
ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் எற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள்.
2 யோவான் 1:7
அந்தி கிறிஸ்து, அதாவது எதிர் கிறிஸ்துவுக்கு சினிமாட்டிக் பொருள் கொள்வதையும், ஒரு பரபரப்பான நாடகமாக்கம் செய்வதையுமே இன்றைய கிறிஸ்தவர்கள் விரும்புகிறார்கள். காரணம் அவர்கள் சில சித்தாந்தங்களின் பிடியில் சிக்குண்டு கிடப்பது தான். இறை வார்த்தைகளே தங்களை இயக்குவதாய் அவர்களில் பலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் எற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள். என்கிறது 2 யோவான் 1:7. முதல் நூற்றாண்டிலேயே எதிர்கிறிஸ்து உலகில் எழுந்திருப்பதாக யோவான் குறிப்பிடுகிறார். ‘இயேசு கிறிஸ்து மனிதனாக வந்தார்’ எனும் உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களை யோவான் எதிர்கிறிஸ்து எனக் குறிப்பிடுகிறார்.கவனிக்க, ஒருவரல்ல ஒரு விசுவாசத்தை எதிர்ப்பவர்கள் அனைவருமே எதிர்கிறிஸ்துகள்.
இயேசுவை பிரதிபலிக்கிறேன் என சொல்லிக்கொண்டு, உண்மையான இயேசுவைப் பிரதிபலிக்காமல் இருக்கின்றவர்களையும் இந்த அந்தி கிறிஸ்து எனும் அடையாளம் குறிப்பிடுகிறது.
“இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவேயென அறிகிறோம். இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல” என 1 யோவான் 2:18 குறிப்பிடுகிறது.
எதிர் கிறிஸ்து ஒற்றை நபர் அல்ல, இறைவனை மறுதலிக்கும் யாரும் எதிர்கிறிஸ்துவே என்பதை யோவான் அறுதியிட்டுக் கூறுகிறார். ஆதித் திருச்சபையையும், அவர்களுடைய வழிமுறைகளையும், அவர்களது வழிபாட்டு முறைகளையும், அவர்களது சிந்தனைகளையும், அவர்களது சித்தாந்தங்களையும் ஏற்றுக் கொள்ளாமல் பிரிந்து போன அனைவரையும் அவர் எதிர்கிறிஸ்து என அழைக்கிறார்.
ஆதிகாலத்தில் நீரோ மன்னன் அந்திக்கிறிஸ்துவாய் சித்தரிக்கப்பட்டான். பின்னர் யோவான் தனது வாழ்வின் கடைசி காலத்தில், அதாவது திருத்தூதர்களின் வாழ்க்கை முடியும் காலகட்டத்தில் பிரிவினை வாதிகளையெல்லாம் அந்திக் கிறிஸ்து எனக் குறிப்பிடுகிறார். யோவானின் மரணத்தோடு உலகம் அழியும் என்றும், இயேசுவின் இரண்டாம் வருகை வரும் எனவும் அந்த காலத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத் தக்கது.
“இயேசு “மெசியா” அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? தந்தையையும் மகனையும் மறுப்போர்தாம் எதிர்க் கிறிஸ்துகள்” என யோவான் திரும்பத் திரும்ப அந்தி கிறிஸ்து என்பவர்கள் தந்தையையும், மகனையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் என அழுத்தமாய்ச் சொல்கிறார்.
“அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறை மகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? … தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” என இயேசு (யோவான் 10 36) ல் சொன்னதில் ஒளிந்திருக்கின்றன அந்தி கிறிஸ்துவின் அடையாளங்கள்.
இறைமகன் இயேசு, “இறைவாக்கினர் தானியேல் உரைத்த, ‘நடுங்கவைக்கும் தீட்டு’ திருவிடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள் ( மத்தேயு 24:15) என்றார். அதற்கான விளக்கங்களை ஆளாளுக்கு தங்கள் வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாய் வரையறை செய்து கொள்கின்றனர் என்பதே உண்மையாகும்.
தானியேலின் இறைவாக்கான, நடுங்க வைக்கும் தீட்டு மக்கபேயர் காலமான கிமு 167ல் நிறைவேறியது என்பதை இணை திருமறை நூலான 1 மக்கபேயர் 1 :54 விளக்குகிறது.
“நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு கிஸ்லேவு மாதம் பதினைந்தாம் நாள் அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும் பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள்; யூதேயாவின் நகரங்களெங்கும் சிலை வழிபாட்டுக்கான பீடங்களைக் கட்டினார்கள்”. அப்போது நடந்த நிகழ்வுகளையும் மக்கபேயர் நூல் மிகத் தெளிவாக விளக்குகிறது. எனவே தான் விவிலியத்தின் தொடர்ச்சிக்கு இணை திருமறை நூல்கள் அவசியமாகின்றன.
இயேசுவோடு பயணப்பட்ட யோவான் ஐந்து முறை அந்திகிறிஸ்து/எதிர்கிறிஸ்து எனும் பதத்தை பயன்படுத்துகிறார். ஐந்துமே இறைமகனின் இறைத்தன்மையை மறுதலிக்கும் மக்களைக் குறிக்கிறதே தவிர ஒரு தனி நபரையோ, இயக்கத்தையோ குறிக்கவில்லை என்பதே பைபிள் சொல்லும் உண்மையாகும்.
வரலாற்றில் கொடூரமான மனிதர்கள் மேல் தங்கள் வெறுப்பைத் திணிக்க அவர்களை அந்திக்கிறிஸ்துகள் என அழைத்ததுண்டு. அடால்ஃப் ஹிட்லரே அந்திக்கிறிஸ்து என உருவகித்து மிகப்பெரிய கருத்துருவாக்கம் அவரது காலத்தில் எழுந்தது. ஜெர்மானிய தத்துவஞானி ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஃப்ரெட்ரிக் நீச்சி. அவரே அந்திக்கிறிஸ்து என கணிசமான மக்கள் நம்பினார்கள். அட்டிலா, முகமது, பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஹென்றி கிஸ்ஸிங்கர், மிகைல் கோர்பசேவ் இப்படிப் பல்வேறு மனிதர்கள் அந்திக்கிறிஸ்துவாக ஒவ்வொருகாலத்திலும் சித்தரிக்கப்பட்டனர்.
பிரிவினை சகோதரர்கள், போப்பை அந்திக்கிறிஸ்துவாக சித்தரித்து தங்களுடைய வெறுப்பை தணித்துக் கொள்வதுமுண்டு. அதற்காக சில கூட்டல் கழித்தல்களை அவர்கள் கட்டமைப்பதும் உண்டு.
அதே போல கத்தோலிக்கத் திருச்சபையில் பிரிவினையை உருவாக்கிய மார்டின் லூத்தரை அந்திக்கிறிஸ்து என ஒரு சாரார் அழைப்பதுண்டு. மார்டின் லூத்தர் திருச்சபைபில் மட்டுமல்லாமல் விவிலியத்திலேயே பிரிவினையை உருவாக்கினார் என அவர்கள் வாதிடுகின்றனர். ‘விசுவாசம் மட்டுமே போதுமானது’ எனும் அவருடைய சூளுரைக்கு எதிராக இருந்த யாக்கோபு நூலை அவர் “வெறுப்புக்குரிய நூல்” என அழைத்தார். இது அப்போஸ்தலிக்க நூல் கிடையாது இது விவிலியத்தில் இருக்கக் கூடாது என்றார். தீத்து நூலையும் அப்படியே விமர்சித்தார்.
திருவெளிப்பாடு நூல் புனை கதை போல் இருக்கிறது எனவும், “வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்” எனும் வசனம் மரியாவையும் குறிக்கிறது என்பதால் அந்த நூலையும் திருவிவிலியத்திலிருந்து நீக்க வேண்டுமென முழங்கினார்.
உண்மையில் அவர் உருவாக்கிய பைபிளில் யாக்கோபு, தீத்து மற்றும் திருவெளிப்பாடு போன்றவை பிற்சேர்க்கையாய் தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து அவருடைய சித்தாந்தத்துக்கு ஒத்திசைவு தெரிவித்த பலரும் அவருடைய கருத்தை பிரதிபலித்தனர் என்கிறது வரலாறு.
சிலர் “திரித்துவத்தை” நம்புகிற அனைவருமே அந்திகிறிஸ்துகள் என வாதிட்டனர். திரித்துவம் என்பதே கிரேக்க தத்துவஞானியான பிளாட்டோ சிந்தனையில் உருவானது. யூத, கிறிஸ்தவ மூலங்களில் இவை இல்லை. பைபிளில் திரித்துவம் என்பது இல்லை, அவை கட்டமைக்கப்பட்ட சித்தாந்தங்கள். தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட குறியீடுகள் என அவர்கள் தர்க்கித்தனர்.
இன்னும் சிலர் யகோவா எனும் வார்த்தையைத் தாங்காத பைபிளைப் பின்பற்றும் அனைவரும் அந்திகிறிஸ்துவை ஆதரிப்பவர்கள். வல்லமையுள்ள இறைவனுடைய பெயரையே அவர்கள் இருட்டடிப்பு செய்கிறார்கள். “உமது பெயர் தூயதென போற்றப்படுக” எனும் கர்த்தர் கர்ப்பித்த செபத்தையே அவமானப்படுத்துகின்றனர். என வாதிட்டனர்.
திருத்தூதர்களின் காலத்தின் கடைசி கட்டத்திலும், அதன் பிந்தைய காலத்திலும் பல ஞானக் கொள்கைகள் தோன்றின. ஒறுத்தல் முயற்சியும், தனிமை தியானமும் தேவையெனும் சித்தாந்தங்களும் தோன்றின. மனிதனின் இருதய நிலையே இறையரசு எனும் சிந்தனைகள் தோன்றின. இவர்கள் எல்லோருமே ஒருவர் மற்றவரை அந்தி கிறிஸ்துவின் சேனை என அழைத்தனர்.
சிலர் அந்திகிறிஸ்து என்பவர் இனிமேல் தான் வருவார் எனவும், 666 எனும் எண் அவனுக்கு இடப்படும் என்றெல்லாம் விவாதிக்கின்றனர். ஆனால் விவிலியமோ மிகத் தெளிவாக அந்திக்கிறிஸ்து என்பவர் ஒருவரல்ல என்கிறது. “எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர் (1யோவான் 2:18)” என மிகத் தெளிவாக விவிலியம் குறிப்பிடுகிறது.
கிறிஸ்தவ குழுக்களில், அமைப்புகளில், திருச்சபைகளில் குழப்பம் உருவாக்கும் மனிதர்களை அந்திகிறிஸ்து எனலாம்.
1 திமோத்தேயு 3 ஐ வாசித்தால் பொறுப்பில் இருக்கும் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பது விளக்கப்படுகிறது. அதைப் பின்பற்றாமல் ஆன்மிக பயணத்தில் இடையூறாக இருக்கும் அனைவருமே அந்திக்கிறிஸ்துகள் தான்.
அதை விட்டு விட்டு திருவெளிப்பாடு 13 குறிப்பிடும் மிருகத்தையும், தானியேல் 7 குறிப்பிடும் மிருகங்களையும் ஒப்பிட்டு அந்திகிறிஸ்துவை உவமைப்படுத்துவோர், தானியேல் 7:17 சொல்வதை வசதியாய் மறந்து விடுகின்றனர். “இந்த நான்கு விலங்குகளும் உலகில் எழும்பப்போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன” என்கிறது தானியேல் 7:17. விவிலியத்தின் பதிவுகளில் எல்லாவற்றையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது குழப்பங்களே மிஞ்சும் என்பது தெளிவு.
சொல்லப்போனால், அந்தி கிறிஸ்து என்பவர் மனிதரல்ல, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் மூலம் உருவாக்கப்படும் ரோபோக்களே அவை என ஒரு மாபெரும் கூட்டம் இப்போது பேசித்திரிகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
விவிலியம் குறிப்பிடுகின்ற அந்தி கிறிஸ்து யார் என்பதை மிக எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், அன்றைக்கு அவர்கள் அறிவித்து வந்த கிறிஸ்துவ நம்பிக்கைக்கு எதிராய் இருந்தவர்கள் என புரிந்து கொள்ளலாம். உலகில் எழுகின்ற அரசுகள், சித்தாந்தங்களுக்கு எதிரான செயல்பாடுகள் போன்றவையெல்லாம் அந்திகிறிஸ்துக்களை ஊக்குவித்தன. இன்றும் அந்தி கிறிஸ்து என்பவர் யார் என்றால், கிறிஸ்துவின் மனநிலைக்கு எதிரானவன் என்பதே உண்மையாகும்.
அத்தகைய ஒரு சூழல் எழுந்த காலகட்டத்தில் தான், அதாவது இறைவனின் விண்ணேற்புக்கும் அரைநூற்றாண்டுகளுக்குப் பின்பு தான், அந்தி கிறிஸ்துவைப் பற்றி யோவான் எழுதுகிறார். அது அன்றைய காலத்தில் இறைவனுக்கு எதிராக செயல்பட்டவர்கள் என புரிந்து கொள்வதே சரியாகும்.
“என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்” என்ற இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்து கொள்வோம். அவை அந்திக்கிறிஸ்துவை அடையாளம் காட்டுகின்றன என்பதை உணர்ந்து தெளிவடைவோம்.
நாம் அந்தி கிறிஸ்து என அடையாளப்படுத்தும் நபர்கள் ஒருவேளை இறைவனின் அருகில் அமரும் பாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள். அதை தந்தையே தீர்மானிக்கிறார். இயேசுவின் வலப்புறமும், இடப்புறமும் இருப்பது நமது விமர்சனங்களின் வீரியத்தைப் பொறுத்ததல்ல, தந்தையின் விருப்பத்தைப் பொறுத்தது.
நாம் கேட்கவேண்டிய கேள்வி, யார் அந்தி கிறிஸ்து என்பதல்ல ?
நான் அந்தி கிறிஸ்துவா என்பது தான்.
நமது செயல்பாடுகள் கிறிஸ்துவுக்கு எதிராய் இருந்தால் நாம் அந்திகிறிஸ்துகளே !
*
சேவியர்
#writerxavier #ChristianArticles #Antichrist
Like this:
Like Loading...