Posted in Articles, Vettimani

SKIT – உள்ளதை உள்ளதென்போம்

+

காட்சி 1

( ஒரு கன்சல்டன்சியில் ஒருவர் அமர்ந்திருக்கிறார் , முன்னால் ஒரு பைபிள் இருக்கிறது. சின்ன சிலுவை ஒன்று இருக்கிறது. )

நபர் 1 :  இயேசப்பா இந்த நாளை ஆசீர்வதியுங்க. இன்னிக்கு பிஸினஸ் நல்லா நடக்கணும். உங்களுக்கு பத்து பர்சண்ட் கண்டிப்பா உண்டு. 

( போன் அடிக்கிறது ) 

நபர் 1 “ இதான், ஒரு பிரேயர் பண்ணிட்டு நாளை ஆரம்பிச்சா எல்லாமே நல்லாதா நடக்கும். 

(போனை எடுத்து பேசுகிறார் )

நபர் 1 : என்னது ? ஓ.. சூப்பர்.. கிடைச்சுடுச்சா. ஓக்கே ஓக்கே..நாம ரெடி பண்ணி விட்டா வேலை கிடைக்கிறது ரொம்ப சிம்பிள்.. ம்ம்ம்.. என்ன சிக்கல் ? பே சிலிப் ஆ… ஒரு நிமிசம்

( கம்ப்யூட்டரை திறக்கிறார் )

நபர் 1 : ம்ம்… நீங்க வந்து.. ஓகே.. 20 தவுசன்ட் ந்னு போட சொல்லியிருந்தேன்.. என்னாச்சு. ஓ.. ம்ம்ம், சரி சரி.. ஒண்ணும் பிரச்சினையில்லை. சாயங்காலம் ஆறு மணிக்கு ஆபீஸ் வாங்க.. நான் ரெடி பண்ணி வைக்கிறேன். 

அட. நாம என்ன ரொம்ப பெரிய தப்பா பண்றோம்.. ஆல்ரெடி நீங்க 15 ஆயிரம் வாங்கறீங்க.. அதை 20ந்னு சொல்ல போறோம் அவ்ளோ தானே… ஒரு சின்ன மாற்றம்.. நோ பிராப்ளம்… ஆங்.. பை தவே.. நீங்க இதுக்கு ஒர் ஃபோர் தவுசண்ட் பே பண்ணணும்… நோ ப்ராப்ளம்.. பேக்ரவுண்ட் இன்ஃபர்மேஷன் எல்லாம் நல்லா போகும். நான் டேட்டாபேஸ்லயே ஏத்திடுவேன்.. ஓக்கே.. 

நபர் 1 ( போனை வைத்து விட்டு..) நன்றி இயேசப்பா.. காலையிலயே நல்ல செய்தி. 

காட்சி தொடர்ச்சி

( இரண்டு பேர் வருகிறார்கள் )

நபர் 1 : வாங்கப்பா நீங்க..

ரெய்னா : சார், நீங்க தான் மெயில் அனுப்பியிருந்தீங்க … வேலை விஷயமா… பத்து மணிக்கு வர சொல்லியிருந்தீங்க… 

நபர் 1 : ஓ.. யெஸ்… ரெய்னா & ரயன் சரியா.. உக்காருங்க.. உக்காங்க… 

நபர் 1 : வேலை வேணும்ன்னு ரெஜிஸ்டர் பண்ணியிருந்தீங்க இல்லையா ?

ரெய்னா : ஆமாங்க சார்.

நபர் 1 :  வெரி குட்…  ஒரு நிமிஷம்… ( கம்ப்யூட்டரைப் பார்க்கிறார் ) .. ஆங்.. நீங்க இப்போ ஃபோக்கஸ் இன்ஃபோடெக்ல வேலை பாக்கறீங்க… 4 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் சரியா… 

ரெய்னா : ஆமா சார்… 

நபர் 1 : குட்..குட்.. உங்களுக்கு .. டார்வின் இன்ஃபோ டெக்ல ஒரு வேலை இருக்கு… சீனியர் அசோசியேட்.. வேலை  கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாப்போம்.

நபர் 1 : தம்பி உங்க பேர் ரயன் தானே..

ரயன் : ஆமா சார்… 

நபர் 1 : ம்ம்ம்.. ஆங்.. உங்களுக்கு கேட்2பிஸ் ந்னு கம்பெனில ஒரு வேலை இருக்கு.. நீங்க ஒரு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் தானே

ரயன் : ஆமா.. சார்..

நபர் : நல்லா கான்ஃபிடண்டா பேசுங்கப்பா.. அப்போ தான் வேலை கிடைக்கும்

ரயன் : சரி சார்.

நபர் : ( கம்ப்யூட்டரில் நோண்டுகிறார் ).. ஓ.. ஓக்கே.. சரி, ஒரு விஷயம் பண்ணுவோம். உங்களுக்கு அங்கே ஜூனியர் அசோசியேட் வேலை இருக்கு. அதுக்கு டெஸ்டிங் தெரியணும்ன்னு போட்டிருக்கு… ம்ம்.. என்ன பண்ணுங்க.. உங்க புரஃபைல்ல கொஞ்சம் மாத்துவோம் சரியா

ரயன் : எப்படி மாத்தணும் சார்

நபர் : கொஞ்சத்தை தூக்குவோம், கொஞ்சத்தை சேப்போம் அவ்ளோ தான்.. 

ரயன் : புரியலை சார். 

நபர் : நோ ப்ராப்ளம்.. நீங்க வேலை பாக்கற கம்பெனில டெஸ்டிங் தான் பண்றீங்கன்னு நான் உங்க புரஃபைலை மாத்திடறேன். நீங்க நெட்ல பாத்து கொஞ்சம் டெஸ்டிங் பத்தி தெரிஞ்சுக்கோங்க.. சரியா…  மார்க்கும் சரியில்லை, சரி அந்த காலத்தை தூக்கிடறேன்… அப்புறம்.. ஹயிட்டு வெயிட்டு.. ஆஹா.. அதெல்லாம் வேண்டாம்.

சரி..சரி.. நான் உங்க புரஃபைல கொஞ்சம் கை வெச்சு அப்டி இப்டி மசாலா சேத்து அனுப்பறேன். அதை எடுத்துட்டு கமிங் மண்டே நீங்க கேட்2பிஸ் போயிடுங்க சரியா

ரயன் : சரி சார்… மாத்தறது தான் மாத்தறீங்க,  வேலை கிடைக்கிற அளவுக்கு மாத்திடுங்க சார். 

நபர் : ஹா.. அதெல்லாம் பக்காவா பண்ணுவோம், கடவுள் பாத்துப்பாரு.. நீங்க கிறிஸ்டியன் தானே ?

ரயன் : ஆமா சார்… என்ன இப்படி கேட்டுட்டீங்க… பக்கா கிறிஸ்டியன் ஃபேமிலி. 

நபர் : வெரி குட்.. நல்லா பிரேயர் பண்ணிக்கோங்க. முடிஞ்சா பொருத்தனை பண்ணிக்கோங்க, ஏதாச்சும் நேந்துக்கோங்க..… முதல் மாச சம்பளத்தை காணிக்கை வைப்பேன்.. … அப்படி இப்படி… ஓக்கே வா ? 

ரயன் : கண்டிப்பா சார்..

நபர் : வெரி குட்.. உங்க வேலை ஓவர்.. ஆங்..ரெய்னா.. உங்களுக்கு என்ன பண்ணலாம். ஆஹா.. நீங்க டாட் நெட் தான் படிச்சிருக்கீங்க. உங்களுக்கு வேலை போயிடுச்சு இல்லையா ? 

ரெய்னா : ஆமா சார், லே ஆஃப் ல மாட்டிகிட்டேன். டாட் நெட்ல தான் வேலை பாத்திருக்கேன். 

நபர் : ம்ம்.. தட்ஸ் ஓக்கே.. ஆனா, இவங்க கேட்டிருக்கிறது ஜாவா… அதுல ஒரு ரெண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிற மாதிரி போட்டுடறேன். கொஞ்சம் பிரிப்பேர் பண்ணிக்கோங்க சரியா

ரெய்னா : வேண்டாம் சார்.. அப்படி பொய் எல்லாம் பேசி வேலை வாங்க வேண்டாம். என்னோட திறமைக்கு என்ன கிடைக்குதோ அது போதும்.

நபர் : வாட்… பொய்யா..  ? எல்லா திறமையும் கடவுள் தரது தான்ம்மா… எங்களை மாதிரி கன்சல்டன்சி வேலையே உங்களை மாதிரி திறமை சாலிகளுக்கு வேலை வாங்கி தரது தான். 

ரெய்னா : அது நல்லது சார்.. ஆனா இல்லாததை இருக்கிற மாதிரி போடறது வேண்டாம் சார்

நபர் : ஹா..ஹா.. பயப்படாதீங்க.. இதெல்லாம் ரொம்ப சிம்பிள் மேட்டர். என்ன பண்ணணும்ன்னு நான் சொல்லி தரேன்.

ரெய்னா : இல்ல சார்.. அதுக்கெல்லாம் என் மனசு ஒத்துக்கல… 

நபர் : அடடா.. நீங்கள் இவ்ளோ ஸ்மார்ட்டா இருக்கீங்க.. நீட்டா பேசறீங்க. ஒரு சின்ன சேஞ்ச் தான். யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க… உங்களுக்கு தன்னம்பிக்கை நிறைய இருக்கு, நோ ப்ராப்ளம்.

ரெய்னா : இல்ல சார்.. சின்ன சேஞ்ச் ந்னு நீங்க சொல்றீங்க.. ஆனா நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்ததா சொல்றது சரியில்லை… 

நபர் : நீங்க புரிஞ்சுக்காம பேசறீங்க.. உங்க ஓவரால் எக்ஸ்பீரியன்ஸை நான் மாத்தலை, உங்க சம்பளத்தை மாத்தல, உங்க எந்த விஷயத்தையும் நான் மாத்தல. சின்னதா ஒரு சேஞ்ச் அவ்ளோ தான்

ரெய்னா : வேண்டாம் சார், அதுவும் வேண்டாம். அதெல்லாம் கடவுளுக்குப் புடிக்காது. பொய் சொல்றது பாவம்.

நபர் : இதெல்லாம் பொய் இல்லம்மா, ஸ்றாட்டஜி…  இப்போ சமையல் பண்றோம்.. உப்பு கொஞ்சம் கம்மிய இருந்தா சேத்துக்கறதில்லையா.. அப்படி தான்

ரெய்னா : உப்பு சேத்துக்கிறது தப்பில்ல சார்… ஆனா தப்பு செய்றது தப்பு தான். சம்பந்தம் இல்லாத ரெண்டு விஷயத்தை முடிச்சு போட்டு பேசாதீங்க சார்.   வேண்டாம்.

நபர் : பொழைக்க தெரியாத ஆளா இருக்கீங்க.. உங்களுக்கு வேலை வேணும்ன்னா இப்படிப் பண்ணினா தான் முடியும்

ரெய்னா : வேணாம் சார். பொய் சொல்றது கடவுளுக்கு அருவருப்பானதுன்னு நான் படிச்சிருக்கேன். அதெல்லாம் வேண்டாம். 

நபர் : ஏம்மா.. அவன் உன் தம்பி தானே.. அவனுக்கு உலகம் புரிஞ்சிருக்கு.. நீ இன்னும் புரியாம இருக்கே.. 

ரெய்னா : நான் உலகத்தைப் புரிஞ்சுக்கறதை விட, கடவுளை புரிஞ்சுக்க விரும்பறேன் சார். 

நபர் : சரி, சரி.. நீங்க கிளம்புங்க… ஏதாச்சும் உங்க புரஃபைலுக்கு ஏற்ற மாதிரி வந்தா சொல்றேன்

( அவர்கள் போகும்போது தனியே ரயனை அழைத்து )

நபர் : ஏம்பா.. நீயாச்சும் எடுத்து சொல்லுப்பா.. அக்கா வேலை இல்லாம இருக்காங்க, ஒரு நல்ல வேலையை வாங்கிக் குடுக்கலாம்ன்னு பாத்தா முரண்டு புடிக்கிறாங்க

ரயன் : அவ எப்பவுமே அப்படி தான் சார்… பைபிள்ல போட்டிருக்கிறதுக்கு எதிரா எதையுமே பண்ண மாட்டா.. அதனால தான் நானும் சைலன்டா உக்காந்திருக்கேன்.

நபர் : சரி.. சரி.. போயிட்டு வாங்க

காட்சி 2

( அம்மாவும் பிள்ளைகளும் )

அம்மா : என்னப்பா… போன காரியம் என்னாச்சு ?

ரயன் : அம்மா எனக்கு மண்டே இண்டர்வியூம்மா.. ரெடி பண்ணிதரேன்னு சொல்லியிருக்காரு. பிரிப்பேர் பண்ணணும்

அம்மா : வெரிகுட்.. உனக்கு என்னாச்சு ரெய்னா

ரெய்னா : ஒண்ணும் சரியாகலேம்மா.. ஜாவா ஓப்பணிங் இருக்கு, பட் டாட்நெட் இல்லை.

அம்மா : ஓ.. சரி, சரி… கவலைப்படாதே… கடவுள் உனக்கு ஒரு நல்ல வேலை குடுப்பாரு.

ரயன் : அவரு பயோடேட்டாவை கொஞ்சம் மாத்த சொன்னாரு.. இவ தான் மாத்த மாட்டேன்னு அடம் புடிக்கிறா.. இல்லேன்னா எப்படியாச்சும் ஒரு வேலை வாங்கி தந்திருப்பாரு..

அம்மா : பயோடேட்டாவை மாத்தறதா ? அப்படின்னா ? புரியலை

ரயன் : அம்மா, கொஞ்சம் அப்படி இப்படி பண்றதும்மா… இருக்கிறதை இல்லாதது மாதிரியும், இல்லாததை இருக்கிற மாதிரியும் போடறது

அம்மா : என்ன சொல்றே ? புரியற மாதிரி சொல்லு. ரெஸ்யூம்ன்னா நாம என்ன பண்ணினோமோ அதை போடறது தானே.

ரயன் : ஆமாம்மா.. நாம என்ன பண்ணினோம், நாம என்ன படிச்சோம், எவ்ளோ வருஷ எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் போடறது தாம்மா பயோடேட்டா… உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணும்ன்னா… எங்க ஸ்கூல் ரிப்போர்ட் கார்ட் மாதிரி..

அம்மா : ரிப்போர்ட் கார்ட்ன்னா அதை மாத்தக் கூடாதுல்ல ? அதை நீ மாத்தறியா ? மாத்தி தான் என் கிட்டே காட்டுவியா ?

ரயன் : அம்மா.. இப்போ அதெல்லாம் எதுக்கு பேசிட்டு… சரி.. தப்பான எக்ஸாம்பிள் சொல்லி நானே மாட்டிகிட்டேன் போல.. இப்போ டூர் போறதுக்கு நூறு ரூபா கேட்டா, நூத்தம்பது ரூபா கேட்டாங்கன்னு பொய் சொல்ற மாதிரி… 

அம்மா : என்னடா.. டூர் போறதுலயும் பொய் சொல்லி காசு வாங்கறியா ?

ரயன் : அம்மா… நான் உங்களுக்கு புரியறதுக்காக சொல்றேம்மா… அதுக்காக எல்லாத்தையும் நான் செய்றேன்னு சொல்லாதீங்க… 

ரெய்னா : அம்மா.. சிம்பிளா நான் சொல்றேம்மா.. இப்போ நம்ம வாட்ஸப்ல போட்டோ போடும்போ ரொம்ப அழகா தெரியறதுக்காக போட்டோவை எடிட் பண்ணி, லைட் அதிகப்படுத்தி, கலர் அதிகப்படுத்தி, டச் அப் பண்ணி போடறாங்கல்லம்மா அது மாதிரி..

அம்மா : ஆமாமா நான் பாத்திருக்கேன்.. ஏதோ பி.எஸ்12 அப்படி இப்படி ஏதோ ஆப் எல்லாம் இருக்குல்ல. அதை வெச்சு போட்டோ எடுத்தா ஏதோ நடிகை மாதிரி தெரியும். நேர்ல பாத்தா வேற மாதிரி இருப்பாங்க.

ரெய்னா : அதே தாம்மா… இருக்கிறதை அப்படியே போட்டா பிரண்ட்ஸ் லைக் பண்ண மாட்டாங்கன்னு அழகா இருக்கிற மாதிரி காட்டிக்கிறதும்மா… அதுவும் தப்பு தானே

அம்மா : ஆமா.. பின்னே.. நமக்கு கடவுள் தந்த அழகு தான் நமக்கு. அதை ஒரு காரணத்துக்காக தந்திருக்காரு.. அதை ஏன் மாத்தணும். மக்களோட அப்ரிசியேஷன் முக்கியமா, கடவுளோட அக்சப்டன்ஸ் முக்கியமா

ரெய்னா : இப்போ உங்களுக்கு புரிஞ்சுச்சுல்ல.. இப்படி தான். எனக்கு .நெட் தெரியாது, ஆனா தெரியும்ன்னு போட சொல்றாங்க.. முடியாது, இயேசுவுக்கு இதெல்லாம் புடிக்காதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

ரயன் : கடவுள் அப்படியெல்லாம் சொல்லியிருக்காராம்மா ? சும்மா இவளா ஏதாச்சும் யோசிச்சு கிடைக்கிற வேலையையும் கெடுக்கறா. இயேசுவோட காலத்துல ஐடியும் இல்லை, பயோடேட்டாவும் இல்லை, வேலை கிடக்க கஷ்டமும் இல்லை. 

அம்மா : என்னடா பேசறே.. கடவுள் தெளிவா சொல்லியிருக்காரு, “உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்”ந்னு அதைத் தான் அக்கா  சொல்லியிருக்கா. இல்லாததை இருக்கிற மாதிரி சொல்றது பாவம். 

ரயன் : போங்கம்மா.. நீங்களும் அவ கூட சேர்ந்துட்டு.. ஏன் என்னோட ரெஸ்யூம்ல கூட மாத்த சொன்னாரு..ஓக்கே சொன்னேன்.

அம்மா : டேய்.. என்னடா சொல்றே.. பொய் சொல்லி வேலை வாங்க போறியா ? அப்படி ஒரு வேலை கிடைக்கிறதை விட, வேலை இல்லாம இருக்கிறது நல்லது டா. 

ரயன் : இதென்னம்மா பெரிய பொய்.. ஒரு சின்ன சேஞ்ச் அவ்ளோ தான்

அம்மா :  இதெல்லாம் சின்ன விஷயம் கிடையாதுப்பா… நீ அப்பப்போ போன்ல கூட பேசறதை கேட்டிருக்கேன், அந்த புக் படிச்சிருக்கேன், இந்த புக் படிச்சிருக்கேன்னு கதை விடறதும், அந்த படம் பாத்திருக்கேன் இது பாத்திருக்கேன்னு கதை விடறதும். அதெல்லாம் தப்புன்னு சொல்லியிருக்கேன்ல… 

ரயன்  : அம்மா அது பொய் இல்லம்மா.. ஹாம்லெஸ்.. சும்மா பிரண்ட்ஸ் ஐ இம்ப்ரஸ் பண்ண சொல்றது… இட்ஸ் அ வயிட் லை. யாருக்கும் இதனால பாதிப்பே இல்லை.

அம்மா : அப்படி இல்லப்பா.. பொய்ல வயிட் லை, பிளாக் லைன்னு ஏதும் இல்லை. அதெல்லாம் தவறான போதனை. பொய் ந்னா பொய். அது சாத்தானோட விஷயம்.. அவ்ளோ தான். 

ரயன் : அம்மா.. ஒரு சின்ன பொய்… ஜஸ்ட் ஒன் லை… 

அம்மா : ஆதியில பாம்பு சொன்னது ஒரு சின்ன பொய் தான். பாவம் பூமி முழுசும் நிறைஞ்சுடுச்சா. இல்லையா ? அனனியா சப்பிரா எத்தனை பொய் சொன்னாங்க ? ஒரே ஒரு பொய்.. உயிரு போயிடுச்சா இல்லையா ?  ஒரு துளி விஷம் போதும்பா ஒரு டம்ப்ளர் பாலை முழுசும் விஷமாக்க. இதெல்லாம் பாவம். நமக்கு வேலை வேணும்ன்னு சொர்க்கத்தை இழந்திடக் கூடாது. 

ரயன் : இந்த காலத்துல அதெல்லாம் கஷ்டம்மா

அம்மா : கஷ்டமான விஷயத்தை தான் கடவுள் நமக்கு ஈசியா மாத்தி தருவாரு. அவரை நம்பினா போதும். உனக்கு என்ன கிடைக்கணும்ன்னு கடவுள் நினைக்கிறாரோ, அது உனக்குக் கிடைக்கும். எது கிடைக்கக் கூடாதுன்னு இருக்கோ அது கிடைக்காது. நாம குறுக்கு வழியில போய் எதையும் பறிக்க நினைக்கக் கூடாது சரியா

ரயன் : ம்ம்.. சரிம்மா.. அப்போ நானும் அவர் கிட்டே போன் பண்ணி வேண்டாம்ன்னு சொல்லிடறேன்.

அம்மா : கண்டிப்பா.. அதெல்லாம் நமக்கு வேண்டாம். நேர்மையா கடவுள் நமக்கு எதைத் தராரோ அது போதும். உள்ளதை உள்ளதுன்னும், அல்லதை அல்லதுன்னும் சொல்லிப் பழகணும் சரியா….

ரயம் : சரிம்மா…

* 

Posted in Articles, Vettimani

நன்றியுணர்வு நலிந்து போகிறதா ?

நன்றியுணர்வு நலிந்து போகிறதா ?

*

அந்த நிறுவனத்தின் ஹைச்.ஆர் அலுவலகத்தில் அமைதியாய் உட்கார்ந்திருந்தார் குருமூர்த்தி. அவரது கண்களில் திட்டுத் திட்டாய்த் துயரம் அமர்ந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் அணைஉடைக்கக் காத்திருந்தது கண்ணீர்.  அலுவலகத்தில் அரசல் புரசலாய்க் கேட்ட ஒரு செய்தி நிஜமென்றாகிவிட்டது. வாழ்வின் விளிம்பில், கைப்பிடியற்ற மலை முகட்டில் உட்கார்ந்திருக்கும் அவஸ்தை அவருக்கு. சலனமேயில்லாத விழிகளுடன் ஹைச்.ஆர் தலைவர் பேசினார். 

“வெரி சாரி…. ஆபீஸ்ல 50 வயசுக்கு மேல இருக்கிறவங்களை ரிலீஸ் பண்ண சொல்லிட்டாங்க… நீங்களும் அந்த லிஸ்ட்ல வரீங்க… நீங்க உடனே ரிசைன் பண்ணிடுங்க, சாயங்காலமே உங்களை ரிலீஸ் பண்ணிடறோம்”

“என்ன சார்… இருபது வருஷமா இந்த ஆபீஸ்ல வேலை செய்யறேன். இந்த அலுவலகத்தோட ஒவ்வொரு வளர்ச்சியை நீங்க தொட்டுப் பாத்தாலும் என்னோட உழைப்போட இரத்தத் துளிகள் இருக்கும். இந்த அலுவலகத்தின் முன்னேற்றத்தோட எல்லா பாதைகளிலும் என்னோட வியர்வைத் துளிகள் ஈரம் காயாம இருக்கும். இப்படி சட்டுன்னு கிளம்புன்னு சொல்றீங்களே.. நியாயமா இருக்கா ?”

“உங்க கஷ்டம் புரியுது… பட். எங்களால ஒண்ணும் பண்ண முடியல. இது எம்.டியோட டிசிஷன். நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. வி ஆர் ஹெல்ப்லெஸ்”

“ உங்க கஷ்டம் புரியுதுன்னு – சொல்ற யாருக்குமே எங்க கஷ்டம் புரியாது சார்…. உங்களால ஏதும் பண்ண முடியாதுன்னா ஏன் சார் ஹைச்.ஆர் ந்னு இருக்கீங்க ? மக்களோட குறைகளைத் தீர்க்கிறது தானே உங்க வேலை… மக்களுக்காக பேச மாட்டீங்களா “

“சீ… நிறுவனம் மோசமான நிலையில போயிட்டிருக்கிறது உங்களுக்கே தெரியும்…” ஹைச் ஆர் சொல்லி முடிக்கும் முன் குருமூர்த்தி இடைமறித்தார். 

“லாபம் குறைஞ்சிருக்குன்னு சொல்லுங்க. லாபம் டபுள் ஆனப்போ எங்க சம்பளம் டபுள் ஆகல. லாபம் பாதியானப்போ மட்டும் ஊழியர்கள் பாதியாகணுமா.. எங்க சார் போச்சு உங்க நன்றியுணர்வு ? “

“உங்க லெக்சரைக் கேக்க நேரமில்லை. இன்னிக்கு நீங்க ரிசைன் பண்ணினா உங்களுக்குக் கிடைக்க வேண்டிய செட்டில்மெண்ட் பணம் கிடைக்கும். இல்லேன்னா, டெர்மினேட் பண்ணிடுவோம். எதுவும் கிடைக்காது. . முடிவெடுக்க வேண்டியது நீங்க தான்” 

“நன்றியுணர்வு மட்டுமில்ல, மனிதாபிமானமும் கூட காணாம போயிடுச்சுன்னு தெரியுது. “

“ஐம் சாரி… என்னோட வேலையை நான் பண்ணிட்டிருக்கேன். இவ்ளோ வருஷம் கம்பெனி உங்களுக்கு சம்பளம் தந்து பாதுகாத்ததுக்கு நன்றி சொல்லிட்டு கிளம்புங்க” ஹைச் ஆர் சற்றும் உணர்ச்சியற்ற வெறுப்பின் தொனியில் சொல்ல குருமூர்த்தி எழுந்தார். தனது அறைக்குச் சென்று ராஜினமா ஃபார்மை நிரப்பத் துவங்கினார். கலங்கிய அவரது விழிநீரில் இரண்டு பிள்ளைகளின் படிப்பும் எதிர்காலமும் ஈரமாகிக் கொண்டிருந்தது. 

நன்றியுணர்வு என்பது இலாபம் கொடுக்கும் வரை பிந்தொடரும் நாயாக மாறிவிட்டது. அதன் முகங்களில் போலித்தனத்தின் எச்சில் வடிந்து கொண்டிருக்கிறது. நன்றியுணர்வு கெட்ட முதலாளித்துவ சமூகம், நன்றியுணர்வற்ற சமூகத்தையே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. 

கடந்த தலைமுறையின் வீதிகளில் நடந்து, இந்தத் தலைமுறையின் செயல்பாடுகளைக் கவனிப்பவர்களுக்கு இந்த நன்றியுணர்வின் வீழ்ச்சி மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும். காரணம், நன்றியுணர்வு பழைய காலத்தில் அத்தனை வலுவாக இருந்தது. இன்றைக்கு கை தவறி விழுந்த மண்பானையாய் உடைந்து கிடக்கிறது. 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு – என்பதே பழைய கால விதியாக இருந்தது. அது ஒவ்வொரு சின்னச் சின்ன செயல்பாடுகளிலும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இருந்தது. உதாரணமாக, இயலாமையில் கை கொடுத்தவர்களை பயன் பெற்றவர்கள் கடைசி மூச்சு உள்ளவரை மறக்காமல் இருந்தார்கள்.

“அவன் ஒருகாலத்துல கைதூக்கி விடாம இருந்திருந்தா….” என மிகப் பெரிய உயரத்துக்குச் சென்றபின்பும் மக்கள் நன்றி பாராட்டினார்கள். இன்றைக்கு அது நீர்த்துப் போய்விட்டது என்பதில் சந்தேகமேயில்லை. 

இப்போதெல்லாம் ஒரு செயலுக்கான நன்றியுணர்வு என்பது பூவில் விழுந்த பனித்துளியைப் போல சிறிது காலமே தங்கி நிற்கிறது. நாட்களில் வெயிலில் அது ஆவியாகிவிடுகிறது. 

அப்பாவின் முன்னால் கைகட்டி நின்று, “ஐயா.. என்றழைத்த காலங்கள் உண்டு” அதெல்லாம் பழைய கதை. “அப்படி… என்னத்த பெருசா செஞ்சுட்டீங்க…” என பெற்றோரைப் பார்த்தே எதிர்த்துக் கேள்வி கேட்கும் தலைமுறை சகஜமாகிவிட்டது. நன்றியுணர்வு குடும்பங்களிலேயே ஆவியாகிக் கொண்டிருக்கிறது.

நன்றியுணர்வுக்கு அடிப்படையான தேவை, நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் எனும் உணர்வு தான். இந்த இயற்கையினால், இந்த பிரபஞ்சத்தினால், இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளியால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் எனும் உணர்வு இருந்தால் நமக்கு நன்றியுணர்வு ஆழியாய் பெருகும் என்பதில் சந்தேகமில்லை. 

இயேசுவின் வாழ்க்கையில் ஒரு கதை உண்டு. ஒரு முறை பத்து தொழுநோயாளிகளுக்கு அவர் நலமளித்தார். தொழுநோயாளிகள் சமூகத்தில் விலக்கி வைக்கப்பட்ட காலகட்டம் அது. அவர்கள் ஊருக்குள் நுழைய முடியாது. எந்த நிகழ்விலும் கலந்து கொள்ள முடியாது. ஊர்ப்பக்கம் வரவேண்டுமெனில் “தீட்டு தீட்டு “ என கத்திக் கொண்டே வரவேண்டும். ஒரு நீண்ட குச்சியின் நுனியில் ஒரு குடுவையைக் கட்டி சுமந்து வருவார்கள். தண்ணீர் வேண்டுமெனில் ஏதேனும் வீட்டில் அருகே தொலைவில் நின்று கொண்டே அந்தக் குச்சியை நீட்டுவார்கள். வீட்டிலுள்ளவர்கள் அதை தப்பித் தவறியும் தொட்டு விடாத அதீத கவனத்துடன், அதற்கான பழைய பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு அதில் ஊற்றுவார்கள். 

அத்தகைய சமூக இடைவெளி அன்று நிலவியது. இயேசு அந்த சூழலில் தொலைவிலிருந்து கதறிய பத்து தொழுநோயாளிகளுக்கு நலமளித்தார். நலமடைந்ததை அறிந்த அந்தப் பத்து பேரில் ஒரே ஒருவர் மட்டும் இயேசுவைத் தேடி வந்து நன்றி சொல்லி தாழ்பணிந்தார். இயேசு கேட்டார், “என்னாச்சு பத்து பேருக்கும் சுகம் கிடைக்கலையா ? மற்ற ஒன்பது பேர் எங்கே ?”. பெற்றதற்கு நன்றி சொல்பவர்கள் இறைவனின் பிரியத்துக்குரியவர்களாகிறார்கள். காரணம், நன்றியுடையவர்களாய் இருப்பவர்கள், தாங்கள் கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறோம் எனும் உணர்வைக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தான் உண்மையான ஆன்மீகவாதிகள், தங்களுடைய ஒவ்வொரு நாளுக்காகவும், ஒவ்வொரு நிமிடத்திற்காகவும், ஒவ்வொரு செயலுக்காகவும், ஒவ்வொரு உணவுக்காகவும், ஒவ்வொரு சின்னச் சின்ன நிகழ்வுக்காகவும் கூட கடவுளுக்கு நன்றி செலுத்துவார்கள். காரணம் எல்லாமே கடவுளின் அருள் எனும் புரிதல் தான். 

எல்லாம் தன்னால் நிகழ்கின்றன எனும் மனநிலையும். எல்லாம் தனக்கே கிடைக்கவேண்டும் எனும் சுயநலமும் உள்ளவர்கள் எக்காலத்திலும் நன்றி உணர்வு உடையவர்களாய் வாழவே முடியாது. 

மகிழ்ச்சியாய் இருக்கும் போது நன்றி சொல்வது சாதாரண விஷயம். நன்றி சொல்வதால் மகிழ்ச்சியாய் இருப்பதே உயர்ந்த நிலை. உண்மையில் நமக்கு கிடைக்கின்ற பொருட்களை விட அதிகமாய் கிடைக்காத பொருளுக்கு நன்றி சொல்பவர்களாக இருக்க வேண்டும். அதனால் தான் நண்பனுக்கு மட்டுமல்ல, எதிரிக்கும் நன்றி சொல் என்பார்கள். நமது வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

நன்றியுணர்வை வெளிப்படுத்தும் போது நமது மனம் இலேசாகிறது. ஒரு மரம் தனது கனிகளை வேர்களுக்குள்ளே ஒளித்து வைத்திருந்தால் என்ன பயன். அதை பிறருக்குத் தெரியும்படி கிளைகளில் பதித்து வைக்கும்போது தானே பயனுடையதாகிறது. அப்படித் தான் நன்றியுணர்வும், வார்த்தைகளாலும் செயல்களாலும் வெளிப்படுத்தப்பட வேண்டும். வெளிப்படாத நீரூற்றும், வெளிப்படுத்தப்படாத நன்றியுணர்வும் பிறருக்குப் பயனற்றுப் போகும். 

நம்மைச் சுற்றிப் பார்ப்போம். நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எத்தனையோ பேர் நமக்கு உதவி செய்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்கிறோமா ? நமக்கு ஒரு காபி போட்டுத் தரும் வேலைக்கார அம்மா. நம்மை ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்லும் டிரைவர் அண்ணா, நமக்கு பொருட்களை எடுத்துத் தரும் ஒரு விற்பனைப் பிரதிநிதி, நம்ம தெருவில் குப்பையை அள்ளும் ஒரு கார்ப்பரேஷன் பணியாளர். இப்படி நாம் நன்றி சொல்ல வேண்டிய நபர்கள் எத்தனை எத்தனையோ.

புன்னைகை ஒரு தொற்று வியாதி என்பார்கள். ஒருவருக்குக் கொடுக்க, அதை அவர் பெற்றுக் கொண்டு அடுத்தவருக்குக் கொடுக்க, இப்படி கொரோனா போல பற்றிப் படரும் ஒரு விஷயம் தான் புன்னகை. நன்றியும் அது போல தான். நாம் நன்றியைச் சொல்லச் சொல்ல அது அடுத்தடுத்த நபர்களுக்கு சென்று கொண்டே இருக்கும். நன்றி சொல்தல் ஒருவித நேர் சிந்தனையை நமக்குள் ஊட்டும். வாழ்க்கையில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறது என நமக்கே ஒரு புத்துணர்ச்சியை அது தரும். 

நன்றியுணர்வோடு இருப்பவர்களுக்கு நோய் குறைவாக இருக்கும், ஆரோக்கியம் வலிமையாக இருக்கும் என்பது மருத்துவக் கணக்கு. நன்றியுணர்வு உடையவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பார்கள் என்பது உளவியல் கணக்கு. நன்றியுணர்வு வெறும் உணர்வல்ல, நம் உடலோடும் மனதோடும் பின்னிப் பிணைந்தது என்பதை இதன் மூலம் புரிது கொள்ளலாம். நம்முடைய ஆனந்தத்திற்கு இது அடிப்படையாய் மாறிவிடுகிறது.

நன்றியுணர்வு நட்பைச் சம்பாதித்துத் தரும். இருக்கின்ற உறவுகளை வலுவாகும். வாழ்க்கை என்பது எதையெல்லாம் சேர்க்கிறோம் என்பதல்ல, உறவுகளோடு சேர்கிறோம் என்பதில் தான் அமைகிறது. மக்களோடு இணைந்து வாழ்கின்ற மிகப்பெரிய வலிமையை நன்றியுணர்வு தருகிறது. 

செஞ்சோற்றுக் கடனுக்காக வாழ்ந்த கர்ணனின் கதை முதல், நமது சமூக வீதிகளில் உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கின்ற கதைகள் வரை நமக்குச் சொல்வதெல்லாம் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டும் என்பதே. நன்றியுணர்வு நலிந்து போகிறதே என அழுவதல்ல, அதை வலுப்படுத்த எழுவதே இன்றைய தேவை. அதை நம்மிடமிருந்து, நம்முடைய குடும்பத்திலிருந்து துவங்குவோம். 

இந்தக் கட்டுரையைப் பிரசுரித்த பேரன்புக்குரிய என்னுயிர்த் தந்தைக்கும், பொறுமையுடன் வாசித்த உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கூறி நன்றிப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன். தொடர்வோம்.

*

சேவியர். 

Posted in Christianity, Desopakari, Vettimani

Vettimani : பாலனின் பிறப்பும் வாழ்வின் சிறப்பும்

Image result for Child Jesus

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள் !

ஒருவர் பிறந்து சில ஆண்டுகள் கடந்தாலே பாலன் எனும் அடைமொழியை நாம் விலக்கி விடுவது இயல்பு. ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பிறந்த ஒருவரை இன்னும் நாம் “பாலன்” என்று அழைக்கிறோம். குழந்தை இயேசு என கொஞ்சுகிறோம். புல்லணையின் பாலனே என பாடுகிறோம். குடிலில் உதித்த குழந்தையே என்கிறோம். மானுடனாய் வந்த மழலையே என வியக்கிறோம். அது தான் இயேசுவின் சிறப்பு. அது தான் கிறிஸ்மஸின் இருப்பு.

எத்தனையோ தத்துவ ஞானிகள் மழலையராய் பிறந்து, மானிடராய் வளர்ந்து விட்டனர். இயேசு இன்னும் அந்த மழலை அடையாளத்துடன் கிறிஸ்மஸ் தினத்தில் நம்மோடு உறவாடுகிறார். காரணம் குழந்தையின் இயல்புகளை நாம் விட்டு விடக் கூடாது என்பதை நினைவூட்டுவதற்காக. குழந்தைகளைப் போல கள்ளம் கபடம் இல்லாதவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதற்காக.

“நீங்கள் சிறு பிள்ளையைப் போல மாறாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது” என்றார் இயேசு. மழலைகளின் மனதைப் பெறாமல் சுவர்க்க வாழ்க்கை என்பது சாத்தியமில்லை என்பது தான் மழலை இயேசு நமக்கு நினைவூட்டுகின்ற முக்கியமான செய்தி.

“குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்க வேண்டாம்” என ஒருமுறை சீடர்களிடம் கண்டிப்பாய்ச் சொன்னார். சிறுவர்களோடு விளையாடுவதால் இயேசுவின் நேரம் வீணாகும் என சீடர்கள் நினைத்தார்கள். சிறுவர்களோடு உறவாடுவது முக்கியமற்றது என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் இயேசுவோ, சிறுவர்களை அரவணைத்தார். அவர்களோடு அளவளாவுவதே ஆனந்தம் என்றார்.

குழந்தைகளை அவர்களுடைய இயல்பில் வளரவிடவேண்டும். அவர்கள் இயேசுவிடம் வரவேண்டும், இயேசுவில் வளரவேண்டும். அவர்களைத் தீமையை நோக்கி நடத்திச் செல்பவர்கள் அழிவார்கள். அத்தகைய பாவிகள் மீது இயேசுவின் கோபம் மிகப்பெரிய எரி சாட்டையாய் நெருப்பைக் கக்கியபடி ஆவேசமாய்ப் பாய்ந்து வருகிறது.

“என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது” என்கிறார் இயேசு. சிறுவர்களை தவறான வழியில் நடத்துவதை விட செத்துப் போவது நல்லது என்பது தான் அதன் எளிமையான அர்த்தம். அத்தகைய மனிதர்கள் வாழவே தகுதியற்றவர்கள் என்கிறது இயேசுவின் வார்த்தை.

சிறுபிள்ளைகளை நல்ல வழியில் நடத்த வேண்டும். அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் சமூகத்தில் ஆதரவற்றவர்களாக, அனாதைகளாக திரிய வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் இந்த தொழில்நுட்பத்தின் அரக்கக் கரங்களில் அழிய வேண்டியவர்கள் அல்ல. அவர்களை நாம் அரவணைக்க வேண்டும். அவர்களை அன்பினால் நிரப்ப வேண்டும். அதுவே இறைவனுக்கு ஏற்புடைய செயல். இதை நான் சொல்லவில்லை, இயேசுவே சொல்கிறார்.

“சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்” எனும் அவரது வார்த்தை சிறுவர்களை ஏற்றுக் கொள்வதன் தேவையை விளக்குகிறது. அவர்களை இறைவனின் வழியில் நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கிறது.

குழந்தைகள் எந்த வழியில் வேண்டுமானாலும் நடப்பார்கள், அவர்களை வழிநடத்துபவர்களின் கரங்களில் அது இருக்கிறது. அவர்கள் களிமண் போன்றவர்கள்.எப்படி அவர்கள் உருவாகிறார்கள் என்பது குயவனின் கைகளில் தான் இருக்கிறது. அவர்கள் எப்படி வார்க்கப்படுகிறார்கள் என்பது குயவனின் இதயத்தில் இருக்கிறது. குழந்தைகள் தங்களை குயவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். குழந்தைகள் தங்களை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கிறார்கள். குழந்தைகள் தங்களை பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள். காரணம், அவர்களிடம் தங்களை முழுமையாய் ஒப்படைக்கும் தாழ்மை இருக்கிறது.

“சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்” என்றார் இயேசு. பெரியவர் என்பவர் அனுபவத்தை அதிகம் சேர்த்தவர் அல்ல. பெரியவர் என்பவர் அறிவை மூட்டை மூட்டையாய் தூக்கிச் சுமப்பவரல்ல. பெரியவர் என்பவர் வயதின் நரையை முதுமையின் முகவுரையோடு சுமந்து திரிபவரும் அல்ல. அவையெல்லாம் மண்ணுலக அடையாளங்கள். அவையெல்லாம் மண்ணுலக ஒப்பீடுகள். ஆனால் விண்ணுலகில் பெரியவராக வேண்டுமெனில் அதற்குரிய தகுதி ஒன்றே ஒன்று தான். தன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு சிறு பிள்ளையைப் போல தன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத் தாழ்த்திக் கொள்பவர்கள் மட்டுமே தம்மை இறைவனிடம் தங்களை முழுமையாய்க் கையளிக்க முடியும்.

சிறுவர்களை இழிவாகக் கருதும் சமூகத்தின் மீதும், சிறுவர்கள் மீது பாலியல் வன்முறை போன்றவற்றை நிகழ்த்தும் தலைமுறை மீதும் இயேசுவின் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

“இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்” என்கிறார் இயேசு. குழந்தைகளுக்கு எதிராக நாம் செயல்படும் போது அவர்களுடைய வானதூதர்கள் கடவுளிடம் அவர்களுக்காய் பரிந்து பேசுகிறார்கள். அவர்களுடைய பரிந்து பேசுதல் குழந்தைகளை இழிவாய் நடத்துவோருக்கு, அழிவைக் கொண்டு வரும் என்பது சர்வ நிச்சயம்.

சிறுவர்கள் இந்த உலகில் முக்கியத்துவமற்றவர்களாக இருக்கலாம். ஆனால், இறைவன் பார்வையில் அவர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் கூட வழி விலகிச் செல்லக் கூடாது எனும் ஆசை இயேசுவிடமும், அவரை அனுப்பிய விண்ணகத் தந்தையிடமும் இருக்கிறது.

“இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்” என்கிறார் இயேசு.

இப்படி, இயேசு பாலனாய் பிறந்து இத்தனை நூற்றாண்டுகள் தாண்டியும் ஏன் அவரைப் பாலனாகவே பார்க்கிறோம் என்பதன் விடை அவருடைய சிந்தனைகளின் வழியாகவே நமக்கு விளங்குகிறது. கிறிஸ்மஸ் நமக்குச் சொல்வது அழகிய நட்சத்திரங்களைக் கட்டுவதோ, வண்ணக் குடில்கள் அமைப்பதோ, உயரமான கிறிஸ்மஸ் மரங்கள் நாட்டுவதோ அல்ல. குழந்தைகளைப் போல மாறுங்கள் என்பதே.

பாலன் இயேசுவின் பிறப்பு, வாழ்வின் சிறப்பாக மாற வேண்டுமெனில், நாம் பாலர்களாக மாறவேண்டும். நம் இதயத்திலிருந்து தீய சிந்தனைகளை அறுத்தெறிய வேண்டும். பாலகர்களின் குணமான கள்ளம் கபடமின்மை, தாழ்மை, மனித நேயம், அன்பு, மன்னித்து மறக்கும் குணம் போன்றவற்றை இதயத்துக்குள் நிரப்ப வேண்டும். அதுவே உண்மையான கிறிஸ்மஸ்.

இயேசு பாலனாய் பிறந்து விட்டார், நாம் எப்போது ?

*
சேவியர்

Posted in Articles, Christianity, Vettimani

கடவுள் பக்தன் உறவு

“ஏதாச்சும் தேவை இருந்தா மட்டும் தான் அவன் நம்மளத் தேடி வருவான்” என சிலரைப் பற்றிச் சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட நபர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். சுயநலவாதிகளாய் இவர்கள் சித்தரிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட ஆட்களைப் பார்த்தாலே காத தூரம் ஓடிவிடுவோம். காரணம் அவர்களுடைய மனதில் உண்மையான அன்பு இருப்பதில்லை. தேவைக்காக நாடிச் செல்கின்ற ஒரு சந்தர்ப்ப உறவு மட்டுமே இருக்கும்.

“அட.. நான் அப்படியில்லப்பா.. தேவைக்காக மட்டும் ஒருத்தனை நாடிப் போறதே இல்லை” என சொல்லப் போகிறீர்களா ? ஒரு நிமிடம் பொறுங்கள். மனிதர்களிடம் அப்படி. உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கிறது ?

அவசர கதியில் வீடு, வேலை வாழ்க்கை என ஓடிக்கொண்டே இருக்கும் போது நாம் மறந்து போகின்ற முதல் நபர் கடவுள் தான். சட்டென ஒரு நோய் வந்து படுக்கையில் விழும்போது தான் “ ஆண்டவா” என மனம் அழைக்கும். அதுவரை அந்த ஆண்டவர் ஒரு வேண்டா விருந்தாளியாய் தான் இருப்பார்.

உக்காந்து கடவுளை நினைக்கவே நேரமில்லைன்னு சொல்லிட்டு இருப்பார்கள். அலுவலக வேலையாக ஊர் ஊராக அலைந்து திரிவார்கள். கடவுள் விஷயங்களையோ பிரார்த்தனைகளையோ கண்டுக்கவே மாட்டார்கள். கேட்டால், அதுக்கெல்லாம் எங்கே டைமிருக்கு என சொல்வார்கள். ஒரு நாள் திடீரென மகனோ மகளோ ஒரு பெரிய நோயில் சிக்கிக் கொண்டால், அனைத்தையும் விட்டு விட்டு குழந்தையே கதியென கிடப்பார்கள். கோயில் கோயிலாக வழிபட தொடங்குவார்கள்.

நேற்று வரை இல்லாத டைம் இன்றைக்கு எப்படிக் கிடைத்தது ? நேற்று வரை இல்லாத கடவுள் சிந்தனை இன்று எப்படி வந்தது. ஒரு நாள் 24 நான்கு மணி நேரம் என்பது மாறி 48 மணி நேரமாச்சா என்ன ? இல்லை. பின் எப்படி ? அங்கே தான் வாழ்வின் முதன்மைகள் வந்து முகம் காட்டுகின்றன.

உண்மையில் நமக்கு நேரமில்லை தான். ஆனால் எவையெல்லாம் முக்கியம் என கருதுகிறோமோ அவற்றுக்கு ஒதுக்க நமக்கு நேரம் நிச்சயம் இருக்கிறது. குழந்தையின் உடல்நிலை முக்கியம் எனத் தோன்றும் போது மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைக்கிறோம். அதே போல, கடவுள் முக்கியம் என தோன்றினால் நமக்கு கடவுளோடு உறவாடவும், உரையாடவும் நேரம் கிடைக்கும்.

கடவுள் நம்முடைய தந்தையைப் போல இருக்கிறார். நம் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். ஒரு தந்தை எப்போது மகிழ்ச்சியடைவார் ? நமது பணம் அவர் கைக்குப் போகும் போதா ? நமது தேவைக்கு அவரை பார்த்துப் பேசும் போதா ? நம்முடைய இயலாமையின் நேரத்தில் அவரைத் திட்டும் போதா ? இல்லை. எந்த தேவைகளும் இல்லாமல் அவரை சந்திக்கும் போது தான்.

“என்னப்பா.. இந்த நேரத்துல கால் பண்ணியிருக்கே.. என்னாச்சு ? “ என அப்பா பதட்டமாய்க் கேட்கும் போது, “இல்லப்பா.. உங்க ஞாபகம் வந்துச்சு.. பேசணும்போல தோணுச்சு.. அதான் பேசினேன்” என சொல்லிப் பாருங்கள். அது தான் ஒரு தந்தையின் மனதை நிச்சயம் நெகிழச் செய்யும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெற்றோருடன் தொடர்பில் இருப்பது தான் அவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.

“என் பையன் டெய்லி ஒருதடவையாச்சும் என்கிட்டே பேசிடுவான்” என பெருமிதத்தோடு பேசும் பாட்டிகளைப் பார்த்திருக்கிறேன். இந்த வயதிலும் தன்னிடம் தினமும் மகன் பேசுகிறானே என்பது தான் அவர்களுக்கு அதிகபட்ச ஆனந்தமாய் இருக்கிறது.

கடவுளும் அப்படிப்பட்ட ஒரு நட்புறவைத் தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார். நமது தேவைக்காய் நச்சரிக்கும் போதல்ல, தேவைப்படாத போதும் அவர் பெயரை உச்சரிக்கும் போது தான் அவர் மகிழ்கிறார். “சும்மா உன்னைப் பாக்க வந்தேன்” எனும் ஸ்நேகத்தை அவர் ரசிக்கிறார்.

சில வீடுகளில் ரொம்ப முதிய வயதினர் இருப்பார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனாலும் பிள்ளைகள் அவரிடம் வந்து அனுமதி கேட்பார்கள். “அப்பா நான் இதைச் செய்யவா ? அதைச் செய்யவா ? ” என்று. தந்தைக்கு எதுவும் புரியாவிட்டால் கூட, “அப்படியே செய்ப்பா..” என்பார்கள். தன்னிடம் வந்து மகன் அனுமதி கேட்கிறானே எனும் நிறைவு அவர்களிடம் இருக்கும். சுயமாய் முடிவெடுக்கும் நிலைக்கு வந்தபின்பும் கூட தந்தையைச் சார்ந்து இருப்பதில் இருக்கின்ற புனிதமான உறவு தான், இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும். எதைச் செய்யும் முன்னும், “இப்படிச் செய்யவா ? “என கடவுளிடம் கேட்பது எவ்வளவு இனிமையானது ?

கடவுளோடு நமக்குள்ள உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கு தொடர்ந்த உரையாடல்கள் கடவுளோடு செய்ய வேண்டியது அவசியம். இறைவனோடான உறவின் வெளிப்பாடு, சக மனிதனோடான மனிதாபிமான செயல்களில் வெளிப்பட வேண்டும்.

இறைவனுக்கும் நமக்குமிடையேயான தொடர்பு வலுவாக இருக்கும் போது, நாம் சோதனைகளை கடக்கின்ற வலிமை கிடைக்கின்றது. சிங்கத்தின் மேல் இருக்கின்ற சிற்றெறும்பு வழியில் எதிர்படுகின்ற சுண்டெலிகளைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. சுண்டெலி வரும்போதல்ல, எப்போதுமே சிங்கத்தின் முதுகில் இருப்பதே உண்மையான அன்பு.

கடவுளோடு எப்போதும் தொடர்பில் இருந்தால் தான் கடவுள் விரும்புவது என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தந்தையோடு இணைந்தே இருக்கின்ற மகனிடம் தான் தந்தையின் இயல்புகள் இழையோடும். அவனிடம் தான் தந்தையின் சிந்தனைகள் பதியமிடப்படும். இறைவனின் இயல்புகளும், இறைவனின் விருப்பங்களும் நமது வாழ்விலும் வெளிப்பட நாம் கடவுளோடு தொடர்பில் இருக்க வேண்டும்.

அதற்கு முதலில் கடவுளுக்கும் நமக்கும் இடையே மதில் சுவர் போல இருக்கின்ற விஷயங்களை விலக்க வேண்டும். அப்போது தான் கடவுளோடான தொடர்பு நமக்கு எப்போதும் இருக்கும். அந்த தடைகள் உலக கேளிக்கைகளாகவோ, தொழில்நுட்பங்களாகவோ, தீய சக்திகளாகவோ, தீய சிந்தனைகளாகவோ, சுயநலமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

கடவுளுக்கும் நமக்குமிடையே உள்ள உறவை வலுவாக்குகின்ற நண்பர்களை நம்முடன் வைத்திருக்க வேண்டும். அவர்கள் நமது ஆன்மீக பாலத்தை வலிமையாகக் கட்டியெழுப்புவார்கள். நமது நண்பர்கள் நம்மை நன்மையின் வழியில் நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.

எதிர்பாராத நேரத்தில் மனைவிக்கு அளிக்கின்ற பரிசு குடும்ப உறவைக் கட்டியெழுப்பும். எதிர்பாராத நேரத்தில் தந்தையோடு செலவிடுகின்ற சில மணித் துளிகள் புனித உறவைக் கட்டியெழுப்பும். தேவைகளற்ற போதும் தாயின் கரம் பிடித்து அமர்ந்திருக்கும் பொழுதுகள் இறை பிரசன்னத்தை உருவாக்கம் செய்யும்.

அதே போல தான், நம்மைப் படைத்துக் காக்கின்ற இறைவனின் அருகாமையில் அன்புடன் அமரும் தருணங்கள் ஆன்மிக உறவைக் கட்டியெழுப்பும். இறைவனின் அருகில் அமர்வது என்பது, இறைவனுக்குப் பிரியமானவற்றைச் செய்வதே. இறைவனுக்குப் பிரியமானது என்பது மனிதநேயத்தின் உயர்நிலையே. எப்போதும் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்கள், கண நேரமும் பிரியாமல் இறைவனோடு இருக்கிறார்கள்.

நமது தேவைகளை இறைவன் நிறைவேற்றுகிறார். நாம் இறைவனின் பிள்ளைகளாய் இருந்தால் மட்டும் போதுமானது.
*

சேவியர்
Thank you : Siva Thamizh

Posted in Articles, Vettimani

ஏழைக்கு இரங்கலாமா ?

ஏழைகளுக்குச் செவிசாய்;
அவர்களுக்கு அமைதியாக,
கனிவோடு பதில் சொல்

சீராக் 4 : 8

Image result for Help poor

ஞாயிற்றுக்கிழமை ஆலயம் விட்டு வெளியே வரும்போதெல்லாம் அந்தப் பாட்டியை சந்திப்பேன். கனிந்த இதயங்கள் தரும் காசுக்காக கையேந்தி நிற்பார் அவர். கடந்த ஓரிரு வாரங்களாக அவரைக் காணவில்லை. மீண்டும் சந்தித்தபோது கேட்டேன்.

“என்னாச்சு… ரெண்டு மூணு வாரமா ஆளைக் காணோமே… எங்க போயிருந்தீங்க ?” என கேட்டேன்.

“என் பேரப்புள்ளையை வாரிக்குடுத்துட்டு வந்திருக்கேன்பா..” என்றவர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். அதிர்ச்சியாக இருந்தது. அமைதியாக கையேந்தி நின்ற அவருக்குள் இப்படி அணை உடையக் காத்திருக்கும் ஒரு பெரும்சோகம் இருக்கும் என்பதை நான் கணித்திருக்கவில்லை.

சற்று நேரம் நிகழ்ந்ததையெல்லாம் சொன்னார். எதிர்பாராத அந்த விபத்து எப்படி அந்த சின்னக் குடிசையை சின்னாபின்னமாக்கியது எனும் கதை மனதுக்குள் பாரமாய் வந்தமர்ந்தது.

நம்மைச் சுற்றிலும் இருக்கின்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பரிதாபத்துக்குரியது. அவர்களுக்கு நாம் பல நேரங்களில் பணம் கொடுக்கிறோம். சில உதவிகளைச் செய்கிறோம். கரிசனை காட்டுகிறோம். ஆனால் எந்த அளவுக்கு அவர்களை கனிவுடன் நடத்துகிறோம். எந்த அளவுக்கு அவர்களுடைய வலிகளுக்குச் செவி கொடுக்கிறோம் ? இது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

இறுக்கமான முகத்தோடு கொடுக்கின்ற நூறு ரூபாயை விடை, புன்னகையோடு கொடுக்கும் பத்து ரூபாய் பெரியது. அது விண்ணகத்தில் எழுதப்படும். வாங்கும் நபருடைய இதயத்திலும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பிறருக்கு உதவுதல் என்பது நமது பெருந்தன்மையல்ல, நமக்குக் கடவுள் தரும் வாய்ப்பு. பிறருக்கு கொடுப்பது என்பது நமது பெருமையல்ல, இறைவனுக்கு நாம் மகிமை செலுத்தக் கிடைக்கும் வாய்ப்பு.

நம் முன்னால் ஒரு போதகர் வந்தால் நமது புன்னகை சினிமாஸ்கோப் அளவுக்கு விரிகிறது. அழுக்கடைந்த ஒரு ஏழையக் கண்டால் அது வெற்றிலைக் கிழவியின் சுருக்குப் பைபோல சுருங்கி விடுகிறது. இருவரிடமும் இருப்பது இறைவனின் பிம்பம் எனும் உண்மை நமக்கு உறைப்பதில்லை. ஏழையை உதாசீனப்படுத்தும் கணத்தில் நாம் இறைவனை உதாசீனப்படுத்துகிறோம்.

“ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கினவரையே இகழுகிறார்; பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்” என்கிறது நீதிமொழிகள் 17:5.

இறுதித் தீர்வை நாளில் இறைவன் நம்மிடம் கேட்கும் கேள்வியின் சாரம்சம் ஒன்றே ஒன்று தான், “ஏழையை நிராகரித்ததன் மூலம் நீ என்னை நிராகரித்துவிட்டாய். எனவே உனக்கு விண்ணகத்தில் அனுமதி இல்லை”

ஏழைகளை நேசிப்போம், சக மனிதனாக, உறவாக. அதுவே இறைவனை பிரியப்படுத்தும்.

*