Posted in OLD Testament

கி.மு 1 : உலகம் உருவான கதை

Image result for God creating world

மண்ணுலகம் உருவமில்லாமல், விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருந்தது. எங்கும் இருளும் தண்ணீரும் மட்டுமே நிறைந்திருந்தன. கடவுளின் ஆவி மட்டும் தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது. வெளிச்சம் இன்னும் மண்ணுலகுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை.

ஒரு நல்ல உலகைப் படைக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார். அவருடைய கற்பனைகளில் ஒரு உலகம் விரிந்தது. அந்த உலகை நிஜத்தில் கொண்டு வரவேண்டும் என்று கடவுள் நினைத்தார். அதற்கு முதல் தேவை வெளிச்சம். இருளுக்குள் கிடக்கும் உலகைத் தூசு தட்ட முதல் தேவை வெளிச்சம்.

ஒளி தோன்றுக !

இதுதான் படைப்பின் துவக்கத்தில் கடவுள் உச்சரித்த முதல் வார்த்தை. அதுவரை இருளுடன் மட்டுமே அறிமுகம் கொண்டிருந்த உலகத்தின் மீது முதன் முதலாக ஒரு வெளிச்சக் கீற்று வானிலிருந்து வந்து விழுந்தது. அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல பூமியின் மேலிருந்த இருளை வெளியேற்றியது.

கடவுள் வெளிச்சத்தைப் பார்த்தார். உருவமற்ற பூமி முதன் முறையாக தன் அழகற்ற முகத்தை வெளிச்சத்தில் காட்டியது. முதல் படைப்பான ஒளி கடவுளுக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. ஆனாலும் எப்போதுமே வெளிச்சமாய் இருப்பது நல்லதல்ல, வெளிச்சமும் இருளும் மாறிமாறி வரவேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.

அதன்படியே கொஞ்சநேரம் வெளிச்சம், கொஞ்ச நேரம் இருள் என ஒரு நாளை இரண்டாகப் பிரித்தார். இப்போது கடவுளுக்கு முழு திருப்தி ! வெளிச்சமாய் இருக்கும் காலத்தைப் பகல் என்றும் இருளாய் இருக்கும் காலத்தை இரவு என்றும் கடவுள் பெயரிட்டார். அது தான் உலகில் நடந்த முதல் பெயர்சூட்டு விழா. அந்த நிகழ்ச்சி முடிந்தபோது முதல் நாள் முடிவுறிருந்தது.

மறு நாள் கடவுள் வெளிச்சத்தில் இருந்த பூமியைப் பார்த்தார். தண்ணீரும், தரையும் பின்னிப் பிணைந்து  ஒரு அழகற்ற, பயனற்ற நிலையில் இருந்தது பூமி. இந்தத் தண்ணீரை இரண்டாகப் பிரித்து வானத்துக்கு மேலே ஒரு பாகத்தையும் பூமியிலே இன்னொரு பாகத்தையும் வைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் நினைத்தார்.அப்படியே செய்தார்.

பூமியிலிருந்த தண்ணீரின் ஒருபகுதி வானத்துக்கு மேலே இடம்பெயர்ந்தது. மிச்ச தண்ணீர் தாய்வீடான பூமியிலேயே தங்கிவிட்டது. வானத்தைக் கடவுள் விண்ணுலகம் என்றும், பூமியை மண்ணுலகம் என்றும் பெயரிட்டார். படைத்தலின் இரண்டாம் நாள் பணி அத்துடன் முடிவடைந்தது.

தண்ணீரும் தரையும் ஆங்காங்கே சிதறிச் சிதறிக் கிடப்பதை விட தண்ணீர் ஓரிடத்திலும், தரை ஓரிடத்திலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் எண்ணினார். ‘பூமியிலே ஆங்காங்கே கிடக்கும் தண்ணீர் எல்லாம் ஒரே இடத்தில் வந்து சேரட்டும்’ என்று கட்டளையிட்டார்.

 பூமியில் கிடந்த தண்ணீரெல்லாம் உடனே ஓடி ஓரிடத்தில் வந்து சேர்ந்தது. மிகப்பெரிய தண்ணீர்ப் பரப்பு ஒன்று உருவானது. தண்ணீரெல்லாம் கைகோர்த்து நின்ற மிகப் பெரிய நீர் நிலையைக் கடவுள் பெருங்கடல் என்று பெயரிட்டார். இப்போது தண்ணீர் வடிந்து போன கட்டாந்தரை மிகப் பெரிய அளவில் அவருடைய முன்னால் கிடந்தது. கடவுள் மகிழ்ந்தார். ஆனால் தரை அழகில்லாமல் வெறுமையாக இருந்தது. அழகில்லாமல் இருக்கும் தரையை எப்படி அழகாக்குவது என்று கடவுள் யோசித்தார்.

நிலத்தில் ஏராளமான புல்வெளிகளையும், செடிகளையும், மரங்களையும் கடவுள் வளரச் செய்தார். வெறுமையாய்க் கிடந்த தரையில் திடீரென விதவிதமான செடிகளும், மரங்களும், அழகிய புல்வெளிகளும் தோன்றின. இப்போது தரை வெறுமையாக இல்லாமல் அழகானதாக மாறியது. மண்ணுலகு தன் பரப்பு முழுவதும் பச்சை போர்த்திச் சிரித்த போது காலையும் மாலையும் சேர்ந்து மூன்றாம் நாள் முடிவுற்றிருந்தது.

உலகத்துக்குப் பகலையும் இருளையும் கொண்டு வந்த கடவுள், இரண்டையும் ஆட்சி செய்ய இரண்டு ஒளிப் பிழம்புகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கணித்தார். ஒளிப்பிழம்புகள் மாறி மாறி வருவதை வைத்துக் காலங்களைக் கணிக்கவும் முடியும் என்று கடவுள் உணர்ந்தார்.

எனவே பகலை ஆள ஒரு மிகப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள இன்னொரு ஒளிப்பிழம்பையும் கடவுள் நான்காவது நாளில் படைத்தார். அந்த இரண்டு ஒளிப்பிழம்புகளையும் வானத்திலிருந்து ஆட்சி செய்யுமாறு கட்டளையிட்டார். வானம் ஒளிப்பிழம்பைச் சுமந்ததும் அழகானதாக மாறியது.

இப்போது பூமியில் வெளிச்சம் தேவையான அளவுக்குக் கிடைத்தது. வானத்தின் பரப்பில் ஒளிப்பிழம்புகளுடன் ஏராளமான விண்மீன்களையுன் கடவுள் படைத்தார். இப்போது வானம் வெளிச்ச மயமாக எழிலின் இருப்பிடமாக மாறியது. நான்காவது நாள் படைப்பில் கடவுள் மிகவும் திருப்தியடைந்தார்.

தன்னுடைய நான்கு நாள் படைப்பையும் ஐந்தாவது நாளில் பார்வையிட்டார் கடவுள். அழகிய பூமி, நீள் கடல், வெளிச்ச வானம் என எல்லாம் மிக அழகாக இருந்தன. தண்ணீரிலும் தரையிலும் இனிமேல் உயிரினங்கள் தோன்றினால் அது பூமியை மேலும் அழகுபடுத்தும் என்று கடவுள் ஏராளமான கடல்வாழ் உயிரினங்களையும், வானத்துப் பறவைகளையும் படைத்தார்.

கடல் முழுவதும் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் நீத்தத் துவங்கின, அவை தண்ணீரின் மேல் குதித்தும், நீர்த்தாவரங்களின் இடையே ஓடியும் விளையாடியதைக் கண்ட கடவுள் ஆனந்தமடைந்தார். வானத்துப் பறவைகள் அழகழகான சிறகுகளை அடித்து மரங்களிடையே ஆனந்தமாய் சுற்றித் திரிவதைக் கண்டு கடவுள் மிகவும் திருப்தியடைந்தார். நீங்கள் எல்லாம் பலுகிப் பெருகி இந்த பூமியின் மெளனத்தைக் கலையுங்கள் என்று அவற்றை வாழ்த்தினார். ஐந்தாவது நாள் படைப்பைக் கடவுள் அத்துடன் முடித்துக் கொண்டார்.

ஆறாவது நாளில் ஆண்டவர், நிலத்தில் ஊர்வன, காட்டு விலங்குகள், கால்நடைகள் எல்லாம் வேறு வேறு இனங்களில் தோன்றட்டும் என ஆணையிட்டார். பறவைகள் வானத்தில் பறந்து திரிய, விலங்குகள் பூமியில் அலைந்து திரிந்தன. அவை வெவ்வேறு இனங்களில், வெவ்வேறு வடிவங்களில் பூமியை நிறைத்தன. கடவுள் தான் படைத்த விலங்குகளோடு பேசினார். நீங்களும் பலுகிப் பெருகி பூமியை நிறையுங்கள் என்று வாழ்த்தினார்.

தன்னுடைய் ஆறு நாள் படைப்பையும் கடவுள் பார்த்து ரசித்தார். ஆனாலும் ஒரு குறை அவர் கண்களுக்குத் தெரிந்தது. பூமியில் பறவைகள், விலங்குகள், அழகிய தாவரங்கள் எல்லாம் இருக்கின்றன, கடலில் நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் பூமியிலிருந்து ஆட்சி செய்ய ஒரு உயிரினத்தைப் படைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் யோசித்தார்.

விலங்குகளில் ஒன்றையோ, பறவைகளில் ஒன்றையோ, நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றையோ பூமியை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுத்தால் சிறப்பானதாக இருக்காது என்று அவருக்குத் தோன்றியது. எனவே ‘என்னைப் போன்ற வடிவில் ஒரு உயிரினத்தைப் படைப்பேன். அவனை மனிதன் என்று அழைப்பேன், அவனிடம் இந்தப் பூமியை ஆளும் பொறுப்பை ஒப்படைப்பேன்’ என்று கடவுள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

இதுவரை படைத்த அனைத்தையும் கட்டளையிட்டு உருவாக்கிய கடவுள் மனிதனை மட்டும் வித்தியாசமாகச் சிறப்பாகப் படைக்க வேண்டும் என்று விரும்பினார். ‘மனிதன் தோன்றட்டும்’ என்னும் ஒற்றைவாக்கில் மனிதனைப் படைத்தால், அவனுக்கும் இதுவரை தான் படைத்த உயிரினங்களுக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய கடவுள், மனிதனை தன்னுடைய உழைப்பினாலும், உயிரினாலும் உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.

தரையில் அமர்ந்து கொஞ்சம் மண்ணைச் சேகரித்தார். அந்த மண்ணை வைத்துக் கடவுள் தன்னைப் போன்ற ஒரு உருவத்தை உருவாக்கினார். உலகில் உருவாக்கப் பட்ட முதல் சிற்பம் அது தான். உலகின் முதல் சிலை அந்த மனித சிலை தான். கடவுள் மனிதனின் உருவத்தைச் செய்து முடித்ததும் குனிந்து அவனுடைய நாசிகளில் தன்னுடைய உயிர் மூச்சை ஊதினார்.

மனிதன் உயிர்பெற்றான் கடவுளின் உயிர்மூச்சால் உயிர்பெற்றதால் அவனுக்குள் தெய்வத் தன்மை நிறைந்திருந்தது. தன்னுடைய கண்ணைத் திறந்து அவன் கடவுளைப் பார்த்தான். கடவுள் புன்னகைத்தார்.  தன்னுடைய உடல் உழைப்பும், உயிர் மூச்சும் உருவாக்கிய மனிதனை அவர் நேசத்துடன் அணைத்துக் கொண்டார்.

மனிதனைப் படைத்த கடவுள் பூமியைப் பார்த்தார். எந்த இடமும் மனிதனைத் தங்கவைக்கத் தகுதியானதாய்த் தோன்றவில்லை. எனவே கடவுள் ஒரு தோட்டத்தை அமைத்தார். அதுதான் கடவுளின் ஏதேன் தோட்டம். ஏதேன் வானக சுவர்க்கத்தின் மண்ணக வடிவமாய் இருந்தது.

அழகிய மரங்கள் தோட்டம் முழுவதும் நிறைந்திருந்தன. மரங்கள் மனிதனின் பசியைப் போக்க சுவையான பழங்களை கிளைகளெங்கும் தொங்கவிட்டிருந்தன. அழகிய பறவைகள் மரங்களில் அமர்ந்து சிறகடித்தும், குரலெழுப்பியும் ஏதேனை இசையின் இருப்பிடமாக மாற்றின. மலர்களை தங்கள் முதுகில் ஏந்தியபடி ஓடும் பீசோன், கீகோன், திக்ரீசு, யூப்பிரத்தீசு என்னும் நான்கு அற்புத ஜீவ நதிகள் ஏதேனுக்குள் ஓடின.

அந்தத் தோட்டத்தின் நடுவே இரண்டு முக்கியமான மரங்கள் இருந்தன. ஒன்று ஜீவ விருட்சம், இன்னொன்று ‘நன்மை தீமை அறியும் மரம்’. ஏதேன் தோட்டம் கடவுளின் கற்பனைகளை நிஜத்தில் எடுத்து வைத்தது. ஏதேன் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தக் கடவுள், இதுதான் மனிதனுக்குத் தகுதியான இடம் என்று சொல்லி தான் படைத்த மனிதனை அங்கே தங்கச் செய்தார்.

ஆறு நாட்களாகத் தான் படைத்த பூமியையும், உயிரினங்களையும் கடவுள் பார்வையிட்டார். அனைத்துமே மிகவும் திருப்திகரமாக இருந்தன. ஆறு நாட்களுக்கு முன் உருவமற்றிருந்த பூமி இப்போது அழகும். இன்னிசையும் நிறைந்த அழகிய இடமாக மாறியிருந்தது. தன்னுடைய படைப்பில் மகிழ்ந்த கடவுள் ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார்.

பின் கடவுள் ஏதேன் தோட்டத்திற்குச் சென்று மனிதனைப் பார்த்தார். அவன் நதிகளில் குதித்து, மரங்களில் கனிகளைப் பறித்துத் தின்று ஆனந்தமாக இருந்தான். கடவுள் அவனை ஏதேன் தோட்டத்தின் நடுவே இருந்த மரத்தின் அருகே கூட்டிச் சென்று ‘ இதோ.. இந்தத் தோட்டத்திலும், இந்த உலகத்திலும் உள்ள எல்லாமே உனக்குச் சொந்தமானவை தான். ஆனால் இந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் நீ உண்னக் கூடாது. இதன் பெயர் நன்மை தீமை அறியும் மரம்.’ என்று கடவுள் மனிதனுக்கு தன்னுடைய முதல் கட்டளையைக் கொடுத்தார். அதுதான் கடவுளிடமிருந்து மனிதன் பெற்றுக் கொண்ட முதல் கட்டளை. மனிதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுள் அவனையும் அழைத்துக் கொண்டு ஏதேனை விட்டு வெளியே வந்தார்.

‘இதோ இந்த பூமி முழுவதும் உனக்கே சொந்தம். உனக்கு விருப்பமானவற்றை உண்டு, விருப்பமானதைச் செய்து மகிழ்ச்சியாக இரு. இந்த விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் நான் உனக்காகத் தான் உருவாக்கியிருக்கிறேன். நீ எனக்கு மட்டும் பணிந்திரு, மற்றவை அனைத்தையும் ஆட்சி செய். இப்போது நான் படைத்த இந்த உயிரினங்களுக்கு நீ பெயரிடவேண்டும்’. கடவுள் சொன்னார்.

கடவுள் ஒவ்வொரு விலங்கினருகிலும் மனிதனை அழைத்துச் சென்றார். அவன் தன்னுடைய மனதில் தோன்றிய ஒரு பெயரைச் சொல்ல அதுவே அந்த இனத்தின் பெயரானது. அவ்வாறே அவன் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். மனிதனின் முதல் பணி அத்துடன் முடிவடைந்தது.

மனிதன் அனைத்திற்கும் பெயரிட்டு முடித்தபின் ஏதேன் தோட்டத்திற்குத் திரும்பினான். கடவுள் பார்த்தார். எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக அலைய மனிதன் மட்டும் தனியாக இருக்கிறானே என்று நினைத்து வருந்தினார். அவர் எல்லா காட்டு விலங்குகளையும் கவனித்துப் பார்த்தார், எல்லா பறவையினங்களையும் பார்வையிட்டார் ஆனால் எதுவுமே மனிதனுக்குத் தக்க துணையாகத் தோன்றவில்லை. மனிதனைப் போன்ற தோற்றத்தில், மனிதனோடு நல்ல அன்புடன் உறவாடக் கூடிய ஒரு உயிரைத் தான் மனிதனுக்குத் துணையாக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார்.

அன்று இரவில் மனிதன் தூங்கிக் கொண்டிருக்கையில் அவனருகில் கடவுள் வந்து நின்றார். மண்ணினால் இன்னொரு உருவத்தைச் செய்தால் அது இன்னொரு இனமாகி விடும். எனவே மனிதனிலுருந்தே ஒரு உயிரைப் படைக்கவேண்டும். அப்போது தான் அது மனிதனின் உயிரின் பாகமாகவும், உடலின் பாகமாகவும் இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.

அவனுடைய உடம்பில் எந்த பகுதியிலிருந்து மனிதனை உருவாக்குவது என்னும் குழப்பம் கடவுளுக்கே ஏற்பட்டது. காலிலிருந்து இன்னொரு உயிரைப் படைத்தால் அவள் மனிதனை விடக் கீழானவளாகக் கருதப் படலாம், தலையிலிருந்து படைத்தால் மனிதனை அடக்கி ஆள முயலலாம், எனவே விலா எலும்பிலிருந்து ஒரு உயிரைப் படைக்க வேண்டும் என்று கடவுள் திட்டமிட்டார்.

அப்போது தான் மனிதனும், மனிதனின் துணையும் ஒரே நிலையில் இருப்பார்கள். அவர்கள் இருவருமே சமமானவர்களாகக் கருதப் படுவார்கள். யாரும் யாரையும் விட உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ எண்ணிக் கொள்ள மாட்டார்கள் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த மனிதனுக்குக் கடவுள் ஆழ்ந்த தூக்கத்தைக் கட்டளையிட்டார். அவன் மயக்க நிலையில் விழுந்தான். அப்போது கடவுள் அவனுடைய விலா எலும்பிலிருந்து ஒன்றை எடுத்து அதை மனிதனின் துணையாக உருவாக்கினார்.

மனிதன் விழித்தெழுந்ததும் கடவுள் அவனிடம்,’ இதோ… இந்த உயிரை நான் உன் துணைவியாகத் தருகிறேன். உன்னுடைய விலா எலும்பிலிருந்து இவளை நான் உருவாக்கி இருக்கிறேன். எனவே இவளும் நீயும் ஒரே உடலாகவும், ஒரே உயிராகவும் வாழுங்கள்’ என்றார். மனிதன் மகிழ்ந்தான்.
‘இவள் என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். எனவே இவளுக்கு நான் பெண் என்று பெயரிடுகிறேன் என்றான்’. மனிதன் துணையுடன் வாழத்துவங்கினான். இருவருமே நிர்வாணத்தை அணிந்திருந்தார்கள், ஆனாலும் வெட்கத்தை அறிந்திருக்கவில்லை. மனிதனின் ஆனந்தத்தைக் கண்ட கடவுள் தன்னுடைய படைப்பு முழுமையடைந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.

0

Posted in OLD Testament

கி.மு 2 : முதல் பாவம்

Image result for adam eve serpent

கடவுள் உலகையும், முதல் மனிதன் ஆதாமையும் படைத்து அவனுக்கு ஒரு துணையையும் அளித்து ஏதேன் என்னும் தோட்டத்தையும் அவர்களுக்காய் அமைத்துக் கொடுத்தார். ஏதேன் தோட்டம் பூமியின் சுவர்க்கமாக இருந்தது. அங்கே அனைத்து விதமான பழமரங்களும் இருந்தன.

.தோட்டத்தில் நான்கு ஜீவ நதிகள் ஓடிக் கொண்டிருந்தன. ஆதாமும் அவனுடைய துணைவியும் ஏதேன் தோட்டத்தில் தெய்வங்களைப் போல வாழ்ந்து வந்தார்கள். ஆதாம் தன்னுடைய மனைவியை ஏவாள் என்று பெயரிட்டழைத்தான். அவன் தான் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பெயரிட்டவன்.

தாலாட்டும் காற்றும், இனிமையான காட்சிகளும் நிறைந்திருந்த ஏதேன் தோட்டத்தில் அவர்களுக்கு எந்தக் குறையுமே இல்லை. கடவுள் ஏதேன் தோட்டத்தில் ஆதாமை தங்கவைத்தபோது ஒரே ஒரு கட்டளை மட்டும் இட்டிருந்தார். ‘ இங்கிருக்கும் எல்லா மரங்களின் கனிகளும் உனக்கே.

.ஆனால் தோட்டத்தின் நடுவே நிற்கும் மரத்தின் கனியை மட்டும் நீ உண்ணக்கூடாது’ என்பதே அந்தக் கட்டளை. ஆதாம் அந்தக் கட்டளையை தன் துணைவிக்கும் சொன்னான். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திற்குள் ஓடியாடி பழங்களை உண்டு மகிழ்ந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் அந்த விலக்கப் பட்ட மரத்தின் கனியை மட்டும் உண்ணவே இல்லை.

ஒவ்வொரு முறை ஏவாள் அந்த மரத்தைக் கடக்கும்போதும் அவளுடைய உள்ளத்தில் ஓர் சலனம் உருவாகும். ‘நான் ஏன் அந்த மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது ? அப்படி அந்தக் கனிக்கு என்னதான் தனிச்சிறப்பு ?’. நாட்கள் கடந்துகொண்டே இருந்தன. ஏவாளின் மனதில் விலக்கப் பட்ட கனியின் மீதான விருப்பமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

ஒரு நாள் ஆதாமும் ஏவாளும் வழக்கம் போல ஏதேன் தோட்டத்தின் எழிலை ரசித்தவாறே நடந்துகொண்டிருந்தனர். நடந்து நடந்து அந்த விலக்கப் பட்ட மரத்தின் அருகே வந்தார்கள். அந்த மரத்தில் சாத்தான் பாம்பின் வடிவத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தான்.

.சாத்தான் ஏவாளின் மனதை வாசித்திருந்தான். ஏவாள் அந்த விலக்கப்பட்ட கனியின் மீது ஆசை வைத்திருப்பதை சாத்தான் அறிந்திருந்தான். சலனப் பட்ட மனசுக்குள் தானே எல்லாவிதமான சாத்தான்களும் குடியேறுகின்றன. ஒருவேளை ஆதாமிடம் தன்னுடைய சூழ்ச்சி பலிக்காது என்று சாத்தான் கருதியிருக்கக் கூடும்.

பாம்பு வடிவிலிருந்த அந்த சாத்தான் ஏவாளுடன் தன் சூழ்ச்சிப் பேச்சைத் துவங்கினான்.
‘என்ன ஏவாள்.. சவுக்கியமா ? ஏதேன் தோட்டத்தில் உங்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கின்றனவா ?’

‘ஏதேன் கடவுள் அமைத்த தோட்டமாம். அதனால் இங்கே எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை’ ஏவாள் சொன்னாள்.

‘இல்லை ஏவாள், உன்னுடைய முகத்தில் ஏதோ ஒரு ஏக்கம் இருக்கிறது. ஏதோ ஒரு குறையின் ரேகை உன் முகத்தில் தெரிகிறது.  அது என்னவென்று சொல். நான் தீர்த்து வைக்கிறேன். நான் சகல சக்தியும் படைத்தவன். கடவுளால் செய்ய முடிகின்ற காரியங்களை அனைத்தையும் என்னாலும் செய்ய முடியும்’ சாத்தான்  சொன்னான்.

‘ஏக்கமா ? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே…’ ஏவாள் மறுத்தாள்.

‘சரி… சரி… இந்தா… ஒரு பழம் சாப்பிடு… ‘ சாத்தான் விலக்கப்பட்டக் கனியைப் பறித்து ஏவாளிடம் நீட்டினார்.

‘ஐயோ.. வேண்டாம். இந்த மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது என்று கடவுள் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்’ ஏவாள் சொன்னாள்.

‘சாப்பிடக் கூடாது என்று சொன்னாரா ? இந்தப் பழத்தையா ? வேறென்ன சொன்னார் ?’ சாத்தான் அதிசயப்படுவது போல நடித்தான்.

‘அந்த மரத்தின் கனி அழிவுக்கானதாம். அதை உண்டால் நாங்கள் அழிந்து போவோமாம்’

சாத்தான் சத்தமாகச் சிரித்தான். ‘ அறிவிலியாய் இருக்கிறாயே. அந்த மரத்தின் கனியைத் தின்றால் நீ சாகமாட்டாய். அதை உண்டால் உன்னுடைய அறிவுக் கண்கள் திறந்து கொள்ளும். அந்த மரத்தின் கனியைத் தின்பவர்கள் எல்லோரும் கடவுளைப் போல ஆவார்கள்’ சாத்தான் சொன்னான்

‘உண்மையாகவா ?’ ஏவாள் உற்சாகமாய்க் கேட்டாள்.

‘ஆம்… கடவுளுக்குப் பொறாமை நீங்கள் கடவுளைப் போல ஆகிவிட்டால் கடவுளுடைய பணிகளையெல்லாம் நீங்களும் செய்யமுடியும். பின்பு கடவுளுக்கு மரியாதை இருக்காது. உங்களுக்கு மிகப் பெரிய வல்லமை கிடைக்கும்’ சாத்தான் ஆசை வார்த்தை கூறினான்.

‘அப்படியா…. ? உண்ணவேண்டும் என்னும் ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் உண்டால் செத்துவிடுவோமோ என்னும் பயமும் இருக்கிறது’ ஏவாள் இழுத்தாள்.

‘இன்னும் என்னுடைய வார்த்தைகளை நீ நம்பவில்லையா… இதோ பார். இந்தக் கனியை நான் கைகளில் வைத்திருக்கிறேன், அது என்னை ஒன்றும் செய்யவில்லையே ? நீயும் தொட்டுப் பார். ஒன்றும் சம்பவிக்காது அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். வா….  நான் கைகளில் வைத்திருக்கும் கனியைத் தொட்டுப் பார்…’ சாத்தான் பழத்தை நீட்டினான். ஏவாள் தயக்கத்தோடு தன்னுடைய விரல் நுனியினால் தொட்டாள். எதுவும் நேரவில்லை.

‘பார்த்தாயா ? நீ தொட்டபோது ஒன்றுமே நடக்கவில்லையே ! உண்டாலும் ஒன்றும் நேர்ந்து விடாது’ சாத்தான் சொல்லிக் கொண்டே பழத்தை கைகளில் வைத்துத் தடவினான். ஏவாளின் மனசுக்குள் அதை உண்ணவேண்டும் என்னும் ஆசை கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது.

‘தொட்டால் ஒன்றும் தவறில்லை என்று நினைக்கிறேன். ஆனால் உண்டால் ஏதேனும் நேரிடுமோ ?’ ஏவாள் கேட்டாள்.

‘இத்தனை சொன்னபின்னும் உனக்குச் சந்தேகமா ? இதோ பார்.. நான் இந்தப் பழத்தை உண்ணப்போகிறேன். இந்தச் சுவையை அனுபவிக்கப் போகிறேன். நீ பார்த்துக் கொண்டே இரு நான் சாகிறேனா ? இல்லையா ? என்பதை. நான் செத்துப் போனால் நீ இதை உண்ணவேண்டாம்.

.சாகவில்லையென்றால் உன்னுடைய சந்தேகம் போய்விடும் தானே ? ‘ சாத்தான் விஷமமாகச் சிரித்தான். சிரித்துக் கொண்டே அந்த கனியை உண்ணத் துவங்கினான். அவனுடைய முகம் ஒரு பேரானத்தத்தில் மூழ்கியிருப்பவனைப் போல மாறியது. அதைப் பார்க்கப் பார்க்க ஏவாளின் மனதுக்குள் தானும் அந்தக் கனியை உண்ணவேண்டும் என்னும் எண்ணம் வலுவடைந்தது.

ஏவாளின் மனதுக்குள் இருந்த எண்ணத்தை அறிந்த சாத்தான் ஒரு கனியைப் பறித்து அவளுடைய கைகளில் திணித்தான். ‘உண்ணுங்கள்.. நீங்கள் இருவரும் இதை உண்ணுங்கள். ஒன்றும் நேரிடாது. இந்தப் பழம் தான் இந்த தோட்டத்துப் பழங்களிலேயே மிகவும் சுவையானது. மிகவும் அழகானது. இதை மட்டும் உண்டால்  நீங்கள் கடவுளைப் போல ஆவீர்கள். அதில் சந்தேகமேயில்லை’ சாத்தான் சொன்னான்

ஏவாள் அந்தக் கனியை சிறிது நேரம் கைகளில் வைத்திருந்தாள். பின் மெல்லக் கடித்தாள். ஒன்றும் நிகழவில்லை. ஏவாளுக்குத் தைரியம் வந்தது. அந்தப் பழத்தை முழுவதும் உண்டாள். அவளுக்கு அந்த சுவை மிகவும் பிடித்திருந்தது. அவளுடைய மனசுக்குள் பல நாட்களாக இருந்த ஆசை தணியத் துவங்கியது. அவள் ஆதாமைப் பார்த்தாள். ஆதாம் நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தான்.

.ஏவாள் சோதனைக்கு உட்படுத்தப் பட்டபோது அவளிடம் ‘வேண்டாம். கடவுளின் கட்டளையை மீறாதே’ என்று அவன் எச்சரிக்கவில்லை. ஏனென்றால் ஓரு குடும்பத் தலைவனின் கடமைகள் என்னென்ன என்பதை ஆதாம் அறிந்திருக்கவில்லை. பழத்தை உண்ணாதே என்று சொன்ன கடவுளும், ‘ஒரு நாள் சாத்தான் பாம்பு வடிவில் வந்து உன்னைச் சோதிப்பான். பழத்தை உண் என்பான். ஆனால் அந்த சோதனையில் விழுந்து விடாதே’ என்றும் சொல்லவில்லை. எனவே அந்த சூழ்நிலையில் ஆதாமின் கடமை என்ன என்பது ஆதாமுக்கே விளங்கவில்லை.

பழத்தை உண்ட ஏவாள் அதை ஆதாமுக்கும் கொடுத்தாள். ‘கவலைப்படாமல் உண்ணுங்கள். நான் உண்டேன் எனக்கு ஒன்றும் நேரவில்லை. இதுதான் நான் இதுவரை உண்ட கனிகளிலேயே சுவையானது. இனிமேல் இதை நான் தினமும் உண்ணலாம்’ ஏவாள் சொன்னாள். ஆதாம் ஏவாளின் பேச்சைக் கேட்டான். கடவுளின் கட்டளையை மீறினான். கனியை உண்டான்.

இருவரும் விலக்கப்பட்ட கனியை உண்டு முடித்தனர். தன்னுடைய திட்டம் நிறைவேறியதை அருகிலிருந்து பார்த்த சந்தோசத்தில் பாம்பு வடிவிலிருந்த சாத்தான் சிரித்துக் கொண்டே ஓடி மறைந்தான். கனியை உண்டு முடித்ததும் ஆதாமும், ஏவாளும் தாங்கள் நிர்வாணிகளாய் இருப்பதை முதன் முறையாக உணர்ந்தார்கள்.

.அதுவரை அவர்களுக்குள் திறக்கப் படாமல் இருந்த அறிவுக் கண் திறந்தது. இருவரும் வெட்கப் பட்டார்கள். ஓடிச் சென்று அத்தி இலைகளைக் கோத்து ஆடையாய் அணிந்து கொண்டார்கள். நன்மை தீமை அறியும் மரம் என்று கடவுள் காட்டிய மரம் அவர்களின் மழலைத் தன்மையை அழித்துவிட்டது.

மெலிதான காற்று ஏதேன் தோட்டத்தில் வீசிக் கொண்டிருந்தது. கடவுள் தான் படைத்த மனிதனையும் அவனுடைய துணையையும் பார்ப்பதற்காகத் தோட்டத்துக்கு வந்தார். கடவுள் வரும் ஓசையைக் கேட்ட ஆதாமும் ஏவாளும் ஓடி ஒளிந்தனர். கடவுளின் கட்டளையை மீறிவிட்டோ மே என்னும் எண்ணம் அப்போது தான் அவர்களுக்குள் உறுத்தியது..

“ஆதாமே… நீ எங்கே இருக்கிறாய் ?” கடவுளின் குரல் தோட்டத்தில் எதிரொலித்தது.

பதில் இல்லை…

“ஆதாமே… நீ எங்கே இருக்கிறாய் ?” கடவுளின் குரல் மீண்டும் ஒலித்தது.

‘கடவுளே நான் இங்கே புதரின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறேன்.’ ஆதாம் பதில் சொன்னான்.

‘ஒளிந்து கொண்டாயா ? ஏன் ? ‘

‘ உம்முடைய குரலைக் கேட்டதும் எனக்குள் பயம் வந்துவிட்டது கடவுளே. அதனால் தான் நான் ஒளிந்து கொண்டேன். இதோ ஏவாளும் இங்கே ஒளிந்து கொண்டு தான் இருக்கிறாள்’ ஆதாம் சொன்னான்.

‘ நேற்றுவரை என்னிடம் அச்சமில்லாமல் பழகினாயே ? இன்று எப்படி உன்னிடம் புதிதாய் ஒரு அச்சம் வந்திருக்கிறது ? வெளியே வா… என்னிடம் நீ உரிமையோடும், அன்போடும் பழகவேண்டும். உனக்கு அச்சம் ஏற்படத் தேவையில்லை. வா வெளியே’ கடவுள் அழைத்தார்.

” இல்லை கடவுளே. என்னால் இப்போது வெளியே வர முடியாது ‘

‘ஏன் ?’

‘ஏனென்றால் நான் நிர்வாணமாய் இருக்கிறேன் ” ஆதாம் சொன்னான்.

நான் நிர்வாணமாய் இருக்கிறேன் என்று ஆதாம் சொன்னதும் கடவுள் கோபமடைந்தார். ‘நிர்வாணமாய் இருக்கிறாயா ? நீ நிர்வாணமாய் இருக்கிறாய் என்று யார் உனக்குச் சொன்னது ? நீ என்னுடைய கட்டளையை மீறினாயா ? நான் உண்ணக் கூடாது என்று சொல்லியிருந்த கனியை நீ உண்டாயா ? ‘ கடவுளின் குரல்
கோபத்தில் ஒலித்தது. அதுதான் கடவுள் கோபமடைந்த முதல் சம்பவம்.

“ஆண்டவரே… நான் அல்ல ஆண்டவரே. நீர் இட்ட கட்டளையை நான் மீறவில்லை. நீர் எனக்குத் துணையாக அளித்தீரே அந்தப் பெண் தான் நீர் இட்ட கட்டளையை மீறினாள். அவள் தான் எனக்கும் அந்தக் கனியைத் தந்தாள். எனவே நானல்ல கடவுளே அவள் தான் குற்றவாளி’ ஆதாம் பழியை ஏவாளின் மேல் போட்டான்.

‘ஏவாளே… நீ ஏன் அப்படிச் செய்தாய் ? ஆதாமுக்கு நான் இட்டிருந்த கட்டளை உனக்குத் தெரியாதா ?’ கடவுள் ஏவாளிடம் கேட்டார்.

‘உம் கட்டளை எனக்குத் தெரியும் கடவுளே. ஆனால் ஒரு பாம்பு தான் என்னிடம் வந்து அந்த கனியை உண்ணுமாறு கட்டாயப் படுத்தியது. அதனால் தான் நான் அதை உண்டேன். இது என் தவறில்லை கடவுளே. இது பாம்பின் தவறு தான்’ ஏவாள் சொன்னாள். செய்த தவறை ஒத்துக் கொள்ளாமல் அந்தத் தவறுகளை அடுத்தவர் தலை மேல் சுமத்தும் பழக்கத்தை அவர்கள் ஆரம்பித்து வைத்தனர்.

கடவுளின் கோபம் அதிகரித்தது. என்னுடைய சொல்லை மீறி, பாம்பின் சொல்லை நான் படைத்த மனிதன் கேட்கிறானா என்னும் சினம் அவருக்குள் பொங்கி வழிந்தது. அவருடைய கோபம் முதலில் பாம்பின் மீது திரும்பியது.

‘பாம்பே… சூட்சியின் இருப்பிடமே. இனிமேல் நீ சபிக்கப் பட்ட ஜந்துவாய் இருப்பாய். வயிறால் ஊர்ந்து ஊர்ந்து தான் உன் வாழ்க்கை இருக்கும். உன் சந்ததிக்கும், பெண்ணின் சந்ததிக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவேன். உன் தலையை அவளுடைய சந்ததி மிதிக்கும், நீ அவர்களின் குதிகாலைக் கடிப்பாய்’ என்று சாபமிட்டார் கடவுள். கடவுள் இட்ட முதல் சாபம் !

பின் கடவுளின் கோபப் பார்வை ஏவாளை நோக்கித் திரும்பியது. அவர் ஏவாளை நோக்கி, ‘ நீ என்னுடைய பேச்சை மதிக்காமல் உன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டாய். உன்னைப் படைத்த என்னை விட சாத்தானை நீ அதிகம் நம்பினாய். எனவே உனக்குத் தண்டனையாக உன்னுடைய பேறுகால வலிகளை அதிகப்படுத்துவேன். நீ மிகுந்த வேதனைப் பட்டுத் தான் குழந்தைகளைப் பெறுவாய். உன்னை நான் உன் துணைக்கு இணையாகப் படைத்தும் நீ அவனை தவறான திசைக்குத் திருப்பியதனால் அவனே இனிமேல் உன்னை ஆள்வான்’ என்றார்.

இறுதியில் கடவுள் ஆதாமை நோக்கி.’ மனிதனே. உன்னை நான் எத்தனை அதிகமாய் நேசித்தேன். உலகை அனைத்தையும் படைத்து அதை உன் கையில் ஒப்படைத்தேனே. தனியனால் இருப்பது நல்லதல்ல என்று உனக்குத் துணைவியையும் தந்தேனே. நீ நான் இட்ட ஒரே ஒரு கட்டளையையும் மீறி உன் துணைவியின் பேச்சைக் கேட்டாயே.

.எனவே இனிமேல் உனக்கு இந்த ஏதேன் தோட்டத்தின் சொகுசு வாழ்க்கை சொந்தமில்லை. உன் பாவத்தினால் பூமி சபிக்கப் பட்டு விட்டது. இனிமேல் நீ நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்தால் தான் உனக்கு உணவு கிடைக்கும் என்னும் நிலையை உருவாக்குவேன். பாடுபடாமல் எதுவும் உனக்கு இனி தரப்படாது. உன்னை மண்ணிலிருந்து தான் உருவாக்கினேன். நீ மண்ணாய் இருக்கிறாய். மண்ணுக்கே திரும்புவாய்.’ என்றார்.

பின் கடவுள் அவர்களை ஏதேனை விட்டு துரத்தி விட்டார். அவர்கள் மீண்டும் ஏதேனுக்குள் நுழையாமலிருக்க தேவ தூதர்களையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பு வாளையும் ஏதேன் தோட்டத்திற்குக் காவலாக வைத்தார்.
.

Posted in OLD Testament

கி.மு 3 : முதல் கொலை

Image result for cain murder abel

ஆதிமனிதன் ஆதாமும், அவனுடைய துணைவியான ஏவாளும் கடவுளின் கட்டளையை மீறியதால் கடவுளுடைய தோட்டமான ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஏதேனை விட்டு வெளியேறிய ஆதாமும் ஏவாளும் தனியே வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.

காலம் உருண்டோ டியது. ஏவாள் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆதாம் அவனுக்குக் காயீன் என்று பெயரிட்டார். சில ஆண்டுகளில் அவர்களுக்கு இன்னொரு மகனும் பிறந்தான். அவனுக்கு ஆபேல் என்று பெயரிட்டார்கள். ஆதாமும், ஏவாளும் தங்கள் பிள்ளைகளை மிகவும் பாசத்துடன் பராமரித்தனர். தங்களுக்குக் குழந்தைகள் பிறந்ததற்கு கடவுளின் அருள் தான் காரணம் என்று மகிழ்ந்தார்கள். ஆதாம் கடுமையாக உழைத்துக் குடும்பத்திற்குத் தேவையான உணவைக் கொண்டு வந்தார்.

காயீனும், ஆபேலும் வளரத் துவங்கினார்கள். ஆதாமும் ஏவாளும் குழந்தைகளின் வளர்ச்சியைப் பிரமிப்புடன் பார்த்தார்கள். உலகின் முதல் தந்தையான ஆதாமுக்கும், முதல் தாயான ஏவாளுக்கும் எல்லாமே புதுமையானதாகவும், முதல் அனுபவமாகவும் இருந்தன. மகன்கள் இருவரும் வளர்ந்து இளைஞர்கள் ஆனார்கள்.

கடவுள் படைத்த விலங்குகளில் ஆட்டின் மாமிசம் சுவையானதாக இருப்பதை ஆதாம் அறிந்து கொண்டார். எனவே அவன் ஒரு ஆட்டுமந்தையை உருவாக்கி அதை மேய்க்கும் பொறுப்பை ஆபேலிடம் ஒப்படைத்தார். ஆபேல் தினமும் ஆட்டுமந்தைகளைக் கண்காணித்து வந்தான். அவை கூட்டத்தை விட்டு விலகிச் சென்று விடாமலும், வேறு விலங்குகள் எதுவும் வந்து மந்தையைச் சிதறடித்துவிடாமலும் பாதுகாத்துவந்தான்.

காயீன் தோட்டவேலை செய்தான். நிலத்தை பக்குவப் படுத்தி அங்கே கனிதரும் தாவரங்களை நட்டு அவற்றைப் பராமரித்துவந்தான். தோட்ட வேலையைப் பற்றியோ, மந்தை மேய்ப்பதைப் பற்றியோ அவர்களுக்கு ஏதும் முன் அனுபவங்களோ, முன் உதாரணங்களோ இருக்கவில்லை. எனவே அவர்கள் மிகவும் வருந்தி உழைத்து தங்கள் அன்றாட வாழ்வைக் கழித்து வந்தார்கள்.

தன்னைப் படைத்த கடவுளுக்கு, தான் உழைத்து உருவாக்கிய பொருட்களைக் காணிக்கைப் பலியாகக் கொடுப்பதை ஆதாம் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய மகன்கள் உழைக்க ஆரம்பித்ததும் அவர்களை ஆதாம் அழைத்து,
‘உங்கள் உழைப்பின் பயனைக் கடவுளுக்கும் கொடுக்கவேண்டும். அவர்தான் நம்மைப் படைத்தவர். எனவே கடவுளுக்குத் தவறாமல் காணிக்கைப் பலியைச் செலுத்தவேண்டும். கடவுளுக்குச் செலுத்தும் பலி சிறந்ததாக இருக்கவேண்டும்’ என்று அறிவுரை வழங்கினார். அதன்படி காயீனும், ஆபேலும் தங்கள் பலிகளைக் கடவுளுக்குச் செலுத்தி வந்தார்கள்.

அவர்கள் தனித்தனியே இரண்டு பலிபீடங்களைக் கட்டி அவற்றின் மீது காணிக்கைப் பொருட்களை வைப்பார்கள். வானத்திலிருந்து நெருப்பு இறங்கி வந்து அந்த பலிபொருட்களை எரிக்கும். அதுவே பலி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கான அடையாளம். அதன் பின் அவர்கள் இருவரும் மன மகிழ்வுடன் வீடு திரும்புவார்கள். இதுவே வழக்கமாக இருந்து வந்தது.

நாட்கள் செல்லச் செல்ல காயீனின் மனதுக்குள் ஒரு சிந்தனை எழுந்தது,’ நான் ஒவ்வொரு முறையும் என் தோட்டத்திலிருந்து தலைசிறந்த பழங்களையும், காய்கறிகளையும் கடவுளுக்குப் பலியிடுகிறேன். அதை நெருப்பு வந்து எரிக்கிறது. நான் பலியிடுவதால் எனக்கு எந்த பயனும் இல்லை. பின் ஏன் நான் வீணாக என் கடின உழைப்பைக் கடவுளுக்குக் கொடுக்கவேண்டும் ? என்னுடைய உழைப்பின் பயன் முழுவதும் எனக்கே கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்குமே ? ‘. காயீனின் மனதுக்குள் எழுந்த இந்த சிந்தனை நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வந்தது.

சிலநாட்கள் சென்றபின் காயீனும் ஆபேலும் தங்கள் உழைப்பின் பயனைக் கடவுளுக்கு அளிப்பதற்காக மீண்டும் பலிபீடத்தின் முன் வந்தார்கள். காயீன் இந்தமுறை தன்னுடைய நிலத்தில் விளைந்தவற்றில் மோசமான காய்கறிகளையும், பழங்களையும் காணிக்கைக்காக எடுத்து வந்தான். ஆனால் ஆபேலோ வழக்கம்போல தன்னுடைய மந்தையிலிருந்தவற்றிலிருந்து கொழுத்த தலையீற்றுகளைக் கொண்டு வந்தான்.

இருவரும் பலியிட்டார்கள். நெருப்பு இறங்கி வந்து ஆபேலில் பலிபீடத்தில் இருந்த பலியை எரித்தது. ஆனால் காயீனின் பலியோ ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வழக்கமாக வானிலிருந்து இறங்கி வரும் நெருப்பு இந்தமுறை மட்டும் வரவேயில்லை. காயீன் தன்னுடைய தவறை உணர்ந்துக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக ஆபேலின் மீது கோபம் கொண்டான். தன்னுடைய பலி ஏற்றுக் கொள்ளப் படாமல் அவனுடைய பலி மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டதே என்று உள்ளுக்குள் ஆவேசமடைந்தான்.

கடவுள் காயீனை அழைத்தார்.’ காயீன்… காயீன்…’

‘யார் என்னை அழைப்பது ?’ காயீன் கேட்டான்.

‘நான் தான்.. உன் கடவுள். உன்னுடைய முகத்தில் கோபமும், வாட்டமும் இருப்பதைக் கண்டதால் உன்னை அழைக்கிறேன்.’ கடவுள் சொன்னார்.

‘கோபமா ? நான் ஏன் கோபப் படவேண்டும் ? அல்லது நான் ஏன் வருத்தமடைய வேண்டும்?’ காயீன் கேட்டான்.

‘காயீனே… பாவம் செய்வதற்கு உன்னைத் தூண்டும் எண்ணங்களெல்லாம் உன் வாசலில் வந்து படுத்திருக்கும். ஆனால் நீ அவற்றினுள் விழுபவனாக இருக்கக் கூடாது. அதையெல்லாம் வெற்றி கொள்பவனாக இருக்க வேண்டும்.’ கடவுள் சொன்னார்.

காயீன் பதில் சொல்லவில்லை. அவன் மனம் கடவுளின் வார்த்தைகளில் சமாதானமடையவில்லை. அவனுடைய கோபமெல்லாம் ஆபேலின் மீதே இருந்தது. ‘மூத்தவன் நான் இருக்கும் போது இளையவன் உன்னுடைய பலிகள் மட்டும் அங்கீகரிக்கப் படுகிறதா ? அது எனக்கு அவமானமல்லவா ?’ என்று அவனுக்குள் வெறுப்பு எண்ணம் வளர்ந்து கொண்டே இருந்தது. அவனுக்குள் இருந்த வெறுப்பு எண்ணம் கொலைவெறியாக மாறியபோது அவன் வந்து ஆபேலை அழைத்தான்.

‘ஆபேல்….’

‘சொல்லுங்கள் அண்ணா…’ ஆபேல் எழுந்தான்.

‘வா… என்னுடைய வயல்வெளிக்கு வா… என்னுடைய விளைநிலங்களையெல்லாம் நீ பார்க்க வேண்டாமா ‘ காயீன் அழைத்தான்.

‘இதோ வருகிறேன் அண்ணா…’ ஆபேல் உற்சாகமாய் எழுந்தான்.

அவர்கள் இருவருமாக வயல்வெளியை நோக்கிச் சென்றார்கள். வழியில் ஆபேல் காயீனிடம், ‘உன்னுடைய பலிகளைக் கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். கவலைப்படாதே அடுத்தமுறை கடவுளுக்குப் பலியிடும் போது மிகச் சிறப்பானவற்றைக் கொண்டு வா. கண்டிப்பாக உன்னுடைய பலியைக் கடவுள் ஏற்றுக் கொள்வார்’ என்றான். அதைக் கேட்டதும் காயீனின் கோபம் பலமடங்கு அதிகரித்தது.

‘நீ எனக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டாயா ?’ என்று கேட்டுக் கொண்டே அவன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளினான். ஆபேல் நிலைகுலைந்து விழுந்தான். தன் மீது தன் சகோதரன் முதன்முதலாக நடத்தும் தாக்குதலை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கீழே விழுந்த ஆபேல் எழுந்திருக்கும் முன் காயீன் அவனை அடித்துக் கொன்றான். ஆபேலின் குற்றமற்ற இரத்தம் மண்ணின் மீது பாய்ந்தோடியது. முதல் கொலை அங்கே அரங்கேறியது.

காயீன் நடுங்கினான். ‘ஆபேல்.. ஆபேல்….’ என்று காயீன் சற்று நேரம் அழைத்துப் பார்த்தான். பதில் வராததால் ஓடிப் போய் மலைகளிடையே ஒளிந்து கொண்டான்.

ஆண்டவர் காயீனை அழைத்தார். காயீன் மேலும் அதிகமாக நடுங்கினான்.

“காயீனே… நீ எங்கே இருக்கிறாய் ? எங்கே உன் சகோதரன் ஆபேல் ?”

“ஆபேலா ? அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது. அவனுக்கு நான் என்ன காவலாளியா ? அவன் அவனுடைய மந்தையை மேய்த்துக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன்’ காயீன் உலகின் முதல் பொய்யைச் சொன்னான்.

“காயீனே. நீ கடவுளிடம் பேசுகிறாய் என்பதை நினைவில் கொள். நீ ஆபேலை என்ன செய்தாய் ? அவனுடைய இரத்தம் என்னை நோக்கிக் கூக்குரல் இடுகிறதே” கடவுள் சொன்னார். காயீன் பயத்திலும், பதட்டத்திலும் அமைதியானான்.

‘காயீனே… உன் சகோதரன் ஆபேலைக் கொன்று விட்டாயே ! அவனுடைய இரத்தத்தை இந்த மண்ணிலே சிந்திவிட்டாயே. அவனுடைய குற்றமற்ற இரத்தத்தை நீ இந்த மண்ணில் சிந்த வைத்ததனால் உன்னை சபிக்கிறேன். இனிமேல் நீ என்ன பயிரிட்டாலும் அது உனக்குக் பலன் தராது. நீ நாடோ டி போல அலைந்து திரிவாய்’ கடவுள் சபித்தார்.

‘கடவுளே.. என்னைக் கைவிடாதேயும். என்னை மன்னித்தருளும்…’ காயீன் கதறினான். மேலும் அந்த இடத்திலே நிற்க பயந்துபோய் வேறு திசையில் ஓடினான்.
ஒற்றுமையாய் ஒரு இடத்தில் இருந்த ஆபேலின் குடும்பம் சிதறியது.

இதுவே உலகில் நடந்த முதல் மனித கொலை.

Posted in OLD Testament

கி.மு 4 : மொழிகள் உருவான கதை

நோவாவும் அவருடைய சந்ததியினரும் உலகில் பரவியிருந்த காலகட்டம் அது. உலகில் எங்கும் நோவாவின் சந்ததியினரைத் தவிர வேறு யாருமே இருந்திருக்கவில்லை. ஏனென்றால் கடவுள் நோவாவின் குடும்பத்தினரைத் தவிர மற்ற அனைவரையும் தண்ணீரினால் அழித்திருந்தார். எங்கும் ஒரே ஒரு சந்ததி இருந்ததனால் அவர்கள் பேசும் மொழியும் ஒன்றாகவே இருந்தது. உலகில் அப்போது வேறு மொழிகளே இல்லை.

ஒருமுறை சினயார் நாட்டில் சமவெளி ஒன்றில் மக்கள் பல இடங்களிலிருந்தும் வந்து ஒன்று கூடினார்கள். அவர்களில் ஒருவர் ‘ நாம் நம்முடைய புகழை நிலைநாட்டுவதற்காக ஏதேனும் செய்தாக வேண்டும். என்ன செய்யலாம் சொல்லுங்கள் ‘ என்று கேட்டார்.
மக்கள் பலவிதமான யோசனைகளைச் சொன்னார்கள். அதில் ஒன்று ஒரு மிகப் பெரிய கோபுரம் கட்டுவது. அந்த திட்டத்தை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

‘நாம் வானளாவ ஒரு கோபுரத்தைக் கட்டவேண்டும். அது நம்முடைய புகழை இனிவரும் தலைமுறைக்குச் சொல்லவேண்டும். இப்படி ஒரு கட்டிடம் இல்லை என்று எல்லோரும் வியப்படைய வேண்டும்’ மக்கள் கூறினார்கள்.

‘சரி கோபுரம் கட்டுவது எப்படி ?’

‘மண்ணைப் பிசைந்து கற்கள் அமைத்து அவற்றைக் கொண்டு கோபுரம் கட்டலாம்’ ஒருவர் சொன்னார்.

‘மண்ணினால் உருவாக்கிய கல் என்றால் உயரமாகக் கட்டும்போது இடிந்து விழுமே ‘

‘அப்படியானால்… நாம் மண்ணினால் உருவாக்கிய கற்களை நெருப்பில் சுடுவோம். சுடப்பட்ட கற்கள் மிகவும் பலமானதாக இருக்கும். நம்முடைய கோபுரம் வானத்தை எட்டினாலும் உறுதியாக இருக்கும்’

‘வானத்தை எட்டும் கோபுரம் கட்டி முடிக்கும் போது நாம் கடவுளைப் போல ஆவோம். எல்லோரும் நம்மைப் புகழ்வார்கள். ‘ மக்கள் குதூகலித்தார்கள். அவர்களுடைய மனம் கடவுளை மறந்து விட்டு சுய பெருமைகளில் மூழ்கியது.

அவர்கள் கோபுரம் கட்டும் பணிகளில் ஈடுபட்டார்கள். கோபுரம் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பத் துவங்கியது.

பூமியில் மக்களிடையே கர்வமும், அகந்தையும் நிரம்பி வழிவதைக் கண்ட கடவுள் கோபமடைந்தார். மக்கள் அந்தக் கோபுரத்தைக் கட்டிவிட்டால் அவர்களிடம்  இறைபக்தியே இல்லாமல் போய்விடும். எதையும் தங்கள் முயற்சியினால் சாதித்து விட முடியும் என்னும் கர்வம் அவர்களுக்குள் குடியேறிவிடும்.

.அவர்கள் தனிமனித வழிபாடுகளில் விழுந்து விடுவார்கள் என்பதைக் கடவுள் உணர்ந்தார். அந்தக் கோபுரத்தைக் கட்டும் முயற்சியிலிருந்து மக்களைப் பின்வாங்க வைக்கவேண்டும் என்று அவர் முடிவெடுத்தார்.

மக்கள் எல்லோரும் ஒரே குழுவாக இருப்பதால் தானே இந்தப் பிரச்சனை. மக்கள் பிரிந்து தனித் தனிக் குழுக்களாக இருந்தால் அவர்கள் என்னை மறக்கமாட்டார்கள் என்று நினைத்த கடவுள் அவர்களை பிரிப்பது என்று முடிவெடுத்தார்.

மொழி ! அது தான் கடவுள் கையிலெடுத்துக் கொண்ட ஆயுதம். அங்கிருந்த மக்களை பல்வேறு மொழிகளால் பிரித்தார் கடவுள்.

ஒரே மொழியில் பேசிக் கொண்டிருந்த மக்கள் திடீரென வேறுவேறு மொழிகளால் பேசத்துவங்கினார்கள்.

Image result for Babel tower bible

‘ஏய்… நீ என்ன பேசுகிறாய்… எனக்குப் புரியவில்லையே’

‘என்னாச்சு உனக்கு ?’

‘அவர்கள் என்ன வேறு ஏதோ உளறுகிறார்கள்…’

மக்களிடையே மாபெரும் குழப்பம். ஒருவர் பேசுவது மற்றவருக்குப் புரியவில்லை.

‘நான் பேசுவது யாருக்கெல்லாம் புரிகிறதோ, அவர்களெல்லாம் இங்கே வாருங்கள்…’ ஆங்காங்கே மக்கள் கத்தினார்கள்.

.
ஒன்றாக இருந்த மக்கள் கூட்டம் இப்போது ஒவ்வொரு மொழிக்கும் கீழே சிறு சிறு குழுக்களாகப் பிரிந்தது. அவர்களிடையே இருந்த ஒற்றுமை உணர்வும் போய்விட்டது. தாங்கள் பேசுவது தான் நல்ல மொழி என்று ஒவ்வொரு குழுக்களும் அடுத்த குழுக்களோடு சண்டையிட்டுக் கொண்டன. மக்கள் வேற்றுமை உணர்வுடன் வேறுவேறு திசைகளுக்குப் போனார்கள்.

கடவுளின் திட்டம் பலித்தது. அவர்களுடைய அகந்தையின் சின்னம் அரைகுறையாய் நின்றது.
அது பாபேல் என்று அழைக்கப் பட்டது.

Posted in OLD Testament

கி.மு 5 : நோவாவின் பேழை

Image result for bible noah's ark

நோவா ! உலகின் முதல் மனிதனான ஆதாமின் பத்தாவது தலைமுறையில் வாழ்ந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மனிதர். கடவுளின் அருளையும், அன்பையும் பெற்றவர். உலக வரலற்றில் மிக மிக முக்கியமானவர்.

நோவாவின் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வன்முறைகளிலும், தீய வழிகளிலும் நாட்டம் உடையவர்களாக இருந்து வந்தார்கள். அவர்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிக்காமல், அவருடைய விருப்பத்துக்கு மாறாக வாழ்ந்து வந்தார்கள். மக்கள் தன்னைவிட்டு விலகி தங்கள் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்ட கடவுள் வருத்தமும் கோபமும் அடைந்தார். தான் படைத்த மனிதன் தன்னை மதிக்காமல் இருக்கிறானே என்னும் கோபம் அவருக்குள் கொழுந்து விட்டெரிந்தது. பாவம் செய்யும் மனிதர்களுக்குத் தரவேண்டிய தண்டனை மரணம் ஒன்றே என்று கடவுள் தீர்மானித்தார். அதன்படி உலகை முழுவதுமாக அழிக்கவேண்டும் என்னும் ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்தார்.

அவருடைய கண்களுக்கு ஒரே ஒரு நீதிமான் மட்டும் தென்பட்டார். அவர் நோவா.

நோவா குற்றமற்ற மனதோடும், இறை பக்தியோடும் வாழ்ந்து வந்தார். உலகை அழித்தாலும் நோவாவை அழிக்கக் கூடாது என்று கடவுள் தீர்மானித்தார். நோவானின் மூலமாக உலகில் குற்றமற்ற ஒரு சந்ததியினரை உருவாக்க வேண்டும் என்று எண்ணி அவர் நோவாவிடம் பேசினார்.

‘நோவா…. நான் தான் உன் கடவுள் பேசுகிறேன்’

‘ஆண்டவரே பேசும்..’ கடவுளின் குரலைக் கேட்ட நோவா தரையில் மண்டியிட்டார்.

‘நான் உன்னிடம் ஒரு மிகப் பெரிய பணியை ஒப்படைக்கப் போகிறேன்.’

‘பேசும் ஆண்டவரே… கேட்கிறேன்’ நோவா பணிவாய்ச் சொன்னார்.

‘உலகில் எல்லா மனிதர்களும் என்னை விட்டு விலகிப் போய்விட்டார்கள். அவர்களின் மனதுக்குள் இப்போது வன்முறை எண்ணங்களும், சிற்றின்ப ஆசைகளும் தான் நிறைந்து வழிகின்றன. இப்படி ஒரு மனித இனத்தைப் படைத்ததற்காக நான் வேதனைப் படுகிறேன். எனவே எல்லோரையும் அழிக்கப் போகிறேன்’ கடவுள் சொன்னார்.

‘கடவுளே.. எல்லா மனிதர்களையுமா ?’ நோவா அதிர்ச்சியுடன் கேட்டார்.

‘ஆம்… உன்னைத் தவிர எல்லா மனிதர்களையும்’ கடவுள் சொன்னார். கடவுளின் திட்டத்தைக் கேட்ட நோவா நடுங்கினார்.

‘உன்னையும் உன் குடும்பத்தினரையும் நான் அழிக்கமாட்டேன். உங்கள் மூலமாக இனிமேல் உலகில் ஒரு பாவமற்ற மனித இனத்தை உருவாக்கப் போகிறேன்.’ கடவுள் சொன்னார்.

நோவா அமைதியுடன் கேட்டுக் கொண்டிருக்க, கடவுள் தொடர்ந்தார்.

‘நான் உலகை தண்ணீரால் மூழ்க வைத்து அழிக்கப் போகிறேன். தண்ணீருக்குள் மூழ்கி மனித இனமும், மற்ற எல்லா உயிரினங்களும் அழிந்து போகட்டும்’ கடவுள் கோபமாய்ச் சொன்னார்.

‘கடவுளே… தண்ணீரால் உலகை அழிக்கப் போகிறீர் என்றால் நாங்கள் எப்படித் தப்புவது ? தப்பிப் பிழைத்தபின் உலகில் மற்ற உயிரினங்களே இல்லையென்றால் எப்படி உயிர்வாழ்வது ?’ நோவா கேட்டார்.

Image result for noah talking to god

‘நான் சொல்கிறேன். நீ ஒரு மிகப்பெரிய பேழையைச் செய்யவேண்டும். பேழை செய்ய கோபர்மரத்தைப் பயன்படுத்து, அதுதான் நீண்ட நாள் தண்ணீரில் கிடந்தாலும் வீணாகாது. பேழையில் மூன்று அடுக்குகள் இருக்குமாறு பார்த்துக் கொள். பேழையினுள் தண்ணீர் புகாமலிருக்க உள்ளே கீல் பூசு.’ கடவுள் பேசுவதையெல்லாம் நோவா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘நீ உன்னுடைய குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு பேழைக்குள் செல்ல வேண்டும். ஜோடி ஜோடியாக பல இன விலங்குகளையும், பறவைகளையும் பேழைக்குள் எடுத்துப் போ. நீயும், உன் குடும்பத்தினர் மற்றும் விலங்குகள், பறவைகள் எல்லோருக்கும் தேவையான அளவு உணவை மறக்காமல் எடுத்துச் செல்.’ கடவுள் சொன்னார்.

‘கடவுளே… எப்போது நான் பேழை செய்ய ஆரம்பிக்க வேண்டும் ?’ நோவா கேட்டார்.

‘இப்போதே… ‘ சொல்லிவிட்டுக் கடவுள் அகன்றார்.

நோவா உடனே பேழை ஒன்றை செய்யத் துவங்கினார். அவர் கோபர் மரங்களை வெட்டிச் சேகரித்து அவற்றை சரியான அளவில் வெட்டி பேழைக்கான வேலைகளில் மூழ்கினார். நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தன. அப்போது நோவாவின் வயது ஐநூறு கடந்திருந்தது. இரவு பகலாக உழைத்து நோவா கடவுள் சொன்ன அளவில் பேழையைச் செய்து முடித்தார். கடவுள் சொன்னபடியே விலங்குகளையும் பறவைகளையும் உணவுகளையும் கொண்டு தன்னுடைய குடும்பத்தினரோடு பேழைக்குள் சென்றார். நோவாவின் குடும்பத்தினர் யாரும் அவருடைய பேச்சை மறுக்கவில்லை. எல்லோரும் பேழையின் உள்ளே புகுந்ததும் கடவுள் நோவாவின் பேழையைப் பாதுகாப்பாய்ப் பூட்டினார்.

வருடங்கள் கடந்தன, சுமார் நூறு ஆண்டுகள் எந்த அறிகுறியும் இல்லை. அதன்பின் ஒருநாள். வானம் தன் மதகுகளைத் திறந்து பெருமழையைக் கொட்டியது. மழை… மழை… பெரும் மழை. நிற்காமல் பெய்துகொண்டே இருந்தது கனத்த மழை. இதற்கிடையில் பூமியிலும் ஊற்றுகள் பீறிட்டுக் கிளம்பின. பூமி கொஞ்சம் கொஞ்சமாய் நீரில் மூழ்கத் துவங்கியது. பூமியிலிருந்த மக்கள் எல்லால் செய்வதறியாமல் திகைத்தார்கள். தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக தானியங்களையும், விலங்குகளையும் மனிதர்களையும் மூழ்கடித்தது. மரங்களும், மலைகளும் கூட மூழ்கிப் போயின. பறவைகள் அடைவதற்கு இடமில்லாமல் தண்ணீரில் தத்தளித்து மாண்டுபோயின. நோவாவின் பேழை மட்டும் தண்ணீரின் மேல் மிதக்கத் துவங்கியது.

தண்ணீர் தன் பிரம்மாண்டக் கரங்களால் பூமியை அழுத்திப் பிசைந்தது. தண்ணீரின் கால்களில் பூமியின் உயிரினங்களெல்லாம் மிதிபட்டு உயிர்விட்டன. செடிகள், மரங்கள், மலைகள் எல்லாம் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கிப் போக, பெரிய மலைகளுக்கும் பதினைந்து முழம் மேலே தண்ணீர் நின்றது. மழை நாட்கள், வாரங்கள், மாதங்கள் என நீண்டு, பூமி நூற்று ஐம்பது நாட்கள் தண்ணீருக்குள் மூழ்கிக் கிடந்தது. நாசியால் சுவாசித்து வாழ்ந்த அத்தனை உயிரினங்களும் தண்ணீரில் மூழ்கி இறந்தே போயின. மனிதர் எவரும் மிச்சமிருக்கவில்லை.

அத்தனை உயிரினங்களும் மடிந்தபின் வானம் மழைபொழிவதை நிறுத்தியது. பூமியிலிருந்த ஊற்றுகளும் அடைபட்டன. பூமியில் காற்று வீசத் துவங்கியது. பூமியிலிருந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றத் துவங்கியது. நோவாவின் பேழை அராத்து மலையின் மேல் வந்து இறங்கியது.

Image result for noah ark water bible

மீண்டும் நாற்பது நாட்கள் யாரும் பேழையைத் திறக்கவில்லை. பேழைக்குள் இருந்த நோவா, தண்ணீர் வற்றிவிட்டதா என்பதை அறிய விரும்பினார். அதற்காக தன்னுடைய பேழையில் இருந்த சாளரத்தைத் திறந்து காகம் ஒன்றை வெளியே அனுப்பினார். காகம் வெளியே போய்விட்டு வந்து பேழையின் மேல் அமர்ந்தது. மீண்டும் பறந்து சென்றுவிட்டு வந்தது, இவ்வாறு பலமுறை நிகழ்ந்ததைக் கண்ட நோவா, பூமியில் தண்ணீர் வற்றிவிடவில்லை, காகம் அமர மரங்கள் ஒன்றும் வெளித்தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்.

சிறிது நாட்களுக்குப் பின், புறா ஒன்றை வெளியே அனுப்பினார். அதுவும் வெளியே பறந்து திரிந்து தான் அமர கிளைகள் ஏதும் தென்படாததால் மீண்டும் பேழைக்கே வந்து சேர்ந்தது. ஏழு நாட்களுக்குப் பின் மீண்டும் புறாவை வெளியே அனுப்பினார் நோவா. அது வெளியே போய்விட்டு பேழைக்குத் திரும்பி வந்தபோது அதன் அலகில் ஓர் ஒலிவ இலை இருந்தது. அதன் மூலம் பூமியில் தண்ணீர் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்பதை நோவா புரிந்து கொண்டார். மீண்டும் ஏழு நாட்கள் கடந்தபின் நோவா புறாவை மீண்டும் வெளியே அனுப்பினார். அந்த புறா அதன்பின் பேழைக்குத் திரும்பவே இல்லை ! தண்ணீர் முழுமையாய் வற்றி விட்டது என்பது நோவாவிற்கு விளங்கியது.

கடவுள் நோவாவின் பேழையைத் திறந்தார். பூமியில் தண்ணீர் வற்றிப் போயிருந்தது. பூமி வெறுமையாய்க் கிடந்தது பறவைகளின் ஒலியோ, விலங்குகளின் சத்தமோ எதுவும் பூமியில் இல்லை. மனிதர்கள் யாருமே உயிரோடு இல்லை. கடவுள் நோவாவிடம், ‘ போதும் வெளியே வாருங்கள். வெளியே பூமி தன்னுடைய பாவங்களைக் கழுவி தூய்மையாய் இருக்கிறது. இனிமேல் நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள். பாவம் இல்லாத ஒரு உலகத்தைப் படையுங்கள்’ என்றார். நோவாவின் குடும்பத்தினரும், பேழைக்குள் இருந்த அனைத்து உயிரினங்களும் மீண்டும் பூமிக்குத் திரும்பின. அப்போது பூமியில் அவர்களைத் தவிர யாருமே இல்லை. ஒரு ஆண்டும் பத்து நாட்களும் நோவாவும் குடும்பமும் பேழைக்குள் அடைபட்டுக் கிடந்தன.

உலகம் முழுவதும் அழிந்தாலும் தன்னையும், குடும்பத்தையும் காப்பாற்றிய கடவுளுக்கு நோவா நல்ல விலங்குகள், பறவைகளை எரிபலி செலுத்தினார்.

கடவுள் நோவாவின் பலியில் மகிழ்ந்து, ‘இனிமேல் நான் பூமியைத் தண்ணீரால் அழிக்கமாட்டேன். நீயும் உன் சந்ததியினரும் பூமியை ஆளுங்கள். விரும்பும் உயிரினங்களை உண்ணுங்கள், ஆனால் இரத்தத்தோடு உண்ணாதீர்கள். ஒரு மனிதனின் இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனிதராலேயே சிந்தப்படும். உங்களோடு மீண்டும் என் உடன்படிக்கையை நிலை நாட்டுகிறேன். இனி பூமி தண்ணீரால் அழிக்கப் பட மாட்டாது. இந்த உடன்படிக்கையின் அடையாளமாக வில் ஒன்றை வானத்தின் மீது வைக்கிறேன். மழைநாட்களில் அது நம் உடன்படிக்கையை நினைவு படுத்தும். நான் இனி பூமியை வெள்ளப்பெருக்கினால் அழிக்கவே மாட்டேன்.’ என்றார்.

நோவா கடவுளுக்குப் பணிந்து அவருடைய வழிகளில் வாழ்ந்து வந்தார். அவர் மரணமடைந்தபோது அவருடைய வயது தொள்ளாயிரத்து ஐம்பது.