Posted in Articles, Bible Poems, Christianity, Poem on People, Sunday School

இறையச்சம் கொண்ட பெண்கள்

Godly Women

+

இறையச்சம் கொண்ட பெண்கள்
நிறைவாழ்வின் நதியோரம்
நடமாடுகிறார்கள்.
புதுவாழ்வின் பாதைகளில்
இடம் தேடுகிறார்கள்.

இறையச்சம் கொண்ட பெண்கள்
கனிவின் கரம் பிடித்து
துணிவின் துணையுடன்
பணி செய்வார்கள்.

ஆண்மகவை எல்லாம்
அழித்தொழியுங்கள்
என
எகிப்திய மன்னன் எகிறிக் குதித்தான்

சிப்ராவும் பூவாவும்
கர்ஜனைக்குக் கீழ்படியாமல்
கர்த்தருக்குக் கட்டுப்பட்டனர்.
இளகிய இதயத்தோடு
மழலையரைக் காத்தனர்.

இறையச்சம் கொண்ட பெண்கள்
இறைவனின் பிள்ளைகளை
இதயத்தால்
அறிவார்கள்,
ஞானத்தால் பொதிவார்கள்.

ராகாப்
உடலை விற்றவள்
இறையைக் கற்றவள்.
அவளது ஞானம்
இஸ்ரேல் உளவாளிகளைக் காத்தது
அவளது நாமம்
இறை வரலாற்றில் இடம் பெற்றது.

இறையச்சம் கொண்ட பெண்கள்
வீரத்தின் தீரத்தை
உயிரெங்கும் தரித்திருப்பார்கள்.

அரச குடும்பத்தை
அழித்துக் கொக்கரித்த
அத்தலியாவிடமிருந்து
இளவரசர் யோவாசைக் காத்தாள்
யோசேபா !
வம்சம் அழியாமல் காப்பாற்றப்பட்டது.

இறையச்சம் கொண்ட பெண்கள்
அர்ப்பணிப்பின்
நற்பண்பை
நெஞ்சத்தில் நிறைத்திருப்பார்கள்.

இதோ அடிமையென
தாழ்மை காட்டினார்
தாவீதின் அம்சமான மரியாள் !
மனித ஆதாரத்தின்
மானுட அவதாரம் மலர்ந்தது.

இறையச்சம் கொண்ட பெண்கள்
இயேசுவின்
பணி வாழ்வின்
வழியெங்கும் நிறைந்திருந்தனர்.

பாடுகளின் பாதைகளிலும்
அழுதிருந்தனர்.

சிலுவையின் சுவடுகளிலும்
காத்திருந்தனர்.

இறையச்சம் கொண்ட பெண்கள்
உயிர்ப்பின் பேரொளியை
விழி நிரம்ப
அள்ளிக் கொள்கின்றனர்

அவர்கள்
செபத்தின் ஆழியில்
நங்கூடமிட்டு நிலைத்திருப்பார்கள்
அன்னாவைப் போல

அவர்கள்
விருந்தோம்பலின் விழுதினை
விழிகளில் நட்டிருப்பார்கள்
மார்த்தாளைப் போல

அவர்கள்
இறைவார்த்தை விருதினை
உயிரினில் வைத்திருப்பார்கள்
மரியாளைப் போல

அவர்கள்
கண்ணியத்தின் கவசத்தை
கேடயமாய் வைத்திருப்பார்கள்
ரபேக்கா போல

மொத்தத்தில்,

இறையச்சம் கொண்ட பெண்கள்
இறைவனின்
புனித வாழ்வில்
புகலிடம் தேடுவார்கள்,
சாத்தானுக்குச் சன்னல்களையும்
சத்தமாய்ச் சாத்துவார்கள்

*

Posted in Animals Birds, Articles

உயர்திணையான அஃறிணைகள் – 1 காகம்

#BiblePoems

உயர்திணையான அஃறிணைகள்
1

காகம்

உலகம்
வர்ணங்களின் மேல்
வசீகரம் கொண்டிருக்கிறது,
அதன்
குரூரக் கரங்களில்
கருப்பு நிராகரிக்கப்படுகிறது.

வர்ண பேதம்
எங்களையும்
அலைக்கழிக்கிறது !

அலகுகளின் வலிமையோ
நகங்களின் கூர்மையோ
கணக்கில்
எடுத்துக் கொள்ளப்படுவதில்லை,
இறக்கைகளின்
வசீகரங்களே வரவேற்கப்படுகின்றன.

காகங்கள்
ரசிக்கப்படுவதில்லை
அவை
கறுப்புக் கடலில் விழுந்த
இருட்டு நிழல் போல
கவனிக்கப்படாமலேயே
கரைந்து விடுகின்றன.

ஒரு நாள்
எனக்குப்
பணி ஒன்று வழங்கப்பட்டது !

கெரீத்து ஓடையருகே
பசித்துக் கிடக்கும்
எலியா இறைவாக்கினருக்கு
காலையும் மாலையும்
அப்பமும் இறைச்சியும்
பரிமாறும் பணி !

அது
சொமோட்டோக்களோ
உபர் ஈட்ஸ்களோ
உருவாகாத காலம்.

உலகில்
என்னை வைத்தே
முதல் ஹோம் டெலிவரி
துவங்கப்பட்டது !
இறைவனே
முதல் ஆர்டரைக் கொடுத்தவர்.

அதன் பின் தான்
கிறிஸ்தவம் என்னை
கருணையுடன்
பார்க்கத் தொடங்கியது.

தீட்டான உணவென
என்னை
இணைச்சட்டங்கள்
பிரித்து வைத்த போது
நான்
கண் கலங்கியதுண்டு.

எனினும்
“இறைவனை நோக்கிக்
காகங்கள் கரைகையில்
இறைவனே
உணவளிக்கிறார்” எனும்
இறைவார்த்தை நம்பிக்கை தந்தது.

காகங்களைக் கவனியுங்கள்
இறைவன்
அவற்றுக்கும் உணவளிக்கிறார்
எனும்
இயேசுவின் வார்த்தை
நிறம் குறித்த என் குறைகளை
துறக்க உதவியது.

உலகம்
நிறங்களின் மீது
மோகம் கொண்டு மயங்கலாம்
இறைவன்
அகம் மீது அரசாள்கிறார்
என்பது புரிந்தது.

அவரது படைப்பில்
இன பாகுபாடோ
நிற பாகுபாடோ இல்லை
என
விளங்கியது !

உலகமே என்னை
நிராகரித்தாலும்
எனக்கு
மனநிறைவளிக்கும் ஒரு விஷயம் உண்டு

பைபிளில்
முதலில்
குறிப்பிடப்படும் பறவை !
சாட்சாத்
நானே தான் !

*

சேவியர்

Posted in Articles, Beyond Bible

இவர்கள் என்ன ஆனார்கள் ? 5.மகதலா மரியா

இவர்கள் என்ன ஆனார்கள் ?

மகதலா மரியா

விவிலியத்திலுள்ள நபர்களின் மிக முக்கியமானவர்களில் ஒருவர் மகதலா மரியா. அவர் மிக முக்கியமானவராய் மாறியதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவர் இயேசுவின் பிரியத்துக்குரிய சீடர்களில் ஒருவராக இருந்தர். இன்னொன்று, அவர் உயிர்த்த இயேசுவை முதலில் காணும் பாக்கியத்தைப் பெற்றார்.  

மரியா எனும் பெயர் விவிலியத்தில் ஏராளம் உண்டு. அந்தக் காலத்தில் அது மிகவும் பிரபலமான பெயராக இருந்திருக்கிறது. எனவே மகதலா மரியாவை வேறுபடுத்திக் காட்ட அவர் பிறந்த இடத்தையும் பெயருடன் இணைத்து மகதலா மரியா என்று ஆக்கினார்கள். அதாவது, கலிலேயக் கடற்கரையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மகதலா எனும் இடத்தைச் சேர்ந்த மரியா என்பது இதன் பெயர்.

இவரிடமிருந்து ஏழு பேய்களை இயேசு ஓட்டியிருந்தார். பேயின் தொந்தரவில் உழன்ற அவர் பின்னர் இயேசுவின் சீடராக மாறினார். அதன் பின் இயேசுவின் வாழ்க்கையோடு தொடர்ந்து நடந்த அவர், இயேசுவின் மரணத்தின் போதும் கூடவே இருந்தார். இயேசுவின் கல்லறை அருகே கவலையுடன் அமர்ந்திருந்தார். இயேசு இறந்தபின்னும் அவர் நினைவாக கல்லறைக்குச் சென்றார். அதனால், உயிர்த்த இயேசுவை முதன் முதலில் தரிசிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

நற்செய்தியை முதன் முதலில் அறிவிக்கும் பாக்கியத்தையும் மகதலா மரியா பெற்றார். “என்னைப் பற்றி கொள்ளாதே, நற்செய்தியைப் போய் அறிவி” என்பது தான் உயிர்த்த இயேசு அவரிடம் சொன்ன வார்த்தைகள். பாவத்தின் முதல் செய்தி ஏவாளின் மூலம் வந்தது போல, மீட்பின் முதல் செய்தி மரியா மூலம் வருகிறது. மரியாவின் கண்ணீர் தாழ்ச்சியின் கண்ணீர், இயேசுவைக் காணாமல் அதிக துயரத்தில் இருந்த அவருக்கு முதல் காட்சியைத் தந்து அவரது அன்பை அங்கீகரிக்கிறார் இயேசு. என்கிறார், புனித அன்ஸ்லம். 

இவர் இயேசுவின் சீடராகும் முன் பாவியாக வாழ்ந்தார் என்றும், இல்லை இல்லை, அந்த மரியா வேறு இந்த மரியா வேறு என்றும் இருவேறு கருத்துகள் திருச்சபையில் நிலவுகின்றன. 

கிறிஸ்துவின் உயிர்ப்பு  நிகழ்வுக்குப் பின்பு மகதலா மரியாள் என்ன ஆனார் என்பதைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தில் இல்லை, ஆனால் பைபிளுக்கு வெளியே உள்ள குறிப்புகளின் படி இவர் இயேசுவின் சீடர்களோடு இணைந்திருந்தார். அவர்களுடன் இயேசுவின் நற்செய்தி அறிவித்தலுக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார் எனும் செய்திகள் கிடைக்கின்றன.

அவரையும் இயேசுவின் தீவிர சீடர்கள் சிலரையும் யூதர்கள் மாலுமியற்ற  கப்பலில் ஏற்றி தனியே விட்டதாகவும், கப்பல் இறையருளால் தற்போதைய பிரான்ஸ் நாட்டுப் பகுதியில் வந்ததாகவும், அங்கு அவர்கள் நற்செய்தி அறிவித்ததாகவும் சொல்கிறது.

இன்னொரு செய்தி, இவர் யோவானுடன் இணைந்து நற்செய்திப் பணி ஆற்றிக் கொண்டிருந்ததாகச் சொல்கிறது. 

“மகதலா மரியாவின் நற்செய்தி” எனும் நூல் கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட நூல். கிபி மூன்றாம் நூற்றாண்டுகளில் அது எழுதப்பட்டது.

அதிலுள்ள சில குறிப்புகள் சுவாரஸ்யமானவை. “இயேசு எல்லா சீடர்களையும் விட மகதலா மரியாவை நேசித்தார்” எனும் செய்தி அதில் காணப்படுகிறது. 

“இயேசுவின் சீடர்கள் சோர்ந்து இருந்தபோது அவர்களை மகதலா மரியா உற்சாகமூட்டி நற்செய்திப் பணி செய்ய ஊக்குவித்தார்” என்னும் செய்தியும் இதில் இருக்கிறது. மகதலா மரியா இயேசுவைப் பற்றிய கனவு ஒன்றினைக் காண்கிறார். பின் இயேசுவிடம் வந்து அதைச் சொன்னபோது, “என் நினைவாக இருப்பவர்கள் பாக்கியவான்கள்” என்கிறார் இயேசு. கனவு எப்படி தோன்றுகிறது எனும் மரியாவின் கேள்விக்கு,, “ஆன்மா மனம் ஆவி எனும் மூன்று நிலைகள் மனிதனில் உண்டு, அதில் இரண்டாவது நிலையான மனமே கனவுகளின் காரணம்” என்கிறார். 

இவையெல்லாம் அன்றைய கிரேக்க தத்துவ சிந்தனைகளை ஒட்டியதாக இருக்கிறதே தவிர விவிலியத்தில் காணும் இயேசுவின் மொழிகளைப் போல இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

இரண்டாம் , மூன்றாம் நூற்றாண்டு பகுதியில் எழுதப்பட்ட பிஸ்டிஸ் சோஃபியா எனும் நூலில் இயேசு தனது சீடர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்வது போல ஒரு பாகம் இருக்கிறது. அதில் கணிசமான பகுதியில் அவர் மகதலா மரியாவுடன் பேசுகிறார். அந்த நூலின் படி இயேசு உயிர்த்தபின் பதினோரு ஆண்டுகள் பூமியில் இருந்து சீடர்களை வலுப்படுத்துகிறார். 

மகதலா மரியாவை அவர் புகழ்கிறார். “மரியா, நீ ஆசீர்வதிக்கப்பட்டவள். மற்ற அனைவரையும் விட நீ விண்ணில் உயர்ந்த இடத்தில் இருப்பாய்” என்கிறார். “ நீ பூமியில் ஆசீர்வதிக்கப்பட்ட பெண். நீ முழுமையின் முழுமை, நிறைவின் நிறைவு: என்கிறார். மகதலா மரியா இயேசுவிடம் நெருக்கமாய் இருப்பது சீமோன் பேதுருவுக்கு எரிச்சல் உண்டாவதாகவும், அதை இயேசுவிடம் அவர் முறையிடுவதாகவும் கதை நீள்கிறது.

நிராகரிக்கப்பட்ட ஆதிகால நூல்களில் ஒன்றான, “தோமாவின் நற்செய்தி” நூலிலும் மகதலா மரியாவைக் குறித்த செய்திகள் பல உள்ளன. ஒரு செய்தியில், “மரியாவை அனுப்பிவிடும், அவள் ஆண்களைப் போல பணிசெய்ய தகுதியற்றவர்” என சீடர் சொல்லும்போது இயேசு கடிந்து கொள்கிறார். “அவரும், விசுவாசத்தில் நிலைத்திருக்கும் மற்ற பெண்களும் ஆண்களைப் போல மாற்றப்படுவார்கள், விண்ணுலகை சொந்தமாக்குவார்கள்” என்கிறார் இயேசு. 

பிலிப்புவின் நற்செய்தி எனும் நூல் கிபி 2-3ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது. அதிலும் மகதலா மரியாவை இயேசு அன்பு செய்யும் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. “ஏன் எங்களை விட அதிகமாய் நீங்கள் மரியாவை அன்பு செய்கிறீர்கள் என சீடர்கள் இயேசுவிடம் கேட்பதாகவும், அதற்கு இயேசு, ஒரு சாதாரண மனிதரும் ஒரு குருடரும் இருளில் இருக்கும் போது இருவருக்குமே எல்லாம் இருட்டாய்த் தெரியும். ஆனால் வெளிச்சம் வரும்போதோ ஒருவர் பார்க்கிறார் என தத்துவார்த்தமாக விளக்குகிறார்.

இவை தவிரவும் பல்வேறு ஆதிகால நூல்களில் மகதலா மரியாவைக் குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. இந்த செய்திகள் தான் நவீன கால டாவின்சி கோட் போன்ற புனை கதைகளுக்கு ஊக்க சக்தியாய் இருக்கின்றன.

இவைகளில் பெரும்பாலும் புனைகதைகள் என்பதில் சந்தேகம் இல்லை. இயேசுவின் அன்பினால் பாவம் நீங்கப்பெற்று அவரது உயிர்ப்பில் பங்குபெற்ற மகதலா மரியா நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டு இறந்து போனார் என்பதையே ஆதிகால திருச்சபை ஏற்றுக் கொண்டுள்ளது. பாரம்பரியக் கிறிஸ்தவ சபைகள் இவரை புனிதராகப் போற்றுகின்றன. ஜூலை 22ம் தியதி அவரது தினமாகக் கொண்டாடப்படுகிறது.

*

சேவியர்

Posted in Articles, Beyond Bible

இவர்கள் என்ன ஆனார்கள் ? 4.சக்கேயு

இவர்கள் என்ன ஆனார்கள் ?

சக்கேயு

சக்கேயுவின் கதை பைபிளிலுள்ள நிகழ்வுகளில் மிகவும் சுவாரஸ்யமானது. ஆன்மிக செழுமை வாய்ந்தது. லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே சக்கேயுவின் செய்தியைப் பதிவு செய்கிறார். 

எரிகோ வழியாக இயேசு போய்க்கொண்டிருக்கிறார். அங்கே இருக்கிறார் சக்கேயு. சக்கேயு என்பதற்கு கறைபடியாதவர், சுத்தமானவர் என்பது பொருள். ஆனால், அவர் அப்படிப்பட்டவராக வாழ்ந்தாரா என்பது தெரியவில்லை. அவர் வரி தண்டுவோருக்குத் தலைவராக இருந்தார் என்கிறது பைபிள். வரி வசூலிப்பவர்களையே வெறுக்கின்ற சமூகம் அது. அவர்களுக்குத் தலைவராக இருப்பவரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். 

காரணம் மக்களை ஏமாற்றி அதிக வரி வசூலிப்பதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நியாயமற்ற வரியை வசூலிப்பதால் மக்களை கஷ்டத்துக்குள்ளாக்கிக் கொண்டிருந்தார்கள். 

இயேசு அந்த ஊருக்கு வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும், சக்கேயுவுக்கு அவரைக் காண வேண்டும் எனும் ஆர்வம் வந்தது. ஆனால் அவரது உயரம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எனவே அருகில் இருந்த ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொள்கிறார். உயரத்திலிருந்து இயேசுவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார். 

இயேசு வந்தார். அந்த மரத்தின் அருகே வந்ததும் நின்றார். சக்கேயுவே கீழே இறங்கி வா என்று அழைத்தார். அவர் இறைமகன். இறைவன் நம் எல்லோருடைய பெயரையும் அறிந்து வைத்திருக்கிறார். இயேசு சக்கேயுவைப் பெயர் சொல்லி அழைத்து, தான் ஒரு இறைமகன் என்பதை வெளிப்படுத்துகிறார். 

சக்கேயு கீழே இறங்கினான். 

“இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” என்றார் இயேசு. “நான் கண்டிப்பாக உன் வீட்டில் தங்க வேண்டும்” என “கண்டிப்பாக” என்பதை அழுத்தமாய் சொல்கிறது மூலப் பதிவுகள். இது கடவுளின் திட்டம். சக்கேயுவுக்கு ஒன்றும் புரியவில்லை. வெறுக்கப்படும் மனிதர்களின் தலைவன் நான். இயேசுவோ, அதே மனிதர்களால் விரும்பப்படுபவர். இரு முரண்கள் எப்படி ஒன்று சேர முடியும் ?

சக்கேயு மரத்திலிருந்து மட்டும் இறங்கவில்லை. மனத்திலும் இறங்கினான். மனம் இரங்கினான்., ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார். 

இயேசு மகிழ்ந்தார். இந்த வீட்டிற்கு இன்று மீட்பு வந்தது என்றார். இயேசு ஒரு புதிய போதனையை அங்கே கற்றுத் தந்தார். சக்கேயு, “ஆண்டவரே நான் பாவி என்னை மன்னியும்” என கேட்கவில்லை. மாறாக, நேரடியாகச் செயலில் இறங்குகிறார். அது அவரது மனமாற்றத்தின் கனியாக இருக்கிறது. வார்த்தைகளால் நான் தோரணம் கட்ட விரும்பவில்லை, வாழ்க்கையால் நான் காரணம் காட்ட விரும்புகிறேன் என புரிய வைத்தார். 

மீட்பு பெற வேண்டுமெனில் பாவங்களை அறிக்கையிடுவது மட்டுமல்ல, மனம் திரும்பியதைச் செயல்களில் காட்டவேண்டும் எனும் பாடம் நமக்குக் கிடைக்கிறது. 

அதன்பின் இயேசுவின் வாழ்க்கை நகர்கிறது. அவரது சிலுவை மரணமும் நிகழ்கிறது. சக்கேயு என்ன ஆனார் என்பதைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தில் இல்லை. ஆனால் பைபிளுக்கு வெளியே இரண்டு விதமான செய்திகள் சக்கேயுவைப் பற்றிக் காணக் கிடைக்கின்றன.

சக்கேயு இயேசுவின் சீடராக மாறினார். இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். இயேசு தனது கடைசி காலத்தில் எருசலேம் சென்ற போது அவருடன் சக்கேயுவும் சென்றார். அவரை சிலுவையில் அறைவதற்காய் இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு கலங்கினார். இயேசுவின் மரணத்துக்குப் பின்னும் அவர் இயேசுவின் சீடர்களோடு இருந்தார். 

பெந்தேகோஸ்தே நாளில் 120 பேர் மீது தூய ஆவியானவர் இறங்கிய போது, அவர்களில் ஒருவராக சக்கேயுவும் இருந்தார். ஸ்தேவானுடைய படுகொலைக்குப் பின் எரிகோவிலிருந்து இடம் பெயர்ந்தார். அன்றைய இஸ்ரேல் நாட்டிலுள்ள கேசாரியா எனும் பகுதிக்கு வந்தார். அங்கே இயேசுவின் நற்செய்தியை அறிவித்த அவர், அங்குள்ள திருச்சபையின் முதல் ஆயராக மாறினார். என்கிறது ஒரு கதை.

இன்னொரு கதையை புனித கிளமெண்ட் எழுதுகிறார். அவரது பார்வையில், சக்கேயு தான் இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவராக பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியாஸ். கடற்கரையோரமாய் இருந்த சக்கேயு, இயேசுவின் திருமுழுக்கைக் கண்டிருக்கிறார். பின்னர் இயேசுவால் மீட்கப்பட்டு அவரோடு இணைந்திருக்கிறார். இயேசுவின் சிலுவை மரணத்தையும் கண்டிருக்கிறார். அப்படிப்பட்ட தகுதிகளுடன், திருத்தூதர் தேர்வில் இணைந்து மத்தியாசாக யூதாசுக்கு பதில் திருத்தூதர் ஆகிறார் என்கிறது அந்தக் கதை. 

எது எப்படியோ, செயல்களின் மூலம் விசுவாசத்தைக் காட்டிய சக்கேயு ஒரு வியப்பின் மனிதராக இருக்கிறார். இயேசுவால் மீட்படைந்த அவர் மீண்டும் பாவ வாழ்வுக்குள் சென்றிருக்க வாய்ப்பு இல்லை. எனவே இந்தக் கதைகளில் ஏதோ ஒன்றில் உண்மையின் வாசம் ஒளிந்திருக்கக் கூடும்.

*

சேவியர்

Posted in Articles, Beyond Bible

இவர்கள் என்ன ஆனார்கள் ? 3. பரபாஸ்

இவர்கள் என்ன ஆனார்கள் ?

பரபாஸ்

இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான நபராக மாறிவிட்டவர் பரபாஸ். அவர் இயேசுவின் சீடரல்ல, இயேசுவோடு நடந்தவரல்ல, இயேசுவின் சுக துக்கங்களில் பங்குபெற்றவரல்ல ! சிறையினில் அடைக்கப்பட்டிருந்த ஒரு குற்றவாளி. சிலுவை மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த ஒரு குற்றவாளி. 

அந்தக் காலத்தில் சிலுவைக் குற்றவாளிகள், தங்களுடைய சிலுவையை தாங்களே செதுக்கிக் கொள்ள வேண்டும் எனும் வழக்கமும் இருந்தது. தனக்கான கொலைக்கருவியான சிலுவையைச் செய்யும் போதெல்லாம் அதில் தன்னை வைத்து அறையப் போகிறார்கள் எனும் சிந்தனையே உளவியல் ரீதியாக அவர்களைச் சாகடித்து விடும். ஒவ்வொரு கணமும் அந்த அச்சமும், பதட்டமும் அவர்களை நிலைகுலையைச் செய்யும். தனக்கான சவப்பெட்டியை தானே உருவாக்கும் அவஸ்தை அது.

அப்படி, தனது சிலுவையைச் செய்து முடித்து விட்டு அச்சத்திலும், பதட்டத்திலும் சிறையினுள் நாட்களை அவன் கழித்திருக்கலாம். தனது மரணத்துக்கான அழைப்பு எப்போது வரும் என அவனது உள்ளம் கலங்கிக் கொண்டிருந்திருக்கலாம். காரணம் அவன் பேர்போல ஒருகுற்றவாளி. கொலையாளி. மிகப்பெரிய கலகக்காரன். சமுகத்தால் நிராகரிக்கப்பட்டவன். 

திடீரென ஒரு நாள் அவன் காதில் ஒரு மாபெரும் கூக்குரல் கேட்கிறது. “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்”. அந்த குரல்களின் இடையே அவன் சிறையிலிருந்து அழைத்து வரப்படுகிறான். கைகளிலும் கால்களிலும் உள்ள சங்கிலிகளின் சத்தம் அவனது அச்சத்தை இன்னும் அதிகரிக்கிறது. அந்தக் குரல்கள் அவனை மிரட்டுகின்றன. ஆணிகள் தன் கரங்களிலும் கால்களிலும் நுழையப்போகும் தருணம் இதோ நெருங்கிவிட்டது என அவன் நடுங்குகிறான். 

திடீரென ஒரு குரல் முழங்குகிறது. 

“பரபாசை விடுதலை செய்யுங்கள்” . 

“பரபாசை விடுதலை செய்யுங்கள்” .

என்ன நடக்கிறது ? தனக்கு ஆதரவாக யார் குரல்கொடுப்பது ? இதென்ன தோற்ற மயக்கமா ? மனநிலை எனக்குப் பாதிக்கப்பட்டு விட்டதா என பரபாஸ் குழம்பித் தவிக்கிறான். சட்டென அந்த ஒரு குரல் இரண்டாகி, நான்காகி, மிகப்பெரிய கூட்டத்தின் பேரொலியாய் ஒலிக்கிறது. 

எனக்கு ஆதரவாய் இத்தனை பேர்களா ? நான் விதைத்த புரட்சி விதைகள் அரசுக்கு எதிராய் கானகமாய் வளர்ந்து விட்டதா ? நான் இங்கே தலைவனாய் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறேனா ? புரியாத புதிராய் நடந்த பரபாசின் கண்களில் விழுந்தார் இயேசு. அமைதியின் உருவமாய், பதட்டம் ஏதும் இன்றி, குற்றவாளியாய் நிற்கிறான். 

“இயேசுவைச் சிலுவையில் அறையும், பரபாசை விடுவியும்” 

“இயேசுவைச் சிலுவையில் அறையும், பரபாசை விடுவியும்” 

குரல்களின் ஓலம் வீறிட்டது. பரபாஸ் ஒரு வினாடி திகைக்கிறான். இயேசுவா. இது தான் இயேசுவா ? இவரைப் பற்றி ஏதேதோ கேள்விப்பட்டேனே. உலகமே இவர் பின்னால் செல்வதாய் கேள்விப்பட்டேனே ! அதிசயத்தின் நாயகன் என்றார்களே. இறந்தவர்களைக் கூட உயிர்ப்பித்ததாய் சொன்னார்களே. நான் கேள்விப்பட்டதெல்லாம் தவறா. இங்கே இயேசுவை சிலுவையில் அறையச் சொல்கிறார்கள், அவரும் அமைதியாய் நிற்கிறாரே !!!

பரபாஸ் புரியாத மனநிலையில் இருக்கும் போதே, அவனது கைகளிலும் கால்களிலும் இருந்த சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டன. அவன் விடுதலையாக்கப்பட்டான். 

பரபாஸ், தான் விடுதலையானதை நம்ப முடியாமல் அங்கிருந்து விலகினான். கூட்டம் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.  எல்லோருடைய கவனமும் இயேசுவின் மீதே இருந்தது. அவனது விடுதலையயல்ல, இயேசுவின் சாவையே கூட்டம் விரும்பியது என்பதை பரபா புரிந்து கொண்டான். 

அதன் பின்னர் பரபாஸ் என்ன ஆனார் என்பதைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தில் இல்லை. ஆனால் செவி வழிச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள கதைகள் சுவாரஸ்யமானவை. 

பரபாசின் உண்மையான பெயர் யேஷுவா பார் அபாஸ். அதன் பொருள் தந்தையின் மைந்தன். இறைமகன் இயேசுவின் பெயரை ஒட்டிய அதே பெயர். இந்த பெயர் விவிலியத்தின் சில பழைய பதிவுகளில் காணப்படுகிறது. இயேசுவுக்கும், பரபாவுக்கும் ஒரே பெயர் வேண்டாம் என பிற்காலத்தில் அந்த யேஷுவா எனும் பெயர் நீக்கப்பட்டதாக சில விவிலிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இயேசுவைச் சிலுவையில் அறையும் காட்சியை தொலைவில் நின்று கண்டான் பரபாஸ். அவனது மனம் குத்தப்பட்டது. இதோ இந்த சிலுவை மரத்தில் எனது கரங்கள் பதிக்கப்படும், ஆணியால் துளைக்கப்படும் என்று நினைத்திருந்தேன் ஆனால் இப்போதோ குற்றமற்ற ஒருவரின் கைகள் எனக்குப் பதிலாக அங்கே இருக்கிறதே. என் கால்கள் அறையப்பட வேண்டிய இடத்தில் பழுதற்ற ஒருவரின் பாதங்கள் இருக்கின்றனவே என கலங்கினான். 

“பிதாவே இவர்களை மன்னியும்” எனும் இயேசுவின் அன்பின் குரல் இவனது காதிலும் சன்னமாய் விழுந்தது. தன் பாவங்களை இயேசு மன்னித்து விட்டதை பரபாஸ் உணர்ந்தான். தனக்காய் இயேசு மரித்ததை துயர இதயத்தில் ஏற்றுக் கொண்டான். இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ள அவரது சீடர்களை நாடிச் சென்றான். இயேசு இறந்து உயிர்த்தபின், தூய ஆவியானவர் அருளப்பட்ட அந்த  120 பேரில் அவனும் இருந்தான். இப்படியெல்லாம் பரபாஸைப் பற்றிய கதைகள் உலவுகின்றன. 

பரபாஸின் கதை புனைவும், நிஜமும் கலந்த கதை என்பதில் சந்தேகமில்லை. எனினும், தனக்காக மரித்த இயேசுவின் அன்பு அவனது கல்லான மனதை கனிவுள்ளதாய் மாற்றியிருக்கும் என்பதிலும் வியப்பில்லை. 

*

சேவியர்