Posted in Animals Birds, Bible Poems

உயர் திணையான அஃறிணைகள் – பன்றி

உயர் திணையான அஃறிணைகள்
பன்றி

புறக்கணிப்பின்
பின்வாசலாய் இருக்கிறது
என் வாழ்க்கை !

குதித்து வந்து
தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ
படுக்கையில்
புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ
பொதுவாக
நான் இருப்பதில்லை !

சகதியின் சகவாசமும்
அழுக்கின் அருகாமையும்
என்னை
புனிதத்தின் தேசத்திலிருந்து
புறந்தள்ளியிருக்கிறது.

நான்
அசைபோடாததால்
என்னை
அசைபோடக் கூடாதென
மோசேயின் சட்டம்
முட்டுக்கட்டை இடுகிறது.

என்
இறுதிச் சடங்கில் கூட
தொட்டு விடாத் தீண்டாமையுடன்
சட்டம்
என்னை தூரமாய் வைக்கிறது.

நான்
அருவருப்புகளின் உருவகமாய்
அறியப்படுவதில் வருத்தமுண்டு.

கடவுளின் சொல்லுக்கு
அஞ்சாதவரின்
உணவுப் படையலானது,
பன்றியின் இரத்தப் படையல் போல
வெறுக்கத்தக்கது
என்கிறது விவிலியம்.

உங்கள் முத்துகளை
என் முன்னால் எறிந்தால்
நாங்கள்
அதன் மதிப்பை உணராமல்
மிதித்துப் போடுவோம்
என
இயேசுவே சொல்லிவிட்டார்.

இலேகியோன்
எனும்
பேய்களின் படையையும்
எங்களிடமே அனுப்பி
நாங்கள்
தண்ணீருக்குள் தாவி
தற்கொலை செய்யவும் வைத்தார்.

ஊதாரி மைந்தனின்
இழிநிலையைச் சொல்லவும்
என்
உணவு தானே உவமையானது.

பன்றியைக் கழுவினாலும்
அது
சேற்றில் புரளுமென
சொல்லிச் சொல்லி
யாரும் எங்களைக் கழுவுவதுமில்லை.

நாங்கள்
தோராவின் காலம் முதல்
தூரமாகவே இருக்கிறோம்.

மனிதனின்
உடலுக்குள் செல்வதொன்றும்
மனிதனைத்
தீட்டுப்படுத்தாதென
ஒருமுறை
சற்றே ஆறுதல் தந்தார் இயேசு.

இஸ்லாமியர்களுக்கும்
நான்
இகழப்படும் விலங்கு.

ஆனாலும்
தவிர்க்கமுடியா சூழலில்
என்னைத் தின்பது
பாவமல்ல,
ஏனெனில் கடவுள் இரக்கமுள்ளவர்
என
குரானும் கொஞ்சம் கருணை காட்டியது.

எனினும்
எனக்கு
மகிழ்ச்சி தரும்மனிதர்
சாலமோன் தான்.

அவர் மட்டும் தான்
எனது மூக்கில் ஒரு
வைர மூக்குத்தியை
கற்பனையேனும் செய்து பார்த்தவர்

அவர் சொன்னார்.

மதிகேடான
பெண்ணின் அழகு,
பன்றிக்குப் போட்ட
வைர மூக்குத்தி !

*

சேவியர்

Posted in Articles, Christianity, WhatsApp

சீர்திருத்தச் சிலைகள்

சீர்திருத்தச் சிலைகள்

சிலரைப் பார்த்திருக்கிறேன். தினமும் சாராயம் குடித்துக் குடித்து அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டவர்கள். திடீரென ஒரு நாள் ஞானோதயம் வந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவார்கள். உடனே அதைச் சமன் செய்வதற்காக புகையிலைப் பழக்கத்தையோ, பான்பராக் போன்ற ஏதோ ஒரு பழக்கத்தையோ அவர்கள் கையிலெடுப்பார்கள். ‘அதான் குடியை விட்டாச்சுல்ல’ என்பார்கள். அதைவிடப் பெரிய போதையின் பாதையில் நுழைந்து அழிவார்கள்.

சிலைகளை விட்டு ஒட்டு மொத்தமாக விலகவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு தனியே இறைவனை வழிபடும் பலரும், அதற்கு மாறாக வேறு சில சிலைகளைத் துடைத்துச் சுத்தமாக்கி தங்களுடைய இதயத்தின் அலமாரியில் அடுக்கி வைக்கின்றனர். கடவுள் உருவமற்றவர் என்பது போல இவர்களுடைய சிலைகளும் உருவமற்றதாக இருப்பது வசதியாகி விடுகிறது இவர்களுக்கு.

சமீபத்தில் ஒரு சபைக்கு ஒரு பாஸ்டர் புதிதாக வந்தார். ‘பிள்ளைகளுடைய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடவேண்டாம்’ என்றவர் இயேசு. வந்த பாஸ்டரோ பிள்ளைகளை விட அதிகமாய் நேசிக்கும் சில நாய்களோடு வந்தார். வெளிநாட்டு நாய் வகை எனும் கர்வத்தையும் கழுத்தில் மாட்டியிருந்தார். அந்த நாய்களுக்கு ஏசியும், வசதியான காம்பவுண்ட் சுவரும் வேண்டுமென அடம்பிடித்தார். அத்துடன் விடவில்லை, தனக்கும், தனது பிள்ளைகளுக்கும், அவர்களுடைய நண்பர்களுக்கும் பணக்காரக் கார்களை நிறுத்துவதற்காக ஆலய மதில் சுவரை இடித்து பார்க்கிங் இடங்கள் செய்து தரவேண்டும் என்றார்.

‘சொகுசு வாழ்க்கை’ எனும் சிலை ஒன்றை அவர் தனது கக்கத்தில் சொருகி வைத்திருந்தார். தனக்கு வசதியான வாழ்க்கை வேண்டும், திருச்சபையின் ஆன்மீக வளர்ச்சி எக்கேடுகெட்டுப் போனால் எனக்கென்ன எனும் சிந்தனை அவரது கனிகளில் வெளிப்பட்டது. சரி, ஆயர் இப்படியிருக்கிறாரே, இலட்சக்கணக்கில செலவு செய்கிறாரே மேலிடத்துக்குப் போவோம் என மக்கள் தீர்மானித்தபோது ஒருவர் சலித்துக் கொண்டே, “அட நீ..வேற. மேலிடம் ஒரு கோடி ரூபாய்க்கு தன்னோட வீட்டை பட்டி டிங்கரிங் பாத்திருக்கு… நீ போவியா அங்கிட்டு’ ! என்றார். சொகுசு வாழ்க்கையின் சிலைகளின் அருங்காட்சியகமே அவரிடம் இருக்கிறது போல.

இன்னொரு நிகழ்வில் திருச்சபைப் போதகர் ஒருவர் தன்னுடைய வீட்டில் வைத்து தான் காணிக்கைப் பணத்தை எண்ணுவேன். தன்னுடைய செலவுகளெல்லாம் காணிக்கைப் பணத்தில் தான் நடக்க வேண்டும். நான் நினைக்கும் செலவுகள் செய்யப்பட வேண்டும் என கட்டளை கொடுத்தாராம். பண ஆசை எனும் சிலை ஒன்று அவரது பாக்கெட்டுக்குள் பத்திரமாய் இருக்கிறது. மேலிடத்துக்குப் போகவேண்டும் எனும் ஆசையையே திருச்சபையினர் பரணில் போட்டு பூட்டி விட்டார்களாம்.

இன்னொரு போதகரோ பெண்களோடு அந்தாக்‌ஷரி நடத்தி சினிமாப் பாடல்களின் கூடாரமாக கிறிஸ்தவ சந்திப்புகளை மாற்றியிருக்கிறார். அத்தகைய போதகர்களின் வாழ்க்கையில் சிற்றின்பச் சிலைகள் வந்து கூடாரமடித்துக் குடியிருக்கின்றன. என்ன செய்வதென தெரியாமல் மக்கள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.

மற்றொரு போதகர் இருக்கிறார். என்ன சொன்னாலும், “நான் ஒரு ஸ்காலராக்கும்…”, “நான் ஒரு சேர்மேனாக்கும்…” என சகட்டு மேனிக்கு கர்வத்தின் விசிட்டிங் கார்ட்களை விசிறிக் கொண்டிருக்கிறார். பவுல் சொன்னார், நான் இயேசுவைப் பின்பற்றுவது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள் என்று. ஆனால் இன்றைய போதகர்களோ ‘நீ என்னைப் பின்பற்று, நாம் இருக்கலாம் இன்புற்று’ என்கின்றனர்.

இன்னும் சில சபைகளில் சாதி எனும் சிலைகள் குழு குழுவாக தலையைப் பிரித்து விட்டு ஆட்டம் போடுகின்றன. நானே வாழ்வின் வாசல் என்றார் இயேசு. ‘அதெல்லாம் இருக்கட்டும், அடுத்த சாதி காரன் வந்தா வாசலைச் சாத்தி தான் வைப்போம்’ என்கிறார்கள் பக்தர்கள். சாதிக்கென சபைகள், சாதிக்கென தனித்தனியே ஆராதனைகள். இதைக் கண்டிக்க வேண்டிய போதகர்களோ காணிக்கைக் கணக்கு குறைந்து விடக்கூடாதெனும் கவலையில் கப் சிப் என இருக்கின்றனர்.

சிலைகள் ! எங்கும் எதிலும் சிலைகள் ! இதில் நாங்கள் சிலைகளை ஒழித்துவிட்டோம் என கர்வம் வேறு. கர்வத்தோடு முன்னிறுத்தும் எந்த விஷயமுமே சிலையாகிப் போகிறது.

சிலைகளைப் பற்றிய நமது அடிப்படைப் புரிதலே தவறு. எது நம்மை கடவுளிடமிருந்து பிரிக்குமோ அதுவே சிலை. பழைய ஏற்பாட்டில் “தன்னை விட்டு விட்டு வேறு தெய்வங்களை” நினைவூட்டிய அத்தனை அடையாளங்களையும் கடவுள் வெறுத்தார், அருவருத்தார் என்பதை தெளிவாகப் பார்க்கிறோம். கடவுளைத் தவிர எதன்மீது நமது பார்வையை, நம்பிக்கையை, பாதுகாப்பை, ஆசையை வைக்கிறோமோ அதுவெல்லாம் சிலை. எது கடவுள் மீதான நமது பார்வையைத் திசை திருப்ப வைக்குமோ அதுவெல்லாம் சிலை.

எது நமக்கு கடவுளை நினைவூட்டுமோ, கடவுளோடான அன்னியோன்யத்தை அதிகப்படுத்துமோ, கடவுளிடம் செபிக்கத் தூண்டுமோ அது சிலையல்ல. உதாரணமாக, சிலுவை நமக்கு இயேசுவை ஞாபகப்படுத்தினால், இயேசுவிடம் நெருங்க உதவினால் அது சிலையல்ல. பணம் நமக்கு சுக போகத்தை நினைவூட்டி இயேசுவை ஓரங்கட்டினால் அது சிலை. அவ்வளவே. வீட்டில் தொங்கும் ஒரு படம் இயேசுவை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தால் அது சிலையல்ல, “வாவ் வாட் எ பெயிண்டிங்’ என பெயிண்டரை நினைவுபடுத்தினால் அது சிலை.

சிலைகள் தானாக முளைத்து வளர்வதில்லை, நாம் தான் வளக்கிறோம்.
அதே போல, ஒழிக்க வேண்டிய சீர்திருத்த சிலைகள் என்னவென்பதையும் நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

*
சேவியர்

Posted in Animals Birds, Articles

உயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி

உயர்திணையான அஃறிணைகள்

*

கிளி
எனும் அடைமொழியுடன்
அறியப்பட்டாலும்
எங்களை
அலங்காரக் கூண்டுகளில் வைத்து
யாரும்
அழகுபார்ப்பதில்லை.

தனியே வந்தால்
உங்கள் ஒற்றை மிதியில்
உயிரை விடுவேன்
அத்தனை பலவீனம் எனது.

நான்
தனியே வருவதில்லை !
பேரணியே எம் பலம்.

கணக்கற்ற படையோடு
புரண்டு வரும் கார்மேகமாய்
ஆர்ப்பரிக்கும்
அருவியாய் தான் வருவேன்.

போர்க்களத்தில்
யார் தான்
நிராயுதபாணியாய் நுழைவது !

எகிப்தின்
கர்வக் கதவடைப்புக்கு
கர்த்தரின் கோபம்
கீழ்க்காற்றின் தோளிலேற்றி
எங்களை
தேசம் முழுவதும் இறக்கி விட்டது.

வெட்டுக் கிளிகளின்
வேட்டைக்களமாய்
எகிப்தியரின் கர்வக் கிரீடங்கள்
கழன்று விழுந்தன.

நாட்டின்
வெளிச்ச வாசல்களையெல்லாம்
எங்கள்
மூர்க்கத்தனமான கூட்டம்
இருள் கொண்டு மூடி வைத்தது.

பச்சையாய் இருந்த
அத்தனை தாவரங்களும்
எங்கள்
பெருந்தீனிக்கு இரையாகின.

பழங்களின்
வசீகரங்களையும்
எங்கள்
ஆக்கிரமிப்பு அழித்து முடித்தது.

கீழ்க்காற்றின் தோளிலேறி
வந்த எங்களை
மேல்க்காற்றின் முதுகிலேற்றி
ஆழிக்குள்
அனுப்பி வைத்தார் ஆண்டவர்.

நாங்கள்
அழிவின் சின்னமாய்
அறியப்பட்டோம் !

யோவேல்
எங்களை பருவம் வாரியாக
பிரித்து வரவழைத்தார்.

இளம் வெட்டுக்கிளி
துள்ளும் வெட்டுக்கிளி
வளர்ந்த வெட்டுக்கிளி
என
நாங்கள் அழிவின் வீரியத்தை
அறிவுறுத்தினோம்.

அங்கே
எச்சரிக்கையின் சின்னமாய்
அறியப்பட்டோம்.

காலத்தின் முடிவில்
நாங்கள்
புகையின் கை பிடித்து
பூமிக்குள் இடம் பெயர்வோம்.

தேள்களின் ஆற்றலும்
வால்களில் கொடுக்கும்
எங்கள்
மெல்லிய மேனிக்குக் கொடுக்கப்படும.

அப்போது
இலைகளின் தலைகளை
விட்டு விட்டு
மனிதர்களின் தலைகளையே
குறிவைப்போம்.

நெற்றியில் கடவுளின்
முத்திரை இல்லையேல்
நித்திரை தொலைப்பார்கள்
அவர்கள்
எங்கள் தாக்குதலில் விழுந்து
சாகாமல் சாவார்கள்.

மரணத்தை
வற்புறுத்தி அழைப்பார்கள்
அதுவும்
ஒளிந்து கொள்ளும்
வலிகளின் பந்தி மட்டுமே
வகை வகையாய் விரிக்கப்படும்.

போருக்குத் தயாராய்
தினவெடுத்த தோள்களுடன்
துள்ளித் திரியும்
குதிரைகளாய் திரிவோம்
நாங்கள்.

எங்கள் தலைகளில்
பொன் முடிகள் மின்னும் !

எங்கள் முகங்கள்
மனித முகங்களைப் போல
உலகத்தை
அச்சத்தில் உறைய வைக்கும்.

எங்கள்
தலைகளில்
பெண்களின் கூந்தலைப் போல்
கூந்தல் குதித்தாடும் !

வெறி கொண்ட எங்கள்
வாய்களில்
சிங்கங்களின் பற்களைப் போல்
பற்கள்
பற்றிக் கிழிக்கக் காத்திருக்கும்.

எங்கள்
மார்புகளில்
இரும்புக் கவசம் வந்து
பாதுகாப்பு வளையமிடும்.

எங்கள்
சிறகுகளின் இரைச்சல்
தேர்ப்படையின் இரைச்சலாய்
அவனியை
அச்சத்தில் அலற வைக்கும் !

எங்கள்
வால்கள் போதும்
மனிதர்களின் வாழ்க்கையைத்
தகர்த்தெறிய.

எபிரேயம் அபத்தோன் என்றும்
கிரேக்கம்
அப்பொலியோன் என்றும்
அழைக்கும்
படுகுழியின் வானதூதரே
எமக்கு அரசன் !

இப்படியெல்லாம்
திருவெளிப்பாடு திடுக்கிட வைப்பதால் தான்
நாங்கள்
பூமியின் வீதிகளில்
வந்திறங்கும் போதெல்லாம்
மனிதன் வெலவெலக்கிறான் !

நாங்கள்
முடிவின் முரசொலியாய்
அறியப்படுகிறோம்.

அதோ,
இரண்டாம் வருகையின்
எக்காளச் சத்தம்
எங்கள் சிறகுகளில் ஒலிப்பதாய்
மனிதர்
பதறித் தவிக்கின்றனர்

அழிவின் அறிவிப்பாய்
நாங்கள் இருப்பது வலி தருகிறது.
என்றாலும்
எங்களை
மகிழ்விக்கும் செய்தி ஒன்றுண்டு.

எங்கள்
அழிவின் சத்தம் தான்
உங்களை
வாழ்வின் வாசலை நோக்கி
விரைந்து ஓட வைக்கிறது !
என்பது தான் அது.

*

சேவியர்

Posted in Animals Birds, Articles

உயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு

உயர்திணையான அஃறிணைகள் – 6

ஒரு சின்ன
விரலின் நுனியினால்
என்னை
நசுக்கி எறிய முடியும்.

மென்மையால்
புரண்டு படுத்தாலே
என்னைப்
புதைத்து விட முடியும்.

நான்
மென்மையானவன்.

ஒரு துளித் தண்ணீரில்
நான்
மூழ்கித் தவிப்பேன்.
ஒரு சிறு காற்றில்
நான்
பதறிப் பறப்பேன் !

எனினும்
என்னை
பெருமைப்படுத்துகிறது
விவிலியம்.

என்
செயல்களைக் கவனித்து
மனிதன்
ஞானம் பெற வேண்டுமென
ஞானத்தின் ஞாலமான
சாலமோன் செதுக்கி வைக்கிறார்.

தலைவனில்லாமல்
பணி செய்யும்
என்
தார்மீகக் கடமையைப் பற்றி,

கண்காணிப்பாளனின்றியும்
கண்ணியமாய்
கடைமையாற்றும்
என்
தொழில் தர்மம் பற்றி,

வறுமையில் அழிந்துவிடாதிருக்க
திட்டமிட்டுச்
சேமித்து வைக்கும்
என்
சாதுர்யத்தைப் பற்றி.

விவிலியம்
கடுகளவான என்னை
வானளாவ உயர்த்தி வைக்கிறது.

மனிதனின்
முன்னேற்றத்தை. முடமாக்கும்
சோம்பலின்
சன்னலைப் பற்றியும்,

படுக்கைக்குள்
முடங்கிக் கிடக்கும்
பகல்களின்
பலவீனத்தைப் பற்றியும்

பைபிள் பலமாகவே
பதிவு செய்து வைக்கிறது.

என்னைப் போல்
மாறுங்கள் !
இல்லையே
வறுமை உங்கள் மேல்
வழிப்பறிக் கொள்ளையனாய்
தாக்கும் !

ஏழ்மை உங்கள் மேல்
போர்வீரனைப் போல்
பாயும் !

என்னைப் போல்
மாறுங்கள்.

நான்
தாழ்மையானவன்
தரையோடு தரையாய் தவழ்பவன்.

உங்களுக்கு
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்.

அழைப்புக்காக
நீங்கள்
மேல் நோக்கிப் பாருங்கள்.
உழைப்புக்காக
நீங்கள்
கீழ் நோக்கிப் பாருங்கள்

*

சேவியர்

Posted in Articles, Bible Animals, Bible Poems

உயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு !

உயர்திணையான அஃறிணைகள்

5


ஆடு !

நான் தான்
ஆடு பேசுகிறேன்.

ஆபேல் காலத்தில்
என்
மெல்லிய பாதங்கள் பூமியில்
அசைந்தாடத் துவங்கின.

அதன் பின்
விவிலியத்தின்
பசும்புல் வெளிகளிலும்
நீரோடைகளிலும்
முட் புதர்களிலும்

என் பயணம்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

பலியின் குறியீடாய்,
வலியின்
விளைநிலமாய்,
நான்
பயணித்துக் கொண்டேயிருக்கிறேன்.

ஆதாமின்
ஆடையும் நானாயிருக்கலாம்,
ஆபேலின்
பலியும் நானாயிருக்கலாம் !

பாவத்தின்
நிர்வாணத்தை
நானே மறைக்கிறேன்,
புனிதத்தின்
பலியாகவும் நானே நிறைகிறேன்.

இறைவனின்
பிள்ளைகளையும்
நானே அடையாளப்படுத்துகிறேன்.

பிள்ளைகளின்
இறைவனையும்
நானே அடையாளப்படுத்துகிறேன்

ஈசாக்கிற்குப்
பதிலாய்
நானே பலியானேன் !

எனக்குப் பதிலாகவே
ஈசனும்
பலியானார் !

எனக்கு
நல்ல ராசி !

என்னோடு
உறவாடிக் கொண்டிருந்த
தாவீது
மாபெரும் மன்னனானார் !

என்னோடு
சகவாசம் கொண்டிருந்த
யோசேப்பு
மாபெரும் அதிபரானார் !

என்னோடு
நட்புறவு கொண்டிருந்த
மோசே
மாபெரும் விடுதலை வீரரானார்.

நான்
மென்மையில் ஒளிந்த
வலிமை.
பாறையைப் பதுக்கி வைத்த
பனித்துளி.

நான்
தொலைகின்ற தருணங்களில்
தேடப்படுகிறேன்,
தேடப்படும் கணங்களில்
அகப்படுகிறேன்.

ஆயனின் குரலுக்கு
என்
செவிகள் இசைந்திருக்கும்
கால்கள்
தொடர்ந்திருக்கும்.

ஆயனின்
தகுதியைப் பார்த்து நான்
பின் தொடர்வதில்லை,
எனவே தான்
தவறாகவும் பலவேளைகளில்
தடம் மாறுகிறேன்.

நானும் இயேசுவும்
பிரியாமல் பயணிக்கிறோம்

இயேசுவின்
பிறப்பில்
ஆடு மேய்த்தவர்கள்
ஆயனைக் கண்டார்கள்.

இயேசுவின்
இறப்பின்
பலியாடாகவே
ஆயனைக் கண்டார்கள்.

விண்ணக
வீதியில்
ஆட்டுக்குட்டியாகவே
ஆண்டவனைக் கண்டார்கள்.

நானும் இயேசுவும்
பிரியாமல் பயணிக்கிறோம்

ஓநாய்களிடையே
ஆடுகளாய்
சீடர்களை அனுப்பினார் இயேசு
நான் மகிழ்ந்தேன்.

வன்மத்தின்
நகக்கீறல்களுக்கு நடுங்கவில்லை.

என்
கவலையெல்லாம்
ஓநாய்களிடையே அலைவதிலல்ல,
ஓநாய்களே
ஆட்டுத் தோலுடன்
அலைகையில் மட்டும் தான்.

*

சேவியர்