Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் : படைவீரனின் காது நலமாதல்

Image result for jesus heals the ear

லூக்கா 22:47 ..51

இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம், “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” என்றார்.

அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, “ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?” என்று கேட்டார்கள்.

அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.

இயேசு அவர்களைப் பார்த்து, “விடுங்கள், போதும்” என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.

விளக்கம்

இயேசுவின் புதுமைகள் ஒவ்வொன்றுமே அவரது சீடர்களுக்குப் புதிய புதிய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுப்பனவாகவே இருந்தன. இன்றைக்கும் அவை நமக்கு பல்வேறு இறையியல் சிந்தனைகளைக் கற்றுத் தருகின்றன. அதிசயச் செயலாக வெளிப்பார்வைக்குத் தோற்றமளிக்கும் நிகழ்வுகள் தனக்குள் பல ஆன்மீக சிந்தனைகளையும் ஒளித்து வைத்திருக்கின்றன.

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையின் கடைசி நாட்களில் நடந்த நிகழ்வு இது. அடுத்த நாள் அவருக்கு மரணம் பரிசளிக்கப்படப் போகிறது. முந்தைய தினம் அவர் ஒலிவ மலையிலுள்ள, கெத்சமெனே தோட்டத்தில் வலிகளோடு தந்தையை நோக்கி மன்றாடுகிறார். வியர்வை இரத்தத் துளிகளாய் மண்ணில் விழுகிறது.

செபிக்கும் போது வியர்வை வருகின்ற அனுபவமே அரிது ! அந்த சூழலில் இயேசு இரத்ததுளிகளை வியர்வையாய் வடிக்குமளவுக்கு செபிக்கிறார். உள்ளம் உடைய, உள்ளுக்குள் இரத்தம் கசியக் கசிய அவர் நமக்காக வேண்டுகிறார். ஒருவரை அடிக்கும் போதோ, காயப்படுத்தும் போதோ இரத்தம் கசிவது இயல்பு. எதுவும் செய்யாமலேயே செபிக்கையில் இரத்தம் கசிவது இயலாத காரியம். இயேசுவின் வலிகளை, இயேசுவின் அன்பை விளக்கும் செயலாக இது இருக்கிறது.

அதன்பின் இயேசு காட்டிக்கொடுக்கப்படுகிறார். சீடர் வாளை எடுத்து படைவீரர் ஒருவரின் காதைத் துண்டிக்க, அதை இயேசு தொட்டு சுகமாக்குகிறார்.

இந்த நிகழ்வு நமக்கு பல்வேறு சிந்தனைகளைத் தருகிறது.

1. செபம் அவசியம். அந்த இரவில் இயேசு வலிமையான செபத்தில் நிலைத்திருந்தார். சீடர்களோ தூங்கிக் கொண்டிருந்தனர். “என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என இயேசு அவர்களிடம் சொன்னார். செபமே ஒரு சூழலை எதிர்கொள்ளும் வலிமையைத் தரும். செபமே இறைவனின் சித்தம் நம்மில் செயல்பட பாதை அமைக்கும் ! இயேசு தனக்காக செபிக்கச் சொல்லவில்லை, “சோதனைக்கு உட்படாதிருக்க” செபியுங்கள் என்றார். சோதனைகளை எதிர்கொள்ளும் வலிமையை செபம் மட்டுமே தர முடியும்.

சீடர்கள் செபத்தை நிராகரித்தனர். தூக்கத்தை அரவணைத்தனர். அதுவே அவர்களுடைய சிந்தனைகளை சிதறடித்தன. அவர்களை சோதனைக்குள் தள்ளியது. பேதுரு வாளை எடுத்து படைவீரனின் காதை வெட்டுகிறார். வன்முறையின் வழியை நாடுகிறார். செபம் நம்மை இறைவனின் இதயத்தோடு இறுக்கமாக்குகிறது. அப்போது நாம் இறைவன் பார்ப்பது போல பிறரை பார்ப்போம். இறைவனின் பார்வை நம்மிடம் வர செபம் மிக மிக அவசியம். செபத்தை இறுக்கமாய் பற்றிக் கொள்வோம்.

2. அன்றைய தினம் காலையில் தான் இயேசுவின் சீடர்கள் இயேசு சீடர்களிடம் வாள் வைத்துக் கொள்ளச் சொன்னார். அப்போது சீடர்கள், “ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன” என்றார்கள். இயேசு அவர்களிடம், “போதும்” என்றார். இயேசு வாளை வைத்துக் கொள்ளச் சொன்னது தன்னைப் பிடிக்க வருபவர்களை வெட்டி வீழ்த்த அல்ல, தான் இல்லாத சூழலில் சீடர்களின் பாதுகாப்புக்காக. சீடர்களோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. “இயேசு தானே சொன்னார்” என அதை தங்கள் அறிவுக்கு ஏற்ப பயன்படுத்த முயல்கின்றனர்.

நாமும் பல வேளைகளில், விவிலியம் சொல்கின்ற வார்த்தைகளை நமக்கு வசதியான வகையில் பொருள் கொள்கிறோம். இயேசு சொன்னதன் பொருளை அதே போல புரிந்து கொள்ளாமல் நமது சூழலுக்கு ஏற்ப புரிந்து கொள்கிறோம். இதனால் பல சிக்கல்கள் எழுகின்றன. இறைவார்த்தைகள் என்ன சொல்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள செபமும், தூய ஆவியின் தயவும் நமக்கு தேவை. மனதளவில் மிகவும் அன்னியோன்யமான தம்பதியர் மௌனத்தைக் கூட புரிந்து கொள்வார்கள். அதே போல, இறைவனோடு இணைந்து இருக்கும் போது அவர் சொல்லும் வார்த்தைகள் நமக்குப் புரியும்.

3. “ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?” என இயேசுவிடம் கேள்வியைக் கேட்கின்றனர் சீடர்கள். ஆனால் பதில் வரும்வரை காத்திருக்கும் பொறுமை அவர்களிடம் இல்லை. இனியும் காத்திருந்தால் நமக்கு ஆபத்து என அவர்களாகவே முடிவெடுத்து விடுகின்றனர். வாளை எடுத்து வீச ஆரம்பிக்கின்றனர்.

நாமும் பல வேளைகளில் இறைவனிடம் வேண்டுதல் எழுப்புகிறோம். ஆனால் நமது பார்வைக்கு சிக்கலான சூழல், அல்லது இது தான் கடைசி வாய்ப்பு என்பது போன்ற நிலை வரும்போது இறைவனின் பதிலுக்காகக் காத்திருக்காமல் நாமே முடிவுகளை எடுத்து விடுகிறோம். அத்தகைய முடிவுகள் இறைவனுக்கு விருப்பம் இல்லாததாகவே அமைந்து விடுகிறது !

4. சீடர் எதிரியை வாளாள் வெட்டுகிறார். எதிராளி காயமடைகிறார். இப்போது சீடர்களின் சார்பாக நின்ற இயேசு சீடர்களைக் கடிந்து கொள்கிறார். எதிரியின் சார்பாளராக மாறி காயம் பட்ட காதைத் தொட்டு சுகமாக்குகிறார். வலி கொடுப்பவர்களின் பக்கமல்ல, வலி கொள்பவர்களின் பக்கமாகவே இயேசு நிற்கிறார். எதிரிக்கும் அன்பு செய்வது எப்படி என்பதை செயலில் காட்டுகிறார்.

நாம் பிறருக்கு காயம் கொடுப்பவர்களாக மாறும்போது இயேசு நமக்கு எதிரானவராக மாறிவிடுகிறார். எதிரியே ஆனால் கூட அவர்களை அன்பு செய்யும் போது தான் இயேசு நமது பக்கமாய் இருக்கிறார். நமது வாழ்க்கையில் நமது கையிலிருக்கும் வார்த்தை வாள்களையோ, செயல் வாள்களையோ பிறருக்குக் காயம் தரும் வகையில் சுழற்றக் கூடாது என்பதே இயேசு சொல்லும் பாடம்.

5. சீடர்கள் இயேசுவின் மீது கொண்ட அதீத அன்பினால் தான் வாளை எடுத்து போரிடுகின்றனர். ஆனால் அது இறை சித்தத்துக்கு எதிரானதாக மாறிவிட்டது. இயேசு, “வாருங்கள் போரிடுவோம் எதிரி வருகிறான்” என்று சொல்லவில்லை. “எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்” (மார்க் 14:42) என்று சொல்லி தன்னை பலிகொடுக்கத் தயார்படுத்திக் கொண்டார்.

இயேசுவின் மீது அன்பு இருப்பதாய் நினைத்துக் கொண்டு நாம் செய்கின்ற செயல்கள் பல வேளைகளில் அவருக்கு எதிரான செயல்களாகவே மாறிவிடுகின்றன. இன்றைய சூழலில் எழுகின்ற மத விவாதங்கள், கருத்து மோதல்கள், சண்டைகள், வன்முறைகள், வன்மங்கள் எல்லாமே இயேசுவுக்கு எதிரானவை. அத்தகைய செயல்களை நாம் இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்கிறோம், அது தவறு ! அப்படி செய்யக் கூடாது என்பதையே இயேசு தெளிவாய் விளக்குகிறார்.

6. சீடர்களின் மனதில் ஒரு எண்ணம் இருந்தது. இயேசுவைப் பிடிக்க வருகிறார்கள். நம்மிடம் வாள் இருக்கிறது. அவருடைய படைவீரர்களாய் இப்போது நாம் தான் இருக்கிறோம். எனவே இயேசுவைக் காப்பாற்றும் பொறுப்பும் நமக்கு உரியது எனும் சிந்தனை தான் அது. அதனால் தான் அவர்கள் தங்களுடைய வலிமையை முன்னிறுத்தி வாளை வீசுகின்றனர். ஆனால் உண்மையில் நாம் சார்ந்திருக்க வேண்டியது நமது வலிமையை அல்ல இயேசுவின் வலிமையையே !

நாமும் பல வேளைகளில் இயேசுவைக் காப்பாற்ற வேண்டியது நமது பணி போலவும், நமது பலத்தினால் அறிவினால் ஆற்றலினால் தான் இயேசுவை நாம் காப்பாற்ற முடியும் என்பது போலவும் கருதிக் கொள்கிறோம். நாமே கிறிஸ்துவின் பாதுகாவலர்கள் என நினைத்துக் கொள்கிறோம். அது தவறு. இறைவன் நம்மைக் காப்பாற்றுபவர். நாம் அவரது நிழலில், அவரது வழியில், அவரது வார்த்தையில் பயணிக்க வேண்டியர்கள் மட்டுமே.

7. இயேசுவின் மீட்பின் திட்டம் சிலுவையில் உயிர்விடுவதாய் இருந்தது. அதற்காகத் தான் அவர் இந்த பூமிக்கு வருகை தந்தார். அதற்காகவே மூன்று ஆண்டுகாலம் தனது பணியை தீவிரமாய் செய்தார். தான் கையளிக்கப்படப் போவதையும், இறக்கப் போவதையும் சீடர்களிடம் தெளிவாக பல முறை சொல்லவும் செய்தார். அதுவே மீட்பின் பயணம். ஆனால் சீடர்களோ அதைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டனர்.

இயேசுவின் சிந்தனைகளை, இயேசுவின் போதனையை, இயேசுவின் மீட்பின் திட்டத்தை நாம் செயல்படுத்துபவர்களாக இருக்கவேண்டும். அது எப்படி என்பதை இயேசுவின் வார்த்தைகளே நமக்கு விளக்க முடியும். நமது பார்வையில் சரி எனப் படுவது மீட்பின் திட்டத்திற்கு தடையாய் இருக்கக் கூடும் எனும் எச்சரிக்கையே இந்த நிகழ்வு. ‘இது எப்படி சாத்தியம்’ எனும் கேள்விகளை விடுத்து, ‘இயேசு சொன்னால் எதுவும் சாத்தியமே’ என முழுமையாய் நம்புவதே ஆன்மீக வாழ்க்கையை செழுமைப்படுத்தும்.

8. யூதாஸ் இயேசுவை முத்தம் எனும் அன்பின் அடையாளத்தால் காட்டிக் கொடுக்கிறான். அன்பின் அடையாளம், இங்கே மரணத்துக்கான முன்னுரையாய் மாறிவிடுகிறது. அன்பைக் காட்டி, வெறுப்பை வெளிப்படுத்துகிறார் யூதாஸ். வெளிப்படையான செயலோ அன்பின் வடிவம், உள்ளார்ந்த பொருளோ அழிவின் அடையாளம் ! இயேசு அந்த வெளிவேடத்தனத்தை அங்கேயே உடைக்கிறார். “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” எனும் கேள்வியின் வழியாக யூதாசின் உள்ளத்தை வெளிப்படுத்துகிறார்.

நாமும் பல வேளைகளில் இயேசுவின் முன்னால் அன்பின் செயல்களோடும், அன்பின் அடையாளங்களோடும் வருகிறோம். அவை புகழ் பாக்களாகவோ, விவிலிய வார்த்தைகளாகவோ, ஆன்மீக ஆறுதல்களாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உண்மையில் நமது செயல்கள் எல்லாம் பாவத்தின் செயல்களாக இருக்கின்றன. அதாவது இயேசுவை காயப்படுத்தும் செயல்களாக, இயேசுவை நிராகரிக்கும் செயல்களாக, அவரைச் சிலுவையில் அறையும் செயல்களாகவே இருக்கின்றன. அந்தப் பார்வையில் நாம் ஒவ்வொருவரும் யூதாஸைப் போன்ற வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோமா என்பதை சிந்திப்போம்.

9. கடமை செய்ய வருபவர்களை பேதுரு வாளால் தடுத்தார். இயேசுவைக் கைது செய்ய வந்தவர்கள் படை வீரர்கள். அவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கடமையைச் செய்ய வந்தார்கள். ஒருவரைக் கைது செய்யும் உரிமை உடையவர்கள் அவர்கள். பணியைச் செய்ய வருகின்ற மக்களைத் தடைசெய்வது தவறு எனும் பாடத்தையும் இயேசு இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்.

நமது வாழ்வில் நமக்குப் பிடிக்காத பல விஷயங்கள் நடக்கலாம். ஆனால் சட்டப்படி நிகழ்கின்ற செயல்களை, நமது நியாயங்களின் படி எதிர்ப்பது என்பது கடமையை ஆற்றுவதற்கு தடை செய்வது போன்றதே. நிகழ்வுகள் மாற இறைவனிடம் வேண்டுவதே சரியான வழி. எதிர்த்து நின்று பிறருடைய பணியை தடுப்பதல்ல.

10. தன்னைப் பிடிக்க வந்தவருடைய காதை இயேசு தொட்டு சுகமாக்கினார். வாழ்வின் கடைசி கணம் வரை அன்பையும், மன்னிப்பையும், மீட்பின் பயணத்தையும் தளராமல் செய்ய வேண்டும் என்பதையே இயேசு தனது இலட்சியமாகக் கொண்டிருந்தார். சிலுவையில் மரணத்துக்கு முந்திய வினாடியில் கூட எதிரிகளுக்கு எரிச்சலையல்ல, மன்னிப்பையே வழங்கினார். காது துண்டிக்கப்பட்ட மனிதன் இயேசுவின் தொடுதலைப் பெற்றுக் கொண்டான். அவனுடைய வாழ்வில் அவன் இயேசுவின் அன்பை நேரடியாகப் பார்த்து பிரமிக்கும் வாய்ப்பையும் பெற்றான்.

நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது ? பிறருக்கு அன்பையும், மன்னிப்பையும், நன்மையையும் வழங்கக்கூடிய வகையில் இருக்கிறதா ? அல்லது வெறுப்பையும் விரோதத்தையும் பந்திவைக்கும் வகையில் இருக்கிறதா ? என்பதைச் சிந்திக்க வேண்டும். வாழ்க்கை நிகழ்வுகள் எப்படி நம்மைப் புரட்டிப் போட்டாலும் சரி, மன்னிப்பின் நங்கூரத்தை இதயத்தில் ஆழமாய் இறக்குவோம். சோதனை அலைகளில் வாழ்க்கைப் படகு அழிந்து விடாமல் காப்போம்.

*

 

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் : அதிசயமாய் கிடைத்த மீன்கள்

Image result for peter fishing jesus : 21 : 1-14

பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:

சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,

அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை.

இயேசு அவர்களிடம்,

“பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா?”

 என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள்.

அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்”

 என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.

மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.

படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.

இயேசு அவர்களிடம்,

“நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார்.

சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இயேசு அவர்களிடம்,

“உணவருந்த வாருங்கள்”

 என்றார். சீடர்களுள் எவரும், ‘நீர் யார்?’ என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.

இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

விளக்கம்

இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து விட்டார். அதன் பின் சீடர்களுக்கு இரு முறை காட்சியும் அளித்தார். சீடர்களுக்கோ இயேசு இல்லாத வாழ்க்கை தலைமையற்ற வாழ்க்கையைப் போல உறுத்தியிருக்க வேண்டும். மீண்டும் மீன்பிடிக்கும் தொழிலுக்கே திரும்பினார்கள்.

இப்போது இரவு முழுவதும் வலைவீசியும் மீன்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றமாய் அதிகாலையில் சீடர்கள் கரையை நோக்கி வருகின்றனர். அப்போது இயேசு கரையிலிருந்து அவர்களோடு உரையாடுகிறார்.

இயேசு யார் என்றே அறியாமல் அவர்கள் அவருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கின்றனர். மீன்கள் ஏராளமாய் வலைகளில் வந்து சிக்குகின்றன. சீடர்கள் இயேசுவைக் கண்டு கொள்கின்றனர். பேதுரு படகிலிருந்து குதித்து இயேசுவை நோக்கி ஓடுகிறார்.

கரையில் சீடர்கள் வருகின்றனர். இயேசு அவர்களுக்காய் உணவு தயாரித்து வைத்திருக்கிறார்.

இந்த செயல் பல்வேறு ஆன்மீக சிந்தனைகளை நமக்குள் எழுப்புகிறது.

  1. மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தான் இயேசு பேதுருவை முதன் முதலாக அழைத்தார். அவரும் தனது வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின்சென்றார். இயேசுவோடான பயணம் நிறைவடைந்தபின் பேதுரு மீண்டும் அதே மீன்பிடிக்கும் தொழிலுக்கு வருகிறார். உயிர்த்த இயேசு இரண்டாம் முறையாய் மீண்டும் அழைப்பாரா எனும் எதிர்பார்ப்பு அவருடைய மனதில் இருந்திருக்கலாம். இயேசு, இரண்டாம் முறையாய் வருகிறார். அவரை அழைக்கிறார். இறைபணியில் பேதுரு தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்ள இந்த அனுபவம் உதவுகிறது.

இறையழைத்தல் இருமுறை நிகழலாம் என்பதை இந்த நிகழ்வு விளக்குகிறது. இயேசுவின் அழைப்புக்குச் செவிகொடுக்கும் மனநிலை நம்மிடம் இருந்தால் இயேசு நம்மைத் தேடி வந்து அழைப்பவராக இருக்கிறார். நமது அழைத்தலை உறுதிப்படுத்திக் கொள்வதில் தவறு ஏதும் இல்லை. அந்த அழைப்பை உறுதிப் படுத்திக் கொண்டபின் அதில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

  1. இயேசுவின் அருகாமையை விட்டபின் சீடர்கள் மீண்டும் பழைய வாழ்க்கையை நாடிச் செல்கின்றனர். இயேசு இருக்கும் போது அவரது போதனைகளிலும், அவரது அருகாமையிலும் வாழ்ந்தவர்கள், அவர் இல்லாதபோது பழைய வாழ்வில் மீண்டும் நுழைகின்றனர். அழைப்புக்கு முந்தைய வாழ்க்கைக்கு அவர்கள் சென்று விடுகின்றனர்.

இயேசு நமது வாழ்வில் இல்லாத போது நமது பழைய பாவங்கள் நம்மை மீண்டும் பிடித்துக் கொள்கின்றன. நமது வாழ்க்கை ஒளியை விட்டு விட்டு இருளைத் தேடிச் சென்று விடுகிறது. இயேசுவோடு எப்போதும் இணைந்தே இருக்க வேண்டியதன் தேவையை இது வலியுறுத்துகிறது.

  1. இரவு முழுவதும் கடலில் வலை வீசியும் வெறும் கையோடு திரும்பி வருகின்றனர் சீடர்கள். ஒரு நாள் முழுவதும் வலை வீசியும் மீன்கள் அகப்படவில்லை என்பதே ஒரு அதிசயச் செயல் தான். இயேசுவை விட்டு விலகும் போது, நமக்குப் பழக்கமான செயல்கள் கூட வெற்றியைத் தராமல் போகலாம். எத்தனையோ ஆண்டுகள் வெற்றிகரமாகச் செய்த மீன்பிடி தொழில் சீடர்களைக் கைவிட்டது. காரணம் இயேசுவின் அருகாமை இல்லாமல் போனது தான்.

நமது வாழ்விலும் இயேசுவிடம் வந்து விட்டு விலகும் தருணங்கள் நமக்கு வீழ்ச்சியையே தரும். ஆன்மீக வீழ்ச்சியுடன் சேர்ந்து நமக்கு வளர்ச்சியைத் தந்து கொண்டிருந்த உலக செயல்கள் கூட வீழ்ச்சியையே தரும். அவை நம்மை மீண்டும் இயேசுவிடம் அழைத்து வரவேண்டும். பேதுரு ஆன்மீக வாழ்வின் சறுக்கினார், ஆனாலும் இயேசுவை தேடி ஓடினார். யூதாஸ் ஆன்மீக வாழ்வில் சறுக்கினார் ஆனால் இயேசுவை விட்டு விலகி ஓடினார். இயேசுவைத் தேடி ஓடியவர் திருச்சபைக்கு அடித்தளமானார், விலகி ஓடியவர் தற்கொலையில் அழிந்தவரானார்.

  1. சீமோன் பேதுரு இங்கே ஒரு தலைவராக உருவாகிறார். “மீன்பிடிக்கப் போகிறேன்” என்று அவர் சொன்னதும் மற்ற சீடர்கள் அவரோடு இணைந்து விடுகின்றனர். அவர் யாரையும் அழைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் அவரோடு இணைந்து பணியாற்ற தயாராய் இருக்கின்றனர். இயேசு இல்லாத அந்த காலகட்டத்தில் அவர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்க நினைக்கவில்லை. உழைக்கத் தயாராக இருக்கின்றனர். உழைக்கத் தயாராய் இருப்பவர்களையே இயேசு அழைக்கத் தயாராய் இருக்கிறார்

நமது வாழ்வில் நாம் எப்படி இருக்கிறோம் ? உழைக்கத் தயாராய் இருக்கிறோமா ? சீடர்கள் இணைந்தே இருந்தது போல இறைவனுக்கு ஏற்புடையவர் கூட்டத்தோடு எப்போதும் இணைந்தே இருக்கிறோமா ? சிந்திப்போம்.

  1. பிள்ளைகளே மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா ? என இயேசு சீடர்களிடம் கேட்கிறார். பிள்ளைகளே எனும் அழைப்பின் மூலமாக இயேசு தனது சீடர்களை தந்தை மகன் உறவுக்குள் இணைக்கிறார். திரியேக கடவுளின் ஒருவரான இயேசு உயிர்த்தபின் தந்தையோடு இணைந்திருக்கிறார் என்பதன் ஒரு வெளிப்பாடு இது எனலாம்.

இன்று நாம் ஆண்டவரை அப்பா பிதாவே என அழைக்கும் மகனுக்குரிய உரிமையைப் பெற்றிருக்கிறோம். இயேசு நம்மை பிள்ளைகளே என அழைக்கிறார். நாம் அவரை உரிமையுடன் தந்தையே என அழைக்கும் மனநிலையைப் பெற்றுக் கொள்வோம்.

  1. “மீன் கிடைக்கவில்லையா ?” எனும் கேள்விக்கு “இல்லை” எனும் வெளிப்படையான பதிலை சீடர்கள் சொல்கின்றனர். ஒன்றும் இல்லை என்னும் நிலைக்கு சீடர்கள் வந்தபோது இறைவனின் அருளால் வலைநிறைய மீன்களைப் பெற்றுக் கொள்கின்றனர். கொஞ்சம் இருக்கிறது, போதுமான அளவு இருக்கிறது என்பன போன்ற பதில்கள் வந்திருந்தால் ஒருவேளை இந்த அதிசயம் நடந்திருக்காது. சீடர்கள் வெறுமையான நிலைமைக்கு வந்ததும், இயேசு மகிமையான நிலையை அவர்களுக்கு வழங்குகிறார்.

நமது வாழ்விலும், “நம்மிடம் ஒன்றும் இல்லை” எனும் நிலைக்கு நாம் வரும்போது நமது வாழ்வில் நிறைவான ஆசீர்வாதங்களை இறைவன் நல்குகின்றார். ‘இயேசுவே என்னிடம் ஒன்றும் இல்லை, என்னை நிறைவாக்கும்” எனும் மனநிலையுடன் இயேசுவை அணுக வேண்டும்.

  1. இயேசு வலப்புறமாக வலைகளை வீசச் சொன்னார். அப்படி அவர்கள் வீசியபோது வலை நிறைய மீன்கள் கிடைத்தன. இயேசுவின் வார்த்தைகளின் படி நாம் செயல்படும்போது நமக்கு ஏராளமான ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. ஏராளமான மீன்கள் கிடைத்தாலும் வலை கிழியவில்லை ! அது மிகப்பெரிய அதிசயமாக இருந்தது.

நமது வாழ்வில் இறைவன் தருகின்ற ஆசீர்வாதங்கள் நமது வாழ்க்கை எனும் கூட்டை சிதைக்காததாகவோ, உடைக்காததாகவோ தான் இருக்கும். நமது வீட்டின் அமைதியையோ, நிம்மதியையோ, அன்புறவையோ உடைக்கும் ஆசீர்வாதங்கள் இறைவனிடமிருந்து வந்தவை அல்ல என்பதைப் புரிந்து கொள்வோம்

  1. நூற்று ஐம்பத்து மூன்று மீன்கள் பிடிக்கப்பட்டதாக விவிலியம் கூறுகிறது. அந்த காலத்தில் நூற்று ஐம்பத்து மூன்று வகை மீன்களே அடையாளம் காணப்பட்டதாகவும். அத்தனை வகையான மீன்களையும் அள்ளி வருவது என்பது எல்லா இன மக்களையும் இறைவனின் நற்செய்தியின் கீழ் இணைப்பது எனும் பொருளில் வருகிறது என்கிறார் புனித எரோனிமஸ்.

மனிதர்களைப் பிடிப்போராக்குவேன் என சீமோனிடம் சொன்ன இயேசு, எல்லா மனிதர்களையும் கூட்டிச் சேர்க்க வேண்டும் எனும் குறிப்பையும் இதன் மூலம் தருகிறார். நமது வாழ்வில் நாம் இறைவனின் அன்பை எல்லா மனிதருக்கும் அளிக்கிறோமா ? எனும் கேள்வியை நமக்குள் எழுப்புவோம்.

  1. இயேசு கரையில் இருந்தபோது அவர்கள் அவரை இயேசு என கண்டு கொள்ளவில்லை. இயேசுவை விட்டு விலகிச் செல்லச் செல்ல அவருடைய முகம் நமக்கு பரிச்சயமில்லாததாய் தோன்ற ஆரம்பிக்கிறது. ஆனால் அவர் இயேசுதான் என அறிந்ததும் பேதுரு சட்டென படகை விட்டுக் குதித்து இயேசுவை நோக்கி ஓட ஆரம்பிக்கிறார். பாவ இருளில் நிர்வாணியாய் இருந்தவர், ஆடை அணிந்து கொண்டு தூய்மையை நோக்கி ஓடுகிறார். பணிவாழ்வின் துவக்கத்தில் இயேசு பேதுருவை அழைத்தபோது, ‘நான் பாவி என்னை விட்டு விலகிப் போவீராக’ என சொன்ன பேதுரு, இப்போது, “இயேசுவை நோக்கி ஓடி வருகிறார்”.

இயேசுவை கண்டு கொள்ளும் போது நமது மனநிலை எப்படி இருக்கிறது ? இயேசுவை நோக்கி ஓடி வருவதாக இருக்கிறதா ?அல்லது விலகி ஓடுவதாக இருக்கிறதா ? சிந்திப்போம். இயேசுவின் குரலைக் கேட்கும் போது, இயேசுவின் முகத்தைப் பார்க்கும் போது, இயேசுவை இன்னொருவர் மூலமாக கண்டு கொள்ளும் போது நாம் உடனே இயேசுவை நோக்கி ஓடிப் போக வேண்டும்.

10.சீடர்கள் கரைக்கு வந்தபோது இயேசு மீனையும், அப்பத்தையும் அவர்களுக்காய் தயாராக்கி வைத்திருந்தார். உணவு உண்ண வாருங்கள் என அழைப்பும் விடுத்தார். அவர்களிடம் மீன் இருக்கவில்லை, அப்பம் இருக்கவில்லை. ஆனாலும் அவர் அவர்களுக்காக உணவைத் தயாராக்கி வைத்திருந்தார். அழைப்பவர் ஆண்டவர். அவருடைய அழைப்புக்கு இணங்கும்போது நமக்குத் தேவையானவற்றை அவர் தயாராக்கி வைக்கிறார். நமக்காக விண்ணகத்தில் ஒரு இடத்தை ஏற்பாடு செய்தவர், மண்ணகத்திலும் நமக்குத் தேவையானவற்றை உருவாக்கித் தருகிறார்.

நமது வாழ்வுக்கான தேடல்களுக்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டால் அவரே நமக்குத் தேவையானவற்றைத் தருகிறார். அவர் தருகின்ற ஆசீர்வாதங்கள் நமக்கு நிறைவானவையாகவும், மகிழ்வானதாகவும் இருக்கின்றன. எனவே நமது வாழ்க்கையை இறைவனிடம் ஒப்படைப்பதே நமது அதிகபட்ச ஆனந்தம் என்பதை உணர்வோம்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.

*

 

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் : பத்துத் தொழுநோயாளர்கள்

இயேசு செய்த புதுமைகள். பத்துத் தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெறுதல்

Image result for jesus heals 10 lepers

லூக்கா 17 : 11 முதல் 19 வரை

இறைவார்த்தை

இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே,

“ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்;

அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.

இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார். பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.

சிந்தனை

இயேசுவின் புதுமைகள் எப்போதுமே வித்தியாசமான அனுபவங்களாகவும், புதுமையான பாடங்களை நமக்குக் கற்றுத் தரும் நிகழ்வுகளாகவும் அமைந்து விடுகின்றன. இந்தப் புதுமையின் வாயிலாகவும் அவர் நமக்குள் பல சிந்தனைகளை விதைக்கின்றார்.

1. இயேசு கடைசியாக எருசலேமுக்கு வருகின்ற பயணம் இது. இதன்பின் அவர் தனது சிலுவைச் சாவுக்குள் நுழையப் போகிறார். மீட்புக்கு விலையாக தனது உயிரையே அளிக்கப் போகிறார். இந்த பயணத்தை அவர் சமாரியப் பகுதிகளின் வழியாக நடத்துகின்றார். பிரிவினையால் பிரிந்து கிடக்கின்ற எருசலேம், சமாரியா போன்றவற்றுக்கு ஒரு இணைப்புப் பாலமாக இயேசுவின் கடைசிப் பயணம் அமைகிறது. அந்த கடைசிப் பயணத்திலும் அவர் தனது சிந்தனையையும், கரிசனையையும் மக்கள் மீதிருந்து திருப்பவில்லை. சீடர்களுக்கு அதன் மூலமாக பாடங்களைக் கற்றுக் கொடுப்பதையும் நிறுத்தவில்லை.

நமது வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கிறது ? பிரிவினை மனங்களுக்கு இடையே பாலமாய் அமைகிறதா ? வாழ்வின் எந்த சூழலிலும் நமது பார்வை ஏழை எளியவர்கள் மீதே இருக்கிறதா ? தேவை என வருபவர்களை நோக்கியே நமது கரிசனை இருக்கிறதா ? இத்தகைய கேள்விகளை நாம் நமக்குள் எழுப்ப வேண்டும். அதற்கான விடைகளைக் கண்டறித்து நமது தவறுகளை சரிசெய்ய வேண்டும்.

2. பத்து தொழுநோயாளிகள் இயேசுவை எதிர்கொள்கின்றனர். தொலைவில் நின்று கொண்டே அவரை நோக்கி ஐயா, இயேசுவே என அழைக்கின்றனர். அதே மனிதர் நலம் பெற்று இயேசுவிடம் வருகையில் அவரை மீட்பராகக் கண்டு கொள்கிறார். தொலைவில் இருந்து பார்க்கும் போது இயேசு போதகராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், புரட்சிவாதியாகவும், போர்வீரராகவும், ஆசிரியராகவும் பல வடிவங்களில் காட்சியளிக்கிறார். ஆனால் அவரது பாதத்தில் பணிகையில் மட்டுமே அவர் நமக்கு மீட்பராய் மாறிப் போகிறார்.

நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது ? இயேசுவோடு நமக்கு இருக்கின்ற உறவு எப்படி இருக்கிறது ? அவரை தொலைவில் இருந்து பார்த்து திருப்திப் பட்டுக் கொள்கிறோமா? அவரது அருகில் வந்து பணிந்து அவரில் சரணடைகிறோமா ? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொலைவில் இருந்து பார்த்து வியக்க இயேசு ஒன்றும் தத்துவஞானி அல்ல ! அரவணைத்துக் காக்கும் ஆண்டவர் என்பதை நாம் உணர வேண்டும்.

3. பத்து தொழுநோயாளிகளும் ஒன்றாக இணைந்து நின்று இயேசுவிடம் வேண்டுகின்றனர். அவர்கள் சரியான நபரைத் தேடி வந்திருந்தனர். சரியான விண்ணப்பத்தை வைக்கின்றனர். ஒரே குரலாக தங்கள் வேண்டுதலை அவரிடம் சமர்ப்பிக்கின்றனர். தேவைகள் எழுகையில் இறைவனை நாடி வரவேண்டும் என்பதையும், இறைவனை நாடி வந்தபின் நமது தேவைகளை ஒருமித்த சிந்தனையில் அவரிடம் எடுத்து வைக்க வேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது.

நமது விண்ணப்பம் எப்படி இருக்கிறது ? திருச்சபையாய் இணைந்து வருகின்ற நாம் நமக்குள் வேற்றுமை எண்ணங்களை களைந்து விட்டு இயேசுவிடம் விண்ணப்பம் வைக்கிறோமா ? ஒரே குரலாய், ஒரே மனமாய் நாம் இயேசுவை வேண்டுகின்றோமா ? சிந்திப்போம்.

4. தொழுநோய் என்பது பாவத்தின் அடையாளம் என பார்க்கப்பட்ட காலகட்டம் அது. பத்து தொழுநோயாளியர் இணைந்து இருந்தனர் என்பது பாவம் செய்யும் மக்கள் அனைவரும் அந்த பாவத்தின் காரணமாக இணைந்து வாழ்வார்கள் என்பதன் குறியீடாகவும் எடுத்துக் கொள்ளலாம். பாவம் இணைக்கிறது. பாவம் மக்களை பாவத்தின் கரங்களால் இணைத்துக் கட்டுகிறது. புனிதம் இயேசுவின் உடலோடு நம்மை இணைப்பது போல, பாவம் பாவத்தின் பள்ளத்தாக்கில் நம்மை புதைக்கிறது.

நமது வாழ்க்கை எப்படிப்பட்ட நபர்களின் சங்கமத்தில் அமைகிறது ? நம்மைச் சுற்றியிருக்கும் நபர்கள் எப்படிப்பட்டவர்கள் ? அவர்கள் ஆன்மீக தாகம் உடையவர்களா அல்லது சிற்றின்ப மோகம் உடையவர்களா ? அவர்கள் பாவத்தைத் தேடுபவர்களா ? அல்லது பரமனைத் தேடுபவர்களா ? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இணைந்து வாழ்தல் நல்லது தான் ஆனால் அது புனிதத்தின் இணைப்பாய் இருக்க வேன்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது உலக மொழி, இறைவனோடு கூடி வாழ்ந்தால் மட்டுமே கோடி நன்மை என்பது ஆன்மீக மொழி.

5. “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்கிறார் இயேசு ! ‘நீங்கள் நலம் பெறுவீர்கள்’ என சொல்லவில்லை. தொட்டு சுகம் கொடுக்கவில்லை. வெறுமனே குருக்களிடம் அவர்களை அனுப்பி வைக்கிறார் இயேசு. குருக்கள் தான் ‘தீண்டத்தகாதவர்கள்’ என சான்றளித்து இவர்களை ஒதுக்கி வைத்தவர்கள். அப்படி ஒதுக்கியவர்களாலேயே ‘இவர்கள் தூய்மையானவர்கள்’ என பறை சாற்ற வைக்கிறார் இயேசு. நமது எதிரியையே நமக்கு சான்று அளிப்பவனாய் மாற்றும் இறைவனின் வல்ல செயல் அது.

அவர்கள் அந்த வார்த்தையை நம்பி செல்கின்றனர். குருக்களைச் சென்று சேரும் போது என்ன நடக்கும் என அவர்கள் பதட்டப்படவில்லை. ‘சுகம் கொடுங்கள், அப்புறம் போகிறோம்’ என நிற்கவில்லை. வார்த்தையின் அடிப்படையில் அவர்கள் பயணிக்கின்றனர். பயணத்தில் அவர்கள் சுகம் பெற்றுக் கொள்கின்றனர்.

நாமும் நமது பாவ வாழ்க்கையை விட்டு விலக வேண்டுமெனில் இயேசுவின் வார்த்தைகளை நம்பிப் புறப்பட்டுச் செல்ல வேண்டியது தேவையாகிறது. இயேசுவின் வார்த்தைகளை நம்பிப் பயணிக்கும் போது பயணம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தமாக்கும். இயேசுவின் வார்த்தை நமது பாவக் கறைகளை கொஞ்சம் கொஞ்சமாய்க் கழுவி நம்மை தூய்மையாக்கும். நமது பயணம் இயேசுவின் வார்த்தையின் அடிப்படையில் இருக்கிறதா ?

6. ஒருவர் மட்டும் திரும்பி வருகிறார். பாவம் இணைத்து வைத்தது, புனிதம் விலக்கி வைக்கிறது. ஒன்பது பேர் வராமல் போனதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால், ஒருவர் திரும்பி வந்ததற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு. அது அவருக்கு இயேசுவின் மீது இருந்த ‘அன்பும், நன்றி உணர்வும்’ ! தான் நலமடைந்ததை உணர்ந்த கணத்திலேயே, அவர் தனது பயணத்தை ஒரேயடியாகத் திருப்பி, இயேசுவை நோக்கி ஓடினார். இயேசுவின் பாதத்தில் விழுந்து பணிந்தார். விண்ணப்பம் வைத்த போது பத்து பேரோடு சேர்ந்து தொலைவில் நின்று இயேசுவை வேண்டியவர், இப்போது இயேசுவின் பாதத்தில் இயேசுவை அருகில் பார்க்கிறார். ஒரு தனிப்பட்ட அனுபவத்துக்குள் அவர் கடந்து செல்கிறார்.

நாம் எப்படி இருக்கிறோம். அந்த ஒன்பதில் ஒருவராகவா ? அல்லது அந்த ஒன்பதை விட்டு வந்த ஒருவராகவா ? இந்த கேள்வி நமக்கு ஒரு புதிய பாதையை உருவாக்கித் தரும். யாரையெல்லாம் நாம் விட்டு விலக வேண்டும் ? யாரை நாம் நாடித் தேட வேண்டும் ? என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். பாவத்தால் கட்டப்பட்டிருக்கும் கூட்டத்தை விட்டு விலகலாம். நம்மோடு இணைந்து இயேசுவைத் தேடி ஓடாதவர்களை விட்டு விலகலாம். இயேசு எப்போதுமே கூட்டத்திலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கிறார். ஆபிரகாம், நோவா, யோபு என பட்டியல் மிகப்பெரிது. நாம் கூட்டத்தோடு இருந்தாலும் இயேசு இல்லையேல் தனித்து விடப்பட்டவர் ஆவோம். தனியே இருந்தாலும் இயேசுவோடு இருந்தால் இணைந்து இருப்பவர் ஆவோம் என்பதை புரிந்து கொள்வோம்.

7. நன்றி உடையவர்களாக நாம் இருக்க வேண்டும். கடவுள் நமக்கு எத்தனையோ நன்மைகளை வாரி வாரி வழங்குகிறார். நாம் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்துக்கும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அந்த பழக்கம் நம்மை இறைவனோடு இன்னும் இறுக்கமாய் இணைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நமது நன்றி உணர்வு எப்படி இருக்கிறது. இன்றைய தினம், இந்த கணம் இது நமக்கு இறைவன் தந்திருக்கும் மாபெரும் வரம். இதற்காக நாம் இயேசுவுக்கு நன்றி செலுத்தினோமா ? நமக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கும் நமது சக மனிதர்களுக்கு நாம் நன்றியை வஞ்சகமில்லாமல் வழங்குகிறோமா ? சிந்திப்போம்.

8. நலம் பெற்றவர்களில் ஒருவர் தான் நலமடைந்ததை உணர்ந்த கணத்திலேயே கடவுளைப் புகழ ஆரம்பிக்கிறார். இயேசுவிடம் வந்து சேரும் வரை காத்திருக்கவில்லை. புதிய மாற்றம் அவரை உடனடியாக கடவுளைப் புகழும் மனநிலைக்குக் கொண்டு வருகிறது. அதுவும் உரத்த குரலில் அவர் கடவுளை மகிமைப்படுத்தினார். ஒரு சமாரியன் கடவுளைப் புகழ்வதும், அதுவும் உரத்த குரலில் புகழ்வதும் அன்றைக்கு நடக்காத செயல்கள். அதை அந்த மனிதர் செய்தார். காரணம் அவர் இயேசுவின் அன்பை சுவைத்திருந்தார்.

நமது வாழ்க்கையில் இறைவன் மாற்றங்களைக் கொண்டுவரும் போது நமது வாழ்க்கைப் பயணம் முழுவதும் அவருக்கு புகழ்ச்சியை வழங்க வேண்டும். மாற்றத்தை உணர்ந்த கணத்திலேயே இறைவனைப் போற்றும் நிமிடம் துவங்க வேண்டும். தாமதங்கள் நன்மையைத் தருவதில்லை. நமது வாழ்க்கையை மறுபரிசீலனை செய்வோம். நமது செயல்களில் இறைபுகழ்ச்சியை வைப்போம்.

9. “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? ” என இயேசு கேட்கிறார். “குருக்களிடம் காட்டுங்கள்” என்பதே அவர் அவர்களுக்கு இட்ட கட்டளை. மற்ற ஒன்பது யூதர்களும் அதன் அடிப்படையில் கோயிலுக்குப் போயிருக்கலாம். குருக்களிடம் காட்டியிருக்கலாம். சட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் ஒருவர் மட்டும் சட்டத்தை விட மேலாய் இறைவனை தேடுகிறார். நன்றியை கேட்டுப் பெற்றுக் கொள்பவரல்ல இயேசு ! ஆனால் கேட்காமல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர் என்பதையே இந்த வசனம் மிகத்தெளிவாய் விளக்குகிறது.

நமது வாழ்க்கை, சட்டங்களின் அடிப்படையிலான சம்பிரதாய வாழ்க்கையாய் அமைந்து விடக் கூடாது. எப்போதும் இயேசுவைத் தேடுகின்ற ஒரு அன்பின் வாழ்க்கையாய் அமைய வேண்டும். நாம் சட்டங்களில் தவறினாலும் அன்பின் இணையும் போது வலிமையாகிறோம். அன்புக்கு மேலானது சட்டமல்ல, சட்டத்துக்கு மேலானதே அன்பு ! சாதி, இன வேற்றுமைகளைக் கடந்து நாம் இறைவனை நாடி வரவேண்டும். அப்படி வருபவர்களை இயேசு எந்த பாகுபாடும் இன்றி அரவணைத்துக் கொள்கிறார்.

10. “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என நன்றி செலுத்திய நபரிடம் சொல்கிறார் இயேசு. பத்துபேருமே நம்பிக்கையுடன் தான் சென்றனர். பத்து பேருமே பிணி நீங்கப் பெற்றனர். இப்போது திரும்பி வந்து நன்றி செலுத்திய நபர் சிறப்பாக நலம் பெறுகிறார். நோயில் ஆணிவேர் அவரிடமிருந்து பிடுங்கப்படுகிறது. மீட்பு ( இரட்சிப்பு) அவருக்கு வழங்கப்படுகிறது.

நலம் பெற வேண்டும் எனும் ஆர்வத்தில் இயேசுவைத் தேடி விட்டு, நலம் கிடைத்ததும் அவரை விட்டு விட்டு விலகி விடுகின்ற மனநிலை தவறானது. உடல்நலம் உலக வலிமையைத் தரும். இறை பலமே விண்ணக வாழ்வைத் தரும். எல்லாவற்றுக்கும் நன்றியுடையவர்களாகவும், மீண்டும் மீண்டும் அவரை நாடித் தேடுபவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*

 

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் : பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்

mentrees

இயேசு செய்த புதுமைகள்

பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்

மார்க் 8:22..26

அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்.

அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டார்.

அவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்” என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.

இயேசு அவரிடம், “ஊரில் நுழைய வேண்டாம்” என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

*

இயேசுவின் புதுமைகள் ஒவ்வொன்றும் நம்மை வியப்புக்குள் அழைத்துச் செல்லும் அனுபவமாக இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் இயேசுவிடம் நம்பிக்கையோடு வருகின்ற மக்கள் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட திருப்தியோடு திரும்பிச் செல்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் இயேசுவின் குணமாக்கும் முறை சீடர்களையும், மக்களையும் வியப்புக்கும் கேள்விகளுக்கும் உள்ளாக்கி விடுகின்றன. “கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? (மார்க் 8:18) ” என சற்று நேரத்திற்கு முன்பு தான் சீடர்களிடம் அவர் கேட்டிருந்தார். இப்போது இந்த அதிசயம் அவர்களுக்கு மறைமுகமாய் சொல்லப்பட்ட பாடமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இயேசு செய்த அற்புதங்கள், நமது வாழ்வில் அற்புதங்களை விளைவிக்க வேண்டுமெனில் அவை கூறும் மறைவான உண்மைகளை நாம் கண்டு கொள்தல் அவசியம். அப்படி மறை உண்மைகளைக் கண்டு கொள்ள நாம் தூய ஆவியானவரின் வெளிப்படுத்துதலை தொடர்ந்து நாடுபவர்களாக இருக்க வேண்டும்.

இந்த அற்புதமும் நமக்கு பல்வேறு ஆன்மீகப் புரிதல்களைக் கற்றுத் தருகிறது.

1. பார்வையற்ற ஒரு நபரை இயேசுவிடம் கொண்டு வந்து அவரைக் குணமாக்க இயேசுவிடம் வேண்டுகின்றனர் நண்பர்கள். ஆன்மீகப் பார்வை இழந்த நண்பர்களை நாம் இயேசு எனும் வெளிச்சத்தின் முன் கொண்டு வரவேண்டிய கடமை உணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்.

அதே போல, ஆன்மீக இருளில் நாம் இருக்கும் போது நம்மை இயேசு எனும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்ற நண்பர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களைச் சார்ந்தும், அவர்களுக்கு நன்றியுடையவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். உலக விஷயங்களுக்கும், கேளிக்கைகளுக்கும் கொண்டு செல்லும் நண்பர்கள், “பலர்” இருப்பார்கள். அவர்களைத் தவிர்த்து விட்டு நம்மை இயேசுவிடம் திரும்பத் திரும்ப அழைத்து வரும் அந்த “சிலர்” மீது நமது கவனமும், சார்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நமது வாழ்க்கை சரியான வழியில் தொடர்ந்து நடக்கும்.

2. “உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.( உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.) என்கிறது விவிலியம். நாம் ஆன்மீக வெளிச்சம் விழாத மனிதர்களாக இருக்கிறோம். வேதத்தின் அதிசயங்களைக் காண முடியாமல் நமது கண்கள் அடைபட்டுக் கிடக்கின்றன. அவற்றை இயேசுவின் தொடுதல் மட்டுமே திறக்க முடியும்.

தூய ஆவியின் கரம்பிடித்தலோடு இன்று நமது அகக்கண்கள் திறக்கப்பட வேண்டும். அப்போது தான் மறை உண்மைகள் நமது கண்களுக்கு மறைவாய் இருக்காமல் வெளிப்படத் துவங்கும். அதற்காக நாம் இயேசுவை நாடி வருபவர்களாக இருக்க வேண்டும்.

3. இயேசு பார்வையற்றவருடைய கரத்தைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். இயேசுவிடம் வருகின்ற நபர்களை அவர் கரம் பிடித்து அழைத்துச் செல்பவராக இருக்கிறார். நம்பிக்கையற்ற கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் செல்கிறார். ‘நீ ஊருக்கு வெளியே வா’ என அவரிடம் இயேசு சொல்லவில்லை. ‘இவரைக் கூட்டி வாருங்கள்’ என சீடர்களிடம் சொல்லவில்லை. அவரைக் கூட்டி வந்த மனிதர்களிடமும் அந்த பொறுப்பை ஒப்படைக்கவில்லை. தானே அவரது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். இது ஒரு அற்புத அனுபவம்.

நாமும் இயேசுவிடம் வரும்போது அவர் நமது கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார். நம்பிக்கையற்றோர் கூட்டத்திலிருந்து நம்பிக்கையின் நாட்டுக்கு. கவலையின் கூடாரத்திலிருந்து மகிழ்வின் தோட்டத்துக்கு. அழிவின் உலையிலிருந்து, வாழ்வின் நிலைக்கு. குழப்பத்தின் பிடியிலிருந்து தெளிவின் பாதைக்கு. அவர் நமது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். அவரை நாடி வரவேண்டியது மட்டுமே நமது வேலை ! இயேசு நமது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார் எனில் ஒன்று மட்டும் நிச்சயம் ! ஏதோ ஒரு அதிசயத்தை நாம் காணப் போகிறோம் !

4. இயேசு அவருடைய விழிகளில் உமிழ்ந்து அவரைத் தொடுகிறார். இயேசு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக தொடுகிறார். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் குணமாக்குகிறார். அவருடைய வழிகள் நமது வழிகளைப் போல இருப்பதில்லை. ஏன் அவர் அப்படி செய்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தாமல் நாம் உணரவும் முடியாது. ஆனால் அவர் என்ன செய்தாலும் அதற்காக நம்மை முழுமையாய் ஒப்படைப்பதில் இருக்கிறது நமது நம்பிக்கையின் வெளிப்பாடு.

நமது வாழ்க்கையை நாம் முழுமையாய் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். அடுத்த நபருக்கு அவர் அளித்த கொடைகளையோ, நன்மைகளையோ, ஆசீர்வாதங்களையோ அடிப்படையாய் வைத்து அவர் நமக்குச் செய்யப்போகும் நலன்களை சிந்திக்கக் கூடாது. அல்லது, ‘இப்படி கடவுள் செய்வதில்லையே’ என சந்தேகம் கொள்வதும் கூடாது. ஒவ்வொருவரையும் இறைவன் ஒவ்வொரு விதமாய் ஆசீர்வதிப்பார் எனும் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியம்.

5. ‘ஏதாவது தெரிகிறதா ?’ எனும் இயேசுவின் கேள்வி அவரது தாழ்மையையும், அவரது அன்பையும் எடுத்துக் காட்டுகிறது. ‘தன்னிடம் வல்லமை இல்லை’ என்பதல்ல இயேசுவின் கேள்வியின் பொருள், அந்த வல்லமை உன்னில் செயலாற்றியிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமே அது. அவரது வல்லமை நம்மில் செயலாற்றியிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள அவர் ஆர்வமாய் இருக்கிறார்.

அவரது தொடுதலும் அவரது வல்லமையும் நம்மை ஒரு புதிய அனுபவத்துக்கு கொண்டு செல்லும். அந்த அனுபவத்தை அவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென இயேசு விரும்புகிறார். இதுவரை காணாத ஆன்மீகத்தின் வெளிச்சத்தை அவரது தொடுதலினால் நாம் கண்டு கொள்கிறோமா ? இதுவரை நம்மை வந்தடையாத உண்மைகள் நம்மை வந்தடைகிறதா ? இருளின் பள்ளத்தாக்கில் கிடந்த நாம், ஒளியில் மேட்டுக்கு ஏறிவந்திருக்கின்றோமா ? இயேசு நம்மிடம் விசாரிப்பவராய் இருக்கிறார்.

6. அந்த மனிதர் முழுமையாய்ப் பார்வையடையவில்லை. அதை அவர் இயேசுவிடம் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார். ‘மனிதர்கள் நடக்கும் மரங்களாய் இருக்கிறார்கள்’ என்கிறார் அவர். ஆன்மீக இருட்டிலிருந்து வெளியே வருகின்ற அனுபவம் அலாதியானது. ஆனால் முழுமையான தெளிவான பார்வை கிடைக்கவில்லையேல், இயேசுவிடம் அதை ஒப்புக் கொள்வது மிகவும் முக்கியம். நாம் நமது குறைகளை, பலவீனங்களை, நமது யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளும் போது பெரிய அதிசயங்கள் நமக்காய் காத்திருக்கும்.

இறைவனின் அருகாமை நமக்கு இறைவார்த்தையின் பொருளையோ, ஆன்மீகத்தின் பாதையையோ மெல்ல மெல்ல காட்டித் தரும். அதை முழுமையாய் தெளிவாய் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் வாழ்க்கையை நாம் வாழ முடியும்.

மீட்பு என்பது சட்டென கிடைக்கும் அனுபவம், மீட்பின் வழியில் நடப்பது என்பது தொடர்ச்சியாய் கிடைக்கும் அனுபவம். பாதைக்குக் கீழ் பரவும் வெளிச்சம் போல, ஆன்மீக வெளிச்சத்தின் வழியில் தொடர்ந்து நடந்திட வேண்டும்.

7. இயேசு இரண்டாவது முறையாக அவரது ‘கண்களில்’ தொட்டபோது அவருடைய கண்கள் தெளிவடைய பார்வையை தெளிவாகப் பெற்றுக் கொண்டார். இறைவனின் இரண்டாம் தொடுதல் நமக்கு தெளிவான பார்வையைப் பெற்றுத்தரத் தேவையாகிறது. பல வேளைகளில் நாம் இறைவனின் தொடர் தொடுதலுக்காகக் காத்திருப்பதில்லை. ஒரு முறை கிடைத்த அனுபவத்தோடு திருப்திப்பட்டு விடுகிறோம்.

இரண்டாவது தொடுதல் என்பது இயேசுவின் இயலாமையின் வெளிப்பாடல்ல, அவரது அன்பின் வெளிப்பாடு. “நான் பார்வை பெறவேண்டும்” என இந்த மனிதர் சொல்லவில்லை. அவரது நண்பர்கள் தான் வேண்டுகின்றனர். அவரது விசுவாசத்தின் பலவீனம் அவருக்கு இரண்டாவது தொடுதலில் தேவையை உருவாக்கியிருக்கலாம். நாம் அனைவருமே விசுவாசத் தேவையில் இருக்கிறோம். பல வேளைகளில் தடுமாறுகிறோம். இயேசுவின் இரண்டாம் தொடுதல் நிச்சயம் வேண்டும் எனும் உண்மையை உணர்கிறோமா ?

8. ஊரில் நுழைய வேண்டாம் என இயேசு அவரை அனுப்பி வைக்கிறார். பழைய வாழ்க்கையை விட்டு வெளியே வந்தபின் மீண்டும் அந்த பழைய வாழ்க்கைக்குள் நுழையும் ஆர்வத்தை நாம் காட்டக் கூடாது. இயேசு நம்மைக் கரம்பிடித்து, நமது வாழ்க்கையில் ஆன்மீகப் பார்வையைக் கொண்டு வந்தபின் மீண்டும் இருட்டுக்குள் வாழ செல்லக் கூடாது என்பதே இயேசு சொன்ன அறிவுரை.

நமது வாழ்க்கை இயேசுவின் தொடுதலுக்கு முன், இயேசுவின் தொடுதலுக்குப் பின் என இரண்டு பிரிவாக இருக்க வேண்டும். தொடுதலுக்குப் பின்னான தூய வாழ்வு, பழைய வாழ்க்கையோடு கலந்து விடாமல் இருக்க வேண்டும். புதிய ரசத்தைப் பழைய தோற்பையில் ஊற்றி வைப்பது ஆபத்தானது. பழைய ஆடையிலுள்ள கிளிசலில், புதிய ஆடையை ஒட்டுப் போடுதல் பயனளிக்காது. எனவே புது வாழ்க்கை பெற்ற நாம் பழைய பாவத்தின் அழுக்குகளைத் தேடி செல்லக் கூடாது.

9. பார்வையற்ற நபரை இயேசுவிடம் கொண்டு வருகின்ற நபர்கள் அவரைத் தொடுமாறு வேண்டுகின்றனர். இயேசு எப்படி நலமளிக்க வேண்டும் எனும் ஒரு சிந்தனையை அவர்களுடைய மனதில் அவர்கள் வைத்திருக்கின்றனர். ஆனால் இயேசுவோ அவருக்கென ஒரு வழியை வைத்திருக்கிறார். இரண்டாவது தொடுதல் தவறல்ல என்பதை சீடர்களுக்கு புரிய வைக்கிறார். முதல் முறையில் எல்லாம் சரியாய் அமைந்து விடவேண்டுமெனும் கட்டாயமில்லை என அவர் புரிய வைக்கிறார்.

நாமும் பல வேளைகளில், ‘இயேசுவே இது எனக்கு வேண்டும், இப்படி வேண்டும்’ என இயேசுவுக்கு கட்டளையிடுகிறோம். அல்லது அவருக்குத் தெரியாதது போல நாம் அவருக்குக் கற்றுக் கொடுக்க முயல்கிறோம். அது தவறான அணுகுமுறை. நமது தேவைகளை இயேசுவிடம் சொல்ல வேண்டும், அதற்கான தீர்வை அவர் பார்த்துக் கொள்வார்.

10. கடைசியாக இயேசு, அந்த மனிதரை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். அவருடைய பார்வையின் மகிழ்ச்சியை அவரது குடும்பம் அனுபவிக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார். அவரது மகிழ்ச்சி இல்லத்தில் நிரம்ப வேண்டும் என அவர் ஆசிக்கின்றார்.

நமது வாழ்க்கையிலும் நமக்குக் கிடைக்குன்ற ஆன்மீக வெளிச்சங்கள் முதலில் நமது குடும்பத்தினரிடம் ஒளிரப்பட வேண்டும். அவர்களும் இறைவனின் வெளிச்சத்தில் நடக்க வேண்டும். நற்செய்தி முதலில் குடும்பத்தில் பகிரப்பட வேண்டும். குடும்பங்கள் குட்டித் திருச்சபைகளாக உருவாகும் போது தான் சமூகம் அதன் பலனை அனுபவிக்கும்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*

 

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் : பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்

Image result for mark 8:22-26

மார்க் 8:22..26

அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்.

அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டார்.

அவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்” என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.

இயேசு அவரிடம், “ஊரில் நுழைய வேண்டாம்” என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

*

இயேசுவின் புதுமைகள் ஒவ்வொன்றும் நம்மை வியப்புக்குள் அழைத்துச் செல்லும் அனுபவமாக இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் இயேசுவிடம் நம்பிக்கையோடு வருகின்ற மக்கள் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட திருப்தியோடு திரும்பிச் செல்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் இயேசுவின் குணமாக்கும் முறை சீடர்களையும், மக்களையும் வியப்புக்கும் கேள்விகளுக்கும் உள்ளாக்கி விடுகின்றன. “கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? (மார்க் 8:18) ” என சற்று நேரத்திற்கு முன்பு தான் சீடர்களிடம் அவர் கேட்டிருந்தார். இப்போது இந்த அதிசயம் அவர்களுக்கு மறைமுகமாய் சொல்லப்பட்ட பாடமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இயேசு செய்த அற்புதங்கள், நமது வாழ்வில் அற்புதங்களை விளைவிக்க வேண்டுமெனில் அவை கூறும் மறைவான உண்மைகளை நாம் கண்டு கொள்தல் அவசியம். அப்படி மறை உண்மைகளைக் கண்டு கொள்ள நாம் தூய ஆவியானவரின் வெளிப்படுத்துதலை தொடர்ந்து நாடுபவர்களாக இருக்க வேண்டும்.

இந்த அற்புதமும் நமக்கு பல்வேறு ஆன்மீகப் புரிதல்களைக் கற்றுத் தருகிறது.

1. பார்வையற்ற ஒரு நபரை இயேசுவிடம் கொண்டு வந்து அவரைக் குணமாக்க இயேசுவிடம் வேண்டுகின்றனர் நண்பர்கள். ஆன்மீகப் பார்வை இழந்த நண்பர்களை நாம் இயேசு எனும் வெளிச்சத்தின் முன் கொண்டு வரவேண்டிய கடமை உணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்.

அதே போல, ஆன்மீக இருளில் நாம் இருக்கும் போது நம்மை இயேசு எனும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்ற நண்பர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களைச் சார்ந்தும், அவர்களுக்கு நன்றியுடையவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். உலக விஷயங்களுக்கும், கேளிக்கைகளுக்கும் கொண்டு செல்லும் நண்பர்கள், “பலர்” இருப்பார்கள். அவர்களைத் தவிர்த்து விட்டு நம்மை இயேசுவிடம் திரும்பத் திரும்ப அழைத்து வரும் அந்த “சிலர்” மீது நமது கவனமும், சார்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நமது வாழ்க்கை சரியான வழியில் தொடர்ந்து நடக்கும்.

2. “உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.( உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.) என்கிறது விவிலியம். நாம் ஆன்மீக வெளிச்சம் விழாத மனிதர்களாக இருக்கிறோம். வேதத்தின் அதிசயங்களைக் காண முடியாமல் நமது கண்கள் அடைபட்டுக் கிடக்கின்றன. அவற்றை இயேசுவின் தொடுதல் மட்டுமே திறக்க முடியும்.

தூய ஆவியின் கரம்பிடித்தலோடு இன்று நமது அகக்கண்கள் திறக்கப்பட வேண்டும். அப்போது தான் மறை உண்மைகள் நமது கண்களுக்கு மறைவாய் இருக்காமல் வெளிப்படத் துவங்கும். அதற்காக நாம் இயேசுவை நாடி வருபவர்களாக இருக்க வேண்டும்.

3. இயேசு பார்வையற்றவருடைய கரத்தைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். இயேசுவிடம் வருகின்ற நபர்களை அவர் கரம் பிடித்து அழைத்துச் செல்பவராக இருக்கிறார். நம்பிக்கையற்ற கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் செல்கிறார். ‘நீ ஊருக்கு வெளியே வா’ என அவரிடம் இயேசு சொல்லவில்லை. ‘இவரைக் கூட்டி வாருங்கள்’ என சீடர்களிடம் சொல்லவில்லை. அவரைக் கூட்டி வந்த மனிதர்களிடமும் அந்த பொறுப்பை ஒப்படைக்கவில்லை. தானே அவரது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். இது ஒரு அற்புத அனுபவம்.

நாமும் இயேசுவிடம் வரும்போது அவர் நமது கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார். நம்பிக்கையற்றோர் கூட்டத்திலிருந்து நம்பிக்கையின் நாட்டுக்கு. கவலையின் கூடாரத்திலிருந்து மகிழ்வின் தோட்டத்துக்கு. அழிவின் உலையிலிருந்து, வாழ்வின் நிலைக்கு. குழப்பத்தின் பிடியிலிருந்து தெளிவின் பாதைக்கு. அவர் நமது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். அவரை நாடி வரவேண்டியது மட்டுமே நமது வேலை ! இயேசு நமது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார் எனில் ஒன்று மட்டும் நிச்சயம் ! ஏதோ ஒரு அதிசயத்தை நாம் காணப் போகிறோம் !

4. இயேசு அவருடைய விழிகளில் உமிழ்ந்து அவரைத் தொடுகிறார். இயேசு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக தொடுகிறார். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் குணமாக்குகிறார். அவருடைய வழிகள் நமது வழிகளைப் போல இருப்பதில்லை. ஏன் அவர் அப்படி செய்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தாமல் நாம் உணரவும் முடியாது. ஆனால் அவர் என்ன செய்தாலும் அதற்காக நம்மை முழுமையாய் ஒப்படைப்பதில் இருக்கிறது நமது நம்பிக்கையின் வெளிப்பாடு.

நமது வாழ்க்கையை நாம் முழுமையாய் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். அடுத்த நபருக்கு அவர் அளித்த கொடைகளையோ, நன்மைகளையோ, ஆசீர்வாதங்களையோ அடிப்படையாய் வைத்து அவர் நமக்குச் செய்யப்போகும் நலன்களை சிந்திக்கக் கூடாது. அல்லது, ‘இப்படி கடவுள் செய்வதில்லையே’ என சந்தேகம் கொள்வதும் கூடாது. ஒவ்வொருவரையும் இறைவன் ஒவ்வொரு விதமாய் ஆசீர்வதிப்பார் எனும் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியம்.

5. ‘ஏதாவது தெரிகிறதா ?’ எனும் இயேசுவின் கேள்வி அவரது தாழ்மையையும், அவரது அன்பையும் எடுத்துக் காட்டுகிறது. ‘தன்னிடம் வல்லமை இல்லை’ என்பதல்ல இயேசுவின் கேள்வியின் பொருள், அந்த வல்லமை உன்னில் செயலாற்றியிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமே அது. அவரது வல்லமை நம்மில் செயலாற்றியிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள அவர் ஆர்வமாய் இருக்கிறார்.

அவரது தொடுதலும் அவரது வல்லமையும் நம்மை ஒரு புதிய அனுபவத்துக்கு கொண்டு செல்லும். அந்த அனுபவத்தை அவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென இயேசு விரும்புகிறார். இதுவரை காணாத ஆன்மீகத்தின் வெளிச்சத்தை அவரது தொடுதலினால் நாம் கண்டு கொள்கிறோமா ? இதுவரை நம்மை வந்தடையாத உண்மைகள் நம்மை வந்தடைகிறதா ? இருளின் பள்ளத்தாக்கில் கிடந்த நாம், ஒளியில் மேட்டுக்கு ஏறிவந்திருக்கின்றோமா ? இயேசு நம்மிடம் விசாரிப்பவராய் இருக்கிறார்.

6. அந்த மனிதர் முழுமையாய்ப் பார்வையடையவில்லை. அதை அவர் இயேசுவிடம் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார். ‘மனிதர்கள் நடக்கும் மரங்களாய் இருக்கிறார்கள்’ என்கிறார் அவர். ஆன்மீக இருட்டிலிருந்து வெளியே வருகின்ற அனுபவம் அலாதியானது. ஆனால் முழுமையான தெளிவான பார்வை கிடைக்கவில்லையேல், இயேசுவிடம் அதை ஒப்புக் கொள்வது மிகவும் முக்கியம். நாம் நமது குறைகளை, பலவீனங்களை, நமது யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளும் போது பெரிய அதிசயங்கள் நமக்காய் காத்திருக்கும்.

இறைவனின் அருகாமை நமக்கு இறைவார்த்தையின் பொருளையோ, ஆன்மீகத்தின் பாதையையோ மெல்ல மெல்ல காட்டித் தரும். அதை முழுமையாய் தெளிவாய் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் வாழ்க்கையை நாம் வாழ முடியும்.

மீட்பு என்பது சட்டென கிடைக்கும் அனுபவம், மீட்பின் வழியில் நடப்பது என்பது தொடர்ச்சியாய் கிடைக்கும் அனுபவம். பாதைக்குக் கீழ் பரவும் வெளிச்சம் போல, ஆன்மீக வெளிச்சத்தின் வழியில் தொடர்ந்து நடந்திட வேண்டும்.

7. இயேசு இரண்டாவது முறையாக அவரது ‘கண்களில்’ தொட்டபோது அவருடைய கண்கள் தெளிவடைய பார்வையை தெளிவாகப் பெற்றுக் கொண்டார். இறைவனின் இரண்டாம் தொடுதல் நமக்கு தெளிவான பார்வையைப் பெற்றுத்தரத் தேவையாகிறது. பல வேளைகளில் நாம் இறைவனின் தொடர் தொடுதலுக்காகக் காத்திருப்பதில்லை. ஒரு முறை கிடைத்த அனுபவத்தோடு திருப்திப்பட்டு விடுகிறோம்.

இரண்டாவது தொடுதல் என்பது இயேசுவின் இயலாமையின் வெளிப்பாடல்ல, அவரது அன்பின் வெளிப்பாடு. “நான் பார்வை பெறவேண்டும்” என இந்த மனிதர் சொல்லவில்லை. அவரது நண்பர்கள் தான் வேண்டுகின்றனர். அவரது விசுவாசத்தின் பலவீனம் அவருக்கு இரண்டாவது தொடுதலில் தேவையை உருவாக்கியிருக்கலாம். நாம் அனைவருமே விசுவாசத் தேவையில் இருக்கிறோம். பல வேளைகளில் தடுமாறுகிறோம். இயேசுவின் இரண்டாம் தொடுதல் நிச்சயம் வேண்டும் எனும் உண்மையை உணர்கிறோமா ?

8. ஊரில் நுழைய வேண்டாம் என இயேசு அவரை அனுப்பி வைக்கிறார். பழைய வாழ்க்கையை விட்டு வெளியே வந்தபின் மீண்டும் அந்த பழைய வாழ்க்கைக்குள் நுழையும் ஆர்வத்தை நாம் காட்டக் கூடாது. இயேசு நம்மைக் கரம்பிடித்து, நமது வாழ்க்கையில் ஆன்மீகப் பார்வையைக் கொண்டு வந்தபின் மீண்டும் இருட்டுக்குள் வாழ செல்லக் கூடாது என்பதே இயேசு சொன்ன அறிவுரை.

நமது வாழ்க்கை இயேசுவின் தொடுதலுக்கு முன், இயேசுவின் தொடுதலுக்குப் பின் என இரண்டு பிரிவாக இருக்க வேண்டும். தொடுதலுக்குப் பின்னான தூய வாழ்வு, பழைய வாழ்க்கையோடு கலந்து விடாமல் இருக்க வேண்டும். புதிய ரசத்தைப் பழைய தோற்பையில் ஊற்றி வைப்பது ஆபத்தானது. பழைய ஆடையிலுள்ள கிளிசலில், புதிய ஆடையை ஒட்டுப் போடுதல் பயனளிக்காது. எனவே புது வாழ்க்கை பெற்ற நாம் பழைய பாவத்தின் அழுக்குகளைத் தேடி செல்லக் கூடாது.

9. பார்வையற்ற நபரை இயேசுவிடம் கொண்டு வருகின்ற நபர்கள் அவரைத் தொடுமாறு வேண்டுகின்றனர். இயேசு எப்படி நலமளிக்க வேண்டும் எனும் ஒரு சிந்தனையை அவர்களுடைய மனதில் அவர்கள் வைத்திருக்கின்றனர். ஆனால் இயேசுவோ அவருக்கென ஒரு வழியை வைத்திருக்கிறார். இரண்டாவது தொடுதல் தவறல்ல என்பதை சீடர்களுக்கு புரிய வைக்கிறார். முதல் முறையில் எல்லாம் சரியாய் அமைந்து விடவேண்டுமெனும் கட்டாயமில்லை என அவர் புரிய வைக்கிறார்.

நாமும் பல வேளைகளில், ‘இயேசுவே இது எனக்கு வேண்டும், இப்படி வேண்டும்’ என இயேசுவுக்கு கட்டளையிடுகிறோம். அல்லது அவருக்குத் தெரியாதது போல நாம் அவருக்குக் கற்றுக் கொடுக்க முயல்கிறோம். அது தவறான அணுகுமுறை. நமது தேவைகளை இயேசுவிடம் சொல்ல வேண்டும், அதற்கான தீர்வை அவர் பார்த்துக் கொள்வார்.

10. கடைசியாக இயேசு, அந்த மனிதரை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். அவருடைய பார்வையின் மகிழ்ச்சியை அவரது குடும்பம் அனுபவிக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார். அவரது மகிழ்ச்சி இல்லத்தில் நிரம்ப வேண்டும் என அவர் ஆசிக்கின்றார்.

நமது வாழ்க்கையிலும் நமக்குக் கிடைக்குன்ற ஆன்மீக வெளிச்சங்கள் முதலில் நமது குடும்பத்தினரிடம் ஒளிரப்பட வேண்டும். அவர்களும் இறைவனின் வெளிச்சத்தில் நடக்க வேண்டும். நற்செய்தி முதலில் குடும்பத்தில் பகிரப்பட வேண்டும். குடும்பங்கள் குட்டித் திருச்சபைகளாக உருவாகும் போது தான் சமூகம் அதன் பலனை அனுபவிக்கும்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*