Posted in Articles, கட்டுரைகள், கிறிஸ்தவ இலக்கியம், கிறிஸ்தவம், Words On THE CROSS

சிலுவை மொழிகள்  3

Image result for mother here is your son

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார்  ( யோவான் 19 : 26 & 27 )

உலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார்.

“தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்”. தந்தையின் அந்த விருப்பத்தை மனதில் கொண்டு இயேசு சிலுவையில் கரங்களை விரித்து மீட்பின் வரத்தைக் கொடுத்தார்.

இயேசு சிலுவையின் உச்சியிலிருந்து உற்றுப் பார்த்தபோது அவரது கண்களுக்குத் தெரிந்தார் அன்னை மரியாள். “உனது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்ற தீர்க்கத் தரிசனம் அவரது காதுகளில் ஒலித்திருக்க வேண்டும். ஒன்றல்ல, ஓராயிரம் வாள்கள் பாய்ந்த வலியில் இருந்த அன்னையை இயேசு தேற்றுகிறார்.

தான் தேற்றப்பட வேண்டிய, ஆனால் தன்னால் தேற்றப்படாத ஒருவரும் இருக்கக் கூடாது என்பதே இயேசுவின் விருப்பம். இயேசு, “அம்மா இனிமேல் இவரே உன் மகன்” என சிலுவை அடியில் நின்ற தனது அன்புச் சீடரிடம் மரியாளை ஒப்படைக்கிறார். பிறர் மீது கொண்ட கரிசனை இயேசுவுக்கு சிலுவை உச்சியிலும் தீரவில்லை.

வலியோடு இருப்பவருக்கு ஆறுதல் சொல்வது தான் உலக வழக்கம், வலியோடு இருப்பவரே ஆறுதல் சொல்வது தான் இறைமகன் இயேசுவின் விளக்கம்.
சிலுவை வரைத் தன்னை பிந்தொடர்ந்து வந்த ஒரே சீடர் யோவானிடம் அன்னையை ஒப்படைக்கிறார். அவரும் உடனடியாக அன்னையைத் தனது வீட்டில் அழைத்துச் செல்கிறார்.

தொழுவத்தில் மெல்லிய வெளிச்சத்தில் அன்னையின் முகத்தை முதல் முதலாகப் பார்த்த இயேசு, பன்னிரண்டு வயதில் பரிதவிக்கும் அன்னையின் தவிப்பைப் பார்த்த இயேசு, சிலுவையின் அடியில் கடைசியாய் அன்னையின் முகத்தையும் பார்க்கிறார்.

வியாகுல அன்னை என அன்னை மரியாளுக்கு ஒரு பெயர் உண்டு. இத்தனை துயரத்தையும், வலியையும் தாங்கி சிலுவை அடியில் நின்று கொண்டிருப்பது அதன் ஒரு உதாரணம் என்று சொல்லலாம். ஒரு சின்ன கைக்குட்டையால் மகனின் இரத்தத்தைத் துடைக்க அனுமதியில்லை. ஒரு சொட்டு தண்ணீரை மகனின் உதடுகளில் வைக்க அனுமதியில்லை. மகனின் துயரத்தின் ஒரு அணுவளவைக் குறைக்கவும் அவருக்கு அனுமதியில்லை. மகன் கொஞ்சம் கொஞ்சமாய் இறப்பதைப் பார்க்கும் அனுமதி மட்டுமே உண்டு.

எல்லோரும் ஓடி விட்டார்கள். அன்னை ஓடிவிட விரும்பவில்லை. சிலுவை அடியில் நின்று கொண்டிருக்கிறார். வலியிலேயே அதிக வலி நமது பிரியத்துக்குரியவர்களின் மரணம் தான். அன்னை மரி அதனால் தான் வியாகுல அன்னை என அழைக்கப்படுகிறார்.

“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என கானாவூர் திருமணத்தில் மக்களிடம் சொன்ன அன்னை மரியாள், இப்போது இயேசுவை வழியனுப்பி வைக்கிறார்.

“என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்ற இயேசு தனது அன்னையை தவிக்க விடவில்லை. விண்ணகத்திலுள்ள தந்தையின் திருவுளத்தை அன்னை நிறைவேற்றியிருந்தார். இயேசுவை பூமிக்கு அறிமுகம் செய்திருந்தார்.

மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்றும் உண்டு என்றும் நிகழ்ந்த வாதங்கள் கிறிஸ்தவத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றன. எது எப்படியென்பது இறைவனுக்கே தெரியும். இயேசுவின் கரிசனை அன்னை மரியாளை ஒரு “ஆன்மீக மகனிடம்” ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். எனவே தான் தனது அன்பு சீடரிடம் அவரை ஒப்புக் கொடுக்கிறார்.

தம் மீது அன்பு கொண்ட சீடருக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம், இயேசுவின் அன்னையை தனது அன்னையாக ஏற்றுக் கொள்வது. அன்னை இறக்கும் வரை யோவான் எருசலேமை விட்டு வெளியே செல்லவில்லை என்கிறது மரபுச் செய்தி.

இயேசு, தனது தாய் மீது கொண்ட கரிசனை “தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும்” ஒவ்வொருவர் மேலும் இருக்கும். இந்த நிகழ்வு இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் தேவையையும், அப்போது கிடைக்கின்ற மீட்பின் நிச்சயத்தையும் உணர்த்துகிறது.

உலகத் தாயை உதாசீனம் செய்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதை விளக்குகிறது.சிலுவை அடியில் நின்ற கூட்டத்தினரில் இயேசு தனது தாய்க்கு நிறைவேற்ற வேண்டிய கடமையை துல்லியமாக நிறைவேற்றுகிறார்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்

Posted in Articles, கட்டுரைகள், Words On THE CROSS

சிலுவை மொழிகள் – 1 (தினத்தந்தி)

Image result for words on the cross

1

தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை ( லூக்கா 23 : 34 )

என்பது தான் இயேசு சிலுவையில் பேசிய முதல் வாக்கியம் !

இயேசு கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் அடிக்கப்பட்டு சிலுவையில் தொங்கியபோது மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு ஏழு வாக்கியங்களைப் பேசினார். அவை கிறிஸ்தவ ஆன்மீக வாழ்க்கையைச் செழுமைப்படுத்தும் விஷயங்களாக அமைந்துள்ளன.

சிலுவை மீட்பின் சின்னம். இன்றைக்கு அது காதுகளிலும், கழுத்திலும், விரல்களிலும், ஒரு அலங்காரச் சின்னமாக இடம்பெற்று விட்டது.

சிலுவை அலங்காரப் பொருளா ? கல்வாரியில் இயேசுவின் குருதியும், வலி நிறைந்த வார்த்தைகளும், உயிர் உறைந்த அவமானங்களும் இறுகப்பற்றியிருக்கும் சின்னம். ஒழுங்கற்ற மரத் துண்டுகளால் இணைந்த சிலுவை தான் விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமாக மாறியது.

சிலுவை என்பது அழகியலின் அடையாளம் அல்ல. இயேசு எனும் மீட்பரின் உயிர் உறிஞ்சிய கொலைக்கருவி. நிராகரிப்புகளின் வலி நிரம்பிய கொலைக்கருவி. அது இயேசுவைத் தாங்கியதால் மீட்பின் கருவியாக மாறிப் போனது. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பார்கள். ஏதேன் தோட்டத்தில் மரத்தின் கனியினால் விளைந்த பாவத்தை, கல்வாரியில் மரத்தின் சிலுவையால் நீங்கியது.

குற்றுயிராய் நைந்து தொங்கிய உடல், சிலுவையில் ஓர் அழுக்கான படத்தைப் போல ஆணிகளால் அறையப்பட்டு தொங்கவிடப்பட்டது. அந்த வேதனையின் பெருங்கடலிலும் இயேசு தந்தையிடம் வேண்டுதல் செய்தார்.

“தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை”

தனக்காக வேண்டுதல் செய்யவே பிரியமில்லாத மனிதர்களின் மத்தியில், பிறருக்காக வேண்டுதல் செய்கிறார் இயேசு. அதுவும் மரணத்தின் வாசலில் கால் வைக்கும் போதும் அவர் வேண்டுகிறார்.

பாவத்தை யார் தான் தெரியாமல் செய்தது ? இயேசுவை சாட்டையால் அடித்தவனுக்குத் தெரியவில்லையா ? சிலுவையைத் தோளில் தூக்கிப் போட்டவனுக்குத் தெரியவில்லையா ? கூர் ஆணிகளால் வெள்ளைப் புறாவின் இறகுகளை இறுக்கமாய் அடித்தவனுக்குத் தெரியவில்லையா ?

எல்லோருக்கும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது. ஆனால் மீட்பரைச் சிலுவையில் அறைகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. வாழ்நாள் முழுவதும் மன்னிப்பைச் செயலிலும், போதனைகளிலும் காட்டி வந்த இயேசு, தனது முடிவுரையில் மீண்டும் ஒரு முறை அதை எழுதி வைக்கிறார்.

“தந்தையே இவர்களை மன்னியும்” என யாரைக் குறிப்பிட்டார் இயேசு. இயேசுவை குற்றம் சாட்டியவர்களை, சாட்டையால் அடித்தவர்களை, சிலுவையில் அறையும் என கத்தியவர்களை, பரபாஸ் போதும் என சமரசம் செய்தவர்களை, சிலுவையில் அறைந்தவர்களை, அவருக்கு ஆதரவாய் நிற்காத மனிதர்களை. எல்லோரையும் இயேசு மன்னித்தார். அவ்வளவு தானா ?

“நமது பாவங்கள் தான் அவரைச் சிலுவையில் அறைந்தது” என்கிறது பைபிள். அப்படியானால் அவரைச் சிலுவையில் அறைந்தது யார் ? நமது பாவங்கள். நம்மிடம் பாவம் இல்லை என்போமானால் நாம் பொய்யர்கள். எனில், சிலுவையில் உச்சியில் இயேசு யாருடைய பாவங்களை மன்னித்தார் ?

நமது பாவங்களை ! இயேசுவைச் சிலுவையில் அறைந்ததில் நமது பங்கும் உண்டு. நாம் தெரிந்தே செய்கின்ற பாவத்தைக் கூட இயேசு, “தெரியாமல் செய்கிறார்கள்” என கரிசனையோடு கூறுகிறார். நமது பாவங்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.

மூன்று வயது மழலை மகள் தவறு செய்து விட்டு ஓடி வரும் போது, “சின்னப் பிள்ள தெரியாம செஞ்சுடுச்சு” என தழுவிக் கொள்ளும் ஒரு தந்தையின் பிரமிப்புப் பாசத்தை அல்லவா இயேசு சிலுவையில் காட்டினார் ?

“இவனுடைய இரத்தப் பழி எங்கள் மேலும், எங்கள் சந்ததி மேலும் வரட்டும்” என திமிராய்ப் பேசிய மக்களை இயேசு சிறிதும் வெறுக்கவில்லை. “தெரியாமல் செய்கிறார்கள் மன்னியுங்கள் தந்தையே” என வலியின் உச்சத்திலும் கதறி வேண்டுகிறார்.

“பாவத்தின் சம்பளம் மரணம், இதோ அந்த மரணத்தை நான் சிலுவையின் வழியாக நிறைவேற்றி விட்டேன். தந்தையே இவர்களை மன்னியும்”. என இயேசு மக்களுக்காய் வேண்டுகிறார்.

பழிக்குப் பழி வாங்கும் எண்ணமோ, முள்ளை முள்ளால் எடுக்கும் குணமோ எனக்கு இல்லை. “பிதாவே என்னிடம் வெறுப்பு இல்லை. இவர்களை மன்னியும்” என எதிரிகளுக்காய் மன்றாடுகிறார்.

அந்த வார்த்தை கூடியிருந்த சேவர்களை ஊடுருவக் குத்தியிருக்க வேண்டும். அங்கிருந்த படைவீரர்களில் சிலர் புனிதர்களாக மாறினார்கள் என்கிறது வரலாறு.

இயேசுவின் சிலுவை, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் இணைக்கும் பாலமாய் இருக்கிறது. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இருந்த திரையைக் கிழித்தது சிலுவை தான்.

எப்படி செபிக்க வேண்டும் எனும் போதனையில் மன்னிப்பைப் போதித்த இயேசு, எப்படி வாழவேண்டும் என‌ வாழ்க்கையில் மன்னிப்பைப் போதித்த இயேசு, எப்படி இறக்க வேண்டும் என்பதிலும் மன்னிப்பை முன்னிறுத்துகிறார்.

கேட்காமலேயே மன்னிக்கும் மனம் கொண்ட இறைவனிடம், மன்னிப்பைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளத் தயாராவோமா ?

Posted in Articles, Desopakari, Vettimani

காலங்களின் கடவுள் !

Image result for seasons
ஏதாவது ஒரு பொருளை உருவாக்கினால் அதற்கான ‘காப்புரிமையை’ பெறுவது இப்போது நடைமுறையில் இருக்கும் வழக்கம். காலங்களை உருவாக்கிய கடவுள் காலங்களுக்கான காப்புரிமையை வைத்திருக்கிறார். “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல” என்கிறார் இயேசு (திருத்தூதர் பணிகள் 1:7 ). இறைவன் ஒருவரே காலங்களின் அதிபதி ! எனவே தான் அவரை படைப்புகளின் பிதா, காலங்களின் கடவுள், பருவங்களின் பரமன் என்றெல்லாம் அழைக்கலாம் !

“உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்; கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்தலுக்கு ஒரு காலம் …” என பேசுகின்ற சபை உரையாளர் “கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார்” ( சபை உரையாளர் 3 : 1 ..10) என்கிறார்.

பூமி இப்படி இளமையாகவும், வளமையாகவும் இருப்பதற்குக் காரணம் இந்த பருவ மாற்றங்களே என்கிறது விஞ்ஞானம். நமக்காய் இந்த பூமியைப் படைத்த இறைவன் நமது வளமையான வாழ்வுக்காய் பருவங்களைத் தந்திருக்கிறார்.

காலங்கள் ஒன்றை ஒன்றிடமிருந்து பிரிக்கின்றன. இறைவன் ஆதியில் ஒளிப்பிழம்புகளை உருவாக்கி காலங்களை வகைப்படுத்தினார். பிரிவினைகளின் முதல் சுவடு அங்கே வைக்கப்பட்டது. இரவிலிருந்து பகல் பிரிக்கப்பட்டது ! நீரினினின்று நிலம் பிரிக்கப்பட்டது ! காலங்களைப் பிரித்து ஞாலத்தை அழகுபடுத்தினார் இறைவன்.

மனித வாழ்க்கையிலும் பல்வேறு காலங்கள் வந்து செல்கின்றன. சிரிப்பின் வீதிகளில் நடமாடும் காலம், அழுகையின் கரையில் அடைபடும் காலம், உற்சாகத்தின் ஊஞ்சலில் ஆடும் காலம், சோர்வின் படிக்கட்டில் அமரும் காலம் என வாழ்க்கையின் பருவங்கள் அனுபவங்களை அள்ளித் தருகின்றன.

இறைவன் படைத்த இந்த உலகில் நான்கு பருவங்கள் பொதுவானவையாக இருக்கின்றன. வசந்த காலம், இலையுதிர் காலம், வேனிற் காலம், குளிர் காலம் என இந்த‌ நான்கு காலங்களைச் சொல்லலாம். நிலப்பரப்புக்கு ஏற்ப இந்த காலங்களில் மாற்றங்கள் நேர்வதுண்டு. எனினும் பொதுவானவையாய் இருப்பவை இந்த நான்கு பருவ காலங்களே !

மனித வாழ்க்கையையும் ஆன்மீக வெளிச்சத்தில் இந்த நான்கு பருவங்களுக்குள் அடக்கி விடலாம். மழலைக்காலம் எனும் வசந்த காலம், பதின்வயதுக் காலம் எனும் இலையுதிர் காலம், இளமைக்காலம் எனும் வேனிற்காலம், முதுமைக்காலம் எனும் குளிர்காலம் !  அதெப்படி ?

  1. வசந்த காலம் !

வசந்த காலம் என்பது மகிழ்ச்சியின் காலம். துயரங்களைப் பற்றிய சிந்தனையின்றி மரங்கள் வண்ண ஆடை உடுத்தி, கிளையசைத்து, இலை சிரிக்க நம்மை வரவேற்கும் கால்ம். உற்சாகத்துக்குப் பஞ்சம் இல்லாத காலம் இது !

நமது மழலைக்காலம் இந்த வசந்த காலம் போன்றது. கவலைன்னா என்ன என்று கேட்கின்ற காலம். இருப்பதைக் கொண்டு இன்புற்று வாழும் காலம். இறைவனின் ஆசீரை நிறைவாகப் பெற்று களித்திருக்கும் காலம். பெற்றோரின் விரல்பிடித்து நடந்து, எந்த பிரச்சினைகளும் இல்லாலம் திரிகின்ற காலம்.

ஆன்மீக வாழ்க்கையில் இறைவனை அறிகின்ற காலம் இது ! இறைவனிடம் வருகையில் கிடைக்கின்ற உற்சாகமும், புளகாங்கிதமும் அளவிட முடியாதது. தந்தையின் விரல்பிடித்து திருவிழாவில் பலூன் பொறுக்கும் குழந்தையின் பரவசம் இந்த காலத்தின் அற்புதம். இந்தக் காலம் இப்படியே நீடிக்காதா என மனம் ஏங்கும் ! ஆன்மீகத்தின் ஆரம்ப காலம் ! ஆனந்தத்தின் அற்புத காலம்.

  1. இலையுதிர் காலம் !

இலையுதிர்க்காலம் புதுப்பிறப்பின் காலம். தலைகளில் இருக்கும் இலைகளை உதிர்த்து விட்டு மரங்கள் நிராயுதபாணியாய் நிற்கும் காலம். இன்னொரு வசந்த முளைக்காகக் கிளைகள் காத்திருக்கும் காலம். உதிர்தல் இல்லாமல் முளைத்தல் இல்லை. இழத்தல் இல்லாமல் பெறுதல் இல்லை. தியாகம் இல்லாமல் மேன்மை இல்லை !

ஆன்மீகப் பயணத்தின் இரண்டாம் பிறப்பு இலையுதிர்காலம். நம்மிடம் இருக்கின்ற பாவத்தின் களைகளை உதிர்க்கும் காலம். நம்மைச் சுற்றியிருக்கும் தீமையின் துருக்களை உதறும் காலம். மறுபிறப்பின் முன்னுரை இந்தக் காலத்தில் தான் எழுதப்படுகிறது. பதின்வயதுகளில் ஒருவன் புதுப்பிறப்பெடுத்தால் அவனுக்குள் ஆன்மீகத்தின் அடைமழை நிச்சயம் பொழியும்.

உள்ளே இருக்கின்ற அழுக்குத் தண்ணீரை அகற்றாமல், பாத்திரத்தை மீண்டும் கழுவாமல், நல்ல நீரை நிரப்புதல் சாத்தியமில்லை. பழைய மனிதனின் மரணமே புதிய மனிதனின் ஜனனம். ஆன்மீகத்தின் வளர்நிலைக் காலம் என்பது இலையுதிர்க்காலமே ! இலைகளை உதிர்க்காமல் இருக்கின்ற மரங்கள் வசந்தத்தை வரவேற்பதில்லை !

  1. வேனிற்காலம்.

வேனிற்காலம் வியர்வையின் காலம். உடலின் உறுதியை எல்லாம் சூரியன் வந்து உறிஞ்சிச் செல்லும் காலம். நிழல் கிடைத்தால் நிற்கலாமே என கால்கள் ஏங்கும் காலம். இந்தக் காலத்தில் நமக்கு அதிக சக்தி தேவைப்படும். இந்தக் காலத்தில் தான் வேலைகள் அதீத வேகத்தில் நடக்கும். உலகமே சுறுசுறுப்பாய் இயங்கும் ! பணியே இங்கே பிரதானமாகும்.

ஆன்மீக வாழ்க்கையின் வீரிய காலம். வசந்தத்தின் இனிமையை ரசித்து, பாவத்தின் துருக்களை அகற்றி புதிய மனிதனானபின் வேனிற்காலத்தில் பயணிக்க வேண்டும். பாவம் களைந்த மனிதனே பாவமில்லாத இறைவனைப் பறைசாற்ற முடியும். தனது கர்வத்தின் இலைகளை உதிர்த்த மனிதன் மட்டுமே பணிவின் பாதையில் நடக்க முடியும்.

இந்த வேனிற்காலம் சோர்வுகளைக் கொண்டுவரும். அசதியைக் கொண்டு வரும். நிழல்வேண்டுமென ஏக்கம் கொள்ளும் பாதங்களைக் கொண்டு வரும். எனினும் இந்தக் காலமே நீளமான பகலின் காலம். ஒளியின்றி வழியைப் பற்றிப் போதித்தல் இயலாது ! இது கனிகொடுக்கும் காலம். ஒளிச்சேர்க்கையின் காலம்.

நமது ஆன்மீக வாழ்க்கையில் எந்த அளவுக்கு இந்த வேனிற்காலத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதைக் கொண்டே நமது ஆன்மீக வாழ்வின் ஆழம் அளவிடப்படும்.

  1. பனிக்காலம்

பனிக்காலம், தனிக்காலம் ! சோர்வின் காலம். வெளியே சென்றால் குளிர் வாட்டியெடுக்கும். சன்னலின் கம்பிகள் வழியே பனிக்காற்று கோலியாத்தின் வாளைப் போல மூர்க்கமாய் மிரட்டும். காதுகளின் கதவுகளை குளிர்க்குத்தீட்டிகள் கூர்மையாய் விரட்டும். பெரிதாக எதையும் செய்ய முடியாத சோர்வின் காலம்.

இது முதுமையின் காலம் எனலாம். போர்வைக்குள் கதகதப்பைத் தேடும் காலம். ஒரு தேனீர் குடித்து, காலத்தை நினைவுகளின் தேர்களில் ஏறிக் கடக்கும் பருவம் இது. மேலை நாடுகளில் வெண் பனியின் யுத்தம் நடக்கும் காலம் இது. சாலைகளை பனிக்கரடி கட்டிப்பிடித்துப் படுத்திருப்பது போல எங்கும் பனிக் குன்றுகளே கண்சிமிட்டும்.

ஆன்மீகப் பயணத்தின் கடைசிக் காலம். வாழ்க்கையின் முதுமைப் பயணம். இறைவனின் அன்பின் அரவணைப்புக்குள் அமைதியாய் இருந்திடவே மனம் துடிக்கும். அந்த கதகதப்பு உணர்வுகளில் உயிரைக் காத்துக் கொள்ளும் காலம். வேனிற்காலத்தில் தேவையானவற்றைச் சேமிக்கும் எறும்புகள் பனிக்காலத்தில் பதட்டப்படாது. அது போல, ஆன்மீக வேனிற்காலத்தில் இறைவனின் பிரியத்துக்குரிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள் பரமன் தரும் பனிக்காலத்தில் பதற மாட்டார்கள். அவரது அன்புக்குள் அமைதியாய் இருப்பார்கள்.

இறைவன் நமக்குத் தந்திருக்கும் இயற்கையின் பருவங்கள் நமது வாழ்க்கையை வளமாக்குகின்றன.

ஆன்மீகத்தில் நாம் பயணிக்கும் பருவங்கள் நமது வாழ்க்கையை  அழகாக்குகின்றன.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

*

Posted in Articles, Desopakari

நுண்ணறிவா ? விண்ணறிவா ? எது தேவை ?

Image result for robots

ஃபேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ரோபாட்டிக் மென்பொருட்களை பயன்படுத்தி வருகிறது. அவற்றுக்கு ‘சேட்பாட்’ என்பது பெயர். அதாவது சேட் செய்யும் ரோபாட்கள் என்பதன் சுருக்கம் தான் அது. நாற்பது மொழிகள் அவற்றுக்குள் பதித்து வைக்கப்பட்டுள்ளன. எந்த மொழியைத் தேர்ந்தெடுத்து உரையாடுகிறோமோ அதற்குத் தக்கபடி அதுவும் அதே மொழியில் பதில் தரும்.

சமீபத்தில் ஒரு நிகழ்வு. இப்படிப்பட்ட ரோபாட்களில் இரண்டு ரோபோக்கள் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டன. அதுவும் மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு சமிக்ஜை மொழியில் ! இதைப் பார்த்த மென்பொருள் பொறியாளர்கள் அதிர்ந்து போய்விட்டனர். நிலமையின் விபரீதத்தை உணர்ந்த நிறுவனம் அந்த சேட் போட்களை தற்காலிகமாய் செயலிழக்கச் செய்து விட்டது.

ரோபோட்டிக் தொழில்நுட்பம் நாளை மனுக்குலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாய் மாறலாம் என்பதன் ஒரு சின்ன உதாரணம் இது.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெறும் அறிவியல் புனைக் கதைகளிலும், ஹாலிவுட் திரைப்படங்களிலும் மட்டுமே வலம் வந்த ரோபோக்கள் இன்று இலட்சக்கணக்கான வீடுகளில் நுழைந்து விட்டன. எல்லா துறைகளிலும் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. ரோபோ என்பது கைகால் வைத்த மனித உருவ ரோபோக்கள் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவோடு வலம் வரும் எல்லா மென்பொருட்களும் இந்த வகையறாவில் வந்து விடுகிறது.

சமீபத்தில் ஒரு குழந்தை வடிவ ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. குடும்பத்தில் ஒரு சின்னக் குழந்தையைப் போல இது வாழுமாம். குழந்தைகள் இல்லாத வீடுகளில் இந்த குழந்தைகள் ஒரு செல்லப்பிராணியைப் போல தவழ்ந்து திரியும். பெற்றோரின் உணர்வுகளை உள்வாங்கி அதற்குத் தக்கபடி செயல்பட இவற்றுக்குள் செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பட்டிருக்கிறது.

தனிமையில் வாடும் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் நட்பு பாராட்ட ‘கம்பேனியன் ரோபோக்கள்’ உருவாக்கப்படுகின்றன. இன்றைய இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், பிக் டேட்டா, ஆகுமென்டட் ரியாலிடி, மெஷின் லேர்னிங், கிளவுட் என எல்லா தொழில்நுட்ப அம்சங்களும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் எனும் செயற்கை நுண்ணறிவுக்குள் நுழைந்து விட்டது.

முன்பெல்லாம் மனிதர்கள் எழுதும் மென்பொருளுக்குத் தக்கபடி தான் ரோபோக்கள் செயல்பட்டு வந்தன. அந்த மென்பொருட்களைத் தாண்டி அவை எதையும் யோசிப்பதில்லை. ஆனால் இன்றைய நவீன ரோபோக்கள் அப்படியல்ல. தங்களுடைய மென்பொருட்களை தாங்களே உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. எனவே சூழலுக்கும், அனுபவத்துக்கும் ஏற்ப அவை மென்பொருட்களை சொந்தமாக எழுதிச் சேர்க்கின்றன.  ‘சிற்பமே தன்னை செதுக்கிக் கொள்வது போன்ற’ ஒரு புதுமையான நுட்பம் இது.

உதாரணமாக ஒரு ரோபோ செஸ் விளையாடும் வகையில் வடிவமைக்கப்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். தொடக்கத்தில் அதற்கு அடிப்படை செஸ் அறிவு மட்டுமே இருக்கும். அந்த ரோபோ எதிராளி ஒருவருடன் செஸ் விளையாடும் போது எதிரியின் சிறந்த விளையாட்டு உத்தியைக் கற்றுக் கொண்டு தனக்குள் புதிய மென்பொருளை தனக்குள் எழுதிச் சேர்க்கும்! இப்படி படிப்படியாக தனது அறிவை வளர்த்துக் கொண்டு வெல்ல முடியாத நிலைக்கு உயர்ந்து விடும்.

இப்படி தன்னைத் தானே வலிமைப்படுத்தும் ரோபோக்கள் ஆபத்தானவை என்பது தான் பெரும்பாலான அறிவியலார்களின் கருத்து. இன்றைக்கு இராணுவம். அணு உலைகள், விண்வெளிப் பயணங்கள் என எல்லா இடங்களிலும் ரோபோக்கள் இருக்கின்றன. அவை தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைத் தாண்டி ஒரு பணியை தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் போது அது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது.

சர்வதேச யுத்தங்களோ, உலகப் பேரழிவுகளோ, அண்ட சராசர நிலைகுலைவுகளோ ஏற்பட சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன. தன்னை விட அறிவு குறைந்த விலங்குகளை எப்படி மனிதன் அடக்கி ஆள்கிறானோ, அப்படி தன்னை விட அறிவு குறைந்த  மனிதனை செயற்கை நுண்ணறிவு கருவிகள் அடக்கி ஆள்வது சாத்தியமே. காரணம் இன்றைக்கு கிடைக்கின்ற தகவல்களை மனிதனை விட பல இலட்சம் மடங்கு வேகத்திலும், பல கோடி மடங்கு அதிகமாகவும் பயன்படுத்தும் வாய்ப்பு அந்த இயந்திரங்களுக்கு உண்டு. இயற்கை வளர்ச்சியில் இருக்கும் மனிதனால் அந்த விஷயத்தில் போட்டி போடவே முடியாது. இதை நான் சொல்லவில்லை உலகில் தலை சிறந்த அறிவியலார் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்.

இன்றைக்கு நமது ஒவ்வொரு செயல்களையும் கவனித்து நம்மை பிந்தொடரும் நுட்பங்கள் மலிந்து விட்டன. ‘ஆபீஸ் போக நேரமாச்சு’ என காலையில் போன் நோட்டிபிகேஷன் அனுப்புகிறது. மாலையில் ‘வீட்டுக்கு போகலையா ?’ என்கிறது. வார இறுதியில் மதிய நேரம் செய்தி அனுப்பி, ‘நீங்கள் புக் பண்ணின படம் இன்னும் அரை மணி நேரத்தில் ஆரம்பமாகும். இப்போ கிளம்பினா சரியா இருக்கும்’ என்கிறது. உணவகம் சென்றால், ‘இங்கே இந்த சாப்பாடு நல்லா இருக்கும், சாப்பாடு எப்படின்னு ஃபீட் பேக் குடுங்க’ என நச்சரிக்கிறது. உங்க கூட இருக்கிற நண்பர்கள் சுரேஷ், ரமேஷ் இரண்டு பேருக்கும் ஹாய் சொல்லுங்க என சொல்லி அதிர்ச்சியளிக்கிறது. அடுத்த‌ மாதம் அமெரிக்கா போறீங்களே ஷாப்பிங் எல்லாம் ஓவரா என ஷாக் குடுக்கிறது.

எல்லாம் பிக்டேட்டா, செயற்கை நுண்ணறிவு இவற்றின் உபயம் தான். நமது மொபைலில் இருப்பிடம், அந்த மொபைலைச் சுற்றியிருக்கும் மொபைல்களில் இருப்பிடம், அந்த பிற மொபைல் எண்கள் நமது கான்டாக்டில் இருக்கிறதா எனும் அறிவு, நமது ஜிமெயிலுக்கு வரும் டிக்கெட்களின் தகவல் என எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து நமக்குப் பின் ஒரு நிழலாய் இந்த டிஜிடல் கரம் நெருக்கிக் கொண்டே இருக்கிறது.

இவை எல்லாமே பயன் தரும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, பயம் தரும் பாதையில் பயணிப்பது தான் கவலைக்குரியது. ஓட்டுநர் இல்லாத கார், செயற்கைக் கை, ஆபத்தான வேலைகள் செய்தல், காலநிலை கணித்தல், விளையாட்டுப் பயிற்சிக்கு உதவுதல், ஆராய்ச்சிப் பணிகள் என செயற்கை நுண்ணறிவின்  நோக்கங்கள் நல்லவையாகவே இருக்கின்றன. ஆனால் முடிவுகள் தான் வேறு விதமாய் அமைந்து விடுகின்றன.

கடவுளை நிராகரிக்கும் அறிவியல், கருவிகளை அரவணைக்கிறது. இயந்திரத்தை அரவணைக்கும் நவீனம், இதயங்களை நிராகரிக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவின் யுகத்தை தவிர்த்து விட முடியாது.  எனில், இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையை எப்படி வலுப்படுத்துவது ?

  1. சமத்துவம் காப்போம்!

செயற்கை நுண்ணறிவு சமூக ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகரிக்கும். கருவிகளை வைத்து செல்வங்களை சேர்ப்பவர்கள் இன்னும் அதிகமாய், பல மடங்கு சேர்ப்பார்கள். கருவிகள் சம்பளம் கேட்பதில்லை, எனவே செலவற்ற வருமானங்கள் ஒரு புறம், வருமானமற்ற செலவினங்கள் ஒரு புறம் என சமூக சமநிலை பாதிக்கப்படும்.

இந்த சூழலில் நாம் சமத்துவம் பேணும் மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கின்ற பாகுபாடுகளின் வேறுபாடுகளை அவிழ்த்து விட்டு சமத்துவத்தின் சட்டையை மாட்டிக் கொள்ள வேண்டும்.

  1. மனிதம் காப்போம் !

இன்றைக்கு நம்மோடு உரையாடுகின்ற பல ஆன்லைன் குரல்களும், ஆன்லைன்  சேட்‍  களும் ரோபோக்களின் கைங்கர்யம் தான். அதை நாம் உணர்வது கூட இல்லை. இன்று அவற்றையெல்லாம் தாண்டி நட்பு ரோபோ, குழந்தை ரோபோ, குடும்ப ரோபோ, காதல் ரோபோ என பல்வேறு ரோபோக்கள் வந்து விட்டன.

இந்த சூழலில் இயந்திர சார்பை கழற்றி விட்டு, சக மனிதர்களோடான உரையாடல்களை அதிகப்படுத்த வேண்டும். சமூகத்தில் நிராகரிக்கப்பட்ட மனிதர்களோடு நேரம் செலவிடுதலே மனிதம் காப்பதன் முதல் பணி. டிஜிடல் வெளியில் மீட்பு விற்கப்படுவதில்லை. மனிதத்தின் பிடியில் மீட்பு நிராகரிக்கப்படுவதில்லை.

  1. புனிதம் காப்போம் !

மனிதர்கள் ஒன்று கூடி பாபேல் கோபுரம் கட்டி தங்களுடைய கர்வத்தை பறை சாற்ற நினைத்தனர். கடவுள் அவர்களை சிதறடித்தார். மனிதர்கள் ஒன்றிணைந்து கர்வத்தை தலையில் சூடும்போது கடவுள் தண்டிக்கிறார். தனக்கும் மக்களுக்கும் இடையே தடையாய் வரும் எதையும் கடவுள் விரும்புவதில்லை. எனவே தான் ஈசாக்கை பலியிட ஆபிரகாமிடம் கடவுள் கட்டளையிடுகிறார். எதையும் இறைவனுக்காய் பலியிடுகையில் ஆன்மீகம் வலுவடைகிறது. இறைவனை எதற்காகவும் பலியிடுகையில் புனிதம் புதைபடுகிறது.

புனிதம் காப்பது என்பது இறைவனோடு நடப்பது. நடப்போம்.

  1. பாதுகாப்போம் !

செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தல் பல்வேறு வகையில் வரலாம். ஒரு விளையாட்டு அடிமைத்தனத்தில் தொடங்கி, ஒரு தேசத்தின் அழிவுத் தனம் வரை இது நீளலாம். இதைக் குறித்த விழிப்புணர்வு கொள்வது மிகவும் அவசியம். எந்த அளவுக்கு, இறைவனோடும், இயற்கையோடும், மனிதர்களோடும் இணைந்து வாழ்கிறோமோ அந்த அளவுக்கு பாதுகாப்பாய் வாழ்வோம் என்று அர்த்தம். தொழில்நுட்பங்கள் தொட்டுக் கொள்ளும் தூரத்தில் இருப்பதே பாதுகாப்பானது, கட்டிக் கொள்ளும் நெருக்கத்தில் வருவது ஆபத்தானது. தேவைக்கு மட்டுமே அவற்றை தேர்ந்தெடுப்போம், ஆசைக்காய் அல்ல !

நமது பாதுகாப்பு செயற்கை நுண்ணறிவோடு அல்ல, இறையெனும் விண்ணறிவோடு இருக்க வேண்டும்.

  1. உறவுகள் காப்போம்

முதியோர்களைப் பாதுகாக்கவும், நோயாளிகளைப் பாதுகாக்கவும் ரோபோக்கள் இருக்கின்றன எனும் செய்திகள் மனித நேயம் உடைய எவரையும் பதற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்குத் தேவை பணிவிடை மட்டுமல்ல, பரிவும் தான். அவர்களுக்குத் தேவை உதவிகள் மட்டுமல்ல உறவுகளும் தான். இயந்திர இருப்பை விட அன்பின் அரவணைப்புகள் தானே முக்கியம். உறவுகளை நேசிப்போம். அவர்கள் நம்மை விட்டுப் பிரியும் வரை அவர்களோடு பிரியமாய் இருப்பதே உறவுகளை நேசிப்பதன் வெளிப்பாடு.

உலகில் நிகழும் எந்த மாற்றங்களும் நம்மை அழிவுக்குள் அழைத்துச் செல்லாது. ஆனால் நம் உள்ளுக்குள் நிகழும் மாற்றங்கள் நம்மை அழிவுக்குள்ளும் அழைத்துச் செல்லலாம், வாழ்வுக்குள்ளும் வழிநடத்திச் செல்லலாம்.

எனவே

உள்ளத்தைக் காப்போம்,

உள்ளதைக் காப்போம்.

இறைவனை மட்டுமே இதயத்தில் காப்போம்.

Posted in Articles, Desopakari

மலையாய், நிலையாய் !

Image result

எந்த ஒரு கிறிஸ்தவ நண்பரையும் அழைத்து “பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சில மலைகளின் பெயர்களைச் சொல்லுங்கள் “ என்று கேட்டால் நிச்சயம் நான்கைந்து பெயர்களைச்சொல்வார்கள். அதில் சில மலைகள் பொதுவானதாக, பிரபலமானதாக இருக்கும் !   இறைவார்த்தையோடு, இறை வார்த்தை கடந்து வந்த வரலாற்றோடும் மலைகள் எப்போதுமே பயணித்து வந்திருக்கின்றன.

உயரமான இடங்களில் இறைவன் வசிக்கிறார் எனும் சிந்தனை எல்லா இடங்களிலும், எல்லா மதங்களிலும், எல்லா காலத்திலும் இருந்து வந்ததை வரலாறு ஊர்ஜிதப்படுத்துகிறது. இன்றும் பல்வேறு கோயில்கள், ஆலயங்கள், வழிபாட்டு இடங்கள் போன்றவை மலைகளின் மேல் கம்பீரமாய் நிலைபெற்றிருப்பதைக் காண முடிகிறது. அதன் காரணம் மலையின் உச்சியில் சென்றால் கடவுளை நெருங்கி நிற்போம் என மனிதன் கருதிக்கொண்டது தான்.

மலையில் வழிபட வேண்டுமா ? என்பதில் பழைய காலம் உறுதியாய் இருந்தது. இந்த மலையிலா, அந்த மலையிலா என்பது மட்டுமே அப்போதைய கேள்வியாய் இருந்தது ! மலைகள்புனிதத்தின் தலைநிமிர்தல்களாக இருந்தன. மலைகள் ஆன்மீகத்தின் அடையாளங்களாய் இருந்தன. மலைகள் பிரமிப்பின் பிரதிபலிப்புகளாய் இருந்தன. மலைகள் வரலாற்றின்தடங்களாய் இருந்தன.

நோவாவின் காலத்தில் தண்ணீரில் மிதந்த பேழை கடைசியில் இளைப்பாறியது அராத்து மலையின் தலையில் தான். அங்கே இறைவனுக்கு பலியிட்டார் நோவா ! ஒரு புதியஉடன்படிக்கை அங்கே உருவானது. “மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையைஉருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்” என இறைவன் தனக்குத் தானே உடன்படிக்கை செய்து கொண்டார்.

பழைய விதைகளிலிருந்து புதிய செடி முளைத்தெழுந்தது. இயேசு மானிட மகனாக பூமியில் பாதம் பதித்தார். அவருடைய போதனைகளின் மையமான ‘மலைப் பிரசங்கம்’ மறக்கமுடியாததாக அமைந்தது. பைபிளை முழுமையாக வாசிக்க முடியாத ஒருவர் அந்த மலைப்பொழிவு சார்ந்த சில அதிகாரங்களை மட்டும் படித்தாலே இயேசுவை முழுமையாய்ப்புரிந்து கொள்ள முடியும் ! இந்த மலை, மனிதர்களோடு இயேசு நேரடியாய் செய்து கொண்ட ஒரு அன்பின் உரையாடலுக்குத் தளம் அமைத்தது!

மோரிய மலையில் ஆபிரகாம் ஈசாக்கைப் பலிகொடுக்க துணிந்தார். இறைவனுக்கும் மேலாக தன்னிடம் எதுவும் இல்லை. மகனே ஆனாலும் அது இறைவனுக்குக் கீழே தான்என்பதை ஆபிரகாம் நிரூபித்தார். மகனையே பலியிட துணிந்த தந்தை மோரிய மலையின் வியப்புக் குறியீடு ! கல்வாரி மலையில் இயேசுவை அவரது தந்தை பலியிட்டார். கடைசி நேரத்தில் தூதர் வந்து நிறுத்தவில்லை. மனிதர்களுடைய மீட்புக்கு மேலாக எதுவும் தான் விரும்பவில்லை என தந்தை செய்து கொண்ட பிரகடனம் அது ! இறைவனுக்காக மகனைப் பலியிட்ட தந்தை அங்கு. மனிதனுக்காகமகனைப் பலியிட்ட தந்தை இங்கு !

இந்த கிறிஸ்து பிறப்பு காலம் நமக்கு ஒரு சுய பரிசோதனையின் காலம். “எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பதுபோல, ஆண்டவர் இப்போதும் எப்போதும் தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார், என விவிலியம் நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. நாம் பிழைகளின் பள்ளத்தாக்குகளை விட்டு விட்டு மீட்பின் மலைகளை ஏறிச் செல்ல வேண்டும் என்பதையே இந்த காலம் நமக்கு உணர்த்துகிறது.

மலைகள், தவிர்க்க முடியாத விவிலிய கதாபாத்திரங்கள். மலைகளை புறக்கணித்து விட்டு விவிலியத்தை வாசிக்க முடியாது. மலைகள் ஏதோ ஒரு விஷயத்தை நமக்குபூடகமாகச் சொல்கிறது ! நமது ஆன்மீக வாழ்வின் பாடத்தை அது மறைமுகமாய் நமக்கு போதிக்கிறது.

பொதுவாக நாம் காண்கின்ற மலைகளிலிருந்து சில விஷயங்களை நாம் கற்றுக் கொள்வோம்

  1. நிலைத்தன்மை !

லைகள், நிலைத்தன்மை உடையவை. அவை அடிக்கின்ற காற்றுக்கு ஓடிப் போகின்ற பதர்களைப் போல இருப்பதில்லை. பூமியோடு நிலைத்து நிற்பவை. அசையா உறுதியுடன் அமைதியாய் இருப்பவை. கிறிஸ்தவ வாழ்க்கையும்விசுவாசத்தில், பற்றுறுதியில் நிலைத்தன்மை கொண்டிருக்க வேண்டும். பாறை மீது வீடு கட்டுபவன் பாக்கியவான் ! காரணம் அது அசைக்கப்படுவதில்லை ! நமது விசுவாசத்தின்தன்மை, நிலைக்கின்ற மலையின் தன்மையாய் இருக்கிறதா என்று பார்ப்போம் !

  1. உயரத்தை நோக்கி !

மலைகள் பாதாளத்தை நோக்கி நீள்வதில்லை. அவற்றின் தலை எப்போதுமே விண்ணை நோக்கியே பயணிக்கும். மேகங்களோடு முத்தமிடும். வீழ்கின்ற மழையின் முதல் துளிமலையின் தலையிலோ, அதன் தலையில் முளைத்திருக்கும் செடிகளின் இலையிலோ தான் விழும். கீழானவற்றை நோக்கி அதன் தலை கவிழ்வதில்லை. நமது ஆன்மீகப் பயணமும்எப்போதும் விண்ணை நோக்கியே இருக்க வேண்டும். இறைவனை நோக்கிய பார்வையே, சக மனிதனை நோக்கிய பயணத்துக்கும் நம்மை வழிநடத்தும். நமது நோக்கம்உயர்ந்ததாக, நமது சிந்தனை உயர்வானதாக, நமது பயணம் இறைத்தன்மையுடையதாக இருக்கிறதா என்று சிந்திப்போம்.

  1. சூழல்களை எதிர்கொள்தல் !

பருவங்கள் எதுவானாலும் மலைகள் அசந்து போவதில்லை. பனிகொட்டும் குளிராய் சிலகாலம், வெயில் வாட்டும் நெருப்பில் சில காலம், மழை பெய்யும் ஈரத்தில் சில காலம் எனஎப்படி இருந்தாலும் அது கவலைப்படுவதில்லை. பருவங்களை எதிர்கொண்டு தனது வாழ்க்கையைத் தொடரும். அத்தனை பருவங்கள் மாறி மாறி சுழற்றியடித்தாலும் தனதுஇயல்பிலிருந்து மாறுவதில்லை. நமது ஆன்மீக வாழ்க்கை எப்படி இருக்கிறது. ஆனந்தத்தின் பேரலை அடித்தாலும், சோகத்தின் பேய் மழை பொழிந்தாலும், வெறுப்பின் கொடும்அனல் அடித்தாலும் நமது ஆன்மீக வாழ்க்கை அசைக்கப்படாமல் இருக்கிறதா ? இயல்பு மாறாமல் தொடர்கிறதா ? சிந்திப்போம்.

  1. நதிகளைப் பிறப்பித்தல் !

மலைகளே நதிகளின் துவக்கப் புள்ளி. நாட்டுக்கு வளம் சேர்க்கும் நதிகளை பிறப்பிப்பது மலைகளே ! நீரை தாவரங்களை நோக்கி அனுப்பி வைப்பதால் அதை விளைச்சலின் காரணகர்த்தா என்றும் சொல்லலாம் ! நமது வாழ்க்கையும் பிறருக்கு விளைச்சல் கொடுப்பதாக அமைய வேண்டும். ஆன்மீக வளர்ச்சியை பிறருக்கு அளிப்பதில் நமது செயல்பாடு உற்சாகமாக இருக்கவேண்டும். நற்செய்தி அறிவித்தலின் துவக்கப் புள்ளி நம்மிடமிருந்து தொடங்க வேண்டும் ! சிந்திப்போம் நாம் ஆன்மீக வளம் கொடுக்கும் நதியாக இருக்கிறோமா, வறட்சியைக் கொடுக்கும் தன்மையுடையவர்களாய் இருக்கிறோமா ?

  1. மழையை அழைத்தல் !

மலைகளும், மலைசார்ந்த பகுதியும் தான் அதிக மழைபெறும் நிலங்களாகும். ஓடும் மேகத்தைத் தடுத்து நிறுத்தி மழையை அழைக்கும் வேலையை மலைகள் செய்கின்றன. மலையும் மலைசார்ந்த பகுதிகளும் பச்சைப் பசேல் என செழிப்பாய் இருப்பதன் காரணம் அது தான். வானம் மழையை பொழிகிறது, பூமி பசுமையை அணிகிறது. நமது வாழ்க்கையும் வானக வரங்களைப் பெற்று, நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் வளமை தரக்கூடிய வகையில் அமைய வேண்டும். இறைவனின் அருளைப் பெற்று, நம்மைச் சுற்றிய இருளைப் போக்குபவர்களாய் நாம் இருக்கிறோமா ? சிந்திப்போம்.

  • சேவியர்