Posted in Desopakari

புதுப்பிக்கும் தூய ஆவியானவர்

புதுப்பிக்கும் தூய ஆவியானவர்

*

கிறிஸ்தவத்தில் அதிகம் முரண்பட்ட சிந்தனைகளில் ஒன்று தூய ஆவியானவரைக் குறித்தது . ஏராளமான சித்தாந்தங்களும், இறையியல் கோட்பாடுகளும், வாழ்வியல் பாடங்களும் இதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. தூய ஆவியானவர் ஒரு ஆள் அல்ல என்பதில் தொடங்கி, அவருக்கும் மனசாட்சிக்கும் இடையேயான தொடர்பு வரை ஏராளமான இறையியல் சிந்தனைகள் தோன்றியிருக்கின்றன.

கிறிஸ்தவம் இன்று வெகுஜன மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பது போன்ற ஒரு தோற்றம் உண்டு. அதற்கு ஒருவகையில் தூய ஆவியானவர் குறித்த சிந்தனைகளும், புரிதல்களும், வெளிப்பாடுகளும் காரணம் எனலாம். 

இயேசு சாதாரண மக்களோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்தவர். எப்போதும் மக்களை விட்டு அன்னியப்பட்டு நிற்க வேண்டும் எனும் சிந்தனையை இயேசு முன்னெடுத்ததில்லை. அதனால் தான் துறவறங்களை மேற்கொள்வதை விட, வாழ்வியல் அறங்களை கைக்கொள்வதையே இயேசு ஊக்கப்படுத்தினார். 

மலைகளின் தலைகளில் கூடாரமடித்து வாழ்வதை இயேசு ஊக்குவிக்கவில்லை. ஆடையற்ற ஏழை ஒருவருக்கு ஆடை வழங்குவதையே ஊக்கப்படுத்தினார். அவருடைய போதனைகள் உலக துன்பங்களிலிருந்து தப்பித்தல் என்பதை நோக்கியல்ல, உலக துன்பங்களில் தெய்வீக அன்பை  வெளிப்படுத்துதல் என்பதாகவே அமைந்தது. 

இயேசுவின் போதனைகளிலும், உவமைகளிலும் நாம் சகட்டு மேனிக்கு சந்திப்பது இந்த அன்பின் இழையைத் தான். அன்பின் இழையையும், கரிசனையின் நெகிழ்வையும் களைந்து விட்டு இயேசுவின் பணிகளை நாம் எப்போதுமே சிந்திக்கவும் முடியாது, சந்திக்கவும் முடியாது. 

உலகத்தின் பாவங்களுக்கான பலியாக தன்னையே கையளித்த இயேசு, அதன்பின் நமக்கு அளித்தவர் தான் தூய ஆவியானவர் என்பது விவிலியம் சொல்லும் செய்தி. பழைய ஏற்பாட்டில் வல்லமையோடு இறங்கி வந்து செயல்களை ஆற்றிய தூய ஆவியானவர், புதிய ஏற்பாட்டில் நமக்குள் இறங்கி நம்மை வல்லமைப்படுத்தி செயல்களை ஆற்ற வைக்கிறார். அதனால் தான் அவர் செயலாற்றும் ஆவியானவர் மட்டுமல்லாமல், செயலாற்ற வைக்கின்ற ஆவியாகவும் இருக்கிறார். 

இன்றைய சமூகத்தை விட்டு விட்டு, அல்லது அரசியல் பார்வைகளை விட்டு விட்டு தனியே ஒரு கூடு கட்டி கிறிஸ்தவ சமூகம் வாழவேண்டும் எனும் சித்தாந்தங்களோடு எனக்கு உடன்பாடில்லை. சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் அடையாளங்களின் மீதும் எனக்கு உடன்பாடில்லை. தூய ஆவியானவரின் இருப்பு, நமது செயல்களில் வெளிப்பட வேண்டும். அந்த செயல்கள் நாம் வாழ்கின்ற சமூகத்தின் மறுமலர்ச்சிக்காகவும், புத்தெழுச்சிக்காகவும் பயன்பட வேண்டும் என்பதே எனது பார்வை. 

தூய ஆவியானவரை நாம் இன்று பெரும்பாலும் ஒரு அடையாளத்துக்குள் அர்த்தப்படுத்துகிறோமே தவிர, வாழ்வின் அர்த்தங்களுக்குக் காரணமானவராக அவரை அடையாளப்படுத்துவதில்லை. வாழவேண்டிய வழிகளை நமக்குக் காட்டுபவராக தூய ஆவியானவர் இருக்கவேண்டுமே தவிர, அடையாளங்களை நமக்கு அணிவிப்பவராக தூய ஆவியானவர் இருப்பது பயனளிப்பதில்லை.

பசியாய் இருக்கும் ஒருவருக்குத் தேவை உணவாய் இருக்கிறது. நோயுற்று இருக்கும் ஒருவருடைய தேவை நலம் பெறுதலாய் இருக்கிறது. சமூகத்தில் ஒடுக்கப்பட்டவருடைய தேவை விடுதலையாய் இருக்கிறது. இத்தகைய தளங்களில் நாம் தூய ஆவியானவரின் துணைகொண்டு என்ன செய்கிறோம் என்பதில் தான் தூய ஆவியானவரின் செயல் அளவிடப்படுகிறது. 

இன்றைய சமூகத் தளத்தில் இத்தகைய தூய ஆவியின் துணையோடு துணிவாக கருத்துப் பரிமாற்றங்களையோ, செயல்களையோ, போராட்டங்களையோ,நற்செயல்களையோ மக்களோடு இணைந்து செய்கின்ற கிறிஸ்தவத் தலைவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். நற்செய்தி அறிவித்தலுக்காக இத்தகைய மனிதநேயப் பணிகளைச் செய்யாமல், இத்தகைய மனித நேயப் பணிகளைச் செய்வதன் மூலம் நற்செய்தியை உணரவைப்பதே சமூகத்தின் இன்றைய தேவையாகும். 

உண்மையை வெளிப்படுத்தும் ஆவியானவர்

தூய ஆவியானவரின் இயல்புகளில் மிக முக்கியமான ஒன்றாக விவிலியம் இதைச் சொல்கிறது. சமூகத்தின் முரணான சித்தாந்தங்களிடையே எதை எடுக்க வேண்டும், எதை விடுக்க வேண்டும் என்பதை நமக்கு ஆவியானவர் வெளிப்படுத்துகிறார். நமக்குள் அவர் இருக்கும்போது நமது செயல்கள் உண்மை எனும் இயேசுவின் சிந்தனையை ஒத்தே இருக்கும். அந்த உண்மையானது நம்மை பாவத்தின் வழியை நமக்கு அடையாளம் காட்டும். சமூகத்தின் பரிதாபத்தை நமக்கு புரியவைக்கும். 

நமக்கு அவர் உணர்த்துகிற உண்மையை எப்படி நாம் சமூகத்தின் முன்னேற்றததுக்காக  செயல்படுத்தப் போகிறோம் ? உண்மையை தூய ஆவியானவர் நமக்கு விளக்குவது நமது அறிவு வளர்ச்சிக்கானதல்ல, சமூகத்தின் வளர்ச்சிக்கானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஞானத்தைத் தரும் ஆவியானவர்

விவிலியம் ஞானத்தைத தொடர்ந்து பேசுகிறது. கடவுளின் மீதான அச்சத்திலிருந்து தொடங்குகிறது ஞானம். அத்தகைய உயரிய ஞானத்தை ஆவியானவர் நமக்குத் தருகிறார். ஞானம் எதை நோக்கி நம்மை நடத்த வேண்டும் என்பதில் தான் கனிகள் வெளிப்படுகின்றன. நமது ஞானம் நமது செயல்களில் வெளிப்பட வேண்டும். சட்டங்களைச் சார்ந்த வாழ்க்கையா, மனிதம் சார்ந்த செயல்களா எனும் கேள்வி எழுகையில் இயேசுவின் ஞானம் மனிதத்தின் பக்கமாய் சாய்ந்தது. அது தான் பாவிகளை அரவணைக்கவும், சட்டங்களுக்கு எதிரான கேள்வி எழுப்பவும் அவரைத் தூண்டியது.

நாமும் இன்றைக்கு அதே ஒரு சூழலில் தான் வாழ்கிறோம். கிறிஸ்தவம் போதிக்கின்ற சட்டங்கள் மனிதத்துக்கு எதிரானதாக இருந்தால் நாம் எங்கே சாய வேண்டும் ?. நமது விழாக்கள் மத நல்லிணத்துக்கு இடையூறாய் இருந்தால் எதை எடுக்க வேண்டும் ? இத்தகைய குழப்பத்தின் சூழலில் நமக்கு ஞானத்தை ஆவியானவர் தருகிறார். நமது செயல்களின் முடிவில் மனிதம் மலர்ந்தால் அங்கே ஆவியானவரின் ஞானம் வெளிப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

கிறிஸ்தவம் வெல்லும்போதெல்லாம் கிறிஸ்து ஜெயிப்பதில்லை. மனிதம் வெல்லும்போதெல்லாம் அவர் ஜெயிக்கிறார். 

வல்லமையைத் தரும் ஆவியானவர்

திமோத்தேயு ஆவியின் வல்லமையைப் பற்றிப் பேசும்போது அன்பையும் இணைத்தே பேசுகிறது. ஆவியின் வல்லமை என்பது அன்பின் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்பதே அதன் அர்த்தம். வல்லமை என்பது நமது குரல்கள் எழுப்பும் உச்சஸ்தாயியில் நிர்ணயிக்கப்படுகிறதா, அல்லது சத்தமே இல்லாமல் செயல்படும் அன்பின் செயல்களால் நிர்ணயிக்கப்படுகிறதா ? 

தீய ஆவி பிடித்தவன் சத்தமிட்டு அலறிப் புரள்வதைப் பதிவு செய்கின்ற விவிலியம், தூய ஆவி பிடித்தவர்கள் அன்பினாலும், சமாதானத்தினாலும் நிரப்பப்படுவதைப் பேசுகிறது. தீய ஆவி நம்மைப் பிடிக்கிறது, தூய ஆவி நம்மை நிரப்புகிறது. தீய ஆவி வல்லமையாய் நிலைகுலைய வைக்கிறது, தூய ஆவி வல்லமைக்குள் நம்மை நிலைக்க வைக்கிறது. இந்த வல்லமை நமது சுயநலத்தின் மதில்களை உயரமாக்குவதற்கானதல்ல, மனிதத்தின் கரங்களை வலிமையாக்குவதற்கானதே.

பாவத்தை உணர்த்தும் ஆவியானவர்

நமது உடல் ஆவியானவர் தங்கும் ஆலயம். வீடு தூய்மையாய் இருக்க வேண்டும் என்பது நமது அடிப்படை விருப்பம். பெரிதோ, சிறிதோ அழகாய் நேர்த்தியாய் இருக்கும் வீடுகளையே நாம் விரும்புவோம். அதே போல தான் ஆவியானவரும் நமக்குள் உறைகையில் நமது உடலெனும் ஆலயம் தூய்மையாய் இருக்க வேண்டுமென ஆசிக்கிறார். அதனால் தான் பாவத்தின் வழிகளை நமக்குச் சுட்டிக்காட்டி, நேர்மையின் வழியில் நடக்க நம்மை ஊக்கப்படுத்துகிறார். 

அழுக்கடைந்த உடல் ஆவியானவருக்கு பிரச்சினை இல்லை, அழுக்கடைந்த இதயமே பிரச்சினை. அழுக்கடைந்த கரங்கள் அவருக்குப் பிரியமானவையே, அழுக்கடைந்த சிந்தனைகள் தான் பிரியமற்றவை. நமது வாழ்விலிருந்து அகற்றப்பட வேண்டிய பாவங்களின் பட்டியல் மிகவும் பெரிது. நமது ஒவ்வொரு செயல்களிலும் நமக்கு சரியான வழியைக் காட்டுபவராக ஆவியானவர் இருக்கிறார். வழி தவறிச் சென்றால் கூட மீண்டும் நம்மை சரியான பாதைக்கு கொண்டு சேர்க்கும் ஜி.பி.எஸ் கருவியைப் போல நமது சிந்தனைகளை அவர் வழிநடத்துகிறார். நாம் பாவத்திலிருந்து விடுதலை பெறுவது விண்ணகம் செல்வதற்காய் மட்டுமல்ல, விண்ணகத்தை மண்ணகத்தில் கட்டி எழுப்பவும் எனும் உண்மையை உணர வேண்டும்.

கனி கொடுக்க வைக்கும் ஆவியானவர்

கனிகொடுக்காத மரங்கள் நெருப்புக்கு பலியாகும். ஆவியின் கனி எவை என்று கேட்டால் சட்டென ஒன்பதையும் சொல்பவர்கள் நம்மில் ஏராளம் உண்டு. அந்த கனிகள் நமது வாழ்க்கையில் வெளிப்படுகிறதா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறியே. நமக்குள் ஆவியானவர் நிலைத்திருந்தால் ஆவியின் கனிகள் வெளிப்படும். ஆலம் விதையில் அரளிப் பூ பூக்காது, ஆவியானவரின் செயல்களில் அநியாயம் முளைக்காது. 

எனது வார்த்தைகளின் கனிவு வெளிப்படுகையில் ஆவியானவரின் கனி அங்கே வெளிப்படுகிறது. எனது செயல்களின் அடிப்படையாய் அன்பு இருக்கும் போது ஆவியானவர் செயலாற்றுகிறார். எனது பதில்களில் அமைதி அமர்ந்திருக்கும் போது ஆவியானவர் பணியாற்றுகிறார். எனக்குள் சக மனித பரிவு முளைவிடும்போது ஆவியானவர் புன்னகைக்கிறார். என ஆவியானவரின் கனி ஒவ்வொன்றும் நம்மை சமூகத்தின் அன்புறவுக்காய் அழைக்கிறது. 

இறுதியாக, தூய ஆவி என்பது நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கானதல்ல. நமது செயல்களின் மூலமாக இயேசுவை வெளிப்படுத்திக் காட்டுவதற்கானது என்பதைப் புரிந்து கொள்வோம். ஆவியை அடையாளங்களால் வெளிப்படுத்துவதை விட, அர்த்தங்களால் மகிமைப்படுத்துவோம்.

*

சேவியர்
Posted in Desopakari

உயிர் மூச்சு : கடவுளின் அருள்கொடை




 


உயிர் மூச்சு ! பிராண வாயு ! ஜீவ சுவாசம் !

இதைப்பற்றியெல்லாம் எப்போதாவது நினைத்திருப்போமா என்றே தெரியவில்லை. காலம் நம்மை கண நேரமும் அதைப்பற்றி மட்டுமே நினைக்கக் கூடிய இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. வளி மண்டலத்தில் கடவுள் இலவசமாய் நிரப்பி வைத்த பிராண வாயுவின் தட்டுப் பாடு இன்றைக்கு நிறைய பேருடைய பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறது. 

நாமெல்லாம் எப்போதும் யோசிக்காத காற்றின் தேவை இப்போது நம் முன்னால் விஸ்வரூபமெடுத்து ஆடுகிறது. மரங்களை முறிக்காதீர்கள், காற்றில் உயிர்வளி குறையும் என்றபோதெல்லாம் நாம் கவலைப்படவில்லை. காற்றை மாசு படுத்தாதீர்கள் நுரையீரல் நலிவடையும் என்றபோதெல்லாம் நாம் பொருட்படுத்தவில்லை. உயிர்வளியின் தேவை என்ன என்பதை கோவிட் வந்து நமது குரல்வளையை நெரித்து கற்றுத் தந்திருக்கிறது. 

சராசரி மனிதர் நாளொன்றுக்கு 11 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை சுவாசிக்கிறார் என்கிறது புள்ளி விவரக் கணக்கு. அதை இன்றைய சந்தைக்கணக்குடன் ஒப்பிடும்போது பல இலட்சம் ரூபாய் வருகிறது. ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய்கள் என்கிறது. ஆயுளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஆக்சிஜனை நாம் சுவாசிக்கிறோம் என்பது தான் கூட்டல் கழித்தல் கணக்கு சொல்லும் செய்தி. ஆனால், எல்லாவற்றையுமே இறைவன் நமக்காய் உருவாக்கித் தந்திருக்கிறார், இலவசமாகத் தந்திருக்கிறார். என்பது தான் நாம் உணர வேண்டிய செய்தி. 

ஜீவ சுவாசம் ! இறைவன் நமக்குத் தந்த கொடை ! அது தான் மண்ணையும், மனிதனையும் ஒன்றாக்கியது. அது தான் மண்ணின் துகளாய் இருந்த மனிதனை விண்ணின் துகளாய் உருமாற்றியது. அது தான் சலனமற்ற உடலை, மேன்மையின் உயிராக உருமாற்றியது. நமக்கு இறைவன் அளித்த உயிர் மூச்சு நாம் மண்ணிற்கும் விண்ணிற்கும் இடையே பாலமாய் நிலைபெற வேண்டும் என்பதற்காகத் தான். 

1. ஆணவ மூச்சு அல்ல

இறைவன் தனது ஜீவ சுவாசத்தை நமக்கு அளித்தது, ‘நான் கடவுள்’ என நம்மை மேன்மைப்படுத்தித் திரிய அல்ல. நாம் இறைவனால் வாழ்வைப் பெற்றோம் என பணிவு காட்டித் திரிய. கடவுள் தனது குளோனிங் களை உருவாக்கவில்லை. குயவன் பாண்டம் செய்வது போல நம்மை வனைந்திருக்கிறார். தனது சுவாசத்தை நமக்கு கொடையாய் அளித்திருக்கிறார். அவர் மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய கொடை ஜீவ சுவாசம். தரப் போகிற மிகப்பெரிய கொடை மீட்பு. 

நாம் எப்போதுமே கடவுளாய் மாற முடியாது. ஆனால் கடவுளின் இயல்புகளை நம்மில் வளர்த்துக் கொள்ள முடியும். காரணம் நம்மைப் படைத்தவரும், நமக்குள் உயிரை அடைத்தவரும் இறைவனே. நம்முடைய மூச்சாக இருக்க வேண்டியது பணிவு, இறைமகன் இயேசுவிடம் இருந்த பணிவு. அவர் தான் இறை மூச்சின் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டியவர். 

2. பரமனின் மூச்சு, பொது நல மூச்சு.

நமது வாழ்க்கையும், நமது சுவாசமும் சுயநல நுரையீரல்களில் சுற்றி வருவதற்கானவை அல்ல. அவை பிறர்நலப் பணிகளில் நம்மை அழைத்துச் செல்வதற்கானவை. ஆதாமுக்கு கடவுள் ஜீவ சுவாசத்தைக் கொடுத்தார். அப்படியே கையோடு பணிகளையும் கொடுத்தார். கடவுளின் கட்டளையை மீறி சுயநலமாய் தான், தனது மனைவி என ஆதாம் அடங்கிய போது அவனது புனிதம் கறைபட்டது. அவனது உயிர்மூச்சு குறைபட்டது. 

நாம் நம்மை அழித்து பிறரை வாழ வைக்க வேண்டும் என இறைவன் விரும்புகிறார். அதனால் தான் சகோதரருக்காக உயிரைக் கொடுப்பதே மேலான அன்பு என அவர் பறைசாற்றுகிறார். நாமோ பிறரை அழித்து நம்மை வாழ வைக்கிறோம். அப்படிச் செய்யும் போது நமக்குள் இருக்கின்ற தெய்வீக மூச்சு, துருப்பிடிக்கிறது. பரமனின் மூச்சு சுயநல மூச்சல்ல, பொதுநல மூச்சு. 

3. மாற்றத்தின் மூச்சு !

ஜீவ மூச்சு, மாற்றத்தின் மூச்சு. புழுதியின் துகள்களிலிருந்து, புகழின் தளத்துக்கு இடம் பெயரும் மாற்றம். இருளின் ஆட்சியிலிருந்து ஒளியின் சாட்சிக்கு இடம் பெயரும் மாற்றம். வெறுமையின் தரையிலிருந்து, முழுமையின் இறையை நோக்கி இடம் பெயரும் மாற்றம். பாதாளத்தின் ஆழத்திலிருந்து விண்ணகத்தின் மேடைகளுக்கு இடம் பெயரும் மாற்றம். இல்லாமையின் கரையிலிருந்து, சர்வத்தின் அருகினுக்கு செல்லும் மாற்றம். தற்காலிக வாழ்விலிருந்து, நிரந்தர மீட்புக்கு இடம் பெயரும் மாற்றம். இது மாற்றத்தின் மூச்சு, ஏற்றத்தின் மூச்சு. 

இயேசு கொடுத்த வாழ்வானது புதிய மாற்றத்துக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். அது வெறும் விண்ணக வாழ்வை நோக்கிய நகர்வல்ல. மண்ணில், நாம் சார்ந்த சமூகத்தின் மாற்றங்களுக்காகவும் பணியாற்ற வேண்டும். என் அயலான் யார் எனும் கேள்விக்கு விடை விண்ணில் இல்லை. மண்ணில் தான் இருக்கிறது. நான் அன்பு செய்ய வேண்டிய சக மனிதன் விண்ணில் இல்லை, மண்ணில் தான் இருக்கிறான். மாற்றத்தின் மூச்சு, நமது சமூகத்தில் பிராண வாயு தேவைப்படும் விஷயங்களில் வீசட்டும்.

4.  வார்த்தையெனும் மூச்சு !

முதலில் கடவுள் ஊதினார் !
பின்னர் வார்த்தைகளை ஓதினார் ! - மூச்சுக் காற்று முதல் மனிதனுக்கு ஜீவன் கொடுத்தது. இறைவனின் வார்த்தை தொடர்ந்து வரும் அத்தனை தலைமுறைக்கும் ஜீவன் கொடுக்கிறது. இயேசு வார்த்தையாகவே வந்த ஜீவ மூச்சு. கடவுள் ஊதிய மூச்சுக்காற்றின் தொடர்ச்சி தான் உயிரூட்டும் வார்த்தைகள். அவை தான் வாழ்வு தரும் வார்த்தைகள். இன்றைக்கு இயேசுவின் மூச்சு என்பது இறைவார்த்தைகளே, அவையே நமது வாழ்வின் சுருக்கங்களைச் சமன் செய்கின்றன. நமது மனதின் அழுக்குகளை சலவை செய்கின்றன. 

உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கும் போது, இயேசுவின் மூச்சை நாம் பிறருக்கும் கொடுக்கிறோம். பயனற்ற வார்த்தைகளை வீசித் திரியும் போது நாம் இறைவனின் மூச்சை உதாசீனப்படுத்துகிறோம்.

5. வழிகாட்டும் மூச்சு !

ஜீவ மூச்சு தான் விலங்குகளையும் மனிதர்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. ஜீவ மூச்சு தான் மனிதனை இறைவனோடு இறுக்கக் கட்டுகிறது. ஆதாமுக்கு மட்டுமல்ல, பிறக்கும் அத்தனை உயிர்களுக்கும் இறைவனின் மூச்சே துவக்க மூச்சாய் தரப்படுகிறது.  விலங்குகளுக்கு இறைவன் ஜீவ மூச்சை ஊதவில்லை, எனவே அவை ஐந்து அறிவோடு சுருங்கி விட்டன. அவை இறைவனை அறியும் அறிவில் வளரவில்லை. மனிதனுக்கு கடவுள் ஜீவ மூச்சை அளித்தார் எனவே அவனது ஜீவன் இறைவனின் ஜீவனோடு முடிச்சிட்டுக் கொண்டது. அந்த முடிச்சை அவிழ்க்காமல் தொடரும் மனிதன் இறைவனின் வழியில் நடக்கிறான். பிரித்து விட்டுப் பிரிந்து நடப்பவன் சுயமாய் நடந்து அழிகிறான். 

இறைவனின் மூச்சுக்காற்று நமது இதயத்தின் கரம்பிடித்து நம்மை தூய்மையின் பாதைகளில் அழைத்துச் செல்கிறது. இறைவனின் மூச்சுக்காற்று நமது வழிகளில் நாம் எடுக்க வேண்டிய முடிவுகளை நமக்கு உணர்த்துகிறது. இறைவனின் மூச்சுக்காற்றே நாம் தூய ஆவியை ஏற்றுக்கொள்ள நம்மை ஏவுகிறது. 

இறைவனின் மூச்சுக்காற்று உலவும் உடலை தூய்மையாய்க் காப்போம். இறைவனின் மூச்சுக்காற்று உலவும் நமது இதயத்தை புனிதமாய்க் காப்போம். மீண்டும் நாம் இறைவனை அடைகையில் விடுகின்ற மூச்சுக்காற்று காலத்தால் கறைபடியாமல், கடவுளில் நிறைவடைவதாய் இருக்கட்டும்

*
சேவியர்
நன்றி : தேசோபகாரி, மேய் 2021



 

Posted in இயேசு, இலக்கியம், கிறிஸ்தவ இலக்கியம், Bible Poems

கற்பனையில் ஒரு கானாவூர்

கானாவூர் களேபரத்தில்
முற்றங்கள்
இயலாமையின் 
கரங்களைப் பிசைந்து கிடந்தன.

இன்னும் சிறிது நேரத்தில்
ஏளனத்தின் எச்சங்கள்
இந்த 
எல்லைகள் எங்கும விதைக்கப்படும். 

தீர்ந்து போன இரசம்
கவுரவத்தின்
மெல்லிய கழுத்தை
முடிச்சு போட்டு மூழ்கடித்துவிடும்.

அந்தத்
திருமண களிப்பிடையே
இழையோடியது
வெளிக்காட்டா தவிப்பு !

வேளை வரும் முன்பே
வேலை வந்தது
பரமனுக்கு !

அவர்
செய்வதெல்லாம் செய்யுங்கள்
என்றார் அன்னை !

சாடிகளில்
நீர் நிறையுங்கள் என்றார் இயேசு !

பதட்டத்தின்
குழந்தைகளாயிருந்த
பணியாளர்கள்,
எரிச்சலின் ஏவலர்கள் ஆனார்கள்.

தீர்ந்தது
நீரல்ல, இரசம் !
அவர்களுடைய உதடுகள்
அசையாமல் கூக்குரலிட்டன. 

தூய்மைச் சடங்கின்
தருணமல்ல இது
திருமண விருந்தின் தினம் !
அவர்களின்
வெறித்த பார்வைகள் சத்தமிட்டன. 

இருக்கும் பிரச்சினைக்கு
தீர்வைக் கேட்டால்
புதிய பிரச்சினைக்கு
பதியம் போடுகிறாரே
என பல் கடித்தனர்.

நீர் நிரப்பச் சொன்னவரை
நிர்கதியாய் விட்டுவிட்டு
நீங்கினர்.

பக்கத்தில் எங்கேனும்
இரசம் கிடைக்குமா 
என
பக்கமிருந்தவர் ஓடினர். 

இரவல் இரசமேனும் 
கிடைக்குமா 
என
மிச்சம் இருந்தவர்கள் ஓடினர். 

காலியாய்க் கிடந்தன
கற்சாடிகள் !
மலைத்து நின்றார் மரியா. 

பிதாவே இவர்களை மன்னியும் !
இயேசு
வெற்றிடத்தின் வெற்றிக்காய்
பிரார்த்தனை செய்தார் 

முதல் புதுமையின்
முதுகெலும்பு
நம்பிக்கை இல்லாத பணியாளர்களால்
உடைந்து விழுந்தது. 

கானாவூர் களையிழந்தது !

*

சேவியர்
Posted in Articles

சிறுவனும் அப்பமும்

சிறுவனும் அப்பமும்

கூட்டம்
பசியைத் தின்று
வார்த்தைகளைக் 
குடித்துக் கொண்டிருந்தது.

பாலை நிலத்தின்
சுடுவெளியில்
வயிற்றின் வெறுமை அனலடித்தது.

இயேசு
கூட்டத்தின்
வயிற்றுப் பசியை 
விரட்ட விரும்பினார்.

“நீங்களே 
உணவு கொடுங்கள்”
சீடர்களிடம் சொன்னார் !

சீடர்கள்
வெறுமையோடு வழக்காடி
தோற்று நின்றனர். 

இயேசுவின் வார்த்தைகள்
அந்த
சிறுவனின் காதுகளில் 
வந்து விழுந்தன.

என்னிடம்
ஐந்து 
வார்க்கோதுமை அப்பங்களும்
இரண்டு மீன்களும் 
இருக்கின்றன !
அவன்
பேசிமுடிக்கும் முன்
வாயைப் பொத்தினார் 
வறுமைத் தாய்.

வார்க்கோதுமை 
அவரது வாழ்க்கையை
வறுமை வார்த்தெடுத்திருந்ததை.
விளக்கியது. 

முழுமையாய் கொடுத்தால்
நமக்கு பட்டினிதான்
வேறேதும் இல்லை
என்றார் ! 

ஏழு என்பது முழுமை
நாம்
முழுமையாய் கொடுப்பதே
வளமை !
சிறுவன் சொன்னான்.

இயேசுவின் வார்த்தை
அவனுக்குள்
சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தது.

எல்லோருக்கும்
பத்தாதே, என்றார் தந்தை.

பற்ற வைப்போம்
சிறு நெருப்பு போதுமே
பெருங்காட்டைப் பொசுக்க
சிறுவன் சொன்னான்.

கொடுக்கத் தான் வேண்டுமா 
கடைசியாய் கேட்டனர்
பெற்றோர் !
கொடுக்காவிட்டால்
இதுவரை
போதனைகளைப
பெற்றுக் கொண்டிருந்ததில்
அர்த்தமில்லை, என்றான் அவன்.

எழுந்தான்,
கொடுத்தான் !

இயேசு சிரித்தார். 

முழுவதும் கொடுத்ததால்
முழுமை அடைந்தாய்,
பற்றற்று இருந்ததால்
பெற்றுக் கொள்வாய்

போகும்போது
கூடை நிறைய தருகிறேன்
எடுத்துப் போ !


*

சேவியர்




Posted in Articles

நான், கடவுள் பேசுகிறேன்

நான், கடவுள் பேசுகிறேன்



* 


மனிதனை
அழைக்கும் விதம் தெரியாமல்
கையைப் பிசைகிறேன். 

பச்சை மரத்தில்
பற்றி எரிந்தேன்,
‘காடே எரிகிறது என 
கடந்து போகிறான்

நதியைப் பிளந்து
விளக்க நினைத்தேன் !
மணல் மாஃபியாக்களால்
நதியே
பிளந்து தான் கிடந்தது. 
அவன் 
பொருட்படுத்தவில்லை. 

இடி முழக்கத்தில்
பேச நினைத்தேன்
அடைத்த அறைகளுக்குள்
தொலைக்காட்சி அலற
அவன்
தேனீரில் திளைத்திருந்தான்.

அக்கினித் தூணாய்
விரட்டினேன்,
குளிர் கதவுகளுக்குள்
குடியிருந்தான்.

மேகத் தூணில்
முன்வந்தேன்,
வானிலை சரியில்லையென
வெதர் சேனல் பார்த்தான்

வறியவர் விழிவழியே
அவனைப் பார்த்தேன்
தொடுதிரையைத் தடவியபடி
நடந்து கடந்தான்.

என் செய்திகளை
அவன்
வாட்சப் வாசல்களில்
வெட்டிச் சாய்த்தான்.

என்
மெல்லிய குரலை
அவனது
சமூக வலைத்தளங்கள்
சம்மதிக்கவில்லை.

எல்லா 
முயற்சியும் தோற்றுப் போக
சற்று நேரம்
ஓய்வெடுத்தேன்.

அப்போது
சாத்தான் 
ஒரு 
கொள்ளை நோயோடு 
களமிறங்கினான்.

இப்போது
எல்லா மனிதர்களும் 
ஓங்கிச் சொல்கின்றனர்
இது 
கடவுளின் குரல்

*

சேவியர்





x