
காட்சி 1
(இரவு பன்னிரண்டு மணி , நித்யா போனில் பேசுகிறாள் )
நித்யா : ஏய் வித்யா… எனக்கு ஒரு டவுட் இருக்குடி… நான் வாட்ஸப் பண்ணியிருக்கேன் பாரேன்.
வித்யா : ( வித்யா பேசும்போது குரல் மட்டும் கேட்கும் … ) பாத்தேண்டி, சரியாவே தெரியல. இன்னொரு வாட்டி எடுத்து அனுப்பு.
நித்யா : சரி..சரி… நீ எல்லாம் படிச்சுட்டியா ?
வித்யா : என்னத்த படிச்சுட்டியா ? இன்னும் பாதி கிணறு தாண்டலடி.. எப்போ படிச்சு.. எப்போ முடிக்கப் போறேனோ.
நித்யா : நான் முக்கி முக்கி முக்காக் கிணறு வந்துட்டேன். இன்னும் கிடக்கு படிக்க..
வித்யா : ஆமா.. படிக்கலாம்ன்னு உக்காந்தா நம்ம பிரண்ட்ஸ் குரூப்ல ஒரே அரட்டை.. டைம் போனதே தெரியல. வேஸ்ட் பண்ணிட்டேன். இன்னும் படிக்க வேண்டியது எக்கச்சக்கம் கிடக்கு.
நித்யா : ஆமாடி.. நானும் டிக்டாக் கேட்டுட்டு இருந்தேன் ரொம்ப நேரம் சிரிச்சு சிரிச்சு இருந்தேன். எக்ஸாமுக்கு இடையே கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும்ல.
வித்யா : ஆமாடி… படிக்க உக்காரும்போ தான் ஸ்கூல்ல நாம் பண்ற கலாட்டா எல்லாம் ஞாபகத்துக்கு வருது. அதுவும் ஒவ்வொரு வாத்யாரையும் நாம கலாய்க்கிறது தான் மனசுல வருது. அப்புறம் எங்கே படிப்புல கவனம் இருக்கப் போவுது
( அப்போது அம்மா வருகிறார் )
அம்மா : என்னம்மா ? உங்களுக்கு இப்போ தான் பொழுது விடியுதா ? நடு ராத்திரியில உக்காந்து ஆந்தை மாதிரி அரட்டை அடிச்சிட்டு இருக்கே. போய் உக்காந்து படி, இல்லேன்னா நல்லா தூங்கு.
நித்யா : இல்லம்மா. ஒரு டவுட் கேட்டிட்டிருந்தேன்
அம்மா : ஆமா. உங்களுக்கு எந்த நேரமும் வாட்சப் நோண்ட வேண்டியது. அப்புறம் படிப்பு எங்கே வரும் ? செல்போனே ரொம்ப கெடுதல்ன்னு சொல்றாங்க… அதை கீழே வைக்க மாட்டேங்கறீங்க.
நித்யா : பாடத்தை தான்மா போட்டோ எடுத்து அனுப்பிட்டிருந்தோம்.. வேற ஒண்ணும் இல்லை.
அம்மா : ஆமா.. ஆமா… கடைசி நிமிசம் வரைக்கும் செல்பி எடுத்துட்டு திரிய வேண்டியது. கடைசி கட்டத்துல குய்யோ முய்யோன்னு கத்த வேண்டியது. நீங்க என்ன ஒட்டகமா ? ஒரே நேரத்துல எல்லாத்தையும் கரைச்சு குடிக்கிறதுக்கு.
நித்யா : ஐயோ.. அம்மா.. மிட்நைட்ல வந்து அட்வைஸை அவுத்து வுடாதீங்கம்மா…
அம்மா : ஆமா, நான் தான் அட்வைஸ் பண்றேனாக்கும். “பையத் தின்னா பனையையும் தின்னலாம்” ந்னு சொல்லுவாங்க. அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா ? கொஞ்சம் கொஞ்சமா சாப்டா பனை மரத்தைக் கூட சாப்டலாம்ன்னு. நீங்க என்னடான்னா எக்ஸாமுக்கு முந்தின நாள் தான் ஒரே நேரத்துல மலையை முழுங்க பாக்கறீங்க. அதெல்லாம் நடக்குமா ?
நித்யா : அம்மா.. சரிம்மா… கிளம்பு.. நான் தூங்க போறேன்.
காட்சி : 2
( நித்யா அவளுடைய இரண்டு தோழிகளான மாலா, ஜெனிஃபர் இருவரையும் சந்திக்கிறாள் )
மாலா : ஏய் நித்யா.. எப்டி இருக்கே.. எக்ஸாம் நெருங்க நெருங்க ஒரே டென்ஷனா இருக்குடி.
நித்யா : அதையேண்டி கேக்கறே.. அமுத சுரபி மாதிரி தோண்டத் தோண்ட பாடம் வந்துட்டே இருக்கு. என்ன பண்றதுன்னே தெரியல.
மாலா : ஆமா.. நிறைய இருக்கு படிக்க… . நீ ஃபுல்லா படிச்சுட்டியா ஜெனிஃபர் ?
ஜெனிஃபர் : என்னத்த படிக்க ? ( கையை மேலே காட்டி ) எல்லாம் மேல இருக்கிறவரு பாத்துப்பாரு.
மாலா : யாரு ஆண்டவரா ?
ஜெனிஃபர் : ஆமா.. இந்த வருஷம் வந்த வாக்கு தத்தம் என்னன்னு தெரியுமா ? “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்” தான். சோ.. நான் அமர்ந்திருக்கிறேன். அவர் ஜெயிக்க வைப்பாரு
மாலா : நீ ரொம்ப ஓவர்டி.. நான் படிச்சிருக்கேன். நான் எழுதப்போறேன். சும்மா சும்மா கடவுளை எல்லாம் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.
ஜெனிஃபர் : ஏண்டி ? உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா ?
மாலா : கடவுள் என்ன பேனா புடிச்சு உனக்கு எக்ஸாமா எழுதப் போறாரு… சும்மா படிச்சதை எழுது. தேவையில்லாம கடவுள் கிடவுள்ன்னு புலம்பாதே.
நித்யா : அப்படியெல்லாம் சொல்லாதேடி.. கிடைக்கிற மார்க்கும் கிடைக்காம போக போவுது.
ஜெனிஃபர் : ம்ஹூம்.. கடவுள் கோச்சுக்க போறாரா என்ன ?
நித்யா : நான் ரிஸ்க் எடுக்க தயாரா இல்ல… படிக்கணும், கடவுளையும் நம்பணும்.
மாலா : ஆமா.. என் உன் கண்ணு இப்படி சிவந்து கெடக்கு ? ஸ்ட்றாபெரி பழம் மாதிரி ?
நித்யா : நைட்டு தூங்கும்போ ரெண்டு மணி.. இப்போ தூக்கம் சொக்குது. ஒரு டீ குடிப்போமா ?
மாலா : ம்ம்ம்.. போலாம்டி
காட்சி 3
( நித்யா, மாலா, ஜெனிஃபர் டீ கடைக்குப் போகிறார்கள். அங்கே ராபர்ட் இருக்கிறான் )
நித்யா : ஹேய்.. ராபர்ட்… என்னடா டீ கடையில உக்காந்திருக்கே ? எப்படியும் எக்ஸாம் முடிச்சு டீ போட வேண்டியது தான்னு முடிவு பண்ணி ஏற்கனவே வந்து செட்டில் ஆயிட்டியா ?
ராபர்ட் : நான் ஏன் டீ போட போறேன்.. நான் ஸ்கூல் முடிச்சு பெரிய பெரிய காலேஜ்ல சேரப் போறேன்.
நித்யா : பெரிய காலேஜ்… நீ… அதுக்கு நல்ல மார்க் எடுக்கணும் தெரியும்ல…. மார்க்..மார்க்….
ராபர்ட் : நீ என்னப்பா விஷயம் புரியாம, மத்தேயு மார்க் ந்னு பேசிட்டிருக்கே. இப்பல்லாம் எல்லாத்துக்கும் ஆள் இருக்கு. யாராவது அரசியல் தலைவரையோ, காலேஜ் ஆட்களையோ புடிச்சா போதும். சீட்டெல்லாம் சிம்பிளா கிடைக்கும்.
நித்யா : அதெல்லாம் நம்பும்படியாவா இருக்கு… ஒழுங்கா படிக்கிற வேலையைப் பாரு.
ராபர்ட் : படிக்கிறதெல்லாம் கஷ்டமான வேலைப்பா… லைஃப்ல எல்லாம் ஈசியா கிடைக்கணும். இப்ப தான் ஏகப்பட்ட காலேஜ்கள் வந்துச்சுல்ல, சீட் கிடைக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா என்ன ?
மாலா : அதெல்லாம் லட்சக்கணக்கில பணம் இருக்கிறவங்களுக்கு தான் செட் ஆகும். அதுவும் இனிமே நீட் மாதிரி எஞ்சினியரிங் காலேஜுக்கும் எக்ஸாம் கொண்டு வரப் போறாங்க, படிக்காம எஸ்கேப் ஆகவே முடியாது.
ராபர்ட் : அப்படியே மார்க் முக்கியம்ன்னா காப்பி அடிக்கிறதுக்கு என்ன வழின்னு யோசிப்பேன் .. படிச்சு கஷ்டப்பட மாட்டேன்… ஹா…ஹா…
நித்யா : உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. அண்ணே.. நாலு டீ ஸ்றாங்கா போடுங்க..
ராபர்ட் : see… நான் படிச்சு பாத்தேன், மண்டைல ஏறல. இப்போ சப்ஜெக்ட் எல்லாம் டஃப் ஆக்கிட்டாங்க. அதனால படிச்சு கஷ்டப்பட வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். அவ்ளோ தான்…
( டீ வருகிறது )
ராபர்ட் : ..அண்ணே.. டீ நல்ல பால்ல தானே போடறீங்க ? இப்போ பால் முழுக்க கலப்படம்ன்னு சொல்றாங்க. டீ தூள் கூட ஃபெர்டிலைசர் கலந்து வருதாம்.
டீகடைக்காரர் : நம்ம கடையில அநியாயமான விஷயமே கிடையாதுப்பா.. இது இயேசு எனக்குக் குடுத்த வாழ்க்கை.. நீங்க குடிங்க. ஊருக்கு தான் உபதேசம் பண்றீங்க…
மாலா : என்னண்ணே ஊருக்கு உபதேசம்.
டீ : இல்ல.. அடுத்தவன் நேர்மையா இருக்கணும்ன்னு நாம எப்பவும் நினைக்கிறோம்.. ஆனா நாம நேர்மையா இருக்கிறோமா ?
ராபர்ட் : ஏன் அப்படி சொல்றீங்க ?
டீ : இல்ல… நான் போடற டீ நேர்மையா இருக்கணும்ன்னு நினைக்கிறீங்க. ஆனா நீங்க எழுதற தேர்வு நேர்மையா இருக்கணும்ன்னு நினைக்க மாட்டேங்கறீங்க. நீங்க ஒரு காலேஜ்ல நேர்மையா போய் ஜாயின் பண்ணணும்ன்னு நினைக்க மாட்டேங்கறீங்க.
ராபர்ட் : அது.. அது வந்து.. இதெல்லாம் இப்போ ரொம்ப சாதாரணம்னே… பணம் இருந்தா எல்லாமே நடக்கும்.
டீ : நீங்க பண்ற தப்புக்கு நியாயம் கற்பிக்காதீங்க. வாழ்க்கைல பணத்தையே கும்பிட்டிட்டு இருக்கிறவன் பரலோகம் போக முடியாதுன்னு இயேசு சொல்றாரு தெரியும்ல. நல்ல வாழ்க்கைக்கான பாதை குறுகலா தான் இருக்கும், ஆனா அது தான் சரியான இலக்கில உங்களைக் கொண்டு போய் சேர்க்கும். அழிவுக்கான பாதை அகலமா இருக்கும், ஆனா அதுல போனா அழிவு தான்.
ஜெனிஃபர் : பைபிள் வசனத்தை புட்டு புட்டு வைக்கிறீங்கன்னே… எனக்கு கவலையில்லை.. குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாகும், ஜெயமோ கர்த்தரால் வரும். சோ, கடவுள் வெற்றி தருவார். நான் ஏன் கவலைப்படணும்.
டீ : ஜெயமோ கர்த்தரால் வரும். அதுல சந்தேகமே இல்லை. ஆனா, குதிரையை யார் யுத்த நாளுக்கு ஆயத்தம் பண்றது ? அது நாம தான் இல்லையா ?
ஜெனிஃபர் : ஓ.. என்ன சொல்ல வரீங்க ?
டீ : நாம படிக்க வேண்டிய பாடத்தை சரியா படிச்சிட்டு, கடவுள் கிட்டே நம்மை ஒப்படைச்சா கடவுள் நமக்கு மிகப்பெரிய வெற்றியைத் தருவார். ஆனா, ஒண்ணுமே பண்ணாம கடவுளை நம்பினா அவரு கைவிட்டிடுவாரு
ஜெனிஃபர் : நிஜமாவா ?
டீ : ஆமா, பத்து கன்னியர் கதை உனக்கு தெரியாதா ? நீ கிறிஸ்டியன் தானே ?
ஜெனிஃபர் : தெரியும் தெரியும். மணமகன் ராத்திரி வராரு. அவரை எதிர்கொள்ள பத்து பேரு போறாங்க. பத்து பேர் கையிலயும் விளக்கு இருக்கு. ஆனா அஞ்சு பேர் கிட்டே மட்டும் தான் எண்ணை இருக்கு. மணமகன் வரும்போ எண்ணை இருக்கிறவங்க ளோட விளக்கு எரியுது, அவங்க மணமகனோட மணவீட்டுக்குள்ள போறாங்க. மத்தவங்க எண்ணை இல்லாம, விளக்கு அணையுது. அவங்களுக்கு மணவீட்டுக்குள்ள நுழையற வாய்ப்பு கிடைக்கல.
டீ : வெரிகுட். கதை நல்லாவே தெரியுது. இதுல இருக்கிற அந்த அஞ்சு புத்தியுள்ள கன்னிகள் மாதிரி நீங்க இருக்கணும். எக்ஸாமுக்கு போறதுக்கு முன்னாடி நல்லா தயாராகணும். படிச்சிட்டு போறது தேவையான எண்ணை கொண்டு போறது மாதிரின்னு வெச்சுக்கலாம். படிக்காம போறது வெறும் விளக்கோட போறது. எக்ஸாமுக்கு கொஸ்டின் பேப்பர் வந்ததும், படிச்சவங்க எழுதறாங்க. வெற்றி அடையறாங்க. படிக்காதவங்க ரிசல்ட் அணைஞ்சு போயிடுது. அவங்களால ஜெயிக்க முடியல.
ஜெனிஃபர் : இந்த கதைக்கு இதுவா விளக்கம்.
டீ : இந்த சூழ்நிலைக்கு இந்த விளக்கத்தையும் நாம எடுத்துக்கலாம். கடவுளுடைய வார்த்தை நமக்கு பல விளக்கங்களை சொல்லும். இப்போ ராபர்ட் தம்பி சொல்றது என்னன்னா ? எண்ணை என்ன ? விளக்கே இல்லாம கூட போயிடலாம்ன்னு.. அதெல்லாம் முடியாது தம்பி. நல்லா படிச்சு நல்ல காலேஜ்ல சேரணுமே தவிர, நாம படிக்கிற நேரத்துல தூங்கிட்டு, நல்ல காலேஜ் கிடைக்கும்ன்னு கனவு காணக் கூடாது
மாலா : ம்ம்.. விதைக்கும்போ தூங்கிட்டு, அறுக்கிற காலத்துல அருவா எடுத்துட்டு வரதுல பயனில்லைன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க. அதானே ? நீங்க சொல்ல வரது கொஞ்சம் கொஞ்சம் புரியுது.
டீ : கொஞ்சம் கொஞ்சம் என்ன, கிளியராவே புரிஞ்சுக்கோங்க. நல்லா படிங்க, நேர்மையா தேர்வு எழுதுங்க, கடவுள் கிட்டே ஜெபம் பண்ணுங்க. அவரு உங்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைத் தருவாரு. நல்ல காலேஜ்ல இடத்தையும் தருவார்.
நித்யா : உண்மை தான்… அஞ்சு அப்பம் ரெண்டு மீன் நாம குடுத்தா அதை ஐயாயிரம் பேருக்கு குடுக்க இயேசுவால முடியும். நாம நம்மால முடிஞ்ச அளவுக்கு நல்ல சின்சியரா படிச்சா அதைக் கொண்டு பெரிய வெற்றியைத் தர இயேசுவால முடியும்.
டீ : எஸ்.. எஸ்.. அதைத் தான் நான் சொல்ல வரேன். இயேசு அடிக்கடி சொல்ற ரெண்டு வார்த்தைகள் இது தான், பயப்படாதே.. என்னை நம்பு.. !! அந்த இரண்டு வார்த்தையும் உங்களை பலப்படுத்தும். நீங்க, நல்லா படிங்க, கடவுளை புடிங்க
ராபர்ட் : சரிங்கய்யா.. டீ சூடா இருந்துதோ இல்லையோ, நீங்க சொன்ன அட்வைஸ் ரொம்ப சூடா இருந்துச்சு. தப்பு பண்ணிட்டேன். இனிமே போய், மிச்சம் இருக்கிற நாட்கள்ல நல்லா படிக்கப் போறேன். படிச்சதை எழுதப்போறேன், இயேசுவை நம்பப் போறேன். அவரு எனக்கு ஒரு நல்ல காலேஜ்ல இடம் வாங்கி குடுப்பாரு.
டீ : வெரிகுட் தம்பி… நல்லா படிங்க, கடவுள் உங்களை உயர்த்துவார். வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை. இதொன்ணும் வாழ்வா, சாவா போராட்டம் கிடையாது. எது நமக்குத் தேவையோ அதை நமக்கு இயேசு தருவாரு. அதிகம் கிடைச்சா கர்வப்படறதும் தப்பு, கம்மியாச்சுன்னா உடைஞ்சு போறதும் தப்பு. நம்ம கடமையை சிறப்பா செய்யணும், மற்றதை கடவுளோட திட்டத்துக்கு விட்டுடணும். சரியா…
ஜெனிஃபர் : ரொம்ப நல்லா சொன்னீங்கய்யா… நானும் நல்லா படிச்சுட்டேங்கற திமிரை விட்டுட்டு இயேசுவை முழுசா நம்பப் போறேன்.
டீ : வெரிகுட்.. ஆல் த பெஸ்ட்..
*
பின்குரல் :
தேர்வு என்பது வாழ்வா சாவா எனும் போராட்டமல்ல. நாம் எவ்வளவு தூரம் படித்திருக்கிறோம், எப்படி எழுதுகிறோம் என்பதை பரிசோதித்துப் பார்க்கும் இடம் அவ்வளவு தான். கவலையை விட்டு விட்டு, கடமையைச் செய்வோம். மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல, மதிப்பெண்ணுக்காக உயர்ந்த மதிப்பீடுகளை எப்போதும் கைவிடாதிருப்போம். நமது மதிப்பெண்ணைப் பார்த்து நம்மை ஆசீர்வதிப்பவரல்ல கடவுள், எனவே இயேசு நமக்காய் அமைத்திருக்கும் பாதையில் அவருடன் நடப்போம்.
நன்றி
Like this:
Like Loading...