நன்றி மறப்பது நன்றன்று !
*
காட்சி 1
( தொழிலதிபர் ராபர்ட் போனில் )
ராபர்ட் : (போன் ) விக்கி, லாஸ்ட் மந்த் டேன் ஓவர் கொஞ்சம் கம்மியாயிருக்கே.. என்ன விஷயம் ?
போன் : டேன் ஓவர் கம்மி ஆகல சார், நாம புது பிராஞ்ச் ஒன்னு ஓப்பன் பண்றதால 5 சி அங்கே இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம் சார், ஓவரால் டேஷ்போர்ட்ல நீங்க அதை பாக்கலாம்.
ராபர்ட் : ஓ.. ஐ சீ…. குட்… குட்… ஐ ஜஸ்ட் ஃபர்காட்… தேங்க்யூ.. பிளீஸ் லெட் மி நோ எனி சேலஞ்சஸ் அஸ் அண்ட் வென் யூ சீ இட்..
போன் : கண்டிப்பா சார்…
( போனை வைக்கிறார் )
ஒருவர் : சார், பென்ஸ் கார் சர்வீஸ் முடியல.. ஆடி கார் எடுத்துட்டு வரவா ? ரேஞ்ச் ரோவர் எடுத்துட்டு வரவா சார் ?
ராபர்ட் : எனி திங் ஈஸ் ஃபைன்… ஜஸ்ட் எ டிரான்ஸ்போர்ட்…
( பைபை புரட்டுகிறார் )
( லேப்டாப்பில் வேலை செய்கிறார் )
காட்சி 2
( சர்ச்சில் செபம் )
செபம் : ஆண்டவரே ஒரு நல்ல வளமான, நிம்மதியான வாழ்க்கையைக் குடுத்திருக்கீங்க. எதிரிகளே இல்லேங்கற அளவுக்கு நல்ல வளர்ச்சியை குடுத்திருக்கீங்க. உங்க அன்புக்கு எப்பவுமே நான் கடமைப்பட்டிருப்பேன்.
காட்சி 3
( அம்மா & ராபர்ட் )
ராபர்ட் : அம்மா…. ரொம்ப சந்தோசமா இருக்கும்மா.. வாழ்க்கை நிம்மதியா இருக்கு… இந்த வளர்ச்சிக்கெல்லாம் காரணமான கடவுளுக்கு தான்மா நன்றி சொல்லணும்
அம்மா : கண்டிப்பா.. அதான்… சர்ச்க்கு நிறைய குடுக்கிறியே.. அதுல எனக்கு ரொம்ப சந்தோசம்பா…
ராபர்ட் : இன்னும் ஏதாச்சும் பண்ணணும்ம்மா.. மேபி ஒரு கிராம சபை சர்ச் பெருசா கட்டி குடுப்போம்.. நம்ம சார்பா
அம்மா : வெரி குட்பா… குப்பையில இருந்த நம்மை கடவுள் இங்கே உயர்த்தியிருக்காரு.. கண்டிப்பா அவருக்கு காலமெல்லாம் நன்றியுள்ளவங்களா இருக்கணும்
ராபர்ட் : கண்டிப்பாம்மா…
அம்மா : அதே மாதிரி நம்மை சுற்றி இருக்கிறவங்களுக்கும் நாம நல்லது செய்யணும்ப்பா..
ராபர்ட் : நீங்க சொல்லுங்கம்மா… கண்டிப்பா செய்யலாம்..
அம்மா : ம்ம்.. குறிப்பா நாம கஷ்டத்தில இருக்கும்போ கடவுள் மாதிரி வந்து உதவி செஞ்சுட்டு காணாம போயிடுவாங்க சில பேரு.. அவங்களை நாம கண்டிப்பா ஞாபகம் வெச்சு நன்றிக்கடன் செலுத்தணும்ப்பா…அவங்களை நாம பல நேரம் கவனிக்கவே மாட்டோம்…
ராபர்ட் : அதெப்படிம்மா ஹெல்ப் பண்ணினவங்களை கவனிக்காம இருப்போம்
அம்மா : ஸீ… இப்ப நீயே யோசிச்சு பாரு.. லாசர் உடல்நிலை சரியில்லாம இருக்காரு… சகோதரிகள் அவருக்கு ஆளனுப்பி விஷயத்தை சொல்றாங்க.. அப்புறம் இயேசு நாலு நாளைக்கு அப்புறம் வந்து அவரை உயிரோட எழுப்பறாரு..
ராபர்ட் : எஸ்… கனவுல தட்டி எழுப்பினா கூட இந்த கதையை எல்லா கிறிஸ்டியன்ஸும் சொல்லுவாங்களே… லாசரே வெளியே வா..ந்னு
அம்மா : இதுல கவனிக்கப்படாத கதாபாத்திரம் உண்டா ?
ராபர்ட் : இல்லையேம்மா… லாசரஸ்… மார்த்தா..மரியா.. ஜீஸஸ்.. கூட்டம்.. சீடர்கள்.. நமக்கு எல்லாரையும் தெரியுமே !
அம்மா : இயேசு கிட்டே செய்தி கொண்டு போன ஆள் உனக்கு ஞாபகம் வரல பாத்தியா ? அவரு தான் லாசருக்கு உடம்பு சரியில்லேங்கற விஷயம் இயேசு வரைக்கும் போகவே காரணம்.
ராபர்ட் : ஓ.. யா… யோசிச்சதே இல்லை.
அம்மா : நாமானுக்கு தொழுநோய் போச்சு இல்லையா ? அதுல கவனிக்கப்படாத ஆள் இருக்காங்களா ?
ராபர்ட் : ஐ நோ… அந்த சின்னப் பொண்ணை சொல்றீங்க கரெக்டா ?
அம்மா : நோ.. நோ… எலியா சொன்னதும் முடியாதுன்னு சொல்லிட்டு நாமான் போறாருல்லயா.. அப்போ வேலைக்காரங்க சொல்றாங்க, … கஷ்டமான காரியம்ன்னா செஞ்சிருப்பீங்கல்ல.. இதையும் செய்யுங்கன்னு.. அதை கேட்டு தான் நாமான் ஆற்றில இறங்குவாரு…
ராபர்ட் : ஓ.. ஆமா..
அம்மா : நாமான் பெரிய படைத் தலைவன்னு எல்லாரும் எல்லாரும் சைலண்டா இருந்திருந்தா ஒருவேளை நாமானுக்கு சுகமே கிடைச்சிருக்காது.. அந்த வேலைக்காரங்க தான் நாமான் வாழ்க்கைல பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவன்..
ராபர்ட் : எஸ்மா..உண்மை தான்
அம்மா : அப்படிப்பட்டவங்க நம்ம லைஃப்ல இருந்தா கண்டுபிடிச்சு ஹெல்ப் பண்ணணும்பா… கடவுளுக்கும், மனிதனுக்கும் நன்றியும் அன்பும் உடையவர்களா நாம இருக்கணும்.
ராபர்ட் : சரியா சொன்னீங்கம்மா… எனக்கு தெரிஞ்சு எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணியிருக்கேன்… பட்.. லெட் மி திங்க்
காட்சி 4
( ராபர்ட் யோசிக்கிறான் )
ராபர்ட் : ஒரு தடவை ஒரு ஆக்சிடண்ட் நடக்காம நம்ம டிரைவர் காப்பாத்தினாரு.. அவருக்கு ஹெல்ப் பண்ணிட்டேன்..
ஒருதடவை … ஒரு பிஸினஸ் டீலை ஒருத்தன் முடிச்சு குடுத்தான்… அவனுக்கும் நல்லது பண்ணியாச்சு
வர்க்கர்ஸ்க்கு எல்லாம் தேவையானதை குடுத்தாச்சு…
ப்ரண்ஸ்க்கும் ஹெல்ப் பண்ணியாச்சு…
ஓ..மை..காட்.. ஒரு விஷயத்தை மறந்துட்டேனே !!!!
காட்சி 5
( பிளாஷ்பேக் )
சின்ன வயதில் ராபர்ட் குப்பை தொட்டியிலிருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்துக் கொண்டிருக்கிறான்.
நபர் : என்னப்பா.. காலையிலயே பாட்டில் பொறுக்கிட்டிருக்கே..
ராபர்ட் : டெய்லி இதை வித்தா தான் சார் அஞ்சோ பத்தோ கிடைக்கும்… ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி நான் இப்படி பண்ணுவேன் சார்..
நபர் : அப்பா என்ன பண்றாருப்பா..
ராபர்ட் : அப்பாவாலை வேலை செய்ய முடியாது சார். உடம்பு சரியில்லை… .. அம்மா ஒரு கடையில சேல்ஸ் உமனா இருக்காங்க…. அங்கேயும் ஒழுங்கா சம்பளம் கிடைக்கிறதில்லை… வீட்ல ஒரு தங்கச்சி உண்டு…
நபர் : ம்ம்..அம்மாவோட சம்பளத்தை மட்டும் வெச்சு குடும்பத்தை ஓட்டறது கஷ்டம் தான்.
ராபர்ட் : ஆமா சார், நான் படிக்கணும்ன்னா… கொஞ்சமாச்சும் காசு வேணும் சார்.. அதான் இப்படி…
நபர் : சரிப்பா.. கவலைப்படாதே… நான் ஒரு வர்க்ஷாப்ல உன்னை சேத்து விடறேன். நம்ம பிரண்டோட வர்க் ஷாப் தான். நீ ஸ்கூல் முடிஞ்சப்புறம் அங்கே போய் வேலை செய். மாசா மாசம் சம்பளமும் கிடைக்கும், டே டைம்ல ஸ்கூலுக்கும் போலாம் சரியா…
ராபர்ட் : ஓ..அப்படியா… ரொம்ப நன்றி சார்..
நபர் : இருக்கட்டும்பா… நானும் வர்க்ஷாப்ல தான் வேலை செய்றேன்… எழில் நகர் வர்க்ஷாப்ல… அதனால வர்க்ஷாப்ஸ் காண்டாக்ட் உண்டு…
ராபர்ட் : ரொம்ப நன்றி சார்.. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன் சார்.
நபர் : நல்ல பொறுப்பான பையம்பா நீ.. நிச்சயம் பெரிய ஆளா வருவே.. உன் பேரு என்னப்பா ?
ராபர்ட் : ராபர்ட் சார்.
நபர் : அட.. என் பேரும் ராபர்ட் தான்… ராபர்ட் பெனடிக்ட்…. இதா இந்த காசை கைல வெச்சுக்கோ, பீஸ் கட்டவோ, டிரஸ் வாங்கவோ யூஸ் பண்ணிக்கோ….
ராபர்ட் : வே..வேணாமே சார்…. சா…சார்… ரொம்ப நன்றி சார்…
காட்சி 6
( ராபர்ட் சிந்திக்கிறான் )
ராபர்ட் : அம்மா..அம்மா… ஒரு ஆளை நாம் மறந்தே போயிட்டேன்மா….
அம்மா : எதுக்குப்பா…
ராபர்ட் : கவனிக்கப்படாத கதாபாத்திரம்மா..
அம்மா : ஓ.. யாருப்பா அது ?
ராபர்ட் : அம்மா.. என்னை முத முதல்ல குப்பை பொறுக்கிற வேலையில இருந்து காப்பாற்றி ஒரு வர்க்ஷாப்ல சேத்து விட்டாரே அவரும்மா..
அம்மா : ஓ.. ஆமா.. நீ சொல்லியிருக்கே.. நானும் மறந்துட்டேன்.. நிறைய வருஷம் ஆச்சுல்ல
ராபர்ட் : அவரை எப்படியாவது கண்டுபிடிச்சு அவருக்கு ஹெல்ப் பண்ணணும்மா…
அம்மா : அவரை எப்படிப்பா கண்டுபிடிப்பே..
ராபர்ட் : அம்மா.. அந்த காலத்துல அவரு எழில் நகர் வர்க்ஷாப்ல வேலை செஞ்சாரும்மா…. அவரு பேரு கூட..ம்ம்.. ராபர்ட் பெனடிக்ட் மா…
அம்மா : ஓ..
ராபர்ட் : லெட் மி ஃபைண்ட் அவுட்
காட்சி 7
( ராபர்ட் அந்த வர்க்ஷாப்பைத் தேடுகிறான் )
ராபர்ட் ( ஒரு கடையில் ) ஐயா.. இங்கே நிறைய வர்க்ஷாப் இருக்கு.. இதுல ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடியே இருக்கிற கடை எதுன்னு தெரியுமா ?
நபர் : அப்படி ஒரே ஒரு வர்க்ஷாப் தான் இருக்கு தம்பி..… மூணாவது தெருவில இருக்கு… அதுவும் மூடிடுவாங்கன்னு நினைக்கிறேன்… புதிய கடைகளும், புதிய டெக்னாலஜியும் எல்லா இடத்துலயும் வந்துச்சு இல்லையா ?
ராபர்ட் : ம்ம்.. நன்றி சார்.. வரேன்.
காட்சி 8
( அந்த வர்க் ஷாப் )
ராபர்ட் : ஐயா… இந்த வர்க்ஷாப் தான் ரொம்ப வருஷமா இருக்கிற கடையா ?
நபர் : ஆமா.. என்ன வேணும்.. வண்டிக்கு ஏதாச்சும் பிரச்சினையா ?
ராபர்ட் : இல்ல.. நான் ஒருத்தரை தேடி வந்தேன்…
நபர் : ஆளை தேடி வந்தீங்களா ? .. இங்கே இப்போ நானும் ரெண்டு பசங்களும் தான் இருக்கோம்… பெரிய அளவில வேலையும் இல்லை…
ராபர்ட் : இங்கே.. ராபர்ட்ன்னு ஒருத்தர் வேலை பாத்தாருல்லயா ?
நபர் : ராபர்ட்டா ?
ராபர்ட் : ஆமா… ரொம்ப முன்னாடி.. முழு பேரு கூட ராபர்ட் பெனடிக்ட் ந்னு நினைக்கிறேன்..
நபர் : ஓ.. பெனடி.. ஆமா தம்பி.. ரொம்ப வருஷமா இங்க தான் வேலை பாத்தாரு…. நல்ல மனுஷன்.. எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணூவாரு… பாவம்..
ராபர்ட் : பாவமா… அவரு இப்ப எங்க இருக்காரு ?…
நபர் : என்னப்பா இப்போ வந்து கேக்கறே… அவரு தான் பாவம் ஒரு பாழாப்போன நோய் வந்து ரொம்ப நாள் கஷ்டப்பட்டாரு.. அப்புறம்..
ராபர்ட் : அப்புறம் என்னாச்சு சார்.. காப்பாத்திட்டாங்களா ?
நபர் : எங்கே தம்பி.. காப்பாத்தற அளவுக்கு யாருக்கு வசதி இருக்கு… அவரும் பொண்ணு தன்யாவும் மட்டும் தான் தனியா இருந்தாங்க…. எனக்கும் அவ்ளோ வசதி இல்லப்பா…. அவரை காப்பாத்தமுடியல.. நாலு வருஷம் ஓடிப் போச்சு.
ராபர்ட் : ஐயோ… சே… ஐம் வெரி லேட்.. ஆமா, அந்த பொண்ணு இப்போ எங்கே இருக்காங்க…
நபர் : தனியா அவங்களை பாதுகாக்க ஆள் இல்லேன்னு, அன்னை அனாதை இல்லத்துல சேத்து விட்டாங்க தம்பி.. அங்கே தான் இருப்பா… நான் எப்பவாச்சும் போய் பாத்துட்டு வருவேன். பாவம், நல்லா இருந்த குடும்பம் இப்படி ஆயிடுச்சு…
ராபர்ட் : ( சோகமாக ) ஓ.. ஜீஸஸ்… சரிங்க.. நன்றி,… நான் போய் அவரோட பொண்ணை பாக்கறேன்..
காட்சி 9
( அனாதை இல்லம் )
ராபர்ட் : ஹாய்… இங்கே தன்யான்னு ஒரு பொண்ணு இருக்காங்களா ?
அ.இ : நீங்க யாரு சார் ?
ராபர்ட் : அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சவங்க, என் பேரு ராபர்ட்.
அ.இ : வெயிட் பண்ணுங்க சார், நான் வர சொல்றேன்…
( சற்று நேரத்துக்குப் பின் )
( உடல் ஊனமுற்ற ஒரு பெண் வருகிறார் )
பெண் : சார்.. வணக்கம் நீங்க…
ராபர்ட் : நீ.. நீ… ராபர்ட் பெனடிக்ட் பொண்ணா ?
பெண் : ஆமா சார்.. அப்பா இருந்தவரைக்கும் அப்பா கூட இருந்தேன்… இப்போ அப்பாவோட நினைவோட இருக்கேன்..
ராபர்ட் : உ. உன் கை…
பெண் : சின்ன வயசுலயே போனது சார்… அதனால என்னால எந்த வேலைக்கும் போக முடியல.. யாரும் வேலைக்கு சேத்துக்கவும் இல்லை.. அப்படியே போகுது சார் லைஃப்.
ராபர்ட் : நான் உன் அப்பாவுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்.. நான் சின்ன வயசுல ஒண்ணுமே இல்லாம இருந்தப்போ உங்க அப்பா தான் கை குடுத்தாரு..
பெண் : என் அப்பாவா ? அப்பாவைப் பற்றி கேக்கவே சந்தோசமா இருக்கு…
ராபர்ட் : அதுக்கு கைமாறா நான் ஏதாவது பண்ணணும்ன்னு நினைக்கிறேன்.
பெண் : சார், நீங்க ஏதாச்சும் பண்ண நினைச்சா இந்த அனாதை இல்லத்துக்கு பண்ணுங்க. எங்களை மாதிரி ஆட்களை அன்பாவும், கனிவாகவும் வளத்தறது அவங்க தான். எனக்கு உதவின அவங்களுக்கு நன்றியுடையவளா இருக்கணும்னு நினைக்கிறேன்…
ராபர்ட் : உங்க அப்பாவை மாதிரியே உனக்கும் இளகிய மனசும்மா… அடுத்தவங்களுக்கு உதவற மனம் தான் கடவுள் இருக்கிற மனம். நான் கண்டிப்பா உதவறேன்.
பெண் : ரொம்ப நன்றி சார்…
ராபர்ட் : அப்படியே உன்னை நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகப் போறேன்… அம்மா இருக்காங்க உன்னை நல்லா பாத்துப்பாங்க, என் கம்பெனில உனக்கு ஒரு நல்ல வேலையும் தரேன்…
பெண் : சார்.. என்ன சொல்றீங்க… அந்த அளவுக்கு நான் தகுதி இல்லாதவ சார்…
ராபர்ட் : அப்படி இல்லம்மா… நான் உங்க அப்பாவால வளர்ந்தவன் .. அவரு இல்லேன்னா இன்னிக்கு நான் இல்ல… இன்னிக்கு நான் வசதியா இருக்கேன்… உங்க அப்பாவுக்கு நன்றிக்கடன் செலுத்த ஒரு வாய்ப்பா இதை நினைக்கிறேன்…. அதான் உன்னை தத்தெடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்..
பெண் : தத்தா… சார், கை கூட இல்லாத பொண்ணு சார் நான்… என்னால உங்களுக்கு ஒரு சின்ன ஹெல்ப் கூட பண்ண முடியாது….
ராபர்ட் : நல்லது செய்யணுங்கற மனசு இருந்தா போதும், வழியை கடவுள் காட்டுவாரு.
பெண் : நன்றி சார்… எனக்கு.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. இதுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்னே தெரியல.. கையே இல்லை.. அப்புறம் என்ன கைமாறு…
ராபர்ட் : அப்படியெல்லாம் பேசாதீங்க, கடவுள் உங்களை சிறகில வைச்சு பாதுகாப்பாரு… ஐம் ரியலி பிரவுட் ஆஃப் யுவர் ஃபாதர்… அண்ட் ,, அவர் உயிரோட இருக்கும்போ அவரை பாக்க முடியலையேன்னு தான் வருத்தமா இருக்கு… பட்… பெட்டர் லேட் தேன் நெவர்….
பெண் : ஆமா சார்… காட்ஸ் பிளான்… தேங்க்யூ சார்.
*