Posted in Articles, Lent days

தவக்காலம் – வாய்ப்புகளின் காலம்

தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்

தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.

வாழ்க்கை
நமக்கு முன்னால்
இரண்டு திசைகளை நீட்டுகிறது,
நாம்
தேர்ந்தெடுக்கும் திசை
நம்
இலக்குகளை நிர்ணயிக்கிறது.

பரபாஸா
பரமனா
எனும் வாய்ப்புக்கு
பரபாஸ் என கூக்குரலிட்டது
கூட்டம் !

பதவியா
நீதியா
எனும் வாய்ப்புக்கு
கைகளைக் கழுவி அழுக்கானான்
பிலாத்து !

என் விருப்பமா
தந்தையின் விருப்பமா
எனும் கேள்விக்கு
தந்தையின் சிந்தமென்றார்
இயேசு !

தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.

ஆசீர்வதிப்பதா
சபிப்பதா
எனும்
பாலாமின் சிந்தனைக்கு
வாய்பேசிய கழுதை விடை தந்தது.

அழைப்பினை ஏற்பதா
தூரமாய் செல்வதா
எனும்
யோனாவின் முடிவுக்கு
விழுங்கித் துப்பிய மீன் விடை சொன்னது.

பசியினில் மடிவதா
பரமனில் இணைவதா
எனும்
எலியாவின் சூழலுக்கு
உணவு சுமந்த காகம் விடை சொன்னது.

விசுவாசத்தில் நிலைப்பதா
சுவாசத்தை முடிப்பதா
எனும்
தானியேலின் தருணத்துக்கு
வாயடைத்த சிங்கங்கள் விடை தந்தன.

மறுதலித்து நகர்வதா
பிந்தொடர்ந்து மரிப்பதா
எனும்
கேள்விக்கு
கொக்கரித்த சேவல் விடைதந்தது.

மனிதர்களின்
குழப்ப முடிச்சுகளை
விலங்குகள் வந்து
விலக்கி விடுகின்றன.

தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.

அகலமான வாசலா ?
இடுக்கமான வாசலா,

இருளின் சூட்சியா
ஒளியின் ஆட்சியா ?

சாவின் சன்னலா
வாழ்வின் வாசலா ?

பாவத்தின் வசீகரமா
புனிதத்தின் நிரந்தரமா ?

நில வாழ்வா ?
நிலை வாழ்வா ?

காலம் நம் முன்னால்
பூவா தலையா
போட்டு விளையாடுகின்றது.

தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.

சிலுவைப் பாதையில்
சீமோனுக்கு
சிலுவை
சுமக்கும் வாய்ப்பொன்று
வலுக்கட்டாய விருதாய் வழங்கப்பட்டது.

அவன்
வழியோரத்தில் நின்று
வரலாற்றின் விழுதொன்றை
வழுவ விடாமல்
பிடித்துக் கொண்டான்.

சிலுவை உச்சியில்
கள்வனுக்கு
முதல் வாய்ப்பொன்று
கடைசி வாய்ப்பாய்
வழங்கப்பட்டது.

அவன்
மரணத்தின் கோரைப்பற்களிடையே
வாழ்வின் வசந்தத்தை
பறித்தெடுத்தான்.

தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.

நழுவ விட்ட வாய்ப்புகளை
எண்ணி
உடைந்து போகாமல்,
கிடைத்த வாய்ப்பை
நழுவ விடாமல் அடையும் காலம்.

*

சேவியர்

Posted in Articles, Lent days

தவக்காலம் – இருளின் காலம்

தவக்காலம்
இருளின் காலம்

தவக்காலம்
இருளின் காலம்.

இருள்,
கயவர்களின்
பட்டாக்கத்திப் பரிவர்த்தனைக்கு
பழக்கமான களம்.

இருள்,
நீதியின் குரல்வளை நெரிக்க
வன்மத்தின் விரல்களுக்கு
வசதியான இடம்.

இருள்,
கறைகளின் ஆழம் புதைக்கக்
குறைகளின் பிதாக்கள்
கூடாரமிடும் இடம்.

தவக்காலம்
இருளின் காலம்.

இயேசுவோ
ஒளியாய் இருந்தார்.
ஒளியாதிருந்தார்.

வெளிச்சத்தை இழுத்து
வந்து
இருளுக்குள் புதைத்ததாய்
இறுமாந்தது கூட்டம்.

கடலை இழுத்து வந்து
கரையில் புதைத்து
கடமை முடித்ததாய்
கர்வப்பட்டது கூட்டம்.

ஒற்றை மிடறில்
ஆழியை அழித்ததாய்
சிரித்தது சிப்பி.

தவக்காலம்
வெளிச்சத்தை வெறுத்த
இருளின் காலம்.

ஒளிதோன்றுக
எனும்
ஒற்றைச் சொல்
பூமியின் மேனியில்
வெளிச்சப் புள்ளிகளை விரித்தது.

நானே ஒளி.
இயேசுவின் வெளிப்பாடு
பாவியின் மேல்
புனிதத்தின் ஒளியைப் பாய்ச்சியது.

ஒளியின்
வம்சமாய் வந்தவரிடம்
இருளின்
அம்சமே இருக்கவில்லை.

அதிகார வர்க்கமோ
குருட்டுக் கண்களுக்குள்
வெளிச்சம் வாழ்வதாய்
மாயத் தோற்றத்தில்
மயங்கிக் கிடந்தது.

ஒளியை
இருளென நினைத்து
ஒழிக்க நினைத்தது.

தவக்காலம்
ஒளியை தடுக்க வந்த
இருளின் காலம்.

பாவியை மீட்க
பரமனே பாவியாகிய காலம்.
இருளை மீட்க
ஒளியே இருளான காலம்.

ஒளி
விழி மூடியதும்
உலகமே
இருள் சூடிக் கொண்டது.

முள்ளை முள்ளால்
எடுக்கலாம்,
இருளை இருளால்
விரட்ட முடியாது.

இருளை அள்ளி அள்ளி
வெளியே கொட்டுவதால்
வெளிச்சத்தை
உள்ளுக்குள்
உருவாக்க முடியாது.

இரவைக் கடக்கவும்,
இருளைக் கடக்கவும்
நாம்
நடக்க வேண்டியது
ஒளியுடன்.
ஒளியாம் இறைவனுடன்.

*

சேவியர்

Posted in Articles, Beyond Bible, Christianity

இவர்கள் என்ன ஆனார்கள் ? – 1. லாங்கினஸ்

இவர்கள் என்ன ஆனார்கள் ?

லாங்கினஸ்

இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். கல்வாரி மலையில் சிலுவை மரத்தின் உச்சியில் அவர் தொங்குகிறார். சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் விலாவை ஒருவர் ஈட்டியால் குத்துகிறார். ஈட்டி இயேசுவின் விலாவைத் துளைத்து உள்ளே நுழைகிறது.

“படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.” என இந்த நிகழ்ச்சியை யோவான் நற்செய்தி விளக்குகிறது.

மத்தேயு, மார்க், லூக்கா நற்செய்திகளில் இந்த ஈட்டியால் குத்தும் நிகழ்வு குறிப்பிடப்படவில்லை. ஆனால் கடைசியாக எழுதப்பட்ட யோவான் நற்செய்தியில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. யோவான் நற்செய்தி முதலாவது நூற்றாண்டின் கடைசி கட்டத்தில் எழுதப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்த வீரரைப் பற்றிய தகவல்கள் அதிகமாய் பேசப்பட்டிருக்கலாம், எனவே தான் யோவான் அதையும் பதிவு செய்கிறார் என கருத இடமிருக்கிறது.

அந்தப் படைவீரர் யார் ?
அதன் பின் அவருக்கு என்ன நிகழ்ந்தது ?

இவற்றையெல்லாம் விவிலியம் குறித்து வைக்கவில்லை. ஆனால் ஆதிகாலத் திருச்சபைக் குறிப்புகளும், வரலாற்று நூல்களும் இவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான குறிப்புகளைத் தருகின்றன.

திருச்சபையால் ஏற்றுக் கொள்ளப்படாத நூல்களில் சில முக்கியமானவை. அவற்றில் ஒன்று ‘நிக்கோதேமுவின் திருமுகம்’. அந்த நூலில் இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தியவரின் பெயரும் அவரைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இயேசுவைக் குத்தப் பயன்படுத்தப்பட்ட ஈட்டியானது புனித ஈட்டி என அழைக்கப்படுகிறது.

அந்த பதிவுகளின் அடிப்படையில் அந்த வீரனின் பெயர் ‘லாங்கினஸ்’. பார்வைக் குறைபாடு உடையவர். இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்துகிறார். சிலுவைக் குற்றவாளிகளின் விலாவில் ஈட்டியால் குத்தும் வழக்கம் அன்றைய காலத்தில் இருந்தது. ஒருவகையில் விரைவில் குற்றவாளிகள் இறக்கவும், அவர்கள் இறந்து விட்டார்களா என்பதை ஊர்ஜிதப்படுத்தவும் இதைச் செய்வார்கள்.

இயேசுவின் விலாவில் இவர் குத்துகிறார். அப்போது இரத்தமும், நீரும் வடிகின்றன. தெறிக்கின்ற குருதியில் சில துளிகள் பார்வைக் குறைபாடுடைய அவனது கண்களில் விழுகின்றன. அவனது கண்கள் முழுமையாய் குணமடைகின்றன. ஈட்டியால் தன்னைக் குத்தியவருக்கும், நன்மையைச் செய்கிறது குணமளிக்கும் குருதி.

அவன் அதிர்ச்சியடைகிறான். வெலவெலக்கிறான். ‘இவர் உண்மையாகவே இறைமகன்’ என அறிக்கையிடுகிறார். இவர் நூற்றுவர் தலைவரின் கீழ் பணியாற்ற ஒருவர் என்று சிலரும், நூற்றுவர் தலைவரே இந்த லாங்கினஸ் தான் என்று வேறு சிலரும் குறிப்பிடுகின்றனர்.

இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தியபின் அதன் தாக்கம் அவருக்கு நீண்டகாலம் இருந்தது. இரவில் அவரை சிங்கம் ஒன்று வந்து பீறிக் கிழிப்பதும், காலையில் எதுவுமே நடவாதது போல அவரது உடல் இருப்பதும் வாடிக்கையாய் இருந்தது என இன்னொரு சுவாரஸ்யக் குறிப்பு கூறுகிறது. ஒரு வகையான உளவியல் பாதிப்பாக இது இருக்கலாம்.

இயேசு உயிர்த்தெழுந்ததைக் கேள்விப்பட்டபின் அவர் இயேசுவின் சீடர்களைச் சந்திக்கிறார். அதன் பின் அவர் கிறிஸ்தவராக மாறுகிறார்.

தனது வேலையை உதறிவிட்டு நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார். சொந்த ஊரான கப்பதோஷியா ( இப்போதைய இத்தாலி) க்குத் திரும்பி இயேசுவின் நற்செய்தியைப் பேசி பலரை கிறிஸ்தவர்களாக மாற்றியிருக்கிறார்.
அன்றைய கிறிஸ்தவ விரோத சூழலில் நீண்டகாலம் பணி செய்ய முடியாமல் கிபி நாற்பத்தைந்துகளில், பிலாத்துவின் காலத்திலேயே, சித்திரவதை செய்யப்பட்டு, சிரச்சேதம் செய்யப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார் என்கின்றன சில குறிப்புகள்.

ஆங்கிலிக்கன், கத்தோலிக்கர், ஈஸ்டன் ஆர்த்தடாக்ஸ், ஓரியண்டல் ஆர்தடாக்ஸ் போன்ற சில பாரம்பரியக் கிறிஸ்தவ அமைப்புகளில் இவர் புனிதராகப் போற்றப்படுகிறார். அக்டோபர் பதினாறாம் தியதி அவரது நாளாகக் கொண்டாடப்படுகிறது. வத்திக்கான் (வேடிகன்) ஆலயம் உட்பட சில ஆலயங்களில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

லாங்கினஸ் பற்றிய குறிப்புகளில் புனைவும், நிஜமும் கலந்தே இருக்கின்றன என்பது கண்கூடு. ஆனால், இயேசுவின் இரத்தம் தெறித்த படை வீரன் நலம்பெற்று, இயேசுவுக்காக வாழ்ந்தார் எனும் செய்தி உண்மையிலேயே சிலிர்ப்பூட்டுகிறது.

*

சேவியர்

Posted in Articles, Lent days

தவக்காலம் – முரண்களின் காலம்

தவக்காலம்
முரண்களின் காலம்

தவக்காலம்
முரண்களின் காலம்.

கைகழுவிய
பிலாத்து
கறை படிந்தவன் ஆனான்
கை கழுவா
இயேசு
பரிசுத்தராகவே வாழ்ந்தார்.

கொலையாளியாய் வாழ்ந்தவன்
விடுதலை அடைந்தான்,
தூயவராய் வாழ்ந்தவர்
குற்றவாளியாய் மாறினார்.

விடுதலை தருவதற்காக
ஆணிகளில்
அறையப்பட்டு
சிலுவையில் சிறைப்பட்டார்.

தவக்காலம்
முரண்களின் காலம்.

இயேசு
முரண்களின் முடிச்சுகளால்
சட்டங்களின் துருக்களை
சலவை செய்து நடந்தவர்.

ஞானிகள்
விளங்கிக் கொள்ள
முடியாதவற்றை
சிறுவர்கள் விளங்கிக் கொள்வர்
என்றார். !

தன்னைத்
தாழ்த்தித் தாழ்த்தி வாழ்வதே
மேலே மேலே
செல்வதன் வழி
என்றார்.

இயேசுவின்
அடிமையாய் இருப்பதே
உண்மையான
சுதந்திரம் வாழ்வு
என்றார்.

பெற்றுக் கொள்ள
வேண்டுமெனில்
கொடுக்க வேண்டும்
என்றார்.

பலம் பெற வேண்டுமெனில்
பலவீனனாய்
மாறவேண்டும்
என்றார்.

வாழ வேண்டுமெனில்
இயேசுவோடு
ஊனுடலில் சாகவேண்டும்
என்றார்

செல்வந்தராக வேண்டுமா
ஏழைகளாய்
மாற வேண்டும்
என்றார்.

தவக்காலம்
முரண்களின் காலம்.

முரண்களைக் கொண்டு
அரண்கள் அமைத்த
இயேசுவின் காலம்.

பாவியை
சாத்தானின் கையில்
ஒப்படைக்காதிருக்க,
ஆவியை
தந்தையின் கையில் ஒப்படைத்த
இயேசுவின் காலம்.

*

சேவியர்

Posted in Articles, Lent days

தவக்காலம் – சிலுவையின் காலம்

தவக்காலம்
சிலுவையின் காலம்

தவக்காலம்
சிலுவையின் காலம்

சிலுவை,

மேல்நோக்கி தந்தையையும்
விரித்த கரத்தில் மைந்தனையும்
கீழ்நோக்கி தூய ஆவியையும்
கோடிட்டுக் காட்டும்
திரித்துவச் சின்னம்.

கொலைக்களமான
கல்வாரியை
பணித்தளமாய் மாற்றிய
புனிதச் சின்னம்.

சிலுவை

வெகுமானமாய் மாறிய
அவமானச் சின்னம்.
அவதாரம் சுமந்து வந்த
பரிகாரச் சின்னம்

சிலுவை

வரங்களைப் பெற்றுத்தரும்
மரம்.
மன்னிப்பை ஊற்றித்தரும்
கரம்.

தவக்காலம்
சிலுவையின் காலம்.

மரத்தால் வந்த பாவத்தை
தீர்க்க
மரத்தைத் தேர்ந்தெடுத்தார்
இயேசு.

அன்று,
மரத்தின் கனி
பாவத்தை நீட்டியது.

இன்று,
பரத்தின் கனி
பாவத்தை நீக்கியது.

தவக்காலம்
சிலுவையின் காலம்.

சுந்தர வடிவினை இழந்து
அந்தரம் தனியே இறந்து
இயேசு
புனிதப்படுத்திய
சிலுவை.

குருதியில் பூத்த
மீட்பின் மலரை
நெஞ்சில் தைத்துக் கொண்ட
சிலுவை

வலியின் விளைநிலத்தில்
பலியின் விளைச்சலை
உயர்த்திப் பிடித்த
சிலுவை

நல்ல நில பயிரின் தலையில்
முள் வந்து
முடிசூடுமென
முரண்களைச் சொன்ன
சிலுவை.

அன்பு என்பது
இருப்பதில் ஒன்றையல்ல
இருக்கின்ற ஒன்றே ஒன்றை
அளிப்பதென
வெளிப்படுத்திய
சிலுவை.

தவக்காலம்
சிலுவையின் காலம்

இது
எனது மீட்புக்கான
இயேசுவின் தவிப்பு.

இது
என பாவத்துக்கான
இயேசுவின் விலை

இது
எனது துவக்கத்துக்கான
இயேசுவின் முடிவு

இது
எனது வாழ்வுக்கான
இயேசுவின் சாவு.

தவக்காலம்
சிலுவையின் காலம்.

வெண்கலப் பாம்பை
பாலையில் உயர்த்தினார் மோசே,
பாம்பின் கடிபட்டவர்கள்
பிழைத்துக் கொண்டார்கள்.

விண்ணகப் பரிசை
மலையில் உயர்த்தியது சிலுவை
பாவத்தில் அடிபட்டவர்கள்
பிழைத்துக் கொண்டார்கள்.

பாம்பின் கடிபட்டவர்கள்
பாம்புகளோடு
போர்புரியவில்லை.
பாம்புகளோடு
சமரசம் பேசவில்லை
பாம்புகளோடு
பணிந்து போகவில்லை

மாறாக
வெண்கலப் பாம்பை நோக்கினார்கள்.

பாவத்தில் அடிபட்டவர்கள்
செய்யவேண்டியதும்
அது ஒன்றே !
சிலுவையை நோக்குதல் !

தவக்காலம்
சிலுவையின் காலம்.

பிரபஞ்ச அன்பு
புதைந்திருக்கும்
சிலுவையின் காலம்

*

சேவியர்