Posted in Articles, கிறிஸ்தவ இலக்கியம், Sunday School

SKIT : வாழ்வது ஒரு முறை !

வாழ்வது ஒரு முறை !

Image result for slave selling 

காட்சி 1

( ஆப்பிரிக்க நாட்டில் ஒரு கிராமம். ஊழியர் பெல்லார்மின் அமர்ந்திருக்கிறார். அவருடன் இன்னொரு நபர் பேசிக்கொண்டிருக்கிறார் )

நபர் 1 : ரொம்ப நாளா உங்க கிட்டே ஒன்ணு கேக்கணும்ன்னு நினைச்சுட்டே இருந்தேன் கேக்கலாமா ?

பெல்லார்மின் : கேளுங்க.. இதில என்ன தயக்கம் ?

ந 1 : இந்தியாவில நல்ல வசதியான வாழ்க்கை வாழ்ந்திட்டிருந்தீங்க ? இப்போ குடும்பத்தோட இந்த ஆப்பிரிக்க கிராமத்துல வந்திருக்கீங்க. இங்கே பிள்ளைங்க படிக்க நல்ல ஸ்கூல் கிடையாது. நல்ல வருமானம் கிடையாது. இருந்தாலும் ஏன் ?

பெல் : ஐயா… நான் இங்கே வந்திருக்கிறது பிள்ளைங்களை படிக்க வெச்சு டாக்டராக்கவோ, இல்லை பெரிய வேலைல சேர்ந்து பணம் சம்பாதிக்கவோ இல்லை. அது உங்களுக்கே தெரியும்…

ந1 : ஐயா… அதெல்லாம் தெரியும். எவ்ளோ நாளா உங்க கூடவே இருக்கேன். நீங்க இயேசுவைப் பற்றி இங்குள்ள மக்களுக்கு சொல்றதுக்காகத் தான் வந்திருக்கீங்க. ஆனா இந்த வாழ்க்கை கஷ்டமா இல்லையா ?

பெல் : இல்லவே இல்லை. எத்தனையோ பேருக்கு கிடைக்காத அழைப்பு எனக்கு கிடைச்சிருக்குன்னு டெய்லி நான் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டே இருக்கேன்.

ந1 : இருந்தாலும் பிள்ளைகளையாவது இந்தியாவில படிக்க வெச்சிருக்கலாம். அவங்களாவது நல்ல வசதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.

பெல் : ஐயா.. எல்லாருக்குமே கடவுள் கொடுக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை தான். அதை அப்படியே கடவுள் கிட்டே குடுக்கிறதில இருக்கிற சந்தோசமே தனி. நான் தான் ரொம்ப லேட்டா, பெரியவன் ஆனப்புறம் என் வாழ்க்கையை கடவுள் கிட்டே குடுத்தேன். என் பிள்ளைகளுக்கு சின்ன வயசிலயே அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. இது எவ்ளோ பெரிய சந்தோசமான விஷயம்.

ந 1 : நீங்க சொல்றதும் சரிதான்.. இருந்தாலும் பிள்ளைங்க இந்த உலகத்துல இருக்கிற எந்த ஜாலியான விஷயங்களையும் அனுபவிக்காம இங்கே இருக்காங்களேன்னு கேட்டேன்.

பெல் : ஐயா.. தற்காலிக சுகம், நிரந்தர நரகத்துக்கு தான் கொண்டு போகும். உங்க கிட்டே ஒரே ஒரு பாட்டில் தண்ணி தான் இருக்குன்னு வெச்சுக்கோங்க‌ ! பாலைவனத்துல நாலு நாள் நடக்கணும். வேறு தண்ணியே கிடைக்காது. அந்த ஒரு பாட்டில் தண்ணீரை எவ்ளோ கவனமா பாதுகாப்பீங்க. ஒவ்வொரு சொட்டு செலவழிக்கும்போதும் எவ்வளவோ எச்சரிக்கையா இருப்போம் இல்லையா ?

ந 1 : ஆமாங்கய்யா… 

பெல் : உங்க கிட்டே தீப்பெட்டியும் ஒரே ஒரு தீக் குச்சியும் தான் இருக்கு. வேற எங்கயும் தீப்பெட்டி இல்லை. நள்ளிரவுல விளக்கு கொளுத்த வேண்டியிருக்கு. எவ்ளோ கவனமா அதை உரசுவீங்க இல்லையா ?

ந 1 : ஆமாங்கய்யா.. அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் ?

பெல் : அதே மாதிரி தான் நமக்கும் ஒரே ஒரு வாழ்க்கை. ஒரே ஒரு பாட்டில் தண்ணி மாதிரி எண்ணப்பட்ட நாட்கள். அதை எவ்வளவோ கவனமா செலவிடணும். எவ்வளவோ பயனுள்ள வகையில அதை செலவிடணும். அதுல கொஞ்சம் கூட வேஸ்ட் பண்ணக் கூடாது இல்லையா ? ஒரே ஒரு தீக்குச்சி தான் நம்ம வாழ்க்கைன்னா அதை எவ்வளவு கவனமா உரசணும் இல்லையா ? அப்படித் தான் இதுவும். அந்த வாழ்க்கையை கடவுளுக்காகவே கொடுக்கிறது தான் உண்மையான மகிழ்ச்சி.

( அப்போது ஒரு நபர் ஓடி வருகிறார் )

ந 2 : ஐயா… நம்ம ரிவர் சைட் மார்க்கெட்ல அடிமை ஏலம் நடக்குதுங்கய்யா…

ந 1 : ம்ம்ம்… நம்ம நாடு எப்ப தான் உருப்படுமோ ! இந்த அடிமை ஏலத்தை இன்னும் நிறுத்த முடியல. வாழ்க்கையை ஓட்டறதுக்கு மனுஷன் என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு.

பெல் : இப்படித் தான் பாவத்தைச் செய்திட்டு இருக்கிறவன் பாவத்துக்கு அடிமையா இருக்கிறான்னு இயேசு சொல்லியிருக்காரு.

ந 2 : இருந்தாலும் பாவம்யா.. இன்னிக்கு ஏதோ ஒரு இளம்பெண்ணை ஏலம் போடறாங்க. 

பெல் : எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு.. சரி… வாங்க அங்கே போலாம். 

காட்சி 2

( ஒரு இளம் பெண் மேடையில் நிற்கிறாள். தலைகுனிந்து சோகமாக நிற்கிறாள். ஏலம் நடக்கிறது )

ஏலம் நடத்துபவர் : ( சிரித்துக் கொண்டே ) இந்த பெண்.. இளம் பெண்.. அழகான பெண்.. இதுக்கு முன்னாடி பெல்ஷா மாளிகைல அடிமையா இருந்தா. அங்கிருந்த முதலாளி இப்போ இவளை ஏலத்துல வித்துட்டு வேற பொண்ணை வாங்க போறாரு. அதனால தான் இந்த ஏலம். ஏலத்தை ஆரம்பிக்க போறேன்.

ஏலம் வாங்குபவர்  : இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கு. எவ்ளோ பணமானாலும் நான் வாங்கப் போறேன். 

ந4 : எவ்ளோ பணம்ன்னாலுமா ?

வாங்குபவர் : பொதுவா ஒரு பத்தாயிரம் பணத்துக்கு வாங்கிடலாம். கொஞ்சம் அப்டி இப்டி ஆனா கூட பரவாயில்லை. ஏலத்துல எடுத்துர வேண்டியது தான். இது மாதிரி அழகான பொண்ணு எப்பவும் கிடைக்காது.

( அப்போது பெல்லார்மின் & ந 1 வருகின்றனர் )

பெல் : அந்த பொண்ணை நான் ஏலத்துல எடுக்க போறேன். 

ந 1 : ( ஆச்சரியத்துடன் ) ஐயா.. நீங்களா ?

பெல் : ஆமா.. கடவுள் அந்த பொண்ணை ஏலத்துல எடுக்க மனசுக்குள்ள சொல்றாரு. 

ந 1 : சரிங்கய்யா.. ஆனா இருக்கிற பணத்தை ஏலத்துல விட்டீங்கன்னா ?

பெல் : உங்களுக்கு தெரியாதது இல்லை. என்கிட்டே மொத்த சேமிப்பா ஒரு ஐம்பதாயிரம் பணம் இருக்கு. அதுல கொஞ்சத்தை பயன்படுத்தி வாங்கிடலாம். மத்ததையெல்லாம் கடவுள் பாத்துப்பாரு. 

ந1 : சரிங்கய்யா.. உங்க விருப்பம்.

( ஏலம் தொடங்குகிறது )

ஏலம் நடத்துபவர் : ஏலம் ஆரம்பிக்க போறேன். ஆரம்ப விலை ஆயிரம் பணம் !

ஏலம் வாங்குபவர் : இரண்டாயிரம் பணம்

பெல் : மூவாயிரம் 

ஏ. வா : ஐயாயிரம் 

பெல் : ஆறாயிரம் 

ஏ. வா : ஏழாயிரம்

பெல் : எட்டாயிரம்

ஏ. வா : பத்தாயிரம் 

ந 1 ( பெல்லார்மினிடம் ) : ஐயா.. வேண்டாம்.. இதுக்கு மேல செலவு செய்ய வேண்டாம்.

பெல் : பதினையாயிரம் 

ஏ. வா : இருபதாயிரம் 

பெல் : முப்பதாயிரம் 

ஏ. வா : ( கொஞ்சம் யோசிக்கிறார். தலையைச் சொறிகிறார் பின் கேட்கிறார் ) நாற்பத்து ஐயாயிரம். 

ஏ.வா வின் நண்பர்.. ந 4 :  ஐயா.. என்ன உங்களுக்கு புத்தி கித்தி கெட்டு போச்சா.. இந்த பணத்துக்கு இதே மாதிரி பத்து பொண்ணு வாங்கலாம். இப்போ அவரு பேசாம போனா நமக்கு பெரிய நஷ்டம்.. தப்பு பண்ணிட்டீங்களே. என்ன ஆளு நீங்க… ?

( பெல் ஏலம் கேட்க போகும் போது நண்பர் தடுக்கிறார் )

ந1 : ஐயா வேணாம். உங்க வாழ்நாள் சொத்தே ஐம்பதாயிரம் பணம் தான். உங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. மனைவி இருக்காங்க. ஏதாச்சும் மருத்துவ தேவை வந்தா கூட கைல காசு இருக்காது. இந்த பொண்ணு நமக்கு எவ்வளவு தான் சம்பாதிச்சு தர முடியும் ? வேணாம்யா விட்டுடுங்க.

பெல் : ஐம்பதாயிரம் !

( ஏலம் கேட்ட மற்ற நபரும், நண்பர்களும்.. “அப்பாடா தப்பிச்சோம்” என போய் விடுகின்றனர். )

ஏலம் இடுபவர் : ஐம்பதாயிரம் பணம் ஒரு தரம். வேற யாராவது ஏலம் கேட்கிறீங்களா ?

( மக்கள் ஒவ்வொருவராகப் போகின்றனர் )

ஏலம் இடுபவர் : ஐம்பதாயிரம் பணம் இரண்டு தரம் …. ஐம்பதாயிரம் பணம் மூணு தரம். 

( பெல்லார்மின் ஒரு செக் எழுதி அவரிடம் கொடுக்கிறார். அந்தப் பெண் குனிந்த தலையுடன் அவரது அருகே வந்து நிற்கிறாள் )

பெல் நண்பரிடம் : வாங்க போலாம்

( பெண் பின்னாடியே வருகிறார் )

பெல் : அம்மா .. நீங்க போலாம். என் கூட வரவேண்டிய அவசியம் இல்லை. இப்போ நீங்க அடிமையில்லை உங்களுக்கான விலையைக் கொடுத்து உங்களை விடுதலையாக்கியாச்சு.

( ந 1 புரியாமல் பார்க்கிறார் )

பெண் : ஐயா.. என்ன சொல்றீங்க ? புரியல. 

பெல்லார்மின்: அம்மா.. உங்களை அடிமைத்தனத்தில இருந்து மீட்கத் தான் நான் ஏலம் எடுத்தேன். உங்களுக்கு விடுதலை வாங்கி தர. உங்களை மீண்டும் அடிமையா மாத்துறதுக்கு இல்லை.

பெண் : ( அழுகைக் குரலில் ) ஐயா.. ஏன் ?  இவ்ளோ பணம் குடுத்து என்னை ஏலத்துல எடுத்து சும்மா விடுறீங்களா ? நம்பவே முடியலையே..என்னை உங்களுக்கு தெரியுமா ?

பெல் : நீ யாருன்னு எனக்கு தெரியாதும்மா. ஆனா இயேசு யாருன்னு எனக்கு தெரியும். நாம பாவ அடிமைத்தனத்துல இருந்தப்போ அவரோட உயிரையே கொடுத்து நம்மையெல்லாம் மீட்டவர். நாம சுதந்திர வாழ்க்கை வாழணும்ன்னு மண்ணுக்கு மனுஷனா வந்தவர். வந்து சிலுவையில அறையப்பட்டு உயிர்விட்டு நமக்காக இறந்தவர். 

பெண் : ஐயா என்ன சொல்றீங்க ? அப்படி ஒரு நபரைப் பற்றி எனக்கு தெரியாதே.

பெல் : உண்மைதாம்மா.. அவரைப் பற்றி சொல்ல தான் நான் இந்த நாட்டுக்கே வந்தேன். உன்னை மீட்க நான் இழந்தது என் சொத்து மட்டும் தான். அவரோ தன்னோட சொந்த ஜீவனையே இழந்தார்.

பெண் : ஏன் ஐயா அவர் அப்படி இறக்கணும் ?

பெல் : அது தான் நாம கடவுளுடைய மீட்பில் இணைய ஒரே வழி. அது தான் நாம சொர்க்கம் செல்ல ஒரே வழி. அது தான் நம்முடைய பாவங்களைக் கழுவ ஒரே வழி. அவருக்கு ஒரே ஒரு மனித வாழ்க்கை தான் தரப்பட்டது, அதை பிறருக்காக கொடுத்தார். அதே மாதிரி எனக்கு ஒரே வாழ்க்கை தான் தரப்பட்டிருக்கு. ஏழேழு ஜென்மம் பிறவி எல்லாம் நமக்கு கிடையாது. அதெல்லாம் மாயை. இந்த ஒரே ஒரு வாழ்க்கையை நான் அவருக்காக கொடுக்கிறேன்.

பெண் : ஐயா.. ( கண்ணீருடன் ) நான் மறுபடியும் அடிமையாவே போயிடறேன்.

பெல் : ( அதிர்ச்சியுடன் ) என்னம்மா சொல்றே..

பெண் : ஆமாங்கய்யா.. .இந்த தடவை நான் இயேசுவுக்கு அடிமையா போக போறேன். எனக்கு இந்த விடுதலை வாழ்க்கை உங்களால கிடைச்சுது. இயேசு உங்க மூலமா அதை எனக்கு தந்திருக்காரு. இந்த சுதந்திர வாழ்க்கையை அவருக்கு அடிமையா வாழ்றதுல செலவிட போறேன். எனக்கு கிடைச்சிருக்கிற இந்த ஒரே ஒரு வாழ்க்கையை இனிமே நான் அவருக்காகவே கொடுக்க போறேன். 

பெல் : ரொம்ப மகிழ்ச்சிம்மா.. ஒரு நபரை மீட்பதை விட பெரிய சொத்து எதுவுமே இல்லை. எனக்கு இப்போ ரொம்ப மன நிறைவா இருக்கு. 

பெண் : ஐயா.. எனக்கு என் எஜமானர் இயேசுவைப் பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க. என் வாழ்க்கைல நான் அவருக்காக வாழணும். நீங்க எனக்கு சொல்லப்போற உண்மையை எல்லாம் நாம் எங்க ஊர் மக்களுக்குச் சொல்லணும்.

பெல் : ரொம்ப மகிழ்ச்சிம்மா.. வாங்க.. நாம அப்படி ஓரமா அமர்ந்து பேசுவோம். அவரைப் பற்றி பேசறதை விட பெரிய மகிழ்ச்சி ஏதும் இல்லை.

பின் குரல் 

இது மிஷனரி ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வின் சிந்தனையை எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டது. நமது வாழ்க்கையை இறைவன் தனது ஒரே மகனின், ஒரே மனித பிறவியின்,  ஒரே ஜீவனைக் கொண்டு மீட்டார். நமக்குத் தரப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. ஒரே ஒரு பிறவி. நாம் அதை முழுமையாய் இறைவனுக்காய் அற்பணித்திருக்கிறோமா ? இல்லையேல் இதோ இந்த கணமே.. அதைச் செய்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

( நன்றி )

Posted in Articles, கிறிஸ்தவ இலக்கியம், Christianity, Vettimani

எல்லைகள் கடந்த மனித நேயம்

Image result for helping others

இந்த பூமியின் இயற்கை முழுவதும் ஏதோ ஒரு அழகிய வகையில் இணைந்தே கிடக்கிறது. கால் நனைக்கும் கடலின் முதல் துளியையும் உலகின் மறுகோடியில் கிடக்கும் கடைசித் துளியையும் ஏதோ ஒரு ஈர இழை தான் இணைத்துக் கட்டுகிறது. உலகின் ஒரு துருவத்தையும், மறு துருவத்தையும் காற்றின் ஏதோ ஓர் கயிறு தான் இறுக்கிக் கட்டுகிறது. நம் தலைக்கு மேல் விரியும் வானமும் தேசங்களுக்கு மேல் கரம்கோத்தே கிடக்கிறது. பிரிந்தே இருந்தாலும், இணைந்தே இருக்கும் வித்தை கற்றிருக்கிறது இயற்கை. ஆனால் மனிதர்களோ இணைந்தே இருந்தாலும் மனதால் பிரிந்தே இருக்கிறார்கள் !

மனிதர்களும் பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும் வல்லமை பெற்றிருந்தால் வாழ்க்கை அர்த்தப்படும். அந்தப் பிணைப்பை நல்கும் ஒரே ஒரு ஆயுதம் அன்பு தான் ! ஒரு இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பு, மற்ற இதயங்களுக்குள் சாரலடித்துச் சிரிக்கும் போது மனித வாழ்க்கை அழகாகிறது. ஆனால் அந்த ஊற்றை உள்ளுக்குள்ளேயே புதைத்து வைக்கும் போது சுயநலச் சுருக்குப் பைகளாய் மனித வாழ்க்கை சுருங்கி விடுகிறது !

தன்னலச் சுவர்களை உடைத்துக் கடக்கும் மனித விரல்கள் மனித நேயத்தை அணிந்து கொள்கின்றன. அந்த மனித நேயம் தேவையான வாசல்களைத் தேடிச்சென்று உறவைப் பகிரும் உன்னத வேலையைச் செய்கிறது. நோயாளிகளின் படுக்கைகளின் அருகே ஆறுதல் கரங்களாய் மாறுகிறது. வறுமையின் வயிறுகளில் சோற்றுப் பருக்கைகளாய் உருமாறுகிறது. பாரம் சுமக்கும் தொழிலாளியின் தோள்களாய் மாறுகிறது. தேவையென நீளும் கரங்களின் உள்ளங்கைகளில் பொருளாதார பரிசுகளாக மாறிப் போகிறது. தன்னலத் தடையுடைக்கும் நதிகள் அன்பின் அருவிகளாக அவதாரம் எடுக்கின்றன.

மதங்கள் மனிதநேயத்தை தங்கள் அடித்தளமாய் அமைத்திருக்கின்றன. ஆனால் அவற்றின் மேல் மதங்களின் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பாசி போலப் படிந்து படிந்து உண்மையான அடிப்படையை உலகமே மறந்து கொண்டிருக்கிறது. சடங்குகளின் துகிலுரித்து உண்மையின் நிர்வாணத்தைக் கண்டுகொள்ளும் ஞானம் பலருக்கும் இருப்பதில்லை. அவர்கள் சாரலில் நனைந்து அதையே பெருமழையென புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாண்டுவதும் இல்லை, உண்மையைத் தீன்டுவதும் இல்லை. மதக் கலவரங்களின் வேர்கள் இத்தகைய போலித்தனங்களின் மேல் பற்றி படர்ந்திருக்கின்றன.

இதயத்தில் மனித நேயம் இருக்க வேண்டியது மானுடத்தின் கட்டாயத் தேவை. அதற்கு வேர்களை விசாரிக்கும் வலிமை வேண்டும். மரங்களின் இயல்புகளைப் பொறுத்தே அதன் கனிகளும் அமையும். மாமரத்தின் கிளைகளில் ஆப்பிள் பழங்கள் விளைவதில்லை. ஆனால் போலித்தனமான மனிதர்களோ பட்டுப் போன கிளைகளில் கூட பழங்களை ஒட்டவைத்து நடக்கிறார்கள். வெளிப்படையான சில செயல்களால் தங்களை புனிதர்களாய்க் காட்டும் சுய விளம்பரதாரர்கள் அவர்கள். அவர்கள் மனிதநேயம் உள்ளவர்கள் போல நடிக்கும் வித்தைக்காரர்கள்.

உண்மையான மனிதம் வேர்களில் நிலவும். அதன் கனிகள் அதற்கேற்ப விளையும். ஒட்டவைக்கும் பழங்கள் அங்கே இருப்பதில்லை. மொட்டவிழ்ந்த பழங்களே விளையும். கனிகளால் மரங்கள் அடையாளப்படும். கனிகளால் தோட்டங்கள் அர்த்தப்படும். போலித்தனமில்லா ஒரு பழத்தோட்டம் விழிகளில் விரியும். உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் அன்பு இத்தகையதே ! அது இயல்பிலேயே கனிகொடுக்கும் மரமாக செழித்து வளர்க்கிறது !

மனிதநேயம், கர்வத்தைக் கழற்றி வைக்கும். நான் பெரியவன் எனும் சிந்தனைகளின் படிகளில் மனித நேயம் நடை பழகுவதில்லை. எனவே தான் ஏற்றத்தாழ்வுகளைச் சிந்திக்கும் மனங்கள் மனித நேயத்தை விட்டு வெகுதூரத்தில் கூடாரம் கட்டிக் குடியிருக்கின்றன. கர்வமற்ற மனது தான் மனிதனை மனிதனாய்ப் பார்க்கும். தூணிலும் துரும்பிலும் கடவுளைப் பார்ப்பதை விட, காணும் மனிதர்களில் இறைவனைப் பார்க்கும் ! அப்போது சக மனிதனை நேசிக்கவும், மதிக்கவும், அன்புடன் அரவணைக்கவும் அதற்கு சிக்கல் எழுவதேயில்லை.

மனித நேயம் உலகெங்கும் இருக்க வேண்டிய மனித இயல்பு. அது மட்டும் வாய்த்துவிடின் மதங்களின் சண்டைகளோ, இனப் பாகுபாடுகளோ உலகில் உருவாவதில்லை. சண்டைகளின் வரவு, இறைவனை அறியாததன் விளைவு. மனித நேயம் இல்லாததன் செயல் வடிவமே வன்முறை !

உங்களிடம் மனித நேயம் இருக்கிறதா ? ஒரு அவசர பரிசோதனை செய்து பாருங்கள். உங்கள் மேலதிகாரிக்கும் கொடுக்கும் மரியாதையையும் அன்பையும் உங்கள் உடன் பணியாளருக்குக் கொடுக்கிறீர்களா ? உங்கள் நண்பருக்குக் கொடுக்கும் அன்பை உங்கள் சமையல் காரருக்குக் கொடுக்கிறீர்களா ? உங்கள் பிள்ளைகளைப் போலவே தெருவோர ஏழையின் அழுக்குக் குழந்தையை அரவணைக்கிறீர்களா ? மனித நேயத்தின் சிதைந்து போன சிதிலங்கள் உங்கள் விழிகளுக்கு முன்னால் புதிய விடைகளை எழுதும்.

இன்னும் கேள்விகள் எழலாம். சகமனிதனின் வெற்றி உங்களை மகிழவைக்கிறதா ? ஆனந்தமாய் ஆடிப் பாட வைக்கிறதா ? அவனுக்குக் கிடைக்கும் வசதிகளும், பெருமையும் உங்களை ஆனந்தமடையச் செய்கிறதா ? இல்லை எரிச்சலின் உச்சியில் எறிகிறதா ? அடுத்தவனின் தோல்வியில் நீங்கள் உடைந்து போய் அழுகிறீர்களா ? இல்லை அவை வெறும் வேடிக்கைக் கதையாகி வெறுமனே செல்கிறதா ? சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கேள்விகளின் விடைகளில் இருக்கிறது உங்கள் மனிதநேயத்தின் எல்லைகளும், ஆழங்களும் ! உங்கள் விடைகளின் அடிப்படையில் உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை மிகவும் அழகானது. இணைந்தே வாழ்வதற்காய் நமக்குக் கிடைத்திருப்பது தான் இந்த வாழ்க்கை. எனவே அன்பினால் உலகைத் தீண்டுவோம். நேசத்தால் உயிர்களைத் தொடுவோம். கோபத்தில் எல்லைகளையும், பொறாமையின் தடைகளையும் உடைத்தே எறிவோம்.

அன்பின்றி அமையாது உலகு !
அதுவே அணையாத ஆன்மீக விளக்கு !

சேவியர்

Posted in Articles, Sunday School

அலகையை எதிர்ப்போம்

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்

கர்த்தரின் கரத்தைப் பிடித்துக் கொண்டு

சாத்தானை எதிர்கொள்ளும்

உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்என்று ஒரு தலைப்பைக் கேட்டவுடனே ஆச்சரியமாக இருந்தது. 

எனக்கு ராத்திரி மாடிக்கு போகவே பயமா இருக்கும். அக்காவைக் கூட்டிகிட்டு தான் போவேன். அங்கே ஒரு சாத்தான் இருந்தா அவ்ளோ தான், அலறி அடிச்சு ஓடியே போயிடுவேன். அப்படிப் பட்ட நாம, “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அவன் உங்களை விட்டு ஓடிப் போவான்ங்கற தலைப்பில என்ன பேசறது என யோசித்தேன். 

அப்புறம் தான் பிசாசுக்கு எதிர்த்து நிற்கிறதுன்னா என்னன்னு எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க சொல்லிக் கொடுத்ததை நான் உங்க கிட்டே பேசப் போறேன்.

பிசாசுக்கு எதிர்த்து நிற்பது என்பது அவனோடு சண்டை போடுவதல்ல, அவனோடு ஒத்துப் போகாமல் இருப்பது ! 

அலகையோடு ஒத்துப் போகாமல் இருக்க ஒரே வழி, ஆண்டவரோடு ஒத்துப் போவது தான். ஆண்டவரோடு ஒத்துப் போக ஒரே வழி அவரோட வார்த்தைகளோடு ஒத்துப் போவது தான்.

சாத்தானை எதிர்த்து நிற்பது எப்படி என்பதை இயேசுவின் வாழ்க்கையிலிருந்து எளிதில் கற்றுக் கொள்ளலாம்.

இயேசு நாற்பது நாள் பாலை நிலத்தில் இருந்தபோது சாத்தான் சோதித்தான். 

பசிக்குதுன்னா இந்தக் கல்லை எல்லாம் அப்பமா மாத்தி சாப்பிடலாமே, நீங்க தான் கடவுளோட பையனாச்சேஎன்றான் அவன். 

மனுஷன் வாழ்றது வெறும் சாப்பாட்டுல இல்லை, கடவுளோட வார்த்தைலஎன்றார் இயேசு. சாத்தான் விடல. ஓஹோ, பைபிள் வசனம் சொல்றீங்களா ? அப்போ நானும் அந்த வழியிலயே வரேன் என மனதுக்குள் சொல்லிக் கொண்டது.

இயேசுவை அப்படியே கோயிலின் உச்சிக்கு கூட்டிட்டு போய், “இங்கேயிருந்து கீழே குதிங்க. தூதர்கள் உங்களைத் தாங்கிக் கொள்வாங்க.. இதை நான் சொல்லல, பைபிள் தான் சொல்லுதுஎன்றான். 

இயேசு சிரித்தார். “உன் கடவுளை சோதிக்காதேந்னு கூட தான் எழுதியிருக்கு தெரியாதா ? என்றார். 

சரி, சரி, பரவாயில்லை, என்னை விழுந்து வணங்கு. நான் எல்லாம் உனக்கு தரேன் என ஆசை காட்டினான் சாத்தான்.

இயேசுவோ, “அப்பாலோ போ சாத்தானே.. கடவுளை மட்டுமே வணங்குஎன்று மறை நூல் சொல்கிறது என்றார். சாத்தான் ஓடியே போயிட்டான். 

இயேசு சாத்தானுக்கு எதிர்த்து நின்றார். 

சாத்தான் வியர்த்து ஓடினான்.

நாமும் சாத்தானுக்கு எதிர்த்து நிற்க வேண்டும் ! எப்படி ?

கடவுளின் வார்த்தை நமக்கு வழிகாட்ட வேண்டும். அப்போது சாத்தானின் வழிகளில் நாம் நடக்க வேண்டியிருக்காது !

சோதனைகள் வரும்போது பரிசுத்த ஆவியைப் பிடித்துக் கொள்ள வேண்டும், அப்போது தீய ஆவி நம்மைப் பிடித்துக் கொள்ளாது !

படித்தால் வருவது அறிவு, இயேசுவைப் பிடித்தால் வருவது ஞானம். ஞானம் உள்ள மனிதனை சாத்தான் நெருங்க மாட்டான். 

தாழ்மையான இதயம் தேவனின் உறைவிடம். மேன்மையான இதயம் சாத்தானின் கூடாரம். தாழ்மையாய் இருக்கும் வரை தேவனோடு இருக்கலாம். சாத்தான் நெருங்க மாட்டான்

உலக செல்வங்கள் மீது ஆசை கொண்டால் சாத்தான் வந்து தோள் கொடுப்பான், விண்ணக செல்வங்கள் மீது நாட்டம் கொண்டால் சாத்தான் ஒதுங்கி நிற்பான்.

தொடர்ந்து செபம் செய்து கொண்டே இருந்தால் சாத்தான் விலகி நிற்பான், செபத்தை விட்டு விட்டால் சத்தம் போடாமல் நம்முடன் கலந்து விடுவான்.

நான் பலவான் என நினைக்கும் போது சாத்தான் நெருங்கி வருவான், நான் பலவீனன் என உணரும் போது கடவுள் நெருங்கி வருவார்.

இப்படித் தான் நாம் சாத்தானை எதிர்க்க வேண்டும். 

போருக்கு செல்லும் போது கவசமும் வாளும் இல்லாமல் போனால் மடிந்து விடுவோம்.

சாத்தானை எதிர்க்கும் போது இறை வார்த்தைகள் இல்லையேல் உடைந்து விடுவோம்.

மீன் பிடிக்க போகும் போது தூண்டிலில் ஒரு சின்ன புழுவைக் குத்தி அதை ஆற்றில் போடுவோம். மீன் அந்த புழுவை தின்ன வரும் போது தூண்டிலில் மாட்டிக் கொள்ளும். சாப்பாட்டுக்கு ஆசைப்பட்ட அந்த மீன் நமக்கு சாப்பாடாய் மாறிப் போகும்.  

சாத்தானுடைய ஆசைகளுக்கு இணங்கி நாம் செல்லும் போது அவனுடைய தூண்டிலில் சிக்கிக் கொள்கிறோம்! உலக ஆசை எனும் புழுவுக்கு ஆசைப்பட்டால், விண்ணக வாழ்க்கை எனும் அழிவற்ற வாழ்வை இழப்போம்.

சாத்தானுக்கு எதிர்த்து நிற்பது என்பது அவனுடைய சூழ்ச்சிகள் அனைத்துக்கும் எதிர்த்து நிற்பது தான்.

சாத்தான் நமது முன்னால் சகல வல்லமையுடைய கோலியாத் போல நிற்பான். நம்மிடம் கடவுள் இருந்தால் கவண் கல் போதும் அவனை வீழ்த்த ! 

எவ்வளவு தான் பெரிய சிம்சோனைப் போல இருந்தாலும் சாத்தானின் வலையில் விழுந்தால் பாதாளத்தில் அடைபட வேண்டியது தான் ! எவ்வளவு சின்னவனாக இருந்தாலும் கடவுளின் கரத்தில் இருந்தால் தாவீதைப் போல சிம்மாசனத்தில் அமரலாம்.

சாத்தான் நம்மிடம் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டிக் காட்டி நம்மை வீழ்த்தப் பார்ப்பான். நாம் தொடர்ந்து கடவுளோடு இருந்தால் அவனை எதிர்க்கலாம்.

வில்லியம் கேரி மிகப்பெரிய ஊழியர். அவருடைய ஊழிய காலத்தின் முதல் ஏழு ஆண்டுகள் அவரால் யாரையும் கடவுளிடம் கொண்டு வர முடியவில்லை. அந்த காலத்தில் சாத்தான் அவரை கடுமையாய் சோதித்தான். உன்னால் எதுவும் முடியாது என்றான். நீ ஒரு உதவாக்கரை என்றான். இதையெல்லாம் விட்டு விடு என்றான். அவர் சாத்தானின் வார்த்தையைக் கேட்கவில்லை. கடவுளின் வார்த்தையைக் கேட்டார். மிகப்பெரிய ஊழியக்காரராக மாறினார்.

நாமும், சாத்தானுக்கு எதிர்த்து நின்றால் அவன் நம்மை விட்டு ஓடிப் போவான்.

அதற்கான ஆயத்தத்தோடு நாம் நிற்க வேண்டும்.

பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து குதிப்பதும்

இயேசு இல்லாமல் சாத்தானோடு மோதுவதும் சாவுக்கு சமம்.

எனவே, இயேசுவை அணிந்து கொள்வோம். அப்போது சாத்தானை எதிர்க்கும் வல்லமை கிடைக்கும். சாத்தான் நம்மை விட்டு விலகிப் போவான்.

என்று கூறி விடைபெறுகிறேன்

நன்றி

வணக்கம்

Posted in Articles, கிறிஸ்தவ இலக்கியம், Christianity, Sunday School

தெய்வீகத் தலையீடு

( ஒரு சிஸ்டர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கிறார், அப்போது இன்னொரு சிஸ்டர் அங்கே வருகிறார் )

Image result for nuns and kids

சிஸ்டர் 2 : என்ன சிஸ்டர்.. கூப்பிட்டீங்களா ?

சிஸ்டர் 1 : ஆமா சிஸ்டர்..  நேத்து நைட் ஆரம்பிச்ச மழை இன்னும் நிக்கல. ஊர் ஃபுல்லா தண்ணி.

சிஸ்டர் 2 : ஆமா சிஸ்டர், வெளியே போகவே முடியாத அளவுக்கு தண்ணி.

சிஸ்டர் 1 :  நம்ம குழந்தைகளுக்கெல்லாம் சாப்பாடு கொடுத்தாச்சா ?

சிஸ்டர் 2 : காலை சாப்பாடுக்கு உப்புமா குடுத்தோம் சிஸ்டர்.

சிஸ்டர் 1 : எல்லாருக்கும் போதுமானதா இருந்துச்சா ?

சிஸ்டர் 2 : ஆமா சிஸ்டர், நம்ம சிறுவர் காப்பகத்துல உள்ள 60 பிள்ளைகளும், அவங்களை கவனிச்சுக்கிற ஆயாக்களும், எல்லாரும் சாப்பிட்டாச்சு. ஆனா,,,

சிஸ்டர் 1 : நீங்க சொல்ல வரது புரியுது.. மத்தியானம் சாப்பாட்டுக்கு எதுவுமே இல்லை அப்படி தானே.

சிஸ்டர் 2 : ஆமா சிஸ்டர், என்ன பண்றது.

சிஸ்டர் 1 : நாம என்ன பண்ண முடியும் ? கடவுள் தான் நமக்கு வழி காட்டணும்.

( அப்போது இரண்டு ஆயாக்கள் அங்கே வருகிறார் )

ஆயா1 : சிஸ்டர், சிஸ்டர்

சிஸ்டர் 1 : சொல்லுங்க ஆயம்மா என்ன விஷயம் ?

ஆயா 1 : சிஸ்டர் பிள்ளைங்க பசிக்குதுன்னு சொல்றாங்க, லஞ்ச் டைம் ஆயிடுச்சு என்ன பண்றதுன்னே தெரியல.

சிஸ்டர் 1 : ஓ. . அதுக்குள்ள லஞ்ச் டைம் ஆயிடுச்சா ?

ஆயா 2 : ஆமா சிஸ்டர், சாப்பாடு இருந்தாலும் இல்லேன்னாலும் பசி மட்டும் கரெக்ட் டைமுக்கு வந்துடும் இல்லையா ?

சிஸ்டர் 1 : லஞ்ச் இல்லேன்னு கவலையா இருக்கும்போ பஞ்ச் அடிக்கிறீங்களே ஆயாம்மா.. இது நியாயமா ?

ஆயா 2 : இல்ல சிஸ்டர் .. சாரி

சிஸ்டர் 1 : சும்மா தான் சொன்னேன். நீங்க ஏன் கவலைப்படறீங்க. கடவுள் நமக்குத் தேவையானதை கொடுப்பாரு

ஆயா1 : மழை இல்லேன்னா கூட பரவாயில்லை சிஸ்டர்.. மழையா வேற இருக்கு.. எப்படி போய், எங்க போய் சாப்பாடு கேக்கறது ?

சிஸ்டர் 1 : விசுவாசம் இருந்தா மலையே பெயர்ந்து போகும், மழை போகாதா ? கவலையை விடுங்க. பிரேயர் பண்ணுங்க.

சிஸ்டர் 2 : கரெக்ட் சிஸ்டர். .  .   . ஆயாம்மா, பாலைவனத்துலயே மக்களுக்கு மன்னா குடுத்த கடவுள் நம்ம பிள்ளைகளுக்கு பன் ஆவது தரமாட்டாரா ?

சிஸ்டர் 1 : கரெக்ட்.. இது அவரோட பிள்ளைங்க.. கவலைப்படாதீங்க. எல்லா பிள்ளைகளையும் வரிசையா உக்கார வெச்சு, கையில பாத்திரத்தைக்  குடுங்க. செபம் பண்ண சொல்லுங்க. மத்ததை கடவுள் பாத்துப்பாரு.

( அப்போது ஒரு சிஸ்டர் ஓடி வருகிறார். )

சிஸ்டர் 3 : சிஸ்டர் சிஸ்டர்.. ஒரு பேட் நியூஸ்

சிஸ்டர் 1 : என்னாச்சு

சிஸ்டர் 3 : நம்ம கிச்சனோட கூரை மழையில இடிஞ்சு விழுந்துச்சு.. நம்ம விறகு எல்லாமே தண்ணிக்குள்ள மிதக்குது.

சிஸ்டர் 1 :    ஓ.. இப்போ என்ன பண்றது

சிஸ்டர் 3 : மழை நின்னா தான் ஏதாச்சும் பண்ண முடியும். இப்போ அரிசி கிடைச்சா கூட சமைக்க முடியாத நிலை சிஸ்டர்.

சிஸ்டர் 1 :ம்ம்.. கடவுளோட சித்தம் எதுவோ அது நடக்கும்.

( ஆயாக்கள் இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசியபடி செல்கின்றனர். அப்போது காலிங் பெல் அடிக்கிறது )

( இரண்டு பேர் உள்ளே வருகின்றனர். நனைந்து இருக்கின்றனர். )

சிஸ்டர் 1 : வாங்க.. வாங்க.. நல்லா நனைஞ்சிருக்கீங்க.. ( பக்கத்திலிருந்த டவலை எடுத்து) இந்தா, தலையை துவட்டிக்கோங்க.

நபர் 1 : சாரி சிஸ்டர் ரொம்ப நனைஞ்சுட்டோம்.. மழையில்லையா அதான்..

நபர் 2 : சாரி.. முக்கியமான நேரத்துல இடஞ்சல் பண்ணிட்டோம்..

சிஸ்டர் 1 : அதெல்லாம் ஒண்ணுமில்லை.. இங்கே யார் வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் வரலாம்.

நபர் 1 : இல்லே லஞ்ச் டைம்ல வந்திருக்கோமே அதான்..

சிஸ்டர் 1 : சாரி, இந்த நேரத்துல உங்களுக்கு தர சாப்பாடு இல்லை.. டீ போட்டு தரலாம்ன்னு பாத்தா கிச்சன் தண்ணில கிடக்கு.

நபர் 1 : நோ..நோ.. நாங்க அதுக்காக வரலை… கொஞ்சம் சாப்பாடு கொண்டு வந்திருக்கோம்.

சிஸ்டர் 1 : ( சந்தோசமாக ) ஓ.. சாப்பாடு கொண்டு வந்திருக்கீங்களா ? கடவுளுக்கு நன்றி.

நபர் 2 : சாரி சிஸ்டர்.. சொல்லிட்டு வர முடியல. மழையினால நெட்வர்க் டவுண்.. போன் பண்ண முடியல.

சிஸ்டர் 2 : நோ பிராப்ளம்.. நோ பிராப்ளம்.. எ..எ..வ்..வளவு சாப்பாடு இருக்கும் ?

நபர் 1 : சிஸ்டர் நாஙக ஒரு ஃபங்ஷன் நடத்தினோம். நூறு பேருக்கு சாப்பாடு தயாராக்கியிருந்தோம். மழையானதால வெறும் முப்பது பேர் தான் வந்தாங்க. அதான் ஒரு எழுபது பேரோட சாப்பாடு இருக்கு.

சிஸ்டர் 2 : ஓ..ஜீசஸ் ! இது உம்மோட சித்தம் தான்.. உம்மோட சித்தமே தான்.

நபர் 1 : புரியலை சிஸ்டர். என்ன சொல்றீங்க. ஜீசசோட சித்தமா ?

சிஸ்டர் 1 : ஐயா.. எங்க காப்பகத்துல உள்ள 60 பிள்ளைகளும் பசியா இருக்காங்க.. காலி தட்டோட செபம் செஞ்சிட்டு இருக்காங்க. கடவுள் அவர்களுக்கு சாப்பாடு தரணும்ன்னு சொல்லி. மழையானதால எங்களால எங்கயும் போகவும் முடியல. அந்த நேரத்துல தான் நீங்க வந்தீங்க.. இது கடவுளோட செயல் இல்லாம வேறென்ன ?

நபர் 2 : ஓ அப்படியா சிஸ்டர் ! எனக்கு இயேசுவை தெரியாது. மழையானதால தான் சாப்பாடு மிச்சமாச்சு. மழையானதால தான் நான் பக்கத்துல இருந்த இந்த காப்பகத்துக்கு வந்தேன். கவலைப் படாதீங்க, இந்த மழை முழுசா தீர்ர வரைக்கும் இவங்களோட டெய்லி சாப்பாடு என்னோட பொறுப்பு !

சிஸ்டர் 1 : ரொம்ப நன்றி.. ரொம்ப நன்றி.. பிரைஸ் த லார்ட்.. வாங்க.. சீக்கிரம் போய் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுப்போம்.

பின்குரல் :

இது அன்னை தெரசாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைத் தழுவி எழுதப்பட்ட சிறிய நாடகம். தனது பிள்ளைகளுக்குத் தேவையானவற்றைத் தருவதற்காக இறைவன் மனிதர்களையும் பயன்படுத்துவார், மழையையும் பயன்படுத்துவார் ! சரியான நேரத்தில் தெய்வீகத் தலையீடு செய்வார். அவரை விசுவசிப்போம், அவரில் மட்டுமே வசிப்போம்.

Posted in Articles, Christianity, Sunday School

Skit : எசேக்கியேலுடன் ஒரு பொழுது

எசேக்கியேல் 4

 

Image result for ezekiel 4

 

காட்சி 1:

ந 1 : என்னடா ஒரே யோசனையா இருக்கே ?

ந 2 : இல்லடா… எசேக்கியேல் பற்றி யோசிச்சிட்டிருந்தேன்…

ந 1 : எசேக்கியேலா ? யாருடா ? நம்ம குரூப்ல அப்படி யாரும் இல்லையே

ந 3 : டேய்.. பைபிள்ல இருக்கிற எசேக்கியேல் பற்றி சொல்றான்னு நினைக்கிறேன்.

ந 2 : ஆமாடா.. அவரைப் பற்றி தான் சொல்றேன். த கிரேட் ப்ராஃபட்

ந 4 : அவரைப் பற்றி இப்போ எதுக்கு ரொம்ப யோசிச்சு குழம்பிட்டிருக்கே ?

ந 2 : இல்ல.. செல்லப்பா அங்கிள் எசேக்கியேல் பற்றி படிச்சிட்டு வர சொன்னாருல்ல.. அதான்… 

ந 5 : ஆமாடா.. நானும் போய் வாசிச்சு பாத்தேன். ஒண்ணும் புரியல. கதை மாதிரி இருந்தா தான் புரியும்… இது பாடபுக் மாதிரி கஷ்டமா இருக்கு.

ந 2 : அதான்டா நான் யோசிச்சிட்டு இருக்கேன்.. 

ந 6 : எசேக்கியேலைப் பற்றி தெரிஞ்சுக்க என்ன பண்ணலாம் ? உங்ககிட்ட ஏதாச்சும் ஸ்டோரி புக்ஸ் இருக்கா ? இல்ல ஏதாச்சும் அவரைப் பற்றிய வீடியோ கிடைக்குமா ?

ந 3 : அதெல்லாம் வேலைக்காவாது… அதெல்லாம் பைபிளை விட காம்பிகேட்டட் டா.. 

ந 7 : எசேக்கியேலைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கணும்ன்னா ஒரே ஒரு வழி தான் இருக்கு

ந 1 & 3.. : என்ன வழிடா ? சொல்லு சொல்லு

ந 7 : நாம எசேக்கியேலையே பாத்து கேக்கறது தான் !

ந 4 : அடப்போடா இவனே… இவன் நம்மள பார்சல் பண்ணி பரலோகம் அனுப்பிடுவான் போல. நேரா மேல எசேக்கியேலைப் பாத்துக்கோன்னு..

ந 7 : அதான் இல்ல… எங்க அப்பா ஒரு சயின்டிஸ்ட் ந்னு உங்களுக்கு தெரியும்ல…

ந 5 : தெரியாதே…

ந 7 : ..ஆ.. அது.. இனிமே தெரிய வந்துடும்.

ந 5 : சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

ந 7 : சொல்றேன் கவனமா கேளுங்க. அவரு ஒரு டைம் மெஷின் கண்டு பிடிச்சிருக்காரு. 

ந 6 : அதை வெச்சு பழைய காலத்துக்கு போய் கம்மி விலையில பெட்ரோல் வாங்கிட்டு வராரா ?

ந 7 : கடிக்காதே…. நாம அந்த டைம் மெஷின்ல ஏறி எசேக்கியேல் காலத்துக்கு போனா … 

ந 3 : அப்படியே எசேக்கியேல் கிட்டயே டீட்டெயில்ஸ் கேக்கலாங்கறியா…

ந 7 : யெஸ்.. எஸ்… ரெடியா ?

ந 1 : எனக்கென்னவோ பயமா இருக்கு… 

ந 7 : ஹேய்.. பயப்படாம வாங்க.. ஒரு டிரை.. இல்லேன்னா திரும்பி வந்துடலாம்.

ந 1 : திரும்பி வர முடியாட்டா ?

ந 7 : பாசிடிவ்… ஆ திங்க் பண்ணுங்க… போலாம்.. யாருக்கெல்லாம் பயம் இல்லையோ.. அவங்க எல்லாம் வாங்க. மத்தவங்க வீட்டுக்கு போய் நாலு டோக்கன் படிங்க.

எல்லோரும் : இல்ல.. நாங்க எல்லாம் வரோம்.

ந 7 : ம்ம்.. டோக்கன் படிக்க சொன்ன மட்டும் எஸ்கேப் ஆயிடுவீங்களே.. சரி வாங்க வாங்க…

*

காட்சி 2 :

ந 7 : நாம எசேக்கியேல் காலத்துக்கு வந்திருக்கோம். உங்க கையில இருக்கிற வாட்ச் ஒரு லேங்குவேஜ் வாய்ஸ் கன்வர்ட்டர். அதுல ஹீப்ரு ந்னு போட்டுக்கோங்க. ரிசீவிங்ல தமிழ் போட்டுக்கோங்க.

ந 3 : அது எதுக்கு ? 

ந 7 : அவங்க ஹீப்ரு ல பேசறது நமக்கு தமிழ்ல கேக்கும். நாம தமிழ்ல பேசறது அவங்களுக்கு ஹீப்ரு ல கேக்கும்.

ந 6 : ஓ.. அவங்க ஹீப்ரு தான் பேசுவாங்கல்ல.. மறந்துட்டேன்.

ந 2 : சரி.. சரி.. அங்கே ஒருத்தர் போறாரு.. அவர் கிட்டே கேப்போம். ஐயா..ஐயா மிஸ்டர் எசேக்கியேல் வீடு எங்க இருக்கு ?

( அவர் பேசாமல் போகிறார். இது ஆடியன்ஸைப் பார்த்து கேக்கறது. )

ந 3 : அதோ தூரத்துல ஒருத்தரு என்னமோ பண்ணிட்டிருக்காரு. அவர் கிட்டே போய் கேப்போம். வாங்க.

( அங்கே எசேக்கியேல் உட்கார்ந்து ஒரு செங்கல்லின் மேல் என்னவோ வரைந்து கொண்டிருக்கிறார் )

ந 3 : டேய்.. இவர்கிட்டே கேக்கணுமா ? பாரு இவ்ளோ வயசாச்சு.. செங்கல்ல கிறுக்கி விளையாடிட்டிருக்காரு..

ந 4 : ஆமா.. இது சரியாப் படலையே… ம்ம்ம்ம் வயசான குழந்தையோ ? 

ந 5 : பரவாயில்ல.. எப்படியோ இருக்கட்டும். அவர் கிட்டே கேட்டுப் பாப்போம். இங்க வேற யாரும் கண்ணுக்கு தட்டுப்படல.

ந 2 : ஐயா.. ஐயா

எசே : ( நிமிர்ந்து பார்க்கிறார் ) ( யாரு நீங்க என்ன வேணும் ?  என சைகையால் கேட்கிறார். )

ந 4 : ( நண்பர்களிடம் ) ஹேய்.. இதைப் பாரு… இவரு செங்கல்மேல எருசலேமோட மேப்பை வரைஞ்சிட்டிருக்காரு.

ந 3 : சோ..வாட்…

ந 4 : சோ வாட்டா ? எசேக்கியேல் நாலாம் அதிகாரத்தை யோசிச்சு பாரு..

ந 3 : அட.. ஆமா.. அப்போ இவரு தான்…

எசேக்கியேல் : ( குழப்பமாக ) சைகையால் – என்ன ? நீங்கல்லாம் யாரு ? என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும் ? 

ந 2 : ஐயா.. நீங்க தான் எசேக்கியேலா ? 

எசே : (சைகை) ஆமா…  நீங்க யாரு..  

ந 3 : ஐயா.. நாங்க ரொம்ப தூரத்துலேருந்து வரோம்.. உங்களைப் பாக்க தான் வந்தோம்.

எசே : என்னைப் பாக்கவா ? நீங்க மன்னனோட ஒற்றர்களா ? இல்லை எதிரிகளோட வீரர்களா ?

ந 1 : ( நண்பரிடம் ) ஏண்டா.. இவரு பேசமாட்டாரா ? பெரிய இறைவாக்கினர்ன்னு சொன்னாங்க..

ந 4 : எனக்கு இப்போ தான் ஞாபகத்துக்கு வருது… 

ந 1 : என்னது ? வீட்ல ஏதாச்சும் மறந்து வெச்சுட்டு வந்துட்டியா ?

ந 4 : அதில்லடா…. எசேக்கியேல் 3ம் அதிகாரத்துல கடைசில ஒரு வசனம் வரும். “நான் உன் நாவை உன் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளச் செய்வேன். நீயும் ஊமையாகி, அவர்களைக் கடிந்துகொள்ள முடியாதவன் ஆகிவிடுவாய்” ந்னு கடவுள் எசேக்கியேல் கிட்டே சொல்வாரு.

ந 1 : ஓ.. ஓ.. அதான் விஷயமா ? 

ந 2 : ( சைகையில் ) ஐயா… நாங்க வீரர்கள் இல்ல…

ந 4 : டேய் அவரால பேச மட்டும் தாண்டா முடியாது.. காதெல்லாம் நல்லா கேக்கும்.. நீ பேசு.

ந 2 : ஓ.. ஐயா… எங்களை பாத்தா வீரர்களாவா தெரியுது ? நாங்க வீரர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. உங்களைப் பாக்க சென்னைல இருந்து வந்த சாதாரண அப்பாவிங்க. 

எசே : ( ஒரே குழப்பமாய்…. ) என்னென்னமோ சொல்றீங்க ஒண்ணூம் புரியல.. உக்காருங்க.

ந 1 : செல்லப்பா அங்கிள் தான்… ( சொல்லி நிறுத்துகிறான் ) சரி.. அதை விடுங்க.. அவரை உங்களுக்கு தெரியாது. உங்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்.

எசே : (சைகை ) மன்னிக்கணும். நான் ரொம்ப முக்கியமான ஒரு வேலையா இருக்கேன். இப்போதைக்கு நேரம் இல்லை.

ந 5 : ம்ம்ம்.. முக்கியமான வேலைய இருக்கீங்க… பேசறதுக்கு நேரம் இல்ல.. அப்படி தானே…. தெரியுமே….. 

செங்கல் மேல எருசலேம் படம் வரைய கடவுள் சொன்னாரு அப்படி தானே 

எசே : (அதிர்ச்சியாய்)  (சைகை )  ஆமா.. அதெப்படி உங்களுக்கு தெரியும் ?

ந 4 : அப்புறம் அதைச் சுற்றி நீங்க முற்றுகையிடுறது மாதிரி கொத்தளங்கள் கட்டணும். ஒரு மணல் மேடு வைக்கணும்.

ந 5 : அதுக்கு எதிரே போர்ப்பாசறை கட்டணும். அரண் சுவர் பொறி வைக்கணும். 

ந 3 : அப்புறம் ஒரு இரும்பு தகடு ஒண்ணை எடுத்து சுவர் மாதிரி உங்களுக்கும் அதுக்கும் இடையே வைக்கணும். 

எசே : ( சைகை ) அட.. ஆமா.. உங்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும் ? அப்போ நீங்க கடவுளோட தூதர்கள் தான். ( பணிகிறார் ) 

ந 4 : இல்லை.. இல்லை.. இதெல்லாம் நீங்க எழுதின புக்ல படிச்சு தெரிஞ்சுகிட்டோம்.

எசே : (சைகை ) புக்கா.. நான் புக் ஏதும் எழுதலையே

ந 2 : இது வரை எழுதல… ஆனா ஆனா இனிமே எழுதுவீங்க.

எசே : ( தலையில் அடித்துக் கொள்கிறார் ) என்ன உளறறீங்க ? என்னை டிஸ்டர்ப் பண்ணாம போயிடுங்க. இது காட்ஸ் வர்க்.

ந 3 : ஐயா.. மன்னியுங்க… நாங்க உளறல… இது கடவுளோட வேலைன்னு தெரியும்… இதையெல்லாம் 

இதெல்லாம் ஏன் பண்றீங்க ? இதுக்கு என்ன அர்த்தம். அதை தெரிஞ்சுக்க தான் நாங்க வந்திருக்கோம்.

எசே : ( சைகையில் ) இப்படி பண்ணினா இஸ்ரேல் நகரை நான் முற்றுகையிடுவதாய் அடையாளம். 

ந 3 : ஓ… இப்படி பண்ணினா நகரை நான் முற்றுகையிடுவதாய் அடையாளம். எந்த நகர் ? இஸ்ரேலா ?

எசே : ஆமா ( மகிழ்ச்சியாய் )

எசே : (சைகை ) அப்புறம் நான் இடப்பக்கம் பாத்து படுக்கணும். 

ந 4 : ஓ.. இடப்பக்கமா திரும்பி படுக்கணுமா ? ஏன் ? 

எசே : (சைகை ) மக்களோட 

ந4 : மக்களோட…

எசே ( சைகை ) பாவத்தை…

ந 4 : புரியலையே… கடவுளுக்கு விரோதமானதா..

எசே ( சைகை ) ஆமாமா… பாவம்..

ந 4 : ஓ.. பாவத்தை…  மக்களோட பாவத்தை சுமக்கணுமா… ஓக்கே ஓக்கே 

ந 4 : ஓ..பாவத்தை சுமக்கறது அவ்வளவு சிம்ப்ளா இருக்கே ? இடப்பக்கமா படுத்தா பாவத்தை சுமக்கிறதா அர்த்தமா ?

எசே : ( சைகை ) விளையாடறீங்களா ? 390 ( சைகை செய்கிறார் )

ந 4 : 390 என்னது ? 

எசே : (சைகை ) நாள்…. ( இன்னிக்கு நாளைக்கு … அப்படி சைகை ) 

ந 4 : ஓ.. எஸ்… 390 டேஸ்… இடப்பக்கமா படுக்கணும்…. மக்களோட ஒரு வருஷ பாவத்துக்கு ஒரு நாளுன்னு கணக்கு சரி தானே… 

எசே : ஆமா…ஆமா.. ( சைகை )  

ந 5 : ஐயோ.. இது ரொம்ப கஷ்டமாச்சே.. அடிக்கடி கைகாலை அசைச்சுக்கோங்க.. இல்லேன்னா ஒரு பக்கமா மரத்துப் போயிடும்.

எசே : ( சைகை ) அதுவும் முடியாது. நான் அசையாதபடி கடவுள் என்னை கட்டி போட்டுடுவாரு. 

ந 1: ஓ.. கடவுள் உங்களை கட்டி போடுவாரா…  

எசே : ஆமா… ( சைகை )  

ந 1 : அப்புறம் நீங்க யூதாவோட பாவத்தை வேற சுமக்கணும்ல…. ஏதோ படிச்ச ஞாபகம்..

எசே : ( ஆமா…ஆமா )

ந 1 : அடக்கடவுளே..அது ஒரு 390 நாளா ?

எசே : (சைகை )  இல்லை.. அது நாப்பது நாட்கள்தான். 

ந 1 : ஓ.. நாலு நாள் தானா

எசே : நோ.. நோ … 40 நாள்…

ந 1 : ம்ம்ம்ம்.. நல்ல வேளை கடவுள் ஒரு ஆண்டுக்கு ஒரு நாள் தான் தந்திருக்காரு. ஒருவருஷத்துக்கு ஒரு மாசமோ, ஒரு வாரமோ தந்திருந்தா உங்க நிலமை என்ன ஆயிருக்கும் ?

எசே : (சைகை) ஆமா.. ஆமா…

ந 2 : ஆமா.. உண்மை தான். இருந்தாலும் நீங்க இந்த மக்களுக்காக இவ்வளவு பாடுபட‌றீங்களே ?

ந 5 : இறைவாக்கினர்கள் இதை பாடுன்னு நினைக்கிறதில்லை….  . இறைவன் தான் மக்கள் பாவம் செய்யும் போ பாடு படறார். பாவம் செய்யாத மக்களினம் வேணும்ன்னு தான் அவர் ஏங்கறார்.  

ந 4 : உண்மை தான்… ( எசேக்கியேல் பக்கம் திரும்பி ) சரிங்கய்யா… அதோட  முடிஞ்சுடுமா ?

எசே : (சைகை ) அப்புறம் நான் திறந்த புயத்தோடு எருசலேமுக்கு எதிரா இறைவாக்குரைக்கணும். 

ந 3 : இறைவாக்கு உரைக்கணுமா ?

எசே : (சைகை ) எதிரா… திறந்த புயம்…

ந 3 : ஓ திறந்த புயத்தோடு …. இஸ்ரேலுக்கு எதிரா இறைவாக்குரைக்கணும்… சரியா ?  ம்ம்ம்.. அது தான் உங்களுக்கு நல்ல பழக்கமான வேலையாச்சே. இறைவாக்கு உரைக்கிறது. 

ந 1 : நாங்க போய் சாப்பிட ஏதாச்சும் கொண்டு வரட்டுமா ? உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்

எசே : நான் அப்படியெல்லாம் சாப்பிடவும் முடியாது  (சைகை )

ந 2 : ஏங்க உடம்பு சரியில்லையா ?

எசே : (சைகை ) அப்படியில்லை. என்ன சாப்பிடணும்ன்னு கடவுள் சொல்லியிருக்கார். அதைத் தான் சாப்பிடணும்.

ந 3 : ஓ… என்ன சாப்பிடணுன்னு கடவுள் சொல்லியிருக்காரா…. ?  

ந 4  : எஸ் எஸ்.. அது எனக்கு தெரியும். ….. கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, தினை, சாமை இதெல்லாம் வெச்சு அப்பம் சுட்டு தான் சாப்பிடணும். 390 நாளும். அதுவும் ஒரு நாள் இருபது செக்கேல் அளவு தான் சாப்பிடணும்.  சரியா…. 

எசே : ஆமா.. ஆமா (சைகை ) 

ந 2 : அப்பம்ன்னு சொன்னதும் இயேசு ஐஞ்சு அப்பத்தைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு சாப்பாடு கொடுத்தது தான் ஞாபகத்துக்கு வருது.

எசே : ( சைகை ) அது யாரு இயேசு ? அதென்ன அஞ்சு அப்பம் ஐயாயிரம் பேரு ?  

ந 5 : அதெல்லாம் இப்போ சொன்னாலும் உங்களுக்கு புரியாதுங்கய்யா… நிறைய தண்ணியாச்சும் குடிங்க.. இல்லேன்னா டிஹைட்ரேட் ஆயிடும். சூடாயிருக்குல்ல…

ந 4  : தண்ணியும் ஒரு கலயம் தண்ணில ஆறுல ஒரு பாகம் தான் குடிக்கணும். அதுவும். அதுவும் குறிப்பிட்ட நேரத்துல தான் குடிக்கணும்.. கரக்டா ?

எசே : ஆமா.. ஆமா…. 

ந 1 : ஐயோ பாவம்.. உங்களை நினைச்சா கஷ்டமாவும் இருக்கு..  பெருமையாவும் இருக்கு. கடவுளோட மனிதர்களோட அர்ப்பண உணர்வு ஆச்சரியமா இருக்கு.

ந 2 : நாம போய் கொஞ்சம் விறகாச்சும் கொண்டு கொடுப்போம். அந்த ஹெல்ப் ஆவது பண்ணுவோம்.

எசே : ( சைகை ) நோ..நோ… விறகா ? அதெல்லாம் கடவுள் அனுமதிக்கல. மாட்டுச் சாணத்துல வறட்டி செஞ்சு அதை எரிச்சு, அதுல தான் அப்பம் சுடணும்.

ந 3 : புரியலையே… 

ந 4 : நான் சொல்றேன்.. நான் சொல்றேன்…. கடவுள் மாட்டுச் சாணில வறட்டி செஞ்சு அதை விறகா மாற்றி அப்பம் சுட சொல்லியிருக்காரு… 

ந 3 : ஐயையோ.. மாட்டுச் சாணியிலயா

ந 4  : யப்பா…. முதல்ல மனுஷ சாணில தான் வறட்டி பண்ணி, நெருப்பு மூட்ட சொன்னாரு. அப்புறம், நான் தீட்டான எதையும் சாப்பிட்டதில்லைன்னு கடவுள் கிட்டே இவர் மன்றாடினார். அப்புறம் தான் மாட்டுச்சாணியை கடவுள்.. அனுமதிச்சாரு.

ந 4 : கடவுள் உண்மையிலேயே ரொம்ப ஸ்ட்றிக்ட் ஆ தான் இருந்திருக்காரு… ( எசேக்கியேலிடம் ) உண்மையிலேயே உங்களுடைய அர்ப்பணிப்பும், உங்களுடைய கீழ்ப்படிதலும் ரொம்பவே சிலிர்ப்பா இருக்கு எங்களுக்கு.

நா 3 : ஆனாலும் சாப்பிடறதுல கூட ஏன் கடவுள் இவ்ளோ கணக்கு பாக்கறாரு ?

ந 1  : கடவுள் செய்ற ஒவ்வொரு விஷயத்துலயும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். எருசலேமில உணவுப் பஞ்சம் வரும். மக்கள் சாப்பாடை அளந்து அளந்து சாப்பிடுவாங்க‌. தண்ணி பஞ்சமும் வரும், மக்கள் பயந்து பயந்து கொஞ்சம் கொஞ்சமா குடிப்பாங்க. அதை தான் கடவுள் குறிப்பா உணர்த்தறாரு

எசே : ஆமா.. ஆமா…

ந 3 : ரொம்ப மகிழ்ச்சி ஐயா… எவ்வளவு தான் பைபிள்ள படிச்சாலும் புரியாத விஷயங்களையெல்லாம் நேரடியா வந்து பேசும்போ வியப்பாவும் இருக்கு, ரொம்ப புரியவும் செய்யுது. 

எசே : பைபிளா ? அப்படின்னா ? ( சைகை ) 

ந 1 : அதைப்பற்றி பேச ஆரம்பிச்சா பேசிகிட்டே இருக்கலாம். ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். இந்த உலகம் அழியும் காலம் வரைக்கும் உங்க பெயரும் நிலைக்கும். நாங்க கிளம்பறோம்.

எசே : கிளம்பறீங்களா ? எங்கே ? (சைகை )

ந 1 : எங்க காலத்துக்கு, கிபி 2018

எசே : உங்க காலமா ? கிபி ந்னா என்ன ? (சைகை ) 

ந 3 : எங்க காலம்.. கிபி.. இதெல்லாம் உங்களுக்கு புரியாது…. அதை இன்னொரு தடவை வந்து விளக்கமா சொல்றோம்.. இப்போ டைம் இல்லைங்கய்யா.. பாப்போமா .. பை பை.

*