Posted in Articles, Bible Books

பைபிள் கூறும் வரலாறு – 4 – லேவியர்

லேவியர்

Image result for Leviticus

லேவி எனும் குலத்தினர் இறைவனின் ஆலயப் பணிகளைச் செய்பவர்கள். இந்த நூல் பெரும்பாலும் இறைவனின் சட்டதிட்டங்களையும், இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ என்னென்ன செய்யவேண்டும் என்பதையும் விளக்குகிறது. இது லேவியர்களுக்கு மட்டுமானதல்ல, ஆனாலும் லேவியர் பணி சார்ந்த விஷயங்களைப் பேசுவதால் இது லேவியர் ஆகமம் என அழைக்கப்படுகிறது.

எபிரேயத்தில் இந்த நூல் வாயிக்ரா என அழைக்கப்பட்டது. அதற்கு ‘அவர் அழைத்தார்’என்பது பொருள். இந்த நூல்களை கிரேக்கத்தில் மொழிபெயர்த்த எழுபதின்மர் குழு இதற்கு ‘லேவியர் தொடர்பானது’ எனும் பொருளுடைய பெயரை வைத்தனர். 

அன்றைய இஸ்ரயேல் மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது போன்ற சட்டங்களால் இந்த நூல் நிரம்பியிருக்கிறது. இந்த நூல் யூதர்களால் தவறாமல் படிக்கப்படும் ஒரு நூல். யூதக் குழந்தைகள் சிறுவயதிலேயே இந்த நூலைப் படித்தாகவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். 

இந்த நூலை எழுதியவரும் மோசே தான். இறைவனை விட்டு மக்கள் விலகிச் செல்லக் கூடாது என்பதற்காக இதிலுள்ள சட்டங்கள் எழுதப்பட்டன. கிமு 1446என்பது இதன் தோராய காலம் என கணிக்கப்படுகிறது.  

இந்த நூலில் ஐம்பது முறைக்கு மேல் வருகின்ற “ஆண்டவர் மோசேயிடம் கூறியது” எனும் வாசகம்  இவை கடவுளின் கட்டளைகள் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. அதை மக்கள்தங்கள் மனங்களில் ஆழமாய் எழுதிக் கொள்ள வேண்டும் எனும் மோசேயின் எச்சரிக்கைஉணர்வையும் இவை பிரதிபலிக்கின்றன. 

கடவுளுக்கு என்னென்ன பலிகள் செலுத்தவேண்டும், எப்போது செலுத்தவேண்டும், யார்செலுத்த வேண்டும், பலிப் பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என இந்த நூலில் பலிகள்குறித்து மிக விரிவான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முந்தைய நூலானவிடுதலைப் பயணத்தில், பலி பீடம் எப்படி இருக்க வேண்டும் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலில், அந்த பலிபீடத்தில் செலுத்தப்பட வேண்டிய பலிகள் எப்படி இருக்க வேண்டும்என்பது விளக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் உடல்சார்ந்த தூய்மையை அதிகம் பேசுகிறது. உதாரணமாக இறந்த உடலை ஒருவர் தொட்டால் அவர் தீட்டுப்பட்டவர். அவர் எப்படி தன்னை தூய்மைப்படுத்த வேண்டும்போன்ற விஷயங்களெல்லாம் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் ஓய்வு நாள்பற்றிய சட்டங்கள், ஓய்வு ஆண்டைப் பற்றிய சட்டங்கள் போன்றவையும் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. எப்படிச் சாப்பிடவேண்டும், பாலியல் தூய்மையைக் காத்துக்கொள்வது எப்படி, என்பது தொடங்கி  எப்படி கழிவுகளை வெளியேற்றுவது என்பதுவரையிலான நுணுக்கமான சட்டங்கள் இந்த நூலை செறிவாக்குகின்றன. 

ஏழு எனும் எண்ணிக்கை முழுமையைக் குறிக்கிறது . ஏழாவது நாள் ஓய்வு நாள், ஏழாவது ஆண்டு ஓய்வு ஆண்டு, பாஸ்கா விழா ஏழு நாள் கொண்டாடப்படும் என தொடங்கி ஏராளமான ‘ஏழு’ களை இந்த நூலில் காணலாம். 

இரத்தம் எனும் குறியீடு இந்த நூலில் மிக அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. எரி பலிகள், தானிய பலிகள், சமாதான பலிகள், பாவ நிவாரண பலி, குற்ற நிவாரண பலி போன்ற பலிகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இறைவனின் அருகாமை அச்சம் தரக்கூடியது. அவரைத் தூய்மையுடன் மட்டுமே அணுகவேண்டும் எனும் சிந்தனை அழுத்தமாக விளக்கப்படுகிறது.

தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு மட்டுமே அன்றைய தினம் பாவ மன்னிப்பு வாய்ப்புகள்வழங்கப்பட்டன. தெரிந்தே செய்யும் பாவங்களுக்கு இறைவனின் தண்டனை நிச்சயம் எனும் போதனை நிலவியது.

இந்த நூலில் தான் விவிலிய விழாக்களான பாஸ்கா விழா, புளிப்பற்ற அப்பப் பண்டிகை,முதற்பலன் பண்டிகை, பெந்தேகோஸ்தே விழா, எக்காளப் பண்டிகை, பாவ நிவாரணப்பண்டிகை, கூடாரப் பண்டிகை ஆகியவை பற்றிய சட்ட திட்டங்களும், வரைமுறைகளும்விளக்கப்பட்டுள்ளன. 

இந்த நூலின் அடிப்படை சிந்தனை தூய்மை என்பதாகும் ! இறைவன் மக்களோடு வந்து தங்கும் போது மக்கள் எப்படி தங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எப்படிப்பட்ட பலிகளைச் செலுத்த வேண்டும். சக மனிதரோடு எப்படி வாழ வேண்டும்போன்ற விஷயங்களெல்லாம் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இயேசுவின்  இரண்டாம் வருகையின் போது நாம் அகத்தூய்மையாய்இருக்கவேண்டும் என்பதன் நிழலாக இந்த நிகழ்வுகளை எடுத்துக் கொள்ளலாம். பலிபொருட்கள் பழுதற்றவையாக இருக்க வேண்டும் என்பதும், இரத்த பலி பாவங்களுக்காகச் செலுத்தப்பட வேண்டும் என்பதும் நேரடியாக இயேசுவின் மீட்புச் செய்தியோடு நெருங்கிய தொடர்புடையவை. இயேசு பாவமற்ற பலியாக இரத்தம் சிந்தியதன் மறை உண்மையேஅது. 

எகிப்திலிருந்து இஸ்ரயேலர்கள் வெளியேறி வந்தது மீட்பு என்பதன் குறியீடு. அதன்பின் இறைவனின் சட்டங்களின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பது புனித வாழ்க்கையின் குறியீடு. இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்வதும், அதன்பின் அவர் சொன்ன புனித வாழ்க்கையை வாழ்வதும் எனும் இரட்டை ஆன்மீக நிலையை இது விளக்குகிறது. 

வாசிக்க சுவாரஸ்யமற்ற நூல் என்றாலும், புரிந்து கொள்ளவேண்டிய பல ஆன்மீகவிஷயங்களின் புதையலே இந்த நூல்.

Posted in Articles, பைபிள், Bible Poems, Psalm

திருப்பாடல்கள் தரும் பாடங்கள் – 1

Week 1

Image result for psalm 1

விவிலியம் ! கிறிஸ்தவத்தின் புனித நூல். இறைவனின் ஏவுதலால் மனிதர்களால் எழுதப்பட்ட நூல் இது. இந்த உலகம் தோன்றும் முன்பு துவங்கி, அழிவதற்குப் பின்பு வரையிலான நிகழ்வுகள் இந்த நூலில் உண்டு. 

ஆதிமனிதன் பாவத்தால் ஏதேனை விட்டு வெளியேறுகிறான், கடைசியில் மனிதன் மீட்பினால் இறைவனை அடைகிறான். ஆதியில் சாத்தான் ஏதேனுக்குள் நுழைகிறான். கடைசியில் இறைவனால் அவனும் அவன் தூதர்களும் அழிகின்றனர். 

மனிதன் இறைவனின் அருகாமையை விட்டு வெளியேறுகிறான் என்பதில் ஆதியாகமம் பயணிக்கிறது. அப்படி பாவத்தின் பிடியில் விழுந்த மனிதனை இறைவன் எப்படி வழிநடத்துகிறார், மீட்கிறார் என்பதில் பைபிள் நிறைவடைகிறது. 

பைபிள் என்பது, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, இணை திருமறைகள் எனும் மூன்று பிரிவுகளின் தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பிலும் பல நூல்கள் உண்டு. பழைய ஏற்பாட்டில் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டில் 27 நூல்களும், இணைதிருமறையில் 9 நூல்களும் உள்ளன. 

இந்த நூல்களில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று தான் திருப்பாடல்கள் ! கிறிஸ்தவர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் நூல்களில் ஒன்று திருப்பாடல்கள்.  “வாழ்த்துப் பாடல்களின் தொகுப்பு” என்று இந்த நூலை அழைக்கின்றனர். 

திருப்பாடல்கள் 150 பாடல்களின் தொகுப்பு ! பைபிளில் உள்ள நூல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் எழுதுவது தான் வழக்கம். அல்லது ஒருவர் சொல்லச் சொல்ல இன்னொருவர் எழுதுவதுண்டு. ஆனால் திருப்பாடல்களைப் பொறுத்தவரை பல எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

தாவீது மன்னர் இந்த சங்கீதங்களில் சுமார் 73 பாடல்களை எழுதியிருக்கிறார். எனவே பொதுவாக இதை தாவீது மன்னனின் சங்கீதங்கள் என அழைப்பதுண்டு. இவற்றைத் தவிர மோசே ஒரு பாடலையும், ஆஸாப் பன்னிரண்டு பாடல்களையும், கோராவின் மகன்கள் 10 பாடல்களையும், ஹெர்மான் ஒரு பாடலையும், எசேக்கியா பத்து பாடல்களையும், ஏதன் ஒரு பாடலையும், சாலமோன் இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளனர். மிச்சமுள்ள பாடல்களின் ஆசிரியர்கள் யார் என்பதில் மாற்றுக்கருத்துகள் உள்ளன. 

சுமார் ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு இது என்பது இந்த நூலுக்கு இன்னும் வலிமையும், அழகும் சேர்க்கிறது. கிமு பதினான்காம் நூற்றாண்டு முதல், கிமு நான்காம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த நூல்கள் எழுதப்படிருக்கின்றன. அதிகாரங்களைப் பொறுத்தவரையில் சங்கீதங்கள் தான் நீளமான நூல் ! வார்த்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் எரேமியா நூல் பெரியது என்கிறது புள்ளி விவரம்.

ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நூலில் பல்வேறு இறை சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. இறைவனை நோக்கி எழுப்பப்படுகின்ற விண்ணப்பங்களாகவும், இறைவனை நோக்கி முறையிடுகின்ற மன்றாட்டுகளாகவும், எதிரியைப் பழிவாங்குமாறு கடவுளிடம் வேண்டுவதாகவும், இறைவனைப் புகழ்ந்து பாடுவதாகவும், பிறருக்கு அறிவுரை சொல்வதாகவும், வரலாற்று பாடல்களாகவும், தீர்க்கத்தரிசனங்களாகவும் பல்வேறு முகம் காட்டுகின்றன திருப்பாடல்கள்.

பழைய ஏற்பாட்டு நூல்களின் ஒன்றான திருப்பாடல்களின் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. பழைய ஏற்பாட்டு நூல்களிலேயே அதிக முறை கோடிட்டுக் காட்டப்படும் நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவும் தனது போதனைகளில் திருப்பாடல்களை குறிப்பிடுவதால் இது சிறப்பிடம் பிடிக்கிறது.

திருப்பாடல்களின் வரலாறு இப்படி இருந்தாலும் இது இன்றைக்கும் ஆன்மீகத்தைச் செழுமைப்படுத்தும் நூலாக அமைவதால் இதன் முக்கியத்துவம் நீடிக்கிறது. இந்தப் பாடல்களிலுள்ள வசனங்கள் வழியாக இறைவன் நம்முடன் நேரடியாகப் பேசும் அனுபவம் கிடைக்கிறது. துயரத்தின் பிடியில் இருக்கிறோமா ? ஆனந்தத்தின் வழியில் நிற்கிறோமா ? பாவத்தின் பாதையில் நடக்கிறோமா ? எல்லா தருணங்களுக்கும் ஏற்ற பாடல்கள் இதில் உண்டு.

இது கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் யூதர்களும் பயன்படுத்தும் நூலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இனிமையாக, இசையோடு இணைந்து பாடுவதற்கு உகந்த பாடல்களாக அமைந்துள்ளன. வார்த்தைகளின் ஒலி அடிப்படையிலான பாடல்களாக இல்லாமல், கருத்துகளின் ஒருங்கிசைவு அடிப்படையிலான பாடல்களாய் இவை அமைந்துள்ளது இனிமையானது !

திருப்பாடல்கள் நமது வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறிவிட்டது. அதை மனதார விரும்பி ஏற்றுக்கொள்பவர்களுக்கு துயர் துடைக்கும் தோழனாக, வழிகாட்டும் ஆசானாக, புதியவை சொல்லும் ஆசிரியராக, வரம் தரும் இறைவனாக நம்மோடு பயணிக்கும். 

திருப்பாடல்கள் !

ஆன்மீகத்தின் தேடல்கள் !

வாழ்வின் பாடங்கள்

*

Posted in Articles, Vettimani

நாம் கடவுள்

Image result for youth and christianity

இறைவன் எனும் ஒற்றை மூலத்தின் வெளிச்சச் சிதறல்களே நாமெல்லாம். இதுவே ஆன்மீகத்தின் சிந்தனை. காய்ந்த விறகுகளில் பற்றியெரியும் நெருப்பை ஓங்கி அடித்தால் அவை நாலாபுறமும் சிதறும், சிதறிய இடங்களிலெல்லாம் அவை பற்றிப் படரும்.

காலைப் புல்வெளியில் தன் ஈரப் புன்னகையை இறக்கி வைத்திருக்கும் பனித்துளி புல்லின் அழகைப் பிரதிபலிக்கும். இயற்கையின் எழிலை வேறுபாடின்றி வெளிப்படுத்தும்.

நம்மை அழகாய்க் காட்டும் கண்ணாடிகளை, சுவரில் வீசி உடைத்தெறிந்தாலும் அவை ஒவ்வொரு துண்டிலும் நமது முகத்தை கவலையில்லாமல் எதிரொளிக்கும்.

எதுவும் தனது இயல்பின் தன்மையை உடைத்து விட்டு செயல்படுவதில்லை. ஒவ்வொரு ஈரத் துளியும் தனது மேகத்தின் மகிமையை புகழ்ந்து பாடிக்கொண்டே தான் மண்ணை முத்தமிடுகிறது.

மனிதனும் அப்படி இருக்க வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு. அவன் இறைவனின் பிம்பமாக இருக்கிறான். அவன் இறைவனின் துகளாக இருக்கிறான. அவன் இறைவனின் அகலாக இருக்கிறான். அவன் இறைவனின் நகலாக இருக்கிறான்.

இறைவனின் அகல், இறைவனின் ஒளியைப் பிரதிபலிக்க வேண்டும். இருளை வினியோகம் செய்யக் கூடாது. இறைவனின் பிம்பம், இறைவனை மட்டுமே காட்டவேண்டும். போலி முகங்களை பிரதிபலிக்கக் கூடாது.

நான் கடவுள் என்பதன் அடிப்படை சிந்தனை இது தான். நான் கடவுளின் பிள்ளை என்பதன் அடி நாதமும் இது தான். “அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கான்” என சொல்வதைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறோம். அப்பாவின் இயல்புகளை பிரதிபலிக்கும் பிள்ளைகளையும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறோம்.

அப்படியே இறைவனின் இயல்புகளையும், இறைவனின் குணாதிசயங்களையும் வெளிப்படுத்தும் போது நாம் இறைவனின் பிள்ளைகளாய் மாறுகிறோம்.

ஆன்மீகத்தின் நூல்களையும், தத்துவங்களின் சாராம்சத்தையும், வேதங்களின் பாடங்களையும் புரட்டிப் போட்டு பிரித்தெடுத்தால் இறைவனின் குணாதிசயங்கள் ஒரே தன்மையுடையவையாய் இருப்பதைக் காணமுடியும். ஒரே புள்ளியிலிருந்து உலகம் தோன்றியது எனும் வாதத்தைப் போல, மனிதம் எனும் ஒற்றைப் புள்ளியிலிருந்து ஆன்மீகம் கிளைவிடுகிறது எனலாம்.

சக மனிதனை அன்பு செய்யும் மென்மையான இதயமே இறைவன் உறையும் இல்லம். இறைவனை வெளிப்படுத்த விரும்புவோரிடம் நிச்சயம் இருக்க வேண்டிய குணாதிசயம் அன்பின்றி வேறில்லை. இந்த அன்பின் பிரிவுகளையும், கிளைகளையும், கனிகளையும் நாம் வேறு வேறு பெயர்களைச் சொல்லி அழைக்கலாம். ஆனால் எல்லாமே இந்த அன்பு எனும் ஒற்றை மையத்திலிருந்து வெளிக்கிளம்புகின்ற வெளிச்சங்களே.

சக மனிதன் வறுமையில் வாடுகையில் உனது இதயத்தின் கதவை நீ அடைத்தால், நீ அவனை மட்டும் நிராகரிக்கவில்லை, அவனைப் படைத்த இறைவனையும் சேர்த்தே நிராகரிக்கிறாய்.

வலியில் வாடும் சக மனிதனை நீ அன்புடன் சந்திக்கவில்லையேல், நீ அவனை மட்டும் புறக்கணிக்கவில்லை, அவனைப் படைத்த ஆண்டவனையும் சேர்த்தே புறக்கணிக்கிறாய்.

ஆறுதல் தேடும் சகோதரனை நீ அரவணைக்கவில்லையேல், நீ அவனை மட்டும் விலக்கவில்லை, இறைவனையும் சேர்த்தே விலக்குகிறாய். இதில் தான், இறைவன் அன்பாய் இருக்கிறார் எனும் தத்துவமே அடங்கியிருக்கிறது.

நமது வாழ்க்கையில் நாம் அன்பை வினியோகிக்கும் போது இறைவனை வினியோகிக்கிறோம். அன்பின் கனிகளைப் பகிரும் போது இறைவனையே பகிர்கிறோம். அன்பாகவே மாறும் போது நாம் இறைவனின் நகல்களாக மாறுகிறோம்.

ஒரு பாத்திரம் நிறைய சுவையான இனிப்பு நீரைச் சுமந்து செல்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து சிந்துவதெல்லாம் இனிப்பாகவே இருக்கும். அதிலிருந்து கசப்பின் துளிகள் கசிவதில்லை. அன்பும் அப்படியே. நம் இதயத்தில் அன்பை மட்டுமே நிறைத்து வைக்கும் போது நமது செயல்களும் அன்பாகவே இருக்கும்.

மனதுக்குள் அன்பை நிறைப்பதையே நமது வாழ்வின் இலக்காக வைத்துக் கொள்வோம். மரம் நல்லதாக இருக்கும் போது கனிகள் சுவையானதாகவே இருக்கும். மரத்தின் இயல்பே கனியின் தரத்தை நிர்ணயிக்கிறது. மரமும், நிலமும் வளமாக இருக்கையில் கனியும், சுவையும் நலம் பயக்கும்.

கனிகளைக் கொண்டே மரத்தை மதிப்பிடுவது போல, நமது செயல்களைக் கொண்டே நாமும் மதிப்பிடப்படுவோம். அது மனிதர்களின் அவையிலானாலும் சரி, இறைவனின் சபையிலானாலும் சரி.

பல வேளைகளில் நாம் வலுக்கட்டாயமாய் சில கனிகளை விளைய வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த மரமும் வசீகரம் என கற்பனை செய்து கொள்கிறோம். கை நீட்டும் ஒரு ஏழைக்கு நூறு ரூபாய் கொடுத்தால் கருணைக் கடல் என நமக்கு நாமே பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறோம்.

நாம் உதவிய நபர்களின் எண்ணிக்கையிலல்ல, அந்த உதவிக்கு உதவிய எண்ணங்களையே இறைவன் மதிப்பிடுகிறார். நாம் அரவணைத்துக் கடந்த கணங்களை மட்டுமல்ல, நிராகரித்து நகர்ந்த நிமிடங்களையும் அவர் கணக்கில் வைக்கிறார்.

நமது அன்பின் செயல்கள் இயல்பாகவே வருகிறதா ? அல்லது குற்ற உணர்ச்சியின் குறுகுறுப்பால் வெளிவருகிறதா ?

நமது பாசத்தின் செயல்கள் பரவசமாய் வருகிறதா ? அல்லது பாவம் வருமோ எனும் பயத்தில் வருகிறதா ?

நமது நேசத்தின் பணிகள் ஆத்மார்த்தமாய் வருகிறதா ? கடவுள் தண்டிப்பாரோ எனும் கவலையில் வருகிறதா ?

வேர்களை விசாரிப்போம். கனிகள் விளையாதக் கிளைகளைக் கவனிப்போம். தற்காலிகக் கனிகளை ஒட்ட வைப்பதால், ஒட்டு மொத்த மரமும் புனிதமாவதில்லை.

மனதின் மையத்தில் அன்பை நடுவோம்.அது இயல்பாகவே வளர ஆன்மீகத்தின் நீரைப் பாய்ச்சுவோம். அது தடையின்றி வளர வெறுப்பின் முட்களை வெட்டி எறிவோம்.

இறைவனின் அகலாக மாற,
இறைவனை அகலாமல் இருப்போம்.
அன்பே கடவுள்.
அன்பாக நீ மாறினால் நீயும்….

*
சேவியர்

Siva Tamil

Posted in Articles, Bible Books

பைபிள் கூறும் வரலாறு 3 : விடுதலைப் பயணம்

விடுதலைப் பயணம்

Related image

விவிலியத்தில் வருகின்ற இரண்டாவது நூல் விடுதலைப் பயணம் அல்லது யாத்திராகமம் என அழைக்கப்படுகிறது. எக்ஸோடோஸ் எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து இது உருவானது. இதற்கு ‘வெளியேறுதல்’ என்று பொருள். இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி எகிப்தை விட்டு ‘வெளியேறுதலே’ இந்த நூலின் அடிப்படைச் செய்தி என்பதால் இதற்கு அந்த பெயர் நிலைத்து விட்டது.

விவிலியத்தின் முதல் நூல் மனுக்குல வரலாற்றின் சுமார் 2000 வருடங்களைப் பதிவு செய்கிறது. அதன் பின் முன்னூறு ஆண்டுகள் இடைவெளி ! அந்த காலகட்டத்தில் நடந்தது என்ன என்பதை விவிலியம் பதிவு செய்யவில்லை. அதன் பின்னர் மோசேயின் கதை வருகிறது, விடுதலைப்பயணத்தில் ! 

விடுதலைப் பயணத்தை எழுதியவரும் ‘மோசே’ தான் ! முதல் நூலில் அவர் பிறப்பதற்கும் முன்பு சுமார் 300 ஆண்டுகளோடு முடிவு பெற்ற விஷயங்களை எழுதியிருந்தார். இந்த நூலிலும் அதற்குப் பின் அவர் எழுதிய மூன்று விவிலிய நூல்களிலும் நேரடி அனுபவ விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

கடவுளால் இஸ்ரயேல் என பெயரிடப்பட்ட யாக்கோபு எகிப்தில் குடியேறுகிறார். சுமார் 70-75பேராக முதலில் எகிப்தில் நுழைந்த அவர்கள் 430 ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில் வளர்கிறார்கள். இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும் 6 இலட்சம் பேர். பெண்கள்,குழந்தைகள் எல்லோரையும் சேர்த்தால் சுமார் 20 இலட்சம் வரை வரலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.  இதன் காலம் கிமு 1800-கிமு1400 எனலாம். 

யோசேப்பு இறந்தபின், அரசுகள் மாறிய பின், இஸ்ரயேல் மக்களின் சுதந்திர வாழ்க்கை களவாடப்பட்டது. அவர்கள் அடிமைகளாக மாற்றப்பட்டார்கள். எனவே தான் அவர்களுக்கு அங்கிருந்து விடுதலை தேவைப்பட்டது ! கடவுளை வழிபடவேண்டும் எனும் கோரிக்கையோடு அவர்களை மீட்க கடவுளால் அனுப்பப்பட்டவர் தான் மோசே. அவரோடு துணைக்கு வந்தவர் ஆரோன். 

மோசே முதலில் எகிப்திய இளவரசி ஹெட்சிபாவால் தண்ணீரிலிருந்து கண்டெடுக்கப்பட்டவர். சுமார் நாற்பது ஆண்டுகள் அரசவையில் ஒரு அரசனைப் போல வளர்கிறார். தான் எகிப்தியர் அல்ல, எபிரேயர் எனும் உண்மை புரிந்ததும் தன் இன மக்களின் விடுதலைக்காக போராட நினைக்கிறார். ஆனால் அவரால் அது முடியவில்லை. எனவே அரண்மனையை விட்டு வெளியேறுகிறார். அரண்மனையை விட்டு வெளியேறி நாற்பது ஆண்டுகள் மீதியான் எனும் இடத்தில் வாழ்கிறார். 

அதன் பின் கடவுளால் எகிப்துக்கு அனுப்பப்படுகிறார் மோசே, அப்போது அவருக்கு வயது 80. மோசே சென்று தனது இன மக்களை விடுவிக்குமாறு அரசரிடம் விண்ணப்பிக்கிறார்.  மன்னன் நகைக்கிறான், மறுக்கிறான். அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக பத்து வாதைகள் எகிப்திய நாட்டைசூறையாடுகின்றன. கடைசி வாதையில் எகிப்தியர்களின் தலைச்சன் பிள்ளைகள் இறந்துபோகின்றனர். வேறு வழியில்லாமல் மன்னன் அடிமைகளை வெளியே அனுப்பி விடுகிறான். 

மாபெரும் கூட்டமாக இஸ்ரேல் மக்கள் எகிப்திலிருந்து கால்நடைகள், பொருட்கள், செல்வங்கள் எல்லாவற்றோடும் பயணத்தை ஆரம்பிக்கின்றனர். சுமார் நாற்பது ஆண்டுகள் அவர்கள் பாலை நிலத்தில் நடக்கின்றனர். அவர்களை மோசே வழிநடத்துறார்.  பாலை நிலத்தில் கடவுள் பல்வேறு அதிசயச் செயல்களைச் செய்து மக்களைக் காக்கின்றார். 

நாற்பது ஆண்டுகள் அவர்களுக்கு மன்னா எனும் உணவை வழங்கினார், இறைச்சிக்கு காடைகளை வழங்கினார், ஏன் நாற்பது ஆண்டுகளும் அவர்களுடைய காலணிகள் கூட  அறுந்து போகாமல் பாதுகாத்தார் ! 

மனித வாழ்க்கையை நெறிப்படுத்த இறைவனிடமிருந்து நேரடியாக பத்து கட்டளைகளைப் பெற்று மக்களுக்கு வழங்குகிறார் மோசே. அதைத் தவிரவும் மோசே ஏகப்பட்ட சட்டதிட்டங்களை இறையருளால் வகுத்து மக்களுக்கு வழங்குகிறார்.  

இந்த நூலில் கடவுள் தனது பெயரையும், தனது இயல்புகளையும், அவரது சட்டங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். தன்னை மக்கள் எப்படி வணங்கவேண்டும் எனும் வழிமுறைகளையும் இந்த நூலில் தான் இறைவன் வெளிப்படுத்துகிறார். எனவே இந்த நூல் இறையியல் ஆய்வுக்கு அடிப்படையான நூலாக அமைந்து விடுகிறது.

விடுதலைப் பயண நூலின் நிகழ்ச்சிகள் இயேசுவின் வாழ்க்கையின் நிழலாக இருக்கின்றன. பாஸ்கா எனும் விழாவில் ஒரு வயது நிரம்பிய ஆட்டுக்கடா பலி கொடுக்கப்பட்டது. அது முப்பது வயதான இயேசுவின் மரண பலியை குறிக்கிறது. ஆடானது பிற்பகல் மூன்று மணியளவில் வெட்டப்பட வேண்டும். அது இயேசுவின் மரண நேரத்தைக் குறிக்கிறது. எகிப்தை விட்டு வெளியேறிய மூன்றாம் நாள் செங்கடலைக் கடந்து முழு விடுதலை பெறுகின்றனர். அது இறைமகன் இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கிறது.  ஐம்பதாவது நாளில் மலையில் சட்டங்களைப் பெற்றுக் கொள்கின்றனர், அது இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் ஐம்பதாவது நாளில் பெற்றுக் கொண்ட தூய ஆவியின் பெந்தேகோஸ்தே நாளை குறிக்கிறது.  

விடுதலைப்பயணம் நூல் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையாகவும், இறையியல் சிந்தனைகளின் அடித்தளமாகவும் அமைகிறது.

*

Posted in Articles, Christianity

நூல் முன்னுரை : திருமறை பாலர் விளையாட்டுகள்

photo-2018-12-21-14-20-14வனையும் பொழுதுகள்

“இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்” ( எரேமியா 18:6)

குழந்தைகள் குயவன் கை களிமண்ணைப் போன்றவர்கள். அவர்களை வனைவது யார் என்பதில் தான் அவர்களுடைய எதிர்காலம் அடங்கியிருக்கிறது. கைதேர்ந்த குயவனின் கையில் களிமண் கிடைக்கும் போது அது அழகிய பாண்டமாக வடிவெடுக்கிறது. கையாலாகாதவனின் கையில் அது வெறும் மண்ணாய் உதிர்ந்து விடுகிறது.

ஒரு குழந்தையை வனைய, கடவுளின் விரல்களைப் போன்ற வலிமையான விரல்கள் எவ்வுலகிலும் இல்லை. அந்த விரல்களில் களிமண்ணை ஒப்படைக்கும் பொறுப்பு பெற்றோரிடம் இருக்கிறது. கடவுளின் விரல்களை விட்டு வழுவி விடாத தன்மை குழந்தைகளிடம் இருக்க வேண்டும்.

சரியான கைகளில், சரியான பருவத்தில் சரணடைகின்ற களிமண் தனது பிறவிப் பயனை அடைந்து விடுகிறது.

நூலைப் பற்றி எழுதச் சொன்னால் களிமண்ணைப் பற்றி எழுதுகிறானே என நீங்கள் நினைப்பது கேட்கிறது. சகோதரர் பென்யமினின் இந்த நூலின் வழியாகச் செய்திருக்கும் பணியைத் தான் நான் குறிப்பிட்டேன்.

குழந்தைகளை இறைவனின் கரங்களில் இறுக்கமாகக் கட்டி வைக்கும் சிறப்பான முயற்சியையே அவர் செய்திருக்கிறார். இறைவன் வனையட்டும் என்பதற்காக குழந்தைகளை அவரது வார்த்தைகளோடு உலவ விட்டிருக்கிறார். அவரது திருமறையின் புதையல்களோடு விளையாட விட்டிருக்கிறார்.

இன்றைய உலகில் எது வாழ்வுக்கான வெளிச்சம், எது அழிவுக்கான தீப்பிழம்பு என்பதைப் பற்றிய புரிதல் இல்லை. அவரவர் கையிலிருக்கும் விளக்கே உயர்வானது என்றே கருதிக் கொள்கின்றனர். இறைவனின் வெளிச்சத்துக்குள் உலவுவதை விட உலகத்தின் வெளிச்சப்பாதையில் உருண்டு புரண்டாலே போதும் என புரிந்து கொள்கின்றனர்.

உலகம் தனது வசீகர வலையில் உலகின் கவர்ச்சிகளை இணைத்து நீட்டுகிறது. அதை விட்டு விட்டு, “வலப்பக்கமாக வலைகளை வீசுங்கள்” எனும் இறைவனின் வார்த்தையை சிரமேற்றிருக்கிறார் சகோதரர் பென்யமின்.

இறை வார்த்தையை எப்படி சிறுவர்களின் உள்ளங்களில் பதிய வைப்பது எனும் சூட்சுமத்தை அவர் தனது முதல் நூலிலேயே கண்டுபிடித்து விட்டார். அந்த விதைகளின் நீட்சியாக இந்த நூலை அவர் உருவாக்கியிருக்கிறார். பருவமழை பொய்த்த நிலங்களில் விளைச்சல் இருப்பதில்லை. பருவ மழையைப் போல இறைவார்த்தையையும் தொடர்ச்சியாய் சொல்ல வேண்டும் என சகோதரர் ஆசிக்கிறார்.

அதைப் புதுமையான விளையாட்டுகளாலும், விடுகதைகளாலும், புதிர்களாலும் பொதிந்து குழந்தைகளிடம் கொடுக்கிறார். குழந்தைகள் அந்த புதிர்களோடு விளையாடுகையில் அலாவுதீன் பூதம் போல வியப்பின் விடைகள் வெளிக்கிளம்புகின்றன. அவர்கள் அதன் சிலாகிப்பில் அடுத்த புதிர்களுக்குள் புகுந்து விடுகின்றனர்.

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் என்றார் இயேசு. இவர் குழந்தைகளை இயேசுவிடம் வளரவிடுகிறார். உச்சமானதை மட்டுமே நிரப்புகின்ற உயர்வான பாத்திரங்களாக குழந்தைகளைக் கையாள்கிறார். ஒரு குழந்தை இறைவனுக்காய் பணியும் போது, ஒரு தலைமுறை இறைவனில் நிமிரும் என்பதை சாமுவேலின் வாழ்க்கை நமக்கு விளக்குகிறது.

இவரது எழுத்துகளின் கைகளைப் பிடித்து நடந்தால் குழந்தைகள் இயேசுவின் வாழ்க்கையைப் பிடித்துக் கொள்வார்கள். விளையாட்டாய் இன்றைக்கு இறைவனை அறிந்தால், சீரியசாக நாளை அவரை அறிவிப்பார்கள்.

பெற்றோர்களே,

போதும்.

திரைகடல் ஓடித் திரிய வேண்டிய குழந்தைகளை, டிஜிடல் திரைகளின் வெளிச்சக் கயிறுகளால் கட்டியது போதும். கற்களை அப்பமாய் மாற்ற மறுத்த இறைவனின் சொற்களை அப்பமாய்ப் பெற்றுக் கொள்ளும் காலம் இது.

நுனிப்புல் கிறிஸ்தவர்களாகவும், ஏட்டுச் சுரைக்காய்களாகவும் வாழ்ந்த காலம் போதும். இனி வருகின்ற தலைமுறையை வாழும் கிறிஸ்தவர்களாகவும், கனிகொடுக்கும் தருக்களாக்வும் வளர்ப்போம்

பிள்ளைகளே,

உண்மையான ஆனந்தம் இறைவார்த்தையில் இருக்கிறது. இறை வாழ்க்கையில் இருக்கிறது. அதை புரிந்து கொள்ளும் வரை உலக சிற்றின்பங்கள் நம் கால்களைச் சுற்றிக் கொள்ளும். காலைச் சுற்றும் தேவையற்ற கேளிக்கைகளை விட்டுத் தள்ளுவோம். இதயத்தைச் சுற்றும் இறைவார்த்தையை பெற்றுக் கொள்வோம்.

சகோதரர் பென்யமின் மென்மனதுக்காரர். புன்னகையின் கவிதையை இதழ்களிலிருந்து இறக்கி விடாதவர். அடிப்படையில் ஒரு கவிஞர். மனதளவில் ஒரு குழந்தை. சிந்தனையில் இறையியலாளர். வாழ்வியலின் இறைவனின் பணியாளர். இந்த நூலை எழுத இதைவிடப் பெரிய தகுதி எதுவும் தேவையில்லை. அதனால் தான் இறைவன் சரியான நபரைத் தேர்ந்தெடுத்து இந்தப் பணியை ஒப்படைத்திருக்கிறார். அதனால் தான் நூலும் இறைவனின் விரல்களின் வரங்களாய் வந்திருக்கிறது.

சகோதரர் மேலும் பல நூல்களை வெளியிடவேண்டும். குழந்தைகளை இறையரசுக்காய் தயாராக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இறையன்பில்
சேவியர்