Posted in JESUS Kaaviyam

இயேசுவின் கதை – கவித்துவம் நிறைந்த மொழி – என்.சொக்கன்

இயேசுவின் கதை – கவித்துவம் நிறைந்த மொழி

– என்.சொக்கன்


சங்க காலத்தில் தொடங்கி, பெரும்பான்மைக் கதைகள் / காவியங்கள் கவிதை நடையிலேயே சொல்லப்பட்டுவந்தபோதும், புதுக்கவிதை என்கிற விஷயம் அறிமுகமானபிறகுதான், கவிதைகளின் நோக்கம் கதை அல்லது சம்பவங்களைச் சொல்வது(மட்டும்)தானா என்கிற சந்தேகம் எழுந்து, இன்றுவரை தீராமலேயே இருக்கிறது.

இந்தச் சந்தேகத்தின் நீட்சியாகவே, புதுக் கவிதைகளில் காவியங்கள் எழுதப்படமுடியுமா, எழுதப்படவேண்டுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல சிந்தனையாளர்கள் கருத்துகளை முன்வைத்துள்ளார்கள்.

மரபுக் கவிதைகளோடு ஒப்பிடுகையில், புதுக் கவிதைகள் கதை சொல்வதைக்காட்டிலும், சிந்தனை அல்லது உளவியல் ஓட்டங்களைப் பதிவு செய்வதற்குதான் அதிகப் பொருத்தமானவையாகத் தோன்றுகின்றன. எனினும், வைரமுத்துவின் ‘கவிராஜன் கதை’, ‘சிகரங்களை நோக்கி’, ‘தண்ணீர் தேசம்’ உள்ளிட்ட படைப்புகள், இந்த இரண்டுக்கும் இடையிலான மெல்லிய கயிற்றில் சாமர்த்தியமாக நடந்து சென்றிருக்கின்றன.

சேவியர் எழுதியுள்ள, ‘இயேசுவின் கதை’ நூல், தலைப்பிலேயே தனது நோக்கத்தைத் தெளிவாகப் பிரகடனப்படுத்திவிடுகிறது. இயேசுபெருமானின் வாழ்க்கையை எல்லோரும் வாசித்துப் புரிந்துகொள்ளும்வண்ணம் புதுக்கவிதையில் பதிவு செய்யவேண்டும் என்கிற எண்ணத்துடன், எளிய வார்த்தைகளில் தெளிவான நீரோடைபோன்ற கதையோட்ட பாணியைப் பயன்படுத்தியிருக்கிறார் கவிஞர்.

1982ல் கவியரசர் கண்ணதாசன், இதே நோக்கத்துடன், ‘இயேசு காவியம்’ என்கிற நூலை எழுதினார். அதிலிருந்த பெரும்பான்மைக் கவிதைகள், அற்புதமான சந்த நயத்துடனும், இசைப் பாடல்களுக்குரிய நளினத்துடனும் அழகுற அமைந்திருந்தன. அதேசமயம், வாசகனைச் சிரமப்படுத்தாத எளிய மொழியால் அந்தப் புத்தகம் லட்சக் கணக்கான வாசகர்களைச் சென்று சேர்ந்தது.

கிட்டத்தட்ட அந்தக் காவியத்தின் தொடர்ச்சிபோலவே, சேவியரின் இந்தப் புத்தகம் அமைந்திருப்பது ஆச்சரியம்தான். தொடர்ச்சி என்றால், கதையளவில் அல்ல, மதப் புத்தகங்களில்மட்டும் பேசப்பட்ட இயேசுவின் கதையை, எல்லோருக்கும் புரியும்படி எளிய தமிழில் எழுதினார் கண்ணதாசன், கால் நூற்றாண்டு காலத்துக்குப்பிறகு, இன்றைய மொழியில் அதை மேலும் எளிமைப்படுத்தித் தந்திருக்கிறார் சேவியர்.

அதேசமயம், எளிமைக்காகச் சொல்லவந்த விஷயம் நீர்த்துப்போய்விடாமலும் பார்த்துக்கொண்டிருப்பதுதான் கவிஞருடைய சாமர்த்தியம். இயேசுவின் வாழ்க்கையைச் சம்பவங்களின் பட்டியலாக விவரிக்காமல், பிரசாரம் செய்கிற தொனியும் தலைகாட்டாமல், ஜனங்களுக்கான கவிதையின் சகல பலங்களையும் பயன்படுத்திக்கொண்டு வெற்றியடைந்திருக்கிறது இந்நூல்.

ஆனால், அனைவருக்கும் சுலபத்தில் புரியும்படி சொல்வதுதான் ஒரே நோக்கம் என்றால், அதற்காகக் கவிதையைத் தேர்வு செய்யவேண்டிய அவசியம் என்ன? நேரடியாகக் கதையாகவோ, உரையாடல் அல்லது நாடக வடிவிலோ சொல்லிவிடமுடியாதா?

அடிப்படையில் ஒரு கவிஞரான சேவியர், தனக்குப் பழக்கமான ஊடகத்தைத் தேர்வு செய்திருக்கிறார் என்பதுமட்டும் இதற்கான காரணம் அல்ல. இந்நூலின் ‘உவமைகள்’போன்ற பகுதிகளை வாசிக்கும்போது, புதுக் கவிதைக்குரிய கனத்தை இயேசுவின் வாழ்க்கையில் அவர் கண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. நூல்நெடுக, இதுபோன்ற கவிதைத் தருணங்கள் இதமான வாசிப்பு அனுபவத்தை அளிக்கின்றன.

அந்தவிதத்தில், இது ஒரு முக்கியமான இலக்கியப் பதிவாகிறது. கவித்துவம் நிறைந்த எளிய மொழியில், இக்காலத்துக்குரிய காவியங்களும் எழுதப்படமுடியும், கவியரசர் கண்ணதாசன் விரும்பியதுபோல், அவை இறவாக் காவியங்களாகவும் நிலைத்திருக்கும் என்பதை, இந்தக் க(வி)தை நூல் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.

Thanks : புதியபார்வை

(இயேசுவின் கதை – சேவியர் – யாளி பதிவு வெளியீடு – 346 பக்கங்கள் – ரூ 200/-)

Posted in JESUS Kaaviyam

இறவாக் காவியம் : 1

வாசல்

jesus_185

மதங்களின் வேர் விசுவாசத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. அதன் கிளைகள் மனிதத்தின் மீது மலர் சொரியவேண்டும். மனிதத்தின் மையத்தில் புயலாய் மையம் கொண்டு சமுதாயக் கரைகளைக் கருணையின்றிக் கடக்கும் எந்த மதமும் அதன் அர்த்தத்தைத் தொலைத்துவிடுகிறது.

கிறிஸ்தவம்,
அது எப்போதுமே அன்பின் அடிச்சுவடுகளில் பாதம் பதித்து அயலானின் கண்ணீர் ஈரம் துடைக்கும் கைக்குட்டையோடு காத்திருக்கும் மதம். பல்லுக்குப் பல் என்னும் பழி வாங்கல் கதைகளிலிருந்து விலகி வாழ்வியல் எதார்த்தங்களின் கரம் பிடித்து சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வியர்வையும், குருதியும் கலந்த வேதனைப் பிசு பிசுப்பை துடைத்தெறியத் துடித்தவர் தான் இயேசு.
கடவுளினின்று மனிதனாக, மனிதனிலிருந்து கடவுளாக நிரந்தர நிவாரணமாக, உலவுபவர் தான் இயேசு.

சமுதாயக் கவிதைகளின் தோள் தொட்டு நடந்த எனக்கு ‘இயேசுவின்’ வாழ்க்கையை எப்படி எழுதவேண்டும் என்று தோன்றியது, அதை எப்படி எழுதி முடித்தேன் என்பதெல்லாம் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த படைப்பிற்குள் நீங்கள் காண்பதெல்லாம் ஒரு சரித்திரக் கதாநாயகனின் சாதனைப் பயணம் தான்.

இயேசு யார் என்பதை அறியாத மக்களுக்கு அவரை எளிமையாக அழுத்தமாக அறியவைக்க வேண்டும் என்னும் எண்ணமே இந்தப் படைப்பு உருவாகக் காரணம்.

தோப்புக்குத் தெரியாமல் குருவிக்குக் கூடுகட்டிக் கூட கொடுக்காத ஒரு சமுதாயத்தினரிடம்,
‘நீ வலக்கையால் செய்யும் தானம் இடக்கைக்குத் தெரியவேண்டாம்’ என்று அன்பின் ஆழத்தை அகலப்படுத்துகிறார்.
எதிரியை நேசி – என்னும் அறிவுரையால் அன்பை ஆழப்படுத்துகிறார்,
இன்னும் இதயம் தொடும் ஏராளம் அறிவுரைகளை அளித்து அன்பை நீளப்படுத்துகிறார்.

0

சாரத்தைத் தொலைத்துவிட்ட
உப்பும்,
ஈரத்தைத் தொலைத்து விட்ட
மனசும்,
உபயோகமற்றுப்போன உதிரிகள்.

0

உன் வார்த்தைகளுக்குள்
செயல்களின் சுடரை ஏற்றி வை.
விளக்குக்குத் திரியிட்டு
திரிக்குத் தீப் பொட்டிட்டு,
அதை
மூடிவைப்பது முட்டாள் தனம்…

0

விபச்சாரம்
உடல்சார்ந்த வன்முறை
மட்டுமல்ல.
இச்சைப் பார்வையின் மிச்சம்
விபச்சாரத்தின் எச்சமே…

0

அயலானுக்காய்
நீ
தொங்க விடும்
தராசுத் தட்டில் தான்,
உனக்கானதும் நிறுக்கப்படும்.

0

தீமையின் நெடுஞ்சாலையை
நிராகரியுங்கள்,
நன்மையின் ஒற்றையடிப்பாதையை
கண்டு பிடியுங்கள்.

0

என்று சின்ன சின்ன வார்த்தைகளால் அவர் சொன்ன போதனைகளுக்குள் ஒரு சமுத்திரத்தின் ஆழம் ஒளிந்திருக்கிறது.
சின்ன வரிகளுக்குள் ஒரு சீனச் சுவரே சிறைப்பட்டிருக்கிறது

இந்தப் படைப்பு, என் கவிதைத் திறமையை சொல்வதற்காய் செய்யப்பட்ட ஒரு படைப்பு அல்ல. விவிலியம் ஒரு கவிதை நூல் தான். அதை முறைப்படுத்தி, எளிமையாய் புதுக்கவிதையில் இறக்கிவைத்திருப்பது மட்டுமே நான் செய்த பணி.

பைபிளின் பழைய ஏற்பாடுகளில் ஆண்டவர் மேகம், இடி மின்னல் , தீ என்று இயற்கைக்குள் இருந்து மனிதனிடம் நேரடியாய் பேசுகிறார். புதிய ஏற்பாட்டில் இயேசுவாய் அவதாரம் எடுத்து மனிதரோடு பேசுகிறார். நம்பிக்கை, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, புதுமை என்று இயேசு தொடாத இடங்கள் இல்லை எனலாம்.

தீவிழும் தேசத்தில் இருந்துகொண்டு அவர் விதைத்த விசுவாச விதைகள் இன்னும் என் வியப்புப் புருவங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவில்லை.  காலம் காலமாய் அடையாளங்களோடு வாழ்ந்து வந்த மதங்களின் அஸ்திவாரங்களில் கடப்பாரையாய் இறங்க அவரால் எப்படி இயன்றது ? சர்வாதிகாரிகளின் அரசபையில் எப்படி அவரால் சத்தமிட இயன்றது ? ஒதுக்கப்பட்டவரோடு எப்படி அவரால் ஒன்றிக்க இயன்றது ? எதிர்த்து நின்ற அத்தனை மக்களைளோடும் ‘பாவமில்லாதவன் முதல் கல் எறியட்டும்’ என்று எப்படி அவரால் சொல்ல முடிந்தது, ஆணிகளால் அறையப்பட்டு வலியோடு எப்படி பயணம் முடிக்க முடிந்தது. அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் ‘அவர் இயேசு’ என்பது தான்.

சாதாரணக் கவிதைகளை மட்டுமே எழுதிப் பழக்கப்பட்ட என் விரல்கள் ஒரு இறைமகனை எழுதியதால் இன்று பெருமைப் படுகிறது. ஆனால் இந்தப் பெருமை எல்லாம் என்னைச் சேராது என்னும் எண்ணம் மட்டுமே என்னை மீண்டும் இறைவனில் ஆழமாய் இணைக்கிறது.

இந்தப் படைப்பைப் தொடராய் வெளியிட்ட நிலாச்சாரல் இணைய தளத்தின் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான்கு ஆண்டுகளாக இந்தப் படைப்பை புத்தக வடிவில் பார்க்கவேண்டுமென்று நான் செய்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் முளைத்தபோதெல்லாம் எனக்கு ஆதரவாய் நின்ற இறைவனுக்கும், ஆறுதலாய் நின்ற பெற்றோருக்கும், தோள்கொடுத்து நின்ற துணைவிக்கும், ஊக்கம் தந்த உடன்பிறப்புக்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

இயேசுவின் சமகாலத்தில், அவர் மடியில் தவழ்ந்த குழந்தைகளில் ஒன்றாய் வாழ இயலாமல் போன வருத்தம் நம்மில் பலருக்கும் இருக்கக் கூடும், அதற்கு அவரே சொல்லும் ஆறுதல் ‘என்னைக் காணாமல் விசுவசிப்பவன் பேறுபெற்றவன்’.

Posted in JESUS Kaaviyam

இறவாக் காவியம் : 2

அணிந்துரை  


மோகன் சி. லாசரஸ், இயேசு விடுவிக்கிறார்.

jesus_198

 

“இறவாக் காவியம்”
இறைமைந்தன் இயேசுவை மகிமைப் படுத்தும்
மறவாக் காவியம்.
பரமனின் பாதங்களை ஆராதனை செய்ய
புதிய மலர் ஒன்று மலர்ந்துள்ளது கண்டு
மகிழ்கிறோம்.

மறவேன் என்றும் உன்னை
தருவேன் இரட்டிப்பான நன்மை
வருவேன் விரைவில்
என்றுரைத்த திருக்குமாரன் இயேசுவைக் குறித்து
கவிதை தந்த சேவியரை
வாழ்த்துகிறேன்,
இயேசுவின் ஈடில்லா நாமத்தில்.

பாவியாயினும் படு பாதகனாயினும்
பரமனின் போதனையைக் கடைபிடித்தால்
பாவம் பறந்திடும்
பரிசுத்தம் வந்திடும்
பரலோகம் கிட்டிடும் – என்னும் உண்மையினை
எளிய நடையில்
புதுமை படிக்கட்டுகளாக்கி
புதுக்கவிதை தந்து, அனைவரும்
படிக்கட்டுமே, படித்து மகிழட்டுமே
துடிக்கட்டுமே உள்ளுணர்வு,
கிட்டட்டுமே பரிசுத்தம்,
எழுந்து பிரகாசிக்கட்டுமே
இளையவர் கூட்டம் என
கவிதை படைத்த சேவியரை
மனதாரப் பாராட்டுகிறேன்.

“மனந்திரும்புங்கள்
மனிதராகுங்கள்
உள்ளத்தால் உள்ளவராகுங்கள்”
எனும் நற்செய்தியைப் பரப்பிட
புது வழியை
தேர்வு செய்த சேவியரை
வாழ்த்துகிறேன்.

“நானே வழி
நானே சத்தியம்
நானே ஜீவன்”

என மானிடர்க்கு வழிகாட்டியதோடு
வாழ்ந்து காட்டி,
தமது அடிச்சுவட்டை விட்டுச் செல்ல
விண்ணைத் துறந்து
மண்ணில் அவதரித்து
ஏழ்மையில் பிறந்து
தாழ்மையாய் மலர்ந்து;

பாவ
இருளகற்றும் ஒளியாய்
ஜீவ வழியாய்
மரண பரியந்தம்
வருத்தப்படுவோரின்

பாரம் சுமந்து, சிலுவை
மரத்தில் உயிர் துறந்து
உதிரத்தின் கடைசிச் சொட்டினையும்
நம்
பாவக்கறையினைக் கழுவிடவே
ஊற்றிக் கொடுத்து

பொல்லாங்கனால் பறிமுதல் செய்ய முடியாத
இரட்சிப்பின் சந்தோசத்தை நமக்குச் சொந்தமாக்கி
பரிசுத்தாவியின் நிறைவினால் நம்மை நிரப்பி,

தெய்வீக சமாதானத்தை
உலகிற்குத் தந்த உத்தமர்
இயேசுவின் கரங்கள்
சேவியரைக் காத்திட
வேண்டுகிறேன் கர்த்தரின் நாமத்தில்.

ஆவியின் கனி தருபவராக
புவியில் வாழ்பவரை மாற்றிட,
பரலோக வாழ்க்கைக்கு
பாதை காட்டிட சகோதரர்
சேவியர் எடுத்துள்ள முயற்சி
தொடரட்டும்
தூயவனைத் துதிக்கிறேன்.

மரணத்தின் கூர் ஒடித்து
பாதாளத்தின் திறவுகோலைக் கையிலெடுத்து
அலகைக்கு அடிமைகளாய், மரணபயத்தில்
பேடிகளாய் வாழ்ந்த மக்களை
மீட்டிடவே உயிர் துறந்து
விண்ணுலகை சிலகாலம் மறந்து,

விண்ணுலகு சென்று
மீண்டும் வருவேன்
திக்கற்றவர்களாக உங்களை விட்டுச் செல்லேன்
பரலோக பாக்கியம் தந்திடுவேன்
“வாழ்வின் இறுதிவரை உங்களோடிருப்பேன்” என

அறுதியிட்டுச் சென்றவரின் வரலாற்றை
இறவாக் காவியமாகப் படைத்த
சேவியரின் சேவையை
பாராட்டி மகிழ்கிறேன்.

நீவீர் பல்லாண்டு வளமுடன் வாழ்க
என வாழ்த்துகிறேன்.
வல்லவர் நாமம் பரவட்டும் பாரெங்கும்”

இதோ,
இறவாக் காவியத்தின்
மறவா உச்சரிப்புகள்.
இந்த உச்சரிப்புகளை
உச்சரித்து உச்சரித்து
நம்
நினைவுகளும் சிந்தனைகளும்
கிறிஸ்துவை தரிசித்துக் கொள்ளட்டுமே !.

” மன்னிப்பு
தண்டனைகளுக்கான
அனுமதிச் சீட்டல்ல.

விதையின் முடிவு
செடியின் விடிவு.

ஆடையின் சிவப்பும்
குருதியின் சிவப்பும்
இயேசுவை
சிவப்புச் சாயம் பூசிய
வெள்ளைப் புறாவாக வெளிக்காட்டியது.

உவமைகள்
அறிவுரைகளை ஏற்றிச் செல்லும்
அற்புத வாகனம்

வருகைக்குப் பின்
வாசல் பெருக்கத் துவங்காதீர்கள்.

இயேசு
சாவுக்குச் சாவுமணி அடித்தார்
வாழ்வுக்கு
வரவேற்புக் கம்பளம் விரித்தார்.

இவைகள் வார்த்தைகள் அல்ல
தேவனின் மகிமையைப் பேசுவதால்
வைரங்கள்
வைடூரியங்கள் !

சேவியரை ஆசீர்வதிக்கிறேன்.
ஆண்டவர் இயேசுவின்
உயிர்த்தெழுந்த வல்லமையினால்.

Posted in JESUS Kaaviyam

இறவாக் காவியம் : 3

மகனுக்கு ஒரு வாழ்த்து !

தாசையன்

jesus_082

உலகனைத்தும் தனதாக்கிக் கொண்டு
ஒப்பற்ற தன்னாத்மா இழந்து போனால்
வளமேது நலமேது.

இறைமகன் இயேசுவின் வாழ்க்கையையும், நற்செய்தியையும்
பாமரருக்கும் புரியும் படி,
எளிய நடையில் கவிதை படைத்து
வாழ்வு தனை வளமாக்கிடவும்
இறை ஒளியைப் பரப்பிடவும் முயன்று
வெற்றி பெற்றிருக்கும் என் மகனை வாழ்த்துகிறேன்.

வளரும் பயிர் முளையிலேயே தெரியும்,
பயிர் மட்டுமல்ல
விளையும் மூளையும் கூட முளையிலேயே தெரிய வரும்.
இளமையிலேயே
பாடக் குறிப்பேடுகளின் பக்கங்களில்
கவிதைகள் தான் குறிக்கப்பட்டிருக்கும்.
“கிறுக்குவதைக் கோத்தெழுது பலனளிக்கும்” என
அறிவுரைகள் கூறுவதுண்டு.

கல்லூரி வாழ்க்கையிலே அவன்
பரிசுகள் பல பெறுவதுண்டு
புத்தகங்களிலும் இடம் பெறுவதுண்டு அதனால்
உவகை மிக அடைவதுமுண்டு.

ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும்
மனவிளிம்புகள்
இரண்டையுமே படித்த போது
மகனுக்குள் கவிஞனைத் தேடவில்லை
கவிஞனுக்குள்ளிருந்த மகனை தேடினேன்.
ஆகா என்ன வளர்ச்சி.

பெற்றோரிடம் அவனுக்குப் பெரும்பாசம்
அதிலும் தாயிடம் தனிப்பாசம்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் நிலைக்குள்
இரண்டு மனங்களும் நீராடுகின்றன இப்போது.

இறவாக் காவியம் !
அதொரு நிறைவுக் காவியம்.
ஒரு வாழ்க்கை முறையின் கவிதை முளை.

பிறர் உனக்கு என்ன செய்ய விரும்புகிறாயோ
அதையே நீ பிறக்குச் செய்யத் தவறாதே என்னும்
இறைவார்த்தையல்லவா இருக்கிறது இதிலே.

சேவியரை மேலும் மேலும் வாழ்த்துகிறேன்
முதல்வனைப் பாடும் இந்தக் காவிய உருவாக்கத்தில்
மனையாளின் செயலாக்கம் உடனுண்டு
அதிலே உயர்வுக்கு வழியுண்டு.

கவிதைகள் பல படைத்திடு உன்
திறமைகளை பலப்படுத்து.
மக்கள் மனம் பண்பட உன்
கவிதைகளைப் புலப்படுத்து.

நீ… எல்லா நூல்களிலும் வளர்கிறாய்.
ஆனாலும் இன்னும் அதே மகனாய்த் திகழ்கிறாய்.

வாழ்த்துகிறேன் உன்னை.
வேண்டுகிறேன் இறைவனிடம்,
இறவாக் காவியத்தின் படப்பாளியைப் பாதுகாத்திட..

.
தாசையன்

Posted in JESUS Kaaviyam

இறவாக் காவியம் : 4

இயேசுவின் காலம்… ஓர் வரலாற்றுப் பார்வை 

ஸ்டெல்லா

jesus_029   

கடவுள் வானத்தையும், பூமியையும் படைத்து அதிலுள்ள அனைத்தையும் ஆள்வதற்கான அதிகாரத்தை மனிதனுக்கு அளித்தார். அக்காலத்தில் தேவன் மனிதனோடு உறவாடி அவர்களுடைய துன்ப நேரங்களில் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து வந்தார். கடவுள் மனிதனோடு தீர்க்கத்தரிசிகள் வழியாக பேசி அவர்கள் வாழவேண்டிய வழிமுறைகளைக் கட்டளைகளாகக் கொடுத்தார்.  இந்தக் கட்டளைகள் மூலமாக அவர்கள் ஆண்டவனிடத்தில் ஒன்றித்திருக்கவும் நல் வழியில் நடக்கவும் பணித்தார்.

பல தீர்க்கதரிசிகளும், நியாயாதிபதிகளும் இஸ்ரேல் மக்களை நல் வழியில் நடத்தினார்கள்.  காலம் செல்லச் செல்ல தேவனுடைய வார்த்தை இஸ்ரேல் மக்களை திருப்திப்படுத்தவில்லை.  புறஇனத்தார் போல தங்களையும் ஆள அரசர்கள் இருந்தால் நலமாக இருக்கும் என்று எண்ணினர். கடவுள் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை ஆள அரசர்களை ஏற்படுத்தினார். இறைவன் இஸ்ரேல் மக்கள் மீது அதிக அக்கறை உள்ளவராக இருந்தபடியால் இஸ்ரேல் மன்னனோடும், மக்களோடும் தீர்க்கதரிசிகள் மூலமாக தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார்.

இஸ்ரேல் என்பது பன்னிரண்டு கோத்திர மக்கள் சேர்ந்த ஒரு அரசாகும்.  அனைவரையும் ஒரே அரசர் அரசாண்டு வந்தார்.  உலகின் மிகப் பெரிய ஞானியான சாலமோன் மன்னனும் இஸ்ரேல் மக்களை ஆண்ட அரசர்களில் ஒருவர்.  சாலமோன் மன்னனுக்குப் பின் அவருடைய மகன் ரெகோபெயாம் ஆட்சிக்கு வந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் பெரும் புரட்சி உருவாகி இஸ்ரேல் அரசு இரு பிரிவாகியது.  பத்து கோத்திரம் இணைந்து இஸ்ரேல் ராஜ்யமாகவும் மீதி இரண்டு கோத்திரம் இணைந்து யூதா ராஜ்யமாகவும் மாறியது.

யெரோபெயாமின் ஆட்சி இஸ்ரேல் ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியது. இறைவனிடம் பல உறுதிமொழிகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்றிருந்தபோதிலும் யெரோபெயாம் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் வேற்று தேவர்களை தொழ ஆரம்பித்தார்கள்.  இதனால் இஸ்ரேல் அரசு மற்ற ராஜாக்களின் தாக்குதலுக்கு ஆளானது.

150 ஆண்டுகளுக்குள் இஸ்ரேல் சாம்ராஜ்யம் முழுவதும் வேற்று அரசர்களுக்கு கீழ் அடிமையாகி விட்டது.  இது நடந்த காலகட்டம் சுமார் கி.மு. 700-ம் ஆண்டாகும்.  சுமார் கி.மு. 705 ண்டில் யூத ராஜ்யம் சரிய ஆரம்பித்தது.

சுமார் கி.மு. 586 கால கட்டத்தில் பாபிலோன் மன்னன் செதேக்கியா என்னும் யூத அரசனை சிறை பிடித்து அவருடைய மகன்கள் இருவரையும் கொலை செய்தான்.  அப்படியாக யூதா முழுவதும் சிறைபிடிக்கப்பட்டு, பெரும் சிறப்புப் பெற்ற ஜெருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டு, அதில் இருந்த அனைத்து பொன்னும் பொருளும் கொள்ளையடிக்கப்பட்டு, யூதர்களின் கலாச்சாரம் சிதறடிக்கப்பட்டது.  அது முதல் யூதா அந்நிய அரசர்களின் ஆளுகைக்குள் வந்தது.

இஸ்ரேல் மக்கள் மற்ற அரசர்களிடம் அனுமதி கோரி செருபாபேல், எஸ்றா மற்றும் நெகேமியா என்னும் தலைவர்களின் கீழ் ஜெருசலேம் தேவாலயத்தை சீரமைக்கும் பணியை ஆரம்பித்தனர்.  இந்தத் தலைவர்கள் யூத மக்களை பண்படுத்தி அவர்கள் கடவுளின் வழியை விட்டு தேவையில்லாத பழக்கங்களில் ஈடு பட்டிருப்பதை உணர்த்தினர்.  இது சுமார் கி.மு. 400-வது ண்டில் நடந்தது.

அதற்குப் பின்பு அவர்களுக்கு தேவனால் எந்தத் தீர்க்கதரிசியும் அளிக்கப்படவில்லை.  அந்த கால கட்டத்தில் இஸ்ரேல் பெர்சியா மற்றும் எகிப்திய அரசாட்சியின் கீழ் இருந்தது.  மக்கள் மனம் போன போக்கில் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டனர்.  வேற்று அரசர்களின் அரசாட்சி, முக்கியமாக கிரேக்கர்களுடைய வழிபாட்டு முறைகள் இஸ்ரேல் மக்களை மிகவும் பாதித்தன.  நாட்கள் செல்லச் செல்ல யூத முறைகளைப் பின்பற்றுவது மிகப் பெரிய குற்றமாகக் கருதப்பட்டது.  இது யூதர்களைக் கோபமுறச் செய்தது.  அவர்கள் கிரேக்கர்களுக்கு விரோதமாக கலகம் செய்ய ஆரம்பித்தனர்

கலகத்திற்குப் பின் சிறிது காலம் யூதர்கள் கடவுள் கற்பித்தபடி வழிபட்டனர்.  ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.  அடுத்ததாக வந்த ரோமர்களின் ஆட்சி அவர்கள் வாழ்க்கை மற்றும் வழிபாட்டு முறைகளை துவம்சம் செய்தது.  அந்த ஆட்சியும், காலகட்டமும் தான் உலகத்தின் மிகப் பெரிய நிகழ்வுகளுக்குப் பக்க பலமாக இருந்தது.  அது தான் வரலாறுகளைத் திருத்தி அமைத்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் காலம்.

அந்த கால கட்டத்தில் மக்களிடையே பல பிரிவுகள் இருந்தன.  பரிசேயர், சதுசேயர், வேதபாரகர் போன்றவர்கள் அவற்றில் சிலர்.  சதுசேயர்கள் அரசியல்வாதிகள்.  அவர்களுடைய பிரதான எண்ணம் தங்களுடைய பதவியையும், செல்வங்களையும் பாதுகாத்துக் கொள்வது தான்.  சதுசேயர் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாதவர்கள்.  பரிசேயர்கள் அந்நிய ஆட்சியை எதிர்த்தவர்கள்.  அவர்கள் தங்களுடைய கலாச்சாரத்திலும், முன்னோர்கள் தங்களுக்குக் கொடுத்த சட்ட திட்டங்களிலும் நம்பிக்கையுள்ளவர்கள்.

இயேசு கிறிஸ்து அவர்களுடைய கண்மூடித்தனமான கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தபடியால் அவர்கள் இயேசுவை எதிர்த்தனர்.  வேதபாரகர் சாதாரண மக்களில் ஒருவராக எண்ணப்பட்டனர்.  கலாச்சாரம் மற்றும் வேதத்தில் உள்ளவைகளை சாதாரண மக்களுக்கு எடுத்துச் சொல்வது தான் அவர்களுடைய பணி.

யூத மதம் மறக்கப்பட்டு வெவ்வேறு அரசாட்சியினால் சிதறடிக்கபபட்டது.  ரோம அரசாங்கம் யூதாவை தொல்லை தரக்கூடிய ஒரு நாடாகக் கருதியது.  யூதர்கள் தீர்க்கதரிசிகள் உரைத்தபடி மேசியாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தினர்.  வெளிநாட்டு அரசர்களால் ஒடுக்கப்பட்டிருக்கும் தங்களை மேசியா என்னும் மீட்பர் வந்து அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் என்று எதிர் பார்த்தனர்.

ஆனால் மீட்பர் இயேசு கிறிஸ்துவோ தாழ்மையின் வடிவமாக கன்னி மரியின் மடியில் மாட்டுத் தொழுவமொன்றில் பிறந்தார். அரசரை எதிர்பார்த்திருந்த யூதர்களால் தொழுவத்தில் வந்தவர் தான் மேசியா என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர்களில் பலர் ஏழ்மையில் பிறந்த அவரை ஆண்டவராய் காண மறுத்தனர். னால் எல்லா யூதர்களும் அவரை எதிர்க்கவில்லை, சில யூதர்கள் விதி விலக்காக இருந்தனர்.  இயேசு பிறந்தபொழுது சிமியோன் மற்றும் அன்னாள் என்னும் தீர்க்கதரிசிகள் அவரைக் கண்டு மிகுந்த சந்தோஷமடைந்து அவர் தான் இஸ்ரேலரை விடுவிக்கும் மேசியா என்று வெளிப்படையாக தீர்க்கத்தரிசனம் உரைத்தனர்.

கடவுள் மனிதன் மேல் வைத்த அளவில்லா அன்பினால் தம் சொந்த மகனையே மனிதனாக உலகிற்கு அனுப்பினார்.  ஆனால் யாருக்காக அவர் அனுப்பப்பட்டாரோ, அவர்களால் அவர் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. “மனுமகனுக்குச் சொந்த ஊரில் மதிப்பில்லை ” என்று இயேசுவே அதை உரக்கச் சொல்கிறார். குழப்பமான அரசியல் சூழ்நிலையில், மனிதனை பாவத்திலிருந்து மீட்டு நல்வழிப்படுத்தும் நோக்கத்தோடு இயேசு உலகத்தில் வந்தார்.  எதிர்ப்புகளின் மத்தியிலும்,  பெரும்பான்மையான யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையிலும், தான் வந்த காரியத்தை பொறுமையாக, அன்பாக தொடர்ந்து செய்தார்.

அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும் பொழுது அக்காலத்தில் அவரைப் பின்பற்றியவர்கள் மிகுந்த தைரியத்தோடு தங்கள் மேலதிகாரிகளை எதிர்த்து இயேசுவைப் பின்பற்றியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.  இயேசு அவர்களுடைய தீய வாழ்க்கையைத் துவைத்து அழுக்ககற்றி அவர்களை தீவிர நம்பிக்கையுள்ளவர்களாக மாற்றினார். தான் மரித்து, உயிர்த்து, விண்ணகம் சென்றபின் தன்னுடைய பணியை மண்ணில்  தொடர்வதற்காக அவர்களை ஆயத்தப்படுத்தினார்.

இயேசுவின் போதனைகள் மக்களிடையே பெரும் கலகத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தின. எத்தனையோ அற்புதங்களை அவர்கள் மத்தியில் செய்த போதும் யூத மக்களின் விருப்பத்துக்கிணங்க ரோம அரசாங்கம் அவரைச் சிலுவையில் அறைந்தது.  அந்த சூழ்நிலையிலும், உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசி என்ற தன்னுடைய போதனைக்கேற்ப அவரைக் காயப் படுத்தியவர்களையும் மன்னிக்க அவர் உலகக் கடவுளாகிய தன்னுடைய தந்தையிடம் செபித்தார்.

தீர்க்கதரிசிகளின் வாக்குப்படி மூன்றாம் நாள் இயேசு சாவின் கொடுமையை வென்று உயிரோடு எழுந்தார். என்ன ஒரு மகத்தான செயல்.  யூதர்கள் மட்டுமே உரிமை கொண்டாடிய வேதத்தை பேதமையின்றி எல்லா மக்களுக்கும் அறிவித்தார்.  பிதாவாகிய தேவன் உலகத்திற்கு தம்மை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றினார்.  தம்முடைய வருகையால் மனித வரலாற்றை கி.மு. என்றும் கி.பி. என்றும் பிரித்தார்.