Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு : 5. திருச்சபை வளர்ச்சியின் முதல் நிலை

Image result for Christianity in first centuryமுதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்

முதலாம் நூற்றாண்டுத் திருச்சபைக்கு ரோமை அரசிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்புகள் எழுந்தன. அவர்கள் கிறிஸ்தவர்களின் மதத்தின் மேல் கொண்டிருந்த சந்தேகமே இந்த எதிர்ப்புக்குக் காரணம் எனலாம். அந்த சந்தேகங்களில் முக்கியமானவைகளாக கீழ்க்குறிப்பிட்டுள்ளவற்றைச் சொல்லலாம்.

குறிப்பாக கிறிஸ்தவர்களுடைய சடங்குகளும், சம்பிரதாயங்களும் வழக்கமான மத வழிபாட்டுக்குரியனவாய் இருக்கவில்லை எனவே கிறிஸ்தவர்களின் வழிபாடுகளின் மேல் பலருக்கும் மிகப்பெரிய சந்தேகம் இருந்து வந்தது. குறிப்பாக வழிபாடுகளில் கிறிஸ்தவர்கள் உண்ணும் அன்பின் விருந்தில் குழந்தைகளின் மாமிசம் பரிமாறப்படுகிறது எனும் வதந்தியும் எழுந்தது.

இயேசுவின் இறுதி இரவு உணவுப் பந்தியில், இயேசு அப்பத்தைஎடுத்து அது தன்னுடைய உடல் என்றும், திராட்சை இரசத்தை தன்னுடைய இரத்தம் என்றும் சொல்லி சீடர்களுக்குக் கொடுத்தார். சீடர்களும் அதை உண்டார்கள். அதை நினைவுகூரும் விதமாகவே வழிபாடுகளின் அன்பின் விருந்து வழங்கப்படுகிறது.

இது இயேசுவின் உடல் என்று சொல்லி அப்பத்தை சீடர்கள் உண்டார்கள். நாங்கள் கிறிஸ்துவின் உடலை உண்டு இரத்தத்தைக் குடித்தோம் என்றும் பிரசங்கித்தார்கள். இது தான் அவர்களுடைய அன்பின் விருந்தின் மேல் மற்றவர்களுக்கு சந்தேகம் எழ காரணமாய் அமைந்தது.

கிறிஸ்தவர்கள் நாத்திகர்கள் என்றும் எண்ணப்பட்டனர். அந்த நாட்களின் வழக்கத்தில் இருந்த சிலை வழிபாடுகளை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கவில்லை. மன்னனைக் கடவுளாக வணங்கும் வணக்கமுறையையும் இவர்கள் பின்பற்றவில்லை. எனவே இவர்களுடைய வழிபாடு குறித்து மக்களிடையே வியப்பும், சந்தேகமும் எழுந்தது. கிறிஸ்தவர்கள் கடவுளை வழிபடுபவர்கள் அல்ல என்று கருதப்பட்டனர்.

கிறிஸ்தவர்கள் பிறரோடு கலந்து கொள்ளாமல் தனித் தனியாக குழுக்களாக வாழ்ந்து வந்தனர். பெரும்பாலான தொழில்களில் சிலை வழிபாட்டு முறைகள் இருந்ததால் அந்தத் தொழில்களையே அவர்கள் புறக்கணித்தனர்.

ரோம அரசுக்கும், அவர்களுடைய அரசாங்கத்துக்கும் மேலானது கிறிஸ்துவின் அரசு என்று கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். எனவே அவர்கள் அரசையோ, தலைவர்களையோ முதன்மையானவர்களாய் கருதவில்லை. அவர்களுக்கு மனிதருக்குரிய மரியாதையை மட்டுமே வழங்கினர். கடவுளே முதன்மையானவர் அதற்குப் பிறகே மற்றவர்கள் என்னும் போக்கு கொண்டிருந்தார்கள். மனிதருக்குக் கீழ்ப்படிவதை விடக் கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள் என்றே போதித்தனர்.

ரோமை அரசு கிறிஸ்தவ மதத்தை அங்கீகரிக்கவில்லை என்பதும் ரோமர்கள் கிறிஸ்தவர்களை எதிர்க்க முக்கியமான ஒரு காரணம் எனக் கொள்ளலாம்.

கிறிஸ்தவர்களின் வளர்ச்சி ஆலய வியாபாரங்களையும் பெருமளவில் பாதித்தது. பலியிடுதல் என்பது பாவத்தைப் போக்குவதற்காகச் செய்யப்படும் ஒரு சடங்கு என்பது யூதர்களுடைய நம்பிக்கையாய் இருந்தது. எனவே தங்கள் பாவங்களுக்குத் தக்கபடி பலிப் பொருட்களை அதிக விலை கொடுத்து ஆலய வளாகங்களிலிருந்து பெற்றுக் கொண்டு அதை கடவுளுக்குப் பலியிடுவது அவர்களது வழக்கம். இது ஒரு மிகப்பெரிய வியாபாரமாக அங்கு நடை பெற்று வந்தது. கிறிஸ்தவர்களிடையே அந்த நம்பிக்கை இல்லை. எனவே கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள் பலியிடுவதை நிறுத்தினார்கள். இது அவர்களுடைய வியாபாரத்தைப் பாதித்து விட்டது. குறி சொல்பவர்களும் தங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டதால் கிறிஸ்தவர்களை எதிர்த்தனர்.

அந்த நாட்களில் நிகழ்ந்த போர்களும், இயற்கைச் சீற்றங்களுக்கும் கிறிஸ்தவர்களே காரணம் என எண்ணப்பட்டனர். கிறிஸ்தவர்களின் புதிய வழிபாட்டு முறையினால் கோபம் கொண்ட மற்ற தெய்வங்கள் மனிதர்களுக்கு இடர்கள் வழங்கியதாக அவர்கள் நினைத்தனர்.

கிறிஸ்தவர்கள் மிகவும் தைரியசாலிகளாய் இருந்தார்கள். இயேசுவின் இரண்டாம் வருகை விரைவிலேயே வரும் எனும் நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. எனவே அவர்கள் உயிரை துச்சமென மதித்து மதத்தைப் போதித்தனர். அவர்கள் ஒரு மாபெரும் மனித சக்தியாக உருவெடுத்து வந்தனர். எனவே இவர்கள் ரோமை ஆட்சியைக் கைப்பற்றிவிடக் கூடும் எனும் பயம் நிலவியது.

கிறிஸ்தவர்களின் தைரியம் அரசுக்கே சவாலாய் இருந்தது. ரோமை தெய்வங்களுக்கு தூபம் காட்ட கிறிஸ்தவர்கள் மறுத்தனர். அதற்காக எந்த ஒரு பெரிய தண்டனையையும் புன்னகையுடன் பெற்றுக்கொள்ள அவர்கள் தயாராய் இருந்தனர். கிறிஸ்தவர்கள் எனும் பெயரை வைத்திருப்பதே தண்டனைக்குரிய தவறாய் பார்க்கப்பட்டது.

யூத மதகுருக்கள் மற்றும் யூத மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியோர் கிறிஸ்தவ மதத்தைக் குறித்து பொய்பிரச்சாரங்களையும், புகார்களையும் ரோம அரசுக்கு அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். கிறிஸ்தவர்கள் பிற மத சிலைகளுக்கு தூபம் காட்ட மறுத்ததையெல்லாம் அரச விரோத செயல்களாகச் சித்தரித்து அவர்களுக்கு எதிராக கலகம் மூட்டினார்கள். கிறிஸ்தவர்களால் தான் இயற்கைச் சீற்றங்கள் நடக்கின்றன என்றும், அவர்கள் தனித்தனிக் குழுக்களாகக் கூடுவது பின்னாளில் அரசைப் பிடிப்பதற்கான ஆலோசனையே என்றும் அரச காதுகளில் செய்திகள் சொல்லப்பட்டன.
கிறிஸ்தவத்தின் வளர்ச்சியின் முதல் கட்டம் என்று அப்போஸ்தலர்களின் மதப் பிரச்சாரத்தைக் குறிப்பிடலாம். இயேசுவின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும், மீண்டும் அவர் உலகிற்கு வருவார் என்னும் நம்பிக்கையையும், இயேசு உயிர்த்துவிட்டார் அவர் கடவுளாக இருக்கிறார் என்பவற்றையும் அடிப்படையாகக் கொண்டே நடந்தது.

இயேசுவின் உயிர்ப்பு நிகழ்ச்சி நடந்து நாற்பது நாட்களுக்குப் பின் இந்த பணி அப்போஸ்தலர்களால் ஆரம்பிக்கப் பட்டது. அது யோவானின் மரணம் நிகழ்ந்த கி.பி நூறாம் ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த காலத்தில் சுமார் முப்பத்து இரண்டு நாடுகள், ஐம்பத்து நான்கு நகரங்கள், மற்றும் ஒன்பது மத்திய தரைக்கடல் சார்ந்த தீவுகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது என்று விவிலியம் குறிப்பிடுகிறது.

இந்த முதல் காலகட்டம் கிறிஸ்தவர்களுக்கும் அந்த மதத்தைப் பரப்பியவர்களுக்கும் மிகவும் சோதனைகள் நிறைந்த காலமாகவே இருந்தது. மரணத்தை விரல்களில் பிடித்துக் கொண்டே கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் செயல் நடந்தது. தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். சமுதாயத்திலிருந்து நிராகரிக்கப் பட்டனர்.

ரோம் அரச மன்னர்கள் ஜூலியஸ் சீசருக்குப் பின் ‘சீசர்’ என்றே அழைக்கப்பட்டனர். இயேசு பிறந்தபோது ஆட்சியில் இருந்த அகஸ்துஸ் சீசர் ஜூலியஸ் சீசருக்குப் பின் அரியணை ஏறிய மன்னன். கி.மு 27 முதல் கி.பி 14வரை அவர் ஆட்சி புரிந்தார்.

திபேரியு சீசர் அதன் பின்னர் அரியணை ஏறினார். அவர் கி.பி இருபத்து ஏழு வரை ஆட்சி செய்தார்.

இயேசுவின் மறைவுக்குப் பிறகு அரசேற்ற மன்னன் காலிகுலா. இயேசுவின் பெயரைச் சொல்லிக் கொண்டு திருபவர்கள் மீது இவருக்கு அலர்ஜி. எனவே அவர் இயேசுவைப் பின்பற்றியவர்களை அடியோடு வெறுத்தார். இவர் மக்கள் தன்னை வணங்கவேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்தார். புகழ் பெற்ற எருசலேம் தேவாலயத்தில் தன்னுடைய சிலையை நிறுவி ஆராதனை செய்யப்பட வேண்டும் என விரும்பினார். ஆனால் ஆயுள் அவருடைய ஆசையை நிறைவேற்றவில்லை. அவருடைய எண்ணம் நிறைவேறும் முன்பாகவே கி.பி நாற்பத்து ஏழில் இறந்தார்.

அடுத்ததாக கி.பி 41ல் ஆட்சிக்கு வந்த கிளாடியுஸ் மன்னனும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவே இருந்தார். கிறிஸ்து என்பவரின் தலைமையில் ஒரு கூட்டம் பேர் அரசுக்கு எதிராக போராடுகிறார்கள் என்று கிறிஸ்தவர்களைப் பற்றி அவர் நினைத்திருக்கிறார். எனவே இவருடைய ஆட்சிக் காலமான கி.பி 49ல் கிறிஸ்தவர்கள் ரோமிலிருந்து துரத்தியடிக்கப் பட்டனர்.

இதற்குப் பின் வந்த மன்னன் தான் ரோம் தீ பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் ! இவனுடைய ஆட்சிக் காலம் கிறிஸ்தவர்களின் இருண்ட காலம் எனலாம்.

கி.பி 54 முதல் கி.பி 68 வரை ரோம பேரரசை ஆண்டு வந்த நீரோ மன்னனின் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடந்தன. தன் தாயையே கொலை செய்தவன் நீரோ மன்னன் என்கிறது வரலாறு.

இவன் காலத்தில் ரோமா புரியின் ஒரு பாகத்தை இவனே தீ வைத்துக் கொளுத்தி விட்டு அந்தப் பழியை கிறிஸ்தவர்கள் மேல் சுமத்தினான். அதனால் பல கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கிறிஸ்தவர்களைப் பிடித்து சிங்கங்களின் கூண்டுகளிலும், முதலைகளின் தடாகத்திலும் போட்டு அவர்களை விலங்குகள் கொல்வதைப் பார்த்து ரசித்தார்கள்.

சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரங்களில் கிறிஸ்தவர்களைக் கட்டி வைத்து அவர்களை உயிரோடு கொளுத்தி நீரோ மன்னன் அந்த வெளிச்சத்தில் வெற்றி ஊர்வலம் செல்வான். இதனால் கிறிஸ்தவர்கள் உயிர் விளக்குகள் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகபட்ச வன்முறையை அரங்கேற்றிய நீரோ அதன்பின் நான்கு ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனான்.

எந்த அளவுக்கு நெருக்கடியை கிறிஸ்தவர்கள் சந்தித்தார்களோ அந்த அளவுக்கு அவர்கள் வளர்ந்தார்கள்.

பலர் கிறிஸ்தவத்தை யூதமதத்தின் ஒரு பிரிவாகவே பார்த்தார்கள். இயேசு யூத மதத்தைச் சார்ந்தவர் என்பதாலும், அவருடைய சீடர்கள் யூத மதத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களைச் சார்ந்தே தங்கள் விளக்கங்களை அமைத்ததாலும், யூதர்களிடையே அவர்களுடைய போதனை அதிக அளவில் இருந்ததாலும் அப்படி ஒரு தோற்றம் இந்த முதல் கட்டத்தில் ஏற்பட்டது.


கி.பி அறுபத்து ஒன்பதாம் ஆண்டு முதல் எழுபத்து ஒன்பதாம் ஆண்டுவரை ஆட்சி செய்த மன்னன் வெஸ்பெஷியன் என்பவர். இவருடைய மகன் தான் எருசலேம் நகரத்தை அழித்த தீத்து.

தீத்து கி.பி எண்பத்து ஒன்றுவரை ஆட்சி செய்தான். இவனுடைய காலத்திலும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. மறைந்தே வாழ்ந்தனர். இவனுக்குப் பின் அரசேறினான் இவனது தம்பி தொமித்தியான்.

தொமித்தியானின் ஆட்சிக் காலம் கி.பி எண்பத்து ஒன்பது முதல் கி.பி தொன்னூற்று ஆறு வரை. எண்பத்து ஒன்றாம் ஆண்டு செப்டம்பர் பதிமூன்றாம் நாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இவர் தன்னைக் கடவுளாக நினைத்துக் கொண்டார்.

நாட்டிலுள்ள அனைவரும் தன்னை வணங்கவேண்டும் என்று ஆணையிட்டான். சிலை வழிபாடுகள் போல தனக்கும் தூபம் காட்டி வழிபட வேண்டும் என எல்லோரையும் கட்டாயப்படுத்தினான்.

கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்தனர். அவர்கள் அரசரின் ஆணையை மதிக்கவில்லை. எனவே கிறிஸ்தவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்னும் முத்திரை குத்தி துன்பப்படுத்தப் பட்டனர். கிறிஸ்தவர்கள் கலகக் காரர்கள் என்று அறிவிக்கப்பட்டனர்.

அரசனை வணங்காத கிறிஸ்தவர்கள் மீது அரசனின் கோபம் பாய்ந்தது. கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்த அனைத்து கிறிஸ்தவர்களும் வன்முறைக்கு ஆளானார்கள்.

இவன் காலத்தில் கிறிஸ்தவம் நசுக்கப்பட்டாலும் கிளை விட்டது. கிறிஸ்தவம் அரண்மனைகளிலும் நுழைந்தது. மன்னனின் தம்பி கிளமெண்ட் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தான். கிறிஸ்தவர்களை வெறுத்த மன்னன் தம்பியையும் வெறுத்தான்.

தன் தம்பி என்றும் பாராமல் மன்னன் கிளமெண்ட் ஐ கொன்றான். அவனுடைய மனைவியை நாடுகடத்தினான்.

அந்த நாட்களில் ரோம் நகரில் நடந்த வன்முறைகளைக் குறித்து ‘ஷெப்பர்ட் ஆஃப் ஹெர்ம்ஸ்’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணவம் கொண்டு தன்னை ஆண்டவன் என்று அழைத்துத் திரிந்த தொமித்தியான் நீண்டநாட்கள் வாழவில்லை. கி.பி தொன்னூற்று ஆறில் அவன் படுகொலை செய்யப்பட்டான்.

அதன்பின் நெர்வா எனும் மன்னன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கிறிஸ்தவர்கள் சற்றே இளைப்பாறும் காலமாக அது இருந்தது. பிரச்சனைகள் இல்லாத ஆட்சியாய் நெர்வாவின் ஆட்சி இருந்தது.

ஆதிகாலத் திருச்சபை கிறிஸ்தவத்தின் பொற்காலமாக இருந்தது. உண்மையில் கிறிஸ்துவின் போதனைகளை அப்படியே பின்பற்றும் காலமாக அது இருந்தது. அப்போது எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள் அவர்களுக்குள் பிளவு காணப்படவில்லை.

மக்கள் தங்கள் சொத்துகளை பொதுவில் கொண்டு வைத்தார்கள். அதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். தனக்கென யாரும் சொத்து சேர்த்து வைக்கவில்லை.

அதிகமாக செபித்தார்கள். இயேசு உடனே திரும்ப வந்து தங்களை அழைத்துச் செல்வார் எனும் எண்ணம் நிறைய பேரிடம் காணப்பட்டது. எனவே உருக்கமான செபம் எப்போதும் நடந்தது.

பெண்களின் நிலை அந்த காலகட்டத்தில் சிறப்பான முன்னேற்றம் அடைந்தது. அனைத்து செயல்களிலும் பெண்களின் ஈடுபாடு இருந்தது. அவர்கள் ஆண்களோடு சமமாக பணிகளில் ஈடுபட்டார்கள்.

உதவுதல் மிக முக்கியமான பணியாக இருந்தது. ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒரு சமத்துவ சமுதாயமாக இருந்தது அன்றைய திருச்சபை.

இயேசுவுக்காய் துன்பப்படுவது நல்லது என்று நினைத்தார்கள். ‘என் நிமித்தம் மக்கள் உங்களைத் துன்புறுத்தினால் மகிழுங்கள்’ என்று இயேசு போதித்திருந்தார். எனவே துன்பத்தை மக்கள் விரும்பி ஏற்றார்கள்.

தங்களை வெறுத்தவர்களையும் துன்பப்படுத்தியவர்களையும் ஆதிகால கிறிஸ்தவர்கள் வெறுக்கவில்லை. அவர்களுக்காய் செபித்தார்கள். அவர்களை மன்னித்தார்கள்.

திருமுழுக்கு கொடுக்கும் வழக்கம் அதிகரித்தது. குழுவில் இணைய விரும்புபவர்கள் திருமுழுக்கு அளிக்கப்பட்டனர். முழுமையாக நீரில் மூழ்குவதோ, மூன்று முறை தண்ணீர் தெளிப்பதோ ஞானஸ்நானத்தின் அடையாளமாய் இருந்தது.

எனினும் பெரும்பாலும் யூதர்களே கிறிஸ்துவர்களானதால் யூத மத வழக்கங்களும் கிறிஸ்தவர்களுக்கு இருந்தன. யூதர்களின் ஓய்வு நாளான சனிக்கிழமைகளிலும், இயேசுவின் உயிர்ப்பு நாளான ஞாயிற்றுக் கிழமையிலும் அவர்கள் ஜெபக்கூடங்களுக்குச் சென்றார்கள்.

மாற்கு நூலே விவிலியத்தின் முதலாம் நூல் இது கி.பி 44ல் எழுதப்பட்டது. மத்தேயு நற்செய்தி கி.பி ஐம்பதிலும், லூக்கா நற்செய்தி கி.பி அறுபதிலும், யோவான் நற்செய்தி கி.பி நூறிலும் எழுதப்பட்டன. யோவான் கி.பி நூறு வரை உயிர் வாழ்ந்தவர். தன்னுடைய வாழ்வின் கடைசி கட்டத்தில் யோவான் நற்செய்தி நூலை எழுதினார்.

லூக்கா அப்போஸ்தலர் பணி எனும் நூலையும் எழுதினார். அது கி.பி அறுபதில் எழுதப்பட்டது. தூய பவுல் எழுதிய நிரூபங்கள் கி.பி ஐம்பதுக்கும் அறுபத்து நான்கிற்கும் இடைப்பட்டவை. எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் அறுபத்து இரண்டிற்கும், எழுபதுக்கும் இடையே எழுதப்பட்டவை.

யாக்கோபு எழுதிய நூல்கள் கிபி நாற்பத்து நான்கிற்கும் ஐம்பதுக்கும் இடையில் அல்லது அறுபத்து இரண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஒன்று பேதுரு தனது நூலை கி.பி அறுபத்து நான்கில் எழுதினார். யோவான் தரிசனம் கி.பி தொன்னூற்று ஐந்திலும் எழுதப்பட்ட யூதாவின் கடிதங்களும், யோவானின் கடிதங்களும் கி.பி நூறில் எழுதப்பட்டன.

இந்த நூல்கள் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருக காரணமாயிற்று. எருசலேமில் மட்டுமே சுமார் இருபதாயிரம் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். அது மட்டுமன்றி அந்தியோக்கியா, எபேசு, கொரிந்து, சமாரியா, யோப்பா, லித்தா, சீரியா, யூதேயா உட்பட பல்வேறு இடங்களுக்குக் கிறிஸ்தவம் பரவியது.

கி.பி 66 ல், யூதேயாவில் வாழ்ந்த யூதர்களுக்கும் ரோம அரசுக்கும் எதிரான போராட்டம் பெருமளவில் வெடித்தது. யூத மதத்தின் கோட்பாடுகளை காயப்படுத்தும் விதமாக ரோமர்கள் கடும் விமர்சனம் செய்தார்கள். ஏற்கனவே ரோம அரசுக்கு வரி கொடுப்பதில் உடன்படாத யூதேயா வாழ் யூதர்கள் யூத மதத்தை ரோமர்கள் விமர்சித்ததும் பொங்கினர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் படை வலிமையுடைய ரோமர்களின் முன்னால் யூதர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. போர் தீவிரமாய் நடந்தது. நீண்டகாலம் நடந்த யுத்தம், பட்டினியையும், ஏராளமான சாவுகளையும், உள்நாட்டுக் கலவரங்களையும் சம்பாதித்துத் தந்தது.

பாலஸ்தீனம் வீழ்ச்சியடைந்தது.

கிபி எழுபதாம் ஆண்டில் எருசலேம் தீக்கிரையானது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது.

யூதர்கள் அடிமைகளாக்கப் பட்டார்கள். அடிமைகளாக்கப் பட்ட யூதர்களை வைத்து ரோமர்கள் கடுமையான வேலை வாங்கினர். அப்போது தான் உலகப் புகழ் பெற்ற கொலோசியம் யூத அடிமைகளால் கட்டப்பட்டது.

கிபி. எழுபதாம் ஆண்டில் எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்ட பின்பு தான் யூத மதமும், கிறிஸ்தவ மதமும் இரண்டு வேறுபட்ட மதங்கள் என்னும் பார்வை பரவியது. அது கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்தியது. கிறிஸ்தவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். வீசி எறியப்பட்ட விதைகள் ஆங்காங்கே புதிய மரங்களைத் தோற்றுவிப்பது போல, சிதறடிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அடைக்கலம் புகுந்த இடத்திலெல்லாம் கிறிஸ்தவத்தை விதைத்தார்கள்.

எருசலேமில் ஆரம்பமான இயேசுவின் போதனைகள் இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பிற்குப் பிறகு எருசலேமிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் ஆரம்பமாகி பின் மற்ற இடங்களுக்கும் பரவியது. குறிப்பாக ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்த இடங்களிலெல்லாம் கிறிஸ்தவம் பரவியது.

பிளினி என்னும் வரலாற்று ஆசிரியர் ‘டிரஜன்’ என்னும் அரசனுக்கு சுமார் கி.பி 112 ம் ஆண்டில் எழுதிய கடிதம் ஒன்றில் “ஆசியா மைனரிலுள்ள அனைத்து நகரங்களிலும் சிலை வழிபாடுகள் கைவிடப்பட்டு மக்கள் கிறிஸ்த மதத்துக்குப் பெருமளவில் சென்று கொண்டிருக்கிறார்கள். இங்கே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேற்றுமை பாராட்டப் படுவதில்லை. பல இடங்களில் தாழ்ந்தவர்களாய்க் கருதப்படுவோர் தலைவர்களாக இருக்க உயர் குலத்தோர் அங்கத்தினர்களாக உள்ளனர்’ என்னும் பொருள் பட குறிப்பிட்டுள்ளது முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.

இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்

இரண்டாம் நூற்றாண்டில் டிரேஜான், ஆதிரையான், மார்கஸ் அரேலியஸ் போன்ற மன்னர்களால் கிறிஸ்தவ மதத்துக்கு துன்பம் ஏற்பட்டது.

டிரேஜான் கிபி தொன்னூற்று எட்டு முதல் நூற்று பதினேழு வரை அரசாண்டார். இவருடைய காலத்திலும் சிலை வழிபாடு ஊக்கப்படுத்தப் பட்டு, கிறிஸ்தவ வழிபாடு இன்னலுக்கு இலக்கானது. கிறிஸ்தவர்கள் அதிகமாய் பெருகி விட்டதனால் தேவாலயங்களில் பலியிடுவோர் குறைந்து விட்டதாகவும், அதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் பித்தானியாவின் அதிகாரி பிளினி என்பவர் டிரேஜானுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

கிறிஸ்தவர்கள் அரசனை வணங்கினால் விடுவிக்கப்பட்டனர். இல்லையேல் அவர்கள் துன்பப்படுத்தப் பட்டனர்.

இக்னேஷியஸ் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ மத பேராயர். அந்தியோக்கியாவின் மூன்றாவது பேராயராய் இவர் இருந்தார். கிறிஸ்தவ மதத்தில் மிகவும் உறுதியாய் இருந்த இவர் தியோபோரஸ் என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்டிருந்தார்.

இயேசு ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்’ என்று சொல்லி கைகளில் தூக்கிய குழந்தைகளில் ஒன்று இவர் என்று இவரைக் குறித்து கதைகள் உலவுகின்றன.

நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஒன்றுக்கு கிறிஸ்தவர்களே காரணம் என்று சொல்லி இக்னேஷியஸ் கண்டிக்கப்பட்டார். அவரோ அசந்து போகவில்லை. கிறித்துவுக்கு சாட்சியாக நின்றார். இயேசுவை ஆதரித்து மன்னனை எதிர்த்தார். எனவே ரோம் நகருக்குக் கொண்டு வரப்பட்டு அவர் கொடிய விலங்குகளுக்கு விருந்தானார்.

ஆதிரையான் மன்னன் கி.பி 117 முதல் 138 வரை ஆட்சி புரிந்தார். இவர் கிறிஸ்தவர்களை தேவையற்ற முறையில் துன்பப்படுத்தவில்லை. எனினும் கிறிஸ்தவ மதத்துக்கு ஏதேனும் அங்கீகாரமோ, கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாவலோ கிடைக்கவில்லை.

வழக்கம் போல கிறிஸ்தவர்கள் மறைவான வாழ்க்கையையே வாழ்ந்தார்கள். வெளிப்படையாக விசுவாசத்தை வெளிப்படுத்தியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ரோமை படைத் தளபதியாய் இருந்த அலெக்சாண்டர் என்பவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதற்காக கொலை செய்யப்பட்டார். மன்னனின் வெற்றியைப் பறைசாற்றி சிலைவழிபாடு நடக்கையில் அவர் கலந்து கொள்ள மறுத்தார். அது அரசனின் கோபத்தைக் கிளறி விட்டது. கிறிஸ்தவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். உயர் பதவியில் இருந்தாலும் கிறிஸ்தவன் என்றால் மரணம் வரும் எனும் எண்ணம் எல்லோருக்கும் இருந்தது.

அராரத் மலை கிறிஸ்தவர்களின் இரத்தத்தினாலும் இறுதி மூச்சுகளினாலும் நிறைந்தது. துன்பம் இறைவரம் என்றே நினைத்தனர் கிறிஸ்தவர்கள். எனவே அவர்கள் பகிரங்கமாக கிறிஸ்துவை அறிக்கையிட்டனர். அப்படி விசுவாசத்தை வெளிப்படுத்தியவர்கள் முட்களினால் முடிசூட்டப்பட்டனர். ஈட்டிகளினால் குத்தி கொலை செய்யப்பட்டனர். சிலுவையில் கொடூரமான கொலை செய்யப்பட்டனர். இயேசு தன்னுடைய மரணத்தின் போது அடைந்த அத்தனை வலிகளையும் ஒரு தவம்போலவே இருந்து ஏற்றுக் கொண்டனர் கிறிஸ்தவர்கள்.
எத்தனை கொடுமைகள் தங்களுக்கு எதிராக நடந்த போதிலும் கிறிஸ்தவர்கள் பொறுமை காத்தனர். எனவே கிறிஸ்தவர்களின் கடவுள் மிகப் பெரியவர் என்னும் கருத்தும் எழுந்தது. கொலோசீரியஸ் என்பவர் ‘கிறிஸ்தவர்களின் தலைவர் பெரியவர்’ என்று வெளிப்படையாய் சொன்னார்.

கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் மன்னனின் கோபத்துக்குத் தப்பவில்லை. கொலோசீரியனும் மன்னனின் ஆணைப்படி கொலை செய்யப்பட்டார்.

அவருடைய காலகட்டத்தில் நடந்த இன்னொரு முக்கியமான நிகழ்வு யூதர் புரட்சி. யூத மதத்தினரான இயேசுவின் பெயரால் புதிய மதம் புறப்பட்டதால் முதலில் யூதர்கள் மட்டுமே அந்த மதத்தில் இணைந்தனர். இன்னும் பலர் அதுவும் யூதமதத்தில் ஒரு பிரிவு என்றே எண்ணிக்கொண்டனர். ஆனால் காலப்போக்கில் அவையெல்லாம் மாறிவிட்டன. கிறிஸ்தவமும் யூதமும் வெவ்வேறானவை எனும் தெளிவு ஏற்பட்டது.

பார்கொக்பே, ராபி அக்கிபா எனும் இருவருடைய தலைமையில் யூதர்கள் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள். அப்போது விருத்த சேதனத்தைத் தடை செய்யப்பட்டு மன்னன் சட்டம் இயற்றினார்.

பார்கொக்பே இறைவனின் தூதர் எனும் எண்ணம் யூதர்களிடையே இருந்தது. ஆனால் கிறிஸ்தவர்கள் அவரை மதிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இயேசுவே மெசியா. எனவே அவர்கள் யூதர்களின் பார்கொக்பேவை வழிபடவும் இல்லை வணங்கவும் இல்லை. இது யூதர்களை எரிச்சலடையச் செய்தது.

கிறிஸ்தவர்கள் அதிகமாய் யூதர்களைப் பகைத்துக் கொள்ள இது ஒரு முக்கிய காரணமாயிற்று. யூதர்கள் கிறிஸ்தவர்களை அதிகமாய் துன்பப்படுத்த ஆரம்பித்தனர்.

கி.பி 124ல் மன்னன் ஆதிரையான் தன்னுடைய ஆட்சிக்குக் கீழே உள்ள தலைவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினான். அதில் கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்பப்படுத்தக் கூடாது. கிறிஸ்தவர்களைக் காரணமின்றி துன்பப்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தான்.

கி.பி 135ம் ஆண்டு பார்கொக்பே கைது செய்யப்பட்டார்.

கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் முக்கியமாக இருந்த எருசலேம் நகரம் ஏலியா கேப்பிட்டோலினா என்று அழைக்கப்பட்டு வேற்று மதத்தினருக்கு உரியதாயிற்று.

கிபி 138 க்குப் பின் அரியணை ஏறி 161 வரை ஆட்சி செய்த மன்னர் ஆண்டோனியஸ் பயஸ் என்பவர். இவர் இதற்கு முன் மன்னனாய் இருந்த ஆதிரையானின் வளர்ப்பு மகன்.

இவர் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாய் இருக்கவில்லை. எனினும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சமுதாயக் கொடுமைகள் ஒழியவில்லை. கிறிஸ்தவர்கள் தனியாகவே வாழ்க்கை நடத்தினார்கள். இவர் காலத்திலும் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பறைசாற்றியதால் பலியானவர்கள் ஏராளம்.

இவருடைய ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் போலிகார்ப். இவர் கி.பி 70 பிறந்தவர். இவர் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான யோவானின் சீடர்.

சீரியா நாட்டைச் சேர்ந்த இவர் அடிமையாய் விற்கப்பட்டவர். பெரும் பணக்காரப் பெண்மணியான காலிஸ்டோ இவரை அடிமையாக வாங்கினார். அடிமை வேலைகளைச் செய்து வந்த போலிகார்ப்பின் நேர்மையையும், உண்மையையும், அன்பையும் கண்டு வியந்த காலிஸ்டோ, தன்னுடைய சொத்துகளை எல்லாம் அவருக்கு எழுதி வைத்தார்.

காலிஸ்டோவின் மரணம் போலிகார்ப் ஐ ஒரு மிகப்பெரிய செல்வந்தராக்கியது. இவர் கிறிஸ்தவ மதத்தின் மீது ஆழமான பற்றுறுதி கொண்டிருந்தார். சிமிர்னா பகுதியில் கிறிஸ்தவத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார் அவர்.

இவருக்கும் ரோமையிலுள்ள திருச்சபைத் தலைமைக்கும் கருத்து வேறுபாடு வந்தது. இயேசுவின் உயிர்ப்பு தினம் அந்த குறிப்பிட்ட நாளில் தான் கொண்டாட வேண்டும் எனும் எண்ணத்தை போலிகார்ப் வலியுறுத்தினார்.

ஆனால் எல்லா ஆண்டும் ஞாயிற்றுக் கிழமை தான் அதை நினைவு கூர வேண்டும் என்பது ரோமை திருச்சபையின் எண்ணமாய் இருந்தது. இந்த விவாதம் அந்த காலகட்டத்தில் கிறிஸ்தவத்தில் எழுந்த முக்கியமான விவாதமாகக் கருதப்படுகிறது.

ஆண்டோனியஸ் பையஸின் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் போலிகார்பைக் கைது செய்யத் தேடினார்கள். அவர் பக்கத்து ஊருக்குச் சென்று பதுங்கினார்.

போலிகார்ப் ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அதில் அவருடைய தலையணை தீப்பற்றி எரிந்தது. கடவுளிடம் மன்றாடிய அவருக்கு கனவின் பொருள் விளங்கியது. தான் எரித்துக் கொல்லப்படப் போவதன் அறிகுறியே அது என அறிந்தார்.

அதே நேரத்தில் அரசனின் வீரர்கள் அவரைத் தேடி அலைந்தார்கள். ஆனால் அவருடைய ஆதரவாளர்கள் அவரைக் காட்டிக் கொடுக்கவில்லை. கடைசியில் மன்னன் போலிகார்ப்பின் இருப்பிடம் தெரிந்த இருவரைப் பிடித்து சித்திரவதை செய்தான்.

சித்திரவதையைத் தாங்க முடியாத ஒருவன் அவருடைய மறைவிடத்தைச் சொன்னான். படைவீரர்கள் அவருடைய வீட்டை அடைந்தனர். நடப்பதெல்லாம் இறை சித்தம் என்று உறுதியாக நம்பிய போலிகார்ப் மாடியிலிருந்து இறங்கி வந்து அவர்களுடன் உரையாடினார்.

அவருடைய உறுதியைக் கண்டு படைவீரர்கள் வியந்து போனார்கள். அவர் அவர்களுடன் உரையாடினார். பின்னர் தனக்கு செபிக்க சிறிது நேரம் தருமாறு கேட்டுக் கொண்டார். படை வீரர்களும் அவரை செபிக்க அனுமதித்தனர். இரண்டு மணி நேரம் நின்றவாறே செபித்தார் அவர்.

போலிகார்ப் மன்னனிடம் அழைத்துச் செல்லப்பட்டார். போலிகார்ப்பின் உறுதி மன்னனையும் கூட இருந்தவர்களையும் வியப்பிலாழ்த்தியது.

‘மன்னனை வணங்கி தூப ஆராதனை செய். உன்னை விடுவிப்போம்’ போலிகார்ப்பிடம் அவர்கள் சொன்னார்கள்.

‘நான் உங்கள் விருப்பப்படி நடப்பவன் அல்ல’ போலிகார்ப் உறுதியாகப் பதிலளித்தார்.

அவரை பயமுறுத்தி, காயப்படுத்தினார்கள். அவர் அசரவில்லை. விளையாட்டு அரங்கத்திற்கு அவரை வண்டியில் கொண்டு சென்று வழியிலேயே அவரை கீழே தள்ளினார்கள். அப்போதும் அவர் எதுவும் நடவாதவர் போல சிரித்துக் கொண்டே இருந்தார்.

மன்னன் அவரைப் பார்த்தார். அவருடைய வயதையும் கவனித்தார்.

‘இந்த வயதில் உனக்கு என்ன இத்தனை பிடிவாதம். நீ என்னை வணங்கவேண்டாம். கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் கடவுள் இல்லாதவர்கள் என்று மட்டும் சொல் உன்னை விடுவிப்பேன்’ என்றான். போலிகார்ப் சிரித்தார்.

எண்பத்து ஆறு ஆண்டுகள் கடவுளுக்காகப் பணிபுரிந்தேன். அந்த கடவுளை எப்படி நான் இழிவாகப் பேச முடியும். அவர் உண்மையான கடவுள் என்றார்.

‘நீ கிறிஸ்தவர்களை பழிக்காவிடில் உயிரை இழப்பாய்’ மன்னன் எச்சரித்தான்

‘கிறிஸ்தவர்களைப் பழிப்பது என்பது கிறிஸ்துவைப் பழிப்பது போல. அதை விட உயிரை இழப்பதே மேல்’ போலி கார்ப் சொன்னார்.

‘உன்னை காட்டு மிருகங்களுக்கு உணவாகப் போடுவேன் அல்லது எரித்துக் கொல்லுவேன்’ மன்னன் கோபமடைந்தார்.

‘செய்ய வேண்டியதை விரைவிலேயே செய்ய வேண்டியது தானே ? ஏன் இன்னும் தாமதம்’ போலிகார்ப் சொன்னார்.

சுற்றியிருந்த மக்கள் “இவனை எரித்துக் கொல்லுங்கள்” என்று கத்தினார்கள்.

மன்னனும் இசைந்தான்.

எரிப்பவர்களை மரத்தில் கட்டி கைகளை ஆணிகளால் அறைந்து தீ வைப்பது அவர்களின் வழக்கம். போலிகார்ப்பும் மரத்தில் கட்டப்பட்டார். ஆணிகளால் அவருடைய கையை அடிக்க முனைந்தபோது அவர் தடுத்தார்.

என் கைகளை ஆணிகளால் அறைய வேண்டாம். நான் எந்த நெருப்புக்கும் அசையாத உறுதியை கடவுள் தருவார். என்றார்.

போலிகார்ப்பின் உறுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவர் கைகளில் அவர்கள் ஆணி அடிக்கவில்லை.

அவரைக் கட்டி வைத்தபின் அவரை எரித்தார்கள். அவர் அசையாமல் செபநிலையிலேயே நின்றார். அவரை ஈட்டியாலும் குத்தினார்கள். போலிகார்ப்பின் உயிர் பிரிந்தது. அவர் மரணமடைந்த ஆண்டு 155 பெப்பிரவரி 23.

மார்கஸ் அரேலியஸ் மன்னன் கிபி 161 முதல் 180 வரை ரோம் அரசராக இருந்தான். இவனுடைய ஆட்சிக்காலமும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைக் கட்டவிழ்ப்பின் அரசாகவே இருந்தது.

இவனுடைய பார்வையில் கிறிஸ்தவர்கள் என்பவர்கள் பிடிவாதகாரர்கள். எது சொன்னாலும் கேட்காதவர்கள். தன்னுடைய பேச்சைக்கேட்காத யாரையும் அரசர்களுக்குப் பிடிப்பதில்லையே. அதுவே தான் நடந்தது இந்த மன்னனின் ஆட்சியிலும்.

இவர் காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் ஜஸ்டின் மார்டர் என்பவர். இவர் சிறந்த தத்துவ ஞானி. கற்றறிந்தவர். தன்னுடைய கல்வியினாலும் ஞானத்தினாலும் கிடைக்காத மன நிம்மதி கிறிஸ்தவத்தில் இணைவதில் கிடைக்கப் பெற்றார்.

எனவே இவர் பல கிறிஸ்தவ நூல்களை இயற்றி மக்களுக்கு கிறிஸ்தவ மதத்தைக் குறித்த புரிதலுக்கு வழி வகுத்தார். கிறிஸ்தவ மதம் சார்ந்த கோட்பாடுகளை விவாதத்தின் மூலம் பரப்பினார். இவருடைய வேகமான போதனையினால் பலர் கிறிஸ்தவர்களானார்கள்.

ரோம அரசன் எரிச்சலடைந்தான். ஜஸ்டினைக் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.

ஜஸ்டின் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின. ஜஸ்டின் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டார்.

ஜஸ்டின் தைரியமாய் நின்றார். நடுவர் அவரை நோக்கி கேள்வியை வீசினார்.

‘நீ உயிர்த்தெழுவாய் என நினைக்கிறாயா ?’

‘நினைக்கவில்லை. உண்மையிலேயே நடக்கும் என்பது எனக்குத் தெரியும்’ ஜஸ்டினின் பதில் அவர்களை எரிச்சலடையச் செய்தது. அவருக்கு எதிராக தீர்ப்பு எழுதப்பட்டது.

‘சம்மட்டியால் அடித்து இவனுடைய தலையை சிதையுங்கள்’ குரூரமான ஆணையைக் கேட்டு ஜஸ்டின் கலங்கவில்லை. தைரியமாய் நின்றார்.
சம்மட்டிகள் அவருடைய தலையை பிளந்தன. சிதைத்தன. ஜஸ்டின் விசுவாசத்தை விட்டு விலகாமல் உயிர் விட்டார்.

பிலாண்டினா எனும் பெண்மணி ஒருத்தியும் மார்கஸ் அரேலியஸ் காலத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவரும் கிறிஸ்தவ மதத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதால் அரசனின் ஆணைகளைப் புறக்கணித்தவர். கிறிஸ்தவ மத பிரச்சாரங்களில் ஈடுபட்டதால் இவர் கொலை செய்யப்பட்டார்.

பழுக்கக் காய்ச்சிய இரும்பு நாற்காலியில் உட்கார வைத்து பின்னர் கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போடப்பட்டார். எரிந்தும், கிழிந்தும் உயிர்விட்டார் பிலாண்டினா.

கமோடஸ் என்னும் மன்னன் அதன்பின் ஆட்சிப் பொறுப்பேற்று கி.பி 191 வரை ஆட்சி புரிந்தான். தன்னுடைய பதினெட்டாவது வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கமோடஸ் தந்தை மார்கஸ் அரேலியசைப் போலன்றி சற்று நிதானமாய் இருந்தார்.

இவருடைய மனைவி மார்சியா கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். எனவே இவரிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு சற்று விடுதலை கிடைத்தது. கிறிஸ்தவர்கள் அதிக துன்பங்களைச் சந்திக்கவில்லை.

இதே காலகட்டத்தில் ஆப்பிரிக்காவில் பலர் கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் நடந்தன. நுமீதியாவிலுள்ள சிலியில் பன்னிரண்டு பேர் கிறிஸ்தவர்கள் என்பதால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் ‘சிலியின் இரத்த சாட்சிகள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
இரண்டாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள்

இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் தன்னுடைய ஆளுமையை வளர்த்துக் கொண்டது. நிர்வாக அமைப்பைப் போல பேராயர்கள், துணை ஆயர்கள், டீக்கனார் என பல அடுக்கு தலைமைகள் உருவாக்கப்பட்டன.

திருச்சபை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வன்முறைகளைச் சந்தித்து வந்ததால் இந்த அமைப்பு ரீதியின் தேவை அதிகரித்தது. மேலும் இந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட கிறிஸ்தவ இலக்கியங்களைப் பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிறிஸ்தவ வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த அப்போஸ்தலர்களின் நூல்களுக்கு மாற்றாக இந்த நூற்றாண்டில் மார்சியன் தன்னுடைய நூல் ஒன்றை வெளியிட்டார். எனவே இக்காலகட்டத்தில் எவையெல்லாம் திருச்சபைகளில் பயன்படுத்தப்பட வேண்டும் எனும் வரை முறை கொண்டு வரப்பட்டது.

கிறிஸ்தவர்களுடைய அணுகுமுறையும், வாழ்க்கை முறையும் பலரால் வியப்புடன் பார்க்கப்பட்டன. கி.பி 125ல் அரிஸ்டைடிஸ் என்பவர் எழுதிய நூலில் கிறிஸ்தவத்தைப் பற்றி மிகவும் வியந்து எழுதியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபடாமல் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறார்கள். விபச்சாரப் பாவத்தைச் செய்வதில்லை. பொய்சாட்சி சொல்ல மறுக்கிறார்கள். பெற்றோரைப் பெருமையுடனும் அன்புடனும் நடத்துகிறார்கள். மனத்தாழ்மை, அன்பு இவற்றைக் கடைபிடிக்கிறார்கள். தன்னை விடத் தாழ்ந்தவர் என்று யாரையும் அவர்கள் நினைப்பதில்லை. அடிமைக்கும், மன்னனுக்கும் ஒரே கவுரவத்தைத் தருகிறார்கள். அவர்கள் இறைவனை எல்லா நிகழ்வுகளுக்கும் புகழ்கிறார்கள். எனவே தான் பூமி செழிக்கிறது. என்று அவர் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார்.

கார்தேஜ் என்னும் நாட்டில் பிளேக் நோய் பரவியபோது மற்ற அனைத்து சமூகத்தினரும் விலகினார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் அவர்களோடு இருந்து அவர்களுக்கு பணிவிடை செய்தனர்.

கேலிஸ்டன் என்பவர் அடிமையாய் இருந்தவர். அவர் கிறிஸ்தவத்தைத் தழுவியபின் பேராயராக மாறினார். எனவே கிறிஸ்தவத்துக்குள் சமத்துவம் நிலவியது என்பதை உணர முடிகிறது.

ரோம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் அறுபது சுரங்கக் கல்லறைகளில் பல செய்திகள் காணக் கிடைக்கின்றன. கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரை இழந்தவர்களுடைய கல்லறைகளில் கிறிஸ்துவுக்காய் துன்பப்பட்டவர்கள் என எழுதப்பட்டுள்ளது.

தோளில் ஆட்டுக்குட்டியைச் சுமக்கும் இயேசுவின் படம் இந்த கல்லறைகளில் காணப்படுவது வியப்பு தருகிறது. பாய்மரக்கப்பல், திராட்சைக் கொடி, மீன், நங்கூரம் போன்ற பல சித்திரங்கள் இந்த குகைகளில் காணக் கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கும் வழக்கம் இந்த நூற்றாண்டிலேயே இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. மேலும் திருமுழுக்கு எளிதாகக் கொடுக்கப்படாமல் அதற்குரிய சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்பட்ட பின்பே அளிக்கப்பட்டிருக்கின்றன.

கோதுமை அப்பமும் திராட்சை இரசமும் திருப்பலிகளில் நன்கொடையாக வழங்கப்பட்டன. பின் அவை சபையோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பாவ மன்னிப்பு வழக்கம் இருந்தது. மற்றவர்களை மன்னிப்பதன் அடையாளமாக சமாதான முத்தம் இடும் வழக்கமும் இருந்தது.

இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் தான் கிறிஸ்தவர்கள் ஆலயங்களைக் கட்டி வழிபாடு ஆரம்பித்தனர். யூதர்களுடைய ஆலயங்களில் ஆலயத்துக்கு வெளியே கைகளைக் கழுவ தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த வழக்கம் அன்றைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் காணப்பட்டது.

கிறிஸ்து பிறப்பு விழா, உயிர்ப்பு விழா, தூயவர்கள் மணமடைந்த விழா என பல விழாக்கள் இரண்டாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டிருக்கின்றன.

மூன்றாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்

செப்டிமஸ் செவேரஸ் என்பவர் மூன்றாம் நூற்றாண்டின் முதல் மன்னன். கி.பி 211 வரை இவருடைய ஆட்சி இருந்தது. இவருடைய ஆட்சி துவக்கத்தில் நல்ல ஆட்சி போல தோற்றமளித்தது. ஆனால் போகப் போக அவருடைய குணம் மாறியது.

கிறிஸ்தவர்களின் துன்பம் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் எகிப்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கும் பல விதமான சோதனைகள் நேர்ந்தன. இவருடைய ஆட்சி காலத்தில் கார்த்தேஜில் பலர் கிறிஸ்தவத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டனர்.

கார்தேஜில் இவருடைய காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் பெர்பெத்துவா மற்றும் பெலிசிட்டாஸ் எனும் இரண்டு பெண்கள் மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் தங்களுடைய விசுவாசத்தை விட மறுத்ததால் கொலை செய்யப்பட்டனர்.

பெர்பெத்துவா நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவளுடைய இருபத்து இரண்டாவது வயதில் கிறிஸ்தவத்தில் ஆழப் பதிந்திருந்தாள். திருமணமாகி குழந்தை ஒன்றுக்குத் தாயானவள். உலகில் எதையும் விட இயேசுவே வேண்டும் என்பதில் உறுதியாய் நின்றாள்.

காவலர்கள் கையில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது அவளுடைய மனதை மாற்ற தந்தையார் பல முறை பல வழிகளில் முயன்றார். ஆனால் எதுவும் பயன் தரவில்லை.

சிறைச்சாலையில் பலவிதமான சித்திரவதைகளுக்கு உட்பட்டு இறுதி மூச்சு வரை இயேசுவை மறுதலிக்காமல் விசுவாசத்தில் நிலைத்து நின்றார்.

பெலிசிட்டாஸ் ஒரு அடிமைப் பெண். அவளும் திருமணமாகி எட்டு மாத கர்ப்பிணியாய் இருக்கையில் காவலர்களிடம் பிடிபட்டாள். கிறிஸ்துவை மறுதலி, உனக்கு விடுதலை. உன் குழந்தையுடன் நீ ஆனந்தமாய் வாழலாம். காவலர்கள் கூறினர்.

கிறிஸ்துவை மறுதலித்து வாழ்வதை விட, கிறிஸ்துவுக்காய் உயிரை விடுதல் சிறந்தது என்று விசுவாசத்தில் நிலைத்து நின்றாள் பெலிசிட்டாஸ்.

இறுதியில் இருவரும் முரட்டுத்தனமான மாடுகளுக்கு முன்பாகப் போடப்பட்டார்க. விலங்குகள் இவர்களை மிதித்து, இடித்து சித்திரவதை செய்தன. இறுதியில் இவர்கள் இருவரையும் குத்திக் கொன்று விட்டனர்.
செப்டிமஸ் செவேரஸ்க்குப் பின் தேசியு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர் கி.பி249 முதல் 251 வரை ஆட்சி செய்தார். இவர் கிறிஸ்தவக் கொள்கைகள் அரசுக்கு எதிரானவை எனும் கண்ணோட்டத்தில் கிறிஸ்தவத்தை முழுமையாக எதிர்த்தார்.

இவர் காலத்தில் தங்கள் உடமைகளையும், உயிரையும் இழந்தவர்கள் அனேகர். ரோம் நகரில் ஃபேபியன், அந்தியோக்கியாவில் பாபிலாஸ், எருசலேமில் அலெக்சாண்டர், சிமிர்னாவில் பயோனியஸ் ஆகியோர் இந்த காலகட்டத்தில் உயிரிழந்த மிகவும் முக்கியமான நபர்கள் ஆவர்.

அதன்பின் வெலேரியன் மன்னன் கிபி 260 வரை ஆட்சி செய்தார். அதுவும் மற்ற மன்னர்களின் ஆட்சிபோல கிறிஸ்தவர்களை வெறுக்கும் அரசாகவே இருந்தது.

அலீரியன் மன்னன் கிபி275 வரை ஆட்சி செய்தார். அதன்பின் டியோக்ளேஷியன் என்னும் மன்னன் ஆட்சிக்கு வந்தான். இவனுடைய காலத்தில் கிறிஸ்தவர்கள் பல மட்டங்களிலும் ஊடுருவியிருந்தார்கள்.

அரண்மனையில் மன்னனின், மனைவியும் மகளும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். அரண்மனைப் பணியாளர்களிலும் பலர் கிறிஸ்தவர்களாய் இருந்தார்கள். எனினும் கிறிஸ்தவர்களின் மீதான வெறுப்பு மன்னனுக்குக் குறையவில்லை.

இவனுடைய ஆட்சி காலத்தின் நான்கு முக்கியமான உத்தரவுகளை மன்னன் பிறப்பித்தான். இந்த நான்கு உத்தரவுகளுமே பல்வேறு காலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்தன.

முதலாவது உத்தரவின் மையம் கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்படவேண்டும், கிறிஸ்தவ மத நூல்கள் கொளுத்தப்படவேண்டும் என்றிருந்தது. கிறிஸ்தவர்களுக்கு பணிகளில் கீழ் நிலை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் அடிமை நிலைக்கு தாழ்த்தப்பட வேண்டும் என்றும் ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கட்டளையை எதிர்த்த கிறிஸ்தவர்கள் எரிக்கப்பட்டனர்.

இரண்டாவது உத்தரவு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அனைத்து குருக்களும் கொல்லப்படவேண்டும் எனும் கடுமையான உத்தரவாய் இருந்தது. இந்த உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டபோது அனைத்து சிறைச்சாலைகளும் குருக்களால் நிறைந்து வழிந்தன.

மூன்றாவது உத்தரவும் கிறிஸ்தவர்களை மிரட்டி ஆசைகாட்டியது. அதில் கிறிஸ்தவர்கள் பிற தெய்வங்களுக்குப் பலியிடவும், ஆராதனை செய்யவும் சம்மதித்தால் விடுதலை உண்டு என்றும், சமூக அந்தஸ்து உயர்த்தப்படும் என்றும் உறுதி தரப்பட்டது. பலி செலுத்தும்படியாக கிறிஸ்தவர்கள் பலவந்தப்படுத்தப்பட வேண்டும், வன்முறைகளினால் அவர்களை வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அந்த உத்தரவு போதித்தது.

நான்காவது உத்தரவு கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறியது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அரசு நிலையிலிருந்து ஏற்பட்ட விரோதம் போல பொதுமக்களிடமிருந்து கோபம் எழவில்லை. பல இடங்களில் கிறிஸ்தவர்கள் பரவியிருந்ததாலும், கிறிஸ்தவர்களால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏதும் நிகழாததாலும் பொது மக்களிடம் கிறிஸ்தவர்களை எதிர்க்கும் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.

மூன்றாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள்
மூன்றாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் சந்தித்த வன்முறை இரண்டாம் நூற்றாண்டில் சந்தித்ததை விட மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். கிறிஸ்தவம் பல இடங்களுக்குப் பரவியதும், கிறிஸ்தவர்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எண்ணம் பொய்யாய் போனதும் இதன் காரணமாக இருக்கலாம்.

கிறிஸ்தவம் ஒரு அமைப்பு ரீதியாக சற்று பலப்படத் துவங்கியது. சபையில் வெளியிலிருந்து வரும் இன்னல்களை மீறி உள்ளுக்குள்ளேயே கருத்து மோதல்கள் எழுவது சகஜமாயிற்று.

கிறிஸ்தவத்தில் முதல் நூற்றாண்டில் இருந்த பற்றுறுதி உடைபடத் துவங்கியது. கிறிஸ்துவுக்காக இறப்பது நல்லது எனும் சிந்தனை இருந்தாலும் அது வலுவிழந்ததாய் காணப்பட்டது. பலர் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள கிறிஸ்தவத்துக்கு எதிராக பேசிய நிகழ்வுகளும், பின் வாங்கிய நிகழ்வுகளும் நடந்தன.

இதன் முக்கியமான காரணம் இயேசுவின் இரண்டாம் வருகை நிகழவில்லை என்பதே. பலர் இயேசு உயிர்த்த சில ஆண்டுகளிலேயே இயேசுவின் இரண்டாம் வருகை வரும் என்று நம்பினார்கள். அது இந்த காலத்தில் பொய்க்கத் துவங்கியது. இரண்டாம் வருகையைக் குறித்த நம்பிக்கைகள் மறையத் துவங்கின.

பாவ மன்னிப்பு என்பது சபையில் அனைவரிடமும் சொல்ல வேண்டும் எனும் நிலை மாறி குருவானவரிடம் மட்டுமே சொல்ல வேண்டும் எனும் நிலை உருவானது இந்த நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றாகும்.

குருக்கள் பெரும்பாலும் மணமாகாதவர்களாகவே இருந்தார்கள். இயேசு திருமணம் செய்து கொள்ளவில்லை எனவே குருக்களும் திருமணம் செய்யக் கூடாது எனும் எண்ணம் வலுவாய் இருந்தது.

உயிருக்குப் பயந்து கிறிஸ்துவை மறுதலித்தவர்களை மீண்டும் கிறிஸ்தவத்தில் சேர்த்துக் கொள்வது தேவையா எனும் விவாதம் எழுந்தது. சரி என்றும், தவறு என்றும் இருபிரிவினர் வாதிட்டனர். ரோம் திருச்சபை மன்னித்தல் இறைவனின் வரம் எனவே மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என உறுதியாய் கூறியது.

ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டவர்கள் நோவேட்டஸ் என்பவரின் தலைமையில் தனி பிரிவாக இயங்கினர். இந்த பிரிவினர் ஐந்தாம் நூற்றாண்டுவரை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

கிறிஸ்துவுக்காக இறப்பவர்கள் மரியாதை செலுத்தப்பட்டன. அவர்கள் விண்ணகத்தில் இயேசுவோடு இருக்கிறார்கள் என்றும் அவர்கள் மூலமாக இறைவனிடம் வேண்ட முடியும் என்னும் சிந்தனைகளும் பரவின. எனவே மக்கள் விண்ணப்பங்களையும் இரத்த சாட்சிகளாய் மரித்தவர்களிடமும் வைத்தனர்.

திருமுழுக்கு கொடுப்பதில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. திருமுழுக்கின் போது நெற்றியில் சிலுவை அடையாளம் இடுதல், வெள்ளை உடை அணிதல் போன்ற இன்றைய முறை இந்த நூற்றாண்டில் தான் ஆரம்பித்தது.

திருப்பலியில் வழங்கப்படும் திராட்சை இரசமும், கோதுமை அப்பமும் இயேசுவின் இரத்தமாகவும் உடலாகவும் இருக்கிறது எனும் சிந்தனை ஆழமாய் பரவியிருந்தது. நற்கருணை வழிபாடுகள் முக்கியத்துவம் அடைந்தன. இயேசு சிலுவையில் பலியானதன் தொடர்ச்சி நற்கருணை வழிபாட்டால் கிடைக்கிறது எனும் நம்பிக்கையும் கிறிஸ்தவத்தில் இருந்தது.

நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்

நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் மேலும் பல கருத்து வேறுபாடுகளைச் சந்தித்தது. டொனேட்டிசம் மற்றும் அரியானிஸம் என்பவை இந்த நுற்றாண்டில் நோன்றிய இரண்டு முக்கியமான பிரிவுக் குழுக்களாகும்.

டொனேட்டிசம் மென்சூரியஸ் என்பவரை மையப்படுத்தி உருவானது. துன்ப நாட்களில் பல குருக்கள் கிறிஸ்தவ நூல்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர். அவர்களை கிறிஸ்தவத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டது.

அந்த நாட்களில் கிறிஸ்துவுக்காய் இறப்பது மிகப்பெரும் பெருமைக்குரிய செயலாக இருந்தது. எனவே பலர் தாமாகவே முன்வந்து மரணத்தை ஏற்றுக் கொண்டனர். இதை மன்சூரியஸ் எதிர்த்தார். இப்படி இறப்பவர்களுக்கு மரியாதை செலுத்தப் படக் கூடாது என்று அறிவித்தார்.

அரியானிஸம் அரியன் எனும் குருவானவரால் உருவாக்கப்பட்டது. இவர்களுடைய கொள்கைப்படி கடவுள் துவக்கமும், முடிவும் இல்லாமல் முழுமையானவர். ஒரே கடவுள். அவருடைய தன்மை பகிரும் தன்மையோ, உருமாறும் தன்மையோ அல்ல.

எனவே இயேசு கடவுள் அல்ல. அவர் கடவுளிடம் நேரடியாய் பேச முடியாதவர். தன்னுடைய வாழ்க்கை முறையை ஒத்தே அவருக்கு கடவுளிடமுள்ள அருள் இருக்கும் என்று போதித்தார்.

இவருடைய இந்த கொள்கை ஒட்டு மொத்த கிறிஸ்தவ நம்பிக்கைக்கே இடையூறாக விளங்கியது. எனவே கி.பி 321ல் எகிப்தில் கூடிய பேராயர் பேரவை இவரை கிறிஸ்தவ மதத்தை விட்டு வெளியேற்றியது.

இந்த பிளவை சரிசெய்வதற்காக கான்ஸ்டண்டைன் மன்னன் கூட்டிய முதல் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் நிசியாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

உலகின் பல இடங்களிலிருந்தும் வந்திருந்த முன்னூறு பேராயர்கள் பல முக்கிய முடிவுகளை இங்கே எடுத்தனர். இந்தியாவிலிருந்தும் ஒரு பேராயர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இயேசுவின் கடவுள் தன்மையை உறுதி செய்து அதற்குரிய விசுவாச பிரமாணங்கள் தயாராக்கப்பட்டன.

இயேசு கடவுளைப் போல அதே தன்மையுடையவர் எனும் கருத்து வலிமைப்படுத்தப் பட்டது. அரியானிஸம் கொள்கை நிராகரிக்கப்பட்டது. அவரை மதம் வெறியேற்றியதுடன் அவருடைய நூல்களையும் எரித்தது.

இந்த கூட்டத்தில் மேலும் பல முக்கிய தீர்மானங்கள் ஒத்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டன. இயேசுவின் உயிர்ப்பு விழா ஒரு ஞாயிற்றுக் கிழமை தான் கொண்டாடப்பட வேண்டும் எனவும், திருச்சபைகளில் பல சட்டதிட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப் பட்டன.

அதன் பின் வந்த பல மன்னர்கள் நிசியா குழுவை எதிர்ப்பவர்களாக இருந்தனர். குறிப்பாக 337ல் அரசரான காண்டாண்டியஸ் நிசியா கொள்கைக்கு எதிராக தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அரியானிஸம் கொள்கையை நிலைப்படுத்த முயன்றார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை.

இதன்பின் 361ல் ஆட்சிக்கு வந்த ஜூலியன் மன்னன் கிறிஸ்தவத்தையே விரட்டி விட முயற்சி எடுத்து தோல்வியடைந்தார். 371ல் ஆட்சிக்கு வந்த தியோடோசியஸ் மன்னன் தான் நிசியா பொதுக்குழிவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு முழு ஆதரவு கொடுத்தார்.

நிசியா விசுவாசப் பிரமாணம் என்று அழைக்கப்பட்டு இன்றும் ஆலயங்களில் வாசிக்கப்படும் விசுவாசப்பிரமாணம் கிபி 381ல் கான்ஸ்டாண்டினோ புரியில் கூட்டப்பட்ட குழுவில் தயாராக்கப்பட்டது.

அப்போலிநரியானிஸம் என்று இன்னொரு கொள்கையும் இந்த காலகட்டத்தில் தோன்றியது. இதன்படி இயேசு உண்மையில் மனிதரல்ல. அவருக்குள் இருந்தது மனித ஆன்மா அல்ல. அது வார்த்தை. மட்டுமன்றி பரிசுத்த ஆவியானவருக்கு எந்த விதமான தெய்வத் தன்மையும் இல்லை.

இந்த கொள்கை பெருமளவில் பரவவில்லை. இதை கிறிஸ்தவம் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
நான்காம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள்

நான்காம் நூற்றாண்டில் திருச்சலை அரசியல் நிகழ்வுகளோடு இணைந்து விட்டது. அரசின் வெறுப்பு ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவர்கள் பக்கம் குவிந்திருந்த காலம் மறைந்து போயிருந்தது.

இந்த நூற்றாண்டில் சில முக்கியமான கிறிஸ்தவ அடிப்படை எண்ணங்கள் வலுப்பெற்றன. குருக்கள் திருமணமாகாதவர்களாக இருப்பதே சிறந்தது எனும் மூன்றாம் நூற்றாண்டுச் சிந்தனை இந்த நூற்றாண்டில் வலுவடைந்து பெரும்பாலானவர்களின் அங்கீகாரத்துக்கு வந்தது.

திருப்பலிகளில் வழங்கப்படும் அப்பமும், திராட்சை இரசமும் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் இருக்கிறது எனும் சிந்தனையும் வலுவடைந்தது.

இயேசுவுக்காய் பாடுகள் பட்டு இறந்தவர்களை நோக்கி விண்ணப்பம் வைக்கும் வழக்கமும் தீவிரமடைந்தது. சிலர் இத்தகைய புனிதர்களை வணங்கவும் ஆரம்பித்தனர். எனவே இந்த காலகட்டத்தில் இரத்தசாட்சியாய் இறந்தவர்கள் விண்ணக தூதர்கள் போல கௌரவிக்கப்பட்டனர்.

மிகப்பெரிய பிரம்மாண்டமான ஆலயங்கள் இந்த நூற்றாண்டில் தான் கட்டப்பட்டன. நிக்கோதேமியாவில் இந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் அரண்மனை போல அற்புதமாய் விளங்கியது என குறிப்புகள் தெரிவிக்கின்றன

எருசலேம், பெத்லேகேம், ரோம் போன்ற இடங்களிலும் சிறப்பான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டன. கிறிஸ்தவ மதம் சமூகத்திலுள்ள பிற மதங்களோடு இணைந்து தனித்துவம் பெற்ற மதமாக எங்கும் பரவத் துவங்கியது.

கருங்கடலுக்கு வட கிழக்கே அமைந்திருந்த ஜியார்ஜியா நாடு கிறிஸ்தவ நாடானது. ஒரு கிறிஸ்தவ அடிமைப் பெண்ணின் ஜெபத்தினால் அந்த நாட்டு அரசி சுகமானதே இதன் காரணமாயிற்று.

அர்மீனியா நாடும் அந்த காலத்தில் கிறிஸ்தவ நாடானது. அதற்கு அந்த நாட்டு இளவரசன் கிரிகோரியே காரணமானார். அந்த நாட்டிலுள்ள பல ஆலயங்கள் கிறிஸ்தவக் கோயில்களாக மாற்றப்பட்டன.

பாரசீகத்திலும் நான்காம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் கிறிஸ்தவம் மிகவும் செழுமையுடன் காணப்பட்டது. ஆனால் நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கிறித்தவர்களுக்கு அங்கே பெரும் இன்னல் காத்திருந்தது. அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அவர்களுடைய பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

ஆயிரத்து அறுநூறு கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தின் காரணமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்த மக்கள் சிரிய மொழியைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் அங்கிருந்து பின்னர் இந்தியா வந்து மலபார் சபையில் இணைந்திருக்கலாம் என்றும். இவர்கள் மூலம் சிரியன் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அரேபியா நாட்டிற்கும் கிறிஸ்தவம் கொண்டு செல்லப்பட்டது. கிறிஸ்தவ துறவியர் அதற்காக அரேபியப் பாலைவனங்களில் பயணித்து பலருக்கு சுகமளித்தனர்.

Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு : 6 – உலகின் முதல் கிறிஸ்தவ மன்னன்

Image result for King constantine Christianity

முதல் கிறிஸ்தவ மன்னன் என்னும் பெருமை கான்ஸ்டண்டைன் மன்னனுக்குக் கிடைத்தது. அவனுடைய ஆட்சி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறிகொண்ட வேங்கைக் கூட்டம் போல பாய்ந்து கொண்டிருந்த வெறுப்பு அலையை அடக்கியது. கிறிஸ்தவர்களுக்குக் குறைந்த பட்சப் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்தது. கான்ஸ்டாண்டியஸ் என்னும் ராணுவ தளபதிக்கும், ஹெலீனா என்பவளுக்கும் முறைகேடாகப் பிறந்தவன் இந்த மன்னன் என்கிறது வரலாறு. டயோக்லீஷியன் மன்னனின் மறைவுக்குப் பின் அரியணையை யார் கைப்பற்றுவது என்னும் போரில் கான்ஸ்டண்டைன் வெற்றி பெற்றான். இவன் போருக்குச் செல்லும் முன் ஒரு சிலுவையைக் காட்சி கண்டான். சிலுவை அருகே அவனுக்கு வெற்றி உறுதி என்று குறிப்பிட்டிருந்தது. அதைக் கண்ட கான்ஸ்டண்டைன் புதிய உத்வேகத்துடன் எழுந்து அரியணைப் போட்டியாளர்களை அழித்து ஆட்சியைக் கைப்பற்றினான்.

இவனுடைய ஆட்சிக் காலம் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு என்னும் எல்லையோடு நின்று விடாமல், கிறிஸ்தவம் அல்லாதவர்களுக்கு எதிராக சட்டங்கள் முளைவிட்டன. பிற மதங்கள் பல தடை செய்யப்பட்டன. அரசினால் செய்யப்பட்டு வந்த பலிகள், வழிபாடுகள் போன்றவை நிறுத்தப்பட்டன. கிறிஸ்தவர்கள் தங்கள் போதனைகளை வெளிப்படையாகப் பேசும் நிலை உருவானது.

டயோக்லீஷியஸ் மன்னன் காலத்தில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டு நிலையங்கள் பல இடிக்கப்பட்டன. பல ஆக்கிரமிக்குக்கு உள்ளாயின. கான்ஸ்டண்டைன் மன்னனின் காலத்தில் அவை கிறிஸ்தவர்களால் மீட்கப்பட்டன. இந்த காலத்தில் தான் கிறிஸ்தவ ஆலயங்கள் அழகுடனும் அழகிய வேலைப்பாடுகளுடனும் கட்டப்பட்டன. மன்னன் கிறிஸ்தவன் ஆகையால் ஆலயம் கட்டுவதற்கான அனுமதி தடையின்றிக் கிடைத்தது. காண்டாண்டிநோபிள் போன்ற இடங்களில் மிகப்பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டன.

கிறிஸ்தவ மதத்தைப் பரப்புபவர்களுக்கும், கிறிஸ்தவ ஆலயங்களில் பணி புரிபவர்களுக்கும் அரசாங்கமே ஊதியம் வழங்கியது ! எனவே கிறிஸ்தவப் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசுப் பணிகளைப் போலாயின. மற்ற மதங்களுக்காய் செலவிடப்பட்டு வந்த பணம் குறைக்கப்பட்டது, அல்லது நிறுத்தப்பட்டது. கிறிஸ்தவப் போதகர்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப் பட்டார்கள். அவர்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் பலர் கிறிஸ்தவ மதத்துக்குள் நுழைந்தனர். கிறிஸ்துவை நம்பாதவர்களும், கிறிஸ்தவ மதத்தின் மேல் ஆழமான ஈடுபாடு இல்லாதவர்களும் அரசு சலுகைகளுக்காகவும், மரியாதைக்காகவும் கிறிஸ்தவ மதத்துக்குள் ஏராளமாய் நுழையும் நிலையும் இந்த காலத்தில் நிகழ்ந்தது. இப்படி பலர் கிறிஸ்தவ மதத்துக்குள் நுழைந்ததால் அவர்களுடைய கலாச்சாரங்களும், சிந்தனைகளும் கிறிஸ்தவ மதத்துக்குள் பரவின. இது கிறிஸ்தவ மதத்தின் தனித்தன்மைக்கு பங்கம் விளைவிப்பதாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக புனிதர்கள், அன்னை மரி போன்றவர்களுக்கு சிலைகள் நிறுவும் பழக்கம் மெல்ல மெல்ல கிறிஸ்தவத்தில் நுழைந்தது.

ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாகவும். கிறிஸ்தவ ஆராதனைகள் நடைபெறும் நாளாகவும் அறிவிக்கப்பட்டதும் கான்ஸ்டண்டைன் மன்னனின் காலத்தில் தான். அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் போன்றவை ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை பெற்றன.

ஞாயிற்றுக் கிழமை சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது !

மன்னன் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டதால், சிலுவை அவனுக்குப் புனிதச் சின்னம் ஆனது. எனவே சிலுவை கொலைக் கருவி என்னும் நிலையிலிருந்து விலக வேண்டும் என்று அவன் நினைத்தான். சிலுவை மரணத்தைத் தடை செய்தான் ! சிலுவை இகழ்ச்சிக்குரியது என்னும் நிலையிலிருந்து விலகி வணக்கத்துக்கு உரியதாக பிரபலப்படுத்தப் பட்டது. சிலுவை கிறிஸ்தவர்களின் புனிதச் சின்னமானது !

தேவையற்ற குழந்தைகளைக் கொல்வதும், அவர்களை அடிமைகளாக விற்பதும் அந்நாட்களில் நடைபெற்று வந்தது. அதை மன்னன் தடை செய்தான். மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையும், சமுதாய மனித உறவுகள் மேம்படும் நிலையும் இந்த தடையினால் உருவானது.

எல்லோரிலும் இறைவன் இருக்கிறான் என்னும் சிந்தனை வலுப்பெற்றது. அடிமைகளுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன. அடிமைகள் விரும்பினால் அவர்கள் விடுதலை பெறவும் பல வழிகள் உருவாக்கப்பட்டன. அடிமைகள் என்பவர்கள் முதலாளிகள் வெட்டி வீழ்த்தி விளையாடும் பகடைக் காய்களாக இருக்கும் நிலை மாறியதில் அடிமைகள் ஆனந்தமடைந்தார்கள். அதுவரை அடிமைகள் இறந்தாலும், வாழ்ந்தாலும் யாரும் கவலைப்படவில்லை. ஆனால் இப்போது அவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் சட்ட ரீதியான பாதுகாப்பு தோன்றியது.

கி.பி 379ல் கிறிஸ்தவ மதத்துக்குள் ஞானஸ்நானத்துக்காய் தண்ணீரில் மூழ்கி எழத் தேவையில்லை. தலையில் தண்ணீர் ஊற்றினால் போதும் என்னும் சிந்தனை எழுந்தது. முழுக்கு ஞானஸ்நானமே சிறந்தது என்று இயேசுவே சொல்லவில்லை என்றும், சிறையில் இருப்பவர்களுக்கும், மூழ்கி எழும் நிலையில் தண்ணீர் இல்லாத இடங்களில் இருப்பவர்களுக்கும், ஞானஸ்நானம் வழங்க இதுவே சிறந்தது என்றும், ஞானஸ்நானம் என்பது ஒரு அடையாளமே, ஒருவன் கிறிஸ்துவுக்குள் மறுபடி பிறப்பதே உண்மையான கிறிஸ்தவனாகும் நிலை என்றும் சாமாதான விவாதங்கள் நிகழ்ந்தன. இந்த காலகட்டத்தில் தான் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் வழங்கும் வழக்கமும் ஆரம்பமானது.

கான்ஸ்டைன் மன்னன் கிறிஸ்தவத்தைத் தன்னுடைய மதமாகத் தேர்ந்தெடுத்தபின் ரோமப்பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட மதமாக கிறிஸ்தவம் மாறியது. ஆனால் ரோம் நகரம் பிற மதத்தினரின் கலாச்சார அடையாளங்களையே எங்கும் சுமந்திருந்தது. எதிரிகளின் பார்வையும் ரோமின் மீதிருந்து எப்போதும் அகலவில்லை, அடிக்கடி பிரச்சனைகள், போர்கள் என்று ரோம் ஒரு பாதுகாப்பற்ற நகராகவே இருந்தது. எனவே கான்ஸ்டண்டைன் மன்னன் ஒரு புதிய தலைநகரைத் தோற்றுவிக்க வேண்டும் என்று விரும்பினான். அதற்காக அவன் கிரேக்க நகரான பைசாண்டியைத் தேர்ந்தெடுத்து கான்ஸ்டாண்டிநோபிள் என்னும் அழகிய நகரை நிர்மாணித்தான். இந்த பைசாண்டி , ஆசியாவுக்கு ஐரோப்பாவுக்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது. போர்களைப் பல ஆண்டு காலமாக சந்திக்காத இடமாகவும் இருந்தது பைசாண்டி.

இந்த காண்டாண்டிநோபிள் தான் தற்போதைய இஸ்தான்புல்.

இஸ்தான்புல்-லில் இப்போது இருக்கும் மிகப் பிரம்மாண்டமான மசூதி 1453ம் ஆண்டு துருக்கியர்கள் படையெடுக்கும் வரை கிறிஸ்தவ ஆலயமாக இருந்தது. கி.பி 537ல் ஐன்ஸ்டீனியன் என்னும் மன்னனால் புதுப்பிக்கப்பட்ட இந்த கிறிஸ்தவ ஆலயம் கான்ஸ்டண்டைன் மன்னனால் கட்டப்பட்டு ‘சான்சா சோபியா’ என்று அழைக்கப்பட்டதாகும்.

நகர் நிர்மாணிக்கப்பட்டபின் ரோமப் பேரரசு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிரேக்க மொழிபேசிய மக்கள் வாழ்ந்த கிழக்குப் பகுதி கிரேக்கம் என்றும், லத்தீன் மொழி பேசப்பட்ட மேற்குப் பகுதி லத்தீன் என்றும் அழைக்கப்பட, ரோம் இரண்டாய் பிரிந்தது.

கான்ஸ்டண்டைன் மன்னன் காலத்தில் கிறிஸ்தவம் வளர்ந்தது. அதற்குப் பிறகு வந்த அரசர்கள் வன்முறையினால் கிறிஸ்தவத்தை வளர்க்க முற்பட்டார்கள். பிற மதத்தினரின் வழிபாட்டு இடங்களை அபகரித்தும், அவர்களை கிறிஸ்தவத்துக்குள் நுழைய கட்டாயப்படுத்தியும், அவர்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றியும் கொடுமைப்படுத்தினார்கள்.

கான்ஸ்டாண்டிநோபிள் கிறிஸ்தவத்தின் தலைமை இடம் என்று கான்ஸ்டண்டைன் மன்னன் தீர்மானித்திருந்தாலும், ரோமிலும் கிறிஸ்தவம் இருந்தது. அங்கே இருந்த கிறிஸ்தவத் தலைவர் மூத்தவராக இருந்ததாலும், பேதுரு முதலில் பணியாற்றிய இடம் என்பதாலும் ரோம் நகரின் கிறிஸ்தவ அமைப்பைப் போன்றே மற்ற அமைப்புகளும் இருக்க வேண்டும் என்னும் கருத்து நிலவியது. பேதுருவை இயேசு பாறை என்றழைத்து இந்தப் பாறையின் மீது எனது திருச்சபையைக் கட்டுவேன் என்றும். என் ஆடுகளை மேய்ப்பவனும், கண்காணிப்பவனும், பராமரிப்பவனும் நீ தான் என்றும் திருச்சபைக்கான முழு பொறுப்பையும் கொடுத்திருந்தார். எனவே அவர் இடத்தில் அவருக்குப் பின் வருபவரே அதிகாரத்தில் முதன்மையானவராய் இருக்க வேண்டும் என்று கருத்துக்கள் பரவலாயின.

கான்ஸ்டாண்டிநோபிள், எருசலேம், அந்தியோக்கியா, அலக்சாண்டிரியா உள்ள தலைவர்கள், அல்லது பிஷப் களுக்குக் கீழும் சபைகள் ஏராளம் இருந்தன. ரோம் தலைவரான பிஷப்புக்குக் கீழும் சபைகள் இருந்தன. ரோமில் இருந்த பிஷப் தன்னை பப்பா என்றும், மற்றவர்கள் தங்களை பாட்டிரியார்க் என்றும் அழைத்துக் கொண்டார்கள். ஒரு வகையில் உலகில் அப்போது ஐந்து போப்பாண்டவர்கள் இருந்திருக்கிறார்கள் ! இந்த ஐந்து பேருக்குமிடையே யார் பெரியவன் யார் எல்லோருக்கும் தலைவராக இருப்பது என்று ஒரு போராட்டம். காலம் செல்லச் செல்ல ரோம் மற்றும் கான்ஸ்டாண்டிநோபிள் இரண்டுக்குமிடையே தான் தலைவர் யார் என்னும் போராட்டம்! அதில் பேதுருவின் வழி வந்த இடம் என்பதால் ரோம், தன்னுடைய அதிகாரத்தை, தலைமைத்துவத்தை பிடித்துக் கொண்டது !

ரோம் திருச்சபை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியது. விவிலியத்தை லத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தது கூட ரோம் திருச்சபையே. ரோமாபுரித் திருச்சபையினரிடம் சிறப்பான நிர்வாகமும், திட்டமிடுதலும் இருந்தது. அவர்கள் ஆழமான விசுவாசத்துடன் மக்கள் பணிகளிலும் அதிகமாக ஈடுபட்டார்கள். ‘நான் பசியாய் இருந்தேன் எனக்கு உண்ணத் தந்தீர்கள்’ என்னும் கிறிஸ்துவின் போதனைக்கு ஏற்ப அவர்கள் மக்கள் தொண்டுகளில் ஆர்வம் காட்டியதால் மக்கள் அவர்களை மிகவும் உயர்வாக மதித்தார்கள். பஞ்சம், நோய்கள், போர் இழப்புகள் போன்றவை நிகழும் போதெல்லாம் திருச்சபை முன்வந்து அனைத்து உதவிகளையும் செய்தது. கிறிஸ்தவர்களுக்கு மட்டுமன்றி, தன் எல்லைக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமன்றி எல்லோருக்கும் உதவி செய்தது ரோம் திருச்சபை. எனவே அது முக்கியத்துவம் பெற்று தலைமை இடமானது !

ரோம் அக்காலத்தில் மிகவும் பரந்து விரிந்த பேரரசாய் இருந்தது. கி.பி 337ல் கிறிஸ்தவ மதம் பரவ முக்கிய காரணமாய் இருந்த மன்னன் கான்ஸ்டண்டைன் மரணமடைந்தான். அதன் பின் ஆட்சிக்கு யார் வருவது என்று எழுந்த சர்ச்சையில் உள்நாட்டுக் கலவரங்கள் எழத் துவங்கின. போரிட்டு, வன்முறையிலும் தான் அரச பீடத்தை கைப்பற்ற வேண்டும் என்னும் நிலை உருவானது. இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.

மன்னனின் மரணத்துக்குப் பின் சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக மேற்கு ரோம் மீது பலர் படையெடுத்து ஆக்கிரமிப்புகளை ஆரம்பித்தார்கள். நாடு மிகவும் செல்வச் செழிப்புடன் காணப்பட்டதும், நாட்டில் பலர் பணக்காரர்களாக இருந்ததும் பிற நாட்டினரைக் கவர்ந்திழுத்தது. பலர் வன்முறையாய் வந்து பல இடங்களைக் கைப்பற்றினார்கள். மேற்கு ரோமில் இருந்தவர்கள் போருக்குத் தயாராகாத நிலையில் இருந்ததால் அவர்களால் எதிரிகளின் தாக்குதலை முறியடிக்க முடியவில்லை. இதனால் மேற்கு ரோம் கான்ஸ்டண்டைன் மன்னனின் மரணத்துக்குப் பின் சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளின் சின்னாபின்னமானது. விசிகோத்ஸ், வாண்டல்ஸ், பர்கண்டியர்கள், பிராங்க்ஸ், ஹியூன்ஸ் போன்றவர்கள் அடுத்தடுத்து தாக்கியதில் கி.பி 486ல் மேற்கு ரோம் சிதறுண்டது. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் இருந்த ஒரு மிகப் பெரும் பேரரசு தன்னுடைய வலிமை இழந்து கவிழ்ந்தது.

Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு : 7 – கிறிஸ்தவத்தில் அறிவு நெறிக் கோட்பாடுகள்

 Image result for christianity religion
கிறிஸ்தவம் முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலர்களால் வளர்ந்தது. இரண்டாம் நூற்றாண்டில் இயேசுவின் அப்போஸ்தலர்கள் யாருமே உயிருடன் இல்லை. யோவான் கடைசியாக கி.பி 100ல் இறந்தபின் வழிகாட்டலுக்கு அப்போஸ்தலர்கள் இல்லாமல் சபை அடுத்த நிலை தலைவர்களின் கைகளுக்கு வந்தது.

முதலாம் நூற்றாண்டிலும் சரி, இரண்டாம் நூற்றாண்டிலும் சரி அரசாங்கத்தினால் கிறிஸ்தவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. புதிய சபை, கிளர்ச்சியின் சபை, திமிர்பிடித்தவர்களின் கூட்டம், நாத்திகர்களின் கூட்டன் என்றெல்லாம் பெயர்களை வாங்கி அடிபட்டது.

முதலாம் நூற்றாண்டில் ஒற்றுமையாக ஒரே சிந்தனையுடன் இருதார்கள் கிறிஸ்தவர்கள். இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருக பெருக பிரச்சனைகளும் ஆரம்பித்தன.

தாங்கள் சொல்வதே சரி, மற்றவர்கள் சொல்வது தவறு எனும் எண்ணம் ஆங்காங்கே முளைத்தது. கிறிஸ்துவின் போதனைகளையும், தாங்கள் கற்றுக் கொண்டவற்றையும் கலந்து கட்டி தத்துவங்கள் புறப்பட்டன.

கிறிஸ்தவம் ஒரு தத்துவ மதம் என்னும் சிந்தனை ஆங்காங்கே முளைத்தது. எந்த தத்துவம் என்பதில் அங்கே போட்டி நிலவியது. கிறிஸ்தவத்திற்கு உள்ளேயே நிலவிய இந்த கருத்து முரண்பாடுகள் கிறிஸ்த்தவ ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்தது.

முக்கியமாக மூன்று அறிவு நெறிக் கோட்பாடுகள் இந்த காலகட்டத்தில் தோன்றின.

சிரியன் அறிவு நெறிக் கோட்பாட்டினர், எகிப்திய அறிவு நெறிக் கோட்பாட்டினர், பாண்டிக் அறிவு நெறிக் கோட்பாட்டினர் என அவர்கள் மூன்று மிகப் பெரும் பிரிவாக இயங்கினர்.

இவர்களுடைய அறிவு நெறிக் கோட்பாடுகள் மிகவும் சுவாரஸ்யமானவை.

சிரியன் அறிவு நெறிக் கோட்பாடு

முதலில் சிரியன் அறிவு நெறிக் கோட்பாட்டைப் பார்ப்போம். இதை வெகுவாக பரப்பிய தலைவர்கள் சீமோன், மற்றும் டேஷியன் ஆவார்கள்.

சீமோன் தன்னைக் குறித்துப் பெருமையாய் பேசிக் கொள்பவர். அவருடைய கோட்பாட்டின் படி உலகத்தைப் படைத்த ஒரு கடவுள் உண்டு. அவர் சகல சக்தியும் உடையவர். அவரோடு கூடவே ஒரு பெண் தெய்வமும் உண்டு.

அந்த பெண் தெய்வமே தூதர்களைப் படைக்கிறது. அந்த பெண் தெய்வம் படைத்த தூதர்கள் பூமியை பாவ நிலமாக மாற்றி விட்டதனால் அவள் விண்ணகம் செல்லவில்லை. பூமியிலேயே தங்கி விட்டாள்.

ஒரு முறை அது டிராய் நகரத்து ஹெலன் இளவரசியாய் வெளிப்பட்டது. பிறிதொரு முறை தீர் நகரில் பாலியல் தொழிலாளியாக வெளிப்பட்டது. மூன்றாம் முறையாக அது சீமோனுக்கு வெளிப்பட்டதாம் !

சீமோனுடைய அறிவு நெறிக் கோட்பாட்டின் மையம். மீட்பு என்பது நமது செயல்களினாலல்ல, கடவுளின் அருளினால் என்பது தான். எனவே உடல் என்பதும், நம்முடைய பாவ செயல்கள் என்பதும் மீட்போடு தொடர்புடையது அல்ல என்று நம்பினார்கள்.

அனைத்து விதமான பாவ அசுத்த வழிகளிலும் தவறாமல் நடந்தார்கள்.

இவருடைய சிரியன் அறிவு நெறிக்கோட்பாட்டு சீடர்கள் இந்த கருத்துக்களை எங்கெங்கு சென்றார்களோ அங்கெல்லாம் பரப்பினார்கள்.
சிரியன் அறிவு நெறிக் கோட்பாட்டில் இன்னொரு பிரிவினர் இருந்தார்கள். இவர்கள் பாம்பை வழிபட்டார்கள். அதாவது பாம்பு ஏவாளுக்குப் விலக்கப்பட்ட மரத்தின் கனியை அளித்ததால் தான் ஏவாளுக்கு அறிவுக் கண்கள் திறந்தன. எனவே ஏவாளின் அறிவு வளர்ச்சிக்கு வித்திட்டது பாம்பு தான். நன்மை தீமை அறியும் அறிவு மனிதனுக்கு வர காரணமே பாம்பு தான் என பல்வேறு காரணங்களை அடுக்கினார்கள்.

டேஷியன் தன்னுடைய போதனையிலும் நமது செயல்களுக்கும் நமது மீட்பிற்கும் தொடர்பு இல்லை என்றே வாதிட்டார். அவருடைய சிந்தனைப்படி உலகத்தைப் படைத்தவர் கடவுள் அல்ல. இரண்டாம் நிலையிலுள்ள ஒரு கடவுளே உலகத்தைப் படைத்தவர்.

கிறிஸ்துவும் இயேசுவும் இரண்டு வேறு மனிதர்கள். இயேசு என்னும் மனிதர் மரியின் வயிற்றில் பிறந்தார். அவருக்குள் கிறிஸ்து வந்து இறங்கினார். பின்னர் இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன்பாகவே அவர் இயேசுவை விட்டு வெளியேறிவிட்டார். இது சிரியன் அறிவு நெறிக்கோட்பாட்டினரின் இன்னொரு தத்துவம்

இயேசு தாவீது மன்னனின் தலைமுறையில் வந்தவர் என்பதை இவர் விரும்பவில்லை. இயேசுவுக்கு அந்த அடைமொழி தேவையற்றது என நினைத்தார். எனவே அவருடைய சிரியன் குழுவினர் பயன்படுத்த விவிலியத்தில் சில மாற்றங்கள் செய்தார். குறிப்பாக தாவீதின் மகன் என இயேசுவைக் குறிக்கும் அனைத்து பாகங்களையும் விலக்கினார்.

சிரியன் குழுவினரில் காயீனன் என்னும் இன்னொரு குழுவினரும் இருந்தார்கள். இவர்கள் காயீன் போன்றவர்கள் கட்டளை மீறல்கள் நடத்தியதால் தான் உலகிற்கு மீட்பு தேவைப்பட்டது. அதனால் தான் இயேசு பூமிக்கு வந்தார். எனவே காயீன் போன்ற தீய மனிதர்கள் உண்மையில் நன்மை செய்திருக்கிறார்கள் எனும் வித்தியாசமான சிந்தனை கொண்டிருந்தனர்.

இவருடைய இந்த விவிலியம் சிரியன் குழுவினரிடம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்திருக்கிறது.

எகிப்திய அறிவு நெறிக் கோட்பாடு

எகிப்திய அறிவு நெறிக் கோட்பாடு செய்த போதனை மிகவும் சுவாரஸ்யமானது. அதாவது கடவுள் மிகவும் பரிசுத்தமானவர். அவரிடமிருந்து ஏயோன்கள் என்னும் ஆவிகள் வெளியேறி செயலற்றவற்றை உருவாக்கின என்பதாகும்.

ஆனால் எத்தனை ஏயோன்கள் என்பதில் அவர்களுக்குள் பெரும் பிரச்சனை வந்து விட்டது. சிலர் முப்பது என்று சொல்ல, இன்னொரு பிரிவினர் பதினாறு சோடி எனவே முப்பத்தி இரண்டு என்று சொல்ல, வேறு சிலர் இயேசுவும் தூய ஆவியும் கூட கடவுளின் ஏயோன்கள் தான் என்றனர்.

அவர்களுடைய தத்துவப்படி உலகின் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்.

முதல் வகை மனிதர்கள் ஜடம் போல இருப்பார்கள். இவர்கள் எந்தக் காரணம் கொண்டும் மீட்படைவதில்லை. இவர்கள் ஆன்மீகத்தின் வாசலுக்குக் கூட வராதவர்கள். எனவே இவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.

இரண்டாவது வகையினர் மனோதத்துவ மனிதர்கள். இவர்கள் தங்களை சற்று அறிந்தவர்கள். இவர்கள் மீட்படைய வாய்ப்பு உண்டு. ஆனால் தனியாக இவர்களால் மீட்பு அடைய முடியாது. ஒரு மீட்பரின் மூலமாக இவர்கள் மீட்படைய முடியும்.

மூன்றாவது வகை மனிதர்கள் ஆன்மீக வாதிகள். இவர்களுக்கு விண்ணகத்தில் நிரந்தர இடம் உண்டு. இவர்கள் வழக்கம் போல இறைவனுக்காய் தங்களை அர்ப்பணித்து வாழ்ந்தால் போதும்.

இந்த மூன்று வகையான மனிதர்களைக் குறித்த போதனைகள் எகிப்திய அறிவு நெறிக் கோட்பாட்டின் முக்கியப் பணியாக இருந்தது.

பாஸிலிடிஸ் என்னும் ஒரு மனிதர் இருந்தார். அவரும் எகிப்திய நெறிக் கோட்பாடை ஏற்றுக் கொண்டு பரப்பி வந்தவர். அவருடைய கருத்துப் படி கடவுளிடமிருந்து வந்த ஏயோன்களின் ஒன்று யூதர்களின் கடவுள். அந்த கடவுள் அழிவுக்கு மக்களை நடத்துகிறார்.

கிறிஸ்து இறந்தது ஒரு தோற்ற மயக்கமே. உண்மையில் கிறிஸ்து இறக்கவில்லை. வழியில் அவருக்கு சிலுவை சுமக்க உதவிய சீரேனே ஊரானாகிய சீமோன் தான் சிலுவையில் அறையப்பட்டவர்.

இந்த நெறிக் கோட்பாட்டினரும் உடலை எப்படிப் பயன்படுத்தினாலும் தவறில்லை. ஆன்மா மட்டுமே அழுக்கடையாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தனர்.

பாண்டிக் அறிவு நெறிக் கோட்பாடு

மார்சியன் என்னும் பெரும் பணக்காரரால் இந்த பாண்டிக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. இவர் ரோம திருச்சபைக்கு பெரும் பணத்தை நன்கொடையாகக் கொடுத்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

இவருடைய போதனைப்படி யூதரின் கடவுள் மிகவும் மோசமானவர். அவர்கள் இரக்கத்தின் கடவுளைக் குறித்து அறிந்திருக்கவில்லை. எனவே கடவுள் இயேசு எனும் இரக்கத்தின் கடவுளை உலகிற்கு அனுப்பினார்.

விவிலியத்தின் பழைய ஏற்பாடு புறக்கணிக்கப்பட வேண்டியது. புதிய ஏற்பாட்டின் இரக்கமும், பழைய ஏற்பாட்டின் பழி வாங்குதலும் முரணானவை. முரண்கள் இரண்டு ஒரே அரணுக்குள் இருக்கக் கூடாது எனவே அதை புறக்கணிக்க வேண்டும் என பழைய ஏற்பாட்டை புறக்கணித்தார்.

இவ்வுலகம் தீமையினால் நிறைந்தது. இந்த உலகின் கடவுளுக்கும் இயேசு சொன்ன கடவுளுக்கும் சம்பந்தமில்லை. இரண்டும் வேறு வேறு நபர்கள் என்று போதித்தார்.

கிறிஸ்துவுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. எல்லாம் ஒரு தோற்ற மயக்கமே என்பதும் இவருடைய போதனைகளில் ஒன்று.

மனமும், உடலும் தூய்மையாக இருக்க வேண்டும். திருமணம் செய்வது கூட உடலை தீட்டுப் படுத்துவது. எனவே திருமணத்தைக் கூட வெறுத்தார். புலால் உண்ணவில்லை. உடல் தூய்மையைக் கடைபிடித்தார்.

இவ்வாறு இரண்டாம் நூற்றாண்டிலும் மூன்றாம் நூற்றாண்டிலும் நிகழ்ந்த அறிவு நெறிக் கோட்பாடுகள் கிறிஸ்தவத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. மக்கள் குழுக்களாக விவாதங்களில் ஈடுபட்டனர். இந்த காலகட்டத்தில் ஆதிகால இணைந்து வாழும் முறை எல்லாம் விடைபெற்றிருந்தது.

கிறிஸ்தவ மதம் மாபெரும் குழப்பத்தையும் சவாலையும் சந்தித்தது

கடவுளைப் பற்றிய தவறான தகவல்களை பல விதமாகப் போதித்தனர். கடவுள் உலகைப் படைத்தார் எனும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக அது அமைந்தது.

கிறிஸ்து ஒரு தோற்றம் என்பதும், உண்மையில் இயேசு இறக்கவில்லை என்பதும் கிறிஸ்தவத்தின் அடித்தளத்தையே அசைப்பவை. எனவே அவை கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாய் விழுந்தது.

கடவுளிடமிருந்து ஏயோன் புறப்படுகின்றன எனும் கற்பனைகளும் கிறிஸ்தவத்துக்கும் விவிலியத்திற்கும் எதிரானது. இந்த அறிவு நெறிக் கோட்பாடுகள் அவற்றையும் பெருமளவில் பரப்பின.
அந்த காலகட்டத்தில் அறிவு நெறிக் கோட்பாடு கிறிஸ்தவ விசுவாசத்துக்கு எதிராக கிளம்பியதால் பலர் அதை எதிர்த்தார்கள். பல நூல்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை மையப்படுத்தியும் நெறிக் கோட்பாடுகளை எதிர்த்தும் வெளியாயின.

ஜஸ்டின், ஐரேனியஸ், கிளமெண்ட் முதலானோரின் நூல்கள் அக்கால கிறிஸ்தவர்களின் குழப்பங்களைத் தீர்க்கும் விதமாய் அமைந்தன.

மாண்டேனஸ் கொள்கை

கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு அறிவு நெறிக் கோட்பாடுகள் ஏற்படுத்திய பின்னடைவை விடப் பல மடங்கு பின்னடைவை மாண்டேனஸ் சபை ஏற்படுத்தியது. இந்த பிரிவில் நடந்த நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு மாறாத கரும்புள்ளியாய் இடம்பெற்றுவிட்டது.

கி.பி 156ல் மாண்டேனஸ் கொள்கை பிறந்தது. இதை மாண்டேனஸ் என்பவர் உருவாக்கியதால் இது மாண்டேனஸ் கொள்கை என்று அவருடைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

பிரிகியா நாடு இந்த மாண்டேனஸ் கொள்கைக்காரர்களால் புனித பூமி என்று வர்ணிக்கப்பட்ட நாடு.

மிசியாவில் அர்டபா எனுமிடத்தில் ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த மாண்டேனஸ். பிறப்பினால் கிறிஸ்தவரானவர் அல்ல இவர். இவர் தன்னுடைய கடவுளாக சைபீல் தேவதையை ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்து வந்தவர்.

கிறிஸ்தவ மதமும் அதன் பிரிவுகளும் அதன் பன்முகக் கோட்பாடுகளும் மாண்டேனஸ் பார்வையை கிறிஸ்தவத்தின் பக்கம் திருப்ப வைத்தன. கி.பி 150ல் கிறிஸ்தவ மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவர் மக்களை வசீகரிக்க, தூய ஆவியானவர் தன்னுடன் பேசுகிறார் என கூறத் துவங்கினார். பலர் அதை நம்பினார்கள். நம்பியவர்கள் அவருடைய குழுவில் இணைந்தார்கள்.

தூய ஆவியானவர் தன்னுடன் பேசுகிறார் என்று சொல்லி வந்த மாண்டேனஸ் ஒரு கட்டத்தில் தானே தூய ஆவியானவர் என்று பேசத் துவங்கினார். அவருடைய ஆதரவாளர்களும் அவரை தூய ஆவியானவராகவே பார்த்தார்கள்.

பிரிசில்லா, மாக்ஸிமில்லா எனும் இரண்டு பெண்கள் அவருடைய தீவிரமான பக்தர்கள் ஆகிவிட்டனர். இருவதும் அவரோடே திரிந்து கொள்கைப் பரப்புச் செயல்களில் ஈடுபட்டனர்.

கடவுளும் தூய ஆவியானவரும் தனக்குள் இறங்கி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று இவர் சொல்லிக் கொண்டார். எனவே அவருடைய பேச்சை கடவுளின் நேரடிப் பேச்சுக்குரிய மரியாதை கொடுத்து அனைவரும் ஆதரித்தனர்.

இவருடைய கொள்கைப்படி திரு வெளிப்பாடு முடியவில்லை. திருவெளிப்பாடு என்பது இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்த இயேசுவின் வெளிப்படுத்தல். தன் உயிர்ப்பிற்குப் பின் இயேசுவே தன்னுடைய அன்புக்குரிய சீடனான யோவானுக்குக் காட்சி கொடுத்து அறிவுறுத்தியதே திருவெளிப்பாடு என நம்புகிறது கிறிஸ்தவம்.

மாண்டேனஸ் தன்னுடைய போதனைகளில் திருவெளிப்பாடு இன்னும் வரவில்லை. அது விரைவில் வரும் என அறிவிக்கத் துவங்கினார். அவருடைய பேச்சுத் திறமை மாண்டேனஸ் கொள்கைக்கு ஆட்களைக் கூட்டிச் சேர்த்தது.

பிரிகியாவிலுள்ள பெப்பூசா எனுமிடத்தில் இயேசு இரண்டாம் முறை வருவார் என்றும் அது விரைவில் நடக்கும் என்றும் தகவல்கள் பரப்பப்பட்டன. பல பரவசப் பேச்சுகளைப் பேசி வந்த மாண்டேனஸ் தன்னுடைய சீடர்களுடன் பெப்பூசாவில் சென்று தங்கினார்.

இவருடைய கொள்கைக்காரர்கள் கடவுள் விரைவில் வருவார் என நம்பினார்கள். எனவே தங்களுக்குரியதை விற்று ஏழைகளுக்குக் கொடுப்பதும், ஆலயத்துக்குக் கொடுப்பதும், உண்ணா நோன்பு இருப்பதும் என பல செயல்களைச் செய்தனர்.

பிரிஸ்கில்லாள் தன்னுடைய கணவனை விட்டு விட்டு மாண்டேனஸின் தீவிர பக்தையாய் சுற்றத் துவங்கினார். இயேசுவின் இரண்டாம் வருகை இதோ விரைவில் என்று சொல்லிக் கொண்டிருந்த அவருடைய ஆயுள் கனவுகளை நிறைவேற்றி வைக்காமலேயே நிறைவுற்றது.

மாக்சிமில்லாளும் மாண்டேனஸ் கொள்கைகளைத் தீவிரமாய் பரப்பினாள். மாண்டேனஸ் சபையின் தீர்க்கத் தரிசி போல செயல்பட்டார். தானே கடைசி தீர்க்கத் தரிசி, இனிமேல் தீர்க்கத் தரிசிகள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டே உயிர் நீத்தார்.

மாண்டேனஸ் கொள்கைக்காரர்கள் பெப்பூசாவில் இயேசுவின் இரண்டாம் வருகை வரும் வரும் என காத்திருந்தார்கள். ஆனால் நடக்கவில்லை. எனவே பெப்பூசாவே புதிய எருசலேம். புனித நகரம் என்று போதிக்கலானார்கள்.

பெப்பூசா புதிய எருசலேம் என்னும் பெயர் பரவியதும் பல ஊர்களிலிருந்தும் மக்கள் பெப்பூசாவுக்கு புனித யாத்திரை வந்தார்கள். பெப்பூசாவின் புகழ் பரவியது. பல நாடுகளிலிருந்தும் மக்கள் பெப்பூசாவுக்கு வர ஆரம்பித்தனர்.

மாண்டேனஸ் கொள்கையைப் பின்பற்றுபவர்களே உண்மையான கிறிஸ்தவர்கள் என்றும் மற்றவர்கள் போலிகள் என்றும் அவர்கள் தீவிரமாய் போதித்தனர். சபைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. பெண்களுக்கு உயரிய நிலை வழங்கப்பட்டது.

ஆப்பிரிக்காவிலும் மாண்டேனஸ் கொள்கை பரவத் துவங்கியது. தெர்த்துலியான் என்பவர் ஆப்பிரிக்காவில் மாண்டேனஸ் கொள்கையைப் பரப்ப உறுதி எடுத்து தலைமை ஏற்றார்.

தெர்த்துலியான் போதனைகள் கடுமையாய் இருந்தன. குருக்களும் பொது நிலையினரும் ஒரே மரியாதைக்குரியவர்கள். இருவருக்கும் வித்தியாசமில்லை எனும் உயரிய சீர்திருத்தச் சிந்தனையை தீவிரமாய் போதித்தவர் அவரே.

இருமுறை திருமணம் செய்வதை தீவிரமாய் எதிர்த்தார் இவர். ஒன்றே கடவுள், ஒன்றே சபை, ஒன்றே திருமணம் என்று வித்தியாசமாய் போதித்தார்.

கி.பி 395ல் தியோடஸ் மன்னனின் காலத்தில் மாண்டேனஸ் கொள்கைக்காரர்கள் ஒடுக்கப்பட்டனர். அதே நிலை யுஸ்தினியான் மன்னன் அரசாண்ட கி.பி 565லும் நிகழ்ந்தது.

மாண்டேனஸ் கொள்கைக்காரர்கள் மன்னர்களின் வாளுக்கு மடியவில்லை. குழுக்கள் குழுக்களாக ஆலயங்களில் கூடினார்கள். வாயில்களை மூடினார்கள். ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தி தாங்களும் மாண்டார்கள் !

நெஸ்டோரியஸ் கொள்கை

ஐந்தாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் மேலும் சில கொள்கை ரீதியிலான பிளவுகளைச் சந்திக்க வேண்டி வந்தது. பல இடங்களுக்குக் கிறிஸ்தவம் பரவினாலும் அவர்களிடையே ஒரே சிந்தனை இல்லாமல் இருந்தது. ஒவ்வொருவரும் அவரவர் புரிந்து கொண்ட விதமாக கிறிஸ்தவத்தைப் பார்த்தனர்.

இந்த காலகட்டத்தில் எழுந்த கொள்கைகளில் நெஸ்டோரியஸ் கொள்கை மிக முக்கியமானதாகும். நெஸ்டோரியஸ் அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்தவர். இவர் கி.பி 428ல் அவர் கான்ஸ்டாண்டிநோபிளில் பேராயராக பொறுப்பேற்றார்.

இவருடைய கொள்கைப்படி இயேசு பிறக்கும் போது தெய்வத் தன்மையோடு பிறக்கவில்லை. கடவுளின் அருளால் பிறந்தவர் இயேசு எனும் கூற்றை இவர் மறுத்தார். தெய்வீகத் தன்மையுடன் இயேசு பிறக்காததனால் இயேசுவின் தாய்க்கு தெய்வீகத் தன்மை இல்லை.

இயேசு பிறந்த பின்பே அவர் ஒரு காலகட்டத்தில் தெய்வீகத் தன்மைக்கு உயர்த்தப்பட்டார். எனவே இயேசுவிலேயே மனிதத் தன்மையும், தெய்வீகத் தன்மையும் கலந்து தான் காணப்படுகிறது.

இயேசுவின் தாய்க்கு எந்தவிதமான தெய்வீகத் தன்மையும் இல்லாததால் அவருக்கு மரியாதை செலுத்த அவசியமில்லை. இயேசுவின் அன்னையை ‘தேவமாதா’ என்று அழைக்கப்படுவது தவறு என்றார்.

இந்தக் கொள்கையை பெரும்பாலானோர் எதிர்த்தார்கள். அவர்களில் முக்கியமானவர் அலெக்சாண்டிரியா பேராயர் சிரில். இவர் குறிப்பிடுகையில் இயேசுவின் பிறப்பே தெய்வத் தன்மையுடையது தான். இயேசு மனிதத்தன்மையும், இறைத்தன்மையும் கலந்து பிறந்தவர் எனவே மாதாவை தேவமாதா என்று அழைக்கலாம் என்றார்.

சிரில் கொள்கை பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ரோமை தலைமையும் இதை ஏற்றுக் கொண்டதால் நெஸ்டோரியஸ் கொள்கைக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

நெஸ்டோரியஸ் கிறிஸ்தவத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அவரும் அவருடைய ஆதரவாளகளும் தங்களுடைய கொள்கைகளை விட்டு விலக மறுத்தனர். எனவே நெஸ்டோரியஸ் எகிப்து நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்.

நெஸ்டோரியஸ் நாடுகடத்தப்பட்டாலும் நெஸ்டோரியஸ் கொள்கை அழியவில்லை. உலகின் பல நாடுகளுக்கும் அந்த கொள்கை பரவியிருக்கிறது. ஆனால் காலப்போக்கில் அந்த கொள்கை தாக்குப் பிடிக்க முடியாமல் அழிவைச் சந்தித்தது.

பலாகியஸ் கொள்கை

பலாகியஸ் என்னும் குருவானவரின் சிந்தனையில் உதித்ததே இந்த பலாகியஸ் கொள்கை. இந்த கொள்கையின் அடிப்படை ஜென்ம பாவத்தை மறுதலிப்பதாகும். மனிதனுக்கு முன் ஜென்ம பாவம் என்று ஒன்று இல்லை என்று இவர் வாதிட்டார்.

ஆதாம், ஏவாள் பாவம் செய்ததால் மனித குலம் முழுவதுக்கும் ஜென்ம பாவம் இருக்கிறது எனும் கிறிஸ்தவ அடிப்படை நம்பிக்கையை இது எதிர்த்தது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீகத் தன்மையே அவனுடைய மீட்புக்கும் வழி வகுக்கும். மனிதன் பிறக்கும் போது தெய்வீகத் தன்மையோடு பிறக்கிறான். தெய்வீகத் தன்மையோடு பிறக்கும் மனிதன் பாவியாக இருக்க முடியாது.

மனிதன் பிறக்கும் போது ஆதாமுக்கும் முந்திய நிலையில் தான் பிறக்கிறான். எனவே ஆதாமின் பாவம் அவனைப் பாதிக்காது.

இது கிறிஸ்தவத்தின் அடிப்படையான கிறிஸ்துவால் மீட்பு எனும் கொள்கையை அசைத்தது. காரணம் பாவமே செய்யாத நிலையில் மனிதன் பிறக்கிறான் எனில் அவனுக்கு மீட்பு தேவையில்லை.

கிறிஸ்து இல்லாமலேயே மனிதனுடைய உள் தெய்வீகத் தன்மை மூலம் அவன் மீட்பைப் பெறமுடியும் என்று போதித்தார் பலாகியஸ்.

இவருடைய கொள்கைக்கும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. புனித அகுஸ்தீனார் இவருடைய கொள்கையை தீவிரமாய் எதிர்த்தார்.

புனித அகுஸ்தீனார் கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவையான பல நூல்களை இயற்றியவர். இளமைக்காலத்தில் பல விதமான தவறுகளைச் செய்யும் மனநிலை உடையவராக இருந்தாலும் பின் மனம் திரும்பி திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவத்தில் இணைந்தார்.

கிறிஸ்தவத்தில் இணைந்து பல ஆண்டுகள் பேராயராக இருந்தார். இவர் கிறிஸ்தவத்துக்கு எதிரான கொள்கைகள எதிர்ப்பதில் தீவிரம் காட்டினார்.

இவருடைய போதனைகளில் ஆதாமுக்குப் பின் மனுக்குலம் பாவத்தில் விழுந்தது. மனிதனின் தெய்வீகத் தன்மை சிதைக்கப்பட்டு விட்டது. எனவே முன்பாவம் உண்டு என்பதை மறுக்க முடியாது.

இயேசுவின் சிலுவை மரணமும், உயிர்ப்புமே ஆதாமின் பாவத்தை விலக்கும் சக்தி கொண்டது என்று போதித்தார். இறை அருள் இல்லாமல் மனிதன் எதையும் செய்ய முடியாது என்றும், மீட்புக்கான வழியைக் கண்டறியவே அவனுக்கு இறை அருள் தேவை என்றும் அவர் போதித்தார்.

இறைவனின் கருணை மனிதனை மீட்படையத் தூண்டுகிறது, மனிதனோடு இணைந்து செயலாற்றுகிறது, மனிதனால் எதிர்க்க முடியாததாக இருக்கிறது எனும் மூன்று தத்துவங்களை முன்வைத்து தன்னுடைய போதனைகளை இவர் அமைத்துக் கொண்டார்.

காப்புரையாளர்கள் ( Apologists )

அரசியல் ரீதியாக கிறிஸ்தவர்கள் துன்பங்களைச் சந்தித்தபோது கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்துதல் நியாயமற்றது என்பதை நிரூபிக்க பலர் போராடினார்கள். இவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை எழுதி வெளியிட்டார்கள். இவர்களே காப்புரையாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த எழுத்துப் படிவங்கள் அரச இருக்கைகளில் இருந்தவர்களுக்கு அனுப்பப்பட்டன. கிறிஸ்தவ மதம் குறித்த புரிதலையும், அந்த நாட்களின் கிறிஸ்தவ வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள இந்த நூல்கள் உதவுகின்றன.

அந்த காலத்து காப்புரையாளர்கள் கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழிகளில் காப்புரைகள் எழுதியிருக்கிறார்கள். குவார்டிரேட்டஸ், அரிஸ்டைடிஸ், தியோப்பிலஸ், ஆரிகன், அந்தேனோகொராஸ், கிளமெண்ட், ஜஸ்டின் மார்ட்டின், தேசியன் போன்றோர் கிரேக்க மொழியில் காப்புரைகள் எழுதியதில் குறிப்பிடத் தக்கவர்கள்.

இலத்தீன் மொழியில் காப்புரைகள் எழுதியவர்களில் அர்னோபியஸ், தெர்ட்டூலியன், பெலிக்ஸ், லாக்டாண்டியஸ் ஆகியோர் சிறப்பிடம் பெறுகின்றனர்.

இந்த காப்புரையாளர்கள் தங்கள் மதத்தைக் காப்பாற்றவும், மதத்துக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவும் பல வழிகளில் போராடினார்கள். இவர்களுடைய எழுத்துக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ நியாயங்களை முன்வைப்பதாகவே அமைந்தன.

சிலர் பிற மதங்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதினார்கள். இதன் மூலம் அத்தகைய குறைபாடுகள் கிறிஸ்தவ மதத்தில் இல்லை என புரிய வைத்து அரசின் அங்கீகாரம் பெறுவது அவர்களின் நோக்கம்.

சிலர் மற்ற மதங்கள் போதிக்கும் மீட்பரும் இயேசுவே என பழைய ஏட்டுச் சுருள்களையும், நீதி நூல்களையும், பழைய தீர்க்கத் தரிசனங்களையும் இயேசுவோடு ஒப்பிட்டு எழுதினார்கள். இதன் மூலம் கிறிஸ்தவம் மற்ற மதங்களை அழிக்க வந்ததல்ல, மற்ற மதங்களின் தொடர்ச்சியாக வந்தது என்பதை நிரூபிப்பது அவர்களின் விருப்பம்.

சிலர் இயேசுவின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அதிசயச் செயல்களைப் பட்டியலிட்டு, அவற்றைக் குறித்த விரிவான விளக்கங்களையும் எழுதி மன்னனுக்கு அனுப்பினார்கள். இயேசுவின் பெயரால் அதிசயங்கள் நடக்கின்றன அவர் உண்மையான கடவுள் என்றனர்.

சிலர் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையை விவரித்து எழுதினார்கள். அவர்களுக்குள்ளே நிலவிய சகோதர மனப்பான்மையையும், உயரிய குணங்களையும் விரிவாக எழுதினார்கள். அவர்கள் பிற மதங்கள் மீதான வன்முறை எண்ணங்களைக் கொண்டிருக்கவில்லை என வாதிட்டனர்.

இத்தனை வன்முறைகளுக்குப் பின்னும் பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவம் அழியாமல் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அது உண்மையான கடவுளால் உருவானது எனும் கருத்தின் அடிப்படையில் பலர் எழுதினார்கள்.

குவாடிடேட்டஸ் எழுதிய காப்புரையே முதல் காப்புரை என்கிறார் யூசபியஸ் எனும் விவிலிய அறிஞர். கிவேடிடேட்டஸ் மிகவும் தாழ்மையான குரலில் தன்னுடைய வாதத்தை வைக்கிறார். கிறிஸ்தவர்கள் அரசின் சட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. கிறிஸ்தவர்கள் வரி செலுத்துகிறார்கள். கிறிஸ்துவை அறிக்கையிட்டதைத் தவிர எந்த காரணத்துக்காகவும் அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. பேரரசருக்கு கிறிஸ்தவர்கள் எதிரிகளல்ல. என்று குவாடிடேட்டஸ் தன்னுடைய காப்புரையில் குறிப்பிடுகிறார்.

ஜஸ்டின் மார்ட்டின் எழுதிய காப்புரைகள் புகழ்பெற்றவை. இவருடைய காப்புரை ஒன்றைப் படித்தபின் மன்னன் கிறிஸ்தவர்களுக்குச் சாதகமான ஒரு ஆணையைப் பிறப்பித்த வரலாறும் உண்டு.

அவருடைய காப்புரையில் கிறிஸ்தவர்களின் ஆழமான விசுவாசத்தை தன்னுடைய புலமை கலந்து எழுதினார். மரண நேரத்திலும் அவர்களுடைய உறுதியை குறிப்பிடுகிறார். இதன்மூலம் கிறிஸ்தவத்தில் கிறிஸ்தவன் கொண்டுள்ள ஆழமான பற்றுறுதியை புலப்படுத்துகிறார்.

அந்தேனோகொராஸ் தன்னுடைய காப்புரையில் கிறிஸ்தவ மதத்தின் தத்துவக் கூறுகளை எழுதுகிறார். கிறிஸ்தவர்கள் எனும் பெயருக்காக கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது என்றார். கிறிஸ்தவர்களுக்கும் மற்ற மனிதர்களைப் போல விசாரணக்குட்படுத்தப்பட்டு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.

கிறிஸ்தவர்கள் நாத்திகர்கள் அல்ல என்றும், உருவ வழிபாடு இல்லையெனில் நாத்திகம் என பொருள் கொள்ளக் கூடாது என்றும் வாதிட்டார். கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறை ஒழுக்கம் போன்றவற்றையும் விரிவாக எழுதியுள்ளார்.

பாடுபட அஞ்சுபவர்கள் பாடுபட்ட இயேசுவின் பின் செல்பவர்களாக இருக்க முடியாது. எனவே நாங்கள் பாடுபட பயப்படவில்லை. இரத்தம் தோய்ந்த மரணத்தின் கைகளில் விழுந்தாலும் கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக் கொண்டு தான் கிறிஸ்தவன் சாவான் ‘இரத்த சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் விதை ‘ என உணர்ச்சி பூர்வமாக எழுதினார் தெர்துல்லியான்.

இவ்வாறு மக்கள் எழுதிய காப்புரைகள் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுக்கு அரசுகளால் நேர்ந்த இன்னல்களையும் பற்றிய அறிவைத் தருகின்றன.

Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு : 8 திருச்சபை வளர்ச்சியின் அடுத்த‌ கட்டம்

Image result for history of christianity

திருச்சபை வளர்ச்சியின் இரண்டாவது கட்டம்

ரோமர்கள் கிறிஸ்தவத்தை அழிப்பதற்காக பல வழிகளில் முயன்றார்கள். மற்ற பல மதங்களோடு ஒப்பிடுகையில் கிறிஸ்தவம் தன்னுடைய அணுகுமுறையையும், வழிபாட்டு முறையையும் மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டிருந்தது ரோமர்களின் கோபத்தைத் தூண்டியது.

சிலைவழிபாடு அக்காலத்தில் பரவலாக இருந்த ஒரு வழிபாட்டு முறை. கிறிஸ்தவம் அதை எதிர்த்தது. சிலைகளுக்குப் பலியிடுவதையோ, அவற்றுக்கு அபிஷேகங்கள் நடத்துவதையோ கிறிஸ்தவம் எதிர்த்தது. பல மதங்கள் இயேசுவையும் ஒரு கடவுளாக வழிபட ஒப்புக்கொண்டன, கிறிஸ்தவர்களோ இயேசுவை வழிபட வேண்டுமெனில் பிற கடவுள்கள் யாரையும் வழிபடக் கூடாது என்று தடை விதித்தது. பல கடவுள்களோடு ஒருவராக இயேசு அல்ல, இயேசுவே ஒரே கடவுள் என்னும் கொள்கையை அது போதித்தது. கிறிஸ்தவத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடு பார்க்கப் படவில்லை. தலைவராக இருக்க அனைவருமே தகுதியுடைவர்கள் என்னும் கருத்து நிலவியது. இவையெல்லாம் ரோம அரசர்கள் கிறிஸ்தவத்தின் மீது வெறுப்பு கொள்ள காரணமாயின.

கி.பி 303 முதல் கி.பி 305 வரை ஆண்ட டயோக்ளிஷியன் ஆட்சிகாலம் கிறிஸ்வதவர்களுக்கு ஒரு நடுக்கத்தின் காலமாக இருந்தது. கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடைக்கல்லாய் இருந்தவன் இந்த மன்னன். இவன் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல சட்டங்கள் இடப்பட்டன. அதன்படி கிறிஸ்தவர்களாய் இருப்பவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், அவர்களை நாடுகடத்துதல், ஆலயங்களை எரிப்பது, கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை மறுப்பு உட்பட ஏராளமான சட்டங்கள் போடப்பட்டன. இவை கிறிஸ்தவத்தின் வளர்ச்சியைப் பெருமளவில் பாதித்தன. கிறிஸ்தவர்கள் மீண்டும் மறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டார்கள்.

வருடங்கள் ஓடின. மேலும் சில மன்னர்கள் வந்தார்கள். முந்தைய அரசர்களின் போரை தொடர்ந்தார்கள். அவர்கள் விட்ட இடத்திலிருந்து இவர்கள் தொடர்ந்தார்கள். கிறிஸ்தவம் என்னும் மதம் அடியோடு அழிக்கப்படுமோ என்று தோன்றுமளவுக்கு நிகழ்வுகள் நடந்தன. அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அமைந்தது கான்ஸ்டண்டைன் மன்னனின் வரவு.

கான்ஸ்டண்டைன் மன்னன் கிறிஸ்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கும் ஒரு அறிக்கை வெளியிட்டான். அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் கிறிஸ்தவம் ஒரு அங்கீகரிக்கப் பட்ட மதமாக திகழும் என்பதே அது. அந்த சட்டத்தைப் பின்பற்றி கி.பி 380 ல் கிறிஸ்தவ மதம் என்பது ரோம பேரரசின் அங்கீகரிக்கப் பட்ட மதமாக மாறியது.

அங்கீகரிக்கப் பட்ட மதமாக கிறிஸ்தவம் மாறியபின் அதற்கு அரசு பாதுகாப்பு இருந்தது. மறைந்து வாழும் வாழ்க்கை நின்று போனது. கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப விரும்புகின்றவர்கள் கொடுமைகள் அனுபவிக்கும் நிலை அகன்று விட்டது.

அங்கீகரிக்கப் பட்ட மதமாக கிறிஸ்தவம் ஆனதும் கிறிஸ்தவ மதத்துக்கான புனித நூலைத் தயாரிக்கும் பணி துவங்கியது. கி.பி 397ம் ஆண்டில் வேதாகமம் தொகுக்கப் பட்டது. அது கிறிஸ்தவ மதத்தின் அடித்தளமானது.

கிறிஸ்தவத்தில் கி.பி ஐநூறாம் ஆண்டு முதல் ஆயிரத்து ஐநூறாம் ஆண்டுவரை உள்ள காலம் இடைக்காலம் என அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான் திருச்சபையைத் துறவறம் பெருமளவில் ஆக்கிரமித்தது.

ஐரோப்பா போன்ற நாடுகளில் கிறிஸ்தவம் பெருமளவில் பரவிய காலகட்டம் இது என்பதாலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகி விடுகிறது இந்த இடைக்காலத் திருச்சபை. கிறிஸ்தவத்தில் துறவறமே சிறந்ததென்று கருதி ஒரு காலகட்டத்தில் ஐரோப்பா துறவி மடங்களால் நிரம்பி வழிந்தது.

ரோமை ஆண்டுவந்த மன்னன் தியோக்லேஷியான் அன்றைக்கு உலகம் என்று கருதப்பட்ட ரோம் நகரை இரண்டாகப் பிரித்தார். மேற்குப் பாகம் ரோமை தலைநகராகக் கொண்டும் கிழக்கும் பாகம் கான்ஸ்டாண்டிநோபிளை தலைமையிடமாகவும் கொண்டு இயங்கத் துவங்கியது. இது ரோமின் வீழ்ச்சியானது.

முதலாம் கிரெகோரி போப்பாக பதவியேற்ற கி.பி 590ம் ஆண்டே திருச்சபையின் இடைக்கால ஆரம்பமாகிறது.

ஒரு குழப்பமான சூழலில் கிரெகோரி பதவியேற்றார். இவர் பதவியேற்கும் முன் 527 முதல் 565 வரை கான்ஸ்டாண்டிநோபிளின் பேரரசன் ஜஸ்டினியான் காலத்தில் கிறிஸ்தவத்திலுள்ள கொள்கைப் பிரிவினரோடு திருச்சபைக்கு பெரும் போராட்டம் இருந்தது.

யுனிஸ்டியான் கான்ஸ்டாண்டிநோபிள் நகரை விரிவாக்கி தன்னுடைய அரசின் எல்லைகளை பலப்படுத்த விரும்பினான். மேலும் திருச்சபைக்கு தானே தலைவனாக வேண்டும் என்றும் அனைத்து பேராயர்களும், குருக்களும் தனக்குக் கீழானவர்களாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினான்

த சர்ச் ஆஃ செயிண்ட் சோபியா ஆலயத்தை கான்ஸ்டாண்டிநோபிளில் இவர் கட்டினார். மேலும் பல ஆலயங்களையும் துறவற மடங்களையும் இவர் கட்டினார்.
கிறிஸ்தவத்தை வளர்க்க வேண்டும் என இவர் விரும்பினாலும் அனைத்துக்கும் தானே தலைவராக வேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்ததால் திருச்சபைக்கு எதிரானவராய் தோன்றினார்.

கி.பி 54ல் பிறந்த கிரெகோரி ஒரு சிறந்த வழக்கறிஞராய் வாழ்ந்து வந்தார். லம்பாடியர்களால் ரோம் நகருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனும் சூழல் எழுந்தபோது இவர் அமைதிப் பேச்சின் தலைவராக செயலாற்றினார்.

சிறந்த நுட்பமும், அறிவும் அரசியல் செல்வாக்கும் பெற்றவராக இருந்தார் கிரெகோரி. எனினும் அரசியல் பதவிகளை விரும்பாமல் கிறிஸ்தவத்தில் இணைந்து பணி செய்வதையே விரும்பினார்.

தன்னுடைய சொத்துகளின் பெரும்பாகத்தை விற்று அதை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார். கிறிஸ்தவ மதத்தின் துறவற நிலையையே முதலில் விரும்பினார். சுமார் ஐந்து ஆண்டுகள் இவர் துறவற நிலையிலேயே இருந்தார்.

ஒருமுறை ரோம் நகரில் இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவர்கள் அடிமைகளாய் விற்கப்பட்டார்கள். அந்த இந்த சிறுவர்களின் அழகையும், கம்பீரத்தையும் கண்ட கிரெகோரி அந்த நாட்டில் கிறிஸ்தவத்தைப் பரப்ப வேண்டும் என்று ஆவல் கொண்டார்.

கி.பி 570ல் ரோம் நகரில் பிளேக் நோய் பரவியது. அப்போது ரோம் நகர போப் காலமானார். அடுத்த போப் ஆக பணியாற்றும் வாய்ப்பு திறமையும், சாதுர்யமும், தைரியமும் நிறைந்த கிரெகோரிக்கு வாய்த்தது.

ஆனால் கிரெகோரி முதலில் போப் பட்டத்தை விரும்பவில்லை. ஓடி ஒளிந்தார். ஆனால் குழு கிரெகோரியைத் தான் போப் ஆக திருநிலைப்படுத்துவது என முடிவோடு இருந்தார். எனவே மூன்று நாட்களுக்குப் பின் அவரைக் கண்டுபிடித்து போப்பாக நியமித்தார்கள்.

கடவுளின் பணியாளர்களுக்கெல்லாம் பணியாளர் என்னும் பெயரை வைத்துக் கொண்டு போப் எனும் பதவியின் பெருமையை இவர் உயர்த்தினார். போப்பின் பணிகளும் அவருடைய ஆளுமைளும் இவருடைய காலத்தில் சிறப்பாக வெளிப்பட்டன.

திருச்சபை வளர்ச்சியின் மூன்றாவது கட்டம்

திருச்சபை வளர்ச்சியின் மூன்றாவது கட்டம் என்பது ரோமின் வீழ்ச்சி முதல் கான்ஸ்டாண்டிநோபிள் வீழ்ச்சி வரை உள்ள சுமார் ஆயிரம் ஆண்டு காலத்தைக் குறிப்பிடலாம். இந்த காலகட்டத்தில் கிறிஸ்தவம் பலவிதமான மாற்றங்களைச் சந்தித்தது. இந்த காலகட்டத்தில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்காற்றியவர் முதலாம் கிரிகோரி என்பவர்.

ரோம் அரசாங்கத்தில் கவர்னராகப் பணியாற்றி வந்த கிரிகோரி தன்னுடைய தந்தையின் மறைவுக்குப் பின் துறவியாக மாறினார். லத்தீன் மொழியில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கினார் அவர். லத்தீன் இலக்கியங்களின் மீது ஆழ்ந்த பரிச்சயம் கொண்டிருந்தார். ரோம் பிஷப்பின் பிரதிநிதியாக கான்ஸ்டாண்டிநோபிளில் சிலகாலம் பணியாற்றிய இவர் பின்னர் தனியே வந்து தூய ஆண்ட்ரூ என்று ஒரு மடம் ஆரம்பித்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். துறவறம் ஏற்றபின் தன்னுடைய சொத்துகளையெல்லாம் விட்டு விட்டு துறவுப் பணியில் முழுமையாய் தன்னை அர்ப்பணித்தார்.

கிரிகோரியில் செயல்களும், பேச்சும், அவருடைய இலக்கியப் புலமையும் அவரை மக்களிடம் அதிக அறிமுகம் உடையவராக மாற்றியது. சிறப்பான மக்கள் பணியும் அவரை பிரபலப் படுத்தியது. ரோம் பிஷப்பிற்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராகவும், மிகவும் செல்வாக்குள்ளவராகவும் இருந்தார். கி.பி 590 ல் போல் கலேஜியஸ் மரணத்துக்குப் பின் கிரிகோரி போப்பாக தெரிந்தெடுக்கப் பட்டார்.

கடவுள் பணி செய்பவர்கள் துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது இவருடைய சிந்தனைகளில் ஒன்று. அதை அவர் முக்கியப்படுத்தி பிரகடனப் படுத்தினார். பணி வாழ்வுக்குத் தேவை பணிவு என்பதை மிகவும் ஆழமாக நம்பியவர். இயேசுவின் போதனைகளை வாழ்வில் வாழ்ந்து காட்டவேண்டும் என்னும் உயரிய சிந்தனைகளின் படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் இவர். இவர் இயேசுவை வாழ்ந்து காட்டியதில் ஈர்க்கப்பட்ட பலர் கிறிஸ்தவ மதத்துக்குள் இணைந்தார்கள்.

இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இவர் ஊழியர்களை அனுப்பி இறைபணி செய்ய வைத்தார். இவருடைய ஆர்வத்தினால் ஏராளம் மக்கள் நற்செய்தி அறிந்தார்கள், பலர் அறிவித்தனர். தாமாகவே பல புதிய செயல்களைச் செய்து போப் பின் பெருமையையும், இருப்பையும் உலகிற்கு உரத்துச் சொன்னார் இவர். தன்னுடைய இலக்கிய அறிவினால் விவிலியத்தில் வரும் யோபு புத்தகத்துக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். ஏராளமான கடிதங்கள் வாயிலாக தன்னுடைய கருத்துக்களை அடுத்துள்ள இடங்களுக்கெல்லாம் இவர் பரப்பினார். சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்து ஏராளமானவ்ர்களுக்கு இறை செய்திகளை வழங்கினார்.

இவருடைய காலத்தில் உத்தரிக்கும் ஸ்தலம் – மையப்படுத்தப்பட்டது. இவ்வுலகில் நீதிமானாக விளங்குபவர்கள் மோட்சத்துக்குச் செல்வார்கள், இவ்வுலகில் பாவிகளாய் இருப்பவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள். இவ்வுலகில் நல்லவர்களாக இருந்து, தவறுதலாய் பாவம் செய்தவர்கள் உத்தரிக்கும் ஸ்தலம்’ என்னும் இடத்துக்குச் செல்வார்கள். அங்கே அவர்களுக்கு மோட்சத்தில் செல்ல இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். நம்முடைய செபங்கள் அவர்களை மீட்கும் என்பதில் கிரிகோரி நம்பிக்கை கொண்டிருந்தார். இறை பணியில் ஆர்வமாய் ஈடுபட்ட காரணத்தால் இவர் மகா கிரிகோரி என்றும் அழைக்கப்பட்டார்.

நாட்டில் ஆட்சி மாறி மாறி வந்தாலும் திருச்சபையில் போப்பின் ஆட்சிக் காலம் நிலையாக இருந்ததால் பலர் அந்த ஆட்சியை விரும்பினார்கள். போப் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்தார்கள். எனவே போப்பின் ஆட்சி சிறப்பான ஆட்சி என்னும் பெயர் பரவியது. நிலைத் தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்ட கிறிஸ்தவ அமைப்பை அனைவரும் விரும்பினார்கள். ரோமில் இருக்கும் கிறிஸ்தவத் தலைமைக்கு உயர் மரியாதைகளும், பெருமைகளும் இருப்பதாக எங்கும் செய்திகள் பரவின. அரசர்களின் அதிகாரங்களை விட போப்பின் அதிகாரம் மிகவும் மதிக்கப்பட்டது.

உலக சபைகள் மீது ரோம் போப் முழு அதிகாரம் கொண்டவர் என்னும் கருத்து வந்தது இவர் காலத்தில் தான்.

அதன்பின் நாட்கள் செல்லச் செல்ல போப்பின் அதிகாரம் வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது.

Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு : 9 – போப்பின் அதிகாரம்

Image result for Pope

கி.பி 1073 முதல் 1216 வரையுள்ள காலகட்டம் போப்பின் அதிகாரத்தின் உச்சகட்டம் என்று வர்ணிக்கப்படுகிறது. ஏழாம் கிரிகோரி எனும் போப் வந்து ஏராளமான மாறுதல்களைத் திருச்சபையில் செய்தார். திருச்சபையில் இருந்த சீர்கேடுகளை ஒழிப்பதற்கு மிகவும் கடினமாக பாடுபட்டார். குறுக்கு வழியில் இடம் பிடித்தல், தலைமைப் பதவிக்கு போராட்டங்கள் போன்றவற்றை இவர் வெறுத்தார். இவர் காலம் ஒரு களையெடுப்புக் காலம் என்று கூறலாம்.

குருத்துவ நிலையில் இருப்பவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று முதலாம் மகா கிரிகோரி சொன்னதை இவர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திச் சொன்னார். திருமணம் செய்து கொள்பவர்கள் பலவிதமான சிந்தனைகளில் தங்கள் இறைபணிக்கான முக்கியத்துவத்தை இழந்து விடுவார்கள் என்பதும், திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்கையில் கடவுள் பணி இரண்டாம் பட்சமாகி விடும் என்னும் பயமும் துறவறமே தேவை என்னும் கொள்கையை இவர் எடுக்க பின் புலமாய் இருந்தன.

இவர் காலத்தில் அரசுக்கும், மதத்துக்கும் இடையே இருந்த பலமான இணைப்பு நொறுக்கப்பட்டது. அரசுகள் மதங்களை கட்டுப்படுத்துவதும், தலைவர் நியமனங்களில் தலையிடுவதும் இவருடைய காலத்தில் விலகியது. இதனால் மதம் தன்னுடைய சுதந்திரத் தளத்தை மீட்டுக் கொண்டது.

இந்த காலகட்டத்தில் வாழ்ந்த குறிப்பிடத் தக்க இன்னொரு போப் மூன்றாம் இன்னசெண்ட் என்பவராவர். போப் உலக கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் வழிகாட்டி என்பதில் உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்தவர் இவர். கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி நாட்டை ஆளும் அரசர்களை விட அதிகாரம் படைத்தவர் போப் என்றும், இவர் கிறிஸ்துவின் சீடரான பேதுருவின் வழித்தோன்றல் என்பதிலும் உறுதியான பிடிப்பு கொண்டிருந்தார். எனவே தாழ்ச்சியும், மனத் தூய்மையும், ஆழமான இறை விசுவாசமும், எதையும் கடவுளின் பெயரால் எதிர்த்து நின்று செயிக்கும் உறுதியும் கொண்டிருந்தார்.

தன்னுடைய மனைவியை சுயநலமாய் விவாகரத்து செய்த பிரான்ஸ் மன்னன் பிலிப் பகஸ்டஸ்க்கு பகிரங்க கண்டனம் தெரிவித்து மனைவியை மறுபடியும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இவர் கட்டாயப் படுத்தினார். மன்னன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுத்தான். போப் விடவில்லை, நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார் இதனால் நாடு ஸ்தம்பித்தது. ஆலயங்கள் மூடப்பட்டன, நாட்டில் ஒரு கொந்தளிப்பான சூழல் உருவானது. மன்னன் தன் மனைவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டான். போப் தன்னுடைய போராட்டத்தில் வெற்றி பெற்றார்.

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் வளர்ச்சிக்கு போப் மிகவும் தீவிரமாய் உழைத்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். கத்தோலிக்க மதத்தினருக்காக சில சட்ட திட்டங்களையும் இவர் வகுத்தார். அதற்காக ஒரு சபையையும் இவர் தன்னுடைய பணிநாட்களில் ஏற்படுத்தினார்

கொள்கைகளை நிலைநாட்டுவதற்காக அரசர்களையும் துணிவுடன் போப் எதிர்த்ததால் பல நாட்டு மன்னர்களுக்கு போப்பின் அதிகார மையத்தின் மீது வெறுப்பும், அதிருப்தியும் நிலவியது. அரசரும் அவனுக்கு ஆதரவாய் இருந்தவர்களும் ஒட்டு மொத்தமாக போப் பின் மீது அதிருப்தியடைந்தார்கள். ஆனால் போப் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் திருச்சபைச் சட்டங்களையும், திட்டங்களையும் செயல்படுத்துவதில் வீரத்துடன் செயல்பட்டது. எனவே அரசர்கள் போப்புக்கு எதிராக செயல்பட்டார்கள்.

எட்டாம் போனிபஸ் போப்பாக தலைமைப் பொறுப்பை ஏற்றபோது நிலமை இன்னும் மோசமானது. கி.பி 1294 முதல் 1303 வரையிலான காலகட்டத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. பிரான்ஸ் நாட்டில் பிலிப் என்னும் அரசன் ஆண்டு கொண்டிருந்தபோது அவன் தன்னுடைய அரச எல்லைக்கு உட்பட்ட இடங்களிலிருந்து போப்புக்கு பணம் எதுவும் செல்லாமல் தடை விதித்தான். இங்கிலாந்தை ஆண்டு வந்த எட்வர்ட் மன்னனும் போப்புக்கு எதிராக செயல்பட்டார். தன்னுடைய அரசிலிருந்தும் போக்குக்கு பணம் செல்வதைத் தடுத்தார். குருத்துவப் பணி செய்து வந்தவர்களுக்கு பல்வேறு இன்னல்களையும் செய்ய ஆரம்பித்தான்.

போப் தனக்கும் திருச்சபைக்கும் எதிராக பெரிய அலை எழுவதைக் கண்டு அஞ்சவில்லை. இறைமகன் இயேசு நியமித்த திருச்சபையின் வழித்தோன்றல் தான் என்றும், மீட்படைய வேண்டுமெனில் போப்பின் வார்த்தைகளை மதித்து நடக்கவேண்டும் என்றும் துணிச்சலாய் அறிக்கை வெளியிட்டார். ஆனால் அரசுகளின் கோபத்தை அது கிளறிவிட்டது. பிரான்ஸ் மன்னன் பிலிப் படையெடுத்து வந்து போப்பை கைது செய்து சிறையில் அடைத்தான். அதுவே போப் எட்டாம் போனிபஸின் மரணத்துக்குக் காரணமாயிற்று.

அதன்பின் 1305 முதல் 1377 வரையுள்ள காலகட்டத்தில் போப்பாக நியமிக்கப் படுபவர் யார் என்பதை நிர்ணயிப்பதில் பிரான்ஸ் மன்னனும் பங்கும் இருந்தது. ஐந்தாம் கிளமெண்ட் என்னும் போப் திருச்சபையின் தலைமையிடத்தை ரோமிலிருந்து பிரான்ஸ் நாட்டிலுள்ள ‘அவிக்னோன்’ என்னுமிடத்திற்கு மாற்றினார். இந்த காலகட்டத்தில் போப்பாக தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தியவர்கள் நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் மதம் சார்ந்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினர். எனவே போப்பிற்கு மதத்துக்கு வெளியே இருந்த அதிகார வளையம் நீர்த்துப் போனது.

போப் என்பவர் அரசுகளுடன் போரிடவோ, பிரச்சினைகளில் ஈடுபடவோ வேண்டாம் என்னும் நிலை உருவானது. எனவே ஆங்காங்கே பலர் தான் தான் போப் என்று சொல்லிக் கொண்டு தங்களின் கீழ் சில கிறிஸ்தவக் குழுக்களை இணைத்துக் கொண்டு பணியாற்றத் துவங்கினார்கள். பிரான்ஸ் நாட்டிற்கு தலைமையிடம் மாற்றப்பட்டதிலிருந்து குழப்பங்கள் ஏற்படத் துவங்கின. எனவே 1377ல் போப் 11ம் கிரிகோரி தலைமையிடத்தை மீண்டும் ரோமுக்கே திருப்பினார்.

இந்த குழப்பங்களை எல்லாம் தீர்ப்பதற்காக கி.பி 1414 ல் கான்ஸ்டன்ஸ் என்னுமிடத்தில் திருச்சபை மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல கிறிஸ்தவத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். இதில் நான்கு பேர் தாங்கள் தான் போப் என்று வாதிட்டார்கள். அவர்களுக்காய் வாதிட ஒரு ஆதரவாளர் குழுக்களையும் அவர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். இதில் உடன்பாடு ஏற்படாததால் நான்குபேருமே நிராகரிக்கப்பட்டு புதிய போப் ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்!

1378 முதல் மீண்டும் போப்பாண்டவர்கள் ரோமிலிருந்தே பணியாற்றத் துவங்கினார்கள். ஆனால் இப்போது அவர்களுடைய அதிகாரம் வலுவிழந்திருந்தது. அரசுகளின் எதிர்ப்பும், தலைவராக வேண்டும் என்று போட்டியிடும் மனப்பான்மையில் இருந்த குழுக்களின் செயல்பாடுகளும் போப்பின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்தன.
போப்பின் அதிகாரத்துக்கான காரணங்கள்

உலக அளவில் கிறிஸ்தவம் எல்லா இடங்களிலும் நுழைந்தாலும் வளர்ந்தாலும் பொதுவான தலைமை ரோமிலேயே இருந்தது. தனியே கொள்கை ரீதியினான தனித்தனி கிறிஸ்தவ இயக்கங்கள் சில இயங்கிய போதும் மொத்தத்தில் ரோம் போப்பின் கீழே கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து காணப்பட்டனர்.

அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

உலகின் முதல் போப் ‘பேதுரு’ இயேசுவின் அன்புக்குரிய சீடர். இயேசு அவரிடம் ‘உன் பெயர் பாறை. உன் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்’ என்று கூறியிருந்தார். எனவே பேதுருவின் தலைமையைப் போலவே அவருடைய இடத்திற்கு வரும் மற்ற போப் களின் தலைமையும் மதிக்கப்பட்டது.

அப்போஸ்தலர்கள் காலத்தில் பேதுருவின் பணி மிகவும் சிறப்பானதாக இருந்தது. ரோம் நகர் கிறிஸ்தவத்தின் ஆழமான துவக்கமாய் இருந்தது. பேதுருவைத் தவிர பவுலும் ரோமில் சிறப்பாக கிறிஸ்தவப் போதனைகள் செய்திருந்தார்.

போப்பின் ஆளுகை மிகவும் சரியானதாக இருந்தது. கிறிஸ்தவ மதத்திற்குள் கொள்கை கோட்பாடு ரீதியான தர்க்கங்கள் முளைத்தபோது போப் கிறிஸ்தவர்களை சரியான பாதையில் வழி நடத்தினார்.

துறவற சபைகள் நுழைந்தபோது அவர் கிறிஸ்தவ அடிப்படை நம்பிக்கைகளைச் சிதைக்காத துறவற சபைகளை அங்கீகரித்தார். அது துறவற சபைகளின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாயிற்று.

உலகெங்கும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப குருக்களையும், பேராயர்களையும் அனுப்புவதில் போப் மிகவும் ஆர்வம் காட்டினர். உலகெங்கும் போய் நற்செய்தியை அறிவியுங்கள் எனும் இயேசுவின் போதனைப்படி வாழ்ந்தார்கள் போப்பாக அமர்ந்தோர்.

ரோம் நகரம் மற்ற நகரங்களை விட உயர்ந்ததாய் கருதப்பட்டது. எனவே ரோம் நகரில் இருக்கும் போப் அதிக அதிகாரம் வாய்ந்தவர் எனும் கருத்து நிலவியது.

‘கடவுளின் நகரம்’ எனும் புனித அகுஸ்தீனாரின் நூல் ரோமை தலைமையை முக்கியத்துவப்படுத்தியிருந்தது. ரோம் போப் தலைமைக்குச் சிறந்தவர் என்றும் அவரே உண்மையான அதிகாரத்தில் இருப்பவர் என்றும் நூல் கூறியது.
இவையெல்லாம் போப்பின் அதிகாரத்தைக் குறித்த ஒரு பொதுவான தகவலை உலகக் கிறிஸ்தவ இயக்கங்களுக்குக் கூறியது. இவை போப்பின் அதிகார வரையறைக்குக் காரணமாயிற்று.