Posted in Christianity, Sunday School

SKIT : வருந்திய மகன்

Image result for prodigal son

 

காட்சி 1

( அப்பா & இளைய + மூத்த மகன் )

அப்பா : டேய்.. எங்கே ஓடறே.. இங்க வா

இளைய மகன் : அங்கும் இங்கும்… ஓடுகிறான்… அப்பா… பிளீஸ்

அப்பா : என்னடா பிளீஸ் ? ஒழுங்கா படிக்க சொல்லும்போ படிக்கிறதில்லை.. இப்போ என்ன மார்க் வாங்கியிருக்கே…

இ.ம : அப்பா நான் நல்லா தான்பா எழுதினேன்.. ஆனா மார்க் தான் கிடைக்கல

அப்பா : ஆமா.. மார்க்கை காக்கா வந்து தூக்கிட்டு போச்சு… எழுதினதுக்கு தான்டா டீச்சர் மார்க் போடுவாங்க. அவங்களே விடையையும் எழுதி, மார்க்கையும் போடுவாங்களா ?

இ. ம : நான் எழுதினதுக்கெல்லாம் மார்க் கொஞ்சம் கட் பண்ணி போட்டாங்க.. அதான் மார்க் கம்மியாச்சு.

அப்பா : சும்மா சும்மா சாக்கு போக்கு சொல்லிட்டே திரியாதே.. இங்கே வா… முதல்ல… உனக்கு ரெண்டு குடுத்தா தான் சரிப்பட்டு வருவே…

இ.ம : அடுத்த தடவை நிறைய மார்க் எடுக்கறேன்ப்பா…

அப்பா : இப்படித் தான் ஒவ்வொரு தடவையும் சொல்றேன். உன் அண்ணனைப் பாரு… ஒழுங்கா வீட்ல இருந்து படிக்கிறான். நீ தான் பகல்ல பட்டம் உடறே, நைட்ல குறட்ட உடறே.. மார்க்ல மட்டும் கோட்டை உடறே…

இ.ம : ஆமா. அண்ணனை மட்டும் ஓவரா ஏத்தி வெச்சு பேசுங்க, என்னை மட்டும் திட்டிட்டே இருங்க.

அப்பா : உனக்கு பாதி நேரம் ஸ்மார்ட் போன் நோண்டணும். போனை கீழ வெச்சா நைசா தூக்கிட்டு போயிடறே. பாஸ்வேர்ட் எது வெச்சாலும் கண்டு பிடிச்சுடறே… போன் இல்லேன்னா டிவி பாக்கறே… அப்புறம் படிப்பு எப்படி வரும்.

இ.ம : சரி.. விடுங்க. அடுத்ததடவை நான் மார்க் வாங்கலேன்னா கேளுங்க.

அப்பா : சரி.. இந்த தடவை விடறேன்… நெக்ஸ்ட் டைம் ஒழுங்கா மார்க் வரலேன்னா பாரு..

காட்சி 2

( இ.ம & நண்பன் )

நண்பன் : என்னடா..ட டல்லா இருக்கே…

இ.ம : வீட்ல செம சண்டைடா.. மார்க் மார்க் மார்க்.. படி..படி..படி.. என்னடா எல்லா அப்பாக்களும் இப்படியே இருக்காங்க..

நண் : ஆமாடா.. அவங்க படிச்சப்போ எல்லாம் ஈசியா இருந்துச்சு, இப்போ எவ்ளோ கஷ்டம்ன்னு அவங்களுக்கே தெரியல

இ : அவங்களுக்கு தெரியும்டா. இருந்தாலும் திட்டிட்டே இருக்காங்க.

நண் : எனக்கும் வீட்ல செம சண்டை தான் … நேற்றைக்கு அப்புறம் பிரண்ட் வீட்டுக்கு போயிட்டேன். கொஞ்ச நேரம் நிம்மதியா இருந்தேன். நைட் தான் வீட்டுக்கு போனேன்.

இ : லேட்டா போனதுக்கும் நல்லா கிடைச்சிருக்குமே…

நண் : ஆமாமா… அதுக்கும் செம திட்டு விழுந்துடுச்சு..

இ : வீட்டுக்கே போகாம இருந்தா தான் பெட்டர் அதுக்கு..

நண் : அதுக்கு நாம ஊரைவிட்டே எங்கேயாச்சும் போனா தான் உண்டு.

இ : போலாமா அப்படி ? உனக்கு ஏதாச்சும் இடம் தெரியுமா ?

நண் : இடமெல்லாம் தெரியாது.எங்கயாச்சும் போயிட வேண்டியது தான். கேரளால போனா சூப்பரா இருக்கும்ன்னு நினைக்கிறேன். டிவில பாத்திருக்கேன்..

இ : போவோமா அப்போ ? வீட்டு டார்ச்சர் இல்லாம இருக்கும். நாமளும் ஜாலியா இருக்கலாம்.

நண் : நீ வரேன்னா நானும் வரேன். ஆனா வீட்ல இருந்து கொஞ்சம் பணம் சுருட்டணும். இல்லேன்னா நமக்கு செலவுக்கு காசு இருக்காது.

இ : அது ஓக்கே.. நம்ம எவ்வளவு எடுக்க முடியுமோ, அவ்வளவு எடுத்துட்டு வந்துடுவோம். வேற எங்கயாச்சும் போய் பேரன்ட்ஸ் டார்ச்சர் இல்லாம ஜாலியா லைஃபை எஞாய் பண்ணலாம்..

நண் : அப்போ சூப்பர்டா.. எப்போ போலாம் ?

இ : நாளைக்கே போவோம்டா.. இருக்கிறதை நான் எடுத்துட்டு வரேன்.. நீயும் எடுத்துட்டு வா.. என்ன சொல்றே..

நண் : சூப்பர் டா.. நாளைக்கே நாம சாயங்காலம் ஒரு டிரெயினை புடிக்கிறோம்… கலக்கறோம்.

இ : டீல்… டீல்..

காட்சி 3

( இ.ம & நண்பன் )

இ : டேய்.. நாம இங்க வந்து ஒரு வாரம் ஆச்சு.. கையில எடுத்துட்டு வந்த காசெல்லாம் தீந்து போச்சு… நீ எதுவும் எடுத்துட்டு வராம வந்துட்டே.

ந : என்ன பண்ண ? வீட்ல காசே இல்ல.. தேடிப் பாத்தேன் கிடைக்கல.

இ : நான் வீட்ல இருந்து கொஞ்சம் நகை எடுத்துட்டு வந்தேன்… அதை வித்து… கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணலாம்…

ந : ஓக்கே டா.. வா.. ஏதாச்சும் நகைக்கடைக்கு போலாம்.

( ஒரு கடைக்குப் போகிறார்கள் )

இ : சார்… ஒரு நகை விக்கணும்.. என்ன விலை கிடைக்கும்ன்னு பாத்து சொல்லுங்க.

நகைக்கடைக்காரர் : நீங்க யாருப்பா ? சின்ன பசங்களா இருக்கீங்க ? எங்கேயிருந்து வரீங்க ?

இ : நாங்க வேற ஊர்ல இருந்து வரோம்.. கைல இருந்த காசு தீந்திடுச்சு அதான் நகையை விக்கலாம்ம்னு வந்தேன்.

நகை : இது எத்தனை பவுன்

இ : அதெல்லாம் தெரியல

நகை : யாரோடது இது ?

இ : என் வீட்ல உள்ளது தான்.

நகை : உண்மையைச் சொல்லு.. நீங்க எங்கே திருடிட்டு வந்தீங்க ? உங்களை போலீஸ்ல புடிச்சு குடுக்கப் போறேன்.. திருட்டுப் பசங்களா ? எங்கயிருந்தோ வந்து… நகையை திருடி என்கிட்டே கொண்டு வரீங்களா ?

( அப்போது நண்பன் ஓடிவிடுகிறான் )

இ : இல்ல.. இல்ல.. இது எங்க வீட்டு நகை தான்.

நகை : பின்னை ஏன் உன் நண்பன் ஓடிட்டான் ? அப்போ ஏதோ திருட்டுத் தனம் இருக்குன்னு தானே அர்த்தம் ?

இ : இல்லவே இல்ல.. எங்க கைல காசு இல்ல அதான்.. நாங்க இங்க வந்தோம். நம்புங்க.

நகை : நம்பணுமாம்.. நம்பணும்.. ( போனை எடுக்கிறார் )நம்பர் போடுகிறார். சார் போலீஸ் ஸ்டேஷனா ?

( இப்போது இ. ம ஓடிவிடுகிறான் )

நகை : ஹா..ஹா.. சும்மா மிரட்டினதும் பசங்க ஓடிட்டாங்க.. எப்படியும் பத்து பவுன் தேறும். இன்னிக்கு வெலக்கு எப்படியும் ஒரு மூணு லெச்சம் போகும்.. சூப்பர்…

காட்சி 4 :

( இ.ம.. ஒவ்வொரு இடமாக வேலை தேடுகிறான் )

இ.ம : ஐயா.. இங்க ஏதாச்சும் வேலை கிடைக்குமா ? என்ன வேலைன்னாலும் செய்வேன்…

பின் குரல் : வேலையா ? வேலை பாக்க உனக்கு என்ன தெரியும் ? பொடிப்பயலே.. ஓடு .. ஓடு..

இ. ம ( இன்னொரு இடம் போகிறான் ) : ஐயா.. ஐயா.. இந்த மளிகை கடையில ஏதாச்சும் வேலை இருக்கா ?

பின் குரல் : அப்போ நாங்க எல்லாம் என்ன பண்ணிட்டிருக்கோம் இங்கே.. ஓடு ஓடு..

இ.ம : ஐயா.. ஐயா… ஹோட்ட்ல்ல மணம் சூப்பரா வருதே… பசி வேற வயிற்றைக் கிள்ளுதே… ஐயா.. ஐயா… எனக்கு இந்த ஹோட்டல்ல ஏதாச்சும் வேலை கிடைக்குமா ?

பின்குரல் : வேலையா ? ஏன் வேலை தேடறே ?

இ.ம : ரொம்ப பசிக்குது.. அதான்..

பின்குரல் : பசிக்குதா.. சரி சரி.. போய் பாத்திரம் எல்லாம் கழுவி வெச்சுட்டு கொஞ்சம் பொங்கல் வாங்கி சாப்பிட்டு போ..

இ.ம : ( மனசுக்குள் ) பொங்கலா ? பொங்கல் வேண்டாம்ன்னு தட்டை தூக்கி எத்தனை கிலோ மீட்டர் தூரத்துக்கு எறிஞ்சேன்.. இப்போ அந்த பொங்கலுக்கே நான் இவ்ளோ வேலை செய்ய வேண்டியிருக்கே..

பின்குரல் : என்னப்பா.. வரியா .. போறியா ?

இ.ம : இதோ வந்துட்டேங்க… (மெதுவாக ) ஏதாச்சும் சாப்பிடவாச்சும் கிடைக்கட்டும்.

காட்சி 5 :

இ.ம தனியே உட்கார்ந்து புலம்புகிறான்.

இ : ஐயோ.. முடியாது.. முடியாது.. என்னால இனிமேலும் முடியாது. கொஞ்சோண்டு பொங்கலுக்காக அவ்ளோ பாத்திரம் கழுவ வேண்டியிருக்கு. காலைல ரெண்டு இட்லிக்காக ஹோட்டலை புல்லா தொடைக்க வேண்டி இருக்கு. மத்தியானம் கொஞ்சம் சாப்பாட்டுக்காக எல்லாரோட எச்சில் இலையையும் தூக்கி வெளியே போட வேண்டியிருக்கு.. அப்பப்பா என்னால முடியாதுப்பா..

இ : சே… எவ்ளோ ஜாலியா இருந்தேன் வீட்ல…

இ : ( தலையில் அடித்துக் கொள்கிறான் ) சே.. வீட்ல படிக்கிறது மட்டும் தான் வேலை.. இங்க அதை விட ஆயிரம் மடங்கு கஷ்டப்பட வேண்டியிருக்கு.

இ : ( தரையை மிதிக்கிறான் ) நான் வீட்லயிருந்து காசு திருடாமலாச்சும் இருந்திருந்தா திரும்பி போயிருக்கலாம். அப்பா அடிச்சாலும் எவ்ளோ பாசமா இருந்தாரு. எல்லா வீக்கெண்டும் வெளியே கூட்டிட்டு போவாரு. ஜாலியா கதை சொல்லி தருவாரு. சே.. எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்.

இ : அவருக்கு எதிரா மட்டுமா தப்பு பண்ணினேன். திருடுறது தப்புன்னு கடவுள் சொல்லியிருக்காரு. அவருக்கு எதிராகவும் இல்லையா தப்பு பண்ணினேன்.

இ : கிடைக்காது… கிடைக்காது.. எனக்கு மன்னிப்பே கிடைக்காது.. ஐயோ.. நான் இப்போ என்ன பண்ணுவேன்.

இ : பரவாயில்ல… ம்ம்ம் நான் போவேன். அப்பாகிட்டே போய்.. உண்மையை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேப்பேன். அப்பா என்ன சொல்லுவாரு ? ( யோசிக்கிறான் )

( அப்பா பின்குரல் அல்லது இ.ம அப்பாவைப் போல பேசுவது )

டேய்..என்ன தைரியம் இருந்தா இந்த வீட்டுக்குள்ளே காலெடுத்து வைப்பே… உன்னை இவ்ளோ பாசமா பாத்துகிட்டதுக்கு ஊரை விட்டே ஓடிப் போயிட்டே இல்ல… எங்க மானம் மரியாதை எல்லாம் போச்சு… இப்போ எதுக்கு வந்தே !

இ : ஐயையோ.. இது ரொம்ப கஷ்டமா இருக்கே.. ஓடிப் போனதுக்கே இப்படின்னா.. பணம் எடுத்துட்டு போனேனே.. அதுக்கு என்ன சொல்லுவாரு ?

( அப்பா பின்குரல் அல்லது இ.ம அப்பாவைப் போல பேசுவது )

நில்றா அங்கே… நான் கஷ்டப்பட்டு சேத்து வெச்ச பணத்தை எல்லாம் திருடிட்டு ஓடிட்டியா.. திருட்டுப் பயலே.. கெட்ட சகவாசம் வெக்காதே வெக்காதேன்னு சொன்னேன் கேட்டியா.. உன் அண்ணனைப் பாத்து படிச்சிருக்கலாம்ல.. வந்தது தான் வந்தே.. பணம் எல்லாம் எங்கே..முதல்ல பணத்தை எண்ணி கைல வை….

இ : ஆஹா…… இது அதை விட ரொம்ப கஷ்டமா இருக்கே.. பணத்தை எடுத்துட்டு போனதுக்கே இவ்ளோ திட்டுவாருன்னா, நகையை எடுத்துட்டு போனதுக்கு என்ன செய்வாரு ?

( அப்பா பின்குரல் அல்லது இ.ம அப்பாவைப் போல பேசுவது )

டேய்… எங்கடா போயிருந்தே… என்னடா கோலம் இது. என்ன தைரியம் இருந்தா அலமாரியை திறந்து நகையெல்லாம் எடுத்துட்டு போயிருப்பே… எங்கே வெச்சே நகையெல்லாம். டேய்… அந்த கம்பை எடு.. இவன் தோலை உரிச்சு முதல்ல நகையெல்லாம் எங்கேன்னு கேக்கணும்… இவனை வெளுத்தா தான் சரிப்பட்டு வருவான்…

( இ.ம அங்கும் இங்கும் நடக்கிறான் .. பின் பெருமூச்சு விடுகிறான் )

இ.ம : என்னதான் நடந்தாலும் சரி… நான் அப்பா கிட்டே போவேன். எப்படியாவது திருட்டு ரயில் பஸ்.. லாரி.. ஏதாச்சும் புடிச்சாச்சும் நான் கண்டிப்பா ஊருக்கு போவேன். அடச்சே.. இனிமே இந்த திருட்டு வேலையே இருக்கக் கூடாது லைஃப்ல.. ரயில், பஸ்ஸுக்கு டிக்கெட் எடுக்க காசு இல்லேன்னா, நான் ஏதாவது லாரி புடிச்சோ, யார் கிட்டேயாவது லிஃப்ட் கேட்டோ போயிடுவேன். இனிமே எந்த திருட்டு வேலையுமே வேண்டாம். போயிட்டு என்ன பேசலாம்… ம்ம்ம்….

இ.ம : அப்பா.. என்னை மன்னிச்சுடுங்க.. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். உங்க பணம் நகையெல்லாம் திருடிட்டேன். உங்க கிட்டே சொல்லாம ஓடிப்போயிட்டேன். உங்க மகனா இருக்கவே எனக்கு தகுதியில்லை. உங்க வீட்ல ஒரு வேலைக்காரனாவாச்சும் என்னை சேத்துக்கோங்க… பிளீஸ்… உங்க வீட்ல வேலைக்காரனா இருக்கிறது கூட மிகப்பெரிய நிம்மதி தான்…. ( மெதுவாக ) இப்படி சொல்லலாமா ? இல்லை… இப்படி சொல்லலாமா ?

இ.ம : அப்பா.. நான் நீங்க சொன்னதையும் கேக்கல, கடவுள் சொன்னதையும் கேக்கல. ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டேன். தயவு செய்து மன்னிச்சுடுங்க. உங்க மகனா இருக்க எனக்கு தகுதியே இல்லை. ஒரு வேலைக்காரனா சேத்துகிட்டு சாப்பாடு போடுவீங்களாப்பா.. பிளீஸ் ?

இ : ( கொஞ்சம் நிம்மதி முகத்துடன் ) ஆமா.. அதான் சரி… நான் கண்டிப்பா போவேன். மன்னிப்பு கேப்பேன்.

இ.ம : அப்பா மன்னிப்பாரா ? ம்ம்ம்.. சே… கண்டிப்பா மன்னிப்பாரு. அவரு எவ்ளோ அன்பானவரு. ஒரு தடவை கால்ல அடிபட்டு நான் அழுதப்போ அவரு கண்ணும் கலங்கிடுச்சு, ஓடி வந்து தூக்கிட்டாரு. ஒரு தடவை ஆஸ்பிட்டல்ல நான் உடம்பு சரியில்லாம இருந்தப்போ நைட் புல்லா தூங்காம கைய புடிச்சுட்டே பக்கத்துல உக்காந்திருந்தாரு… சின்ன வயசுல எப்பவும் என்ன தோள்ல இருந்து அவர் கீழே விடறதே இல்லை.. அவரு ரொம்ப அன்பானவரு. நிச்சயம் மன்னிப்பாரு… அவருக்கு என்மேல ரொம்ப பிரியம்.. நான் தான் அதை உதாசீனப்படுத்திட்டேன்…

( போகிறான் )

காட்சி 6

( ரொம்ப சோர்வுடன் வீட்டை நோக்கிப் போகிறான் இ.ம அப்பா அவனைப் பார்த்து ஓடி வருகிறார் )

அப்பா : ஓ.. மகனே.. என்னடா ஆச்சு.. எங்கே போயிருந்தே…. உனக்கு ஒண்ணும் ஆகலையெ.. நாங்க பதறிப் போயிட்டோம்.. போலீஸ்ல எல்லாம் கம்ப்ளயின்ட் குடுத்தோம்…

இ.ம : அப்பா. ஐம். சாரி.. என்னை மன்னிச்சிடுங்க… நான் தான்..

அப்பா : அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்பா…உன்னை பாத்ததுல எவ்ளோ சந்தோசம் தெரியுமா ? சாப்பிட்டியா ?

இ.ம : இல்லப்பா… பசிக்குது…

அப்பா : ஐயோ.. பசியில வந்திருக்கியா… நீ வீட்ல போய் குளிச்சிட்டிரு.. இதோ டாடி ஸ்விகி ல பிரியாணி ஆர்டர் பண்றேன்.. உனக்கு புடிச்ச மட்டன் பிரியாணி..

இ.ம : அப்பா..

அப்பா : நீ எதுவும் சொல்ல வேண்டாம்பா.. நீ எனக்கு திரும்ப கிடைச்சுட்டியே.. அதுவே போதும்பா… ரெண்டு வாரமா நான் ஆபீசுக்கே போகல… உன்னைப் பாத்ததுல தான் உயிரே வந்திருக்கு… நீ முதல்ல போய் குளி.. அப்புறம் சாப்பிடுவோம்..நடந்த எல்லாத்தையும் மறந்துடு.. ரிலாக்ஸா இரு.

( இளைய மகன் உள்ளே போகிறான் )

அண்ணன் : அப்பா இது உங்களுக்கே நல்லாயிருக்கா…..

அப்பா : என்னப்பா சொல்றே.. தம்பி வந்திருக்கான்.. முகத்துல சந்தோசத்தைக் காணோமே என்னாச்சு ?

அண்ணன் : வீட்ல இருந்த நகையெல்லாம் திருடிட்டு ஊர் சுத்த போன பையன் வந்த உடனே ஸ்விகில பிரியாணி ஆர்டர் பண்றீங்க. . வீட்ல இருந்து, உங்க பேச்சைக் கேட்டு, நல்ல பிள்ளையா படிச்சிட்டிருந்த எனக்கு ஒண்ணுமே இல்லையா ?

அப்பா : என்னப்பா பேசறே.. தம்பியை காணொம்ன்னு நாம எவ்ளோ தவிச்சுப் போயிட்டோம். அவன் திரும்பி வந்திருக்கான். செத்துப் பொழச்சு வந்திருக்கான். அவனை நாம தானேப்பா கவனிக்கணும்.

அண்ணன் : அப்போ கூடவே இருக்கிறவனுக்கு மரியாதை இல்லையா ?

அப்பா : அப்படியெல்லாம் இல்லப்பா.. எனக்குள்ள எல்லாமே உங்களுக்குரியது தானே. இப்போ நாம தம்பியை கவனிப்போம். பாவம் எவ்ளோ நாள் சாப்டாம இருந்தானோ. நாம எல்லாரும் சேந்து இருக்கிறது தானேப்பா சந்தோசம். நீங்க ரெண்டு பேரும் எனக்கு ரெண்டு கண்ணுங்க மாதிரி.. எனக்கு ரெண்டு பேருமே வேணும்ல.. வா.. எல்லாரும் சேர்ந்து சாப்டு எவ்ளோ நாளாச்சு… கோச்சுக்காம வா…

( அப்பாவும் அண்ணனும் உள்ளே போகின்றனர் )

பின் குரல்

தந்தையின் அன்பு மாறாதது. பிள்ளைகள் எவ்வளவு தான் தவறு செய்திருந்தாலும் மனம் திரும்பி தந்தையிடம் வரும்போது தந்தையின் கரம் அரவணைக்கத் தவறாது.மண்ணகத் தந்தையே அப்படியெனில் விண்ணகத் தந்தை எப்படியிருப்பார் ! என்னிடம் வருபவர்களை நான் புறம்பே தள்ளி விடுவதில்லை என்றவர் அவர். அவரது அன்பை புரிந்து கொள்வோ. பாவம் செய்து வழி விலகிப் போனாலும் கவலையில்லை. இன்றே நமது தவறை உணர்வோம். கடவுளிடம் திரும்ப வருவோம். நம் பாவங்களை மன்னித்து நம்மை ஏற்றுக் கொள்ள அவர் ஆணிகள் பட்ட கரத்தை ஆவலாய் விரித்துக் காத்திருக்கிறார்.

Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 29 யோவேல்

29

யோவேல்

Image result for book of Joel

யோவேல் இறைவாக்கினரைக் குறித்து விவிலியம் அதிகமாகப் பேசவில்லை. அவர் பெத்துவேல் என்பவரின் மகன் என்பதைத் தவிர. இருவருடைய பெயரிலும் ‘கடவுள்’எனும் பொருள் இருக்கிறது, எனவே அவர்கள் ஒரு ஆன்மீகக் குடும்பத்தில் பிறந்திருக்க வாய்ப்பு உண்டு.

யோவேல் நூல் கிமு 9ம் தூநூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என இறையியலார்கள் நம்புகின்றனர். யோவேல் என்பதற்கு ‘யாவே தான் கடவுள்” என்பது பொருள். இந்த நூலில் மூன்று அதிகாரங்களும், எழுபத்து மூன்று வசனங்களும், இரண்டாயிரத்து முப்பத்து நான்கு வார்த்தைகளும் உள்ளன. யூதாவில் ஆரம்பகாலத்தில் இறைவாக்குரைத்தவர் யோவேல் இறைவாக்கினர்.

‘ஆண்டவரின் நாள்’ எனும் பதத்தை பயன்படுத்திய யோவேல் அதை மிகப்பெரிய எச்சரிக்கையாய் மக்களுக்குக் கொடுத்தார். தீர்ப்பு என்பதும் கடவுளின் நியாயமும் வேற்றின மக்கள் மீதல்ல, இஸ்ரேல் நாட்டின் மீதே விழும் எனும் எச்சரிக்கையை முதன் முதலில் விடுத்தவர் அவர் தான். ‘ஆண்டவரின் நாள்’ என்பது வெளிச்சத்தின் வரவல்ல, இருளின் வரவு. என அவரது இறைவாக்கு அதிர்ச்சியளிக்கிறது.

பல கிறிஸ்தவர்கள் தாங்கள் விண்ணகம் செல்வது சர்வ நிச்சயம் என்றும், எப்படிப்பட்ட பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும் கடவுள் கை விடமாட்டார் என்றும் நினைக்கின்றனர். அவர்களுக்கு யோவேலின் எச்சரிக்கை என்னவென்றால், ‘ஆண்டவரின் நாள்’ உங்களுக்கு இருளாய் வரும் என்பதே !

வெட்டுக்கிளிகளால் நாடு அடையப்போகும் அழிவை யோவேல் இறைவாக்கினர் முன்னுரைத்தார். நாட்டில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இருக்கும். உண்பதற்கும் எதுவுமின்றி எல்லாம் அழிக்கப்படும். என்பதே அவரது வார்த்தை. சுமார் 60 கோடி வெட்டுக்கிளிகள், அறுநூற்று நாற்பது கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் விஸ்வரூப வடிவமாய் நாட்டில் நுழைந்தால் ஒரு நாளைக்கு அவை தின்று குவிக்ககூடிய தானியங்கள் எண்பதாயிரம் டன் ! என்கிறது ஒரு கணக்கு.

வெட்டுக்கிளிகள் இறைவனின் தீர்ப்பாய் வருவதை விடுதலைப்பயணம் நூலில் மோசேயின் வாழ்க்கையில் வாசிக்கலாம். இறைவன் அனுப்பிய பத்து வாதைகளில் எட்டாவது வாதை வெட்டுக்கிளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கையாகவே நடக்க சாத்தியமுள்ள விஷயங்கள் இயற்கைக்கு மாறான அளவுக்கு விஸ்வரூபமாக நடக்கும் போது இறைவனின் கரம் அதில் இருப்பதை நாம் உணர முடியும். இந்த வெட்டுக்கிளிகளின் வருகையும் அப்படிப்பட்டதே.

இயற்கை பேரழிவுகள், இடர்கள் எல்லாமே இறைவன் நமக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

யோவேல் இறைவாக்கினரின் வெட்டுக்கிளிகள் உவமை இன்னொரு விஷயத்தையும் எடுத்துரைக்கிறது. அது பாபிலோனியர்களின் படையெடுப்பு. வெட்டுக்கிளிகளைப் போல படையெடுத்து வருகின்ற வீரர்களை யோவேல் பதிவு செய்கிறார். பாபிலோனியர்களின் படையெடுப்பு தான் வெட்டுக்கிளிகளைப் போல அனைத்தையும் அழித்து நகர்கிறது. ஒரு குழந்தையோ, ஒரு உயிருள்ள கால்நடையோ கூட தப்பவில்லை என்பது துயரமான வரலாறு.

யோவேல் நூலின் இரண்டாம் பாகம் மக்கள் மனம் திரும்ப வேண்டும் எனும் சிந்தனையின் அடிபடையில் அமைந்துள்ளது. மக்கள் மனம் திரும்பாவிடில் இறைவனின் தண்டனை மிக அதிகமாய் இருக்கும் என்பதை அவரது வார்த்தைகள் எடுத்தியம்புகின்றன.

மக்கள் யோவேலின் இறைவார்த்தைக்குச் செவிமடுத்து மனம் திரும்பவில்லை. அதை விட நல்லது மது அருந்தி மயங்கிக் கிடப்பது என சென்று விட்டனர். இப்போது இரண்டாம் முறையாக யோவேல் அழைப்பு விடுக்கிறார்.

“உங்கள் உடைகளையல்ல, இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்” என்பது புதிய அறைகூவலாக வருகிறது. வெளிப்படையான அடையாளமல்ல, உள்ளார்ந்த மாற்றமே தேவையானது. என்பதே அதன் பொருள்.

யோவேல் இறைவாக்கினர் மனம் திரும்புதலை மகிழ்ச்சியின் அடையாளமாய் கூறுகிறார். இழந்து போனவை திரும்பக் கிடைக்கும் எனும் நம்பிக்கையின் வார்த்தையையும், ஆறுதலின் வார்த்தையையும் தருகிறார்.

எனது வார்த்தைகளைக் கேட்டு நடந்தால் எல்லாரையும் ஆசீர்வதிப்பேன் என இறைவன் வாக்களித்தார். “நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.
அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும்
என் ஆவியைப் பொழிந்தருள்வேன்” என்றுரைத்தார் அவர்.

ஆண்டவரின் நாள் எப்படி இருக்கும், அதற்கு என்ன அறிகுறி தெரியும் என்பதைப் பற்றி யோவேல் உரைத்தது மிக முக்கியமானது. “எங்குமே, இரத்த ஆறாகவும் நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும். அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்; நிலவோ இரத்தமாக மாறும்” என்றார் அவர்.

மீட்பின் நம்பிக்கையாக அவரது வார்த்தை “ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்” என ஒலிக்கிறது.

யோவேல் நூலிலுள்ள தீர்க்கதரிசனங்களில் சில நிறைவேறிவிட்டன. இயேசுவின் இரண்டாம் வருகை மற்றும் இறுதி நியாயத் தீர்ப்புடன் மற்றவையும் முடிவு பெறும்.

மிகவும் சுருக்கமான இந்த நூல் மிகவும் பரந்துபட்ட இறை சிந்தனைகளை நமக்குத் தருகிறது.

Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா

28
ஓசேயா

Image result for book of hosea

வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இவர் இறைவாக்கு உரைத்து வந்தார். வடநாடு வீழ்ச்சியுறுவதற்கு முன் கடைசியாக இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஓசேயா தான்.

ஓசேயாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது. கண்டித்தும், தண்டித்தும் மக்களை அழைத்த இறைவன் கடைசியாய் ஒருமுறை மக்களை இதயம் கசியக் கசிய அழைக்கின்ற நூல் இது எனலாம். ஓசேயா என்பதற்கு மீட்பு என்று பொருள். இதில் பதினான்கு அதிகாரங்களும், 197 வசனங்களும், 5175 வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. அவரது நாற்பது ஆண்டு கால இறைவாக்கு உரைத்தலை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது.

அன்பும் நம்பிக்கையும் கலந்த உறவை இறைவன் எதிர்பார்க்கிறார். மணப்பெண்ணான இஸ்ரேலோடு இறைவனுக்கு இருக்கின்ற உடன்படிக்கையாக இந்த நூல் அமைகிறது.

இறைவனுக்கும், மணப்பெண்ணான இஸ்ரேலுக்கும் இருக்க வேண்டிய அன்பும், நம்பிக்கையும் வலுவிழந்தபோது ஓசேயா இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தார். “இணைபிரியாமல் இருந்த நமது அன்புறவு என்னவாயிற்று ? ” என்பது அவரது கேள்வியாய் இருந்தது.

இறைவனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இருக்கும் திருமண உறவின் வலிமையையும், வலியையும் புரிந்து கொள்ள இறைவன் இறைவாக்கினர்களை பல்வேறு கடின சூழ்நிலைகளுக்குள் வழி நடத்துவது வழக்கம். எரேமியாவை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றார் இறைவன். இஸ்ரேல் இல்லாத வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை மனைவி இல்லாத எரேமியா புரிந்து கொண்டார்.

எசேக்கியேலின் மனைவி இறந்து விடுகிறார். ஆனால் எசேக்கியேல் அழக்கூடாது என இறைவன் கூறுகிறார். காதல் மனைவி இழந்து போகும் துக்கம் எவ்வளவு கடினமானது என்பதை எசேக்கியேல் உணர்ந்தார். அதன் மூலம் வழிவிலகும் யூதாவின் செயல் இறைவனை எவ்வளவு கலங்கடித்தது என்பதைப் புரிந்து கொள்கிறார்.

அதே போல ஓசேயாவுக்கும் ஒரு புதிய படிப்பினையைக் கொடுக்கிறார். அதன்படி ஒரு விலைமாதுவை திருமணம் செய்து கொள்ள இறைவன் அவரிடம் சொல்கிறார். அவரும் அப்படியே செய்கிறார். அவளுடன் அன்பாய் குடும்பம் நடத்துகிறார். அவளுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அதில் ஒன்றேனும் வழிதவறிப் பிறந்த குழந்தையாய் அமைந்து விடுகிறது.

பின் ஓசேயாவின் மனைவி அவரை விட்டு விட்டு மீண்டும் பழைய விலைமகள் தொழிலுக்கே செல்கிறாள். ஓசேயாவோ அவளை தேடிக் கண்டுபிடித்து மீட்டுக் கொண்டு வருகிறார். சில காலத்துக்குப் பின் இருவரும் மீண்டும் வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.

ஓசேயாவின் மனைவி பாவ வாழ்க்கையில் புரண்டு கிடக்கிறார். ஓசேயா அவளை மணம் முடித்த பின்னும் அவருக்கு உண்மையாய் இருக்கவில்லை. அவளுடைய அன்பு போலித்தனம் மிகுந்ததாய் இருந்தது. மீண்டும் பாவ வழிக்கே திரும்பிய அவளை ஓசேயா மீட்கிறார். இஸ்ரேல் நாட்டை ஓசேயாவின் மனைவியோடு இறைவன் ஒப்பிடுகிறார்.

ஓசேயாவோ தொடர்ந்து அன்பு செலுத்துகிறார். கண்டிப்பை வெளிப்படுத்தினாலும் மனைவியோடு அன்பாக வாழ்கிறார். இறைவனின் அன்பை இத்துடன் ஒப்பிடுகிறார் இறைவாக்கினர்.

ஓசேயாவின் நூல் , ஏழு வகையான பாவங்களை பட்டியலிடுகிறது.

1. தங்கள் திருமண வாழ்க்கையில் மக்கள் உண்மையற்றவர்களாக இருந்தார்கள். இறைவனோடும் அவ்ர்கள் உண்மையான அன்பு வைக்கவில்லை.

2. இறைவனை மறந்து, அவரிடம் ஆலோசனை கேட்காமல் தாங்களாகவே முடிவெடுத்து வந்தனர். தங்கள் அரசனையும், ஆள்வோர்களையும் தேர்ந்தெடுக்கையில் இறைவனை அவர்கள் நினைக்கவில்லை.

3. மக்கள் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்கவில்லை. ஒருவரை மற்றவர் குறைகூறியும், புறங் கூறியும் வாழ்ந்து வந்தார்கள்.

4. பிற இன மக்களின் கடவுள்களை வழிபட்டு வந்தனர்.

5. தகாத உறவுகளின் பாதையில் நடந்து தங்களுடைய ஆன்மீக வாழ்க்கையைக் கறைபடுத்திக் கொண்டனர்.

6. இறைவனின் அறிவுரைகளை நிராகரித்து வாழ்ந்தனர்.

7. நன்றியில்லாத மக்களாய் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

மக்களுடைய அரைவேக்காட்டுத் தனத்தை ஓசேயா தனது உவமைகளின் மூலமும், உரைகள் மூலமும் தொடர்ந்து விளக்குகிறார். ஒருமுறை கேக் செய்வதைப் பற்றி சொல்லி அதை விளக்குகிறார். ஒரு புறம் மட்டும் வெந்து போகின்ற கேக்கானது மறு மக்கத்தில் பச்சையாக இருக்கும். அதை யாரும் சாப்பிட முடியாது. அதுபோல இஸ்ரேல் மக்களின் வாழ்க்கை பயனற்றதாக இருக்கிறது என்று ஒரு முறை விளக்கினார்.

வேடனின் வலையில் சிக்கிக் கொண்ட புறாவைப் போல இஸ்ரேல் இருக்கிறது என்று இன்னொரு முறை குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் இந்த நிலமைக்குக் காரணமாக ஓசேயா நான்கு வித மக்களைக் குறிப்பிடுகிறார். அதில் கடவுளை அறியாத குருக்கள், போலித் தீர்க்கத் தரிசிகள், இறைவனின் வழியில் நடக்காத மன்னர்கள், ஏழைகளை ஒடுக்கும் முதலாளிகள். இந்த நாலு வகையினரும் தான் இஸ்ரயேலின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம்.

ஓசேயா நூல் வியப்பான ஒரு ஆன்மீக அனுபவம்.

Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்

27
தானியேல்

Image result for book of daniel

விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம்.

இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட்சியில் இருக்கிறார்.

தானியேல் பாபிலோனில் இறைவனுக்கு சாட்சியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார், அங்குள்ள மக்களையும் இறைவனின் அருஞ்செயல்களைக் காண வைக்கிறார். மக்கள் இறைவனை நாடி வர காரணமாகிறார் என்பது இந்த நூலின் ஒரு வரிச் செய்தி எனலாம்.

எபிரேய மொழியிலும், அரேமிய மொழியிலும், கிரேக்க மொழியிலும் என மூன்று மொழிகளில் கலந்து எழுதப்பட்ட நூல் தானியேல். விவிலியத்தில் மொத்தம் 735 எதிர்கால தீர்க்கதரிசனங்கள் உண்டு. அதில் 166 தானியேல் நூலில் இடம்பெற்றிருக்கிறது என்பது வியப்பான விஷயம். இதில் பெரும்பாலானவை குறியீடுகள்.

கிமு 605, 606 களில் தானியேல் பாபிலோனுக்கு கொண்டு வரப்படுகிறார். அரசவையில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரும் அவருடைய மூன்று நண்பர்களும் அங்கே பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு பாபிலோனிய பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயர்களை மாற்றிக் கொண்டாலும் இறைவனை மாற்றிக் கொள்ளவில்லை அவர்கள். இறைவன் தந்த கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்கின்றனர்.

இந்த நூல் தானியேலின் 75 ஆண்டு கால வாழ்க்கையையும், இஸ்ரேல் மக்களின் 440 ஆண்டு கால வரலாற்றையும் பதிவு செய்கிறது. தானியேல் நூலில் பன்னிரண்டு அதிகாரங்கள் உள்ளன. முதல் ஆறு அதிகாரங்களும் எளிமையாகவும், வியப்பூட்டும் அற்புதங்களாலும் நிரம்பியிருக்கின்றன.

ஒரு நிகழ்வில் மன்னன் நெபுகத்நேசர் ஒரு கனவு காண்கிறார். பொதுவாக கனவுக்கு விளக்கம் கேட்கத் தான் அறிஞர்களை அழைப்பார்கள். இங்கே கொஞ்சம் வித்தியாசமாக மன்னன் ஒரு கட்டளை இடுகிறார். அறிஞர்கள் மன்னர் கண்ட கனவையும் சொல்ல வேண்டும், அதன் பலனையும் சொல்ல வேன்டும். யாராலும் விடுவிக்க முடியாத இந்தப் புதிரை தானியேல் விடுவித்தார். கனவையும் சொல்லி அதன் பலனையும் அவர் விளக்கினார். அந்தக் கனவு கடவுளால் நெபுகத்நேசருக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை. அரசுகளை அமைப்பதும், கலைப்பதும் என்னால் ஆகும் என்பதை இறைவன் இந்த கனவின் மூலம் மன்னருக்குப் புரிய வைக்கிறார்.

இன்னொரு நிகழ்வில், மன்னன் தன்னுடைய பொற்சிலை ஒன்றை வடிக்கிறான். அது 90 அடி உயரமும், ஒன்பது அடி அகலமும் உடையது. அதை மக்கள் எல்லோரும் வணங்க வேண்டும் என்பது அரச கட்டளை. எல்லோரும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுகிறார்கள். ஆனால் தானியேலின் நண்பர்கள் “சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ” ஆகியோர் மன்னனை வணங்காமல் கடவுளை மட்டுமே வணங்குகின்றனர். அதனால் கோபமுற்ற மன்னன் அவர்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பை வழங்குகிறார். அவர்களோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

வழக்கத்தை விட ஏழு மடங்கு சூடான நெருப்புச் சூளையில் அவர்கள் எறியப்பட்டனர். அவர்களை நெருப்பில் எறியச் சென்றவர்கள் அந்த வெப்பத்தில் கருகி இறந்தனர். ஆனால் நெருப்புக்குள் விழுந்தவர்களோ நெருப்பின் நடுவே இறைவனோடு உலவினார்கள். அதிர்ந்து போன மன்னன், இவர்களின் கடவுளே உண்மைக் கடவுள் என பிரகடனம் செய்தான்.

இன்னொரு கனவில் ஒரு மிகப்பெரிய மரம் வானளாவ வளர்ந்து நிற்கிறது. எல்லா வித விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அது நிழலும், கனியும் தருகிறது. அது பின்னர் கடவுளின் தூதனால் வெட்டி வீழ்த்தப்படுகிறது. ஆனாலும் அதன் அடிமரம் மட்டும் விட்டு வைக்கப்படுகிறது. ஏழு ஆண்டுகள் அது அப்படியே இருக்கும் என உரைக்கப்படுகிறது. அதன் விளக்கத்தையும் தானியேலால் மட்டுமே கூற முடிந்தது.

கனவின் படி மன்னனே அந்த மரம். மன்னன் வீழ்வான். ஏழு ஆண்டுகள் அவன் விலங்கைப் போல அலைவான். புல் தின்று, பனியில் நனைந்து ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவனாய் வாழ்வான். ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அரசு அவனுக்குக் கிடைக்கும். தானியேலின் விளக்கத்தின் படியே அனைத்தும் நடந்தன.

இன்னொரு முக்கியமான நிகழ்வில் மன்னனை வழிபட மறுத்த தானியேல் சிங்கத்தின் குகையில் வீசப்படுகிறார். அப்போது மன்னனாய் இருந்தவர் தாரியு. தானியேலின் வயது 90 ! தானியேல் சிங்கத்தின் குகைக்குள் அமைதியாய் துயில்கிறார் சிங்கங்கள் அவரை எதுவும் செய்யவில்லை. மறுநாள் எல்லோரும் வியப்படைகின்றனர். தானியேலின் மீது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்போது குகையில் எறியப்படுகின்றனர். தரையை அடையும் முன் சிங்கங்கள் அவர்களைக் கவ்விக் கிழிக்கின்றன !

இரண்டாம் பாகமான ஏழு முதல் 12 வரையிலான அதிகாரங்கள் கொஞ்சம் கடினமான குறியீடுகளால் ஆனது. அவை மிகப்பெரிய இறையியல் சிந்தனைகளும், துல்லியமான எதிர்கால தீர்க்கத்தரிசனங்களும் அடங்கியது.

மொத்தத்தில், தானியேல் நூல் இறைவனின் வலிமையையும், திட்டங்களையும் விளக்கும் ஒரு அற்புதமான பெட்டகம்.

Posted in Christianity, Sunday School

SKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ

வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இறைவனே

Image result for daniels friends

காட்சி 1

(மன்னர் நெபுகத்நேசர் அமர்ந்திருக்கிறார். அருகில் அமைச்சர் )

மன்னர் : அமைச்சரே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா ? எல்லோரும் வந்திருக்கிறார்களா ?

அமைச்சர் : எல்லாரும் வந்திருக்கிறார்கள் அரசே.

மன்னர் : அவர்கள் தயாரா ? அவர்களுக்கு நல்ல ஆடைகள் கொடுத்து அரச மரியாதையுடன் அழைத்து வரவேண்டும்.

அமைச்சர் : அவர்கள் தயாராக இருக்கிறார்கள் அரசே. தாங்கள் அழைத்ததும் இங்கே வருவார்கள்.

மன்னர் : நல்லது. நல்லது.

மன்னர் : என் முன்னால் கூடியிருக்கும் உங்களுக்கெல்லாம் ஒரு அதிசயத்தைக் காட்ட விரும்புகிறேன். அதற்காகத் தான் எல்லோரையும் இங்கே கூடி வரச் செய்திருக்கிறேன். நம்ப முடியாத, ஆனால் நம்பியே ஆகவேண்டிய நிகழ்ச்சி இது.

அமைச்சரே.. அவர்களை வரச் சொல்லுங்கள்.

( அவர்கள் மூவரும் வருகின்றனர் )

மன்னர் : இவர்கள் தான் அந்த அதிசயப் பிறவிகள். நேற்று இவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி இவர்கள் கூறுவார்கள்.

விருந்தினர் ஒருவர் : இவர்கள் அதிசயப் பிறவிகளா ? இவர்களைத் தான் நமக்குத் தெரியுமே ? யூதா நாட்டிலிருந்து அடிமைகளாய் கொண்டு வரப்பட்டவர்கள். உமது கருணையினால் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.

மன்னர் : யூதா நாட்டு மக்கள் தான். ஆனால் ரொம்ப வித்தியாசமானவர்கள்.

விருந் : ஆம். அதனால் தானே நீங்கள் அவர்களுக்கு உயர் பதவிகள் கொடுத்து கௌரவித்திருக்கிறீர்கள். பாபிலோனில் பிற பகுதிகளுக்கு பொறுப்பாளர்களாய் ஆக்கியிருக்கிறீர். இவர்கள் பெயர்கள் கூட சாத்ராக், மேஷாக், ஆபெத்நெகோ தானே ? அப்படி என்ன அதிசயப் பிறவிகள் இவர்கள் ?

மன்னர் : நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான். நேற்று இவர்கள் நெருப்பில் எறியப்பட்டார்கள் என்பது தெரியுமா ?

விருந் : என்னது நெருப்பில் எறியப்பட்டார்களா ? அப்படியானால் இவர்கள் ஆவிகளா ( அய்யோ.. ஆனா கால் இருக்கே )

மன்னர் : ஹா..ஹா.. அவர்களே பேசட்டும்…( அவர்களைப் பார்த்து ) . நீங்களே சொல்லுங்கள்.

சாத்ராக் : மன்னரே வணக்கம். உமக்கே தெரியும், எங்களுடைய வேலையில் நாங்கள் குறை வைத்ததில்லை. கடமைகளிலிருந்து தவறியதில்லை. உமக்குரிய மரியாதையை உமக்குத் தர தவறியதே இல்லை.

மேஷாக் : ஆனால்.. கடவுளைப் பொறுத்தமட்டில், எங்களுடைய வாழும் கடவுளை எங்கும் விட்டுக் கொடுப்பதும் இல்லை. யாவே யைத் தவிர எந்தக் கடவுளையும் நாங்கள் வணங்குவதில்லை. இதை நாங்கள் சிறு வயது முதலே கடைபிடித்து வருகிறோம்.

ஆபெத் : அப்போது தான் பொற்சிலை ஒன்றை நீங்கள் நிறுவினீர்கள். அறுபது முழ உயரம், ஆறு முழ அகலம் என அது பிரமாண்டமாய் இருந்தது. தூரா சமவெளியில் அதை நிறுவினீர்.

சாத்ராக் : உண்மையிலேயே அது பிரமிப்பூட்டும் அளவிலான சிலை தான். ஆனால் அது தெய்வமில்லையே ! கைகளால் செய்யப்படும் எதுவும் தெய்வங்களல்லவே. ஆனால் மன்னரே, நீரோ அதை வணங்கச் சொன்னீர்.

மேஷாக் : அதுவும் எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் போன்ற கருவிகளெல்லாம் இசைக்கத் துவங்கும் பொழுதில் தாழ விழுந்து வணங்கச் சொன்னீர். அதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

ஆபெத் : மன்னருடைய கட்டளையா ? கடவுளுடைய கட்டளையா எனும் கேள்வி எழும்போது கடவுளுடைய கட்டளை என முடிவெடுப்பது தானே நல்லது. அதனால்தான் அரசே நாங்கள் அதை வணங்கவில்லை.

சாத்ராக் : இது மன்னரை அவமானப்படுத்தும் நோக்கமல்ல. எங்கள் கடவுளை மகிமைப்படுத்தும் நோக்கம் மட்டுமே. மன்னர் எங்கள் பெருமதிப்புக்குரியவர், ஆனால் கடவுள் எங்கள் வணக்கத்துக்கும், மகிமைக்கும், தொழுதலுக்கும் உரியவர்.

விருந்தினர் : நில்லுங்க..நில்லுங்க..நில்லுங்க… இந்த சாம்ராஜ்யத்தின் மாபெரும் மன்னர் ! படைகளுக்கு அஞ்சாதவர், பகைவரை துயில விடாதவர் அவருடைய கட்டளையை மீறினீர்களா ? என்ன தைரியம் உங்களுக்கு ! உங்களை கொலை செய்வது தான் சரியானது.

சாத்ராக் : ஐயா.. மன்னிக்க வேண்டும். வாழும் கடவுளை வழிபடாமல் எப்படி வெறும் சிலையை நாங்கள் வழிபட முடியும் ? அந்தச் சிலைகளால் எதுவும் செய்ய முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.

விருந்தினர் : என்ன தெரியும் உங்களுக்கு ? மன்னரின் கடவுளை அவமானப்படுத்துவது உங்கள் நோக்கமா ?

சாத்ராக் : அவமானப்படுத்துவதல்ல, விலகி நிற்பதே எங்கள் விருப்பம். உங்கள் சிலைகளின் நாக்குகள் மனிதர்களால் உருவானவை, அவற்றால் பேச முடியுமா ? பொய் வெள்ளியால் புனையப்பட்டாலும் அவை போலியானவை தானே.

மேஷாக் : நீங்கள் என்னதான் புனிதமாய் ஒரு சிலையைச் செய்தாலும், அதை பூச்சி அரித்தாலோ, துரு பிடித்தாலோ அந்தத் தெய்வங்களால் அதைத் தட்டி விட முடியுமா ?

ஆபெத் : பட்டாடைகளை அவை அணிந்திருந்தாலும், புழுதி படிந்த முகத்தை அவற்றால் துடைத்து விட முடியுமா ? மனிதர்கள் தானே துடைத்து விட வேண்டும் ?

சாத்ராக் : அந்தச் சிலை மனிதர்களைக் காப்பது இருக்கட்டும், தங்களையே காத்துக் கொள்ள அவற்றால் முடியுமா ? யாரேனும் கவர்ந்து சென்றால் சண்டையிட்டு தன்னை மீட்டுக் கொள்ளுமா ?

மேஷாக் : நூற்றுக்கணக்கான விளக்குகளை அவற்றின் முன்னால் ஏற்றி வைத்தாலும், ஒன்றையேனும் அவற்றால் காண முடியுமா ?

ஆபெத் : பலியிலால் எழுகின்ற புகை அவற்றின் மேனியில் படிகிறதே, பறந்து திரிகின்ற வவ்வால் கூட அதன் தோளில் அமர்ந்து எச்சமிடுகிறதே, புழுக்கள் கூட உள்ளே புகுந்து அரித்து அழிக்கிறதே.. எதையேனும் அந்தச் சிலையினால் தடுக்க முடியுமா ?

சாத்ராக் : எதையுமே அவற்றால் செய்ய முடியாது. படைப்புக்கும், படைத்தவருக்கும் உள்ள வித்தியாசம் இது தான். காலில்லாத சிலைகளை மனிதர்களே தூக்கிச் சுமக்க வேண்டும். கீழே விழுந்தால் கூட அவற்றால் எழுந்து நிற்க முடியாது, மனிதர்களே அவற்றைத் தூக்கி நிறுத்த வேண்டும். அந்த சிலையின் மேலுள்ள அணிகலன்களை யாரேனும் திருடிச் சென்றால் கூட அதற்குத் தெரியாது. எனவே தான் அவற்றை நாங்கள் வழிபடவில்லை.

மேஷாக் : வார்க்கப்படும் போதும் உணர்வின்றிக் கிடந்தவை அவை. வழிபடும் போதும் உணர்வின்றிக் கிடப்பவை அவை. அவற்றை நாங்கள் ஏன் வழிபடவேண்டும். எனவே தான் அதை நிராகரித்தோம்.

ஆபெத் : இறப்பிலிருந்து ஒருவரை விடுவிக்கவோ, நோயிலிருந்து ஒருவரை மீட்கவோ, கைம்பெண் ஒருத்திக்கு இரக்கம் காட்டவோ அவற்றால் முடியாது. எனவே தான் அவற்றை வழிபடவில்லை.

விருந்தினர் : இவ்வளவு பேசும் உங்களை கொல்லாமல் எப்படி விட்டு வைத்திருக்கிறார் மன்னர் ? மன்னரும் யூதராக மாறிப் போனாரோ ?

மன்னர் : அவர்கள் சிலையை வழிபடவில்லை என்பதால் கடும் கோபம் கொண்டேன். அவர்களை அழைத்து மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தேன். அவர்கள் வளைந்து கொடுக்கவில்லை, அவர்களுடைய இறைவனை விட்டுக் கொடுக்கவில்லை. எங்கள் கடவுள் எங்களைக் காப்பார். அவர் ஒருவேளை காப்பாற்றாமல் போனால் கூட அவரையே வழிபடுவோம். என்று தீர்க்கமாய்ச் சொன்னார்கள். அதனால் தான் வெகுண்டெழுந்து அவர்களை நெருப்பில் எறிந்தேன்.

விருந்தினர் : இது தான் எனக்குப் புரியவில்லை. நெருப்பில் எறிந்தபின் எப்படி அவர்கள் வெளியே வந்தனர் ? கட்டிப் போடவில்லையா ?

சாத்ராக் : எங்களைக் கட்டினார்கள். உடைகளோடு சேர்ந்து கட்டினார்கள். சட்டென தீப்பிடிக்கும் என்றே நாங்களும் நினைத்தோம். அதிர்ச்சியடைந்தோம். கடவுளை வேண்டினோம்.

மேஷாக் : தீச்சூளையை வழக்கத்தை விட ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடேற்றினார்கள். எங்களை நெருப்புக்குள் எறியச் சென்ற கல்தேயரை நெருப்பு சுட்டுப் பொசுக்கியது. அவர்கள் இறந்தே போனார்கள்.

ஆபெத் : நாங்கள் நெருப்புக்குள் எறியப்பட்டதும் பதறினோம், கதறினோம். ஆனால் சட்டென அதிசயத்துப் போனோம். எங்களுக்கு எதுவும் நேரவில்லை. என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. பயந்தோம், வியந்தோம்.

அமைச்சர்: நாங்கள் பார்த்துக் கொண்டே இருந்தோம். எங்களால் நம்ப முடியவில்லை. சட்டென கருகி விடுவார்கள் என நினைத்தால், இவர்கள் உள்ளே அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். உடனே வீரர்களுக்குக் கட்டளையிட்டேன். அவர்கள் சூடநீர், கீல், சணற்கூளம், சுள்ளிகள் போன்றவற்றை அதிகமாய் சூளையில் போட்டு தீயை அதிகரித்தார்கள்.

விருந்தினர் : அப்புறம் என்னாச்சு ? அப்படியும் இவர்கள் சாகவில்லையா ?

அமைச்சர் : செத்திருந்தால் இங்கே நின்றிருப்பார்களா என்ன ? நெருப்பு வானளாவ உயர்ந்தது. சுமார் நாற்பத்தொன்பது முழம் அளவுக்கு நெருப்பு வானில் எழுந்தது. இருந்தாலும் இவர்கள் சாகவில்லை. திடீரென பாடல் சத்தம் கேட்டது.

விருந்தினரா : பாடலா ? நெருப்பின் நடுவே பாடலா ?

சாத்ராக் : மோசேயின் முன்னால் எரிந்த பச்சை மரம் கருகவில்லை. அதே போல எங்களைச் சுற்றி எரிந்த நெருப்பு எங்களைப் பொசுக்கவில்லை. நாங்கள் அமைதியாக நின்றோம். எங்களைச் சுற்றி குளிந்த காற்று வீசத் தொடங்கியது. காண்பது கனவா என நினைத்தோம். அப்போது தான் அது நிகழ்ந்தது.

மேஷாக் : ஆம்.. எங்களோடு கூட இன்னொருவரும் உள்ளே வந்தார். அவர் தான் கடவுளின் தூதர். தெய்வ மகனாய் கூட இருக்கலாம். அவர் எங்கள் நடுவே வந்ததும் எங்களுக்கு எல்லாமே மறந்து போய்விட்டது. துதிக்க ஆரம்பித்தோம்.

ஆபெத்நெகோ : “ஆண்டவரின் அனைத்துச் செயல்களே.. கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்” என பாடல் பாடினோம். ஒவ்வொன்றாய் அழைத்து இறைவனைத் துதித்தோம். நேரம் போனதே தெரியவில்லை. என்ன நடக்கிறதென்றும் தெரியவில்லை.

மன்னர் : உண்மை தான்.. நெருப்புக்குள் மூன்று பேரைப் போட்டோம், ஆனால் நான்காவதாக ஒருவர் இருப்பதை நாங்கள் எங்கள் கண்காலேயே கண்டோம். யாருக்கும் எந்தத் தீங்கும் நேரவில்லை. நான்காவது நபர் கடவுளின் மகனைப் போல தோற்றமளித்தார்.

சாத்ராக் : அப்போது மன்னனில் குரல் வெளியிலிருந்து கேட்டது. “உன்னதக் கடவுளின் ஊழியர்களாகிய சாத்ராக்கு! மேசாக்கு, ஆபேத்நெகோ வெளியே வாருங்கள்” என்றது மன்னனின் குரல். நாங்கள் தூதரைப் பார்த்தோம். அவர் புன்னகையுடன், செல்லுங்கள். உங்களால் நாட்டில் மாற்றம் உருவாகும். உங்கள் பெயர் காலம் காலமாய் நிலைக்கும் என்றார்.

மேஷாக் : நாங்களோ, எங்கள் பெயரல்ல கடவுளே உமது பெயரே போற்றப்படுக என்றோம். பிறகு வெளியே வந்தோம்.

ஆபெத்நெகோ : எந்தக் காயமும் இல்லாமல் வெளியே வந்தோம். எங்களாலேயே நம்ப முடியவில்லை.

விருந்தினர் : நீங்கள் சொல்லும் எதுவுமே நம்ப முடியவில்லையே. உங்கள் முடி கூட கருகினது போல தெரியவில்லை. ஒரு தீக்காயமும் காண முடியவில்லை. பளிச் என இருக்கிறீர்கள்.

மன்னர் : ஆம்.. நம்ப முடியாத அதிசயம் தான் அது. அதனால் தான் அவர்களை உங்கள் முன்னால் நிற்க வைத்து பேசவைத்தேன். நேற்றைக்கே நான் சட்டம் இயற்றிவிட்டேன்.

விருந்தினர் : என்னவென்று ?

மன்னர் : இவர்களுடைய கடவுளுக்கு எதிராக யாரும் பழிச்சொல் கூறக் கூடாதென்று. அப்படிக் கூறினால் அவன் கண்டந் துண்டமாய் வெட்டப்படுவான் என்று. அதுமட்டுமல்ல அவனுடைய வீடே அழிக்கப்படும் என்றும் சொன்னேன்.

விருந்தினர் : அப்படி என்ன இவர்களோட கடவுள்…

மன்னர் : அந்தச் சட்டம் உமக்கும் பொருந்தும்..

விருந்தினர் ( சட்டென வாயை மூடிக் கொள்கிறார் ) இல்லை.. நான் பேசவில்லை. அவர்களுடைய கடவுள் வாழ்த்தப்பெறுவாராக.

மன்னர் : சாத்ராக், மேஷாக், ஆபெத்நெகோ.. உங்களுடைய பெயர்களை நான் மாற்றினேன். ஆனால் உங்களுடைய மனதை என்னால் மாற்ற முடியவில்லை. உங்களை யூதாவிலிருந்து இடம் மாற்றினேன். ஆனால் உங்கள் தடத்தை மாற்ற முடியவில்லை. செடியை, நிலம் மாற்றி நட்டாலும் பூவின் நிறம் மாறுவதில்லையே. நீங்கள் இறைவனோடு தொடர்ந்து நடக்கிறீர்கள். அதனால் தான் வேறு எந்த தவறான சிந்தனைகளும் உங்களை அணுகவில்லை.

சாத்ராக் : இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். அவர் நாமம் மட்டுமே வாழ்த்தப்பெறட்டும்.

மன்னர் : உங்களுடைய விசுவாசத்தைக் கண்டு நான் வியக்கிறேன். உயிரை துச்சமென மதித்த உங்களுடைய செயல் பிரமிப்பூட்டுகிறது. எந்தச் சூழலிலும் இறைவனை விட்டு விடாத உறுதி என்னை வியப்பிலாழ்த்துகிறது. உங்களுக்கு மாநிலங்களில் பெரிய பதவிகளை அளிக்கிறேன்.

மேஷாக் : நன்றி அரசே. இறைவன் உங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியதும், அதன் மூலம் மக்கள் உண்மை தெய்வத்தை அறிந்து கொண்டதும் மகிழ்ச்சியான விஷயங்கள். உயர் பதவிகள் எங்களுக்கு முக்கியமல்ல, உயரத்தில் இருக்கின்ற விண்ணக பதவியே முக்கியம்.

மன்னர் : உங்கள் கடவுள் வாழ்த்தப்பெறுவாராக. சென்று வாருங்கள்.

( மூவரும் வணங்கி விடைபெறுகின்றனர் )

பின் குறிப்பு

சாத்ராக் மேஷாக் ஆபெத்நெகோ மூவரும் கடினமான சூழலில் கூட இறைவனை விட்டு விடாமல் பற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை இறைவன் கனம் பண்ணினார். இறைவனோடு தொடர்ந்து நடப்பவர்களை இறைவன் கைவிடுவதில்லை.