Posted in Articles, Christianity, WhatsApp

இயேசுவைப் போல…

இயேசுவளரவளரஞானத்திலும், உடல்வளர்ச்சியிலும்மிகுந்துகடவுளுக்கும்மனிதருக்கும்உகந்தவராய்வாழ்ந்துவந்தார்

( லூக்கா 2:52 )

*

நம்முடைய வாழ்க்கை கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையாய் அமைய வேண்டும் என்பது தான் கிறிஸ்தவப் போதனைகளின் அடிப்படை. அதற்காகத் தான் இயேசு பூமிக்கு வந்தார். ஒரு மனிதன் எப்படி இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை அவர் தனது வாழ்க்கை மூலமாக வாழ்ந்து காட்டினார். 

அவர் வளர வளர ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்தார் என்றும், கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார் என்றும் விவிலியம் சொல்கிறது. 

நாம் வளரும் போது எப்படி வளர வேண்டும் என்பதை இந்த வசனம் நமக்கு மிகத் தெளிவாக விளக்குகிறது. 

நான்கு நிலைகளில் நாம் வளரவேண்டும். 

  1. ஞானத்தில் வளரவேண்டும்
  2. உடல் வளர்ச்சியில் வளரவேண்டும்
  3. இறைவனுக்கு உகந்தவராய் வளரவேண்டும்
  4. மனிதருக்கு உகந்தவராய் வளரவேண்டும்.

ஞானத்தில் வளர்வது எப்படி ? இறைவனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்கிறது பைபிள். உலகக் கல்வி நமக்குத் தருவது அறிவு ! இறைவன் நமக்குத் தருவது ஞானம். அறிவை நாம் வாசிப்பதன் மூலமாகக் கற்றுக் கொள்ளலாம், ஞானத்தை நாம் நேசிப்பதன் மூலமாகத் தான் கற்றுக் கொள்ள முடியும். அதுவும் இறைவனை நேசிப்பதன் மூலமாகத் தான் கற்றுக் கொள்ள முடியும்.

இந்த வாலிப வயதில் நாம் இறைவனுக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழவேண்டும். இறைவனுக்குப் பயப்படுவது என்பது என்ன ? இறைவன் மிகப்பெரிய கொடுங்கோலராய் இருக்கிறார், அவரைப் பார்த்து நாம் பயந்து நடுங்க வேண்டும் என்பதல்ல.! இந்தப் பயப்படுதல், அவருக்கு முழுமையாய்ப் பணிந்திருப்பதைப் பேசுகிறது. 

எதையும் இறைவனிடம் அற்பணிப்பதைப் பேசுகிறது. நமது ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு சமர்ப்பிப்பதைப் பேசுகிறது. எப்படி ஒரு அடிமையானவன், அனைத்தையும் தன் தலைவனுக்குப் பயந்து செய்வானோ. எப்படி நல்ல பையன் தன் தந்தைக்குப் பயந்து அனைத்தையும் செய்வானோ, அதே போல நாம் இறைவனுக்குப் பயந்து அவரது போதனைகளின் படி நடக்க வேண்டும். இறைவனை மீறினால் நமக்குக் கிடைப்பது நிலையான நரகம் என்பதைப் புரிய வேண்டும். 

சாலமோனுக்கு. ஞானம் இருந்தது, அது தான் மக்களுக்கு நீதி வழங்கும் பணியில் அவரை சிறக்க வைத்தது. இயேசுவுக்கு  ஞானம் இருந்தது, அது தான் அவரை எல்லா சூழல்களையும் சிறப்பாய் எதிர்கொள்ள வைத்தது. நாம் முதலில் தேடவேண்டியது ஞானமே, அதற்காய் இறைவனில் சரணடைவோம்.

இரண்டாவது, உடல் வளர்ச்சியில் வளரவேண்டும். ஏன் உடல் வளர்ச்சியைப் பற்றி பைபிள் பேசுகிறது ? அது ஆன்ம வளர்ச்சியைத் தானே பேசவேண்டும் என பலர் நினைக்கலாம். நமது உடல் இறைவனின் ஆலயம் என்கிறது பைபிள். உடலை வலிமையாக, நேர்த்தியாக, தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை அது பேசுவதில் வியப்பில்லை. அதே போல, பைபிள் நமக்கான வாழ்வியல் நெறி, ஆன்மிக வழிகாட்டி. அது யதார்த்தங்களின் மீதே போதனைகளை அமைக்கிறது. 

நாம் நம்முடைய இளம் வயதில் எப்படி உடலைப் பாதுகாப்பது ? உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். உடலைக் கெடுக்கும் துரித உணவுகளுக்கு விடைகொடுப்போம். வீட்டில் அன்பாகச் சமைத்துத் தரும் உணவுகளை மட்டுமே உண்போம். தேவையான உடற்பயிற்சி நமது உடலையும் மனதையும் வலுவாக்கும். எனவே சரியான உடற்பயிற்சியைச் செய்வோம். 

நமது உடலை எந்த விதமான சிற்றின்பத் தேவைகளுக்காகவும் பாவத்தில் புரட்டாமல் இருப்போம். டிஜிடல் மோகத்தில் விழும்போதோ, போதை போன்றவற்றை அணுகும் போதோ நாம் உடலை அவமானப்படுத்துகிறோம். நம் உடலை நாம் களங்கப்படுத்தும் போது, கடவுளையே அவமானப்படுத்துகிறோம்.

மூன்றாவது, கடவுளுக்கு உகந்தவராய் வாழ்தல். நமது வாழ்க்கை கடவுளுக்குப் பிரியமானதாய் இருப்பதே கிறிஸ்தவ போதனைகளின் அடிநாதம். கடவுளுக்கு உகந்தவராய் வாழ்வது எப்படி ? மிக எளிது. ஒவ்வொரு செயலை நாம் செய்யும் போதும் “இயேசு இந்த செயலை செய்வாரா ?” “இயேசு இந்தச் செயலை இப்படித் தான் செய்வாரா ? என யோசித்து செய்ய வேண்டும். எந்த ஒரு சொல்லை பேசும் போதும், இயேசு இந்த வார்த்தையைப் பேசுவாரா என யோசிக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தைச் சிந்திக்கும் போதும், இயேசு இந்த விஷயத்தை இப்படித் தான் சிந்திப்பாரா என யோசிக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழும்போது நாம் கடவுளுக்கு உகந்தவராய் வாழ்கிறோம் என்று அர்த்தம். எப்போதும் கடவுளின் புகழைப் பாடுவதோ, அவரது பெயரை உச்சரிப்பதோ, வார்த்தைகளால் இயேசுவை அறிவிப்பதோ அவருக்குப் பிரியமான வாழ்க்கையல்ல. நமது சமூக வீதியில் ஏழை எளியவர்களுக்கு உதவும் போது, தேவையில் இருப்பவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் போது, நோயாளிகளின அருகில் அமர்ந்து அவர்களின் துயரக் கதைகளை அன்புடன் கேட்கும் போது – நாம் இறைவனுக்குப் பிரியமானவராய் வாழ்கிறோம் என்று பொருள். அப்படித் தான் இயேசு வாழ்ந்தார். 

நான்காவது, மனிதருக்கு உகந்தவராய் வாழ்தல். நாம் இறைவனுக்குப் பிரியமானவராய் வாழவேண்டுமெனில் மனிதருக்கு உகந்தவராய் வாழவேண்டியது அவசியம். இயேசுவே சொல்கிறார், கண்ணில் காணும் சகோதரனை நேசிக்காமல் கண்ணில் காணாத கடவுளை நேசிக்க முடியாது என்று. இளம் வயதினராகிய நாம் முதலில் பெற்றோருக்கு முழுமையாய் கீழ்ப்படிபவர்களாய் இருக்க வேண்டும். நம்மைச் சார்ந்திருப்போருக்கு நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும். சமூகத்தின் கட்டமைப்பைச் சிதைக்காதவர்களாக இருக்க வேண்டும். எங்கும் எல்லா இடங்களிலும் மனிதர்கள் நம்மை நேசிக்கும்படி வாழவேண்டும். 

இந்த நான்கு விஷயங்களும் இருந்தால், நமது வாழ்க்கை இறைவன் விரும்பிய வாழ்க்கையாய் அமையும். இயேசுவைப் போல வாழ வேண்டுமெனில், இயேசுவைப் போல வளரவேண்டியது அவசியம். 

இயேசுவைப் போல் வளர்வோம்

இயேசுவைப் போல் வாழ்வோம்

இயேசுவோடு வாழ்வோம் 

நன்றி. 

*

Posted in Articles, WhatsApp

மரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்

மரணஇருளின்பள்ளத்தாக்கு

ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்

*

நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத்தின் பயணமும், கடைசியில் வெற்றியின் பாடலாய் முடிவடையும். அது இவ்வுலகின் ஆயுளானாலும் சரி, விண்ணுலகின் இறைவனின் அருகாமையானாலும் சரி. 

இஸ்ரேலரின் வீடுகளை வாதை அணுகுவதில்லை, இறைமகனின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்ட கதவுகளுக்குள் கிருமிகளின் காலடி நுழைவதில்லை எனும் நம்பிக்கைகள் பல வேளைகளில் உடைந்து போகின்றன. இறைவனே அதை அனுமதிக்கிறார். அதீத கவனத்தோடு இருந்த போதும் கோவிட் ரகசியமாய் வந்துக் கதவைத் தட்டியது. ஒரு சின்னக் கிருமிக்குப் பயந்து சோதனை செய்யாமலேயே வாரங்கள் கழிந்தன. அச்சம் வந்து தைரியத்தின் அத்தனை சன்னல்களையும் சாத்தியபின், கடைசியில் அந்த நாள் வந்தது. நோயின் தாக்கம் அதிகரிக்க, கோவிட் பாசிடிவ் எனும் முடிவு வர, சி.டி ஸ்கேன் ஏகமாய் மூச்சுத் திணறி கதறியது. 

‘உடனடியாக அட்மிட் பண்ணுங்க, கொஞ்சம் கிரிட்டிக்கல்’ என்றார் கல்யாணி மருத்துவமனை டாக்டர். 

‘கிரிட்டிக்கலா ?” என்றேன் ?  வெளிக்காட்டாத அதிர்ச்சியுடன்“

ஆமா… 90ம்சதவீதம் நுரையீரல் பாதிப்பில் விழுந்திருக்கிறது. எப்படி இன்னும் உங்களுக்கு மூச்சுப் பிரச்சினை வரவில்லை என்பது தெரியவில்லை. பரவாயில்லை, ரிக்கவர் ஆயிடலாம்ன்னு நினைக்கிறேன். செபியுங்கள், அட்மிட் ஆயிடுங்கள்” உங்களுக்கு வயசு கைகொடுக்கும்ன்னு நினைக்கிறேன் என்றார் அவர். வானவர் கைகொடுத்தால் தான் வாழ்க்கை, வயது கைகொடுக்கப் போவதில்லை எனும் குரல் மனதுக்குள் அப்போதே ஒலித்தது.  

“ஓக்கே.. என்பதைத் தவிர எங்களிடம் வேறு பதில் இருக்கவில்லை”. தனிமையாக அந்த மருத்துவ மனைக்குள் நுழைந்த எங்களுக்கு அடுத்தடுத்த அரை மணி நேரத்தில் கிடைத்த அழைப்புகளும், உதவிகளும், செபங்களும், விசாரிப்புகளும் நிலைகுலைய வைத்தன. “நமக்கு யாருமே இல்லேன்னு நினைச்சேன்… எத்தனை பேரு ஹெல்ப்க்கு வராங்க ! எனும் மனைவியின் பொலபொலத்த கண்ணீரின் ஈரத்தில் ஐ.சி.யூவுக்குள் நுழைந்தேன்”. 

ஐ.சி,யூ என்பது தன்னம்பிக்கையின் கடைசி வேர்களைக் கூட கழற்றிக் கீழே போடும் இடம். ஒரு அழுக்கடைந்த கந்தையை படுக்கையில் புடட்டிப் போடும் தருணம் அது. உடலானது சுக்கு நூறாக உடைக்கப்பட்ட பயனற்றுக் கிடக்கும் பாண்டத்தைப் போல மாறுவது. “குயவனின் மட்கலம் சுக்குநூறாய் உடைந்து போவதுபோல் இருக்கும்; அடுப்பிலிருந்து நெருப்பு எடுப்பதற்கோ பள்ளத்திலிருந்து நீர் மொள்வதற்கோ உடைந்த துண்டுகளில் எதுவுமே உதவாது.” (ஏசாயா 30:14 ). அங்கே அடைபடுவதும், செங்கடலுக்குள் கால் வைப்பதும் ஒரே விஷயம் தான். நம்பிக்கையும், விசுவாசமும் மட்டுமே கரை சேர்க்கும். 

கூர்மையான ஊசிகளின் தொடர் குத்தல்களும், உடலெங்கும் இணைக்கப்பட்ட செயற்கை வயர்களும், கண்களுக்கு மேலே கண நேரமும் பீப் அடித்துக் கொண்டிருக்கு டிஜிடல் மானிடர்களும் எதுவுமே நமக்குச் சம்பந்தம் இல்லாதவை. பக்கத்து ரூமில் ஒருத்தரு போயிட்டாரு, ஐசியூல நேத்தைக்கு ரெண்டு காலி போன்ற செய்திகள் வராண்டாக்களின் படபடப்பை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தன. 

போதாக்குறைக்கு வாழ்க்கையிலேயே மிக எளிதான ஒரு வேலையான ‘மூச்சு விடுதல்’ , மிகப்பெரிய பணியாக மாறிப்போன அவஸ்தையை அங்கே தான் கண்டு கொள்ள முடிந்தது. தரையில் கால் வைத்தாலே அரைமணி நேரம் மூச்சுத் திணறும் அவஸ்தையில் கடவுள் மூச்சை மட்டுமல்ல, நுரையீரலையும் நிலைப்படுத்தினார். நள்ளிரவு தாண்டிய மௌனத்தின் பொழுதுகளில் கருவிகள் இடுகின்ற புரியாத குழப்பச் சத்தங்களையும் இறைவனே ஸ்திரப்படுத்தினார்.  

அந்த நேரத்தில் மனதுக்குள் நிழலாடிய, கூடாரமடித்துக் குடியிருந்த ஒரே ஒரு வசனம் “ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள் ( விடுதலைப்பயணம் 14:14 ) கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் எனும் வசனம். 

சில வசனங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அதற்குரிய படுக்கையில் கிடக்க வேண்டும். இறைவனின் பேரன்பின் ஆழத்தை அறிந்து கொள்ள வேண்டுமெனில் நமது பலங்களின் மீதான கடைசி கட்ட ஈர நம்பிக்கையையும் கூட இறக்கி வைக்க வேண்டும். இவையெல்லாம் அந்த ஐ.சியூவின் மயான நள்ளிரவுத் தாண்டிய பொழுதுகள் உணர்த்திய கதைகள். 

சும்மா இருந்து செயிப்பது என்பது என்ன என்பதை அந்த காலம் புரிய வைத்தது. சும்மா இருப்பது என்பது விசுவாசத்தை அதிகரித்துக் கொள்வது. இறைவன் நிச்சயம் நமக்காய் போரிடுவார் எனும் நம்பிக்கையை ஆழப்படுத்துவது. நமது இதயத்தின் இயங்கு தசைகளெங்கும் இறைமகன் இயேசுவோடு உரையாடல் நடத்துவது. “நீ உன் விசுவாசத்தை ஆழப்படுத்து, நான் உன் பாதைகளை வலுப்படுத்துகிறேன்” என்றார் இறைவன். ஆழப்படுத்த முயன்றேன். 

இயேசு எனும் கொடியில் கிளையாக இருக்கும்போது எவ்வளவு மிகப்பெரிய செப உதவி கிடைக்கிறது ! எவ்வளவு பெரிய தேவ மனிதர்கள் தங்களுடைய முழு நேர ஊழியப் பணியைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு செபத்திலும், டாக்டர்களிடம் உரையாடுவதிலும் தங்களுடைய பொன்னான நேரத்தைத் தந்தார்கள் என்பதெல்லாம் கண்ணீரால் எழுதி முடிக்க முடியாத இன்னொரு கதை. மதங்களைக் கடந்த மனிதநேசத்தின் உச்சத்தை இத்தகைய தருணங்கள் சொல்லித் தருவதும் இறைவனின் பேரன்பின் பாடமே. 

கடவுள் கரம்பிடித்து நடத்தினார். ஒரு வாரத்துக்குப் பிறகு ஐசியூ வின் கதவுகள் திறந்து கொண்டன. தனி வார்டுக்கு இடம் பெயர்ந்தேன். அசௌகரியங்கள் குறைந்திருந்தன, இறைவனின் மீதான அன்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் பேராபத்தின் பெருநதியிலிருந்து இறைவன் என்னை வெளியே கொண்டுவந்திருக்கிறார். மரண இருளின் பள்ளத்தாக்கில் அவரது வெளிச்சத்தின் பாதைகளில் தொடர்ந்து என்னை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு சில தினங்களில் வீடுவந்து சேரும் சூழலை இறைவன் உருவாக்கியிருக்கிறார். 

ஐ.சி.யூவுக்குள் நிராயுதபாணியாய் நுழைந்தபோது மனதுக்குள் எழுந்த ஒரு மிகப்பெரிய கேள்வி, “இன்று இரவே உன் வாழ்க்கை முடிந்து போனால் நீ வீணாய் செலவழித்த காலங்களுக்கு என்ன பதில் சொல்வாய் ?” எனும் கேள்வி. அந்த கேள்வி என்னைத் தூங்கவிடவில்லை. 

கோவிட்டின் காலம் முடியும். செங்கடலைக் கடக்கும் காலம் நிகழும். எனில் இந்த பயண காலம் வெறும் வேடிக்கையின் காலமாய் தொடரக் கூடாது எனும் சிந்தனை மனதில் எழுகிறது. போராட்டம் என்பது நமது வலுவினால் நடப்பதல்ல, வலுவின்மையால் நடப்பது எனும் புரிதல் தெளிவாகிறது.  

நமது வாழ்வின் அர்த்தமானது பிறருக்காக வாழ்வதில், பிறருடைய தேவைகளுக்காக வாழ்வதில், பிறருக்கு மீட்பின் நற்செய்தியை அறிவிப்பதற்காக வாழ்வதில், தன்னைப் புறந்தள்ளி இறைவனை அரவணைக்கும் வாழ்க்கை வாழ்வதில் அர்த்தப்படுகிறது.  இந்த அன்பின் புரிதல் கோவிட் தாண்டிய வீதிகளில் நடத்த வேண்டும் எனும் ஆழமான ஆவல் மனதுக்குள் அசைபோட்டுக் கிடக்கிறது. அதற்காய் கோவிட் தந்திருக்கும் வசனம், 

ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள்

*

சேவியர்

30/செப்டம்பர்/2020

Posted in Articles, Christianity, Uncategorized, WhatsApp

திடுக்கிட வைக்கும் தீர்க்கத்தரிசனங்கள்

திடுக்கிட வைக்கும் தீர்க்கத்தரிசனங்கள்

ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார்.” என்றார்.

( லூக்கா 12 : 13 )

சமீபகாலமாக என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்கும் ஒரு செய்தி புற்றீசல் போலக் கிளம்பும் தீர்க்கத்தரிசனங்கள். சிலருடைய தீர்க்கத்தரிசனங்களைக் கேட்கும் போது உண்மையிலேயே இயேசுவை அவர்கள் தங்களுடைய பர்சனல் செக்கரட்டரியாக நியமித்துவிட்டார்களோ என திடுக்கிட வைக்குமளவுக்கு இருக்கின்றன. 

‘கர்த்தர் சாயங்காலம் பல் விளக்கச் சொன்னார்’, ‘கர்த்தர் பெட் ரோல் விலை இன்னும் உயரும்ன்னு சொன்னார்’ என தாங்கள் நினைப்பதையெல்லாம் கடவுளின் பெயரோடு இணைத்துப் பேசுகின்ற தீர்க்கத் தரிசிகள் பலர் இன்றைக்கு நம்மிடையே உலவுகின்றனர். 

அவர்கள் அடுக்கடுக்காய் சொல்கின்ற செய்திகள் பல வேளைகளில் சிரிக்க வைக்கின்றன. ஒருவர் சொல்கின்ற வார்த்தைகள் கடவுள் பேசியதா அல்லது தனது ஆழ்மனதின் சிந்தனை வெளிப்பாடா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தனது வசதிக்கும், தனது வாய்ப்புக்கும், தனது சூழலுக்கும் ஏற்ப இறைவாக்கு உரைப்பவர்கள் உண்மையில் இறைவாக்கை உரைக்கவில்லை, குறை வாக்கையே உரைக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வார்த்தைகளை காலப் போக்கில் மாற்றிக் கொள்ளவும் தயங்குவதில்லை. கேட்டால், “அ..அ..அது அப்போ அப்படி சொன்னார், இப்போ இப்படி சொல்கிறார்” என்பார்கள். அவர்களே “கடவுள் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்றும் சொல்வார்கள். “  

இது அவர்களுடைய தவறும் அல்ல. பல வேளைகளை நம் மனதில் தோன்றுகின்ற எண்ணம் எல்லாமே இறைவன் தருவது என நினைத்துக் கொள்கிறோம். அது தவறு. நாம் பிறரைக் குறித்து ஒரு விஷயத்தைச் சொல்லும் போது, அது உண்மையிலேயே இறைவன் சொன்னது தானா என்பதை ஆராய்வது மிக மிக அவசியம். கிதியோனைப் போல கடவுளிடம் தனது சிந்தனை உண்மை தானா என கேட்டு அறிவதிலும் தவறில்லை. 

ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால் … அந்த இறைவாக்கினன் சாவான் ( இணைச்சட்டம் 18:20 ) என இறைவன் மிகக் கடுமையாக எச்சரிக்கிறார்.  “எனது பெயரால் பேசுவதாக எண்ணிக் கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால்’ என இறைவன் மிக மிகத் தெளிவாக உரைக்கிறார். எனவே இறைவாக்கு உரைப்பவர்கள் மிகவும் கவனமாகவும், இறைவன் நம்மிடம் உண்மையிலேயே இதைப் பேசினாரா எனும் உறுதியைப் பலமுறை பெற்ற பின்பும் தான் பேசவேண்டும்.

அதிலும் குறிப்பாக, இறைவன் நீதிமான் எனக் கருதும் ஒருவரிடம் இறைவன் நேரடியாகப் பேசுவதே வழக்கம். பைபிளின் பக்கங்கள் முழுதும் அப்படித் தான் இருக்கின்றன. இறைவன் நீதியற்றவர்களைச் சந்திக்கவே பெரும்பாலும் இறைவாக்கினர்களை அனுப்புகிறார். அத்தகைய கடவுள் நீதிமானிடம் கூட பேசாத விஷயத்தை இன்னொருவர் மூலமாகப் பேசுகிறார் எனில், உண்மையிலேயே கடவுள் தான் பேசினாரா ? ஏன் பேசினார் ? போன்ற விஷயங்களை செபத்தில் நிலைத்திருந்து புரிந்து கொள்ள வேண்டும். அவை நமது மனதில் நாம் கற்பித்துக் கொண்ட நியாயங்களின் அடிப்படையில் எழுகின்ற சிந்தனையா என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தீர்க்கத்தரிசி சொல்கின்ற தீர்க்கத்தரிசனங்கள் உண்மையிலேயே மக்கள் மீதான தன்னுடைய ஆழமான கரிசனையா ? அல்லது அது ஏதோ ஒரு சுயநலத் தேடலின் வெளிப்பாடா என்பதைக் கவனிக்க வேண்டும். சுயநலத் தேடல்களில் இறைவன் தனது தீர்க்கத்தரிசனத்தை எப்போதுமே வெளிப்படுத்துவதில்லை. இறைவனுடைய தீர்க்கதரிசனங்கள் எல்லாமே மக்கள் மீதான ஆழமான அன்பாக இருக்குமே தவிர, வெறுப்பாகவோ, விரோதமாக இருக்கவே இருக்காது. இதை பைபிளை நாம் ஆழமாய்ப் படிக்கும் போது புரிந்து கொள்ளலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம், தவறான போதனைகளுக்கு ஆதரவாக உண்மையான இறைவாக்கினர்கள் என்றுமே இருப்பதில்லை. சொர்க்கமும் கிடையாது நரகமும் கிடையாது என ஒருவர் சொல்கிறார் எனில் அவரது போதனை தவறான போதனை. அதற்கு ஆதரவாக கடவுளின் உண்மை இறைவாக்கினர்கள் நிற்பதில்லை. அதே போல, ‘ கடவுள் மாம்சத்தில் வந்தவரல்ல’ என்று ஒருவர் சொல்கிறாரெனில் அது தவறான போதனை அதற்கு ஆதரவாக நிற்பவர்கள் நிச்சயம் கடவுளின் இறைவாக்கினர்களாக இருக்க முடியாது. அத்திமரத்தில் திராட்சைப் பழங்கள் காய்ப்பதில்லை ! 

நாம் பல வேளைகளில், “ஐயோ ஒருவேளை அது கடவுளோட ஆவி பேசுவதாக இருந்தால் நாம் அவர்களை எதிர்க்கக் கூடாது” என நினைப்போம். பயப்படுவோம். அந்தப் பயமே அவர்களின் முதலீடு. இயேசு சொல்கிறார், “அஞ்சாதீர்கள்” ! 

கடவுள் ஆதாமிடம் தன்னுடைய ஆவியை ஊதினார். அந்த ஆவியே நம்மிடமும் இருக்கிறது. இயேசு நம்மிடம் சொல்கிறார் “ போலிகளைக் கண்டறியுங்கள். கனிகளைக் கொண்டே அவர்களின் தனி அடையாளங்களை அறியுங்கள். என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்பவர்களோ, வசனத்தை வைத்து விளையாடுபவர்களோ, தீர்க்கத்தரிசனம் உரைப்பவர்களோ, வல்ல செயல்கள் செய்பவர்களோ என்னிடம் வருவதில்லை. தந்தையின் விருப்பப்படி நடப்பவர்களே வருவார்கள்” என்கிறார் இயேசு. எனவே யாருடைய ஆவியையும் இறைவசனங்களைக் கொண்டு ஆய்ந்து அறிவதில் கவலையே படாதீர்கள். 

“போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள்” என்கிறார் இயேசு. இறைவாக்கு உரைப்பவர் உண்மையிலேயே இயேசுவின் குணங்களைக் கொண்டிருக்கிறாரா ? அவரிடம் இயேசுவிடம் இருந்த பணிவு, கனிவு, புறம்பேசாமை, சுயநலம் பாராமை, தனிமனித விரோதம் கொள்ளாமை, சூழ்ச்சி கொள்ளாமை, பேதம் பார்க்காமை எல்லாம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அப்படி இல்லாதவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்கிறார் இயேசு !

உலகு சார்ந்த விஷயங்களைப் பேசுபவர்களிடம் உலகின் ஆவியே இருக்கும். தனக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய சொத்தைப் பற்றிப் பேச வந்த மனிதரிடம், “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என கேட்டவர் இயேசு.  அவரது தேடல் உலகு சார்ந்த விஷயமல்ல. அவரது போதனை விண்ணுலகு சார்ந்தது. எனவே உலகு சார்ந்த விஷயங்களையே தொடர்ந்து தீர்க்கத்தரிசனமாய் உரைப்பவர்களிடமிருந்து விலகியிருப்பதே நல்லது., அவர்களுக்காக செபிப்பது அதை விட நல்லது. 

இறுதியாக,

நம்மிடம் இறைவன் இருக்கிறார் !

இறைவார்த்தை இருக்கிறது. 

அதை விளக்கிச் சொல்ல தூய ஆவி இருக்கிறார்

இறை வார்த்தை அச்சத்தை விட்டு இறைவனில் அடைக்கலம் தேட நம்மை உற்சாகப்படுத்துகிறது. அதற்கு மாறாக அச்சத்தை விதைக்கின்ற, பிரிவினையை தூவுகின்ற எந்த ஆவியுமே பரிசுத்தம் பூசி வரும் அசுத்த ஆவிகள் என்பதைப் புரிந்து கொள்வோம். அவற்றை எதிர்த்து நிற்க தயங்காதிருப்போம். ஏனெனில் இறைவார்த்தையே சொல்கிறது…

தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள்; அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள் ( 1 யோவான் 4 : 1 )

*

சேவியர் 

Posted in Articles, Christianity, WhatsApp

சீர்திருத்தச் சிலைகள்

சீர்திருத்தச் சிலைகள்

சிலரைப் பார்த்திருக்கிறேன். தினமும் சாராயம் குடித்துக் குடித்து அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டவர்கள். திடீரென ஒரு நாள் ஞானோதயம் வந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவார்கள். உடனே அதைச் சமன் செய்வதற்காக புகையிலைப் பழக்கத்தையோ, பான்பராக் போன்ற ஏதோ ஒரு பழக்கத்தையோ அவர்கள் கையிலெடுப்பார்கள். ‘அதான் குடியை விட்டாச்சுல்ல’ என்பார்கள். அதைவிடப் பெரிய போதையின் பாதையில் நுழைந்து அழிவார்கள்.

சிலைகளை விட்டு ஒட்டு மொத்தமாக விலகவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு தனியே இறைவனை வழிபடும் பலரும், அதற்கு மாறாக வேறு சில சிலைகளைத் துடைத்துச் சுத்தமாக்கி தங்களுடைய இதயத்தின் அலமாரியில் அடுக்கி வைக்கின்றனர். கடவுள் உருவமற்றவர் என்பது போல இவர்களுடைய சிலைகளும் உருவமற்றதாக இருப்பது வசதியாகி விடுகிறது இவர்களுக்கு.

சமீபத்தில் ஒரு சபைக்கு ஒரு பாஸ்டர் புதிதாக வந்தார். ‘பிள்ளைகளுடைய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடவேண்டாம்’ என்றவர் இயேசு. வந்த பாஸ்டரோ பிள்ளைகளை விட அதிகமாய் நேசிக்கும் சில நாய்களோடு வந்தார். வெளிநாட்டு நாய் வகை எனும் கர்வத்தையும் கழுத்தில் மாட்டியிருந்தார். அந்த நாய்களுக்கு ஏசியும், வசதியான காம்பவுண்ட் சுவரும் வேண்டுமென அடம்பிடித்தார். அத்துடன் விடவில்லை, தனக்கும், தனது பிள்ளைகளுக்கும், அவர்களுடைய நண்பர்களுக்கும் பணக்காரக் கார்களை நிறுத்துவதற்காக ஆலய மதில் சுவரை இடித்து பார்க்கிங் இடங்கள் செய்து தரவேண்டும் என்றார்.

‘சொகுசு வாழ்க்கை’ எனும் சிலை ஒன்றை அவர் தனது கக்கத்தில் சொருகி வைத்திருந்தார். தனக்கு வசதியான வாழ்க்கை வேண்டும், திருச்சபையின் ஆன்மீக வளர்ச்சி எக்கேடுகெட்டுப் போனால் எனக்கென்ன எனும் சிந்தனை அவரது கனிகளில் வெளிப்பட்டது. சரி, ஆயர் இப்படியிருக்கிறாரே, இலட்சக்கணக்கில செலவு செய்கிறாரே மேலிடத்துக்குப் போவோம் என மக்கள் தீர்மானித்தபோது ஒருவர் சலித்துக் கொண்டே, “அட நீ..வேற. மேலிடம் ஒரு கோடி ரூபாய்க்கு தன்னோட வீட்டை பட்டி டிங்கரிங் பாத்திருக்கு… நீ போவியா அங்கிட்டு’ ! என்றார். சொகுசு வாழ்க்கையின் சிலைகளின் அருங்காட்சியகமே அவரிடம் இருக்கிறது போல.

இன்னொரு நிகழ்வில் திருச்சபைப் போதகர் ஒருவர் தன்னுடைய வீட்டில் வைத்து தான் காணிக்கைப் பணத்தை எண்ணுவேன். தன்னுடைய செலவுகளெல்லாம் காணிக்கைப் பணத்தில் தான் நடக்க வேண்டும். நான் நினைக்கும் செலவுகள் செய்யப்பட வேண்டும் என கட்டளை கொடுத்தாராம். பண ஆசை எனும் சிலை ஒன்று அவரது பாக்கெட்டுக்குள் பத்திரமாய் இருக்கிறது. மேலிடத்துக்குப் போகவேண்டும் எனும் ஆசையையே திருச்சபையினர் பரணில் போட்டு பூட்டி விட்டார்களாம்.

இன்னொரு போதகரோ பெண்களோடு அந்தாக்‌ஷரி நடத்தி சினிமாப் பாடல்களின் கூடாரமாக கிறிஸ்தவ சந்திப்புகளை மாற்றியிருக்கிறார். அத்தகைய போதகர்களின் வாழ்க்கையில் சிற்றின்பச் சிலைகள் வந்து கூடாரமடித்துக் குடியிருக்கின்றன. என்ன செய்வதென தெரியாமல் மக்கள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.

மற்றொரு போதகர் இருக்கிறார். என்ன சொன்னாலும், “நான் ஒரு ஸ்காலராக்கும்…”, “நான் ஒரு சேர்மேனாக்கும்…” என சகட்டு மேனிக்கு கர்வத்தின் விசிட்டிங் கார்ட்களை விசிறிக் கொண்டிருக்கிறார். பவுல் சொன்னார், நான் இயேசுவைப் பின்பற்றுவது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள் என்று. ஆனால் இன்றைய போதகர்களோ ‘நீ என்னைப் பின்பற்று, நாம் இருக்கலாம் இன்புற்று’ என்கின்றனர்.

இன்னும் சில சபைகளில் சாதி எனும் சிலைகள் குழு குழுவாக தலையைப் பிரித்து விட்டு ஆட்டம் போடுகின்றன. நானே வாழ்வின் வாசல் என்றார் இயேசு. ‘அதெல்லாம் இருக்கட்டும், அடுத்த சாதி காரன் வந்தா வாசலைச் சாத்தி தான் வைப்போம்’ என்கிறார்கள் பக்தர்கள். சாதிக்கென சபைகள், சாதிக்கென தனித்தனியே ஆராதனைகள். இதைக் கண்டிக்க வேண்டிய போதகர்களோ காணிக்கைக் கணக்கு குறைந்து விடக்கூடாதெனும் கவலையில் கப் சிப் என இருக்கின்றனர்.

சிலைகள் ! எங்கும் எதிலும் சிலைகள் ! இதில் நாங்கள் சிலைகளை ஒழித்துவிட்டோம் என கர்வம் வேறு. கர்வத்தோடு முன்னிறுத்தும் எந்த விஷயமுமே சிலையாகிப் போகிறது.

சிலைகளைப் பற்றிய நமது அடிப்படைப் புரிதலே தவறு. எது நம்மை கடவுளிடமிருந்து பிரிக்குமோ அதுவே சிலை. பழைய ஏற்பாட்டில் “தன்னை விட்டு விட்டு வேறு தெய்வங்களை” நினைவூட்டிய அத்தனை அடையாளங்களையும் கடவுள் வெறுத்தார், அருவருத்தார் என்பதை தெளிவாகப் பார்க்கிறோம். கடவுளைத் தவிர எதன்மீது நமது பார்வையை, நம்பிக்கையை, பாதுகாப்பை, ஆசையை வைக்கிறோமோ அதுவெல்லாம் சிலை. எது கடவுள் மீதான நமது பார்வையைத் திசை திருப்ப வைக்குமோ அதுவெல்லாம் சிலை.

எது நமக்கு கடவுளை நினைவூட்டுமோ, கடவுளோடான அன்னியோன்யத்தை அதிகப்படுத்துமோ, கடவுளிடம் செபிக்கத் தூண்டுமோ அது சிலையல்ல. உதாரணமாக, சிலுவை நமக்கு இயேசுவை ஞாபகப்படுத்தினால், இயேசுவிடம் நெருங்க உதவினால் அது சிலையல்ல. பணம் நமக்கு சுக போகத்தை நினைவூட்டி இயேசுவை ஓரங்கட்டினால் அது சிலை. அவ்வளவே. வீட்டில் தொங்கும் ஒரு படம் இயேசுவை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தால் அது சிலையல்ல, “வாவ் வாட் எ பெயிண்டிங்’ என பெயிண்டரை நினைவுபடுத்தினால் அது சிலை.

சிலைகள் தானாக முளைத்து வளர்வதில்லை, நாம் தான் வளக்கிறோம்.
அதே போல, ஒழிக்க வேண்டிய சீர்திருத்த சிலைகள் என்னவென்பதையும் நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

*
சேவியர்