Posted in Articles, Sunday School

SKIT – தனித்துவமானவன்

காட்சி 1

( ரயன் சோகமாக இருக்கிறான்.. பந்தை தட்டிக் கொண்டே ) 

ரெய்னா : என்ன தம்பி, ரொம்ப சோகமா இருக்கே.. பொதுவா இப்படி இருக்க மாட்டியே… 

ரயன் : ஒண்ணும் இல்ல.. விடு.

ரெய்னா : கப்பல் கவுந்த மாதிரி இருந்துட்டு.. ஒண்ணுமே இல்லேன்னு சொல்றே… 

ரயன் : ஆமா.. கப்பல் கவுந்தா மட்டும் தான் சோகமா இருக்கணுமா என்ன ?

ரெய்னா : சரி, அப்போ என்ன விஷயம்ன்னு சொல்லு…

ரயன் : இல்ல.. ஸ்கூல்ல என்னை புட்பால் மேட்ச்ல சேத்துக்கல.. அதான் கடுப்பாயிட்டேன்.

ரெய்னா : ஓ… அப்போ சரிதான்.. புட் பால் தான் உனக்கு உயிராச்சே.. அதுல இடமில்லேன்னா கடுப்பில்லாம எப்படி இருப்பே.. சரி, சரி.. எனக்கு படிக்க நிறைய இருக்கு, கதை பேசிட்டிருக்கேன்னு திட்டு விழும் நான் போறேன்.

காட்சி 2

( அம்மா வருகிறார் ) 

அம்மா : அக்கா இப்போ தான் சொன்னா… புட் பால் டீம்ல உனக்கு இடம் கிடைக்கலையா ? 

ரயன் : ம்ம்… ஆமாம்மா…. கிடைக்கல… 

அம்மா : ஏன் என்னாச்சு ? 

ரயன் : நான் ஷார்ட்டா இருக்கேன்னு சொல்லிட்டாரு மாஸ்டர். 

அம்மா : ஸ்கூல்ல எல்லா வருஷமும் நீ விளையாடிட்டு தானே இருக்கே… இப்போ என்னாச்சு ? அப்படி ரூல் எதுவும் கிடையாதே… 

ரயன் : காம்பெட்டிஷனுக்கு போணும்ன்னா ஹைட் இவ்ளோ இருக்கணும்ன்னு ஸ்கூல்ல ஒரு புது ரூல் போட்டிருக்காங்க.. அதான் என்னால ஜாயின் பண்ண முடியல. 

அம்மா : சரி விடுடா… அதுக்கு போயி வருத்தப்பட்டுட்டு..

ரயன் : என்னை விட சொத்தையா விளையாடறவங்க எல்லாம் டீம்ல இருக்காங்க, என்ன குள்ளப் பயன்னு கிண்டல் வேற பண்றாங்கம்மா… 

அம்மா : சொல்றவங்க சொல்லிட்டு தாண்டா இருப்பாங்க.. நீ கவலைப்படாதே. கடவுள் ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதமா படைச்சிருக்காரு.. ஏன்னா ஒவ்வொருத்தரும் கடவுளோட திட்டத்தில ஒவ்வொரு வேலை செய்றாங்க.. அதான். 

ரயன் : பட்.. புட்பால் தான் என்னோட டிரீம்… ஹைட்டுக்கு நான் என்ன பண்ணணும்… 

அம்மா : டேய்.. ஹைட்டும், வெயிட்டும், கலரும் எல்லாம் கடவுள் தரது. அதைப்பற்றி நாம கவலைப்படவே கூடாது. உனக்குன்னு கடவுள் ஏதோ ஒண்ணை ஸ்பெஷலா வெச்சிருக்காருன்னு அர்த்தம்

ரயன் : அப்படியெல்லாம் இல்லம்மா… ஐ ஆம் எ லூசர்… 

அம்மா : அட… கடவுளோட படைப்புல எல்லாத்துக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல். உதாரணமா ஒரு மியூசிக் குரூப் இருக்குன்னா, கீபோர்ட், கிட்டார், வயலின், ஃபுலூட் இப்படி எல்லாமே இருக்கும். ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு இசை…. ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல். எல்லாமே கீபோர்டாகவோ, கிட்டாராவோ இருந்தா நல்லா இருக்காதுல்ல… அதான். உலகம் முழுக்க ஒரே மாதிரி பூ இருந்தா நல்லா இருக்குமா ? உடல் முழுசும் கண் மட்டுமே இருந்தா நல்லா இருக்குமா… 

ரயன் : அதெல்லாம் சரிம்மா.. ஆனாலும்… இது ஒரு குறை தானே.

அம்மா : நான் ஒரு இண்டரஸ்டிங் விஷயம் சொல்றேன்… உனக்கு ரொம்ப புடிச்ச பவுல் பத்தி தெரியுமா உனக்கு ? கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளா நாம அவரோட எழுத்துகளை தான் வாசிச்சு வாசிச்சு கடவுளோட அன்பை ருசிச்சிட்டிருக்கோம். ஆனா அவரு ரொம்ப குள்ளம் தெரியுமா ?

ரயன் : என்னம்மா சொல்றீங்க ? பவுல் குள்ளமா ? அவரு குதிரைல ஏறி பயங்கர வில்லத்தனம் பண்ணினவராச்சே.

அம்மா : எஸ்.. அவரு ரொம்ப குள்ளமானவர்ன்னு ஒரு பழைய கால சுருளேடு சொல்லுது. சொல்லப்போனா, அவரு உன்னை விட ரொம்பக் குள்ளமா இருந்திருப்பாருன்னு நினைக்கிறேன். 

ரயன் : நிஜமாவா சொல்றீங்க ?

அம்மா : ஆமாடா.. அவருக்கு ‘ஷார்ட் மேன்ஸ் காம்ப்ளெக்ஸ்’ இருந்துச்சு, அதனால தான் கிறிஸ்தவர்களை எல்லாம் வேட்டையாடி தன்னோட குறையை மறச்சிட்டு இருந்தாருன்னு விவிலிய அறிஞர்கள் சொல்றாங்க.

ரயன் : ஓ.. ஆச்சரியமா இருக்கே..

அம்மா : இயேசுவால் அழைக்கப்பட்ட பிறகு அவர்க்கு தன்னோட உடம்புல எந்த குறையும் தெரியல. தான் ஸ்பெஷல்ன்னு மட்டும் அவருக்கு தெரிஞ்சுது. அவரை கடவுள் எப்படி பயன்படுத்த நினைச்சாரோ, அதுக்கு ஒப்புக்கொடுத்தாரு. அதனால தான் இன்னிக்கு இவ்ளோ பெரிய அப்போஸ்தலரா இருக்காரு. 

 

ரயன் : நம்பவே முடியலம்மா…  ரொம்ப அருமையா இருக்கு.. உற்சாகமாவும் இருக்கு…

அம்மா : இன்னொரு விஷயமும் சொல்றேன்.. எல்லாருமே பவுல் மாதிரி பாப்புலராகணும்ன்னும் இல்லை. கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பணிக்காக ஸ்பெஷலா சூஸ் பண்ணி வைப்பாரு.. அதுல நாம சிறப்பா பணி செஞ்சா போதும். சில டைம்ல நாம அழகா வெளியே தெரிவோம் முகம் மாதிரி… சில டைம்ல  வெளியே தெரியவே மாட்டோம்… ஹார்ட் மாதிரி… அதுக்காக முகம் தான் பெருசு, ஹார்ட் தேவையில்லைன்னு சொல்ல முடியுமா ?

ரயன் : அதெப்படி சொல்ல முடியும்.. ஹார்ட் இல்லேன்னா, லைஃபே இல்லையே…

அம்மா : கரெக்ட்.. அப்படி தான்.. பவுல் கூட நிறைய பேரு பின்னணியில நின்னு ஹெல்ப் பண்ணினாங்க. உதாரணமா ஆக்ஸ் 27 வாசிச்சேன்னா நிறைய இடத்துல நாங்கள்.. நாங்கள்..நாங்கள்ன்னு வரும். ஆனா அந்த நாங்கள் யாருன்னே வெளியே தெரியாது.. ஆனா அவங்களையும் கடவுள் மிக முக்கியமான விஷயத்துக்குப் பயன்படுத்தியிருக்காரு. அதனால நீ எதுக்கும் கவலைப்படாதே.. சரியா… 

ரயன் : உண்மை தான்ம்மா… நீங்க சொல்றது எனக்கு சந்தோசமா இருக்கு..

அம்மா : கடவுள் நமக்காக ஒரு திட்டம் வெச்சிருக்காருன்னு நம்பினா எல்லாமே சந்தோசம் தான். லாசரை இயேசு உயிர்த்தெழ வெச்சாருன்னு தெரியும். ஆனா லாசர் உடம்பு சரியில்லாம கிடக்கிறதை இயேசுகிட்டே ஒருத்தர் போய் சொன்னாருல்லயா ? அவருக்கான பணி அது ! யோசேப்பு எகிப்தோட ஆளுநர் ஆனாரு, ஆனா அவரை குழியில இருந்து விலைக்கு வாங்கி எகிப்து வரைக்கும் கொண்டு போனவங்க யாரு ? தெரியாது. ஆனா கடவுளோட திட்டத்துல அவங்களுக்கும் பங்கிருக்கு.

ரயன் : சூப்பர்ம்மா…. இனிமே எனக்கு தாழ்வு மனப்பான்மையே வராது.. குள்ளமா இருந்தா என்ன, உயரமா இருந்தா என்ன கடவுள் எனக்கு என்ன வெச்சிருக்காரோ, அதை தான் நான் செய்வேன். 

அம்மா : அதுக்காக குள்ளமா இருக்கிறவங்க சாதிக்க மாட்டாங்கன்னு இல்ல… உலக உதாரணம் கூட நிறைய உண்டு, வின்ஸ்டன் சர்ச்சில் குள்ளமான ஆளு, சார்லி சாப்ளின் குள்ளமான ஆளு, உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோ குள்ளமான ஆளு, நம்ம மகாத்மா காந்தி கூட குள்ளமான ஆளு தான் உயரத்துல பெருமைப்படவும் ஒண்ணுமில்ல, குள்ளமா இருந்தா கவலைப்படவும் ஒண்ணுமில்லை, எல்லாமே கடவுளோட படைப்பு தான். 

ரயன் : இப்போ ஹேப்பியா இருக்கும்மா.. நான் கூட சண்டேஸ் கிளாஸ்ல ஏமி கார் மைக்கேல் பற்றி படிச்சிருக்கேன். அவங்க கண்ணு பிரவுணா இருக்குன்னு கவலைப்பட்டிருக்காங்க. ஆனா பிற்காலத்துல அவங்க இந்தியா வந்தப்போ அது தான் அவங்களை காப்பாத்தியிருக்கு, நல்லா பணி செய்யவும் வெச்சிருக்கு.

அம்மா : எஸ்.. கரெக்டா சொன்னே..  நாம இப்படி இருக்கிறது கடவுளோட திட்டம். அதனால எப்படி இருக்கிறோமோ அதுல ரொம்ப சந்தோசமா இருக்கணும். ஏன்னா, அப்போ தான் கடவுள் நமக்கு வெச்சிருக்கிற திட்டத்தை நாம நிறைவேற்ற முடியும். 

ரயன் : சரிம்மா… 

( பாடல் )

கடவுள் பாரபட்சம் பார்க்காதவர். அவர் நம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் படைத்திருக்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியைத் தந்திருக்கிறார். நாம் நம்மைக் குறித்தோ, நமது தோற்றத்தைக் குறித்தோ, நமது பணியைக் குறித்தோ தாழ்வு மனப்பான்மை கொள்ளவே கூடாது. அது படைத்த ஆண்டவரின் அன்பை அவமானப் படுத்துவதாகும். நமக்கு இறைவன் என்ன பணியை வைத்திருக்கிறாரோ, அந்தப் பணியை நாம் முழு மனதுடனும், மகிழ்வுடனும் செய்யப் பழக வேண்டும். பிறரைப் போல ஆவதல்ல, இயேசுவைப் போல ஆவதே நமது இலட்சியமாக இருக்க வேண்டும். நன்றி. 

Posted in Articles, Bible Animals

விவிலியமும் நானும் – குதிரை

உயர்திணையான அஃறிணைகள்

குதிரை

*

குதிரைகள்
வலிமையின் வசீகரங்கள்
கம்பீரத்தின்
முகவரிகள் !.

வீரத்தின் விலாசங்களை
வரலாறுகள்
குதிரைகளின்
குளம்படிகளைக் கொண்டே
குறித்து வைத்திருக்கிறது !

போர்க்களத்தின்
நீள அகலங்களை
குதிரைகளின்
ஆவேசப் பாய்ச்சல்களே
அளவெடுத்து வைத்திருக்கின்றன !

எங்கள்
எண்ணிக்கையைக் கொண்டே
போர்களின்
அடர்த்தி அறியப்பட்டது !

சேணம் பூட்டப்பட்ட
எங்கள்
ஆண்மையின் அணிவகுப்பே
எதிரிப் பாசறையில்
நில நடுக்கத்தையும்
குலை நடுக்கத்தையும்
கொண்டு வருகிறது .

விவிலியத்திலும்
நாங்கள்
திரையிட முடியாத
திண்மையின் அடையாளமே.

தொடக்கநூல் முதல்
திருவெளிப்பாடு வரை
நாங்கள்
அகலாமல்
ஆக்கிரமித்திருக்கிறோம் !

எங்கள் இருப்பிடத்தை
நாங்கள் தேர்வு செய்வதில்லை
எனினும்
இருப்பிடமே எங்கள்
வாழ்வினை முடிவு செய்கிறது !

தாவீதோடு இருக்கையில்
மேன்மையில்
திளைக்கிறோம்,
பார்வோனோடு இருக்கையில்
செங்கடலில் அழிகிறோம்.

சாலமோனோ
உலகின் திசைகளெங்கிலும்
இருந்து
தரத்தில் மிளிர்ந்த
குதிரைகளைச் சேகரித்தார் !

நாங்கள்
அடிமைகளின் அடையாளமல்ல
அடிமைகள்
எங்கள் முதுகில் ஏறும்
மகத்துவம் காண்பதில்லை !

எருசலேமின்
ஒரு வாயில் தன் பெயரை
“குதிரை வாயில்”
என்றழைத்து
எங்களைக் குதூகலப்படுத்துகிறது.

நிலத்தையே அசைக்கும்
எங்கள்
குளம்படியின் ஆவேசம்
அடக்கிவிட முடியாத
காட்டாறாய் சீறிப் பாயும்.

குதிக்கும் எங்களின்
குதிகால்
நரம்பு நறுக்கி
முடமாக்கும் சூட்சுமத்தை
விவிலியம் பேசுகிறது !

கடவுளின்
கடிந்துரையினால்
மடிந்து வீழ்ந்த எங்கள் கதையை
சங்கீதம் பேசுகிறது.

பாறைமேல்
ஓடமுடியாத எங்கள்
ரகசியப் பலவீனத்தைக
அது
பகிரங்கமாய்ப்
பதிவு செய்து வைத்திருக்கிறது.

பயிற்றுவிக்கப்படாத குதிரையும்
கட்டுப்பாடற்ற மகனும்
அடக்கமற்ற
முரட்டுத்தனத்தின்
அடையாளங்களென்கிறது
சீராக் நூல் !

குதிரை என்றதும்
ஒரு வசனம் நிச்சயம்
கடிவாளமின்றி
உங்கள்
இதயத்தில் கடந்து வரும்.

குதிரை
யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்
ஜெயமோ
கர்த்தரால் வரும் !

சில சோம்பேறிகள்
என்னை ஆயத்தமாக்குவதை
மறந்து விட்டு
ஜெயத்தைக் கர்த்தர் தருவாரென
கனவு காண்கின்றனர்.

வெற்றுப் பாத்திரத்தால்
பசியாற்ற நினைக்கும்
அறிவிலிகள் அவர்கள்.

நாங்கள்
பல அவதாரங்கள் எடுத்ததுண்டு.
ஒரு முறை
எலிசாவைக் காக்க
நெருப்புக் குதிரைகளாய்
நெருங்கி வந்தோம்.

ஈசபேலை
எங்கள்
கால்களால் மிதித்து
கொன்றோம்.

திருவெளிப்பாட்டில்
வெள்ளை, சிவப்பு, கறுப்பு, பச்சை
என
பல வண்ணத் தேகத்துடன்
மேகங்களிலும்
வேகம் கொள்கிறோம்.

அழிவுக்காய் அழைக்கப்பட்ட
குதிரைப்படையின் எண்ணிக்கை
இருபது கோடி
என
பிரமிக்க வைக்கிறோம்.

கடைசியாய்
எங்கள்
லாடங்களில் இருக்கும்
உங்களுக்கான ஒரு செய்தி
இது தான்.

குதிரைகளிலும்
ரதங்களிலும்
அல்ல,
ஆண்டவரின் பெயரில்
பெருமை கொள்க !

*

சேவியர்

Posted in Articles, Vettimani

நன்றியுணர்வு நலிந்து போகிறதா ?

நன்றியுணர்வு நலிந்து போகிறதா ?

*

அந்த நிறுவனத்தின் ஹைச்.ஆர் அலுவலகத்தில் அமைதியாய் உட்கார்ந்திருந்தார் குருமூர்த்தி. அவரது கண்களில் திட்டுத் திட்டாய்த் துயரம் அமர்ந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் அணைஉடைக்கக் காத்திருந்தது கண்ணீர்.  அலுவலகத்தில் அரசல் புரசலாய்க் கேட்ட ஒரு செய்தி நிஜமென்றாகிவிட்டது. வாழ்வின் விளிம்பில், கைப்பிடியற்ற மலை முகட்டில் உட்கார்ந்திருக்கும் அவஸ்தை அவருக்கு. சலனமேயில்லாத விழிகளுடன் ஹைச்.ஆர் தலைவர் பேசினார். 

“வெரி சாரி…. ஆபீஸ்ல 50 வயசுக்கு மேல இருக்கிறவங்களை ரிலீஸ் பண்ண சொல்லிட்டாங்க… நீங்களும் அந்த லிஸ்ட்ல வரீங்க… நீங்க உடனே ரிசைன் பண்ணிடுங்க, சாயங்காலமே உங்களை ரிலீஸ் பண்ணிடறோம்”

“என்ன சார்… இருபது வருஷமா இந்த ஆபீஸ்ல வேலை செய்யறேன். இந்த அலுவலகத்தோட ஒவ்வொரு வளர்ச்சியை நீங்க தொட்டுப் பாத்தாலும் என்னோட உழைப்போட இரத்தத் துளிகள் இருக்கும். இந்த அலுவலகத்தின் முன்னேற்றத்தோட எல்லா பாதைகளிலும் என்னோட வியர்வைத் துளிகள் ஈரம் காயாம இருக்கும். இப்படி சட்டுன்னு கிளம்புன்னு சொல்றீங்களே.. நியாயமா இருக்கா ?”

“உங்க கஷ்டம் புரியுது… பட். எங்களால ஒண்ணும் பண்ண முடியல. இது எம்.டியோட டிசிஷன். நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. வி ஆர் ஹெல்ப்லெஸ்”

“ உங்க கஷ்டம் புரியுதுன்னு – சொல்ற யாருக்குமே எங்க கஷ்டம் புரியாது சார்…. உங்களால ஏதும் பண்ண முடியாதுன்னா ஏன் சார் ஹைச்.ஆர் ந்னு இருக்கீங்க ? மக்களோட குறைகளைத் தீர்க்கிறது தானே உங்க வேலை… மக்களுக்காக பேச மாட்டீங்களா “

“சீ… நிறுவனம் மோசமான நிலையில போயிட்டிருக்கிறது உங்களுக்கே தெரியும்…” ஹைச் ஆர் சொல்லி முடிக்கும் முன் குருமூர்த்தி இடைமறித்தார். 

“லாபம் குறைஞ்சிருக்குன்னு சொல்லுங்க. லாபம் டபுள் ஆனப்போ எங்க சம்பளம் டபுள் ஆகல. லாபம் பாதியானப்போ மட்டும் ஊழியர்கள் பாதியாகணுமா.. எங்க சார் போச்சு உங்க நன்றியுணர்வு ? “

“உங்க லெக்சரைக் கேக்க நேரமில்லை. இன்னிக்கு நீங்க ரிசைன் பண்ணினா உங்களுக்குக் கிடைக்க வேண்டிய செட்டில்மெண்ட் பணம் கிடைக்கும். இல்லேன்னா, டெர்மினேட் பண்ணிடுவோம். எதுவும் கிடைக்காது. . முடிவெடுக்க வேண்டியது நீங்க தான்” 

“நன்றியுணர்வு மட்டுமில்ல, மனிதாபிமானமும் கூட காணாம போயிடுச்சுன்னு தெரியுது. “

“ஐம் சாரி… என்னோட வேலையை நான் பண்ணிட்டிருக்கேன். இவ்ளோ வருஷம் கம்பெனி உங்களுக்கு சம்பளம் தந்து பாதுகாத்ததுக்கு நன்றி சொல்லிட்டு கிளம்புங்க” ஹைச் ஆர் சற்றும் உணர்ச்சியற்ற வெறுப்பின் தொனியில் சொல்ல குருமூர்த்தி எழுந்தார். தனது அறைக்குச் சென்று ராஜினமா ஃபார்மை நிரப்பத் துவங்கினார். கலங்கிய அவரது விழிநீரில் இரண்டு பிள்ளைகளின் படிப்பும் எதிர்காலமும் ஈரமாகிக் கொண்டிருந்தது. 

நன்றியுணர்வு என்பது இலாபம் கொடுக்கும் வரை பிந்தொடரும் நாயாக மாறிவிட்டது. அதன் முகங்களில் போலித்தனத்தின் எச்சில் வடிந்து கொண்டிருக்கிறது. நன்றியுணர்வு கெட்ட முதலாளித்துவ சமூகம், நன்றியுணர்வற்ற சமூகத்தையே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. 

கடந்த தலைமுறையின் வீதிகளில் நடந்து, இந்தத் தலைமுறையின் செயல்பாடுகளைக் கவனிப்பவர்களுக்கு இந்த நன்றியுணர்வின் வீழ்ச்சி மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும். காரணம், நன்றியுணர்வு பழைய காலத்தில் அத்தனை வலுவாக இருந்தது. இன்றைக்கு கை தவறி விழுந்த மண்பானையாய் உடைந்து கிடக்கிறது. 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு – என்பதே பழைய கால விதியாக இருந்தது. அது ஒவ்வொரு சின்னச் சின்ன செயல்பாடுகளிலும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இருந்தது. உதாரணமாக, இயலாமையில் கை கொடுத்தவர்களை பயன் பெற்றவர்கள் கடைசி மூச்சு உள்ளவரை மறக்காமல் இருந்தார்கள்.

“அவன் ஒருகாலத்துல கைதூக்கி விடாம இருந்திருந்தா….” என மிகப் பெரிய உயரத்துக்குச் சென்றபின்பும் மக்கள் நன்றி பாராட்டினார்கள். இன்றைக்கு அது நீர்த்துப் போய்விட்டது என்பதில் சந்தேகமேயில்லை. 

இப்போதெல்லாம் ஒரு செயலுக்கான நன்றியுணர்வு என்பது பூவில் விழுந்த பனித்துளியைப் போல சிறிது காலமே தங்கி நிற்கிறது. நாட்களில் வெயிலில் அது ஆவியாகிவிடுகிறது. 

அப்பாவின் முன்னால் கைகட்டி நின்று, “ஐயா.. என்றழைத்த காலங்கள் உண்டு” அதெல்லாம் பழைய கதை. “அப்படி… என்னத்த பெருசா செஞ்சுட்டீங்க…” என பெற்றோரைப் பார்த்தே எதிர்த்துக் கேள்வி கேட்கும் தலைமுறை சகஜமாகிவிட்டது. நன்றியுணர்வு குடும்பங்களிலேயே ஆவியாகிக் கொண்டிருக்கிறது.

நன்றியுணர்வுக்கு அடிப்படையான தேவை, நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் எனும் உணர்வு தான். இந்த இயற்கையினால், இந்த பிரபஞ்சத்தினால், இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளியால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் எனும் உணர்வு இருந்தால் நமக்கு நன்றியுணர்வு ஆழியாய் பெருகும் என்பதில் சந்தேகமில்லை. 

இயேசுவின் வாழ்க்கையில் ஒரு கதை உண்டு. ஒரு முறை பத்து தொழுநோயாளிகளுக்கு அவர் நலமளித்தார். தொழுநோயாளிகள் சமூகத்தில் விலக்கி வைக்கப்பட்ட காலகட்டம் அது. அவர்கள் ஊருக்குள் நுழைய முடியாது. எந்த நிகழ்விலும் கலந்து கொள்ள முடியாது. ஊர்ப்பக்கம் வரவேண்டுமெனில் “தீட்டு தீட்டு “ என கத்திக் கொண்டே வரவேண்டும். ஒரு நீண்ட குச்சியின் நுனியில் ஒரு குடுவையைக் கட்டி சுமந்து வருவார்கள். தண்ணீர் வேண்டுமெனில் ஏதேனும் வீட்டில் அருகே தொலைவில் நின்று கொண்டே அந்தக் குச்சியை நீட்டுவார்கள். வீட்டிலுள்ளவர்கள் அதை தப்பித் தவறியும் தொட்டு விடாத அதீத கவனத்துடன், அதற்கான பழைய பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு அதில் ஊற்றுவார்கள். 

அத்தகைய சமூக இடைவெளி அன்று நிலவியது. இயேசு அந்த சூழலில் தொலைவிலிருந்து கதறிய பத்து தொழுநோயாளிகளுக்கு நலமளித்தார். நலமடைந்ததை அறிந்த அந்தப் பத்து பேரில் ஒரே ஒருவர் மட்டும் இயேசுவைத் தேடி வந்து நன்றி சொல்லி தாழ்பணிந்தார். இயேசு கேட்டார், “என்னாச்சு பத்து பேருக்கும் சுகம் கிடைக்கலையா ? மற்ற ஒன்பது பேர் எங்கே ?”. பெற்றதற்கு நன்றி சொல்பவர்கள் இறைவனின் பிரியத்துக்குரியவர்களாகிறார்கள். காரணம், நன்றியுடையவர்களாய் இருப்பவர்கள், தாங்கள் கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறோம் எனும் உணர்வைக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தான் உண்மையான ஆன்மீகவாதிகள், தங்களுடைய ஒவ்வொரு நாளுக்காகவும், ஒவ்வொரு நிமிடத்திற்காகவும், ஒவ்வொரு செயலுக்காகவும், ஒவ்வொரு உணவுக்காகவும், ஒவ்வொரு சின்னச் சின்ன நிகழ்வுக்காகவும் கூட கடவுளுக்கு நன்றி செலுத்துவார்கள். காரணம் எல்லாமே கடவுளின் அருள் எனும் புரிதல் தான். 

எல்லாம் தன்னால் நிகழ்கின்றன எனும் மனநிலையும். எல்லாம் தனக்கே கிடைக்கவேண்டும் எனும் சுயநலமும் உள்ளவர்கள் எக்காலத்திலும் நன்றி உணர்வு உடையவர்களாய் வாழவே முடியாது. 

மகிழ்ச்சியாய் இருக்கும் போது நன்றி சொல்வது சாதாரண விஷயம். நன்றி சொல்வதால் மகிழ்ச்சியாய் இருப்பதே உயர்ந்த நிலை. உண்மையில் நமக்கு கிடைக்கின்ற பொருட்களை விட அதிகமாய் கிடைக்காத பொருளுக்கு நன்றி சொல்பவர்களாக இருக்க வேண்டும். அதனால் தான் நண்பனுக்கு மட்டுமல்ல, எதிரிக்கும் நன்றி சொல் என்பார்கள். நமது வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

நன்றியுணர்வை வெளிப்படுத்தும் போது நமது மனம் இலேசாகிறது. ஒரு மரம் தனது கனிகளை வேர்களுக்குள்ளே ஒளித்து வைத்திருந்தால் என்ன பயன். அதை பிறருக்குத் தெரியும்படி கிளைகளில் பதித்து வைக்கும்போது தானே பயனுடையதாகிறது. அப்படித் தான் நன்றியுணர்வும், வார்த்தைகளாலும் செயல்களாலும் வெளிப்படுத்தப்பட வேண்டும். வெளிப்படாத நீரூற்றும், வெளிப்படுத்தப்படாத நன்றியுணர்வும் பிறருக்குப் பயனற்றுப் போகும். 

நம்மைச் சுற்றிப் பார்ப்போம். நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எத்தனையோ பேர் நமக்கு உதவி செய்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்கிறோமா ? நமக்கு ஒரு காபி போட்டுத் தரும் வேலைக்கார அம்மா. நம்மை ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்லும் டிரைவர் அண்ணா, நமக்கு பொருட்களை எடுத்துத் தரும் ஒரு விற்பனைப் பிரதிநிதி, நம்ம தெருவில் குப்பையை அள்ளும் ஒரு கார்ப்பரேஷன் பணியாளர். இப்படி நாம் நன்றி சொல்ல வேண்டிய நபர்கள் எத்தனை எத்தனையோ.

புன்னைகை ஒரு தொற்று வியாதி என்பார்கள். ஒருவருக்குக் கொடுக்க, அதை அவர் பெற்றுக் கொண்டு அடுத்தவருக்குக் கொடுக்க, இப்படி கொரோனா போல பற்றிப் படரும் ஒரு விஷயம் தான் புன்னகை. நன்றியும் அது போல தான். நாம் நன்றியைச் சொல்லச் சொல்ல அது அடுத்தடுத்த நபர்களுக்கு சென்று கொண்டே இருக்கும். நன்றி சொல்தல் ஒருவித நேர் சிந்தனையை நமக்குள் ஊட்டும். வாழ்க்கையில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறது என நமக்கே ஒரு புத்துணர்ச்சியை அது தரும். 

நன்றியுணர்வோடு இருப்பவர்களுக்கு நோய் குறைவாக இருக்கும், ஆரோக்கியம் வலிமையாக இருக்கும் என்பது மருத்துவக் கணக்கு. நன்றியுணர்வு உடையவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பார்கள் என்பது உளவியல் கணக்கு. நன்றியுணர்வு வெறும் உணர்வல்ல, நம் உடலோடும் மனதோடும் பின்னிப் பிணைந்தது என்பதை இதன் மூலம் புரிது கொள்ளலாம். நம்முடைய ஆனந்தத்திற்கு இது அடிப்படையாய் மாறிவிடுகிறது.

நன்றியுணர்வு நட்பைச் சம்பாதித்துத் தரும். இருக்கின்ற உறவுகளை வலுவாகும். வாழ்க்கை என்பது எதையெல்லாம் சேர்க்கிறோம் என்பதல்ல, உறவுகளோடு சேர்கிறோம் என்பதில் தான் அமைகிறது. மக்களோடு இணைந்து வாழ்கின்ற மிகப்பெரிய வலிமையை நன்றியுணர்வு தருகிறது. 

செஞ்சோற்றுக் கடனுக்காக வாழ்ந்த கர்ணனின் கதை முதல், நமது சமூக வீதிகளில் உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கின்ற கதைகள் வரை நமக்குச் சொல்வதெல்லாம் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டும் என்பதே. நன்றியுணர்வு நலிந்து போகிறதே என அழுவதல்ல, அதை வலுப்படுத்த எழுவதே இன்றைய தேவை. அதை நம்மிடமிருந்து, நம்முடைய குடும்பத்திலிருந்து துவங்குவோம். 

இந்தக் கட்டுரையைப் பிரசுரித்த பேரன்புக்குரிய என்னுயிர்த் தந்தைக்கும், பொறுமையுடன் வாசித்த உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கூறி நன்றிப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன். தொடர்வோம்.

*

சேவியர். 

Posted in Articles, Sunday School

SKIT-தாமதம் நல்லது

தாமதம் நல்லது

காட்சி 1

( இரயில்வே நிலையம் ஒன்றில் ரயன் காத்திருக்கிறான் )

ரயன் : அப்பா… மணி அஞ்சு ஆச்சு, இன்னும் கொஞ்ச நேரத்துல டிரெயின் வரும். சீக்கிரம் வீட்டுக்கு போனா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். 

( அங்கும் இங்கும் நடக்கிறான் )

ரயன் : டிரெயினைக் காணோமே …

( அறிவிப்பு : பயணிகளின் கனிவான கவனத்துக்கு. சென்னை செல்லும் இரயில் வண்டியானது ஒரு மணி நேரம் தாமதமாக வரும். தடங்கலுக்கு வருந்துகிறோம் )

ரயன் : வாட்… ஒன் அவர் லேட்டா ! ஓ.. மை.. காட்…

ரயன் : (கோபத்தில் அங்கும் இங்கும் பார்க்கிறான்.. தரையை உதைக்கிறான் ) ! சே… இந்த நம்ம கெட்ட நேரம் இன்னிக்கு பாத்தா இப்டி லேட்டா வரணும். ஏற்கனவே டயர்டா வேற இருக்கு.. இதுல இங்க காக்க வெச்சுட்டாங்க. 

( அங்கும் இங்கும் நடக்கிறான், புலம்புகிறான் , போன் எடுத்து பேசுகிறான் )

ரயன் : ஆமாம்மா… சே… கடுப்பா இருக்கு..ஒன் அவர் லேட்டாம். …. ஆமா என்ன பண்றது ! சரி… ஒன் அவர் ந்னு சொல்லிட்டு மறுபடியும் லேட் பண்ணினாலும் பண்ணுவாங்க. 

( …. ) 

ரயன் : சரிம்மா… ம்ம்ம் ஒரு டீ குடிச்சிட்டு… ஏதாச்சும் பண்ணி டைமை விரட்டறேன். 

( வாட்சைப் பார்க்கிறான் )

ரயன் : ( மனசுக்குள் ) டைமே போக மாட்டேங்குது… கொஞ்ச நேரம் விளையாடலாம்.. ( வீடியோ கேம் விளையாடுகிறான் )… சே.. பேட்டரி வேற கம்மியா இருக்கு.. வீடு போய் சேர்ர வரைக்கும் பேட்டரி இருக்குமா தெரியல. அங்கே ஒரு சார்ஜிங் செண்டர் உண்டு அங்கே போய் போடலாம். 

( போகும் போது வழியில் ஒரு முதியவர் உட்கார்ந்திருக்கிறார். அவரை தெரியாமல் மிதிக்கிறான் )

ரயன் : யோவ்.. பெரியவரே.. கொஞ்சம் தள்ளி உக்காந்திருக்கக் கூடாது ? நடக்கவும் உடமாட்டாரு.. கடுப்பா இருக்கிற நேரத்துல வந்து காலை நீட்டிகிட்டு… ச்ச்ச்சை….

( அப்போது ஒரு அம்மா.. மூச்சு முட்ட இரண்டு பைகளை தூக்கிக் கொண்டு வருகிறார். ) 

ரயன் : ( மனசுக்குள் ) வயசான காலத்துல விட்ல கிடக்க தெரியாது.. பொட்டியைத் தூக்கிட்டு ஏதோ பாரின் போற மாதிரி.. பாத்தா உள்ளே ரேஷன் அரிசி தான் இருக்கும்…. ம்ம்

( அறிவிப்பு : பயணிகளின் கனிவான கவனத்துக்கு. சென்னை செல்லும் இரயில் வண்டியானது மேலும் அரை மணி நேரம் தாமதமாக வரும். தடங்கலுக்கு வருந்துகிறோம் ) 

ரயன் : ( கோபத்தில் கையை குத்துகிறான் )

காட்சி 2

( அதே ரயில்வே நிலையத்தில் இன்னொரு இடத்தில் ரெய்னா நிற்கிறார் )

( அறிவிப்பு : பயணிகளின் கனிவான கவனத்துக்கு. சென்னை செல்லும் இரயில் வண்டியானது ஒரு மணி நேரம் தாமதமாக வரும். தடங்கலுக்கு வருந்துகிறோம் )

ரெய்னா : ஓ.. இன்னிக்கு ஒன் அவர் டிலேவா… ம்ம்.. சரி, என்ன பண்ண.. நாம பைபிள் படிப்போம். கைல சின்னதா ஒரு பைபிள் இருக்கிறது எவ்ளோ நல்ல விஷயமா இருக்கு )

( ரெய்னா பைபிள் படித்துக் கொண்டிருக்கிறார்.. சுவாரஸ்யமாக… ) 

( அப்போது ஒரு அம்மா … பையைத் தூக்கியபடி கஷ்டப்பட்டு நடந்து வந்து கொண்டிருக்கிறார் )

(ரெய்னா.. ஓடிப் போகிறாள். )

ரெய்னா : அம்மா.. இங்க குடுங்கம்மா.. எங்க போறீங்க.. ஆட்டோ புடிக்கவா..

அம்மா : வெளியே போணும்.. அங்க போனா பஸ்ஸைப் புடிச்சு போயிடுவேன்.. இந்த ஸ்டெப்ஸ் ஏற தான் கஷ்டமா இருக்கு

ரெய்னா : நோ.. பிராப்ளம்ம்மா.. எனக்கு ஒரு மணி நேரம் லேட் தான் ட் ரெயின். ஜீசஸ் தான் எனக்கு இந்த டைம் குடுத்திருக்காரு, உங்களுக்கு ஹெல்ப் பண்ண..

அம்மா : ஜீசஸா.. அது யாரும்மா.. 

ரெய்னா : வாங்கம்மா.. நான் நடந்துட்டே சொல்றேன்.. அது ஒரு அற்புதமான கதை..

அம்மா : ம்ம்.. நீ ரொம்ப நல்ல புள்ளையா இருக்கேம்ம்மா

ரெய்னா : இயேசப்பா அப்படி இருக்கச் சொல்லியிருக்காரும்மா.. அதான்

அம்மா : அதாரும்மா இயேசப்பா… 

ரெய்னா : ஓ.. ஜீசஸ் தான் இயேசப்பா.. நான் உங்களுக்கு அவரைப் பற்றி எல்லாம் சொல்றேன்.. வாங்க… 

அம்மா : ம்ம்.. சொல்லும்மா.. கேட்டுட்டே நடக்கறேன்… 

ரெய்னா : நம்மளோட பாவத்தையெல்லாம் நீக்கி சொர்க்கத்துல சேக்கிறதுக்காக வந்தவர் தான் இயேசு. அவர் கடவுளோட மகன். இந்த உலகத்தையே படைச்சது அவர் தான். ( அப்படியே இசை )

( அந்த அம்மாவைக் கொண்டு விட்டு விட்டு திரும்ப வருகிறார். அப்போது அந்த முதியவர் வழியில் அமர்ந்திருக்கிறார். )

ரெய்னா : தாத்தா.. என்ன இங்கே உக்காந்திருக்கீங்க.. இப்படி ஓரமா உக்காருங்க. ( பையைத் திறந்து சாப்பிட எதையோ கொடுக்கிறாள் ) இதா.. சாப்பிடுங்க. எங்க போணும் ?

தாத்தா : ம்ம்.. தெரியலம்மா… எங்க போணும்ன்னு தெரியல… 

ரெய்னா : ஓ.. உங்க வீட்ல யாரும் இல்லையா ? 

தாத்தா : வீடு.. வீடு.. பசங்க இருக்காங்க.. அவங்க தான் இங்கே கொண்டு போட்டாங்க.. அவங்க இப்போ எங்கே இருக்காங்கன்னு தெரியல… ம்ம்..

ரெய்னா : கவலைப்படாதீங்கய்யா.. தண்ணி வேணுமா ? வேற யாராச்சும் இருக்காங்களா உங்களுக்கு ?

தாத்தா : எனக்கு .. எனக்கு யாருமே இல்லை… இல்லை

ரெய்னா : ஏன் யாருமே இல்லேன்னு நினைக்கிறீங்க. உங்களை தன்னோட உயிரா நேசிக்கிற ஒருத்தரு இருக்காரு தெரியுமா ?

தாத்தா : ஹி..ஹி.. என்னையா.. நேசிக்கவா…

ரெய்னா : உண்மை தான் தாத்தா.. அவரு பேரு இயேசு..

தாத்தா : அவரு ஏன் என்னை நேசிக்கணும் ? அவருக்கு என்னை தெரியுமா ? 

ரெய்னா : அவருக்கு எல்லாரையும் தெரியும். நீங்க பிறக்கிறதுக்கு முன்னாடியே உங்க பெயரை தெரிஞ்சு வெச்சிருக்கிறவரு அவரு.. .உங்களை தன்னோட கண்ணின் மணியா பாத்துக்கிறவரு…

தாத்தா : ம்ம்ம்.. சொல்லு சொல்லு.. இப்படி யாரும் சொன்னதே இல்லையே.. நீ என் பொண்ணு மாதிரிம்மா.. சொல்லு சொல்லு..

ரெய்னா :  சொல்றேன் தாத்தா அது ஒரு அற்புதமான கதை. நம்ம தலைமுடியை எல்லாம் எண்ணி வெச்சிருக்கிற கடவுள் அவரு. நம்மளை ரொம்ப ரொம்ப நேசிக்கிற கடவுள் அவரு. நாம எல்லாம் பாவத்துல அழிஞ்சிடக் கூடாதுன்னு தன்னோட ஒரே மகனை அவரு இந்த பூமிக்கு அனுப்பினாரு.. அவரு நமக்காக இங்கே வந்து.. சிலுவையில உயிர் விட்டாரு. அவரை யாரெல்லாம் நம்பறாங்களோ அவங்களையெல்லாம் அவரு சுவர்க்கத்துல கூட்டிட்டு போவாரு. ஏன்னா, அவரு எல்லாரையும் நேசிக்கிறாரு.. அவரை நம்புங்க சரியா… எனக்கு டிரெயினுக்கு டைம் ஆச்சு…..… 

( அறிவிப்பு : பயணிகளின் கனிவான கவனத்துக்கு. சென்னை செல்லும் இரயில் வண்டியானது மேலும் அரை மணி நேரம் தாமதமாக வரும். தடங்கலுக்கு வருந்துகிறோம் ) 

ரெய்னா : இன்னும் அரைமணி நேரம் லேட்டாம்.. ரொம்ப நல்லது.. அப்போ எல்லா கதையும் சொல்றேன்ன்…. முதல்ல நான் உங்களுக்கு டீ வாங்கிட்டு வரேன்.. குடிச்சிட்டே பேசலாம்.. சரியா… 

காட்சி  3

( ரெய்னாவும், ரயனும் வீட்டில் வருகின்றனர் )

அம்மா : வாங்கப்பா.. ஏன் இன்னிக்கு ரொம்ப லேட்டா 

ரயன் : சே..சே..சே.. செம கடுப்பாயிடுச்சு.. ரெஸ்ட் எடுக்க வேண்டிய டைம் எல்லாம் ஸ்றெஸ் ஆ போச்சு… என்ன பண்ண.. இந்த ரயில்வேயும்… ம்ம்ம்ம்.. வாயில பேட் வேர்ட்ஸ் வருது.

அம்மா : ஏண்டா… கொஞ்ச நேரம் லேட்டானதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷனாகிறே… ரெய்னா.. நீ எந்த டிரெயின்ல வந்தே.. கூலா இருக்கே

ரெய்னா : அதே டிரெயின் தாம்மா.. எனக்கு டைம் போனதே தெரியல.. 

ரயன் : ஆமா.. இவ வழக்கம் போல யாருக்காவது ஹெல்ப் பண்றேன்னு சுத்திட்டு திரிஞ்சிருப்பா… அவளுக்கென்ன ..

ரெய்னா : உண்மை தான்.. ரெண்டு பேருக்கு நற்செய்தியை அறிவிக்க கடவுள் எனக்கு ஹெல்ப் பண்ணினாரு. அதுக்காகத் தான் ஒன்னரை மணி நேரம் டிரெயினை லேட்டாக்கினாரு.

ரயன் : நீ ..சுவிசேஷம் சொல்ல என்னை வெயிட் பண்ண வெச்சாராக்கும்

ரெய்னா : அப்படியில்லை.. நற்செய்தி அறிவிக்க முடியலேன்னா. பைபிள் படிச்சிட்டிருப்பேன். நற்செய்தியை அறி.. நற்செய்தியை அறிவி.. அதான் என்னோட காத்திருத்தல் நேரத்தோட மோட்டோ..

ரயன் : ஆமா. பெரிய மோட்டோ… சோட்டோ

அம்மா : அவ சொன்னதுல என்னப்பா தப்பு.. கரெக்டா சொல்லியிருக்கா…

ரயன் : அம்மா இவளை மாதிரி யாராச்சும் இருப்பாங்களா ?

அம்மா : அக்கா மாதிரி நிறைய பேரு இருக்காங்க. உண்மையிலேயே கடவுளைப் பற்றி பிறருக்கு அறிவிக்கணும்ன்னு ஆசை இருக்கிறவங்க எல்லாம் அதைத் தான் பண்ணுவாங்க. 

ரயன் : ஒரு ஆளை சொல்லுங்க பாப்போம்..

அம்மா : உதாரணமா பவுலை எடுத்துக்கோ. ஒரு கடற் பயணம் போறாரு. போற வழியிலயும் நற்செய்தி அறிவிக்கிறாரு. ஒரு தீவுல கொஞ்ச நாள் தங்க வேண்டி வருது. அங்கயும் நற்செய்தி அறிவிக்கிறாரு. ரோம்ல போய் வீட்டுச் சிறையில அடைக்கப்படறாரு. அங்கயும் நற்செய்தி அறிவிக்கிறாரு. ஒரு தடவை ஜெயிலுக்குள்ள வேற யாரும் இல்லாதப்போ ஜெயிலருக்கே நற்செய்தி அறிவிக்கிறாரு.

ரயன் : ஓ..  பவுல் வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும்மா

அம்மா : நற்செய்தி அறிவித்தல் நம்மேல் விழுந்த கடமை. அதை செய்யலேன்னா பாவம். அதை எப்பல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ அப்பல்லாம் செய்யணும்பா.. ஓய்வு நேரம், காத்திருத்தல் நேரமெல்லாம் டென்ஷனாகி உடம்பைக் கெடுத்துக்கிறதுக்கு பதிலா, கடவுளை பிறருக்கு கொடுத்துட்டு வரலாமே…

ரயன் : ம்ம்…. சரிம்மா..

அம்மா : கையில எப்பவும் ஒரு சின்ன பைபிளை வெச்சுக்கோ.. அப்போ உனக்கு எப்பல்லாம் டைம் கிடைக்குதோ அப்பல்லாம் படிக்கலாம். அப்படி தொடர்ந்து படிச்சுட்டே இருந்தேன்னா, உனக்கும் கடவுளைப் பற்றி பேசணும்ன்னு ஆர்வம் வரும்.

ரயன் : சரிம்மா.. இனி நான் அப்படியே பண்றேம்மா… 

அம்மா : சரி, சரி.. டயர்டா இருப்பீங்க.. கை கால் கழுவிட்டு வாங்க காபி போட்டு தரேன்.

*

Posted in Articles, Bible Animals

விவிலியமும் – நானும் கரடி

உயர்திணையான அஃறிணைகள்

கரடி

கரடியாக் கத்தினாலும்
கேட்பதில்லை
என
புறப்படுகின்
புரியா பழமொழிகள்
என் பெயருக்கு
இழுக்கு விளைவிக்கின்றன !

எடையிலும் நடையிலும்
நான்
வலிமைச் சுவடுகளை
பதித்து நடப்பவன்.

என்னைக்கண்டு
மனிதர்கள்
மிரண்டு ஓடுவதுண்டு !
தாவீது விதிவிலக்கு

மந்தையிலிருந்து
ஆடுகளைக் கவ்வினால்
விரட்டி வந்து
என்
வாயிலிருந்தே அதை
வெடுக்கெனப் பிடுங்குவான்.

கோரப் பற்களைக் காட்டி
கோபத்தில் சீறினால்
என்
தாடையைப் பிடித்தே
உயிரினை உடைப்பான்.

என்னைக் கொன்றதால்
பெற்ற
தன்னம்பிக்கை தான்
கோலியாத்தின் கோட்டையில்
அவனை
கொலைசெய்ய முடிந்தது.

நான்
பாசமானவன்
என் குட்டிகளிடம்.

தனியே வாழும் பருவம் வரை
அவைகளை
என்
பாதுகாப்பு அரணுக்குள்
பதுக்கியே வைப்பேன்.

குட்டிகளை இழப்பது
எனக்கு
சினத்தின் உச்சத்தில்
சீறித் திரியும் அவஸ்தை !

தாவீதும் அவரது
வீரர்களும்
குட்டிகளை இழந்த கரடியாய்
சினத்துடன் சிவந்திருப்பதாய்
ஊசாய் சொன்னது
பைபிளில் இருக்கிறதே !

சினமெடுத்த கரடியைவிட
சிக்கலானவன்
மடமையின் அடியில்
மூழ்கிக் கிடக்கும்
மதிகேடன் என்கிறது விவிலியம்.

நடத்தை கெட்ட
நங்கை முகம்
கரடியின் முகம் போலாகும்
என என்னைச்
சீண்டிச் சிரிக்கிறார்
சீராக் !

தானியேலும்
திருவெளிப்பாடும்
கரடியின் உருவங்களை
காட்சியில் காட்டி
எனது
இருப்பை இறுக்கிக் கட்டுகிறது.

எனினும்
என்னை துயரத்தின் பள்ளத்திலும்
மகிழ்வின்
உச்சியிலும் எறியும்
இரண்டு நிகழ்வுகள் உண்டு.

துயரம் !
எலிசாவைக் கிண்டலடித்த
நாற்பத்து இரண்டு சிறுவர்களை
குதறிப்போட்ட
கோப நிமிடங்கள்.

மகிழ்வு
நீதியுள்ள அரசரின்
வருகை !
ஏனெனில், அப்போது தான்
பகைமை மறையும்
பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும் !

*

சேவியர்