Posted in Articles, Bible Poems, Poem on People

வழிப்போக்கன் !

வழிப்போக்கன் !



ஆசை
ஒரு வழிப்போக்கன் !

அது
சாத்தப்பட்ட சாளரங்களைக்
கவனித்தபடி
சாலையில் நடந்து போகிறது !
கண் திறக்காத
கதவுகளின் முன்னால்
அது
அப்பாவியாய் கடந்து செல்கிறது.

அங்கும் இங்கும்
அலையும்
அதன் கண்களின்
வசீகரத்தின் அனல் 
அடித்துக் கொண்டே இருக்கிறது.

தாவீது அதைத் தான்
உள்ளே அழைத்து
விருந்து வைத்தான் ! 

அதை
கண்டுகொள்ளாமல் விடும்வரை
அது
கதவடைத்துக்
கடந்து வருவதும் இல்லை

சன்னல் உடைத்து
இன்னல் தருவதும் இல்லை !

சுற்றிக் கொண்டிருப்பதே
தன் இயல்பென
அது
தெருக்களுங்கும் 
ஊமைச் சாதுவாய் உலவித் திரியும்.

அதை
சற்றே திறந்த சன்னல் வழியே
கவனித்தால்
உடனே நின்று புன்னகைக்கும்.

அதன்
அழகில் மயங்கி கதவு திறந்தால்
ஆவேசமாய் வந்து
நடுவீட்டில்
நாற்காலி போட்டமரும். 

அதன்
அகோரப் பசியை
அட்சய பாத்திரங்களும்
அகற்றி விட முடியாது !

நமது
நிம்மதியையும்
பொருளாதாரத்தையும்
நேரத்தையும்
நறுக்கி விழுங்கும் !

காலப்போக்கில்
வயிறு புடைத்து 
வெளியேறிச் செல்ல வாசல்கள் போதாமல்
உள்ளுக்குள்ளே
நிரந்தரமாய் நங்கூரமிடும்.

வீட்டின்
ஆட்சிப் பொறுப்பைக் கையிலெடுத்து
வலிய அழைத்த
வீட்டினரையே
வீதிக்கு அனுப்பும். 

தாவீது அதைத் தான்
உள்ளே அழைத்து
விருந்து வைத்தார் ! 

ஆசை
ஒரு வழிப்போக்கன் !

தன்னை
உள்ளே அழைத்து உட்கார
வைப்பவர்களை,
வழிப்போக்கர்களாய் மாற்றும்
ஒரு 
விசித்திர வழிப்போக்கன்.

*

சேவியர்





Posted in Articles, Bible Poems, Christianity, Poem on People, Sunday School

இறையச்சம் கொண்ட பெண்கள்

Godly Women

+

இறையச்சம் கொண்ட பெண்கள்
நிறைவாழ்வின் நதியோரம்
நடமாடுகிறார்கள்.
புதுவாழ்வின் பாதைகளில்
இடம் தேடுகிறார்கள்.

இறையச்சம் கொண்ட பெண்கள்
கனிவின் கரம் பிடித்து
துணிவின் துணையுடன்
பணி செய்வார்கள்.

ஆண்மகவை எல்லாம்
அழித்தொழியுங்கள்
என
எகிப்திய மன்னன் எகிறிக் குதித்தான்

சிப்ராவும் பூவாவும்
கர்ஜனைக்குக் கீழ்படியாமல்
கர்த்தருக்குக் கட்டுப்பட்டனர்.
இளகிய இதயத்தோடு
மழலையரைக் காத்தனர்.

இறையச்சம் கொண்ட பெண்கள்
இறைவனின் பிள்ளைகளை
இதயத்தால்
அறிவார்கள்,
ஞானத்தால் பொதிவார்கள்.

ராகாப்
உடலை விற்றவள்
இறையைக் கற்றவள்.
அவளது ஞானம்
இஸ்ரேல் உளவாளிகளைக் காத்தது
அவளது நாமம்
இறை வரலாற்றில் இடம் பெற்றது.

இறையச்சம் கொண்ட பெண்கள்
வீரத்தின் தீரத்தை
உயிரெங்கும் தரித்திருப்பார்கள்.

அரச குடும்பத்தை
அழித்துக் கொக்கரித்த
அத்தலியாவிடமிருந்து
இளவரசர் யோவாசைக் காத்தாள்
யோசேபா !
வம்சம் அழியாமல் காப்பாற்றப்பட்டது.

இறையச்சம் கொண்ட பெண்கள்
அர்ப்பணிப்பின்
நற்பண்பை
நெஞ்சத்தில் நிறைத்திருப்பார்கள்.

இதோ அடிமையென
தாழ்மை காட்டினார்
தாவீதின் அம்சமான மரியாள் !
மனித ஆதாரத்தின்
மானுட அவதாரம் மலர்ந்தது.

இறையச்சம் கொண்ட பெண்கள்
இயேசுவின்
பணி வாழ்வின்
வழியெங்கும் நிறைந்திருந்தனர்.

பாடுகளின் பாதைகளிலும்
அழுதிருந்தனர்.

சிலுவையின் சுவடுகளிலும்
காத்திருந்தனர்.

இறையச்சம் கொண்ட பெண்கள்
உயிர்ப்பின் பேரொளியை
விழி நிரம்ப
அள்ளிக் கொள்கின்றனர்

அவர்கள்
செபத்தின் ஆழியில்
நங்கூடமிட்டு நிலைத்திருப்பார்கள்
அன்னாவைப் போல

அவர்கள்
விருந்தோம்பலின் விழுதினை
விழிகளில் நட்டிருப்பார்கள்
மார்த்தாளைப் போல

அவர்கள்
இறைவார்த்தை விருதினை
உயிரினில் வைத்திருப்பார்கள்
மரியாளைப் போல

அவர்கள்
கண்ணியத்தின் கவசத்தை
கேடயமாய் வைத்திருப்பார்கள்
ரபேக்கா போல

மொத்தத்தில்,

இறையச்சம் கொண்ட பெண்கள்
இறைவனின்
புனித வாழ்வில்
புகலிடம் தேடுவார்கள்,
சாத்தானுக்குச் சன்னல்களையும்
சத்தமாய்ச் சாத்துவார்கள்

*

Posted in Articles, Christianity, Poem on People, SAINTS

சிசிலியா எனும் இறையிசை

சிசிலியா எனும் இறையிசை

Guercino - St. Cecilia .jpg

இசையும் இறையும்
இரண்டறக் கலந்தவை.

இருளைக் கிழித்து
ஒளி பிறந்தது !
பிரபஞ்சப் படைப்பின்
முதல் மௌன இசை.

இயேசுவின் பிறப்பை
இடையர்க்கு அறிவித்தது
தூதரின் மெல்லிசை.

கல்வாரியில்
மீட்பின் முனகல்கள்
துயரத்தின் இசை.

இசையின்றி
இறையில்லை.

சிசிலியா
அந்த
இசையான இறைவனை
இசையாலே அசைத்தவர்

இசைக்கலைஞரின்
பாதுகாவலி மட்டுமல்ல,
இசைக்கருவிகளை
உருவாக்கும் கலைஞருக்கும்
அவரே பாதுகாவலி.

இறை தங்கும் ஆலயமாய்
தன்னை
சிறுவயதிலேயே
அன்பரின் பாதத்தில்
அடிமையாய் வைத்தவர்

சிற்றின்பத்தின் சிற்றோடைகளை
விடுத்து
பேரின்பத்தின் பெருநதிக்காய்
உயிருக்குள்
பாடல் இசைத்துக் கிடந்தவர்.

விண்வாழ் தூதர்
மண்வந்து
இசைப்பேழையின் அருகிருந்து
இடையறாமல் காத்தது
இந்தப் புனிதரின் வாழ்வில் தான்.

திருமணம் வந்து
தேரில் ஏற்றிய போதும்
இதயத்தில்
தேவனை மட்டுமே ஏற்றினார்.

கனவுகளோடு வந்த‌
கணவனையும்
கடவுளோடு இணைத்து
த‌ன்
கன்னித் தன்மையை
கடவுளுக்காய்க் காத்தவர்.

லில்லிப் பூக்களும்
ரோஜாப் பூக்களுமாய்
தூதர்கள்
இவரருகே வாசம் புரிவதை
வாசனை கண்டு
வியந்தவர் பலர்.

லில்லி,
தூய்மையின் அடையாளம்.
உடல் உள்ளத் தூய்மையை
சிசிலியா காத்ததன்
விண்ணக அங்கீகாரம்.

ரோஜா
மறைசாட்சியின் அடையாளம்.
குருதிக் கரையில்
இறையில் கரைவார் எனும்
நிறைவின் குறியீடு.

தன்
இதயத்தின் இசையைக் கூட‌
பிறருக்குப்
புரியவைக்கும்
புதுமையின் அம்சம் அவர்.

த‌ன்
வாழ்க்கையின் வழியெங்கும்
இறைவார்த்தையை
நடவு செய்த நங்கையவர்.

ரோம்,
கிறிஸ்தவத்தை
வெறி கொண்டு வேட்டையாடிய‌
காலம் !
கிறிஸ்தவர்களை
பொறி வைத்து
படுகொலை செய்த காலம்.

சிசிலியாவின்
கணவரும், அவர் சகோதரரும்
அதிகாரிகள் முன்
வீசப்பட்டனர்.

விரோதத்தின் விழிகள்
அவர்களை எரித்தன.
இயேசுவை மறுத்தால்
வாழ்க்கையைத் தொடரலாம்,
இயேசுவை எடுத்தால்
வாழ்க்கையை முடிக்கலாம்
எதுவேண்டும் ? என‌
கர்வம் குரல்கள் கர்ஜித்தன.

நிலைக்களமான‌
வாழ்க்கைக்காய்
கொலைக்களமே
போதுமென தேர்ந்தெடுத்தனர்.

ஜீவனை காப்பதற்காய்
ஜீவனை விட்டனர்.

எரிச்சலில் எரிமலையாய்
எதிரிகள் திரிந்தனர்.

முல்லை மலரான‌
மங்கையை
அழிப்பதே
அடுத்த இலக்கென‌
அலறித் திரிந்தனர்

அதிகாரி
கறையானான்
சிலிலியா
சிறையானாள் !

இயேசுவை உதறு
அளிப்போம் சிறகு
என்றனர்.

பரமனை பரிகசித்தால்
வசந்தங்கள்
பரிசளிப்போம்
என்றனர்.

சிசிலியா சிரித்தாள்.

கடவுளைப் புறந்தள்ளி
உலகினில்
ஒட்டுவதா ?
உலகினை உதறிவிட்டு
இறையினை
எட்டுவதா ?
நான் நல்ல பங்கை தேர்ந்தெடுப்பேன்.

உன்
மரணப் பரிசு போதும்
மன்னவனை மறுதலியேன்
என்றாள்.

இருட்டான‌
குளியலறையில்
அடைக்கப்பட்டார் இசைப்பறவை.

ஏழுமடங்கு வெப்பமான‌
நீராவி
அறையை நிறைத்தது.
அவள் அங்கமோ
இறையில் குளிர்ந்து
இசையில் மிளிர்ந்தது.

சாவாள் என நினைத்திருந்தவள்
சாதகம் செய்வதைக் கண்டு
அதிகாரி
அலறினான்

வாள்களால் அவளை
வீழ்த்துங்கள்,
தலையினை வெட்டி
தரையின் வீசுங்கள்
என்றான்.

தலைவனுக்காய் தலைதர‌
சம்மதம் எனக்கு
அதுவே
நிலைவரம் எனக்கு
என்றாள் சிசிலியா.

வாள்கள்
கழுத்தை நோக்கி
கழுகு போல் பாய்ந்தன.
மூன்று முறை
அந்த மெழுகுக் கழுத்தை
கூர்வாள்கள் குதறின.

மூவொரு இறைவனின்
பிரியையை
மூன்று வெட்டுகளால்
பிரிக்க முடியவில்லை.

மூன்று முறைக்கு மேல்
வெட்ட‌
அன்று
சட்டப்படி அனுமதியுமில்லை !

வெட்டியவர் ஓடினர்
வெட்டுப்பட்டவர் பாடினார்.

மீனின் வயிற்றுக்குள்
மூன்று நாள் இருந்த‌
யோனாவாய்,
மண்ணின் மடியினில்
மூன்று நாள் இருந்த‌
மனுமகனாய்
செசிலியா மூன்று வெட்டுகளுடன்
மூன்று நாள் இருந்தார்.

அந்த நிலையிலும்
புன்னகைத்தாள்
போதித்தாள்
நானூறு பேரை மனம் மாற்றினார்.

உள்ளதையெல்லாம்
ஏழைகளுக்கும்
உள்ளத்தை இயேசுவுக்கும் கொடுத்தார்.

இறையோடு வாழ்ந்த‌
இல்லத்தை
இறைவனுக்கு
ஆலயமாக்கச் சொன்னார்

கடைசியில்
மரணம் மெல்ல சத்தமிட்டது
இசையின்
நெற்றியில் முத்தமிட்டது.

ராகம் ஒன்று
புல்லாங்குழலுக்குள் புகுந்ததாய்,
நாதம் ஒன்று
வீணைக்குள் அடைந்ததாய்
செசிலியா
இறைவனின் இதயத்தில்
நிறைந்தாள்.

மண்ணகம்
துயர் கண்டது.
விண்ணகம் இசைகொண்டது

முதல் நூற்றாண்டின்
கடைசியில் முளைத்தவர்
இரண்டாம் நூற்றாண்டு
முளைத்ததும்
விடைபெற்றார்.

நான்காம் நூற்றாண்டு
திருச்சபை இவரை
புனிதரெனக் கண்டது.

பதினைந்தாம் நூற்றாண்டில்
அவர் கல்லறை
திறக்கப்பட்டது.

துயில் கொண்ட‌
தூரிகையாய் அவர் தெரிந்தார்.
அன்றலர்ந்த மலரென‌
உடல் அழியாதிருந்தது.
மலரின் நறுமணம் விலகாதிருந்தது.

நவம்பர் 22
விழா நாள் என‌
அவர் பெயரை திருச்சபை
எழுதிக் கொண்டது.

சிசிலியா
தூய்மையின் இசை.
சிசிலியா
இசையின் தூய்மை.

*

சேவியர்

 

Posted in Poem on People, SAINTS

புனித ஆக்னஸ்

Image result for saint agnes

 

அழகிய
ஆட்டுக் குட்டியொன்றின்
அருகில்
வசீகரமாய் இருக்கிறார்
ஓர் இளம் பெண் !

ஆக்னஸ் !

இறைமகன் இயேசு
ஆட்டுக் குட்டி
என
அறியப்படுபவர்,
ஆக்னஸ் என்றால்
ஆட்டுக்குட்டி
என்கிறது இலத்தீன்.

இறைமகனின்
அருகாமையை
இளம் வயதிலேயே
அறிந்து கொண்டவர்
ஆக்னஸ்

என்ன செய்வதென
தெரியாமல்
போரடித்த பொழுதொன்றில்
தனது
சமையல்காரியின்
இல்லம் சென்றாள் ஆன்கஸ்.

அங்கே
முழங்காலும் முக்காடுமாய்
சமையல்காரி
செபித்திருந்த தோற்றம்
ஆக்னஸை
வியப்பின் விளிம்பில்
தொங்க விட்டது.

என்ன செய்கிறீர் ?
குரல் கேட்ட அவர்
திடுக்கிட்டுத் திரும்பினாள்.

கிறிஸ்தவம்
வாள் முனையில்
அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த
காலம் அது.

கிறிஸ்தவர்கள்
சாட்டைகளால்
சாய்க்கப்பட்டுக் கொண்டிருந்த
காலம்.

இயேசு
எனும் பெயர்
வெறுக்கப்பட்டுக் கொண்டிந்த
காலம்.

திரும்பிய அவர்
கேட்டார்,
‘சாப்பிட ஏதேனும் வேண்டுமா ?’

ஆன்கஸோ
ஆர்வத்தின் பசியில் நின்றாள்
ஆகாரத்தின் பசியில் அல்ல.

சொல்லுங்கள்
என்ன செய்கிறீர்கள் ?

வாழும்
இறைவனை நோக்கி
செபிக்கிறேன்,
என் பிறவிப் பயனை
அடைகிறேன்.
பதில் சொன்னார்

ஆன்கஸ் சிரித்தாள்.
பார்த்துக் கொள்ள
படங்கள் இல்லை,
பூஜை செய்ய சிலைகள்
இல்லை,
ஆராதனை செய்ய
அடையாளங்கள் இல்லை !
இதென்ன வெற்று வெளியில்
ஒரு வேண்டுதல் ?

சமையலம்மா
சிரித்தார்.
காற்றுக்கு எங்கே போய்
படம் செய்வது ?
என் கடவுள் காற்று போல
என் நுரையீரலை நிரப்புகிறார்.

சிந்தனைக்கு எங்கே போய்
சிலை செய்வது
என் கடவுள்
என் சிந்தனையில் வந்து
அரசாள்கிறார்

அவர்
வாழ்ந்தவர் அல்ல
வாழ்பவர்.
அவர் வரலாறல்ல
வழிகாட்டி.

ஆர்வம் அசுரவேகமாய்
ஆக்னசுக்குள்
ஆறாய்ப் பாய்ந்தது.

சொல்லுங்கள்
சொல்லுங்கள்.

நான்
அச்சுறுத்தும் விலங்குகளை
ஆராதிப்பதைக்
கண்டிருக்கிறேன்.

பயமுறுத்தும் படங்களை
பணிவதைக்
கண்டிருக்கிறேன்

சினம் கொண்ட
சிலைகளை
வந்தனை செய்திருக்கிறேன்.

இல்லாத இறைவனிடம்
வேண்டுதல் செய்ததில்லை.
ஆன்கஸ் சொல்ல
அவர் சிரித்தார்.

இல்லாத தெய்வம் தான் !
உருவம்
இல்லாத தெய்வம்.
கோரம்
இல்லாத தெய்வம்.
அவர் தான் இயேசு, உண்மை தெய்வம்.

ஆக்னஸ் சிலிர்த்தாள்.
அந்த தெய்வம்
எனக்கு வேண்டும்.
அறிமுகம் செய்யுங்கள்

சமையல் அம்மா
மகிழ்ந்தார்,
ஆண்டவரை ஆக்னஸுக்கு
அறிமுகம் செய்தாள்.

ஆக்னஸ்
நெருப்பில் விழுந்த
பஞ்சைப் போல
முழுவதும் எரிந்தாள்
அன்பின் அனலில்.

உலகின்
இச்சை விலக்கினாள்.
இயேசுவே போதுமென
இதயத்தில்
பச்சை குத்தினாள்.

இயேசுவின்
போதனைகளில்
பச்சையம் பெற்றாள்
அவரது அன்பில்
வாழ்வினைக் கற்றாள்.

செபம்
அவளுக்கு இனிப்பான
உணவானது.
இறைவன்
அவருக்கு இளைப்பாறும்
தளமானது.

பருவம் அவளை
அழகின் வசீகரமாய்
வார்த்தெடுத்தது.
பலரும் அவளை
மணம் புரிய மனம் கொண்டனர்.

அவளோ
இதயத்தை
இயேசுவிடம்
இடம் மாற்றி வைத்தாள்.

ஃபோக்கஸ் !
ரோம உயரதிகாரியின் மகன்.
கம்பீரக் கட்டழகன்.
ஆக்னஸின்
விழி அழகில் விழுந்தான்.

உன்
கரம் பிடிக்கும் வரம் தா
என
சுரம் பிடித்தான்.

அவளோ
குதிரையில்
இருப்பவரை விட
இதயத்தில் இருப்பவரே
பெரியவர் என்றாள்.

ஆயிரம் பெண்கள்
ஆசை வைக்கும் அழகன்
ஆக்னஸால்
நிராகரிக்கப்பட்டான்.

அரச குலம்
நிராகரிப்புகளை
வரவேற்காது.
கர்வக் கிரீடத்தைக்
கழற்றி வைக்காது.

விஷயம்
ரோம அதிகாரிக்குப் போனது.
“ஆக்னஸ்
ரோமக் கடவுளுக்கு எதிராகிறாள்
ஏதோ இயேசுவுக்கு
வக்காலத்து வாங்குகிறாள்.”

ஆக்னஸ்
அவைக்கு அழைக்கப்பட்டாள்.

இயேசுவை விட்டு விடு
இல்லையேல்
உயிரை விட்டு விடு !
மிரட்டல் அவரை மோதியது.

உண்மை தெய்வத்தை
உதறித்தள்ள
உத்தேசமில்லை
என்றாள்.

எங்கள் தெய்வத்தின் முன்
மண்டியிடு
உயிர்ப்பிச்சை வாங்கி
ஓடிவிடு, என்றார்கள்.

இயேசுவின் மடியில்
உயிரை விடுவேன்,
போலிகளின் பிச்சையில்
உயிரைக் காக்கேன்
என்றாள்.

உனக்கென்ன
பைத்தியமா ?
கோபத்தில் கொக்கரித்தனர்.

ஆம்,
இறைப் பைத்தியம்
பரமன் மேல் பைத்தியம்
என்
மணவாளன் மேல் பைத்தியம்.
இதற்கான வைத்தியம்
மரணமெனில் எனக்கு சம்மதமே
என்றாள்.

கோபத்தின் கொடுக்காற்றாய்
சீறியது அவை.

ஆக்னஸின்
ஆடைகள்
ஆடவரால் உரியப்பட்டன

உரிந்தவர்கள்
பயந்தனர்.
ஆக்னஸின் கூந்தல்
மின்னலென வளர்ந்து
மேனியை மூடியது.

அவமானம் போர்த்த
நினைத்தவர்கள்
மிரண்டு போய் பின் வாங்கினர்.

ஆன்கஸை
குகைக்குள் அடைத்து
பாவிகளுக்குப் பரிசளித்தான்
அதிகாரி.

ஆக்னஸை
அணுகிய
பாவிகளின் பார்வைகள்
சட்டென பறிக்கப்பட்டன.
நிமிர்ந்து வந்தவர், தவழ்ந்து திரும்பினர்.

கோபமடைந்த
ஃபோக்கஸ்
தானே களமிறங்கினான்.

குகையின் கதவைத் திறந்து
ஆன்கஸை
அழித்தொழிக்க
கால் வைத்தான்.

இறைவன்
மின்னலை அனுப்பி
அவனை
அங்கேயே மரணத்தில் புதைத்தார்

அதிர்ந்து போன
தந்தை
அலறிக் கொண்டு வந்தார்.

மகனை மீட்டுக்கொடு
என
மங்கையிடம் மண்டியிட்டார்.

ஆன்கஸ்
இறைவனை வேண்டினார்.

மரணத்தில்
ஒளிந்திருந்த மகன்
வாழ்வுக்குள்
வெளிவந்தான்.

உலகம் அதிர்ந்தது
ஒருசேர பயந்தது.

ஆக்னஸ் வாழ்ந்தால்
பிற தெய்வங்கள்
அழியுமென திகைத்தது.

ஆன்கஸ்
கொலைக்களத்திற்கு
அளிக்கப்பட்டாள்.

விறகுகளின் மேல்
அந்த பூ
கட்டி வைக்கப்பட்டது.

நெருப்பின் ஜுவாலையில்
அந்த
மெல்லிய பட்டாம் பூச்சி
கருகுவதற்காய்
கட்டப்பட்டது.

வெப்பத்தின் தெப்பத்தில்
அழிய
அந்த பனிச் சிலை
பதியனிடப்பட்டது.

அங்கும்
ஆச்சரியமே பூச்சொரிந்தது.

எரிய மறுத்தது
விறகு.
எரிந்த நெருப்பும்
ஆன்கஸை அணுக மறுத்தது.
கூட்டம் நிலை குலைந்தது.

நெருப்பு கைவிரித்தது.
ஆன்கஸ் மனம் விரித்தாள்
செபித்தாள்.

போதும் இறைவனே
அதிசயங்களின் வல்லமை போதும்.

உம் அருகாமையில் வாழும்
ஆசை
கொழுந்து விட்டு எரிகிறது
என்னை ஏற்றுக் கொள்ளும்.

ஆக்னஸ்
செபித்துக் கொண்டே இருந்தாள்.

ஒரு வீரன் பார்த்தான்.
நெருப்பு செய்யாததை
தன்
வாளினால் முடித்து வைக்க
முனைந்தான்.

வீசிய வாள்
ஆக்னஸின் தொண்டையை
துளைத்திறங்கியது.

விண்ணகத்தின் வாசலை
அந்த
வாளெனும் சாவி
அகலத் திறந்தது. .

ஆன்கஸ்
விடைபெற்றார்.

அவர் பிறந்த
இத்தாலி தேசமே
அவரை
படுகொலையும் செய்தது.

பதின் வயதுகளின்
ஆரம்பத்திலேயே
புவி வாழ்வை நிறைவு செய்தாள்
ஆன்கஸ்

கிபி 291ல் பிறந்த
ஆக்னஸ்
கிபி 304ல் இறையில் நிறைந்தாள்.
354 ல் அவர் புனிதரானார்.

பெண்களுக்கும்
கற்புக்கும்
பாதுகாவலியானார்.

ஜனவரி 21,
அவரது மறைவு தினம்.
இறைவனோடு
பரிந்து பேசும்
பணியைப் பெற்ற தினம்

கத்தோலிக்கத் திருச்சபை
திருப்பலியில்
இவர் பெயரை
இணைத்துப் பெருமைப் படுத்துகிறது.

புனிதர்களின் வாழ்க்கை
நமக்கு
வழிகாட்டும் புத்தகம்.

மரணம் எந்தக் கணமும்
கதவைத் தட்டலாம்
என்பதை
உணர்த்தும் தருணம்.

ஆத்மார்த்த
இறை நேசம்
ஆன்கஸின் வாழ்க்கை சொல்லும்
ஆன்மிக பாடம்.

*

சேவியர்

Posted in Bible Poems, Christianity, Poem on People, Songs, Sunday School

Kavithai : யார் எதிரி

யார் எதிரி ?

Image result for joseph and potiphar's wife

இச்சைக்கு
இணங்கென்று
கண்ணி வெடி வைத்தாள்
கன்னியொருத்தி.

தனிமையின்
நெருக்கத்திலும்
தேகத் தீயில் விழாமல்
தப்பித்தார் யோசேப்பு !

போர்த்திபாவின்
மனைவி,
யோசேப்பின் தூய்மையை
உலகறியச் செய்தவள் !

கடவுளுக்கு எதிராகவே
கர்ஜித்து நின்றான்
ஒருவன்.

வீரனே இல்லாத
கோழை தேசமா என
கொக்கரித்தான்.

கோலியாத்,
தாவீதிடம்
கடவுள் இருந்ததை
வரலாற்றுக்கே
புரிய வைத்தவன்.

புனித முத்தத்தை
புனிதரின் முகத்தில்
பதித்தான் ஒருவன்.

எனினும்
அது புனிதமடையவில்லை.
போலியின் பிசுபிசுப்பால்
கறைபடிந்தது.

யூதாஸ்
சிலுவைப் பயணத்தை
முத்தத்தால்
துவங்கி வைத்தவன்.

கொலையாளிகளின்
ஆடைகளுக்குக்
காவலிருந்தான் ஒருவன்.

கொன்றே தீருவேனென
அழிக்கும் அனலுடன்
சீறிப் பாய்ந்தான்.

பயணம்
சவுலின் சத்தத்தை
பவுலின்
போதனையாய் மாற்றியது.

இறைவன்
வியப்பானவர்.

எதிரியின்
விரல்களைப் பிடித்தும்
எழுதுகிறார்
வெற்றியின் வரலாறுகளை

*

சேவியர்