முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்
முதலாம் நூற்றாண்டுத் திருச்சபைக்கு ரோமை அரசிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்புகள் எழுந்தன. அவர்கள் கிறிஸ்தவர்களின் மதத்தின் மேல் கொண்டிருந்த சந்தேகமே இந்த எதிர்ப்புக்குக் காரணம் எனலாம். அந்த சந்தேகங்களில் முக்கியமானவைகளாக கீழ்க்குறிப்பிட்டுள்ளவற்றைச் சொல்லலாம்.
குறிப்பாக கிறிஸ்தவர்களுடைய சடங்குகளும், சம்பிரதாயங்களும் வழக்கமான மத வழிபாட்டுக்குரியனவாய் இருக்கவில்லை எனவே கிறிஸ்தவர்களின் வழிபாடுகளின் மேல் பலருக்கும் மிகப்பெரிய சந்தேகம் இருந்து வந்தது. குறிப்பாக வழிபாடுகளில் கிறிஸ்தவர்கள் உண்ணும் அன்பின் விருந்தில் குழந்தைகளின் மாமிசம் பரிமாறப்படுகிறது எனும் வதந்தியும் எழுந்தது.
இயேசுவின் இறுதி இரவு உணவுப் பந்தியில், இயேசு அப்பத்தைஎடுத்து அது தன்னுடைய உடல் என்றும், திராட்சை இரசத்தை தன்னுடைய இரத்தம் என்றும் சொல்லி சீடர்களுக்குக் கொடுத்தார். சீடர்களும் அதை உண்டார்கள். அதை நினைவுகூரும் விதமாகவே வழிபாடுகளின் அன்பின் விருந்து வழங்கப்படுகிறது.
இது இயேசுவின் உடல் என்று சொல்லி அப்பத்தை சீடர்கள் உண்டார்கள். நாங்கள் கிறிஸ்துவின் உடலை உண்டு இரத்தத்தைக் குடித்தோம் என்றும் பிரசங்கித்தார்கள். இது தான் அவர்களுடைய அன்பின் விருந்தின் மேல் மற்றவர்களுக்கு சந்தேகம் எழ காரணமாய் அமைந்தது.
கிறிஸ்தவர்கள் நாத்திகர்கள் என்றும் எண்ணப்பட்டனர். அந்த நாட்களின் வழக்கத்தில் இருந்த சிலை வழிபாடுகளை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கவில்லை. மன்னனைக் கடவுளாக வணங்கும் வணக்கமுறையையும் இவர்கள் பின்பற்றவில்லை. எனவே இவர்களுடைய வழிபாடு குறித்து மக்களிடையே வியப்பும், சந்தேகமும் எழுந்தது. கிறிஸ்தவர்கள் கடவுளை வழிபடுபவர்கள் அல்ல என்று கருதப்பட்டனர்.
கிறிஸ்தவர்கள் பிறரோடு கலந்து கொள்ளாமல் தனித் தனியாக குழுக்களாக வாழ்ந்து வந்தனர். பெரும்பாலான தொழில்களில் சிலை வழிபாட்டு முறைகள் இருந்ததால் அந்தத் தொழில்களையே அவர்கள் புறக்கணித்தனர்.
ரோம அரசுக்கும், அவர்களுடைய அரசாங்கத்துக்கும் மேலானது கிறிஸ்துவின் அரசு என்று கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். எனவே அவர்கள் அரசையோ, தலைவர்களையோ முதன்மையானவர்களாய் கருதவில்லை. அவர்களுக்கு மனிதருக்குரிய மரியாதையை மட்டுமே வழங்கினர். கடவுளே முதன்மையானவர் அதற்குப் பிறகே மற்றவர்கள் என்னும் போக்கு கொண்டிருந்தார்கள். மனிதருக்குக் கீழ்ப்படிவதை விடக் கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள் என்றே போதித்தனர்.
ரோமை அரசு கிறிஸ்தவ மதத்தை அங்கீகரிக்கவில்லை என்பதும் ரோமர்கள் கிறிஸ்தவர்களை எதிர்க்க முக்கியமான ஒரு காரணம் எனக் கொள்ளலாம்.
கிறிஸ்தவர்களின் வளர்ச்சி ஆலய வியாபாரங்களையும் பெருமளவில் பாதித்தது. பலியிடுதல் என்பது பாவத்தைப் போக்குவதற்காகச் செய்யப்படும் ஒரு சடங்கு என்பது யூதர்களுடைய நம்பிக்கையாய் இருந்தது. எனவே தங்கள் பாவங்களுக்குத் தக்கபடி பலிப் பொருட்களை அதிக விலை கொடுத்து ஆலய வளாகங்களிலிருந்து பெற்றுக் கொண்டு அதை கடவுளுக்குப் பலியிடுவது அவர்களது வழக்கம். இது ஒரு மிகப்பெரிய வியாபாரமாக அங்கு நடை பெற்று வந்தது. கிறிஸ்தவர்களிடையே அந்த நம்பிக்கை இல்லை. எனவே கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள் பலியிடுவதை நிறுத்தினார்கள். இது அவர்களுடைய வியாபாரத்தைப் பாதித்து விட்டது. குறி சொல்பவர்களும் தங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டதால் கிறிஸ்தவர்களை எதிர்த்தனர்.
அந்த நாட்களில் நிகழ்ந்த போர்களும், இயற்கைச் சீற்றங்களுக்கும் கிறிஸ்தவர்களே காரணம் என எண்ணப்பட்டனர். கிறிஸ்தவர்களின் புதிய வழிபாட்டு முறையினால் கோபம் கொண்ட மற்ற தெய்வங்கள் மனிதர்களுக்கு இடர்கள் வழங்கியதாக அவர்கள் நினைத்தனர்.
கிறிஸ்தவர்கள் மிகவும் தைரியசாலிகளாய் இருந்தார்கள். இயேசுவின் இரண்டாம் வருகை விரைவிலேயே வரும் எனும் நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. எனவே அவர்கள் உயிரை துச்சமென மதித்து மதத்தைப் போதித்தனர். அவர்கள் ஒரு மாபெரும் மனித சக்தியாக உருவெடுத்து வந்தனர். எனவே இவர்கள் ரோமை ஆட்சியைக் கைப்பற்றிவிடக் கூடும் எனும் பயம் நிலவியது.
கிறிஸ்தவர்களின் தைரியம் அரசுக்கே சவாலாய் இருந்தது. ரோமை தெய்வங்களுக்கு தூபம் காட்ட கிறிஸ்தவர்கள் மறுத்தனர். அதற்காக எந்த ஒரு பெரிய தண்டனையையும் புன்னகையுடன் பெற்றுக்கொள்ள அவர்கள் தயாராய் இருந்தனர். கிறிஸ்தவர்கள் எனும் பெயரை வைத்திருப்பதே தண்டனைக்குரிய தவறாய் பார்க்கப்பட்டது.
யூத மதகுருக்கள் மற்றும் யூத மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியோர் கிறிஸ்தவ மதத்தைக் குறித்து பொய்பிரச்சாரங்களையும், புகார்களையும் ரோம அரசுக்கு அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். கிறிஸ்தவர்கள் பிற மத சிலைகளுக்கு தூபம் காட்ட மறுத்ததையெல்லாம் அரச விரோத செயல்களாகச் சித்தரித்து அவர்களுக்கு எதிராக கலகம் மூட்டினார்கள். கிறிஸ்தவர்களால் தான் இயற்கைச் சீற்றங்கள் நடக்கின்றன என்றும், அவர்கள் தனித்தனிக் குழுக்களாகக் கூடுவது பின்னாளில் அரசைப் பிடிப்பதற்கான ஆலோசனையே என்றும் அரச காதுகளில் செய்திகள் சொல்லப்பட்டன.
கிறிஸ்தவத்தின் வளர்ச்சியின் முதல் கட்டம் என்று அப்போஸ்தலர்களின் மதப் பிரச்சாரத்தைக் குறிப்பிடலாம். இயேசுவின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும், மீண்டும் அவர் உலகிற்கு வருவார் என்னும் நம்பிக்கையையும், இயேசு உயிர்த்துவிட்டார் அவர் கடவுளாக இருக்கிறார் என்பவற்றையும் அடிப்படையாகக் கொண்டே நடந்தது.
இயேசுவின் உயிர்ப்பு நிகழ்ச்சி நடந்து நாற்பது நாட்களுக்குப் பின் இந்த பணி அப்போஸ்தலர்களால் ஆரம்பிக்கப் பட்டது. அது யோவானின் மரணம் நிகழ்ந்த கி.பி நூறாம் ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த காலத்தில் சுமார் முப்பத்து இரண்டு நாடுகள், ஐம்பத்து நான்கு நகரங்கள், மற்றும் ஒன்பது மத்திய தரைக்கடல் சார்ந்த தீவுகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது என்று விவிலியம் குறிப்பிடுகிறது.
இந்த முதல் காலகட்டம் கிறிஸ்தவர்களுக்கும் அந்த மதத்தைப் பரப்பியவர்களுக்கும் மிகவும் சோதனைகள் நிறைந்த காலமாகவே இருந்தது. மரணத்தை விரல்களில் பிடித்துக் கொண்டே கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் செயல் நடந்தது. தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். சமுதாயத்திலிருந்து நிராகரிக்கப் பட்டனர்.
ரோம் அரச மன்னர்கள் ஜூலியஸ் சீசருக்குப் பின் ‘சீசர்’ என்றே அழைக்கப்பட்டனர். இயேசு பிறந்தபோது ஆட்சியில் இருந்த அகஸ்துஸ் சீசர் ஜூலியஸ் சீசருக்குப் பின் அரியணை ஏறிய மன்னன். கி.மு 27 முதல் கி.பி 14வரை அவர் ஆட்சி புரிந்தார்.
திபேரியு சீசர் அதன் பின்னர் அரியணை ஏறினார். அவர் கி.பி இருபத்து ஏழு வரை ஆட்சி செய்தார்.
இயேசுவின் மறைவுக்குப் பிறகு அரசேற்ற மன்னன் காலிகுலா. இயேசுவின் பெயரைச் சொல்லிக் கொண்டு திருபவர்கள் மீது இவருக்கு அலர்ஜி. எனவே அவர் இயேசுவைப் பின்பற்றியவர்களை அடியோடு வெறுத்தார். இவர் மக்கள் தன்னை வணங்கவேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்தார். புகழ் பெற்ற எருசலேம் தேவாலயத்தில் தன்னுடைய சிலையை நிறுவி ஆராதனை செய்யப்பட வேண்டும் என விரும்பினார். ஆனால் ஆயுள் அவருடைய ஆசையை நிறைவேற்றவில்லை. அவருடைய எண்ணம் நிறைவேறும் முன்பாகவே கி.பி நாற்பத்து ஏழில் இறந்தார்.
அடுத்ததாக கி.பி 41ல் ஆட்சிக்கு வந்த கிளாடியுஸ் மன்னனும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவே இருந்தார். கிறிஸ்து என்பவரின் தலைமையில் ஒரு கூட்டம் பேர் அரசுக்கு எதிராக போராடுகிறார்கள் என்று கிறிஸ்தவர்களைப் பற்றி அவர் நினைத்திருக்கிறார். எனவே இவருடைய ஆட்சிக் காலமான கி.பி 49ல் கிறிஸ்தவர்கள் ரோமிலிருந்து துரத்தியடிக்கப் பட்டனர்.
இதற்குப் பின் வந்த மன்னன் தான் ரோம் தீ பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் ! இவனுடைய ஆட்சிக் காலம் கிறிஸ்தவர்களின் இருண்ட காலம் எனலாம்.
கி.பி 54 முதல் கி.பி 68 வரை ரோம பேரரசை ஆண்டு வந்த நீரோ மன்னனின் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடந்தன. தன் தாயையே கொலை செய்தவன் நீரோ மன்னன் என்கிறது வரலாறு.
இவன் காலத்தில் ரோமா புரியின் ஒரு பாகத்தை இவனே தீ வைத்துக் கொளுத்தி விட்டு அந்தப் பழியை கிறிஸ்தவர்கள் மேல் சுமத்தினான். அதனால் பல கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கிறிஸ்தவர்களைப் பிடித்து சிங்கங்களின் கூண்டுகளிலும், முதலைகளின் தடாகத்திலும் போட்டு அவர்களை விலங்குகள் கொல்வதைப் பார்த்து ரசித்தார்கள்.
சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரங்களில் கிறிஸ்தவர்களைக் கட்டி வைத்து அவர்களை உயிரோடு கொளுத்தி நீரோ மன்னன் அந்த வெளிச்சத்தில் வெற்றி ஊர்வலம் செல்வான். இதனால் கிறிஸ்தவர்கள் உயிர் விளக்குகள் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகபட்ச வன்முறையை அரங்கேற்றிய நீரோ அதன்பின் நான்கு ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனான்.
எந்த அளவுக்கு நெருக்கடியை கிறிஸ்தவர்கள் சந்தித்தார்களோ அந்த அளவுக்கு அவர்கள் வளர்ந்தார்கள்.
பலர் கிறிஸ்தவத்தை யூதமதத்தின் ஒரு பிரிவாகவே பார்த்தார்கள். இயேசு யூத மதத்தைச் சார்ந்தவர் என்பதாலும், அவருடைய சீடர்கள் யூத மதத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களைச் சார்ந்தே தங்கள் விளக்கங்களை அமைத்ததாலும், யூதர்களிடையே அவர்களுடைய போதனை அதிக அளவில் இருந்ததாலும் அப்படி ஒரு தோற்றம் இந்த முதல் கட்டத்தில் ஏற்பட்டது.
ஃ
கி.பி அறுபத்து ஒன்பதாம் ஆண்டு முதல் எழுபத்து ஒன்பதாம் ஆண்டுவரை ஆட்சி செய்த மன்னன் வெஸ்பெஷியன் என்பவர். இவருடைய மகன் தான் எருசலேம் நகரத்தை அழித்த தீத்து.
தீத்து கி.பி எண்பத்து ஒன்றுவரை ஆட்சி செய்தான். இவனுடைய காலத்திலும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. மறைந்தே வாழ்ந்தனர். இவனுக்குப் பின் அரசேறினான் இவனது தம்பி தொமித்தியான்.
தொமித்தியானின் ஆட்சிக் காலம் கி.பி எண்பத்து ஒன்பது முதல் கி.பி தொன்னூற்று ஆறு வரை. எண்பத்து ஒன்றாம் ஆண்டு செப்டம்பர் பதிமூன்றாம் நாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இவர் தன்னைக் கடவுளாக நினைத்துக் கொண்டார்.
நாட்டிலுள்ள அனைவரும் தன்னை வணங்கவேண்டும் என்று ஆணையிட்டான். சிலை வழிபாடுகள் போல தனக்கும் தூபம் காட்டி வழிபட வேண்டும் என எல்லோரையும் கட்டாயப்படுத்தினான்.
கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்தனர். அவர்கள் அரசரின் ஆணையை மதிக்கவில்லை. எனவே கிறிஸ்தவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்னும் முத்திரை குத்தி துன்பப்படுத்தப் பட்டனர். கிறிஸ்தவர்கள் கலகக் காரர்கள் என்று அறிவிக்கப்பட்டனர்.
அரசனை வணங்காத கிறிஸ்தவர்கள் மீது அரசனின் கோபம் பாய்ந்தது. கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்த அனைத்து கிறிஸ்தவர்களும் வன்முறைக்கு ஆளானார்கள்.
இவன் காலத்தில் கிறிஸ்தவம் நசுக்கப்பட்டாலும் கிளை விட்டது. கிறிஸ்தவம் அரண்மனைகளிலும் நுழைந்தது. மன்னனின் தம்பி கிளமெண்ட் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தான். கிறிஸ்தவர்களை வெறுத்த மன்னன் தம்பியையும் வெறுத்தான்.
தன் தம்பி என்றும் பாராமல் மன்னன் கிளமெண்ட் ஐ கொன்றான். அவனுடைய மனைவியை நாடுகடத்தினான்.
அந்த நாட்களில் ரோம் நகரில் நடந்த வன்முறைகளைக் குறித்து ‘ஷெப்பர்ட் ஆஃப் ஹெர்ம்ஸ்’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணவம் கொண்டு தன்னை ஆண்டவன் என்று அழைத்துத் திரிந்த தொமித்தியான் நீண்டநாட்கள் வாழவில்லை. கி.பி தொன்னூற்று ஆறில் அவன் படுகொலை செய்யப்பட்டான்.
அதன்பின் நெர்வா எனும் மன்னன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கிறிஸ்தவர்கள் சற்றே இளைப்பாறும் காலமாக அது இருந்தது. பிரச்சனைகள் இல்லாத ஆட்சியாய் நெர்வாவின் ஆட்சி இருந்தது.
ஃ
ஆதிகாலத் திருச்சபை கிறிஸ்தவத்தின் பொற்காலமாக இருந்தது. உண்மையில் கிறிஸ்துவின் போதனைகளை அப்படியே பின்பற்றும் காலமாக அது இருந்தது. அப்போது எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள் அவர்களுக்குள் பிளவு காணப்படவில்லை.
மக்கள் தங்கள் சொத்துகளை பொதுவில் கொண்டு வைத்தார்கள். அதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். தனக்கென யாரும் சொத்து சேர்த்து வைக்கவில்லை.
அதிகமாக செபித்தார்கள். இயேசு உடனே திரும்ப வந்து தங்களை அழைத்துச் செல்வார் எனும் எண்ணம் நிறைய பேரிடம் காணப்பட்டது. எனவே உருக்கமான செபம் எப்போதும் நடந்தது.
பெண்களின் நிலை அந்த காலகட்டத்தில் சிறப்பான முன்னேற்றம் அடைந்தது. அனைத்து செயல்களிலும் பெண்களின் ஈடுபாடு இருந்தது. அவர்கள் ஆண்களோடு சமமாக பணிகளில் ஈடுபட்டார்கள்.
உதவுதல் மிக முக்கியமான பணியாக இருந்தது. ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒரு சமத்துவ சமுதாயமாக இருந்தது அன்றைய திருச்சபை.
இயேசுவுக்காய் துன்பப்படுவது நல்லது என்று நினைத்தார்கள். ‘என் நிமித்தம் மக்கள் உங்களைத் துன்புறுத்தினால் மகிழுங்கள்’ என்று இயேசு போதித்திருந்தார். எனவே துன்பத்தை மக்கள் விரும்பி ஏற்றார்கள்.
தங்களை வெறுத்தவர்களையும் துன்பப்படுத்தியவர்களையும் ஆதிகால கிறிஸ்தவர்கள் வெறுக்கவில்லை. அவர்களுக்காய் செபித்தார்கள். அவர்களை மன்னித்தார்கள்.
திருமுழுக்கு கொடுக்கும் வழக்கம் அதிகரித்தது. குழுவில் இணைய விரும்புபவர்கள் திருமுழுக்கு அளிக்கப்பட்டனர். முழுமையாக நீரில் மூழ்குவதோ, மூன்று முறை தண்ணீர் தெளிப்பதோ ஞானஸ்நானத்தின் அடையாளமாய் இருந்தது.
எனினும் பெரும்பாலும் யூதர்களே கிறிஸ்துவர்களானதால் யூத மத வழக்கங்களும் கிறிஸ்தவர்களுக்கு இருந்தன. யூதர்களின் ஓய்வு நாளான சனிக்கிழமைகளிலும், இயேசுவின் உயிர்ப்பு நாளான ஞாயிற்றுக் கிழமையிலும் அவர்கள் ஜெபக்கூடங்களுக்குச் சென்றார்கள்.
ஃ
மாற்கு நூலே விவிலியத்தின் முதலாம் நூல் இது கி.பி 44ல் எழுதப்பட்டது. மத்தேயு நற்செய்தி கி.பி ஐம்பதிலும், லூக்கா நற்செய்தி கி.பி அறுபதிலும், யோவான் நற்செய்தி கி.பி நூறிலும் எழுதப்பட்டன. யோவான் கி.பி நூறு வரை உயிர் வாழ்ந்தவர். தன்னுடைய வாழ்வின் கடைசி கட்டத்தில் யோவான் நற்செய்தி நூலை எழுதினார்.
லூக்கா அப்போஸ்தலர் பணி எனும் நூலையும் எழுதினார். அது கி.பி அறுபதில் எழுதப்பட்டது. தூய பவுல் எழுதிய நிரூபங்கள் கி.பி ஐம்பதுக்கும் அறுபத்து நான்கிற்கும் இடைப்பட்டவை. எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் அறுபத்து இரண்டிற்கும், எழுபதுக்கும் இடையே எழுதப்பட்டவை.
யாக்கோபு எழுதிய நூல்கள் கிபி நாற்பத்து நான்கிற்கும் ஐம்பதுக்கும் இடையில் அல்லது அறுபத்து இரண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஒன்று பேதுரு தனது நூலை கி.பி அறுபத்து நான்கில் எழுதினார். யோவான் தரிசனம் கி.பி தொன்னூற்று ஐந்திலும் எழுதப்பட்ட யூதாவின் கடிதங்களும், யோவானின் கடிதங்களும் கி.பி நூறில் எழுதப்பட்டன.
இந்த நூல்கள் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருக காரணமாயிற்று. எருசலேமில் மட்டுமே சுமார் இருபதாயிரம் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். அது மட்டுமன்றி அந்தியோக்கியா, எபேசு, கொரிந்து, சமாரியா, யோப்பா, லித்தா, சீரியா, யூதேயா உட்பட பல்வேறு இடங்களுக்குக் கிறிஸ்தவம் பரவியது.
கி.பி 66 ல், யூதேயாவில் வாழ்ந்த யூதர்களுக்கும் ரோம அரசுக்கும் எதிரான போராட்டம் பெருமளவில் வெடித்தது. யூத மதத்தின் கோட்பாடுகளை காயப்படுத்தும் விதமாக ரோமர்கள் கடும் விமர்சனம் செய்தார்கள். ஏற்கனவே ரோம அரசுக்கு வரி கொடுப்பதில் உடன்படாத யூதேயா வாழ் யூதர்கள் யூத மதத்தை ரோமர்கள் விமர்சித்ததும் பொங்கினர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் படை வலிமையுடைய ரோமர்களின் முன்னால் யூதர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. போர் தீவிரமாய் நடந்தது. நீண்டகாலம் நடந்த யுத்தம், பட்டினியையும், ஏராளமான சாவுகளையும், உள்நாட்டுக் கலவரங்களையும் சம்பாதித்துத் தந்தது.
பாலஸ்தீனம் வீழ்ச்சியடைந்தது.
கிபி எழுபதாம் ஆண்டில் எருசலேம் தீக்கிரையானது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது.
யூதர்கள் அடிமைகளாக்கப் பட்டார்கள். அடிமைகளாக்கப் பட்ட யூதர்களை வைத்து ரோமர்கள் கடுமையான வேலை வாங்கினர். அப்போது தான் உலகப் புகழ் பெற்ற கொலோசியம் யூத அடிமைகளால் கட்டப்பட்டது.
கிபி. எழுபதாம் ஆண்டில் எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்ட பின்பு தான் யூத மதமும், கிறிஸ்தவ மதமும் இரண்டு வேறுபட்ட மதங்கள் என்னும் பார்வை பரவியது. அது கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்தியது. கிறிஸ்தவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். வீசி எறியப்பட்ட விதைகள் ஆங்காங்கே புதிய மரங்களைத் தோற்றுவிப்பது போல, சிதறடிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அடைக்கலம் புகுந்த இடத்திலெல்லாம் கிறிஸ்தவத்தை விதைத்தார்கள்.
எருசலேமில் ஆரம்பமான இயேசுவின் போதனைகள் இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பிற்குப் பிறகு எருசலேமிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் ஆரம்பமாகி பின் மற்ற இடங்களுக்கும் பரவியது. குறிப்பாக ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்த இடங்களிலெல்லாம் கிறிஸ்தவம் பரவியது.
பிளினி என்னும் வரலாற்று ஆசிரியர் ‘டிரஜன்’ என்னும் அரசனுக்கு சுமார் கி.பி 112 ம் ஆண்டில் எழுதிய கடிதம் ஒன்றில் “ஆசியா மைனரிலுள்ள அனைத்து நகரங்களிலும் சிலை வழிபாடுகள் கைவிடப்பட்டு மக்கள் கிறிஸ்த மதத்துக்குப் பெருமளவில் சென்று கொண்டிருக்கிறார்கள். இங்கே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேற்றுமை பாராட்டப் படுவதில்லை. பல இடங்களில் தாழ்ந்தவர்களாய்க் கருதப்படுவோர் தலைவர்களாக இருக்க உயர் குலத்தோர் அங்கத்தினர்களாக உள்ளனர்’ என்னும் பொருள் பட குறிப்பிட்டுள்ளது முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.
இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்
இரண்டாம் நூற்றாண்டில் டிரேஜான், ஆதிரையான், மார்கஸ் அரேலியஸ் போன்ற மன்னர்களால் கிறிஸ்தவ மதத்துக்கு துன்பம் ஏற்பட்டது.
டிரேஜான் கிபி தொன்னூற்று எட்டு முதல் நூற்று பதினேழு வரை அரசாண்டார். இவருடைய காலத்திலும் சிலை வழிபாடு ஊக்கப்படுத்தப் பட்டு, கிறிஸ்தவ வழிபாடு இன்னலுக்கு இலக்கானது. கிறிஸ்தவர்கள் அதிகமாய் பெருகி விட்டதனால் தேவாலயங்களில் பலியிடுவோர் குறைந்து விட்டதாகவும், அதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் பித்தானியாவின் அதிகாரி பிளினி என்பவர் டிரேஜானுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
கிறிஸ்தவர்கள் அரசனை வணங்கினால் விடுவிக்கப்பட்டனர். இல்லையேல் அவர்கள் துன்பப்படுத்தப் பட்டனர்.
ஃ
இக்னேஷியஸ் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ மத பேராயர். அந்தியோக்கியாவின் மூன்றாவது பேராயராய் இவர் இருந்தார். கிறிஸ்தவ மதத்தில் மிகவும் உறுதியாய் இருந்த இவர் தியோபோரஸ் என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்டிருந்தார்.
இயேசு ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்’ என்று சொல்லி கைகளில் தூக்கிய குழந்தைகளில் ஒன்று இவர் என்று இவரைக் குறித்து கதைகள் உலவுகின்றன.
நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஒன்றுக்கு கிறிஸ்தவர்களே காரணம் என்று சொல்லி இக்னேஷியஸ் கண்டிக்கப்பட்டார். அவரோ அசந்து போகவில்லை. கிறித்துவுக்கு சாட்சியாக நின்றார். இயேசுவை ஆதரித்து மன்னனை எதிர்த்தார். எனவே ரோம் நகருக்குக் கொண்டு வரப்பட்டு அவர் கொடிய விலங்குகளுக்கு விருந்தானார்.
ஃ
ஆதிரையான் மன்னன் கி.பி 117 முதல் 138 வரை ஆட்சி புரிந்தார். இவர் கிறிஸ்தவர்களை தேவையற்ற முறையில் துன்பப்படுத்தவில்லை. எனினும் கிறிஸ்தவ மதத்துக்கு ஏதேனும் அங்கீகாரமோ, கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாவலோ கிடைக்கவில்லை.
வழக்கம் போல கிறிஸ்தவர்கள் மறைவான வாழ்க்கையையே வாழ்ந்தார்கள். வெளிப்படையாக விசுவாசத்தை வெளிப்படுத்தியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ரோமை படைத் தளபதியாய் இருந்த அலெக்சாண்டர் என்பவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதற்காக கொலை செய்யப்பட்டார். மன்னனின் வெற்றியைப் பறைசாற்றி சிலைவழிபாடு நடக்கையில் அவர் கலந்து கொள்ள மறுத்தார். அது அரசனின் கோபத்தைக் கிளறி விட்டது. கிறிஸ்தவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். உயர் பதவியில் இருந்தாலும் கிறிஸ்தவன் என்றால் மரணம் வரும் எனும் எண்ணம் எல்லோருக்கும் இருந்தது.
அராரத் மலை கிறிஸ்தவர்களின் இரத்தத்தினாலும் இறுதி மூச்சுகளினாலும் நிறைந்தது. துன்பம் இறைவரம் என்றே நினைத்தனர் கிறிஸ்தவர்கள். எனவே அவர்கள் பகிரங்கமாக கிறிஸ்துவை அறிக்கையிட்டனர். அப்படி விசுவாசத்தை வெளிப்படுத்தியவர்கள் முட்களினால் முடிசூட்டப்பட்டனர். ஈட்டிகளினால் குத்தி கொலை செய்யப்பட்டனர். சிலுவையில் கொடூரமான கொலை செய்யப்பட்டனர். இயேசு தன்னுடைய மரணத்தின் போது அடைந்த அத்தனை வலிகளையும் ஒரு தவம்போலவே இருந்து ஏற்றுக் கொண்டனர் கிறிஸ்தவர்கள்.
எத்தனை கொடுமைகள் தங்களுக்கு எதிராக நடந்த போதிலும் கிறிஸ்தவர்கள் பொறுமை காத்தனர். எனவே கிறிஸ்தவர்களின் கடவுள் மிகப் பெரியவர் என்னும் கருத்தும் எழுந்தது. கொலோசீரியஸ் என்பவர் ‘கிறிஸ்தவர்களின் தலைவர் பெரியவர்’ என்று வெளிப்படையாய் சொன்னார்.
கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் மன்னனின் கோபத்துக்குத் தப்பவில்லை. கொலோசீரியனும் மன்னனின் ஆணைப்படி கொலை செய்யப்பட்டார்.
அவருடைய காலகட்டத்தில் நடந்த இன்னொரு முக்கியமான நிகழ்வு யூதர் புரட்சி. யூத மதத்தினரான இயேசுவின் பெயரால் புதிய மதம் புறப்பட்டதால் முதலில் யூதர்கள் மட்டுமே அந்த மதத்தில் இணைந்தனர். இன்னும் பலர் அதுவும் யூதமதத்தில் ஒரு பிரிவு என்றே எண்ணிக்கொண்டனர். ஆனால் காலப்போக்கில் அவையெல்லாம் மாறிவிட்டன. கிறிஸ்தவமும் யூதமும் வெவ்வேறானவை எனும் தெளிவு ஏற்பட்டது.
பார்கொக்பே, ராபி அக்கிபா எனும் இருவருடைய தலைமையில் யூதர்கள் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள். அப்போது விருத்த சேதனத்தைத் தடை செய்யப்பட்டு மன்னன் சட்டம் இயற்றினார்.
பார்கொக்பே இறைவனின் தூதர் எனும் எண்ணம் யூதர்களிடையே இருந்தது. ஆனால் கிறிஸ்தவர்கள் அவரை மதிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இயேசுவே மெசியா. எனவே அவர்கள் யூதர்களின் பார்கொக்பேவை வழிபடவும் இல்லை வணங்கவும் இல்லை. இது யூதர்களை எரிச்சலடையச் செய்தது.
கிறிஸ்தவர்கள் அதிகமாய் யூதர்களைப் பகைத்துக் கொள்ள இது ஒரு முக்கிய காரணமாயிற்று. யூதர்கள் கிறிஸ்தவர்களை அதிகமாய் துன்பப்படுத்த ஆரம்பித்தனர்.
கி.பி 124ல் மன்னன் ஆதிரையான் தன்னுடைய ஆட்சிக்குக் கீழே உள்ள தலைவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினான். அதில் கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்பப்படுத்தக் கூடாது. கிறிஸ்தவர்களைக் காரணமின்றி துன்பப்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தான்.
கி.பி 135ம் ஆண்டு பார்கொக்பே கைது செய்யப்பட்டார்.
கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் முக்கியமாக இருந்த எருசலேம் நகரம் ஏலியா கேப்பிட்டோலினா என்று அழைக்கப்பட்டு வேற்று மதத்தினருக்கு உரியதாயிற்று.
ஃ
கிபி 138 க்குப் பின் அரியணை ஏறி 161 வரை ஆட்சி செய்த மன்னர் ஆண்டோனியஸ் பயஸ் என்பவர். இவர் இதற்கு முன் மன்னனாய் இருந்த ஆதிரையானின் வளர்ப்பு மகன்.
இவர் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாய் இருக்கவில்லை. எனினும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சமுதாயக் கொடுமைகள் ஒழியவில்லை. கிறிஸ்தவர்கள் தனியாகவே வாழ்க்கை நடத்தினார்கள். இவர் காலத்திலும் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பறைசாற்றியதால் பலியானவர்கள் ஏராளம்.
இவருடைய ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் போலிகார்ப். இவர் கி.பி 70 பிறந்தவர். இவர் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான யோவானின் சீடர்.
சீரியா நாட்டைச் சேர்ந்த இவர் அடிமையாய் விற்கப்பட்டவர். பெரும் பணக்காரப் பெண்மணியான காலிஸ்டோ இவரை அடிமையாக வாங்கினார். அடிமை வேலைகளைச் செய்து வந்த போலிகார்ப்பின் நேர்மையையும், உண்மையையும், அன்பையும் கண்டு வியந்த காலிஸ்டோ, தன்னுடைய சொத்துகளை எல்லாம் அவருக்கு எழுதி வைத்தார்.
காலிஸ்டோவின் மரணம் போலிகார்ப் ஐ ஒரு மிகப்பெரிய செல்வந்தராக்கியது. இவர் கிறிஸ்தவ மதத்தின் மீது ஆழமான பற்றுறுதி கொண்டிருந்தார். சிமிர்னா பகுதியில் கிறிஸ்தவத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார் அவர்.
இவருக்கும் ரோமையிலுள்ள திருச்சபைத் தலைமைக்கும் கருத்து வேறுபாடு வந்தது. இயேசுவின் உயிர்ப்பு தினம் அந்த குறிப்பிட்ட நாளில் தான் கொண்டாட வேண்டும் எனும் எண்ணத்தை போலிகார்ப் வலியுறுத்தினார்.
ஆனால் எல்லா ஆண்டும் ஞாயிற்றுக் கிழமை தான் அதை நினைவு கூர வேண்டும் என்பது ரோமை திருச்சபையின் எண்ணமாய் இருந்தது. இந்த விவாதம் அந்த காலகட்டத்தில் கிறிஸ்தவத்தில் எழுந்த முக்கியமான விவாதமாகக் கருதப்படுகிறது.
ஆண்டோனியஸ் பையஸின் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் போலிகார்பைக் கைது செய்யத் தேடினார்கள். அவர் பக்கத்து ஊருக்குச் சென்று பதுங்கினார்.
போலிகார்ப் ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அதில் அவருடைய தலையணை தீப்பற்றி எரிந்தது. கடவுளிடம் மன்றாடிய அவருக்கு கனவின் பொருள் விளங்கியது. தான் எரித்துக் கொல்லப்படப் போவதன் அறிகுறியே அது என அறிந்தார்.
அதே நேரத்தில் அரசனின் வீரர்கள் அவரைத் தேடி அலைந்தார்கள். ஆனால் அவருடைய ஆதரவாளர்கள் அவரைக் காட்டிக் கொடுக்கவில்லை. கடைசியில் மன்னன் போலிகார்ப்பின் இருப்பிடம் தெரிந்த இருவரைப் பிடித்து சித்திரவதை செய்தான்.
சித்திரவதையைத் தாங்க முடியாத ஒருவன் அவருடைய மறைவிடத்தைச் சொன்னான். படைவீரர்கள் அவருடைய வீட்டை அடைந்தனர். நடப்பதெல்லாம் இறை சித்தம் என்று உறுதியாக நம்பிய போலிகார்ப் மாடியிலிருந்து இறங்கி வந்து அவர்களுடன் உரையாடினார்.
அவருடைய உறுதியைக் கண்டு படைவீரர்கள் வியந்து போனார்கள். அவர் அவர்களுடன் உரையாடினார். பின்னர் தனக்கு செபிக்க சிறிது நேரம் தருமாறு கேட்டுக் கொண்டார். படை வீரர்களும் அவரை செபிக்க அனுமதித்தனர். இரண்டு மணி நேரம் நின்றவாறே செபித்தார் அவர்.
போலிகார்ப் மன்னனிடம் அழைத்துச் செல்லப்பட்டார். போலிகார்ப்பின் உறுதி மன்னனையும் கூட இருந்தவர்களையும் வியப்பிலாழ்த்தியது.
‘மன்னனை வணங்கி தூப ஆராதனை செய். உன்னை விடுவிப்போம்’ போலிகார்ப்பிடம் அவர்கள் சொன்னார்கள்.
‘நான் உங்கள் விருப்பப்படி நடப்பவன் அல்ல’ போலிகார்ப் உறுதியாகப் பதிலளித்தார்.
அவரை பயமுறுத்தி, காயப்படுத்தினார்கள். அவர் அசரவில்லை. விளையாட்டு அரங்கத்திற்கு அவரை வண்டியில் கொண்டு சென்று வழியிலேயே அவரை கீழே தள்ளினார்கள். அப்போதும் அவர் எதுவும் நடவாதவர் போல சிரித்துக் கொண்டே இருந்தார்.
மன்னன் அவரைப் பார்த்தார். அவருடைய வயதையும் கவனித்தார்.
‘இந்த வயதில் உனக்கு என்ன இத்தனை பிடிவாதம். நீ என்னை வணங்கவேண்டாம். கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் கடவுள் இல்லாதவர்கள் என்று மட்டும் சொல் உன்னை விடுவிப்பேன்’ என்றான். போலிகார்ப் சிரித்தார்.
எண்பத்து ஆறு ஆண்டுகள் கடவுளுக்காகப் பணிபுரிந்தேன். அந்த கடவுளை எப்படி நான் இழிவாகப் பேச முடியும். அவர் உண்மையான கடவுள் என்றார்.
‘நீ கிறிஸ்தவர்களை பழிக்காவிடில் உயிரை இழப்பாய்’ மன்னன் எச்சரித்தான்
‘கிறிஸ்தவர்களைப் பழிப்பது என்பது கிறிஸ்துவைப் பழிப்பது போல. அதை விட உயிரை இழப்பதே மேல்’ போலி கார்ப் சொன்னார்.
‘உன்னை காட்டு மிருகங்களுக்கு உணவாகப் போடுவேன் அல்லது எரித்துக் கொல்லுவேன்’ மன்னன் கோபமடைந்தார்.
‘செய்ய வேண்டியதை விரைவிலேயே செய்ய வேண்டியது தானே ? ஏன் இன்னும் தாமதம்’ போலிகார்ப் சொன்னார்.
சுற்றியிருந்த மக்கள் “இவனை எரித்துக் கொல்லுங்கள்” என்று கத்தினார்கள்.
மன்னனும் இசைந்தான்.
எரிப்பவர்களை மரத்தில் கட்டி கைகளை ஆணிகளால் அறைந்து தீ வைப்பது அவர்களின் வழக்கம். போலிகார்ப்பும் மரத்தில் கட்டப்பட்டார். ஆணிகளால் அவருடைய கையை அடிக்க முனைந்தபோது அவர் தடுத்தார்.
என் கைகளை ஆணிகளால் அறைய வேண்டாம். நான் எந்த நெருப்புக்கும் அசையாத உறுதியை கடவுள் தருவார். என்றார்.
போலிகார்ப்பின் உறுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவர் கைகளில் அவர்கள் ஆணி அடிக்கவில்லை.
அவரைக் கட்டி வைத்தபின் அவரை எரித்தார்கள். அவர் அசையாமல் செபநிலையிலேயே நின்றார். அவரை ஈட்டியாலும் குத்தினார்கள். போலிகார்ப்பின் உயிர் பிரிந்தது. அவர் மரணமடைந்த ஆண்டு 155 பெப்பிரவரி 23.
ஃ
மார்கஸ் அரேலியஸ் மன்னன் கிபி 161 முதல் 180 வரை ரோம் அரசராக இருந்தான். இவனுடைய ஆட்சிக்காலமும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைக் கட்டவிழ்ப்பின் அரசாகவே இருந்தது.
இவனுடைய பார்வையில் கிறிஸ்தவர்கள் என்பவர்கள் பிடிவாதகாரர்கள். எது சொன்னாலும் கேட்காதவர்கள். தன்னுடைய பேச்சைக்கேட்காத யாரையும் அரசர்களுக்குப் பிடிப்பதில்லையே. அதுவே தான் நடந்தது இந்த மன்னனின் ஆட்சியிலும்.
இவர் காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் ஜஸ்டின் மார்டர் என்பவர். இவர் சிறந்த தத்துவ ஞானி. கற்றறிந்தவர். தன்னுடைய கல்வியினாலும் ஞானத்தினாலும் கிடைக்காத மன நிம்மதி கிறிஸ்தவத்தில் இணைவதில் கிடைக்கப் பெற்றார்.
எனவே இவர் பல கிறிஸ்தவ நூல்களை இயற்றி மக்களுக்கு கிறிஸ்தவ மதத்தைக் குறித்த புரிதலுக்கு வழி வகுத்தார். கிறிஸ்தவ மதம் சார்ந்த கோட்பாடுகளை விவாதத்தின் மூலம் பரப்பினார். இவருடைய வேகமான போதனையினால் பலர் கிறிஸ்தவர்களானார்கள்.
ரோம அரசன் எரிச்சலடைந்தான். ஜஸ்டினைக் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.
ஜஸ்டின் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின. ஜஸ்டின் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டார்.
ஜஸ்டின் தைரியமாய் நின்றார். நடுவர் அவரை நோக்கி கேள்வியை வீசினார்.
‘நீ உயிர்த்தெழுவாய் என நினைக்கிறாயா ?’
‘நினைக்கவில்லை. உண்மையிலேயே நடக்கும் என்பது எனக்குத் தெரியும்’ ஜஸ்டினின் பதில் அவர்களை எரிச்சலடையச் செய்தது. அவருக்கு எதிராக தீர்ப்பு எழுதப்பட்டது.
‘சம்மட்டியால் அடித்து இவனுடைய தலையை சிதையுங்கள்’ குரூரமான ஆணையைக் கேட்டு ஜஸ்டின் கலங்கவில்லை. தைரியமாய் நின்றார்.
சம்மட்டிகள் அவருடைய தலையை பிளந்தன. சிதைத்தன. ஜஸ்டின் விசுவாசத்தை விட்டு விலகாமல் உயிர் விட்டார்.
பிலாண்டினா எனும் பெண்மணி ஒருத்தியும் மார்கஸ் அரேலியஸ் காலத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவரும் கிறிஸ்தவ மதத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதால் அரசனின் ஆணைகளைப் புறக்கணித்தவர். கிறிஸ்தவ மத பிரச்சாரங்களில் ஈடுபட்டதால் இவர் கொலை செய்யப்பட்டார்.
பழுக்கக் காய்ச்சிய இரும்பு நாற்காலியில் உட்கார வைத்து பின்னர் கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போடப்பட்டார். எரிந்தும், கிழிந்தும் உயிர்விட்டார் பிலாண்டினா.
ஃ
கமோடஸ் என்னும் மன்னன் அதன்பின் ஆட்சிப் பொறுப்பேற்று கி.பி 191 வரை ஆட்சி புரிந்தான். தன்னுடைய பதினெட்டாவது வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கமோடஸ் தந்தை மார்கஸ் அரேலியசைப் போலன்றி சற்று நிதானமாய் இருந்தார்.
இவருடைய மனைவி மார்சியா கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். எனவே இவரிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு சற்று விடுதலை கிடைத்தது. கிறிஸ்தவர்கள் அதிக துன்பங்களைச் சந்திக்கவில்லை.
இதே காலகட்டத்தில் ஆப்பிரிக்காவில் பலர் கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் நடந்தன. நுமீதியாவிலுள்ள சிலியில் பன்னிரண்டு பேர் கிறிஸ்தவர்கள் என்பதால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் ‘சிலியின் இரத்த சாட்சிகள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
இரண்டாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள்
இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் தன்னுடைய ஆளுமையை வளர்த்துக் கொண்டது. நிர்வாக அமைப்பைப் போல பேராயர்கள், துணை ஆயர்கள், டீக்கனார் என பல அடுக்கு தலைமைகள் உருவாக்கப்பட்டன.
திருச்சபை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வன்முறைகளைச் சந்தித்து வந்ததால் இந்த அமைப்பு ரீதியின் தேவை அதிகரித்தது. மேலும் இந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட கிறிஸ்தவ இலக்கியங்களைப் பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கிறிஸ்தவ வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த அப்போஸ்தலர்களின் நூல்களுக்கு மாற்றாக இந்த நூற்றாண்டில் மார்சியன் தன்னுடைய நூல் ஒன்றை வெளியிட்டார். எனவே இக்காலகட்டத்தில் எவையெல்லாம் திருச்சபைகளில் பயன்படுத்தப்பட வேண்டும் எனும் வரை முறை கொண்டு வரப்பட்டது.
கிறிஸ்தவர்களுடைய அணுகுமுறையும், வாழ்க்கை முறையும் பலரால் வியப்புடன் பார்க்கப்பட்டன. கி.பி 125ல் அரிஸ்டைடிஸ் என்பவர் எழுதிய நூலில் கிறிஸ்தவத்தைப் பற்றி மிகவும் வியந்து எழுதியுள்ளார்.
கிறிஸ்தவர்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபடாமல் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறார்கள். விபச்சாரப் பாவத்தைச் செய்வதில்லை. பொய்சாட்சி சொல்ல மறுக்கிறார்கள். பெற்றோரைப் பெருமையுடனும் அன்புடனும் நடத்துகிறார்கள். மனத்தாழ்மை, அன்பு இவற்றைக் கடைபிடிக்கிறார்கள். தன்னை விடத் தாழ்ந்தவர் என்று யாரையும் அவர்கள் நினைப்பதில்லை. அடிமைக்கும், மன்னனுக்கும் ஒரே கவுரவத்தைத் தருகிறார்கள். அவர்கள் இறைவனை எல்லா நிகழ்வுகளுக்கும் புகழ்கிறார்கள். எனவே தான் பூமி செழிக்கிறது. என்று அவர் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார்.
கார்தேஜ் என்னும் நாட்டில் பிளேக் நோய் பரவியபோது மற்ற அனைத்து சமூகத்தினரும் விலகினார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் அவர்களோடு இருந்து அவர்களுக்கு பணிவிடை செய்தனர்.
கேலிஸ்டன் என்பவர் அடிமையாய் இருந்தவர். அவர் கிறிஸ்தவத்தைத் தழுவியபின் பேராயராக மாறினார். எனவே கிறிஸ்தவத்துக்குள் சமத்துவம் நிலவியது என்பதை உணர முடிகிறது.
ரோம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் அறுபது சுரங்கக் கல்லறைகளில் பல செய்திகள் காணக் கிடைக்கின்றன. கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரை இழந்தவர்களுடைய கல்லறைகளில் கிறிஸ்துவுக்காய் துன்பப்பட்டவர்கள் என எழுதப்பட்டுள்ளது.
தோளில் ஆட்டுக்குட்டியைச் சுமக்கும் இயேசுவின் படம் இந்த கல்லறைகளில் காணப்படுவது வியப்பு தருகிறது. பாய்மரக்கப்பல், திராட்சைக் கொடி, மீன், நங்கூரம் போன்ற பல சித்திரங்கள் இந்த குகைகளில் காணக் கிடைக்கின்றன.
குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கும் வழக்கம் இந்த நூற்றாண்டிலேயே இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. மேலும் திருமுழுக்கு எளிதாகக் கொடுக்கப்படாமல் அதற்குரிய சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்பட்ட பின்பே அளிக்கப்பட்டிருக்கின்றன.
கோதுமை அப்பமும் திராட்சை இரசமும் திருப்பலிகளில் நன்கொடையாக வழங்கப்பட்டன. பின் அவை சபையோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பாவ மன்னிப்பு வழக்கம் இருந்தது. மற்றவர்களை மன்னிப்பதன் அடையாளமாக சமாதான முத்தம் இடும் வழக்கமும் இருந்தது.
இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் தான் கிறிஸ்தவர்கள் ஆலயங்களைக் கட்டி வழிபாடு ஆரம்பித்தனர். யூதர்களுடைய ஆலயங்களில் ஆலயத்துக்கு வெளியே கைகளைக் கழுவ தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த வழக்கம் அன்றைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் காணப்பட்டது.
கிறிஸ்து பிறப்பு விழா, உயிர்ப்பு விழா, தூயவர்கள் மணமடைந்த விழா என பல விழாக்கள் இரண்டாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டிருக்கின்றன.
மூன்றாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்
செப்டிமஸ் செவேரஸ் என்பவர் மூன்றாம் நூற்றாண்டின் முதல் மன்னன். கி.பி 211 வரை இவருடைய ஆட்சி இருந்தது. இவருடைய ஆட்சி துவக்கத்தில் நல்ல ஆட்சி போல தோற்றமளித்தது. ஆனால் போகப் போக அவருடைய குணம் மாறியது.
கிறிஸ்தவர்களின் துன்பம் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் எகிப்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கும் பல விதமான சோதனைகள் நேர்ந்தன. இவருடைய ஆட்சி காலத்தில் கார்த்தேஜில் பலர் கிறிஸ்தவத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டனர்.
கார்தேஜில் இவருடைய காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் பெர்பெத்துவா மற்றும் பெலிசிட்டாஸ் எனும் இரண்டு பெண்கள் மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் தங்களுடைய விசுவாசத்தை விட மறுத்ததால் கொலை செய்யப்பட்டனர்.
பெர்பெத்துவா நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவளுடைய இருபத்து இரண்டாவது வயதில் கிறிஸ்தவத்தில் ஆழப் பதிந்திருந்தாள். திருமணமாகி குழந்தை ஒன்றுக்குத் தாயானவள். உலகில் எதையும் விட இயேசுவே வேண்டும் என்பதில் உறுதியாய் நின்றாள்.
காவலர்கள் கையில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது அவளுடைய மனதை மாற்ற தந்தையார் பல முறை பல வழிகளில் முயன்றார். ஆனால் எதுவும் பயன் தரவில்லை.
சிறைச்சாலையில் பலவிதமான சித்திரவதைகளுக்கு உட்பட்டு இறுதி மூச்சு வரை இயேசுவை மறுதலிக்காமல் விசுவாசத்தில் நிலைத்து நின்றார்.
பெலிசிட்டாஸ் ஒரு அடிமைப் பெண். அவளும் திருமணமாகி எட்டு மாத கர்ப்பிணியாய் இருக்கையில் காவலர்களிடம் பிடிபட்டாள். கிறிஸ்துவை மறுதலி, உனக்கு விடுதலை. உன் குழந்தையுடன் நீ ஆனந்தமாய் வாழலாம். காவலர்கள் கூறினர்.
கிறிஸ்துவை மறுதலித்து வாழ்வதை விட, கிறிஸ்துவுக்காய் உயிரை விடுதல் சிறந்தது என்று விசுவாசத்தில் நிலைத்து நின்றாள் பெலிசிட்டாஸ்.
இறுதியில் இருவரும் முரட்டுத்தனமான மாடுகளுக்கு முன்பாகப் போடப்பட்டார்க. விலங்குகள் இவர்களை மிதித்து, இடித்து சித்திரவதை செய்தன. இறுதியில் இவர்கள் இருவரையும் குத்திக் கொன்று விட்டனர்.
செப்டிமஸ் செவேரஸ்க்குப் பின் தேசியு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர் கி.பி249 முதல் 251 வரை ஆட்சி செய்தார். இவர் கிறிஸ்தவக் கொள்கைகள் அரசுக்கு எதிரானவை எனும் கண்ணோட்டத்தில் கிறிஸ்தவத்தை முழுமையாக எதிர்த்தார்.
இவர் காலத்தில் தங்கள் உடமைகளையும், உயிரையும் இழந்தவர்கள் அனேகர். ரோம் நகரில் ஃபேபியன், அந்தியோக்கியாவில் பாபிலாஸ், எருசலேமில் அலெக்சாண்டர், சிமிர்னாவில் பயோனியஸ் ஆகியோர் இந்த காலகட்டத்தில் உயிரிழந்த மிகவும் முக்கியமான நபர்கள் ஆவர்.
அதன்பின் வெலேரியன் மன்னன் கிபி 260 வரை ஆட்சி செய்தார். அதுவும் மற்ற மன்னர்களின் ஆட்சிபோல கிறிஸ்தவர்களை வெறுக்கும் அரசாகவே இருந்தது.
அலீரியன் மன்னன் கிபி275 வரை ஆட்சி செய்தார். அதன்பின் டியோக்ளேஷியன் என்னும் மன்னன் ஆட்சிக்கு வந்தான். இவனுடைய காலத்தில் கிறிஸ்தவர்கள் பல மட்டங்களிலும் ஊடுருவியிருந்தார்கள்.
அரண்மனையில் மன்னனின், மனைவியும் மகளும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். அரண்மனைப் பணியாளர்களிலும் பலர் கிறிஸ்தவர்களாய் இருந்தார்கள். எனினும் கிறிஸ்தவர்களின் மீதான வெறுப்பு மன்னனுக்குக் குறையவில்லை.
இவனுடைய ஆட்சி காலத்தின் நான்கு முக்கியமான உத்தரவுகளை மன்னன் பிறப்பித்தான். இந்த நான்கு உத்தரவுகளுமே பல்வேறு காலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்தன.
முதலாவது உத்தரவின் மையம் கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்படவேண்டும், கிறிஸ்தவ மத நூல்கள் கொளுத்தப்படவேண்டும் என்றிருந்தது. கிறிஸ்தவர்களுக்கு பணிகளில் கீழ் நிலை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் அடிமை நிலைக்கு தாழ்த்தப்பட வேண்டும் என்றும் ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கட்டளையை எதிர்த்த கிறிஸ்தவர்கள் எரிக்கப்பட்டனர்.
இரண்டாவது உத்தரவு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அனைத்து குருக்களும் கொல்லப்படவேண்டும் எனும் கடுமையான உத்தரவாய் இருந்தது. இந்த உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டபோது அனைத்து சிறைச்சாலைகளும் குருக்களால் நிறைந்து வழிந்தன.
மூன்றாவது உத்தரவும் கிறிஸ்தவர்களை மிரட்டி ஆசைகாட்டியது. அதில் கிறிஸ்தவர்கள் பிற தெய்வங்களுக்குப் பலியிடவும், ஆராதனை செய்யவும் சம்மதித்தால் விடுதலை உண்டு என்றும், சமூக அந்தஸ்து உயர்த்தப்படும் என்றும் உறுதி தரப்பட்டது. பலி செலுத்தும்படியாக கிறிஸ்தவர்கள் பலவந்தப்படுத்தப்பட வேண்டும், வன்முறைகளினால் அவர்களை வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அந்த உத்தரவு போதித்தது.
நான்காவது உத்தரவு கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறியது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அரசு நிலையிலிருந்து ஏற்பட்ட விரோதம் போல பொதுமக்களிடமிருந்து கோபம் எழவில்லை. பல இடங்களில் கிறிஸ்தவர்கள் பரவியிருந்ததாலும், கிறிஸ்தவர்களால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏதும் நிகழாததாலும் பொது மக்களிடம் கிறிஸ்தவர்களை எதிர்க்கும் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
மூன்றாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள்
மூன்றாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் சந்தித்த வன்முறை இரண்டாம் நூற்றாண்டில் சந்தித்ததை விட மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். கிறிஸ்தவம் பல இடங்களுக்குப் பரவியதும், கிறிஸ்தவர்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எண்ணம் பொய்யாய் போனதும் இதன் காரணமாக இருக்கலாம்.
கிறிஸ்தவம் ஒரு அமைப்பு ரீதியாக சற்று பலப்படத் துவங்கியது. சபையில் வெளியிலிருந்து வரும் இன்னல்களை மீறி உள்ளுக்குள்ளேயே கருத்து மோதல்கள் எழுவது சகஜமாயிற்று.
கிறிஸ்தவத்தில் முதல் நூற்றாண்டில் இருந்த பற்றுறுதி உடைபடத் துவங்கியது. கிறிஸ்துவுக்காக இறப்பது நல்லது எனும் சிந்தனை இருந்தாலும் அது வலுவிழந்ததாய் காணப்பட்டது. பலர் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள கிறிஸ்தவத்துக்கு எதிராக பேசிய நிகழ்வுகளும், பின் வாங்கிய நிகழ்வுகளும் நடந்தன.
இதன் முக்கியமான காரணம் இயேசுவின் இரண்டாம் வருகை நிகழவில்லை என்பதே. பலர் இயேசு உயிர்த்த சில ஆண்டுகளிலேயே இயேசுவின் இரண்டாம் வருகை வரும் என்று நம்பினார்கள். அது இந்த காலத்தில் பொய்க்கத் துவங்கியது. இரண்டாம் வருகையைக் குறித்த நம்பிக்கைகள் மறையத் துவங்கின.
பாவ மன்னிப்பு என்பது சபையில் அனைவரிடமும் சொல்ல வேண்டும் எனும் நிலை மாறி குருவானவரிடம் மட்டுமே சொல்ல வேண்டும் எனும் நிலை உருவானது இந்த நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றாகும்.
குருக்கள் பெரும்பாலும் மணமாகாதவர்களாகவே இருந்தார்கள். இயேசு திருமணம் செய்து கொள்ளவில்லை எனவே குருக்களும் திருமணம் செய்யக் கூடாது எனும் எண்ணம் வலுவாய் இருந்தது.
உயிருக்குப் பயந்து கிறிஸ்துவை மறுதலித்தவர்களை மீண்டும் கிறிஸ்தவத்தில் சேர்த்துக் கொள்வது தேவையா எனும் விவாதம் எழுந்தது. சரி என்றும், தவறு என்றும் இருபிரிவினர் வாதிட்டனர். ரோம் திருச்சபை மன்னித்தல் இறைவனின் வரம் எனவே மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என உறுதியாய் கூறியது.
ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டவர்கள் நோவேட்டஸ் என்பவரின் தலைமையில் தனி பிரிவாக இயங்கினர். இந்த பிரிவினர் ஐந்தாம் நூற்றாண்டுவரை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
கிறிஸ்துவுக்காக இறப்பவர்கள் மரியாதை செலுத்தப்பட்டன. அவர்கள் விண்ணகத்தில் இயேசுவோடு இருக்கிறார்கள் என்றும் அவர்கள் மூலமாக இறைவனிடம் வேண்ட முடியும் என்னும் சிந்தனைகளும் பரவின. எனவே மக்கள் விண்ணப்பங்களையும் இரத்த சாட்சிகளாய் மரித்தவர்களிடமும் வைத்தனர்.
திருமுழுக்கு கொடுப்பதில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. திருமுழுக்கின் போது நெற்றியில் சிலுவை அடையாளம் இடுதல், வெள்ளை உடை அணிதல் போன்ற இன்றைய முறை இந்த நூற்றாண்டில் தான் ஆரம்பித்தது.
திருப்பலியில் வழங்கப்படும் திராட்சை இரசமும், கோதுமை அப்பமும் இயேசுவின் இரத்தமாகவும் உடலாகவும் இருக்கிறது எனும் சிந்தனை ஆழமாய் பரவியிருந்தது. நற்கருணை வழிபாடுகள் முக்கியத்துவம் அடைந்தன. இயேசு சிலுவையில் பலியானதன் தொடர்ச்சி நற்கருணை வழிபாட்டால் கிடைக்கிறது எனும் நம்பிக்கையும் கிறிஸ்தவத்தில் இருந்தது.
நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்
நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் மேலும் பல கருத்து வேறுபாடுகளைச் சந்தித்தது. டொனேட்டிசம் மற்றும் அரியானிஸம் என்பவை இந்த நுற்றாண்டில் நோன்றிய இரண்டு முக்கியமான பிரிவுக் குழுக்களாகும்.
டொனேட்டிசம் மென்சூரியஸ் என்பவரை மையப்படுத்தி உருவானது. துன்ப நாட்களில் பல குருக்கள் கிறிஸ்தவ நூல்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர். அவர்களை கிறிஸ்தவத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டது.
அந்த நாட்களில் கிறிஸ்துவுக்காய் இறப்பது மிகப்பெரும் பெருமைக்குரிய செயலாக இருந்தது. எனவே பலர் தாமாகவே முன்வந்து மரணத்தை ஏற்றுக் கொண்டனர். இதை மன்சூரியஸ் எதிர்த்தார். இப்படி இறப்பவர்களுக்கு மரியாதை செலுத்தப் படக் கூடாது என்று அறிவித்தார்.
அரியானிஸம் அரியன் எனும் குருவானவரால் உருவாக்கப்பட்டது. இவர்களுடைய கொள்கைப்படி கடவுள் துவக்கமும், முடிவும் இல்லாமல் முழுமையானவர். ஒரே கடவுள். அவருடைய தன்மை பகிரும் தன்மையோ, உருமாறும் தன்மையோ அல்ல.
எனவே இயேசு கடவுள் அல்ல. அவர் கடவுளிடம் நேரடியாய் பேச முடியாதவர். தன்னுடைய வாழ்க்கை முறையை ஒத்தே அவருக்கு கடவுளிடமுள்ள அருள் இருக்கும் என்று போதித்தார்.
இவருடைய இந்த கொள்கை ஒட்டு மொத்த கிறிஸ்தவ நம்பிக்கைக்கே இடையூறாக விளங்கியது. எனவே கி.பி 321ல் எகிப்தில் கூடிய பேராயர் பேரவை இவரை கிறிஸ்தவ மதத்தை விட்டு வெளியேற்றியது.
இந்த பிளவை சரிசெய்வதற்காக கான்ஸ்டண்டைன் மன்னன் கூட்டிய முதல் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் நிசியாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
உலகின் பல இடங்களிலிருந்தும் வந்திருந்த முன்னூறு பேராயர்கள் பல முக்கிய முடிவுகளை இங்கே எடுத்தனர். இந்தியாவிலிருந்தும் ஒரு பேராயர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இயேசுவின் கடவுள் தன்மையை உறுதி செய்து அதற்குரிய விசுவாச பிரமாணங்கள் தயாராக்கப்பட்டன.
இயேசு கடவுளைப் போல அதே தன்மையுடையவர் எனும் கருத்து வலிமைப்படுத்தப் பட்டது. அரியானிஸம் கொள்கை நிராகரிக்கப்பட்டது. அவரை மதம் வெறியேற்றியதுடன் அவருடைய நூல்களையும் எரித்தது.
இந்த கூட்டத்தில் மேலும் பல முக்கிய தீர்மானங்கள் ஒத்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டன. இயேசுவின் உயிர்ப்பு விழா ஒரு ஞாயிற்றுக் கிழமை தான் கொண்டாடப்பட வேண்டும் எனவும், திருச்சபைகளில் பல சட்டதிட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப் பட்டன.
அதன் பின் வந்த பல மன்னர்கள் நிசியா குழுவை எதிர்ப்பவர்களாக இருந்தனர். குறிப்பாக 337ல் அரசரான காண்டாண்டியஸ் நிசியா கொள்கைக்கு எதிராக தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அரியானிஸம் கொள்கையை நிலைப்படுத்த முயன்றார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை.
இதன்பின் 361ல் ஆட்சிக்கு வந்த ஜூலியன் மன்னன் கிறிஸ்தவத்தையே விரட்டி விட முயற்சி எடுத்து தோல்வியடைந்தார். 371ல் ஆட்சிக்கு வந்த தியோடோசியஸ் மன்னன் தான் நிசியா பொதுக்குழிவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு முழு ஆதரவு கொடுத்தார்.
நிசியா விசுவாசப் பிரமாணம் என்று அழைக்கப்பட்டு இன்றும் ஆலயங்களில் வாசிக்கப்படும் விசுவாசப்பிரமாணம் கிபி 381ல் கான்ஸ்டாண்டினோ புரியில் கூட்டப்பட்ட குழுவில் தயாராக்கப்பட்டது.
அப்போலிநரியானிஸம் என்று இன்னொரு கொள்கையும் இந்த காலகட்டத்தில் தோன்றியது. இதன்படி இயேசு உண்மையில் மனிதரல்ல. அவருக்குள் இருந்தது மனித ஆன்மா அல்ல. அது வார்த்தை. மட்டுமன்றி பரிசுத்த ஆவியானவருக்கு எந்த விதமான தெய்வத் தன்மையும் இல்லை.
இந்த கொள்கை பெருமளவில் பரவவில்லை. இதை கிறிஸ்தவம் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
நான்காம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள்
நான்காம் நூற்றாண்டில் திருச்சலை அரசியல் நிகழ்வுகளோடு இணைந்து விட்டது. அரசின் வெறுப்பு ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவர்கள் பக்கம் குவிந்திருந்த காலம் மறைந்து போயிருந்தது.
இந்த நூற்றாண்டில் சில முக்கியமான கிறிஸ்தவ அடிப்படை எண்ணங்கள் வலுப்பெற்றன. குருக்கள் திருமணமாகாதவர்களாக இருப்பதே சிறந்தது எனும் மூன்றாம் நூற்றாண்டுச் சிந்தனை இந்த நூற்றாண்டில் வலுவடைந்து பெரும்பாலானவர்களின் அங்கீகாரத்துக்கு வந்தது.
திருப்பலிகளில் வழங்கப்படும் அப்பமும், திராட்சை இரசமும் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் இருக்கிறது எனும் சிந்தனையும் வலுவடைந்தது.
இயேசுவுக்காய் பாடுகள் பட்டு இறந்தவர்களை நோக்கி விண்ணப்பம் வைக்கும் வழக்கமும் தீவிரமடைந்தது. சிலர் இத்தகைய புனிதர்களை வணங்கவும் ஆரம்பித்தனர். எனவே இந்த காலகட்டத்தில் இரத்தசாட்சியாய் இறந்தவர்கள் விண்ணக தூதர்கள் போல கௌரவிக்கப்பட்டனர்.
மிகப்பெரிய பிரம்மாண்டமான ஆலயங்கள் இந்த நூற்றாண்டில் தான் கட்டப்பட்டன. நிக்கோதேமியாவில் இந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் அரண்மனை போல அற்புதமாய் விளங்கியது என குறிப்புகள் தெரிவிக்கின்றன
எருசலேம், பெத்லேகேம், ரோம் போன்ற இடங்களிலும் சிறப்பான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டன. கிறிஸ்தவ மதம் சமூகத்திலுள்ள பிற மதங்களோடு இணைந்து தனித்துவம் பெற்ற மதமாக எங்கும் பரவத் துவங்கியது.
கருங்கடலுக்கு வட கிழக்கே அமைந்திருந்த ஜியார்ஜியா நாடு கிறிஸ்தவ நாடானது. ஒரு கிறிஸ்தவ அடிமைப் பெண்ணின் ஜெபத்தினால் அந்த நாட்டு அரசி சுகமானதே இதன் காரணமாயிற்று.
அர்மீனியா நாடும் அந்த காலத்தில் கிறிஸ்தவ நாடானது. அதற்கு அந்த நாட்டு இளவரசன் கிரிகோரியே காரணமானார். அந்த நாட்டிலுள்ள பல ஆலயங்கள் கிறிஸ்தவக் கோயில்களாக மாற்றப்பட்டன.
பாரசீகத்திலும் நான்காம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் கிறிஸ்தவம் மிகவும் செழுமையுடன் காணப்பட்டது. ஆனால் நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கிறித்தவர்களுக்கு அங்கே பெரும் இன்னல் காத்திருந்தது. அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அவர்களுடைய பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
ஆயிரத்து அறுநூறு கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தின் காரணமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்த மக்கள் சிரிய மொழியைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் அங்கிருந்து பின்னர் இந்தியா வந்து மலபார் சபையில் இணைந்திருக்கலாம் என்றும். இவர்கள் மூலம் சிரியன் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
அரேபியா நாட்டிற்கும் கிறிஸ்தவம் கொண்டு செல்லப்பட்டது. கிறிஸ்தவ துறவியர் அதற்காக அரேபியப் பாலைவனங்களில் பயணித்து பலருக்கு சுகமளித்தனர்.