Posted in Articles, Lent days

தவக்காலம் – விதைகளின் காலம்

தவக்காலம்
விதைகளின் காலம்

தவக்காலம்
விதைகளின் காலம்

விண்ணரசுக்கான
விதையாக
பூமியில் எழுந்தவர் இயேசு.

விண்ணரசுக்கான
விதைகளை
பூமியில் விதைத்தவர் இயேசு

விண்ணரசுக்கான
விதையாக
பூமியில் விழுந்தவர் இயேசு.

தவக்காலம்
விதைகளின் காலம்.

இயேசு
விதைகளை உருவாக்கச்
சொல்லவில்லை,
விதைகளாய் உருவாகச்
சொன்னார்.

நல்ல மரமே
நல்ல கனிகளின் ஆதாரம்
விதைகளைக்
கவனியுங்கள் என்றார்.

கனிகொடாத மரம்
அழிவுக்குள் நுழையும் !
வேர்களை
விசாரியுங்கள் என்றார்.

விளைச்சல் தராத
விதையெல்லாம்
வீணாகி அழிந்து விடும்
நிலங்களை
தயார் படுத்துங்கள் என்றார்.

களைகளோடு
கலந்து விட்டால்
இயல்புகளை இழந்துவிடும்
கவனமாய்
பிரித்தெடுங்கள் என்றார்.

தவக்காலம்
விதைகளின் காலம்.

யூதாஸ்
துரோகத்தை விதைத்தான்
தற்கொலையில்
தலை சாய்த்தான்.

பிலாத்து
சுயநலத்தை விதைத்தான்
அவனும்
தற்கொலை செய்ததாய்
கதைகள் உண்டு

கூட்டம்
வன்மத்தை விதைத்தது
தலைமுறை கடந்தும்
சாபத்தைக்
கேட்டு வாங்கியது !

இயேசுவோ
அன்பை விதைத்தார்

கடுகு விதையளவு
விசுவாசம்
மலையளவுச் செயல்களை
நிறைவேற்றும் என்றார்.

எனது வார்த்தைகள்
உயிருள்ள விதைகள்
அவை
கனிகொடுக்காமல்
அழியாது என்றார்.

மண்ணில் விழுந்து
மடியாமல்
கோதுமை மணிக்கு
விளைச்சல் கிடையாது என்றார்.

அறுவடையின்
பயன்
விதைப்பின் தீவிரத்தில்
அடங்கியிருக்கிறது
என்றார்

சிலுவையின்
உச்சியிலும் அவரிடம்
மன்னிப்பின் விதைகள்
மிச்சமிருந்தன.

வானுக்கும் பூமிக்கும்
இடையே
அவர் விதையாக
நடப்பட்டார்.

தவக்காலம்
விதைகளின் காலம்.

காய்கள்
நிச்சயம் கனியாகும்
விதைகள்
இங்கே வினியோகம்

என்பதை
உணரும் காலம்.

*

Posted in Articles, Lent days

தவக்காலம் – அவசரங்களின் காலம்

தவக்காலம்
அவசரங்களின் காலம்

தவக்காலம்
அவசரங்களின் காலம் !

இயேசுவின்
நள்ளிரவுப் பிரார்த்தனையில்
காலம்
முடியப் போகிறதே எனும்
அவசரம் இருந்தது.

வெளிச்சத்தின்
வரவுக்கு முன்
இயேசுவின்
தோள் தொட்டு நடந்த யூதாஸ்
ஆள்காட்டும் விரலோடு
வன்மமாய் வந்தான்.

கபடத்தின் முத்தத்தை
இயேசுவின்
கன்னத்தில் பதிக்கும்
அவசரம் அவனுக்கு.

தீப்பந்தங்களை மிஞ்சும்
அனல் மூச்சோடு
வந்த
படைவீர்களுக்கு
பரமனைப் பிடிக்கும் அவசரம்.

மின்னல் வேகத்தில்
உடைவாள் உருவி
செவிதனைச் செதுக்கிய
சீடருக்கு
தப்பிக்க வேண்டுமெனும் அவசரம்.

வீரனுக்கு அழகு
போரிடுவது,
சீடனுக்கு அழகு
போரிடாமல் இருப்பது
என
புதுமையின் நாயகன்
அவசரமாய்ப் புரிய வைத்தார்

தவக்காலம்
அவசரங்களின் காலம்.

அதிகாலையில்
இருட்டுக் கயிறுகட்டி
இழுத்து வந்தவரை
வெளிச்சம் விழித்தெழும் முன்
கொன்று தீர்க்கும் அவசரம்
மதவாதிகளுக்கு.

நிலவரம்
கலவரமாகும் முன்
கைகழுவி விட்டால் போதுமெனும்
அவசரம்
பிலாத்துவுக்கு !

அதிகாலையில்
பிடித்து வந்தவரை,
ஒன்பது மணிக்கே
சிலுவையில் அறையும்
அவசரம்
எதிராளிகளுக்கு !

அதற்குள்
இறந்து விட்டானா
என
வியக்குமளவுக்கு
விரைவில் வரவேண்டிய
அவசரம் மரணத்துக்கு !

தவக்காலம்
அவசரங்களின் காலம்.

பாவம் அவசரமாய்
வினாக்களை எறியும்
புனிதம்
நிதானமாய்
பதில்களை நெய்யும்.

சாத்தான்
அவசரங்களின் பிதாமகன்.
உடனே
கல்லை அப்பமாக்கு
கீழே குதி
தெண்டனிட்டு வணங்கு
என
அவசரத்தின் வால் பிடிப்பான்.

இயேசு
நிதானத்தின் இறைமகன்.

தவறிய ஆட்டை
காடு மலையெங்கும்
தேடித் திரியும்
நிதானம்.

தவறிய மைந்தனுக்காய்
காலமெல்லாம்
காத்திருக்கும் நிதானம்.

பணிவாழ்வின்
துவக்கம் வரை
பணிவுடன் காத்திருக்கும்
நிதானம்.

தவக்காலம்
அவசரங்களின் காலம்.

அவசரமாய்ச் செய்யும்
பாவங்கள்
நிதானமாய் அழவைக்கும் !
என்பதைப்
புரிய வைக்கும் காலம்.

சிற்றின்பத்தின்
அவசர அழைப்புகளை
நிராகரித்து,
புனிதத்தின் நிதானத்தில்
நுழைய வைக்கும் காலம்.

*

சேவியர்

 

Posted in Articles, Lent days

தவக்காலம் – இணைப்பின் காலம்

தவக்காலம்
இணைப்பின் காலம்

தவக்காலம்
இணைப்பின் காலம்.
சிலுவை
இணைப்பின் கருவி.

சிலுவை,
வானையும் மண்ணையும்
இணைத்துக் கட்டும்
மரக் கயிறு !

சிலுவை
கிருபையின் கனிகள்
விளையும்
நிரந்தர மரம்.

சிலுவை
இரு
கழித்தல் குறிகள் இணைந்த
கூட்டல் குறி !

பாவங்களைக் கழித்த
இதயங்களின்
கூட்டல்.

தவக்காலம்
இணைப்பின் காலம்.

என்னில்
இணைந்திருங்கள்,
இல்லையேல்
கனியற்ற மரமாய்
தனிமையில் விழுவீர்கள்.

என்னில்
உறைந்திடுங்கள்
இல்லையேல்
வாழ்வற்ற விறகாய்
நெருப்பில் விழுவீர்கள்

என்னில்
இணைந்திருங்கள்,
உடலோடு சேராவிடில்
உறுப்புக்கு நேர்வது
வெறுப்பே !

நான்
வானுக்கான நுழைவுச் சீட்டை
மண்ணில்
வினியோகிக்க வந்தவன்

நான்
தந்தையின் தளத்திலிருந்து
மந்தையின் களத்துக்கு
இறங்கி வந்தவன்.
மனமிரங்கி வந்தவன்.

புரட்டிப் போடும்
இரட்டைப் போதனைகளாக,
தந்தையோடு இணைந்திருங்கள் !
அயலானோடு
இணைந்திருங்கள்
என்றவன்.

என,
இயேசுவின் குரல்
நம்மை
அழிவிலிருந்து பிடுங்கி எடுத்து
வாழ்வின் வயலில் நட்டு வைக்கிறது.

தவக்காலம்
இணைப்பின் காலம்

ஆதி காலம் தொட்டே
இறைவன்
தனிமையை விரும்பவில்லை !

திரித்துவம்
அதன்
துவக்க உதாரணம்.

ஆதாமின் காலத்திலும்
இறைவன்
தனிமையைத்
தேர்ந்தெடுக்கவில்லை.

ஏவாள்
அதன்
தொடரும் உதாரணம்.

எதிர்காலத்திலும்
அவர்
தனிமையை நாடவில்லை.

மீட்பு
அதன்
அழகிய உதாரணம்.

என்னைக் கண்டவர்
தந்தையைக் கண்டார்
என
இணைப்பின் உச்சத்தை
இயேசு வெளிப்படுத்தினார்

தவக்காலம்
இணைப்பின் காலம்.

சிலுவை
இணைப்புப் போதனையின்
முழுமை.

மேல் நோக்கிய
சிலுவையின் பாகம்
தந்தையோடான இணைப்பையும்,

இரு கரமும்
பிறரோடான இணைப்பையும்,

கீழ் நோக்கிய பாகம்
தன்னோடான
தனி மனித இணைப்பையும்
தத்துவமாய்ச் சுட்டுகிறது.

தவக்காலம்
இணைப்பின் காலம். !

குயவனின் கையில்
நாம்
வழுவாத களிமண்ணாய்
இணையும் காலம்.

*

சேவியர்

Posted in Articles, Lent days

தவக்காலம் – கைவிடுதலின் காலம்

தவக்காலம்
கைவிடுதலின் காலம்

 

 

தவக்காலம்
கை விடுதலின் காலம்.

தந்தையே
ஏன் என்னைக் கைவிட்டீர்
எனும்
இயேசுவின் கதறல்
கல்வாரியின் அதிகபட்ச துயரம் !

நீர்
விரும்பினால்
இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும்
எனும்
இயேசுவின் விண்ணப்பம்
மீட்பின் அதிகபட்ச வலி !

எனினும்
கலப்பையில் வைத்த கையை
உதறிவிட்டு
ஒதுங்கிச் செல்பவர்
இயேசு அல்ல.

கடைசி வரை
தொடரச் சொன்னவர்
இடைவேளையில்
இறங்கிச் செல்பவர் அல்ல.

தவக்காலம்
கை விடுதலின் கலம்.

நீதியை
அளிக்க வேண்டிய அரசு
நிரபராதியை
அழித்தது !
இயேசு கைவிடப்பட்டார்.

உயிருக்குள்
உயிராய் இருக்க வேண்டிய
உறவு
கரைந்து மறைந்தது.
இயேசு கைவிடப்பட்டார்.

உம்மோடு இருப்போம்
உம்மோடு இறப்போம் என்ற
நட்பு
ஓடி ஒளிந்தது.
இயேசு கைவிடப்பட்டார்.

கணநேரமும்
கைடாத திரித்துவ உறவு
மீட்பின்
பயணத்துக்காய் ஒதுங்கியது
இயேசு கைவிடப்பட்டார்.

தவக்காலம்
கை விடுதலின் காலம்.

நீதியின் மேல்
பசிதாகம் கொண்டவராய்
இருக்கச் சொன்னார்
இயேசு
போதனை கைவிட்டது !
நீதிக்கான பசி தாகம்
பட்டினியின் படுக்கையில் கிடக்கிறது.

எத்தனையோ
புதுமைகளின் பேரணியை
நடத்திக் காட்டிய
இயேசுவை
பயனாளிகளும் புறக்கணித்தனர்.

எருசலேமின் மேல்
தாகம் கொண்ட
இயேசுவை
எருசலேமே உதறித் தள்ளியது.

தவக்காலம்
கைவிடப்படுதலின் காலம்.

இயேசு
கைவிடுதலைக் கற்றுத் தந்தார்.

கை
உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால்
கை விடுவதல்ல,
கையையே விடுதல் சிறந்தது
என்றார்.

நாமும்
கைவிடக் கற்றுக் கொள்வோம்.

இயேசு
கை கொடுக்காத எதையும்,
கைவிடக் கற்றுக் கொள்வோம்.

*

சேவியர்

Posted in Articles, Lent days

தவக்காலம் – விலையின் காலம்

தவக்காலம்
விலையின் காலம்

தவக்காலம்
விலையின் காலம்.

நிலையானவரின்
தலைக்கு
யூதாஸ் வைத்த விலை
முப்பது வெள்ளிக்காசுகள்.

யோசேப்பின்
தலைக்கு
சகோதரர்கள் வைத்த விலை
இருபது வெள்ளிக்காசுகள்.

இவை
ஒரு அடிமைக்கான
தோராய விலைக்கணக்கு
என்கிறது வரலாறு.

செக்கரியா
தனக்கு அளிக்கப்பட்ட
முப்பது வெள்ளிக்காசுகளை
ஆலய கருவூலம் நோக்கி வீசினார்,
அது
நீதித்தீர்ப்பின் விலை.

யூதாஸ
தான் பெற்றுக் கொண்ட
முப்பது வெள்ளிக்காசுகளை
ஆலயத்தில் வீசினார்.
அது
நீதிக்கான விலை.

தவக்காலம்
விலையின் காலம்.
அடிமைகளான நம்மை
இயேசு
விலை கொடுத்து வாங்கிய காலம்.

மீட்பை நமக்கு
இலவசமாய்க் கொடுக்க
இயேசு
கொடுத்த விலை ஏராளம்.

தனது
நள்ளிரவின் தூக்கத்தை
கெத்சமெனேயின்
இரத்த வியர்வை நிமிடங்களில்
விலையாய் தந்தார்.

தமது
பெயரின் புனிதத்தையும்
தனது புகழின் சர்வத்தையும்
பலி பீடத்தில்
விலையாய் வைத்தார்.

தனது,
நட்பின் தோழர்களையும்
உறவின் நெருங்கங்களையும்
தனிமையின் வீதியில்
விலையாய்க் கொடுத்தார்.

அலையடிக்கும் படகிலும்
அயர்ந்து தூங்கும்
நிம்மதியை
மௌனச் சிலுவையிடம்
விலையாய்க் கொடுத்தார்.

பாவியின்
அடையாளம் சுமந்து
கறைபடியா
தூயவர் எனும் நிலையை
விலையாய்க் கொடுத்தார்.

துணைக்கு
தூதர்களை அழைக்கும்
விண்ணகத்தின் அதிகாரத்தையும்
நமக்காய்
விலையாய்க் கொடுத்தார்

கடைசியில்,
சிலுவையின் உச்சியில்
பாவியாய் மாறியதால்
தந்தையோடான உறவையும்
விலையாய்க் கொடுத்தார்.

தவக்காலம்
விலையின் காலம்.

இயேசு தந்த
விலையைப் பற்றி
அறிந்து கொள்ளும் காலம்.

நமக்காய்
அவர் மரித்தார் !
அவருக்காய்
நாம் வாழ்வோமா ?

*

சேவியர்