Posted in Articles, Christianity, Sunday School

SKIT : பாவம் வாசலில் படுத்திருக்கும்

பாவம் வாசலில் படுத்திருக்கும்

*=

காட்சி 1

( விக்டர் & ஸ்டீபன்  . முதலில் விக்டர் செயரில் அமர்ந்து பைபிள் வாசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்டீபன் வருகிறான் )

விக்டர் : ( பைபிள் படித்துக் கொண்டிருக்கிறான் )

ஸ்டீபன் : ஹேய்.. விக்டர்.. என்னப்பா.. மரத்து மூட்ல உக்காந்து சீரியசா பைபிள் வாசிச்சிட்டு இருக்கே போல.

விக்டர் : ஆமாடா.. நாளைக்கு நம்ம பைபிள் ஸ்டடிக்கு கொஞ்சம் பிரிபேர் பண்ணலாம்ன்னு பாத்தேன். பைபிள் ஒரு புதையல் இல்லையா.. அதான் வாசிக்க வாசிக்க அப்படியே போயிட்டே இருக்கு.. நீ படிச்சிட்டியா..

ஸ்டீபன் : ஓ..யா.. நானும் மறந்துட்டேன்.. நானும் படிக்கிறேன்… ( ஒரு செயரை இழுத்துப் போட்டு உட்கார்கிறான். மொபைலை எடுக்கிறான் )

விக்டர் : கைல பைபிள் இல்லையா… ? 

ஸ்டீபன் : இப்போ பைபிளையெல்லாம் நான் ரொம்ப யூஸ் பண்றதில்லை. ஸ்மார்ட் போன் வந்தப்புறம்.. இதான் ஈசியா இருக்கு. 

விக்டர் : இருந்தாலும் பைபிள்ல படிக்கிற மாதிரி ஃபோக்கஸ் கிடைக்காது. தவிர்க்க முடியாத சூழல்கள்ல போன்ல படிக்கலாம்.. எப்பவுமே போன்ல படிக்கிறது எனக்கென்னவோ சரியா படல.

ஸ்டீபன் : நீயெல்லாம் ஒரு பழைய பஞ்சாங்கம்டா…. இந்த போன்ல படிக்கிறதுல எவ்ளோ யூஸ் இருக்கு தெரியுமா.. உதாரணமா.. நீ படிக்கிற பைபிள் என்ன வெர்ஷன் ?

விக்டர் : கிங் ஜேம்ஸ்.. பவர் எடிஷன்.

ஸ்டீபன் : உன் கிட்டே, என் ஐ வி இருக்கா ? நியூ கிங் ஜேம்ஸ் இருக்கா ? அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் வெர்ஷன் இருக்கா.. சீ.. என் கைல எல்லாமே இருக்கு. எதை வேணும்ன்னாலும் நான் படிக்கலாம்.

விக்டர் : ம்ம்.. குட்..குட்.. உனக்கு அது கம்ஃபர்ட்டபிளா இருந்தா அதை படி.. எனக்கு பிரச்சினை இல்லை ( புன்னகைக்கிறான்.. பின் படிக்கத் துவங்குகிறான் )

ஸ்டீபன் : ( மொபைலை எடுத்து படிக்கிறான் )… டொய்ங்…. ( ஒரு மெசேஜ்  வருகிறது… ஸ்டீபன் அதைப் பார்க்கிறான்.. சிரிக்கிறான். மொபைபில் பதில் அனுப்புகிறான். பிறகு விக்டரைப் பார்த்துவிட்டு.. மீண்டும் மொபைபில் பைபிள் படிக்கிறான். விக்டர் எதையும் கவனிக்காமல் பைபிள் படித்துக் கொண்டே இருக்கிறான்.

( டொய்ய்ங்… ) இப்போது மீண்டும் ஒரு மெசேஜ் வருகிறது… 

ஸ்டீபன் : யப்பா.. நாடு போற போக்கை நினைச்சா என்ன பண்றதுன்னே தெரியல. யாருக்கும் பாதுகாப்பில்லை. மனிதாபிமானமே செத்துப் போச்சு. ( மீண்டும் விக்டரைப் பார்த்தபடி படிக்கிறான் )

( ஒரு கால் வருகிறது.. எடுக்கிறான்.. எழும்பி நடந்தபடி பேசுகிறான் .. மீண்டும் வந்து உட்கார்ந்து படிக்கிறான் )

ஸ்டீபன் : (டொய்ங்.. மறுபடியும் சத்தம்.. இப்போது ஃபேஸ்புக்.. ஸ்கிரீனை விரல்களால் தள்ளி விட்டபடி.. கொஞ்ச நேரம் பார்க்கிறான். சிரிக்கிறான் )

விக்டர் : வெரி இண்டரஸ்டிங் பேசேஜ்பா… யப்பா.. என்ன அற்புதமான பகுதி…. இல்லையா ?? படிச்சு முடிச்சுட்டியா..

ஸ்டீபன் : ஓ.. நீ அதுக்குள்ள முடிச்சுட்டியா.. நான் இன்னும் முடிக்கல… ஐ மீன்.. கொஞ்சம் படிச்சேன்.. இனி கொஞ்சம் டீப்பா படிக்கணும்…

விக்டர் : ம்ம்ம்..  சரிடா.. கிளம்புவோமா ? நாளைக்கு சர்ச்ல மீட் பண்ணுவோம். சர்ட் முடிஞ்சப்புறம் தானே பைபிள் ஸ்டடி… அதுக்குள்ள பிரிபேர் பண்ணிடு. 

ஸ்டீபன் : யா.. யா.. அதெல்லாம் பண்ணிடலாம்.. சீ யூ டுமாரோ

காட்சி 2

( சர்ச்சில் விக்டரும் ஸ்டீபனும் உட்கார்ந்திருக்கின்றனர்.. விக்டர் முதலில் அமர்ந்திருக்கிறார். கொஞ்ச நேரத்துக்குப் பின் ஸ்டீபன் ஓடி வந்து அருகில் அமர்கிறான்… )

விக்டர் : ஹாய்… வா.. உக்காரு…

ஸ்டீபன் : நல்லவேளை மெசேஜ் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வந்துட்டேன்… கொஞ்சம் லேட்டாயிடுச்சு… நைட் தூங்க லேட்டாச்சு அதான் பிராப்ளம்.

விக்டர் : ம்ம்ம்…. ஓக்கே… ஓக்கே.. அமைதியா உக்காரு.. இது சர்ச் ( புன்னகைக்கிறான் )

ஸ்டீபன் : யாருடா இன்னிக்கு மெசேஜ் ?

விக்டர் : இன்னிக்கு நம்ம பாஸ்டர் தான்…

ஸ்டீபன் : ஓ.. அவரா… செம போரா இருக்குமேடா… பேசாம வீட்லயே தூங்கியிருக்கலாம் போல….இங்கயும் அதை தான் பண்ண போறேன்…. 

விக்டர் : மெசேஜே ஆரம்பிக்கல, அதுக்குள்ள ஜட்ஜ்மெண்டே குடுக்கிறே …. கேப்போம் கடவுள் நம்ம கிட்ட என்னதான் பேசறாருன்னு.. 

ஸ்டீபன் : ம்ம்.. ஓக்கேடா… ( கொஞ்சம் அமைதி ) உன் ஷர்ட் நல்லா இருக்குடா.. எங்கே வாங்கினே ? புதுசா ?

விக்டர் : எல்லாம் சர்ச் முடிஞ்சு சாவாகாசமா பேசிக்கலாம்பா…. கொஞ்சம் வெயிட் பண்ணு..

ஸ்டீபன் : ஓக்கே..ஓக்கே… அதா மெசேஜ் ஸ்டார்ட் ஆகுது.. பாப்போம்.. ஏதாச்சும் புரியுதான்னு… 

( இருவரும் மெசேஜ் கவனிப்பது போல … ) 

( ஸ்டீபன் பொறுமை இழந்து நெளிகிறான்.. கொட்டாவி விடுகிறான் )

ஸ்டீபன் : செம கடிடா.. மாசத்துக்கு ஒரு நாள் இவரு பேச்சை நம்மால கேக்க முடியல. பாஸ்டரம்மா பாவம் தான்.. எப்படி நாள் முழுக்க இவரோட பேச்சை கேக்கறாங்களோ…  

விக்டர் : டேய்.. சர்ச்ல ஜோக் அடிக்காதே.. ஜஸ்ட் லிசன்… கடவுள் ஏதோ ஒரு வார்த்தை மூலமா நம்ம கிட்டே பேசுவார்..

ஸ்டீபன் :ம்ம்ம் சரிடா… ( சொல்லிக் கொண்டே போனை நோண்டுகிறான் ). 

ஸ்டீபன் : போன வாரம் சர்ச்ல ஏதோ பிரச்சினையாமே.. கேள்விப்பட்டியா ?

விக்டர் : இல்லைடா.. அதெல்லாம் அப்புறம் பேசுவோம்… கொஞ்சம் வெயிட் பண்ணு..

ஸ்டீபன் : ஓக்கேடா.. ரொம்ப புழுக்கமா இருக்கு.. நான் வெளியில போய் உக்கார்ரேன்…. சர்ச் முடிஞ்சப்புறம் பேசுவோம்.

விக்டர் : ஏண்டா வெளியே போறே.. இங்கே உக்காரு.. வெளியே போனா போக்கஸ் பண்ண முடியாது.

ஸ்டீபன் : நோ..நோ.. சூடா இருந்தா தான் என்னால போக்கஸ் பண்ண முடியாது.. நீ இங்கே இரு… 

( ஸ்டீபன் வெளியே போகிறான் )

காட்சி 3

( பஸ் ஸ்டாண்ட் … விக்டர் ஸ்டீபன் .. இப்போது விக்டரின் கையில் ஒரு சின்ன பைபிள் இருக்கிறது.. )

ஸ்டீபன் : ஹேய்.. எங்கடா போறே ?

விக்டர் : ஹேய் ஸ்டீபன்.. நான் கோயம்பேடு வரைக்கும் போகணும்பா.. கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டியிருக்கு.

ஸ்டீபன் : எனக்கும் கோயம்பேடு மார்க்கெட் தாண்டா போணும்.. என்னாச்சு பஸ் வரலையா..

விக்டர் : என்னன்னு தெரியல.. ரொம்ப நேரமா பஸ்ஸே வரல… 

ஸ்டீபன் : ம்ம்.. கைல அதென்னடா ? பைபிளா ? இவ்ளோ சின்னதா இருக்கு. 

விக்டர் : இது பாக்கெட் பைபிள்டா.. டிராவல்ல பெரிய பைபிள் எடுத்துட்டு போக முடியலைன்னா இதை பாக்கெட்ல போட்டுப்பேன். இப்படி பஸ்ஸுக்கு காத்திருக்கிற நேரத்துல நாலு வசனம் படிச்சா மனசுக்கு ஆறுதலா இருக்கும். 

ஸ்டீபன் : டேய்.. எப்பவும் வசனம் வசனம்னு இருக்காதே. உலகத்தைப் பாரு.. கடவுள் இந்த உலகத்தை ஏன் இவ்ளோ அழகா படைச்சாரு ? நாம பாத்து ரசிக்கணும்ன்னு தான்.

விக்டர் : இந்த மொட்டை வெயில்ல.. தார் ரோட்ல நீ இயற்கையை ரசிக்கிறே… நடக்கட்டும் நடக்கட்டும்

ஸ்டீபன் : சரி, இயற்கைன்னா இயற்கை இல்லை.. மக்களை பாக்கலாம்.. அவங்களோட பழக்க வழக்கங்களைப் பாக்கலாம்.. இதெல்லாம் நமக்கு வாழ்க்கைப் பாடம் இல்லையா ?

விக்டர் : அதையெல்லாம் பாக்கறதால எனக்கு என்னடா லாபம் ? 

ஸ்டீபன் : சமூகத்தோட ஒட்டாம இருக்கிறது ரொம்ப தப்புடா

விக்டர் : டேய்.. நான் எங்கடா ஒட்டாம இருக்கேன்.. டைமை வேஸ்ட் பண்ற நேரத்துல வேட்ஸ் படிக்கிறேன் அவ்வளவு தான். இப்போ என்ன உங் கூட பேசிட்டு தானே இருக்கேன். 

ஸ்டீபன் : ம்ம்ம்.. என்னவோ போ…  ( எதையோ உற்றுப் பார்க்கிறான் ).. ம்ம்…ச்சே… மக்களோட டிரசிங் சென்ஸ் ரொம்ப கம்மியாயிடுச்சு.. இப்படிப்பட்ட டிரஸ் எல்லாம் போட எப்படித் தான் பேரண்ட்ஸ் பெர்மிஷன் குடுக்கிறாங்களோ 

விக்டர் : இப்படிப்பட்ட காட்சியெல்லாம் பாக்க வேண்டாம்ன்னு தான் நான் பைபிளை பாக்கிறேன்.. நீ தான் சமூகம், இயற்கை, மக்கள் ந்னு இப்படி புலம்பறே..

ஸ்டீபன் : ஐமீன்… மக்களை டைவர்ட் பண்றாங்க.. இப்படியெல்லாம் டிரஸ் பண்ணி.. அதான் சொன்னேன்.

விக்டர் : ம்ம் உண்மை தான்.. அவங்களை விமர்சிக்கிறதை விட, நாம கவனமா இருக்கணுன்னு நான் நினைக்கிறேன்.

ஸ்டீபன் : ஓ.. மை காட்..  ( கையை நீட்டி ) அவன் போற போக்கைப் பாரு.. பைக் கிடைச்சா எப்படி வேணும்ன்னாலும் ஓட்டிடுவாங்களா… வாயில அசிங்கமா வருது.. பொறுப்பில்லாத பசங்க. 

விக்டர் : ம்ம்ம்.. ( கையிலிருக்கும் சின்ன பைபிளை பிரிக்கிறான் ) நம்ம கண்களை பாதுகாக்கணும்ன்னா வசனம் தாண்டா… 

ஸ்டீபன் : ம்ம்ம்.. படி.. நான் மெயில் செக் பண்ணிக்கறேன்…. 

காட்சி 4

( ஸ்டீபன் & விக்டர் )

ஸ்டீபன் : விக்டர்.. உன் கிட்டே கொஞ்சம் பேசணும்… 

விக்டர் : சொல்லுடா.. என்ன விஷயம் ..  என் கிட்டே பேச பெர்மிஷன் எல்லாம் கேக்க தேவையில்லை.. சொல்லு

ஸ்டீபன் : கொஞ்ச நாளாவே மனச சரியில்லை.. ஸ்பிரிச்சுவலா வீக்கா போற மாதிரி ஒரு பீலிங்… ஒரு நிம்மதியில்லை… 

விக்டர் : ம்ம்ம்.. நானே உன் கிட்டே பேசலாம்ன்னு தான் நினைச்சேன். பைபிள்ல ஒரு வசனம் உண்டு. பாவம் நம் வீட்டு வாசல்படியில் படுத்திருக்கும், நாம அதை அடக்கி ஆளணும்ன்னு…. கதவைத் திறந்தா தான் ஆபத்து… கவனமா இருந்தா ஆபத்துல்ல..

ஸ்டீபன் : அப்படின்னா ? புரியல

விக்டர் : நம்ம இலக்கு இயேசுவைப் போல மாறணும், புனிதமான வாழ்க்கை வாழணும்ன்னு தான் இருக்கணும். ஆனா அது சாத்தானுக்குப் புடிக்காது. எப்படிடா நம்மளோட சிந்தனையை திசை திருப்பலாம்ன்னு தான் அலைவான். அதுக்கு நாம இடம் கொடுக்கக் கூடாது. 

ஸ்டீபன் : இன்னும் கொஞ்சம் புரியற மாதிரி சொன்னா நல்லா இருக்கும்.

விக்டர் : உதாரணமா, பைபிள் வாசிக்கும்போ நம்ம கவனம் பைபிள்ல மட்டும் இருக்கணும். அதுக்கு மொபைல் இடைஞ்சலா இருக்குன்னா ஒதுக்கி வைச்சுடணும். கடவுள் இடறலாய் இருக்கிற கண்ணையே பிடிங்கி எறிய சொன்னார். மொபைல் இடறலாய் இருந்தால் மொபைலை தூக்கி எறிய தயங்கக் கூடாது. 

ஸ்டீபன் : யா.. அது உண்மை தாண்டா.. நான் மொபைல்ல பைபிள் வாசிக்க ஆரம்பிப்பேன்.. கடைசில வாட்ஸர், எஸ் எம் எஸ், டுவிட்டர் ந்னு எல்லா இடங்கள்ளயும் அலைஞ்சு பைபிளை வாசிச்சும், வாசிக்காமலும் தான் முடிப்பேன். 

விக்டர் : யெஸ்.. அதான் சொல்ல வந்தேன். சர்ச்ல வரும்போ கூட நம்ம கவனம் கடவுள் மேல இருக்கணுமே தவிர, கூட இருக்கறவங்க மேல இருக்கக் கூடாது. இறை பிரசன்னத்தை விட்டு நம்மை விரட்டணும்ன்னு சாத்தான் ரொம்ப முயற்சி பண்ணுவான். அந்த டிராப்ல நாம விழக் கூடாது.

ஸ்டீபன் : யா.. ஐ அக்ரீ.அ து என் தப்பு தாண்டா…

விக்டர் : உலகத்தை ரசிக்கிறது, இயற்கையை ரசிக்கிறது எல்லாம் நல்லது தான். ஆனா நம்ம கண்கள் பலவீனமானவை. ஊனுடல் பலவீனமானதுன்னு இயேசுவே சொல்லியிருக்காரு. அதனால நாம பாவத்தை கண்டா ஓடி ஒளியணும். அதான் ஈசி.

ஸ்டீபன் : உண்மை தாண்டா.. எப்பவுமே பைபிளா, எப்பவுமே கடவுளான்னு நினைக்கிறது தான் தப்பு. எப்பவுமே கடவுளோட இருக்கிறது தான் நம்மை சரியா நடத்தும். சரியா ?

விக்டர் : எக்ஸாக்ட்லி.. ஜீசஸ் என்ன சொன்னாரு.. என் நுகத்தை ஏற்றுக் கொண்டு என்னோடு வாருங்கள் ந்னு சொன்னாரு. நுகத்தோட ஒரு பக்கம் இயேசு, இன்னொரு பக்கம் நாம. அப்படி பயணிக்கும்போ நாம தடுமாறினாலும் இயேசு நம்மை கூட்டுட்டு போவாரு. நாம தடம் மாறினாலும் இயேசு நம்மை சரி பண்ணுவாரு. 

ஸ்டீபன் : நுகம்ன்னா என்னடா ? அந்த வயல்ல ரெண்டு மாடு கட்டி உழுவாங்களே ? அதுவா ? 

விக்டர் : ஆமாடா. அதுல நாமும் இயேசுவும் இருக்கணும். அதான் இயேசு விரும்பறது. அப்போ தான் நம்ம போக்கஸ் சரியா இருக்கும். சரியான இடத்துல இருக்கும். 

ஸ்டீபன் : உண்மை தான்.. நீ சொல்லும்போ தான் என்னோட தப்பெல்லாம் புரியுது. என்னோட போக்கஸ் இறைவன் மேல இல்ல, அதான் தப்பு.

விக்டர் : குதிரைச் சவாரி செய்யும்போ , குதிரையோட கண்களுக்கு பக்கத்துல ஒரு மறைவை கட்டுவாங்க. அதனால குதிரை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் பாக்க முடியாம நேரா மட்டும் தான் பாக்கும். அப்போ தான் அது அலைபாயாம, இலக்கை நோக்கிப் பாயும். நம்ம கண்களையும் இறைவார்த்தைங்கற கவசத்தால கட்டி பாதுகாக்கணும். அப்போ தான் இலக்கு இயேசுவை நோக்கி இருக்கும்.

ஸ்டீபன் : ஆமா, குதிரைன்னு சொன்னதும், குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாகும் ஜெயமோ கர்த்தரால் வரும்ங்கற வசனம் ஞாபகத்துக்கு வருது. 

விக்டர் : அதுல கூட பாரு, ஜெயம் கர்த்தரால தான் வரும். அதுல சந்தேகமே இல்லை. ஆனா குதிரையை யுத்த நாளுக்காய் ஆயத்தப்படுத்தணும். அதான் ரொம்ப முக்கியம். அதை நாம தான் பண்ணணும். நம்மை இறைவனோட வருகைக்கு ஆயத்தமா வெச்சிருக்கணும். அப்போ. மீட்பு இறைவனால் நமக்குக் கிடைக்கும்.

ஸ்டீபன்  : ரொம்ப அழகா சொன்னேடா… இப்போ எனக்கு கொஞ்சம் நிம்மதி வந்திருக்கு.

விக்டர் : கவலைப்படாதே.. இயேசு சொன்னதை ஞாபகம் வெச்சுக்கோ. “மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள் “ அப்படித் தானே இயேசு சொன்னார். இயேசுவோட வார்த்தைகளைக் கேக்கறது, அவர் அருகே அமர்ந்திருப்பது தான் நல்ல பங்குன்னு இயேசு சொல்றாரு. நாமும் அதையே பற்றிக் கொள்வோம். வேற எதுவும் தேவையில்லை.

ஸ்டீபன் : ரொம்ப நன்றிடா… ஐம் கிளியர் நௌ…கிளம்பறேன்.

விக்டர் : ஓகேடா.. பிரைஸ் த லார்ட். 

பின் குரல் :

பாவம் நம்மைச் சுற்றி வலை விரித்துக் கொண்டே இருக்கிறது. பாவம் நம்மைச் சுற்றி தூண்டில்களைப் போட்டுக் கொண்டே இருக்கிறது. பாவம் நம் பாதைகளெங்கும் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துக் கொண்டே திரிகிறது. விழிப்பாய் இருப்போம். இறைவார்த்தை எனும் கேடயம் நம்மிடம் இருந்தால், பாவத்தின் வாள்வீச்சுகளிலிருந்து தப்பிக்கலாம். அலட்சியமாய் இருப்பது மிகவும் ஆபத்தானது. இறைவனோடு இருப்பது மட்டுமே தேவையானது. சிந்தித்து செயல்படுவோம்.

Posted in Articles, Christianity, Desopakari

மாற்றுத் திறனாளிகளை மாண்புடன் ஏற்போம்

கேரி டென் பூம், நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாமில் 1892ம் ஆண்டு பிறந்தவர். இரண்டாம் உலகப் போரின் காலத்தில் நாசிகளின் கோரப் பிடியிலிருந்து யூதர்களை ரகசியமாய்த் தப்புவிக்கும் பணியைச் செய்தவர்.  அதற்காக பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர். சிறையில் மரணத்தின் விளிம்புவரை போனவர். அவரது குடும்பம் முழுவதையுமே அதற்காக இழந்தவர். அவரது “ஹைடிங் பிளேஸ்” நாவலில் அதைப் பற்றி மிக அழகாக, விரிவாக, வலியுடன் எழுதியிருப்பார். 

“இயேசு ஒரு யூதர். யூதர்கள் இறைவனின் மக்கள். எனவே நான் யூதர்களை காப்பாற்றுவேன்” என்பதே அவருடைய நிலைப்பாடாய் இருந்தது. அவருடைய வீட்டில் மனவளர்ச்சி குன்றிய ஏராளமானோரைப் பராமரித்தும் வந்தார். 

ஜெர்மானியர்களோ சகட்டு மேனிக்கு யூதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக மன வளர்ச்சி குன்றியவர்களைக் கண்டால் உடனடியாக அழித்துக் கொண்டிருந்தார்கள். 

ஒரு முறை ஜெர்மானிய படைவீரன் ஒருவன் கேரி டென் பூமின் வீட்டுக்குள் நுழைந்து பரிசோதித்தான். அவர்கள் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளைப் பராமரிக்கும் விஷயத்தை அறிந்து கொண்டான். கடும் கோபமடைந்து, “ஏன் இவர்களையெல்லாம் பராமரிக்கிறாய் ? ஆயிரம் மன வளர்ச்சி குன்றியவர்கள் சேர்ந்தால் ஒரு சாதாரண மனிதனுக்கு ஈடாகுமா ?” என்று கத்தினான். 

கேரி டென் பூம் அமைதியாக, “கடவுளின் பார்வையில் அவர்கள் மிகவும் விலையேறப்பட்டவர்கள். ஏன் ஒரு சாதாரண மனிதரை விடவோ, ஒரு படைவீரனை விடவோ அவர் அதிக மதிப்புடையவராய் இருக்கலாம்” என பதிலளித்தார். தனக்கு முன்னால் மரணம் சுண்டு விரலை நீட்டிக் கொண்டிருப்பதை அறிந்தும் மாற்றுத் திறனாளிகளை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. 

சமூகம் மாற்றுத் திறனாளிகளைப் பார்க்கும் பார்வைக்கும், சாதாரண மக்களைப் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மாற்றுத் திறனாளிகள் சாதாரண மனிதர்களை விடக் கீழானவர்களாக, பலவீனர்களாக, குடும்பங்களின் சாபங்களாக, நிராகரிப்பின் மிச்சங்களாகத் தான் பார்க்கப்படுகின்றனர். 

ஏதோ வெறுமனே சொல்லவில்லை, கடந்த 2017ம் ஆண்டின் புள்ளி விவரம் கூறும் செய்திகள் கண்ணீருடன் கவனிக்கத் தக்கவை. இரண்டு கோடியே அறுபத்தெட்டு இலட்சம் மக்கள் மாற்றுத் திறனானிகளாக இருக்கிறார்கள் என்கிறது அந்த புள்ளி விவரம். மாற்றுத் திறனாளிகளாய் இருக்கும் மக்களில் 41% பேர் திருமணம் செய்து கொள்வதில்லை என அதிர்ச்சியளிக்கிறது அந்த புள்ளிவிவரம்.

மாற்றுத் திறனாளிகளை சமூகம் அங்கீகரிக்கவில்லை, குடும்பங்கள் ஆதரிக்கவில்லை, மனித நேயம் அரவணைத்துக் கொள்ளவில்லை என்பதன் அப்பட்டமான வெளிப்பாடே இந்த புள்ளி விவரம். 

மாற்றுத் திறனாளிகளில் வெறும் 36 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாற்றுத் திறனாளிகளை நிறுவனங்கள் ஆதரிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. வெறும் லாப நோக்கத்துக்காக இயங்குகின்ற தனியார் கார்ப்பரேட்கள் எப்போதுமே மாற்றுத் திறனாளிகளை அங்கீகரிப்பதில்லை. விளம்பரங்களுக்காக ஒரு சில நிறுவனங்கள் இவர்களுக்குக் கைகொடுத்து, புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன் சரி. 

கல்வியை எடுத்துக் கொண்டாலும் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை யாரும் ஆதரிப்பதில்லை. வெறும் 8.5 சதவீதம் பேர் மட்டுமே கல்லூரிக்குச் செல்கின்றனர் என்பது ஒரு வலிமிகுந்த உண்மையாகும். 

இத்தகைய சூழலில் கிறிஸ்தவர்களாகிய நாம் மாற்றுத் திறனாளிகளை ஏற்றுக் கொள்வதும், மாற்றுத் திறனாளிகளை அங்கீகரிப்பதும், அவர்களுடைய முன்னேற்றத்துக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டியதும் மிக மிக முக்கியமானதாகும். 

ஏன் மாற்றுத் திறனாளிகள் முக்கியமானவர்கள். 

  1. மாற்றுத் திறனாளிகளும் இறைவனின் சாயலானவர்கள். 

கடவுள் மனிதனைப் படைத்தபோது தமது சாயலாகப் படைத்தார். “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும்ஆளட்டும்” என்கிறது தொடக்க நூல். “நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்” என்கிறது 1 யோவான். இறைவனின் சாயலாக இருக்கும் மனிதர்களை நாம் நிராகரிப்பது இறைவனை நிராகரிப்பது போல. 

  1. மாற்றுத் திறனாளிகளை இகழ்தல் பாவம். 

மாற்றுத் திறனாளிகள் பாவத்தின் பிரதிநிதிகள் எனும் சிந்தனை பழைய காலத்தில் இருந்தது. அதனால் தான் மாற்றுத் திறனாளிகள் மக்களால் நிராகரிக்கப்பட்டனர். ஆலயங்களில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர். சமூக நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமல் விலக்கப்பட்டனர்.  பாவத்தையும் – உடல் குறைபாட்டையும் இணைத்துப் பார்த்த சமூகம் அவர்களை அப்படி நடத்தியது. இயேசு அந்த சிந்தனையை மாற்றுகிறார். மாற்றுத் திறனாளிகளை  அவமானப்படுத்துவதும்,அவர்களை கஷ்டப்படுத்துவதும் பாவம் என்கிறது பைபிள். “காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்! “ என்கிறது லேவியர் 19:14. 

  1. இறைவனின் மகிமை வெளிப்படும் இடம்

இயேசுவின் பாதையில் அமர்ந்திருந்த பார்வையிழந்தவரின் கதை நமக்கெல்லாம் தெரியும். ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்“எனும் விவிலிய பாகம், மாற்றுத் திறனாளிகளை இறைவனின் மகிமை வெளிப்படும் தளங்களாகக் காட்டுகிறது.  இறைவன் தனது மாட்சியை வெளிப்படுத்தும் இடமாக ஆலயம் உள்ளது. அதே போல அவரது மாட்சி மாற்றுத் திறனாளிகளில் வெளிப்படும் என இயேசு அவர்களை முக்கியமானவர்களாகக் காட்டுகிறார். 

  1. மாற்றுத் திறனாளிகள் இறைவனின் படைப்பு.

““மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே! “ என்கிறது விடுதலைப்பயணம் நூல். படைப்புக்கெல்லாம் தலையாய் இருக்கும் இறைவனே, மாற்றுத் திறனாளிகளையும் படைக்கிறார். அவர்களை ஏதோ ஒரு காரணத்துக்காக வைத்திருக்கிறார். அவர்கள் மூலமாக இறைவன் எதையோ செயல்படுத்தப் பார்க்கிறார். அதைக் கண்டு கொள்ள வேண்டியது மாற்றுத் திறனாளிகளின் பணி. அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது நமது பணி.

நிக் வாயிச்சஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டு கால்களும், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். இளமைக் காலம் முதலே தற்கொலை செய்ய வேண்டும் எனும் முனைப்பில் இருந்தவர். ஒரு கட்டத்தில் தன் மூலம் இறைவன் எதையோ செய்ய விரும்புகிறார் என்பதை உணர்ந்தார். அதன்பின் அவரது வாழ்க்கை மாறியது. இன்று உலகெங்கும் சென்று இயேசுவை பறைசாற்றியும், தன்னம்பிக்கை உரைகளை நிகழ்த்தியும் சமூக, ஆன்மிகப் பணி செய்கிறார். “உன்னைக் கடவுள் இப்படிப் படைத்ததற்கு ஏதோ ஒரு காரணம் உண்டு. அதைக் கண்டுபிடி.” என அவனுடைய பெற்றோர் அவனுக்குக் கொடுத்த ஊக்கம் ஒரு காரணம். அத்தகைய பணியை நாமும் செய்ய வேண்டும்.

  1. மாற்றுத் திறனாளிகள் சமமாய் மதிக்கப்பட வேண்டியவர்கள்.

தாவீது மன்னனுக்கும், மெபிபோசேத்துவுக்கும் இடையேயான நிகழ்வுகள் நமக்கெல்லாம் தெரிந்ததே. ஊனமுற்றிருந்த மெபிபோசேத்துவை யோனத்தான் மீது கொண்ட நட்பின் காரணமாக அரவணைத்துக் கொள்கிறார் தாவீது. அவரை பரிதாபத்துக்குரியவராக அவர் பார்க்கவில்லை. அவரை ஒரு எளியவனாகவோ, அவரை ஒரு இரக்கத்துக்குரியவனாகவோ பார்க்கவில்லை. அவரை தனது உணவு இருக்கையில் தன்னோடு சமமாய் உணவருந்துபவராகப் பார்க்கிறார். மாற்றுத் திறனாளிகளை நாம் சமமாய் மதிக்க வேண்டும் என்பதை நமக்குச் சொல்லும் ஒரு பாடமா அதைக் கொள்ளலாம்.

  1. மாற்றுத் திறனாளிகளை இறைவன் அழைக்கிறார்

மாற்றுத் திறனாளிகளை இறைவன் அரவணைக்கும் நிகழ்வுகள் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோசே திக்குவாயனாய் இருக்கிறார். அதை ஒத்துக் கொள்கிறார். ஆனால் இறைவன் அவரைக் கைவிடவில்லை. காரணம் அவர், “பலவீனத்திலே தனது பலத்தைப் புகுத்துபவராக” இருக்கிறார். யாக்கோபு ஒரு மாற்றுத் திறனாளியின் நிலைக்கு வந்த போது தான் இஸ்ரேலாக மாறுகிறார். இயேசு ஒரு உவமையில், விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் விருந்தை நிராகரிக்கப்பட்டபோது மாற்றுத் திறனாளிகளை அழைத்து வரும்படி சொல்கிறார். பார்த்திமேயுவை இயேசு அழைக்கிறார். வழக்கத்தை விட குள்ளமான சக்கேயு, இறைவனின் அழைப்பைப் பெறுகிறான். இவையெல்லாம் நாமும் மாற்றுத் திறனாளிகளை அரவணைக்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்துகிறது.

  1. அவர்களும் இயேசுவின் சின்னஞ் சிறிய சகோதரரே.

“மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் “ என்கிறார் இயேசு. மாற்றுத் திறனாளிகளுக்கு நாம் உதவும் போதெல்லாம் இறைவனுக்கே உதவுகிறோம்.  மாற்றுத் திறனாளிகளை நிராகரிக்கும் போது இயேசுவையே நிராகரித்து நகர்கிறோம். இயேசு எனும் கொடியில் மாற்றுத் திறனாளிகளும் கிளைகளே. இயேசு எனும் உடலின் உறுப்புகளே. இயேசு அவர்களைப் பிரித்துப் பார்க்கவில்லை. மன ஊனம் உடையவராய் இருக்கக் கூடாது என்பதையே இறைவன் பார்க்கிறார். அறிவு சார்ந்த குறைபாடோ, உடல் குறைபாடோ இறைவனின் பார்வையில் விலக்கப்படவில்லை. 

  1. மாற்றுத்திறன் நிலை தற்காலிகமானதே

விண்ணகத்தில் குறைகள் என்பதே இல்லை. அங்கே மாற்றுத் திறனாளிகள் இருப்பதில்லை. அங்கே அனைவரும் சமமாய் இருப்பார்கள். இங்கே நாம் நிராகரிப்பவர்களெல்லாம் அங்கே அக்களிப்புடன் ஆடிப் பாடுவார்கள். “அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர் “ என்கிறது ஏசாயா நூல். இந்த தற்காலிக வாழ்க்கையில் நம்மிடையே உலவுகின்ற மாற்றுத் திறனாளிகள், விண்ணக வாழ்வில் நம்மைப் பார்த்து புன்னகைக்கும் போது நம் இருதயம் குத்தப்படாமல் இருக்க அவர்களை நான் இப்போதே நேசிப்போம்.

  1. மாற்றுத் திறனாளுக்கும் நற்செய்தி அறிவிக்கப்படும்

இயேசு உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கச் சொன்னார். எல்லா இனத்தாரையும் சீடராக்கச் சொன்னார். அவர் ஆணென்றும் பெண்ணென்றும் பார்க்கச் சொல்லவில்லை. அடிமை என்றும் உரிமைக் குடிமகனென்றும் பார்க்கச் சொல்லவில்லை. மாற்றுத் திறனாளியென்றும், சாதாரண மனிதன் என்றும் பார்க்கச் சொல்லவில்லை. எல்லோரும் இறைவனின் பிள்ளைகள். எல்லோரையும் இறைவன் எதிர்பார்க்கிறார். நாமும் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  1. மாற்றுத் திறனாளிகள் நமது சுயபரிசோதனைக்கானவர்கள்.

நாம் ஆன்மிகப் பயணத்தில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை  மாற்றுத் திறனாளிகளை நாம் நடத்தும் விதத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.. ஏழைகளும், மாற்றுத் திறனாளிகளும் நமது மனித நேயத்தை அளவிடும் கருவிகள். அவர்கள் நமது உண்மையான கரிசனையை உரசிப் பார்க்கும் சோதனைகள். நாம் உண்மையிலேயே இறைவனின் அன்பை இதயத்தில் கொண்டிருக்கிறோமா என்பதை இதன் மூலம் கண்டு கொள்ளலாம். தொழுநோயாளிகளையும், ஊனமுற்றோரையும் அரவணைத்த இயேசுவைப் போல நாம் இருக்கிறோமா ? இல்லை ஒதுங்கிச் செல்லும் மனநிலையில் வாழ்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்ப்போம். 

மாற்றுத் திறனாளிகள் நம் சகோதரர்கள்

அவர்களை உயர்வாய் நடத்துவோம் !

*

சேவியர்

Posted in Articles, Sunday School

SKIT : பாதாளத்தில் ஒரு பெர்ஃபாமனஸ் அப்ரைசல் (Christmas Special SKIT )

Image result for satans meet

காட்சி 1

( லூசிபர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார், அப்போது சாத்தானின் தூதன் ஒருவன் வருகிறான் )

தூதன் 1 : கர்வத்தின் பெருங்கடலே, அதர்மத்தின் ஆழியே, பெருமைகளின் பிரியனே, சோதனைகளின் வித்தனே, பிரபஞ்சத்தின் பாவச் சுவடே, கருப்புக்கெல்லாம் அரசனே, அந்தியாய் வந்தவனே, பாதகர்களின் பிதாவே வணக்கம் வணக்கம்

லூசிபர் : உன் புகழ்ச்சியில் யாம் மகிழ்ந்தோம். என்ன விஷயமாய் வந்திருக்கிறாய்

தூ 1 : தலைவரே, நமது சாத்தான்களின் பெர்ஃபாமன்ஸ் ரிவ்யூ காலம் வந்திருக்கிறது. ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் செயல்படுகிறார்கள் என்பதை பரிசோதித்துப் பார்த்து அவர்களுக்கு நல்ல இன்கிரிமென்ட், பதவி உயர்வு, போனஸ், சம்பள உயர்வெல்லாம் கொடுக்க வேண்டிய காலம் இது.

லூ : ஓ.. ஆமாம்.. ஆமாம்.. நம்ம புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்… அவங்க பண்ற வேலையைப் பாத்து நானே வியந்து போயிடுக்கிறேன்.

தூ 1 : எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள் கருப்பு ஆடே !

லூ : உனக்கு ஞாபகம் இருக்கா தெரியலை. ஒரு தடவை கடவுள் என்கிட்டே வந்து “யோபுவைப் பாத்தாயா சாத்தானே” ந்னு நக்கலா கேட்டாரு. கடவுள் கிட்டே பெர்மிஷன் வாங்கி யோபுவை புரட்டிப் புரட்டிப் போட்டும் அவன் நம்ம பக்கத்துக்கு வரவே இல்லை. அன்னிக்கு நான் தோத்துட்டேன். ஆனா இப்பல்லாம் கடவுள் வந்து அவனைப் பாத்தாயா ? அவளைப் பாத்தாயான்னு கேக்கறதில்லை. ஏன்னா நம்ம பசங்க தீயா வேலை செய்றாங்கோ…

தூ : ஓ.. அது மகிழ்ச்சியான செய்தி நமக்கு. காரணம் என்னவோ ?

லூ : அதுவா ? இப்போ இருக்கிற மக்களெல்லாம் முட்டை ஓட்டு விசுவாசிகள். ஓரமா ஒரு தட்டு குடுத்தா பொட்டுன்னு போயிடுவாங்க. கடவுளே கடவுளே ந்னு கூப்டுவாங்க, அவங்களை ஆபீஸ் வேலையைத் தூக்கினாலே போதும், குய்யோ முய்யோ.. நீயெல்லாம் கடவுளான்னு கட்சி மாறிடுவாங்க.

தூ 1 : ஹா..ஹா.. கேக்கவே எவ்வளவு சந்தோசமா இருக்கு. இப்போ இருக்கிற மக்களெல்லாம் சோடா பாட்டில் விசுவாசிகள்ன்னு ஒருத்தர் சொன்னாரு.

லூ : சோடா பாட்டில் விசுவாசிகளா ? வாட் யூ மீன்..

தூ : சோடா பாட்டிலை ஓப்பன் பண்ணினதும் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு ஒரு பவரா தெரியும். கொஞ்ச நேரத்துல, ஊசிப் போன பட்டாசு மாதிரி சொய்ய்ய்ய்ங் ந்னு அடங்கிடும். அப்படித் தான் இருக்காங்க நிறைய விசுவாசிகள். ஜெபக்கூட்டத்துக்குப் போயிட்டு ஸ்பிரிச்சுவல் நெஞ்சை நிமித்திட்டு வருவாங்க, கொஞ்ச நேரத்துலயே ஆன்மீக நோஞ்சான்களா மாறிடுவாங்க

லூ : ஹா..ஹா. நீ சொல்றது கேக்க நல்லா இருக்கு. சோடா பாட்டில் ஹா..ஹா.. ம்ம்ம் ஓவராலா நான் ரொம்ப ஹேப்பி.. நாம எதுக்கும் நம்ம லீடர்ஸை ஒவ்வொன்னா கூப்பிட்டு எல்லாம் எப்படி போயிட்டிருக்குன்னு விசாரிப்போம்.

தூ : கண்டிப்பா .. லேடீஸ் பர்ஸ்ட்… முதல்ல லேடீஸ் டிபார்ட்மென்டைப் பாக்கற அபெத்தோன் த டிஸ்ட்ராயரை கூப்பிடறேன்.

( தூதன் போனை எடுத்து பேசுகிறான் )

தூ : ஹலோ…. அட ஆமாப்பா… சீக்கிரம் வா… வாட் த ஹெல்…. ஹெல் ஈஸ் அவர் ஹோம்.. நீ இங்க வா… உச்சத் தலைவர் கூப்பிடறாரு.. அப்ரைசல் டைம்.

( தூதன் 2 வருகிறார்.. நடனமாடியபடி வருகிறான் )

தூ 2 : ( வணக்கியபடி ) உடைந்து விழுந்த நட்சத்திரமே, பிறரை உடைக்கும் பொற்சித்திரமே, அழகின் அகரமே, எழிலின் நரகமே.. வாழி வாழி….

லூ : நன்றி நன்றி.. சொல்லுப்பா.. எப்படி போயிட்டிருக்கு… பெண்கள் நம்ம கண்கள் மாதிரி.. அவங்களை கரெக்ட்ரா தப்பான வழியில கூட்டிட்டு போறியா இல்லையா ?

தூ 2 : தலைவரே.. ஆதித் தாய் ஏவாளையே பழத்தைக் காட்டி வழியை மாற்றியவரோட வாரிசு நாங்க. சும்மா விடுவோமா ? எல்லாமே மிகச்சரியாய் போயிட்டு இருக்கு. சரியான வழியில மக்கள் போகாதபடி கண்ணும் கருத்துமா பாத்திட்டிருக்கோம். இடுக்கமான வழியை விட்டு, அகலமான வழிக்கு டார்ச் லைட் அடிச்சிட்டிருக்கோம்…

லூ : எப்படி இதெல்லாம் சாத்தியம்ன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லு.

தூ 2 : கேளிக்கையின் கோமகனே… கலையை வைத்துத் தான் பெரும்பாலானவர்களை நிலை குலைய வைக்கிறேன். சாயங்காலம் ஆச்சுன்னா சீரியலை தூக்கி வீசறேன், அவங்களுக்கு கண்ணு துடைக்க கர்ச்சீப் எடுக்கவே நேரம் சரியா இருக்கு. எல்லா சீரியல்லயும் நம்ம சாத்தானிய சிந்தனைகளை தான் அழகா பேக் பண்ணி குடுக்கிறேன். எவனுக்கும் ஒரு பொண்டாட்டி கிடையாது, எவனும் அடுத்தவனை வாழ வைக்கணும்ன்னு நினைக்கிறது கிடையாது.. எப்படி நம்ம ஐடியா .

லூ : சூப்பர் சூப்பர்… ஆனா.. இதெல்லாம் வயசான பெண்கள் தானே பாப்பாங்க..

தூ : தலைவரே.. பெரியவங்க வீட்டு ஹால்ல இருக்கிற டீவில பாப்பாங்க.. சின்ன பிள்ளைங்க கையில இருக்கிற ஸ்மார்ட் போன்ல பாப்பாங்க. அவங்களுக்குத் தேவையான வீடியோவை நான் அதுல அனுப்பிட்டே இருக்கேன்ல..

லூ : ஒ.. பேஷ் பேஷ்.. வீடியோ பாக்கவே விருப்பம் இல்லாதவங்களுக்கு..

தூ 2 : தலைவரே.. நீங்க பூமிக்கு விசிட் அடிச்சு ரொம்ப நாளாச்சோ ? ரொம்ப அவுட் டேட்டடா இருக்கீங்க போல… சொல்றேன்…சொல்றேன்… ஸ்மார்ட்போனும் செல்பியும் பெண்களோட இரண்டு கண்களாக்கிட்டேன். வாட்ஸப்பும், ஃபேஸ்புக்கும் இதயமாக்கிட்டேன். டிஜிடல் கிசுகிசுவை அவங்களோட வழக்கமாக்கிட்டேன். சிற்றின்ப சிந்தனைகளை அவங்களுடைய இரத்தமாக்கிட்டேன். ஒட்டு மொத்தமா குளோஸ்..

லூ : ஹா..ஹா.. பலே பலே.. செமயா எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்றே….. உனக்கு நிச்சயம் நல்ல ஹைக் இன்கிரீமென்ட் எல்லாம் உண்டு.

தூ 2 : ரொம்ப நன்றி தலைவரே.. நல்லா பாத்து போட்டு குடுங்க… உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டியிருக்கு.

லூ : கண்டிப்பா.. பட்.. எனக்கு ஒரு சின்ன சந்தேகம். எல்லா சண்டேயும் நிறைய பெண்கள் சர்ச்சுக்கு போறாங்க, கன்வென்ஷன்கள்ல பாத்தாலும் தாய்மார்கள் தான் அதிகமா இருக்காங்க.. அப்புறம் எப்படி நீ…. இதையெல்லாம் சாதிக்கிறே.

தூ 2 : தலைவரே.. அவங்க சர்ச்சுக்கு போறதுக்கு அலோ பண்ணுவேன், ஆனா ஜீசஸ் கிட்டே போகாம ஸ்டாப் பண்ணிடுவேன். கன்வென்ஷன் போக என்கரேஜ் பண்ணுவேன், கர்த்தர் கிட்டே போகாம டிஸ்கரேஜ் பண்ணுவேன். கிறிஸ்டியன் டிவி பாக்க பெர்மிஷன் குடுப்பேன், பைபிள் கிட்டே போகாம கேர்புல்லா இருப்பேன். மொத்தத்துல அவங்க ஸ்பிரிச்சுவல்ன்னு அவங்களையே நம்ப வைப்பேன்.. ஹா..ஹா

லூ : வா..வாவ்…வாவ்.. நீ செம கில்லாடிப்பா… உனக்கு புரமோஷனும் உண்டு. நீ போகலாம்.

தூ 2 : நன்றி சூப்பர் நட்சத்திரமே..

லூ : அடுத்த ஆளைக் கூப்பிடுப்பா…

( தூ 1 போனை எடுத்துப் பேசுகிறார், சற்று நேரத்தில் அடுத்த தூதர் வருகிறார் )

தூ 3 : பதற வைக்கும் எதிராளியே, பரமனின் பகைவனே, அழிவுகளின் ஆழியே, போலிகளின் வேலியே வணக்கம் வணக்கம்

லூ : மகிழ்ச்சி மகிழ்ச்சி.. புகழ்ச்சியே எமக்கு மகிழ்ச்சி. சொல்.. உன் பணிகள் எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றன.

தூ 3 : தலைவரே.. ஆண்களிடையே பணி செய்யும் வேலை எனக்கு. நாளுக்கு நாள் வேலை கம்மியாகிக் கொண்டே தான் போகிறது. விசுவாசத்தில் இருக்கும் ஒருவனை விலக்குவது, வடை சுடுவது போல எளிதாகிவிட்டது.

லூ : ஹா..ஹா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி… நீ என்ன ஸ்ட்ராட்டஜி வெச்சிருக்கே.

தூ 3 : தலைவரே.. கடவுள் கிட்டே போகாதேன்னு யார் கிட்டேயும் நான் சொல்றதில்லை. என் கிட்டே வான்னும் நான் யாரையும் கூப்பிடறதில்லை. கடவுள் பாதி, மிருகம் பாதின்னு நினைக்கிற விஷயங்களையெல்லாம் அவங்களுக்கு பிரீயா குடுத்துட்டே இருக்கேன்.

லூ : புரியலையே… கொஞ்சம் டீட்டெயில்ஸ் பிளீஸ்

தூ 3 : தலைவரே.. மொபைல் இருக்கிறவனுக்கு சில ஆப்ஸ் குடுப்பேன்… அவன் அதுக்குள்ளயே குடியிருப்பான். அது இல்லாதவனுக்கு சில கேர்ல்ஸ் குடுப்பேன்.. அவன் அவங்களை நெனச்சு நினைச்சு அழிஞ்சே போவான்.. அதுவும் இல்லாதவனுக்கு கொஞ்சம் பணம் குடுப்பேன் அவன் பரவசத்துவ பரமனை மறப்பான்… கொஞ்சம் ஈகோ, கொஞ்சம் எரிச்சல், கொஞ்சம் கோபம், கொஞ்சம் வன்மம் இதெல்லாம் அப்படியே பிஸா மேல தூவற டாப்பிங்ஸ் மாதிரி தூவிட்டா அவங்க பாட்டுக்கு அங்கயே கிடப்பாங்க.

லூ : இதெல்லாம் அவ்ளோ ஈசியா என்ன ? ரொம்ப கஷ்டம் இல்லையா ? அவங்களுக்கு புரியாதா ?

தூ : அப்படியே கொஞ்சம் புரிஞ்சுச்சுன்னாலும் வாட்ஸப்ல நாலு ஸ்டேட்டஸ் போட்டுட்டு வேலையைப் பாக்க போயிடுவாங்க ப்ரபோ.. டோன்ட் வரி..

லூ : பட்.. அந்த ஆப்ஸ் சொன்னியே.. பைபிள் ஆப்ஸும் நிறைய வந்திருக்காமே…

தூ : அந்த ஆப்ஸ்குக்கு இடையிலயும் நான் ஆட்ஸ் குடுப்பேன்.. அவன் அந்த நூலைப் புடிச்சு வேற பட்டம் விட போயிடுவான். சிற்றின்பம் ரொம்ப பவர்புல் தலைவரே…

லூ : ஹா..ஹா.. வெரி குட் வெரி குட்… ஏதாச்சும் சவால்கள் ?

தூ : ஒரே ஒரு சவால்.. இந்த வயசான கிழடுங்க தான். ஐயையோ வாழ்க்கை முடியப் போவுதேன்னு நினைச்சு சட்டுன்னு சிலரு ஆன்மீகத்துக்கு தாவிடறாங்க…

லூ : மடப்பசங்க.. வாழ்க்கை பூரா நம்ம கூட இருப்பாங்களாம், கடைசி டைம்ல அப்படியே நம்மை கழட்டி விட்டுட்டு அந்தப் பக்கம் போயிடுவாங்களாம்.. அவங்களை எப்படி தடுப்பே ?

தூ 3 : அதுக்கும் சில டெக்னிக் உண்டு. “நீதான்ன்யா பெரிய மூப்பர்”.. ந்னு கொஞ்சம் ஈகோவை கிளறி விட்டா பாதி பேர் அவுட். நீ தப்பே பண்ணலேய்யா ந்னு கூட இருந்து நாலு வாட்டி சொன்னா மத்தவங்களும் அவுட். அவங்க மனசுல, உண்மையிலேயே கடவுள் இருக்காரா என்ன..ன்னு ஒரு சந்தேகத்தையும் அப்பப்போ நட்டு வைப்பேன். என்ன ஒரு சிலர் அப்படியும் இப்படியும் எஸ்கேப் ஆவாங்க…

லூ : ம்ம்.. மழை பெஞ்சு முடிஞ்சப்புறம் இலையில தங்கியிருக்கிற ஒண்ணிரண்டு மழைத்துளி மாதிரி, ஒரு சிலர் இருப்பாங்க.. அவங்களை நாம விட்டுத் தள்ளலாம்.

தூ 3 : இருந்தாலும் கடைசி வரை முயற்சி செய்வேன் அழிவின் அரசே..

லூ : ம்ம்ம்.. நீயும் நல்லா தான் வேலை செஞ்சிருக்கே.. உனக்கும் நிச்சயம் ஹைக் எல்லாம் உண்டு. நீ போகலாம்.

தூ 3 : நன்றி. நன்றி .. நன்றி

லூ : ( தூதர் 1 டம் ) அடுத்து இந்த சர்ச், ஸ்பிரிச்சுவல் ஏரியாவை கவனிக்கிறவனைக் கூப்பிடுப்பா. அதான் ரொம்ப முக்கியம்..

தூ 1 : இதோ… உடனே ( போனை எடுத்துப் பேசுகிறார் )

தூ 4 : இறுமாப்பின் இதயமே, பெருமைகளின் புதையலே, கர்வத்தின் கர்ஜனையே, தாழ்மையின் எதிரியே.. வணங்குகிறேன் அடியேன்…

லூ : வாப்பா..வா… எல்லாம் எப்படி போயிட்டிருக்கு ?

தூ : அமர்க்களமா போயிட்டிருக்கு.. இப்போ மட்டும் இயேசு வந்தா அவருக்கு சுழற்றி அடிக்கிறதுக்கு சாட்டையோட நீளம் பத்தாம போயிருக்கும்., “ஏண்டா மவனே என் வூட்டை கள்வர் குகையாக்கினீங்கோ” ந்னு கேட்டு அடிக்கிற நிலமைல சர்ச்களை கொண்டு வர மாடா உழைக்கிறேன்.

லூ : ம்ம்ம்.. கேர்புல் கேர்புல்.. கடவுளோட சன்னிதியில போய் வேலை பாக்கறது ரொம்ப கஷ்டம்..

தூ 4 : அதுக்கு முதல்ல கடவுளை அவங்களே வெளியேற்றற மாதிரி வேலைகளைத் தானே செய்றேன்.. கடவுள் இல்லேன்னா.. அப்புறம் அது வெறும் கட்டிடமாயிடும்ல… நமக்கு பிரச்சினை இல்லை.

லூ : ஆமா.. ஆமா.. அதை நாசூக்கா பண்ணணும்.. சதுரங்க விளையாட்டு மாதிரி உன்னோட மூவ் இருக்கணும்.

தூ 4 : நான் உங்க சிஷ்யன்.. தேவாலயத்தைக் கெடுக்கிறது நமக்கு கைவந்த கலை. இப்பல்லாம் நாம பத்தடி பாஞ்சா சபை பத்தாயிரம் அடி பாஞ்சுடுது.

லூ : வெரி குட் வெரி குட்.. எல்லாம் நம்ம புள்ளிங்கோ பல இடத்திலயும் பண்ற கடின உழைப்பு தான் காரணம். நீ சர்ச்சை எப்படி கன்ட்ரோல்ல வெச்சிருக்கே ?

தூ 4 : அது ஒவ்வொரு சர்ச்சுக்கும் தக்கபடி டெக்னிக் வெச்சிருக்கேன் உதாரணமா சில சர்ச்ல மூப்பர்களை கிளறி விட்டா போதும், சில சர்ச்ல சின்னப் பசங்களை தூண்டி விடணும், சில இடங்கள்ல பாஸ்டரைப் புடிக்கணும், சில இடங்கள்ள பெண்களை இழுக்கணும். இப்படி சபைக்கு தக்கபடி பண்றோம்.

லூ : அந்தந்த டிப்பார்ட்மென்ட் சாத்தான்ஸ் கூட கொலாபரேஷன் வெச்சு தானே பண்றீங்க

தூ 4 : ஆமா..ஆமா.. நாம எல்லாம் அழிவின் விழுதுகள் இல்லையா ? இப்போ பாருங்க… நிறைய சபைகள்ல ‘ஏய்.. எங்க ஆளு பெருசா, உங்க ஆளு பெருசா’ ந்னு ஒரு சின்ன பொறியை தூவி விட்டா போதும். அது வெடிச்சு தூள் கிளப்பும். அப்புறம் நமக்கு செம வேடிக்கை தான்.( மெதுவாக ) சாதி இல்லேன்னா நிறைய சபையை உடைக்கவே முடியாம போயிருக்கும்.

லூ : குட்..குட்.. எங்கெல்லாம் கேப் கிடைக்குதோ அங்கெல்லாம் ஸ்கோர் பண்ணணும்.. ஞாபகம் வெச்சுக்கோ எலக்ஷன், காணிக்கை, பிரசங்கம், விற்பனை இப்படி எந்த இடத்தையும் விடக்கூடாது.

தூ 4 : கண்டிப்பா.. கண்டிப்பா…ஒண்ணையும் விடறதில்லை… சில இடங்கள்ல சபை வலுவா இருக்கும், அப்போ பாஸ்டரை கூப்டு பஞ்ச் டயலாக் பேச வைப்பேன். நாலு தப்பான டாக்ட்ரின்ஸ் கொண்டு வருவேன். சில புக்ஸை நீக்குவேன், சிலதை சேப்பேன்..இது தப்புல்லன்னு சொல்லுவேன்.. அது தப்புல்லன்னு சொல்லுவேன்.. கடைசில எதுவுமே தப்பில்ல ந்னு சொல்லுவேன்.. ஹா..ஹா…

லூ : சூப்பர் சூப்பர்.. படிப்படியா… படிப்படியா அதிரடி காட்டறே.. வெரி குட்…வெரிகுட்…

தூ 4 : அது மட்டுமில்லே… சர்ச்களை உடைச்சு உடைச்சு ஏகப்பட்ட டினாமினேஷன் ஆக்கிட்டே இருக்கேன். ஒரு சர்ச்சுக்கும் இன்னொரு சர்ச்சுக்கும் சண்டையை மூட்டுவேன். நான் தான் உண்மை ந்னு சொல்லி எல்லாருமே சண்டை போடறாங்க… சோ, நம்ம வேலை ஈசியோ ஈசி..

லூ : பெர்பெக்ட்..பெர்பெக்ட்… அப்படியே மத்த சாத்தான்ஸ் கூட பேசி எதையெல்லாம் சர்ச்சுக்குள்ள கொண்டு வர முடியுமோ எல்லாத்தையும் கொண்டு வா.. அப்போ தான் சர்ச் ஏது, உலகம் ஏதுன்னு வித்தியாசமே தெரியாம போயிடும்.

தூ 4 : ஹா.. ஹா.. பக்காவா சொன்னீங்க.. அப்படியே கடவுள் ரொம்ப சாஃப்ட்ப்பா.. நீ ஏறி மிதிச்சா கூட சிரிச்சிட்டே போயிடுவாருங்கற மாதிரி ஒரு இமேஜ் கிரியேட் பண்றேன்.. அதனால கடவுள் பயமெல்லாம் காணாம போயிடுச்சு… ஒண்ணு ரெண்டு ஜீவன்ஸ் அத்தி பூத்தாப்ல வரும். அதுவும் அழிஞ்சு வர உயிரினங்கள் மாதிரி காணாம போயிடும் கூடிய சீக்கிரம். அவங்களை மற்ற கிறிஸ்தவர்களே பாத்துப்பாங்க.. நாம ஒண்ணும் கவலைப்படத் தேவையில்லை.

லூ : வெரி வெரி குட்.. உனக்கும் நிச்சயம் ஹைக் பிரமோஷன் உண்டு.. நீ போகலாம்.

தூதன் 1 : இரக்கமற்ற இதயமே வணக்கம்.. ஒரு விஷயம் சொல்லணும்.

லூ : சொல்லுப்பா.. சொல்லு.. நான் இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்.

தூ 1 : இப்படி உலகத்துல எல்லாம் நடந்தா, கடவுளோட வார்த்தை நிறைவேறுவது போல தானே. அப்போ இரண்டாம் வருகை வரும்ல. என்ன தான் உலகத்தையே நாம சேத்துகிட்டாலும் நாமளும் எரி நரகத்துல தானே விழப் போறோம். இல்லையா ?

லூ : சட்டென எழுகிறான் ( கோபத்தில் கத்துகிறான் ) நிறுத்து.. ஏன் அதை ஞாபகப் படுத்துகிறாய்.

தூ 1 : மன்னிக்க வேண்டும். பயமாக இருந்தது. நல்லவர்கள் மட்டும் கடவுளோடு சொர்க்கம் போவார்கள். நாம் முதலில் இருந்த சொர்க்கம் அது. நாம போக முடியாம ஆயிடுச்சு. அதனால மத்தவங்களையும் போக விடாம தடுக்கிறோம். ஆனா கடைசியில் நாமும், நாம் நமது வலையில் விழ வைத்திருக்கும் எல்லோருமே நெருப்புக்குத் தானே போக வேண்டும்… இல்லையா ? வேறு வழி உண்டா

லூ : நீ என்னுடைய நல்ல மூடை கெடுத்து விட்டாய்.. முடிவை ஞாபகப்படுத்தி என்னுடைய மனசை காயப்படுத்திவிட்டாய்.. உனக்கு இந்த ஆண்டு எந்த பிரதிபலனும் தரப்படாது. அடுத்த ஒரு ஆண்டு நீ சம்பளம் இல்லாமல் தான் வேலை பார்க்க வேண்டும். போ.. என் கண் முன்னிருந்து.. போ…

தூ 1 : வழுக்கி விழுந்த நட்சத்திரமே, நிமிர்ந்து எழுந்த கர்வக் கதிரே … அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். நான் சொன்னது தவறு தான் மன்னித்து விடுங்கள்.

லூ : ஹா..ஹா… சாத்தானிடம் மன்னிப்பு கேட்கும் ஒரே ஒருத்தன் நீ தான். சரி..சரி.. உனக்கு ஒரு ஸ்பெஷல் அசைன்மென்ட் தரேன்.. அதை சரியா பண்ணினா உனக்கு புரமோஷன் தரேன். மன்னிச்சு விட்டுடறேன்.

தூ 1 : சொல்லுங்க.. சொல்லுங்க.. என்ன பண்ணணும்.

லூ : கிறிஸ்மஸ் வருதுல்ல.. அந்த நாளில தான் இந்த உலக கிறிஸ்தவர்கள் எல்லாருமே அந்த இயேசுவை நினைக்கிறாங்க.. மனம் திரும்புறாங்க… பாவ மன்னிப்பு கேட்கிறாங்க.. ஏழைகளுக்கு உதவறாங்க… ரொம்ப நேரம் சர்ச்ல இருக்காங்க… பிரேயர் பண்றாங்க… சே…சே..சே…ஐ..ஹேட் திஸ்..

தூ 1 : உண்மை தான் .. உண்மை தான்..

லூ : அதனால இந்த கிறிஸ்மஸ் காலத்துல, கிறிஸ்மஸோட உண்மையான அர்த்தத்தை விட்டு விலகி நடக்கிறமாதிரி சிட்டுவேஷன்ஸை கிரியேட் பண்ணு…

தூ 1 : அது ரொம்ப சிம்பிள் … இயேசுவுக்கும் மனுஷனுக்கும் இடையிலே கொஞ்சம் ஆடம்பரங்களை அள்ளி விட்டா போதும். கடவுளுக்கும் மனுஷனுக்கும் இடையே கொஞ்சம் ‘டேக் டைவர்ஷன்’ ஐட்டம்ஸை வெச்சுட்டா போதும்.

லூ : அதெல்லாம் நமக்கு கை வந்த கலையாச்சே… என்ன பண்ண போறே.

தூ 1 : பழிகளின் பிதாவே.. மக்களோட பார்வை விடிவெள்ளியாம் இறைவனை விட்டு விட்டு, மரத்துல கட்டற நட்சத்திரங்கள்ல விழற மாதிரி பாத்துக்கறேன். குடிலை அலங்காரம் செய்யத் தூண்டிட்டு இயேசுவை மறக்கடிக்க வைக்கிறேன். மரத்தை அலங்காரம் செய்ய வெச்சுட்டு, மனதை அலங்கோலமா வெச்சிருக்க உற்சாகப் படுத்தப் போறேன். கவனமெல்லாம் கர்த்தரிடம் இல்லாம மட்டனிடம் இருக்கிற மாதிரி மாத்தப் போறேன்.

லூ : ஹா..ஹா.. நான் புள்ளி வெச்சா நீ கோடே போடறே.. சபாஷ் சபாஷ்

தூ 1 : அது மட்டுமல்ல இசையின் வித்தகனே.. சர்ச்க்கு உள்ளேயும் யாரோட பாட்டு நல்லா இருக்கு, யாரோட மெசேஜ் நல்லா இருக்கு, யாரோட ஸ்கிட் நல்லா இருக்குன்னு ஒரு போட்டியை உருவாக்கி, பொறாமையை விதைக்கப் போறேன். மக்கள் இணைஞ்சே இருந்தாலும் மனசுல பிரிஞ்சே கிடக்கற மாதிரி பண்ணிடறேன்.

லூ : பலே..பலே… இப்போ தான் எனக்கு உற்சாகம் மறுபடியும் வந்திருக்கு… நீ போ.. உண்மையான கிறிஸ்மஸ் ங்கறது கிறிஸ்துவை இரட்சகரா ஏற்றுக் கொள்வதுங்கற உண்மையை மக்கள் மறக்கணும். அப்படியே.. டிவில உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக ந்னு நாலு படமும் போட ஏற்பாடு பண்ணு.. அப்போ தான் இந்த பைபிள், சர்ச் எல்லாம் கொஞ்சம் ஓரமா போயிடும். ரொம்ப தூரமா போயிடும்.

தூ 1 : அதெல்லாம் நீங்க சொல்லணுமா.. இந்த ரெண்டு நாளும் அவங்களை திசை திருப்பிட்டா… அவ்ளோ தான் அப்புறம் அவங்க வழக்கம் போல ‘பழைய குருடி, கதவைத் திறடி’ ந்னு போயிடுவாங்க…

லூ : ஹா..ஹா… கிரேட் கிரேட்… இப்போ நானே உனக்கு சொல்லுவேன்.. ஹேப்பி கிறிஸ்மஸ் .. ஹா..ஹா…

பின் குரல் :

உலகம் சாத்தானின் தந்திர வலையில் சிக்கிக் கிடக்கிறது. ஆனால் முடிவு இறைவனிடம் தான் இருக்கிறது. அழிவின் பாதையா, வாழ்வின் பாதையா ? நல்லதைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. கிறிஸ்மஸ் என்பது இறைமகனை உள்ளத்தில் ஏற்றும் காலம். அதற்கு தடையாய் இருக்கும் ஆடம்பரங்கள், எண்ணங்கள், சிந்தனைகள், கேளிக்கைகள் போன்றவற்றை விலக்குவோம். இறைவனையே இதயத்தில் வைப்போம்.

அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்

*

Posted in Articles, Christianity, Sunday School

பட்டி மன்றம் : கிறிஸ்தவ வாழ்க்கை போராட்டம் நிறைந்தது ( பழைய ஏற்பாடு )

கிறிஸ்தவ வாழ்க்கை போராட்டம் நிறைந்தது

கிறிஸ்தவ வழ்க்கை போராட்டம் நிறைந்தது என்று சொல்வதை விட, போராட்டம் இல்லையேல் அது கிறிஸ்தவ வழ்க்கையே இல்லை என சொல்லி விடலாம். போலித்தனமான கிறிஸ்தவர்கள் மட்டுமே போராட்டமில்லாத வாழ்க்கை வாழ்கிறார்கள். சமரசம் செய்து கொள்கின்ற கிறிஸ்தவர்கள் மட்டுமே போராட்டமில்லாத வாழ்க்கை வாழ்கிறார்கள். “இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” என்கிறது பைபிள். ஒருவேளை உபத்திரவம் உண்டு என்றோ, உபத்திரவமே இல்லை என்றோ பைபிள் சொல்லவில்லை.

 “ நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். என்கிறது யாக்கோபு நூல். சோதனைகளில் அகப்பட்டால் என்றல்ல, அகப்படும் போது என்பதைக் கவனியுங்கள்.  பாடுகள் இல்லாத வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கையே அல்ல ! முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள். 

இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல – என பவுல் சொல்வதைப் போல, நமது எதிர்கால மகிமைக்காக நிகழ்கால கஷ்டங்களை இஷ்டத்துடன் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதுவே முக்கியம். ஏனென்றால் யாக்கோபு 1 : 12 சொல்கிறது, “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்”. சோதனைகளைத் தவிர்க்கிற மனுஷன் அல்ல, சகிக்கிற மனுஷன். 

பழைய ஏற்பாட்டை எடுத்துக் கொண்டால் ஏராளமான உதாரணங்களை நாம் காணமுடியும். சோதனைகளை எதிர்கொண்டு, இறைவனுக்காய் வைராக்கியமாய் நின்று விசுவாசத்தைக் காத்துக் கொண்ட மக்களின் வாழ்க்கை பிரமிக்க வைக்கிறது. 

யோசேப்பு என்ன தவறு செய்தார் ? இறைவனின் அருளைப் பெற்றிருந்தார். அதற்காக சகோதரர்களால் வெறுக்கப்பட்டார். அடிமையாக மாற்றப்பட்டார். பாவத்துக்கு எதிர்த்து நின்றதால் சிறையில் அடைக்கப்பட்டார். எத்தனை எத்தனை கொடுமைகளை அவர் சந்தித்தார். அந்த போராட்டம் தான் அவரை மாபெரும் தலைவராக மாற்றியது !

மோசே சந்தித்த போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமா ? வீட்ல ரெண்டு பிள்ளைகளையே ஒழுங்கா நடத்திட்டு போக நம்மால முடியல. இருபது இலட்சம் மக்களை வழிநடத்திட்டு போக எவ்ளோ கஷ்டப்பட்டார். எத்தனை முறை மக்களால் வெறுக்கப்பட்டார். எத்தனை முறை மன உளைச்சலுக்கு ஆளானார். அத்தனை போராட்டங்களையும் தாண்டியதால் தான் அவரால் மக்களை கானான் வரை கொண்டு வர முடிந்தது. இருந்தாலும் அவரால் கானானுக்குள் நுழைய முடியவில்லை. எவ்வளவு பெரிய போராட்டம்

என்னை மாரா என அழையுங்கள் என வலியின் உச்சத்தில் சொன்னார் நவோமி. மகன்களை இழந்து, கணவனை இழந்து, நாட்டை இழந்து எவ்வளவு பெரிய போராட்டத்தைச் சந்தித்தார்ர். கடைசியில் ரூத் நவோமி இடையேயான உறவும், அன்பும். இறைமகன் இயேசுவின் வருகைக்கு முன்னுதாரணமான வாழ்வும் அவர்கள் மூலமாய் கிடைத்தது. 

எல்லோருக்கும் தெரிந்த யோபுவின் வாழ்க்கையைப் பாருங்கள். யோபுவைப் போல அத்தனையும் இழந்தாலும், “இறைவன் கொடுத்தார், இறைவன் எடுத்தார்.. அவருக்கே மகிமை” என சொல்ல யாரால் முடியும். அவரைப் போல போராட்டத்தைச் சகித்தவர் யார். அவரைப் போல இறைவனின் அனுமதியோடு, சாத்தானால் பந்தாடப்பட்டவர் யார் உண்டு ?

எரேமியா இறைவாக்கினர் துயரத்தினால் நிரம்பப்பட்ட இதயத்தைக் கொண்டிருந்தார். அதனால் அழும் இறைவாக்கினர் என அழைக்கப்பட்டார். உடலளவில் காயம்படாவிட்டாலும், உள்ளத்தில் பெரும் துயருடனான போராட்ட வாழ்க்கையே அவருக்கு வாய்த்தது. 

தாவீதின் வாழ்க்கையும் போராட்டம் நிறைந்தது. அவர் விரட்டப்பட்டார் , கொலை செய்ய தேடப்பட்டார், பலராலும் வெறுக்கப்பட்டார். அத்தனை போராட்டங்களுக்கு இடையிலும் மீண்டும் மீண்டும் இறைவனின் பாதத்திலே சரணடைபவராக இருந்தார். மகனாலேயே கொலை செய்யத் துரத்தப்பட்ட அவரது வாழ்க்கை எவ்வளவு போராட்டம் நிறைந்தது. இறைவனின் இதயத்துக்கு நெருக்கமானவராக வாழ்வது எத்துணை போராட்டமானது. 

இவ்வளவும் ஏன் ? ஆபிரகாமின் வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளுங்கள். கிளம்பு என்று சொன்னவுடன் அனைத்தையும் விட்டுவிட்டுக் கிளம்புகிறார். வழியெங்கும் சோதனைகள், வேதனைகள். போராட்டக்களத்தில் தான் வாழ்கிறார். உயிருக்கு மேலான ஈசாக்கைப் பலியிடச் சொன்னபோது எத்தனை மனப்போராட்டம். நாம் யாருமே இன்று செயல்படுத்த முடியாத போராட்டம். அதையும் வெற்றி கொள்கிறாரல்லவா ?

அத்தனையையும் தாண்டி இறைவன் சொல்கிறார். “என் கிருபை உனக்குப் போதும்” . அந்த நம்பிக்கையே நம்மை வாழ வைக்கிறது. 

“நீ வியாகுலப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்போது, கடைசிநாட்களில் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயானால்” ( எண் 4 :30 ) என்கிறது பைபிள். நாம் கர்த்தரிடத்தில் இருக்கும் போதும், கர்த்தரிடத்தில் திரும்பவேண்டுமென கடவுள் விரும்பும் போதும் நமக்கு சோதனைகள் வருகின்றன. 

பாடுபடுவதற்குத் தயாராய் இருப்பவர்களையே பைபிள் குறித்து வைக்கிறதே. அவர்களே விண்ணகத்துக்காக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்கிறார்கள். தங்கள் ஆன்மாவையோ இழந்து விடுகிறார்கள். 

இணைத்திருமறை நூல்களில் ஒன்றான மக்கபேயர் நூலில் விசுவாசத்துக்காக படுகொலை செய்யப்படும் ஏராளமான நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு கதையில் ஒரு தாயின் ஏழு பிள்ளைகளுன் ஒன்றன் பின் ஒன்றாக தாயின் கண்முன்னாலேயே படுகொலை செய்யப்படுகின்றனர். வாணலியில் வறுக்கப்படுகின்றனர். கதறக் கதற தோலை உரிக்கின்றனர். ஆனால் தாயோ மகன்களை ஊக்கமூட்டுகிறார். கடைசியில் அவரும் கொல்லப்படுகிறார். விசுவாச வாழ்க்கை போராட்டமானது. 

பன்றி இறைச்சி தின்ன கொடுமைப்படுத்தப்படுகிறார் ஒருவர். பன்றி இறைச்சி தின்பது போல நடிக்கவாவது செய் என்கிறார்கள். இல்லையேல் கொடும் சித்திரவதைக் கூடமே உனக்குக் கிடைக்கும் என்கிறார்கள். அவரோ சித்திரவதைக் கூடத்தைத் தேர்ந்தெடுக்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கை போராட்டமானது. 

இறைவாக்கினர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் போராட்டமானது தான். இறைவனுக்காக உயிரைக் கொடுத்த ஏசாயா. வாழ்க்கையைக் கொடுத்த ஓசேயா என எல்லா இறைவாக்கினர்களையும் இதில் அடக்கலாம். கிறிஸ்தவ வாழ்க்கை போராட்டமானது !

சங்கீதங்களில் போராட்டங்களின் பல்வேறு தன்மைகள், வடிவங்களை நாம் வாசிக்கலாம். எல்லாமே பழைய ஏற்பாட்டின் காலத்தைய நிகழ்வுகளே. 

எகிப்திலே வாழ்ந்தவரை மக்கள் இறைச்சியும், உணவும் உண்டு சந்தோசமாகத் தான் இருந்தார்கள். எப்போது கடவுளின் விடுதலை தேவைப்பட்டதோ, எப்போது கடவுளின் பாதையில் நடக்க விரும்பினார்களோ அப்போது தான் போராட்டம் ஆரம்பமானது. அடிமை வேலை அதிகமானது. நானூறு ஆண்டுகள் அவர்களுக்கு வாழ்க்கை சாதாரணமாய்த் தான் போனது, போராட்டமாய் அல்ல.

போராட்டத்தின் பக்கத்தில் நிற்பதையே பழைய ஏற்பாட்டு இறை மனிதர்கள் தேர்ந்தெடுத்தார்கள். “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என போராட்ட வாழ்வையே தேர்ந்தெடுத்தார் யோசுவா.

தானியேல், அவருடைய நண்பர்கள் இவர்களுடைய கதை நமக்கு எதைச் சொல்கிறது. போராட்டங்களின் குறுகிய பாதையில் தானே அவர்கள் நடந்தார்கள். சுயநலத்தின் அகன்ற பாதையை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லையே. நெருப்பில் எறியுங்கள், காப்பற்றினாலும் காப்பாற்றாவிட்டாலும் அவரே எம் தேவன் என அறிக்கையிட எத்தனை நெஞ்சுரம் வேண்டும். நாற்பத்தாறு முழம் உயரத்தில் எரிந்த நெருப்பு அவர்களுக்கு குளிராய் இருந்ததல்லவா ? ஏழு சிங்கங்கள் இருந்த குகையில் ஆறு நாள் இருந்தார் தானியேல் என்கிறது இணை திருமறை நூல். தினமும் இரண்டு ஆடுகளும், இரண்டு மனித உடல்களும்  சாப்பிட் டு வந்த சிங்கங்கள் ஆறு நாள் பட்டினியாய்க் கிடந்தபோதும் தானியேலைத் தொடவில்லையே ! போராட்டம் இறைவனின் பாராட்டாகுமல்லவா !!

பழைய ஏற்பாட்டில் வெறுமனே விசுவாசிக்கிறேன் என்று சொல்லி விட்டு ஆலயத்துக்குப் போய் வர முடியாது. பல இனங்களின் போர்களுக்குத் தப்ப வேண்டும். குடும்பங்களை இழக்க வேண்டும். பலிகளை செலுத்தவேண்டும் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். 

நோவாவைப் போல யாரின்று நூறாண்டு இருந்து பேழை செய்வது ? நாலு நாளில் பதில் வரவில்லையேல் ஆலயத்தை மாற்றுகிறோம், நான்காண்டு பதில் வரவில்லையேல் ஆண்டவரையே மாற்றுகிறோம் இல்லையா ?

ஆரோனைப் போல யாரின்று பாலை நிலத்தில் அலைந்து திரிவது ? பிரச்சனைகளைக் கண்டு பயந்து உதறிவிட்டு ஓடிவிட மாட்டோமா ?

யாக்கோபைப் போல உடைபட்டபின் உத்வேகமெடுத்த வரலாறும், சிம்சோனைப் போல சின்னா பின்னமானபின் விஸ்வரூபமெடுத்த வரலாறும் நமக்கு போராட்டங்களை புரிய வைக்கின்றன இல்லையா ?

கடைசியாக, பழைய ஏற்பாட்டு வீரர்களின் போராட்டமான வாழ்க்கை தான் முதிய ஏற்பாட்டு ஆதித்திருச்சபையினருக்கு அடிப்படையாய் இருந்தது. அவர்களுடைய விசுவாசத்தை அது தான் கட்டியெழுப்பியது. அவர்களிடம் அப்போது இருந்தது பழைய ஏற்பாடு மட்டுமே. அது தான் அவர்களைக் கட்டமைத்தது. அந்த போரட்டமே நிறைய மறை சாட்சிகளை உருவாக்கியது. 

எனவே கிறிஸ்தவ வாழ்க்கையின் போராட்டம் பழைய ஏற்பாட்டில் தான் அதிகமாய் இருந்தது 

*

Posted in Articles, Christianity, Poem on People, SAINTS

சிசிலியா எனும் இறையிசை

சிசிலியா எனும் இறையிசை

Guercino - St. Cecilia .jpg

இசையும் இறையும்
இரண்டறக் கலந்தவை.

இருளைக் கிழித்து
ஒளி பிறந்தது !
பிரபஞ்சப் படைப்பின்
முதல் மௌன இசை.

இயேசுவின் பிறப்பை
இடையர்க்கு அறிவித்தது
தூதரின் மெல்லிசை.

கல்வாரியில்
மீட்பின் முனகல்கள்
துயரத்தின் இசை.

இசையின்றி
இறையில்லை.

சிசிலியா
அந்த
இசையான இறைவனை
இசையாலே அசைத்தவர்

இசைக்கலைஞரின்
பாதுகாவலி மட்டுமல்ல,
இசைக்கருவிகளை
உருவாக்கும் கலைஞருக்கும்
அவரே பாதுகாவலி.

இறை தங்கும் ஆலயமாய்
தன்னை
சிறுவயதிலேயே
அன்பரின் பாதத்தில்
அடிமையாய் வைத்தவர்

சிற்றின்பத்தின் சிற்றோடைகளை
விடுத்து
பேரின்பத்தின் பெருநதிக்காய்
உயிருக்குள்
பாடல் இசைத்துக் கிடந்தவர்.

விண்வாழ் தூதர்
மண்வந்து
இசைப்பேழையின் அருகிருந்து
இடையறாமல் காத்தது
இந்தப் புனிதரின் வாழ்வில் தான்.

திருமணம் வந்து
தேரில் ஏற்றிய போதும்
இதயத்தில்
தேவனை மட்டுமே ஏற்றினார்.

கனவுகளோடு வந்த‌
கணவனையும்
கடவுளோடு இணைத்து
த‌ன்
கன்னித் தன்மையை
கடவுளுக்காய்க் காத்தவர்.

லில்லிப் பூக்களும்
ரோஜாப் பூக்களுமாய்
தூதர்கள்
இவரருகே வாசம் புரிவதை
வாசனை கண்டு
வியந்தவர் பலர்.

லில்லி,
தூய்மையின் அடையாளம்.
உடல் உள்ளத் தூய்மையை
சிசிலியா காத்ததன்
விண்ணக அங்கீகாரம்.

ரோஜா
மறைசாட்சியின் அடையாளம்.
குருதிக் கரையில்
இறையில் கரைவார் எனும்
நிறைவின் குறியீடு.

தன்
இதயத்தின் இசையைக் கூட‌
பிறருக்குப்
புரியவைக்கும்
புதுமையின் அம்சம் அவர்.

த‌ன்
வாழ்க்கையின் வழியெங்கும்
இறைவார்த்தையை
நடவு செய்த நங்கையவர்.

ரோம்,
கிறிஸ்தவத்தை
வெறி கொண்டு வேட்டையாடிய‌
காலம் !
கிறிஸ்தவர்களை
பொறி வைத்து
படுகொலை செய்த காலம்.

சிசிலியாவின்
கணவரும், அவர் சகோதரரும்
அதிகாரிகள் முன்
வீசப்பட்டனர்.

விரோதத்தின் விழிகள்
அவர்களை எரித்தன.
இயேசுவை மறுத்தால்
வாழ்க்கையைத் தொடரலாம்,
இயேசுவை எடுத்தால்
வாழ்க்கையை முடிக்கலாம்
எதுவேண்டும் ? என‌
கர்வம் குரல்கள் கர்ஜித்தன.

நிலைக்களமான‌
வாழ்க்கைக்காய்
கொலைக்களமே
போதுமென தேர்ந்தெடுத்தனர்.

ஜீவனை காப்பதற்காய்
ஜீவனை விட்டனர்.

எரிச்சலில் எரிமலையாய்
எதிரிகள் திரிந்தனர்.

முல்லை மலரான‌
மங்கையை
அழிப்பதே
அடுத்த இலக்கென‌
அலறித் திரிந்தனர்

அதிகாரி
கறையானான்
சிலிலியா
சிறையானாள் !

இயேசுவை உதறு
அளிப்போம் சிறகு
என்றனர்.

பரமனை பரிகசித்தால்
வசந்தங்கள்
பரிசளிப்போம்
என்றனர்.

சிசிலியா சிரித்தாள்.

கடவுளைப் புறந்தள்ளி
உலகினில்
ஒட்டுவதா ?
உலகினை உதறிவிட்டு
இறையினை
எட்டுவதா ?
நான் நல்ல பங்கை தேர்ந்தெடுப்பேன்.

உன்
மரணப் பரிசு போதும்
மன்னவனை மறுதலியேன்
என்றாள்.

இருட்டான‌
குளியலறையில்
அடைக்கப்பட்டார் இசைப்பறவை.

ஏழுமடங்கு வெப்பமான‌
நீராவி
அறையை நிறைத்தது.
அவள் அங்கமோ
இறையில் குளிர்ந்து
இசையில் மிளிர்ந்தது.

சாவாள் என நினைத்திருந்தவள்
சாதகம் செய்வதைக் கண்டு
அதிகாரி
அலறினான்

வாள்களால் அவளை
வீழ்த்துங்கள்,
தலையினை வெட்டி
தரையின் வீசுங்கள்
என்றான்.

தலைவனுக்காய் தலைதர‌
சம்மதம் எனக்கு
அதுவே
நிலைவரம் எனக்கு
என்றாள் சிசிலியா.

வாள்கள்
கழுத்தை நோக்கி
கழுகு போல் பாய்ந்தன.
மூன்று முறை
அந்த மெழுகுக் கழுத்தை
கூர்வாள்கள் குதறின.

மூவொரு இறைவனின்
பிரியையை
மூன்று வெட்டுகளால்
பிரிக்க முடியவில்லை.

மூன்று முறைக்கு மேல்
வெட்ட‌
அன்று
சட்டப்படி அனுமதியுமில்லை !

வெட்டியவர் ஓடினர்
வெட்டுப்பட்டவர் பாடினார்.

மீனின் வயிற்றுக்குள்
மூன்று நாள் இருந்த‌
யோனாவாய்,
மண்ணின் மடியினில்
மூன்று நாள் இருந்த‌
மனுமகனாய்
செசிலியா மூன்று வெட்டுகளுடன்
மூன்று நாள் இருந்தார்.

அந்த நிலையிலும்
புன்னகைத்தாள்
போதித்தாள்
நானூறு பேரை மனம் மாற்றினார்.

உள்ளதையெல்லாம்
ஏழைகளுக்கும்
உள்ளத்தை இயேசுவுக்கும் கொடுத்தார்.

இறையோடு வாழ்ந்த‌
இல்லத்தை
இறைவனுக்கு
ஆலயமாக்கச் சொன்னார்

கடைசியில்
மரணம் மெல்ல சத்தமிட்டது
இசையின்
நெற்றியில் முத்தமிட்டது.

ராகம் ஒன்று
புல்லாங்குழலுக்குள் புகுந்ததாய்,
நாதம் ஒன்று
வீணைக்குள் அடைந்ததாய்
செசிலியா
இறைவனின் இதயத்தில்
நிறைந்தாள்.

மண்ணகம்
துயர் கண்டது.
விண்ணகம் இசைகொண்டது

முதல் நூற்றாண்டின்
கடைசியில் முளைத்தவர்
இரண்டாம் நூற்றாண்டு
முளைத்ததும்
விடைபெற்றார்.

நான்காம் நூற்றாண்டு
திருச்சபை இவரை
புனிதரெனக் கண்டது.

பதினைந்தாம் நூற்றாண்டில்
அவர் கல்லறை
திறக்கப்பட்டது.

துயில் கொண்ட‌
தூரிகையாய் அவர் தெரிந்தார்.
அன்றலர்ந்த மலரென‌
உடல் அழியாதிருந்தது.
மலரின் நறுமணம் விலகாதிருந்தது.

நவம்பர் 22
விழா நாள் என‌
அவர் பெயரை திருச்சபை
எழுதிக் கொண்டது.

சிசிலியா
தூய்மையின் இசை.
சிசிலியா
இசையின் தூய்மை.

*

சேவியர்