Posted in Bible Poems, Christianity, Poem on People, Songs, Sunday School

Kavithai : யார் எதிரி

யார் எதிரி ?

Image result for joseph and potiphar's wife

இச்சைக்கு
இணங்கென்று
கண்ணி வெடி வைத்தாள்
கன்னியொருத்தி.

தனிமையின்
நெருக்கத்திலும்
தேகத் தீயில் விழாமல்
தப்பித்தார் யோசேப்பு !

போர்த்திபாவின்
மனைவி,
யோசேப்பின் தூய்மையை
உலகறியச் செய்தவள் !

கடவுளுக்கு எதிராகவே
கர்ஜித்து நின்றான்
ஒருவன்.

வீரனே இல்லாத
கோழை தேசமா என
கொக்கரித்தான்.

கோலியாத்,
தாவீதிடம்
கடவுள் இருந்ததை
வரலாற்றுக்கே
புரிய வைத்தவன்.

புனித முத்தத்தை
புனிதரின் முகத்தில்
பதித்தான் ஒருவன்.

எனினும்
அது புனிதமடையவில்லை.
போலியின் பிசுபிசுப்பால்
கறைபடிந்தது.

யூதாஸ்
சிலுவைப் பயணத்தை
முத்தத்தால்
துவங்கி வைத்தவன்.

கொலையாளிகளின்
ஆடைகளுக்குக்
காவலிருந்தான் ஒருவன்.

கொன்றே தீருவேனென
அழிக்கும் அனலுடன்
சீறிப் பாய்ந்தான்.

பயணம்
சவுலின் சத்தத்தை
பவுலின்
போதனையாய் மாற்றியது.

இறைவன்
வியப்பானவர்.

எதிரியின்
விரல்களைப் பிடித்தும்
எழுதுகிறார்
வெற்றியின் வரலாறுகளை

*

சேவியர்

Posted in Bible Poems, Christianity, Poem on People, Songs, Sunday School

எதிரே வருவதெல்லாம், எதிரியல்ல

எதிரே வருவதெல்லாம்,
எதிரியல்ல

Image result for red sea and moses
செங்கடல்
எதிரே வந்ததால் தான்
இரண்டாகப் பிரிந்தது.

யோர்தான்
குறுக்கே வந்ததால் தான்
குறுக்கு வெட்டுத்
தோற்றம் பெற்றது.

எதிரே வருவதெல்லாம்
எதிரியல்ல
சாதாரண வெற்றியை
அசாதாரணமாக்கும்
காரணிகள்.

எரிகோ மதில்
இல்லையெனில்
ஆராவாரமும்
ஆண்டவரின் ஆயுதமென்பது
புரிந்திருக்குமா ?

நாமான்
மட்டும் இல்லையென்றால்
நீர் கூட
நோய் தீர்க்குமென
விளங்கியிருக்குமா ?

சிலுவை மட்டும்
இல்லையென்றால்
பூட்டிய கல்லறையும்
புரட்டப்படுமென
புரிந்திருக்குமா ?

எதிரே வருவதெல்லாம்
எதிரியல்ல.
இறைவன் யாரென்பதை
நமக்கே உணர்த்தும்
உதிரிகள்

• சேவியர்

Posted in Bible Poems, Christianity, Songs, Sunday School

Kavithai : ஒருவன்

ஒருவன்

Image result for david and jesus

ஒரு தீக்குச்சி,
செய்யும்
சிறு தவறு
பிழையற்ற கானகத்தைப்
பொசுக்கி முடிக்கிறது.

தாவீதின்
பிழை
எழுபதாயிரம் பேரின்
மரணத்துக்கு
முன்னுரை எழுதியது.

ஏரோதின்
பிழை
எண்ணற்ற குழந்தைகளின்
புன்னகையை
அழுகையாய் மாற்றியது.

ஆபிரகாமின்
பிழை
தவறான சந்ததியை
பூமிக்கு அறிமுகம் செய்தது.

ஒரு மீட்பர் செய்யும்
பெரும் தியாகம்
பொசுங்கிய வாழ்வை
மீண்டும் புதுப்பிக்கிறது.

இயேசுவின் வருகை
ஒற்றை
விளக்கில்
அத்தனை இருட்டையும்
அடக்கும் முயற்சி.

ஒற்றை
சிப்பியில்
அத்தனை ஆழிகளையும்
நிறைக்கும் முயற்சி.

ஒற்றை
ஜீவனில்
அத்தனை மரணங்களையும்
முறிக்கும் முயற்சி.

இது
பிழையற்ற ஒருவர்
பிழையாய்
உருமாறிய தருணம்.

பாவமற்ற ஒருவர்
பாவத்தின் வடிவான
தருணம்.

ஒருவரால்
மனுக்குலம்
மீட்பின் வாசல் நுழைந்த
அனுபவம்.

நாமும்
ஒருவன் தான்.
கானகம் அழிக்கிறோமா
வானகம் அழைக்கிறோமா ?

*

சேவியர்

Posted in Songs, Sunday School

நான் இயேசுவின் பிள்ளை

Image result for kids and jesus

நான் இயேசுவின் பிள்ளை
எனக்கு கவலையே இல்லை
அருகில் வாவென
என்னை அழைத்தார்
தடுத்த மனிதரை
இயேசு கடிந்தார்

இயேசுவின் மனதில் நானிருப்பேன்
எந்தன் மனதில் அவர் இருப்பார்
அவரின் அன்பின் நானிருப்பேன்
அவர் போல் அன்பாய் நான் நடப்பேன்

Posted in Songs, Sunday School

Song : யூதாஸ் நானொரு யூதாஸ்

Image result for judas

யூதாஸ் நானொரு யூதாஸ்
மறைவாய் திரியும் யூதாஸ்
யூதாஸ் நானொரு யூதாஸ்
பாவம் உலவும் யூதாஸ்

எந்தன் பேச்சில் புனிதம் வடியும்
எந்தன் நடையில் பணிவும் தெரியும்
எந்தன் செயலில் மனிதம் மிளிரும்
இறைவா உண்மை உமக்கே தெரியும்

*

சுருக்குப் பையில் பணமும் தந்தால்
பாவ புண்ணியம் பார்ப்பதும் இல்லை
அன்போ நட்போ எதுவும் எந்தன்
தீய எண்ணம் தடுப்பதும் இல்லை

செல்வம் எனக்கு இறையென்றேன்
இறையை செல்லாக் காசென்றேன்
உலகின் பின்னால் அலைகின்றேன்
இறைவா உம்மை பிரிகின்றேன்

*

உறவின் அழகாம் முத்தம் தந்தும்
பிறரை அழிக்க தயங்கிய தில்லை
போலித் தனத்தை நெஞ்சில் நானும்
வேலி போட்டுத் தடுப்பதும் இல்லை

அன்பை நானும் போவென்றேன்
உண்மை நேசம் ஏனென்றேன்
விண்ணக வீட்டை வீணென்றேன்
தன்னலக் கூட்டில் வாழ்கின்றேன்