Posted in Articles, WhatsApp

காலங்களுக்கு அப்பால் கடவுள்

Image result for judith bible

மனித உள்ளத்தின் ஆழத்தையே நீங்கள் காண முடியாது; மனித மனம் நினைப்பதையே நீங்கள் உணர முடியாது. அவ்வாறிருக்க, இவற்றையெல்லாம் படைத்த கடவுளை எவ்வாறு உங்களால் தேடி அறிய முடியும்? அவருடைய எண்ணத்தை எவ்வாறு புரிந்த கொள்ள முடியும்? அவருடைய திட்டத்தை எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்?

யூதித்து 8 :14
( இணை திருமறைகள் )

+++

நெபுகத்நேசரின் வலிமைமிகு படைத்தலைவன் ஓலோபெரின் யூதாவை முற்றுகையிடுகிறார். இதற்கு முன் சென்ற நாடுகளையெல்லாம் அழித்து, ஒழித்து, கபளீகரம் செய்தவன். பல இலட்சம் வீரர்களுடன் இப்போது யூதாவை நெருங்கியிருக்கிறார்.

யூதா மக்கள் இப்போது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் வழிகளை அடைத்துவிட்டு பாதுகாப்பாய் இருக்கின்றனர் இஸ்ரயேலர்கள். எதிரியோ நாட்டுக்கு வரும் தண்ணீர் வழிகளை அடைத்துவிட்டு மக்களை அழிக்க முயல்கிறான். ஊர் தலைவர்கள், “இன்னும் ஐந்து நாட்கள் பொறுத்திருப்போம், கடவுள் நம்மை மீட்காவிட்டால் சரணடைவோம்” எனும் முடிவை எடுக்கின்றனர். தலைமைக்குரு இல்க்கியாவின் வழித்தோன்றலான யூதித்து இதைக் கேட்டு மனம் வருந்தி இந்த வசனங்களை உரைக்கிறார்.

கடவுளுக்குக் கெடு விதிப்பதும், கடவுள் இந்த நாளுக்குள் இதைச் செய்யாவிட்டால்.. என நிபந்தனைகள் விதிப்பதும் எவ்வளவு முட்டாள் தனமான வாதங்கள் என்பதையே இந்த வசனங்கள் விளக்குகின்றன. இறைவனின் திட்டங்கள் துவக்கத்துக்கும் முன்பே நிர்ணயிக்கப்பட்டு, முடிவுக்குப் பின்பும் தொடரப் போகின்றவை. “நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாய் வாழ்கிறோம்” என்பதால் கடவுள் நமக்கு ஏற்புடைய ஒரு நேரத்தில் பதிலளிக்க வேண்டுமென்பதில்லை.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், நமது செயல்களோ நமது தேவைகளோ நமது அவசரங்களோ இறைவனின் காலத்தை நிர்ணயிப்பதில்லை. அவர் நம்மீது கொண்டிருக்கும் அன்பு அதை நிர்ணயிக்கிறது. அவருடைய அன்பெனும் இயல்பு அதை நிர்ணயிக்கிறது. “நாம் வேண்டுவதற்கு முன்பாகவே நமது தேவையை அறிந்தவர் அவர்” என்கிறது விவிலியம். அதைத் தான் யூதித்தின் வார்த்தைகளும் விளக்குகின்றன.

நாம் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழவேண்டியது மட்டுமே அவர் விரும்புவது. அப்படி வாழும்போது நமது தேவைகளை, தேவையான நேரத்தில் அவர் நிறைவேற்றுகிறார்.

இறைவனிடம் செபிப்பதும், விண்ணப்பிப்பதும், உரையாடுவதும் மிகவும் அவசியம். அதே நேரத்தில், இறைவனை நமது கால வரைகளுக்குள் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனமானது.

இறைவனின் வழிகளில் நடப்போம்,
அவருடைய நேரத்துக்காய் காத்திருப்போம்.

*

சேவியர்

Posted in Articles, WhatsApp

கனியும், கனிவும்

Image result for sirach

கனி, மரத்தின்
கண்காணிப்பைக்
காட்டுகின்றது;
சொல், மனிதரின்
உள்ளப் பண்பாட்டைக்
காட்டுகின்றது

சீராக் 27 :6

சீராக்கின் நூல் பேச்சில் இருக்க வேண்டிய தூய்மையைக் குறித்து விரிவாகப் பேசுகிறது. சலிக்கின்ற சல்லடையில் உமி தங்கி விடுவதைப் போல, மனிதரின் பேச்சில் மாசு படிந்திருக்கிறது என இந்த நூல் கூறுகிறது. குயவனின் கரங்களை, சூளை பரிசோதிப்பது போல மனிதரை அவருடைய உரையாடல் பரிசோதிக்கிறது என்கிறது அது.

“நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்” (லூக் 6 :45), “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும் ( மத்தேயு 7 :17) என இறைமகன் இயேசு இதே சிந்தனையை நமக்குத் தருகிறார்.

விவிலியம் நமக்கு நாவடக்கத்தைப் பற்றியும், பேச்சைப் பற்றியும் நிறைய பேசுகிறது. குறிப்பாக திருப்பாடல்கள், நீதிமொழிகள் போன்ற நூல்கள் நமது வார்த்தையைக் கவனிக்க வேண்டியதன் தேவையை விளக்குகின்றன. “ஒருவருடைய பேச்சைக் கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்” என்கிறது சீராக் நூல். இறைப்பற்று உடையவர்களின் பேச்சு எப்போதுமே ஞானமாய் இருக்கும் என்பதையும், அறிவிலிகளின் பேச்சோ நிலவைப் போல வேறு வேறு முகம் காட்டும் எனவும் நூல் கவித்துவமாய்ப் பேசுகிறது.

வெறும் பேச்சு தானே, இதுல என்ன இருக்கு ? என்பதே பலருடைய சிந்தனை. இறைவனோ அதை எதிர்க்கிறார். “செருக்குற்றோரின் வாய்ச் சண்டை கொலைக்கு இட்டுச் செல்லும்” என்கிறார் சீராக் வாயிலாக.

சகதி நிறைந்த குளத்திலிருந்து சந்தன வாசனை புறப்படுவதில்லை. உள்ளத்தில் என்ன நிரம்பியிருக்கிறதோ அதையே வாய் பேசும். பாத்திரம் முழுவதும் இனிப்பான நீர் நிரம்பியிருந்தால் தளும்புவதெல்லாம் இனிமையாகவே இருக்கும் என்பதைப் போல உள்ளில் இனிமையை நிரப்பத் துவங்குவோம்.

கனிகளைக் கவனிக்க வேண்டுமெனில் வேர்களை விசாரிக்க வேண்டும். வார்த்தைகளைச் சீர் செய்ய வேண்டுமெனில் இதயத்தை சீர்செய்ய வேண்டும்.

*

Posted in Articles, WhatsApp

யோசேப்பின் பிழை

எகிப்தின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைவரை இருந்த மக்கள் அனைவரையும் யோசேப்பு அடிமை வேலைக்கு உள்ளாக்கினார்

தொடக்க நூல் 47 :21

joseph rule egypt க்கான பட முடிவு

மனிதர்களுடைய‌ செயல்களுக்கும், பின்னர் அவர்களுடைய சந்ததியின் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. யோசேப்பு, விவிலியத்திலுள்ள இறைமனிதர்களில் மிக முக்கியமானவர். இறைமகன் இயேசுவுக்கு ஒப்புமையாகச் சொல்லப்படுபவர். வாழ்வில் அதிகபட்ச தூய்மையும், இறைத்தன்மையும் கொண்டிருந்தவர்.

அடிமை நிலையில் எகிப்திற்கு வந்து, பொய் குற்றவாளியாய் சிறையில் வாடிய அவருக்கு மன்னனின் கனவுக்குப் பலன் சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அது அவரை மன்னருக்கு அடுத்த இடத்தில், உயரிய இருக்கையில் இருத்துகிறது. கனவின் விளக்கம் இது தான். நாட்டில் ஏழு ஆண்டுகள் வளமையான ஆண்டுகளாய் இருக்கப் போகிறது, அதன்பின் ஏழு ஆண்டுகள் பஞ்சத்தின் உச்சமாக இருக்கப் போகிறது.

கனவின் பலனைச் சொன்ன யோசேப்பு மன்னரிடம் சொன்ன யோசனை, முதல் ஏழு ஆண்டுகள் மக்களுடைய விளைச்சலில் ஐந்தில் ஒரு பாகத்தை கொள்முதல் செய்ய வேண்டும். அடுத்த ஏழு ஆண்டுகள் மக்களுக்கு அதை வினியோகிக்க வேண்டும். என்பது தான். அப்படியே முதல் ஏழு ஆண்டுகள் கொள்முதல் செய்யப்பட்டன.

பஞ்சம் ஆரம்பமானது. மக்கள் உணவுக்காக யோசேப்பிடம் வந்தார்கள். யோசேப்பு அவர்களுக்கு தானியங்களை விற்றார். மக்களின் பணம் அரசின் கைவசமானது. பின்னர் தானியம் தேடி வந்த மக்களிடமிருந்து கால்நடைகளைப் பெற்றுக் கொண்டார். கால்நடைகள் அரசின் வசமானது. பின்னர் மக்களின் நிலங்களை வாங்கிக் கொண்டார். நாடே அரசின் உரிமையானது. கடைசியில் மக்களை அடிமைகளாக வாங்கிக் கொண்டார். ஒட்டு மொத்த தேசத்தின் மக்களுமே அடிமைகளானார்கள்.

இப்போது எகிப்தியர்கள் பார்வோனின் அடிமைகளானார்கள். சொல்லப் போனால், பார்வோனுக்கு அடுத்த இடத்தில் இருந்த இஸ்ரயேலரான யோசேப்பின் அடிமைகளாக மாறிப் போனார்கள்.

பஞ்சம் ஏழு ஆண்டுகள் வரும் என யோசேப்பு நாட்டு மக்களுக்கு அறிவிக்கவில்லை. ‘உங்கள் தானியங்களில் பாதியை பஞ்சத்துக்காய் சேமித்து வையுங்கள்’ என அறிவுரை கூறவில்லை. கடவுளின் திட்டத்தை பக்கத்து நாடுகளுக்குச் சொல்லி எச்சரிக்கவில்லை. மக்கள் அபலக் குரல் எழுப்பியபோது படிப்படியாக அந்த சூழலைப் பயன்படுத்தி நாட்டையே மன்னனுக்கு உரிமையாக்கினார், மக்களை அடிமைகளாக்கினார்.

காலம் கடந்தபின் நிலமை தலைகீழாகி, இஸ்ரேல் மக்கள் எகிப்தியருக்கு அடிமைகளானார்கள். நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக அவர்கள் அடிமைகளாக வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

“நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.” என்றார் இயேசு.

ஒரு சூழல் நமக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கலாம், நாம் தேர்ந்தெடுக்கும் வழி ஆகச்சிறந்த வழியாய் இருப்பது நமக்கு மட்டுமல்லாமல் நமக்குப் பின் வரும் சந்ததிகளுக்கே நன்மையைத் தரும் என்பதையே இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.

*

சேவியர்

Posted in Articles, WhatsApp

நீ பாவம் செய்யமாட்டாய்

எல்லாவற்றிலும் உன் முடிவை
நினைவில் கொள்;
அவ்வாறெனில் ஒருபோதும்
நீ பாவம் செய்யமாட்டாய்

சீராக் 7 : 36

Image result for sirach 7:36  bible

பாவம் செய்யாமல் இருக்க விவிலியம் நமக்கு பல்வேறு வழிகளையும், அறிவுரைகளையும் தருகிறது. “எல்லாவற்றையும் இறைவனுக்குப் பிடித்தமானதாகச் செய்வது பாவத்தில் நாம் விழாமல் இருக்க உதவும். புதிய மனிதனை அணிந்து கொண்டு பழைய இயல்புகளை விட்டு விடுவது பாவத்தில் விழாமல் நம்மைத் தடுக்கும். தூய ஆவியானவரின் துணையோடு வாழும் போது பாவத்தை மேற்கொள்ளும் வலிமை கிடைக்கும்”, என்றெல்லாம் விவிலியம் நம்மை சிறப்பாக வழிநடத்துகிறது.

சீராக்கின் நூல் இன்னொரு அழகான வழிகாட்டுதலைத் தருகிறது. “நீ பாவம் செய்யாமல் தப்பிக்க வேண்டுமெனில், எப்போதும் வாழ்வின் முடிவைக் குறித்த சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும்” என்கிறது அந்த நூல். நரகமா, சொர்க்கமா ? இறைவனோடான ஐக்கியமா, சாத்தானோடான சங்கமமா ? எனும் கேள்வியை ஒவ்வொரு செயலிலும் கேட்டு, சரியான வழியைத் தேர்ந்தெடுத்தால் நமது வாழ்க்கை பாவத்தைக் கடந்த வாழ்க்கையாய் மாறும்.

சீராக் நூல் இணை திருமறைகள் என இப்போது அழைக்கப்படுகிறது. துவக்க காலத்தில் திருப்பாடல்கள் நூலுக்கு அடுத்தபடியாக பயன்படுத்தப்பட்டு வந்த நூல் இது என்பது குறிப்பிடத் தக்கது. இதை சபை நூல் என்றும் அழைப்பார்கள். இந்த நூல் எபிரேயத்தில் எழுதப்பட்டு அந்த குறிப்புகள் தொலைந்து போக, கிரேக்க மொழிபெயர்ப்பை வைத்தே இந்த நூல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. எனவே இது கிரேக்கத்தில் எழுதப்பட்ட நூல் எனும் தவறான சிந்தனையுடன் பலரால் நிராகரிக்கப்பட்டு வந்தது. எனினும் ஆதித் திருச்சபை இது இறைவனின் நூல் என அரவணைத்தே வந்தது.

சமீபத்தில் நடந்த கும்ரான் மலைப்பகுதி கண்டுபிடிப்புகளில் ஏசாயா நூலின் பழைய படிவங்களும், சீராக்கின் எபிரேய பதிவுகளும் கிடைத்திருக்கின்றன.

சீராக்கின் நூலின் ஆசிரியர் தருகின்ற இந்த அறிவுரை வெகு எதார்த்தமான அறிவுரையாய் நமக்கு முன்னால் நிற்கிறது. சிலுவையில் இறைமகன் இயேசு சாத்தானைத் தோற்கடித்தார். அவனது முடிவு இயேசுவின் பலியோடு ஊர்ஜிதமானது. நமது துவக்கம் இயேசுவின் மரணத்தோடு துவங்க வேண்டும்.

நம்மை அழித்து, இறைவனில் முளைப்போம். செய்யும் செயல்கள் யாவற்றிலும் நமது வாழ்க்கையின் முடிவு பற்றிய சிந்தனை எச்சரிக்கையாய் ஒலிக்கட்டும்.

*

சேவியர்

Posted in WhatsApp

இறைவார்த்தைகளா, அரைவார்த்தைகளா ?

Image result for நீரூற்றைப்போலவும்

நீ
நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

ஏசாயா 58:11

இன்சூரன்ஸ் வாங்கும்போது அதில் பளபளப்பான, வசீகரமான வாக்குறுதிகள் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். விற்பனை செய்யும் நபரும் அதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லி நம்மை மூளைச் சலவை செய்வார். விண்ணப்பத்தின் கடைசியில் நட்சத்திரக் குறியிட்டு, ‘சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது’ என நிறைய விஷயங்களைப் போட்டிருப்பார்கள். அதை யாரும் கண்டு கொள்வதில்லை.

ஒரு கிளெய்ம் தேவைக்காக இன்சூரன்ஸை அணுகும் போது அவர்கள் அந்த வசீகரக் கொட்டை எழுத்துத் தகவல்களைக் கண்டு கொள்வதில்லை, அந்த நட்சத்திரக் குறியிட்ட சட்டதிட்டங்கள் என்ன சொல்கின்றன என்பதையே பார்ப்பார்கள்.

‘சாரி… உங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது, ஏன்னா நீங்க இதைச் செய்யல. அல்லது இதை தப்பா செஞ்சுட்டீங்க’ என மிகப்பெரிய முட்டுக்கட்டைகளைப் போட்டு பல நேரங்களில் நம்மை அதிர்ச்சியடையச் செய்வார்கள்.

அப்படிப்பட்ட பட்டியலில் இந்த வசனத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வசனத்தைத் தொடங்கிவிட்டால், சின்னக் குழந்தை கூட இரண்டு வரிகளையும் சொல்லி முடித்து விடும். “நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய்” என்கிறது பொது மொழிபெயர்ப்பு.

இதிலும் நட்சத்திரக் குறியிட்ட சட்டதிட்டங்கள் உண்டு. அவை முந்தைய வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

“பசித்திருப்போருக்காக
உன்னையே கையளித்து,
வறியோரின் தேவையை
நிறைவு செய்வாயானால்”

என்பதே இறைவன் சொல்லியிருக்கின்ற சட்டதிட்டம். அதை உதாசீனம் செய்து விட்டு, அழகான அட்டைகளில் பாதி வசனங்களை மட்டும் எழுதி வரவேற்பு அறையில் தொங்கவிட்டு ஓய்வு எடுக்கும் போது அது ‘பயனற்ற சிலை வழிபாட்டுக்கு இணையான செயலாக’ மாறிவிடுகிறது.

வெறுமனே பிரியாணி, பிரியாணி என வாசித்துக் கொண்டிருந்தால் வயிறு நிரம்பிவிடுவதில்லை. நல்ல சிலிர்ப்பூட்டும் வசனங்களை அரைகுறையாய் வாசித்துக் கொண்டே இருப்பதால் வாழ்வு மலர்ந்து விடுவதில்லை. இதை மனதில் கொள்ளவேண்டும்.

ஆறுதலான மகிழ்ச்சியான வசனங்களை அடிக்கடி பார்ப்பதும், படிப்பதும் நல்லது தான், ஆனால் அந்த வசனங்கள் உண்மையிலேயே நமது வாழ்க்கையில் ஆசீர்வாதத்தைக் கொண்டு வரவேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதையே கவனிக்க வேண்டும் ?

இல்லையேல், வெறும் பரிசேயத்தனத்தின் நீட்சியாகவே நமது வாழ்க்கையும் அமைந்து விடும்.

இறைவார்த்தைகள் சிலாகிப்பதற்கானவையல்ல.
சிந்திப்பதற்கானவை

*

சேவியர்