சரி பண்ணிடுவேன்

அப்பா : அதெல்லாம் இங்கே சொல்லி எதுக்கு என்னை பெருமைப்படுத்தறே.. அமைதியா இரு…

டாக்டர் : உங்க சண்டையை எல்லாம் வீட்ல வெச்சுக்கோங்க.. இங்கே சண்டை போட்டா அதுக்கும் தனியா பீஸ் கட்டவேண்டியிருக்கும்… 

அப்பா : மண்டையை போட்டாலும் பீஸ் வாங்குவீங்க, சண்டையைப் போட்டாலும் பீஸ் வாங்குவீங்க.. எனன் பண்ண

டாக்டர் : ஹா..ஹா..ஹா யூ ஆர் சோ ஃபண்ணி.. ஆனாலும் இங்கே ஜோக் அடிக்கக் கூடாது.. சீரியஸ் பிளேஸ்… இந்த சைக்கோ சங்கரலிங்கத்துக்கு சைலண்டா இருந்தா தான் புடிக்கும். சொல்லுங்க என்ன பிராப்ளம் ?

அப்பா : சைலண்டா இருக்க சொன்னீங்களே ?

டாக்டர் : அது அப்போ.. இப்போ சொல்லுங்க.. என்ன பிரச்சினை ?

அம்மா : பையனுக்கு பயம் டாக்டர்.

டாக்டர் : பையனுக்கு பயமா ? பையனைப் பாத்து உங்களுக்கு பயமா ?

அம்மா : பையனுக்கு தான் டாக்டர்… எதைப் பாத்தாலும் பயம் அவனுக்கு

டாக்டர் : என்னைப் பாத்து அவன் பயப்படலையே ? ஏன் ஏன் ஏன் ? 

அப்பா : அதான் எனக்கு பயமா இருக்கு ! 

டாக்டர் : எதையெல்லாம் பாத்தா பயப்படுவான் ? 

அப்பா : அவனுக்கு எல்லாமே பயம் தான் டாக்டர்.. வீட்ல நைட்ல கரண்டு போச்சுன்னா பயப்படுவான். 

டாக்டர் : ஓ.. அதுக்கு பேரு நைக்டோ போபியா…  நைட்ல நிறைய மெழுகுவர்த்தி கொளுத்து வெளிச்சமா வெச்சுக்கலாம்… நார்மலாயிடுவான். 

அம்மா : இல்ல டாக்டர்.. அப்படி டிரை பண்ணினோம். அந்த ஷேடோ இருக்குல்ல,  மெழுகு வெளிச்சத்துல வருமே… அதைப் பாத்தா பயப்படுவான்.

டாக்டர் : ஓ.. அது ஷியோ ஃபோபியா… நம்ம நிழலைப் பாத்து நம்மளே பயந்து ‘ஐயோ’ அப்படி கத்திடுவோம்… ம்ம்ம்… அப்போ சீக்கிரமாவே தூங்க வெச்சுடலாம். என்ன சொல்றீங்க

அப்பா : தூங்கவும் பயப்படுவான் டாக்டர். முழிப்போமா, இல்லையான்னு ஒரு பயம் அவனுக்கு.

டாக்டர் : ஓ… மை காட்.. அதுக்கு பேரு சோம்னி ஃபோபியா… தூங்கவே பயப்படுவாங்க. தூக்கத்துல செத்து போயிடுவோமோன்னு பயப்படுவாங்க. நிறைய ஆக்டிவிடீஸ் பண்ண வெச்சா சரியாயிடுவாங்க.

அம்மா : அதென்ன டாக்டர்… நீச்சல்ல சேத்தோம்.. நீந்த பயப்படறான்

டாக்டர் : அது அக்வாஃபோபியா…

அப்பா : சைக்ளிங் போக சொன்னா, வண்டிகளைப் பாத்து பயப்படறான்

டாக்டர் : அது ஓச்சோஃபோபியா…

அம்மா : டாக்டர்.. உங்க கிட்டே போபியோ பேரெல்லாம் கேக்க வரல, அந்த போபியா போகுமா இல்லையான்னு சொல்லுங்க. 

டாக்டர் : வந்தவுடனே போகுமான்னு கேட்டா எப்படி ? கொஞ்சம் கொஞ்சமா தான் போவும். என்ன தம்பி பயத்தை போக்கடிச்சுடலாமா ?

விக்டர் : எவ்ளோ நாள் ஆகும் டாக்டர் ? 

டாக்டர் : அது உங்க அப்பா கைல இருக்கிற சொத்தைப் பொறுத்துப்பா.. ஐ மீன் கொஞ்ச நாள் வரவேண்டி இருக்கும்.

அப்பா : இப்படித் தான் எல்லாருமே சொல்றாங்க டாக்டர்.. ஆனா எதுவும் சரியாக மாட்டேங்குது. அவனோட பயமும் போக மாட்டேங்குது. 

டாக்டர் : இந்த சைக்கோ சங்கரலிங்கம் ஒரு விஷயத்தை சொல்ல மாட்டான்.. சொன்னா.. செய்யாம விடமாட்டான்.  நீங்க போயிட்டு அடுத்த மாசம் வாங்க. போறதுக்கு முன்னே பீஸ் கட்ட மறக்காதீங்க..

விக்டர் : டாக்டர் பீஸை பாத்தா அப்பாவுக்கே பயம் வருது. அதுக்கு பேரு ஃபீஸோ ஃபோபியா தானே ?

டாக்டர் : ஹா..ஹா..ஹா. ஃபண்ணி ஃபெல்லோ..

*

காட்சி 3

( விக்டர் ஒரு இடத்தில் சோகமாக அமர்ந்திருக்கிறான் இருவர் வருகின்றனர் )

ஆள் 1 : என்ன விக்டர்.. இங்கே வந்து உக்காந்திருக்கே ? 

விக்டர் : ஒண்ணுமில்லண்ணே

ஆள் 2 : ரொம்ப டல்லா இருக்கியே.. என்னாச்சுப்பா

விக்டர் : புதுசா என்ன இருக்க போவுது… எல்லாம் நம்ம பய மேட்டர் தான். 

ஆள் 1 : எந்தப் பய ?

விக்டர் : பய இல்லன்னே… பயம்…

ஆள் : என்ன பயம் கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுப்பா.

விக்டர் : என்னை எல்லாரும் பயந்தாங்கொள்ளின்னு கூப்டுவாங்க. அதுல ஒரு அர்த்தம் இருக்கு. எனக்கு எதைப் பத்தாலும் பயமா வரும். 

ஆள் : ஏன்பா பயம் வருது ?

விக்டர் : ஏதாவது ஆயிடுமோன்னு எப்பவும் பயமா இருக்கும்.

ஆள் : ஏதாவது ஆயிடுமோன்னா  ? செத்து போயிடுவோமோன்னு பயமா இருக்குமா ?

விக்டர் : ஆமா.. இல்லேன்னா ஏதாச்சும் ரொம்ப கெட்டது நடந்துடுமோன்னு பயமா இருக்கும். ஆக்சிடண்ட் அது மாதிரி.

ஆள் : அதுக்கு காரணம் விசுவாசக் குறைவுப்பா… உன் பயத்தைப் போக்க ஒரே ஒரு வழி தான் உண்டு. 

விக்டர் : சொல்லுங்கன்னே என்ன வழி ?

ஆள் : நீ சின்ன பிள்ளையா இருக்கும்போ அப்பா உன்னை கடைக்கு கையைப் புடிச்சு கூட்டிட்டு போவாரு , பயமா இருக்குமா ?

விக்டர் : அப்பா கையை புடிச்சிருந்தா பயம் இல்லையே.. ஏதாச்சும் பிரச்சினை வந்தா அவரு பாத்துப்பாருல்ல.

ஆள் : வெரி குட். அப்பாவோட மடியில சின்ன பிள்ளைய இருக்கும்போ கரண்ட் போனா பயப்படுவியா ?

விக்டர் : அப்பா இருக்கும்போ அப்பாவை கட்டி புடிச்சுப்போன்.. அவரு பாத்துப்பாருல்ல..

ஆள் : இது தான் நம்பிக்கை. நம்ம அப்பா நம்மை பத்திரமா பாத்துப்பாருங்கற நம்பிக்கை. அதான் உன்னோட தைரியத்துக்கு காரணம்.

விக்டர் : ஆமா உண்மை தான். 

ஆள் : அதே போல, இயேசு நம்ம கூட இருக்கிறாரு. எப்பவும் நம்மை பாத்துக்கிறாருங்கற நம்பிக்கை இருக்கில்ல ? அது தான் விசுவாசம். அந்த விசுவாசம் இருந்தா நாம எதுக்கும் பயப்பட மாட்டோம்.

விக்டர் : நீங்க என்ன சொல்ல வரீங்க ?

ஆள் : “இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” ந்னு இயேசு உயிர்த்தபின்னாடி சொன்னாரு. அதை நாம நம்பணும். அதை நம்பினா இயேசு நம்ம கூட கடைசி வரைக்கும் இருப்பார். நமக்கு எது நல்லதோ அது மட்டுமே செய்வார். 

விக்டர் : ம்ம்ம் .. நீங்க சொல்றது புரியுது.. ஆனாலும்…

ஆள் : இத பாரு தம்பி… மரணத்தைப் பற்றி பயப்படவே கூடாது. இயேசு நமக்காக பாடுபட்டு இரத்தம் சிந்தி மரித்து நம்ம பாவங்களை கழுவினாருன்னு நம்பறியா…

விக்டர் : கண்டிப்பா… அதுல என்ன சந்தேகம்.

ஆள் : அப்போ என்ன பயம் ? இந்த வீட்ல வாழ்க்கை முடிஞ்சா இன்னொரு சூப்பர் வீட்டுக்கு போகப் போறோம் அவ்வளவு தானே ! அது சந்தோசப்பட வேண்டிய விஷயமில்லையா ?

விக்டர் : அப்படியா சொல்றீங்க ?

ஆள் : ஆமா தம்பி. இப்போ ஒரு கதவு மூடியிருக்குன்னு வெச்சுக்கோ… அந்த ரூம்ல என்ன இருக்கோன்னு ஒரு பயம் இருக்கும். ஆனா உள்ளே என்ன இருக்குன்னு தெரிஞ்சா பயம் போயிடும் இல்லையா ? அது மாதிரி தான் இதுவும். இரட்சிப்பின் நம்பிக்கை இருந்தா, மரணத்தின் பயம் இருக்கவே இருக்காது.

விக்டர் : நீங்க சொல்றது எனக்கு ரொம்ப உற்சாகமா இருக்கு. 

ஆள் : ஆமா தம்பி. பயம் எல்லாம் சாத்தான் கொண்டு வரது. தைரியம் எல்லாம் இறைவனோட அருகில் இருக்கும்போ கிடைக்கிறது. கடவுளை நெருங்க நெருங்க பயம் விலகி ஓடிடும். நம்ம மீட்பர் உயிரோடு இருக்கிறார் ந்னு நம்பினாலே பாதி பயம் போயிடும். நமக்கு இரட்சிப்பு உண்டுன்னு உறுதியானா எல்லா பயமும் போயிடும். 

விக்டர் : புரியுது அண்ணே.. பயத்தோட கிளைகளை வெட்றதுல பயன் இல்லை. அதோட வேரை வெட்டணும். அதுக்கு நாம கடவுளை நெருங்கி வரணும். அப்படித் தானே !

ஆள் : பக்காவா சொன்னே தம்பி. நீ பயந்தாங்கொள்ளி இல்லை, இறைவனோட பிள்ளை. இன்னிக்கே போய் நல்லா பிரேயர் பண்ணு, இயேசுவை நம்பு… பயமெல்லாம் போயிடும்.

விக்டர் : அண்ணே எனக்கு இப்பவே பயம் பாதி போயிடுச்சு.. .ரொம்ப நன்றின்னே.. உலகத்துல உள்ள தன்னம்பிக்கை, சைக்காலஜி, லொட்டு லொசுக்கு எல்லாம் வேஸ்ட். இயேசு நமக்கு இருக்கும்போ எதுக்கு வேற எதுவும் தேவையில்லைன்னு தெரிஞ்சுகிட்டேன். பயத்தையும் போக்கிகிட்டேன். நன்றின்னே.

*

பின் குரல்

அமெரிக்காவிலுள்ள ஹேனா வில்சன் எனும் இறை மனிதருக்கு எப்போதும் பயம். மரணத்தைக் குறித்த பயம். பல மருத்துவர்களை சந்தித்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஒரு நாள் புளோரிடாவிலுள்ள யூத் கான்ஃபரப்ஸ் ஒன்றில் வெறுமனே அமர்ந்திருந்தபோது அந்த பிரசங்கியார் ஒரு சொன்னார். “இயேசு சாவை தன் கரங்களால் குத்தி ஒரு ஓட்டை உருவாக்கினார். அந்த துளை வழியாக நாம் சாவைக் கடந்து வாழ்வுக்குள் செல்ல வழி செய்தார்”. இந்த வாக்கியம் அவரது பயத்தை முற்றிலும் நீக்கியது. எங்கள் குறு நாடகத்துக்கு அதுவே கருவாகவும் அமைந்தது. நன்றி.

Posted in Sunday School

பயனில்லாதவனா நான் ?

Image result for two friends talking

காட்சி 1

( இரண்டு நண்பர்கள் .. அருள் & ஸ்டீபன்…

ஸ்டீபன் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொருவர் பின்னாலிருந்து அழைக்கிறார்… )

அருள் : ஸ்டீபன்… ஸ்டீபன்… டேய்… நில்லுப்பா..

ஸ்டீபன் : ஹேய்.. அருள் எப்படி இருக்கே ?

அருள் : நல்லா இருக்கேண்டா… நீ எப்படி இருக்கே ?

ஸ்டீபன் : நான் நல்லாதாண்டா இருக்கேன். உன்னை தான் ஆளையே புடிக்க முடியல… எங்கே போயிருந்தே ?

அருள் : இங்கே தாண்டா இருக்கேன்… வேலை தேடி நாலு இடம் போக வேண்டி இருக்கிறதனால நாம மீட் பண்ண முடியாம போயிடுது.

ஸ்டீபன் : வேலை தேடியா ? ஏன் இப்போ இருக்கிற வேலைக்கென்ன குறைச்சல் ?

அருள் : அந்த வேலையை விட்டு தூக்கிட்டாங்கடா !

ஸ்டீபன் : என்னடா சொல்றே ? வேலையை விட்டு தூக்கிட்டாங்களா ?

அருள் : ஆமாடா… அது ஒரு பெரிய கதை !

ஸ்டீபன் : என்னடா இது ! பெட் ரோல் விலை ஏறிடுச்சுன்னு சொல்ற மாதிரி சர்வ சாதாரணமா சொல்றே ?

அருள் : என்ன பண்ண சொல்றே ? ஷாக் ஆயிட்டா மட்டும் ஜாப் கிடைச்சுடுமா என்ன ?

ஸ்டீபன் : ஆமா ஏன் வேலையை விட்டு தூக்கினாங்க ? நீ அங்கே சீனியர் ஆச்சே.. நல்ல பேரு வேற இருக்கு !

அருள் : என்னத்த சொல்றது ? போன வருஷம் ஏதோ டிஜிடல் டிரான்ஸ்பர்மேஷன் பண்றோம்ன்னு சொல்லி எல்லாத்தையும் கம்ப்யூட்டர் மயம் ஆக்கினாங்க, கால்வாசி பேரு காலி. ஆறு மாசம் கழிச்சு ஆட்டோமேஷன் பண்றேன்னு சொன்னாங்க, ஆளு பாதி காலி. இப்போ ரோபோட்டிக்ஸ் கொண்டு வராங்களாம்… மிச்சம் இருந்ததுலயும் கால்வாசி காலியாயிடுச்சு.

ஸ்டீபன் : என்னடா சொல்றே ? ரோபோவா ? நீ பெயிண்டிங் கம்பெனில தானே இருக்கே ? இங்கே எப்படி ரோபோ ?

அருள் : நீ விஷயம் தெரியாதவனா இருக்கேடா.. ரோபோ கைல பக்கெட்டை குடுத்தா ஒரு சொட்டு கூட கீழா சிந்தாம அஞ்சு நிமிஷத்துல ஒரு சுவரை அழகா பெயிண்ட் பண்ணிடுது. எந்த பெயிண்டிங்கை புரோக்ராம் பண்ணி குடுத்தாலும் சுவத்துல அந்த பெயிண்டிங்கை ரெண்டு நிமிஷத்துல வரஞ்சுடுது. மொத்தத்துல நாம நாலு வாரம் செய்ற வேலையை அது நாலு மணி நேரத்துல செய்யுது.

ஸ்டீபன் : ம்ம்.. இருந்தாலும் நீ கொஞ்சம் பிளீஸ் பண்ணி கேட்டிருக்கலாம்டா.. நீ செம ரேட்டிங் வாங்கற பையன் தானே ?

அருள் : கேட்டேன்… ஒரு கண்டிஷன் போட்டாங்க. சண்டே எல்லாம் கம்பெனிக்கு வரணும்ன்னு சொன்னாங்க. சர்ச் இருக்குன்னு சொன்னேன். போகாம இருக்க முடியாதான்னு கேட்டாங்க. சர்ச்சுக்கெல்லாம் ரோபோவை அனுப்ப முடியாது சார்ன்னு சொன்னேன். கடுப்பாயிட்டான் போல ( சிரிக்கிறான் ) கையோட லெட்டர் குடுத்து அனுப்பிட்டான்.

ஸ்டீபன் : சர்ச்ல தான் கடவுள் இருக்காரா என்ன ? உன் உடம்பே தேவாலயம் தான்னு சொல்லுது பைபிள். சண்டே வேலைக்கு போறதுல என்ன தப்பு ? நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணியிருக்கலாம் டா…

அருள் : இப்படி தாண்டா சாத்தான் டெம்ட் பண்ணுவான். இயேசு கிட்டயே வசனம் பேசி வாங்கிக் கட்டிகிட்டவன் அவன். இப்போ சண்டே சர்ச்சுக்கு போக வேண்டாம்ன்னு தோணும், அப்புறம் எந்த டேவும் சர்ச்சுக்கு போக வேண்டாம்ன்னு தோணும், அப்புறம் சர்ச் எதுக்குன்னு தோணும்.. அப்புறம் ஆண்டவர் எதுக்குன்னு தோணும்…

ஸ்டீபன் : ஓ.. இவ்ளோ மேட்டர் இருக்கா ?

அருள் : ஆமாடா.. இந்த மாதிரி டெம்டேஷனை எல்லாம் முளையிலேயே கிள்ளி எறியணும். இல்லேன்னா, படிப்படியா நாம கடவுளை விட்டு தூரமா போயிடுவோம். கடவுளுக்காக எதை வேணும்னாலும் விட்டுக் குடுக்கலாம். ஆனா கடவுளுளை எதுக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாதுடா…

ஸ்டீபன் : நான் விட்டுக்குடுக்கச் சொல்லல, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாம்ன்னு தான் சொன்னேன்….

அருள் : ஆமா… கடவுள் விஷயத்துல மட்டும் எல்லாருக்கும் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் ஈசியா வருது. ஏன்னு தெரியல. முதல்ல தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் தேட தான் பைபிள் சொல்லுது. அட்ஜெஸ்ட்மென்ட் அவரை இரண்டாம் இடத்துக்கு தள்ளிடும். அது பாவம் !

ம்ம்.. புரியுது புரியுது..சரி.. நான் ஒரு ஐடியா சொல்றேன். கேக்கறியா ?

அருள் : சொல்லுடா… ஐடியா சொல்றதுக்கெல்லாம் பர்மிஷன் கேக்கற ஒரே ஆள் நீதாண்டா…

ஸ்டீபன் : பஞ்ச் டயலாக் இருக்கட்டும்.. எனக்கு தெரிஞ்ச ஒரு கன்சல்டன்சி இருக்கு. சீக் அண்ட் ஃபைண்ட் ந்னு. அங்கே போய் பேசிப் பாப்போம். அவங்க சீக்கிரம் ஏதாச்சும் ஒரு நல்ல வேலையை கண்டு பிடிச்சு குடுப்பாங்க.

அருள் : கண்டிப்பாடா.. போலாம். வர்க் அவுட் ஆவுதா பாப்போம்.

காட்சி 2

கன் சல்டன்சியில் மேனேஜர் மற்றும் ஒரு செக்கரட்டரி இருக்கிறார்கள்.

மேனேஜர் : ( ஒரு கணினி முன்னால் அமர்ந்து தட்டிக் கொண்டிருக்கிறார் ) என்னப்பா இன்னிக்கு ஆபீசே வெறிச்சோடிப் போய் இருக்கு.. நமக்கு போணி ஏதும் தேறாது போலிருக்கே.

செக்கரட்டரி : ஆமா சார்.. இன்னிக்கு எல்லாருக்கும் வேலை கிடைச்சுச்சா ? இல்லை நாடு திருந்திருச்சா ? இல்ல வேலையில்லா திண்டாட்டம் ஒழிஞ்சுடுச்சா ? ஒண்ணுமே புரியலையே.

மேனேஜர் : ம்ம்ம்.. வெட்டியா ஒக்காந்திருக்க வேண்டியிருக்கு.

செக்கரட்டரி : வெட்டியா இல்ல சார்.. வெட்டியான் மாதிரி ஒக்காந்திருக்க வேண்டியிருக்கு. எப்படா பொணம் வரும், நமக்கு வேலை வரும்ங்கறது மாதிரி.

மேனேஜர் : ஏய்.. உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதா… பொணம் கிணம்ன்னு

(அப்போது கதவு தட்டும் ஓசை )

மேனேஜர் : போய் கதவை திறடா… ஏதோ பொணம் வந்திருக்கு… சே..சே..யாரோ வந்திருக்காங்க… ( உங் கூட சேர்ந்தா நான் வெட்டியானாவே ஆயிடுவேன் போல ..)( முணுமுணுக்கிறார் )

( அருளும், ஸ்டீபனும் உள்ளே வருகின்றார்கள் )

மேனேஜர் : ( சிரித்த முகத்துடன் ) வாங்க…வாங்க…வாங்க.. உக்காருங்க.

செக்கரட்டரி : சார் நமக்கு ஒரு போணி கிடைச்சிருக்கு ஹிஹி ( மெதுவாக )

அருள் : வணக்கம் சார்… ரொம்ப சந்தோசமா இருக்கீங்க சார்…

செக்கரட்டரி : நோயாளியைப் பாத்தா டாக்டர் சந்தோசப்படறதில்லையா ? ஆட்டுக்குட்டியைப் பாத்தா கசாப்புக்கடைக்காரன் சந்தோசப்படறதில்லையா…

மேனேஜர் ( அவரை முறைக்கிறார் ) கொஞ்சம் பேசாம இருக்கீங்களா .. சார் நீங்க உக்காருங்க.

( இருவரும் உட்கார்கிறார்கள் )

மேனேஜர் : சொல்லுங்க என்ன விஷயம்.. வாட் கேன் ஐ டூ பார் யூ.

செக்கரட்டரி : சார் தமிழ்லயே பேசுங்க.. அவங்களுக்கு இங்கிலீஸ் தெரியுமோ தெரியாதோ… பயந்துடப் போறாங்க

மேனேஜர் ( முறைக்கிறார் ) : கொஞ்சம் அந்த பக்கம் தள்ளி நில்லுப்பா நீ.

அருள் : சார்… எனக்கு வேலை போயிடுச்சு.. அதான் உங்க கிட்டே வந்து ஏதாச்சும் சேன்ஸ் இருக்கான்னு கேக்க வந்தோம்.

மேனேஜர் : வெரி குட்… வெரிகுட்…

அருள் : வேலை போனது வெரிகுட் ஆ சார்.

மேனேஜர் : நோ..நோ.. எங்கிட்டே வந்தது…. வெரிகுட் ந்னு சொன்னேன். ஒரு நல்ல வேலை புடிச்சுடலாம். டோண்ட் வொரி.. டோண்ட் வரி.. ஐ வில் டேக் கேர்.

செக்கரட்டரி : சார் தமிழ்ல்ல…. ( மேனேஜர் முறைக்க அமைதியாகிறார் )

அருள் : தேங்க்யூ சார்.

மேனேஜர் : எவ்ளோ நாளா வேலையில்லாம இருக்கீங்க. (கம்ப்யூட்டரில் தட்டுகிறார்… )

அருள் : ஒரு ரெண்டு மாசமா சார்.

மேனேஜர் : டூ மந்த்ஸ்… ஓ.. நோ.. அப்போ நீங்க ஒரு யூஸ்லெஸ் பர்சன் இப்போதைக்கு.

அருள் : அப்படியெல்லாம் இல்ல சார்.. ஏன் அப்படி சொல்றீங்க..

மேனேஜர் : நோ..நோ நான் சொல்லல, என் கம்ப்யூட்டர் சொல்லுது. பணம் இல்லாதவன்னா யூஸ்லெஸ் ந்னு இது சொல்லுது. பணம் இல்லேன்னா யாரு மதிக்கிறது தம்பி… எனக்கு ஃபீஸ் தர பணம் இருக்கா ?

அருள் : எல்லாம் இருக்கு சார்… இவ்ளோ நாள் சமாளிச்சுட்டேன்.. ரொம்ப நாள் ஆயிடுச்சு.. அதனால சீக்கிரம் ஒரு வேலை வாங்கணும் ..

மேனேஜர் : வெரிகுட்… செல்ஃப் ரியலைசேஷன் வந்திருக்கு.. வெரி குட். அப்போ கொஞ்சம் பெட்டரான யூஸ்லெஸ் ந்னு சொல்லலாம்.

அருள் : சார்.. ஐம் நாட் யூஸ்லெஸ்.. ஐம் காட்ஸ் சைல்ட்.. நான் கடவுளோட பிள்ளை. எப்பவுமே யூஸ்லெஸ் கிடையாது.

மேனேஜர் : ஓ.. காட்ஸ் சைல்டா… அதை ஏன் முதல்லயே சொல்லல.. அந்த கேட்டகிரில ஏதாச்சும் வேலை இருக்கா பாக்கறேன் ( கம்ப்யூட்டரில் தட்டிப் பார்க்கிறார் ) காட்ஸ் சைல்ட் ந்னு எந்த வேலையும் இல்லையேப்பா… காட்ஸ் சைல்ட் க்கு எவ்ளோ சம்பளம் குடுப்பாங்க.

அருள் : சார்.. அது வேலை இல்ல சார்.. வேலை செய்து அந்த பேரை வாங்க முடியாது. அது இலவசமா கிடைக்கிறது.

மேனேஜர் : ஃபிரீயாவா ?

அருள் : ஆமா சார்… யார் வேண்டுமானாலும் பிரீயா அதை வாங்கிக்கலாம்…

மேனேஜர் ( குழப்பமாய் தலையைச் சொறிகிறார் ) : இதென்னடா நமக்குத் தெரியாத புது வேலை ???

செக்கரட்டரி : செக்யூரிடி கார்டா இருக்குமோ சார் ?

மேனேஜர் : அதுக்கு சம்பளம் இருக்கேப்பா…

அருள் : சார்…. காட்ஸ் சைல்ட் ங்கறது ஒரு ஆசீர்வாதம், ஒரு உயர்வான நிலை, ஒரு டிவைன் ஸ்டேட்டஸ், அரசனுக்கு மகன் மாதிரி…

மேனேஜர் : ஓ… இங்கிலாந்து மஹாராணிக்கு மகன் மாதிரி… ம்ம்.. ஓகே ஓகே… எப்படி கிடைச்சுது அந்த வேலை ? எவ்ளோ குடுத்தீங்க ? ரொம்ப கஷ்டமோ ?

அருள் : சார்.. இதெல்லாம் காசு குடுத்து கிடைக்கிறதில்லை… கஷ்டமே இல்லாத விஷயம் அது. இஷ்டம் இருந்தா போதும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனா மாறுற எல்லாருக்கும் கிடைக்கிறது தான்.

மேனேஜர் ( உற்சாகமாகிறார் ) : ஓ.. நீ கிறிஸ்டியனா ? என்னப்பா அதை முதல்ல சொல்ல வேண்டாமா ? டைம் வேஸ்ட் பண்ணிட்டியே…ச்சே..ச்சே..ச்சே… ( கம்யூட்டரில் வேகமாகத் தட்டுகிறார் )… சூப்பர்ப்பா.. உனக்கு வேலை கிடைச்சாச்சு….

அருள் : என்ன சார் சொல்றீங்க ?

மேனேஜர் : ( கம்யூட்டரைப் பார்த்துக் கொண்டே ) ஆமாப்பா… நற்செய்தி டிவி சானல்ல நாலு வேலை காலி இருக்கு… டிரம்பெட் பத்திரிகைல ரிப்போர்ட்டர் வேலை காலியிருக்கு… ரெண்டு மூணு சர்ச்ல உதவியாளர் வேலை காலியிருக்கு….

அருள் : சார்… வெயிட் வெயிட்… கிறிஸ்டியன்னு சொன்னா உடனே சர்ச்ல வேலைன்னு ஆரம்பிக்காதீங்க.. எங்க வேலை செய்றதுங்கறது முக்கியம் இல்லை. எல்லா இடத்துலயும் கிறிஸ்டியனா இருக்கலாம்.. இப்போ, நான் ஒரு பெயிண்டர் அதுக்கு ஏதாச்சும் வேலை இருக்கா ?

மேனேஜர் : இல்லப்பா.. இங்கெல்லாம் வேலை செஞ்சா எப்பவும் கடவுளை நினைச்சுட்டே இருக்கலாம் இல்லையா.. அதான் சொன்னேன்…. நான் நிறைய பேரை சேத்து விட்டுருக்கேன்.. நல்ல கமிஷன் கூட தந்திருக்காங்க..

அருள் : சார்.. எங்கே வேலை செஞ்சாலும் அது கடவுளுக்காகத் தான் செய்யணும். அதை தான் பைபிள் சொல்லுது. வேலை இல்லாம இருந்தா கூட கடவுளுக்காக வேலை செய்யலாம்..

மேனேஜர் : குழப்பறியேப்பா.. வேலை இல்லாம இருக்கும்போ எப்படி வேலை செய்வே ?

அருள் : ஏழைகளுக்கு என்ன செஞ்சாலும் அது கடவுளுக்குச் செஞ்சதுன்னு கடவுள் சொல்லியிருக்காரு சார்… நான் முடிஞ்ச அளவுக்கு அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன்..அதைத் தான் சொன்னேன்.

மேனேஜர் : சம்பளம் இல்லாத வேலை தானே ?

அருள் : சார் சம்பளம் இந்த உலக தேவையை நிறைவேத்தறதுக்கு. சம்பளம் இருந்தாலும் இல்லாட்டாலும் நான் கடவுளோட பிள்ளைங்கறது மாறப் போறதில்லையே ?

மேனேஜர் : உன் கேஸ் கொஞ்சம் வித்தியாசமா இருக்குப்பா.. காட்ஸ் சைல்ட் ந்னு சொல்றே… அது பிரியா கிடைச்சுதுன்னு சொல்றே… எல்லா வேலையிலயும் கடவுளுக்கு வேலை செய்வேன்னு சொல்றே… வேலையில்லாட்டா கூட கடவுளுக்கு வேலை செய்வேன்னு சொல்றே… என்னையே யோசிக்க வெச்சுட்டியேப்பா..

அருள் : சார்… வேலை போச்சு, மார்க் போச்சு, வீட்ல சண்டை போடறாங்க, பிரண்ட்ஸ் விட்டுட்டு போயிட்டாங்க ந்னு சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். ஏன்னா எல்லாத்தையும் விட பெரிய அங்கீகாரம் தான் கடவுளோட பிள்ளைங்கற அங்கீகாரம். அது இருக்கும்போ நான் எதுக்கு சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றி கவலைப்படணும்.

செக்கரட்டரி : அதாவது பிளைட்ல போகும்போ ஏன் புல் தடுக்கும் ந்னு பயப்படணும்ன்னு சொல்றாரு சார்.

மேனேஜர் : இப்போ தாண்டா நீ ஒரு நல்ல வார்த்தை பேசியிருக்கே !

செக்கரட்டரி : நல்லவங்க கூட பேசிட்டிருக்கும்போ தான் சார் நல்ல வார்த்தை வரும்

(மேனேஜர் முறைக்கிறார் )

அருள் : சார்.. அதெல்லாம் இருக்கட்டும் சார். என்னோட கடமைகளை நிறைவேற்ற வேண்டி இருக்கும். ஏதாச்சும் என்னோட திறமைக்கு தக்க வேலை இருந்தா சொல்லுங்க சார். கடவுளுக்கு சித்தம் இருந்தா கிடைக்கட்டும்.

மேனேஜர் : கண்டிப்பா…. டீட்டெயில்ஸ் எல்லாம் நோட் பண்ணிட்டேன்பா… நான் அப்படியே என்னோட ஹெட் ஆபீஸுக்கு அனுப்பி ஏதாச்சும் வேலை இருக்கான்னு பாத்து சொல்றேன்… நீ கவலைப்படாம போயிட்டு வா…

அருள் : தேங்க்யூ சார்…

( இருவரும் எழுந்து வெளியே போகிறார்கள் )

மேனேஜர் : யப்பா செக்கரட்டரி… வேலை இல்லாம ரெண்டு மாசமா சுத்திட்டிருக்கான்.. ஆனாலும் எவ்ளோ கூலா, நிதானமா, சந்தோசமா இருக்கான் பாத்தியா ?!

செக்கரட்டரி : ஆமா சார்… ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.

மேனேஜர் : அவன் ஏதோ காட்ஸ் சைல்ட் ந்னு சொன்னான்ல, அதான் அதுக்கு காரணம்ன்னு நினைக்கிறேன்.

செக்கரட்டரி : ஆமா சார்… அதான் நானும் நினைக்கிறேன்…

மேனேஜர் : நாமும்… எப்படியாச்சும் காட்ஸ் சைல்ட் ஆயிடணும்பா… அது எப்படின்னு கண்டுபிடிப்போம்.

செக்கரட்டரி : கண்டிப்பா சார்.. எனக்கும் அதான் தோணிச்சு… அப்போ தான் எப்பவுமே சந்தோசமா இருக்க முடியும். இல்லேன்னா உங்க கிட்டே வேலை செய்யும்போ எப்படி சந்தோசமா இருக்கிறது ?

மேனேஜர் முறைக்கிறார் : உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா…

———

பின் குரல் :

வாழ்வில் மிக உன்னதமான நிலை என்பது ராஜாதி ராஜாவாம் இயேசுவின் பிள்ளைகள் எனும் நிலை தான். மற்ற எல்லா வெற்றிகளும், தோல்விகளும் சாதாரணமானவை. தற்காலிகமானவை. இறைவனின் பிள்ளைகள் என்பதே உன்னதமான உயர்ந்த நிலை.

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம் என்கிறது 1 யோவான் 3 :1.

இந்த நிலை நமக்கு இறைவனால் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. “நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை என்கிறது எபேசியர் 2 : 8”.

எனவே நாம் இறைவனின் பிள்ளைகள் எனும் நிலையை அடைவோம். அதன் மூலம் வாழ்க்கையை இனிமையாய் எதிர்கொள்வோம். நன்றி.

Posted in Articles, WhatsApp

வாகனங்கள், வாசகங்கள்

Image result for bible verse in car
நண்பர் ஒருவருடன் பேசியபடி சாலையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென எங்களை உரசியபடி பறந்தது ஒரு கார். அதிர்ச்சியுடன் பார்த்தேன். காரின் பின் கண்ணாடியில், “என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்” என எழுதப்பட்டிருந்தது. கூடவே ஒரு சிலுவையின் படமும்.

“சிலுவை படம் போட்டு, வசனமும் ஒட்டிகிட்டு எப்படி ஓட்றான் பாத்தீங்களா ?” என்றார் அருகில் நின்றிருந்த நண்பர். வசனங்களை காரில் ஒட்டியதால் ஒருவன் நல்லவனாய் மாறிவிட முடியாது என்றேன் சிரித்துக் கொண்டே.

உண்மை தான். ஏதேதோ மத வாசகங்களுடன் வருகின்ற கார்களில் முக்கால்வாசி அச்சுறுத்தியபடி தான் பறக்கின்றன. இத்தகைய சந்தர்ப்பங்களில் அந்த மதங்களின் மீது மக்களுக்கு மரியாதை வருவதற்குப் பதில் அருவருப்பே எழும் என்பதிலும் சந்தேகமில்லை.

உங்கள் ஆன்மீகத்தை செயலில் காட்டுங்கள்.

நிதானமாய் வண்டி ஓட்டலாம். சாலை கடக்க நினைப்பவர்களுக்காய் காத்திருக்கலாம். அவசர வாகனங்களுக்கு வழி விடலாம். தவறிழைக்கும் தருணங்களில் ஒரு புன்னகையுடன் மன்னிப்பு கேட்டு கடந்து செல்லலாம்.

இவற்றையெல்லாம் விட்டு விட்டு வசனங்களை கண்ணாடியிலும், வெறுப்பை மனதிலும் எழுதியபடி வாகனம் ஓட்டுவதில் எந்த பயனும் இல்லை.

சிந்திப்போம்.

Posted in Sunday School

Skit : மாற்றம் ! இயேசுவால் வரும்.

Image result for jesus and barabbas

 

காட்சி 1

 

நபர் 1 : நீ விடுதலையானது ரொம்ப சந்தோசமா இருக்கு ! நம்முடைய போராட்டத்தை இன்னும் வலிமையா நாம முன்னெடுத்துச் செல்லணும்.

நபர் 2 : கண்டிப்பா… இந்த ரோம ராஜ்யத்துக்கு எதிரா யூதர்களின் கொடி பறக்கணும்

நபர் 3 நாம யாருக்கும் அடிமை இல்லைங்கறதை அவர்களுக்கு நிரூபிச்சுக் காட்டணும்.

நபர் 4 : ( அமைதியாய் இருக்கிறார் )

நபர் 1 : புரட்சி வெடிச்சா தான் பூமி சிரிக்கும். நம்ம தலைமுறைக்கான வழியை நாம தான் உருவாக்கணும்

நபர் 2 : நம்ம தலைமுறைக்கு மட்டுமல்ல, வருங்கால தலைமுறைக்கும் நாம தான் வழிகாட்டணும்

நபர் 3 : அடக்குமுறைக்கு அடங்கி, ஒடுங்கி, கிடக்கிற வாழ்க்கை போதும்ன்னு ஒதுக்கி வெச்சுட்டு நம்முடைய போராட்டத்தைத் தீவிரப்படுத்தணும்.

நபர் 4 : ( அமைதியாய் இருக்கிறார்.. எதையோ யோசிக்கிறார்… )

நபர் 1 : ஆயுதம் ஏந்தாம ஆதாயம் இல்லை ! அதை ஆளும் வர்க்கத்துக்குப் புரிய வைப்போம்.

நபர் 2 : உண்மை தான், வன்முறைதான் வழிமுறை. வன்முறையைக் கையில் எடுக்காதவரைக்கும், விடுதலையை நாம சுவாசிக்க முடியாது.

நபர் 3 : நமக்கு முன்னாடி எத்தனையோ பேர் களம் கண்டு இறந்திருக்காங்க, சாவுக்கு அஞ்சாம நாம சாதிக்கணும்.

நபர் 4 : ( அமைதியாய் இருக்கிறார் )

நபர் 1 : எங்கெல்லாம் அடக்குமுறை உண்டோ, அங்கெல்லாம் அத்துமீறல்களும் உண்டு. நமக்கு எதிரா இருக்கிற அடக்குமுறையையும் நாம அத்துமீறலால தான் தாண்டவேண்டியிருக்கு.

நபர் 2 : (நபர் 4 ஐப் பார்த்து ) சிறையில உனக்கு ஏதாச்சும் பிரச்சினை குடுத்தாங்களா ?

நபர் 3 : நீ விடுதலையானதைக் கேட்டதும் எங்களாலயே நம்ப முடியல. இது நம்ம இயக்கத்துக்கு மிகப்பெரிய உந்துதலைத் தந்திருக்கு ! நாம நம்மோட போராட்டத்தைத் துரிதப்படுத்தற நேரம் வந்தாச்சு

நபர் 4 : ( அமைதியாய் இருக்கிறான் )

நபர் 1 : ஏன்.. பேசாம இருக்கீங்க ? ஏதாவது சொல்லுங்க.. உங்க அமைதி குழப்பத்தை உருவாக்குது.

நபர் 2 : தீவிரமா யோசிக்கிறதைப் பாத்தா. அடுத்த திட்டம் அதி பயங்கரமா இருக்கும் போலிருக்கே

நபர் 4 : (அமைதியான குரலில் ) எது போராட்டம் ? எதுக்காக போராடறோம் ? வாழ்க்கைல எது முக்கியம் ? யார் முக்கியம்? ( சொல்லி விட்டு போகிறார்… அப்போது நண்பர்கள் அழைக்கின்றனர் )

நபர் 3 : இவன் என்னடா இப்படி சொல்லிட்டு போறான்.. பரபாஸ்…பரபாஸ்…பரபாஸ்….. ( உரத்த குரலில் கூப்பிடுகிறான். அப்போது தான் அந்த கதாபாத்திரம் பரபாஸ் என்பது மக்களுக்குத் தெரிகிறது. )

 

 

காட்சி 2

( மக்கள் முன்னிலையில் பரபாஸ் பேசுகிறான் )

பரபாஸ் : மக்களே கேளுங்கள்… என் பெயர் பரபாஸ் ! விடுதலைப் போராட்ட வீரன் என்று கர்வம் கொண்ட தருணங்கள் உண்டு. கொலைகாரன் என்று மக்களால் விமர்சிக்கப்பட்ட தருணங்கள் உண்டு. கலகக்காரன் என்று ஆளும் வர்க்கத்தால் முத்திரை குத்தப்பட்ட கணங்களும் உண்டு.

மக்களில் ஒருவர் : நீ தான் கொலைகாரன் ஆச்சே ! உன்னை எப்படி விடுவிச்சாங்க ?

பரபாஸ் : மக்கள் மன்றத்துல ஆளுநர் பிலாத்து மக்களைப் பார்த்து கேள்வி கேட்டார். பரபாஸ் வேணுமா ? இயேசு வேணுமா ? யாரை விடுவிக்கணும்ன்னு ! மக்கள் எல்லாம் பரபாஸ் ந்னு சொன்னாங்க. என்னால நம்ப முடியல. மக்களுக்கு என்மேல அவ்வளவு பாசமான்னு யோசிச்சேன். அப்புறம் தான் புரிஞ்சுது, அது என்மேல வெச்ச பாசமல்ல, இயேசு மேல வெச்ச வெறுப்புன்னு !

ம.ஒ : நீ தான் பெரிய விடுதலை வீரனாச்சே.. இப்போ என்ன மக்கள் மத்தியில நின்னு பேச ஆரம்பிச்சிருக்கே !?

பரபாஸ் : என் வாழ்க்கையோட அர்த்தம் என்னன்னு புரியாம இருந்துது. உங்களுக்குத் தெரியுமா ? என்னோட முழு பேரு ஜீஸஸ் பரபாஸ் ! அந்த மாமனிதரோட பெயரை என்னோட பெயருக்கு முன்னால போட எனக்கு அருகதையே இல்லை.

ம.ஒ : ஓ.. இப்போ நீ இயேசுவோட ஆளா ? பெயருக்கு புது விளக்கம் எல்லாம் சொல்றே ?

பரபாஸ் : விளக்கம் சொல்லணும்ன்னா இன்னும் சொல்லலாம். பரபாஸ் ந்னு சொன்னா அந்த பெயருக்கு தந்தையின் மகன்னு அர்த்தம். ஜீஸஸ் பரபாஸ் ந்னு சொன்னா, ஜீஸஸ் தந்தையின் மகன்னு அர்த்தம். அந்தப் பெயரை எனக்கு என்னோட பெற்றோர் வெச்சதுக்கு ஒரு காரணம் இருந்திருக்குன்னு இப்போ தான் புரியுது.

ம.ஒ : புரியலையே.. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..

பரபாஸ் : இயேசு.. விண்ணகத் தந்தையின் மகன்.. அந்த உண்மையைத் தான் என்னோட பெயர் சொல்லுது. அன்னிக்கு இயேசுவை சிலுவையில் அறையச் சொல்லிட்டு என்னை விடுவிச்சாங்க, நான் அன்னிக்கு என்ன பண்ணினேன் தெரியுமா ? நேரா இயேசுவை சிலுவையில் அறையப் போற இடத்துக்கு போனேன். அங்கே அவரை நேருக்கு நேரா பாத்தேன்.

ம. ஒ : இதெல்லாம் நம்பும்படியா இல்லையே ?

பரபாஸ் : நம்புறதும் நம்பாததும் உங்க விருப்பம். ஆனா இயேசு அன்னிக்கு என்னை உற்றுப் பாத்தாரு. ‘உனக்காக நான் சிலுவையில் அறையப்படறேன்’ ந்னு சொல்ற மாதிரி இருந்துச்சு அந்த பார்வை. எனக்கு உடம்பெல்லாம் கூசிடுச்சு. முதல் முறையா குற்ற உணர்ச்சி எனக்கு வந்துச்சு.

ம.ஒ : அதுக்கு நீங்க, ஒண்ணும் செய்ய முடியாதுல்ல.. மக்கள் தானே இயேசுவை சிலுவையில் அறையச் சொன்னாங்க.

பரபாஸ் : உண்மை தான். ஆனா, எனக்காக இரத்தம் சிந்தி உயிர்விட ஒருவர் இருக்கிறார் என்கிறது எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. அன்னிக்கு ராத்திரி ஒரு கனவு கண்டேன்.

ம.ஒ : கனவா ? என்ன கனவு

பரபாஸ் : ஒரு வெளிச்சம். அந்த வெளிச்சத்துல இருந்து ஒரு குரல் வருது. பரபாஸ்…பரபாஸ்.. ந்னு ஒரு குரல். ‘சொல்லுங்க.. நீங்க யாரு’ ந்னு கேட்டேன் நான் . நான் தான் இயேசு.. ந்னு அந்தக் குரல் சொல்லிச்சு. ‘இயேசுவைத் தான் சிலுவைல அறைஞ்சு கொன்னுட்டாங்களே’ ந்னு சொன்னேன். அது மூணு நாளைக்கு முன்னாடி. இப்போ நான் உயிர்த்து விட்டேன். நீ அதை மக்களுக்கு அறிவி. உனக்காக நான் உயிர் தந்தேன், எனக்காக நீ குரல் தா.. என அந்த குரல் சொல்லிச்சு.. திடுக்கிட்டு முழிச்சேன்.

ம.ஒ : சுவாரஸ்யமா இருக்கு.. அப்புறம் என்னாச்சு ?

பரபாஸ் : காலைல வெளியே ஓடி சீடர்கள் கிட்டே போலாம்ன்னு பாத்தா, ‘இயேசு உயிர்த்து விட்டார்’ ங்கற நியூஸ் வெளியே பரவிட்டு இருந்துச்சு. ‘சீடர்கள் இயேசுவோட உடலைத் தூக்கிட்டு போனதாவும் சிலர் பேசிகிட்டாங்க’ . ஆனா உண்மை என்னான்னு எனக்கு தெரியும். அது கனவுலயே தெரிஞ்சுடுச்சு.

ம.ஒ: இயேசு உயிர்த்ததை அப்போ நீங்க நம்பறீங்க

பரபாஸ் : நிச்சயமா நம்பறேன். அவருடைய கருணை தான் என்னோட இந்த நிலமைக்குக் காரணம். எனக்காக உயிர் கொடுத்தவர் மனுக்குலம் முழுமைக்காகவும் உயிரைக் கொடுத்து மீட்பை வாங்கிக் கொடுத்தார். அந்தக் கிருபையை நான் எப்பவுமே மறக்க மாட்டேன். நீங்களும் இயேசு உயிர்த்ததை நம்பணும். அது தான் மீட்புக்கு அடிப்படை

ம.ஒ : நீங்க தான் இயேசுவை நேரடியா பாத்திருக்கீங்க… இதுக்கு அப்புறம் என்ன பண்ணணும் ?

பரபாஸ் : நன்றியுள்ளவர்களா இருக்கணும். அதான் முக்கியமான தேவை. போரட்டம் என்பது ரோமர்களை எதிர்ப்பதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். இல்லைன்னு இயேசுவோட பார்வை விளக்கிச்சு. போராட்டம் என்பது நம்மோடு நடத்துவது. நம் பாவங்களோடு நடத்துவது. ந்னு புரிஞ்சுகிட்டேன்.

ம.ஒ : ஓ. அதனால தான் இப்படி மக்கள் கூடற இடத்துல எல்லாம் வந்து போதனை பண்ணிட்டு இருக்கீங்களா ?

பரபாஸ் : உண்மையைச் சொல்வது என் பணி. உணர்வதும் உணராதது உங்கள் விருப்பம். நான் வரேன்

(பரபாஸ் போகிறான் )

பின் குரல்

இயேசுவுக்குப் பதிலாய் விடுவிக்கப்பட்ட பரபாஸ் அதன் பின் என்ன செய்திருப்பான் எனும் ஒரு கற்பனைக் கதையே இந்த நாடகம். அவருடைய பெயர் ஜீஸஸ் பரபாஸ் என்கிறது வரலாற்று நூல்கள். அவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டதைக் கண்டதாகவும், அதன் பின் இயேசுவைப் பின்பற்றியதாகவும் பரம்பரைக் கதைகள் உண்டு. அந்த நிகழ்வுகளே இந்த குறுநாடகத்தின் அடிப்படை. இயேசுவின் கருணையை உணர்ந்து நன்றியுடையவர்களாய் வாழ்வோம்.