Posted in Articles, இயேசு, Life of JESUS

இயேசு என்றொரு மனிதர் இருந்தார்

*

இயேசு ! சிலருக்கு அவர் கடவுள். சிலருக்கு தத்துவ ஞானி. சிலருக்கு அவர் சிறந்த போதகர். சிலருக்கு அவர் ஒரு சிவப்பு சித்தாந்த வாதி. சிலருக்கு அவர் ஒரு ஆசிரியர். இப்படி ஏதோ ஒரு வகையில் இயேசு ஒவ்வொருவரையும் ஆக்கிரமித்திருக்கிறார். அவரை அங்கீகரிக்கலாம், அல்லது நிராகரிக்கலாம். ஆனால் அவரைச் சந்திக்காமல் கடந்து செல்வது இயலாத காரியமாகிவிடுகிறது.

இந்த நூல் இயேசு எனும் மனிதரை, அவரது இயல்புகளோடும் வரலாற்றுப் பின்னணியோடும் எளிமையாய் அறிமுகம் செய்து வைக்கிறது. அவரது பலங்களையும் பலவீனங்களையும், இறைத் தன்மையையும் மனிதத் தன்மையையும், போதனைகளையும் வேதனைகளையும் அப்படியே படம் பிடிக்கிறது இந்த நூல். மதக் கொம்புகளையும், மகிமைக் கிரீடங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு வரலாற்று நூலாக இந்த நூல் உருவாகியிருக்கிறது. 

இயேசுவின் வரலாற்றை பல நூறு ஆண்டுகளாக எல்லோரும் எழுதிக் குவித்துவிட்டார்கள். உலகின் அத்தனை மொழிகளிலும் இயேசுவின் வரலாறு பல்வேறு கோணங்களில் வெளியாகிவிட்டன. உலகில் அதிக மொழிகளில் அச்சிடப்பட்ட நூல் பைபிள் என்பதைப் போல, உலகில் எக்கச்சக்கமாய் எழுதப்பட்ட நூல் இயேசுவைப் பற்றியதாக இருக்கிறது. 

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் கல்லறை ஒன்று அமைதியாய்க் கிடக்கிறது. அதில் துயின்று கொண்டிருப்பவர் ஹென்ரிக்கே ஹென்ரிகஸ் ( Henrique Henriques ) என்பவர். இவர் ஒரு இயேசுசபைக் குருவானவர். தமிழின் முதல் நூலை அச்சிட்ட பெருமைக்குரியவர் இவர் தான். அதனால் அச்சுக்கலையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

தமிழில் என்றல்ல, இந்தியாவிலேயே அச்சான முதல் நூல் அது தான். பதினாறு பக்கங்கள் கொண்ட அந்த நூல்  வெளியாது அக்டோபர் 20, 1578 ! நூலின் பெயர் தம்பிரான் வணக்கம். போர்ச்சுகீசிய மொழியில் வெளியான டாக்டரினா கிறிஸ்தம் எனும் நூலின் தமிழாக்கமே இது !  

அதற்கு அடுத்த ஆண்டே அவர் கிறிஸ்தியானி வணக்கம் எனும் ஒரு நூலை வெளியிட்டார். அதன்பின் அடுத்த மூன்று ஆண்டுகளில் கிறிஸ்தவ சமய போதனை (மறைக்கல்வி), பாவ அறிக்கை நூல் மற்றும் அடியார் வரலாறு போன்ற நூல்கள் வெளியாகின. 

புனித தோமா இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் விதைகளை ஆங்காங்கே விதைத்தபின் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தான் அடுத்தகட்ட கிறிஸ்தவ மறைபரப்பும், கிறிஸ்தவ இலக்கியங்களில் வரவும் ஆரம்பித்தன. துவக்க காலத்தில் இதன் பெருமை கத்தோலிக்க, இயேசு சபைக் குருக்களையே சார்ந்திருந்தது. குறிப்பாக பிரான்சிஸ் சவேரியார், ஹென்ரிக், ராபர்ட் நோபிலி, அருளானந்தர், வீரமாமுனிவர் போன்றோர் இந்த வரிசையில் தவிர்க்க முடியாப் பிரபலங்கள். தமிழ் இலக்கியத்தில் அழியாத் தடம் பதித்தவர்கள். 

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சீகன்பால்க் தான் தமிழில் முதன் முதலில்  நூலை அச்சிட்டவர் என்று நினைப்பதுண்டு. உண்மையில் சீகன்பால்க் அவர்கள் காலத்தால் ஒரு நூற்றாண்டு பிந்தியவர். லூத்தரன் பிரிவைச் சேர்ந்த இவர் முதலில் பைபிளைத் தமிழ் மொழியில் அச்சிட்டார். கிபி 1714ல் இதைச் செய்து வரலாற்றில் இடம் பிடித்தார். இதற்குப் பின்பு வந்த ராபர்ட் கார்ட்வெல், ஜியூபோப் போன்றோர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் யாவரும் அறிந்ததே. 

அதன்பின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கிறிஸ்தவ நூல்கள் தமிழில் உருவாகின. இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்புவைப் பற்றிப் பாடிய தேம்பாவணி தமிழின் தலைசிறந்த கிறிஸ்தவ இலக்கிய நூல்களின் ஒன்று. கிபி 1726ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது இந்த நூல். கான்ஸ்டான்ஸோ பெஸ்கி எனும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளரை வீரமாமுனிவர் என்றால் தான் நாம் எளிதில் புரிந்து கொள்வோம். மதுரைச் சங்கம் அவரது தமிழ்ப் புலமையைப் பாராட்டி ராஜரிஷி பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது !

துன் உயிரை ஓம்பும் அருள் தோன்றி எனை ஆளும்,
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய்,
உன் உயிர் அளித்து எமை அளிப்ப, உயர் வீட்டை
மன் உயிர் எலாம் உற, வருத்தம் உறீஇ மாய்ந்தாய்! 

என இலக்கிய நயம் மிகும் பாடல்களால் தேம்பாவணி நம்மை ஈர்க்கிறது !

திருச்செல்வர் காவியம் எனும் நூல் ஈழத்தில் வெளியான முதல் கிறிஸ்தவ நூல் என நம்பப்படுகிறது. 1896ம் ஆண்டு யாழ்ப்பாணக் கவிஞரான பூலோக சிங்க அருளப்ப நாவலர், இந்த நூலை எழுதி வெளியிட்டார். புனைவுகளோடு கிறிஸ்தவ போதனைகளை சொல்லும் நூலாக இந்த நூல் அமைந்தது.  

ஜான் புன்யன் அவர்களால் எழுதப்பட்ட, உலகப் புகழ்பெற்ற பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ் எனும் நூலின் தமிழாக்கமான இரட்சண்ய யாத்திரீகம் (மீட்புப் பயணம்) பிரபலமான தமிழ் நூல்களில் ஒன்று. இதை ஹென்ரி ஆல்பர்ட் கிருஷ்ணபிள்ளை எழுதியிருந்தார். 1894ல் வெளியான இந்த நூல், இன்றும் பலராலும் விரும்பப்படுகின்ற கிறிஸ்தவ இலக்கிய நூல்களில் ஒன்றாக  அமைந்துள்ளது. 

இயேசுவின் வாழ்க்கை வரலாறைப் பற்றிய அலசலில் முதலில் நமக்குச் சிக்கும் நூல் திருவாக்குப் புராணம் எனலாம். கனகசபை என்பவர் எழுதிய இந்த நூல் 1853ம் ஆண்டு சென்னையில் வெளியிடப்பட்டது. இயேசுவை ‘வாக்கு’ என்கிறது விவிலியம். அந்த வாக்கின் வரலாறைப் பேசுவதால், திரு வாக்குப் புராணம் என நூலுக்கு அவர் பெயரிட்டார். இந்த நூல் கவிதை வரலாறாய் இயேசுவின் வாழ்க்கையைப் பேசியது.   

இன்னொரு குறிப்பிடத்தக்க நூல், ஜான் பால்மர் எழுதிய கிறிஸ்தாயனம்.  இந்த நூல் 1865ம் ஆண்டு நாகர்கோவிலில் வெளியிடப்பட்டது என்கிறது கிறிஸ்தவ வரலாறு. விருத்தங்களால் அமைந்துள்ள இந்த நூல் தமிழ் இலக்கியத்தின் அழகை இயேசுவின் வாழ்க்கையோடு இணைத்துக் கட்டுகிறது. ஒரு தமிழரால் எழுதப்பட்ட முதல் கிறிஸ்தவக் காப்பியம் இது எனலாம். குமரிமாவட்ட மயிலாடியைச் சேர்ந்தவர் ஜான் பால்மர் என்பது குறிப்பிடத்தக்கது. 

1891ம் ஆண்டு வெளியான கிறிஸ்து மான்மியம் எனும் நூல், இயேசுவின் பிறப்பு முதல் உயிர்ப்பு வரையிலான நிகழ்வுகளை அழகாய் வெளிப்படுத்தியது . ஸ்தோஷ் ஐயர் அவர்களால் எழுதப்பட்டு, சீகன்பால்க் அவர்களின் அச்சகத்தில், தரங்கம்பாடியில் வெளியான நூல் இது. 

டி.எம். ஸ்காட் அவர்கள் எழுதிய சுவிசேஷ புராணம் நூல், இயேசுவின் வாழ்க்கையைப் பேசிய இன்னொரு நூல். 1896ம் ஆண்டு வெளியான இந்த நூல் கிறிஸ்தவ இலக்கியத்தின் சிறப்பான நூல்களில் ஒன்று. ஸ்காட் அவர்கள் தனது பெயரை சுகாத்தியர் என மாற்றியிருந்தர். அந்த காலத்திலேயே திருக்குறளின் பால் ஈர்க்கப்பட்டு திருக்குறளுக்கு உரையெழுதியவர். ஔவையாரின் மூதுரையின் மீது காதல் கொண்டு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தவர். தமிழ் இலக்கியப் பக்கங்களில் இவருக்கு எப்போதும் தனியிடம் உண்டு. 

இயேசு நாதர் சரிதை, எனும் நூல் இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் 1926ல் சுவாமி சுத்தானந்த பாரதியார் என்பவரால் எழுதப்பட்டது. இலங்கையிலுள்ள ஆழ்வார் பிள்ளை அவர்கள் எழுதிய நசரேய புராணம், விழுப்புரம் ஆரோக்கிய சாமி அவர்களின் சுடர்மணி, பேராசிரியர் மரிய அந்தோணிசாமி அவர்களின் அருளவதாரம், பவுல் இராமகிருஷ்ணனின் மீட்பதிகாரம், ஈழத்தைச் சேர்ந்த பூராடனார் அவர்களின் இயேசு புராணம் போன்றவையெல்லாம் கவனிப்பைப் பெற்ற இயேசுவின் வாழ்க்கை வரலாறுகள் எனலாம்.  

அதன் பின் தற்காலம் வரை பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன மாணிக்க வாசகம் ஆசீர்வாதம் அவர்களின் திரு அவதாரம்,  நிர்மலா சுரேஷின் இயேசு மா காவியம், கண்ணதாசனின் இயேசு காவியம், சேவியர் எழுதிய இயேசுவின் கதை ஒரு புதுக்கவிதைக் காவியம், அருட்தந்தை வின்செண்ட் சின்னதுரை எழுதிய புதிய சாசனம், சத்திய சாட்சியின் இயேசு எனும் இனியர் – என நீள்கிறது இந்தப் பட்டியல்.

காப்பியங்கள், கீர்த்தனைகள், பாடல்கள், சிற்றிலக்கியங்கள், தழுவல்கள், மொழிபெயர்ப்புகள், உரைநடை, நாடகம், புதுக்கவிதை என பல்வேறு வடிவங்களில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு தமிழில் வெளியாகியிருக்கிறது. ‘இயேசு என்றொரு மனிதர் இருந்தார் ‘ எனும் இந்த நூல் எளிமையான உரைநடையிலும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் மிக எளிதில் புரிந்து கொள்ளும் ,மொழி நடையிலும், எந்த சித்தாந்தத்தையும் திணிக்காத நேர்மையிலும் சிறப்பிடம் பெறும் எனும் நம்பிக்கை எனக்குண்டு.

இனி, நீங்களும் இயேசுவும் !

அன்புடன்

சேவியர்

writerxavier@gmail.com

Posted in கிறிஸ்தவ இலக்கியம், Christianity, Life of JESUS

சிலுவைப்பாதை ! WAY of THE CROSS

சிலுவைப்பாதை
*

உன் பாவப் பழுவை
என் பாரச் சிலுவை
தோளோடு அழுத்தியதே

என் நேசப் பயணம்
உன் மீட்பின் தருணம்
கல்வாரி அழைக்கிறதே

என் பாவப் பழுவை
உன் பாரச் சிலுவை
தோளோடு அழுத்தியதே

உன் நேசப் பயணம்
என் மீட்பின் தருணம்
கல்வாரி அழைக்கிறதே

1

மரணத்துக்குத் தீர்ப்பிடப்படுகிறார் இயேசு

*

வாழ்வைத் தரவே புவியில் வந்தேன்
மரணம் கொடுத்தாயோ
பழியைச் சுமத்தி அழிவின் கரத்தில்
என்னை விடுத்தாயோ

பதவி சுகத்தைக் காக்க நுகத்தை
எனக்கு அளித்தாயோ
கரங்கள் கழுவி பாவக் கறையை
அழிக்க நினைத்தாயோ

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

2

இயேசுவின் தோளில் சிலுவையை சுமத்துகிறார்கள்

*

சாட்சியாகவே வாழச் சொன்னேன்
சாட்டை எடுத்தாயோ
முள்ளில் சிக்கிய உன்னை மீட்டேன்
முள்ளைக் கொடுத்தாயோ

திசைகள் எங்கும் புதுமை புரிந்தேன்
தசைகள் கிழித்தாயோ
கசைகள் கொண்டு உடலை கிழித்தே
உயிரை அறுத்தாயோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

3

இயேசு முதல் முறை தரையில் விழுகிறார்
*

இடறி இடறித் தரையில் விழுந்தேன்
பதற மறுத்தாயோ
பரமன் செயலைப் புரிய நினைத்தேன்
எனையும் வெறுத்தாயோ

பாதம் மண்ணில் படர்ந்து கொள்ள‌
தரையும் நழுவியதோ
வேதம் தன்னை ஏற்றுக் கொள்ள‌
இதயம் வழுவியதோ

4

வழியில் அன்னையைச் சந்திக்கிறார் இயேசு

*

கருவில் என்னை சுமந்த அன்னை
தெருவில் அழுகின்றாள்
தொழுவில் என்னை எடுத்த அன்னை
பழுவால் துடிக்கின்றாள்

தொலைந்த என்னை தேடி எடுத்தாள்
மீண்டும் தொலைத்தாளோ
மீட்பின் வழியில் என்னை முழுதும்
உனக்கே அளித்தாளோ

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

5

இயேசுவின் சிலுவையை சீமோன் சுமக்கிறார்
*

பின்னால் நடந்த கூட்டம் இன்று
வருந்தி வாடியதோ
பின்னங் கால்கள் பிடரி படவே
பயந்து ஓடியதோ

தயங்கும் பாதம் கண்ட சீமோன்
முன்னே வருகின்றார்
மயங்கும் எந்தன் நிலையைக் கண்டு
தோளைத் தருகின்றார்

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

6.

வெரோனிக்கா இயேசுவின் முகம் துடைக்கிறார்

பறவை போலே பருந்துகள் இடையே
ஒருத்தி வருகின்றாள்
நடுங்கும் கரத்தால் வடியும் முகத்தை
அழுத்தி துடைக்கின்றாள்

வதனம் துடைத்த துணிவின் துணியில்
முகத்தை பதிக்கின்றேன்
பரிவைத் தேக்கி வந்த மகளுக்கு
பரிசை அளிக்கின்றேன்

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

7

இரண்டாம் முறை இயேசு விழுகிறார்
*

குருதி தரையில் சிதறி மறைய‌
வலிமை இழக்கின்றேன்
உயிரை இழந்தப் பயிராய் தரையில்
மீண்டும் விழுகின்றேன்

விழுந்த இடத்தில் புதைந்திடாமல்
மீண்டும் எழுகின்றேன்
எழும்ப வலிமை தந்த‌ இறையை
மனதில் தொழுகின்றேன்

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

8.

இயேசு பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்
*

பாதை முழுதும் மகளிர் நின்று
எனக்காய் அழுதாரோ
எந்தன் தோளில் சிலுவை கொடுத்த‌
பழிக்காய் அழுதாரோ

வேண்டாம் எனக்காய் கண்ணில் ஈரம்
என்றேன் முடிப்பாயோ
இல்லம் வாழ நெஞ்சம் மாற‌
கண்ணீர் வடிப்பாயோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

 

9

மூன்றாம் முறை கீழே விழுகிறார் இயேசு
*

தரையும் என்னை தொடர்ந்து அழைக்க‌
மீண்டும் சரிகின்றேன்
மூன்றில் ஒன்றாய் ஆன நானும்
முறிந்து கிடக்கின்றேன்.

எந்தன் சித்தம் அல்ல தந்தை
சித்தம் காய்ந்திடுமோ
சாவின் அருகில் உயிரின் வலிமை
மொத்தம் சாய்ந்திடுமோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

 

10

இயேசுவின் ஆடைகளை உரிகிறார்கள்
*

இறுகப் பிடித்த உடைகள் தன்னை
உருவி எடுத்தாயோ
குருதி உடலை துளைத்துப் பாய‌
வலியை கொடுத்தாயோ

மீட்பை உனக்கு உடுத்த வந்தேன்
மானம் அழித்தாயோ
உடையைக் கூட அளிக்க மறுத்து
ஊனம் அடைந்தாயோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

11

இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்
*

விரித்த கரங்கள் இரண்டும் அலற‌
ஆணி அடித்தாயோ
நாடி நடந்த பாதம் தன்னில்
தேடி அடித்தாயோ

கள்ளர் நடுவே கள்ளன் போலே
என்னை வைத்தாயோ
உள்ளம் முழுதும் நஞ்சை வைத்து
ஜீவன் தைத்தாயோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

12

இயேசு சிலுவையில் உயிர்விடுகிறார்
*

அன்னை தன்னை சீடர் கரத்தில்
நானும் கொடுக்கின்றேன்
ஜீவன் தன்னை தந்தை கரத்தில்
தானே கொடுக்கின்றேன்

பகையை விடுத்து சிலுவை நிழலில்
அன்பை விதைக்கின்றேன்
கொடுத்த பணியை முடித்த நிறைவை
மனதில் பதிக்கின்றேன்

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

13

இயேசுவின் உடல் தாயின் மடியில்
*

துடிக்கும் அன்னை மடியில் நானும்
அடங்கிக் கிடக்கின்றேன்
வடிக்கும் அவளின் கண்ணீர் விழுந்தும்
சலனம் இழக்கின்றேன்

தொழுவில் அழகாய்ச் சிரித்த விழியில்
அழுகை நீரலையோ
பாவம் புரியும் மகனே உனக்கு
தாகம் தீரலையோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

14

இயேசுவின் உடல் கல்லறையில் வைக்கப்படுகிறது
*

மறையைச் சொன்ன எனையும் நீயும்
அறையில் அடைத்தாயோ
கருணை பொழிந்த விழிகள் தன்னைக்
குகையில் அடைத்தாயோ

எனது வலிகள் எனது பணிகள்
உனக்காய் அறிவாயோ
பாவம் அழிந்தால் நீயும் புதிதாய்
உயிர்ப்பாய் அறியாயோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

*

பாடல் . சேவியர் .
இசை : ஆனந்த கீதன்

Posted in Life of JESUS

இயேசு வரலாறு 1 : இயேசுவின் பிறப்பு

 Image result for Birth of Jesus
ரோமப் பேரரசிற்கு உட்பட்ட கலிலேயா நகரில் இருந்தது நாசரேத்து என்னும் ஓர் கிராமம். மலைகளின் பின்னால் மறைக்கப்பட்டிருந்த நாசரேத் நகரம் வணிகர்கள் கடந்து செல்லும் ஒரு நகரமாக இருந்ததால் ஒட்டகங்களும், வியாபாரிகளின் சத்தமும் அந்த நகரத்தை எப்போதுமே சூழ்ந்திருந்தன.

ரோம உளவாளிகள் வணிகர்களின் வடிவில் நாசரேத் நகர் இருக்கும் கலிலேயா, எருசலேம் நகரை உள்ளடக்கிய யூதேயா போன்ற ரோமப் பேரரசுக்கு உட்பட்ட நகரங்களில் உலவிக் கொண்டிருப்பது வழக்கம். அந்த பயத்தின் காரணமாக ரோமப் பேரரசருக்கு எதிராக எந்தக் குரல்களும் அங்கே எழுவதில்லை. மக்கள் தங்கள் வேலை உண்டு தாங்கள் உண்டு என்னும் மனநிலையில் தங்களுடைய கடமைகளை ஆற்றிக் கொண்டிருந்தார்கள். கி.மு 1009ல் தாவீது மன்னன், பின் கி.மு 971 இல் அவருடைய மகனான ஞானத்தின் இருப்பிடம் என்று புகழப்படும் சாலமோன் மன்னன் போன்றவர்கள் கொடிகட்டிப் பறந்த சுதந்திர மண் இப்போது ரோமப் பேரரசின் கீழ் வந்து அகஸ்து சீசர் என்னும் மன்னனுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்தது. கடவுளின் வழியை விட்டு மக்கள் விலகிப் போகும் போதெல்லாம் அடிமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்னும் உறுதியான எண்ணம் யூத மக்களிடம் இருந்தது.

கலிலேயா கிராமம் உழைப்பாளிகள் நிறைந்த கிராமம். அந்த கிராமத்தில் தச்சு வேலை செய்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன். மரப்புழுதி சூழ்ந்திருந்த அவன் கடையில் மர சாமான்கள் புதிது புதிதாக பிறந்து கொண்டிருந்தன. உழைப்புக்குச் சற்றும் சலிக்காத அவன் தன்னுடைய வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். தன் வாழ்க்கைக்காக தானே உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருந்தான் அவன். அவனுடைய பெயர் யோசேப்பு. யூத ஏட்டுச் சுருள்களை வாசிப்பதும், தன்னுடைய கடமையைச் செய்வதுமாக சென்று கொண்டிருந்தது அவனுடைய வாழ்க்கை. எதற்கும் அதிர்ந்து பேசாத, எதிர்ப்பைக் கூட மென்மையாகக் காட்டும் மனம் படைத்தவனாக இருந்தான் யோசேப்பு.

அவருக்கு திருமண ஒப்பந்தம் முடிந்திருந்தது. மணப்பெண்ணின் பெயர் மரியா. அழகிலும், அமைதியிலும் மரியா தனித்துவத்துடன் இருந்தாள். தனக்கு மனைவியாக ஒரு அழகான, கலாச்சார மீறல் இல்லாத ஒரு பெண் அமையப்போவதை நினைத்து யோசேப்பு மிகவும் மகிழ்ந்தார். தன்னுடைய உழைப்பை அதிகமாகச் செலுத்தி தன் மணவாழ்க்கைக்காக அதிகம் பொருளீட்டத் துவங்கினாள். மரியாவும், யோசேப்பைக் கணவனாக அடைவதில் பெருமையடைந்தாள். தாவீது மன்னனின் பரம்பரையில் வந்த யோசேப்பின் பூர்வீகமும், அவருடைய கடவுள் நம்பிக்கையும், கடினமாக உழைக்கும் போக்கும், மென்மையான மனப் பாங்கும் மரியாவின் உள்ளத்தில் யோசேப்பைக் குறித்த கனவுகளை கிளறிவிட்டிருந்தன.

அந்த ஆனந்தமான சூழலில் ஒரு சூறாவளியாக வந்தது தேவதூதன் ஒருவரின் காட்சி. மரியா தன்னுடைய வீட்டில் அமர்ந்திருக்கையில் திடீரென அவளுக்கு முன்னால் வந்து நின்றான் அவன். ஒளிவெள்ளம் தன்னைச் சூழ ஒரு தேவதூதன் தன் முன்னால் வந்து நிற்பதைப் பார்த்த மரியா திகைத்தாள். வந்திருப்பது தேவதூதன் என்பதை அறிந்ததும் அவளுடைய உள்ளம் பதை பதைத்தது. ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ என்று அஞ்சி நடுங்கினாள். படித்தும் கேட்டும் மட்டுமே பழக்கமான தேவதூதன் ஒருவனை நேரில் பார்ப்பது எவ்வளவு திகிலூட்டக் கூடியது என்பதை மரியா அன்று உணர்ந்தாள்.

‘அருள் நிறைத்தவளே வாழ்க’ தூதன் சொன்னான். மரியா குழம்பினாள். நான் அருள் நிறைந்தவளா ? சாதாரணமான குடும்பத்தில் உள்ளவள் நான். நான் எப்படி அருள் நிறைந்தவளாக முடியும் ? மரியாவின் மனதில் பயம் கேள்விகளை விதைத்தது.

‘கடவுள் உம்முடன் இருக்கிறார். நீர் பெண்களுக்குள் மகிமையானவர்’ தூதன் மீண்டும் சொல்ல மரியா குழப்பத்தின் உச்சிக்குத் தாவினாள். என்ன சொல்கிறார் தூதர். நான் பெண்களுக்குள் பாக்கியம் செய்தவளா ? அப்படி என்ன பாக்கியம் செய்தேன் ? ஒரு வேளை யோசேப்பைத் திருமணம் செய்யப்போவதைத் தான் குறிப்பிடுகிறாரோ ? மரியாவின் மனதில் கேள்விகள் நிற்காமல் வழிந்தன.

தேவதூதன் அவளை ஆறுதல் படுத்தினான். ‘மரியே அஞ்சவேண்டாம். நீர் கடவுளின் அருளைப் பெற்றவர். நான் ஒரு ஆனந்தச் செய்தியை சொல்லத் தான் வந்திருக்கிறேன். நீர் ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்று பெயரிடுங்கள். அவர் முடிவில்லாத ஒரு ஆட்சியைத் தருவார். மன்னர் தாவீதின் அரியணை இனிமேல் அவருக்குச் சொந்தமாகும்’ தேவதூதன் சொல்ல மரியா வியந்தாள்.

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே. இப்போதுதான் மண ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதற்குள் எப்படி எனக்குக் குழந்தை பிறக்கும் ? மரியாள் கேட்டாள்.

நீர் கருத்தாங்குவது கடவுளின் ஆவியால் தான். தூய ஆவி உம் மேல் இறங்கும், நீர் கருத்தரிப்பீர். தூதன் சொல்ல மரியாள் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தாள். மண ஒப்பந்தமாகி இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு செய்தி வருகிறதே. கடவுளின் ஆவியால் தான் கர்ப்பமானேன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா ? என்று மரியாவின் மனதில் ஏராளம் கேள்விகள். ஆனாலும் சிறுவயது முதலே இறைபக்தியில் வளர்ந்த மரியாவால் எதையும் மறுத்துச் சொல்ல முடியவில்லை. தூதனின் செய்தியை ஏற்றுக் கொண்டாள்.

மரியா கர்பமாய் இருக்கும் செய்தி யோசேப்பின் காதுகளை எட்டியது. யோசேப்பு அதிர்ந்தார். அன்பும், மரியாதையும் வைத்திருந்த மரியா தனக்குத் துரோகம் செய்து விட்டாளே என்று மனதுக்குள் எரிச்சலும், ஆத்திரமும், கோபமும் கொண்டார். இவ்வளவு அன்பு வைத்திருக்கும் தன்னை மரியா எப்படி துரோகம் செய்யலாம், தன்னிடம் எதுவும் சொல்லாமல் இப்படி ஒரு தவறைச் செய்திருக்கிறாரே என்று யோசேப்பு உள்ளம் உடைந்தார். மரியாவைத் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்தார். ஆனாலும் மரியா கர்ப்பமாய் இருக்கும் செய்தியை ஊருக்குத் தெரியப்படுத்த அவருடைய மென்மையான மனது இடம் தரவில்லை. எனவே காதும் காதும் வைத்தது போல திருமண ஒப்பந்தத்தை உடைத்துப் போடவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

மனதுக்குள் கவலை வந்து அமர்ந்து கொள்ள தூக்கமில்லாமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தார் யோசேப்பு. எப்போது தூங்கிப் போனார் என்று தெரியாது அவருடைய தூக்கத்தில் வந்து நின்றார் அதே தேவதூதன். தூதன் யோசேப்பின் கனவில் புன்னகைத்தான்.

யோசேப்பு வருத்தப் பட வேண்டாம்.மரியா கர்ப்பமாய் இருப்பது மரியா செய்த தவறல்ல, அது கடவுளின் வரம். கடவுளின் மகனைத் தான் அவர் ஈன்றெடுக்கப் போகிறார். எனவே நீர் வருத்தப்படாமல் மரியாவை மணமுடிக்கலாம்.

திடுக்கிட்டு விழித்த யோசேப்பின் காதுகளின் தேவதூதனின் குரல் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. இயல்பிலேயே இளகிய மனமும், இறைபக்தியும் கொண்ட யோசேப்பு தூதனின் சொல்லை ஏற்றுக்கொண்டார்.

ரோம் பேரரசை ஆட்சி செய்து கொண்டிருந்த அகஸ்து சீசர் ஒரு கட்டளை பிறப்பித்தார். அதன்படி அவருடைய பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதுவும் அவர்கள் வசிக்கும் இடத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய இயலாது அவர்களுடைய பூர்வீக கோத்திரம் எங்கேயோ அங்கே சென்று தான் அவர்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். மக்கள் தொகையைக் கணக்கிட்டு தனக்குச் சேரவேண்டிய வரியைத் தராமல் ஏமாற்றும் மக்களைக் கண்டறிய வேண்டும் என்னும் நோக்கமே அவரிடம் இருந்ததாக மக்கள் உள்ளுக்குள் கொதிப்படைந்தார்கள். ஆனாலும் பேரரசிடமிருந்து நேரடியாகவே வந்த அந்த அரசாணையை யாரும் மீறத் துணியவில்லை. பொதுவாக சிற்றரசர்களிடமிருந்தே அரசாணைகள் வரும். அப்படிப் பார்த்தால் அப்போது அங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த ஏரோதிடமிருந்தே கட்டளை பிறந்திருக்க வேண்டும். ஏரோதை அகஸ்து சீசர் நம்பவில்லையா ? அல்லது இந்தக் கட்டளை வீரியத்துடன் பரவ வேண்டுமென்று நினைத்தாரா தெரியவில்லை. கட்டளை சீசரிடமிருந்தே வந்தது.

மரியாவுக்கு அப்போது நிறைமாதம். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறந்து விடக் கூடும் என்னும் நிலையில் இருந்தார். மன்னனின் கட்டளையை மீறவும் முடியாமல், எல்லோருமே செல்லவேண்டும் என்னும் கட்டாயத்தினால் மரியாவை வீட்டில் விட்டுச் செல்லவும் முடியாமல் யோசேப்பு தவித்தார். யோசேப்பும் மரியாவும் யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்னும் இடத்துக்குச் செல்ல வேண்டி இருந்தது.

பெத்லகேம் கலிலேயாவிலிருந்து சுமார் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. பயணம் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் நீடிக்கலாம். நடந்தோ கழுதையின் மீதமர்ந்தோ தான் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை. ஊர் பரபரப்பாய் இருந்தது. மக்கள் குடும்பம் குடும்பமாக உணவுப் பொட்டலங்களுடனும், கூடாரமடிக்கத் தேவையான பொருட்களுடனும் பெத்லேகேமுக்குச் செல்லத் துவங்கியிருந்தார்கள். யோசேப்பும் ஒரு கழுதையை ஏற்பாடு செய்து அதில் மரியாவை அமரவைத்து பெத்லேகேமை நோக்கிய பயணத்தைத் துவங்கினார்.

மூன்று நாள் பயணத்தின் முடிவில் அவர்கள் பெத்லேகேமை அடைந்தனர். பெத்லகேம் நெரிசல் காடாய் மாறியிருந்தது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். பல்வேறு இடங்களில் தங்கியிருந்த மக்கள் அனைவரையும் மன்னனின் ஆணை பெத்லேகேமுக்கு அழைத்து வந்திருந்தது. மக்கள் வெள்ளம் சாலைகளில் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. யோசேப்பு விடுதி ஒன்றை அணுகினார். விடுதிகளின் படிகளிலும் மக்கள் அமர்ந்திருந்தார்கள். விடுதிக் காப்பாளனை அணுகிய யோசேப்பு தனக்கு ஒரு படுக்கை வசதி வேண்டுமென்று வினவினார். விடுதிக் காப்பாளன் சிரித்தான். பெத்லகேம் நகரில் எந்தப் படுக்கையும் காலியாக இல்லை. எப்போதோ நிறைந்து விட்டது என்றான். யோசேப்பு திகைத்தார். மரியாவோ நிறை மாத கர்ப்பத்தில், விடுதிகளோ நிறைந்து வழியும் நிலையில். யோசேப்பு கெஞ்சினார். எப்படியேனும் மரியாவுக்கு ஒரு இடம் அளிக்கவேண்டும் என்று விண்ணப்பம் வைத்தார். மரியாவின் கண்களில் பேறுகால வலி மிதந்தது. மரியா எப்போது வேண்டுமானாலும் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் நிலையில் இருப்பதைக் கண்ட விடுதிக் காப்பாளனின் மனைவி மனது வைத்தார்.

‘ஒரு இடம் இருக்கிறது அங்கே உங்களால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை’

‘எந்த இடமானாலும் பரவாயில்லை. மரியாவுக்குத் தேவையான தனிமையும், ஓய்வும் கிடைத்தால் போதும்’ யோசேப்பு சொன்னார்.

‘விடுதியின் பின்னால் ஒரு தொழுவம் இருக்கிறது. தங்கிக் கொள்ளுங்கள்.’

‘தொழுவமா ?’ யோசேப்பு வினாடி நேரம் திகைத்தார். அப்போதைய நிலையில் ஏதேனும் ஒரு இடம் அவருக்குத் தேவையாய் இருந்தது. ஒருவேளை அந்த இடம் வேண்டாமென்று சொன்னால் அதை ஆக்கிரமிப்பதற்கும் தயாராய் இருந்தது முண்டியடித்துக் கொண்டிருந்த கூட்டம்.

‘மிக்க நன்றி’ மரியா நன்றி சொன்னாள்.

யோசேப்பும் மரியாவும் தொழுவத்தை நோக்கி நடந்தார்கள்.

தொழுவம் மாடுகளாலும், அவற்றின் கழிவுகளாலும் நிரம்பியிருந்தது.

இரவு.

ஓய்வெடுப்பதற்காக மக்கள் விடுதிகளின் அறைகளிலும், கூடாரங்களின் உள்ளேயும் புகுந்து வெகுநேரமாகி இருந்தது. அந்த இரவில், தொழுவத்தில் கால்நடைகள் கண்ணயர்ந்திருந்த வேளையில் மரியா குழந்தையைப் பெற்றெடுத்தாள். மரியா தாயானாள். குழந்தையைக் கிடத்துவதற்கும் அந்தத் தொழுவத்தில் நல்ல இடம் இருக்கவில்லை. இருந்த துணிகளில் குழந்தையைப் பொதிந்து அவர்கள் தீவனத் தொட்டியில் கிடத்தினார்கள். வீதிகளும், விடுதிகளும் இயேசுவின் பிறப்பை அறியாமல் சலசலத்துக் கொண்டிருக்க,

வரலாற்று நாயகன் இயேசு வைக்கோல் மீதில் துயின்றார்.

Posted in Life of JESUS

இயேசு வரலாறு 2. ஞானிகள் வாழ்த்தும், ஏரோது மன்னனின் பயமும்

Image result for 3 wise men and child jesus

கிழக்கு தேசத்தில் மூன்று வானியல் ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் காலத்தின் மாற்றங்களையும், வானத்தின் நிகழ்வுகளையும் வைத்து சம்பவங்களை அறிந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள். அதிலும் குறிப்பாக வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களை வைத்து உலகில் நடக்கும் முக்கிய சம்பவங்களை கணிப்பதில் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.

ஒருநாள் அவர்கள் வானத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது அதைக் கண்டார்கள்.

ஒரு வால் நட்சத்திரம். வழக்கத்துக்கு மாறாக, ஒரு புத்தம் புதிய வால் நட்சத்திரம். இதுவரை பார்த்த நட்சத்திரங்களிலிருந்து வேறுபட்டுத் தோன்றிய வால் நட்சத்திரம் அவர்களுடைய கவனத்தில் ஆர்வத்தைக் கூட்டியது. அவர்கள் அந்த நட்சத்தித்தின் தோன்றல் காரணம் குறித்து தங்களுக்குள் பேசத் துவங்கினார்கள்.

தங்கள் கலந்துரையாடலின் முடிவில் அந்த வால்நட்சத்திரம் புதிய அரசன் பிறந்திருப்பதன் அடையாளம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். வால்நட்சத்திரம் யூதேயா நாட்டின் மேல் தன்னுடைய வெளிச்ச வாலை நீட்டிக் கொண்டிருந்தது.

அப்படியானால், யூதேயா நாட்டில் ஒரு மன்னன் பிறந்திருக்க வேண்டும். யூதேயாவின் மன்னன் ஏரோதின் அரண்மனையில் தான் அவன் பிறந்திருக்க வேண்டும். ஞானிகள் யூதேயா நோக்கிப் பயணம் செய்ய முடிவெடுத்தார்கள். ஏரோதின் அரண்மனைக்குச் சென்று புதிய மன்னனைக் கண்டு வணங்கி அவருக்கு பரிசுகள் அளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம்.

ஞானிகள் தங்களுக்குள்ளே கலந்துரையாடிக் கொண்டு, விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து, பொன், தூபம், நறுமணப் பொருளான வெள்ளைப் போளம் இவற்றை காணிக்கையாக எடுத்துக் கொண்டு நல்ல ஒட்டகங்களில் ஏறி ஏரோது மன்னனின் அரண்மனையை நோக்கி பயணித்தார்கள். அரண்மனை யூதேயா நாட்டின் தலை நகரான எருசலேமில் இருந்தது.

அரண்மனையைச் சென்றடைந்த ஞானிகள் ஏரோது மன்னனைக் கண்டு வணங்கினார்கள். தனக்கு முன்னால் வந்திருக்கும் ஞானிகளைக் கண்ட ஏரோது நெற்றி சுருக்கினான். காரணம் புரியாமல் குழம்பினான்.

‘வாருங்கள் ஞானியரே. உங்கள் வரவு நல்வரவாகுக. நீங்கள் யார்? . என்ன சேதி ?’ மன்னன் கேட்டான்.

ஞானியர்கள் மன்னனின் முன்னால் தலை வணங்கி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

‘அரசே என் பெயர் காஸ்பர், இவர் மெல்கியர், பெல்தாசர் நாங்கள் மூவரும் யூதர்களின் அரசரைக் காண வந்திருக்கிறோம்’ ஞானிகள் சொன்னார்கள்.

‘நான் தான் இந்த நாட்டின் மன்னன். உங்களுக்குத் தெரியாதா ?’ மன்னன் புன்னகைத்தான்.

‘அரசே மன்னிக்க வேண்டும். யூதர்களுக்கு அரசனாக வேண்டிய ஒரு பாலகன் பிறந்திருக்கிறானே. அவரைக் காண வந்திருக்கிறோம்’

‘என்ன உளறுகிறீர்கள். அரண்மனையில் என்னுடைய வாரிசுகள் யாரும் பிறக்கவில்லை. உங்களுக்கு யாரோ தவறான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்’ மன்னன் சொன்னான்.

‘இல்லை அரசே. மக்கள் யாரும் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை, வானத்து நட்சத்திரம் சொல்லிற்று. அதனால் தான் வந்தோம்.’

‘வானத்து நட்சத்திரமா ? புரியவில்லையே ?’ மன்னன் கேட்டான்.

‘ம் அரசே. வானத்தில் புதிதாய் வால் நட்சத்திரம் ஒன்றைக் கண்டோம். அதன் பொருள் ஒரு மீட்பர், ஒரு மாபெரும் மன்னன் பிறந்திருக்கிறார் என்பது தான். அந்த அரசர் யூதேயாவில் தான் பிறந்திருக்கிறார். அதனால் தான் இங்கே வந்தோம்’

‘நீங்கள் தவறாகக் கணித்திருப்பீர்கள். இங்கே புதிய அரசன் பிறக்கவில்லை’

‘அதெப்படி அரசே அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள். ஒரு வேளை அரண்மனையில் பிறக்காத ஏதேனும் குழந்தை நாளை அரசராகலாம் இல்லையா ?’ ஞானிகள் சொன்னதும் மன்னன் அதிர்ந்தான்.

‘என்ன சொல்கிறீர்கள்’

‘ம் அரசே. புதிய அரசர் பிறந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் அரண்மனையில் பிறக்கவில்லை என்பதும் இப்போது தெளிவாகி விட்டது. அப்படியானால் அவர் நாட்டில் வேறு ஏதோ ஒரு வீட்டில் தான் பிறந்திருக்க வேண்டும்’ ஞானிகள் உறுதியுடன் சொன்னார்கள்.

‘சரி. நீங்கள் அரண்மனையிலேயே சில நாட்கள் தங்கியிருங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்’ மன்னன் கூறினான்.
ஞானிகள் அகன்றதும் மன்னன் அரண்மனைப் பணியாளனை அழைத்தான்,

‘எல்லா தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருக்கும் மறைநூல் அறிஞர்கள் அனைவரையும் உடனே அரண்மனையில் ஒன்று கூட்டு’ என்று ஆணையிட்டான். மன்னனின் ஆணைப்படி அனைவரும் அரசர் முன்னிலையில் ஒன்று திரண்டனர்.

‘நான் உங்களை எதற்குக் கூட்டி வந்திருக்கிறேன் தெரியுமா ?’ மன்னன் கேட்டான்.

‘இல்லை அரசே. ஏதோ அவரச நிலை என்பது மட்டும் புரிகிறது’ தலைமைக் குரு சொன்னார்.

‘கிழக்கு திசை நாட்டிலிருந்து மூன்று ஞானிகள் அரண்மனைக்கு வந்திருக்கிறார்கள். யூதர்களின் புதிய அரசனைச் சந்திப்பதற்காக !’ மன்னன் சொல்லி நிறுத்தினான்.

‘புதிய மன்னனா ?’

‘ம். அப்படித் தான் அவர்கள் சொன்னார்கள். புதிய வால் நட்சத்திரம் ஒன்றைக் கண்டார்களாம். அதன் படி ஒரு புதிய மீட்பர் நம்முடைய நாட்டில் தோன்றியிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை’

மன்னன் சொல்லச் சொல்ல அனைவரும் குழம்பிப் போய் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.

‘எனக்கு இப்போது ஒரு விஷயம் தெளிவாக வேண்டும். அரசரோ, மீட்பரோ, மெசியாவோ ஒருவர் நம்முடைய நாட்டில் பிறக்கிறார் என்றால் அவர் எங்கே பிறப்பார் ? அரண்மனையில் அவர் பிறக்கவில்லை ! அப்படியானால் எங்கே பிறந்திருக்கக் கூடும் ?’

‘பெத்லகேம் !’ மறைநூல் அறிஞர் ஒருவர் சொன்னார்.

‘பெத்லகேம் ? என்ன சொல்கிறீர்கள் ? அந்த கிராமத்திலா அவர் பிறப்பார். அது ஒரு பின் தங்கிய கிராமம் அல்லவா ? அங்கே இருப்பவர்கள் எல்லோரும் சாதாரண ஏழைகள் அல்லவா ? ஞானிகளோ, அரச பரம்பரையினரோ அங்கே இல்லையே ?’ மன்னன் சந்தேகக் கேள்விகளை அடுக்கினான்.

‘ஆனால் மறைநூல் வார்த்தை அப்படிச் சொல்கிறது அரசே ?’

‘மறை நூல் வாக்கு சொல்கிறதா ?’

‘ ஆம்.. அரசே. மீக்கா எனும் தீர்க்கத் தரிசி ஒருவர் பல நூறு ண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்’

‘என்ன சொல்லியிருக்கிறார். தெளிவாகச் சொல்லுங்கள்’ மன்னனின் குரலில் அதிர்ச்சி மெலிதாக வெளிப்பட்டது.

‘யூதா நாட்டு பெத்லேகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை. ஏனெனில் என் மக்களாகிய இஸ்ரயேலரை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார். என்பதே அந்த வாக்கு அரசே’

‘அப்படியானால் ஞானிகள் சொன்னது உண்மையாக இருக்கலாம். மீட்பர் ஒருவர் பெத்லேகேமில் பிறந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களா ?’ மன்னன் மீண்டும் கேட்டான்.

‘அப்படி ஒரு முடிவிற்குத் தான் வரவேண்டியிருக்கிறது அரசே. வானியல் ஞானிகள் சொன்னது உண்மையா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் மீட்பர் பெத்லேகேமில் பிறந்திருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன’ அவர்கள் உறுதியுடன் சொல்ல ஏரோது ஏகமாய் கலங்கினான். தன் அரியணை பறிபோய் விடுமோ என பரிதவித்தான்.

இந்தச் செய்தி எருசலேம் முழுவதும் பரவியது.எருசலேம் வாழ் மக்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியூட்டுவதாகவும், கலக்கமூட்டுவதாகவும் இருந்தது.

மன்னன் ஞானிகளை அழைத்தான்.

‘ஞானிகளே. என்னிடம் உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் விண்மீனைக் கண்டது உண்மை தானே ?’ மன்னன் அதிகாரத் தோரணையில் கேட்டான்.

‘ம் அரசே. மன்னனிடம் நாங்கள் பொய் சொல்வோமா ?’ ஞானிகள் பதில் சொன்னார்கள்.

‘சரி. நான் மறைநூல் அறிஞர்களையும், தலைமைக் குருக்களையும் அழைத்து விசாரித்தேன். நீங்கள் சொல்லும் மீட்பர் பெத்லேகேமில் பிறந்திருக்கக் கூடும் என்பது அவர்களின் கணிப்பு’ மன்னன் சொன்னான்.

‘நன்றி அரசே. நாங்கள் சென்று அவரைக் கண்டு வணங்க வேண்டும். நாங்கள் புறப்படலாமா ?’

‘கண்டிப்பாக. நீங்கள் பெத்லகேம் சென்று அவரைத் தரிசியுங்கள். அவரைத் தரிசித்தபின் என்னிடம் வந்து அவருடைய இருப்பிடத்தைத் தெரியப்படுத்துங்கள். அவரை நானும் வணங்கவேண்டும். என்னுடைய நாட்டில் மீட்பர் பிறந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு நான் அரச மரியாதை செலுத்த வேண்டும். எனவே நீங்கள் பாலனைக் கண்டு வணங்கியபின் என்னிடம் வந்து சொல்லுங்கள்’ மன்னன் சொன்னான். அவர்கள் கண்டு வந்து சொன்னதும் பாலனைக் கொன்றுவிடவேண்டும். அரசராக நான் இருக்கும் வரை இன்னொரு அரசர் இந்த நாட்டில் பிறக்கக் கூடாது. ஏரோது உள்ளுக்குள் சதித்திட்டம் தீட்டினான்.
ஞானிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் வால்நட்சத்திரம் இருக்கும் திசை நோக்கி நடந்து கொண்டே இருந்தார்கள். வால் நட்சத்திரம் அவர்களுக்கு முன்னால் நகர்ந்து கொண்டே இருந்தது. சென்று கொண்டிருந்த விண்மீன் ஒரு இடத்தில் வந்ததும் நின்றது. அதன் ஒளி ஒரு குடிசையின் மீது படர்ந்தது. விண்மீன் நின்றதைக் கண்டதும் ஞானிகள் உற்சாகமடைந்தார்கள். அந்த குடிசைக்குள் விரைந்து சென்றார்கள்.

அது ஒரு தொழுவம். அங்கே மரியாவின் கைகளில் ஒரு குழந்தை. கந்தல் துணியால் சுற்றப்பட்ட கள்ளம் கபடமற்ற மழலை முகம். அருகிலேயே யோசேப்பு. சுற்றிலும் கால்நடைகள்.

ஞானிகள் ஒரு வினாடி திடுக்கிட்டனர். வானத்தில் அதிசய வால்நட்சத்திரம். பூமியில் தொழுவத்தில் அரசரா ? இத்தனை எளிமையாய் ஒரு மீட்பரா என்று வினாடி நேரம் உள்ளுக்குள் கேள்விகளை உருட்டியவர்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தனர்.

பட்டாடைகள் தொழுவத்தின் அழுக்கில் புரள, தங்களுக்கு முன்பாக விழுந்து கிடக்கும் மூன்று ஞானிகளைக் கண்ட மரியாவும், யோசேப்பும் பதறினார்கள்.

‘ஐயா நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள்’ யோசேப்பு கேட்டார்.

‘நாங்கள் கிழக்கு திசையிலிருந்து வரும் ஞானிகள். நீண்ட தூரம் பயணித்து இங்கே வந்திருக்கிறோம். அரசரைக் காண்பதற்காக !’ அவர்கள் சொன்னார்கள்.

‘இந்தக் குழந்தையைப் பற்றி உங்களுக்குச் சொன்னது யார் ?’ யோசேப்பு வியந்தார்.

‘வானம் ‘

‘வானமா ?’

‘ம். வானத்தில் ஒரு அதிசய வால் நட்சத்திரம் தோன்றியது. அதுதான் எங்களை வழிநடத்தியது !. இவரைக் காணும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஞானிகள் சொன்னார்கள்’.

‘இதோ பொன்…’ இது எனது காணிக்கை. ஒரு ஞானி தன் ஒட்டகத்தில் சுமந்து வந்திருந்த மூட்டையை குழந்தையின் முன்னால் வைத்தார்.

‘இது தூபம். சாம்பிராணி… என்னுடைய காணிக்கை’ இரண்டாவது ஞானி காணிக்கை படைத்தார்.

‘இதோ வெள்ளைப் போளம். இது என்னுடைய காணிக்கை’ மூன்றாவது ஞானி பேழையைத் திறந்து காணிக்கை கொடுத்தார்.

பொன் மிக விலையுயர்ந்த அந்தஸ்தின் அடையாளம். தூபம் என்பது வழிபாட்டுக்குரியவர் என்பதன் அடையாளம். வெள்ளைப்போளம் மிகவும் நறுமணம் மிகுந்த பொருள். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது இதை கல்லறையில் வைப்பதும் அரச குலத்தினரின் வழக்கம். மரியாவும், யோசேப்பும் நடப்பதையெல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

ஞானிகள் குழந்தையை வணங்கிவிட்டு விடைபெற்று அரண்மணை நோக்கி பயணித்தார்கள்.

இரவு. ஞானிகள் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.

அவர்கள் மூவருமே அன்று ஒரு கனவு கண்டார்கள். கனவில் ஒரு தேவதூதன் தோன்றினான்.
‘ஞானிகளே. நீங்கள் ஏரோது மன்னனின் அரண்மனைக்குச் செல்லவேண்டாம். அவனுக்கு எந்தத் தகவலையும் அளிக்க வேண்டாம். வேறு வழியாக உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’

கனவு கண்ட அவர்கள் திடுக்கிட்டு விழித்தார்கள். அனைவரும் ஒரே கனவைக் கண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்கள். இது கடவுளின் கட்டளை தான். நாம் நம்முடைய பயணத்தை மாற்றிக் கொள்வோம். இனிமேல் எருசலேமிற்கே செல்லவேண்டாம். வேறு வழியாக நம்முடைய நாட்டுக்குப் போவோம். மன்னனின் கட்டளையை மீறலாம், ஆனால் கடவுளின் கட்டளையை மீறக் கூடாது !’ ஞானிகள் முடிவெடுத்தார்கள்.

அதே இரவில் யோசேப்பும் ஒரு கனவு கண்டார். கனவில் கடவுளின் தூதன் யோசேப்பை நோக்கி,
‘யோசேப்பு ! நீர் எழுந்து குழந்தையையும் எடுத்துக் கொண்டு எகிப்து நாட்டுக்குச் செல்லும். இங்கே ஏரோது மன்னன் குழந்தையைக் கொல்ல சூட்சி செய்கிறான். நான் சொல்லும் வரை நீங்கள் எகிப்திலேயே தங்கியிருங்கள்’ என்றான்.

யோசேப்பு உடனே எழுந்தார். மரியாவை எழுப்பி, இயேசுவையும் எடுத்துக் கொண்டு அந்த இரவிலேயே எகிப்தை நோக்கிப் பயணித்தார்.

Posted in Life of JESUS

இயேசு வரலாறு 3 : பாதகர்கள் கையில் பாலகர்கள்

Image result for Herod kills kidsஇதற்கிடையில் ஏரோது மன்னன் ஞானிகளின் வருகைக்காகக் காத்திருந்தான். நாட்கள் கடந்து கொண்டேயிருந்தன. ஞானிகளைக் காணவில்லை !

ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டனர் என்பது ஏரோதுக்கு விளங்கியது. தன்னுடைய ஆணையை மீறி ஞானிகள் செயல்பட்ட கோபமும், தன்னுடைய அரசாட்சிக்கு ஆபத்தாக ஒரு அரசன் தோன்றியிருக்கும் கோபமும் அவருக்குள் பெரும் எரிமலையாக உடைந்து சிதறியது. குழந்தையைக் கொல்லவேண்டும் என்ற தன்னுடைய திட்டம் தோல்வியில் முடியுமோ என்னும் கவலை அவனை ஆட்கொண்டது. ஆனால் எப்படியும் குழந்தையைக் கொன்றே ஆகவேண்டும் என்னும் வெறி அவனுக்குள் ஊறியது. யார் அந்தக் குழந்தை ? அவன் எப்படி இருப்பான் ? அவனுடைய பெற்றோர் யார் ? எதுவுமே ஏரோதுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவனிடம் இருக்கும் ஒரே ஒரு செய்தி, அந்தக் குழந்தை பெத்லேகேமில் இருக்கிறது !. ஆனால் பெத்லகேம் நகரமோ ஆட்களின் கூட்டத்தால் பிதுங்கி வழிகிறது. அங்கே எப்படிக் கண்டு பிடிப்பது குழந்தையை ?

அவனுடைய மனதுக்குள் ஒரு கொடூரமான எண்ணம் பிறந்தது. எந்தக் குழந்தை என்று கண்டுபிடிப்பது தானே கஷ்டம். எந்தக் குழந்தையுமே உயிரோடு இல்லாவிட்டால் அந்தக் குழந்தையும் இறந்து போகும் அல்லவா ? அப்படியானால் எல்லா ஆண்குழந்தைகளையும் கொல்வதற்குச் சட்டம் இயற்றலாமா ? அப்படி ஒரு கொடூரமான சட்டம் இயற்றினால் சீசரின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமா ? ஏரோது பலவாறாகச் சிந்தித்தான். ஆனால் அவனுடைய மனதில், தன்னுடைய சிம்மாசனத்துக்கு எங்கிருந்தும் எந்த விதத்திலும் போட்டி வந்து விடக் கூடாது. தான் இறக்கும் வரை மன்னனாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் பாறைபோல நின்றது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு உத்தரவிட்டான்.

‘உடனே சென்று பெத்லேகேமிலும் அதன் சுற்றுப் புறங்களிலுள்ள ஊர்களிலும் இருக்கும் இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று விடுங்கள்’ மன்னனின் ஆணை கோபத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.

மன்னனின் பணியாளர்கள் மறுபேச்சுப் பேசி பழக்கமில்லாதவர்கள். ஆணையைப் பொறுக்கிக் கொண்டு பெத்லேகேமிற்குச் சென்றார்கள்.

‘இங்கே உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளையெல்லாம் கொல்லவேண்டும் என்பது மன்னனின் ஆணை !’ வீரர்கள் சொல்ல மக்கள் அதிர்ந்தார்கள்.

‘என்ன ? குழந்தைகளைக் கொல்வதா ?’

‘பாலகர்களைப் படுகொலை செய்ய மன்னன் ஆணையிட்டிருக்கிறானா ?’

‘இருக்காது. கூடாது….ஐயோ… வேண்டாம்..’ மக்கள் அலறினார்கள். தாய்மார்கள் கதறினார்கள். ஆனால் மன்னனின் வீரர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் நகருக்குள் நுழைந்தார்கள்.

சிலருடைய கைகளிலே பளபளப்பான வாள். சிலருடைய கைகளிலே கூர்மையான ஈட்டி. அவர்கள் பெத்லேகேமின் வீடுகளுக்குள் நுழைந்தார்கள். அங்கே தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை வாளினால் வெட்டித் துண்டாக்கினார்கள்.

அன்னையரின் மடியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இழுத்து தாய்மாரின் முன்னிலையிலேயே வெட்டித் துண்டாக்கினார்கள். பால் குடித்துக் கொண்டிருந்த பச்சைக் குழந்தைகளும் படுகொலைக்குத் தப்பவில்லை. தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் மார்பை கூர் ஈட்டிகள் குத்திப் பிளந்தன. ஈவு இரக்கமில்லாத படுகொலை நிகழ்ச்சி ஒன்று அங்கே அரங்கேறியது.

தங்கள் குழந்தைகள் தங்கள் கண் முன்னாலேயே படுகொலை செய்யப்படுவதைக் கண்ட பெற்றோர் கதறினர். எதிர்க்கும் வலுவில்லாத அவர்களுடைய அலறல் ஒலிகளால் பெத்லகேம் நிரம்பியது. தெருக்களும் வீடுகளும் மழலைகளின் இரத்தத்தால் நனைந்தது.

பெத்லேகேமின் குழந்தைகள் எல்லாம் மடிந்தபின் அடுத்திருந்த ஊர்களுக்கும் வீரர்கள் சென்றார்கள். அங்கும் வீரர்கள் படுகொலையை நிகழ்த்தினார்கள். எல்லா குழந்தைகளும் கொல்லப்பட்டபின் வீரர்கள் மன்னனிடம் சென்றார்கள்.

‘அரசே… உமது கட்டளை நிறைவேற்றப் பட்டது. பெத்லேகேமிலும் அதன் சுற்றுப் புற ஊர்களிலும் குழந்தைகளோ, சிறுவர்களோ யாருமே இப்போது உயிருடன் இல்லை’

‘யாரும் தப்பவில்லையே ?’

‘இல்லை அரசே. ஒரு உயிர் கூட தப்பவில்லை’ வீரர்கள் உறுதிபடச் சொன்னார்கள்.

ஏரோது மன்னன் மகிழ்ந்தான். தன்னுடைய அரசுக்கு எதிராகத் தோன்றிய பாலகன் இறந்து விட்டான் என்று களிப்படைந்தான். ஞானிகள் சொன்ன பாலகன் மடிந்து போயிருப்பான் என்று மகிழ்ந்தான். தன்னுடைய அரசுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தீர்ந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

அவன் கொல்லத் தேடிய இயேசுவோ எகிப்து நாட்டில் மரியாவின் மடியில் அமைதியாகத் துயின்று கொண்டிருந்தார்.