Posted in Articles, Beyond Bible

இவர்கள் என்ன ஆனார்கள் ? – கிளாடியா பிரோகுளா

இவர்கள் என்ன ஆனார்கள் ?
கிளாடியா பிரோகுளா

திடுக்கிட்டு விழித்தாள் பிரோகுளா ! நெற்றியெல்லாம் முத்து முத்தாய் வியர்த்திருந்தது. இப்படி ஒரு கனவை வாழ்நாளில் அவள் கண்டதில்லை. இதன் பொருள் என்ன என்பதும் புரியவில்லை. எழுந்து அருகிலிருந்த குவளையிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்தாள். அருகில் ஐந்து வயது மகன், கள்ளம் கபடமில்லாத பூக்களின் தேசத்தில் ஏதோ கனவு கண்டு புன்னகையுடன் தூங்கிக் கொண்டிருந்தான்.

பிரோகுளா படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு மீண்டும் ஒரு முறை அந்தக் கனவை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தாள். சேராபீன்களின் இறக்கையோடு, சூரியன் ஒளிபோன்ற முகத்துடன், நெருப்பில் மேலெழும் ஒரு ராட்சசப் பறவையாய் மேலே எழுகிறார் அவர். இயேசு ! மேலே சென்ற அவர் மேகங்களின் மேல் நிற்கிறார். கணப்பொழுதில் அவர் நியாயத் தீர்ப்பை வழங்கத் துவங்குகிறார். நல்லவர்கள் அனைவரும் மீட்படைந்து, இறைவனின் நிலை வாழ்வுக்குள் நுழைகிறார்கள்.

தீயவர்களோ நெருப்புப் பள்ளத்தாக்கில் எறியப்படுகின்றனர். அத்தகைய ஒரு நெருப்பை உலகம் கற்பனை செய்யவும் முடியாது. அத்தகைய அடர்த்தியோடு கொழுந்துவிட்டு எரிகிறது அந்த நெருப்பு. உலகத்தையே உருக்கும் வெப்பத்துடனும், கொதிக்கும் ஆழியின் ஆக்ரோஷத்துடனும் எரிந்து கோரத்தாண்டவம் ஆடுகிறது அது. ஐயோ தாங்கமுடியவில்லையே மலைகளே, குன்றுகளே எங்கள் மேல் வந்து விழுங்கள் என நிராகரிக்கப்பட்டவர்கள் கதறினார்கள். இயேசுவோ சிங்கத்தின் கர்ஜனை ஒத்த மாபெரும் கர்ஜனையில் அவர்களைப் பார்த்து உரக்கச் சொன்னார்.

‘உனக்காக நான் சிந்திய இரத்தத்தை எனக்கு மீண்டும் தா !” சொன்னவர் தனது காயங்களையும் காட்டுகிறார். அந்த அதிர வைக்கும் குரலிலும், அந்த அனலிலும் திடுக்கிட்டு விழிக்கிறார் பிரோகுளா.

ஏதோ நடக்க இருக்கிறது. அது நல்லதல்ல என்பது மட்டும் அவளுக்குப் புரிகிறது. என்ன செய்வதென புரியவில்லை. எருசலேம் நகரின் இரவு நேரக் காற்று அவளை அமைதிப்படுத்தவில்லை. வெகுநேரத்துக்குப் பின் மீண்டும் தூங்குகிறாள். மீண்டும் அவளது தூக்கத்தின் வாசலை கனவின் பேரலை வந்து மூர்க்கமாய் மோதுகிறது.

“‘உனக்காக நான் சிந்திய இரத்தத்தை எனக்கு மீண்டும் தா !” ! இயேசுவின் குரல் எதிரொலிக்கிறது. அப்போது திடீரென இன்னொரு குரல் எழுகிறது. “போந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டார்..” அந்த ஒரு குரல் இரண்டாகி, இரண்டு நான்காகி, நூறாய் ஆயிரமாய் இலட்சமாய் பேரொலியாய் மாறுகிறது. உலகமே அதிருமளவுக்கு அச்சமூட்டுகிறது அந்த குரலொலிகள்.

“போந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டார்..”
“போந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டார்..”

மூச்சுத் திணறும் அவஸ்தையுடன் மீண்டும் திடுக்கிட்டு எழுந்தார் பிரோகுலா. தனது கணவர் பிலாத்துவின் பெயர் உச்சஸ்தாயியில் அலறப்பட்டது அவரை நிலை குலைய வைத்தது. கனவுகள் கடவுளிடமிருந்து வரும் எச்சரிக்கைக் குரல் என்று ஆழமாக நம்பப்பட்ட காலகட்டம் அது. கனவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்த கதைகளெல்லாம் புனித நூல்களில் மிகப்பிரபலம் எனும் சிந்தனை அவளை அலைக்கழித்தது.

பதினாறு வயதாக இருக்கும்போதே பிலாத்துவுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டவர் பிரோகுலா. அப்பா வயதுடைய ஒருவருக்கு மனைவியாகும் நிலை அது. ரோமப் பேரரசர் அகஸ்துஸ் தான் இவரது தாத்தா. திருமணம் முடிந்த கையோடு கணவனின் வேலை நிமித்தமாக யூதேயாவில் பயணம்.

யூதேயா தான் அந்த இளம் வயதில் அவளுக்கு ஏகப்பட்ட புரிதல்களைத் தந்தது எனலாம். அரசவையில் மிக உயரிய இடம். எங்கே சென்றாலும் மிகப்பெரிய மரியாதை. ஆனாலும் அவளுக்கு அதிலெல்லாம் நாட்டம் இருக்கவில்லை. அவளுக்கு ஒரு சில தோழிகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் மகதலா மரியா. அவர் இயேசுவின் நெருங்கிய சீடர். அவர் மூலமாக கொஞ்சம் கொஞ்சம் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு.

யூதேயா வாழ்க்கை அவளுக்கு இஸ்ரேயலர்களின் கடவுளை அறிமுகம் செய்து வைத்தது. தனது தெய்வங்களுக்கும் இஸ்ரயேலரின் கடவுளுக்கும் இடையேயான வேறுபாடுகள் அவளை வியப்புக்குள்ளாக்கின. அதிகம் அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்.

அவளுக்கு துணை செய்த இன்னொருவர் உண்டு அவர் பெயர் சலோமி ! அவளது பன்னிரண்டு வயது மகள் செமிதா. செமிதா இனிமையாகப் பாடுவார். அவரது குரலில் மயங்கியும், மகனுக்கு பொழுது போகவும், சலோமியுடன் உரையாடவும் அவ்வப்போது பிரோகுளா அவர்களுடைய இல்லம் போவதுண்டு. அவளுடைய கணவர் தொழுகைக்கூடத் தலைவராக இருந்தார். அதனால் யூத மத சட்டங்கள் பற்றியும், இறைவார்த்தைகள் பற்றியும், நியாயப் பிரமாணம் பற்றியும் எல்லாம் அவள் நிறைய புரிந்து கொண்டாள்.

அப்போது தான், ஒரு நாள் அந்த கொடுமையான நிகழ்வு நடந்தது. செமிதா இறந்துவிட்டாள். ஒரு மலரைப் போல அந்த வீட்டில் மணம் வீசிக்கொண்டிருந்த அந்த அழகிய சிறுமி இறந்து விட்டாள். அவளது இசையால் நிரம்பியிருந்த அந்த வீடு சட்டென சோகத்தின் மௌனத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டு அமைதியானது. சலோமி அதிர்ந்து சிதறினாள். சிறுமியின் தந்தை இயேசுவைத் தேடி ஓடினார்.

துயரச் செய்தி கேட்டு சலோமியின் வீட்டுக்கு விரைந்தாள் பிரோகுளா. சலோமியின் அருகே வந்து தோள் தொட்ட போது தான் அவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் இயேசு. கூடவே செமிதாவின் தந்தை. இயேசுவை அப்போது தான் அவர் பார்க்கிறார். இயேசுவின் நடையில் சாந்தம் தெரிந்தது. செமிதாவின் தந்தையிடமும் கதறல் இல்லை, ஒரு நம்பிக்கை தெரிந்தது. எதுவும் நடவாதது போல, எதுவும் தன் ஆளுகைக்கு வெளியே இல்லை என்பது போன்ற ஒரு அமைதியுடன் இயேசு வந்து கொண்டிருந்தார்.

“சிறுமி சாகவில்லை, தூங்குகிறாள். விலகிப் போங்கள்” இயேசுவின் குரல் பிரோகுளா வுக்குப் புரியவில்லை. சன்னல் வழியே பார்க்கிறாள். சிறுமி செமிதா பறிக்கப்பட்ட ஒரு மலர் போல சலனமற்றுக் கிடக்கிறாள். இறந்து வெகு நேரமாகியிருந்ததன் அடையாளமாக உதடுகள் வறண்டு போக் கிடந்தன. பிரோகுலா எதுவும் புரியாமல் இயேசுவைப் பார்த்தார். அவர் ஒரு சிலருடன் சிறுமி இருந்த அறைக்குள் நுழைந்தார். கதவு சாத்தப்பட்டது.

சற்றே திறந்திருந்த சன்னல் வழியாக பிரோகுளா அந்த காட்சியைக் கண்டாள் ! உறைந்து போனாள். இயேசு சிறுமியின் கையைப் பிடித்தார், “தலித்தாகூம்” என்றார். அவ்வளவு தான், சிறுமி எழுந்தாள். அம்மா என்றாள். சலோமியின் ஆனந்தக் கதறல் அந்தக் கதவையே உடைத்திருக்கக் கூடும். தந்தையோ வெட்டப்பட்ட மரம் போல இயேசுவின் காலடியில் விழுந்தார். கட்டிக் கொண்டார்.

பிரோகுலா தன்னை அறியாமலேயே நிலை குலைந்து சரிந்தாள். அந்த அனுபவம் அவளை புரட்டிப் போட்டது. இயேசுவின் மீதான நம்பிக்கையும் அதிகரித்தது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாய் இயேசுவின் போதனைகளையும், செயல்களையும் பார்த்துப் பார்த்து அவரது மறைமுக சீடராகவே மாறிப் போனார்.

இப்படிப்பட்ட சூழலில் தான் இப்படி ஒரு கனவு வந்து அவரைப் புரட்டிப் போட்டது. தூக்கம் வராமல் புரண்டு படுத்தவருக்கு அதிகாலை வேளையில் அந்த சத்தம் கேட்டது.

மிகப்பெரிய கூட்டம் சலசலப்புடன் தூரத்தில் நடந்து வரும் சத்தம். கொஞ்சம் கொஞ்சமாய் அது அவர்களது இருப்பிடத்தை நெருங்குகிறது. வழக்கத்துக்கு மாறான நேரம். என்னவாயிருக்கும் ? தனது உதவியாளரை அழைத்த பிராகுளா விஷயத்தைத் தெரிந்து வர அனுப்பினார். அவன் கொண்டு வந்த செய்தி அவரது மனக் கலவரத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.

இயேசுவைக் கைது செய்திருக்கிறார்கள். அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் அன்னா, கயபா உட்பட எல்லோரும் பிலாத்துவை நோக்கி வந்திருக்கிறார்கள். அதிகாலையிலேயே கைது. மக்கள் விழித்தெழும் முன் தண்டனை, இது தான் திட்டம். அவளுக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தன.

பிலாத்து ஒருவேளை இயேசுவுக்கு எதிராய் தீர்ப்பிடக் கூடும். காரணம் அவனுக்கு அன்னா, கயபா போன்றவர்களை எதிர்த்து நிற்கும் துணிச்சல் இல்லை. அப்படி இயேசு கொல்லப்பட்டால் அந்த இரத்தப் பழி பிலாத்து மீது விழும். அப்படியானால் அவன் நரகத்தில் எறியப்படுவது உறுதி. “உனக்காக நான் சிந்திய இரத்தத்தை தா” எனும் இயேசுவின் குரல் அவளுக்குள் மீண்டும் எதிரொலித்தது.

அவசர அவசரமாக ஒரு கடிதம் எழுதினாள். “அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன். அவரது இரத்தப்பழி நமக்கு வேண்டாம்” !. அதை பிலாத்துவிடம் சேர்த்துவிட உதவியாளரிடம் கொடுத்தனுப்பினாள்.

பிலாத்து கடிதத்தை வாசித்தான். ஆனால் அவனால் யூத மதத் தலைவர்களின் அதிகாரக் குரலுக்கும், அழுத்தத்துக்கும் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஆனால் மனைவியின் எழுத்துகள் அவனை அலைக்கழித்தன. உடனே எழுந்து “இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என சொல்லி கைகழுவினான்.

இயேசுவின் சிலுவை மரணம் பிரோகுளாவை உலுக்கியது. அவள் சிலுவையின் அடியில் சென்று இயேசுவின் மரணத்தை வலியுடன் பார்த்தார். இயேவின் மரண நேரம் கொண்டு வந்த இருளையும், ஆலய திரையின் கிழிசலும், அதிர்ந்த கல்லறைகளின் திறப்பும் அவளை பதறடித்தன.

இயேசுவின் சிலுவை மரணத்தைக் கண்ட அவரால் அதன் பின் உணவே உட்கொள்ள முடியாமல் போயிற்று. மூன்றாவது நாள் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியைக் கேட்டபின் அவரது கவலைகளெல்லாம் பறந்து போய்விட்டன. சில காலத்துக்குப் பின் பிலாத்துவின் இரத்தப் பாவமோ என்னவோ, மகன் இறந்து போனான். பிரோகுளா அழவில்லை. மாபெரும் பாவ வழிகளில் நடக்காமல் அவன் மாண்டுபோனானே என நினைத்தாள். மாளிகையை விட்டு விட்டு இயேசுவின் சீடர்களில் ஒருவராக மாறிப் போனார்.

பிலாத்துவும் கூட இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபின் மனமுடைந்து தனது தவறுக்கு வருந்தியதாகவும். மனம் மாறியதாகவும், அதனால் படுகொலை செய்யப்பட்டதாகவும் கதைகள் உலவுகின்றன.

கிளாடியா பிரோகுளா திருத்தூதர் பவுலிடம் திருமுழுக்குப் பெற்றதாகவும், அதன் பின் இறை பணி செய்ததாகவும் பாரம்பரியக் கதைகள் கூறுகின்றன. “ஆபூல், பூதன்சு, லீனு, கிளாதியா மற்ற எல்லாச் சகோதரர்களும் சகோதரிகளும் உனக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்” ( 2 திமோ 4 :21 ) எனும் வசனத்தில் வருகின்ற கிளாதியா, பிலாத்துவின் மனைவி கிளாடியா பிரோகுளா தான் என்பது பல ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.

இவர் இயேசுவுக்காகவே வாழ்ந்து, கொலை செய்யப்பட்டதாகவும் இரத்தசாட்சிகளின் பட்டியலில் இணைந்ததாகவும் ஆதிகாலப் பதிவுகளில் சில கூறுகின்றன. இவர் சில பாரம்பரியத் திருச்சபைகளால் “புனிதராகவும்” போற்றப்படுகிறார். அக்டோபர் 27ம் நாள் அவரது நினைவு நாள் கொண்டாடப்படுகிறது.

இயேசுவைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கத்தோடு கடைசி நிமிடத்தில் கூட முயன்ற கிளாடியா பிரோகுளாவின் துணிச்சலும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நற்செய்தியை அறிவிக்க அவர் கொண்ட தாகமும் நமக்கு வியப்பைத் தருகின்றன

*

சேவியர்

Posted in Articles, Beyond Bible

இவர்கள் என்ன ஆனார்கள் – 9 அரிமத்தியா யோசேப்பு

இவர்கள் என்ன ஆனார்கள்
அரிமத்தியா யோசேப்பு

அன்னாவும் கயபாவும் கோபத்தில் கொந்தளித்தனர். அவர்களுடைய கண்கள் சிவந்து அனலடித்தன. அவர்களுக்கு முன்னால் யூத மதத்தலைவர்கள் சிலர் நின்றிருந்தனர்.

“என்ன திமிர்… என்ன திமிர்….. யோசேப்பு செய்ததை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்தி விட முடியாது “ கயபா கொதித்தார்.

“ஆமாம்… தலைமைச்சங்க, செனதரீம் , உறுப்பினராக இருந்து கொண்டே அவரும் நிக்கோதேமுவும் செய்த காரியம், நம்ம குழுவுக்கே அவமானம். நமது குழுவின் மீது இருக்கின்ற மரியாதை பொதுமக்களிடம் குறைய இது ஒன்றே போதும்” அன்னா கொந்தளித்தார்.

“இதற்கு ஏதேனும் செய்தே ஆகவேண்டும். இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லவே நாம் படாத பாடு பட்டோம். மக்களுடைய மாபெரும் வெறுப்பைச் சம்பாதிக்க இருந்தோம். எப்படியோ வெற்றிகரமாக அவனை ஒழித்தாயிற்று. அப்படியே விட்டிருக்க வேண்டும். யோசேப்பு செய்த காரியம் மன்னிக்க முடியாதது. திரியில் எண்ணை ஊற்றி தூண்டி விடும் விஷயம் “ ஒரு மத குரு வெறுப்பை உமிழ்ந்தார்.

“எனக்கு புரியல.. என்ன நடந்தது ?” வயதான ஒருவர் குழப்பமாய்க் கேட்டார்.

“இது கூட தெரியாமல் இருக்கிறீரே… சிலுவையில் இறந்து தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை அடக்கம் செய்ய அனுமதி கேட்டிருக்கிறான் யோசேப்பு.. அதுவும் பிலாத்துவிடம். நமது சங்கத்தில் வந்து கேட்டால் அனுமதி கொடுக்க மாட்டோம் என அவனுக்குத் தெரியும். அதனால் தான் நம்மிடம் வராமல் நேராக பிலாத்துவிடம் போய் அனுமதி வாங்கியிருக்கிறான் “

“அது மட்டுமல்ல, அவனுக்காக வைத்திருந்த கல்லறையிலேயே அடக்கம் செய்திருக்கிறான் “

“எல்லாமே பக்காவாக திட்டம் போட்டு காய் நகர்த்தியிருக்கிறான். ஆறுமணிக்கு மேல் ஓய்வு நாள் ஆரம்பமாகிறது. இயேசு இறந்தது மூன்று மணிக்கு. வெறும் மூன்று மணி நேரம் தான் இருந்தது. அதனால் நேரடியாக பிலாத்துவிடமே போய் அனுமதி வாங்கியிருக்கிறான் “

“மூன்று மணி நேரத்தில் எப்படி சாத்தியப்படுத்தினான் “

“உடலை கீழே இறக்கி, புதிய துணிகளால் சுற்றிக் கட்டி அருகில் இருந்த அவனது கல்லறையிலேயே வைத்து விட்டார்கள். தூரமான இடத்துக்குக் கொண்டு போனால் நேரமாகிவிடும், ஓய்வு நாள் ஆரம்பமாகிவிடும் என அவனுக்குத் தெரியும். ஓய்வு நாளுக்கு முன் எல்லாவற்றையும் பக்காவாகச் செய்து விட்டு நம்முடைய ஓய்வைக் கெடுக்கிறான்”

“ஆமா, அவன் இறந்த உடலைத் தொட்டால் தீட்டாகிவிடுவானே… அவனால் திருவிழாவைக் கொண்டாட முடியாதே… “

“அதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவனுக்கும் இப்போது நமது சட்டங்கள் வழக்கங்கள் எல்லாவற்றையும் விட இயேசு தான் முக்கியமாய் படுகிறார்”

“நான் முன்னமே சொல்லியிருக்கிறேன். யோசேப்பும் நிக்கோதேமுவும் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை என்று. நிக்கோதேமு தனியாக இயேசுவைப் போய் சந்தித்த விஷயத்தையும் நான் சொல்லியிருக்கிறேன். முன்னரே நாம் உஷாராகியிருக்க வேண்டும். “

“இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அவனை இழுத்து வந்து நமது சட்டத்தின் படி அவனைச் சிறையில் அடைக்க வேண்டும்”

அந்த அவை யோசேப்பு மீதான வெறுப்பினால் கனன்று கொண்டிருந்தது. யோசேப்பு செல்வந்தர். செனதரீம் குழுவில் செல்வாக்கு மிக்கவர். பிலாத்துவிடமும் அவனுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. காரணம் யோசேப்பு ஒரு வியாபாரியாகவும் இருந்தார். அதனால் அரண்மனையோடான தொடர்பு அவனுக்கு அழுத்தமாக இருந்தது.

செல்வாக்கு இல்லாத செல்லாக்காசாக இருந்திருந்தால் ஒரு மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல நசுக்கியிருப்பார்கள். ஆனால் இப்போது நிலமை கை மீறிப் போய்விட்டது. யூத நிர்வாகக் குழுவே இரண்டாகப் பிளந்தது என ஊரார் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். எனவே யோசேப்புவைச் சிறையில் அடைத்தே ஆகவேண்டும் எனும் முடிவு அங்கே எடுக்கப்பட்டது.

யோசேப்பு அழைத்து வரப்பட்டார். சபையின் முன்னால் நிறுத்தப்பட்டார். அவருக்குத் தெரியும், இங்கே இருக்கும் யாருமே தனக்காகப் பேசப் போவதில்லை. எனவே அவர் எதற்காகவும் பதட்டப்படவில்லை.

“நீ செய்த காரியத்தால் எங்களுக்கெல்லாம் தலை குனிவு” கயபா தான் கர்ஜித்தான்.

“வாழ்வு தர வந்தவருக்கு, கல்லறை கொடுத்தேன். அந்தரத்தில் தொங்கியவரை இறக்கி இறுதிச் சடங்கு செய்தேன். இதில் என்ன தவறு ? அது மட்டுமல்ல, அவர் மீதான உங்களுடைய குற்றச் சாட்டுகள் நேர்மையானவை அல்ல என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும் “ யோசேப்பு சொன்னார்.

“எங்கள் தீர்ப்பின் மீதே கேள்வி கேட்க உனக்குத் துணிச்சல் வந்தது ஆச்சரியம் தான். உன்னை சிறையில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை. என்ன சொல்கிறீர்கள் ? இவனை சிறையில் அடைக்க யாரெல்லாம் ஒத்துக் கொள்கிறீர்கள்”

எல்லா கரங்களும் உயர்ந்தன. யோசேப்பு சிரித்தார். “தீர்ப்பினை எழுதிவிட்டு விசாரணை செய்கிறீர்கள். நான் நம்பும் இயேசு என்னை விடுவிப்பார். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்”

“ஹா..ஹா.. அப்படியா.. பார்ப்போம்… உன்னோட இயேசுவை வெச்ச கல்லறைக்கே சீல் வெச்சாச்சு.. உன்னையும் சிறையில போட்டு, சிறைக்கு சீலும் வைக்கப் போறோம். என்ன நடக்குதுன்னு பாப்போம். இன்னிக்கு ஓய்வு நாள். ஓய்வு நாள் முழுசும் பட்டினியா அந்த இருட்டு அறையிலே கிட, நாளைக்கு பேசுவோம்”

யோசேப்பு இழுத்துச் செல்லப்பட்டார். இருட்டு அறை ஒன்றில் அடைக்கப்பட்டார். அந்த அறை இருட்டின் கரங்களில் இருந்தது. யோசேப்பு பயப்படவில்லை. அந்த அறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இறைவனை நோக்கி மன்றாடினார்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. சிறையில் யோசேப்பு செபித்துக் கொண்டிருந்தார். ஓய்வு நாள் முடியப்போகிறது. நள்ளிரவு நேரம் திடீரென ஒரு ஒளி அந்த அறையை நிரப்பியது. யாரோ அவரைத் தூக்கி நிறுத்தினார்கள். தலையில் தண்ணீர் கொட்டப்பட்டது. யோசேப்பு திடுக்கிட்டார். என்ன நடக்கிறது என குழம்பி நிமிர்ந்தவருடைய நாசியில் எண்ணையின் வாசம் வீசியது.

“யோசேப்பு பயப்படாதே..” என ஒரு குரல் கேட்டது. யாரோ அவருடைய கன்னத்தில் முத்தமிட்டார்கள். யோசேப்பு கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே இயேசு நின்றிருந்தார். வெலவெலத்துப் போன யோசேப்பு, நீங்கள் இறைவாக்கினர் எலியாவா ? என கேட்டார்.

“இல்லை, நீ சிலுவையிலிருந்து இறக்கி, துணியைச் சுற்றி, உனக்கான கல்லறையில் அடக்கம் செய்த இயேசு நான் தான்” என்றார் அவர். “அ..அப்படியானால் நான் உங்களை எங்கே அடக்கம் செய்தேன்” என்பதைக் காட்டுங்கள் என்றார் யோசேப்பு.

கதவுகள் அடைபட்டிருக்க, சீல் உயிர்ப்புடன் இருக்க யோசேப்பு சிறையை விட்டு வெளியே வந்தார். இயேசு அவரை கல்லறை அருகே அழைத்துச் சென்றார். யோசேப்பு என்ன நடக்கிறது என்பதைப் புரியாமல் இருந்தார். தோற்ற மயக்கமாய் இருக்குமோ என அவருக்குத்தோன்றியது. அடுத்து அவர் தனது சொந்த வீட்டுக்குக் கூட்டிச் செல்லப்பட்டார். கதவுகள் அடைக்கப்பட்டிருக்க அவர்கள் உள்ளே சென்றார்கள்.

அவரை படுக்கையில் கிடத்திய இயேசு, “நாற்பது நாட்கள் நீங்கள் இங்கே தங்கியிருங்கள்” அதன் பின் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குச் சொல்லப்படும் என சொல்லி விட்டு மறைந்தார். கனவா நிஜமா என குழம்பிய நிலையிலிருந்த யோசேப்பு இப்போது இயேசுவின் தீவிர சீடனாக மாறியிருந்தார்.

இப்படி ஒரு சுவாரஸ்யமான கதை “நிக்கோதேமு திருமுகம்” எனும் நூலில் எழுதப்பட்டிக்கிறது. இது ஆதிகால நூல். இதை பிலாத்துவின் நடபடிகள் என்றும் அழைக்கின்றனர். இதை எழுதியவர் நிக்கோதேமு அல்ல. பல எழுத்துகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது. இவை நிஜமும் புனைவும் கலந்த எழுத்துகளாகவே காட்சியளிக்கின்றன.

கிமு நான்காம் நூற்றாண்டுகளில் இது இறுதி வடிவம் பெற்றது. பழைய கால நூல்களில் அதிகம் அறியப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

இயேசுவின் இறப்பு உயிர்ப்புக்குப் பின் அரிமத்தியா யோசேப்பு என்ன ஆனார் என்பதைக் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் பைபிளுக்கு வெளியே நமக்குக் கிடைக்கின்றன. தகவல்களுக்கிடையே ஏகப்பட்ட முரண்கள் உண்டு, ஆனால் எல்லா தகவல்களுமே ஒரே மாதிரி சொல்கின்ற விஷயம், “யோசேப்பு இயேசுவை ஏற்றுக் கொண்டார், நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார்” என்பது தான்.

இயேசுவால் விடுவிக்கப்பட்ட யோசேப்பு மீண்டும் தலைமைச் சங்கத்தின் முன்னால் சென்று தைரியமாக இயேசுவின் உயிர்ப்பையும், அவரது மகிமையையும் உரக்கப் பறை சாற்றினார். ஏற்கனவே எரிச்சலில் இருந்த தலைமைச் சங்கம் இவரையும், இவரோடு இயேசுவின் சீடர்கள் சிலரையும் சேர்ந்த்து ஒரு கப்பலில் அடைத்து இலக்கில்லாமல் கடலில் பயணிக்க விட்டார்கள். மாலுமியற்ற கப்பல் கடலில் அலைந்து திரிந்து இங்கிலாந்துக் கடற்கரையோரம் சென்று சேர்ந்தது.

இங்கிலாந்தில் சென்று சேர்ந்த அரிமத்தியா யோசேப்பு அங்கு நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார். இங்கிலாந்து நாட்டில் முதன் முதலாக நற்செய்தியை அறிவித்தவர் இவர். இவர் கிளாஸ்டன்பெரியில் திருச்சபையைக் கட்டியெழுப்பி அதன் ஆயராக இருந்துப் பணியாற்றினார் என்கின்றன பல குறிப்புகள். யோசேப்பு தன்னுடன் பதினோரு பேரைச் சேர்த்துக் கொண்டு ஒரு குழுவாகப் பணியாற்றினார் எனவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தெர்த்தூலியன், ஜெசூபியஸ் உட்பட பலரும் கிபி 150 களுக்கு முன்பே இங்கிலாந்தில் கிறிஸ்தவம் கால் பதித்ததை உறுதிப்படுத்துகின்றனர். ஆதிகாலத் திருச்சபை வரலாற்றின் தலைசிறந்த ஆய்வாளர்களான ஐரேனியுஸ், தெர்த்தூலியன், ஹிப்போலெடஸ் உட்பட பலரும் யோசேப்பு குறித்த தகவல்களை எழுதி வைத்துள்ளனர்.

மரிய மதலேனாவின் வாழ்க்கை வரலாற்றை ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதிய, திருச்சபைத் தலைவரான ரபானஸ் மாரஸ் அரிமத்தியா யோசேப்பு இங்கிலாந்து வந்து நற்செய்தி அறிவித்தார் என்றும், அவருடன் லாசர், மார்த்தா, மரியா, புனித சலோமி, புனித எத்ரோபியஸ், புனித மாரிதல், புனித திரோபிமஸ் ஆகியோரும் இணைந்திருந்தனர் என்றும் குறிப்பிடுகிறார். யோசேப்பு பல புதுமைகளை நிகழ்த்தினார் என்றும் பழங்காலக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆதிகாலக் கதையான ‘ஹோலி கிரில்’, இயேசுவின் குருதியை ஏந்திய பாத்திரம், இவரிடம் தான் முதலில் இருந்தது என்கின்றன கதைகள். பல்வேறு புனை கதைகளுக்கு எண்ணை ஊற்றிய இந்த சிந்தனை நூற்றாண்டுகள் தாண்டியும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது குறிப்பிடத் தக்கது.

சுவாரஸ்யமான இன்னொரு குறிப்பு அரிமத்தியா யோசேப்பு, இயேசுவின் நெருங்கிய உறவினர் என்கிறது. மரியாவின் தந்தையான யோவாக்கிமின் இளைய சகோதரர் தான் இந்த யோசேப்பு என்றும், இயேசுவின் தந்தையான யோசேப்பு இறந்த பின் இயேசுவைப் பராமரித்தது இந்த யோசேப்பு தான் என்றும், இயேசுவின் பால்ய வயதிலேயே இவர்கள் இருவரும் இங்கிலாந்திற்கு வந்ததுண்டு என்றும் தெரிவிக்கிறது.

அரிமத்தியா யோசேப்பு இங்கிலாந்திலேயே நற்செய்தி அறிவித்து அங்கேயே கிளாஸ்டன்பரியில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறை “இயேசுவை அடக்கம் செய்தபின் நான் இங்கிலாந்து வந்தேன், கற்பித்தேன், இப்போது ஓய்வெடுக்கிறேன்” என்கிறது.

பாரம்பரியக் கிறிஸ்தவ அமைப்புகளில் யோசேப்பு புனிதராகப் போற்றப்படுகிறார். கர்த்தருக்குக் கல்லறை கொடுத்தவரை வரலாறு கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறது !

அரிமத்தியா யோசேப்பின் கதை நிஜமும், புனைவும் கலந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் இயேசுவின் சீடராக மாறி பணியாற்றினார் என்பதிலும் சந்தேகமில்லை.

*

சேவியர்

Posted in Articles, Beyond Bible

இவர்கள் என்ன ஆனார்கள் – சிரேனே ஊரானாகிய சீமோன்

இவர்கள் என்ன ஆனார்கள்

சிரேனே ஊரானாகிய சீமோன்

“ஏய்… நீ.. நீதான் “

என்னை நோக்கி ஒரு படைவீரன் கூப்பிட்டபோது அதிர்ந்து போனேன். அப்போது தான் வயல்வெளியிலிருந்து வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன். நாளை ஓய்வு நாள், வேலை பார்க்க முடியாது. இருக்கும் ஒரு சில வேலைகளையும் இன்றே முடித்துவிட வேண்டும் எனும் சிந்தனை மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

வரும் வழியில் தான் அவரைப் பார்த்தேன். சிலுவையை சுமந்து கொண்டு தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார். சிலுவை சுமந்த மனிதர்களைப் பார்ப்பதொன்றும் எனக்குப் புதிதல்ல. இதற்கு முன்பும் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு நான் பார்த்த காட்சி மிகவும் வித்தியாசமானது. அதிச்சியளிப்பதாக இருந்தது.

சிலுவை சுமந்து வந்தவருக்கு ஒரு முப்பது வயதிருக்கலாம். ஆனால் அவர் உடல் முழுவதும் சாட்டையோ, முள்ளோ, இரும்பு ஆயுதங்களோ தங்கள் மூர்க்கத்தனத்தைக் காட்டியதன் அடையாளம் இடைவெளியின்றி நிரம்பியிருந்தது. சிவப்புச் சாயத்தில் மூழ்கி எழுந்தவர் போல் இருந்தார். தூரத்தில் வேறு இருவர் சிலுவைகளோடு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் வழக்கமான குற்றவாளிகளைப் போல தெரிந்தனர். அவர்களை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை.

ஆனால் இந்த மனிதரைச் சுற்றி மட்டும் பெண்கள் ஒப்பாரி வைப்பதும், மக்கள் கூட்டம் நெருங்கியடிப்பதுமாய் இருந்தது. இவர் யாராய் இருப்பார் ? என நினைத்துக் கொண்டே அவரைப் பார்த்தேன். அவரது தலையில் ஒரு முள்முடி வழக்கத்துக்கு மாறாக ஆச்சரியமூட்டியது. அதிலிருந்த முட்கள் அவரது தலையை துளைத்து நுழைந்திருக்க வேண்டும். முகம் முழுவதும் இரத்தம் இன்னும் வழிந்து கொண்டிருந்தது.

அவரைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவர் நெருங்கி வந்தார். எனக்கு அருகே வந்தபோது தடுமாறி விழுந்தார். நான் பதறிப் போய் இரண்டடி பின்வாங்கினேன். அப்போது தான் அந்தக் குரல் கேட்டது.

“ஏய்… நீ.. நீதான் “

நானா.. நான் அதிர்ந்தேன். நான் எதுவும் பண்ணவில்லை… இப்போ தான் வயலிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். பதட்டத்தில் நான் சொன்னேன். அவர் விழுவதற்கு நான் தான் காரணம் என நினைத்து விட்டார்களோ ? அமைதியாய்ப் போய்க்கொண்டிருக்கும் என் வாழ்க்கையில் சிக்கல் வந்து விட்டதோ ?

‘அவனோட சிலுவையைத் தூக்கிட்டு அவனுக்குப் பின்னாடி வா’

என்னது ? சிலுவையைத் தூக்கிட்டு பின்னாடி வரதா ? நானா ? குற்றவாளி தான் சிலுவையைச் செய்து அதைத் தூக்கிக் கொண்டும் வரவேண்டும் எனும் முறை இருக்கிறதே. நான் தூக்குவதா, நான் தூக்கினால் நான் குற்றவாளி என்றல்லவா கூட்டம் நினைக்கும் ? அல்லது நான் இந்த மனிதருடைய கூட்டாளி என்றல்லவா கூட்டம் நினைக்கும் ? சிலுவையைச் சுமந்து கொண்டு போன பின்பு என்னை ஒருவேளை இதில் வைத்து அறைந்தால் என்ன செய்வது ? கண நேரத்தில் எனது மனதில் ஆயிரம் கேள்விகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளாய் வந்து தைத்தன.

இல்லை.. இல்லை.. நானில்லை.. வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏய்…நீ தான் தூக்கணும்.. தூக்கு.. தூக்கு.. கல்வாரி மலை வரைக்கும் தான். சிலுவையைக் கொண்டு போட்டுட்டு நீ போயிட்டே இருக்கலாம்…. என்ன பாக்கறே தூக்கு, தூக்கு.

படைவீரர்களின் குரலில் அனுமதியோ, விண்ணப்பமோ இருக்கவில்லை. ஒரு கட்டாயத்தின் தொனி தான் இருந்தது. அவர்களிடம் இப்போது முரண்டு பிடிக்க முடியாது. முடியாது என்று சொல்ல முடியாது. இயேசுவைச் சுற்றி வருபவர்களில் என்னைப் போல திடகாத்திரமான ஆண்களும் இல்லை. நான் உள்ளூர்க் காரனும் அல்ல. வேறு வழியில்லை. என்ன செய்ய ? அதட்டலுக்குப் பணிந்து தான் ஆக வேண்டும்.

எனக்கு சொந்த ஊர் கூட எருசலேம் அல்ல. நான் சிரேன் ஊரைச் சேர்ந்தவன். எருசலேமுக்கு மேற்கே சுமார் 1260 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது எனது ஊர். வட ஆப்பிர்க்காப் பகுதி. லிபியாவுக்குக் கிழக்குப் பகுதியில் இருக்கிறது. அங்கே சுமார் ஒரு இலட்சம் யூத குடும்பங்கள் உண்டு. யூதர்கள் அங்கே குடியேறியதே ஒரு பெரிய கதை. அதற்கு கிமு 323 ம்மும் 285க்கும் இடைப்பட்ட காலங்களில் ஆட்சியமைத்த மன்னன் தாலமி காலத்துக்குப் போக வேண்டும். அவன் தான் கட்டாயமாக யூதேயாவிலுள்ள யூதக் கூட்டத்தை அங்கே விரட்டியவன்.

அங்கிருந்து ஆண்டு தோறும் திருவிழாவுக்காக இங்கே வருவது வழக்கம். இதோ பாஸ்கா வருகிறது, அதற்கான வருகை தான் இது. அங்கிருந்து இங்கே வந்து சேர்வதற்கே வாரக்கணக்காகி விடும்.

நான் குனிந்தேன். வேறு வழியில்லை. படைவீர்கள் என்னைத் தாக்கிவிடுவார்களோ எனும் பயமும் உண்டு. குனிந்த போது தான் கீழே விழுந்து கிடந்த அந்த நபரை நான் அருகில் பார்த்தேன். அதிர்ந்து போனேன்.

அவரது குருதியில் குளித்த உடலைக் கண்டதால் அல்ல, அவரது தீர்க்கமான கண்களைக் கண்டதால். பொதுவாக குற்றவாளிகளின் கண்கள் குரூரத்தில் நிரம்பியிருக்கும், அல்லது. குற்ற உணர்வில் நிறைந்திருக்கும், அல்லது பயத்தில் பதறியிருக்கும், அல்லது சோகத்தில் நிறைந்திருக்கும். ஆனால், அவருடைய கண்களோ எதுவுமே இல்லாமல் சாந்தமாய் இருந்தன. ஏதோ ஒரு இலட்சியத்தின் எல்லையை எட்டிப் பிடிக்கப் போகும் தீர்க்கத்தில் தீட்டப்பட்டிருந்தன.

படைவீரர் இருவர் சிலுவையைத் தூக்கி என் தோளில் போட்டார்கள். கைகளால் அதைப் பிடித்தேன். அது ஒரு மரக்கட்டை தான். கைகளை அறைகின்ற அந்த குறுக்குச் சட்டம். அதைத் தான் கைதிகள் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும். பொதுவாக அதில் குற்றவாளிகளின் பெயரும், அவர்களுடைய குற்றங்களும் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இதில் எதுவும் எழுதப்படவில்லை.

நான் எழுந்தேன். என் கைகளெங்கும் பிசுபிசுப்பாய் இரத்தம். அந்த இரத்தம் என் தோளிலும் என் ஆடையிலும், தலையிலும் படிந்தது. என் கைகள் இரத்தத்தால் வழுக்கின. மனதுக்குள் அவமானம் நிரம்பியது. என் மகன் அலெக்சாண்டரும், ரூபுவும் இப்போது என்னைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் ? என் மனைவிக்கு விஷயம் போனால் எப்படி எடுத்துக் கொள்வார். நான் ஒரு குற்றவாளியைப் போல குறுகினேன்.

‘சிலுவையையும் சுமந்து கொண்டு போனான்னா இயேசு மலையில போய்ச் சேர்ரதுக்கு முன்னாடி செத்துட்டாலும் செத்துடுவாரு.. அவரு சிலுவையில தொங்கி தான் சாகணும். அதனால தான் இவன் தோள்ல சிலுவையை தூக்கி வெச்சேன்’ என என்னைக் கைகாட்டி ஒருவன் எனக்கு அருகில் பேசிக்கொண்டே வந்தான். அப்போது தான் அவருடைய பெயர் இயேசு என்று தெரிந்தது.

நான் அவரைப் பார்த்தேன். அவரது உடலிலிருந்த இரத்ததில் பெரும்பான்மையும் ஏற்கனவே வெளியேறியிருக்க வேண்டும். அவரது நடை பின்னியது. பாதைகளெங்கும் இரத்தத் துளிகள் விழுந்து கொண்டே இருந்தன. உண்மை தான். இந்த பளுவையும் சுமந்தால் ஒருவேளை அவரது உயிர் விரைவிலேயே விடைபெறக் கூடும் என நான் நினைத்துக் கொண்டேன்.

‘இயேசுவே… இயேசுவே.. உமக்கா இந்த நிலை’ என பெண்களின் கூட்டம் ஒப்பாரி வைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தது. நான் ஆச்சரியப்பட்டேன். ஒரு குற்றவாளிக்கு இத்தனை ரசிகர்களா ? இயேசு நடந்து கொண்டே சொன்னார். ‘எனக்காக அழாதீர்கள், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’ ! எனக்கு வியப்பாக இருந்தது. இந்த நிலையில் எப்படி ஒரு மனிதரால் இவ்வளவு தீர்க்கமாக, இவ்வளவு தெளிவாக ஒரு அறிவுரையைக் கொடுக்க முடியும் ?

சற்று தூரம் சென்றதும் ஒரு குரல் கேட்டது. ‘என்னுடைய கண்ணுக்குப் பார்வை தந்தது நீங்க தானே இயேசுவே… உங்களுக்கா இந்த நிலமை’ ! என் வியப்பு அதிகரித்தது. ஒருவருக்குப் பார்வை கொடுக்குமளவுக்கு இவருக்கு சக்தி இருக்கிறதா ? இவர் மந்திரவாதியா ? சித்து வேலை தெரிந்தவரா ?

‘என்னோட பேய்களை ஓட்டினீரே இயேசுவே… உம்மை இப்படிச் செய்து விட்டார்களே…’ அடுத்த குரல் என்னைப் புரட்டிப் போட்டது. பேய்களையும் ஓட்டியிருக்கிறாரா ? அப்படியானால் இவர் நிச்சயம் பெரிய மனிதராய் தான் இருப்பார் போல…

என்னுடைய சிந்தனையை தடுத்தது அடுத்த குரல், “எங்களுடைய தொழுநோயைக் குணப்படுத்தினீரே”. இப்போது என்னால் அதிர்ச்சியையும் வியப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன நடக்கிறது ? யார் இவர் ? அவ்வளவு பெரிய நபருக்கு ஏன் இந்த நிலை ? எலிசா இறைவாக்கினர் தொழுநோய் குணப்படுத்தியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மனிதருமா ? அதெப்படி சாத்தியம் ? அப்படியானால் இவர் இறைவாக்கினரா ?

‘செத்தவங்களுக்கும் உயிர் குடுத்தீரே இயேசுவே, உங்களைச் சாகடிக்க கொண்டு போறாங்களே’ ! கடைசியாய்க் கேட்ட குரல் என்னை நிலைகுலைய வைத்தது. என்னது !!, இறந்தவரை உயிர்த்தெழச் செய்திருக்கிறாரா ? உண்மையாகவா ? அப்படியானால் இவர் கடவுளின் அருள் பெற்றவராய்த் தான் இருக்க வேண்டும். இப்போது எனது தோளில் இருந்த சிலுவை எனக்கு பாரமாய்த் தோன்றவில்லை. ஆனால் மனதுக்குள் நான்கைந்து சிலுவைகளை புரட்டி வைத்த பாரம் உருவானது.

சட்டென எனது நடை தளர்ந்தது.

‘ஏய்… பாத்து நட.. இன்னும் கொஞ்ச தூரம் தான்…. ‘ படைவீரனின் குரல் என் காதுகளைத் தீண்டியது. எனக்கு இப்போது அவமானமாய் இல்லை. சிலுவையைச் சுமந்து கொண்டு போகிறேனே, என்னை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் எனும் கவலை இல்லை. பெருமையாய் இருந்தது. ஏதோ ஒரு பெரிய மனிதரின் சிலுவையைச் சுமக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

படைவீரர்களின் அதட்டலையும் மீறி வழி நெடுகிலும் இயேசுவின் வல்லமை பற்றியும், அன்பைப் பற்றியும் மக்கள் ஒப்பாரியுடன் சத்தமிட்டுக் கொண்டே வந்தார்கள். இவரை இந்த கோலத்திலா சந்திக்க வேண்டும். இதற்கு முன் ஒரு முறையாவது சந்தித்திருக்கலாமே என என் மனம் அடித்துக் கொண்டது. என்ன செய்ய ? இப்போது பேசி பயனில்லை.

இவரைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். இவர் யாராக இருப்பார் ? எங்கிருந்து வந்திருப்பார் ? கேள்விகளினால் என் மனம் நிரம்பியபோது கல்வாரி மலை நெருங்கியிருந்தது. சிலுவையை என் தோளிலிருந்து கீழே போட்டேன். வீரர்கள் அதைத் தூக்கிக் கொண்டு சென்று அதில் இயேசுவைத் தூக்கிப் போட்டார்கள்.

அவரை அந்த கோலத்தில் பார்க்க முடியவில்லை. இப்போதும் மறுப்பு இல்லை, கதறல் இல்லை, வலியில் வெடிக்கும் வசை மொழிகள் இல்லை. அமைதியாக இருந்தார். வலியின் கோரம் அவரது முகத்தில் தெரிந்தது, ஆனாலும் அவர் அதை ஏற்றுக் கொண்ட விதத்தை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரை சிலுவையில் அறைந்தார்கள். சிலுவையின் உச்சியில் அவரை ஏறிட்டுப் பார்த்தேன். ஏதோ பேசுவதாய் தோன்றியது. கவனித்தேன்..

“தந்தையே.. இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை” அவரது குரல் என்னை அதிர்ச்சியின் உச்சியில் எறிந்தது. இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா ? உண்மையிலேயே இவர் இறைவாக்கினர் தான். என நான் நினைத்துத் திரும்பிய போது, அதே வார்த்தையை ஒரு படைவீரரும் தன்னோடு இருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டேன்.

இதுதான் அன்றைக்கு நடந்தது. அதன் பின்னர் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவருடைய சீடர்களைச் சென்று சந்தித்தேன். மூன்றாம் நாளில் இயேசு உயிர்த்து விட்டார். இப்போது எங்களுடைய விசுவாசம் ஆழப்பட்டது. நானும் என் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் நற்செய்தி அறிவித்தலுக்காக எங்களை முழுமையாகக் கையளித்தோம்.

சிலுவை சுமக்க எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. இயேசுவுக்குக் கடைசியா உதவி செய்யக் கிடைத்த அற்புத வாய்ப்பு. சிலுவையைச் சுமந்து கொண்டு அவருக்குப் பின்னால் செல்ல வேண்டியது எனக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு.

சிரேனே ஊரானாகிய சீமோன் குறித்த தகவல்கள் பைபிளுக்கு வெளியே ஆதிகால எழுத்துகளிலும், செவி வழிக் கதைகளிலும், பாரம்பரிய செய்திகளிலும் பரவலாய்க் காணப்படுகின்றன. சீமோன் இயேசுவின் சிலுவையைச் சுமந்தபின், அவரது குருதியின் பிசுபிசுப்பைக் கைகளில் ஏந்தியபின் முழுமையாக அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் மனிதராய் மாறினார் என்கின்றன அந்தக் கதைகள்.

அவரும் அவருடைய பிள்ளைகள் அலெக்சாண்டர் மற்றும் ரூபு இருவருமே தந்தையின் வழியில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள். அவருடைய மனைவியும் கிறிஸ்தவ நெறியை ஏற்றுக் கொண்டு நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார்.

தூய ஆவியானவர் நெருப்பு நாக்கு போல இறங்கிய நூற்று இருபது மனிதர்களில் இவர்களும் அடக்கம் என்கின்றன மரபு வழிக் கதைகள்.

இவர்களில் ரூபுவும், அவரது அன்னையும் உரோமை நகருக்குச் சென்று அங்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தனர். திருத்தூதர் பவுலுடன் நெருங்கிய அன்பும் நட்பும் கொண்டிருந்தனர். உரோமைக்கு பவுல் செல்லும் முன் இவர்கள் உரோமை நகரில் இயேசுவைப் பற்றி அறிவித்தனர். “ஆண்டவர் பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூபுக்கும் அவர் அன்னைக்கும் வாழ்த்துக் கூறுங்கள். அவருடைய அன்னை எனக்கும் அன்னை போன்றவர் “ என பவுல் உரோமையருக்கான தனது கடிதத்தில் குறிப்பிடும் ரூபு, சிரேனே ஊரானாகிய சீமோனின் மகன் என்பது திருச்சபையின் நம்பிக்கை.

அவரது இன்னொரு மகன் அலெக்சாண்டர் எருசலேமிலேயே தங்கியிருந்தார். 1941ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ஒரு கல்லறையில், “ சிரேனே ஊரானாகிய சீமோனின் மகன் அலெச்காண்டர்” என எழுதப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இது அந்த சீமோனின் மகன் தான் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எனில் அலெக்சாண்டர் எருசலேம் பகுதிகளிலேயே தங்கி நற்செய்தி அறிவித்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

சீமோன், ஒரு யூதர் என பெரும்பான்மையானவர்கள் நம்புகின்றனர். ஆனால் இவர் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்றும், பிற இனத்து மனிதர் என்றும் இவரைப் பற்றிய நம்பிக்கைகள் பலவாறு பேசுகின்றன. அதனால் தான் கூட்டத்தில் தனியே தெரிந்த அவரை படைவீரர்கள் அழைத்து சிலுவை சுமக்கச் செய்தனர் எனும் கருத்தும் பரவலாக உண்டு. புனித ஆனி கேத்தரின் எமரிக் எழுதும் போது, “சீமோன் ஒரு பிற இன மனிதர்” என குறிப்பிடுகிறார். இந்தப் புனிதர் காட்சிகளைக் காண்பதில் இறை வரம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஸ்தேவானின் மரணத்திற்குப் பின்பு சீரேன் ஊரானாகிய சீமோன், அந்தியோக்கியாவுக்குச் சென்று அங்கே நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார் என மரபு வழிக் கதைகள் மூலம் தெரிய வருகிறது. திருத்தூதர் பணிகள் நூலிலும் இதைப்பற்றி மறைமுகக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு நபருடைய குடும்பத்தின் மூலமாக மூன்று வெவ்வேறு இடங்களில் நற்செய்தி அறிவிக்கப்பட்டது என்பது வியப்பான விஷயம்.

“என் பெயரில் ஒரு குவளை குளிர்ந்த நீர் கொடுப்பவனும் அதற்குரிய கைமாறு பெறாமல் போகான்” என்றார் இயேசு. இங்கே சீமோன் செய்த சிறு உதவி அவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும், கோடிக்கணக்கான மக்களின் மனதில் அவரைப் பற்றி சிந்திக்கவும், மரியாதை செலுத்தவும் வைக்கிறது. அவர் வெறும் வழிப்போக்கர் அல்ல, அவர் இறைவனின் வழியில் போகிறவர், அவரை மறந்து விடக் கூடாது என்பதற்காகவே அனைத்து நற்செய்திகளும், சிரேனே ஊரானாகிய சீமோன் என அவரது பெயரை ஊருடன் சேர்த்து தெளிவாக எழுதி வைத்திருக்கின்றன.

பாரம்பரியத் திருச்சபைகள் சிலவற்றில் இவர் புனிதராகக் கொண்டாடப்படுகிறார்.

*

சேவியர்

Posted in Articles, Beyond Bible

இவர்கள் என்ன ஆனார்கள் : மால்கு ( மல்குஸ் )

இவர்கள் என்ன ஆனார்கள்

மால்கு ( மல்குஸ் )

+

வலது காதை தடவிப் பார்த்துக் கொண்டேன். எனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தலைமைக் குரு கயபாவின் முக்கியமான பணியாளர்களில் ஒருவராக இருந்தவன் நான். படைகளின் முன்னால் கம்பீரமாகச் செல்லக் கூடிய துணிச்சல் உடையவன். இப்போது படையையும் வேலையையும் உதறிவிட்டு இங்கே நிற்கிறேன்.

“இது தான் அந்தக் காதா ? “ கூட்டம் என்னைப் பார்த்துக் கேட்டது.

“ஆம்” இதே காது தான். மெல்ல தடவினேன். ஒரு மெல்லிய மலரைத் தழுவும் மென்மையுடன் அந்தக் காதைத் தடவினேன். அந்தக் காது அந்த இடத்தில் இல்லாமல் இருந்திருக்கும். ஒற்றைக் காது படை வீரனாய் அவமானங்களை தலைக்கவசங்களில் மறைத்தபடி நான் வாழ்ந்திருக்க நேர்ந்திருக்கும். ஆனால் இப்போதோ துணிச்சலாக மக்கள் முன் நிற்கிறேன். மகிழ்ச்சியுடன் நடந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை, இதே காது துண்டாகித் தரையில் விழுந்து துடித்தது. துண்டாகி விழுந்த காது மீண்டும் ஒன்றாகிய வரலாறு இல்லை. துவக்கி வைத்தது எனது வலது காது தான்.

“கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்” கூட்டம் கேட்டது.

எனது சிந்தனை அந்த ஒரு இரவை நோக்கி வேகமாகப் பாய்ந்தது. தலைமைக்குரு வீரர்களை அழைத்து ஒரு வேலையைக் கொடுத்தது அந்த இரவில் தான்.

‘நமது மறைக்கும், சட்டத்துக்கும் எதிராகப் பேசிக்கொண்டு, தன்னை இறைவன் என அழைத்துத் திரியும் இயேசு என்ற மனிதனைப் பிடிக்க வேண்டும்’. இந்த இரவு முடியும் முன் அவன் என் முன்னால் நிற்க வேண்டும். தலைமைக்குரு கொக்கரித்தார்.

இரவு நேரத்தில் அவனை எப்படி அடையாளம் காண்பது ? அவனும் திடகாத்திரமான பன்னிரண்டு பேரும் ஒரு கூட்டமாகத் தானே இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து தாக்கினால் சேதம் பலமாக இருக்குமே !

அடையாளம் காணும் வேலைக்கு ஆள் இருக்கிறது. அவனது கூட்டத்திலேயே உள்ள யூதாஸ் என்பவன் வெள்ளிக்காசுக்காக வெளிவே வந்து விட்டான். சில்லறையை அள்ளிக் கொடுத்ததும் அவன் நம்ம கையாள் ஆகிட்டான். அவன் உங்க கூட வருவான். இயேசுவை பாத்ததும் ‘ரபி’ ந்னு சொல்லி முத்தம் குடுப்பான். நீங்க அவனை தூக்கிடுங்க.

வீரர்கள் ஆயுதங்களோடும், தீப்பந்தங்களோடும், தடிகளோடும் இயேசுவைத் தேடிப் போனது. அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அவரது போதனைகளில் கர்வமும், ஆணவமும் தெறிப்பதாய் எனக்குத் தோன்றியதுண்டு. எல்லாரையும் சகட்டு மேனிக்குத் திட்டுவதும் கடைசியில், “கேட்கக் காதுடையோன் கேட்கட்டும்” என்று சொல்வதுமாய் என்னை எரிச்சலுக்கு உள்ளாக்கியிருந்தார்.

நான் தான் கூட்டத்தில் முன்னால் சென்றேன். மாபெரும் தாக்குதல் இருக்குமோ என யூதாசிடம் கேட்டேன். “அப்படியெல்லாம் இதுவரை நடந்ததில்லை.. இயேசுவின் கூட்டத்தில் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என நினைக்கிறேன்” என்றான் அவன். ஆனாலும் எனது வாள் உறையில் கூர்தீட்டப்பட்டுக் காத்திருந்தது.

கெத்சமெனே தோட்டத்தில் கும்மிருட்டு காலுடைந்து கிடந்த அந்த பொழுதில் நாங்கள் போனோம். முன்னால் சென்ற யூதாஸ் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டு அவரது கன்னத்தில் முத்தமிட்டான்”. அவ்வளவு தான் நான் முன்னால் பாய்ந்தேன். அடுத்த கணத்தில் அவரைப் பிடித்து இழுத்து வரும் ஆவேசம் என்னிடம் இருந்தது.

“ஆண்டவரே வாளால் வெட்டலாமா ? “ எனும் குரல் ஒன்று சன்னமாய் ஒலித்தது. வாளா அவர்களிடம் வாள் இருக்கிறதா ? நான் சுதாரித்து என் உடைவாளை உருவும் முன் மின்னல் வேகத்தில் ஒரு வாள் என்னை நோக்கி சரேலெனப் பாய்ந்தது. நான் திடுக்கிட்டுத் திரும்பும் முன் அது என்னுடைய வலது காதை அப்படியே வெட்டியெடுத்துக் கொண்டு சென்றது.

நான் அதிர்ந்தேன். அந்த வாளை வீசியவனைப் பார்த்தேன். அவன் படைவீரன் அல்ல. அப்படி இருந்திருந்தால் எனது தலை அந்த இடத்தில் உருண்டிருக்கும். அவன் வாள் வீசிப் பழகியவன் அல்ல. வேகமும், பயமும், பதட்டமுமே அவனுடைய வாளில் இருந்தது. நேர்த்தியும், இலக்கும், யுத்தியும் அதில் இல்லை. ஆனால் என்ன ? எனது காது இதோ கீழே….

நான் வலியிலும் அவமானத்திலும் மண்டியிட்டேன். எனது கையானது, காது வெட்டப்பட்ட இடத்தைப் பொத்தியது. ஊற்றிலிருந்து பீறிடுகின்ற இரத்தம் போல எனது கைகளில் குருதி குபுக் என வடிந்தது. அது எனது உடைகளில் ஒரு தோல்விச் சின்னமாய் வழிந்தது.

அப்போது தான் எனக்கு முன்னால் ஒருவர் மண்டியிட்டார். அவரை மெல்ல பார்த்தேன்.

“இயேசு” !

அவர் என்னைப் பார்த்தார். அத்தகைய கருணைக் கண்களை நான் பார்த்ததில்லை. வேகத்தின் வெறுப்புக் கண்களைக் கண்டிருக்கிறேன். போர்க்களத்தின் உக்கிரக் கண்களைப் பார்த்திருக்கிறேன். விரோதியின் வன்முறைக் கண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது தான் முதன் முறையாக இப்படி ஒரு சாந்தக் கண்களைப் பார்க்கிறேன். எந்த ஒரு மூர்க்கத்தையும் வலுவிழக்கச் செய்யும் சாந்தம் அந்தக் கண்களில் சங்கமமாகி இருந்தது.

“ஒண்ணும் இல்லை, கவலைப்படாதே ! சரியாயிடும்… ” என்றார் அவர். கவலைப் பட வேண்டியவர், கவலைப்படாதே என்கிறார். அவரது கை, வெட்டப்பட்ட காது இருந்த இடத்தை மூடியது. புன்னகைத்தார். சட்டென என் கைகளில் பீறிட்டுக் கொண்டிருந்த இரத்தம் நின்று போய்விட்டது.

தொட்டுப் பார்த்தேன். வெட்டப்பட்ட காது அங்கே சாதுவாய் நின்றிருந்தது. குழம்பினேன். மீண்டும் மீண்டும் தடவிப் பார்த்தேன். இப்போது காது இருக்கிறது. மெதுவாய் இழுத்துப் பார்த்தேன். அது வழக்கம் போல வளைந்து கொடுத்தது. நான் பிரமிப்பிலும், குழப்பத்திலும் அவரைப் பார்த்தேன்.

அவர் எழுந்தார். அவரது கரம் எனது கன்னத்தை வருடியபடி விலகியது. நான் விழுந்தேன். எனது கர்வத்தின் உச்சத்திலிருந்து கெத்சமெனேவின் காலடியில் விழுந்தேன். எனது மனதுக்கு வலு இருக்கவில்லை. யாரைப் பிடிக்க வந்தேனோ, அவர் அந்த வினாடியில் எனக்குப் பிடித்தமானவராக மாறியிருந்தார். யாரை வெறி கொண்டு தேடி வந்தேனோ, அவர் என்னைப் பரிவுடன் தீண்டினார்.

கேட்கக் காதுள்ளவன் கேட்கட்டும் என அவர் என்றோ உரைத்தது எனக்கு இப்போது உறைத்தது. எனக்குக் காது இப்போது இருக்கிறது. நான் கேட்க வேண்டும். என மனதுக்குள் ஒலித்தது.

படைவீரர்கள் இயேசுவை இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். நான் தூரத்தில், மெதுவாக நடந்தேன். எனக்கு அங்கே போகப் பிடிக்கவில்லை. இப்போது எனது அன்புக்குரிய யாரோ ஒருவர் இழுத்துச் செல்லப்படுவதாய் தோன்றியது.

மீண்டும் தொட்டுப் பார்த்தேன். காது இருந்தது. என் கழுத்திலும், ஆடையிலும் வெட்டப்பட்ட காது விட்டுச் சென்ற இரத்த அடையாளங்கள் இருந்தன. அன்று நான் குழப்பத்தின் உச்சியில் இருந்தேன். வீட்டிற்குப் போய் குளித்தேன். என் உடலில் இருந்து கழுவப்பட்ட இரத்தத்தோடு என் கண்ணீர் துளிகளும் கலந்திருந்தன.

இயேசுவை அடித்தார்கள். இழுத்தார்கள். என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. கடைசியில் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். நான் சற்றுத் தொலைவிலிருந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் தவறு செய்து விட்டேனோ ? மீளாப் பாவத்தைச் செய்து விட்டேனோ ? இனிமேல் எனக்கு பாவ மன்னிப்பு இல்லையோ ? எனது மனம் நிலை குலைந்தது. நான் பதட்டத்தில் வியர்த்தேன். பயத்தில் குளிர்ந்தேன். அப்போது சிலுவையின் உச்சியிலிருந்து சன்னமாய் ஒலித்த குரல் எனக்குத் தீர்க்கமாய்க் கேட்டது.

“தந்தையே இவர்களை மன்னியும்”

எனது கால்கள் தடுமாறின. என் கையிலிருந்த கேடயம் கீழே விழுந்தது. அதன் பின் அதை நான் எடுக்கவில்லை. வீட்டுக்குத் திரும்பினேன்.

மூன்று நாட்கள் வீட்டிலேயே முடங்கினேன். என்னவாயிற்று எனக்கு ? எனக்கே தெரியவில்லை. கண்ணாடியில் எனது காதுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த தொடுதலின் மென்மையில் எனது உள்ளத்தைப் பறிகொடுத்திருந்தேன். அந்தப் பார்வையின் குளிரில் நான் புதிதாய் மாறியிருந்தேன்.

“இயேசு, உயிர்த்து விட்டாராம். அவரோட சீடர்களைப் போய் பார்த்தாராம்” ஒரு நாள் காலையில் ஊர் பரபரப்பாய் இருந்தது. நான் திடுக்கிட்டேன். இது உண்மையாய் இருக்கலாம் என உடனடியாக நம்பினேன். காதுள்ளவன் கேட்கக் கடவன் அல்லவா ?

ஓடிப் போய் இயேசுவின் சீடரான சீமோன் பேதுருவைச் சென்று பார்த்தேன். “இயேசு உயிர்த்துவிட்டாரா ? “ என்று கேட்டேன்.

“ஆமா… உயிர்த்தெழுவேன்னு ஏற்கனவே எங்க கிட்டே சொல்லியிருந்தாரே… நீங்க யாரு ? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே ? எதுக்காக இவ்வளவு ஆர்வமா கேட்கறீங்க ? “ என்று கேட்டார் அவர்.

“நான் மால்கு. மூணு நாளைக்கு முன்னாடி நீங்க காதை வெட்டி வீசின மால்கு. இயேசுவால காது திரும்பப் பெற்ற மால்கு. “ நான் காதைத் தடவிக் கொண்டே சொன்னேன்.

“மன்னிச்சுக்கோங்க… “ அறியாமையால வெட்டிட்டேன். அவர் சொன்னார்.

இல்லை, நான் அறிந்து கொள்வதற்காக வெட்டினீங்க. நீங்க வெட்டாமல் இருந்திருந்தா நான் இயேசுவை அறிந்திருக்க மாட்டேன். அப்போ நான் விழாமல் இருந்திருந்தா நான் இன்னிக்கு எழுந்திருக்க மாட்டேன். அன்னிக்கே என் வேலையை விட்டுட்டேன், இயேசுவை தேட ஆரம்பிச்சுட்டேன். அவர் உயிர்த்தாருன்னு கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியில துள்ளிக் குதிச்சு ஓடி வந்தேன். என்றேன்.

வாங்க, வாங்க என என்னை அணைத்துக் கொண்டார். நாங்கள் இருவருமாக சேர்ந்து ஓடினோம்.

அதன் பின்னர் நான் இயேசுவைப் பற்றி அறியவும், இயேசுவைப் பற்றி அறிவிக்கவும் எனது நாட்களைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன்.

கூட்டம் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தது. சிலர் வந்து காதைத் தொட்டுப் பார்த்தார்கள். பலருக்கு நம்ப முடியவில்லை. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்தது மால்குவுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்.

நாட்கள் நகர்ந்தன, மால்கு எனும் பெயரும் எல்லா இடங்களிலும் பரவியது. நற்செய்தி அறிவித்தலின் போதெல்லாம் அவரது பெயர் அங்கு இங்கும் அடிபட்டு வந்தது. அதற்கு மால்குவின் உரைகளும், மால்குவின் கதையும் காரணமாகிப் போனது.

மால்குவைக் குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கின்ற தகவல்கள் அவர் இயேசுவின் பால் ஈர்க்கப்பட்டார் என்பதைக் குறிப்பிடுகின்றன. அதன் பின் என்ன ஆனார் என்பதைப் பற்றிய தெளிவான குறிப்புகள் இல்லை. உண்மையும் புனைவும் கலந்தே அவர் சார்ந்த கதைகள் வலம் வருகின்றன.

சிலுவையில் கடைசி நிமிடத்தில் ஒரு கள்ளன் மனம் திருந்தினான். கெத்சமனேயில் கடைசி நிமிடத்தில் ஒரு படைவீரன் இடம் மாறினான்.

மத்தேயு, மார்கு லூக்கா மற்றும் யோவான் எனும் மூன்று நற்செய்தியாளர்களும் இந்த நிகழ்வைக் குறித்து வைத்திருக்கின்றனர். ஆனால் யோவான் மட்டுமே அவரது பெயரை தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

யோவான் நற்செய்தி தான் நற்செய்தி நூல்களிலேயே கடைசியாய் எழுதப்பட்டது. கிபி 80-90களில் எழுதப்பட்டது அந்த நூல் . அந்தக் காலம் வரை மால்கு வின் பெயர் ஆதிகாலத் திருச்சபையில் அடிபட்டு வந்ததையே இது காட்டுகிறது. அதனால் தான் யோவான் அந்தப் பெயரை தனது நற்செய்தியில் கவனமாய்ப் பதிவு செய்கிறார்.

எது எப்படியோ, இயேசுவை வீழ்த்தும் நோக்கத்துடன் சென்ற ஒரு வீரன், இயேசுவின் அன்பால் வீழ்ந்த கதை நம் விசுவாசத்தை வலுவாக்குகிறது.

*

சேவியர்

Posted in Articles, Beyond Bible

இவர்கள் என்ன ஆனார்கள் ? 6.நிக்கோதேமு

இவர்கள் என்ன ஆனார்கள் ?
நிக்கோதேமு

இயேசுவின் போதனைகளைக் கண்மூடித்தனமாக எதிர்த்த அந்த கால பரிசேயர்களில் வித்தியாசமானவர் நிக்கோதேமு. இயேசுவின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட அவர் ஒரு நாள் இரவில் இயேசுவைக் காண வந்தார். அவரிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் இயேசுவின் போதனைகளில் மிக மிக முக்கியமானவை.

“இறையாட்சியைக் காண வேண்டுமெனில் ஒருவன் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்று இயேசு அவரிடம் சொன்னார். அவருடைய குழப்பத்தைத் தீர்க்க இயேசுவே அதன் விளக்கத்தையும் சொன்னார், “ஒருவர் தூய ஆவியால் பிறக்க வேண்டும். மனிதரால் பிறப்பவரை மனித இயல்புகள் அடையாளம் காட்டுவதைப் போல, ஆவியில் பிறப்பவரை தூய ஆவியின் இயல்புகள் படம் பிடித்துக் காட்டும்” என்பதே இயேசுவின் போதனையாய் இருந்தது.

நிக்கதோம் சனதரீம் குழுவின் உறுப்பினர். அது நாடெங்குமுள்ள பரிசேயர்களில் செல்வாக்கு மிகுந்த 71 பேரை கொண்டு உருவாக்கப்படும் அமைப்பாகும். அந்த அமைப்பில் இருந்து கொண்டே இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவராயும் அவர் இருந்தார்.

இயேசு குற்றவாளியாக நிறுத்தப்பட்டபோது, “ஒருவரது வாக்கு மூலத்தைக் கேட்காமல், அவரது செயல்களை முழுவதும் அறியாமல் தீர்ப்பளிக்கக் கூடாது” என இயேசுவுக்கு ஆதரவாக துணிச்சலாய்ப் பேசியவர் அவர்.

அதன்பின் இயேசு குற்றவாளியாய்த் தீர்ப்பிடப்பட்டார், சிலுவை மரணம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவரது உடலை அடக்கம் செய்ய உதவியவர்களில் ஒருவராக நிக்கோதேம் இருந்தார். அதன் பின் நிக்கோதேம் என்ன ஆனார் என்பதைக் குறித்து விவிலியம் எதையும் பதிவு செய்யவில்லை. ஆனால், அவரைப் பற்றிய சில குறிப்புகள் பிற நூல்களில் காணக்கிடைக்கின்றன.

நிக்கோதேமுவின் திருமுகம் என்றொரு நூல் உண்டு. செவி வழிச் செய்திகளாக இருந்த பல விஷயங்கள் பிற்காலத்தில் எழுதப்பட்டதே அந்த நூல். அது காலத்தால் பிந்தையது. சுமார் நான்காம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் அது உருவானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆதிகால எழுத்துகளின் படி நிக்கோதேம் இயேசுவின் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்காக அவர் யூதர்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். அன்றைய காலத்தில் அங்குள்ள யூதர்களின் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அவருடைய பொருட்களெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் யூதர்களால் வன்முறைத் தாக்குதலுக்கும் உள்ளானார். செனகரீம் சபையிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டார். கடைசி காலத்தில் இவரும் மகளும் வறுமையில் உழன்றதாகவும் செய்திகள் உள்ளன. ஆனாலும் தான் கொண்ட விசுவாசத்தை அவர் தள்ளி விடவில்லை.

பேதுரு, யோவான் ஆகியோரைச் சந்தித்து திருமுழுக்கு பெற்று அவர் கிறிஸ்தவத்தில் முறையாக இணைந்தார். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த இன்னொரு பரிசேயரான கமாலியேல் இவரை அரவணைத்துப் பாதுகாத்தார். அந்த கமாலியேல் தான் பவுலுக்கு யூத மறையின் நுணுக்கங்களை ஆழமாகப் போதித்த அறிவாளி.

ஸ்தேவானுடைய படுகொலை நிக்கோதேமுவை வெகுவாகப் பாதித்தது. எனினும் கிறிஸ்துவின் மீதான ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. இவருக்கு புதுமைகள் செய்யும் ஆற்றல் இருந்ததாகவும், இவர் இரத்தசாட்சியாய் படுகொலை செய்யப்பட்டதாகவும் கதைகள் உண்டு.

கடைசியில் இவர் மரணமடைந்த பின் ஸ்தேவானின் கல்லறையோடு இவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது. அங்கேயே கமாலியேலும் அடக்கம் செய்யப்பட்டார். “தீயவரோடு அவருக்குக் கல்லறை அமைத்தார்கள், செல்வரோடு அவர் இருந்தார்” எனும் ஏசாயா 53ம் அதிகார இறைவாக்கு ஸ்தேவானைக் குறிக்கிறது என்பாரும் உண்டு.

இந்த மூவரது உடலின் பாகங்களும் கிபி 428 காண்ஸ்டான்டிநோபிளுக்குக் கொண்டு செல்லப் பட்டது. ஹோலி டீக்கன் லாசன்ச் ஆலயத்தில் இந்த உடலின் பாகங்கள் அடக்கம் செய்யப்பட்டன. பாரம்பரியக் கிறிஸ்தவ அமைப்புகள் இவரை புனித நிக்கதேமு என புகழ்கின்றன.

நிக்கதேமின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது நமக்கு சரியாகத் தெரியாது. சொல்லப்படும் கதைகளின் நம்பகத் தன்மையும் கேள்விக்குறியே ! ஆனால் அவர் இயேசுவின் பால் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை விவிலியம் நமக்குச் சொல்கிறது. அதன்பின் அவர் விசுவாசத்தில் நிலைத்திருந்தார் என்பதும், இயேசுவுக்காக வாழ்ந்தார் என்பதும் நமக்கு சிலிர்ப்பூட்டும் செய்திகளாக இருக்கின்றன‌

*

சேவியர்