Posted in Articles

இறைப் பற்றில் வளரும் இளையோர்

*

இளமைக் காலம் என்பது ஒரு வரப்பிரசாதம். பொங்கிப் பிரவாகமெடுக்கும் ஆற்றலின் காலம். காட்டாறுபோல, தடைகளைக் கண்டு அஞ்சி நடுங்காமல் சீறிப் பாயும் காலம். இளமைக் காலம் விளைவுளை எண்ணித் தயங்காமல் களம் புகும் காலம். உலகம் எப்போதுமே இளைஞர்களை அரவணைக்கிறது. மாற்றங்கள் எப்போதுமே இளையவர்களைச் சுற்றியே அமைகிறது. 

எனக்கு நூறு இளைஞர்களைக் கொடுங்கள் நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என விவேகானந்தர் சொன்னதாகச் சொல்வார்கள். நிறுவனங்களில் இளைஞர்கள் அதிகமாய் இருக்கும்போது அந்த நிறுவனம் வளர்ச்சியை நோக்கி தாவி ஓடும்.   திருச்சபைகளில் இளைஞர்கள் ஆர்வமாய் ஈடுபடும்போது திருச்சபை மறுமலர்ச்சியடையும். 

விவிலியமும் ஏராளமான இளைஞர்களைப் பற்றிப் பேசுகிறது. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் ஏராளம் இளைஞர்கள் பவனிவருகிறார்கள். அவர்கள் ஆன்மிகப் பாடத்தை தங்கள் வாழ்க்கையில் சுமந்து திரிகிறார்கள். 

வெறும் பன்னிரண்டு இளைஞர்களைக் கொண்டு உலகையே மாற்றிக் காட்டியவர் இயேசு. அவரே இளைஞராகத் தான் இந்தப் பூமியில் பவனி வந்தார்.

இளைஞர்களின் இந்தப் பேராற்றல் சரியான இடங்களில் செலுத்தப்படும்போது குவி லென்ஸ் போல அவர்கள் எரிக்கிறார்கள். அவர்களுடைய ஆற்றல் தவறான இடங்களைத் தழுவும் போது அணைந்து போகிறார்கள். இளைஞர்கள் இறைப் பற்றில் வளரும் போது திருச்சபை நிமிர்கிறது. அவர்களுடைய செயல்களால் சமூகம் மாற்றமடைகிறது. 

காலம் முன்பு போல் இல்லை. காலையில் எழுந்து காலைக் கடன்கள் முடித்து, பேப்பர் படித்து, சாப்பிட்டு, வேலைக்குப் போய், மாலையில் வீடு திரும்பி, சாப்பிட்டு, செபித்து தூங்கும் அன்றைய காலம் தொழில்நுட்பம் தீண்டாத தூய்மைக் காலம். அப்போது எல்லாமே மெதுவாய் நடந்தன. ஆனாலும், எல்லோருக்கும் நேரம் இருந்தது. ஆலயம் செல்லவும், செபிக்கவும், உறவினர்களோடு செலவிடவும் நேரம் இருந்தது. 

ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. டிஜிடல் முகத்தோடு ஸ்மார்ட் போன்கள் இரவுப் போர்வைக்குள் வெகுநேரம் விழித்திருக்கின்றன. நள்ளிரவு தாண்டிய ஏதோ ஒரு ஜாமத்தில் தான் இளைஞர்கள் தூங்கப் போகிறார்கள். விழித்தெழும் போது அவர்களுக்கு வாட்சப் தான் வாசல் திறக்கிறது, இன்ஸ்டாகிராம் தான் கோலம் போடுகிறது. சமூக வலைத்தளங்கள் தான் அவர்களுடைய பொழுதுகளை புற்றீசல் போல சுற்றிக் கொள்கின்றன.

எதைச் சாப்பிடுகிறோம், எங்கே போகிறோம், சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறியாத ஒரு வாழ்க்கை ஓட்டத்தை இந்த தொழில்நுட்பங்கள் இளைஞர்களின் கையில் திணித்து விட்டன. இந்தக் காலகட்டத்திலும் இறைப் பற்றை இளைஞர்களின் இதயத்தில் விதைக்க வேண்டும். அதுவே மிகப்பெரிய பணி. அதுவே அடுத்த தலைமுறைக்கு கிறிஸ்தவத்தைச் சுமந்து செல்லும் வழி. 

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?

  1. நல்ல குடும்பம் !

ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதற்கான அடிப்படை குடும்பங்களில் தான் இருக்கிறது. ‘நல்ல குடும்பத்துல இருந்து பெண் எடுக்கணும்’ என பெண் பார்க்கும் போது சொல்வார்கள். காரணம், குடும்பம் நன்றாக இருந்தால் அங்கே வளர்கின்ற பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள் என்பது தான். 

இளைஞர்களின் இறைப்பற்றை வளர்க்கும் முயற்சிகள் குடும்பங்களில் தொடங்க வேண்டும். இறைவனின் போதனைகளை மீறாத செயல்களை குடும்பத் தலைவரும், தலைவியும் செய்ய வேண்டும். குடும்பத்தில் பேசப்படும் வார்த்தைகள் கனிவின் வார்த்தைகளாக இருக்க வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் முதல் – எதேச்சையாய் வந்து சேரும் வழிப்போக்கர் வரை நம் செயல்களில் இறைவனைக் காண வேண்டும். அப்படிப்பட்ட குடும்பம் அமையும் போது அங்கே வாழ்கின்ற இளைஞர்கள் இறைப்பற்றை இயல்பாகவே உருவாக்கிக் கொள்வார்கள்.

ஒருவருடைய பேச்சும், செயலும், சிந்தனையும் இறைவனைச் சார்ந்து இருக்க வேண்டுமெனில் குடும்பம் எனும் நல்ல நிலத்தில் அவர்கள் விதைக்கப்பட வேண்டும். 

  1. நல்லநண்பர்கள் !

குடும்பத்தில் இளைஞர்கள் கற்றுக் கொள்கின்ற நல்ல பண்புகளை வளர்த்தெடுப்பதும், வார்த்தெடுப்பதும் அவர்களுக்கு அமைகின்ற நண்பர்கள் தான். நல்ல நண்பர்கள் அமைந்து விட்டால் ஒருவருடைய வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும். சாத்ராக் மேஷாக் ஆபெத்நெகோவுக்கு தானியேல் எனும் ஒரு நல்ல நண்பன் இருந்தார். அவர்கள் நெருப்பிலும் இறைவனை வெறுக்காம போற்றிப் பாடினார்கள். தாவீதின் வாழ்க்கையில் ஒரு நல்ல நண்பர் யோனத்தான் இருந்தார். ஆபத்துகள் வந்தபோது காப்பாற்றினார். 

நல்ல நட்பு அமைவதிலும் இறைவனின் கருணை நமக்குக் கிடைக்க வேண்டும். நல்ல நண்பர்களுக்காய் செபிக்க வேண்டும். கெட்ட நண்பர்களைத் திருத்தும் முயற்சிகள் பயனளிக்காவிட்டால், அவர்களை விட்டு உடனடியாக விலக வேண்டும். ஒரு கெட்ட ஆப்பிளை எடுத்து, நல்ல ஆப்பிள்கள் இருக்கும் கூடையின் நடுவே வைத்தால் சில நாட்களிலேயே எல்லா ஆப்பிள்களும் கெட்டுப் போய்விடும். எனவே துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்பதைப் போல, தீய நண்பர்களை தூர நிறுத்த வேண்டும். 

  1. நல்லவழிகாட்டி !

ஒருவனுக்கு ஒரு நல்ல வழிகாட்டி அமைந்து விட்டால் அவருடைய வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்து விடும். அப்துல் கலாம் வாழ்க்கையில் ஒரு ஆசிரியர் அவருக்கு வழிகாட்டியாய் இருந்தார். அவருடைய வளர்ச்சி சிறப்பானதாக இருந்தது. எலிசாவுக்கு ஒரு எலியா கூடவே இருந்தார், ஆசானாக இருந்தார். குருவை மிஞ்சிய சிஷ்யனாக எலிசா மாறினார். சாமுவேலுக்கு வழிகாட்டியாக ஏலி இருந்தார், சாமுவேல் மாபெரும் தீர்க்கத் தரிசியானார். 

இளைஞர்கள் தங்களுடைய வழிகாட்டியாக ஒரு நல்ல இறை மனிதரை தேர்ந்தெடுத்தால் அவர்களுடைய வாழ்க்கை நிச்சயம் சரியான வழியில் செல்லும். இறைப்பற்றில் இளைஞர்கள் வளர அவர்களுக்கு ஒரு நல்ல ஆன்மிக வழிகாட்டியை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். இல்லையேல் அவர்கள் உலகப் பிரபலங்களை தங்கள் வழிகாட்டியாய் அமைத்து ஆன்மிக பாதையை விட்டு விலகி விடுவார்கள். 

  1. நல்லபொழுதுபோக்கு !

பொழுதுபோக்கும் இறைப்பற்றை வளர்க்க முடியும். ஒரு மனிதனுடைய வாழ்க்கை மன அழுத்தங்கள் இல்லாத வாழ்வாய் அமைய இந்த பொழுது போக்கு பெருமளவில் கை கொடுக்கும். உள்ளம் அமைதியான நீரோடையாய் இருக்கும் போது அங்கே தவறான சிந்தனைகள் எழாது. நல்ல ஒரு பொழுது போக்கைத் தேர்ந்தெடுத்தால் அது இளைஞர்களுடைய இறைப் பற்றை ஆழமாக்கும். 

இன்றைக்கு யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என்றெல்லாம் இளைஞர்களின் வாழ்க்கை நீச்சலடிக்கிறது. அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வரவேண்டுமெனும் அவசியம் இல்லை. அந்த இடங்களில் எல்லாம் அவர்கள் இறைவனுக்கு ஏற்புடைய செயல்களைச் செய்ய வழிகாட்டலாம். யூடியூப் வீடியோக்களோ, இன்ஸ்டா ஸ்டோரிகளோ கிறிஸ்தவ மதிப்பீடுகள் சார்ந்ததாக இருக்கும் போது, அவர்களுடைய பொழுது போக்கே பொழுதை ஆக்கும் ! இசையோ, இலக்கியமோ, நாடகமோ, புகைப்படமோ – எது விருப்பமோ அதில் இறைவனைப் பிரதிபலிக்க முடியும் 

5 நல்லசெயல்கள் !

நல்ல செயல்களை சிறுவயதிலிருந்தே பழக்க வேண்டும். வித்தியாசமான அனுபவங்களை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். உதாரணமாக , தினமும் நாம் சந்திக்கும் மனிதர்களில் நமக்கு பரிச்சயமே இல்லாத ஒரு நபருக்காக ஒவ்வொரு நாளும் செபிக்கலாம். அந்த நபர் நாம் பேருந்தில் சந்தித்த முதியவராய் இருக்கலாம், சாலையோரம் உட்கார்ந்திருந்த இளைஞராய் இருக்கலாம், கடந்து சென்ற ஆம்புலன்சில் இருந்த நபராய் இருக்கலாம், தலைவிரி கோலமாய் ஒடிய ஒரு பெண்ணாய் இருக்கலாம். பெயர் தெரியாத அந்த ஒரு மனிதருக்காக உருக்கமாய் செபித்தால் அது மறைவான ஆசீர்வாதமாய் நமக்குள் நிரம்பும். பிறருக்காய் வாழும் வாழ்க்கை இறைவனின் இதயத்தைத் தொடும். 

உண்மையான அன்பு என்பது கொடுப்பதில் இருக்கிறது என்பதைப் பழக்கலாம். கொடுத்தல் என்பது காசுகளைக் கொடுப்பது மட்டுமல்ல. நேசத்தோடு பேசுகின்ற ஒரு வார்த்தை கூட மேலானதே. கரிசனையோடு கேட்கின்ற ஒரு புலம்பல் கூட உயர்வானதே. நேரம், உழைப்பு, பணம் என எது நம்மிடம் இருக்கிறதோ அதை அடுத்தவர்களுக்குக் கொடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எது இல்லையென்றாலும் ஒரு புன்னகையை நீங்கள் நிச்சயம் கொடுக்க முடியும். அந்தப் பழக்கத்தை உருவாக்கலாம். 

இளைஞர்களின் வாழ்க்கை செம்மையாகும்போது 

இறை சமூகம் செம்மையாகிறது !

இறை சமூகம் செம்மையாகும் போது

மனித உறவுகள் செழுமையாகின்றன

*

சேவியர்

( தேசோபகாரி )

Posted in Questions Jesus Asked

இயேசு கேட்ட கேள்விகள்

நீங்கள் உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்?

( மத்தேயு 15 : 3 )

*

யூதர்கள் சட்டங்களுக்கும், மரபுகளுக்கும் மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. கடவுளின் கட்டளைகளை மீறி நடந்ததால் தான் அவர்கள் நாட்டை விட்டு அடிமைகளாய் வெளியேற்றப்பட்டார்கள் என்றும், இஸ்ரேலின் அழிவுக்கும் சிதைவுக்கும் காரணம் கடவுளின் கட்டளைகளை மீறி நடந்ததே என்றும் அவர்கள் புரிந்து கொண்டார்கள். எனவே மோசேயின் கட்டளைகளை விட அதிகமான கட்டளைகளை அவர்கள் தங்களுக்குள் இட்டுக் கொண்டார்கள். காலப் போக்கில் அவை அர்த்தமிழந்து வெறும் சடங்குகளாய் மாறிப் போயின.

அதன் ஒரு உதாரணம் கைகளைக் கழுவி விட்டு உண்ணும் மரபு. மோசே கைகளைக் கழுவ வேண்டும் எனும் கட்டளையைக் கொடுத்தார். கூடாரங்களில் வாழும் மக்கள் நோய் நொடியில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்தச் சட்டத்தை அவர் கொண்டு வந்தார். அந்தச் சட்டத்தின் படி தீட்டான எதையாவது தொட்டால் அவர்கள் தங்களைச் சுத்தீகரிக்க வேண்டும். அப்படி தூய்மைச் சடங்குகளுக்காய் வைத்திருந்த தொட்டியில் தான் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாய் மாற்றி அவர்களின் சடங்குகளுக்கு சம்மட்டி அடி கொடுத்திருந்தார். 

தானாக இறந்து கிடக்கும் விலங்குகளில் தீய ஆவி புகுந்து கொள்ளலாம், அதை உண்பவர்களை அது ஆக்கிரமித்துக் கொள்ளும் என்று அவர்கள் நம்பினார்கள். விலங்குகளை வெட்டி அதன் இரத்தம் முழுமையாய் வடியவேண்டும், அதன்பின்பே உண்ண வேண்டும் என்றார்கள். காரணம் இரத்தத்தில் உயிர் இருக்கிறது என நம்பினார்கள். பன்றி, முயல் போன்றவற்றை அவர்கள் உண்பதில்லை. பன்றியின் இறைச்சியை உண்பதும், கொடுமையான விபச்சாரப் பாவமும் ஒரே அளவையால் அளவிடக் கூடியது என அவர்கள் நம்பினார்கள். அதே போல எகிப்து போன்ற இடங்களில் புனித விலங்குகளாய் இருக்கும் பூனை, முதலை போன்ற விலங்குகளை இவர்கள் தீட்டாகவே கருதினார்கள். 

தீட்டானது என்று சொல்லும் போது இறந்து போன உடல்கள், இரத்தப்போக்குடைய பெண்கள், பிரசவம் முடிந்த சில நாட்களே ஆன பெண்கள் என பலவற்றை அவர்கள் வைத்துக் கொண்டார்கள். இந்தப் பட்டியல் காலப் போக்கில் அதிகமானது. பிற இன மக்களைத் தொடுவது, அவர்களைத் தொட்டவர்களைத் தொடுவது என பல அடுக்குகளாய் விரிவடைந்தது. உதாரணமாக ஒரு எலி ஒரு பாத்திரத்தைத் தொட்டு விட்டால், அது எவ்வளவு பெரிய பாத்திரமாய் இருந்தாலும் அது தீட்டானதாகி விடுகிறது. அதில் இருக்கின்ற பொருட்கள் எல்லாம் தீட்டாகி விடுகின்றன. அந்தப் பொருட்களைத் தொடுபவர்கள் எல்லோரும் தீட்டாகி விடுகின்றனர். அப்படித் தீட்டானவர்களைத் தொடுபவர்கள், அவர்களைத் தொடுபவர்கள் என எல்லோரும் தீட்டாகிவிடுகின்றனர். 

அவ்வளவும் ஏன், தீட்டான மக்கள் நடந்து செல்லும் புழுதியில் நடந்து செல்பவர்கள் கூட தீட்டாகி விடுகின்றனர். இப்படியெல்லாம் சட்டத்தை அடுக்கடுக்காய் போட்டு அவற்றை கடவுளின் கட்டளைக்கு மேலாகவே வைத்தார்கள். அப்படிப் பார்த்தால், பொது வெளியில் சென்று வருகின்ற எவரும் தங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும். ஏதோ ஒரு தூசு தீண்டத்தகாதவரைத் தீண்டிவிட்டு நம்மைத் தீண்டியிருக்கலாம் எனும் சிந்தனையே அதன் காரணம். இவையெல்லாம் கடவுளின் கட்டளையல்ல, மக்கள் உருவாக்கிய மரபு.

அதன் அடிப்படையில் உணவு உண்ணும் முன் எல்லோரும் கை கழுவ வேண்டும். கை கழுவுவதற்கும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட வழியை வைத்திருந்தார்கள். இரண்டு கைகளையும் குவித்து, பத்து விரல்களும் வான் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். தண்ணீரை எடுத்து விரல்களின் நுனியில் ஊற்ற வேண்டும். அந்த தண்ணீர் வழிந்து, உள்ளங்கை வழியாய், மணிக்கட்டை நனைத்து  முட்டியின் வழியாய் வெளியேறும். அத்துடன் முடிந்து விடாது. விரலின் நுனியிலுள்ள தீட்டு,தண்ணீரில் கலந்து கைகளில் இப்போது வந்திருக்கும். எனவே விரல்களை பூமியை நோக்கி நீட்டி விட்டு, மீண்டும் ஒரு முறை தண்ணீரை ஊற்ற வேண்டும். அதன் பின் இரண்டு கை முட்டிகளால் துடைத்துக் கொள்ள வேண்டும். 

இந்த மரபைத் தான் இயேசுவின் சீடர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் வந்தார்கள், சாப்பிட அமர்ந்தார்கள், சாப்பிட்டார்கள். எப்படியாவது இயேசுவைப் பொறிவைத்துப் பிடிக்க வேண்டும் என வந்திருந்த பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவுக்கு நேராய் குற்றச்சாட்டை நீட்டினார்கள். இவர்கள் எருசலேமிலிருந்து கலிலேயாவிற்கு நீண்ட தொலைவு நடந்து இயேசுவைக் குற்றம் சாட்ட வந்திருந்தவர்கள். அவர்கள் சீடர்களிடம், ‘நீங்கள் ஏன் கை கழுவவில்லை’ என கேட்கவில்லை. இயேசுவிடம் கேட்டார்கள். ஏன் ‘உமது சீடர்கள்’ கைகளைக் கழுவுவதில்லை. அவர்கள் ஏன் மூதாதையரின் மரபுகளை மீறுகிறார்கள் !

இது இயேசுவுக்கும், பரிசேயர்களுக்கும் இடையேயான நேரடி மோதல். இது சட்டத்தின் பார்வைக்கும், கடவுளின் பார்வைக்கும் இடையேயான நேரடிச் சவால். இது மரபுகளுக்கும், இறைமைக்கும் இடையேயான மல்யுத்தம். இயேசுவின் சீடர்கள் செய்தது தவறு என பரிசேயர்கள் மிகக் கடுமையாய் கூறுகிறார்கள். மரபு என்பது அவர்களுடைய மரபணுக்களில் கல்வெட்டு போல பதிந்துள்ள விஷயம். அதை அவர்கள் எதற்காகவும் தளர்த்துவதில்லை. இரண்டு பார்வைகளில் ஒன்று தான் நிலைக்க முடியும், இரண்டுமே நிலைக்க முடியாது. 

மரபுகளால் பூசப்பட்டவர்கள் கை கழுவுவது தூய்மையாய் சாப்பிடுவதற்கு அல்ல. சடங்குகளை நிறைவேற்றுவதற்காக. நல்ல சமாரியன் உவமையில் ஏன் குருவும் லேவியும் விலகிப் போனார்கள் ? அவர்கள் மரபுகளை மீற விரும்பவில்லை. மரபுகளை மீறினால் மீண்டும் தூய்மையாக்கும் முன் அவர்கள் ஆண்டவரைத் தொழ முடியாது ! இந்தத் தீண்டாமையின் பல வடிவங்களை நாமும் நமது வரலாற்றிலிருந்து புரிந்து கொள்ள முடியும். 

பரிசேயர்களின் கேள்வி ஆத்மார்த்தமானது. தாங்கள் நம்பியிருக்கும் மரபை எப்படி இவர்கள் மீறலாம். மீறினால் எப்படி இவர்கள் ஆன்மிக வாதிகளாய் இருக்க முடியும் என்பதே அதன் தொனி. இயேசு அவர்களுக்கு பதில் சொல்லவில்லை. ஏன் கை கழுவவில்லை தெரியுமா ? என விளக்கம் கொடுக்கவில்லை. அப்படித் தான் செய்வோம் என எதிர்த்துப் பேசவில்லை. மாறாக ஞானத்தினால் அவர்களை துவைத்து எடுக்கிறார். 

உங்கள் மரபின் பொருட்டு, கடவுளின் கட்டளையை ஏன் மீறுகிறீர்கள் ? தந்தையும் தாயையும் மதித்து நட என்பது கடவுளின் கட்டளை. தந்தையையோ, தாயையோ பார்த்து உமக்குத் தரவேண்டியது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று என்று சொன்னால் தாய் தந்தையரைக் கவனிக்க வேண்டாம் என மரபை உருவாக்குகிறீர்கள். உங்கள் மரபினால் ஏன் இறைவனின் கட்டளையை மீறுகிறீர்கள் ? என்று கேட்டார். அவர்கள் திணறிப் போனார்கள். அவர்களிடையே அந்தப் பழக்கம் இருந்தது. உமக்கானது கடவுளுக்குக் காணிக்கையாகிவிட்டது என அவர்கள் சொல்வதை கடவுளோடு கொள்ளும் நேர்ச்சையாய்க் கருதினார்கள். நேர்ச்சையை உடைக்கக் கூடாது எனும் இறைவார்த்தையை துணைக்கு அழைத்தார்கள். இயேசு அவர்களுடைய சுயநல சிந்தனைகளையும், சித்தாந்தங்களையும் அறிந்திருந்தார். எனவே அந்த மரபை உடைத்தெறிந்தார். 

மரபுகளை உடைத்த அவர், ‘மனிதனின் உடலுக்குள் செல்வது அவனை தீட்டுப்படுத்தாது, அவனது வாயினின்று வெளிவரும் உள்ளத்தின் தீய எண்ணங்களே அவனை தீட்டுப்படுத்தும்’ என்றார். இதன் மூலம் மோசே சொன்ன பட்டியல் கணக்கான உணவுச் சட்டங்களையும் அவர் செல்லாக்காசாக்குகிறார். லேவியராகமத்தின் பல பக்கங்களைக் கிழித்து எறிகிறார். காகிதத்தில் எழுதப்பட்டவற்றுக்கும், இதயத்தில் எழுதப்படவேண்டியதற்குமான போராட்டமாய் அவரது பதில் இருந்தது. வெறும் சட்டங்களைப் பிடித்துத் தொங்காதே, வெறும் மரபுகளின் மடியில் வாழாதே, இதயத்தால் அனைத்தையும் உணர்ந்து வாழ் எனும் புதிய சிந்தனையை அவர் தருகிறார்.

தினமும் கோயிலுக்குப் போவது, பைபிளை வாசிப்பது, பைபிள் வகுப்பில் கலந்து கொள்வது, பாடகர் குழுவில் கலந்து கொள்வது, சர்ச் குழுக்களில் இருப்பது, ஒரு குறிப்பிட்ட வகையில் ஆடை அணிவது, ஒரு குறிப்பிட்ட ஆராதனை முறையை வைத்திருப்பது, குறிப்பிட்ட விழாக்களை நடத்துவது, குறிப்பிட்ட பெயர்களால் அழைத்துக் கொள்வது, குறிப்பிட்ட முறையில் திருமுழுக்கு பெறுவது இப்படி நாம் கொண்டிருக்கும் மரபுகள் எக்கச்சக்கம். எல்லாவற்றையும் விட முக்கியமானது நமக்கும் கடவுளுக்குமான உறவுப் பிணைப்பு தான். அவர் கற்றுக் கொடுத்த மனிதநேயப் பண்புகள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

மரபுகள் வெளிப்படையான சடங்குகளின் அடையாளம். அவற்றைக் கொண்டு இதயத்தை அளவிட முடியாது. இதயத்தில் தூய்மையுடையவர்களே பாக்கியவான்கள், அவர்களே கடவுளைக் காண்பார்கள். அவர்களே கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கையை வாழ்வார்கள். மற்றவர்கள் வெளிப்படையாய் எல்லாவற்றையும் செய்து விட்டு, உள்ளுக்குள் வன்மத்தையும் வெறுப்பையும் பகையையும் வளர்க்கும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாய் மாறிப் போவார்கள்.

நாம் மரபுகளைப் பின்பற்றுவது முக்கியமல்ல, இறைவனின் கட்டளையான இதயத்தில் தூய்மையைக் கொண்டிருப்பதே முக்கியமானது ! இறைவனை நெருங்கத் தடையாக இருக்கும் மரபுகளை நிராகரிப்போம், இறைவனை நெருங்குவோம்.

*

சேவியர்

Posted in Articles

இயேசு கேட்ட கேள்விகள்

நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?

நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?

( யோவான் 18 : 34 )

இயேசுவைப் படுகொலை செய்ய வேண்டுமென யூத மதத் தலைவர்கள் அவரை பிலாத்துவின் முன்னால் நிறுத்துகிறார்கள். பிலாத்து அவர்களிடம், ‘நீங்களே கொண்டு போய் உங்கள் சட்டப்படி இவனுக்கு தண்டனை வழங்குங்கள்’ என்கிறான். அதாவது யூத சட்டப்படி தண்டனை வழங்கச் சொல்கிறார். அப்போது யூதர்கள் “சட்டப்படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது” என்கின்றனர். 

யூதர்களுடைய மரண தண்டனை என்பது கல்லால் எறிந்து கொல்வது. ஆனால் இயேசு சிலுவையில் அறையுண்டு மரிக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம். எனவே ரோம முறைப்படி தான் தண்டனை நிறைவேற்றியாக வேண்டும். யூதர்கள் தங்களை அறியாமலேயே இறைவார்த்தைகளை அங்கே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

பிலாத்து இயேசுவைப் பார்த்துக் கேட்டான், ‘நீ யூதர்களின் அரசனா ?’

அந்தக் கேள்வியை பிலாத்து அலட்சியமாய்க் கேட்டிருக்கலாம். அல்லது ஏளனமாய்க் கேட்டிருக்கலாம். காரணம் மரண தண்டனைக்காக அவனிடம் கொண்டு வரப்படுபவர்கள் பெரும்பாலும் கலகக் காரர்கள். அல்லது அதிகாரத்துக்கு எதிராய் கடுமையாய்ப் போராடுபவர்கள். அவர்கள் யாருமே இயேசுவைப் போல அமைதியாய் நிற்பதும் இல்லை. தெளிவாய்ப் பேசுவதும் இல்லை. 

தன்னை ஒருவன் அரசனாக்கிக் கொள்ள வேண்டுமெனில், அவருக்கு ஆதரவாளர்கள் இருக்க வேண்டும். அவருடைய ஆடைகள் கண்டிப்பாக பகட்டின் ஆடையாய் இருக்க வேண்டும். ஆனால் இயேசுவிடம் எதுவும் இல்லை. தனியாய் நிற்கிறார். மிகவும் எளிமையாய் நிற்கிறார். அமைதியாய் நிற்கிறார். இப்போது பிலாத்துவிடம் வியப்பும் ஏளனமும் சரி விகிதத்தில் கலந்திருக்கலாம். எனவே தான் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். 

இயேசு அதற்கு ஒரு கேள்வியையே பதிலாய்த் தருகிறார். அந்தக் கேள்வி தான் மிகப்பெரிய ஆன்மிக சிந்தனைகளை உள்ளடக்கிய ஒரு கேள்வி. “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்கிறார் இயேசு ! அதாவது நான் யார் என்பதை அறியும் ஆவல் உமக்கு இருக்கிறதா ? அல்லது அடுத்தவர்கள் என்னை அரசன் என்கிறார்கள் அது உண்மையா என அறியும் ஆவல் இருக்கிறதா ? இதுவே இந்தக் கேள்வியின் பொருள். 

நீராகக் கேட்கிறீர் என்றால், இயேசு உண்மையில் யார் என்பதை அறியும் முயற்சி.

பிறர் சொல்வதை வைத்துக் கேட்பதெனில், இயேசுவைச் சிலுவையில் அறையும் முயற்சி !

பிலாத்து, 

இயேசுவை அறிய விரும்புகிறானா ? அறைய விரும்புகிறானா ?

இயேசுவின் கேள்வியில் பிலாத்து தடுமாறியிருக்க வேண்டும். உண்மையிலேயே இயேசுவை பிலாத்து அறிய விரும்பினானா ? இயேசு நோய்களை நீக்கினாரே, பேய்களை விரட்டினாரே, நீர் மீது நடந்தாரே, அதிசய அப்பங்களைத் தந்தாரே, அற்புதமான போதனைகள் தந்தாரே, விண்ணக வாழ்வின் வழியைக் காட்டினாரே.. இவற்றையெல்லாம் அறிய விரும்பினானா பிலாத்து ?

இல்லை, கூட்டத்தினர் இவரைக் கொலை செய்ய வேண்டுமெனும் வெறியில் கொண்டு வந்திருக்கிறார்களே. அந்த குற்றச் சாட்டை நிரூபிக்க நினைத்தானா ? குற்றம் நிரூபிக்கப்பட்டால் கொலை செய்வது எளிதாகிவிடும் என நினைத்தானா ?

நம்மை நோக்கி இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன சொல்வோம் ?

நாம் 

இயேசுவை அறிய நினைக்கிறோமா ?

இயேசுவைப் பற்றி அறிய நினைக்கிறோமா ?

இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஒன்று அன்பினால் இணைவது. இன்னொன்று தகவல்களினால் கட்டமைக்கப்படுவது. ஒன்று சித்தாந்தங்களோடு ஒன்றிப்பது, இன்னொன்று மேம்போக்காக தெரிந்து கொள்வது. ஒன்று அவரை நம் வாழ்வின் பாகமாய் மாற்றுவது, இன்னொன்று அவரை தூரத்தில் வைத்து எட்டிப் பார்ப்பது !

நாம் இயேசுவை எப்படி அறிய விரும்புகிறோம் ?

பிலாத்து இயேசுவை அறிய விரும்பவில்லை. இயேசு அவனிடம் சொன்னார், ‘அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்”  என்று. பிலாத்து இயேசுவைப் பார்த்து, ‘உண்மையா அது என்ன?’ என்று கேட்டான்.

பிலாத்து

உண்மையா அது என்ன ? என கேட்காமல்

உண்மையா அது யார் ? என கேட்டிருக்கலாம். ஏனெனில் நானே உண்மை என்றவரிடம், எது உண்மை என்று கேட்கிறான் பிலாத்து. யார் உண்மை என கேட்டிருந்தால், விடை கிடைத்திருக்கும். களம் மாறியிருக்கும். 

பிலாத்து உண்மையின் முன்னால் நின்ற பொய் ! அவனுக்கு உண்மை என்ன என்பது தெரிந்திருந்தது. இயேசுவைப் பொறாமையால் தான் கையளித்தார்கள் எனும் உண்மை ! இயேசு குற்றம் செய்யவில்லை எனும் உண்மை ! இயேசு சாவுக்குரியவர் அல்ல எனும் உண்மை ! தான் நினைத்தால் இயேசுவை விடுதலை செய்ய முடியும் எனும் உண்மை. எல்லா உண்மையும் தெரிந்த அவனுக்கு, ‘உண்மை’ என்பதே இயேசு தான் என்பது தெரியவில்லை. அவன் உண்மையைக் கொன்ற பொய்யாய் மாறிப் போனான்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டபின் அவன் சிலுவையில் வைக்க ஒரு பலகை தயாராக்குகிறான். அதில் எழுதுகிறான் “யூதர்களின் அரசன்”.  சீனாய் மலை கட்டளைகளை எழுதியது, கல்வாரி மலை அதில் கையொப்பமிட்டது ! ‘நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசன்” என !

நீ யூதனின் அரசனா ? என மரணத்துக்கு முன் கேள்வி எழுப்பியவன். ‘நீர் யூதரின் அரசன் தான்” என மரணத்திற்குப் பின் விடை எழுதுகிறான். விடையைத் திருத்தச் சொன்னவர்களை கோபத்துடன் திருப்பி அனுப்புகிறான் ! 

நான் விண்ணில் உயர்த்தப்படும் போது எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றார் இயேசு ! அதில் பிலாத்துவும் ஒருவனா ? 

இன்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம் ! 

நான் இயேசுவை அறிய விரும்புகிறேனா

அறைய விரும்புகிறேனா ?

*

சேவியர்

Posted in Sunday School

திராட்சைச் செடி & கிளைகள்

Sunday School/Catechism

திராட்சைச்செடி

( மூன்று பேர், நடுவில் ஒருவர் திராட்சைச் செடி + வேர், வலப்புறமும், இடப்புறமும் இருவர் கிளைகள் )

செடி : கிளைகளே, நீங்கள் எப்போதும் என்னில் நிலைத்திருங்கள்

கிளை 1 : இணைந்திருந்தா என்ன ஆகும் ?

செடி : இணைந்திருந்தா தான் கனி கொடுக்க முடியும் 

கிளை 1 : எப்படி 

செடி : என்னுடைய வேர் தண்ணீரை உறிஞ்சி எல்லா கிளைகளுக்கும் தரும். 

கிளை 1 : ஓ.. ஓக்கே..ஓக்கே நான் எப்பவும் இணைஞ்சே இருக்க போறேன். கனி தரப் போறேன்…

கிளை 2 : நான் தனியா போக போறேன் 

செடி : தனியாவா ?

கிளை2 : ஆமா.. இல்லேன்னா எப்பவும் உன் கூடவே இருக்க வேண்டியிருக்கு.. தனியா எங்கயும் போக முடியாது

செடி  : அதுக்காக

கிளை2 : தனியா கட் பண்ணிட்டு, நான் போக போறேன்.

செடி : அப்படி போனா நீ கரிஞ்சு போயிடுவே

கிளை 2 : அதெல்லாம் சும்மா.. நான் போக தான் போறேன்……  நீ வரியா ( கிளை 1 ஐ பார்த்து )

கிளை 1 : இல்ல இல்ல.. நான் வரல.

( கிளை 2, துண்டித்துக்கொண்டு தனியே போகிறது )

கிளை 2 : ( அங்கும் இங்கும் ஓடுகிறது… ) ஹா..ஹா.. வாட் எ ஃப்ரீடம்.. எங்க வேணும்ன்னாலும் நான் ஓடுவேன். ஏய் நீயும் வா… இங்க நமக்கு நல்ல ஃப்ரீடம் இருக்கு

கிளை 1 : இல்ல.. இல்ல.. நான் வரல. நான் செடி கூட தான் இருப்பேன்.. இந்த அளவுக்கு ஃப்ரீடம் போதும்

கிளை 2 : நீ ஒரு வேஸ்ட்… 

( மறு நாள் )

கிளை 2 : என்ன.. என்னோட இலையெல்லாம் கொஞ்சம் வாடுது.. ஏன் எனக்கு தண்ணி கிடைக்க மாட்டேங்குது

செடி : நான் தான் சொன்னேனே.. என்னைப் பிரிந்து உன்னால ஒண்ணும் செய்ய முடியாது.

கிளை 2 : இல்ல..இல்ல.. நான் சமாளிச்சுடுவேன்.

செடி : நீ பிரிஞ்சு போனதால… கரிஞ்சி போயிடுவே… 

கிளை 2 : ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை

( சில நாட்களுக்குப் பின் )

கிளை 2 : ( கரிஞ்சு போன இலைகளுடன் ) ஐயோ.. நான் இப்படி கரிஞ்சி போயிட்டேனே… என்னால இனி கனி கொடுக்க முடியாதே

கிளை 1 : அதான் செடி சொல்லிட்டே இருந்துச்சுல்ல, நீ தான் கேக்கல

கிளை 2 : தப்பு பண்ணிட்டேன்.

கிளை 1 : இப்போ புலம்பி என்ன பிரயோசனம் 

செடி : செடியில இருந்து தனியே துண்டிக்கப்பட்டா.. அப்புறம் அது கனி கொடுக்காது, விறகுக்கு தான் பயன்படும்

கிளை 2 : விறகுக்கா ?

செடி : ஆமா.. உன்னை வந்து எடுத்துட்டு போய் எரிப்பாங்க.

கிளை 2 : ஐயோ.. இதெல்லாம் எனக்கு தெரியாம போச்சே.. இனி என்ன பண்ணுவோன்

செடி : இனி ஒண்ணும் பண்ண முடியாது. செடியில கிளைகள் இணைஞ்சு இருக்கணும். 

கிளை 2 : யா… இப்போ புரியுது

செடி : கடவுளை விட்டு பிரிந்து நாம போனா நம்ம வாழ்க்கை இப்படி செடியை விட்டுப் பிரிஞ்சு போன கிளை மாதிரி காஞ்சு போயிடும். அதனால எப்பவும் கடவுளோட இணைந்து தான் இருக்கணும்

கிளை 1 : காலம் கடந்து அழுது என்ன பிரயோசனம், இப்பவே எல்லாரும் உஷாரா இருப்போம்

*

Posted in skit, Sunday School

நான் அழகா இல்லை

ந1 : என்னடா டல்லா இருக்கே

ந 2 : இல்ல .. என் கிளாஸ்ல எல்லாருமே என்னை விட ஹைட்டா இருக்காங்க.. நான் மட்டும் தான் இப்படி குள்ளமா இருக்கேன் அதான்.

ந 1 : ஹைட்ல என்னடா இருக்கு.. எத்தனையோ பெரிய பெரிய வரலாற்று மனிதர்கள் குள்ளமா தான் இருக்காங்க‌

ந 2 : எனக்கு ஹிஸ்டாரிக்கல் பீப்பிள் ஆக ஆசையில்லை, நார்மலா இருந்தா போதும்.. அதுக்கு ஐ நீட் ஹைட்

ந 1 : ம்ம்… ஹைட் வரும் கவலைப்படாதே

காட்சி 2

ந 1 : மறுபடியும் என்னடா டல் ?

ந 2 : என் கலர் ரொம்ப டல்லா இருக்கு.. நேற்று குரூப் போட்டோ ஒண்ணூ எடுத்தோம்.. நான் மட்டும்  கருப்பா….  இருக்கேன்

ந 1 : டேய்.. நீ நல்ல அழகா தாண்டா இருக்கே

ந 2 : நீயும் கலாய்க்காதே.. கறுத்துப் போன‌ கருப்பட்டி மாதிரி இருக்கேன்…

ந 1 : டேய்.. உலகத்துல..

ந 2 : போதும் போதும்.. வரலாற்றுல மண்டேலா எல்லாம் கருப்பு ந்னு சொல்ல வரே.. அப்படி தானே… போதும்.

காட்சி 3

ந 1 : டேய்.. இப்ப என்னடா டல் ?

ந 2 : என் வாய்ஸ் இருக்கே…நல்லாவே இல்லடா..

ந 1 : டேய்.. உன்னை திருத்தவே முடியாது.. எதையாவது ஒண்ணை கண்டு பிடிச்சு ஃபீல் பண்றே.. உன்னை இன்ஃபீரியரா நினைச்சுக்கறே.

ந 2 : நான் அப்படி தானே இருக்கேன். தட்ஸ் த ஃபேக்ட்… 

ந 1 : நீ அமெரிக்க ஜனாதிபதியோட பிள்ளையா இருந்தா இப்படி எல்லாம் யோசிப்பியா ?

ந 2 : அப்படின்னா நான் எதுக்கு இதெல்லாம் யோசிக்கணும்.. எப்படி இருந்தாலும் கெத்துன்னு நினைப்பேன்.

ந 1 : அதை விட ஆயிரம் ஆயிரம் மடங்கு பெரிய ராஜாதி ராஜா இயேசுவோட பிள்ளைடா நீ.. அப்படின்னா நீ இளவரசன்…

ந 2 : ஓ.. அப்படி சொல்றே

ந 1 : யா… அப்படிப்பட்ட நீ இப்படி சப்ப மேட்டருக்கு ஃபீல் பண்ணலாமா ? இயேசு மனுஷனா வந்தப்போ உயரம், நிறம், பேச்சு, ஒல்லி குண்டு பத்தியெல்லாம் பேசினாரா என்ன ? 

ந 2 : ம்ம்ம்நோ.. பேசவே இல்லை

ந 1 : அதெல்லாம் முக்கியமே இல்லை… இனிமே நீ இப்படிப்பட்ட குறைகளைப் பற்றி பாக்காம, நீ யாரோட பிள்ளைன்னு பாரு .. அப்போ உனக்கு தன்னம்பிக்கை தானா வரும்.

ந 2 : யா.. உண்மை தான்… 

ந 1 : தட்ஸ் த மெசேஜ் ஆஃப் கிறிஸ்மஸ் டா… எல்லாரும் இறைவனின் பிள்ளைகள். அவர் நம்மோட மூத்த அண்ணன்.

ந 2 : இனிமே இந்த தேவையற்ற மேட்டர் பேசமாட்டேன்டா… கருப்போ சிவப்போ, நான் கடவுளோட மகன். ! ஹிஸ் பிரின்சஸ் ! இளவரசன்…  தட்ஸ் இட்

ந1 : ஹேப்பி கிறிஸ்மஸ் டா

ந 2 : ஹேப்பி கிறிஸ்மஸ்