Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு 1. இயேசுவின் வாழ்க்கை

Image result for jesus christ risen

கலிலேயாவிலுள்ள பெத்லேகேமில் ஒரு சாதாரண மாட்டுத் தொழுவம் ஒன்றில் பிறந்தவர் தான் இயேசு. தன்னுடைய வாழ்வின் சிறுவயதுக் காலங்களை பெற்றோருடன் செலவிட்ட இயேசு அறிவிலும் ஞானத்திலும் நிறைந்து விளங்கினார்.

சிறுவயதிலேயே யூத மத சட்டங்களைக் குறித்தும், இறையாட்சியைக் குறித்தும் தெளிவு பெற்றிருந்தார் இயேசு. எல்லோரும் பார்க்கும் பார்வையில் சட்டங்களையும், மறை நூல்களையும் பார்க்காமல் அதிலுள்ள பிழைகளைத் துணிச்சலுடன் சுட்டிக் காட்டுபவராக சிறுவயதிலேயே இயேசு திகழ்ந்தார். தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் எருசலேம் தேவாலயத்தில் நரைத்த, பழுத்த ஆன்மீக வாதிகளுடன் இறையாட்சி குறித்த விவாதத்தில் ஈடுபடுமளவுக்கு அவருக்கு மறை நூல்கள் குறித்தும் சமுதாயம் குறித்தும் விழிப்புணர்வு இருந்தது.

தன்னுடைய முப்பதாவது வயதில் திருமுழுக்கு யோவானிடம் யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்று பணி செய்யத் துவங்கிய இயேசு மூன்று ஆண்டுகள் இடையறாது பணிசெய்தார். தன்னுடைய பணியை முழுக்க முழுக்க மனித நேயம் சார்ந்த பணியாக அமைத்துக் கொண்டவர் இயேசு. இறை தன்மையுடன் விளங்கிய அவர் தான் கடவுளின் மகன் என்பதை தன்னுடைய போதனைகளில் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இறை தன்மையை வெளிக்காட்டும் விதமாக நோய்களைக் குணமாக்குதல், பேய்களை ஓட்டுதல், இறந்தோரை உயிர்த்தெழச் செய்தல் என ஏராளம் புதுமைகளை மக்களிடையே நிறைவேற்றினார் இயேசு.

பன்னிரண்டு பேரை தன்னுடைய சீடர்களாகத் தெரிந்தெடுத்த இயேசு அவர்களுக்கு வாழ்வியல் போதனைகளையும், பல ஆற்றல்களையும் வழங்கி தன்னுடைய போதனைகளை எல்லா இடங்களுக்கும் அறிவிக்க அவர்களைத் தயாராக்கினார். ஏழைகளுக்கு உதவுதலே இறை பணி என்பதை தன்னுடைய போதனைகளின் அடிப்படையாக்கிக் கொண்ட இயேசு அன்பு என்பதே ஆன்மீகம் என்று போதித்தார்.

தன்னுடைய போதனைகளை சுருக்கி, கடவுளிடம் முழு மனதோடு அன்பு செய்வதும், தன்னை நேசிப்பது போல அடுத்தவரை நேசிப்பதையும் இரண்டு முக்கிய போதனைகளாக்கிக் கொண்டார்.

மூன்று ஆண்டுகள் இயேசு நிகழ்த்திய போதனைகளும், செய்த அற்புதச் செயல்களும் யூத மத குருக்களை எரிச்சலடையச் செய்தது. அவர்களை இயேசு வெளிவேடக்காரர்கள் என்றும், வெள்ளையடிக்கப் பட்ட கல்லறைகள் என்று பகிரங்கமாகச் சாடி, அவர்கள் போதனைகளை நம்பவேண்டாம் அவர்கள் விண்ணரசிற்கு நுழையமாட்டார்கள். அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டும் குருடர்கள் என்று மக்களுக்குப் போதித்தார். எனவே மத குருக்கள் அவரை ஒழித்துக் கட்ட வழி தேடினார்கள்.

எருசலேம் தேவாலயத்தில் பலிப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை சாட்டையால் அடித்துத் துரத்தி இயேசு புரட்சி செய்தது மத குருக்களை வெறி கொள்ளச் செய்தது. காலம் காலமாக நடந்து வந்த விற்பனையையும், அதற்கும் மேலாக மதகுருமார்கள் மேல் இருந்த மரியாதையையும் இயேசு சிதைத்து விட்டதால் அவர்கள் இயேசுவை கொல்வது என்று முடிவு செய்தார்கள்.

தலைமைக் குருக்களாக இருந்த அன்னா, காய்பா இருவரும் இயேசு தன்னைக் கடவுளின் மகனாகக் காட்டிக் கொண்டார் என்னும் குற்றச்சாட்டின் கீழ் அவரைப் பிடித்து ஆளுநனாக இருந்த பிலாத்துவின் விசாரணைக் கூடத்துக்குக் கொண்டு வந்தார்கள். அங்கு பொய்சாட்சிகள் அவருக்கு எதிராக நிறுத்தப்பட்டனர். பொய் சாட்சிகளின் சாட்சியங்கள் வலுவிழந்தன. ஆனால் இயேசு தானே கடவுளின் மகன் என்று அந்த விசாரணைக் கூடத்திலேயே துணிச்சலுடன் அறிவித்து சிலுவைச் சாவை விரும்பி ஏற்றுக் கொண்டார்.

கல்வாரி மலையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிலுவையின் உச்சியிலிருந்தும் தன்னைத் துன்புறுத்துபவர்களுக்காக மன்னிப்பை மன்றாடிய இயேசு தன் தந்தையின் கைகளில் தன்னுடைய உயிரை ஒப்படைத்தார். இறந்து விட்டார் என்று அரச வீரர்கள் ஈட்டியால் குத்தி ஊர்ஜிதப்படுத்திய பின் இயேசுவின் உடல் கீழிறக்கி கல்லறையில் அடக்கப்பட்டது.

இறந்த மூன்றாம் நாள் உயிர்ப்பேன் என்று இயேசு சொல்லியிருந்ததால் அவருடைய கல்லறைக்கு அரச காவல் நியமிக்கப்பட்டது. கல்லறைக் கதவை சங்கிலியால் பூட்டி காவலர்கள் காவலிருந்தார்கள். ஆனால் மூன்றாவது நாள் இயேசு சொன்னது போல உயிர்த்தெழுந்தார். உயிர்த்த இயேசு தன்னுடைய சீடர்களுக்கு பல முறை காட்சியளித்தார்.

இயேசுவின் இறப்பினால் சோர்ந்து போயிருந்த சீடர்களுக்கு இயேசுவின் உயிர்ப்புச் செய்தி புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. அதுவே கிறிஸ்தவ மதம் மண்ணில் தோன்றுவதற்கு முக்கிய காரணமாயிற்று.

உலகெங்கும் உள்ள இயேசுவைப் பின்பற்றும் மக்களின் கூட்டமே திருச்சபை என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருச்சபை தன்னுடைய தலைவராக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தத் திருச்சபை இயேசு கிறிஸ்துவால் உருவாக்கப் பட்டது. இயேசு தன்னுடைய சீடர்களைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு நோய்தீர்க்கும் ஆற்றலையும், பேயோட்டும் ஆற்றலையும், போதிக்கும் ஆற்றலையும் அளித்தபோது திருச்சபை ஆரம்பமானது என்பது ஒரு சாராருடைய நம்பிக்கை.

இன்னொரு சாரார், திருச்சபையின் ஆரம்பம் இயேசுவின் உயிர்ப்பிற்குப் பிறகே துவங்கியது என்று நம்புகிறார்கள். எப்படியெனினும், திருச்சபையை ஆரம்பித்தவர் இயேசு என்பதில் கிறிஸ்தவர்கள் ஒன்றுபடுகிறார்கள்.

அப்போஸ்தலர் என்னும் கிரேக்கச் சொல்லுக்கு செய்தியாளர் அல்லது அனுப்பப் பட்டவர் என்னும் பொருள் உண்டு. இயேசு தன்னை தந்தை உலகிற்கு அனுப்பினார் என்று பிரகடனப் படுத்தியது போல தன்னுடைய சீடர்களை தன்னுடைய பணிக்காக அனுப்புகிறார். அனுப்புதல் என்ற சொல்லில் அவர்களுடைய வாழ்நாள் பணி என்பது இயேசுவின் போதனைகளைப் பரப்ப வேண்டும் என்பதே.

வெறும் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான நாட்கள் மட்டுமே இயேசுவோடு பணியாற்றும் வாய்ப்புப் பெற்றிருந்தார்கள் அவர்கள். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி தொழில் செய்து கொண்டிருந்தவர்களும், தச்சு வேலை செய்து கொண்டிருந்தவர்களும், வரி வசூலித்துக் கொண்டிருந்தவர்களும் இந்த மூன்று ஆண்டுகளில் நல்ல பக்குவம் வாய்ந்த போதகர்களாகியிருந்தார்கள். மக்கள் முன்னிலையில் தைரியமாக வந்து நின்று இறைவனைப் பற்றியும், இறையரசு பற்றியும் தயக்கமில்லாமல் பேசும் பக்குவத்தைப் பெற்றிருந்தார்கள் அவர்கள்.

அவர்களுடைய முதன்மையான பணி இயேசு கிறிஸ்துவைப் பற்றி சான்று பகர்வதே. இயேசுவின் வாழ்க்கையில் அவர் சீடர்களோடு பகிர்ந்து கொண்ட செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவும். அவர் மக்களிடம் போதித்த செய்திகளை புதிய மக்களிடம் போதிக்கவும், எல்லோரையும் இயேசுவின் போதனைகளின் பாதையில் நடப்பவர்களாக மாற்றுவதுமே அவர்களுடைய பணியாய் இருந்தது. அவர்கள் யாருமே தங்களை முன்னிலைப்படுத்தி போதிக்கவில்லை. அவர்களுடைய போதனைகளிலெல்லாம் இயேசுவே முதன்மையாய் இருந்தார்.

அந்த பன்னிரண்டு சீடர்களின் வாழ்வும் பணியுமே கிறிஸ்தவ மதம் வளரவும், ஆழமாய் வேர்விடவும், ஊரெங்கும் பரவவும் காரணமாயிற்று.

சிலகாலம் இணைந்து பாலஸ்தீனத்தில் பணியாற்றி வந்த சீடர்கள் தங்கள் பணி அந்த இடத்தை விட்டு மற்ற இடங்களுக்குப் பரவ வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இயேசு தன்னுடைய வாழ்நாளில் சுமார் இருநூறு மைல் சுற்றளவுள்ள இடத்தைக் கடந்து எங்கும் சென்றதில்லை என்கிறது இறையியல் வரலாறு. ஆனால் அவர் சீடர்களுக்குக் கொடுத்த கட்டளையோ ‘உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்’ என்பதே.

இயேசுவின் பன்னிரண்டு சீடர்களும் எப்படி கிறிஸ்தவத்தைப் பரப்பினார்கள். எங்கெங்கே சென்றார்கள் என்பதை அறிகையில் அவர்கள் இயேசுவின் பால் கொண்டிருந்த நம்பிக்கையும், அவர்களுடைய மன உறுதியும் நம்மை வியப்பின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்துகின்றன.

Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு : 2 – விவிலியம் கூறும் திருச்சபை வரலாறு

Image result for Acts of the apostlesஆதித் திருச்சபையின் ஆரம்பம்

இயேசுவின் சிலுவை மரணத்துக்குப் பின் சீடர்கள் ரொம்பவே சோர்ந்து போனார்கள். இயேசுவின் மரணத்துக்கும், உயிர்ப்புக்கும் இடைப்பட்ட மூன்று நாட்கள் அவர்களுக்கு மாபெரும் சோதனைக்காலமாகவே இருந்தது. என்ன செய்வது ? எப்படி வெளியே தலை காட்டுவது ? காட்டினால் தலை இருக்குமா என்று ஏராளம் கேள்விகள் அவர்களுக்குள். இயேசுவோடு கூட நடந்தபோது நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள் எல்லாரும் இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின் தலைக்கு முக்காடிட்டுக் கொண்டு அறைகளில் பதுங்கினார்கள்.

மூன்றாவது நாள். இயேசு உயிர்த்துவிட்டார். அந்த செய்தியைக் கூட அவர்களால் நம்ப முடியவில்லை. முதலில் மதலேன் மரியாளுக்குக் காட்சியளித்த இயேசு, அதன்பின் எம்மாவூஸ் சென்ற இரண்டு சீடர்களுக்குக் காட்சியளித்தார். ஆனாலும் பேதுருவும் அவருடன் இருந்த சில சீடர்களும் தங்கள் பழைய வேலையான மீன்பிடிக்கும் தொழிலுக்கே திரும்பினார்கள். கடந்த மூன்று ஆண்டுகளை ஒரு கனவு போல எண்ணி மறந்து விட்டு மீண்டும் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பவேண்டும், இனிமேல் யாருடனும் பகைத்துக் கொள்ளாமல் ஒதுங்கி வாழவேண்டும். இயேசு போன்ற ஒரு துணிச்சல் மிக்க, திறமை மிக்க, கடவுளின் வரம் பெற்ற ஒருவருக்கே இப்படி ஒரு மரணம் நேர்கிறது என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஒருநாள் அதிகாலை. இயேசு தன்னுடைய சீடர்களுக்கு ஒட்டு மொத்தமாய்க் காட்சி தருவதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சி இது. பேதுருவும், அவருடன் சிலரும் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் கடற்கரையில் இயேசு தோன்றினார். பேதுரு இரவெல்லாம் வலைகளை இழுத்தும் மீன் ஒன்றும் கிடைக்காமல் களைத்திருந்த அதிகாலை வேளை அது. ஒரு காலத்தில் இந்தப் படகில் அமர்ந்து இயேசு போதிக்க அவருக்குப் பின்னால் அமைதியாகவும், கர்வத்துடனும் விழா மேடையில் அமர்ந்திருக்கும் விருந்தாளி போல இருந்த பேதுரு இப்போது வலைகளை இழுத்து வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் திரும்பியிருக்கிறார்.

‘மீன்களைப் பிடித்தது போதும்.. வாருங்கள். உங்களை மனிதர்களைப் பிடிப்போராக்குவேன்’ என்று அழைத்துச் சென்ற இயேசு மனித மனங்களை எப்படி பிடிப்பது ? மனிதர்களுடைய வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் என்னென்ன ? அவர்கள் எதற்கெல்லாம் அஞ்சவேண்டும் எதையெல்லாம் துச்சமென எண்ணி விலக்க வேண்டும் என்றெல்லாம் போதித்தார். இப்போது பேதுரு.. மனிதர்களைப் பிடித்தது போதும், வயிறுக்கு உணவிட வேண்டும். மீன்களைப் பிடிப்போமென மீண்டு வந்திருக்கிறார்.

‘பேதுரு…’ இயேசு அழைத்தார் !

பேதுரு கரையை நோக்கித் திரும்பிப் பார்த்தார். ஏதோ ஒரு மனிதர் கரையில் நின்று கொண்டிருக்கிறார். அதிகாலையில் தன்னை அழைப்பது யார் என்று அவருக்குப் புரியவில்லை. எனவே பேதுரு பேசாமல் படகில் அமர்ந்தார்.

‘பேதுரு.. உன் படகின் வலது பக்கமாக வலையை வீசு’ இயேசு சொன்னது கடலின் இரைச்சலையும் மீறி பேதுருவின் காதுகளில் வந்து விழுந்தது.

பேதுருவுக்குள் ஒரு சின்னப் பொறி பறந்தது. இதே போன்ற ஒரு நிகழ்ச்சி இயேசு உயிருடன் இருந்தபோதும் நடந்ததை அவருடைய மனம் அசை போட்டது. இருந்தாலும் இப்போது பேசுவது இயேசு தான் என்று அவர் நினைக்கவில்லை. இருந்தாலும் தன் மீது கரிசனை கொண்டு யாரோ வலை வீசச் சொல்கிறார்களே என்று பேதுரு படகின் வலது பக்கமாக வலையை வீசினார்.

ஆச்சரியம் !!! இழுக்க முடியாத அளவுக்கு மீன்கள் வலையை நிறைத்தன. எங்கிருந்து வந்தன இத்தனை மீன்கள் ? பேதுரு திகைத்தார்.

கரையில் நிற்பது இயேசு தான் என்பது பேதுருவுக்கு சட்டென்று விளங்கியது. படகைக் கரையை நோக்கி விரட்டினார். கரையை நெருங்கும் முன்பாகவே படகை விட்டு குதித்து அவரை நோக்கி ஓடினார். தண்ணீர் அவருடைய கால்களில் பட்டு முகம் வரை தெறித்தது.

கரையை அடைந்த பேதுரு ஆனந்தத்தில் அமிழ்ந்தார். கரையில் இயேசு புன்முறுவலுடன் நின்றுகொண்டிருந்தார்.

பேதுருவின் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. உள்ளுக்குள் அவருடைய துயரங்கள் எல்லாம் சட்டென்று உருகி மறைந்தன. எந்த இயேசு தங்களை விட்டுப் பிரிந்தார் என்று நினைத்திருந்தாரோ அவர் இதோ தனக்கு முன்னால் நிற்கிறார். இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தவர், இப்போது தானே இறந்து உயிர்த்து வந்திருக்கிறார் என்பதை அவரால் நம்பமுடியவில்லை. பரவசத்தில் நின்றிருந்த பேதுருவை இயேசு அழைத்தார்.

‘பேதுருவே.. நீ என்னை நேசிக்கிறாயா ?’

‘ஆம் ஆண்டவரே…’ பேதுருவிடமிருந்து சட்டென்று பதில் வந்தது.

‘என் ஆடுகளை நீ தான் மேய்க்கவேண்டும்’ இயேசு சொன்னார். தான் இல்லாத போது தன்னுடைய பணிகளைத் தொடராமல், மீண்டும் உலக வாழ்க்கையின் தேடுதலுக்காக வலையுடன் தன் பிரிய சீடன் வந்து விட்டானே என்னும் கவலை இயேசுவின் குரலில் எதிரொலித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டி எழுப்பிய மனிதர்கள் இப்போது கட்டுமரத்தோடு அலைகிறார்களே என்னும் ஆதங்கமும் அவருடைய குரலில் தெரிந்தது.

‘பேதுருவே… நீ என்னை அன்பு செய்கிறாய் தானே…’ இயேசு மீண்டும் கேட்டார்.

‘ஆம் ஆண்டவரே.. நாம் உம்மை உண்மையிலேயே அன்பு செய்கிறேன்’ பேதுரு சொன்னார்.

‘அப்படியானால் என்னுடைய ஆடுகளை நீ கண்காணி’ இயேசு சொன்னார். தன்னுடைய போதனைகளையும், இறையரசைப் பற்றிய விழிப்புணர்வையும் எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும் என்னும் இயேசுவின் தாகம் அவருடைய வார்த்தைகளில் ஒலித்தது. மக்களைத் திசை திருப்பி அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் மதவாதிகளிடமிருந்து மக்களை நல்ல பாதையில் நடத்திச் செல்லவும், அவர்களுடைய வாழ்க்கையைக் கவனிக்கவும் ஒரு மேய்ப்பனாக பேதுரு இருக்கவேண்டும் என்று இயேசுவின் குரல் உணர்த்தியது.

‘பேதுருவே நீ என்னை நேசிக்கிறாயா ?’ இயேசு மூன்றாவது முறையாக பேதுருவிடம் கேட்டார்.

பேதுரு கண்கலங்கினார். இயேசு கைது செய்யப்பட்டபோது மூன்று முறை அவரைத் தெரியாது என்று மறுதலித்த நிகழ்வு அவருடைய மனதுக்குள் பாரமாக அமர்ந்தது. இப்போது இயேசு மீண்டும் மீண்டும் கேட்பது தன் மீது நம்பிக்கையில்லாததால் தானோ என்று பேதுரு கலங்கினார். அவருடைய மனம் உடைந்தது. இயேசுவுக்கு முன்னால் மண்டியிட்டார்.

‘இயேசுவே உமக்கே தெரியுமே நான் உம்மை நேசிக்கிறேன் என்பது’ பேதுரு கண்ணீர் விட்டார்.

‘என் ஆடுகளை உன் பொறுப்பில் விடுகிறேன். நீ அவற்றைப் பராமரி’ என்று அவரிடம் அன்புடன் சொன்ன இயேசு அவரை விட்டு மறைந்தார். பேதுருவுடன் இருந்தவர்கள் எல்லாம் இந்தக் காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் பேதுரு தெளிவடைந்தார். தன்னுடைய பணி மீன்களைச் சேகரிப்பதல்ல, மனிதர்களைச் சேகரிப்பது என்பதை அறிந்து கொண்டார். எப்படியாவது இயேசுவின் கொள்கைகளை மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்று உறுதி கொண்டார். மீண்டும் சீடர்கள் இருந்த இடத்துக்குச் சென்று பதினோரு சீடர்களையும் ஒன்று திரட்டினார்.

இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின்பு சுமார் நாற்பது நாட்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு மக்களுக்கு இயேசு காட்சியளித்தார். ஒருமுறை சுமார் ஐநூறு பேர் இருந்த ஒரு பெரும் கூட்டத்தில் மக்களிடையே தோன்றி பேசினார். இந்த நிகழ்வுகளெல்லாம் சீடர்களை பலப்படுத்தின. எங்கும் மீண்டும் இயேசுவைப் பற்றிய பேச்சும் அலையும் ஆரம்பமானது.

சீடர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள்.

‘நாம் பன்னிரண்டு பேராக இயேசுவுடன் திரிந்தோம். இப்போது யூதாஸை இழந்துவிட்டோம். அதற்குப் பதிலாக இன்னொரு நபரைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் பன்னிரண்டு பேராக வேண்டும்’

‘சரி யாரைச் சேர்ப்பது ?’

‘பர்ணபா, மத்தியாஸ் இருவரும் நம்முடைய குழுவில் சேர மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்… அவர்களில் ஒருவரைச் சேர்க்கலாமே’ பரிந்துரை வந்தது.

‘சரி… இருவர் பெயரையும் எழுதிச் சீட்டுப் போடுவோம். இயேசுவின் பெயரைச் சொல்லி ஒரு சீட்டு எடுப்போம். யாருடைய சீட்டு வருகிறதோ அவரை குழுவில் சேர்ப்போம்…’ முடிவு எட்டப்பட்டது.

சீட்டில் பர்ணபா, மத்தியாஸ் இருவரின் பெயர்களும் எழுதப்பட்டன. சீட்டு குலுக்கிப் போட்டு எடுக்கப்பட்டது.

மத்தியாஸ் பெயருக்குச் சீட்டு வந்தது. மத்தியாஸ் யூதாஸினால் காலியான இடத்தை நிரப்பினார்.

அதன்பின் ஒருமுறை எல்லா சீடர்களும் ஒரு இடத்தில் குழுமியிருந்தார்கள். திடீரென நெருப்புத் தழல்கள் வானிலிருந்து இறங்கி வந்து அவர்களுடைய தலையில் அமர்ந்தது.

சீடர்கள் அதிர்ந்தார்கள். ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அந்த நெருப்பு அவர்களுக்குள் இறங்கிப் பரவியது. அவர்களுடைய உடலும், உள்ளமும் உற்சாகத்தினால் நிறைந்தது. இயேசு கூடவே இருந்தபோது எத்தனை மகிழ்ச்சி அவர்களுக்குள் இருந்ததோ அதே மகிழ்ச்சி இப்போது அவர்களுக்குள்.
அவர்களுக்குள்ளே இருந்த பயம் விலகிவிட்டது. உள்ளுக்குள் ஏதோ ஒரு அசாத்தியத் துணிச்சல் வந்து நிறைந்தது.

அவர்கள் ஆனந்தமாய் வெளியே வந்தார்கள்.

எதிரே வந்த மக்கள் இவர்களை வினோதமாய்ப் பார்த்தார்கள்.
‘இவர்கள் அந்த இயேசுவின் சீடர்கள் அல்லவா ? இத்தனை நாட்களாய் எங்கே இருந்தார்கள் ? திடீரென கிளம்பியிருக்கிறார்களே’ மக்கள் கூட்டம் கூட்டமாய் பேசினார்கள்.

‘நீங்கள் கொலை செய்த இயேசுவின் சீடர்கள் தான் நாங்கள். அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்துவிட்டதை நீங்கள் அறிவீர்கள் தானே. நாங்கள் அவரைப் பற்றி உலகெல்லாம் பறைசாற்றப் போகிறோம்’ அவர்கள் சொன்னார்கள்.

வணிகர்களும், யாத்திரீகர்களும் குழுமியிருந்த நகர சந்திப்புகளில் அவர்கள் தைரியமாய்ப் பேசத் துவங்கினார்கள் வியந்தார்கள். இதுவரை இயேசு மட்டுமே பேசிக்கொண்டிருந்த இடங்களில் சீடர்கள் தங்கள் பேச்சை, உரையாடலை, போதனைகளை ஆரம்பித்தார்கள். அவர்களுக்கே ஆச்சரியம். எல்லா மொழிகளும் அவர்களுக்குச் சரளமாக வந்தன.

இதென்ன விந்தை, ஒருவேளை இதுவும் இறைவனின் திருவுளமா ? நமக்குள் இறங்கிய நெருப்புத் தழல் நமக்கு மொழிகளையும் கற்றுத் தந்ததா என சீடர்கள் தங்களுக்குள் வியந்தார்கள்.

‘உனக்கு இந்த மொழி தெரியுமா ?’

‘இவர்கள் பேசும் எல்லா மொழியும் நமக்குப் புரிகிறதே’

‘புரிவது மட்டுமல்ல, நம்மால் பேசவும் முடிகிறதே…’

சீடர்கள் மேலும் மேலும் ஆச்சரியமடைந்தார்கள். அவர்கள் இயேசுவின் புகழையும், கொள்கைகளையும் எங்கும் பரப்புவதென்ற முடிவை உறுதிப் படுத்திக் கொண்டார்கள்.

பொதுவிடங்களில் பயமில்லாமல் பேசத் துவங்கினார்கள். ஆலய வளாகங்களில் தைரியமாக தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். இயேசு என்பவர் தான் உண்மையான கிறிஸ்து என்பதை வீதிகளில் பறைசாற்றத் துவங்கினார்கள்.

கிறிஸ்தவ மதத்துக்கான விதைகள் சீடர்களால் தூவப்படத் துவங்கின. மக்கள் அவர்களிடம் வந்து திருமுழுக்குப் பெற்று திருச்சபையில் இணையத் துவங்கினார்கள்.

மறை நூல் அறிஞர்களும், குருக்களும் திகைத்தார்கள். ஒரு தலைவலி போனால் பன்னிரண்டு தலைவலிகள் முளைத்திருக்கின்றனவே என்ன செய்வது என்று உள்ளுக்குள் குழம்பிப் போனார்கள். இருந்தாலும் இவர்களையும் வளரவிடக் கூடாது என்று வழக்கம்போலவே அவர்கள் பகை வளர்த்தார்கள்.

சீடர்களின் பணி பரவியது.

கிறிஸ்தவத்தின் ஆரம்பப் பணியாளர்கள் யோவானும், பேதுருவும்

ஒருநாள் மூன்று மணியளவில் செபம் செய்வதற்காக பேதுருவும், யோவானும் ஆலயத்துக்குச் சென்றார்கள். மூன்று மணிக்கு செபம் செய்வது என்பது அவர்களுடைய வழக்கமாய் இருந்தது. இயேசு சிலுவையில் உயிர்விட்ட நேரமும் பிற்பகம் மூன்று மணி என்பதால் மாலை மூன்றுமணி என்பது அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் நினைவு கூரத் தக்க ஒன்றாக மாறிவிட்டிருந்தது.

ஆலயத்தில் அழகுவாயில் என்னுமிடத்தில் ஒருவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அழகுவாயில் என்பது எருசலேம் தேவாலயத்தின் முதல் வாயில். அவன் கால்கள் வலுவில்லாத ஒரு முடவன். அவன் பிறவியிலேயே கால் ஊனமுற்றவன். பிழைப்புக்கு வேறு வழி ஏதும் இல்லாததால் ஆலய வாசலில் அமர்ந்து பிச்சை கேட்டு தன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான் அவன்.

தினமும் காலையில் சிலர் அவனைத் தூக்கி வந்து ஆலய வாசலில் இருத்துவார்கள். மாலையில் அவனைத் தூக்கிக் கொண்டு செல்வார்கள். அவனால் சுயமாக ஒரு அடி கூட நடக்க முடியாது என்னும் நிலமை.

பேதுருவும், யோவானும் ஆலயத்தில் செபிப்பதற்காக உள்ளே வந்தபோது வாசலில் அமர்ந்திருந்தான் அவன்.

‘ஐயா… காலில்லாத ஏழைக்கு உதவுங்களேன்…’ அவன் பேதுருவைப் பார்த்து தர்மம் கேட்டான்.

பேதுருவும், யோவானும் நின்றார்கள்.

பேதுரு அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே பேதுரு அவனிடம் சொன்னார் ‘என்னைப் பார்’.

அவன் ஆவலுடன் அவர்களைப் பார்த்தான்.

‘உனக்குத் தர எங்களிடம் ஒன்றும் இல்லை’ பேதுரு சொல்ல, அவனுடைய முகம் வாடிப்போயிற்று. பேதுரு ஒரு வினாடி யோசித்தார். இயேசு முடவர்களுக்கோ, பிணியாளிகளுக்கோ பிச்சையிட்ட நினைவு அவருக்கு இல்லை. அவர் நலமளித்தார். ஆறுதல் அளித்தார். அன்பை அளித்தார். ஆனால் பணம் அளித்ததாய் அவருக்கு நினைவில்லை.

பேதுரு அவனை மீண்டும் உற்றுப் பார்த்தார்.
‘உனக்குத் தர பொன்னோ, வெள்ளியோ என்னிடம் இல்லை. ஆனால் என்னிடம் இருப்பதை உனக்குத் தருகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட’ என்று கூறி அவனுடைய கையைப் பிடித்துத் தூக்கி விட்டார்.

சுமார் நாற்பது ஆண்டுகளாக வலுவில்லாமல் கிடந்த அவனுடைய கால்கள் சட்டென்று வலுவடைந்தன. அவனுடைய கணுக்கால்கள் நேராகின. அவன் நின்றான். வாழ்க்கையில் முதன் முறையாக அவன் இரண்டு கால்களினால் நிற்கிறான். அவனால் சரியாக நிற்க முடியவில்லை. தடுமாறினான். ஆனந்தத்தில் கதறினான். அதற்குள் அங்கே பெரும் கூட்டம் கூடிவிட்டது.

‘ஏய்… இவன் அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த முடவன் அல்லவா ? இப்போது எப்படி நிற்கிறான் ?’

‘அவன் தானா இது ? அல்லது வேறு யாராவதா ?’

‘அவனுடைய கையைப் பிடித்து அந்த மனிதர் எழுப்பி விடுவதை நான் பார்த்தேன்’ மக்களிடையே செய்தி காட்டுத் தீ போல பரவியது.

பேதுருவையும், யோவானையும் கூட்டத்தினர் மொய்த்துக் கொண்டார்கள். இயேசுவைப் பிரிந்தபிறகும் சீடர்களால் அதிசயச் செயல்கள் செய்ய முடிகிறதே என்று மக்கள் ஆச்சரியமடைந்தார்கள். ஒரு மருத்துவர் போனால் இன்னொருவர் வந்திருக்கிறாரே என்று நோயாளிகள் ஆனந்தமடைந்தார்கள்.

‘ஏன் ஆச்சரியப் படுகிறீர்கள். அவனைக் குணமாக்கியது நாங்களல்ல, இயேசு கிறிஸ்துவின் பெயர் தான் அவரைக் குணமாக்கியது. அவர் தான் உண்மையான கடவுளின் மகன். அவரை நீங்கள் பிலாத்துவிடம் ஒப்படைத்தீர்கள். பிலாத்து விடுவிக்க விரும்பிய போது கூட நீங்கள் இயேசுவுக்கு எதிரானீர்கள். அவர் உங்களுக்காக மரணத்தை ஏற்றுக் கொண்டார்.’

பேதுரு பேசப் பேச கூட்டத்தினர் மெளனமானார்கள். அவர்களுடைய முகத்தில் திகில் படர்ந்தது.

‘நீங்கள் அதை அறியாமையினால் தான் செய்தீர்கள். வேண்டுமென்றே செய்யவில்லை. இது நடக்கவேண்டும் என்பது கடவுளின் விருப்பம் தான். நீங்கள் கொலை செய்த இயேசு உயிர்த்துவிட்டார். அதற்கு நாங்கள் சாட்சிகள். அவரைக் கண்டவர்கள் அனைவரும் சாட்சிகள். நீங்கள் இனிமேலாவது மனம் மாறி இயேசுவின் வழியில் நடவுங்கள்’ பேதுரு உரத்த குரலில் மக்களை அழைத்தார்.

மக்கள் கூட்டத்தினரிடையே மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ந்தது. சுமார் ஐயாயிரம் பேர் அப்போதே இயேசுவின் வழியில் செல்லப்போவதாக வாக்களித்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மறைநூல் அறிஞர்களும், குருக்களும் எரிச்சலடைந்தார்கள். கிறிஸ்தவத்தின் ஆரம்பம் அங்கே ஆழமாக நடப்பட்டது.

‘ஒருவனை அடித்துக் கொன்று சிலுவையில் தொங்கவிட்டும் இவர்களுக்குப் புத்தி வரவில்லையே. இவர்களையும் பிடித்துச் சிறையில் அடைத்து பயமுறுத்தவேண்டும்’ கயபா கர்ஜித்தான். தான் எப்போதுமே தோற்றுப் போய்விடக் கூடாது என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். தன் ஆதரவாளர்களைத் திரட்டி அன்றே பேதுருவையும், யோவானையும் சிறையில் அடைத்ன்.

இயேசு நிறுத்தப்பட்ட அதே கயபா வின் முன்னிலையில் இப்போது பேதுருவும், யோவானும்.

‘நீங்கள் மக்களிடையே கலகம் உண்டாக்குகிறீர்களா ?’ கயபா கேட்டான்.

‘கலகமா ? நாங்களா ? நாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் மக்களுக்கு அறிவிக்கிறோம். அவ்வளவு தான்’

‘மரியாதையாக இந்த வேலையை விட்டு விட்டு உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நாங்கள் தரும் எச்சரிக்கை. ‘

பேதுரு சிரித்தார். ‘ எச்சரிக்கையா ? நீங்கள் எங்களுக்கு விடுக்கிறீர்களா ? மடையர்களே நாங்கள் கடவுளுக்குக் கட்டுப் பட்டவர்கள். உங்கள் எச்சரிக்கைகளுக்குப் பயந்து பாயைச் சுருட்டிக் கொண்டு ஓடுபவர்கள் அல்ல.’ பேதுருவின் குரலில் உறுதி தெறித்தது.

‘உங்கள் இயேசுவையே கொன்று விட்டோம். உங்களை விட ஆயிரம் மடங்கு துணிச்சலாய் பேசியவன் அவன். உங்களை விட பல மடங்கு அறிவு உள்ளவன் அவன். அவனையே கொன்று விட்டோம். நீங்கள் பின்வாங்காவிடில் உங்களுக்கும் அதே நிலமை தான்’ அவர்கள் எச்சரித்தார்கள்.

‘நீங்கள் கொன்ற இயேசுவுக்கு என்னவாயிற்று என்பதை நீங்களே அறிவீர்கள். அவர் உயிர்த்துவிட்டார். அவர் வல்லமையானவர் என்பதற்கு இதோ இந்த நலமடைந்த மனிதரே சாட்சி ! நாற்பது ஆண்டுகளாக உங்கள் உரையைக் கேட்டுக் கேட்டு மரத்துப் போயிருந்த இந்த கால்கள் இயேசுவின் பெயரைக் கேட்டதும் உயிர்த்துவிட்டதே ! தெரியாதா ? வேறென்ன சாட்சி உங்களுக்கு வேண்டும்’ பேதுரு கேட்டார்.

கயபா வியந்தான். இவன் ஒரு மீன்பிடிக்கும் தொழிலாளி தானே. கல்வியறிவு என்பது கடுகளவும் இல்லாத இவனால் எப்படி இவ்வளவு தெளிவாக, சரளமாக, உறுதியாகப் பேச முடிகிறது. இயேசுவைப் பிடித்தபோது ஓடி ஒளிந்த கூட்டமல்லவா இது ? எப்படி திடீரென இவர்களுக்குத் தைரியம் வந்தது ? ஆள்பவர்களுக்கு முன்னால் இவர்கள் இவ்வளவு தைரியமாய் பேசுகிறார்கள் என்றால் ஒருவேளை இயேசு உயிர்த்து விட்டாரோ ? கயபா சிந்தித்தான். ஆனாலும் அந்த சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிந்தான்.

இயேசுவின் ஆதரவாளர்கள், இயேசுவைப் பின்பற்றிய மக்கள், இயேசுவின் மறைவால் தலைமறைவாகியிருந்தவர்கள் எல்லோரும் பேதுரு, யோவானுக்கு ஆதரவாக அவருடன் இணைந்தார்கள். பொதுவிடத்தில் இவர்களை விசாரித்தால் அது இவர்களுக்கு தான் தரும் ஒரு அங்கீகாரமாக ஆகிவிடக்கூடும், அல்லது ஒரு விளம்பரமாகிவிடக் கூடும் என்பதை உணர்ந்த கயபா பேதுருவையும், யோவானையும் எச்சரித்து விடுதலை செய்தான்

பேதுருவும் யோவானும் எதற்கும் அஞ்சவில்லை. இயேசுவின் பெயரை ஊரெங்கும் பரப்பினார்கள். திருச்சபை கிளைகள் விட ஆரம்பித்தது.

பொய் கொல்லும், உண்மை விடுவிக்கும்

பேதுருவும், யோவானும் மற்ற அப்போஸ்தலர்களும் இயேசுவே கிறிஸ்து என்று மக்களிடையே உரையாடி ஏராளமான மக்களை தங்களுடைய ஆதரவாளர்கள் ஆக்கினார்கள். ஏராளமான மக்கள் இயேசுவை கிறிஸ்துவாக, மீட்பராக ஏற்றுக் கொண்டு ஒன்று திரண்டார்கள். அவர்களுடைய சபை வளர்ந்தது.

ஆதித் திருச்சபை அதுதான். அவர்கள் பகிர்தலிலும், ஒற்றுமையிலும் சிறந்து விளங்கினார்கள். அந்தத் திருச்சபையில் இணைந்தவர்கள் தங்களுடைய சொத்துக்களையெல்லாம் விற்று பொதுவில் வைத்தார்கள். பின் தேவைக்கேற்ப அவற்றை மக்கள் பகிர்ந்து கொண்டார்கள். யாரும் அளவுக்கு அதிகமாய் ஆசைப்படவில்லை.

இந்தத் திருச்சபையின் நடைமுறைகள் மறைநூல் அறிஞர்கள், குருக்கள், அரச அதிகாரிகள் அனைவருக்கும் மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. பெரும் பணக்காரர்கள் கூட தங்கள் சொத்துக்களையெல்லாம் விற்று பொதுவில் வைப்பதை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு விரும்பியது அது தானே ‘ உனக்குள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு’ என்பது தானே அவருடைய போதனை. ஆதிக் கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனைகளை வாழ்ந்து காட்ட பிரியப்பட்டார்கள். எனவே அவருடைய போதனைகளின் படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டார்கள்.

அந்தக் கூட்டத்தில் அனனியா என்றொரு செல்வந்தர் இருந்தார். அவருடைய மனைவி பெயர் சப்பிரா. அவர்களும் திருச்சபையின் மீது அதிக ஆர்வம் கொண்டு பேதுருவின் சபையில் இணைந்தார்கள். அவர்களுக்கும் தங்களிடம் இருக்கும் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் வந்தது.

அனனியா சென்று தன்னுடைய சொத்தையெல்லாம் விற்றான். அவனால் நம்பமுடியவில்லை. ஏராளமான செல்வம் அவனுடைய கைகளில் இருந்தது. அவற்றைக் கொண்டு பேதுருவிடம் ஒப்படைக்க நினைத்துக் கொண்டிருந்தபோது அவர்களுடைய மனதில் சஞ்சலப் பேய் புகுந்து கொண்டது.

நமக்குத் தான் இத்தனை செல்வம் இருக்கிறதே. ஏன் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் ? கொஞ்சத்தை நமக்காய் வைத்துக் கொள்ளலாமே ? என்று அவர்கள் சிந்தித்தார்கள்.

ஒருவேளை நாளை இந்தச் சபை இல்லாமல் போனால் நாம் வாழ்வதற்கு செல்வம் மிகவும் முக்கியம் எனவே சொத்தில் ஒருபாகத்தை யாருக்கும் தெரியாமல் தனக்கென வைத்துக் கொண்டு மிச்சத்தை பேதுருவிடம் ஒப்படைப்பதென்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

மறுநாள் காலையில் அவன் தன்னுடைய திட்டத்தின் படி சொத்தில் ஒருபகுதியைத் தனக்கென்று வைத்துக்கொண்டு மிச்சத்தைக் பேதுருவின் முன்னிலையில் சமர்ப்பித்தான்.

‘ஐயா… இதோ என்னுடைய அனைத்து சொத்துக்களையும் விற்று அதை உம்மிடம் ஒப்படைக்கிறேன்’

பேதுரு அவனைப் பார்த்தார்.

‘அனனியா ! ஏன் பொய் சொல்கிறாய் ? சொத்துக்களை நீ விற்கவேண்டுமென்றோ, அதை இங்கே வைக்கவேண்டுமென்றோ நான் சொன்னேனா ? நீ ஏன் கடவுளின் முன்னால் பொய் சொல்கிறாய் ? சாத்தான் உன் உள்ளத்தில் புகுந்து கொள்வதற்கு நீ ஏன் அனுமதி அளித்தாய் ?’ பேதுரு கேட்டார்.

பேதுரு சொன்னதைக் கேட்டதும் அனனியா அதிர்ச்சியடைந்தார். அங்கேயே சுருண்டு விழுந்து இறந்து போனார் !

குழுவில் இருந்த இளைஞர்கள் நிகழ்ந்தவற்றைத் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் அனனியாவை துணியால் சுற்றி எடுத்துக் கொண்டு போய் அடக்கம் செய்தார்கள். மக்கள் அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது. கடவுளின் முன்னிலையில் நேர்மையாய் இருக்கவேண்டும். இல்லையேல் மரணம் நிச்சயம் என்று மக்கள் தங்கள் உள்ளத்தில் பயத்துடன் எழுதிக் கொண்டார்கள்.

மூன்று மணி நேரம் கழிந்தபின் அனனியாவின் மனைவி வந்தாள். அவளுக்கு அங்கே நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாது. தன்னுடைய கணவன் ஒரு பெரும் தொகையைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு இப்போது பெரும் மதிப்பு இருக்கும். தன்னையும் அவர்கள் பெரும் மரியாதையுடன் வரவேற்பார்கள் என்று அவளுடைய மனம் எண்ணிக் கொண்டது.

அவள் உள்ளே வந்ததும் பேதுரு அவளிடம்,
‘உங்கள் சொத்துக்களையெல்லாம் விற்று விட்டீர்களா ?’ என்று கேட்டார்.

‘ஆம் விற்று விட்டோம். அந்தப் பணத்தை முழுவதும் என் கணவர் இங்கே கொண்டு கொடுத்திருப்பாரே’ அவள் சொன்னாள்.

‘இவ்வளவு பணத்துக்குத் தான் சொத்தை விற்றீர்களா ?’ பேதுரு கேட்டார்.

‘ஆம்… இவ்வளவுக்குத் தான் விற்றோம்’ அவளும் பொய் சொன்னாள்.

பேதுரு அவளைப் பார்த்து,’ நீங்கள் இரண்டு பேருமே ஏன் கடவுளின் முன்னிலையில் பொய் சொன்னீர்கள் ? சாத்தான் உங்களை ஆட்கொண்டு விட்டானே ! உங்களுடைய நல்ல எண்ணத்தை அவன் குழி தோண்டிப் புதைத்துவிட்டானே !’ என்றார்.

அவள் கலக்கத்துடன் பேதுருவைப் பார்த்தாள்.

‘இதோ… உன் கணவனை அடக்கம் செய்தவர்கள். இவர்கள் இப்போது உன்னையும் அடக்கம் செய்வதற்காகக் கொண்டு செல்வார்கள்’ என்றார்.

அவ்வளவு தான். அவள் அந்தக் கணமே அந்த இடத்திலேயே இறந்து விழுந்தாள். கடவுளின் முன்னிலையில் சொல்லும் ஒரு சிறு பொய்கூட தங்கள் உயிரை அழித்துவிடும் என்று சபையில் புதிதாய் சேர்ந்தவர்கள் மனதுக்குள் குறித்துக் கொண்டார்கள். அவர்கள் அவளையும் எடுத்துக் கொண்டு கணவனின் அருகிலே அடக்கம் செய்தார்கள்.


நாட்கள் செல்லச் செல்ல பேதுருவின் புகழ் எங்கும் பரவியது. அவரால் ஏராளமான அரும் செயல்கள் நடந்தன. ஏராளமான மக்களின் நோய்கள் நீங்கின. ‘இயேசு கிறிஸ்துவின் பெயரால்’ என்று கூறி பேதுரு அனைவரையும் குணமாக்கினார். இயேசுவைக் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வந்தது.

பேதுரு நடந்து செல்லும்போது அவருடைய நிழல் படும் இடத்தில் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டார்கள். அப்படி நம்பிக்கையுடன் வந்தவர்கள் எல்லோரும் சுகமடைந்தனர்.

பேதுருவின் நடவடிக்கைகளும், இயேசுவைக் குறித்த அவருடைய அறிக்கைகளும் குருக்களையும், மறைநூல் அறிஞர்களையும் மேலும் மேலும் எரிச்சல் படுத்தின. பலமுறை எச்சரித்தும் தங்களுடைய அச்சுறுத்தல்களுக்கு அவர்கள் பணியவில்லையே என்னும் கோபமும் அவர்களிடம் நிரம்பி வழிந்தது.

பேதுருவும், யோவானும் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

‘நாங்கள் எத்தனை முறை எச்சரித்தாலும் நீங்கள் இப்படித்தான் உளறிக் கொண்டு திரிவீர்கள் என்றால் இனிமேல் சிறையிலேயே கிடங்கள். எத்தனை பேரைக் கொன்றாலும் நீங்கள் திருந்தப்போவதில்லையா ? ஏன் இந்த பிடிவாதம் ? திருமுழுக்கு யோவான் தலையை இழந்தார், இயேசு சிலுவையில் உயிரையே விட்டார். நீங்களும் ஏன் சாவே தேவை என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள்’ சிறையில் அடைத்தவர்கள் கோபத்தில் கத்தினார்கள்.

‘உண்மை பேசியதற்காக இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள். அவர் உயிர்த்தார். அதை நாங்கள் அறிக்கையிடுகிறோம் எங்களை சிறையில் அடைக்கிறீர்கள். பாவத்துக்கு மேல் பாவம் செய்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்’ பேதுரு சொன்னார்.

‘இயேசு உயிர்த்தார்…உயிர்த்தார்…உயிர்த்தார்…. இதைத் தவிர வேறு ஏதும் உங்களுக்குச் சொல்வதற்கு இல்லையா ?’ அவர்கள் எரிச்சலின் உச்சத்தில் கொதித்தார்கள்

‘உண்மை சுடும் என்பது உண்மை’ பேதுரு சொன்னார்.

‘நீ எங்கள் மீது இரத்தப் பழியைப் போடுகிறாய்’

‘பிலாத்துவின் முன்னிலையில் நீங்கள் சொன்னதை அத்தனை விரைவாய் மறந்து விட்டீர்களோ ? இயேசுவின் இரத்தப் பழி உங்கள் மீதும் உங்கள் பிள்ளைகள் மீதும் விழட்டும் என்று சொன்னீர்களே !’ பேதுரு அவர்களிடம் திருப்பிக் கேட்க அவர்கள் ஆத்திரத்துடன் அகன்றார்கள்.

இரவு.

சிறைக்கதவுகளுக்கு உள்ளே பேதுருவும், யோவானும் அடைபட்டுக் கிடக்க அவர்கள் முன்னிலையில் தேவதூதர் ஒருவர் தோன்றினார்.

சிறைக்கதவுகள் தானே திறந்தன. பேதுருவும், யோவானும் வெளியே வந்தார்கள். தூதர் அவர்களிடம்
‘நீங்கள் போய் கோயிலில் நின்று வாழ்வு தரும் வார்த்தைகளை அறிவியுங்கள்’ என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

கதவுகள் மீண்டும் மூடின. பூட்டுகள் பூட்டிக் கொண்டன. சிறையைக் காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்களுக்கு இது எதுவும் தெரியவில்லை. பேதுருவும், யோவானும் ஆலயத்திற்கு வந்தார்கள்.

மறு நாள் காலையில் அனைவரின் முன்னிலையிலும் பேதுருவும் யோவானும் பேசத்துவங்கினார்கள். அதைக் கண்ட குருக்கள் ஏகமாய் அதிர்ந்தார்கள். சிறையில் தானே இவர்களை அடைத்தோம், இவர்கள் எப்படி இங்கே வந்தார்கள் ? என்று குழம்பினார்கள்.

சிறைக்கு ஓடினார்கள்.

சிறை பூட்டப்பட்டிருந்தது. காவலர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே யாரும் இல்லை. குருக்கள் திகைத்தனர். காவலர்கள் நம்பமுடியாமல் பார்த்தனர். என்ன செய்வதென்று புரியாமல் விழித்தார்கள்.

பேதுருவின் உரைகள் வலுவடைந்தன. திருச்சபை மிக வேகமாய் வளர்ந்தது.

பேதுவின் துணிச்சல்

பேதுரு திருச்சபை வளர்ச்சிக்கு மிகவும் வலுவான அடித்தளம் அமைத்தார். இயேசு செய்தவற்றைப் போன்ற பல அற்புதங்களையும், அதிசயங்களையும் ‘இயேசுவின் பெயரால்’ பேதுருவும் செய்தார். ஏராளமான நோயாளிகளைக் குணமாக்கினார். பேய்களை ஓட்டினார். எல்லாவற்றுக்கும் மேலாக இறந்து போன தொற்கா என்னும் பெண்ணையும் உயிருடன் எழுப்பினார். இந்த செயல்களையெல்லாம் கண்ட பலர் இயேசுவில் விசுவாசம் கொண்டு கிறிஸ்தவத்தில் இணைந்தார்கள்.

யாக்கோபுவும் நல்ல இறை வல்லமை பெற்ற மனிதர். அவரும் நோயாளிகளைக் குணமாக்குதல், தெளிவாக மறை உண்மைகளை எடுத்துரைத்தல் போன்ற பல செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவருடைய ஆற்றல் மிக்க பேச்சு பலரை சபையில் இணைத்துக் கொண்டிருந்தது. இதைக்கண்ட ஏரோது மன்னன் கடும் கோபமடைந்தான். தன்னுடைய அதிகாரத்தைக் காட்ட விரும்பி யாக்கோபுவை சபைக்கு இழுத்து வந்தான்.

‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? நாட்டில் கலகம் விளைவிக்கிறாயா ?’ மன்னன் கேட்டான்

‘கலகம் அல்ல, கலங்கிக் கிடக்கும் மனங்களைத் தெளிவு படுத்திக் கொண்டிருக்கிறேன்.’ யாக்கோபு பயப்படாமல் சொன்னார்.

‘யார் முன்னிலையில் நீ பேசுகிறாய் என்பது தெரியுமா ?’

‘யார் முன்னிலையில் வேண்டுமானாலும் பேசுவேன். ஏனென்றால் நான் கடவுளின் பின்னால் செல்பவன். எனக்குள் இயேசு இருக்கிறார்’

‘உன்னை இப்போது கொல்லப் போகிறேன். இயேசு உன்னைக் காப்பாற்றுவாரா பார்க்கலாம்’ ஏரோது சிரித்தான்.

‘மன்னிக்கவேண்டும். நீர் என்னைக் கொல்ல முடியாது. என் உடலைத் தான் கொல்ல முடியும். ஆன்மாவைக் கொல்ல முடியாமல் உடலைக் கொல்வோருக்கு அஞ்சவேண்டாம் என்பது என் இயேசு எனக்குச் சொன்ன வார்த்தை !’ யாக்கோபு சொல்ல ஏரோது எரிச்சலைடைந்தான்.

‘என்னிடம் உயிர்ப்பிச்சை கேட்காமல் வாதாடுகிறாயா ?’ என்று கேட்டுக் கொண்டே உறையிலிருந்த வாளை உருவி யாக்கோபின் கழுத்தை நோக்கி வீசினான்.

யாக்கோபின் தலை தெறித்தது.

யாக்கோபு இறைவனுக்காய் இறந்தார். ஏரோது எகத்தாளமாய் சிரித்தான். அரசவையில் இருந்த யூதர்கள் எல்லாம் ஆனந்தமாய் கைகொட்டிச் சிரித்தனர். யாக்கோபின் தலை ஓரமாய் தீர்க்கப் பார்வையோடு அவையை வெறித்தது.


‘பேதுரு என்றொரு மனிதன் இருக்கிறான். அவனையும் பிடித்துக் கொண்டு வந்து சிறையில் அடையுங்கள்’ ஏரோது ஆணையிட்டான்.

பேதுரு சிறையில் அடைக்கப்பட்டார்.

‘அரசே.. சென்ற முறை தலைமைக்குரு பேதுருவைச் சிறையில் அடைத்தபோது யாருக்கும் தெரியாமல் தப்பிப் போய்விட்டான். எனவே இந்தமுறை நீங்கள் அதிக கவனமாய் இருக்க வேண்டும்’ ஒருவர் ஏரோதின் காதில் கிசுகிசுத்தார்.

‘தப்பிப்பதா ? பாஸ்கா விழாவிற்குப் பின் அவனைக் கொலை செய்யப் போகிறேன். அவன் இனிமேல் வாழக்கூடாது’ ஏரோது சிரித்தான்.

‘இருந்தாலும், கவனம்…. அவனுடைய சீடர்கள் யாராவது அவனைத் தப்ப வைத்துவிட்டு கடவுள் விடுவித்தார் என்று கதைவிடக் கூடும். அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.’

‘ம்ம்.. சரி…நம்முடைய படை வீரர்களில் பலவான்களான பதினாறுபேரை தேர்ந்தெடுத்து நான்கு குழுக்களாக அவர்களை அமைத்து பேதுருவுக்குக் காவல் இருக்க ஏற்பாடு செய்யுங்கள். பேதுருவை பாஸ்கா விழாவில் மக்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும்’ ஏரோது ஆணைகளைப் பிறப்பித்தான்.

காவல் துவங்கியது. நாட்கள் நகர்ந்தன.

நாளை வழக்கு நாள். பேதுருவை மக்கள் மத்தியிலே வைத்து விசாரித்து அவரைக் கொன்றுவிடவேண்டும் என்பது ஏரோது மன்னனின் திட்டம்.

இரவு.

பேதுரு இரண்டு காவலர்களுக்கு இடையே சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் கிடந்தார். வெளியே காவலர்கள் பல நிலைகளில் நின்று காவல் செய்துகொண்டிருந்தார்கள்.

திடீரென்று அறை பிரகாசமானது. வானதூதர் ஒருவர் பேதுருவின் முன்னால் வந்து நின்றார்.
தூங்கிக் கொண்டிருந்த பேதுருவை அவர் தட்டி எழுப்பினார்.

‘பேதுரு… எழுந்திரும். உடனே எழுந்திரும்’

பேதுரு திடுக்கிட்டு விழித்துப் பார்த்தார். அவருக்கு முன்னால் வானதூதர். ஆச்சரியத்தில் அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே பேதுருவின் கைகளில் கட்டப்பட்டிருந்த சங்கிலிகள் தானே அவிழ்ந்து விழுந்தன.

‘உமது இடையை வரிந்து கட்டிக்கொள்ளும் மிதியடியையும் போட்டுக் கொள்ளும்’ தூதர் சொல்ல பேதுரு அவ்வாறே செய்தார்.

‘இப்போது உமது மேலாடையையும் போட்டுக்கொண்டு என்னைப் பின் தொடரும்’ தூதர் சொல்லிவிட்டு முன்னால் நகர பேதுரு அவரைப் பின் தொடர்ந்தார்.

சிறையின் கதவுகள் தானே திறக்க, தூதர் நடந்தார். பேதுரு அவரைப் பின் தொடர்ந்தார். முதல் நிலை, இரண்டாம் நிலை என ஒவ்வொரு காவல் நிலையாகக் கடந்து தூதர் பேதுருவை அழைத்துச் சென்றார். நகர்¢ன் இரும்புக் கதவுகள் கூட தூதர் நெருங்கியதும் தானே திறந்தது.

பாதுகாப்பான ஒரு இடம் வந்ததும் தூதர் சட்டென்று மறைந்தார். அதுவரை இது ஒரு கனவு என்றே நினைத்திருந்த பேதுரு, சுற்றுப்புறத்தைப் பார்த்தபின்பு தான் நடந்தவையெல்லாம் கனவு அல்ல, நிஜம் என்பதை உறுதி செய்து கொண்டார். அவருடைய ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. அவர் கொண்டிருந்த இறைவிசுவாசம் மேலும் மேலும் ஆழப்பட்டது.

அவர் நேராக யோவானின் தாயாருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே பலர் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்தார்கள். பேதுரு சிறையில் இருக்கிறார் என்னும் செய்தியும், நாளை அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப் போகிறார்கள் என்னும் செய்தியும் அவர்களை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தியிருந்தது. எப்படியாவது கடவுள் தான் அவரைக் காப்பாற்றவேண்டும், என்று செபித்துக் கொண்டிருந்த வேளையில் பேதுரு அங்கே வந்து கதவைத் தட்டினார்.

பணிப்பெண் ரோதி கதவின் அருகே வந்தாள்.

‘யாரது ?’

‘நான் தான்…’ பேதுரு சொன்னார். பேதுருவின் குரலைக் கேட்டதும் அவள் கதவைத் திறக்காமலேயே ஆனந்தத்தில் உள்ளே ஓடினாள்.

‘பே…பேதுரு வந்திருக்கிறார்’ அவள் தடுமாறினாள்.

‘பேதுருவா ? என்ன உளறுகிறாய் ? அவர் சிறையில் அல்லவா கிடக்கிறார்… நீ நன்றாகப் பார்த்தாயா ?’

‘நான் குரலைத் தான் கேட்டேன். கதவைத் திறக்கவேயில்லை. ஆனால் அது பேதுருவின் குரல் தான்’

‘ஒருவேளை ஏதேனும் வானதூதராய் இருக்குமோ ?’ அவர்கள் கேள்விகளுடனும், ஆவலுடனும், பயத்துடனும் கதவை நெருங்கினார்கள்.

‘யாரது…’

‘நான் தான் கவலைப்படாமல் கதவைத் திறவுங்கள்’ பேதுரு சொல்ல அவர்கள் கதவைத் திறந்தார்கள்.

அதிர்ந்தார்கள். உண்மை தான். பேதுரு தான் கண் முன்னால் நிற்கிறார். அவர்கள் ஆனந்தமடைந்தார்கள். பேதுரு நடந்த செய்திகளையெல்லாம் சொல்ல அவர்களின் விசுவாசமும் ஆழமானது.

ஏரோது மன்னனோ கடும் கோபத்தில் இருந்தான். பேதுருவை அழைத்து வரச் அதிகாலையில் சிறைக்குச் சென்றபோது சிறைச்சாலைக் கதவுகள் மூடிக் கிடந்தன. ஆனால் பேதுரு உள்ளே இல்லை ! ஏரோது மன்னனின் கோபம் காவலர்களின் மேல் திரும்பியது.

‘உங்களுக்குத் தெரியாமல் அவன் தப்பியிருக்க முடியாது’ என்று சொல்லி அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான்.

பேதுரு பயப்படாமல் தன்னுடைய போதனைகளைத் தொடர்ந்தார்.
பேதுருவின் மரணம்

பேதுரு தன்னுடைய பணியை இஸ்ரேல் நாட்டின் மேற்கு எல்லையிலுள்ள மத்திய தரைக் கடற்கரையோரமாக விரிவுபடுத்தினார். அந்தக் கடல் சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் நீளமும், நூறு கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. அந்தியோக்கியாவில் தங்கி தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும், மக்கள் வாழ வேண்டிய வழிகளையும் போதித்து கிறிஸ்தவத்தைப் பரப்பினார். பின் பவுல் காலத்தில் பேதுரு கொரிந்து நகரில் தன்னுடைய இறைப்பணியை விரிவு படுத்தினார். கி.பி 33ம் ஆண்டு முதல், கி.பி 40 ம் ஆண்டுவரை ஏழு ஆண்டுகள் அந்தியோகியா நகரிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் கிறிஸ்தவத்தைப் பரப்பினார். ஆசியா மைனர் பகுதியிலும் அவர் தன்னுடைய போதனைகளை நிகழ்த்தினார். அங்கிருந்து எகிப்துக்குப் பயணமாகி எகிப்து நாட்டிலும் துணிச்சலாக இயேசுவைப் பற்றிப் போதித்தார்.

எகிப்து நாட்டில் சில காலம் பணி செய்தபின் அங்கிருந்து கிரீஸ் நாட்டுக்குப் பயணமாகி அங்குள்ள கொரிந்து நகரில் இறைபணியாற்றினார். அதன் பின் தன்னுடைய பணியை ரோம், ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்கும் விரிவு படுத்தினார். பிரான்ஸ் நாட்டிலுள்ள கால் என்னுமிடத்தின் சார்ட்ரஸ் சபையின் புனித தந்தை என்று பேதுரு அழைக்கப்படுகிறார். பல நாடுகளுக்கும் சென்று இயேசுவைப் பற்றியும் அவருடைய போதனைகளைப் பற்றியும், இயேசுவின் பார்வையில் வாழ்க்கை முறை பற்றியும் போதித்தபின் மீண்டும் அவர் ரோமுக்கே திரும்பினார்.

அங்கே இறைபணி ஆற்றிக் கொண்டிருந்த பேதுரு மீண்டும் பல சோதனைகளைச் சந்தித்தார். ஆளும் அரசும், மதகுருக்களும் அவருக்கு எதிராக மீண்டும் எதிர்ப்பு அலைகளை எழுப்பினார்கள்.

கி.பி 67ல் பேதுரு கைது செய்யப்பட்டார்.

அவரை மேமர்டைன் என்னும் சிறையில் அடைத்தார்கள்.

மேமர்டைன் சிறை மிகக் கொடுமையானது. சிறையிலேயே கைதிகளைக் கொல்லவேண்டுமென்றால் அங்கே அடைப்பது அவர்களின் வழக்கம். அந்தச் சிறையில் கைகளும் கால்களும் ஒரு தூணில் சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் பேதுரு தவித்தார். அவரைச் சுற்றிலும் ஏராளமான கைதிகள். அவர்களில் பலர் இருந்த நிலையிலேயே இறந்து போயிருந்தார்கள். பலர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட மெல்லிய நூலில் தொங்கிக் கொண்டிருந்தார்கள். வெளிச்சமும் காற்றும் வராத அந்த அறையில் பேதுருவும் அடைக்கப்பட்டார்.

உணவோ, நீரோ எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை. சிறைக்காவலாளிகள் அவ்வப்போது சிறையைத் திறந்து பிணங்களை அப்புறப்படுத்துவார்கள். அவர்கள் வரும்போதெல்லாம் பேதுரு இன்னும் இறக்கவில்லையே என்று ஆச்சரியப்படுவார்கள். அந்த வேளைகளில் பேதுரு இயேசுவைப் பற்றி அவர்களுடன் பேசுவார். அவர்களில் பலர் பேதுருவின் உறுதியைக் கண்டும், போதனைகளைக் கேட்டும் கிறிஸ்தவர்களானார்கள். இப்படி பேதுரு சிறையில் சாவுடன் போராடியும், அந்த நிலையிலும் கிறிஸ்தவத்தை வளர்க்கப் போராடிய மாதங்கள் 9 !!

ரோமப் பேரரசராக அப்போது இருந்தார் மன்னன் நீரோ !!

நீரோ மன்னனுக்கு கிறிஸ்தவர்களைக் கொன்று குவிப்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தது. மறைமுகமாக இயேசுவை ஆதரித்தவர்களையும் அவர் கொன்று குவித்தார். பேதுரு வெளிப்படையாக இயேசுவைப் பற்றி போதித்தவர், தப்ப முடியுமா ? அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பேதுரு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவேண்டும்., ஆணை பிறப்பிக்கப்பட்டது.

‘ஒரே ஒரு விண்ணப்பம்’, பேதுரு கேட்டார்.

‘என்ன விண்ணப்பம் ?’ அவர்கள் கேட்டார்கள். தன்னை விடுவியுங்கள் என்றோ, சிலுவை மரணத்துக்குப் பதிலாய் விரைவாய் சாகக் கூடிய, வலியில்லாத மரணத்தையோ ஏதோ ஒன்றை பேதுரு கேட்கப் போவதாய் அவர்கள் நினைத்தார்கள். ஆனால் பேதுரு அவர்கள் வியந்து போகும் விதமாய் ஒரு விண்ணப்பத்தை வைத்தார்.

‘இயேசுவும் சிலுவையில் அறையப்பட்டு தான் இறந்தார். நானும் அப்படியே இறக்க தகுதியற்றவன். எனவே என்னை தலைகீழாகச் சிலுவையில் அறையுங்கள்’ பேதுரு விண்ணப்பம் வைத்தார். கூடியிருந்தவர்கள் அதிர்ந்தார்கள். பேதுருவின் அர்ப்பணிப்பை எண்ணி மலைத்துப் போனார்கள்.

பேதுருவின் விண்ணப்பம் அங்கீகரிக்கப் பட்டது.

டைபர் நதியின் கரையில் இருந்த வாடிகன் மலையின் உச்சியில் பேதுரு தலை கீழாக சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அவருடைய உடலை பதப்படுத்தி வாடிகன் நகரில் அடக்கம் செய்தார்கள்.

தற்போது வாடிகனில் அமைந்திருக்கும், போப்பாண்டவரின் இடமான பேதுரு தேவாலயம் பேதுருவின் கல்லறை மீது தான் அமைந்திருக்கிறது.

கிறிஸ்தவத்தை வளர்த்த சவுல்

சவுல். கிறிஸ்தவத்துக்கு எதிராக மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர். இயேசுவின் சீடர்களால் திருச்சபை வெகு வேகமாகக் கட்டி எழுப்பப் பட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பெரும் வேகத்தடையாக வந்தார் சவுல். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைவரையும் வீடுகளில் புகுந்து கொடுமைப்படுத்தினார். தன்னுடைய வலிமையினால் அவர்களை இழுத்துக் கொண்டு போய் சிறையிலும் அடைத்தார். மறை நூல் அறிஞர்கள், குருக்கள் பலர் அவரோடு இருந்தார்கள். சவுல் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் இருந்தார். வளர்ந்து கொண்டிருந்த சபை சிதறடிக்கப்பட்டது.

தமஸ்கு நகரத்தில் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டிருப்பதை சவுல் அறிந்தார். அவர் தலைமைக் குருக்களிடம் சென்று
‘எந்த நகரிலானாலும் சரி, இந்தப் புதிய மறையைத் தழுவுபவர்கள் யாராய் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட அவர்கள் எருசலேமுக்கு இழுத்து வரப்படவும் வேண்டும். இதற்காக ஆணை ஒன்றைத் தயாராக்கி தமஸ்கு நகர தொழுகைக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்’ என்றான்.

‘ஏன் தமஸ்கு நகர தொழுகைக் கூடங்களுக்கு ?’

‘அங்கே இந்த மறையைச் சார்ந்தவர்கள் பெருகி வருகிறார்கள். இங்கே இருந்த மக்களை நான் துரத்தி விட்டேன். அவர்கள் எங்கெங்கு செல்கிறார்களோ அங்கெல்லாம் இந்த மறையைப் பரப்புகிறார்களாம். இதை நாம் தடுத்தாக வேண்டும்’ சவுல் சொன்னார்.

‘சவுல்… உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நம்முடைய சட்டதிட்டங்களின் மேலும், மதத்தின் மேலும் நீ வைத்திருக்கும் மரியாதையை நினைத்து நான் ஆனந்தமடைகிறேன். இதோ, நீ கேட்கும் அத்தனை ஆணைகளையும் தயாராக்கி உன்னிடமே தந்து விடுகிறேன். நீ தான் இந்தப் பணியைச் செய்யவேண்டும். இங்கே அந்த மக்களைத் துரத்தியது போல, அங்கும் சென்று உன் தலைமையில் அந்த புதிய மறையினரை துரத்த வேண்டும். கிறிஸ்தவமாம் கிறிஸ்தவம்… இனிமேல் அந்த பெயரில் ஒருவனும் நடமாடக் கூடாது’ தலைமைக் குரு சொல்ல, சவுல் ஆனந்தமடைந்தார்.

ஆணை தயாரானது. அதைத் தமஸ்கு நகருக்கு எடுத்துச் செல்லும் பணியும் சவுலிடமே கொடுக்கப்பட்டது. சவுல் தன்னுடன் ஒரு குழுவினரையும் அழைத்துக் கொண்டு ஆனந்தமாக அந்தப் பணிக்கு ஆயத்தமானார்.

தமஸ்கு நோக்கிய பயணம் துவங்கியது. சவுல் தன்னுடைய குதிரையில் ஏறி தமஸ்கு நகரை நோக்கி விரைந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய குழுவினர் அவரைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். அதோ கண்ணுக்கெட்டும் தூரத்தில் தமஸ்கு நகர். அங்கே சென்று ஆணையை வினியோகித்து கிறிஸ்தவர்களாய் உலவுகின்றவர்களை எல்லாம் இழுத்துச் செல்லவேண்டியது தான். சவுல் உள்ளத்தில் எண்ணிக் கொண்டே உற்சாகமாய் சென்று கொண்டிருந்தார்.

திடீரென்று வானத்திலிருந்து தோன்றிய ஒரு ஒளி சவுலைச் சுற்றி வீசியது ! சவுல் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். உடன் வந்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் இந்தக் காட்சியைக் கண்டு உறைந்து போய் நின்றார்கள்.

‘சவுலே… சவுலே… ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய் ?’ குரல் ஒன்று ஒலித்தது. எல்லோரும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். யாரும் இல்லை. சத்தம் மட்டும் கேட்கிறது. அவர்கள் பயத்துடன் செய்வதறியாமல் திகைத்து நிற்க, சவுல் குரலை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.

‘ஆண்டவரே நீர் யார் ?… நான் உம்மை எப்போது துன்புறுத்தினேன்..’

‘நீ துன்புறுத்தும் இயேசு தான் நான்’ சவுல் இந்தக் குரலைக் கேட்டதும் நடுங்கினார். இயேசு தான் உண்மையான கடவுள் என்பதை அவருடைய மனம் எப்போதும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. எனவே அவரிடமிருந்து பதில் குரல் எழவில்லை.

‘நீ எழுந்து நகருக்குப் போ… நீ என்ன செய்யவேண்டும் என்பதை அங்கே நான் உனக்குச் சொல்வேன்’ குரல் ஒலிக்க சவுல் எழுந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார் எங்கும் ஒரே இருள் ! அவருடைய பார்வை பறிபோய் இருந்தது !

மூன்று நாட்கள் சவுல் பார்வையில்லாமல் இருந்தார். அவர் அந்த மூன்று நாட்களும் உண்ணவும் இல்லை குடிக்கவும் இல்லை. அவருடைய மனதுக்குள் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது இயேசுவின் குரல். நான் துன்புறுத்தும் இயேசு தான் உண்மையிலேயே கடவுளா ? எனக்கு ஏன் இப்படி ஒரு காட்சி நடக்கவேண்டும் ? நான் இப்போது என்ன செய்வது ? சவுல் கேள்விகளுக்குள் புதைந்து கிடந்தார்.

பார்வை இருந்தபோது குருடனாய் இருந்த சவுல், பார்வை போனபின் புதுப் பார்வை பெற்றார். இயேசுவை நோக்கி மன்றாடத் துவங்கினார்.
‘ஆண்டவரே… நீர் உண்மையான கடவுளாய் இருந்தால் என்னுடைய பார்வை எனக்குத் திரும்ப வரட்டும்’ சவுல் மனதால் வேண்டினான்.

‘சவுல்… அனனியா என்றொரு மனிதனை நான் அனுப்புகிறேன். அவன் உன்னுடைய பார்வையைத் திரும்பத் தருவார்’ சவுலின் மனதுக்குள் கடவுள் பேசினார்.

அதே நேரத்தில் அனனியா என்னும் மனிதரிடமும் இயேசு பேசினார்.
‘அனனியா…’ கடவுள் அழைக்க அனனியா ஆனந்தமாய்

‘ஆண்டவரே.. இதோ அடியேன். சொல்லும்’ என்று பணிந்தார். அனனியா தமஸ்கு நகரில் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளைப் போதித்து வந்த ஒரு சீடர்.

‘நீ நேர்த்தெருவுக்குச் சென்று அங்கே யூதாவின் வீட்டில் தங்கியிருக்கும் சவுலைச் சென்று பார்’

‘சவுலா ? இயேசுவே …சவுல் எருசலேமில் செய்த கொடுமைகள் உமக்குத் தெரியாததா ? கிறிஸ்தவத்தை அழிக்கத் தான் அவர் இங்கே வந்திருக்கிறார். அவரை நான் போய்ப் பார்க்க வேண்டுமா ?’ அனனியா பயந்தார்.

‘கவலைப்படாதே. சவுல் இப்போது என்னுடைய சீடன். காட்டாற்று வெள்ளமாய் இருந்த அவனை நான் ஒழுங்கு படுத்தியிருக்கிறேன். நீ போய் அவருக்குப் பார்வையையும், தூய ஆவியையும் அளிக்க வேண்டும்’ இயேசு சொல்ல சீடன் அமைதியாய் ஒத்துக் கொண்டான்.

அதன்பின் அனனியா தாமதிக்கவில்லை. நேர்த்தெருவுக்கு ஓடி யூதாவின் வீட்டுக்குள் நுழைந்தார்.

‘சவுல்… சவுல்… சவுல் இங்கே இருக்கிறாரா ?’ அனனியா கேட்டார்.

சவுல் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார்

‘நீங்கள் ?…………..’

‘என் பெயர் அனனியா…’

அனனியாவின் பதிலைக் கேட்ட சவுல் ஆனந்தமடைந்தார். கடவுளின் வல்லமையை நினைத்து வியந்தார்.

‘நான் தான் சவுல். உங்கள் வருகைக்காகத் தான் காத்திருந்தேன்’ சவுல் சொல்ல, அனனியா சென்று சவுலின் கண்களின் மேல் கைகளை வைத்து செபித்தார். அப்போது அவருடைய கண்களிலிருந்து செதிள் போன்ற ஒரு பொருள் கழன்று விழ அவர் பார்வையடைந்தார்.

அதன் பின் சவுல் தாமதிக்கவில்லை. தன்னுடைய பழைய எண்ணங்களையெல்லாம் மாற்றிக் கொண்டார். விரைந்து சென்று திருமுழுக்கும் பெற்றார். கொண்டு வந்திருந்த ஆணைகளைக் கிழித்து எறிந்தார்.

எந்த அளவுக்கு இயேசுவுக்கு எதிராய் செயல்பட்டாரோ, அந்த அளவுக்கு ஆதரவாய் செயல்பட ஆரம்பித்தார் !
தன்னுடைய பெயரையும் பவுல் என்று மாற்றிக் கொண்டார். தலைமைக் குருக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள், மறைநூல் அறிஞர்கள் செய்வதறியாமல் திகைத்தார்கள் பவுல் நகரெங்கும் சென்று கிறிஸ்துவை அறிக்கையிடத் துவங்கினார்.

கிறிஸ்துவை அடியோடு வெறுத்த ஒருவர் அவரைப் பற்றி சாட்சி சொல்லித் திரிவதைக் கேட்ட பலர் இயேசுவில் விசுவாசம் கொண்டார்கள்

பவுல் தமஸ்கு நகரில் தன்னுடைய போதனையை தீவிரப்படுத்தினார். யூதர்கள் பவுலின் மனமாற்றத்தைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். எப்படியாவது பவுலைக் கொல்லவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டார்கள். தமஸ்கு நகரிலிருந்து பவுல் வெளியேறிவிடாமலிருக்க நகர வாசலில் காவலாளிகள் நியமிக்கப்பட்டார்கள். பவுலுக்கு, அவருடைய கிறிஸ்தவ நண்பர்களுக்கும் செய்தி வந்தது. அவருடைய ஆதரவாளர்கள் எப்படியாவது பவுலைத் தப்ப வைக்கவேண்டுமென்று முடிவெடுத்தார்கள். அவர்கள் பவுலை ஒரு கூடையில் வைத்து நகரின் கோட்டைச்சுவருக்கு மறுபக்கத்தில் இறக்கிவிட்டார்கள். பவுல் அங்கிருந்து தப்பி எருசலேம் வந்தார் !

எருசலேமில் வாழ்ந்த கிரேக்க மக்களிடையே பவுல் இயேசுவைப் பற்றிப் போதிக்கத் துவங்கினார். எருசலேமில் யார்தான் போதிக்க முடியும் எதிர்ப்புகள் புற்றீசல் போல கிளம்பின. பவுல் அங்கிருந்து தர்சுக்குத் திரும்பி அங்கே தர்சு நகர மக்களிடம் தன்னுடைய போதனையை புதுப்பித்தார். அங்கே சில ஆண்டுகள் தங்கி இயேசுவின் வாழ்க்கையையும், போதனைகளையும் மக்களிடையே விளம்பினார்.

அதன்பின் பிரச்சனைகளும் எதிர்ப்புகளும் பவுலைத் துரத்தின. இயேசுவுக்கு ஆதரவாக பவுல் செயல்பட்டபோது அவரோடு இருந்த தலைமைக் குருக்கள் எல்லாம் இப்போது பரம எதிரிகளாகிவிட்டிருந்தார்கள். எனவே அவர் நாடுகள் மாறி மாறி தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோக்கியா கிறிஸ்தவர்களை பரம விரோதிகளாய்ப் பார்த்தார்கள். பவுல் அங்கே சென்று துணிச்சலாய் போதித்தார். அங்கே அவர் சில புதுமைகளும் செய்தார். ஒரு சப்பாணியை நடக்க வைத்தார்.

யூதர்கள் அவரைத் துரத்தியடித்தார்கள். அவர்கள் கூட்டமாக சேர்ந்து பவுலை சுற்றி வளைத்து கல்லால் எறிந்தார்கள். அவரைக் குற்றுயிராக்கி ஒரு பள்ளத்தாக்கில் வீசினார்கள். அவர் இறந்து விட்டதாக நினைத்து நிம்மதியுடன் திரும்பிச் சென்றார்கள். ஆனால் பவுல் பிழைத்துக் கொண்டார். மீண்டும் திரும்பி வந்து தான் செய்து கொண்டிருந்த இறைப்பணியை தொடர்ந்து நடத்தினார்.

அங்கிருந்து ஐரோப்பாவின் மக்கதோனியாவில் தன்னுடைய அடுத்த கட்டப் பணியைத் துவங்கினார் பவுல். அத்தேனே, கொரிந்து ஆகிய நகரங்களிலும் அவருடைய கிறிஸ்தவ மத போதனைப் பணி நடந்தது. சில ஆண்டுகள் அங்கெல்லாம் பணிபுரிந்தபின் மீண்டும் பவுல் அந்தியோக்கியாவுக்கே திரும்பினார். அந்தியோக்கியாவில் ஏராளம் மக்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவ ஆரம்பித்தார்கள்.

அதன்பின் கலாத்தியா, பிரிகியா ஆகிய நாடுகளில் பணி செய்ய ஆரம்பித்தார் பவுல். எபேசு நகரில் அவருடைய பணி மிகவும் வேகமாக நடந்தது. ரோமர்களின் நகரமான எபேசுவில் துணிச்சலாய் போதித்த பவுல் எபேசு நகரில் பலர் கிறிஸ்தவத்தைத் தழுவ காரணமானார்.

அதன் பின் மீண்டும் எருசலேமிற்குச் சென்றார் பவுல். எருசலேமில் சென்று எருசலேம் தேவாலயத்துக்குள் யூதர்கள் அல்லாத பிற இனத்து மக்களையும் அழைத்துச் சென்றார். குருக்கள் கொதிப்படைந்தனர். அவர்கள் பவுலைக் கைது செய்தனர்.

தலைமைச் சங்கத்தில் பவுல் நிறுத்தப்பட்டார்.

பவுல் பரிசேயராக இருந்ததால் அங்கே அவருக்கு எதிரான வழக்குகள் எதுவும் நிரூபிக்கப் படாமல் இருந்தது. அவர் ரோமராகவும் இருந்தார் எனவே தலைமைச் சங்கத்தினர் அப்போது அவருக்கு எதிராக ஏதும் செய்யவில்லை. பவுலை ரகசியமாய்க் கொல்வதே ஒரே வழி என்று யூதர்கள் முடிவெடுத்தார்கள். பவுலோ அவர்களிடமிருந்து தப்பி செசரியாவிற்குச் சென்றார்.

இவ்வாறு மிகவும் எழுச்சியுடன் பணியாற்றிய பவுல் கி.பி 64ம் ஆண்டு நீரோ மன்னனால் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணமடைந்தார் !

முதல் இரத்த சாட்சி ஸ்தேயான்

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் திருச்சபை மிகவும் வேகமாக வளர்ந்து வந்தது. எதிர்ப்பாளர்களின் எச்சரிக்கைகளும், மிரட்டல்களும் வலுவிழந்து விட்டன. திருச்சபையில் ஏராளமான ஏழைகள், நோயாளிகள், கைவிடப்பட்டோர், அனாதைகள் இருந்தார்கள். அவர்களுக்குச் சபையினரே உணவு உறைவிடங்கள் வழங்கினார்கள். மக்கள் பகிர்தலில் சிறந்து விளங்கியதால் அவர்களுக்கு அது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை.

மக்களுக்கு உணவு வழக்கும் வேலைகளையும் அப்போஸ்தலர்களே கவனித்துவந்ததால் அவர்களால் அதிக இடங்களில் உரையாற்றவும், போதனைகள் நிகழ்த்தவும் முடியவில்லை. எனவே அவர்கள் கணக்கு வழக்குகளைக் கவனிக்கவும், மக்களுக்கு உணவு வழங்கவும் ஒரு குழுவினரை அமைப்பது என்று முடிவு செய்தார்கள். அதன்படி ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் ஸ்தேயான்.

ஸ்தேயான் இயேசுவின் கொள்கைகளின் மீது மிகவும் பற்றுக் கொண்டிருந்தவர். இயேசு தான் கடவுளின் மகன் என்பதை உறுதியாக நம்பி, அதைப் பொதுவிடங்களில் தைரியமாக உரைத்து வந்தார். அவருக்கு நோய்தீர்க்கும் வல்லமையும் இருந்ததால் மக்கள் அவரிடமும் அதிகமாக வர ஆரம்பித்தார்கள். அவரும் பேதுருவுக்கு அடுத்தபடியாக அதிக நோயாளிகளைக் குணமாக்கி அதிசயங்களைச் செய்து வந்தார்.

ஸ்தேயானின் புகழ் பரவியது.

இயேசுவின் பெயரால் கூட்டம் நாளுக்கு நாள் வளர்வதைக் கண்ட மறைநூல் அறிஞர்கள் கலக்கமடைந்தார்கள். ஏதேனும் செய்து இவர்களை ஒடுக்கியாக வேண்டும் என்று திட்டமிட்டார்கள். அவர்களுடைய பார்வை ஸ்தேயானின் மீது விழுந்தது.

ஸ்தேயான் ஒரு கிரேக்கர். அதை வைத்து அவரை மாட்டிவிடுவது என்று அவர்கள் திட்டமிட்டார்கள்.

ஊரிலுள்ள யூத வெறியர்கள் பலரிடம் சென்று
‘ஒரு கிரேக்கன் வந்து யூதர்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறான். சட்டங்கள் தவறென்கிறான். மோசேயைப் பழித்துரைக்கிறான். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு வெட்கமில்லாமல் யூதன் என்று சொல்லித் திரிகிறீர்களே’ என்று திரியைப் பற்ற வைத்தார்கள்.

சிறு பொறியாக போடப்பட்ட வெறியெனும் நெருப்பு வெறித்தனமாய் படர்ந்து பரவியது. யூதர்களில் கல்வியறிவில்லாத பலர், மத சம்பிரதாயங்களில் ஊறிப்போய்விட்ட மக்களோடு சேர்ந்து கொண்டு ஸ்தேயானுக்கு எதிராக ஒன்று திரண்டனர்.

அவர்கள் ஸ்தேயானை இழுத்துக் கொண்டு தலைமைச் சங்கத்தின் முன்னால் விசாரணைக்காக நிறுத்தினார்கள். ஸ்தேயானைக் கேள்விகளினால் மாட்டவைக்கவேண்டும் என்னும் திட்டம் பலிக்கவேயில்லை, தொடுக்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் மறுக்க முடியா பதில்களை அவர் அளித்தார்.

‘இவன் மோசேயைப் பழித்தான்’

‘நம் சட்டத்தை இடித்துரைத்தான்’

‘யூதர்களிடையே பிரிவினை உருவாக்குகிறான்’ பல்வேறு குற்றச்சாட்டுகள் ஸ்தேயானை நோக்கி எறியப்பட்டன. ஸ்தேயான் அமைதியாய் இருந்தார்.

அவருடைய முகம் மிகவும் சாந்தமாக இருந்தது. அவரைக் கண்டவர்கள் ஏதோ வானதூதர் மக்களிடையே நிற்பதுபோல உணர்ந்தார்கள். ஸ்தேயான் மறைநூலை அவர்களுக்கு விளக்கினார்.
‘உங்கள் மறைநூல் விளக்கங்களைப் பார்த்தீர்களே. எல்லா இறைவாக்கினர்களையும் கொல்கிறீர்கள். பின் அவர்களைக் கொண்டாடுகிறீர்கள். இது தானே வழக்கமாய் இருந்து வருகிறது’ என்று கேட்க கூட்டத்தினர் கொதித்தனர்.

‘உங்கள் முட்டாள்தனமான வழியை விட்டுவிட்டு விலகாவிட்டால் நீங்கள் அழிவது உறுதி’ ஸ்தேயான் கூடியிருந்த எதிரிகள் மத்தியில் இறைவனின் அருளால் தைரியமாய்ச் சொன்னார்.

கூட்டத்தினரின் கோபம் கரை கடந்தது. அவர்கள் அவரை இழுத்துக் கொண்டு சங்கத்திற்கு வெளியே போட்டார்கள்.

ஸ்தேயான் அப்போதும் கலங்கவில்லை. வானத்தை ஏறிட்டுப் பார்த்த அவர்.’ வானம் திறந்திருக்கிறது. இயேசு அங்கே நிற்கிறார். அதை என் கண்கள் காண்கின்றன’ என்றார்.

அவர்கள் அதற்கு மேல் தாமதிக்கவில்லை. ஸ்தேயானின் மீது கற்களை எறியத் துவங்கினார்கள். ஸ்தேயான் கலங்கவில்லை, அழவில்லை, அவருடைய முகம் சாந்தத் தன்மையையோ ஒளியையோ இழக்கவில்லை.

மண்டியிட்டார். கற்கள் அவர் மேல் மூர்க்கமாய் விழுந்து கொண்டே இருந்தன.

‘ஆண்டவராகிய இயேசுவே என் ஆவியை ஏற்றுக் கொள்ளும்… இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்’.

இயேசுவின் வழியில் எதிரிகளுக்காக மன்னிப்பை விண்ணப்பித்துக் கொண்டே உடலெங்கும் இரத்தம் வழிய மண்ணில் சாய்ந்து உயிர்விட்டார் ஸ்தேயான்.

இயேசு பணி செய்ய ஆரம்பித்தபின் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவர் கொலை செய்யப்பட்டார். இப்போது இயேசுவின் மரணம் நிகழ்ந்த சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் ஸ்தேயான் கொல்லப்படுகிறார்.

இயேசுவின் முதல் இரத்த சாட்சியானார்.

Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு : 3 – இயேசுவின் சீடர்களின் பணி

Image result for Disciples of Jesus and How they died

1. அச்சம் துறந்த அந்திரேயா… இயேசுவின் முதல் சீடர்

அந்திரேயா இயேசுவின் பன்னிரண்டு திருத் தூதர்களில் முதலில் இயேசுவோடு இணைந்தவர். முதலில் இவர் திருமுழுக்கு யோவானின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டு அவர் தான் மெசியா என்னும் எண்ணத்தில் அவருடைய சீடரானவர். பின் திருமுழுக்கு யோவானே இயேசுவைச் சுட்டிக் காட்டி அவரே உண்மையான கடவுள் என்று சொன்னதால் இயேசுவோடு இணைந்தவர். இயேசுவை நம்பி அவரோடு இணைந்த முதல் சீடர் என்னும் பெருமை இவருக்கு உண்டு.

அந்திரேயா கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தவர். அந்திரேயா தான் இயேசுவின் சீடர்களில் முக்கியமானவரான பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தவர். அந்த பேதுரு அந்திரேயாவின் சகோதரன். இருவரும் மீன்பிடி தொழிலைச் செய்து வாழ்க்கை நடத்தி வந்த வேளையில் தான் மீட்பரைக் குறித்து கேள்விப்பட்டு மெசியாவுக்கான தேடுதலில் ஈடுபட்டார்கள்.

அந்திரேயா பணிசெய்யச் சென்ற இடம் இன்றைய ரஷ்யா !

இன்றைய ஜார்ஜியாவிலுள்ள காக்கசீய மலையடிவாரத்தில் அந்திரேயா பணி செய்யச் சென்றார். அங்குள்ள மக்களுக்கு இயேசுவைப் பற்றிப் போதிக்கத் துவங்கினார். அங்கே இயேசுவைப் பற்றிப் போதிப்பது அவருக்கு எளிதாக இருக்கவில்லை. இயேசு யார் என்பதே அறிந்திராத மக்களுக்கு முதலில் அவரைப் பற்றிய அறிமுகமும் தேவைப்பட்டது. அந்திரேயா பொறுமையாய் மக்களைச் சேர்த்தார். மக்களிடம் கிறிஸ்தவ மதத்தை விளக்கினார். அங்குள்ள மக்களிடம் சில காலம் பணியாற்றியபின் அங்கிருந்து இஸ்தான்புல் க்குச் சென்றார்.

இஸ்தான்புல் அப்போது பைசாண்டியம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. அங்கே அவருக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருந்தன. மக்கள் யாரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

அங்குள்ள அரசாங்கம் அவரைச் சிறையில் அடைத்தது. அந்திரேயா எதற்காக நாட்டுக்கு வந்திருக்கிறார், அவருடைய எண்ணம் என்ன என்பதைக் குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வந்தது.

‘மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்’ என்று அந்திரேயா முழங்கினார். அரசாங்கம் அவரை எச்சரித்தது.

‘இயேசு நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர் ‘ என்று முழங்கினார். அவரை மக்கள் கல்லால் எறிந்தார்கள். ஆனாலும் அந்திரேயா சளைக்கவில்லை. தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்தார்.

இயேசுவோடு பணியாற்றிய காலத்தில் பெரும்பாலும் இவருடைய பெயர் குறிப்பிடப்பட்டதே இல்லை. இயேசு ஐந்து அப்பத்தை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து அளிப்பதற்குக் காரணமான சிறுவனை அழைத்து வந்ததாக அந்திரேயாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றபடி அந்திரேயா எந்த விதமான முக்கியப் பணிகளையும் செய்ததாக விவிலியம் சொல்லவில்லை. ஆனால் இப்போது உறுதியாக கண்காணாத தூரத்துல் கல்லடி பட்டும் பணியாற்றுகிறார்.

அந்திரேயா கிரீஸ் நாட்டிற்குப் பலமுறை பயணம் செய்தார். ஒரு முறை அவர் கிரீஸ் நாட்டிற்குப் பயணம் செய்து பட்ரேஸ் என்னும் நகரை வந்தடைந்தார். அங்கு அவர் ஏராளமான அற்புதங்களைச் செய்தார். பலரைக் குணமாக்கினார். யாரைக் குணமாக்கினாலும், இயேசு உனக்குச் சுகமளித்தார் என்று சொல்வதை வழக்கமாய்க் கொண்டிருந்ததால் இயேசுவின் பெயர் அங்கே பரவத் துவங்கியது.

அங்கே ஒரு ரோம ஆளுநர் இருந்தார். அவருடைய பெயர் ஏஜியேட்ஸ். அவருடைய மனைவி மேக்ஸ்மில்லா ஒருமுறை உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். அவரை அந்திரேயா குணப்படுத்த அவள் கிறிஸ்துவை நம்பும் கூட்டத்தில் சேர்ந்தாள். ஏஜியேட்ஸ் இதை வெறுத்தான். அந்திரேயாவை விரைவில் நாடு கடத்த வேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால் அவனுடைய சகோதரன் ஸ்ராட்டோக்லிஸ்ம் அந்திரேயாவுடன் சேர்ந்தார். அவரையே அந்திரேயா அந்த நாட்டின் கிறிஸ்தவ மதத் தலைவராக நியமித்தார். ஏஜியேட்ஸ் இதனால் பெரிதும் எரிச்சலடைந்தான்.

அவன் அந்திரேயாவை அழைத்தான்

‘நீ.. இந்த நாட்டை விட்டு உடனே வெளியேறவேண்டும். மக்களிடையே பிளவு படுத்தும் நடவடிக்கையை நீ செய்து வருகிறாய். அது ஒத்துக் கொள்ளக் கூடியதல்ல. எனவே நீ உடனடியாக வெளியேற வேண்டும்’ என்றான்

‘நான் பிரிவினை உண்டாக்க வந்தேன் என்பது நீங்களாய் சொல்வது. நான் உண்மையைப் பற்றியும், அறிந்தவற்றைப் பற்றியும் உலகிற்குச் சொல்லவே வந்திருக்கிறேன்.’

‘என்ன உண்மை’

‘இயேசுவே கடவுள் என்னும் உண்மை. இந்த உண்மையை அறிய நீங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்’ அந்திரேயா சாந்தமாய்ச் சொன்னார்.

ஏஜியேட்ஸ் எரிச்சலடைந்தான் ஆனாலும் எதுவும் பேசாமல் அப்போது அவரை விடுவித்தான். அந்திரேயா தொடர்ந்து பணி செய்தார்.

அந்திரேயா நிறைய தீர்க்கத்தரிசனங்கள் சொன்னார். சிறையில் மத்தியாஸ் அடைக்கப்பட்ட போது உருக்கமாக செபித்தார். அவருடைய செபத்தினால் சிறையில் அவரைக் கட்டியிருந்த சங்கிலிகள் உடைந்து தெறித்தன.

ஆள்பவர்களின் கோபமும் மக்கள் கோபமும் அந்திரேயா மீது திரும்பியது. அவர்கள் அந்திரேயாவை அடித்து உதைத்தனர். அவருடைய பற்கள் உடைந்து தெறித்தன. அவர்கள் அவருடைய விரல்கள் சிலவற்றை வெட்டி எறிந்தனர். அவரைக் குற்றுயிராக்கி ஒரு மலைச்சரிவில் எறிந்தார்கள்.

மலைச்சரிவில் கிடந்த மனிதருக்கு இயேசு தரிசனமானார் !! அவருடைய காயங்களை ஒரே நாளில் ஆற்றினார்.

மறுநாள்.

மக்கள் முன்னிலையில் மீண்டும் தோன்றினார் அந்திரேயா ! அதே பழைய உற்சாகத்துடன். மக்கள் அதிர்ந்தார்கள். இப்படி அடித்துப் போட்ட ஒரு மனிதனும் பிழைத்து வந்ததாக வரலாறு இல்லையே என்று நடுங்கினார்கள்.

அந்திரேயா அவர்களிடம் தன்னைக் குணமாக்கியதும் அதே இயேசு தான் என்று சொல்ல, மக்கள் பலர் அவரையும், இயேசுவையும் நம்பினார்கள்.

அவருடைய போதனைகள் வேகமாகப் பரவின.

ஒரு முறை ஒரு பெண் தன்னுடைய ஒரே மகனை மரண கோலத்தில் பார்த்து கதறிக் கொண்டிருந்தாள். அந்திரேயா அங்கே வந்தார்.

‘நான் இவனை உயிர்ப்பித்தால் நீங்கள் இயேசுவை நம்புவீர்களா ?’ அவர் கேட்டார்.

அந்த சூழ்நிலையில் யார் தான் இல்லை என்று சொல்வது. அவள் ஆம் என்று கதறினாள்

அந்திரேயா அவனைத் தொட்டார்., ‘இயேசுவின் பெயரால் சொல்கிறேன் எழுந்திரு’ என்றார். இறந்தவன் எழுந்தான். சுற்றி நின்றவர்கள் பயத்தில் விழுந்தனர். இதே போல் எங்கும் கண்டதில்லையே என்று பயந்தனர்.

நிலமை கட்டுக்குள் அடங்காமல் போய்க்கொண்டிருப்பதைக் கண்ட ஏஜியேட்ஸ் அந்திரேயாவைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்தான்.

அந்திரேயா பிடிக்கப் பட்டார். அவருக்கு விசாரணையில்லாமலேயே தீர்ப்பிடப்பட்டது.

மரண தண்டனை ! அதுவும் சிலுவை மரணம்.

அந்திரேயா X வடிவ சிலுவையில் அறையப்படவேண்டும் என்று தீர்ப்பானது. X வடிவ சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டால் தரையையும், மக்களையும் பார்க்க முடியாமல் வானத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டிவரும். அது சிலுவையில் இருப்பவரை அதிக வேதனையடையச் செய்யும் என்பதும். தலை கீழாக X வடிவ சிலுவையில் தொங்கினால் மரணம் நிகழ அதிக நேரமாகும், வலியும் அதிகமாகும் என்று பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு அந்திரேயாவுக்கு சிலுவை மரணம் தீர்ப்பானது.

அந்திரேயா சிலுவையில் அறையப்பட்டார்.

அந்திரேயாவின் மரணம் ஊரெங்கும் பரவியது. சுமார் இருபத்தையாயிரம் மக்கள் சிலுவையைச் சூழ்ந்து கொண்டார்கள். அந்திரேயா வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். வானத்தில் அவருக்கு இயேசு காட்சியளித்தார். அந்திரேயா பரவசத்துடன் அந்தக் காட்சியை சுற்றி நின்ற மக்களுக்கு விளக்கினார். மக்கள் இன்னும் அதிகமாக நம்பிக்கை வளர்த்தார்கள்.

இரண்டு நாட்கள் சிலுவையில் தொங்கிய அந்திரேயா விடாமல் மக்களுக்குப் போதித்துக் கொண்டே இருந்தார். ம

மாபெரும் மக்கள் எழுச்சி அரசுக்கு எதிராக எழும்புவதை அறிந்த மன்னன் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி விடவேண்டுமென்று விரும்பி சிலுவையை நெருங்கினான். ஆனால் அந்திரேயா ஒத்துக் கொள்ளவில்லை. தான் இயேசுவை தரிசித்து விட்டதாகவும், இனிமேல் புவி வாழ்க்கை சாத்தியமில்லை என்றும் பிடிவாதமாய் சிலுவையில் தொங்கினார்.

மன்னன் வீரர்களுக்கு ஆணையிட்டான். அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்குங்கள்.

வீரர்கள் அந்திரேயாவின் சிலுவையை நெருங்க அவர்களின் கைகள் மரத்துப் போயின. அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. மன்னன் பயந்தான். மக்கள் வியந்தார்கள்.

திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி வெள்ளம் பாய்ந்து வந்து அந்திரேயாவை நனைத்தது. அரை மணி நேரம் அந்த ஒளி அந்திரேயா மீது பாய்ந்து கொண்டே இருந்தது. அந்த ஒளி விலகியபோது அந்திரேயா இறந்து போயிருந்தார்.

அந்திரேயா இறந்தபோது காலம் கிபி 69, நவம்பர் முப்பதாம் நாள்.

ஏஜியேட்டசின் மனைவி மேக்ஸ்மில்லாவும், அவரது சகோதரன் ஸ்ராட்டோகிலிஸ் ம் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி அடக்கம் செய்தார்கள். அந்திரேயா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு மக்கள் குவிய ஆரம்பித்தார்கள். சிலர் குணமும் அடைந்ததாக செய்திகள் பரவ மக்கள் ஏராளமாக அவருடைய அடக்க இடத்தை மொய்த்தார்கள்.

மக்களின் மனமாற்றம் மன்னன் ஏஜியேட்டசை வருத்தியது. தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு குத்த, அவன் தற்கொலை செய்து கொண்டான்.

கி.பி 357 ம் ஆண்டு கான்ஸ்டண்டன் மன்னன் அந்திரேயாவில் உடல் எலும்புகளை மட்டும் எடுத்து பைசாண்டியத்திலுள்ள தூய அப்போஸ்தலர் தேவாலயத்தில் வைத்தார். அவருடைய உடல் எலும்புகளின் ஒருபாகம் ஸ்காட்லாந்து தேசத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கபாலம் ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
1967ம் ஆண்டு அந்திரேயாவின் கபாலம் மீண்டும் பட்ரேஸ் திருச்சபைக்கு திரும்ப அளிக்கப்பட்டது.

அவர் ஸ்காட்லாந்து தேசத்தின் புனித தந்தையாகப் போற்றப்படுகிறார். ஸ்காட்லாந்தும், இங்கிலாந்தும் இணைந்தபின், இங்கிலாந்து தேசக் கொடி அவருடைய X வடிவ சிலையை தன்னுடைய தேசியக் கொடியில் பொறித்து பெருமைப்படுத்தியது !

Image result for Disciples of Jesus and How they died

2. பிலிப்பு செய்த பிரமிக்கும் பணி

இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் அல்லது திருத்தூதர்களில் ஒருவரான பிலிப்பு அதிகம் அறியப்படாதவர். விவிலியத்தில் அவரைப்பற்றி பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. அதிக ஆழமான விசுவாசம் உடையவராகவும் இவர் சித்தரிக்கப்படவில்லை. ‘ஆண்டவரே தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று இயேசுவிடம் இறுதி இரா உணவில் கேட்டவர் இவர். என்னைக் கண்டவன் தந்தையைக் கண்டான் என்னும் இயேசுவின் பதிலும் உடனே திருப்தியும் அடைந்து விடுகிறார்.

பிலிப்பின் பணி ரஷ்யாவிலுள்ள சைத்தியாவில் நடந்தது. தொடர்ந்து இருபது நீண்ட ஆண்டுகள் இயேசுவைப் பற்றி சைத்தியா நகரில் போதித்து நடந்தார். பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் விடாப்பிடியாக நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த அவர் பின் அங்கிருந்து ஆசியா மைனரிலுள்ள (தற்போதைய துருக்கி) எராப்போலி என்னும் நகரில் வந்து பணியைத் தொடர்ந்தார்.

பிலிப்பு தன்னுடைய பணிக்காலத்தில் ஏராளமான அதிசயச் செயல்களைச் செய்தார்.

எராப்போலி நகர் மக்கள் தங்களுடைய கடவுளாக ஒரு பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த காலம் அது. ஒருமுறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் சுற்றி நின்று பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். பிலிப்பு அவர்கள் முன்னால் வந்து நின்று கையில் சிலுவையை ஏந்தி அந்தப் பாம்பு செத்துப் போகட்டும் என்று சபித்தார். உடனே பலிபீடத்தின் அடியிலிருந்து வெளியே வந்த ஒரு பெரிய பாம்பு தனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் மீது விஷத்தை உமிழ்ந்து விட்டு இறந்து விட்டது.

மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த விஷம் பட்ட மக்கள் அங்கேயே இறந்தார்கள். அவர்களில் ஒருவன் அந்த நாட்டு மன்னனின் மகன் !

கூடியிருந்த மக்கள் பிலிப்புவின் மீது கொலை வெறி கொண்டார்கள். பிலிப்பு அசரவில்லை. மன்னனின் மகனின் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் உயிர் பெற்றான். மக்கள் நடுங்கினார்கள்.

பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு பிலிப்புவின் செய்கைகள் பயத்தையும் கோபத்தையும் கொடுத்தன. எப்படியும் பிலிப்புவை உயிருடன் விட்டால் இதே போல இன்னும் பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். இவனுடைய கடவுளைக் கொன்றது போல இவனையும் கொல்லவேண்டும் என்று பிலிப்புவை சுற்றி வளைத்தார்கள்.

அப்போது பிலிப்புவிற்கு வயது 87.

பிலிப்புவை பிடித்த அவர்கள் ஒரு சிலுவையில் பிணைத்துக் கட்டினார்கள்.

சிலுவையில் தொங்கிய பிலிப்பு, சிலுவையில் இயேசு விண்ணப்பித்தது போல தன்னைக் கொல்வோரை மன்னிக்குமாறு கடவுளை வேண்டினார். அதைக் கேட்ட மக்கள் இன்னும் ஆத்திரமடைந்தார்கள்.

சிலுவையில் தொங்கிய பிலிப்புவை நோக்கி மக்கள் கற்களை எறிய ஆரம்பித்தார்கள்.

கற்கள் பிலிப்புவின் உடலைப் பதம் பார்த்தன. உடலெங்கும் காயங்களுடனும், இரத்தம் சொட்டச் சொட்ட கல்லடி பட்டு பிலிப்பு அங்கேயே இறந்தார்.

எராபோலியில் பிலிப்புவின் கல்லறை இன்றும் இருக்கிறது.

Image result for Disciples of Jesus and How they died

3. மனதில் நின்ற மத்தேயு

இயேசுவின் சீடர்களில் பெருமைக்குரியவர். வரிவசூலிக்கும் தொழிலைச் செய்து வந்ததால் அவருக்கு பல்வேறு விதமான, பல்வேறு கலாச்சாரப் பின்னணியில் வாழ்ந்த மக்களோடு பரிச்சயம் இருந்தது. அதுவே பல் மொழிகளில் மத்தேயு அறிவு கொள்ளவும் துணை நின்றது. மொழியறிவு நன்றாக இருந்ததால் மத்தேயுவுக்கு அது இறைப்பணி ஆற்றுவதில் பெரும் பங்காற்றியது. எபிரேயம், கிரேக்கம், அராமிக் போன்ற மொழிகளில் அவருக்கு நல்ல புலமை இருந்தது.

மத்தேயு தன்னுடைய பணியை முதலில் இயேசு பணி செய்த இடங்களிலேயே தொடர்ந்து செய்து வந்தார். அவருடைய ஆழ்ந்த சட்ட அறிவு இருந்தது. யூதர்களின் முன்னோர்கள் பற்றியும், பழைய தீர்க்கத் தரிசனங்கள் பற்றியும் நன்றாக அறிந்து வைத்திருந்ததால் அவர் இயேசுவின் வரவை தீர்க்கத் தரிசனங்களின் நிறைவேறல் என்னும் அடிப்படையிலேயே போதித்து வந்தார். சுமார் பதினைந்து ஆண்டுகள் அவர் யூதர்களிடையே பணியாற்றினார்.

பாரசீகத்திலும், எத்தியோப்பியா பகுதிகளிலும் அவர் தன்னுடைய இரண்டாவது கட்ட பணியை ஆரம்பித்தார். அங்கும் கிறிஸ்தவ மதத்தைப் பல்வேறு இடர்களுக்கு இடையே நடத்திய மத்தேயு பின் எகிப்துக்குப் பயணமானார்.

எகிப்து நாட்டில் இறைப்பணி செய்துகொண்டிருந்த போது எகிப்து மன்னனின் மகன் இறந்து போனான். மத்தேயுவின் பெயர் நாடெங்கும் பரவுவதற்கு அது ஒரு காரணமானது. மத்தேயு அரசனின் மாளிகைக்குச் சென்று எகிப்து மன்னனுடைய மகனைத் தொட்டு உயிர்ப்பித்தார் ! நாடு முழுவதும் அந்த செய்தி பரவியது.
பலர் மத்தேயுவை நம்ப ஆரம்பித்தார்கள்.

அரசவையில் இபிஜெனியா என்ற ஒரு இளவரசி இருந்தாள். அவளுக்கு தொழுநோய். தொழுநோயாளிகள் ஆண்டவனின் சாபம் பெற்றவர்கள் என்று கருதப்பட்ட காலம் அது. இளவரசியும் ஒதுக்கி வைக்கப்பட்டாள். இயேசு பல தொழுநோயாளிகளைக் குணப்படுத்தியதைப் பார்த்திருந்த மத்தேயு இளவரசியின் தொழுநோயையும் குணப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அரசவைக்குச் சென்றார். மத்தேயுவை யாரும் நம்பவில்லை. மத்தேயு கவலைப்படவில்லை நேராக இளவரசியிடம் சென்றார். இயேசுவின் பெயரால் நலம் பெறு என்றார். அவள் நலம் பெற்றாள்.

மத்தேயு சுமார் இருபத்து மூன்று ஆண்டுகள் எகிப்திலும், எத்தியோப்பியாவிலும் பணிபுரிந்தார்.

அதன் பின் கி.பி 90 ஆம் ஆண்டு. ஆட்சி செய்து கொண்டிருந்த தொமீதியன் மத்தேயுவின் பணிகளைப் பார்த்து எரிச்சலடைந்தான். மத்தேயுவை இனிமேலும் வளரவிடக்கூடாது என்று முடிவெடுத்து அவனுக்கு மரண தண்டனை விதித்தான். அவரை நிற்க வைத்து படைவீரர்களை வைத்து ஈட்டியால் குத்தச் செய்தான் மன்னன். மத்தேயு உடலை ஈட்டிகள் துளைத்தன. இரத்த வெள்ளத்தில் மிதந்த மத்தேயு இயேசுவின் பெயரை உச்சரித்துக் கொண்டே இறந்தார்.

பல சீடர்களோடு ஒப்பிடுகையில் மத்தேயு நீண்ட நாட்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். வரி வசூலிக்கும் இழிவென்று கருதப்பட்ட தொழிலைச் செய்த மத்தேயு, கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டு நூல்களில் இடம்பெற்றுள்ள முதல் நூலை எழுதியவர் என்னும் புகழ்பெற்றவர்.

 Image result for Disciples of Jesus and How they died

4. தலைகீழ் சிலுவையில் நாத்தான் வேல்

இயேசுவின் சீடர்களில் ஒருவரான நாத்தான் வேல் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை வந்து இறைபணி ஆற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு உறிதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதன்பின்னர் ஆசியா மைனரில் சிலகாலம் பணியாற்றினார். அங்குள்ள ஏராப்போலி என்னுமிடத்தில் பிலிப்பு என்னும் சீடரும் பணியாற்றி வந்தார். இருவருமாக சேர்ந்து சிலகாலம் அங்கே பணியாற்றினார்கள். நாத்தான் வேலுக்கு பார்த்தலமேயு என்னும் பெயரும் உண்டு

அதன்பின்னர் நாத்தான் வேல் ஆர்மேனியாவில் தன்னுடைய பணியை ஆரம்பித்தார். ஆர்மேனியாவில் இறைப்பணி ஆற்றச் சென்றது கி.பி 60ல். அங்கு ததேயு சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்தை நிறுவியிருந்தார். நாத்தான் வேல் அவரோடு இணைந்து சில காலம் பணியாற்றினார்.

ஐந்தாறு ஆண்டுகள் இருவரும் இணைந்து இறைபணி ஆற்றினார்கள். கிறிஸ்தவம் மிகவும் விரைவாகப் பரவ ஆரம்பித்தது. அங்குள்ள பிற மத நம்பிக்கையாளர்களும், அரசும் இவர்களுக்கு எதிரானார்கள்.

ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை அவர்கள் கொன்று குவித்தார்கள். கிறிஸ்துவை நம்புபவர்கள் என்று பிரகடனப் படுத்தியோர் கொல்லப்பட்டார்கள். அந்த கூட்டத்தில் ததேயுவும் இறந்தான்.

நாத்தான் வேல் தப்பினார்.

அப்போது அங்கு ஆண்டு வந்த அரசனுடைய மகளுக்கு மூளைக் கோளாறு இருந்தது. நாத்தான் வேல் அரண்மனைக்குச் சென்றார். இயேசுவை நம்பினால் அந்த பெண்ணைக் குணப்படுத்துவதாக வாக்களித்தார். அரண்மனை வாசிகள் சிரித்தனர். பின், குணம் பெற்றால் நம்புவோம் என்றனர். நாத்தான் வேல் மண்டியிட்டு செபித்தார். பின் அந்தப் பெண்ணைத் தொட்டு சுகமளித்தாள். அவளுடைய மூளை நோய் உடனடியாக விலக, அனைவரும் அதிசயித்தனர்.

அரண்மனையில் பலர் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவ மதத்தில் இணைந்தார்கள். அரசனும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தான்.

அரசனும் அரண்மனை மக்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்ததைக் கண்டு ஆனந்தமடைந்த நாத்தான் வேல் அரசன் வணங்கிய சிலையைப் பார்த்தார். அதில் அசுத்த ஆவிகள் நிறைந்திருப்பதாய் தெரிந்தது அவருக்கு. கையிலுள்ள சிலுவையை எடுத்து சிலையை நோக்கி நீட்டினார். அசுத்த ஆவிகள் மக்களின் கண் முன்னால் சிலையை விட்டு வெளியேறி ஓடின.

சிலைக்கு வழிபாடு செய்து வந்த பூசாரிகள் கடும் கோபமடைந்தனர். அவர்கள் அரசருடைய சகோதரன் மூலமாக நாத்தான் வேலைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினார்கள். அரசனின் சகோதரன் பூசாரிகளின் பக்கம் சாய்ந்தான்.

நாத்தான் வேல் பிடிக்கப்பட்டார்.

அவருக்கு சிலுவை மரணம் தீர்ப்பானது. அதுவும் உயிருடனே நாத்தான் வேலுடைய தோலை உரித்து, பின் அவரை சிலுவையில் தலை கீழாய் அறைய வேண்டும் என்று தீர்ப்பானது. மிகவும் கொடூரமான, வேதனையான, நினைத்தாலே உயிரை உலுக்கும் முறையில் கிபி. 68 ல் நாத்தான் வேல் கொல்லப்பட்டார்.

டைபர் நதியோரமாய் அமையப்பெற்றிருக்கும் பார்த்தலமேயு ஆலயத்தில் இவருடைய எலும்புகள் இன்னும் பத்திரப் படுத்தப் பட்டுள்ளன.

Image result for Disciples of Jesus and How they died

5. கல்லெறி கல்லறைக்கு அனுப்பியது
(அல்பேயுவின் மகன் யாக்கோபு )

யாக்கோபு கப்பர்நாகூமில் வசித்து வந்தவர். அவருடைய தந்தை அல்பேயு. இவருடைய தாய் மரியாவும், இயேசுவின் தாய் மரியாவும் உறவினர்கள். இருவரும் நெருங்கிய உறவினர்களாகவும் இருந்திருக்க வேண்டும், எனவே தான் சிலுவையில் இயேசு தொங்கிய போது சிலுவையின் கீழே இயேசுவின் தாயாருடன் யாக்கோபின் தாய் மரியாவும் இருந்தார்.

இயேசுவின் திருத் தூதர்களில் இரண்டு யாக்கோபுக்கள். ஒன்று அல்பேயுவின் மகன் யாக்கோபு. இன்னொருவர் யோவானின் சகோதரன் யாக்கோபு. யோவானின் சகோதரர் யாக்கோபு பைபிளில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறார். ஆனால் அல்பேயுவின் மகன் யாக்கோபு ஒரு சில இடங்கள் தவிர எங்கும் குறிப்பிடப்படவில்லை.

யாக்கோபின் போதனைகள் பெரும்பாலும் எருசலேமிலும் அதைச் சுற்றிய நகரங்களிலுமே நடந்திருப்பதாய் நம்பப்படுகிறது. சீரியத் திருச்சபையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று போதனைகள் நிகழ்த்தியதாகவும் இறையியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

யாக்கோபு இயேசு இறந்த அதே மண்ணில் மக்களால் கல்லால் எறியப்பட்டுக் கொல்லப்பட்டார்.

Image result for Disciples of Jesus and How they died

6. நல்லவராய் ஒரு யூதா ததேயு

இயேசுவைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு யூதா உண்டு, அது யூதாஸ் ஸ்காரியோத்து. இன்னொரு யூதா இவர். யூதா ததேயு.

மெசபடோமியாவில் ததேயு தன்னுடைய பணியை சிறப்பாகச் செய்தார். அங்கே மக்களுக்கு இயேசுவின் போதனைகளைப் போதித்ததுடன், அங்குள்ள அரசனின் நோயையும் குணமாக்கினார். அரசனின் நோயைக் குணமாக்கிய ததேயுவின் புகழ் நாட்டில் சட்டென்று பரவியது. பலர் ததேயுவிடம் நலம் பெற வேண்டும் என்னும் விண்ணப்பங்களோடு வந்தார்கள். அவர்கள் அனைவரையும் இயேசுவின் பெயரால் குணமாக்கினார் ததேயு.

ஆர்மீனியா பகுதியில் ததேயு வீரியமுடன் பணியாற்றினார். இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஐந்து பேர் ஆர்மீனியா பகுதியில் பணியாற்றியிருக்கிறார்கள். ததேயு ஆர்மீனியத் திருச்சபையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஆர்மீனியாவே உலகின் முதல் கிறிஸ்தவ நாடானது. ததேயு கி.பி 43ம் ஆண்டிலிருந்து துவங்கி பதினைந்து – முதல் இருபது ஆண்டுகள் அங்கே பணியாற்றினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள அவருடைய போதனைகள் காரணமாயின.

கடைசியில் ததேயு, பாரசீகத்தில் பணியாற்றுவதற்காக வந்தார். அங்கே ஒரு இடத்தில் சிலை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ததேயு சிலைகளை வழிபடுவதால் பயனில்லை என்று மக்களிடையே உரையாற்றினார். கோபம் கொண்ட அவர்கள் ததேயுவுக்கு எதிராக திரும்பினார்கள். நாட்டில் இது ஒரு கலவரமாக மாறியது. வெகுண்டெழுந்த சிலை வழிபாடு செய்த மக்கள் கிறிஸ்தவர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள்.

ததேயுவும் கொல்லப்பட்டார்.

ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார் அவர்.

ரோமிலுள்ள பினித பேதுரு ஆலயத்தில் இன்னும் ததேயுவின் எலும்புகள் பத்திரப்படுத்தப் பட்டுள்ளன.

Image result for Disciples of Jesus and How they died

7. கானானியனாகிய சீமோனுக்கு சிரச்சேதம்

கானாவூரைச் சேர்ந்தவர் ஆனதால் இவர் கானானியனாகிய சீமோன் என்று அழைக்கப்பட்டார். இயேசுவின் சீடர்களில் அதிகம் அறியப்படாத சீடர்களில் ஒருவர் இந்த சீமோன். சீமோன் பேதுரு மிகவும் அதிகம் பிரபலமடைந்தவராக இருக்க, இந்த சீமோனுடைய பெயர் விவிலியத்தில் அதிகம் காணப்படவில்லை.

சீமோனின் பணி வட ஆப்பிரிக்கப் பகுதியில் ஆரம்பமானது. எகிப்து, சைரீன், மாரிடானியா, லிபியா போன்ற இடங்களில் அவர் தன்னுடைய இறைப்பணியை நிகழ்த்தினார். செலோத்துகள் என்னும் தீவிரவாதக் குழுவில் இருந்தவர் இந்த சீமோன் என்று சொல்லப்படுகிறது. மிகுந்த நெஞ்சுரமும், துடிப்பும் மிக்கவர்கள் இந்த செலோத்துகள். சீமோனும் உற்சாகத்துடனும், துணிச்சலுடனும் தன்னுடைய பணியை நடந்தி வந்தார்.

கார்த்தேஜ் என்னும் நகரம் வட ஆப்பிரிக்காவில் இருந்தது. அங்கே தன்னுடைய பணியை தீவிரப்படுத்தினார் சீமோன். நகரில் கிறிஸ்தவ மதம் காட்டுத் தீ போல பரவியது. சீமோன் மகிழ்ந்தார்.

எதிர்ப்பட்ட இடர்களையெல்லாம் செபத்தினாலும், இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையினாலும் தகர்த்து தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார் சீமோன். வட ஆப்பிரிக்க நாடுகளில் ஓரளவு கிறிஸ்தவ மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், பலரை போதிக்கும் பணிக்காகவும் தேர்ந்தெடுத்தார். அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டி சீமோன் ஸ்பெயின் நாட்டுக்குப் பயணமானார்.

கி.பி ஐம்பதில் பிரிட்டனில் கிளாஸ்டன்பரி என்னுமிடத்தில் கிறிஸ்தவத்தைப் போதிக்கத் துவங்கினார் சீமோன். அப்போது அந்த நாடு ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்தது ! எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரோமர்கள் லண்டனியம் என்னும் கோட்டையைக் கட்டி தங்கினார்கள். அந்த லண்டனியம் தான் இன்று லண்டன் என்று அழைக்கப்படுகிறது.

சீமோனின் மறை பரப்பும் பணி ரோமர்களிடமும், லத்தீன் மொழி பேசிய பூர்வீக வாசிகளிடமும் நடந்தது. ரோமர்கள் பலர் சீமோனை எதிர்த்தார்கள். ஆனாலும் அப்போஸ்தலர்களுக்கே உரிய மன திடமும், துணிச்சலும் சீமோனிடமும் இருந்ததால் அவர் கலங்கவில்லை. இயேசுவுக்காக இடர்கள் பட்டால் அது பெரும் பேறு என்று கருதினார்.

கி.பி 59 – கி.பி 62 க்கு இடைப்பட்ட காலத்தில் பிரிட்டனில் வந்திருந்த ரோமர்களுக்கும், போவாதீசியர்களுக்கும் கடும் சண்டை நடந்தது. அதில் ரோமர்கள் விரட்டியடிக்கப் பட்டார்கள். அந்த காலகட்டத்தில் சீமோனும் பிரிட்டனை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்துக்கே திரும்பி வந்தார்.

பாலஸ்தீனத்திலிருந்து மெசபடோமியா பகுதிக்குச் சென்று மறைப்பணி ஆற்றினார் சீமோன். அங்கு சில காலம் பணியாற்றிய சீமோன் ததேயுவைச் சந்தித்தார். ததேயுவும் அந்தப் பகுதியில் பணிசெய்து வந்தார். இறைப்பணிக்காய் சில தளங்களை அங்கே உருவாக்கிவிட்டு இருவரும் பாரசீகம் நோக்கிப் பயணமானார்கள்.

பாசசீகத்தில் சுவானிர் என்னுமிடத்தில் நடந்த சிலை வழிபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் ததேயு ஈட்டியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

சீமோனையும் மக்கள் சிறை பிடித்தார்கள்.

அவரைக் கட்டி வைத்து ரம்பத்தால் அறுத்து அவரையும் கொலை செய்தார்கள். வலியைத் தாங்கிக் கொண்டு இயேசுவுக்காய் இறப்பதைப் பெரும் பேறாகக் கருதி உயிர் நீத்தார் சீமோன்.

Image result for Disciples of Jesus and How they died

8. செபதேயுவின் மகன் யாக்கோபு

இயேசுவின் சீடர்களில் முக்கியமானவர் இவர். பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு இந்த மூவரும் பைபிளில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறார்கள். பல முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள். யோவானின் சகோதரனே இந்த யாக்கோபு.

யாக்கோபுவின் பணி பெரும்பாலும் ஸ்பெயின் நாட்டில் நடந்ததாக வரலாறு கூறுகிறது. ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்த ஸ்பெயின் நாட்டில் யூதர்கள் ஏராளமாக இருந்தார்கள். இவர்கள் பலர் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். அவர்களிடையே யாக்கோபு இறைவனின் போதனைகளை எடுத்துரைத்து நம்பிக்கையூட்டினார்.

ஸ்பெயினில் தன்னுடைய போதனைகளை முடித்தபின் மீண்டும் எருசலேமுக்கே திரும்பினார் யாக்கோபு. அங்கும் தன்னுடைய போதனைகளைத் தொடர்ந்தார். இயேசுவையே சிலுவையில் அறைந்த கூட்டம் அங்கே இருந்தது. யாக்கோபுவை அவர்கள் விடவில்லை.

தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார் யாக்கோபு. அவர் அங்கும் தன்னுடைய போதனையைச் செய்தார். அவரை கட்டி இழுத்துச் சென்ற படை வீரனே இவருடைய போதனையில் ஈர்க்கப்பட்டு மனம் மாறினார். கூடியிருந்த எதிர்ப்பாளர்களின் முன்னிலையிலேயே அந்த படைவீரன் யாக்கோபின் முன்னால் மண்டியிட்டு தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். யாக்கோபு அவனை முத்தமிட்டு, உனக்கு அமைதி உண்டாகட்டும் என்றார்.

கூடியிருந்தவர்களின் கோபம் விஸ்வரூபமெடுத்தது.

இயேசுவைக் கொன்ற ஏரோது மன்னனின் மகன் ஏரோது அகரிப்பா அப்போது ஆளுநனாக இருந்தார். அவன் யாக்கோபையும், அந்த படை வீரனையும் ஒன்றகாக் கொலை செய்யுமாறு ஆணையிட்டான்.

இருவரும் ஒரே நேரத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள் !

 Image result for Disciples of Jesus and How they died

9. இந்தியா வந்த தோமா

தோமா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முக்கியமானவர். அவருக்கு சந்தேக தோமா என்னும் பெயரும் உண்டு. காரணம், இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்குக் காட்சியளித்ததை தோமா நம்பவில்லை. தோமாவைத் தவிர மற்று அனைவரும் அறையில் கூடியிருக்கையில் இயேசு அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு தன்னுடைய உயிர்ப்பை உறுதிப்படுத்தினார். இதை தோமா நம்பவில்லை. தான் இயேசுவை நேரில் கண்டால் கூட நம்பமாட்டேன், அவருடைய கைகளில் உண்டான ஆணிக்காயங்களில் என்னுடைய விரலை விடவேண்டும், அவருடைய விலாவில் ஏற்பட்ட ஈட்டிக் காயத்தில் என்னுடைய கைகளை விடவேண்டும் பின்பே நம்புவேன் என்று கூறினார். இயேசுவைப் போல வேடமிட்டு ஒருவர் வந்தால் கூட கைகளில் துளையும், விலாவில் ஆழமான காயமும் இருக்க முடியாது என்பது அவருடைய நம்பிக்கை.

தோமா சந்தேகத்தை வெளியிட்ட எட்டாவது நாள் மீண்டும் அவர்களுக்கு முன்பாக இயேசு தோன்றினார். அங்கே தோமாவும் இருந்தார். இயேசு தோமாவைப் பார்த்து, வா.. வந்து உன் விரல்களை என் கைகளின் காயத்திலும், கைகளை என் விலா காயத்திலும் இட்டு உன்னுடைய நம்பிக்கையின்மையை போக்கிக் கொள் என்றார். தன் கைகளை தோமாவின் முன்னால் நீட்டினார். அவருடைய கைகளின் காயம் அவர் கண்களுக்கு முன்னால் நின்றது. விலாவை காட்டினார். விலாவின் ஈட்டிக் காயம் தோமாவின் கண்களுக்குள் விழுந்தது. உடனே காலில் விழுந்தார் தோமா. என் ஆண்டவரே என் கடவுளே .. என்று கதறினார்.

இயேசுவின் அப்போஸ்தலர்கள் யாருமே இயேசுவை என் ஆண்டவரே, என் கடவுளே என்று அழைப்பதாக விவிலியம் சொல்லவில்லை. ஆனால் தோமா அறிக்கையிடுவதைச் சொல்கிறது. அப்படிப் பார்க்கையில் தோமாவின் நம்பிக்கை மற்றவர்களின் நம்பிக்கையை விட ஆழமானதாய் தோன்றுகிறது. எந்த அளவுக்கு அவர் இயேசுவைச் சந்தேகித்தாரோ, அந்த அளவுக்கு அவருடைய நம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டார்.

இந்த தோமா தான் கிறிஸ்தவம் இந்தியாவில் நுழைய முதல் காரணமானவர் !

தோமாவின் வாழ்க்கை குறித்த தகவல்கள் தோமாவின் பணி என்னும் நூலில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. எடெசா என்னும் பகுதியில் வாழ்ந்த லிசியஸ் என்பவரால் சிரியா மொழியில் எழுதப்பட்டது தான் இந்நூல். இந்நூல் கி.பி 200 ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் அப்போஸ்தலர்கள் பணி செய்ய ஆரம்பித்த நாட்களில் ஒருமுறை அனைவரும் ஒன்று கூடி எல்லோரும் தனித்தனியே பணி செய்ய வேண்டுமென்றும், யார் எங்கே பணி செய்வது என்றும் விவாதித்தார்கள். விவாதத்துக்குப் பின் அனைவரும் சீட்டு எழுதிப் போட்டு அந்த சீட்டில் எழுதப்பட்டிருக்கும் நாட்டிற்குச் சென்று பணி புரியலாம் என்று தீர்மானித்தார்கள். அதன் படி சீட்டு எடுக்கையில் தோமாவுக்கு வந்த சீட்டில் எழுந்தப்பட்டிருந்த நாட்டின் பெயர் “இந்தியா” !

தோமாவுக்கு இந்தியாவுக்குச் செல்ல விருப்பம் இல்லை. மொழி தெரியாத தேசத்தில் அவருக்கு பணி செய்யும் விருப்பம் இல்லாமல் இருந்தது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்த கலாச்சார, மத அமைப்புகளும் தோமாவை தயக்கமடையச் செய்திருக்கலாம் என்றும் கணிக்க முடிகிறது. இந்தியாவுக்குச் செல்ல முடியாது என்று தோமா மறுத்து விட்டு எருசலேமிலே சுற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே வந்தார் ஒரு வணிகர். அவருடைய பெயர் ஹப்பான். கொண்டேபோர்னஸ் என்னும் அரசனால் ஒரு நல்ல தச்சுத் தொழிலாளியைக் கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்ட இந்த ஹப்பான் எருசலேம் வந்தார். எருசலேம் வந்த ஹப்பானுக்கு தோமாவை அறிமுகப்படுத்தி வைத்தார் ஒருவர். அவர் இயேசுவே என்று இறை விசுவாசிகள் நம்புகிறார்கள்.

கப்பலில் பயணம் செய்த இருவரும் நீண்ட நாட்கள் பயணம் செய்து தட்சசீலா நகரை வந்தடைந்தார்கள். காந்தாரா அரசின் தலைநகராக விளங்கியது தான் இந்த தட்சசீலா நகர். அவர்கள் வரும் வழியில் சிந்து நதிக்கரையில் சில காலம் தங்க நேர்ந்ததாகவும் அந்த நாட்களில் சிந்து நதிக்கரையில் அவர் கிறிஸ்தவத்தைப் போதித்ததாகவும் நம்பப்படுகிறது. கி.பி 44ம் ஆண்டின் இறுதியில் அவர் இந்தியாவிற்கு வந்திருக்கக் கூடும்.

தட்சசீலா நகர் அப்போதே ஒரு பெரிய வணிக நகராக இருந்தது. பல நாடுகளிலும் உள்ள வணிகர்கள் இங்கே வியாபார நிமித்தமாக சந்தித்துக் கொள்வது வழக்கமாய் இருந்தது. அங்குள்ள மக்களுக்கும் கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் அராமிக் மொழிப் பரிச்சயம் இருந்திருக்கிறது.

தோமா அங்கேயே தன்னுடைய போதனையை ஆரம்பித்தார். இயேசுவின் வாழ்க்கை போதனைகள், அவருடைய உயிர்ப்பு போன்ற நிகழ்வுகளை தோமா மக்களுக்கு விளக்கினார். இந்தியா ஏற்கனவே தத்துவங்களாலும், பழம் பெரும் கலாச்சாரங்களாலும் நிறைந்திருந்ததால் தோமாவுக்கு போதிய வரவேற்பு இருக்கவில்லை. முதலில் வணிகத்துக்காக வந்திருந்த மக்களே அவருடைய பேச்சை நம்பினார்கள். பின் ஒரு சிலர் தோமாவின் கொள்கைகளை ஏற்றனர். மிகவும் மெதுவாகவே அவருடைய போதனை மக்களிடையே பரவியது.

இதற்கிடையில் ஹப்பான் தோமாவை அழைத்துக் கொண்டு கொண்டேபோர்னஸ் மன்னனின் முன்னால் வந்து நின்றார். மன்னன் தோமாவைப் பார்த்தான், தோமாவிடம் தனக்கு ஒரு அழகான அரண்மனையைக் கட்ட வேண்டும் முடியுமா என்று கேட்டான். தோமா ஒத்துக் கொண்டார். அவர் மன்னனை ஊருக்கு வெளியே உள்ள ஒரு விசாலமான இடத்துக்கு அழைத்து சென்று அந்த இடத்தில் அரண்மனை கட்டித் தருவதாகச் சொன்னார். அரண்மனையைச் சுற்றிலும் புல் தரைகளும், மரத்தாலான அழகிய அரண்மனையும் செய்து தருவதாக கூறிய தோமா அரண்மனை எப்படி இருக்கும் என்பதையும் விளக்க ஆரம்பித்தார்.

வெளிச்சம் உள்ளே நுழைய ஏதுவாக கதவுகள் எல்லாம் கிழக்கு நோக்கி அமைக்க வேண்டும், தெற்கு நோக்கி சன்னல்களை அமைத்தால் நல்ல காற்றோட்ட வசதி இருக்கும், தண்ணீர் வடக்கு பக்கமும், சமையல் அறைகள் தெற்குப் பக்கமும் இருக்க வேண்டும் என்று தோமா விளக்கிக் கொண்டே செல்ல மன்னனுக்கு பரம திருப்தி.

மன்னன் பணத்தை அள்ளி தோமாவிடம் வழங்கிவிட்டு சென்றார். தோமாவோ அந்த பணத்தைக் கொண்டு அருகிலிருந்த ஏழை கிராமங்களுக்குச் சென்றார். அவர்களின் தேவைகளை நிறைவேற்றினார். கிறிஸ்தவ மதத்தையும் போதித்தார். பல நோயாளிகளின் பிணிகளை அகற்றினார். பேய் பிடித்திருந்ததாய் நம்பப்பட்ட சிலரை குணமாக்கினார்.

மன்னனை அடிக்கடி சந்தித்த தோமா, அரண்மனை ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து வருவதாகச் சொல்லி பணம் வாங்கி அதை ஏழைகளுக்குக் கொடுத்தார். கடைசியில் இனிமேல் கூரை வேயவேண்டும் என்று கூறி பணம் வாங்கினார். எல்லா பணத்தையும் செலவிட்டார் தோமா. அரசனைத் தவிர வேறு யாரிடமும் அவர் பணம் வாங்கவில்லை.

மன்னனுக்கு அரண்மனையைக் காணும் ஆசை வந்தது. ஒருநாள் திடீரென அரண்மனை கட்டும் வேலை நடக்கும் இடத்துக்கு வந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிலம் இன்னும் பொட்டல்காடாகவே கிடந்தது. அரண்மனை கட்டுவதற்கான முதல் அடி கூட எடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை.

கோபத்தில் கொதித்த மன்னன் தோமாவையும், ஹப்பாரையும் உடனே வரவழைத்தார். ‘என்னுடைய அரண்மனை எங்கே ? நீங்கள் இருவருமாய் சேர்ந்து மன்னனையே ஏமாற்றி விட்டீர்களா ?’ என்று கத்தினார்.

தோமாவோ அமைதியாக, அரண்மனை கட்டியாகி விட்டது அரசரே.. என்றார்.

‘எங்கே ? இன்னும் என்னை ஏமாற்ற வேண்டாம். நான் சென்று பார்த்தேன். அங்கே எதுவும் இல்லை’ மன்னனின் கோபம் அதிகரித்தது.

‘நான் கட்டியிருக்கும் அரண்மனையை நீர் இறந்த பின்பு தான் காண முடியும்’ தோமா சொன்னார். அரசரின் கோபம் எல்லை கடந்தது. உடனே இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சில நாட்களில் மன்னன் கொண்டேபோர்னஸ் ன் தம்பி காத் மரணமடைந்தார். அவர் விண்ணகத்துக்குச் செல்கையில் அங்கே ஒரு அழகான அரண்மனை இருந்தது. காத் அருகிலிருந்த வான தூதரிடம் அந்த அரண்மனையில் தனக்கு ஒரு இடம் கிடைக்குமா என்று வினவினான். அதற்கு அந்த தேவதூதர், இல்லை.. இந்த அரண்மனை மன்னன் கொண்டேபோர்னஸ் க்காக தோமா என்பவரால் கட்டப்பட்டது. இது அவருக்கே சொந்தம் என்று சொன்னார். காத் தன்னை எப்படியாவது பூமிக்கு அனுப்பவேண்டுமென்றும் இந்த தகவலை தான் உலகிற்குச் சொல்ல விரும்புவதாகவும் சொல்ல தேவதூதர்கள் அவரை மீண்டும் பூமிக்கே அனுப்பினார்கள்.

மரணமடைந்திருந்த காத் திடீரென எழும்பினான். அவன் இறந்துபோன நிமிடங்களில் கண்ட காட்சி அவரை உலுக்கியது. கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்கள். மன்னன் கொண்டேபோர்னஸ் ஆனந்தத்தில் தம்பியைக் கட்டித் தழுவினான். அவனோ, மன்னனிடம், ‘எனக்கே தெரியாமல் இப்படி ஒரு அரண்மனையை விண்ணகத்தில் கட்டி வைத்திருக்கிறீர்களே.. அதில் ஒரு அறையையாவது எனக்குக் கொடுங்கள்’ என்று கேட்டான்.

மன்னன் அதிர்ந்தான். அவனுக்கு தம்பி எந்த அரண்மனையைச் சொல்கிறான் என்று புலப்படவில்லை. தம்பி தான் கண்ட காட்சிகளை விளக்க மன்னன் வியப்பும், நடுக்கமும் அடைந்தான். உடனடியாக தோமாவை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். தோமாவின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்ட மன்னன் உடனே கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டான். அவனுடைய தம்பியும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினான்.

இந்த செய்தி ஊருக்குள் பரவ பலர் தோமாவின் போதனைகளில் நம்பிக்கை கொண்டனர். தோமாவின் போதனை அருகிலுள்ள ஊர்களுக்கும் பரவியது. மன்னனே கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டதால் தோமாவுக்கு கொண்டேபோர்னஸ் அரசின் கீழ் இருந்த பகுதிகளில் போதனை செய்கையில் எந்த அச்சுறுத்தலும் எழவில்லை. பலதரப்பட்ட மக்கள் கிறிஸ்தவத்தில் இணைந்தார்கள்.

ஒரு கிறிஸ்தவச் சபையை தட்சசீலத்தில் ஆரம்பித்த திருப்தியுடன் தோமா தட்சசீலத்தை விட்டுப் புறப்பட்டார். ஆனால் அவருடைய திருப்திக்கு சில ஆண்டு கால நீளமே இருந்தது. கொண்டேபோர்னஸ் மன்னன் இறந்தபின் குஷணர்களால் கைப்பற்றப்பட்ட நகரம், கிறிஸ்தவர்களை வெறுக்க ஆரம்பித்தது. குஷண வம்சத்தில் வந்த கனிஷ்கரால் கிறிஸ்தவ மதம் துடைத்தெறியப்பட்டது. சென்ற நூற்றாண்டுவரை தட்சசீலத்தில் நடந்த நிகழ்வுகள் ஒரு கட்டுக்கதையாக நம்பப்பட்டு வந்தன, ஆனால் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மன்னன் கொண்டேபோர்னஸ் மற்றும் அவனுடைய தம்பி காத்-ன் உருவம் பொறிக்கப்பட்ட நாணயமும், 1935ம் ஆண்டு தட்சசீல அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சிலுவை ஒன்றும் ‘புனித தோமாவின் பணி’ என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட இந்த நிகழ்வுகள் குறித்த சிறு நம்பிக்கையை அளிக்கின்றன.

தட்சசீலாவிலிருந்து விடைபெற்ற தோமா சொகோட்டிரா தீவு வழியாக கேரளாவுக்குச் செல்ல விரும்பினார். அதன் படி முதலில் சொகோட்டிரா தீவை அடைந்தார். சொகோட்டிரா தீவில் சிலகாலம் தங்கி அங்கே கிறிஸ்தவ மதத்தை மக்களிடம் போதித்து பலரை கிறிஸ்தவர்களாக்கினார். இவர்கள் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இங்கே கிறிஸ்தவம் நன்கு வளர்ந்தது. சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்கள் இந்த தீவில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கி.பி 1542, செப்டம்பர் 18 ல் புனித சவேரியார், புனித இன்னாசியாருக்கு எழுதிய கடிதத்தில் சொகோட்டிரா தீவு வாழ் கிறிஸ்தவர்கள் பற்றிய விளக்கமான குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி 1680 ல் வின்சென்சோ மரியா என்பவர் சொகோட்டிரா தீவில் கிறிஸ்தவ மதம் அழிந்து வருவதாகக் குறிப்பிட்டார். முஸ்லிம் மதத்தவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சொகோட்டிரா தீவு வந்தபின் அங்கு மிச்சமிருந்த கிறிஸ்தவ மதமும் வேரோடு அழிந்தது.

தட்சசீலாவிலிருந்து கேரளாவுக்குப் பயணமானார் தோமா. கி.பி 52ம் ஆண்டின் இறுதியில் அவர் முசிறி துறைமுகத்தில் காலடி எடுத்து வைத்தார். அப்போது கேரளா மலபார் என்று அழைக்கப்பட்டது. சேரர்கள் அந்த நாட்டை ஆண்டு வந்தார்கள். கேரளாவுக்கு வருகை தந்த தோமா மகிழ்ந்தார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன, ஒன்று கேரளா செல்வச் செழிப்பும், வணிகச் சிறப்பும், ஏராளமான மக்களையும் பெற்றிருந்தது. இரண்டாவதாக யூதர்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள், யூதர்களுக்கென்று தொழுகைக் கூடமும் இருந்தது.

யூதர்களின் தொழுகைக் கூடத்தில் தோமா பேசினார் ! யூதர்களின் பழைய ஏற்பாட்டு நம்பிக்கைகளையும், அவற்றின் நிறைவேறுதலாக வந்தவரே இயேசு என்றும் அவர் தன்னுடைய போதனையை அமைத்துக் கொண்டார். ஏராளம் தீர்க்கத் தரிசனங்களின் நிறைவேறுதலாய் இயேசுவைக் காட்டியதால் யூதர்கள் பலர் அவரை நம்பினார்கள் கிறிஸ்தவத்தைத் தழுவினார்கள்.

யூதர்களுக்கு அடுத்தபடியாக உயர்குலம் என்று அழைக்கப்பட்ட நம்பூதிரிகளின் மேல் தோமாவின் கவனம் விழுந்தது. கல்வியறிவு பெற்ற அவர்களை மனம் மாற்றினால் அதன்மூலம் பலரை கிறிஸ்தவத்தில் இணைக்க முடியும் என்று அவர் நம்பினார். அதன்படி பல நம்பூதிரிகளை தோமா தன் வசம் ஈர்த்தார். சில ஆயிரக்கணக்கான நம்பூதிரிகள் கிறிஸ்தவத்தில் இணைந்தார்கள். மலபார் கடற்கரைப் பகுதிகளில் ஏழு சபைகளை தோமா ஏற்படுத்தினார். பள்ளூர், முசிறி, பரூர், கோட்டமங்கலம், காயல், நிர்ணம் மற்றும் கொல்லம் ஆகிய இடங்களில் அவை நிலை நிறுத்தப்பட்டன. மனம் மாறிய நம்பூதிரிகளால் அந்த சபைகள் நிர்வாகிக்கப் பட்டன.

கோட்டமங்கலத்தில் தோமா செய்ததாக சொல்லப்படும் ஒரு அற்புதம் மிகவும் சுவாரஸ்யமானது. அங்கே பிராமணர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தார்கள். ஒருமுறை அவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கையில் தோமாவும் அங்கே சென்றார். அவர்கள் தண்ணீரை செபித்து மேல் நோக்கி எறிந்து கொண்டிருந்தார்கள். தோமா அவர்களிடம் வந்து என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் செபிப்பதாகவும், கடவுளை நோக்கி தண்ணீரை தெளிப்பதாகவும் சொல்ல, அப்படியானால் அந்தத் தண்ணீர் ஏன் கீழே விழுகிறது என்று கேட்டிருக்கிறார். தண்ணீர் கீழே விழாமல் மேலேயா செல்லும் என அவர்கள் சிரித்திருக்கிறார்கள். அப்போது தோமா அவர்களிடம் ஒரு விண்ணப்பம் ஒன்றை வைத்தார்.

எல்லோரும் தண்ணீரை அவரவர் விரும்பும் தெய்வத்தை நினைத்துக் கொண்டு மேல் நோக்கி எறியவேண்டும், யார் எறியும் தண்ணீர் கீழே வரவில்லையோ அவர்களின் கடவுளே உண்மையான கடவுள் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த விண்ணப்பம்.

அவர்கள் சவாலை ஏற்றுக் கொண்டார்கள். தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டே தண்ணீரை மேல் நோக்கி எறிந்தார்கள். எல்லா தண்ணீரும் கீழே விழுந்தது. கடைசியாக தோமா எறிந்தார். கடவுளை வேண்டிக்கொண்டே அவர் எறிந்த தண்ணீர் வானத்தில் நின்றது. தோமா சுற்றிலும் பார்க்க அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். அவர்களில் பலர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். கேரளாவின் மார்த்தோமா சபை சகோதரர்களிடம் இன்றும் சொல்லப்படும் இந்தக் கதை புனித தோமாவின் பணிகள் என்னும் நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின் இப்போது தென் தமிழகத்தில் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள திருவிதாங்கோடு என்னுமிடத்தில் போதனைகளை தொடர்ந்து அங்கும் ஒரு சபையை ஆரம்பித்தார். அங்கே கி.பி 57ம் ஆண்டில் இயேசுவின் தாய் மாதாவின் பெயரில் ஒரு ஆலயம் கட்டினார் தோமா. அதற்கு அன்றைய சேர மன்னன் உதயன் சேரலாதன் முழு அனுமதியும் உதவிகளும் அளித்த செய்தி வியப்பளிக்கிறது. ‘இயேசு தர்மத்தில் சேர அரசர் குலம்’ என்னும் நூல் இவற்றை விவரிக்கிறது. கிறிஸ்தவ வரலாற்றில் மாதாவின் பெயரில் கட்டப்பட்ட முதல் ஆலயம் இது தான். இதுவே கிறிஸ்தவ வரலாற்றின் முதல் ஆலயமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

தோமா பல அதிசயச் செயல்களையும் இந்தப் பகுதிகளில் செய்திருக்கிறார். ஒருமுறை பனை மரத்திலிருந்து ஒருவன் தவறி விழ ‘அங்கேயே நில்’ என்று தோமா கைகளை உயர்த்திச் சொன்னதும் அங்கேயே நின்றிருக்கிறார். பின் தோமா செபித்து அவரை பத்திரமாகத் தரையிறக்கியிருக்கிறார். ஒருமுறை கடல் கொந்தளித்து மீனவக் கிராமங்கள் பயந்தபோது கடலை அடக்கியதாகவும், இறந்த ஒரு சிறுமிக்கு உயிர் அளித்ததாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இன்றும் கேரளாவிலுள்ள பாரம்பரியக் கிறிஸ்தவர்கள் தங்களை தோமா கிறிஸ்தவர் என்றே அழைத்துக் கொள்கிறார்கள். பாரம்பரிய வரலாற்றில் வந்திருப்பதால் அவர்கள் தங்கள் கிறிஸ்தவ விசுவாசம் பாதுகாக்கப்படுவதாகவும் கருதுகிறார்கள். அவர்களிடையே தோமாவின் நினைவு நாள் கொண்டாட்டங்கள், புனிதப் பயணக் கொண்டாட்டங்கள் போன்றவை நடைபெறுகின்றன. அவர்களிடம் தோமாவின் வரலாற்றைக் கூறும் பாரம்பரியப் பாடல்களான வீரதியன் பாடல்கள், ரப்பான் தோமை பாடல்கள் மற்றும் மார்க்கம் களியாட்டம் போன்றவையும் வழக்கத்தில் இருந்திருக்கிறது.

மலபாரில் சுமார் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய தோமா அங்கிருந்து இன்றைய சென்னை – மயிலாப்பூர் பகுதியாக இருக்கும் கோரமண்டல் பகுதிக்குப் பணியாற்றச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி மலபாரில் சபையை நம்பிக்கைக்குரிய நபர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களுக்கு சபையை வழிநடத்தும் அறிவுரைகளையும் வழங்கிவிட்டு கோரமண்டல் புறப்பட்டார். கோரமண்டல் பகுதியை அடுத்துள்ள இடங்களிலும், மதுரை, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம் போன்ற முக்கியம் வாய்ந்த இடங்களிலும் இயேசுவைப் பற்றி அறிவிக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது.

இயேசுவின் சீடர் தோமா தமிழில் பேசினார் என்பதால் தமிழர்கள் தங்கள் வரலாற்றுப் பெருமையை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்திக் கொள்ளலாம். தோமா தமிழ் மொழியைக் கற்று மக்களிடம் தமிழிலேயே உரையாற்றினார் என்பது ஆச்சரியமான செய்தி. தன்னுடைய முதுமைப் பருவம் நெருங்கி வருகையிலும் அவருடைய இறை ஆர்வம் தணியவே இல்லை. சென்னையிலுள்ள சின்னமலையில் இருந்த குகை ஒன்றை அவர் ஆழமான செபத்துக்காய் பயன் படுத்தினார். அங்கே வரும் மக்களுக்கு போதனைகள் வழங்கினார். சின்னமலைக்குச் சற்றுத் தொலைவில் பெரியமலை ஒன்றும் இருந்தது அங்கும் அவருடைய போதனைகள் தொடர்ந்தன.

மைலாப்பூர் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் அவருடைய போதனை நிகழ்ந்தது. ஏராளமான மக்கள் புதிய தகவலை ஆர்வமுடன் கேட்டார்கள். இறை செய்தியைக் கேட்பதற்கு பேதங்கள் இல்லை என்னும் நிலை கிறிஸ்தவத்தில் இருந்ததால் தோமாவின் போதனைகள் அடித்தட்டு மக்களை மிகவும் வசீகரித்தன.

ஒருமுறை தோமா சின்னமலை பகுதியில் போதித்துக் கொண்டிருக்கையில் மக்களுக்குத் தாகம் எடுத்தது. கடும் கோடைக் காலம். பக்கத்தில் நீர் நிலைகள் ஏதும் இல்லாத நிலை. தண்ணீருக்கு வேறு வழி இல்லை. தோமா செபித்தார். பின் கையிலிருந்த கோலால் பாறையை ஓங்கி அடித்தார். பாறையிலிருந்து நீர் பீறிட்டது. மக்கள் தாகம் தீர அருந்தினார்கள். தோமாவின் பெயர் பரவியது.

தோமாவின் பெயரும், கிறிஸ்தவம் என்னும் புதிய மதமும் மைலாப்பூர் பகுதியில் பரவுவதைக் கண்ட காளி கோயில் பூசாரி ஒருவர் கோபம் கொண்டார். தோமாவை ஒழித்துக் கட்டுவதற்காக தன்னுடைய குழந்தையையே கொன்று அந்த பழியை தோமாவின் மேல் போட்டான். தோமா கைது செய்யப்பட்டார். அவர் மீது தண்டனை விதிக்கும் நேரத்தில் அவர் அரசனிடம் அனுமதி கேட்டு கல்லறைக்குச் சென்றார். அங்கு சென்று அந்தக் குழந்தையை உயிர்த்தெழச் செய்தார். மக்கள் ஆச்சரியமடைந்தனர். குழந்தையிடம் தோமா, கொலையாளி யார் எனக் கேட்க குழந்தை தன் தந்தையை நோக்கிக் கையை நீட்டியது. தோமா தப்பினார்.

தோமாவின் புகழ் மேலும் பரவியது. ஒருமுறை மதகை அடைத்துக் கொண்டிருந்த யானைகளாலேயே நகர்த்த முடியாத பாரமான மிகப் பெரிய மரத் தடி ஒன்றை, தோமா தன்னுடைய இடையில் கட்டியிருந்த கயிற்றில் கட்டி இழுத்துக் கொண்டு சென்றதாகவும் அந்த தடியை வைத்து அவர் ஒரு ஆலயம் கட்டியதாகவும் தோமா வாழ்க்கை நூல் குறிப்பிடுகிறது.

காளி கோயில் பூசாரிகள் தோமாவை எப்படியும் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அதன் படி அவர்கள் தோமாவை கண்காணிக்க ஆரம்பித்தார்கள். அவர் சின்னமலையிலும், பெரியமலையிலும் தங்கும் நேரம், செபிக்கும் நேரம் போன்றவற்றைக் கவனித்தார்கள். ஒருநாள் சின்னமலையில் செபித்துக் கொண்டிருக்கையில் பூசாரிகள் அவரைத் தாக்கினார்கள். அவர் அங்கிருந்து தப்பி பெரியமலைக்குச் சென்றார். அங்கு சென்று அங்கிருந்த கற்சிலை ஒன்றை கட்டி அணைத்தபடி செபிக்கத் துவங்கினார். அவரைத் தேடி வந்த பூசாரிகள் அவரைக் கொல்ல இது தான் தக்க சமயம் என்று தீர்மானித்தார்கள்.

ஈட்டி ஒன்று தோமாவைக் கிழித்தது. இதயப் பகுதியில் இறங்கிய ஈட்டி உயிரை வெளியேற்றியது. கி.பி 65ல் மயிலாப்பூர் வந்த தோமா கி.பி 72ம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் தியதி மரணமடைந்தார். சுமார் இருபத்தொன்பது வயதானபோது இயேசுவின் சீடராக மாறியவர் இந்த தோமா. புனித தோமாவின் பணி, தோமாவின் நற்செய்தி, தோமாவின் திருவெளிப்பாடு போன்ற நூல்கள் தோமாவின் வரலாறை நாம் அறிய நமக்குத் துணை நிற்கின்றன.

Image result for Disciples of Jesus and How they died

10. இயேசுவின் அன்புச் சீடர் யோவான்

இயேசுவின் சீடர்களில் மிகவும் முக்கியமானவர் யோவான். இவர் செபதேயுவின் மகன் யாக்கோபின் தம்பி. இயேசு தன்னுடைய சீடர்களில் அதிகமாய் நேசித்தது இந்த யோவானைத் தான். இயேசு கைது செய்யப்பட்டபோது அவரைத் தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தவர் இவர். ஆனாலும் இயேசு கைது செய்யப்பட்ட நிகழ்வுக்குப் பின் எல்லா சீடர்களும் தலைமறைவாகி விட இவரும் பேதுருவும் தான் துணிச்சலாக, தலைமைச் சங்க முற்றம் வரை வந்து இயேசுவை என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விட்டனர். இயேசுவை மறுதலித்தது தவறு என்பது கோழி கூவிய போது அவருக்கு விளங்கியது ! பின் அவர் இயேசுவை விட்டு விலகவில்லை. சிலுவையில் இயேசு தொங்கியபோது சிலுவை அடியிலேயே நின்றிருந்தவர் அவர்.

இவரிடம் தான் இயேசு தன்னுடைய தாயை ஒப்படைத்தார்.

இவருடைய பணி பாலஸ்தீனத்தில் தான் தொடர்ந்தது. முதலில் சமாரியர்களிடையே இவருடைய பணி துவங்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. சமாரியர்கள் பலரை கிறிஸ்தவர்களாக்கியவர் இவர் தான். அன்னை மரியாளை தன்னுடைய தாயைப் போல பாதுகாத்தார். இயேசுவின் கடைசி விண்ணப்பத்தை அவர் வாழ்நாளின் முதல் கடமையாகக் கொண்டார்.

இரண்டாம் கட்டமாக எபேசு நகரில் யோவானின் பணி நடந்தது. பல்வேறு இடர்கள் நேர்ந்த போதும் துணிச்சலை விடாமல் மதத்தைப் போதிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார். தாமிதியன் பேரரசர் அரசாண்டு கொண்டிருந்தபோது யோவான் இறை பணி ஆற்றியமைக்காகக் கைது செய்யப்பட்டார். யோவான் தன்னுடைய மறை போதனைகளை விட்டு விட வேண்டுமென்று பேரரசர் பல எச்சரிக்கைகள் அனுப்பியும் யோவான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

அரசருக்கு முன்பாகவே இயேசுவின் அதிசயங்களைக் குறித்துப் போதித்தார். மன்னன் கடும் கோபம் கொண்டு யோவானை கொதிக்கும் எண்ணையில் வீச கட்டளையிட்டார் !

படைவீரர்கள் பெரிய பானையில் எண்ணையை ஊற்றிக் கொதிக்க வைத்தார்கள். எண்ணை கொதித்தது. அதன் அனலில் படைவீரர்களின் உடல்கள் கருகின. யோவான் இழுத்து வரப்பட்டார்.

கொதிக்கும் எண்ணையில் யோவான் வீசப்பட்டார்.

எரிந்து பஸ்மமாகிப் போவார் என்று படைவீரர்கள் ஆவலுடன் காத்திருக்க அவர்களுக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி. யோவான் கொதிக்கும் எண்ணையில் நின்று இறைபுகழ் பாடிக் கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த வீரர்கள் மன்னனிடம் தகவலைச் சொல்ல, மன்னனும் அந்த காட்சியைக் கண்டு நடுங்கினான்.

இனிமேலும் யோவானை தன்னுடைய பூமியில் நடமாட விடக்கூடாது என்று முடிவெடுத்த மன்னன் அவரை தற்போதைய துருக்கி நாட்டின் கடல்பகுதியில் இருந்த பத்மு என்னும் தீவுக்கு நாடுகடத்தினான். யோவான் தீவில் தூக்கி எறியப்பட்டார். அங்கிருந்த குகை ஒன்று அவருக்கு அடைக்கலமானது.

அந்த குகையில் அமர்ந்தபடியே அவர் திருவெளிப்பாடு நூலை எழுதினார். அந்தக் குகை அப்போகாலிப்ஸ் குகை என்று அழைக்கப்படுகிறது.

யோவானின் தலைமறைவு வாழ்க்கை கி.பி 96 ல் முடிவுக்கு வந்தது. அப்போதைய அரசரான நெர்வா கிறிஸ்தவ மதத்தின் மீது சற்று இறுக்கம் தளர்ந்த மனநிலையிலேயே இருந்ததால் யோவானின் தண்டனையை ரத்து செய்தார். யோவான் எபேசு நகருக்குத் திரும்பினார். சிமிர்னா, சர்தை, பிலதெல்பியா மற்றும் பல இடங்களுக்கும் சென்று கிறிஸ்தவ மத உரைகள் நிகழ்த்தி தலைவர்களையும் நியமித்தார்.

கி.பி 100 ஆம் ஆண்டு யோவான் இறந்தார். இயற்கை மரணம் !! இயேசுவின் அப்போஸ்தலர்களில் இயற்கை மரணம் அடைந்த ஒரே சீடர் யோவான் தான் !

இவர் விவிலியத்தில் இடம்பெற்றுள்ள யோவான் நற்செய்தியையும், திருவெளிப்பாடு எனும் நூலையும், வேறு மூன்று அறிவுரை நூல்களையும் எழுதி கிறிஸ்தவ மறையில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.

Image result for Disciples of Jesus and How they died

11. இயேசுவின் சகோதரர் யாக்கோபு

இயேசுவுக்கு யாக்கோபு, யோயே, சீமோன், யூதா என்று நான்கு சகோதரர்கள் இருந்தார்கள். இவர்கள் இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் என்று ஒருசாராரும், இவர்கள் இயேசுவின் உடன்பிறந்தவர்கள் அல்ல உறவினர்கள் தான் என்று இன்னொரு சாராரும் காலம் காலமாக தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்துக் கொண்டு வாதிடுகிறார்கள். குறிப்பாக கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் இயேசுவுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் அன்னை மரியை, வணக்கத்துக்குரியவராகப் பார்ப்பதால் அன்னைக்கு இயேசுவைத் தவிர வேறு பிள்ளைகள் இருப்பது அவருடைய புனிதத் தன்மையைப் பாதிக்கும் என்று கருதுகிறார்கள்.

மார்ட்டின் லூதர் மூலமாக பிரிந்து சென்ற சபையினர், புராட்டஸ்டன்ஸ், இயேசுவுக்கு சகோதரர்கள் இருந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். முதலிலேயே தோன்றியது கத்தோலிக்க மதம் என்பதாலும், விவிலியத்தில் எங்கும் இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் என்று குறிப்பிடப்படுவதில்லை என்பதாலும், அக்கால வழக்கப்படி பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளும் கூட சகோதரன் என்றே அழைக்கப்படுவதாலும், விவிலிய நிகழ்வுகள் எதிலும் சகோதரர்கள் பற்றிய குறிப்பு காணப்படாததாலும் அன்னை மரிக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்பதே பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.

இந்த யாக்கோபு இயேசுவின் சகோதரர் என்று அறியப்படுகிறார். முதலில் இயேசுவின் பணிகளிலும் அவருடைய போதனைகளிலும் அதிகமாக ஆர்வம் காட்டாத இவர், இயேசுவின் மரணம் உயிர்ப்புக்குப் பின் இயேசுவின் தீவிர சீடராகிறார். அவருடைய பணி சிங்கத்தின் குகையிலேயே நடந்தது. அதாவது எருசலேமில் !

எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைவராக இவர் பொறுப்பேற்று மக்களைத் துணிவுடன் நடத்தினார். இவருடைய கண் முன்னால் பல சீடர்களை யூதத் தலைவர்கள் கொன்றாலும் கூட கடைசி வரை துணிச்சலோடு வாழ்ந்தார். இவருடைய துணிச்சல் தான் மற்ற அப்போஸ்தலர்களை வேறு வேறு இடங்களுக்குச் சென்று பணியாற்றும் வாய்ப்பை வழங்கியது என்றும் சொல்லலாம்.

யாக்கோபின் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. யூதத் தலைவர்களுக்கும் தலைமைச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும் இது பெருத்த களங்கமாக இருந்தது. தங்களால் இயேசு கொல்லப்பட்ட பின் சபை இப்படி விஸ்வரூப வளர்ச்சி அடையும் என்று அவர்கள் சிந்தித்திருக்கவில்லை. எத்தனையோ இறைவாக்கினர்களைக் கொன்று குவித்த பரம்பரை, இப்போது இயேசுவைக் கொன்றதால் சிக்கலில் சிக்கி விட்டது.

யாக்கோபுவை எப்படியாவது கொல்லவேண்டும் என்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் உறுதியான முடிவை எடுத்துவிட்டார்கள். ஆனால் எப்படிக் கொல்வது ? எப்போது கொல்வது ? சரியான சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தார்கள் மதகுருக்கள்.

வாய்ப்பு அப்போதைய ஆளுநர் பெஸ்டஸ்ன் மரணத்தின் மூலமாக வந்தது. ரோம ஆளுநனாக இருந்த பெஸ்டஸ் மரணமடைந்தான். அடுத்த ஆளுநர் பதவியேற்கவிருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆளுநராக யாரும் இல்லாத சூழல். இந்த சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டனர். எருசலேம் தேவாலய தலைமைச் சங்கத்தினர்.

அவர்கள் யாக்கோபுவைக் கைது செய்தார்கள்.

யாக்கோபு போலித் தீர்க்கத் தரிசனம் சொல்கிறார். மதத்தை இழிவுபடுத்துகிறான் என்று குற்றம் சாட்டினார்கள். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சாட்சிகள் யாக்கோபுக்கு எதிராக பொய் சாட்சி சொன்னார்கள்.

யாக்கோபுக்கு மரண தண்டனை தீர்ப்பிடப்பட்டது !

எருசலேம் தேவாலயத்தின் உப்பரிகைக்கு இழுத்துச் செல்லப்பட்டார் யாக்கோபு.

கீழே ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். யாக்கோபின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்து நின்று கண்ணீர் விட்டார்கள்.

‘இயேசுவை நீயும் மறுதலித்து, இதோ கூடியிருக்கும் மக்களையும் மறுதலிக்கச் சொல். அப்போது நான் உன்னை விடுவிப்பேன்’ தலைமை குரு நிபந்தனை விதித்தான். யாக்கோபு பார்த்தார். கீழே ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும், யூதர்களும். அவர் அந்த இடத்தையும் தன்னுடைய போதனைக்காகப் பயன்படுத்தினார். கூடியிருந்த்த மக்களுக்கு இயேசுவைப் பற்றி அறிவிக்கலானார்.

கோபம் கொண்ட தலைமைச் சங்க உறுப்பினர்கள். அவரை உப்பரிகையிலிருந்து கீழே தள்ளினார்கள்.

கீழே விழுந்த யாக்கோபு மீது யூதர்கள் கற்களை எறிந்தார்கள். ‘தந்தையே இவர்களை மன்னியும்’ என்று கூறி இயேசு கற்றுக் கொடுத்த மன்னிப்பை வாழ்க்கையின் வலிமிகுந்த தருணத்திலும் வழங்கினார் யாக்கோபு.

அதைக் கண்ட யூதன் ஒருவன் வெறி கொண்டு துணி துவைக்கப் பயன்படுத்தும் ஒரு பெரிய உருளைக் கட்டையால் யாக்கோபின் உச்சியில் அடித்தான். யாக்கோபு மண்டை உடைய, உயிரை விட்டார்.

Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு : 4 – பைபிளின் ஆரம்பம்

Image result for Bible old

இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் தவிர ஸ்தேவான், பவுல் பர்னபா, யாக்கோபு, தீத்து, மார்கு, லூக்கா போன்ற பலரும் இயேசுவின் போதனைகளையும் அவருடைய வாழ்க்கையையும் மக்களிடையே மிகுந்த உத்வேகத்துடன் பரப்பினார்கள். இயேசு உயிர்த்தெழுந்த காலம் முதல் சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகள் அவர்கள் செய்த துணிச்சலான, கம்பீரமான போதனைகள் தான் கிறிஸ்தவத்தின் மிகப் பலமான அஸ்திவாரமாக ஆயிற்று.

அவர்களில் பெரும்பாலானவர்கள் கொடூரமான மரணத்தைச் சந்தித்திருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் இயேசு சொன்ன ஆறுதல்களும், அவர் கொடுத்த ஊக்கமும் பணி செய்வதிலிருந்து அவர்களை பின்வாங்காமல் பார்த்துக் கொண்டது. அப்போஸ்தலர்கள் அனைவரும் உயிர்த்த இயேசுவை நேரில் கண்டதால் அவர்களுக்கு அச்சம் என்பதே இல்லாமல் போயிற்று. இறந்தால் இயேசுவிடம் செல்வோம் என்னும் நம்பிக்கை அவர்களை துணிச்சலாய்ப் பணி செய்ய வைத்தது. அவர்களுக்கு சாவா, வாழ்வா என்று ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகையில் எல்லாம் சாவையே தேர்ந்தெடுத்து கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு அடிகோலியிருக்கிறார்கள்.

இவர்கள் செய்த இன்னொரு முக்கியமான பணி, இவர்கள் போதித்த இடங்களிலெல்லாம் குழுக்களை ஏற்படுத்தி அங்கெல்லாம் ஒவ்வொரு தலைவர்களை நியமனம் செய்தது. தாங்களாகவே பேசிக்கொண்டிருந்தால் தங்களுக்குப் பின் வழிநடத்தும் தலைவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்பதனால், இவர்கள் செல்லுமிடமெல்லாம் பணியைத் தொடரக்கூடிய வல்லமை படைத்த ஒரு தலைவரை நியமிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களும் ஆர்வமுடன் பணியாற்றினார்கள்.

வருடங்கள் உருண்டோடின. இயேசு பற்றிய நிகழ்வுகளெல்லாம் போதனைகள் வாயிலாக மட்டுமே சொல்லப்பட்டு வந்தன. அவர்களிடையே எதுவும் எழுதப்படவில்லை. ஆங்காங்கே பல தலைவர்களை நியமித்ததால் அவர்கள் என்ன போதிக்கிறார்கள், இயேசுவின் போதனைகள் முழுமையாய் மக்களைச் சென்றடைகிறதா என்னும் கவலை முதல் அப்போஸ்தலர்களுக்கு ஏற்பட்டது. எனவே அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை எழுதி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

மத்தேயு, மார்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு பேரும் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களை எழுதுவதென்று முடிவெடுத்தார்கள்.

மத்தேயு, வரி வசூலிக்கும் தொழில் செய்து வந்தவர். பல மொழிகளில் திறமை பெற்றவர். அவர் இயேசுவின் வாழ்க்கையை எபிரேய மொழியில் எழுதினார். அவருக்கு பழைய ஏற்பாட்டு நீதி நூல்கள், இறைவாக்குகள் மீது நல்ல பரிச்சயம் இருந்தது. எனவே ஒவ்வொரு இறைவாக்கையும், அதன் நிறைவாக இயேசு வந்ததாகவும் அவர் எழுதுகிறார். அவருடைய நூலின் நோக்கம் பெரும்பாலும் யூதர்களைக் குறிவைத்தே இருந்தது என்கிறார்கள் இறையியல் வல்லுனர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள். அதனால் தான் அவர் யூதர்களுக்குப் பரிச்சயமான நீதி நூல்களைக் கோடிட்டு தன்னுடைய எழுத்துக்களை அமைக்கிறார்.

விவிலியத்தில், புதிய ஏற்பாட்டின் முதல் நூலாக இவருடைய நூல் அமையும் அழியாப் பெருமை மத்தேயுவுக்குக் கிடைத்திருக்கிறது. இவர் எபிரேய மொழியில் எழுதிய நூல் தான் முதன் முதலில் இந்தியா வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

மார்கு எழுதிய நூல் விவிலியத்தில் புதிய ஏற்பாட்டின் இரண்டாவது நூலாக வருகிறது. மார்கு தான் முதலில் நூலை எழுதியிருப்பதாக இறையியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். ரோம தந்தைக்கும் யூதத் தாய்க்கும் பிறந்த மார்கு செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். இயேசுவின் சீடர்களான பேதுரு, பவுல் இருவருடனும் நெருங்கிப் பழகியவர். இயேசுவுடன் நேரடியான பழக்கமோ தொடர்போ விசுவாசமோ மார்கு கொண்டிருக்கவில்லை. இயேசு உயிர்த்தபின் பேதுரு, பவுல் போன்றோர் ஆற்றிய போதனைகளும், இறை பணியுமே மார்குவை கிறிஸ்தவத்தில் இணைத்தது.

மார்கு அப்போஸ்தலர்கள் சொன்ன சம்பவங்களை நூலாக எழுதினார். பேதுருவும், பவுலும் பிற நாட்டு மக்களுக்குச் செய்திகளை கடிதங்கள் வாயிலாக எழுதி அனுப்புவது வழக்கம். அப்படி செய்திகளை எழுதத் துணைபுரிந்தவர் மார்கு என்றும், அதன் மூலமே அவருக்கு இயேசு குறித்த ஏராளமான தகவல்கள் கிடைத்தன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

அலக்சாந்திரியாவில் பணியாற்றிய மாற்கு, அங்குள்ள சிலை வழிபாட்டுக்காரர்களின் பரம விரோதியானார். கி.பி 68ம் ஆண்டில் இயேசுவின் உயிர்ப்பு தின விழா கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தபோது மக்கள் மார்குவைப் பிடித்துக் கட்டி தெருவழியாக இழுத்துச் சென்று கொடுமைப்படுத்தினார்கள். பின் அவரைக் கட்டிவைத்து உயிருடன் கொளுத்தினார்கள். மார்கு சாகாத ஒரு நூலை எழுதிய பெருமையுடன் மரணமடைந்தார்.

லூக்கா இயேசுவை நேருக்கு நேராக சந்தித்தது கூடக் கிடையாது ! நல்ல இலக்கிய ஆர்வலராக இருந்தவர் லூக்கா. அவருடைய நூல் விவிலியத்தில் புதிய ஏற்பாட்டின் மிகவும் கட்டமைவான நூல் என்று போற்றப்படுகிறது. கிரேக்க மொழியில் அவர் இயேசுவின் வாழ்க்கையை எழுதினார். இவர் அடிப்படையில் ஒரு மருத்துவர் !

இயேசுவை கண்டதில்லை எனினும் ஒரு சிறந்த நம்பிக்கையாளராக இருந்தார் லூக்கா. அவர் அப்போஸ்தலர்களிடம் பெற்ற செய்திகளை வைத்து தன்னுடைய நூலை எழுதினார். அப்படி எழுதுவதற்கு முன்பாக செய்திகளின் நம்பகத் தன்மையை அறியும் பொருட்டு இரண்டு ஆண்டுகள் கலிலேயா, யூதேயா முழுதும் சுற்றித் திருந்தார். அங்கே இயேசுவின் அருகாமையை உள்ளுக்குள் உணர்ந்த லூக்கா நற்செய்தி நூலை எழுதினார். அவருடைய நூலில் மருத்துவம் சார்ந்த நிகழ்வுகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். யூத அரசர்கள், ஆளுநர்கள் போன்றவர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். இது வரலாற்று ஆராய்ச்சிக்கு மிகவும் துணையாக இருக்கிறது.

விவிலியத்தில் வரும் ஐந்தாவது நூலான திருத்தூதர் பணிகள் எனப்படும் அப்போஸ்தலர் பணி நூலையும் லூக்காவே எழுதியுள்ளார். விசுவாச வரலாற்று இலக்கிய நூலாக இவை திகழ்கின்றன. தன்னுடைய எண்பத்து நான்காவது வயதில் அவர் மரணமடைந்தார்.

யோவான் இயேசுவின் அன்புச் சீடர். அவர் எழுதிய நூல் விவிலியத்தின் நான்காவது நூல். இயேசுவைக் கடவுளாகக் காட்டும் பல்வேறு போதனைகளையும், நிகழ்ச்சிகளையும் யோவான் தான் விவரிக்கிறார். இயேசுவோடு அருகிருக்கும் வாய்ப்பு இவருக்குத் தான் அதிகமாய் வழங்கப்பட்டது. எனவே இவருடைய நூலில் அதிகமான செய்திகள் காணக் கிடைக்கின்றன.

அப்போஸ்தலர்கள் எழுதிய இந்த நூல்கள் பிற நாடுகளில் வாழும் மக்களுக்கு இயேசுவைப் பற்றிய உண்மையான வாழ்க்கை வரலாற்றை தெரியப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாகிப் போனது. கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு இந்த நூல்கள் மிகப் பெரும் பங்காற்றியுள்ளன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

***************************************************************************************************************************************************
விவிலியம் குறித்த ஒரு அறிமுகம்
**************************************************************************************************************************************************

புனித பைபிள், திருவிவிலியம், பரிசுத்த வேதாகமம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. பிப்லோஸ் ( biblos) என்னும் கிரேக்கச் சொல் மருவி பிப்ளியோன் என்றானது. இதற்கு புத்தகம் என்பது பொருள். இதையே பைபிள் தன்னுடைய பெயராகக் கொண்டிருக்கிறது. பிப்ளோன் என்பது லெபனான் நாட்டிலுள்ள ஒரு துறைமுக நகரம். புத்தகம் செய்வதற்குப் பயன்படும் பாப்பிரஸ் அங்கே தான் விற்கப்பட்டது.

விவிலியத்தில் உள்ள செய்திகளை இறைவனின் ஏவுதலால், அல்லது பரிசுத்த ஆவியின் வழி காட்டுதலாம் மனிதன் எழுதினான் என்பதே அனைத்துக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும். இதை கடவுள் மனிதனுக்குத் தந்திருக்கும் வாழ்க்கை முறையாகவும், நம்பிக்கை வழிகாட்டியாகவும், மீட்பின் செய்தியாகவும், அன்பின் கடிதமாகவும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையே கிறிஸ்தவத்தின் அடிப்படை.

விவிலியம் தன்னை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறது. ஒன்று பழைய ஏற்பாடு. இன்னொன்று புதிய ஏற்பாடு. ஏற்பாடு என்பது உடன்படிக்கையே. பழைய ஏற்பாடு ஆதாமின் பிறப்பு முதல் இயேசுவின் பிறப்புக்கு முந்திய காலம் வரை உள்ள தலைமுறையின் வரலாற்றை, குறிப்பாக இறைவாக்கினர்களின் வரலாற்றை, இஸ்ரயேல் குல மக்களின் வாழ்க்கை முறையை விளக்குகிறது. புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்பு முதல் அவருடைய அப்போஸ்தலர்களின் ஆதி கால கிறிஸ்தவ மறை பரப்புதல் பணி வரை நீடிக்கிறது.

புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 நூல்கள் உள்ளன. பழைய ஏற்பாட்டைப் பொறுத்தவரை கத்தோலிக்கர்கள் 46 நூல்களும், புரோட்டஸ்டண்ட் (சீர்திருத்தச் சபையார்) பிரிவினர் 39 நூல்களையும் பயன்படுத்துகிறார்கள். மிச்சமுள்ள ஏழு நூல்களும் பாலஸ்தீன அடிமைத்தனத்திற்குப் பிறகு எழுதப்பட்டதாலும், அது எபிரேய மொழியில் எழுதப்படாமல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டதாலும், பாலஸ்தீனத்துக்கு வெளியே எழுதப்பட்டதாலும் சீர்திருத்தச் சபையார் இதை ஒத்துக் கொள்ளவில்லை. ஆதித் திருச்சபை இந்த நூல்களை ஏற்றுக் கொண்டதால், கத்தோலிக்கர்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இருப்பினும் இது சீர்திருத்தச் சபையாரால் ஒதுக்கப்பட்டதால் கத்தோலிக்கத் திருச்சபை இவற்றை ‘பிற்சேர்க்கை’ என்று பெயரிட்டு தனிப் பிரிவாக தன்னுடைய விவிலியத்தில் இடம்பெறச் செய்துள்ளது.

கிமு. 750 ல் எழுதப்பட்ட ஆமோஸ் இறைவாக்கினரின் நூலே விவிலியத்திலேயே முதலில் எழுதப்பட்ட நூல். மற்ற நூல்கள் எல்லாம் அதன் பின்னரே எழுதப்பட்டன. காலம் காலமாக வாய்வழிக் கதைகளாகவும், பரம்பரையினரின் சிறு சிறு குறிப்புகளாகவும், படங்களாகவும் இருந்த பழைய ஏற்பாட்டுக் கதைகள், பாடல்கள் எல்லாம் பிற்காலத்தில் தான் எழுத்து வடிவம் பெற்றன. சாலமோன் மன்னனின் காலத்திற்குப் பிறகு தான் எழுத்து வடிவம் பரவ ஆரம்பித்தது. அதன் படி பார்க்கையில் கி.மு 1300 ம் ஆண்டு முதல், கி.பி 100ம் ஆண்டு வரை உருவான படைப்புகள் திரு விவிலியத்தில் இடம்பெற்றுள்ளன.

இப்போது காணப்படும் விவிலியத்தின் வடிவம் ஆரம்ப காலத்தில் இல்லை. கி.பி 1440 ல் இராபி நாத்தான் என்பவர் பழைய ஏற்பாட்டு நூலை ஆராய்ந்து அவற்றை அதிகாரம், வசனங்களாகப் பிரித்தார். இது வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் கோடிடவும் மிகவும் வசதியாக இருந்தது. புதிய ஏற்பாட்டு வசனங்கள் கி.பி 1550 பிரிக்கப்பட்டன, ஏற்கனவே புதிய ஏற்பாட்டு அதிகாரங்களை பேராயர் ஸ்டீவ் லாங்டன் 1216ல் பிரித்திருந்தார்.

களிமண், ஓடுகள், பாப்பிரஸ் தாள்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவற்றில் எழுதப்பட்டன. அவற்றின் நகல்கள் பின்னாளில் எடுக்கப்பட்டன. பலவற்றின் மூல நூல்கள் கிடைக்காமல் பிரதிகளிலிருந்தே தகவல்கள் எடுக்கப்பட்டன. சீனாய்ச் சுவடி, வத்திக்கான் சுவடி இரண்டும் கி.பி 350 ல் கண்டெடுக்கப்பட்டன. யூதேயா பாலை நிலப் பகுதியில் கி.பி 1947 ம் ஆண்டு பல ஏடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பழைய ஏற்பாட்டின் 180 ஏடுகளும், எசேயா இறைவாக்கினர் நூலின் முழு வடிவமும் இங்கே களிமண் சாடிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இவை மும்ரான் குகைகளில் வாழ்ந்த எசேனியர்களால் பாதுகாத்து வைக்கப்பட்டவையாகும்.

பழைய ஏற்பாடு பெரும்பாலும் எபிரேய மொழியிலும், சில பகுதிகள் அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. சில நூற்றாண்டுகளுக்குப் பின் எபிரேய மொழி அழிவைச் சந்தித்ததால் எல்லா நூல்களும் அரமேய மொழியில் எழுதப்பட்டன. இறைவனின் செய்தியாகிய பழைய ஏற்பாடு சிதறுண்டு போன மற்ற மக்களையும் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்த நூல் கிரேக்கத்திலும் மொழி பெயர்க்கப் பட்டது. இந்த மொழிபெயர்ப்பை எழுபது பேர் செய்ததால் இது செப்துவஜிந்த் ( எழுபதின்மர் நூல் ) என்று அழைக்கப்பட்டது. இதில் ஏழு நூல்கள் அதிகம் உள்ளன. இவையே கத்தோலிக்க மத விவிலியத்தில் இடம்பெற்றுள்ள, சீர்திருத்த சபை விவிலியத்தில் இடம் பெறாத ஏழு நூல்கள்.

புதிய ஏற்பாட்டு நூல் முழுவதும் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டது.

புனித ஜெரோம் முழு திரு விவிலியத்தையும் லத்தீனில் மொழிபெயர்த்தார். இது ஒரு மிகப்பெரிய பணி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல் சுமார் பதினைந்து நூற்றாண்டுகள் திருச்சபையின் அதிகாரப் பூர்வ மொழிபெயர்ப்பாக பயன்படுத்தப் பட்டு வந்தது. லத்தீன் மொழியிலிருந்தே திருவிவிலியம் பல மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

1450ம் ஆண்டு விவிலியம் முதன் முதலில் அச்சிடப்பட்டது. அச்சு இயந்திரத்தைக் கண்டு பிடித்த கூடம்பர்க் முதலில் அச்சடித்த நூல் விவிலியம் !!! எனவே விவிலியமே உலகில் அச்சிடப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெறுகிறது. ஜெர்மனியிலுள்ள மயின்ஸ் என்னுமிடத்தில் இது அச்சிடப்பட்டது.

சீகன்பால்கு என்னும் லூத்தரன் மறைப்பணியாளர் 1715ம் ஆண்டு திருவிவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அது தமிழ் மொழியில் அச்சிடப்பட்டது. ஆசியாவிலேயே முதலில் விவிலியம் மொழிபெயர்க்கப் பட்டது தமிழ் மொழியில் தான் !. அதன் பின்னர் 1727 ல் முழு விவிலியம் மொழிபெயர்க்கப் பட்டது.
தற்போது உலக மொழிகள் 1848 ல் திருவிவிலியம் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு : 5. திருச்சபை வளர்ச்சியின் முதல் நிலை

Image result for Christianity in first centuryமுதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்

முதலாம் நூற்றாண்டுத் திருச்சபைக்கு ரோமை அரசிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்புகள் எழுந்தன. அவர்கள் கிறிஸ்தவர்களின் மதத்தின் மேல் கொண்டிருந்த சந்தேகமே இந்த எதிர்ப்புக்குக் காரணம் எனலாம். அந்த சந்தேகங்களில் முக்கியமானவைகளாக கீழ்க்குறிப்பிட்டுள்ளவற்றைச் சொல்லலாம்.

குறிப்பாக கிறிஸ்தவர்களுடைய சடங்குகளும், சம்பிரதாயங்களும் வழக்கமான மத வழிபாட்டுக்குரியனவாய் இருக்கவில்லை எனவே கிறிஸ்தவர்களின் வழிபாடுகளின் மேல் பலருக்கும் மிகப்பெரிய சந்தேகம் இருந்து வந்தது. குறிப்பாக வழிபாடுகளில் கிறிஸ்தவர்கள் உண்ணும் அன்பின் விருந்தில் குழந்தைகளின் மாமிசம் பரிமாறப்படுகிறது எனும் வதந்தியும் எழுந்தது.

இயேசுவின் இறுதி இரவு உணவுப் பந்தியில், இயேசு அப்பத்தைஎடுத்து அது தன்னுடைய உடல் என்றும், திராட்சை இரசத்தை தன்னுடைய இரத்தம் என்றும் சொல்லி சீடர்களுக்குக் கொடுத்தார். சீடர்களும் அதை உண்டார்கள். அதை நினைவுகூரும் விதமாகவே வழிபாடுகளின் அன்பின் விருந்து வழங்கப்படுகிறது.

இது இயேசுவின் உடல் என்று சொல்லி அப்பத்தை சீடர்கள் உண்டார்கள். நாங்கள் கிறிஸ்துவின் உடலை உண்டு இரத்தத்தைக் குடித்தோம் என்றும் பிரசங்கித்தார்கள். இது தான் அவர்களுடைய அன்பின் விருந்தின் மேல் மற்றவர்களுக்கு சந்தேகம் எழ காரணமாய் அமைந்தது.

கிறிஸ்தவர்கள் நாத்திகர்கள் என்றும் எண்ணப்பட்டனர். அந்த நாட்களின் வழக்கத்தில் இருந்த சிலை வழிபாடுகளை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கவில்லை. மன்னனைக் கடவுளாக வணங்கும் வணக்கமுறையையும் இவர்கள் பின்பற்றவில்லை. எனவே இவர்களுடைய வழிபாடு குறித்து மக்களிடையே வியப்பும், சந்தேகமும் எழுந்தது. கிறிஸ்தவர்கள் கடவுளை வழிபடுபவர்கள் அல்ல என்று கருதப்பட்டனர்.

கிறிஸ்தவர்கள் பிறரோடு கலந்து கொள்ளாமல் தனித் தனியாக குழுக்களாக வாழ்ந்து வந்தனர். பெரும்பாலான தொழில்களில் சிலை வழிபாட்டு முறைகள் இருந்ததால் அந்தத் தொழில்களையே அவர்கள் புறக்கணித்தனர்.

ரோம அரசுக்கும், அவர்களுடைய அரசாங்கத்துக்கும் மேலானது கிறிஸ்துவின் அரசு என்று கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். எனவே அவர்கள் அரசையோ, தலைவர்களையோ முதன்மையானவர்களாய் கருதவில்லை. அவர்களுக்கு மனிதருக்குரிய மரியாதையை மட்டுமே வழங்கினர். கடவுளே முதன்மையானவர் அதற்குப் பிறகே மற்றவர்கள் என்னும் போக்கு கொண்டிருந்தார்கள். மனிதருக்குக் கீழ்ப்படிவதை விடக் கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள் என்றே போதித்தனர்.

ரோமை அரசு கிறிஸ்தவ மதத்தை அங்கீகரிக்கவில்லை என்பதும் ரோமர்கள் கிறிஸ்தவர்களை எதிர்க்க முக்கியமான ஒரு காரணம் எனக் கொள்ளலாம்.

கிறிஸ்தவர்களின் வளர்ச்சி ஆலய வியாபாரங்களையும் பெருமளவில் பாதித்தது. பலியிடுதல் என்பது பாவத்தைப் போக்குவதற்காகச் செய்யப்படும் ஒரு சடங்கு என்பது யூதர்களுடைய நம்பிக்கையாய் இருந்தது. எனவே தங்கள் பாவங்களுக்குத் தக்கபடி பலிப் பொருட்களை அதிக விலை கொடுத்து ஆலய வளாகங்களிலிருந்து பெற்றுக் கொண்டு அதை கடவுளுக்குப் பலியிடுவது அவர்களது வழக்கம். இது ஒரு மிகப்பெரிய வியாபாரமாக அங்கு நடை பெற்று வந்தது. கிறிஸ்தவர்களிடையே அந்த நம்பிக்கை இல்லை. எனவே கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள் பலியிடுவதை நிறுத்தினார்கள். இது அவர்களுடைய வியாபாரத்தைப் பாதித்து விட்டது. குறி சொல்பவர்களும் தங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டதால் கிறிஸ்தவர்களை எதிர்த்தனர்.

அந்த நாட்களில் நிகழ்ந்த போர்களும், இயற்கைச் சீற்றங்களுக்கும் கிறிஸ்தவர்களே காரணம் என எண்ணப்பட்டனர். கிறிஸ்தவர்களின் புதிய வழிபாட்டு முறையினால் கோபம் கொண்ட மற்ற தெய்வங்கள் மனிதர்களுக்கு இடர்கள் வழங்கியதாக அவர்கள் நினைத்தனர்.

கிறிஸ்தவர்கள் மிகவும் தைரியசாலிகளாய் இருந்தார்கள். இயேசுவின் இரண்டாம் வருகை விரைவிலேயே வரும் எனும் நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. எனவே அவர்கள் உயிரை துச்சமென மதித்து மதத்தைப் போதித்தனர். அவர்கள் ஒரு மாபெரும் மனித சக்தியாக உருவெடுத்து வந்தனர். எனவே இவர்கள் ரோமை ஆட்சியைக் கைப்பற்றிவிடக் கூடும் எனும் பயம் நிலவியது.

கிறிஸ்தவர்களின் தைரியம் அரசுக்கே சவாலாய் இருந்தது. ரோமை தெய்வங்களுக்கு தூபம் காட்ட கிறிஸ்தவர்கள் மறுத்தனர். அதற்காக எந்த ஒரு பெரிய தண்டனையையும் புன்னகையுடன் பெற்றுக்கொள்ள அவர்கள் தயாராய் இருந்தனர். கிறிஸ்தவர்கள் எனும் பெயரை வைத்திருப்பதே தண்டனைக்குரிய தவறாய் பார்க்கப்பட்டது.

யூத மதகுருக்கள் மற்றும் யூத மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியோர் கிறிஸ்தவ மதத்தைக் குறித்து பொய்பிரச்சாரங்களையும், புகார்களையும் ரோம அரசுக்கு அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். கிறிஸ்தவர்கள் பிற மத சிலைகளுக்கு தூபம் காட்ட மறுத்ததையெல்லாம் அரச விரோத செயல்களாகச் சித்தரித்து அவர்களுக்கு எதிராக கலகம் மூட்டினார்கள். கிறிஸ்தவர்களால் தான் இயற்கைச் சீற்றங்கள் நடக்கின்றன என்றும், அவர்கள் தனித்தனிக் குழுக்களாகக் கூடுவது பின்னாளில் அரசைப் பிடிப்பதற்கான ஆலோசனையே என்றும் அரச காதுகளில் செய்திகள் சொல்லப்பட்டன.
கிறிஸ்தவத்தின் வளர்ச்சியின் முதல் கட்டம் என்று அப்போஸ்தலர்களின் மதப் பிரச்சாரத்தைக் குறிப்பிடலாம். இயேசுவின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும், மீண்டும் அவர் உலகிற்கு வருவார் என்னும் நம்பிக்கையையும், இயேசு உயிர்த்துவிட்டார் அவர் கடவுளாக இருக்கிறார் என்பவற்றையும் அடிப்படையாகக் கொண்டே நடந்தது.

இயேசுவின் உயிர்ப்பு நிகழ்ச்சி நடந்து நாற்பது நாட்களுக்குப் பின் இந்த பணி அப்போஸ்தலர்களால் ஆரம்பிக்கப் பட்டது. அது யோவானின் மரணம் நிகழ்ந்த கி.பி நூறாம் ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த காலத்தில் சுமார் முப்பத்து இரண்டு நாடுகள், ஐம்பத்து நான்கு நகரங்கள், மற்றும் ஒன்பது மத்திய தரைக்கடல் சார்ந்த தீவுகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது என்று விவிலியம் குறிப்பிடுகிறது.

இந்த முதல் காலகட்டம் கிறிஸ்தவர்களுக்கும் அந்த மதத்தைப் பரப்பியவர்களுக்கும் மிகவும் சோதனைகள் நிறைந்த காலமாகவே இருந்தது. மரணத்தை விரல்களில் பிடித்துக் கொண்டே கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் செயல் நடந்தது. தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். சமுதாயத்திலிருந்து நிராகரிக்கப் பட்டனர்.

ரோம் அரச மன்னர்கள் ஜூலியஸ் சீசருக்குப் பின் ‘சீசர்’ என்றே அழைக்கப்பட்டனர். இயேசு பிறந்தபோது ஆட்சியில் இருந்த அகஸ்துஸ் சீசர் ஜூலியஸ் சீசருக்குப் பின் அரியணை ஏறிய மன்னன். கி.மு 27 முதல் கி.பி 14வரை அவர் ஆட்சி புரிந்தார்.

திபேரியு சீசர் அதன் பின்னர் அரியணை ஏறினார். அவர் கி.பி இருபத்து ஏழு வரை ஆட்சி செய்தார்.

இயேசுவின் மறைவுக்குப் பிறகு அரசேற்ற மன்னன் காலிகுலா. இயேசுவின் பெயரைச் சொல்லிக் கொண்டு திருபவர்கள் மீது இவருக்கு அலர்ஜி. எனவே அவர் இயேசுவைப் பின்பற்றியவர்களை அடியோடு வெறுத்தார். இவர் மக்கள் தன்னை வணங்கவேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்தார். புகழ் பெற்ற எருசலேம் தேவாலயத்தில் தன்னுடைய சிலையை நிறுவி ஆராதனை செய்யப்பட வேண்டும் என விரும்பினார். ஆனால் ஆயுள் அவருடைய ஆசையை நிறைவேற்றவில்லை. அவருடைய எண்ணம் நிறைவேறும் முன்பாகவே கி.பி நாற்பத்து ஏழில் இறந்தார்.

அடுத்ததாக கி.பி 41ல் ஆட்சிக்கு வந்த கிளாடியுஸ் மன்னனும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவே இருந்தார். கிறிஸ்து என்பவரின் தலைமையில் ஒரு கூட்டம் பேர் அரசுக்கு எதிராக போராடுகிறார்கள் என்று கிறிஸ்தவர்களைப் பற்றி அவர் நினைத்திருக்கிறார். எனவே இவருடைய ஆட்சிக் காலமான கி.பி 49ல் கிறிஸ்தவர்கள் ரோமிலிருந்து துரத்தியடிக்கப் பட்டனர்.

இதற்குப் பின் வந்த மன்னன் தான் ரோம் தீ பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் ! இவனுடைய ஆட்சிக் காலம் கிறிஸ்தவர்களின் இருண்ட காலம் எனலாம்.

கி.பி 54 முதல் கி.பி 68 வரை ரோம பேரரசை ஆண்டு வந்த நீரோ மன்னனின் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடந்தன. தன் தாயையே கொலை செய்தவன் நீரோ மன்னன் என்கிறது வரலாறு.

இவன் காலத்தில் ரோமா புரியின் ஒரு பாகத்தை இவனே தீ வைத்துக் கொளுத்தி விட்டு அந்தப் பழியை கிறிஸ்தவர்கள் மேல் சுமத்தினான். அதனால் பல கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கிறிஸ்தவர்களைப் பிடித்து சிங்கங்களின் கூண்டுகளிலும், முதலைகளின் தடாகத்திலும் போட்டு அவர்களை விலங்குகள் கொல்வதைப் பார்த்து ரசித்தார்கள்.

சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரங்களில் கிறிஸ்தவர்களைக் கட்டி வைத்து அவர்களை உயிரோடு கொளுத்தி நீரோ மன்னன் அந்த வெளிச்சத்தில் வெற்றி ஊர்வலம் செல்வான். இதனால் கிறிஸ்தவர்கள் உயிர் விளக்குகள் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகபட்ச வன்முறையை அரங்கேற்றிய நீரோ அதன்பின் நான்கு ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனான்.

எந்த அளவுக்கு நெருக்கடியை கிறிஸ்தவர்கள் சந்தித்தார்களோ அந்த அளவுக்கு அவர்கள் வளர்ந்தார்கள்.

பலர் கிறிஸ்தவத்தை யூதமதத்தின் ஒரு பிரிவாகவே பார்த்தார்கள். இயேசு யூத மதத்தைச் சார்ந்தவர் என்பதாலும், அவருடைய சீடர்கள் யூத மதத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களைச் சார்ந்தே தங்கள் விளக்கங்களை அமைத்ததாலும், யூதர்களிடையே அவர்களுடைய போதனை அதிக அளவில் இருந்ததாலும் அப்படி ஒரு தோற்றம் இந்த முதல் கட்டத்தில் ஏற்பட்டது.


கி.பி அறுபத்து ஒன்பதாம் ஆண்டு முதல் எழுபத்து ஒன்பதாம் ஆண்டுவரை ஆட்சி செய்த மன்னன் வெஸ்பெஷியன் என்பவர். இவருடைய மகன் தான் எருசலேம் நகரத்தை அழித்த தீத்து.

தீத்து கி.பி எண்பத்து ஒன்றுவரை ஆட்சி செய்தான். இவனுடைய காலத்திலும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. மறைந்தே வாழ்ந்தனர். இவனுக்குப் பின் அரசேறினான் இவனது தம்பி தொமித்தியான்.

தொமித்தியானின் ஆட்சிக் காலம் கி.பி எண்பத்து ஒன்பது முதல் கி.பி தொன்னூற்று ஆறு வரை. எண்பத்து ஒன்றாம் ஆண்டு செப்டம்பர் பதிமூன்றாம் நாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இவர் தன்னைக் கடவுளாக நினைத்துக் கொண்டார்.

நாட்டிலுள்ள அனைவரும் தன்னை வணங்கவேண்டும் என்று ஆணையிட்டான். சிலை வழிபாடுகள் போல தனக்கும் தூபம் காட்டி வழிபட வேண்டும் என எல்லோரையும் கட்டாயப்படுத்தினான்.

கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்தனர். அவர்கள் அரசரின் ஆணையை மதிக்கவில்லை. எனவே கிறிஸ்தவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்னும் முத்திரை குத்தி துன்பப்படுத்தப் பட்டனர். கிறிஸ்தவர்கள் கலகக் காரர்கள் என்று அறிவிக்கப்பட்டனர்.

அரசனை வணங்காத கிறிஸ்தவர்கள் மீது அரசனின் கோபம் பாய்ந்தது. கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்த அனைத்து கிறிஸ்தவர்களும் வன்முறைக்கு ஆளானார்கள்.

இவன் காலத்தில் கிறிஸ்தவம் நசுக்கப்பட்டாலும் கிளை விட்டது. கிறிஸ்தவம் அரண்மனைகளிலும் நுழைந்தது. மன்னனின் தம்பி கிளமெண்ட் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தான். கிறிஸ்தவர்களை வெறுத்த மன்னன் தம்பியையும் வெறுத்தான்.

தன் தம்பி என்றும் பாராமல் மன்னன் கிளமெண்ட் ஐ கொன்றான். அவனுடைய மனைவியை நாடுகடத்தினான்.

அந்த நாட்களில் ரோம் நகரில் நடந்த வன்முறைகளைக் குறித்து ‘ஷெப்பர்ட் ஆஃப் ஹெர்ம்ஸ்’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணவம் கொண்டு தன்னை ஆண்டவன் என்று அழைத்துத் திரிந்த தொமித்தியான் நீண்டநாட்கள் வாழவில்லை. கி.பி தொன்னூற்று ஆறில் அவன் படுகொலை செய்யப்பட்டான்.

அதன்பின் நெர்வா எனும் மன்னன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கிறிஸ்தவர்கள் சற்றே இளைப்பாறும் காலமாக அது இருந்தது. பிரச்சனைகள் இல்லாத ஆட்சியாய் நெர்வாவின் ஆட்சி இருந்தது.

ஆதிகாலத் திருச்சபை கிறிஸ்தவத்தின் பொற்காலமாக இருந்தது. உண்மையில் கிறிஸ்துவின் போதனைகளை அப்படியே பின்பற்றும் காலமாக அது இருந்தது. அப்போது எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள் அவர்களுக்குள் பிளவு காணப்படவில்லை.

மக்கள் தங்கள் சொத்துகளை பொதுவில் கொண்டு வைத்தார்கள். அதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். தனக்கென யாரும் சொத்து சேர்த்து வைக்கவில்லை.

அதிகமாக செபித்தார்கள். இயேசு உடனே திரும்ப வந்து தங்களை அழைத்துச் செல்வார் எனும் எண்ணம் நிறைய பேரிடம் காணப்பட்டது. எனவே உருக்கமான செபம் எப்போதும் நடந்தது.

பெண்களின் நிலை அந்த காலகட்டத்தில் சிறப்பான முன்னேற்றம் அடைந்தது. அனைத்து செயல்களிலும் பெண்களின் ஈடுபாடு இருந்தது. அவர்கள் ஆண்களோடு சமமாக பணிகளில் ஈடுபட்டார்கள்.

உதவுதல் மிக முக்கியமான பணியாக இருந்தது. ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒரு சமத்துவ சமுதாயமாக இருந்தது அன்றைய திருச்சபை.

இயேசுவுக்காய் துன்பப்படுவது நல்லது என்று நினைத்தார்கள். ‘என் நிமித்தம் மக்கள் உங்களைத் துன்புறுத்தினால் மகிழுங்கள்’ என்று இயேசு போதித்திருந்தார். எனவே துன்பத்தை மக்கள் விரும்பி ஏற்றார்கள்.

தங்களை வெறுத்தவர்களையும் துன்பப்படுத்தியவர்களையும் ஆதிகால கிறிஸ்தவர்கள் வெறுக்கவில்லை. அவர்களுக்காய் செபித்தார்கள். அவர்களை மன்னித்தார்கள்.

திருமுழுக்கு கொடுக்கும் வழக்கம் அதிகரித்தது. குழுவில் இணைய விரும்புபவர்கள் திருமுழுக்கு அளிக்கப்பட்டனர். முழுமையாக நீரில் மூழ்குவதோ, மூன்று முறை தண்ணீர் தெளிப்பதோ ஞானஸ்நானத்தின் அடையாளமாய் இருந்தது.

எனினும் பெரும்பாலும் யூதர்களே கிறிஸ்துவர்களானதால் யூத மத வழக்கங்களும் கிறிஸ்தவர்களுக்கு இருந்தன. யூதர்களின் ஓய்வு நாளான சனிக்கிழமைகளிலும், இயேசுவின் உயிர்ப்பு நாளான ஞாயிற்றுக் கிழமையிலும் அவர்கள் ஜெபக்கூடங்களுக்குச் சென்றார்கள்.

மாற்கு நூலே விவிலியத்தின் முதலாம் நூல் இது கி.பி 44ல் எழுதப்பட்டது. மத்தேயு நற்செய்தி கி.பி ஐம்பதிலும், லூக்கா நற்செய்தி கி.பி அறுபதிலும், யோவான் நற்செய்தி கி.பி நூறிலும் எழுதப்பட்டன. யோவான் கி.பி நூறு வரை உயிர் வாழ்ந்தவர். தன்னுடைய வாழ்வின் கடைசி கட்டத்தில் யோவான் நற்செய்தி நூலை எழுதினார்.

லூக்கா அப்போஸ்தலர் பணி எனும் நூலையும் எழுதினார். அது கி.பி அறுபதில் எழுதப்பட்டது. தூய பவுல் எழுதிய நிரூபங்கள் கி.பி ஐம்பதுக்கும் அறுபத்து நான்கிற்கும் இடைப்பட்டவை. எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் அறுபத்து இரண்டிற்கும், எழுபதுக்கும் இடையே எழுதப்பட்டவை.

யாக்கோபு எழுதிய நூல்கள் கிபி நாற்பத்து நான்கிற்கும் ஐம்பதுக்கும் இடையில் அல்லது அறுபத்து இரண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஒன்று பேதுரு தனது நூலை கி.பி அறுபத்து நான்கில் எழுதினார். யோவான் தரிசனம் கி.பி தொன்னூற்று ஐந்திலும் எழுதப்பட்ட யூதாவின் கடிதங்களும், யோவானின் கடிதங்களும் கி.பி நூறில் எழுதப்பட்டன.

இந்த நூல்கள் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருக காரணமாயிற்று. எருசலேமில் மட்டுமே சுமார் இருபதாயிரம் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். அது மட்டுமன்றி அந்தியோக்கியா, எபேசு, கொரிந்து, சமாரியா, யோப்பா, லித்தா, சீரியா, யூதேயா உட்பட பல்வேறு இடங்களுக்குக் கிறிஸ்தவம் பரவியது.

கி.பி 66 ல், யூதேயாவில் வாழ்ந்த யூதர்களுக்கும் ரோம அரசுக்கும் எதிரான போராட்டம் பெருமளவில் வெடித்தது. யூத மதத்தின் கோட்பாடுகளை காயப்படுத்தும் விதமாக ரோமர்கள் கடும் விமர்சனம் செய்தார்கள். ஏற்கனவே ரோம அரசுக்கு வரி கொடுப்பதில் உடன்படாத யூதேயா வாழ் யூதர்கள் யூத மதத்தை ரோமர்கள் விமர்சித்ததும் பொங்கினர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் படை வலிமையுடைய ரோமர்களின் முன்னால் யூதர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. போர் தீவிரமாய் நடந்தது. நீண்டகாலம் நடந்த யுத்தம், பட்டினியையும், ஏராளமான சாவுகளையும், உள்நாட்டுக் கலவரங்களையும் சம்பாதித்துத் தந்தது.

பாலஸ்தீனம் வீழ்ச்சியடைந்தது.

கிபி எழுபதாம் ஆண்டில் எருசலேம் தீக்கிரையானது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது.

யூதர்கள் அடிமைகளாக்கப் பட்டார்கள். அடிமைகளாக்கப் பட்ட யூதர்களை வைத்து ரோமர்கள் கடுமையான வேலை வாங்கினர். அப்போது தான் உலகப் புகழ் பெற்ற கொலோசியம் யூத அடிமைகளால் கட்டப்பட்டது.

கிபி. எழுபதாம் ஆண்டில் எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்ட பின்பு தான் யூத மதமும், கிறிஸ்தவ மதமும் இரண்டு வேறுபட்ட மதங்கள் என்னும் பார்வை பரவியது. அது கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்தியது. கிறிஸ்தவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். வீசி எறியப்பட்ட விதைகள் ஆங்காங்கே புதிய மரங்களைத் தோற்றுவிப்பது போல, சிதறடிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அடைக்கலம் புகுந்த இடத்திலெல்லாம் கிறிஸ்தவத்தை விதைத்தார்கள்.

எருசலேமில் ஆரம்பமான இயேசுவின் போதனைகள் இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பிற்குப் பிறகு எருசலேமிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் ஆரம்பமாகி பின் மற்ற இடங்களுக்கும் பரவியது. குறிப்பாக ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்த இடங்களிலெல்லாம் கிறிஸ்தவம் பரவியது.

பிளினி என்னும் வரலாற்று ஆசிரியர் ‘டிரஜன்’ என்னும் அரசனுக்கு சுமார் கி.பி 112 ம் ஆண்டில் எழுதிய கடிதம் ஒன்றில் “ஆசியா மைனரிலுள்ள அனைத்து நகரங்களிலும் சிலை வழிபாடுகள் கைவிடப்பட்டு மக்கள் கிறிஸ்த மதத்துக்குப் பெருமளவில் சென்று கொண்டிருக்கிறார்கள். இங்கே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேற்றுமை பாராட்டப் படுவதில்லை. பல இடங்களில் தாழ்ந்தவர்களாய்க் கருதப்படுவோர் தலைவர்களாக இருக்க உயர் குலத்தோர் அங்கத்தினர்களாக உள்ளனர்’ என்னும் பொருள் பட குறிப்பிட்டுள்ளது முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.

இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்

இரண்டாம் நூற்றாண்டில் டிரேஜான், ஆதிரையான், மார்கஸ் அரேலியஸ் போன்ற மன்னர்களால் கிறிஸ்தவ மதத்துக்கு துன்பம் ஏற்பட்டது.

டிரேஜான் கிபி தொன்னூற்று எட்டு முதல் நூற்று பதினேழு வரை அரசாண்டார். இவருடைய காலத்திலும் சிலை வழிபாடு ஊக்கப்படுத்தப் பட்டு, கிறிஸ்தவ வழிபாடு இன்னலுக்கு இலக்கானது. கிறிஸ்தவர்கள் அதிகமாய் பெருகி விட்டதனால் தேவாலயங்களில் பலியிடுவோர் குறைந்து விட்டதாகவும், அதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் பித்தானியாவின் அதிகாரி பிளினி என்பவர் டிரேஜானுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

கிறிஸ்தவர்கள் அரசனை வணங்கினால் விடுவிக்கப்பட்டனர். இல்லையேல் அவர்கள் துன்பப்படுத்தப் பட்டனர்.

இக்னேஷியஸ் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ மத பேராயர். அந்தியோக்கியாவின் மூன்றாவது பேராயராய் இவர் இருந்தார். கிறிஸ்தவ மதத்தில் மிகவும் உறுதியாய் இருந்த இவர் தியோபோரஸ் என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்டிருந்தார்.

இயேசு ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்’ என்று சொல்லி கைகளில் தூக்கிய குழந்தைகளில் ஒன்று இவர் என்று இவரைக் குறித்து கதைகள் உலவுகின்றன.

நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஒன்றுக்கு கிறிஸ்தவர்களே காரணம் என்று சொல்லி இக்னேஷியஸ் கண்டிக்கப்பட்டார். அவரோ அசந்து போகவில்லை. கிறித்துவுக்கு சாட்சியாக நின்றார். இயேசுவை ஆதரித்து மன்னனை எதிர்த்தார். எனவே ரோம் நகருக்குக் கொண்டு வரப்பட்டு அவர் கொடிய விலங்குகளுக்கு விருந்தானார்.

ஆதிரையான் மன்னன் கி.பி 117 முதல் 138 வரை ஆட்சி புரிந்தார். இவர் கிறிஸ்தவர்களை தேவையற்ற முறையில் துன்பப்படுத்தவில்லை. எனினும் கிறிஸ்தவ மதத்துக்கு ஏதேனும் அங்கீகாரமோ, கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாவலோ கிடைக்கவில்லை.

வழக்கம் போல கிறிஸ்தவர்கள் மறைவான வாழ்க்கையையே வாழ்ந்தார்கள். வெளிப்படையாக விசுவாசத்தை வெளிப்படுத்தியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ரோமை படைத் தளபதியாய் இருந்த அலெக்சாண்டர் என்பவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதற்காக கொலை செய்யப்பட்டார். மன்னனின் வெற்றியைப் பறைசாற்றி சிலைவழிபாடு நடக்கையில் அவர் கலந்து கொள்ள மறுத்தார். அது அரசனின் கோபத்தைக் கிளறி விட்டது. கிறிஸ்தவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். உயர் பதவியில் இருந்தாலும் கிறிஸ்தவன் என்றால் மரணம் வரும் எனும் எண்ணம் எல்லோருக்கும் இருந்தது.

அராரத் மலை கிறிஸ்தவர்களின் இரத்தத்தினாலும் இறுதி மூச்சுகளினாலும் நிறைந்தது. துன்பம் இறைவரம் என்றே நினைத்தனர் கிறிஸ்தவர்கள். எனவே அவர்கள் பகிரங்கமாக கிறிஸ்துவை அறிக்கையிட்டனர். அப்படி விசுவாசத்தை வெளிப்படுத்தியவர்கள் முட்களினால் முடிசூட்டப்பட்டனர். ஈட்டிகளினால் குத்தி கொலை செய்யப்பட்டனர். சிலுவையில் கொடூரமான கொலை செய்யப்பட்டனர். இயேசு தன்னுடைய மரணத்தின் போது அடைந்த அத்தனை வலிகளையும் ஒரு தவம்போலவே இருந்து ஏற்றுக் கொண்டனர் கிறிஸ்தவர்கள்.
எத்தனை கொடுமைகள் தங்களுக்கு எதிராக நடந்த போதிலும் கிறிஸ்தவர்கள் பொறுமை காத்தனர். எனவே கிறிஸ்தவர்களின் கடவுள் மிகப் பெரியவர் என்னும் கருத்தும் எழுந்தது. கொலோசீரியஸ் என்பவர் ‘கிறிஸ்தவர்களின் தலைவர் பெரியவர்’ என்று வெளிப்படையாய் சொன்னார்.

கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் மன்னனின் கோபத்துக்குத் தப்பவில்லை. கொலோசீரியனும் மன்னனின் ஆணைப்படி கொலை செய்யப்பட்டார்.

அவருடைய காலகட்டத்தில் நடந்த இன்னொரு முக்கியமான நிகழ்வு யூதர் புரட்சி. யூத மதத்தினரான இயேசுவின் பெயரால் புதிய மதம் புறப்பட்டதால் முதலில் யூதர்கள் மட்டுமே அந்த மதத்தில் இணைந்தனர். இன்னும் பலர் அதுவும் யூதமதத்தில் ஒரு பிரிவு என்றே எண்ணிக்கொண்டனர். ஆனால் காலப்போக்கில் அவையெல்லாம் மாறிவிட்டன. கிறிஸ்தவமும் யூதமும் வெவ்வேறானவை எனும் தெளிவு ஏற்பட்டது.

பார்கொக்பே, ராபி அக்கிபா எனும் இருவருடைய தலைமையில் யூதர்கள் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள். அப்போது விருத்த சேதனத்தைத் தடை செய்யப்பட்டு மன்னன் சட்டம் இயற்றினார்.

பார்கொக்பே இறைவனின் தூதர் எனும் எண்ணம் யூதர்களிடையே இருந்தது. ஆனால் கிறிஸ்தவர்கள் அவரை மதிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இயேசுவே மெசியா. எனவே அவர்கள் யூதர்களின் பார்கொக்பேவை வழிபடவும் இல்லை வணங்கவும் இல்லை. இது யூதர்களை எரிச்சலடையச் செய்தது.

கிறிஸ்தவர்கள் அதிகமாய் யூதர்களைப் பகைத்துக் கொள்ள இது ஒரு முக்கிய காரணமாயிற்று. யூதர்கள் கிறிஸ்தவர்களை அதிகமாய் துன்பப்படுத்த ஆரம்பித்தனர்.

கி.பி 124ல் மன்னன் ஆதிரையான் தன்னுடைய ஆட்சிக்குக் கீழே உள்ள தலைவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினான். அதில் கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்பப்படுத்தக் கூடாது. கிறிஸ்தவர்களைக் காரணமின்றி துன்பப்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தான்.

கி.பி 135ம் ஆண்டு பார்கொக்பே கைது செய்யப்பட்டார்.

கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் முக்கியமாக இருந்த எருசலேம் நகரம் ஏலியா கேப்பிட்டோலினா என்று அழைக்கப்பட்டு வேற்று மதத்தினருக்கு உரியதாயிற்று.

கிபி 138 க்குப் பின் அரியணை ஏறி 161 வரை ஆட்சி செய்த மன்னர் ஆண்டோனியஸ் பயஸ் என்பவர். இவர் இதற்கு முன் மன்னனாய் இருந்த ஆதிரையானின் வளர்ப்பு மகன்.

இவர் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாய் இருக்கவில்லை. எனினும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சமுதாயக் கொடுமைகள் ஒழியவில்லை. கிறிஸ்தவர்கள் தனியாகவே வாழ்க்கை நடத்தினார்கள். இவர் காலத்திலும் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பறைசாற்றியதால் பலியானவர்கள் ஏராளம்.

இவருடைய ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் போலிகார்ப். இவர் கி.பி 70 பிறந்தவர். இவர் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான யோவானின் சீடர்.

சீரியா நாட்டைச் சேர்ந்த இவர் அடிமையாய் விற்கப்பட்டவர். பெரும் பணக்காரப் பெண்மணியான காலிஸ்டோ இவரை அடிமையாக வாங்கினார். அடிமை வேலைகளைச் செய்து வந்த போலிகார்ப்பின் நேர்மையையும், உண்மையையும், அன்பையும் கண்டு வியந்த காலிஸ்டோ, தன்னுடைய சொத்துகளை எல்லாம் அவருக்கு எழுதி வைத்தார்.

காலிஸ்டோவின் மரணம் போலிகார்ப் ஐ ஒரு மிகப்பெரிய செல்வந்தராக்கியது. இவர் கிறிஸ்தவ மதத்தின் மீது ஆழமான பற்றுறுதி கொண்டிருந்தார். சிமிர்னா பகுதியில் கிறிஸ்தவத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார் அவர்.

இவருக்கும் ரோமையிலுள்ள திருச்சபைத் தலைமைக்கும் கருத்து வேறுபாடு வந்தது. இயேசுவின் உயிர்ப்பு தினம் அந்த குறிப்பிட்ட நாளில் தான் கொண்டாட வேண்டும் எனும் எண்ணத்தை போலிகார்ப் வலியுறுத்தினார்.

ஆனால் எல்லா ஆண்டும் ஞாயிற்றுக் கிழமை தான் அதை நினைவு கூர வேண்டும் என்பது ரோமை திருச்சபையின் எண்ணமாய் இருந்தது. இந்த விவாதம் அந்த காலகட்டத்தில் கிறிஸ்தவத்தில் எழுந்த முக்கியமான விவாதமாகக் கருதப்படுகிறது.

ஆண்டோனியஸ் பையஸின் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் போலிகார்பைக் கைது செய்யத் தேடினார்கள். அவர் பக்கத்து ஊருக்குச் சென்று பதுங்கினார்.

போலிகார்ப் ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அதில் அவருடைய தலையணை தீப்பற்றி எரிந்தது. கடவுளிடம் மன்றாடிய அவருக்கு கனவின் பொருள் விளங்கியது. தான் எரித்துக் கொல்லப்படப் போவதன் அறிகுறியே அது என அறிந்தார்.

அதே நேரத்தில் அரசனின் வீரர்கள் அவரைத் தேடி அலைந்தார்கள். ஆனால் அவருடைய ஆதரவாளர்கள் அவரைக் காட்டிக் கொடுக்கவில்லை. கடைசியில் மன்னன் போலிகார்ப்பின் இருப்பிடம் தெரிந்த இருவரைப் பிடித்து சித்திரவதை செய்தான்.

சித்திரவதையைத் தாங்க முடியாத ஒருவன் அவருடைய மறைவிடத்தைச் சொன்னான். படைவீரர்கள் அவருடைய வீட்டை அடைந்தனர். நடப்பதெல்லாம் இறை சித்தம் என்று உறுதியாக நம்பிய போலிகார்ப் மாடியிலிருந்து இறங்கி வந்து அவர்களுடன் உரையாடினார்.

அவருடைய உறுதியைக் கண்டு படைவீரர்கள் வியந்து போனார்கள். அவர் அவர்களுடன் உரையாடினார். பின்னர் தனக்கு செபிக்க சிறிது நேரம் தருமாறு கேட்டுக் கொண்டார். படை வீரர்களும் அவரை செபிக்க அனுமதித்தனர். இரண்டு மணி நேரம் நின்றவாறே செபித்தார் அவர்.

போலிகார்ப் மன்னனிடம் அழைத்துச் செல்லப்பட்டார். போலிகார்ப்பின் உறுதி மன்னனையும் கூட இருந்தவர்களையும் வியப்பிலாழ்த்தியது.

‘மன்னனை வணங்கி தூப ஆராதனை செய். உன்னை விடுவிப்போம்’ போலிகார்ப்பிடம் அவர்கள் சொன்னார்கள்.

‘நான் உங்கள் விருப்பப்படி நடப்பவன் அல்ல’ போலிகார்ப் உறுதியாகப் பதிலளித்தார்.

அவரை பயமுறுத்தி, காயப்படுத்தினார்கள். அவர் அசரவில்லை. விளையாட்டு அரங்கத்திற்கு அவரை வண்டியில் கொண்டு சென்று வழியிலேயே அவரை கீழே தள்ளினார்கள். அப்போதும் அவர் எதுவும் நடவாதவர் போல சிரித்துக் கொண்டே இருந்தார்.

மன்னன் அவரைப் பார்த்தார். அவருடைய வயதையும் கவனித்தார்.

‘இந்த வயதில் உனக்கு என்ன இத்தனை பிடிவாதம். நீ என்னை வணங்கவேண்டாம். கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் கடவுள் இல்லாதவர்கள் என்று மட்டும் சொல் உன்னை விடுவிப்பேன்’ என்றான். போலிகார்ப் சிரித்தார்.

எண்பத்து ஆறு ஆண்டுகள் கடவுளுக்காகப் பணிபுரிந்தேன். அந்த கடவுளை எப்படி நான் இழிவாகப் பேச முடியும். அவர் உண்மையான கடவுள் என்றார்.

‘நீ கிறிஸ்தவர்களை பழிக்காவிடில் உயிரை இழப்பாய்’ மன்னன் எச்சரித்தான்

‘கிறிஸ்தவர்களைப் பழிப்பது என்பது கிறிஸ்துவைப் பழிப்பது போல. அதை விட உயிரை இழப்பதே மேல்’ போலி கார்ப் சொன்னார்.

‘உன்னை காட்டு மிருகங்களுக்கு உணவாகப் போடுவேன் அல்லது எரித்துக் கொல்லுவேன்’ மன்னன் கோபமடைந்தார்.

‘செய்ய வேண்டியதை விரைவிலேயே செய்ய வேண்டியது தானே ? ஏன் இன்னும் தாமதம்’ போலிகார்ப் சொன்னார்.

சுற்றியிருந்த மக்கள் “இவனை எரித்துக் கொல்லுங்கள்” என்று கத்தினார்கள்.

மன்னனும் இசைந்தான்.

எரிப்பவர்களை மரத்தில் கட்டி கைகளை ஆணிகளால் அறைந்து தீ வைப்பது அவர்களின் வழக்கம். போலிகார்ப்பும் மரத்தில் கட்டப்பட்டார். ஆணிகளால் அவருடைய கையை அடிக்க முனைந்தபோது அவர் தடுத்தார்.

என் கைகளை ஆணிகளால் அறைய வேண்டாம். நான் எந்த நெருப்புக்கும் அசையாத உறுதியை கடவுள் தருவார். என்றார்.

போலிகார்ப்பின் உறுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவர் கைகளில் அவர்கள் ஆணி அடிக்கவில்லை.

அவரைக் கட்டி வைத்தபின் அவரை எரித்தார்கள். அவர் அசையாமல் செபநிலையிலேயே நின்றார். அவரை ஈட்டியாலும் குத்தினார்கள். போலிகார்ப்பின் உயிர் பிரிந்தது. அவர் மரணமடைந்த ஆண்டு 155 பெப்பிரவரி 23.

மார்கஸ் அரேலியஸ் மன்னன் கிபி 161 முதல் 180 வரை ரோம் அரசராக இருந்தான். இவனுடைய ஆட்சிக்காலமும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைக் கட்டவிழ்ப்பின் அரசாகவே இருந்தது.

இவனுடைய பார்வையில் கிறிஸ்தவர்கள் என்பவர்கள் பிடிவாதகாரர்கள். எது சொன்னாலும் கேட்காதவர்கள். தன்னுடைய பேச்சைக்கேட்காத யாரையும் அரசர்களுக்குப் பிடிப்பதில்லையே. அதுவே தான் நடந்தது இந்த மன்னனின் ஆட்சியிலும்.

இவர் காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் ஜஸ்டின் மார்டர் என்பவர். இவர் சிறந்த தத்துவ ஞானி. கற்றறிந்தவர். தன்னுடைய கல்வியினாலும் ஞானத்தினாலும் கிடைக்காத மன நிம்மதி கிறிஸ்தவத்தில் இணைவதில் கிடைக்கப் பெற்றார்.

எனவே இவர் பல கிறிஸ்தவ நூல்களை இயற்றி மக்களுக்கு கிறிஸ்தவ மதத்தைக் குறித்த புரிதலுக்கு வழி வகுத்தார். கிறிஸ்தவ மதம் சார்ந்த கோட்பாடுகளை விவாதத்தின் மூலம் பரப்பினார். இவருடைய வேகமான போதனையினால் பலர் கிறிஸ்தவர்களானார்கள்.

ரோம அரசன் எரிச்சலடைந்தான். ஜஸ்டினைக் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.

ஜஸ்டின் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின. ஜஸ்டின் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டார்.

ஜஸ்டின் தைரியமாய் நின்றார். நடுவர் அவரை நோக்கி கேள்வியை வீசினார்.

‘நீ உயிர்த்தெழுவாய் என நினைக்கிறாயா ?’

‘நினைக்கவில்லை. உண்மையிலேயே நடக்கும் என்பது எனக்குத் தெரியும்’ ஜஸ்டினின் பதில் அவர்களை எரிச்சலடையச் செய்தது. அவருக்கு எதிராக தீர்ப்பு எழுதப்பட்டது.

‘சம்மட்டியால் அடித்து இவனுடைய தலையை சிதையுங்கள்’ குரூரமான ஆணையைக் கேட்டு ஜஸ்டின் கலங்கவில்லை. தைரியமாய் நின்றார்.
சம்மட்டிகள் அவருடைய தலையை பிளந்தன. சிதைத்தன. ஜஸ்டின் விசுவாசத்தை விட்டு விலகாமல் உயிர் விட்டார்.

பிலாண்டினா எனும் பெண்மணி ஒருத்தியும் மார்கஸ் அரேலியஸ் காலத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவரும் கிறிஸ்தவ மதத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதால் அரசனின் ஆணைகளைப் புறக்கணித்தவர். கிறிஸ்தவ மத பிரச்சாரங்களில் ஈடுபட்டதால் இவர் கொலை செய்யப்பட்டார்.

பழுக்கக் காய்ச்சிய இரும்பு நாற்காலியில் உட்கார வைத்து பின்னர் கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போடப்பட்டார். எரிந்தும், கிழிந்தும் உயிர்விட்டார் பிலாண்டினா.

கமோடஸ் என்னும் மன்னன் அதன்பின் ஆட்சிப் பொறுப்பேற்று கி.பி 191 வரை ஆட்சி புரிந்தான். தன்னுடைய பதினெட்டாவது வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கமோடஸ் தந்தை மார்கஸ் அரேலியசைப் போலன்றி சற்று நிதானமாய் இருந்தார்.

இவருடைய மனைவி மார்சியா கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். எனவே இவரிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு சற்று விடுதலை கிடைத்தது. கிறிஸ்தவர்கள் அதிக துன்பங்களைச் சந்திக்கவில்லை.

இதே காலகட்டத்தில் ஆப்பிரிக்காவில் பலர் கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் நடந்தன. நுமீதியாவிலுள்ள சிலியில் பன்னிரண்டு பேர் கிறிஸ்தவர்கள் என்பதால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் ‘சிலியின் இரத்த சாட்சிகள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
இரண்டாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள்

இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் தன்னுடைய ஆளுமையை வளர்த்துக் கொண்டது. நிர்வாக அமைப்பைப் போல பேராயர்கள், துணை ஆயர்கள், டீக்கனார் என பல அடுக்கு தலைமைகள் உருவாக்கப்பட்டன.

திருச்சபை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வன்முறைகளைச் சந்தித்து வந்ததால் இந்த அமைப்பு ரீதியின் தேவை அதிகரித்தது. மேலும் இந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட கிறிஸ்தவ இலக்கியங்களைப் பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிறிஸ்தவ வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த அப்போஸ்தலர்களின் நூல்களுக்கு மாற்றாக இந்த நூற்றாண்டில் மார்சியன் தன்னுடைய நூல் ஒன்றை வெளியிட்டார். எனவே இக்காலகட்டத்தில் எவையெல்லாம் திருச்சபைகளில் பயன்படுத்தப்பட வேண்டும் எனும் வரை முறை கொண்டு வரப்பட்டது.

கிறிஸ்தவர்களுடைய அணுகுமுறையும், வாழ்க்கை முறையும் பலரால் வியப்புடன் பார்க்கப்பட்டன. கி.பி 125ல் அரிஸ்டைடிஸ் என்பவர் எழுதிய நூலில் கிறிஸ்தவத்தைப் பற்றி மிகவும் வியந்து எழுதியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபடாமல் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறார்கள். விபச்சாரப் பாவத்தைச் செய்வதில்லை. பொய்சாட்சி சொல்ல மறுக்கிறார்கள். பெற்றோரைப் பெருமையுடனும் அன்புடனும் நடத்துகிறார்கள். மனத்தாழ்மை, அன்பு இவற்றைக் கடைபிடிக்கிறார்கள். தன்னை விடத் தாழ்ந்தவர் என்று யாரையும் அவர்கள் நினைப்பதில்லை. அடிமைக்கும், மன்னனுக்கும் ஒரே கவுரவத்தைத் தருகிறார்கள். அவர்கள் இறைவனை எல்லா நிகழ்வுகளுக்கும் புகழ்கிறார்கள். எனவே தான் பூமி செழிக்கிறது. என்று அவர் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார்.

கார்தேஜ் என்னும் நாட்டில் பிளேக் நோய் பரவியபோது மற்ற அனைத்து சமூகத்தினரும் விலகினார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் அவர்களோடு இருந்து அவர்களுக்கு பணிவிடை செய்தனர்.

கேலிஸ்டன் என்பவர் அடிமையாய் இருந்தவர். அவர் கிறிஸ்தவத்தைத் தழுவியபின் பேராயராக மாறினார். எனவே கிறிஸ்தவத்துக்குள் சமத்துவம் நிலவியது என்பதை உணர முடிகிறது.

ரோம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் அறுபது சுரங்கக் கல்லறைகளில் பல செய்திகள் காணக் கிடைக்கின்றன. கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரை இழந்தவர்களுடைய கல்லறைகளில் கிறிஸ்துவுக்காய் துன்பப்பட்டவர்கள் என எழுதப்பட்டுள்ளது.

தோளில் ஆட்டுக்குட்டியைச் சுமக்கும் இயேசுவின் படம் இந்த கல்லறைகளில் காணப்படுவது வியப்பு தருகிறது. பாய்மரக்கப்பல், திராட்சைக் கொடி, மீன், நங்கூரம் போன்ற பல சித்திரங்கள் இந்த குகைகளில் காணக் கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கும் வழக்கம் இந்த நூற்றாண்டிலேயே இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. மேலும் திருமுழுக்கு எளிதாகக் கொடுக்கப்படாமல் அதற்குரிய சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்பட்ட பின்பே அளிக்கப்பட்டிருக்கின்றன.

கோதுமை அப்பமும் திராட்சை இரசமும் திருப்பலிகளில் நன்கொடையாக வழங்கப்பட்டன. பின் அவை சபையோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பாவ மன்னிப்பு வழக்கம் இருந்தது. மற்றவர்களை மன்னிப்பதன் அடையாளமாக சமாதான முத்தம் இடும் வழக்கமும் இருந்தது.

இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் தான் கிறிஸ்தவர்கள் ஆலயங்களைக் கட்டி வழிபாடு ஆரம்பித்தனர். யூதர்களுடைய ஆலயங்களில் ஆலயத்துக்கு வெளியே கைகளைக் கழுவ தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த வழக்கம் அன்றைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் காணப்பட்டது.

கிறிஸ்து பிறப்பு விழா, உயிர்ப்பு விழா, தூயவர்கள் மணமடைந்த விழா என பல விழாக்கள் இரண்டாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டிருக்கின்றன.

மூன்றாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்

செப்டிமஸ் செவேரஸ் என்பவர் மூன்றாம் நூற்றாண்டின் முதல் மன்னன். கி.பி 211 வரை இவருடைய ஆட்சி இருந்தது. இவருடைய ஆட்சி துவக்கத்தில் நல்ல ஆட்சி போல தோற்றமளித்தது. ஆனால் போகப் போக அவருடைய குணம் மாறியது.

கிறிஸ்தவர்களின் துன்பம் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் எகிப்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கும் பல விதமான சோதனைகள் நேர்ந்தன. இவருடைய ஆட்சி காலத்தில் கார்த்தேஜில் பலர் கிறிஸ்தவத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டனர்.

கார்தேஜில் இவருடைய காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் பெர்பெத்துவா மற்றும் பெலிசிட்டாஸ் எனும் இரண்டு பெண்கள் மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் தங்களுடைய விசுவாசத்தை விட மறுத்ததால் கொலை செய்யப்பட்டனர்.

பெர்பெத்துவா நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவளுடைய இருபத்து இரண்டாவது வயதில் கிறிஸ்தவத்தில் ஆழப் பதிந்திருந்தாள். திருமணமாகி குழந்தை ஒன்றுக்குத் தாயானவள். உலகில் எதையும் விட இயேசுவே வேண்டும் என்பதில் உறுதியாய் நின்றாள்.

காவலர்கள் கையில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது அவளுடைய மனதை மாற்ற தந்தையார் பல முறை பல வழிகளில் முயன்றார். ஆனால் எதுவும் பயன் தரவில்லை.

சிறைச்சாலையில் பலவிதமான சித்திரவதைகளுக்கு உட்பட்டு இறுதி மூச்சு வரை இயேசுவை மறுதலிக்காமல் விசுவாசத்தில் நிலைத்து நின்றார்.

பெலிசிட்டாஸ் ஒரு அடிமைப் பெண். அவளும் திருமணமாகி எட்டு மாத கர்ப்பிணியாய் இருக்கையில் காவலர்களிடம் பிடிபட்டாள். கிறிஸ்துவை மறுதலி, உனக்கு விடுதலை. உன் குழந்தையுடன் நீ ஆனந்தமாய் வாழலாம். காவலர்கள் கூறினர்.

கிறிஸ்துவை மறுதலித்து வாழ்வதை விட, கிறிஸ்துவுக்காய் உயிரை விடுதல் சிறந்தது என்று விசுவாசத்தில் நிலைத்து நின்றாள் பெலிசிட்டாஸ்.

இறுதியில் இருவரும் முரட்டுத்தனமான மாடுகளுக்கு முன்பாகப் போடப்பட்டார்க. விலங்குகள் இவர்களை மிதித்து, இடித்து சித்திரவதை செய்தன. இறுதியில் இவர்கள் இருவரையும் குத்திக் கொன்று விட்டனர்.
செப்டிமஸ் செவேரஸ்க்குப் பின் தேசியு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர் கி.பி249 முதல் 251 வரை ஆட்சி செய்தார். இவர் கிறிஸ்தவக் கொள்கைகள் அரசுக்கு எதிரானவை எனும் கண்ணோட்டத்தில் கிறிஸ்தவத்தை முழுமையாக எதிர்த்தார்.

இவர் காலத்தில் தங்கள் உடமைகளையும், உயிரையும் இழந்தவர்கள் அனேகர். ரோம் நகரில் ஃபேபியன், அந்தியோக்கியாவில் பாபிலாஸ், எருசலேமில் அலெக்சாண்டர், சிமிர்னாவில் பயோனியஸ் ஆகியோர் இந்த காலகட்டத்தில் உயிரிழந்த மிகவும் முக்கியமான நபர்கள் ஆவர்.

அதன்பின் வெலேரியன் மன்னன் கிபி 260 வரை ஆட்சி செய்தார். அதுவும் மற்ற மன்னர்களின் ஆட்சிபோல கிறிஸ்தவர்களை வெறுக்கும் அரசாகவே இருந்தது.

அலீரியன் மன்னன் கிபி275 வரை ஆட்சி செய்தார். அதன்பின் டியோக்ளேஷியன் என்னும் மன்னன் ஆட்சிக்கு வந்தான். இவனுடைய காலத்தில் கிறிஸ்தவர்கள் பல மட்டங்களிலும் ஊடுருவியிருந்தார்கள்.

அரண்மனையில் மன்னனின், மனைவியும் மகளும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். அரண்மனைப் பணியாளர்களிலும் பலர் கிறிஸ்தவர்களாய் இருந்தார்கள். எனினும் கிறிஸ்தவர்களின் மீதான வெறுப்பு மன்னனுக்குக் குறையவில்லை.

இவனுடைய ஆட்சி காலத்தின் நான்கு முக்கியமான உத்தரவுகளை மன்னன் பிறப்பித்தான். இந்த நான்கு உத்தரவுகளுமே பல்வேறு காலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்தன.

முதலாவது உத்தரவின் மையம் கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்படவேண்டும், கிறிஸ்தவ மத நூல்கள் கொளுத்தப்படவேண்டும் என்றிருந்தது. கிறிஸ்தவர்களுக்கு பணிகளில் கீழ் நிலை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் அடிமை நிலைக்கு தாழ்த்தப்பட வேண்டும் என்றும் ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கட்டளையை எதிர்த்த கிறிஸ்தவர்கள் எரிக்கப்பட்டனர்.

இரண்டாவது உத்தரவு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அனைத்து குருக்களும் கொல்லப்படவேண்டும் எனும் கடுமையான உத்தரவாய் இருந்தது. இந்த உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டபோது அனைத்து சிறைச்சாலைகளும் குருக்களால் நிறைந்து வழிந்தன.

மூன்றாவது உத்தரவும் கிறிஸ்தவர்களை மிரட்டி ஆசைகாட்டியது. அதில் கிறிஸ்தவர்கள் பிற தெய்வங்களுக்குப் பலியிடவும், ஆராதனை செய்யவும் சம்மதித்தால் விடுதலை உண்டு என்றும், சமூக அந்தஸ்து உயர்த்தப்படும் என்றும் உறுதி தரப்பட்டது. பலி செலுத்தும்படியாக கிறிஸ்தவர்கள் பலவந்தப்படுத்தப்பட வேண்டும், வன்முறைகளினால் அவர்களை வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அந்த உத்தரவு போதித்தது.

நான்காவது உத்தரவு கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறியது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அரசு நிலையிலிருந்து ஏற்பட்ட விரோதம் போல பொதுமக்களிடமிருந்து கோபம் எழவில்லை. பல இடங்களில் கிறிஸ்தவர்கள் பரவியிருந்ததாலும், கிறிஸ்தவர்களால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏதும் நிகழாததாலும் பொது மக்களிடம் கிறிஸ்தவர்களை எதிர்க்கும் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.

மூன்றாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள்
மூன்றாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் சந்தித்த வன்முறை இரண்டாம் நூற்றாண்டில் சந்தித்ததை விட மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். கிறிஸ்தவம் பல இடங்களுக்குப் பரவியதும், கிறிஸ்தவர்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எண்ணம் பொய்யாய் போனதும் இதன் காரணமாக இருக்கலாம்.

கிறிஸ்தவம் ஒரு அமைப்பு ரீதியாக சற்று பலப்படத் துவங்கியது. சபையில் வெளியிலிருந்து வரும் இன்னல்களை மீறி உள்ளுக்குள்ளேயே கருத்து மோதல்கள் எழுவது சகஜமாயிற்று.

கிறிஸ்தவத்தில் முதல் நூற்றாண்டில் இருந்த பற்றுறுதி உடைபடத் துவங்கியது. கிறிஸ்துவுக்காக இறப்பது நல்லது எனும் சிந்தனை இருந்தாலும் அது வலுவிழந்ததாய் காணப்பட்டது. பலர் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள கிறிஸ்தவத்துக்கு எதிராக பேசிய நிகழ்வுகளும், பின் வாங்கிய நிகழ்வுகளும் நடந்தன.

இதன் முக்கியமான காரணம் இயேசுவின் இரண்டாம் வருகை நிகழவில்லை என்பதே. பலர் இயேசு உயிர்த்த சில ஆண்டுகளிலேயே இயேசுவின் இரண்டாம் வருகை வரும் என்று நம்பினார்கள். அது இந்த காலத்தில் பொய்க்கத் துவங்கியது. இரண்டாம் வருகையைக் குறித்த நம்பிக்கைகள் மறையத் துவங்கின.

பாவ மன்னிப்பு என்பது சபையில் அனைவரிடமும் சொல்ல வேண்டும் எனும் நிலை மாறி குருவானவரிடம் மட்டுமே சொல்ல வேண்டும் எனும் நிலை உருவானது இந்த நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றாகும்.

குருக்கள் பெரும்பாலும் மணமாகாதவர்களாகவே இருந்தார்கள். இயேசு திருமணம் செய்து கொள்ளவில்லை எனவே குருக்களும் திருமணம் செய்யக் கூடாது எனும் எண்ணம் வலுவாய் இருந்தது.

உயிருக்குப் பயந்து கிறிஸ்துவை மறுதலித்தவர்களை மீண்டும் கிறிஸ்தவத்தில் சேர்த்துக் கொள்வது தேவையா எனும் விவாதம் எழுந்தது. சரி என்றும், தவறு என்றும் இருபிரிவினர் வாதிட்டனர். ரோம் திருச்சபை மன்னித்தல் இறைவனின் வரம் எனவே மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என உறுதியாய் கூறியது.

ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டவர்கள் நோவேட்டஸ் என்பவரின் தலைமையில் தனி பிரிவாக இயங்கினர். இந்த பிரிவினர் ஐந்தாம் நூற்றாண்டுவரை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

கிறிஸ்துவுக்காக இறப்பவர்கள் மரியாதை செலுத்தப்பட்டன. அவர்கள் விண்ணகத்தில் இயேசுவோடு இருக்கிறார்கள் என்றும் அவர்கள் மூலமாக இறைவனிடம் வேண்ட முடியும் என்னும் சிந்தனைகளும் பரவின. எனவே மக்கள் விண்ணப்பங்களையும் இரத்த சாட்சிகளாய் மரித்தவர்களிடமும் வைத்தனர்.

திருமுழுக்கு கொடுப்பதில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. திருமுழுக்கின் போது நெற்றியில் சிலுவை அடையாளம் இடுதல், வெள்ளை உடை அணிதல் போன்ற இன்றைய முறை இந்த நூற்றாண்டில் தான் ஆரம்பித்தது.

திருப்பலியில் வழங்கப்படும் திராட்சை இரசமும், கோதுமை அப்பமும் இயேசுவின் இரத்தமாகவும் உடலாகவும் இருக்கிறது எனும் சிந்தனை ஆழமாய் பரவியிருந்தது. நற்கருணை வழிபாடுகள் முக்கியத்துவம் அடைந்தன. இயேசு சிலுவையில் பலியானதன் தொடர்ச்சி நற்கருணை வழிபாட்டால் கிடைக்கிறது எனும் நம்பிக்கையும் கிறிஸ்தவத்தில் இருந்தது.

நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்

நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் மேலும் பல கருத்து வேறுபாடுகளைச் சந்தித்தது. டொனேட்டிசம் மற்றும் அரியானிஸம் என்பவை இந்த நுற்றாண்டில் நோன்றிய இரண்டு முக்கியமான பிரிவுக் குழுக்களாகும்.

டொனேட்டிசம் மென்சூரியஸ் என்பவரை மையப்படுத்தி உருவானது. துன்ப நாட்களில் பல குருக்கள் கிறிஸ்தவ நூல்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர். அவர்களை கிறிஸ்தவத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டது.

அந்த நாட்களில் கிறிஸ்துவுக்காய் இறப்பது மிகப்பெரும் பெருமைக்குரிய செயலாக இருந்தது. எனவே பலர் தாமாகவே முன்வந்து மரணத்தை ஏற்றுக் கொண்டனர். இதை மன்சூரியஸ் எதிர்த்தார். இப்படி இறப்பவர்களுக்கு மரியாதை செலுத்தப் படக் கூடாது என்று அறிவித்தார்.

அரியானிஸம் அரியன் எனும் குருவானவரால் உருவாக்கப்பட்டது. இவர்களுடைய கொள்கைப்படி கடவுள் துவக்கமும், முடிவும் இல்லாமல் முழுமையானவர். ஒரே கடவுள். அவருடைய தன்மை பகிரும் தன்மையோ, உருமாறும் தன்மையோ அல்ல.

எனவே இயேசு கடவுள் அல்ல. அவர் கடவுளிடம் நேரடியாய் பேச முடியாதவர். தன்னுடைய வாழ்க்கை முறையை ஒத்தே அவருக்கு கடவுளிடமுள்ள அருள் இருக்கும் என்று போதித்தார்.

இவருடைய இந்த கொள்கை ஒட்டு மொத்த கிறிஸ்தவ நம்பிக்கைக்கே இடையூறாக விளங்கியது. எனவே கி.பி 321ல் எகிப்தில் கூடிய பேராயர் பேரவை இவரை கிறிஸ்தவ மதத்தை விட்டு வெளியேற்றியது.

இந்த பிளவை சரிசெய்வதற்காக கான்ஸ்டண்டைன் மன்னன் கூட்டிய முதல் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் நிசியாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

உலகின் பல இடங்களிலிருந்தும் வந்திருந்த முன்னூறு பேராயர்கள் பல முக்கிய முடிவுகளை இங்கே எடுத்தனர். இந்தியாவிலிருந்தும் ஒரு பேராயர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இயேசுவின் கடவுள் தன்மையை உறுதி செய்து அதற்குரிய விசுவாச பிரமாணங்கள் தயாராக்கப்பட்டன.

இயேசு கடவுளைப் போல அதே தன்மையுடையவர் எனும் கருத்து வலிமைப்படுத்தப் பட்டது. அரியானிஸம் கொள்கை நிராகரிக்கப்பட்டது. அவரை மதம் வெறியேற்றியதுடன் அவருடைய நூல்களையும் எரித்தது.

இந்த கூட்டத்தில் மேலும் பல முக்கிய தீர்மானங்கள் ஒத்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டன. இயேசுவின் உயிர்ப்பு விழா ஒரு ஞாயிற்றுக் கிழமை தான் கொண்டாடப்பட வேண்டும் எனவும், திருச்சபைகளில் பல சட்டதிட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப் பட்டன.

அதன் பின் வந்த பல மன்னர்கள் நிசியா குழுவை எதிர்ப்பவர்களாக இருந்தனர். குறிப்பாக 337ல் அரசரான காண்டாண்டியஸ் நிசியா கொள்கைக்கு எதிராக தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அரியானிஸம் கொள்கையை நிலைப்படுத்த முயன்றார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை.

இதன்பின் 361ல் ஆட்சிக்கு வந்த ஜூலியன் மன்னன் கிறிஸ்தவத்தையே விரட்டி விட முயற்சி எடுத்து தோல்வியடைந்தார். 371ல் ஆட்சிக்கு வந்த தியோடோசியஸ் மன்னன் தான் நிசியா பொதுக்குழிவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு முழு ஆதரவு கொடுத்தார்.

நிசியா விசுவாசப் பிரமாணம் என்று அழைக்கப்பட்டு இன்றும் ஆலயங்களில் வாசிக்கப்படும் விசுவாசப்பிரமாணம் கிபி 381ல் கான்ஸ்டாண்டினோ புரியில் கூட்டப்பட்ட குழுவில் தயாராக்கப்பட்டது.

அப்போலிநரியானிஸம் என்று இன்னொரு கொள்கையும் இந்த காலகட்டத்தில் தோன்றியது. இதன்படி இயேசு உண்மையில் மனிதரல்ல. அவருக்குள் இருந்தது மனித ஆன்மா அல்ல. அது வார்த்தை. மட்டுமன்றி பரிசுத்த ஆவியானவருக்கு எந்த விதமான தெய்வத் தன்மையும் இல்லை.

இந்த கொள்கை பெருமளவில் பரவவில்லை. இதை கிறிஸ்தவம் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
நான்காம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள்

நான்காம் நூற்றாண்டில் திருச்சலை அரசியல் நிகழ்வுகளோடு இணைந்து விட்டது. அரசின் வெறுப்பு ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவர்கள் பக்கம் குவிந்திருந்த காலம் மறைந்து போயிருந்தது.

இந்த நூற்றாண்டில் சில முக்கியமான கிறிஸ்தவ அடிப்படை எண்ணங்கள் வலுப்பெற்றன. குருக்கள் திருமணமாகாதவர்களாக இருப்பதே சிறந்தது எனும் மூன்றாம் நூற்றாண்டுச் சிந்தனை இந்த நூற்றாண்டில் வலுவடைந்து பெரும்பாலானவர்களின் அங்கீகாரத்துக்கு வந்தது.

திருப்பலிகளில் வழங்கப்படும் அப்பமும், திராட்சை இரசமும் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் இருக்கிறது எனும் சிந்தனையும் வலுவடைந்தது.

இயேசுவுக்காய் பாடுகள் பட்டு இறந்தவர்களை நோக்கி விண்ணப்பம் வைக்கும் வழக்கமும் தீவிரமடைந்தது. சிலர் இத்தகைய புனிதர்களை வணங்கவும் ஆரம்பித்தனர். எனவே இந்த காலகட்டத்தில் இரத்தசாட்சியாய் இறந்தவர்கள் விண்ணக தூதர்கள் போல கௌரவிக்கப்பட்டனர்.

மிகப்பெரிய பிரம்மாண்டமான ஆலயங்கள் இந்த நூற்றாண்டில் தான் கட்டப்பட்டன. நிக்கோதேமியாவில் இந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் அரண்மனை போல அற்புதமாய் விளங்கியது என குறிப்புகள் தெரிவிக்கின்றன

எருசலேம், பெத்லேகேம், ரோம் போன்ற இடங்களிலும் சிறப்பான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டன. கிறிஸ்தவ மதம் சமூகத்திலுள்ள பிற மதங்களோடு இணைந்து தனித்துவம் பெற்ற மதமாக எங்கும் பரவத் துவங்கியது.

கருங்கடலுக்கு வட கிழக்கே அமைந்திருந்த ஜியார்ஜியா நாடு கிறிஸ்தவ நாடானது. ஒரு கிறிஸ்தவ அடிமைப் பெண்ணின் ஜெபத்தினால் அந்த நாட்டு அரசி சுகமானதே இதன் காரணமாயிற்று.

அர்மீனியா நாடும் அந்த காலத்தில் கிறிஸ்தவ நாடானது. அதற்கு அந்த நாட்டு இளவரசன் கிரிகோரியே காரணமானார். அந்த நாட்டிலுள்ள பல ஆலயங்கள் கிறிஸ்தவக் கோயில்களாக மாற்றப்பட்டன.

பாரசீகத்திலும் நான்காம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் கிறிஸ்தவம் மிகவும் செழுமையுடன் காணப்பட்டது. ஆனால் நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கிறித்தவர்களுக்கு அங்கே பெரும் இன்னல் காத்திருந்தது. அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அவர்களுடைய பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

ஆயிரத்து அறுநூறு கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தின் காரணமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்த மக்கள் சிரிய மொழியைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் அங்கிருந்து பின்னர் இந்தியா வந்து மலபார் சபையில் இணைந்திருக்கலாம் என்றும். இவர்கள் மூலம் சிரியன் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அரேபியா நாட்டிற்கும் கிறிஸ்தவம் கொண்டு செல்லப்பட்டது. கிறிஸ்தவ துறவியர் அதற்காக அரேபியப் பாலைவனங்களில் பயணித்து பலருக்கு சுகமளித்தனர்.