Posted in Articles

சிறுவர் ஸ்பெஷல் : மன்னிப்பு

ஏசா : நான் தான் ஏசா… என் தம்பி யாக்கோபு எனக்கு எதிரா பல விஷயங்கள் செஞ்சான். ஆனாலும் அவன் திரும்பி வந்தப்போ நான் அவனை மன்னிச்சு ஏத்துகிட்டேன். மன்னிப்பு ரொம்ப நல்லதுல்லயா ?

தந்தை : நான் தான் கெட்ட குமாரனோட அப்பா. என் இளைய பையன் சொத்தெல்லாம் வித்து கஷ்டப்பட்டான். அப்புறம் மனம் திரும்பி வந்தப்போ நான் அவனை அப்படியே ஏத்துகிட்டேன். மன்னிக்கிறவன் தான் மனுஷன் இல்லையா ?

யோசேப்பு : நான் தான் யோசேப்பு. என்னோட சகோதரர்கள் என்னை கொல்ல பாத்தாங்க, குழியில போட்டாங்க, அடிமையா வித்தாங்க. ஆனாலும் நான் அவங்களை மன்னிச்சேன். பெரிய ஆளானப்புறம் அவங்களுக்கே ஹெல்ப் பண்ணினேன். மன்னிக்கிறது தெய்வ சுபாவம் இல்லையா ?

தாவீது : நான் தான் தாவீது. ஒரு பெரிய பாவம் செஞ்சுட்டேன். அது தெரிஞ்சப்புறம் நான் கடவுள் கிட்டே மன்னிப்பு கேட்டேன். கடவுள் அதை மன்னிச்சாரு. தீர்க்கதரிசி நாத்தான் அதை என் கிட்டே சொன்னாரு. கடவுள் கருணை கொண்டு மன்னிக்கிறவர் இல்லையா ?

நினிவே : நான் நினிவே நகரத்துல வாழ்ந்தவன். எங்களை அழிக்கக் கடவுள் திட்டம் போட்டிருந்தாரு. அதை யோனா வந்து சொன்னப்போ நாங்க எல்லாம் அழுது, சாம்பல்ல உக்காந்து, கோணி உடுத்தி செபம் செஞ்சோம். கடவுள் எங்களை. மன்னிச்சாரு. கடவுள் அன்பானவர் இல்லையா ?

திமிர்வாதக்காரன் : நான் ஒரு திமிர்வாதக் காரனா இருந்தேன். நாலுபேரு என்னை கட்டிலோட தூக்கி இயேசு முன்னால இறக்கினாங்க. இயேசு என்னை சுகமாக்கினாரு. அது மட்டுமல்ல, அதை விட பெரிய ஆசீர்வாதமா என் பாவத்தையெல்லாம் மன்னிச்சாரு. கடவுள் வல்லமையுடையவர் இல்லையா ?

கடன்காரன் : நான் தான் கடன் பட்ட ஊழியன். தலைவர் என்னை ஜெயில்ல தள்ள இருந்தாரு. நான் அவருகிட்ட மன்றாடினேன். அவரும் மனம் இரங்கி என்னை. மன்னிச்சாரு. கடவுள் மன்னிப்பை போதிக்கிறாரு இல்லையா ?

பேதுரு : நான் தான் பேதுரு. இயேசுவையே தெரியாதுன்னு மூணு தடவை மறுதலிச்சேன். ஆனாலும் இயேசு என்னை மன்னிச்சு எனக்கு திருச்சபையை கட்டி எழுப்பும் பணியை கொடுத்தாரு. இயேசு மன்னிப்பின் மறு உருவம் இல்லையா ?

பவுல் : நான் தான் பவுல். கிறிஸ்தவர்களை கொல்றது தான் வேலையா இருந்தேன். தமஸ்கு போற வழியில, கடவுள் என்னை ஒளியில சந்திச்சாரு, என் பாவத்தை எல்லாம் நீக்கி என்னை ஒரு அப்போஸ்தலனா மாத்தினாரு. மன்னிப்பு ஒருவனை மனுஷனாக்கும் இல்லையா ?

ஒனேசிமுஸ் : நான் தான் ஒனேசிமுஸ், பிலமோன் என்பவர் கிட்டே அடிமையா இருந்தேன். அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஓடினேன். பவுல் கிட்டே சேர்ந்தேன். பவுல் என்னை மன்னிச்சாரு. என் தலைவரும் என்னை மன்னிக்கச் சொல்லி லெட்டர் போட்டாரு. மன்னிப்பு தான் விடுதலை தரும் இல்லையா ?

ஸ்தேவான் : நான் தான் ஸ்தேவான்.. என்னை எல்லாருமா சேர்ந்து கல்லெறிஞ்சே கொன்னாங்க. ஆனா நான் இயேசுவை கண்டேன். என்னை வெறுத்த எல்லோரையும் நான் மன்னிச்சேன். இயேசுவைப் போல மாற மன்னிக்கணும் இல்லையா ?

இயேசு : நான் தான் இயேசு. என்னிடத்தில் வருபவர்களை நான் புறம்பே தள்ளி விட மாட்டேன். கடைசி நிமிடத்தில் கேட்ட கள்ளனைக் கூட மன்னித்தேன். என்னிடம் மன்னிப்பு கேட்கும் எல்லோரையும் மன்னிப்பேன். நீயும் உன் பாவத்துக்காக மனம் வருந்தி என்னிடம் மன்னிப்பு கேள். உனக்கும் மீட்பைத் தருவேன். 

Posted in Articles, Questions Jesus Asked

இயேசு கேட்ட கேள்விகள் ( vettimani )

விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களாகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும்? 

( மத்தேயு 12 : 34 )

*

வெற்றிமணியின் வாசகர்கள் அனைவருக்கும் வெற்றி மைந்தன் இறைமகன் இயேசுவின் பிறப்பு நாள் நல்வாழ்த்துகள். இயேசுவின் வருகை மனுக்குலத்தின் மீது ஒரு மனிதன் கொள்ள வேண்டிய அன்பை எடுத்துக் காட்டுகிறது. சாதாரண, எளிய குடும்பத்தில் பிறந்த இயேசு சமூக அவலங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும், போலித்தனங்களையும், மதச் சடங்குகளையும் கடுமையாய் எதிர்த்தவர். அதற்காகவே படுகொலை செய்யப்பட்டவர். அவரை நம்புவோர் மீட்படைவார்கள் என்பது கிறிஸ்தவப் பாடம். அவரைப் பின்பற்றுவோர் மனிதநேயத்தை கொண்டிருக்கவேண்டும் என்பது வாழ்வியல் பாடம். இந்த கிறிஸ்மஸ் நாளில் எப்போதும் பிறரோடு அன்பும் நல்லுறவும் கொண்ட வாழ்க்கை வாழ முடிவெடுப்போம். பாலனாம் இயேசுவின் அன்பும், அருளும் உங்கள் இல்லங்களில் நிரம்பி வழியட்டும். 

இயேசுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

பரிசேயர்கள் வழக்கம் போல இயேசுவை நம்பாமல் அவரது செயல்களை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். பேய்பிடித்திருந்த நபரிடமிருந்து இயேசு பேயை ஓட்டியபோது ‘பேய்களின் தலைவனைக் கொண்டு பேயோட்டுகிறான்’ என்றனர். இயேசு அவர்களுடைய சிந்தனைகளை ஊடுவிப் பார்க்கிறார். அவர்களுடைய சிந்தனை நம்பிக்கையின்மையில் நிலைத்திருந்தது, அவர்களுடைய இதயம் வெறுப்பினால் நிரம்பியிருந்தது, அவர்களுடைய உள்ளம் கர்வத்தினால் களவாடப்பட்டிருந்தது. அவர் அவர்களைப் பார்த்துச் சொன்னார்,

“விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களாகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும்? உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்”

விரியன் பாம்புக் குட்டிகள் எப்போதுமே விரியன் பாம்புக் குட்டிகளாகத் தான் இருக்கும். அவை மண்புழுக்களாய் மாறி மண்ணுக்கு வளம் சேர்ப்பதில்லை. மாறாக விஷப் பற்களோடு அலைந்து மனிதரைக் காயப்படுத்தும், கொன்றுவிடும். 

இயேசு பாம்பை உதாரணமாய் எடுக்கிறார. பாம்பு, ஏதேனின் தோட்டத்தில் ஏவாளை வசீகர வார்த்தைகளால் ஏமாற்றியது. அதன் உள்ளத்து இயல்பு அது. விஷ வார்த்தைகளை அது அமிர்தமாய்த் தூவி ஏவாளை ஏமாற்றி இறைவனோடான புனித உறவை உடைத்தது ! வார்த்தைகள் கவனமாய் பயன்படுத்தப்பட வேண்டியவை. 

ஒருவன் தீயவனாக இருந்தால் அவனிடமிருந்து நல்ல வார்த்தைகள் வருவதில்லை. இதயம் முழுவதும் குப்பையைச் சேகரித்து விட்டு, வாயில் நறுமணம் கமழவேண்டுமென நினைத்தால் முடியாது. அப்படியே செயற்கைத் தனமாய் வாசனை பூசிக் கொண்டாலும் அது சற்று நேரத்தில் பல்லிளித்துவிடும். நறுமணம் வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது வாசனையைப் பூசிக் கொள்வதல்ல, குப்பையை அகற்றி விடுவது. 

மாமரம் எப்போதுமே மாங்கனியைத் தான் கொடுக்கும். அதில் என்றைக்குமே பலாப் பழத்தை நாம் பறிக்க முடியாது. அப்படியே பலாப்பழத்தை மாமரத்தில் ஒட்டி வைத்தாலும் அது நிலைக்காது. சிறிது நாட்களிலேயே காய்ந்து போய் அதன் உண்மைத் தன்மை வெளியே தெரியும். மரம் தனது இயல்பை வளப்படுத்திக் கொண்டால் மட்டுமே, கனிகள் சிறப்பாக இருக்க முடியும்.  

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘சட்டியில இருக்கிறது தான் அகப்பைல வரும்’ ! ஒரு மனிதன் தனது உள்ளத்தில் இருப்பதைத் தான் பேச முடியும். சமூகத்தில் நிலவுகின்ற கொடுமைக்கு எதிராகப் பேசுகிறவன் உண்மையிலேயே சமூக அக்கறை உடையவனாக இருப்பான். மத உணர்வுகளைத் தூண்டும்படி பேசிக்கொண்டே இருப்பவனின் உள்ளம் சுயநலத்தினால் நிரம்பியிருக்கும். சாதீய வன்மத்தினால் பேசுபவனின் இதயம் வெறுப்பினால் கறைபடிந்துக் கிடக்கும். ஒருவனுடைய பேச்சு அவனுடைய அடையாள அட்டை. தண்ணி அடித்து விட்டுப் பேசுபவனைக் கவனித்தால் அவன் தனது உள்ளத்தில் இருப்பதை கொஞ்சமும் தயக்கமில்லாமல் கொட்டுவதைக் காணலாம்.  

இன்றைக்கு வாட்சப் குழுக்களில் நிலவுகின்ற உரையாடல்கள் பலருடைய உள்ளத்தை டிஜிடல் திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உள்ளம் அமைதியாய், அன்பாய் இருந்தால் வார்த்தைகளும் அன்பாய், அழகாய் இருக்கும். அதற்கு நாம் செய்ய வேண்டியது அழகிய வார்த்தைகளைத் தேடுவதல்ல, அழகிய இதயத்தை நாடுவது. 

ஏமிகார்மைக்கேல் ஒரு முறை சொன்னார், ‘நமது இதயம் இனிப்பான பானம் நிறைந்த பாத்திரமாய் இருந்தால், அதிலிருந்து சிந்துபவை எல்லாமே இனிப்பானவையாய் தான் இருக்கும்’ என்று. 

நல்ல ஊற்றிலிருந்து உப்புத் தண்ணீர் சுரக்காது, நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்காது, நல்ல இதயம் தவறான வார்த்தைகளை வீசாது. வார்த்தைகள் வாளைப் போல, வீசிவிட்டால் காயம் தரும். அதன் பின் எத்தனை மன்னிப்பைக் கேட்டாலும் வடுக்கள் மறைவதே இல்லை ! எனவே கவனம் தேவை. 

இயேசு, நமது இதயங்களை சரிசெய்யச் சொல்கிறார். அதில் கர்வம் இருக்க வேண்டாம், அதில் அகந்தை இருக்க வேண்டாம், அதில் வன்மம் இருக்க வேண்டாம் என்கிறார். ‘பேசத் தானே செஞ்சான், அடிக்கவா செஞ்சான்’ என சிறு பிள்ளைகளிடம் பெற்றோர் சொல்வதுண்டு ! இனிமேல், வார்த்தைகளையும் கவனிக்கச் சொல்லுங்கள். பிள்ளைகளின் வார்த்தைகள் செயல்களைப் போலவே முக்கியமானவை. 

இயேசு சொல்கிறார், நமது வார்த்தைகள் நம்மைத் தீர்ப்பிடும். தீர்ப்பு நாளில் நாம் குற்றவாளிகளா, இல்லையா என்பதை நாம் பேசிய வார்த்தைகளே முடிவு செய்யும். காரணம், நமது இதயம் அன்பில்லாமல் இருந்தால் வாய் அன்பற்ற வார்த்தைகளையே பேசும். அன்பற்ற மனிதர்கள் அன்பான செயல்களைச் செய்ய முடியாது. வார்த்தைகள் நமது செயல்களின் பிரதிநிதிகள். 

நாம் எதை உண்கிறோம் என்பது பிரச்சினையில்லை, ஆனால் உள்ளிருந்து வருகின்ற வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும். உடலை வலுவாக்க உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதைப் போல, வார்த்தைகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இதயம் முழுவதும் நல்லவை நிரம்பியிருந்தால் அதிலிருந்து எதை எடுத்தாலும் நல்லதாகவே இருக்கும். எனவே இதயத்தை ஒரு சாக்லேட் பாக்ஸ் போல வைத்திருக்க வேண்டும் !

இயேசுவின் இந்தக் கேள்வி நம்மை உலுக்குகிறது. நமது வார்த்தைகள் எந்த அளவுக்கு வலுவானவை என்பதை நமக்கு உணர்த்துகிறது. 

நமது வார்த்தைகள் நாம் யார் என்பதை அடையாளப்படுத்துகின்றன.

நமது வார்த்தைகள் நமது இதயத்தின் நிலமையை வெளிப்படுத்துகின்றன.

நமது வார்த்தைகள் நியாயத் தீர்ப்பு நாளில் நம்மைத் தீர்ப்பிடுகின்றன. 

வார்த்தைகளை அன்பில் வார்த்தெடுப்போம், பிறருக்கு ஆதரவாய், ஆறுதலால், உற்சாகமாய், நற்செய்தியாய் நமது வார்த்தைகளைப் பயன்படுத்துவோம். இதயத்தில் இறைவனை இருத்தி, கறை பட்ட இதயத்தைத் தூய்மையாய் மாற்றுவோம்.

*

சேவியர்

குருத்தோலை மாத இதழ் – செப்டம்பர்

Posted in Articles, Desopakari

உண்மை வழி நடப்போம் ( தேசோபகாரி )

உண்மை வழி நடப்போம்

*

உண்மையா

அதுஎன்ன

இது பிலாத்து இயேசுவை நோக்கி நீட்டிய கேள்வி.  ஆனால் ஒருவேளை பிலாத்துவின் கேள்வி, 

உண்மையா

அதுயார்

என்றிருந்திருந்தால் உண்மை வடிவான இயேசுவை அவன் அறிந்திருப்பான். நானே வழியும், சத்தியமும், ஜீவனும் என்ற இயேசுவை அகக் கண்ணால் கண்டிருப்பான். உண்மை என்பது ஒரு செய்தியாக இருக்கும்போது அது சிதிலமடைகிறது, அது உருமாற்றம் அடைகிறது, அது பல முகம் காட்டுகிறது. 

ஆனால் உண்மை என்பது ஒரு மனிதராக இருக்கும் போது அந்த வாழ்க்கை நமக்கு வழிகாட்டுகிறது. அந்த உண்மையின் வாழ்க்கை நம்மை உண்மையின் பாதையில் நடக்க வைத்து இறுதியில் உண்மையிடம் நம்மைச் சேர்க்கிறது. 

குழந்தைகள் உண்மையின் வழியில் நடப்பவர்கள். அவர்களிடம் கள்ளம் இல்லை, அவர்களிடம் பொய் இல்லை. கள்ளமும், பொய்யும் சமூகத்தினால் குழந்தைகள் மீது திணிக்கப்படுகின்றன. ‘வீட்ல இல்லேன்னு பொய் சொல்லு’, ‘உடம்பு சரியில்லேன்னு சொல்லு’ என்றெல்லாம் குழந்தைகளுக்கு நாம் தான் பொய்யை அறிமுகம் செய்து வைக்கிறோம். 

உண்மையின் வழி நடக்க விரும்புபவர்கள் குழந்தைகளிடமிருந்து பாடம் கற்க வேண்டும். குழந்தைகளுக்கு நாம் அறிவைக் கொடுக்க வேண்டும், குழந்தைகளிடமிருந்து உண்மையை கற்றுக் கொள்ள வேண்டும். எனவே தான் இயேசு, இறையரசு இத்தகையோருக்குரியதே என்றார் ! குழந்தையைப் போல மாறாவிடில் இறையரசில் நுழைய முடியாது என்றார். 

சத்தியம் வார்த்தையல்ல, 

வார்த்தையானவர் !

இறைவார்த்தைகளிலிருந்தல்ல நமக்கான மதிப்பீடுகள், 

இறை வாழ்க்கையிலிருந்து பெற வேண்டும் வாழ்வுக்கான வழிகாட்டுதல்கள். 

  1. உறுதியானமனநிலை !

சத்தியத்தின் வழியில் நடப்போருக்கு ஒரே கேள்விக்கு இரண்டு விடைகள் இருப்பதில்லை. அவர்கள் உண்மை, பொய் எனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்வதில்லை. அவர்களுடைய பேச்சு ஆம் என்றால் ஆம் என்றும், இல்லை என்றால் இல்லை என்றும் உறுதியாக இருக்கிறது

குழந்தைகள் உண்மை பேசுகின்றன. அவர்களிடம் பொய் சொல்லச் சொன்னால் தடுமாறி விடுகின்றன. நாம் அவர்களுக்கு பொய்யை அறிமுகம் செய்து வைக்கிறோம். காலப் போக்கில் பொய் அவர்களுக்குப் பழகி விடுகிறது. பொய் அவர்களின் இயல்பாகி விடுகிறது. அதன்பின் அவர்களிடம், ‘ஏண்டா பொய் சொன்னே ?’ என நாம் கோபித்துக் கொள்கிறோம். நாம் பழக்கி விட்ட வழியில் அவர்கள் நம்மையே எதிர் கொள்ளும்போது எரிச்சலடைகிறோம்.

உண்மையின் வழியில் நடக்கும் உறுதியான மனம், நம்மை இறைவனிடம் சேர்க்கும். 

  1. உண்மையின்மனநிலை !

கிறிஸ்தவர்கள் என்பவர்கள் கிறிஸ்துவின் வழி நடப்பவர்கள். ஆனால் நாம் அதை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறோமோ எனும் அச்சம் அடிக்கடி எழுகிறது. ஆன்மிகம் சார்ந்த விவாதங்களில் இன்று பெரும்பாலும் தனி நபர் தாக்குதல்களே எழுகின்றன. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சித்தாந்தங்களை விட அடையாளங்களை  மையப்படுத்தும் சித்தாந்தங்களே அதிகம் இருக்கின்றன. 

உண்மையின் மனநிலை என்பது இயேசுவின் மனநிலை. இயேசு ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிச் செய்வார் என்பதை அறிந்து செயல்படும் மனநிலை. உதாரணமாக ‘எப்படி துதிக்க வேண்டும், எப்படி ஆட வேண்டும், எப்படி உடுக்க வேண்டும்’ என்றெல்லாம் இயேசுவிடம் கேட்டால் என்ன பதில் சொல்வார் ? என நமக்குள் கேள்வி எழுப்ப வேண்டும். 

இயேசு எப்படி இருப்பார் என்பதை அறிய குழந்தைகளைப் பாருங்கள். அவர்கள் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு மண்டையைக் குழப்பிக் கொள்வதில்லை. 

  1. செயலாற்றும்மனநிலை

குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்கின்ற ஒரு விஷயம், செயல் பட்டுக் கொண்டே இருப்பது. ‘எப்ப பாரு ஓடிட்டே… ஒரு இடத்துல இருக்கானா பாரு’ என நம்மை சலிப்படையச் செய்யும் அளவுக்கு பிள்ளைகள் ஓடிக் கொண்டே இருப்பார்கள். அத்தகைய சுறுசுறுப்பும், செயலாற்றுதலும் நம்மிடம் இருக்க வேண்டும். அத்தகைய செயல்பாடுகள் இயேசு எனும் உண்மையை மையப்படுத்தியதாகவோ, முன்னிறுத்தியதாகவோ இருக்க வேண்டும். 

சத்தியத்தின் வழி நடப்போர் சலிப்படைக் கூடாது. பணி செய்ய தயங்கக் கூடாது. எப்படியெல்லாம் பணி செய்ய வேண்டும் என்பதை இயேசுவின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தயங்காமல் பயணிக்கும் ஆற்றலை பவுலின் வாழ்க்கையிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். 

குழந்தைகளிடமிருந்து அந்த உற்சாகத்தின் மனநிலையை அறிந்து கொள்வோம்.

  1. கரம்கொடுக்கும்மனநிலை

உண்மையின் வழியில் நடப்போர் பிறருக்கு கை கொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டும். குழந்தைகள் விளையாடும் போது கவனித்திருப்பீர்கள், அவர்களுக்கு வைரக் கல்லை விட மர பொம்மை தான் பிரியமாய் இருக்கும். அவர்கள் தங்களிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து விளையாட தயங்க மாட்டார்கள். ‘இது உன்னுது, இதை யாருக்கும் குடுக்காதே’ என நாம் அவர்களுடைய மனதைக் கெடுக்காதவரை அவர்கள் மனம் கறையற்றதாகவே இருக்கும்.

பெரியவர்களின் மனநிலை அப்படி அல்ல ! ஓய்வு நாளே பெரியது, சூம்பிப் போனவன் நலமடைவதை விட !!! என்பதே அவர்களின் பார்வை. குழியில் விழும் ஆடு கூட அவர்களின் பார்வையில் ஊனமுற்றவரை விட மேலானதே. உண்மையாம் இயேசுவின் வழியில் நடப்பவர்கள் பிறருக்காய் எப்போதும் கரம் நீட்டுபவர்களாய் இருக்க வேண்டும். ஒரே ஒரு கரம் இருந்தால் கூட அதை நீட்டுபவர்களாய் நாம் இருக்க வேண்டும். 

குழந்தைகளிடமிருந்து அந்த அன்பின் செயலைக் கற்றுக் கொள்வோம்.

  1. பேதமற்றமனநிலை 

நீ என்ன சாதி ? என இதுவரை இந்தப் பிரபஞ்சத்தில் எந்தக் குழந்தையும் வினா எழுப்பியதில்லை. நீ எந்த சாமியை கும்பிடறே ? என்பதை பெற்றோர் கற்றுக் கொடுக்கும் வரை கண்டு கொள்வதில்லை மழலை. நீ ஏன் கருப்பா இருக்கே, நீ ஏன் சிவப்பா இருக்கே, உனக்கு ஏன் கால் இல்லை, உனக்கு ஏன் தலைமுடி இல்லை என்றெல்லாம் குழந்தைகள் யோசிப்பதே இல்லை. உருவம், அடையாளம் போன்றவையெல்லாம் குழந்தைகளின் தேசத்தில் இல்லை ! 

பேதங்கள் பார்த்து மனிதரோடு பழகுபவன் நிச்சயம் இறையரசுக்கு உரியவன் அல்லன் ! நல்ல சமாரியன் சொல்லித் தருவது அதைத் தான். நாம் அயலானாய் இருக்க வேண்டும், தேவையில் இருக்கும் மக்களுக்கு ஆறுதல் தரும் அயலானாய் இருக்க வேண்டும். குழந்தைகள், அழுகின்ற குழந்தையோடு சேர்ந்து அழும். சிரிக்கின்ற குழந்தையோடு சேர்ந்து சிரிக்கும். குழந்தைகளின் பேதமற்ற மனம் நம்மை பரமனிடம் சேர்க்கும். 

சத்தியத்தில் நடக்கும் போது நாம் 

இறையரசுக்கு உரியவர்களாவோம். 

சத்தியத்தில் நடப்பது எப்படியென்பதை

மழலையிடமிருந்து கற்றுக் கொள்வோம்

*

சேவியர்

நன்றி : தேசோபகாரி

Posted in Articles

SKIT : ஆணாதிக்கம்

ஆணாதிக்கம்

*

காட்சி 1

( கணவன் & மனைவி )

கணவன் : ( பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார் ) எம்மா.. காப்பி குடுக்கச் சொல்லி பத்து நிமிசம் ஆச்சு, என்ன பண்றியோ தெரியல

மனைவி : இதோ கொண்டு வரேங்க

கணவன் : ஆமா, எழும்பினதும் காபி குடுக்கணும்ன்னு தெரியாதா உனக்கு ? பேப்பர் படிச்சே முடிக்கப் போறேன். 

மனைவி : சரி சரி.. கத்தாதீங்க, கொண்டு வரேன். 

( காபி கொண்டு வருகிறார் )

கணவன் : ஆமா.. இப்ப எல்லாரும் எதுத்துப் பேச கத்துகிட்டாங்க. அதெல்லாம் நம்ம வீட்ல நடக்காது. அந்தந்த நேரத்துல அந்தத்த விஷயம் நடக்கணும்.

மனைவி : சரிங்க.

கணவன் : வெளியே போணும் என்னோட துணியை அயர்ன் பண்ணி வை. 

மனைவி : வெச்சிடறேன்… 

கணவன் : அதுக்கு முன்னாடி கொஞ்சம் சுடு தண்ணி வை.. குளிக்கணும்.. 

மனைவி : சரி எல்லாம் பண்ணலாம். நீங்க முதல்ல காபி குடிங்க. 

காட்சி 2

( மகள் & அப்பா )

மகள் : அப்பா… எனக்கு பிளஸ் டூல, கட் ஆஃப் 197 இருக்கு

அப்பா : நீ சமத்துப்பா.. என் பொண்ணாச்சே.. அடுத்து என்ன படிக்க போறே

மகள் : நல்லா என்சினியரிங் காலேஜ்ல சேர்ந்து படிக்கணும்பா…. 

அப்பா : எஞ்சினியரிங் காலேஜா ? அது இங்க இல்லையே

மகள் : சிட்டில போய் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல ஏ.ஐ.எம்.எல் ந்னு ஒரு கோர்ஸ் இருக்குப்பா.. அதை படிக்கலாம்ன்னு இருக்கேன்.

அப்பா : சிட்டிக்கா.. அதெல்லாம் வேண்டாம்.. நம்ம மார்த்தாண்டம் காலேஜ்ல என்ன இருக்கோ அதை படி

மகள் : அப்பா அது ஆர்ட்ஸ் காலேஜ்… நான் சொல்றது எஞ்சினியரிங் காலேஜ்

அப்பா : அதெல்லாம் எனக்கு தெரியாது. பொம்பள பிள்ளைங்க வெளியே எல்லாம் போய் படிக்கக் கூடாது

மகள் : அப்பா நாலு வருஷம் படிச்ச, கண்டிப்பா கேம்பஸ் பிளேஸ்மெண்ட்ல வேலை வாங்கிடுவேன்பா

அப்பா : உன் சம்பாத்யத்துல வாழ்ற அளவுக்கு நாங்க ஒண்ணும் கெட்டுப் போயிடல. நீ பக்கத்து காலேஜ்ல ஏதாச்சும் படி.. அப்புறம் உனக்கு ஒரு கல்யாணமும் பண்ணி வெச்சா, என் கடமை முடிஞ்சுது

மகள் : என்னப்பா இப்பவே இதெல்லாம் பேசறீங்க. அப்போ நான் இவ்ளோ மார்க் எடுத்து என்ன பயன் ?

அப்பா : என் பொண்ணு இவ்ளோ மார்க் எடுத்தான்னு எனக்கு பெருமையா இருக்குல்ல.. அதான் முக்கியம் ! அது போதும்.

மகள் : உங்க பெருமைக்கா, என் வாழ்க்கைக்கா ? எதுக்குப்பா நான் படிச்சே ?

அப்பா : போதும்.. போதும்.. பொம்பள புள்ளைங்க ஓவரா பேசக் கூடாது. நான் என்ன சொல்றேனோ அதை கேட்டு நடந்தா போதும். 

மகள் : அப்பா… 

அப்பா : போதும்… இந்த வீட்ல நான் சொல்றதை கேட்டா போதும். உனக்கு படிக்கணும்ன்னா நான் சொல்ற இடத்துல படி. இல்லேன்னா வீட்லயே இரு. அவ்ளோ தான்.

காட்சி 3

( அம்மா & அப்பா )

அம்மா : என்னங்க, அவ ஆசைப்படறால்ல. படிக்கட்டுமே. நாலு காசு சம்பாதிச்சா அவ வாழ்க்கை நல்லா இருக்கும்.

அப்பா : என்ன பிள்ளையை வெளியூர் அனுப்பி கெடுக்க சொல்றியா 

அம்மா : வெளியூர்ல எத்தனையோ இலட்சம் பிள்ளைங்க படிக்கிறாங்க

அப்பா : அதெல்லாம் என் பிள்ளைங்க இல்லை. என் பிள்ளை எப்படி படிக்கணும், எங்க படிக்கணும்ன்னு நான் தான் முடிவு பண்ணுவேன். 

அம்மா : பிடிவாதம் பிடிக்காதீங்க. சென்னைல என் தங்கச்சி வீட்ல நின்னு அவ படிப்பா… நல்ல ஸ்கோர் பண்ணியிருக்கா. கவுன்சிலிங்ல நல்ல காலேஜ் கிடைக்கும்

அப்பா : அதெல்லாம் எனக்கு தெரியாது, இந்த வீட்டோட தலைவன் நீ கிடையாது. நான் தான். பைபிள் என்ன சொல்லுது தெரியுமா ? புருஷர்களுக்கு கீழ்ப்படியணும்ன்னு.. பேசாம கீழ்ப்படி அது போதும்.

அம்மா : மனைவியருக்கு அன்பு செலுத்தவும் தான் பைபிள் சொல்லுது. அன்பு செலுத்துறதுங்கறது அவங்களை மதிக்கிறது, அவங்களோட ஆசையை நிறைவேத்தறது இதெல்லாம் தான்.

அப்பா : கடவுள் வீட்டோட தலைவரா இருக்க சொன்னது ஆண்களை.. தெரியும்ல

அம்மா : ஆனா, அவரு அம்மாவோட பேச்சைக் கேட்டு கோயில்ல இருந்து கூடவே வந்தாரு தெரியும்ல. அம்மா கூடவே வளர்ந்தாரு அவரு. அம்மா பிள்ளையா

அப்பா : இப்படி எதிர்த்து பேச ஆள் இருக்கக் கூடாதுன்னு தான் அவரு கல்யாணமே பண்ணிக்கல. முதல்ல நீ பேச்சை நிறுத்து

அம்மா : பன்னிரண்டு வருஷம் பிள்ளை படிச்சதெல்லாம் வேஸ்டா போவும்.. பிடிவாதம் பிடிக்காதீங்க… 

அப்பா : இனிமே ஒரு வார்த்த  பேச கூடாது. கொஞ்சம் விட்டா பேசிட்டே போறீங்க. நான் சொன்னது சொன்னது தான்.

காட்சி 4

( அப்பா & நண்பர் )

அப்பா : என்னப்பா.. எப்படி இருக்க.. பாத்து எவ்ளோ வருஷம் ஆச்சு, என்ன இந்தப் பக்கம்

நண்பர் : ஆமாடா… நான் வேலை விஷயமா தூத்துக்குடி போய் செட்டில் ஆயிட்டேன். இப்போ தான் ஊர் பக்கம் டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன்

அப்பா : வெரிகுட் வெரிகுட்.. ஃபேமிலி எல்லாம்

நண்பர் : எல்லாரும் இங்கே வந்துட்டாங்க

அப்பா : அதில்லடா.. என்ன பண்றாங்க பிள்ளைங்க ? எத்தனை பிள்ளைங்க ? 

நண்பர் : ரெண்டு பிள்ளைங்க, பொண்ணு மெடிசின் முடிச்சிருக்கா, பையன் என்சினியரிங் போயிட்டிருக்கான். 

அப்பா : மெடிசினா ? எம்பிபிஎஸ் சா

நண்பர் : ஆமா… ரஷ்யால படிச்சா 

அப்பா : ர..ரஷ்யாவா.. என்னடா சொல்றே

நண்பர் : ஏண்டா.. படிப்பை முடிச்சிட்டு வந்துட்டா.. இனிமே ஹயர் ஸ்டடீஸுக்கு ஜெர்மனி போறா.. எம்.டி பண்ணணும்ல

அப்பா : வெ..வெளிநாடெல்லாம் அனுப்பியிருக்கே பொம்பள புள்ளைங்கள

நண்பர் : என்னடா.. எந்த காலத்துல இருக்கே.. இப்போ எல்லா பிள்ளைங்களும் சிட்டிலயோ, ஃபாரின்லயோ தான் படிக்கிறாங்க

அப்பா : பொம்பள புள்ளைங்க அடக்க ஒடுக்கமா..

நண்பர் : ஹா..ஹா… காமெடி பண்ணாதே… உலகம் டெக்னாலஜில எவ்வளவோ வளந்திடுச்சு, நீ இன்னும் எருமை மாட்டுக் கதையெல்லாம் பேசறே…. 

அப்பா : ஓ..

நண்பர் : யா.. அவ அவளோட அம்மா மாதிரி. என் வைஃபும் சிட்டில படிச்ச பொண்ணு… இப்ப கூட ஒரு ஐடி கம்பெனில வேல பாக்கறா… அடிக்கடி பாரின், வெளியூர்ன்னு போயிட்டு வருவா… 

அப்பா : மனைவி கூடவா… ஆம்பளைங்க சொல்றதை கேட்டு வீட்டோட இருக்கிற பொம்பளைங்க தாண்டா உசத்தி

நண்பர் : ஹா…ஹா.. உன்னை நினைச்சா எனக்கு சிரிப்பு தாண்டா வருது. இப்படி பழைய பஞ்சாங்கமா இருந்து உன் பிள்ளைங்க லைஃபை கெடுத்துடாதே. எல்லாரும் எதிர்காலத்துல ஆபீசரா இருக்கும்போ, உன் பிள்ளைங்களை செக்யூரிட்டியா மாத்திடாதே. 

அப்பா : அது .. வந்து

நண்பர் : ஸீ.. என் பொண்ணு கார் ஓட்டறா, என் வைஃப் கார் ஓட்டறாங்க.. நான் சமையலும் பண்ணுவேன். இந்த காலம் எல்லாருமே ஒருத்தருக்கொருத்தர் அன்பாவும், உதவியாவும் இருக்கிற காலம் டா… 

அப்பா : கணவன் தான் வீட்டு தலைவனா இருக்கணும்ன்னு..

நண்பன் : தலைவன்னா எல்லாருக்கும் தொண்டனா இருக்கணும்ன்னு இயேசுவே சொல்லியிருக்காரு. வீட்டுத் தலைவன்னா அவன் பணிவானவனா, அன்பானவனா, எல்லாருடைய விருப்பத்துக்கும் ஏற்ப நடக்கிறவனா இருக்கணும். 

அப்பா : சரிடா… ஐ நீட் டு திங்க். 

நண்பர் : சரிடா.. ஒரு நாள் வீட்டுக்கு வா… நானே பிரியாணி சமைச்சு போடறேன்.. ஓக்கேவா

அப்பா : ஓக்கேடா.

காட்சி 5

( அப்பா & மகள் )

அப்பா : எம்மா.. உனக்கு என்ன படிக்கணும்ன்னு சொன்னே

மகள் : அதை சொல்லி இப்ப என்ன ஆக போவுது. நீங்க தான்… மார்த்தாண்டம் காலேஜ்ல அட்மிஷன் போட்டுட்டீங்களே… 

அப்பா : பரவாயில்ல சொல்லு

மகள் : கம்ப்யூட்டர் சயின்ஸ் ஏ.ஐ.எம்.எல் 

அப்பா : எங்கே படிக்கணும்னு சொன்னே

மகள் : சென்னை எஸ்.எஸ்.என் மாதிரி ஒரு நல்ல காலேஜ்ல

அப்பா : அங்கே சித்தி வீட்ல தங்கி படிப்பியா ?

மகள் : அம்மா அபப்டி தான் சொன்னாங்க, நீங்க தான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டீங்க

அப்பா : பரவாயில்ல.. நீ அப்ளை பண்ணு. உனக்கு கவுன்சிலிங்ல இடம் கிடைக்கும். சென்னைலயே போய் படி.

மகள் : அப்பா.. என்ன சொல்றீங்க

அப்பா : ஆமாம்மா.. இது உன் லைஃப் .. நான் என்னோட வீண் பிடிவாதத்தால உன் எதிர்காலத்தை கெடுக்கக் கூடாதுல்லயா

மகள் : அப்பா.. நெஜமாவா சொல்றீங்க.. அப்போ மார்த்தாண்டத்துல கட்டின பணம்

அப்பா : அது கெடைக்கலேன்னா போகட்டும் பரவாயில்லை. உன் விருப்பம் தான் முக்கியம். நீ படி. 

மகள் : ஐயோ அப்பா.. ஐம் வெரி ஹேப்பி. தேங்க்யூ சோ மச். அம்மா, இதை கேட்டா ரொம்ப சந்தோசப்படுவாங்க. 

அப்பா : ம்ம்.. சாரிம்மா.. வெட்டியா ஆண், ஆண் ந்னு சொல்லிட்டிருந்தேன். உண்மையிலேயே ஒரு ஆண் மகன்னா, குடும்பத்தோட மகிழ்ச்சிக்காக வாழணும்ன்னு புரிஞ்சுகிட்டேன்.

மகள் : ரொம்ப சந்தோசம்பா.. நான் இன்னிக்கு பாயசம் பண்ணி தரேன் உங்களுக்கு.

அப்பா : வேண்டாம்… இன்னிக்கு நாம சாயங்காலம் வெளியே போய் சாப்பிடுவோம். ஃபேமிலியா ஜாலியா வெளியே போய் ரொம்ப நாளாச்சு.

மகள் : கண்டிப்பாப்பா.. தேங்க்யூ சோ மச். 

*

முற்றும்

Posted in Articles

தங்க விதி !

!

*

இயேசுவின் போதனைகள் எல்லாம் வாழ்வியல் போதனைகளாகவே இருக்கின்றன. தத்துவார்த்த ரீதியாக குழப்புகின்ற எந்த சித்தாந்தத்தையும் இயேசு சொன்னதே இல்லை. மிக மிக எளிமையாக, ஒரு ஆடு மேய்ப்பவரோ, ஒரு விவசாயியோ புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தான் அவருடைய போதனைகள் அமைந்திருந்தன. 

அவர் போதித்த போதனைகளில் ஒரு போதனையை கிறிஸ்தவம், ‘த கோல்டன் ரூல்’ அதாவது ‘அந்த தங்க விதி’ என அழைக்கிறது. போதனைகளின் மையம் என இதைக் கொள்ளலாம். அது இது தான். 

“பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே “ ( மத்தேயு 7 : 12 ).

என்னுடைய உறவினர் ஒருவர் அடிக்கடி சலித்துக் கொள்வார். , ‘ அவன் எனக்கு போன் பண்றதில்லை, கண்டுக்கறதே இல்லை’ என்று. அவங்க தான் பண்ணல, நீங்க பண்ணியிருக்கலாமே என்று திருப்பிக் கேட்டால், ‘நான் எதுக்கு பண்ணணும் ? அவன் தான் பண்ணணும்…’ என சொல்வார் ! எல்லோருமே பிறரை ஒரு அளவீடு கொண்டும், தன்னை ஒரு அளவீடு கொண்டும் அளக்கப் பழகிவிட்டோம். 

நம்முடைய வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு பெரிய பட்டியலை எபபோதும் சுமந்து திரிவோம். நம்மைக் கண்டவுடன் புன்னகைக்க வேண்டும், வந்து பேசவேண்டும், அடிக்கடி அழைக்க வேண்டும், நம்மை கவனிக்க வேண்டும், எல்லோரையும் விசாரிக்க வேண்டும், நமக்கு உதவ வேண்டும் என்றெல்லாம் அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

அதே நேரம், பிறருக்கு நாம் அவற்றையெல்லாம் செய்கிறோமா ? எனும் கேள்விக்கான விடையை நாம் அலசுவதே இல்லை. அடுத்தவர்களின் பக்கம் நின்று பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்கிறார் இயேசு. 

பிறர் நம்மிடம் அன்பாய் இருக்க வேண்டுமென விரும்புகிறோமா ? முதலில் நாம் அன்புடையவர்களாய் இருக்க வேண்டும். பிறர் நம்மிடம் நேர்மையாய் இருக்க விரும்புகிறோமா ? நாம் முதலில் நேர்மையாய் இருக்க வேண்டும். பிறர் நம்மிடம் சுயநலமின்றி பழக வேண்டுமா ? நம்முடைய பழக்கமும் சுயநலத்தைத் தாண்டியே இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் சிந்திக்க வேண்டும். அது தான் இந்த விதி சொல்லும் செய்தி. 

பைபிளைக் கற்றுக் கொள்ள முடியவில்லை, இயேசுவின் போதனைகளைக் கற்றுக் கொள்ள முடியவில்லை, என்றெல்லாம் நினைப்பவர்கள் இந்த ஒரே ஒரு வசனத்தை மட்டும் கற்றுக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையையே அது புரட்டிப் போடும். எல்லோரும் இந்த வசனத்தின் படி வாழ்ந்தால் பூலோகமே சொர்க்கமாய் மாறும்.

*

சேவியர்