Posted in Articles

அதிசயக் குழந்தை

அதிசயக் குழந்தை
*

பிள்ளைத்தோப்பு !

இராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஒரு சிறு கிராமம். அங்குள்ள சூசையப்பர் ஆலயத்தில் உபதேசியராக இருந்த அந்தோணி நள்ளிரவில் திடுக்கிட்டு விழித்தார். முகமெங்கும் திட்டுத் திட்டாய் வியர்வை.

இயேசுவின் தந்தை யோசேப்புவைக் கனவில் கண்ட பதட்டமும், பரவசமும், பயமும் அவரது முகத்தில் அப்பியிருந்தது. மீண்டும் ஒரு முறை யோசேப்பு கனவில் சொன்னதை மனதில் ஓட்டினார்.

‘நீ இராமன் புதூர் போ, அங்குள்ள பெண்ணிடம் உனக்கு ஒரு குழந்தைச் செல்வம் கிடைக்கும் எனச் சொல்’ ! இது தான் செய்தி !

இராமன் புதூர் எங்கே இருக்கு ? எந்தப் பெண்ணிடம் போய் சொல்ல வேண்டும் ? குழந்தைச் செல்வத்திற்காக அவள் ஏங்கிக் கொண்டிருக்கிறாளா ? அவருக்கு ஏகப்பட்ட குழப்பம். உண்மையிலேயே கனவா ? இல்லை வெறும் நினைப்பா ? கடவுளே பேசுகிறாரா ? இல்லை என் ஆழ்மன வெளிப்பாடா ?

அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் நிம்மதியாய்க் கிடந்த மனைவியை உலுக்கினார் அந்தோணி

‘என்னங்க என்னாச்சு ?” அவர் பதட்டத்துடன் எழுந்தார்.

‘ஒரு கனவு கண்டேன். அதுல சூசையப்பர் வந்து இராமன் புதூர்ல ஒரு பெண் கிட்டே போய் ஒரு செய்தி சொல்லச் சொன்னாரு’

‘ஓ… கடவுளே ! என்ன ஆச்சரியம்… அப்போ கண்டிப்பா போய் சொல்லுங்க’

‘ஆனா யார்கிட்டே… ? எப்படி ? எனக்கு இடம் கூட தெரியாதே ?’

‘செய்தி சொன்னவர் வழிகாட்டுவாரு.. இப்போ தூங்குங்க’ என்றபடி மனைவி மீண்டும் தூக்கத்துக்குத் தாவினார். மனைவியின் பேச்சு அவருக்கு ஆறுதலாய் இருந்தது. வேலை தந்தவர் வழியும் காட்டுவார். ஆனால் உண்மையிலேயே கடவுள் தான் பேசியதா ? இல்லை ஏதாச்சும் பிரமையா ? மறுபடியும் கடவுள் பேசுவாரா ? எனும் சிந்தனைகளோடு மீண்டும் தூங்கினார் அந்தோணி.

அதிகாலை ஐந்து மணி.

‘அந்தோணி.. அந்தோணி.. எழும்பு… இன்னிக்கு சண்டே… கோயிலுக்கு போய் மணி அடிச்சுட்டு… சீக்கிரம் போய் விஷயத்தைச் சொல்லு. “ மீண்டும் கனவு அவருக்குள் எழும்ப சட்டென விழித்தார் அவர். இப்போது அவருக்கு நம்பிக்கை வந்து விட்டது. பேசியது கடவுள் தான். ஏதோ ஒரு பெண்ணுக்கு இந்த செய்தி மிக முக்கியமாய் இருக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது.

உடனடியாக எழுந்து, குளித்து ஆலயத்தில் மணி அடித்து விட்டு செபித்தார். அங்கிருந்து ரோட்டுக்கு வரவும் சொல்லி வைத்தாற்போல ஒரு பேருந்து வந்து நிற்கிறது.

நாகர்கோவில் – நெற்றிப் பொட்டில் மங்கிய வெளிச்சத்தில் பெயர்ப்பலகை.

‘கண்டக்டரே இந்த பஸ்ஸு.. இராமன் புதூர் போவுமா ?’

‘வாரும்…வாரும்..போவும்…’

உள்ளே ஏறிய அந்தோணி மீண்டும் கண்டக்டரிடம் சொன்னார். ‘இராமன் புதூர் வந்ததும் கொஞ்சம் சொல்லுங்க. எனக்கு இடம் தெரியாது.. இதான் முதல் தடவை’

சரி சொல்றேன்…

அந்தோணி சன்னலோரமாகச் சாய்ந்து தனது கனவை நினைத்துக் கொண்டிருந்தார்.

*

அதே நேரத்தில் இராமன் புதூரில் அந்தக் குடும்பம் துயரத்தின் கரையில் ஒதுங்கிக் கிடந்தது. அந்த வீட்டின் முன்னால் இருந்த திண்ணையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார் அந்தப் பெண்

மரியேந்திரம்.

மரியேந்திரத்தின் கணவர் குருசு மிக்கேல் இராயப்பன்.

இராயப்பனின் வாழ்க்கை சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடந்தது. அவருக்கு முதலில் ஒரு திருமணமாகி ஆனந்தமான வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஒரு குழந்தை பிறந்தது. அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அதை கொஞ்சோ கொஞ்சென கொஞ்சி மகிழ்ந்தார்கள்.

விதி விளையாடியது. பால்ய வயதாக இருக்கும்போதே அந்தக் குழந்தை இறந்து போனது. அவர்கள் அதிர்ச்சியின் உச்சியில் எறியப்பட்டார்கள். இதுவே துயரத்தின் உச்சம் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அதுவே துயரத்தின் துவக்கப் புள்ளி என்பதை அவர்கள் அறியவில்லை.

அதன் பின் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றாய் இறக்கத் தொடங்கின.

இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு. ஏழு, எட்டு , ஒன்பது !!!!

ஒன்பது குழந்தைகளும் பிறந்து சில நாட்களிலோ, சில மாதங்களிலோ இறந்து விட, அதிர்ச்சியைத் தாங்க முடியாத மனைவியும் இறந்து போனார்.

வாழ்க்கையில் கஷ்டம் வரலாம், ஆனால் கஷ்டமே வாழ்க்கையாய் வரக்கூடாது என்பார்கள் இல்லையா ? அது இராயப்பனுக்குத் தான் பொருந்தும். அவர் பித்துப் பிடித்தவர் போல் ஆனார். சித்தம் கலங்கியவர் குடிப் பழக்கத்திலும் விழுந்தார்.

நாகர்கோவில் பகுதியில் அவருக்கு நிறைய சொத்துகள் இருந்தன, ஒவ்வொன்றாய் விற்றுக் குடித்தார்.

உறவினர்கள் அவரை நல்வழிப்படுத்த இரண்டாவதாய் ஒரு பெண்ணை மணம் முடித்து வைத்தார்கள். அவர் தான் மரியேந்திரம்.

‘அவனுக்க குடும்பத்துலயா ? அங்கே வாரிசு நிலைக்காதுலே’ என பலரும் தடுத்தார்கள். ஆனால் மரியேந்திரத்தின் ஏழ்மை நிலை அவரைத் திருமணத்தில் இணைய வைத்தது.

இனிமேலாவது இனிய வாழ்க்கை தொடங்குமா எனும் எதிர்பார்ப்போடு வாழ்க்கையை ஆரம்பித்தவர்களுக்கு சோதனைகளின் இடி தொடர்ந்து விழுந்தது.

முதலில் பிறந்த குழந்தை இறந்தே பிறந்தது. மரியேந்திரம் அதிர்ந்தார். ஆனாலும் மனசைத் தேற்றிக் கொண்டு இறைவனின் பாதத்தில் அழுது புலம்பினார். கடவுள் பக்தி அதிகம் இருந்த அவருக்கு, சின்ன வயதிலேயே சூசையப்பர் மேல் அன்பு அதிகமாகவே இருந்தது.

இரண்டாவது குழந்தை பிறந்தது. இறந்தது !!

மூன்றாவது குழந்தை பிறந்தது !!! குப்புறப் படுத்தது

தவழ்ந்தது

நடந்தது !

அப்பாடா.. இனிமேல் பிரச்சினை இல்லை என நினைத்துக் கொண்டிருந்தவர் வாழ்க்கையில் இரண்டாவது வயதில் குழந்தைக்கு நோய் வந்தது. என்ன நோய் என்றே மருத்துவர்களால் கண்டு பிடிக்க முடியாத நோய்.

இராஜாக்கமங்கலத்தில் மருந்து வாங்கி, அருகிலேயே இருந்த அந்தோணியார் கோயிலில் இரவும் பகலும் குழந்தையைக் கிடத்தி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் மரியேந்திரம்.

எல்லா பிரார்த்தனைகளும் ஆமென் என முடியும், ஆனால் ஆம் என முடிவதில்லை. அந்தக் குழந்தையும் இறந்து போனது.

மரியேந்திரம் அதிர்ச்சியின் உச்சியிலும், துயரத்தின் உச்சியிலும் விழுந்தார். இராயப்பனின் நிலமை இன்னும் மோசம். தொடர்ந்து பன்னிரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்த மாபெரும் துயரத்தில் அவர் துடியாய்த் துடித்தார். அவருக்கு வயது அறுபது ஆயிருந்தது.

இனிமேல் ஆலயத்துக்குப் போவதில்லை என முடிவெடுத்து, தூணில் சாய்ந்தபடி அழுது கொண்டிருந்தார் மரியேந்திரம்

*

இராமன் புதூர் வந்துச்சு இறங்கு.. மனசுக்குள் ஒரு குரல் ஒலிக்க, திரும்பி கண்டெக்டரைப் பார்த்த அந்தோணி கேட்டார்.

‘கண்டக்டரே ஊரு நெருங்கிடுச்சா’

‘அட.. ஆமாங்க.. மறந்துட்டேன்.. அடுத்த ஸ்டாப்பு தான் நீங்க இறங்கணும்’ கண்டக்டர் சொல்ல அந்தோணி புன்னகைத்தார்.

கீழே இறங்கிய அந்தோணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீ வாங்கினார். டீயைக் குடித்துக் கொண்டே கடைக்காரரைப் பார்த்தார். என்ன கேட்பது எப்படிக் கேட்பதென தெரியவில்லை.

‘என்ன ஓய்.. ஏதோ கேக்க நினைக்கிறீரு.. என்ன விஷயம் ?’ கடைக்காரரே கேட்டார்.

“இல்ல.. நான் இராஜாக்கமங்கலத்துல இருந்து வரேன்.. இங்கே குழந்தையில்லாத ஒரு பெண்ணை பாக்கணும் ?”

குழந்தை இல்லாம ஒரு பொண்ணா இருப்பாங்க ஊர்ல, எத்தனையோ பேர் இருப்பாங்க. நீங்க யாரை தேடறீங்க ? அப்படி ஒரு பதிலைத்தான் அந்தோணி எதிர்பார்த்தார். ஆனால் கடைக்காரரோ

‘அதோ தெரியுதுல்ல.. அந்த வீடு தான். அங்கே ஒரு பொண்ணு அழுதிட்டிருப்பா.. போய் பாருங்க’ என்றபடி அடுத்தவர்களுக்கு டீ போட ஆரம்பித்தார். அந்தோணியின் வியப்பு அதிகரித்தது.

அந்த வீட்டை நோக்கி நடந்தார்.. வீட்டை நெருங்கினார்.

திண்ணையிலிருந்த தூணில் சாய்ந்தபடி இருந்தார் மரியேந்திரம். கண்கள் கலங்கியிருந்தன.

‘அம்மா…. அம்மா’

‘சொல்லுங்க…. நீங்க’ மரியேந்திரம் திரும்பினார்.

‘உங்களுக்கு ஒரு குழந்தை கிடைக்கும்மா… ‘

“ம்ம்.. குழந்தையா ? எனக்கு ஆறுதல் சொல்றீங்களா ? துக்கம் விசாரிக்கிறீங்களா ?”

“இல்லை எனக்கு நீங்க யாருன்னே தெரியாது. இராஜாக்கமங்கலத்துல இருந்து வரேன். சூசையப்பர் உங்க கிட்டே சொல்ல சொன்னாரு”

சூசையப்பர் எனும் பெயரைக் கேட்டதும் நிமிர்ந்தார் மரியேந்திரம். கண்ணில் இருந்த கலக்கம் தீரவில்லை ஆனாலும் ஒரு நம்பிக்கை ஒளி

‘எ..என்ன சொன்னாரு’

‘உங்களுக்கு ஒரு குழந்தை கிடைக்கும்ன்னு சொல்ல சொன்னாரு’

மரியேந்திரம் கண்ணீர் விட்டார். தனது கதையை அழுதபடி சொல்லி முடித்தார்.

‘அழாதீங்கம்மா.. கடவுள் ஒரு குழந்தையை தருவேன்னு சொன்னா, தீர்க்க ஆயுசோட தான் தருவாரு.. கவலைப்படாதீங்க. இப்போ நீங்க சர்ச்சுக்கு போங்க, இன்னிக்கு சண்டே’

‘ம்ம்.. நான் இனிமே என் குழந்தையோட தான் சர்ச்சுக்கு போவேன். அப்படி தான் கடவுள் கிட்டே சொல்லியிருக்கேன். வலியும், இயலாமையும், எதிர்பார்ப்பும் எல்லாம் சுழன்றடிக்க மரியேந்திரம் சொன்னார்”

‘சரிம்மா.. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். கண்டிப்பா நீங்க மகிழ்ச்சியா இருப்பீங்க’ என வாழ்த்தியபடி அந்தோணி கிளம்பினார்.

*

நாட்கள் நகர்ந்தன. மரியேந்திரம் மீண்டும் தாய்மை நிலையில் வந்தார். இந்த முறை அவருக்கு அதிக நம்பிக்கை இருந்தது. இது கடவுளின் பிள்ளை எனும் விசுவாசம் கருவுடன் சேர்ந்து வளர்ந்தது.

குழந்தை பிறந்தது, பெண் குழந்தை !

ஆனால் குழந்தை அழவும் இல்லை, நகரவும் இல்லை. உயிர் மட்டும் இருந்தது.

கடவுள் தந்ததும் கடந்து போகுமோ என எல்லோரும் திகைத்தார்கள். இது கண்டிப்பா பொழைக்காது என்றார்கள் ஊரார். இந்த குடும்பத்துல வாரிசு தங்காது, சர்ப்ப தோஷம் உண்டு என்றார்கள் வேடிக்கை பார்த்தவர்கள்.

அப்போது அங்கே வந்தார் ஒரு வைத்தியர். இந்த குழந்தைக்கு நான் மருந்து தருகிறேன் என்றார். வெள்ளை குஞ்ஞுமுத்தை அரைத்து சாறாக்கி, அதை வடிகட்டி குழந்தைக்குக் கொடுத்தார்.

உண்மையில் அது விஷம் ! அதுவே மருந்து என அந்த வைத்தியர் நம்பினார். மூன்று நாட்கள் தொடர்ந்து அந்த மருந்தைக் கொடுத்தபின் அந்தக் குழந்தை அழுதது !

தாயும் தந்தையும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

யோசேப்பு சொல்லியனுப்பி, அந்தோணி வந்து தகவல் சொன்ன, அந்தக் குழந்தைக்கு மேரி புஷ்பம் என பெயரிட்டனர். குழந்தை பிறந்தபோது இராயப்பன் அறுபது வயதைக் கடந்திருந்தார். எனவே எல்லோரும் அந்தக் குழந்தையை ‘கிழவனுக்கு மவ’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். அவருக்கு அவள் பதின்மூன்றாவது குழந்தை. மரியேந்திரத்திற்கு நான்காவது குழந்தை.

நல்ல ஆயுளுடனும், இறை பக்தியுடனும் வாழும் அந்தக் குழந்தைக்கு இன்று வயது எண்பத்து ஒன்று !

அவர் தான் எங்கள் அம்மா !

*

சேவியர்.

Posted in Articles

எலியாவைப் போஷித்த காகம் (சிறுவர் பேச்சுப் போட்டி )

எலியாவுக்கு உணவளித்த காகம்

*

எல்லாருக்கும் வணக்கம். நமக்கெல்லாம் காக்கா வடையை தூக்கிட்டு போன கதை தெரியும். அது பாட்டி கிட்டேயிருந்து காக்கா ஆட்டையைப் போட்ட வடை. ஆனா இன்னிக்கு நான் சொல்லப் போற கதை காக்கா அப்பமும், இறைச்சியும் கொண்டு போன கதை ! 

எலியா இறைவாக்கினர் இருக்காருல்லயா, அவர் ஆகாப் மன்னன் கிட்டே போய் சொன்னாரு, ‘இனி நான் சொன்னாதான் மழை இங்கே பொழியும்’ ந்னு. காரணம் என்னன்னா ஆகாப் உண்மைக் கடவுளை விட்டுட்டு வேற காட்ஸை வழிபட்டு வந்தான். 

ஆகாபுக்கு செம கோபம். மழை பொழியறதுக்கு மழைக்கடவுள் உண்டுன்னு நம்பினவன் ஆகாப். எலியா அந்த கடவுளுக்கே சவால் விடறாரான்னு இவருக்கு செம கோவம். கடவுள் எலியா கிட்டே சொன்னாரு, நீ எஸ்கேப் ஆகி ஓடிப் போய் யோர்தானுக்கு அப்புறம் இருக்கிற கெரீத்து ஓடையருகே ஒளிஞ்சுக்கோ. அங்கே உனக்கு சாப்பாடு தர காகங்கள் கிட்டே சொல்லியிருக்கேன்னு சொன்னாரு.

பாருங்க, முதல்ல காகங்களுக்கு வேலை குடுத்துட்டு எலியாவை அனுப்பறாரு கடவுள். எலியா சொன்ன பேச்சை தட்டமாட்டாருன்னும் தெரியும். எலியாவுக்கு என்ன தேவைன்னும் தெரியும். எலியா கடவுள் சொன்னபடி போய் ஒளிஞ்சுகிட்டாரு. 

காகங்களும் இப்போ இருக்கிற டன்ஸோ, ஸ்விகி மாதிரி சாப்பாடை தூக்கிட்டு கெரீத்துக்கு போய் அவருக்கு சாப்பாடு குடுக்கும். அதுவும் டெய்லி டூ டைம்ஸ் சாப்பாடு அவருக்கு போகும். ஜி.பி.எஸ் இல்லாத காகத்துலயே அவ்ளோ ஆக்யுரேட்டா அது போய் குடுத்திருக்கு. உலகத்துலயே முதல் ஸொமோட்டோ கேரியர்ஸ் காகங்கள் தான் போல, இல்லையா ? 

கடவுள் முதல்ல காகத்துக்கு நல்லா சாப்பாடு போட்டுட்டு தான் அனுப்பியிருப்பாருன்னு நினைக்கிறேன். ஏன்னா, ஒருத்தனை பட்டினியா போட்டுட்டு இன்னொருத்தனுக்கு சாப்பாடு குடுத்து அனுப்ப மாட்டாருன்னு நான் நினைக்கிறேன்.  இந்த சின்சியர் காகங்களோட ஹெல்ப் நால எலியாவுக்கு சாப்பாட்டுப் பிரச்சினை இல்லாம இருந்துச்சு.

கெரீத்து ஓடையில இருந்த தண்ணீரை அவரு குடிச்சுகிட்டாரு.  கடவுள் அங்கேயிருந்து போக சொல்ற வரைக்கும் அவரு அங்கேயே தான் இருந்தாரு.  

இந்த கதையில இருந்து என்ன கத்துகிட்டேன்னா, 

ஒண்ணு, கடவுள் ஒரு விஷயத்தை செய்ய சொல்றாருன்னா, அதுக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் நமக்காக ஏற்கனவே செஞ்சு வெச்சிருப்பாரு. நாம அவரை டிரஸ்ட் பண்ணி காரியத்துல இறங்கினா போதும்.

ரெண்டு, கடவுள் அதிசயமான வழியில நமக்கு சாப்பாடு தருவாரு. வானம் உணவு தரலாம், இல்லேன்னா காகம் கூட உணவு தரலாம். 

மூணு, கடவுளோட திட்டத்தில அழகிய மானுக்கு பங்குண்டு, யாரும் கண்டுக்காத காக்காக்கும் பங்கு உண்டு. 

ஆங்.. கடைசியா ஒண்ணு. எலியாவை போஷித்த காகம்ன்னு நாம சொல்றதை விட, காகத்தின் மூலமாக எலியாவைப் போஷித்த கடவுள் – ந்னு சொல்றது தான் சரி. தோணினதை சொல்லிட்டேன்.. தப்புன்னா மன்னிச்சுக்கோங்க.

நன்றி

Posted in கிறிஸ்தவ இலக்கியம், Bible People, Sunday School

நல்ல சமாரியன் ( சிறுவர் பேச்சுப் போட்டி )

( சிறுவர் கதை )

*

எல்லாருக்கும் வணக்கம். நான் இன்னிக்கு ஒரு கதை சொல்லப் போறேன். அது ஒரு ஆக்‌ஷன் கதை. 

எருசலேம்ல இருந்து எரிகோவுக்கு வியாபாரி ஒருத்தர் போயிட்டிருந்தாரு. அந்த ரூட்டு ரொம்ப டேஞ்சரான ரூட். அடிக்கடி திருடங்க வந்து டிராவலர்ஸை எல்லாம் புடிச்சு, அடிச்சு, இருக்கிறதை எல்லாம் புடுங்கிட்டு கொன்னுடுவாங்க. இந்த மனுஷனுக்கு வேற வழி இல்ல. அதனால அந்த ரூட் வழியா போயிட்டிருந்தாரு. கையில வேற பணம் இருக்கு. 

அவரோட போதாத காலம், ஒரு திருட்டு கும்பல் கிட்டே மாட்டிகிட்டாரு. அவங்க நிறைய பேரு இருந்தாங்க. இவரை அடிச்சு தொவைச்சு காய போட்டுட்டு, இருந்ததை எல்லாம் அள்ளிட்டு போயிட்டாங்க. ஐயோ யாராச்சும் வந்து காப்பாத்துவாங்களான்னு இவரு குற்றுயிரும் குலை உயிருமா அங்கே கிடந்தாரு.

அப்போ அந்தப் பக்கமா ஒரு குரு வந்தாரு. அப்பாடா நம்ம பிரச்சினை தீந்துது வரது ஒரு குருன்னு இவரு நினைச்சிருக்கலாம், தெரியல. ஆனா குரு சைடு வாங்கி ஓடியே போயிட்டாரு. ஏன்னா இரத்தத்தை தொட்டா அது தீட்டாயிடும், அப்புறம் அவங்க உடனே கோயிலுக்கு போக முடியாது. 

அடடா குரு போயிட்டாரான்னு நினைச்சுட்டே கிடந்திருப்பாரு அந்த அடிபட்ட யூத மனுஷன். அப்போ வந்தாரு லேவியர் ஒருத்தார். அப்பாடா குரு தான் குடு குடுன்னு ஓடிட்டாரு இவர் கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாருன்னு அடிபட்டவர் நினைச்சிருக்கலாம். பட்… பேட் லக். லேவியும் தாவித் தவி ஓரமா ஓடியே போயிடாரு. 

அப்புறம் வந்தாரு ஒரு சமாரியன். நல்லா இருக்கிற காலத்திலயே நெருங்கி வரமாட்டாங்க. சாகக் கிடக்கும்போ இவனெல்லாம் எப்படி என் பக்கத்துல வருவான்னு அவரு நினைச்சிருக்கலாம். ஆனா நடந்ததே வேற. அந்த சமாரியன் ஓடிப் போய் அந்த மனுஷனை தூக்கி, அவனுக்கு ஃபஸ்ட் எய்ட் எல்லாம் குடுத்து, தன்னோட அனிமல் மேல ஏத்தி சத்திரத்துக்கு கூட்டிட்டு போனாரு. அதோட விடல, சத்திரக் காரனுக்கு பணமும் குடுத்து, இனி தேவைப்பட்டாலும் தருவேன்னு சொல்லிட்டு போனாரு. 

அந்த யூதன் ஷாக் ஆயிட்டான். என்னடா நடக்குது இங்கே ?  நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்கன்னு நினைச்சவங்க ஓடியே போக, ஓடிப் போவான்னு நினைச்சவன் ஹெல்ப் பண்றானே அப்படின்னு நினைச்சாரு.

நம்ம அயலான் யாருன்னா அந்த ஹெல்ப் பண்ணினவன் தான். அப்படின்னு இயேசு சொல்றாரு. 

இதுல இயேசு என்ன சொல்ல வராருன்னா, நாம சாதி மதம் தீட்டு அது இது லொட்டு லொசுக்கு எல்லாம் பாக்காம எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணணும். சர்ச்சுக்கு போறேன், கன்வென்ஷனுக்கு போறேன்னு ஓடறதை விட, தேவைப்படற ஒருத்தனுக்கு ஹெல்ப் பண்ண போறது தான் உசத்தின்னு சொல்றாரு.

புரிஞ்சுதா ? நாமும் அப்படியே செய்வோமா ?

நன்றி

*

Posted in Articles

ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர் தின வாழ்த்துகள்
+

இந்த
ஆசிரியர்கள் மட்டும்
இல்லையென்றால்,
அறிவின் ஒரு பாகம்
அறியப்படாமலேயே போயிருக்கும்.

ஆசிரியர்கள் மட்டும்
இல்லையென்றால்,
அகரத்தின் முதற்புள்ளி
அறிவிக்கப்படாமலேயே போயிருக்கும்.

ஆசிரியர்கள் மட்டும்
இல்லையென்றால்
இதயத்தின் ஒரு பாதி
இருட்டாகவே இருந்திருக்கும்.

இவர்கள்,
நம்
குணங்களின் ஓரங்களையும்
கூர்தீட்டியவர்கள்.
நம்
மனங்களின் மையங்களில்
மைதீட்டியவர்கள்.

நாம்
வரம்போடு நடக்க‌
கையில்
பிரம்போடு நடந்தவர்கள்

நாம்
வழியோடு நடக்க‌
வலியோடு தொடர்ந்தவர்கள்.

அன்னையின் அரவணைப்பும்
தந்தையின் கண்டிப்பும்
ஆசானின் அறிவுரையும்
அறிஞனின் அறவுரையும்
இரண்டறக் கலந்த‌
இனியவரல்லவா ஆசிரியர்கள்.

இவர்கள் விதைத்த‌
கல்விப் பருக்கைகள் தானே
நமக்கு
உயரிய இருக்கைகளை
உரியதாக்கி இருக்கிறது.

இவர்கள் தொடுத்த‌
அறிவின் மலர்கள் தானே
நமக்கு
வெற்றியின் மாலைகளை
பெற்றுத் தந்திருக்கிறது.

வறுமையின்
வாய்க்கால்களில் நடந்தாலும்
தலைமுறையின்
கனவுகளோடு
தொடர்பவர்களல்லவா ஆசிரியர்கள்.

நமது வெற்றியை
தனது
வெற்றியாய்க் கொண்டாடும்
அற்புதங்களல்லவா ஆசிரியர்கள்.

கிளைகள்
பூக்கள் விடுக்கையில்
வேர்களுக்கும் விழா நடக்குமென‌
இவர்களைக் கண்டு தானே
விளங்கிக் கொண்டோம்.

மாணவர்கள்
ஆசிரியர்களைக்
கொண்டாடுகையில்
சமூகம் வளர்கிறது.

மாணவர்கள்
ஆசிரியர்களைக்
கொன்றாடுகையில்
தேசமே சாய்கிறது.

ஆசிரியர்களை
வானம் போன்றவர்கள் !

வானத்தை எப்போதும்
உயரத்தில் வைப்போம்
நேசத்தை எந்நாளும்
இதயத்தில் தைப்போம்.

அனைத்து ஆசிரியர்களுக்கும்
இனிய‌
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

+
சேவியர்

Posted in Articles

தச்சன் மகன் – நூல் விமர்சனம்

துருப்பிடிக்காத
நெருப்பு எழுத்துகள்

ஆசிரியர் : பேராயர் ஜோசப் மோகன் குமார்

கவிஞரின் கவிதைத் தலைப்பு ஒன்றையே என் விமர்சனத்தின் தலைப்பாக வைக்கிறேன். இல்லை இல்லை, இது விமர்சனம் அல்ல பரவசத்தின் பதிவு. ஒரு கவிதை ஆழியில் மூழ்கி, கவிதைக் கலங்கரையால் கரையேறிய அனுபவத்தின் குறிப்பு.

பேராயர் சிலுவைச் சித்தர் கவிஞர் ஜோசப் மோகன் குமார் அவர்களின் ‘தச்சனின் கதை’ என்னை செதுக்கியது. அவரது படைப்புகளில் மிக உயர்ந்த இடத்தில் இது வந்து அமர்கிறது.

கவிஞரின் தச்சனின் கதை மின் நூலாக வந்த போது படிக்க முடியவில்லை. எனவே அச்சுப் பதிப்பாக வந்ததும் அவசர அவசரமாய் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். வியப்பின் எல்லைக்கே என்னை எறிந்தன கவிதைகள். பொதுவாக எந்த கவிதைப் புத்தகமானாலும் ஒரு சில நாட்களில் படித்து முடித்து விடுவேன். ஆனால் தச்சனின் கதையை அப்படிக் கடக்க முடியவில்லை.

ஒரு தச்சன் எப்படி ஒரு பொருளை இழைத்து இழைத்து கொஞ்சம் கூட துருக்கள் இல்லாமல், குறை இல்லாமல் செதுக்குவானோ அந்த அளவுக்கு மிக மிக அற்புதமாக நூலைத் தமிழால் செதுக்கியிருக்கிறார் கவிஞர். இந்த நூலிலுள்ள கவிதைகளின் தலைப்புகளை மட்டும் எடுத்தாலே ஒரு மிகப்பெரிய கவிதைப் புதையலாய் அது அமைந்துவிடும்.

விமர்சனம் எழுதும் போது குறிப்பிடவேண்டுமென காகிதத்துக்கே வலிக்காத வகையில் மென் பென்சிலால் கோடிட்டுக் கொண்டே வந்தேன். கடைசியில் பார்த்தால், கோடிடாத வரிகளைக் கண்டுபிடிப்பதே அபூர்வமாகிப் போயிற்று அப்படி ஒவ்வொரு கவிதையும் என்னைப் புரட்டிப் போட்டன.

வானத்தைக் கிழித்த வக்கிர வல்லூறுகள், தைலம் பூசிய தாமரை மலர், வானத்திலிருந்து விழுது விட்ட வசனங்கள், வெளிநடப்பு செய்யும் வியாதிகள், வானக் கஜானாவின் வற்றாத பொக்கிஷம், மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மழைவானம் என இவர் தேர்ந்தெடுத்திருக்கின்ற தலைப்புகளே தலைவன் புகழை உரக்கச் சொல்கின்றன.

நிர்மலா சுரேஷின் தைலச் சிமிழும் தச்சன் மகனும், தந்தை வின்செண்ட் சின்னதுரை அவர்களின் படைப்பு, கவியரசரின் இயேசு காவியம், இயேசு மாகாவியம், என எனக்குத் தெரிந்து தமிழில் வெளியான அத்தனை ‘இயேசுவின் வாழ்க்கை’ கவிதை நூல்களையும் படித்திருக்கிறேன். நானும் இயேசுவின் கதை : ஒரு புதுக்கவிதைக் காவியம் என்றொரு நூலையும் எழுதியிருக்கிறேன். எல்லா நூல்களையும் விட மேலானதாக நான் ‘தச்சனின் கதை’ எனும் நூலை தைரியமாகச் சொல்லுவேன்.

முதலாவதாக, படைப்பாளியே பேராயராகவும் இருப்பதால் அவருடைய வரிகள் ஒவ்வொன்றிலும் ஆன்மிக அழுத்தம் இருக்கிறது. படைப்பாளியே சிவப்புச் சித்தாந்த வாதியாய் இருப்பதால் இயேசுவின் வாழ்க்கையிலுள்ள மனிதநேயக் கூறுகளை கவனமாய்ப் பதிவு செய்ய முடிகிறது. படைப்பாளி சிறந்த கவிஞனாய் இருப்பதால் தனது இலக்கியச் செழுமையை இறக்கி வைக்க முடிந்திருக்கிறது.

இந்த நூலின் எந்த ஒரு பக்கத்தைப் புரட்டினாலும் அதில் குறைந்த பட்சம் ஐந்து அற்புத வரிகளைக் காண முடியும் என்பது இந்த நூலில் மட்டுமே காணக் கிடைக்கும் வியப்பு. இந்த நூலிலுள்ள கவிதைகளிலிருந்து ஹைக்கூக்களை தனியே பிரித்தெடுத்தால் ஒரு தனி நூலே போடலாம். நூல் முழுக்க கவிஞர் உவமைகளை கையாண்டிருக்கும் விதம் சிலிர்ப்பூட்டுகிறது.

வைரமுத்து தனது படைப்பில் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையே ஒரு வியப்பை ஒளித்து வைப்பார், அல்லது எதிர்பாரா முரணை முடிந்து வைப்பார், அல்லது சிந்திக்காத ஒரு தளத்திலிருந்து ஒரு உவமையை எடுத்து வைப்பார். பேராயரின் கவிதைகளும் அப்படியே பயணிக்கின்றன, கூடவே அவர் எடுத்து வைப்பவை எல்லாம் ஆன்மிகத்தோடு தொடர்புடையவையாய் இருக்கின்றன என்பது கூடுதல் அழகு.

செங்கோலை லத்தியாக்கிய ஏரோது – என யாரால் சிந்திக்க முடியும் ? தாசிகளின் கரங்களில் தாயக்கட்டையான ஏரோது – என ஒருவனுடைய அத்தனை குணாதிசயங்களையும் எப்படி ஒற்றை வரிக்குள் அடக்க முடியும் ? கவிஞரின் கவிதை வரிகள் ஆழியை எடுத்து சிப்பிக்குள் சிறைவைக்கின்றன. புயலைப் பிடித்து வரப்புக்குள் இறுக்கி வைக்கின்றன.

தாசியின் தைல அபிஷேகம் என்னை நீண்ட நேரம் மீள் வாசிப்புக்கு உட்படுத்திய கவிதைகளில் ஒன்று. பிறர் பசிக்கு பிய்க்கப்படும் ரொட்டித் துண்டு – என அவளை கவிஞர் காட்சிப்படுத்துகிறார். இளமையை விற்ற இருட்டு மின்மினி என அவளது இயலாமையைப் பதிவு செய்கிறார். அவளது கண்ணீர் நதியின் கால்களை நனைத்தது என தொடர்கிறார். கடைசியில் கசங்கிய காகிதமாய் விழுந்து வெள்ளை மல்லிகையாய் எழுந்தாள் என முடிக்கிறார்.

முத்தின் முதுகில் நத்தை என்று சிலுவை சுமக்கும் இயேசுவையும், இரவில் பாடம் பயின்று பகலை அடக்கம் செய்ய வந்தவர் என நிக்கோதேமுவையும் என ஒவ்வொருவரையும் அவரவர் இயல்புகளோடு மிக மிக உன்னதமான வார்த்தைகளால் சரளமாக அலங்கரிக்கிறார் கவிஞர். உண்மையிலேயே எனக்குப் பிடித்த வரிகள் என எழுத ஆரம்பித்தால் ஒரு தனி நூலே போடவேண்டியிருக்கும்.

எனது பட்டியலில், இயேசுவின் வாழ்க்கை வரலாறு நூல்களில் இன்றும் நம்பர் 1 இடத்தில் வைக்கும் நூல் ‘புட்லர் ஆஸ்லான் எழுதிய த கிரேட்டஸ்ட் ஸ்டோரி எவர் டோல்ட்’ நூல் தான். தமிழ்க் கவிதைகளில் இனிமேல் எனது பட்டியலில் நம்பர் 1 தச்சன் மகன் தான்.

எழுந்து நின்று கை தட்டுவதை விட ஒரு ரசிகனாக இந்த நூலுக்கு நான் மரியாதை செய்து விட முடியாது. அற்புத படைப்புக்காய் தலை வணங்குகிறேன். கிறிஸ்தவ இலக்கிய உலகில் எல்லோரும் படித்திருக்க வேண்டிய எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு நூலாக நான் இதைக் கருதுகிறேன்.

வாசியுங்கள்
நேசியுங்கள்

அன்புடன்
சேவியர்