Posted in Articles, Bible Animals

விவிலியமும் நானும் – குதிரை

உயர்திணையான அஃறிணைகள்

குதிரை

*

குதிரைகள்
வலிமையின் வசீகரங்கள்
கம்பீரத்தின்
முகவரிகள் !.

வீரத்தின் விலாசங்களை
வரலாறுகள்
குதிரைகளின்
குளம்படிகளைக் கொண்டே
குறித்து வைத்திருக்கிறது !

போர்க்களத்தின்
நீள அகலங்களை
குதிரைகளின்
ஆவேசப் பாய்ச்சல்களே
அளவெடுத்து வைத்திருக்கின்றன !

எங்கள்
எண்ணிக்கையைக் கொண்டே
போர்களின்
அடர்த்தி அறியப்பட்டது !

சேணம் பூட்டப்பட்ட
எங்கள்
ஆண்மையின் அணிவகுப்பே
எதிரிப் பாசறையில்
நில நடுக்கத்தையும்
குலை நடுக்கத்தையும்
கொண்டு வருகிறது .

விவிலியத்திலும்
நாங்கள்
திரையிட முடியாத
திண்மையின் அடையாளமே.

தொடக்கநூல் முதல்
திருவெளிப்பாடு வரை
நாங்கள்
அகலாமல்
ஆக்கிரமித்திருக்கிறோம் !

எங்கள் இருப்பிடத்தை
நாங்கள் தேர்வு செய்வதில்லை
எனினும்
இருப்பிடமே எங்கள்
வாழ்வினை முடிவு செய்கிறது !

தாவீதோடு இருக்கையில்
மேன்மையில்
திளைக்கிறோம்,
பார்வோனோடு இருக்கையில்
செங்கடலில் அழிகிறோம்.

சாலமோனோ
உலகின் திசைகளெங்கிலும்
இருந்து
தரத்தில் மிளிர்ந்த
குதிரைகளைச் சேகரித்தார் !

நாங்கள்
அடிமைகளின் அடையாளமல்ல
அடிமைகள்
எங்கள் முதுகில் ஏறும்
மகத்துவம் காண்பதில்லை !

எருசலேமின்
ஒரு வாயில் தன் பெயரை
“குதிரை வாயில்”
என்றழைத்து
எங்களைக் குதூகலப்படுத்துகிறது.

நிலத்தையே அசைக்கும்
எங்கள்
குளம்படியின் ஆவேசம்
அடக்கிவிட முடியாத
காட்டாறாய் சீறிப் பாயும்.

குதிக்கும் எங்களின்
குதிகால்
நரம்பு நறுக்கி
முடமாக்கும் சூட்சுமத்தை
விவிலியம் பேசுகிறது !

கடவுளின்
கடிந்துரையினால்
மடிந்து வீழ்ந்த எங்கள் கதையை
சங்கீதம் பேசுகிறது.

பாறைமேல்
ஓடமுடியாத எங்கள்
ரகசியப் பலவீனத்தைக
அது
பகிரங்கமாய்ப்
பதிவு செய்து வைத்திருக்கிறது.

பயிற்றுவிக்கப்படாத குதிரையும்
கட்டுப்பாடற்ற மகனும்
அடக்கமற்ற
முரட்டுத்தனத்தின்
அடையாளங்களென்கிறது
சீராக் நூல் !

குதிரை என்றதும்
ஒரு வசனம் நிச்சயம்
கடிவாளமின்றி
உங்கள்
இதயத்தில் கடந்து வரும்.

குதிரை
யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்
ஜெயமோ
கர்த்தரால் வரும் !

சில சோம்பேறிகள்
என்னை ஆயத்தமாக்குவதை
மறந்து விட்டு
ஜெயத்தைக் கர்த்தர் தருவாரென
கனவு காண்கின்றனர்.

வெற்றுப் பாத்திரத்தால்
பசியாற்ற நினைக்கும்
அறிவிலிகள் அவர்கள்.

நாங்கள்
பல அவதாரங்கள் எடுத்ததுண்டு.
ஒரு முறை
எலிசாவைக் காக்க
நெருப்புக் குதிரைகளாய்
நெருங்கி வந்தோம்.

ஈசபேலை
எங்கள்
கால்களால் மிதித்து
கொன்றோம்.

திருவெளிப்பாட்டில்
வெள்ளை, சிவப்பு, கறுப்பு, பச்சை
என
பல வண்ணத் தேகத்துடன்
மேகங்களிலும்
வேகம் கொள்கிறோம்.

அழிவுக்காய் அழைக்கப்பட்ட
குதிரைப்படையின் எண்ணிக்கை
இருபது கோடி
என
பிரமிக்க வைக்கிறோம்.

கடைசியாய்
எங்கள்
லாடங்களில் இருக்கும்
உங்களுக்கான ஒரு செய்தி
இது தான்.

குதிரைகளிலும்
ரதங்களிலும்
அல்ல,
ஆண்டவரின் பெயரில்
பெருமை கொள்க !

*

சேவியர்

Posted in Articles, Bible Animals

விவிலியமும் – நானும் கரடி

உயர்திணையான அஃறிணைகள்

கரடி

கரடியாக் கத்தினாலும்
கேட்பதில்லை
என
புறப்படுகின்
புரியா பழமொழிகள்
என் பெயருக்கு
இழுக்கு விளைவிக்கின்றன !

எடையிலும் நடையிலும்
நான்
வலிமைச் சுவடுகளை
பதித்து நடப்பவன்.

என்னைக்கண்டு
மனிதர்கள்
மிரண்டு ஓடுவதுண்டு !
தாவீது விதிவிலக்கு

மந்தையிலிருந்து
ஆடுகளைக் கவ்வினால்
விரட்டி வந்து
என்
வாயிலிருந்தே அதை
வெடுக்கெனப் பிடுங்குவான்.

கோரப் பற்களைக் காட்டி
கோபத்தில் சீறினால்
என்
தாடையைப் பிடித்தே
உயிரினை உடைப்பான்.

என்னைக் கொன்றதால்
பெற்ற
தன்னம்பிக்கை தான்
கோலியாத்தின் கோட்டையில்
அவனை
கொலைசெய்ய முடிந்தது.

நான்
பாசமானவன்
என் குட்டிகளிடம்.

தனியே வாழும் பருவம் வரை
அவைகளை
என்
பாதுகாப்பு அரணுக்குள்
பதுக்கியே வைப்பேன்.

குட்டிகளை இழப்பது
எனக்கு
சினத்தின் உச்சத்தில்
சீறித் திரியும் அவஸ்தை !

தாவீதும் அவரது
வீரர்களும்
குட்டிகளை இழந்த கரடியாய்
சினத்துடன் சிவந்திருப்பதாய்
ஊசாய் சொன்னது
பைபிளில் இருக்கிறதே !

சினமெடுத்த கரடியைவிட
சிக்கலானவன்
மடமையின் அடியில்
மூழ்கிக் கிடக்கும்
மதிகேடன் என்கிறது விவிலியம்.

நடத்தை கெட்ட
நங்கை முகம்
கரடியின் முகம் போலாகும்
என என்னைச்
சீண்டிச் சிரிக்கிறார்
சீராக் !

தானியேலும்
திருவெளிப்பாடும்
கரடியின் உருவங்களை
காட்சியில் காட்டி
எனது
இருப்பை இறுக்கிக் கட்டுகிறது.

எனினும்
என்னை துயரத்தின் பள்ளத்திலும்
மகிழ்வின்
உச்சியிலும் எறியும்
இரண்டு நிகழ்வுகள் உண்டு.

துயரம் !
எலிசாவைக் கிண்டலடித்த
நாற்பத்து இரண்டு சிறுவர்களை
குதறிப்போட்ட
கோப நிமிடங்கள்.

மகிழ்வு
நீதியுள்ள அரசரின்
வருகை !
ஏனெனில், அப்போது தான்
பகைமை மறையும்
பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும் !

*

சேவியர்

Posted in Animals Birds, Articles, Bible Animals

உயர்திணையான அஃறிணைகள் – கழுகு

உயர்திணையான அஃறிணைகள்

+

கழுகு !

+

எங்கள்
பெயரைச் சொல்லும்போதே
உங்களுக்குள் ஒரு
வீரத்தின் அலகு
விழித்துக் கொள்கிறதா ?

இருளையும் அறுத்தெறியும்
ஒரு
கூர்மையான பார்வை
குதித்தெழுகிறதா ?

அது தான் எங்கள்
அடையாளம் !
மேகத்தைப் போல
மென்மையாய் மிதக்கவும்,
மின்னலைப் போல
சீறிப் பாயவும் பழகியிருக்கிறோம்.

இயற்கை என்னை
அண்ணாந்து பார்க்கும் போது
விவிலியம்
மட்டும் விலக்கியே வைக்குமா
என்ன ?

உயர்ந்த இடத்தில்
உறைவிடம் கொள்வது
கடவுளும்
நானும் தானே !

எனது இறக்கையில்
இஸ்ரயேலர் பயணித்ததாய்
கடவுள்
உவமை சொன்னபோது
உவப்படைந்து சிலிர்த்தேன்.

நான்
குஞ்சுகளின் மேல்
படர்ந்து அணைப்பதை
இறைவனின் அரவணைப்புடன்
ஒப்பீடு செய்தபோது
பரவசத்தில் படபடத்தேன்

ஆண்டவர் மீது
நம்பிக்கை வைப்பவருக்கே
ஆற்றல் ஊற்றெடுக்கும் !
அவர்கள்
கழுகென வானில் உயர்வர் , என
கனப்படுத்துகையில் கரைந்தேன்.

பைபிள் என்னை
பலத்தின் பதக்கமாய்ப்
பதுக்கிப் பாதுகாக்கிறது !

சூறாவளித் தேர்களில்
பூட்டப்பட்ட
அதிசயக் குதிரைகள் மட்டுமே
என்னை விட
வேகமாய்ப் பறப்பதாய் அது
வியப்பினை வரைகிறது.

நான்
வேட்டையில் வித்தகன் !
உங்கள்
வயிறுகளுக்கான விருந்தல்ல !
அந்த வகையில்
விலக்கப்பட்டதால் மகிழ்கிறேன்.

பிணம் எங்கேயோ
அங்கே
கழுகுகள் கூடும் என்றார் இயேசு !
கவலைப்படவில்லை
பாவத்தைப் பிரித்தெறியும்
பணியாய் எடுத்துக் கொள்கிறேன்.

காரணம்
பழுதைப் பிய்த்தெறிவதிலும்
புதுப்பித்தலிலும்
நான் புகழ் பெற்றவன்.

முளைப்பதற்காகவே
மொட்டையடித்துக் கொள்பவன்.
அதனால் தான்
என் இளமையைத்
தாவீதும் இசைக்கிறார்.

ஒரு சிறகிலிருந்து
ஓர் இறகு உதிர்ந்தால்,
மறு சிறகிலிருந்து
ஓர் இறகை நான் பிடுங்கி எறிவேன்,
சமநிலை மீது
அதீத கவனம் எனக்குண்டு !

அதனால் தான்
பாவம் செய்யும் உறுப்பை
துண்டித்துப் போடச் சொன்ன
இயேசுவின் போதனை
பிரியம் எனக்கு !

இலக்கின் மீது கவனம் வைத்து
கூர்நகங்களால்
பற்றிக் கொண்டால்
இரையை
எளிதில் விட்டு விடுவதில்லை !
இறையை விட்டு விடா உங்கள்
விசுவாசம் போல !

வலிகளில்லாமல்
மீட்பு இல்லை என்பதை
எங்கள்
குஞ்சுகளுக்குக் கூட்டிலேயே
கற்றுக் கொடுக்கிறோம் !

இறைவனின் படைப்பின்
அழகு
கழுகு தானே !

விவிலியத்தின்
புரியாத காட்சிகளிலும்
நானே
புனையப்பட்டிருக்கிறேன் !

எசேக்கியேலின்
கழுகு முக உயிரினம்,
பல வண்ண இறக்கை,
மிகுந்த இறகுள்ள இறக்கை,
எனும் காட்சிகள்
என்னையே கலங்கடிக்கின்றன.

விரட்டப்பட்ட
நெபுகத்நேசரின் தலைமயிர்
கழுகின் இறகுபோல மாறியதாய்
தானியேல் சொன்னார்.

அவர் சொன்ன
கழுகின் சிறகுடைய சிங்கம்
என்
கனவிலும் நுழைந்து வந்து
நிலைகுலைய வைக்கும்.

விவிலியம் என்னை
புதிர் விளையாட்டின்
புள்ளிகளோடு
புரண்டு விளையாட விடுகிறது.

மனிதர்கள்
என்னைப் பேசினாலும்
நான்
மிகவும் மகிழ்ந்த கணம்
மனிதர்கள் போல நான் பேசியதே !

அதுவும்
மனித இதயங்களைக்
கிழித்தெறியும் வார்த்தை அலகுகளோடு
நான் சொன்னேன் !

“ஐயகோ !!
உலகில் வாழ்வோருக்குக்
கேடு வரும் !”

*

சேவியர்

 

Posted in Animals Birds, Bible Poems

உயர் திணையான அஃறிணைகள் – பன்றி

உயர் திணையான அஃறிணைகள்
பன்றி

புறக்கணிப்பின்
பின்வாசலாய் இருக்கிறது
என் வாழ்க்கை !

குதித்து வந்து
தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ
படுக்கையில்
புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ
பொதுவாக
நான் இருப்பதில்லை !

சகதியின் சகவாசமும்
அழுக்கின் அருகாமையும்
என்னை
புனிதத்தின் தேசத்திலிருந்து
புறந்தள்ளியிருக்கிறது.

நான்
அசைபோடாததால்
என்னை
அசைபோடக் கூடாதென
மோசேயின் சட்டம்
முட்டுக்கட்டை இடுகிறது.

என்
இறுதிச் சடங்கில் கூட
தொட்டு விடாத் தீண்டாமையுடன்
சட்டம்
என்னை தூரமாய் வைக்கிறது.

நான்
அருவருப்புகளின் உருவகமாய்
அறியப்படுவதில் வருத்தமுண்டு.

கடவுளின் சொல்லுக்கு
அஞ்சாதவரின்
உணவுப் படையலானது,
பன்றியின் இரத்தப் படையல் போல
வெறுக்கத்தக்கது
என்கிறது விவிலியம்.

உங்கள் முத்துகளை
என் முன்னால் எறிந்தால்
நாங்கள்
அதன் மதிப்பை உணராமல்
மிதித்துப் போடுவோம்
என
இயேசுவே சொல்லிவிட்டார்.

இலேகியோன்
எனும்
பேய்களின் படையையும்
எங்களிடமே அனுப்பி
நாங்கள்
தண்ணீருக்குள் தாவி
தற்கொலை செய்யவும் வைத்தார்.

ஊதாரி மைந்தனின்
இழிநிலையைச் சொல்லவும்
என்
உணவு தானே உவமையானது.

பன்றியைக் கழுவினாலும்
அது
சேற்றில் புரளுமென
சொல்லிச் சொல்லி
யாரும் எங்களைக் கழுவுவதுமில்லை.

நாங்கள்
தோராவின் காலம் முதல்
தூரமாகவே இருக்கிறோம்.

மனிதனின்
உடலுக்குள் செல்வதொன்றும்
மனிதனைத்
தீட்டுப்படுத்தாதென
ஒருமுறை
சற்றே ஆறுதல் தந்தார் இயேசு.

இஸ்லாமியர்களுக்கும்
நான்
இகழப்படும் விலங்கு.

ஆனாலும்
தவிர்க்கமுடியா சூழலில்
என்னைத் தின்பது
பாவமல்ல,
ஏனெனில் கடவுள் இரக்கமுள்ளவர்
என
குரானும் கொஞ்சம் கருணை காட்டியது.

எனினும்
எனக்கு
மகிழ்ச்சி தரும்மனிதர்
சாலமோன் தான்.

அவர் மட்டும் தான்
எனது மூக்கில் ஒரு
வைர மூக்குத்தியை
கற்பனையேனும் செய்து பார்த்தவர்

அவர் சொன்னார்.

மதிகேடான
பெண்ணின் அழகு,
பன்றிக்குப் போட்ட
வைர மூக்குத்தி !

*

சேவியர்

Posted in Articles, Bible Animals, Bible Poems

உயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு !

உயர்திணையான அஃறிணைகள்

5


ஆடு !

நான் தான்
ஆடு பேசுகிறேன்.

ஆபேல் காலத்தில்
என்
மெல்லிய பாதங்கள் பூமியில்
அசைந்தாடத் துவங்கின.

அதன் பின்
விவிலியத்தின்
பசும்புல் வெளிகளிலும்
நீரோடைகளிலும்
முட் புதர்களிலும்

என் பயணம்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

பலியின் குறியீடாய்,
வலியின்
விளைநிலமாய்,
நான்
பயணித்துக் கொண்டேயிருக்கிறேன்.

ஆதாமின்
ஆடையும் நானாயிருக்கலாம்,
ஆபேலின்
பலியும் நானாயிருக்கலாம் !

பாவத்தின்
நிர்வாணத்தை
நானே மறைக்கிறேன்,
புனிதத்தின்
பலியாகவும் நானே நிறைகிறேன்.

இறைவனின்
பிள்ளைகளையும்
நானே அடையாளப்படுத்துகிறேன்.

பிள்ளைகளின்
இறைவனையும்
நானே அடையாளப்படுத்துகிறேன்

ஈசாக்கிற்குப்
பதிலாய்
நானே பலியானேன் !

எனக்குப் பதிலாகவே
ஈசனும்
பலியானார் !

எனக்கு
நல்ல ராசி !

என்னோடு
உறவாடிக் கொண்டிருந்த
தாவீது
மாபெரும் மன்னனானார் !

என்னோடு
சகவாசம் கொண்டிருந்த
யோசேப்பு
மாபெரும் அதிபரானார் !

என்னோடு
நட்புறவு கொண்டிருந்த
மோசே
மாபெரும் விடுதலை வீரரானார்.

நான்
மென்மையில் ஒளிந்த
வலிமை.
பாறையைப் பதுக்கி வைத்த
பனித்துளி.

நான்
தொலைகின்ற தருணங்களில்
தேடப்படுகிறேன்,
தேடப்படும் கணங்களில்
அகப்படுகிறேன்.

ஆயனின் குரலுக்கு
என்
செவிகள் இசைந்திருக்கும்
கால்கள்
தொடர்ந்திருக்கும்.

ஆயனின்
தகுதியைப் பார்த்து நான்
பின் தொடர்வதில்லை,
எனவே தான்
தவறாகவும் பலவேளைகளில்
தடம் மாறுகிறேன்.

நானும் இயேசுவும்
பிரியாமல் பயணிக்கிறோம்

இயேசுவின்
பிறப்பில்
ஆடு மேய்த்தவர்கள்
ஆயனைக் கண்டார்கள்.

இயேசுவின்
இறப்பின்
பலியாடாகவே
ஆயனைக் கண்டார்கள்.

விண்ணக
வீதியில்
ஆட்டுக்குட்டியாகவே
ஆண்டவனைக் கண்டார்கள்.

நானும் இயேசுவும்
பிரியாமல் பயணிக்கிறோம்

ஓநாய்களிடையே
ஆடுகளாய்
சீடர்களை அனுப்பினார் இயேசு
நான் மகிழ்ந்தேன்.

வன்மத்தின்
நகக்கீறல்களுக்கு நடுங்கவில்லை.

என்
கவலையெல்லாம்
ஓநாய்களிடையே அலைவதிலல்ல,
ஓநாய்களே
ஆட்டுத் தோலுடன்
அலைகையில் மட்டும் தான்.

*

சேவியர்